துன்பங்களை நீக்குவார்
பயங்கர கார் விபத்து ஒன்றில் படுகாயமடைந்தார் மேரி அன் ஃபிரான்கோ. விபத்திலிருந்து உயிர்பிழைத்தாலும் கண்பார்வை முற்றிலும் பறிபோனது. “அதன்பிறகு இருளைத் தவிர வேறு எதையும் நான் பார்க்கவில்லை” என்று ஃபிரான்கோ சொன்னார். இருபத்தோரு வருடங்களுக்கு பிறகு, ஒரு சமயம் அவர் கீழே விழுந்ததில் அவருடைய முதுகில் அடிபட்டது. அதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார் (கண் சம்பந்தமாக எந்தச் சிகிச்சையும் செய்யவில்லை.) அற்புதம் என்ன வென்றால், அவருடைய கண்பார்வை திரும்பக் கிடைத்தது! கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேல் கடந்த நிலையில், முதன்முதலாக அப்போதுதான் தன் மகளுடைய முகத்தை அவர் பார்த்தார். ஃபிரான்கோவுக்கு எவ்வாறு பார்வை திரும்பக்கிடைத்தது என்பதற்கு விஞ்ஞான ரீதியில் பதிலில்லை என்கிறார் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர். இறுதியாக இருள் அகன்று, வெளிச்சத்தையும் அழகையும் அவரால் கண்டு ரசிக்கமுடிந்தது.
அறியாமை மற்றும் தீமையின் ஒரு மேகம் இந்த உலகத்தை மூடியுள்ளது; நாம் யாருமே தேவ அன்பைக் காணமுடியாதபடி அது செய்கிறது. ஏசா 25:7. இதை வேத வசனங்களும் சொல்லுகின்றன; நம்முடைய அனுபவத்திலும் காண்கிறோம். சுயநலம், பேராசை, சுயநிறைவு சிந்தை, அதிகாரம் மற்றும் புகழுக்கான பேராசை போன்றவை நம் பார்வையை மங்கச் செய்கின்றன; சத்தியமானவரும் மாறாதவருமான, “அதிசயமானவைகளைச் செய்த” தேவனை தெளிவாகப்பார்க்க முடியாதபடி செய்கின்றன. வசனம் 1.
'மூடியிருக்கிற மூடல்" என்கிற வார்த்தைகள் பொதுமொழிபெயர்ப்பில் 'துன்பத்துகில்" என்று உள்ளது. தனியே விடப்பட்டால் நாம் அந்தகாரத்தையும் குழப்பத்தையும் விரக்தியையும் மட்டுமே அனுபவிக்கிறோம். எதிலோ சிக்கிக்கொண்ட உணர்வும்தான் பெரும்பாலும் நம்மில் தடுமாற்றமும், காணப்படுகிறது; நமக்கு முன்னிருக்கும் பாதையை நாம் பார்க்கமுடிவதில்லை. தேவனுக்கு ஸ்தோத்திரம், தேவன் இறுதியாக 'சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலை... அகற்றிப் போடுவார்" என்று ஏசாயா சொல்கிறார் (வச. 7).
தேவன் நம்பிக்கையற்றவர்களாக நம்மை விடமாட்டார். நம் பார்வையை மறைக்கிற எதையும் அவருடைய பேரன்பு அகற்றி, நன்மையான வாழ்க்கையும் பரிபூரண கிருபையும் நமக்கிருப்பதைக் காண்பித்து, ஆச்சரியமூட்டுவார்.
சகல ஜனங்களின் தேவன்
நியூஸ்பாய்ஸ் என்கிற கிறிஸ்தவ இசைக்குழுவின் முதன்மை பாடகராக இருந்தவர் பீட்டர் ஃபர்லர். “அவர் அரசாளுகிறார்” என்கிற துதிப்பாடலை தங்களுடைய குழுவினர் பாடும்போது ஏற்பட்ட அனுபவத்தை அவர் சொல்லுகிறார். சகல கோத்திரத்தாரும் தேசத்தாரும் ஒன்றுகூடி, தேவனைத் தொழுதுகொள்வதை அப்படியே தத்ரூபமாக அப்பாடல் எடுத்துக்காட்டுகிறது. இந்தப் பாடலைப் பாடும்போதெல்லாம் கூடியிருக்கும் விசுவாசிகள் மத்தியில் பரிசுத்த ஆவியானவரின் அசைவாடுதலை உணரமுடிந்ததாக ஃபர்லர் கூறுகிறார்.
“அவர் அரசாளுகிறார்” பாடலின்போது ஃபர்லர் கண்டு அனுபவித்த அதே அனுபவம் பெந்தெகொஸ்தே நாளில் எருசலேமில் கூடியிருந்த விசுவாசிகள் மத்தியிலும் உண்டானது. சீடர்களை பரிசுத்த ஆவியானவர் நிரப்பியபோது (அப் 2:4), அங்கே விசேஷித்த ஓர் அனுபவம் உண்டானது. அதனால், சகல தேசங்களிலிருந்தும் கூடியிருந்த யூதர்கள் குழம்பிப்போனார்கள்; ஏனென்றால், அங்கே தேவனுடைய கிரியைகள் வெளிப்படும்படிக்கு அவரவர் தங்கள் சொந்த மொழியில் பேசப்படுவதைக் கேட்டனர் . வச 5-6,11. “யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்” என்று பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தில் தேவன் சொல்லியிருக்கிறபடியே நிகழ்வதாக அங்கிருந்தவர்களுக்கு பேதுரு விளக்கினார். வச .16
அனைவரும் பிரமிக்கத்தக்க தேவவல்லமை அங்கு வெளிப்பட்டதினாலே, சுவிசேஷத்தை பேதுரு போதித்தபோது மக்கள் உடனே ஏற்றுக்கொண்டார்கள்; அன்றைய தினத்தில் மட்டும் மூவாயிரம்பேர் மனந்திரும்பினார்கள். வச 41. இந்த அற்புதமான ஆரம்பத்துடன், தங்கள் தங்கள் பகுதிக்குத் திரும்பிச்சென்ற புதிய விசுவாசிகள், அங்கே சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.
அந்த நற்செய்தி இன்றும் எதிரொலித்து வருகிறது. அனைத்து மக்களுக்கும் தேவன் தருகிற நம்பிக்கையின் செய்தி அது. நாம் ஒன்றுசேர்ந்து தேவனைத் துதிக்கும்போது, அவருடைய ஆவியானவர் நம் மத்தியில் அசைவாடுவார், சகல தேசங்களிலுள்ள மக்களிலும் அற்புதமான ஓர் ஐக்கியத்தை உண்டாக்குவார். அவர் அரசாளுகிறார்!
பகிர்ந்துண்டு வாழுதல்
ஸ்டீவுக்கு 62 வயது; இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர், வீடில்லாமல் திறந்த வெளிகளில் தங்கி வருபவர். ஒருநாள் சாயங்காலப் பொழுதில், தான் கையால் வரைந்த ஓவியம் ஒன்றை காட்சிக்கு வைத்திருந்தார். பணம் சம்பாதிப்பதற்காக அவர் அவ்வாறு செய்வதுண்டு. அப்போது அங்கே வந்த ஒரு வாலிபப்பெண்மணி, ஸ்டீவுக்கு பல பீஸ்ஸாக்களைக் கொடுத்தாள். அதை நன்றியோடு வாங்கிக் கொண்டார் ஸ்டீவ். பிறகு தன்னிடமிருந்த அதிகமான உணவை, தன்னைப்போலவே வீடின்றி, பசியோடிருந்த ஒருவருடன் பகிர்ந்துகொண்டார். அந்தச் சமயத்தில் மீண்டும் திரும்பி வந்த அந்த வாலிபப்பெண்மணி, மறுபடியும் ஒரு தட்டு நிறைய உணவைக் கொடுத்துவிட்டுச் சென்றார். ஏற்கனவே தான் கொடுத்த உணவை ஸ்டீவ் அடுத்தவருடன் பகிர்ந்ததால், அந்த உணவைக் கொண்டுவந்ததாக அந்த வாலிபப்பெண் சொன்னாள்.
நீதிமொழிகள் 11:25ல் சொல்லப்பட்டுள்ளது போலவே ஸ்டீவின் வாழ்க்கையில் நடந்தது. நாம் மற்றவர்களிடம் இரக்கத்துடன் நடந்துகொள்ளும்போது, நாமும் அதேவித இரக்கத்தைப் பெற்றுக்கொள்வோம். ஆனால், ஏதாவது திரும்பக் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் எதையும் செய்யக்கூடாது. ஸ்டீவுக்கு நடந்ததுபோல உடனே பிரதிபலன் எப்போதும் கிடைப்பதில்லை. மாறாக, தேவன் சொல்லியிருக்கிறார் என்பதால் நாம் மற்றவர்களிடம் இரக்கமாக நடந்துகொள்ள வேண்டும். பிலிப்பியர் 2:3-4; 1யோவான் 3:17. அவ்வாறு நாம் செய்வதில் தேவன் பிரியப்படுகிறார். அவர் திரும்ப நமக்கு பணஉதவியோ, பொருள் உதவியோ பண்ணவேண்டுமென்கிற எந்த கட்டாயமும் கிடையாது. அப்படியிருந்தும், ஏதாவது வழியில் அவர் நமக்கு உதவுவார். சில சமயம் பொருள்ரீதியாகவும், சிலசமயம் ஆவிக்குரிய ரீதியாகவும் உதவுவார்.
இரண்டாவது தனக்குக் கொடுக்கப்பட்ட பீஸ்ஸாவையும் ஸ்டீவ் சிரித்த முகத்துடன் இன்னொருவருடன் பகிர்ந்துகொண்டார். தனக்கு வசதியில்லாவிட்டாலும் தயாளத்துடன் வாழ்வதற்கு ஒரு முன்மாதிரியாக இருந்தார். தான் பெற்றதை தனக்கென வைத்துக்கொள்ளாமல், சந்தோஷமாக பிறருடன் பகிர்ந்துகொள்ள ஆயத்தமாக இருந்தார். தேவன் நம்மை வழிநடத்தி, நம்மைப் பெலப்படுத்தினால், நாமும்கூட அப்படிப்பட்டவர்களாக வாழலாம்.
அபியின் ஜெபம்
அபி அப்போது உயர்நிலைபள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தாள். விமான விபத்து ஒன்றில் படுகாயமடைந்த ஒரு வாலிபனை பற்றி அபியும் அவளுடைய அம்மாவும் கேள்விப்பட்டார்கள். விபத்தில் தன் அப்பாவையும் வளர்ப்புதாயையும் அந்த வாலிபன் பறிகொடுத்திருந்தான். அந்த வாலிபன் யாரென்பது தெரியாவிட்டாலும், “அவனுக்காகவும் அவனுடைய குடும்பத்தினருக்காகவும் நாம் ஜெபிக்கவேண்டும்” என்று அபியின் அம்மா சொன்னார்.
ஒரு சில வருடங்கள் கடந்தன. இப்போது அபி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தாள். அவள் வகுப்பிற்குச் சென்றபோது, தன்னுடைய பக்கத்து இருக்கையில் அமரும்படி அபியிடம் ஒரு மாணவன் கேட்டுக்கொண்டான். அந்த மாணவனின் பெயர் ஆஸ்டின் ஹேட்ச். விமான விபத்தில் தப்பிய அந்த வாலிபனுக்காகத்தான் அபியும் அவளுடைய அம்மாவும் முன்பு ஜெபித்திருக்கிறார்கள். அபியும் ஆஸ்டினும் ஒருவரை ஒருவர் விரும்பி, 2018ல் திருமணம் செய்துகொண்டார்கள்.
பிறகு ஒரு பேட்டியின்போது, “என்னுடைய வருங்கால கணவருக்காக நான் ஜெபித்திருக்கிறேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை” என்று அபி சொன்னாள். நாமும், நமக்கும் நமக்குத் தெரிந்தவர்களுக்கும் மட்டுமே ஜெபிப்பதோடு முடங்கிவிடக்கூடாது. மற்றவர்களுக்காகவும் ஜெபிக்கவேண்டும். எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதும்போது, “எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்” என்று புத்திசொல்கிறார். எபே 6:18. அதிகாரத்தில் இருப்பவர்கள் உட்பட “எல்லா மனுஷருக்காகவும்” ஜெபம்பண்ணுங்கள் என்று 1தீமோ 2:1 கூறுகிறது.
எல்லாருக்காகவும், நமக்குத் தெரியாதவர்களுக்காகவும் ஜெபிப்போம். அப்படியும்கூட “ஒருவர் பாரத்தை ஒருவர்” சுமக்கலாம். கலா 6:2.
அன்றாடப் பணிகளில் அலுப்பா?
நேராக நிறுத்தப்பட்டிருக்கும் மரத்தண்டுகளை/பின்களை பெரிய பந்தை உருட்டி, குறிபார்த்து அடிக்கும் விளையாட்டை ஆங்கிலத்தில் பொளலிங் என்பார்கள். அவ்வாறு அந்தத் தண்டுகளை ஒரு பந்து அடிப்பதுபோல என் தோழியான எரின் தன் கணுக்காலில் பச்சை குத்தியிருந்தாள். “தண்டுகளை நேராக வையுங்கள்” என்கிற அர்த்தமுடைய சாரா குரூவ்ஸின் பாடலைக் கேட்டபிறகுதான் அவ்வாறு பச்சைக் குத்திக்கொள்ள அவளுக்கு எண்ணம் வந்ததாம். தண்டுகளை பந்து அடித்தபிறகு, அவற்றை மீண்டும் நேரே வைக்கவேண்டும், அடுத்து யாராவது அடிப்பார்கள், மீண்டும் நேராக வைக்கவேண்டும். அதுபோலத்தான் அன்றாட பணிகளும் இருக்கின்றன; சிலசமயங்களில் அவற்றைச் செய்வது அர்த்தமற்றது போலக்கூடத் தோன்றும். அத்தகைய பணிகளைச் செய்வதில் சந்தோஷங்கொள்ளுங்கள் என்று ஊக்கமூட்டுகிற பாடல் அது.
துணி துவைப்பது, சமைப்பது, வீட்டைப் பராமரிப்பது போன்ற வேலைகள் ஒரு நாள் முடிந்து, மறுநாளும் ஆரம்பிக்க வேண்டியவை. இது புதிதல்ல, எப்போதும் இருப்பதுதான். பழைய ஏற்பாட்டில் பிரசங்கி என்கிற புத்தகத்திலும் அதுபற்றிச் சொல்லப்பட்டுள்ளது. மனித வாழ்க்கையின் அன்றாட பணிகளை மீண்டும் மீண்டும் செய்வதில் என்னதான் பயனிருக்கிறது என்று அப்புத்தகத்தின் ஆசிரியர் அலுத்துக்கொள்கிறார். பிர 1:2-3. சில சமயங்களில் அவை அர்த்தமற்றவையாகவும் தோன்றுகிறதாம். “முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்.” வசனம் 9.
ஆனால் “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது” அப்பணிகள் அர்த்த முள்ளவையாக மாறுவதாகவும், சந்தோஷ உணர்வு கிடைப்பதாகவும் அதன் ஆசிரியர் கூறுகிறார். பிர 12:13. வாழ்க்கையின் அன்றாட பணிகளை தேவன் உயர்வாகப் போற்றுகிறார், அவற்றை உண்மை யோடு செய்பவர்களுக்கு பலனளிக்கிறார். வச 14. இதை உணரும்போது ஆறுதல் உண்டாகிறது.
நீங்கள் மீண்டும் மீண்டும் நேரே நிறுத்தவேண்டிய “தண்டுகள்”/பின்கள் யாவை? அத்தகைய வழக்கமான வேலைகளைச் செய்வது களைப்பாகத் தோன்றும்போது, தேவனுக்கான அன்பின் பணிகளாக அவற்றைச் சமர்ப்பித்து, செய்துபாருங்களேன்!
வாய்ப்பை நழுவ விடாதீர்கள்
“உன் பிள்ளைகளுக்கு நிலாவைக் காட்டி வளர்க்கக் கிடைக்கும் வாய்ப்பை ஒருபோதும் நழுவவிடாதே!” என்று சொன்னார் திருமதி வெப் அவர்கள். வாரத்தின் மத்திய நாள் ஒன்றில் ஆராதனைக்காகக் கூடியிருந்தோம். அப்போது அதற்கு முந்தின நாள் இரவில் தெரிந்த பௌர்ணமி நிலவு பற்றிப் பேச்சு எழுந்தது. பேசிக்கொண்டிருந்தவர்களில் மிகவும் மூத்தவர்தான் திருமதி வெப் அவர்கள். தேவனுடைய பிரம்மாண்ட படைப்பை எண்ணி எப்போதும் பிரமிப்பவர். என் மனைவிக்கு நன்றாகப் பழக்கமானவர். அப்போது நான் இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பன். பிள்ளை வளர்ப்புக்கு அவர் வழங்கிய மிகமுக்கிய ஆலோசனை அது. உன் பிள்ளைகளுக்கு நிலாவைக் காட்டி வளர்க்கக் கிடைக்கும் வாய்ப்பை ஒருபோதும் நழுவவிடாதே!
அருமையான சங்கீதங்களை எழுத அனைத்து தகுதிகளையும் பெற்றவர் திருமதி வெப் அவர்கள். அந்த அளவுக்கு இயற்கையை ஆராயக்கூடியவர். வானசேனைகள் பற்றி தாவீது விவரிப்பதிலும் அந்த அளவு ஆழத்தைக் காணலாம். “அவைகளுக்குப் பேச்சுமில்லை . . . ஆகிலும் அவைகளின் வசனங்கள் பூமியெங்கும், அவைகளின் சத்தம் பூச்சக்கரத்துக் கடைசி வரைக்கும் செல்லுகிறது” என்று சொல்லுகிறார். சங்கீதம் 19:3-4. அதற்காக தாவீதோ, திருமதி வெப் அவர்களோ சந்திரனை அல்லது நட்சத்திரங்களை வணங்குகிறவர்கள் கிடையாது. மாறாக, அவற்றைச் சிருஷ்டித்தவரை வணங்குகிறவர்கள். வானங்களும் ஆகாயவிரிவும் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன. வசனம் 1.
பிள்ளைகள், வாலிபர்கள், கணவன்-மனைவியர், அக்கம்பக்கத்தார் என நம்மைச் சுற்றிலுமுள்ளவர்களிடம், தேவனுடைய கிரியைகள் வெளிப்படுத்துகிறவற்றைப் பார்க்கச் சொல்லலாம், அவருடைய மகிமையை அறிவிக்கிறவற்றைக் கேட்கச் சொல்லலாம். அவருடைய கரத்தின் கிரியைகளைக் கவனிக்கும்போது, சிருஷ்டிகராகிய அவரை பயபக்தியுடன் தொழுதுகொள்ள வழிநடத்தப்படுவோம். அந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.
பூத்துக்குலுங்கும் பாலைவனம்
எல்லா பாலைவனங்களையும் போல மணல் மேடுகள், வறண்ட பள்ளத்தாக்குகள், செங்குத்தான மேடுகள், பெரும்பாலும் வறண்ட பகுதிகளையுடைய மலைகள் ஆகியவை உள்ளடங்கியதுதான் மொகாவி பாலைவனம். ஆனால், ஒரு சில வருடங்களுக்கு ஒருமுறை அங்கு அதிகளவு மழைபெய்து, “ஒவ்வோர் அடி மணலையும் அல்லது சரள் பரப்பையும் பூத்துக்குலுங்கச்செய்கிறது” என்று சொல்கிறார் அமெரிக்க உயிரியல் அறிஞரான எட்மன்ட் ஜேகர். மொ ஜேவ் மலர்கள் பூத்துக்குலுங்குவதை ஒவ்வொரு வருடமும் பார்க்கமுடியாது. வறண்ட அந்த நிலப்பகுகுதியானது சரியான காலச்சூழலில் பெலமான சூறாவளியால் ஈரமாகி, சூரியவெளிச்சத்தில் காய்ந்தால்தான் அந்தப் பாலைவனம் பூத்துக்குலுங்குமென்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
வறண்ட அந்தப் பகுதியையும்கூட தேவன் பசுமையாக்குகிறார். இந்தக் காட்சியானது ஏசாயா தீர்க்கதரிசியை எனக்கு ஞாபகப்படுத்துகிறது. தேசங்கள்மேல் தேவனுடைய நியாயத்தீர்ப்பு உண்டாகுமெனச் சொல்லிவிட்டு, நம்பிக்கையூட்டும் ஒரு செய்தியையும் கூறுகிறார் ஏசாயா 35. எல்லாவற்றையும் தேவன் சரிசெய்கிற காலம் வருகிறது என்று சொல்லிவிட்டு, “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும்” என்கிறார். வசனம் 1. தேவனால் மீட்கப்பட்டவர்கள் “ஆனந்தக் களிப்புடன் பாடி” தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள் என்றும், “நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்” என்றும் சொல்கிறார். வசனம் 10.
நம்முடைய நித்திய வாழ்க்கை பற்றி தேவனுடைய வாக்குறுதிகளில் உறுதியாகச் சொல்லப்பட்டுள்ளன. வாழ்க்கையில் வறட்சியும் ஏற்படலாம், வெள்ளப்பெருக்கும் ஏற்படலாம், ஆனாலும் நாம் தேவனை நம்பலாம். அவருடைய அன்பில் வேரூன்றியிருந்தால் நாம் அவருடைய சாயலுக்கொப்பாக பூத்துக்குலுங்குகிற சமயம் வருமட்டும் வளர்ந்துகொண்டே இருக்கலாம். அந்தச் சமயம் வரும்போது இயேசு வந்து, எல்லாவற்றையும் சரிசெய்வார்.
பொக்கிஷ வேட்டை
மேரியும் ஜானும் தங்களுடைய நாயைக் கூட்டிக்கொண்டு, தங்களுக்குச் சொந்தமான இடத்தில் நடந்துகொண்டிருந்தார்கள். சமீபத்தில் பெய்திருந்த மழையில் மண் கரைந்திருந்ததால், உள்ளே புதைந்திருந்த துருப்பிடித்த தகர டப்பா ஒன்று ஓரிடத்தில் வெளியே தெரிந்தது. அந்த டப்பாவை அவர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். அதைத் திறந்து பார்த்தபோது, ஒரு நூற்றாண்டு பழைமை வாய்ந்த சில தங்க நாணயங்கள் உள்ளே இருந்தன! அந்தத் தம்பதியர் மீண்டும் அந்த இடத்திற்கு வந்து தேடிப்பார்த்தபோது அதேபோல ஏழு டப்பாக்களை எடுத்தார்கள். அவற்றில் மொத்தம் 1,427 தங்க நாணயங்கள் இருந்தன. பிறகு, அவற்றையெல்லாம் வெவ்வேறு இடங்களில் மீண்டும் புதைத்துவைத்துப் பாதுகாத்தார்களாம்.
சேடில் ரிட்ஜ் ஹோர்ட் (Saddle Ridge Hoard) என்று அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய பொக்கிஷ வேட்டையாக அது கருதப்படுகிறது. அந்த தங்க நாணயங்களின் மதிப்பு 10 மில்லியன் டாலராகக் கணக்கிடப்பட்டுள்ளது. இயேசு சொன்ன உவமை ஒன்றை இந்தச் சம்பவம் அதிகமாக நினைவூட்டுகிறது. “பரலோகராஜ்யம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.” மத்தேயு 13:44.
பொக்கிஷ வேட்டைகள் குறித்த கற்பனை கதைகளுக்கும் பஞ்சமில்லை; ஆனால் உண்மையிலேயே அப்படி நடப்பது அபூர்வம்தான். ஆனால் இயேசு சொல்கிற பொக்கிஷத்தை எல்லாருமே பெறலாம். அதற்கு அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, அவரை ஏற்றுக்கொண்டு, அவரைப் பின்பற்ற வேண்டும். யோவான் 1:12.
அந்தப் பொக்கிஷம் அள்ள அள்ள குறையாதது. நாம் நம்முடைய பழைய வாழ்க்கையை விட்டு, தேவனையும் அவருடைய நோக்கங்களையும் நாடும்போது, அவர் எவ்வளவு விலையேறப் பெற்றவர் என்பதைக் காணலாம். “கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தின்” மூலமாக, நம் கற்பனைக்கும் எட்டாத பொக்கிஷங்களைத் தருகிறார். எபே 2:6. அவருடைய மகன்களும் மகள்களுமாக நாம் புதுவாழ்வைப் பெறுவதும், வாழ்க்கையில் புதிய நோக்கங்களைக் கண்டுகொள்வதும், அவரோடு நித்தியத்தில் வாழும் மகிழ்ச்சியைப் பெறுவதும் அந்தப் பொக்கிஷத்தில் அடங்கும்.
ஓய்வாக இருக்கலாமா?
சிகிச்சைக்காக உடற்பயிற்சி நிபுணரைச் சந்தித்தார் டார்னெல். விபத்திலிருந்து சில மாதங்களுக்கு முன் குணமடைந்திருந்தார். எனவே, உடற்பயிற்சி நிபுணர் கொடுக்கும் பயிற்சிகளின்போது அதிகமாக வலிக்கும் என்பது சந்தேகமின்றி தெரிந்தது. பலநாட்களாக நீட்டி, மடக்காதிருந்த பகுதிகளை நிபுணர் நீட்டி, மடக்கிவிட்டு, “இப்போது ஓய்வு எடுங்கள்” என்று சொன்னார். அந்த அனுபவம் பற்றிச் சொல்லும்போது, குறைந்தபட்சம் ஐம்பது முறையாவது “சரி, இப்போது ஓய்வு எடுங்கள்” என்று நிபுணர் சொல்லியிருப்பாரென்று கூறினார்.
தன்னுடைய மொத்த வாழ்க்கைக்கும் அந்த வார்த்தைகள் பொருந்தக்கூடியவை என்று டார்னெல் கூறுகிறார். கவலைப்படுவதை விட்டுவிட்டு, தேவன் நல்லவர், உண்மையுள்ளவர் என்பதை உணரும்போது அவரால் ஓய்வு எடுக்க முடிந்ததாம்.
சிலுவை மரணம் நெருங்கியிருந்த நிலையில், தம்முடைய சீடர்கள் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்வது அவசியமென இயேசு உணர்ந்தார். அவருடைய மரணத்திற்கு பிறகு சீடர்கள் பல உபத்திரவங்களையும் துயரங்களையும் சந்திக்கவேண்டியிருக்கும் என்று அறிந்து, அவர்களோடு வாசம்பண்ணவும், தாம் போதித்ததை அவர்களுக்கு நினைவூட்டவும் பரிசுத்த ஆவியானவரை அனுப்புவதாகச் சொல்லி, இயேசு அவர்களை ஊக்கப்படுத்தினார் (யோவா. 14:26). “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; ... உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக” என்றும் சொன்னார் (வச. 27).
நம் அனுதின வாழ்வில் நமக்கு இக்கட்டுகளை ஏற்படுத்துகிற விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. ஆனால் தேவனை அதிகமாக நம்பவேண்டும். அப்போது தம்முடைய ஆவியானவர் நமக்குள் வாசஞ்செய்வதையும், அவர் தம்முடைய சமாதானத்தை நமக்கு அருளுவதையும் அவர் நமக்கு நினைவூட்டுவார். தேவனிடமிருந்து நாம் பெலனைப் பெற்றுக்கொள்ளும்போது, அந்த உடற்பயிற்சி நிபுணர் சொன்னதுபோல “சரி, இப்போது நீ ஓய்வு எடுக்கலாம்” என்று அவர் சொல்வதை நாம் கேட்கலாம்.