எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கிரிஸ்டன் ஹொம்பெர்க்கட்டுரைகள்

குணமாகுதலுக்கான நம்பிக்கை

முதுகுத் தண்டு பாதிப்புகளால் முடமானவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் புதிய வழி உருவாகியுள்ளது. தசைகள் மற்றும் மூளைக்கு இடையேயுள்ள நரம்பியல் பாதைகளை மீண்டும் இணைக்க, நரம்பு வளர்ச்சியைத் தூண்டும் வழியை ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். முடங்கிய எலிகள் மீண்டும் நடக்க இந்த மறுவளர்ச்சி உதவுகிறது. மேலும் இந்த சிகிச்சையானது மனிதர்களுக்குப் பாதுகாப்பானதா மற்றும் பயனுள்ளதா என்பதைத் தொடர் சோதனை கண்டறியும்.

முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விஞ்ஞானம் எதைச் சாதிக்க விரும்புகிறதோ, அதை இயேசு அற்புதங்கள் மூலம் செய்தார். பெதஸ்தாவில் உள்ள குளத்தை அவர் பார்வையிட்டபோது, நோய்வாய்ப்பட்ட பலர் குணமடைவார்கள் என்ற நம்பிக்கையில் அலைமோதிக்கொண்டிருந்தனர். இயேசு, அவர்களுள் “முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த” (யோவான் 5:5) ஒரு மனுஷனைத் தேடினார். அவன் உண்மையாகவே சுகமடைய விரும்புவதை உறுதிசெய்த பின்னர், கிறிஸ்து அவனை எழுந்து நடக்குமாறு அறிவுறுத்தினார், “உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான்” (வ. 9)

நமது உடல் உபாதைகள் அனைத்தும் தேவனால் குணமாகும் என்று நமக்கு வாக்களிக்கப்படவில்லை. அன்று இயேசுவால் குணமடையாத மற்றவர்களும் குளத்திலிருந்தனர். ஆனால் அவர் மீது நம்பிக்கை வைப்பவர்கள் விரக்தியிலிருந்து நம்பிக்கையும், கசப்பிலிருந்து கருணையும், வெறுப்பிலிருந்து அன்பையும், குற்றஞ்சாட்டுவதிலிருந்து மன்னிக்கும் மாண்பையும் பெற்று ,அவர் தரும் குணத்தை அனுபவிக்க முடியும்.எந்த அறிவியல் கண்டுபிடிப்பும் (அல்லது தண்ணீர் குளமும்) அத்தகைய சிகிச்சையை நமக்கு வழங்க முடியாது; அது விசுவாசத்தால் மட்டுமே வரும். 

 

மகிழ்ச்சியும் ஞானமும்

ஜப்பானில் ஒவ்வொரு வசந்த காலத்திலும் இனிமையான நறுமணப் பூக்கள் நேர்த்தியான வெளிர் மற்றும் துடிப்பான இளஞ்சிவப்புகளால் நிரப்பப்படுகின்றன. இது குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் உணர்வுகளை மகிழ்விக்கிறது. குறுகிய காலம் மட்டுமே இருக்கக்கூடிய அந்த மலர்கள் ஜப்பானியர்களிடம், குறுகிய வாழ்க்கை அனுபவத்தின் மேன்மையை தன் அழகினாலும் வாசனையினாலும் ஏற்படுத்திச் செல்கிறது. திடீரென்று ஏற்படும் மகிழ்ச்சி மாற்றத்தை அவர்கள் “வாழ்வின் நிலையற்ற தன்மை” என்று அழைக்கிறார்கள்.

மனிதர்களாகிய நாம் மகிழ்ச்சியின் உணர்வுகளைத் தேடவும் அதில் நீடிக்கவும் விரும்புகிறோம் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஆயினும்கூட, வாழ்க்கை கஷ்டங்களால் நிரம்பியுள்ளது என்பதன் அர்த்தம், அன்பான தேவன் மீதான நம்பிக்கை என்னும் பூதக்கண்ணாடியின் மூலம் வலி மற்றும் இன்பம் இரண்டையும் பார்க்கும் திறனை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் அவிசுவாசத்துடனோ இருக்கவோ அல்லது வாழ்க்கையைப் பற்றிய யதார்த்தமற்ற பார்வையை நாமே உருவாக்கிக்கொள்ளவோ அவசியமில்லை.

பிரசங்கி புத்தகம் நமக்கு ஒரு பயனுள்ள மாதிரியை வழங்குகிறது. இந்த புத்தகம் சில நேரங்களில் எதிர்மறையான அறிக்கைகளின் பட்டியலாக கருதப்பட்டாலும், “எல்லாம் மாயை” (1:2) என்று எழுதிய அதே சாலெமோன் ராஜா, “வேறொரு நன்மையும் இல்லை” என்று கூறி, வாழ்க்கையில் எளிமையான விஷயங்களில் மகிழ்ச்சியைக் காண வாசகர்களை ஊக்குவிக்கிறார். “புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை” (8:15).

அழகான பருவங்களிலும் கடினமான காலங்களிலும் (3:11-14; 7:13-14), பரலோகப்பார்வையில் எதுவுமே நிரந்தரமானது இல்லை என்பதை அறிந்து, ஞானத்தை அடையவும் தேவனுடைய கிரியைகளை பார்க்கும்படியும் உதவிசெய்யும்படி (வச. 16-17) தேவனிடம் நாம் கேட்கும்போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. 

 

பாடும் பள்ளத்தாக்குகள்

என் மாமியார் அவரது நாய்களுடன் பேசும் திறனைப் பற்றி நான் அடிக்கடி அன்புடன் கேலி செய்வது உண்டு. அந்த நாய்கள் குரைக்கும்போது, அவர் அவைகளுக்கு அன்பாய் பதிலளிப்பார். அவர் மாத்திரமல்ல, நாய்களை வளர்க்கக்கூடியவர்கள் அவைகளின் சிரிப்பையும் அவ்வப்போது உணரக்கூடும். நாய், பசு, நரி, சீல் மற்றும் கிளி போன்ற உயிரினங்கள் அனைத்தும் “குரல் விளையாட்டு சிக்னல்களை” கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதனை சிரிப்பு என்றும் அழைப்பர். இந்த உடல்மொழிகளை வைத்து, அவைகள் யாருடனும் சண்டையிடவில்லை, மாறாக, தங்களுடைய அன்பை வெளிப்படுத்துகின்றன என்பதை அறிந்துகொள்ள முடியும்.

விலங்குகள் சிரிப்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவது, மற்ற படைப்புகள் தங்கள் சொந்த வழியில் தேவனை எவ்விதம் துதிக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்வதற்கு உதவுகிறது. தாவீது தனது சுற்றுப்புறங்களைப் பார்த்தபோது, “மேடுகள் சுற்றிலும் பூரிப்பாயிருக்கிறது” என்றும் “பள்ளத்தாக்குகள்... கெம்பீரித்துப் பாடுகிறது” என்றும் அவருக்கு தோன்றியிருக்கிறது (சங்கீதம் 65:12-13). தேவன் தேசத்தை பராமரித்து, செழுமைப்படுத்தி, அழகையும் வாழ்வாதாரத்தையும் அவற்றிற்கு கொடுத்திருக்கிறார் என்பதை தாவீது உணர்ந்தார்.

நமது சுற்றுப்புற சூழல்கள் இயல்பில் பாடல் பாடக்கூடியவைகள் அல்லவெனினும், அவை தேவனுடைய பிரம்மாண்ட படைப்பை சாட்சியிடக்கூடியவைகள் மட்டுமின்றி, நம்முடைய குரல் ஓசையில் அவரை துதிக்க நமக்கு அழைப்பு விடுக்கின்றன. பூமியின் குடிகள் அனைவரும் அவருடைய படைப்பின் ஆச்சரியத்தைக் கண்டு மகிழ்ச்சியின் ஆரவார துதிகளை அவருக்கு செலுத்துவோம் (வச. 8). அவற்றை தேவன் கேட்டு புரிந்துகொள்ளுவார் என்று விசுவாசிப்போம். 

தேவனின் உதவியால் பேசுதல்

பட்டாம்பூச்சிகளை சத்தமிடும் உயிரினங்கள் என்று பொதுவாக யாரும் கருத மாட்டார்கள். அதோடு ஒரு மோனார்க் பட்டாம்பூச்சி சிறகுகளை அசைப்பது நடைமுறையில் நம் செவிகளுக்கு கேட்பதில்லை. ஆனால் மெக்சிகோவின் மழைக்காடுகளில் உள்ள அவைகள், தங்கள் குறுகிய வாழ்க்கையைத் தொடங்குகையில், கூட்டுமாக அவைகள் சிறிய சிறுகளையடித்து பறக்கும்போது உண்டாகும் ஒலி வியக்கத்தக்க வகையில் சத்தமாக இருக்கிறது. ஆயிரமாயிரமான மோனார்க்குகள் ஒரே நேரத்தில் தங்கள் சிறகுகளை அசைக்கும்போது, அது ஒரு நீர்வீழ்ச்சி போல் ஒலிக்கிறது.

நான்கு சிறகுகள் கொண்ட வித்தியாசமான உயிரினங்கள் எசேக்கியேலின் தரிசனத்தில் தோன்றியபோதும் அதேபோல வர்ணிக்கப்படுகிறது. பட்டாம்பூச்சி கூட்டத்திலும் குறைவாயிருப்பினும், அவைகளின் செட்டைகளை அடிக்கும் ஓசையை “பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும்” (எசேக்கியேல் 1:24) என்று ஒப்பிடுகிறார். அவைகள் நின்று தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருக்கையில், “இஸ்ரவேலர்களுக்கு தன்னுடைய வார்த்தைகளை” சொல்லும்படி (2:7) அழைக்கும் தேவனின் சத்தத்தை எசேக்கியேல் கேட்டார்.

எசேக்கியேல், மற்ற பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளைப் போலவே தேவஜனங்களிடம் சத்தியத்தை பேசும் பணியை ஏற்றார். இன்று, தேவன் நம்மைச் சுற்றியுள்ளவர்களுடன் நம் வாழ்வில் தம்முடைய நற்செயல்களின் உண்மையைப் பகிர்ந்து கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கிறார் (1 பேதுரு 3:15). சிலசமயம் அந்த அழைப்பு நேரடியான கேள்விகளுக்கு பதிலளிக்கும் “தண்ணீர் இரைச்சலை” போலவிருக்கும். மற்றசமயம், ஓசையில்ல வார்த்தைப்போல மெல்லிய சத்தமாக இருக்கும். தேவனின் அன்பைப் பகிர்ந்துகொள்வதற்கான அழைப்பு ஒரு மில்லியன் பட்டாம்பூச்சிகளைப் போல சத்தமாக இருந்தாலும் அல்லது ஒரு பட்டாம்பூச்சிப் போல் அமைதியாக இருந்தாலும், எசேக்கியேலைப் போலவே நாம் கேட்க வேண்டும். தேவன் சொல்ல விரும்புவதைக் கேட்பதற்கு செவி சாய்க்க வேண்டும். 

தாழ்மை தரும் உயா்வு

பல ஆசிரியர்களைப் போலவே கேரியும் தனது ஆசிரியர் பணிக்காக, விடைத்தாள்களைத் தரவரிசைப்படுத்துவதில், மற்றும் மாலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் பேசுவதிலும் பல மணி நேரங்களை செலவழிக்கிறார். இந்த முயற்சியின் பலனைத் தக்கவைக்க, தன்னுடன் பணியாற்றும் பிற ஆசிரிய நண்பர்களின் தோழமை மற்றும் நடைமுறை உதவியைச் சார்ந்துகொள்கிறார். இந்த ஒத்துழைப்பினால் சவால் மிக்க அவருடைய பணி எளிதாக்கப்பட்டுள்ளது. கல்வியாளர்களின் சமீபத்திய ஆய்வில், நாம் தாழ்மையுடன் பணிபுரியும் போது ஒத்துழைப்பின் பலன் பெரிதாகிறது என்பதைக் கண்டறிந்துள்ளது. சக பணியாளர்கள் தங்கள் பலவீனங்களை ஒப்புக்கொள்ளத் தயாராக இருக்கும்போது, மற்றவர்கள் தங்கள் அறிவைப் பகிர்ந்து கொள்வதில் பாதுகாப்பாக உணர்கிறார்கள், இது குழுவில் உள்ள அனைவருக்கும் திறம்பட உதவுகிறது.

வேதாகமம் குழுவாக ஒத்துழைத்து பணியாற்றுவதைவிட, தாழ்மையின் அவசியத்தை அதிகம் போதிக்கிறது. “கர்த்தருக்குப் பயப்படுதல்” அதாவது தேவனுடைய சௌந்தரியம், வல்லமை மற்றும் மாட்சிமையோடு நம்மை ஒப்பிட்டு, சரியான புரிதலை நாம் கொண்டிருக்கும்போது, அது நமக்கு “ஐசுவரியத்தையும் கனத்தையும் ஜீவனையும்” (நீதிமொழிகள் 22:4) தருகிறது. தாழ்மை, நம்மை உலகத்தின் பார்வையில் மட்டுமல்ல, தேவனின் பார்வையிலும் பயனுள்ளவர்களாய் சமூகத்தில் வாழ வழி நடத்துகிறது. ஏனென்றால் நாம் சக மனிதர் அனைவருக்கும் பயனளிக்கும் வாழ்வை வாழ விரும்புகிறோம்..

“ஐசுவரியத்தையும், கனத்தையும் ஜீவனையும்” நமக்கென்றே பெறுவதற்காக மட்டும் நாம் தேவனுக்குப் பயப்படுவதில்லை, அப்படியிருந்தால் அது உண்மையான தாழ்மையாக இருக்க முடியாது. மாறாக, “தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலான” (பிலிப்பியர் 2:7) இயேசுவைப் பின்பற்றுகிறோம். எனவே, அவருடைய பணியைச் செய்வதற்கும், அவருக்கு கனத்தைக் கொடுப்பதற்கும், நம்மைச் சுற்றியுள்ளோர்க்கு வாழ்வளிக்கும் நற்செய்தியை எடுத்துச் செல்வதற்கும், தாழ்மையுடன் ஒத்துழைக்கும் ஒரு சரீரத்தின் அவயமாக நாம் மாறலாம்..

சரியான கவனம்

“கா என்ற இளைஞனை” நாங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக அறிவோம். நாங்கள் தேவனைப் பற்றி என்ன கற்றுக்கொண்டோம் என்பதைப் பற்றி விவாதிக்க வாரந்தோறும் கூடும் தேவாலயத்தில் இருந்து எங்கள் சிறிய ஜெபக்குழுவில் அவர் ஒரு பகுதியாக இருந்தார். ஒரு நாள் மாலை எங்கள் வழக்கமான சந்திப்பின் போது, அவர் ஒலிம்பிக்கில் பங்கேற்றதைக் குறித்து குறிப்பிட்டார். குறிப்பிடுவது மிகவும் சாதாரணமானது, அதை நான் கிட்டத்தட்ட மறந்தே போனேன். ஆனால் அவர் சொல்லும்போது, வெண்கலப் பதக்கப் போட்டியில் பங்கேற்ற ஒரு ஒலிம்பிக் வீரரை எனக்குத் தெரியும் என்று தெரிந்துகொண்டேன்! அவர் இதற்கு முன்பு அதை ஏன் குறிப்பிடவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் கா-வைப் பொறுத்தவரை, அவரது தடகள சாதனை அவரது கதையின் ஒரு சிறப்பு பகுதியாக இருந்தாலும், அவரது அடையாளத்திற்கு மிக முக்கியமான விஷயங்கள் மையமாக இருந்தன. அவைகள், அவரது குடும்பம், அவரது சமூகம் மற்றும் அவரது நம்பிக்கை.

லூக்கா 10:1-23ல் உள்ள கதை, நமது அடையாளத்திற்கு எது மையமாக இருக்க வேண்டும் என்பதை விவரிக்கிறது. தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்ல இயேசு அனுப்பிய எழுபத்திரண்டு பேர் தங்கள் பயணத்திலிருந்து திரும்பி வந்தபோது, “உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது” (வச. 17) என்றார்கள். அவர்களுக்கு மகத்தான சக்தியும் பாதுகாப்பையும் அளித்திருப்பதை இயேசு ஒப்புக்கொண்டாலும், அவர்கள் தவறான காரியத்தில் கவனம் செலுத்துவதாகக் கூறினார். இதைக் குறித்து சந்தோஷப்படவேண்டாம் என்றும் “உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்” (வச. 20) என்று இயேசு வலியுறுத்தினார்.

தேவன் நமக்கு அருளிய சாதனைகள் அல்லது திறன்கள் எதுவாக இருந்தாலும், நாம் நம்மை இயேசுவுக்கு அர்ப்பணித்ததினால் நம்முடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டுள்ள மேன்மையே நாம் மகிழ்ச்சியடைவதற்கான பெரிய காரணமாய் இருக்கமுடியும். அதினால் அவருடைய பிரசன்னத்தையும் நாம் அனுதினமும் அனுபவிக்கும் சிலாக்கியத்தைப் பெறுகிறோம். 

- கிறிஸ்டன் ஹோம்பெர்க்

மற்றவர்களின் தேவையை சந்தித்தல்

பிலிப்பின் தந்தை கடுமையான மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் வாழ்ந்தார். சிண்டியும் அவளது இளம் மகன் பிலிப்பும் அவரை ஒரு நாள் முழுவதும் தேடினர். பிலிப் அவரது நலனில் அக்கறை கொண்டிருந்தான். அவன் தனது அம்மாவிடம், தனது தந்தையையும் சேர்த்து, வீதியில் வசிக்கும் மக்கள் உஷ்ணமாய் இருக்கிறார்களா என்று கேட்டான்.  அந்த கேள்விக்கு பதிலாக, அப்பகுதியில் உள்ள வீடற்ற மக்களுக்கு போர்வைகள் மற்றும் குளிர் காலநிலை உபகரணங்களை சேகரித்து விநியோகிக்கும் முயற்சியை அவர்கள் தொடங்கினர். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, சிண்டி அதை தனது வாழ்க்கையின் முக்கிய வேலையாகக் கருதினாள். உறங்குவதற்கு ஒரு சூடான இடம் இல்லாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய அவளை தூண்டியதற்காக தனது மகனுக்கும், தேவன் மீதான அவளுடைய ஆழ்ந்த நம்பிக்கைக்கும் பெருமை சேர்த்துள்ளார். 
மற்றவர்களின் தேவைகளை பூர்த்திசெய்ய வேதாகமம் நீண்ட காலமாக நமக்குக் கற்பித்துக்கொண்டிருக்கிறது. யாத்திராகமம் புத்தகத்தில், போதுமான பொருளாதாரம் இல்லாதவர்களுடன் நமது தொடர்புகளை வழிநடத்துவதற்கான கொள்கைகளின் தொகுப்பை மோசே பதிவு செய்கிறார். மற்றவரின் தேவைகளை சந்திப்பதற்கு நாம் தூண்டப்பட்டால், நாம் “அதை ஒரு வணிக ஒப்பந்தம் போல் கருதக்கூடாது.” மேலும் அதில் எந்த ஆதாயமும் லாபத்தையும் நாம் எதிர்நோக்கக்கூடாது (யாத்திராகமம் 22:25). ஒரு நபரின் வஸ்திரத்தை அடைமானமாய் எடுத்துக் கொண்டால், அது சூரிய அஸ்தமனத்திற்குள் திருப்பித் தரப்பட வேண்டும். ஏனெனில் அந்த ஆடை மட்டுமே அவர்களிடம் இருக்கக்கூடிய சொத்து. அது இல்லாமல் அவர்கள் எவ்வாறு தூங்குவார்கள்? (வச. 27). 
துன்பப்படுபவர்களின் வலியை நாம் எவ்வாறு குறைக்கலாம் என்பதைப் பார்க்க நம் கண்களையும் இதயங்களையும் திறக்கும்படி தேவனிடம் கேட்போம். சிண்டி மற்றும் பிலிப் போன்று பலரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய விரும்பினாலும் அல்லது ஒரு தனி நபரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய விரும்பினாலும், அவர்களை கண்ணியத்துடனும் அக்கறையுடனும் நடத்துவதன் மூலம் நாம் அவரை கனப்படுத்துகிறோம்.  

நான் யார்?

உள்ளுர் ஊழியத்திற்கான தலைமைக் குழுவின் உறுப்பினராக, குழு விவாதத் தலைவர்களாக எங்களுடன் சேர மற்றவர்களை அழைப்பது எனது வேலையின் ஒரு பகுதியாகும். என்னுடைய அழைப்பிதழ்கள், தேவைப்படும் நேர அவகாசத்தை விவரித்து கூட்டங்கள் மற்றும் வழக்கமான தொலைபேசி அழைப்புகளின் போது தலைவர்கள் தங்கள் சிறிய குழு பங்கேற்பாளர்களுடன் ஈடுபட வேண்டிய வழிகளை கோடிட்டுக் காட்டியது. ஒரு தலைவராக ஆவதற்கு அவர்கள் செய்யும் தியாகத்தை உணர்ந்து, அவர்களை அதிகமாய் தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. சில வேளைகளில், “இதை நான் கனமாக எண்ணுகிறேன்” என்னும் அவர்களுடைய பதில் என்னை ஆச்சரியப்படுத்தும். நிராகரிப்பதற்கான நியாயமான காரணங்களை மேற்கோள் காட்டுவதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் தேவன் செய்த அனைத்திற்கும் நன்றி செலுத்துவதைத் திருப்பிக் கொடுக்க ஆர்வமாக இருப்பதாக விவரித்தனர். 
கர்த்தருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு தேவையான உபகரணங்களைக் கொடுக்க வேண்டிய நேரம் வந்தபோது, தாவீது இதேபோன்ற பிரதிபலிப்பைக் கொண்டிருந்தார்: “இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்?” (1 நாளாகமம் 29:14). தாவீதின் இந்த தயாள குணம், தன்னுடைய வாழ்க்கையிலும் இஸ்ரவேல் ஜனங்களின் வாழ்க்கையிலும் தேவனுடைய கிரியைகளின் அடிப்படையில் உந்தப்பட்டது. அவருடைய பணிவினிமித்தம், நாங்கள் “அரதேசிகளும் பரதேசிகளுமாயிருக்கிறோம்” (வச. 15) என்று அவர் தன்னை தாழ்த்துகிறார்.  
நாம் நம்முடைய நேரம், திறமை அல்லது பொருளாதாரம் என்று எதை ஆண்டவருக்காய் கொடுத்தாலும், அதை நம்முடைய வாழ்க்கையில் கொடுத்த தேவனுக்கு நாம் நம்முடைய நன்றியுணர்வை வெளிப்படுத்துவதைக் குறிக்கிறது. நம்மிடம் உள்ள அனைத்தும் அவருடைய கையிலிருந்து வருகிறது (வச. 14). பதிலுக்கு, நாம் அவருக்கு நன்றியுடன் கொடுக்க முடியும். 

சாத்தியமில்லாத பரிசு

என் மாமியாரின் பிறந்தநாளுக்கு சரியான பரிசைக் கண்டுபிடித்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன்: கை வளையலில் அவளுக்கு பிடித்தமான கல் பதிக்கப்பட்டிருந்தது! ஒருவருக்கு சரியான பரிசைக் கண்டுபிடிப்பது எப்போதுமே ஒரு முழுமையான மகிழ்ச்சி. ஆனால் ஒரு மனிதனுக்குத் தேவையான பரிசு நம் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்தால் என்ன செய்வது? நம்மில் பலர் ஒருவருக்கு மன அமைதி, ஓய்வு அல்லது பொறுமையைக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அவற்றை விலை கொடுத்து வாங்கி பரிசுக்காகிதத்தில் சுற்றிக்கொடுப்பது சாத்தியமா?

 இதுபோன்ற பரிசுகளை ஒருவர் மற்றவருக்கு வாங்கிக்கொடுப்பது சாத்தியமில்லை. ஆனால் மாம்ச ரூபத்தில் வந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அப்படிப்பட்ட சாத்தியமில்லாத ஒரு பரிசைக் கொடுப்பதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். அதுவே சமாதானம் என்னும் பரிசாகும். இயேசு பரமேறி செல்லுவதற்கு முன்பு, பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை வாக்குப்பண்ணுகிறார்: இவர் “உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” (யோவான் 14:26) என்றும் சொல்லுகிறார். அவர்களுடைய இருதயம் பயப்படாமலும் கலங்காமலும் இருப்பதற்காக, இயேசு அவர்களுக்கு தன்னுடைய சமாதானத்தை விட்டுச் சென்றார். அவரே தேவனோடும், மற்றவர்களோடும், நமக்குள்ளும் கிரியை செய்யும் சமாதானம்.

நாம் விரும்புகிறவர்களுக்கு பொறுமையையோ அல்லது சரீர ஆரோக்கியத்தையோ நாம் பரிசாகக் கொடுக்க முடியாது. வாழ்க்கையின் போராட்டங்களை மேற்கொள்ளும்போது அவர்களுக்கு அவசியப்படும் சமாதானத்தையும் அவர்களுக்கு கொடுக்கும் அதிகாரம் நம்மிடத்தில் இல்லை. ஆனால் நிலையான சமாதானத்தை அருளும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைக் குறித்து அவர்களிடத்தில் நாம் பகிர்ந்துகொள்ள முடியும்.  

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தாழ்மையுள்ள ஜோர்ன்

குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் ஜான் இவ்வளவாய் உயர்வாரென்று எவரும் எதிர்பார்க்கவில்லை. அவரது பார்வை குறைபாடும் இன்னும் பிற உடல் நலக்குறைகள் மத்தியிலும், அவர் நார்வேயில் உள்ள தனது கிராமத்தில் உள்ளவர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்தார். உடல் வேதனையின் காரணமாக தூங்க முடியாத இரவுகளில், அவர் ஜெபித்தார். ஜெபத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் நினைத்து, ஒவ்வொரு நபரையும் பேர் பேராகச் சொல்லி, அவர் இதுவரை சந்திக்காத பிள்ளைகளுக்காகக் கூட ஜெபித்தார். ஜனங்கள் அவருடைய கண்ணியத்தைப் பெரிதும் நேசித்து, அவருடைய புத்தியையும் அறிவுரையையும் பெறுவார்கள். நடைமுறையில் அவர்களுக்கு உதவ இயலாவிட்டாலும், அவருடைய அன்பைப் பெற்று அவர்கள் செல்லுகையில் அவர்கள் இன்னும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருவார்கள். ஜோர்ன் இறந்தபோது, அவருக்கு குடும்பம் இல்லாவிட்டாலும், அந்த வட்டாரத்திலேயே அவரது இறுதிச் சடங்கு வெகு விமர்சையாக இருந்தது. அவர் எண்ணியதைக் காட்டிலும் அவரது ஜெபம் மலர்ந்து மிகுந்த பலனைத் தந்தது.

இந்த தாழ்மையுள்ள மனிதர் அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றினார். அவர் தனது சிறையிருப்பிலும் தன் மூலம் தேவனிடம் திரும்பினவர்களை நேசித்தார், அவர்களுக்காக ஜெபித்தார். அவர் ரோமாபுரியின் சிறையிலிருந்தபோது, எபேசுவில் உள்ளவர்களுக்குத் தேவன் “ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை” தரும்படிக்கும், அவர்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் (எபேசியர் 1:17-19) ஜெபித்தார். அவர்கள் இயேசுவை அறிந்து, ஆவியின் வல்லமையால் அன்புடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்று ஏங்கினார்.

ஜானும் அப்போஸ்தலனாகிய பவுலும் தேவனிடம் தங்களை ஊற்றி, தாங்கள் நேசித்தவர்களுக்காக தங்களை அர்ப்பணித்து, ஜெபத்தில் தேவனுக்கு ஊழியம் செய்தனர். இன்று, நாம் பிறரை எவ்வாறு நேசிக்கிறோம், எப்படிச் சேவை செய்கிறோம் என்பதில் அவர்களுடைய உதாரணங்களைச் சிந்திப்போம். 

 

தேவனை குறித்த பிரமிப்பு

ஃபோபியா என்பது சில காரியங்கள் அல்லது சூழ்நிலைகளின் “எதேச்சையான பயம்” என வரையறுக்கப்படுகிறது. அராக்னோஃபோபியா என்பது சிலந்திகள் பற்றிய பயம் (இது பயப்படுவதற்கு முற்றிலும் சாதாரணமான பொதுவான விஷயம் என்று சிலர் சொல்லலாம்). பின்னர் குளோபோஃபோபியா (பலூன்கள் குறித்த பயம்) மற்றும் ஷாக்லெட்டோஃபோபியா (சாக்லேட் குறித்த பயம்) உள்ளது. இதுபோல சில நானூறு பயங்கள் உண்மையானவை மற்றும் ஆவணப்படுத்தப்பட்டவை. எதற்கு வேண்டுமானாலும் நாம் பயப்படக்கூடும் என்றே தோன்றுகிறது.

பத்து கட்டளைகளை பெற்றபின்னர், இஸ்ரவேலர்களின் பயம் குறித்து வேதாகமம் கூறுகிறது, “இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று” (யாத்திராகமம் 20:18). மோசேயோ அவர்களை இந்த சுவாரஸ்யமான வாக்கியங்களால் தேற்றினார்: “பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார்” (வ. 20). “பயப்படாதிருங்கள் ஆனால் பயந்திருங்கள்” என்று சொன்னதில் மோசே தனக்குத்தானே முரண்படுகிறார். உண்மையில், “பயம்” என்பதற்கு எபிரேய பாஷையில் குறைந்தபட்சம் இரண்டு அர்த்தங்கள் உள்ளன.எதைக் குறித்தாகிலும் நடுக்கமுண்டாகும் பயம் மற்றுதேவன் மீதுள்ள பயபக்தியான வியப்பு.

குளோபோஃபோபியா, ஷாக்லெட்டோஃபோபியா போன்ற பயங்கள் நமக்கு சிரிப்புண்டாக்கலாம். ஃபோபியாஸ் பற்றிய மிகவும் கவலைக்கிடமான அடிப்படை என்னவெனில், எல்லா வகையான விஷயங்களுக்கும் நாம் பயப்படக்கூடும். சிலந்திகளைப் போல நம் வாழ்வில் அச்சங்கள் ஊடுருவி, உலகம் ஒரு பயங்கரமான இடமாகத் தோன்றலாம். பயங்கள் மற்றும் அச்சங்களுடன் நாம் போராடும்போது, நம் தேவன் ஒரு வியத்தகு தேவன் என்பதை நினைவூட்டுவது நல்லது, இருளின் மத்தியில் இக்காலத்திற்கேற்ற அவருடைய ஆறுதலை நமக்களிக்கிறார். 

 

வேலையில் மனநிறைவு

தங்கள் பணி அர்த்தமுள்ளதாக மருத்துவர்கள் உணருகிறார்களா என்பதை அறிந்துகொள்ள, வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இரண்டு ஆய்வுகளை மேற்கொண்டனர். இரண்டு ஆய்வுகளும் பெரும்பாலான மருத்துவர்கள் தங்கள் பணியில் மன அழுத்தம் இருந்தாலும் அது அர்த்தமுள்ளதாகவே கருதுவதைக் கண்டறிந்துள்ளனர். அவர்களின் பணி திருப்திக்கான காரணத்தைக் கேட்டபோது, அவர்கள் நிரந்தரமான வேலை, பொறுப்புணர்வு, சுதந்திரம், வீட்டுவசதி, சக ஊழியர்கள் அவர்களை உணர்ந்த விதம் மற்றும் அவர்களின் திறன்களைப் பயன்படுத்துவதற்கும், கற்பிப்பதற்கும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் கிடைத்த வாய்ப்புகள் போன்ற காரணங்களைச் சொன்னார்கள்.

பிரசங்கியின் ஆசிரியரும் வேலையின் அர்த்தத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார். அவர், "மனுஷன் சூரியனுக்குக் கீழே இருக்கிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன?" (வ.22) என்று கேட்கிறார். நாம் நாள் முழுவதும் "அலுப்புடனும்" "துக்கத்துடனும்" வேலை செய்கிறோம், பின்னர் இரவிலும் நம் "மனதுக்கு இளைப்பாறுதலில்லை" (வ.23). வேலை "மாயையே" என்று அவர் முடிக்கிறார் (வ.23). இருப்பினும், மனுஷன் புசித்துக் குடித்து, தன்பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப்பார்க்திலும். அவனுக்கு ஒரு நன்மையுமில்லை இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது (வ.24) என்பதை உணர்கிறார். அவர் இல்லாமல் யாரால் உண்ண முடியும் அல்லது இன்பம் காண முடியும்? (வ.25). வீட்டிலோ அல்லது வெளியிலோ உடல் உழைப்பு அல்லது மன முயற்சியுடன் வேலை செய்வது ஒரு கெளரவம். நம்மில் பெரும்பாலோர் வேலை நாளின் முடிவில் திருப்தியைத் தேடுகிறோம். சிலர் இந்த திருப்தியைச் சேவை, பண ஆதாயம் அல்லது நட்பின் மூலம் கண்டடைய முயலலாம், இன்னும் பலர் வேலையைத் தேவன் கொடுத்த பாக்கியமென்று உணருமட்டும் வருத்தத்தோடு பிரயாசப்படுவார்கள் (ஆதியாகமம் 2:15). நாம் அதிருப்தி கொள்ளுகையில், நாம் தேவனிடம் செல்லலாம். ஏனெனில், எந்த வேலையும் நமக்கு முழு மனநிறைவை அளிக்காது என்பதுதான் உண்மை, ஆனால் நாம் செய்யும் வேலையில் மெய்யான அர்த்தத்தைக் கண்டறியத் தேவன் உதவுவார். ஆன் ஹரிகீர்த்தன்