எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கிரிஸ்டன் ஹொம்பெர்க்கட்டுரைகள்

பாடும் பள்ளத்தாக்குகள்

என் மாமியார் அவரது நாய்களுடன் பேசும் திறனைப் பற்றி நான் அடிக்கடி அன்புடன் கேலி செய்வது உண்டு. அந்த நாய்கள் குரைக்கும்போது, அவர் அவைகளுக்கு அன்பாய் பதிலளிப்பார். அவர் மாத்திரமல்ல, நாய்களை வளர்க்கக்கூடியவர்கள் அவைகளின் சிரிப்பையும் அவ்வப்போது உணரக்கூடும். நாய், பசு, நரி, சீல் மற்றும் கிளி போன்ற உயிரினங்கள் அனைத்தும் “குரல் விளையாட்டு சிக்னல்களை” கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதனை சிரிப்பு என்றும் அழைப்பர். இந்த உடல்மொழிகளை வைத்து, அவைகள் யாருடனும் சண்டையிடவில்லை, மாறாக, தங்களுடைய அன்பை வெளிப்படுத்துகின்றன என்பதை அறிந்துகொள்ள முடியும். 

விலங்குகள் சிரிப்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவது, மற்ற படைப்புகள் தங்கள் சொந்த வழியில் தேவனை எவ்விதம் துதிக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்வதற்கு உதவுகிறது. தாவீது தனது சுற்றுப்புறங்களைப் பார்த்தபோது, “மேடுகள் சுற்றிலும் பூரிப்பாயிருக்கிறது” என்றும் “பள்ளத்தாக்குகள்... கெம்பீரித்துப் பாடுகிறது” என்றும் அவருக்கு தோன்றியிருக்கிறது (சங்கீதம் 65:12-13). தேவன் தேசத்தை பராமரித்து, செழுமைப்படுத்தி, அழகையும் வாழ்வாதாரத்தையும் அவற்றிற்கு கொடுத்திருக்கிறார் என்பதை தாவீது உணர்ந்தார்.

நமது சுற்றுப்புற சூழல்கள் இயல்பில் பாடல் பாடக்கூடியவைகள் அல்லவெனினும், அவை தேவனுடைய பிரம்மாண்ட படைப்பை சாட்சியிடக்கூடியவைகள் மட்டுமின்றி, நம்முடைய குரல் ஓசையில் அவரை துதிக்க நமக்கு அழைப்பு விடுக்கின்றன. பூமியின் குடிகள் அனைவரும் அவருடைய படைப்பின் ஆச்சரியத்தைக் கண்டு மகிழ்ச்சியின் ஆரவார துதிகளை அவருக்கு செலுத்துவோம் (வச. 8). அவற்றை தேவன் கேட்டு புரிந்துகொள்ளுவார் என்று விசுவாசிப்போம். 

 

தேவனின் உதவியால் பேசுதல்

பட்டாம்பூச்சிகளை சத்தமிடும் உயிரினங்கள் என்று பொதுவாக யாரும் கருத மாட்டார்கள். அதோடு ஒரு மோனார்க் பட்டாம்பூச்சி சிறகுகளை அசைப்பது நடைமுறையில் நம் செவிகளுக்கு கேட்பதில்லை.  ஆனால் மெக்சிகோவின் மழைக்காடுகளில் உள்ள அவைகள், தங்கள் குறுகிய வாழ்க்கையைத் தொடங்குகையில், கூட்டுமாக அவைகள் சிறிய சிறுகளையடித்து பறக்கும்போது உண்டாகும் ஒலி வியக்கத்தக்க வகையில் சத்தமாக இருக்கிறது. ஆயிரமாயிரமான மோனார்க்குகள் ஒரே நேரத்தில் தங்கள் சிறகுகளை அசைக்கும்போது, ​​​​அது ஒரு நீர்வீழ்ச்சி போல் ஒலிக்கிறது.

நான்கு சிறகுகள் கொண்ட வித்தியாசமான உயிரினங்கள் எசேக்கியேலின் தரிசனத்தில் தோன்றியபோதும் அதேபோல வர்ணிக்கப்படுகிறது. பட்டாம்பூச்சி கூட்டத்திலும் குறைவாயிருப்பினும், அவைகளின் செட்டைகளை அடிக்கும் ஓசையை "பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும்" (எசேக்கியேல் 1:24) என்று ஒப்பிடுகிறார். அவைகள் நின்று தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருக்கையில், "இஸ்ரவேலர்களுக்கு தன்னுடைய வார்த்தைகளை" சொல்லும்படி (2:7) அழைக்கும் தேவனின் சத்தத்தை எசேக்கியேல் கேட்டார்.

எசேக்கியேல், மற்ற பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளைப் போலவே தேவஜனங்களிடம் சத்தியத்தை பேசும் பணியை ஏற்றார். இன்று, தேவன் நம்மைச் சுற்றியுள்ளவர்களுடன் நம் வாழ்வில் தம்முடைய நற்செயல்களின் உண்மையைப் பகிர்ந்து கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கிறார் (1 பேதுரு 3:15). சிலசமயம் அந்த அழைப்பு நேரடியான கேள்விகளுக்கு பதிலளிக்கும் "தண்ணீர் இரைச்சலை" போலவிருக்கும். மற்றசமயம், ஓசையில்ல வார்த்தைப்போல மெல்லிய சத்தமாக இருக்கும். தேவனின் அன்பைப் பகிர்ந்துகொள்வதற்கான அழைப்பு ஒரு மில்லியன் பட்டாம்பூச்சிகளைப் போல சத்தமாக இருந்தாலும் அல்லது ஒரு பட்டாம்பூச்சிப் போல் அமைதியாக இருந்தாலும், எசேக்கியேலைப் போலவே நாம் கேட்க வேண்டும். தேவன்  சொல்ல விரும்புவதைக் கேட்பதற்கு செவி சாய்க்க வேண்டும்.

தாழ்மை தரும் உயா்வு

பல ஆசிரியர்களைப் போலவே கேரியும் தனது ஆசிரியர் பணிக்காக, விடைத்தாள்களைத்  தரவரிசைப்படுத்துவதில், மற்றும் மாலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் பேசுவதிலும் பல மணி நேரங்களை செலவழிக்கிறார். இந்த முயற்சியின் பலனைத் தக்கவைக்க, தன்னுடன் பணியாற்றும் பிற ஆசிரிய நண்பர்களின் தோழமை மற்றும் நடைமுறை உதவியைச் சார்ந்துகொள்கிறார். இந்த ஒத்துழைப்பினால் சவால் மிக்க அவருடைய பணி எளிதாக்கப்பட்டுள்ளது. கல்வியாளர்களின் சமீபத்திய ஆய்வில், நாம் தாழ்மையுடன் பணிபுரியும் போது ஒத்துழைப்பின் பலன் பெரிதாகிறது என்பதைக் கண்டறிந்துள்ளது. சக பணியாளர்கள் தங்கள் பலவீனங்களை ஒப்புக்கொள்ளத் தயாராக இருக்கும்போது, ​​மற்றவர்கள் தங்கள் அறிவைப் பகிர்ந்து கொள்வதில் பாதுகாப்பாக உணர்கிறார்கள், இது குழுவில் உள்ள அனைவருக்கும் திறம்பட உதவுகிறது.

வேதாகமம் குழுவாக ஒத்துழைத்து பணியாற்றுவதைவிட, தாழ்மையின் அவசியத்தை அதிகம்  போதிக்கிறது.  "கர்த்தருக்குப் பயப்படுதல்" அதாவது தேவனுடைய சௌந்தரியம், வல்லமை மற்றும் மாட்சிமையோடு நம்மை ஒப்பிட்டு, சரியான புரிதலை நாம் கொண்டிருக்கும்போது, அது நமக்கு "ஐசுவரியத்தையும் கனத்தையும் ஜீவனையும்" (நீதிமொழிகள் 22:4) தருகிறது. தாழ்மை, நம்மை உலகத்தின் பார்வையில் மட்டுமல்ல, தேவனின் பார்வையிலும் பயனுள்ளவர்களாய் சமூகத்தில் வாழ வழி நடத்துகிறது. ஏனென்றால் நாம் சகா மனிதர் அனைவருக்கும் பயனளிக்கும் வாழ்வை வாழ விரும்புகிறோம்..

 "ஐசுவரியத்தையும், கனத்தையும் ஜீவனையும்" நமக்கென்றே பெறுவதற்காக மட்டும் நாம் தேவனுக்குப் பயப்படுவதில்லை, அப்படியிருந்தால் அது உண்மையான தாழ்மையாக இருக்க முடியாது. மாறாக, "தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலான" (பிலிப்பியர் 2:7) இயேசுவைப் பின்பற்றுகிறோம். எனவே, அவருடைய பணியைச் செய்வதற்கும், அவருக்கு கனத்தைக் கொடுப்பதற்கும், நம்மைச் சுற்றியுள்ளோர்க்கு வாழ்வளிக்கும் நற்செய்தியை எடுத்துச் செல்வதற்கும், தாழ்மையுடன் ஒத்துழைக்கும் ஒரு சரீரத்தின் அவயமாக நாம் மாறலாம்..

சரியான நோக்கம்

“கா”வை நாங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக அறிவோம். நாங்கள் தேவனைப் பற்றி என்ன கற்றுக்கொண்டோம் என்பதைப் பற்றி விவாதிக்க வாரந்தோறும் கூடும் தேவாலயத்தில் இருந்து எங்கள் சிறிய ஜெபக்குழுவில் அவர் ஒரு பகுதியாக இருந்தார். ஒரு நாள் மாலை எங்கள் வழக்கமான சந்திப்பின் போது, அவர் ஒலிம்பிக்கில் பங்கேற்றதைக் குறித்து குறிப்பிட்டார். குறிப்பிடுவது மிகவும் சாதாரணமானது, அதை நான் கிட்டத்தட்ட மறந்தே போனேன். ஆனால் அவர் சொல்லும்போது, வெண்கலப் பதக்கப் போட்டியில் பங்கேற்ற ஒரு ஒலிம்பிக் வீரரை எனக்குத் தெரியும் என்று தெரிந்துகொண்டேன்! அவர் இதற்கு முன்பு அதை ஏன் குறிப்பிடவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் கா-வைப் பொறுத்தவரை, அவரது தடகள சாதனை அவரது கதையின் ஒரு சிறப்பு பகுதியாக இருந்தாலும், அவரது அடையாளத்திற்கு மிக முக்கியமான விஷயங்கள் மையமாக இருந்தன. அவைகள், அவரது குடும்பம், அவரது சமூகம் மற்றும் அவரது நம்பிக்கை.

லூக்கா 10:1-23ல் உள்ள கதை, நமது அடையாளத்திற்கு எது மையமாக இருக்க வேண்டும் என்பதை விவரிக்கிறது. தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்ல இயேசு அனுப்பிய எழுபத்திரண்டு பேர் தங்கள் பயணத்திலிருந்து திரும்பி வந்தபோது, “உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது” (வச. 17) என்றார்கள். அவர்களுக்கு மகத்தான சக்தியும் பாதுகாப்பையும் அளித்திருப்பதை இயேசு ஒப்புக்கொண்டாலும், அவர்கள் தவறான காரியத்தில் கவனம் செலுத்துவதாகக் கூறினார். இதைக் குறித்து சந்தோஷப்படவேண்டாம் என்றும் “உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்” (வச. 20) என்று இயேசு வலியுறுத்தினார். 

தேவன் நமக்கு அருளிய சாதனைகள் அல்லது திறன்கள் எதுவாக இருந்தாலும், நாம் நம்மை இயேசுவுக்கு அர்ப்பணித்ததினால் நம்முடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டுள்ள மேன்மையே நாம் மகிழ்ச்சியடைவதற்கான பெரிய காரணமாய் இருக்கமுடியும். அதினால் அவருடைய பிரசன்னத்தையும் நாம் அனுதினமும் அனுபவிக்கும் சிலாக்கியத்தைப் பெறுகிறோம். 

மற்றவர்களின் தேவையை சந்தித்தல்

பிலிப்பின் தந்தை கடுமையான மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் வாழ்ந்தார். சிண்டியும் அவளது இளம் மகன் பிலிப்பும் அவரை ஒரு நாள் முழுவதும் தேடினர். பிலிப் அவரது நலனில் அக்கறை கொண்டிருந்தான். அவன் தனது அம்மாவிடம், தனது தந்தையையும் சேர்த்து, வீதியில் வசிக்கும் மக்கள் உஷ்ணமாய் இருக்கிறார்களா என்று கேட்டான்.  அந்த கேள்விக்கு பதிலாக, அப்பகுதியில் உள்ள வீடற்ற மக்களுக்கு போர்வைகள் மற்றும் குளிர் காலநிலை உபகரணங்களை சேகரித்து விநியோகிக்கும் முயற்சியை அவர்கள் தொடங்கினர். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, சிண்டி அதை தனது வாழ்க்கையின் முக்கிய வேலையாகக் கருதினாள். உறங்குவதற்கு ஒரு சூடான இடம் இல்லாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய அவளை தூண்டியதற்காக தனது மகனுக்கும், தேவன் மீதான அவளுடைய ஆழ்ந்த நம்பிக்கைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மற்றவர்களின் தேவைகளை பூர்த்திசெய்ய வேதாகமம் நீண்ட காலமாக நமக்குக் கற்பித்துக்கொண்டிருக்கிறது. யாத்திராகமம் புத்தகத்தில், போதுமான பொருளாதாரம் இல்லாதவர்களுடன் நமது தொடர்புகளை வழிநடத்துவதற்கான கொள்கைகளின் தொகுப்பை மோசே பதிவு செய்கிறார். மற்றவரின் தேவைகளை சந்திப்பதற்கு நாம் தூண்டப்பட்டால், நாம் “அதை ஒரு வணிக ஒப்பந்தம் போல் கருதக்கூடாது.” மேலும் அதில் எந்த ஆதாயமும் லாபத்தையும் நாம் எதிர்நோக்கக்கூடாது (யாத்திராகமம் 22:25). ஒரு நபரின் வஸ்திரத்தை அடைமானமாய் எடுத்துக் கொண்டால், அது சூரிய அஸ்தமனத்திற்குள் திருப்பித் தரப்பட வேண்டும். ஏனெனில் அந்த ஆடை மட்டுமே அவர்களிடம் இருக்கக்கூடிய சொத்து. அது இல்லாமல் அவர்கள் எவ்வாறு தூங்குவார்கள்? (வச. 27).

துன்பப்படுபவர்களின் வலியை நாம் எவ்வாறு குறைக்கலாம் என்பதைப் பார்க்க நம் கண்களையும் இதயங்களையும் திறக்கும்படி தேவனிடம் கேட்போம். சிண்டி மற்றும் பிலிப் போன்று பலரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய விரும்பினாலும் அல்லது ஒரு தனி நபரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய விரும்பினாலும், அவர்களை கண்ணியத்துடனும் அக்கறையுடனும் நடத்துவதன் மூலம் நாம் அவரை கனப்படுத்துகிறோம்.

நான் யார்?

உள்ளுர் ஊழியத்திற்கான தலைமைக் குழுவின் உறுப்பினராக, குழு விவாதத் தலைவர்களாக எங்களுடன் சேர மற்றவர்களை அழைப்பது எனது வேலையின் ஒரு பகுதியாகும். என்னுடைய அழைப்பிதழ்கள், தேவைப்படும் நேர அவகாசத்தை விவரித்து கூட்டங்கள் மற்றும் வழக்கமான தொலைபேசி அழைப்புகளின் போது தலைவர்கள் தங்கள் சிறிய குழு பங்கேற்பாளர்களுடன் ஈடுபட வேண்டிய வழிகளை கோடிட்டுக் காட்டியது. ஒரு தலைவராக ஆவதற்கு அவர்கள் செய்யும் தியாகத்தை உணர்ந்து, அவர்களை அதிகமாய் தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. சில வேளைகளில், “இதை நான் கனமாக எண்ணுகிறேன்” என்னும் அவர்களுடைய பதில் என்னை ஆச்சரியப்படுத்தும். நிராகரிப்பதற்கான நியாயமான காரணங்களை மேற்கோள் காட்டுவதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் தேவன் செய்த அனைத்திற்கும் நன்றி செலுத்துவதைத் திருப்பிக் கொடுக்க ஆர்வமாக இருப்பதாக விவரித்தனர்.

கர்த்தருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு தேவையான உபகரணங்களைக் கொடுக்க வேண்டிய நேரம் வந்தபோது, தாவீது இதேபோன்ற பிரதிபலிப்பைக் கொண்டிருந்தார்: “இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்?” (1 நாளாகமம் 29:14). தாவீதின் இந்த தயாள குணம், தன்னுடைய வாழ்க்கையிலும் இஸ்ரவேல் ஜனங்களின் வாழ்க்கையிலும் தேவனுடைய கிரியைகளின் அடிப்படையில் உந்தப்பட்டது. அவருடைய பணிவினிமித்தம், நாங்கள் “அரதேசிகளும் பரதேசிகளுமாயிருக்கிறோம்” (வச. 15) என்று அவர் தன்னை தாழ்த்துகிறார். 

நாம் நம்முடைய நேரம், திறமை அல்லது பொருளாதாரம் என்று எதை ஆண்டவருக்காய் கொடுத்தாலும், அதை நம்முடைய வாழ்க்கையில் கொடுத்த தேவனுக்கு நாம் நம்முடைய நன்றியுணர்வை வெளிப்படுத்துவதைக் குறிக்கிறது. நம்மிடம் உள்ள அனைத்தும் அவருடைய கையிலிருந்து வருகிறது (வச. 14). பதிலுக்கு, நாம் அவருக்கு நன்றியுடன் கொடுக்க முடியும்.

சாத்தியமில்லாத பரிசு

என் மாமியாரின் பிறந்தநாளுக்கு சரியான பரிசைக் கண்டுபிடித்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன்: கை வளையலில் அவளுக்கு பிடித்தமான கல் பதிக்கப்பட்டிருந்தது! ஒருவருக்கு சரியான பரிசைக் கண்டுபிடிப்பது எப்போதுமே ஒரு முழுமையான மகிழ்ச்சி. ஆனால் ஒரு மனிதனுக்குத் தேவையான பரிசு நம் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்தால் என்ன செய்வது? நம்மில் பலர் ஒருவருக்கு மன அமைதி, ஓய்வு அல்லது பொறுமையைக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அவற்றை விலை கொடுத்து வாங்கி பரிசுக்காகிதத்தில் சுற்றிக்கொடுப்பது சாத்தியமா?

இதுபோன்ற பரிசுகளை ஒருவர் மற்றவருக்கு வாங்கிக்கொடுப்பது சாத்தியமில்லை. ஆனால் மாம்ச ரூபத்தில் வந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அப்படிப்பட்ட சாத்தியமில்லாத ஒரு பரிசைக் கொடுப்பதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். அதுவே சமாதானம் என்னும் பரிசாகும். இயேசு பரமேறி செல்லுவதற்கு முன்பு, பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை வாக்குப்பண்ணுகிறார்: இவர் “உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” (யோவான் 14:26) என்றும் சொல்லுகிறார். அவர்களுடைய இருதயம் பயப்படாமலும் கலங்காமலும் இருப்பதற்காக, இயேசு அவர்களுக்கு தன்னுடைய சமாதானத்தை விட்டுச் சென்றார். அவரே தேவனோடும், மற்றவர்களோடும், நமக்குள்ளும் கிரியை செய்யும் சமாதானம். 

நாம் விரும்புகிறவர்களுக்கு பொறுமையையோ அல்லது சரீர ஆரோக்கியத்தையோ நாம் பரிசாகக் கொடுக்க முடியாது. வாழ்க்கையின் போராட்டங்களை மேற்கொள்ளும்போது அவர்களுக்கு அவசியப்படும் சமாதானத்தையும் அவர்களுக்கு கொடுக்கும் அதிகாரம் நம்மிடத்தில் இல்லை. ஆனால் நிலையான சமாதானத்தை அருளும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைக் குறித்து அவர்களிடத்தில் நாம் பகிர்ந்துகொள்ள முடியும். 

சிவப்பு ஆடை திட்டம்

சிவப்பு ஆடைத்திட்டம் பிரிட்டிஷ் கலைஞரான கிர்ஸ்டி மேக்லியோட் என்பவரால் உருவாக்கப்பட்டு, உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் கண்காட்சியகங்களில் ஒரு முக்கிய அங்கமாய் மாறியுள்ளது. பதின்மூன்று ஆண்டுகளாக, எண்பத்து நான்கு பர்கண்டி பட்டுத் துண்டுகள் உலகம் முழுவதும் பயணம் செய்து முந்நூறுக்கும் மேற்பட்ட பெண்களால் (மற்றும் ஒரு சில ஆண்களால்) எம்ப்ராய்டரி செய்யப்பட்டன. அந்த துண்டுகள், அந்த திட்டத்தில் பங்கேற்ற, அடையாளம் தெரியாமல் ஒதுக்கப்பட்டிருந்த பல கலைஞர்களின் கதைகளைச் சொல்லும்வண்ணம் ஒன்றாகக் கோர்க்கப்பட்டது. 

இந்த சிவப்பு ஆடையைப் போலவே ஆரோனுக்கும் அவனுடைய சந்ததிக்கும் கொடுக்கப்பட்ட வஸ்திரம் “விவேகமான இருதயமுள்ள” (யாத்திராகமம் 28:3) பலரால் வடிவமைக்கப்பட்டது. ஆசாரியர்களின் அந்த பிரத்யேகமான வஸ்திரத்தில், இஸ்ரவேலின் வாழ்க்கை சரிதைகள், அதிலுள்ள கற்களில் கோத்திரங்களின் பெயர்கள் ஆகியவைகள் இடம்பெற்றிருக்கவேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார். அதை ஆரோன் “கர்த்தருக்கு முன்பாக… ஞாபகக்குறியாகச் சுமந்துவர” (வச. 12) அறிவுறுத்தப்படுகிறார். அங்கிகள், இடைக்கச்சைகள் மற்றும் குல்லாக்கள் ஆகியவைகள் தேவனை சேவித்து மக்களை ஆராதிக்க தகுதிப்படுத்திய ஆசாரியர்களுக்கு மகிமையும் அலங்காரமுமாயிருக்கும்பொருட்டு கொடுக்கப்படுகிறது (வச. 40). 

கிறிஸ்துவின் மூலம் உடன்படிக்கை உறவில் அங்கத்தினராய் சேர்க்கப்பட்ட நாம், ஆசாரியக்கூட்டமாய் அழைப்பைப் பெற்று, ஒருவரையொருவர் தேவனை ஆராதிக்க ஊக்கப்படுத்துவோம் (1 பேதுரு 2:4-5,9). இயேசுவே நமது பிரதான ஆசாரியர் (எபிரெயர் 4:14). ஆசாரியர்களாக நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள எந்த ஒரு பிரத்யேகமான ஆடையையும் நாம் அணியாவிட்டாலும், அவருடைய கிருபையால், “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு” வாழ்கிறோம் (கொலோசெயர் 3:12). 

ஆராதனை பண்டிகை

பெரிய கூட்டங்களில் பங்கேற்பது என்பது உங்களை ஆச்சரியமான விதங்களில் மாற்றமடையச் செய்யும். அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற தேசங்களில் பல நாள் கூட்டங்களில் 1,200க்கும் மேற்பட்டவர்களுடன் உரையாடிய பிறகு, ஆராய்ச்சியாளர் டேனியல் யூட்கினும் அவரது சகாக்களும், இதுபோன்ற பெரிய கூட்டங்கள் நம்முடைய ஒழுக்கரீதியான வாழ்க்கையையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வாழ்க்கைமுறையையும் பாதிக்கும் என்பதைக் கற்றுக்கொண்டனர். திருவிழாவில் பங்கேற்பவர்களில் 63 சதவீதம் பேர் மறுரூபமாக்கபட்ட அனுவத்தை பெற்றதாக அவர்களின் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

ஆயினும் தேவனை ஆராதிக்க மற்றவர்களுடன் நாம் ஒன்றுகூடும்போது, ஒரு மதச்சார்பற்ற பண்டிகையின் சமூக மாற்றத்தை விட அதிகமாக நாம் அனுபவிக்க முடியும்;. நாம் தேவனோடு தொடர்புகொள்கிறோம். பண்டைய நாட்களில் ஆண்டு முழுவதும் பண்டிகைகளுக்காக எருசலேமில் மக்கள் கூடிவந்தபோது, தேவனுடைய பிள்ளைகள் தேவனுடனான தொடர்பை முழுமையாய் அனுபவித்தனர்;. “புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகை” (உபாகமம் 16:16) ஆகிய நாட்களில் ஆலயத்தில் தங்கும் நவீன வசதிகள் இல்லாதபோதிலும், வருடத்திற்கு மூன்றுதரம் கூடிவந்தார்கள். இந்த கூடுகைகள், நினைவுகூருதல், ஆராதனை, குடும்பம், வேலைக்காரர்கள், அயல்நாட்டவர் மற்றும் பலருடன் தேவனுடைய சமூகத்தில் மகிழ்ச்சியடைவது போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தது (வச. 11).

அவரைத் தொடர்ந்து ஆராதிக்கவும், அவருடைய உண்மைத்தன்மையில் நம்பிக்கை வைக்கவும் ஒருவருக்கொருவர் உதவிசெய்ய மற்றவர்களுடன் நாமும் ஒன்றாகக் கூடுவோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனே என் துணையாளர்

என் நண்பர் ராலே தனது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை நோக்கி விரைகிறார்! அவரை நான் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எனக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஆதாராமாக அவர் இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஓர் புத்தகம் எழுதும் பணியை நிறைவுசெய்துவிட்டு, வேறொரு வேலையை செய்வதாக என்னிடம் கூறினார். அவற்றைக் கேட்க எனக்கு ஆர்வமாயிருந்தது ஆனால் ஆச்சரியப்படவில்லை. 

தனது எண்பத்தைந்து வயதில், வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள காலேப் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை. தேவன் இஸ்ரவேலுக்கு வாக்களித்த கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்காக பல சகாப்தங்களாக வனாந்தர வாழ்க்கை மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், தேவபக்தியும் விசுவாசமும் அவரை தாங்கியது. அவர், “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:11) என்று உரைக்கிறார். அவர் எந்த வழிகளில் ஜெயங்கொள்வார்? “கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன்” (வச. 12) என்று காலேப் பதிலளிக்கிறார். 

வயது, வாழ்க்கையின் நிலை அல்லது சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனை முழுமனதோடு பற்றிகொள்ளும் யாவருக்கும் தேவன் உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். நமக்கு உதவும் நம் இரட்சகராகிய இயேசுவில், தேவன் வெளிப்பட்டார். சுவிசேஷங்கள், கிறிஸ்துவிடத்திலிருந்து தேவன்மீது விசுவாசம் வைப்பதை நமக்கு போதிக்கிறது. உதவிக்காக தேவனை அண்டிய யாவருக்கும் தேவன் தன் அக்கறையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எபிரெய நிருப ஆசிரியர் “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபிரெயர் 13:6) என்று அறிக்கையிடுகிறார். இளைஞரோ அல்லது வயதானவரோ, பலவீனமானவரோ அல்லது பலவானோ, கட்டுண்டவரோ அல்லது சுதந்திரவாளியோ, வேகமாக ஓடுகிறவரோ அல்லது முடவனோ, யாராக இருந்தாலும் இன்று அவருடைய உதவியைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுப்பது எது?

 

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார். 

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம். 

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26).

 

இயேசு – மெய்யான சமாதானக் காரணர்

1862, டிசம்பர் 30ஆம் தேதி, அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் மூண்டது. எதிர் துருப்புக்கள் ஓர் ஆற்றின் எதிர்பக்கங்களில் எழுநூறு மீட்டர் இடைவெளியில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் தீ மூட்டி குளிர்காய்ந்துகொண்டிருந்தபோது, மற்றொரு பகுதியில் சிப்பாய்கள் தங்கள் வயலின்களையும் ஹார்மோனியங்களையும் எடுத்துக்கொண்டு “யாங்கி டூடுல்” என்ற இசையை வாசிக்கத் துவங்கினர். பதிலுக்கு, மறுபக்கத்தில் இருந்த வீரர்கள் “டிக்ஸி” என்று ஓர் பாடல் இசையை  வாசித்தனர். அப்படி மாறி மாறி வாசிக்கையில், இறுதியில் இருதரப்பினரும் இணைந்து “ஹோம், ஸ்வீட் ஹோம்” என்ற இசையை வாசித்தனர். ஒன்றுக்கொன்று எதிரிகளாய் இருந்த இரண்டு தேசத்து இராணுவ வீரர்களும் இரவில் இசையைப் பகிர்ந்து, கற்பனைசெய்ய முடியாத அளவு சமாதானத்தை பிரதிபலித்தனர். இருப்பினும் அந்த மெல்லிசைப் போர்நிறுத்தம் குறுகிய காலமே நீடித்தது. மறுநாள் காலை, அவர்கள் தங்கள் இசைக்கருவிகளை கீழே வைத்துவிட்டு, தங்கள் துப்பாக்கிகளை கையில் எடுத்தனர். அந்த போரில் 24,645 வீரர்கள் உயிரிழந்தனர்.

அமைதியை உருவாக்குவதற்கான நமது மனித முயற்சிகள் தவிர்க்க முடியாமல் பெலனற்றுபோகிறது. பகைமைகள் ஓர் இடத்தில் அணைந்து, வேறொரு இடத்தில் நெருப்பை பற்றவைக்கிறது. ஓர் குடும்பப் பிரச்சனை திடீரென்று முடிவுக்கு வரும், சிறிது நாட்கள் கழித்து மறுபடியும் சூடுபிடிக்கும். நமக்கு நம்பிக்கையான சமாதானக் காரணர் தேவன் மட்டுமே என்று வேதம் சொல்லுகிறது. “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டு” (16:33) என்று இயேசு தெளிவுபடுத்துகிறார். இயேசுவில் நாம் இளைப்பாறக்கூடும். அவருடைய சமாதானப் பணியில் நாமும் இணைந்துகொள்ளும்போது, மெய்யான சமாதானத்தை அவர் நமக்கு அருளுவார். 

இவ்வுலகத்தின் உபத்திரவ பாதையிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியாது என்று இயேசு கூறுகிறார். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (வச. 33) என்று இயேசு சொல்லுகிறார். நம்முடைய முயற்சிகள் பல சமயங்களில் பயனற்றவையாக இருந்தாலும், நம் அன்பான தேவன் (வச. 27) இந்த உடைந்த உலகில் நமக்கு சமாதானத்தை அருளுகிறார்.