எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆனி சிட்டாஸ்கட்டுரைகள்

கிறிஸ்துவின் சமூகமாய்

பஹாமாஸின் தெற்கில் ராக்ட் தீவு என்று அழைக்கப்படும் ஒரு சிறிய நிலப்பகுதி உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இது ஒரு செயலில் உப்புத் தொழிலைக் கொண்டிருந்தது, ஆனால் அந்தத் தொழிலில் ஏற்பட்ட சரிவின் காரணமாக, பலர் அருகிலுள்ள தீவுகளுக்கு குடிபெயர்ந்தனர். 2016 ஆம் ஆண்டில், எண்பதுக்கும் குறைவான மக்கள் அங்கு வாழ்ந்தபோது, தீவில் மூன்று மதப் பிரிவுகள் இருந்தன. ஆனால் மக்கள் அனைவரும் ஒவ்வொரு வாரமும் கடவுளை வழிபடுவதற்கும் ஐக்கியங்கொள்ளுவதற்காகவும் ஒரே இடத்தில் கூடினர். மிகக் குறைவான குடியிருப்பாளர்கள் இருந்ததால், சமூக ஐக்கியம் அவர்களுக்கு முக்கியமாக தெரிந்தது.

ஆதித்திருச்சபையின் விசுவாசிகள் ஐக்கியத்தில் பலப்படுவதின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தனர். இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலால் சாத்தியமாக்கப்பட்ட புதிய விசுவாசத்தைப் பற்றி அவர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால் அவர் சரீரப்பிரகாரமாக அவர்களுடன் இல்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் மற்றவர்களின் தேவையையும் முக்கியத்துவத்தையும் அறிந்திருந்தனர். அவர்கள் அப்போஸ்தலர்களின் போதனைகளுக்கும், ஐக்கியத்திற்கும், ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்வதற்கும் தங்களை அர்ப்பணித்தார்கள் (அப்போஸ்தலர் 2:42). அவர்கள் வழிபாடு மற்றும் உணவுக்காக வீடுகளில் கூடி, மற்றவர்களின் தேவைகளை கவனித்துக்கொண்டனர். அப்போஸ்தலர் பவுல் திருச்சபையை, “விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள்” (4:32) என்று விவரிக்கிறார். பரிசுத்த ஆவியில் நிரம்பியவர்களாய் தேவனைத் துதித்து, திருச்சபையின் விண்ணப்பங்களை ஜெபத்தில் தேவனுக்குத் தெரியப்படுத்தினர்.

நமது வளர்ச்சிக்கும் ஆதரவுக்கும் சமூக ஐக்கியம் அவசியம். தனியாக செல்ல முயற்சிக்காதீர்கள். உங்கள் போராட்டங்களையும் சந்தோஷங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போதும், ஒன்றாக அவரை நெருங்கும்போதும் தேவன் அந்த சமூக உணர்வை வளர்க்க உதவுவார்.

சாகசம்

“கிறிஸ்தவம் எனக்கானது அல்ல. அது சலிப்பு தட்டுகிறது. நான் சாகசம் செய்ய விரும்புகிறேன். அதுதான் எனக்கு வாழ்க்கை” என்று ஒரு இளம் பெண் என்னிடம் கூறினார். இயேசுவைப் பின்தொடர்வதன் மூலம் வரும் நம்பமுடியாத மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அவள் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருந்தது. இந்த ஆச்சரியமான சாகசம் வேறு எதனுடனும் ஒப்பிடமுடியாது. இயேசுவைப் பற்றியும் அவரில் உண்மையான வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியும் அவளிடம் உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டேன்.

தேவகுமாரனாகிய இயேசுவை அறிந்து, அவருடன் நடந்த ஆச்சரியமான சாகசத்தை விவரிக்க வெறும் வார்த்தைகள் போதாது. ஆனால் எபேசியர் 1ல், அப்போஸ்தலனாகிய பவுல், அவருடனான வாழ்க்கையைப் பற்றிய ஒரு சிறிய ஆனால் சக்திவாய்ந்த காட்சியை நமக்குத் தருகிறார். தேவன் நமக்கு நேரடியாக பரலோகத்திலிருந்து ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைத் தருகிறார் (வச. 3), தேவனுடைய பார்வையில் பரிசுத்தம் மற்றும் குற்றமற்ற தன்மை (வச. 4), மற்றும் அவருடைய சொந்த குடும்பத்தின் அங்கத்தினராய் நம்மை தெரிந்துகொள்ளுதல் (வச. 5). அவருடைய மன்னிப்பு மற்றும் கிருபை (வச. 7-8), அவருடைய சித்தத்தின் மர்மத்தைப் புரிந்துகொள்வது (வச. 9) மற்றும் “அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு” (வச. 12) ஒரு புதிய நோக்கத்துடன் அவர் நம்மை ஆசீர்வதிக்கிறார். பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பலப்படுத்தவும் வழிநடத்தவும் நமக்குள் கிரியை நடப்பிக்கிறார் (வச. 13). மேலும் அவர் தேவனுடைய பிரசன்னத்தில் நித்தியவாழ்விற்கு நமக்கு உத்தரவாதம் அளிக்கிறார் (வச. 14).

இயேசு கிறிஸ்து நம் வாழ்வில் பிரவேசிக்கும்போது, அவரைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதும், அவரைப் பின்தொடர்வதும் மிகப்பெரிய சாகசமாகும். மெய்யான வாழ்க்கை வாழுவதற்கு நாம் ஒவ்வொருநாளும் அவரை தேடுவோம்.

எது சிறப்பாக இருக்கும்?

எரிக் தனது இருபதுகளின் ஆரம்பத்தில் இயேசுவின் அன்பைப் பற்றி கேள்விப்பட்டார். அவர் தேவாலயத்திற்குச் செல்லத் தொடங்கினார், அங்கு அவர் கிறிஸ்துவை நன்கு அறிந்துகொள்ள உதவிய ஒருவரைச் சந்தித்தார். எரிக்கின் வழிகாட்டி அவரை தேவாலயத்தில் ஒரு சிறுவர் குழுவிற்கு போதிக்கும்படி கேட்டுக்கொண்டார். பல ஆண்டுகளாக, தனது நகரத்தில் ஆபத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு உதவவும், முதியவர்களைச் சந்திக்கவும், அண்டை வீட்டாருக்கு விருந்தோம்பல் காட்டவும் தேவன் எரிக்கை ஏவினார். இப்போது ஐம்பதுகளின் பிற்பகுதியில் இருக்கும் எரிக் தனக்கு சேவை செய்ய ஆரம்பத்திலேயே கற்றுக் கொடுத்ததற்கு எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை விளக்குகிறார்: “இயேசுவிடம் நான் கண்ட நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ள என் இதயம் நிரம்பி வழிகிறது. அவருக்குச் சேவை செய்வதைவிடச் சிறந்தது எது?” என்று சொல்லுகிறார். 

தீமோத்தேயுவின் தாயும் அவனுடைய பாட்டியும் அவன் குழந்தையாயிருந்தபோதிலிருந்து அவனை விசுவாசத்தில் வளர்த்தார்கள் ( 2 தீமோத்தேயு 1:5). மேலும் அவன் அப்போஸ்தலனாகிய பவுலைச் சந்தித்தபோது இளைஞனாக இருந்திருக்கலாம். தீமோத்தேயு தேவனுக்கு ஊழியம் செய்யும் அவனுடைய பாரத்தை பவுல் கண்டு, அவருடைய ஊழிய பயணத்தில் அவனையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டார் (அப்போஸ்தலர் 16:1-3). பவல் தீமோத்தேயுவுக்கு ஊழியத்திலும் வாழ்க்கையிலும் வழிகாட்டியாக ஆனார். அவனைப் படிக்கவும், தவறான போதனைகளை எதிர்கொண்டபோது தைரியமாக இருக்கவும், தேவனுக்கு ஊழியம் செய்வதில் தனது திறமைகளைப் பயன்படுத்தவும் பவுல் தீமோத்தேயுவை ஊக்கப்படுத்துகிறார் (1 தீமோத்தேயு 4:6-16).

தீமோத்தேயு தேவனுக்கு உண்மையாய் ஊழியம் செய்யவேண்டும் என்று பவுல் ஏன் விரும்பினார்? அவர் “ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்” (வச. 10) என்று எழுதுகிறார். இயேசுவே நம்முடைய நம்பிக்கையும் உலகத்தின் இரட்சகராகவும் திகழ்கிறார். அவருக்கு ஊழியம் செய்ய அதைக்காட்டிலும் வேறென்ன காரணம் தேவை?

பாதையில் சுதந்திரம்

பார்வையற்ற விளையாட்டு வீரர்கள் விளையாடும் “பீப்” ஓசையிடும் பேஸ்பாலில், அதின் சத்தத்தைக் கேட்டு என்ன செய்யவேண்டும் என்பதையும் எங்கு செல்லவேண்டும் என்பதையும் தீர்மானிக்கின்றனர். கண்கள் மூடப்பட்ட பந்தை அடிக்கும் நபரும், அதைத் தடுக்கும் பார்வையுள்ள நபரும் ஒரே அணியில் இடம்பெற்றிருப்பர். ஒரு நபர் மட்டையை சுழற்றி, பீப் பந்தை அடிக்கும்போது, அவர்கள் சலசலக்கும் தளத்தை நோக்கி ஓடுவார்கள். அவர் ஓடிவருவதற்கும் அந்த பந்தை யாரேனும் பிடித்துவிட்டால், பந்தை அடித்தவர் தோற்றுவிடுவார். இல்லையெனில், அவருக்கு ரன் கொடுக்கப்படும். “தெளிவான ஓடுபாதையும் திசையும் இருக்கிறது என்பதை அறிந்திருப்பதால், “ஓடுவதில் ஒரு பெரிய சுதந்திரம்” அவர்களுக்கு இருக்கிறது என்று ஒரு விளையாட்டு வீரர் குறிப்பிடுகிறார்.

ஏசாயா தீர்க்கதரிசன புத்தகம், “மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர்” (26:7) என்று தேவனைக் குறித்து அறிவிக்கிறது. இந்த வாக்கியம் உரைக்கப்பட்டபோது, இஸ்ரவேலர்களின் பாதை செம்மையாயிருந்தது. ஆனால் அவர்களின் கீழ்ப்படியாமையினிமித்தம் அவர்கள் தெய்வீக நியாயத்தீர்ப்பை அனுபவிக்க நேரிட்டது. “உமது நாமமும், உம்மை நினைக்கும் நினைவும்” (வச. 8) அவர்களின் இருதயத்தின் நோக்கங்களாய் இருந்துள்ளது என்று சொல்லுகிறார்.

கிறிஸ்தவர்களாகிய நாம் அவருக்கு கீழ்ப்படிந்து அவருடைய வழிகளில் நடக்கும்போது, தேவனைக் குறித்து அறிகிற அறிவில் தேறவும் அவருடைய சுபாவங்களின் மீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் செய்கிறோம். நம்முடைய வாழ்க்கைப் பாதையின் வழிகள் எப்போதும் செம்மையானதாய் தெரியாது. ஆனால் நாம் தேவனை நம்பும்போது, தேவன் நம்மோடு நடந்துவந்து நமக்கு வழியை உண்டுபண்ணுவார். நாமும் தேவனுக்கு கீழ்ப்படிந்து, சுதந்திரமாய் அவருடைய சிறந்த பாதையில் நடப்போம்.

புகழுக்கு உரியவர் யார்?

வீட்டு முகவர் ஒருவர், சுழல் படிக்கட்டு முதல் விரிந்த படுக்கையறை வரை, பளிங்கு தரையிலிருந்து பட்டு விரிப்பு வரை, பிரமாண்டமான சலவை அறை முதல் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட அலுவலகம் வரை இளம் தம்பதியினருக்கு ஏற்ற ஒரு வீட்டைக் காட்டினார். அவர்கள் திரும்பிய ஒவ்வொரு மூலையிலும் அவ்வீட்டின் அழகைக் கண்டு ஆச்சரியப்பட்டு, “எங்களுக்கு சிறந்த இடத்தை நீங்கள் தேர்ந்தெடுத்து கொடுத்தீர்கள். இந்த வீடு மிகவும் நன்றாக இருக்கிறது!” என்றனர். அதற்கு வீட்டு முகவர், “உங்கள் பாராட்டுக்களை நான் இதை கட்டினவருக்கு தெரிவிக்கிறேன். வீட்டைக் கட்டியவராகிய அவர்தான் பாராட்டுக்குரியவர், வீடோ அதைக் காட்டின நானோ அல்ல” என பதிலளித்தார். இது சற்று விசித்திரமாக இருந்தாலும், அது தான் உண்மை

 

வீட்டு முகவரின் இந்த வார்த்தைகள் எபிரெய எழுத்தாளரை எதிரொலித்தது. “வீட்டை உண்டுபண்ணினவன் வீட்டைப்பார்க்கிலும் அதிக கனத்திற்குரியவனாயிருக்கிறான்”. (வ.3.3). எபிரெய நிருபத்தின் எழுத்தாளர் தேவ குமாரனாகிய இயேசுவின் உண்மைத்தன்மையை, தீர்க்கதரிசியாகிய மோசேயுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார் (வவ. 1-6). மோசே தேவனிடம் நேருக்கு நேர் பேசுவதற்கும், அவருடைய உருவத்தைக் காண்பதற்கும் பாக்கியம் பெற்றிருந்தாலும் (எண்ணாகமம்12:8), அவர் தேவனுடைய வீட்டில் “ஒரு பணிவிடைக்காரனாய்" மட்டுமே இருந்தார் (எபிரெயர் 3:5). கிறிஸ்துவே படைப்பாளர் (1:2, 10). ஆவிக்குரிய "எல்லாவற்றையும் கட்டுபவர்" மற்றும் "தேவனின் வீட்டில்" குமாரன் (3:4, 6) என்ற மரியாதைக்குத் தகுதியானவர். தேவமக்களாகிய நாம்தான் அவருடைய வீடு.

 

நாம் தேவனை உண்மையாகச் சேவிக்கும் போது, நமது ஆவிக்குரிய ஜீவியத்தைக் கட்டி எழுப்பிகிறவராகிய இயேசுவே அந்த கனத்திற்குத் தகுதியானவர். தேவனின் வீடாகிய நாம் பெறும் எந்தப் புகழும் அவருக்கே உரியதாகும். 

உள்ளான சுகத்திற்கான வேட்டை

அமெரிக்க மாநிலமான மிச்சிகனில் வசிக்கும் கார்சன், வேட்டையாடுவது, மீன்பிடிப்பது, பைக்குகள் ஓட்டுவது மற்றும் ஸ்கேட்போர்டில் செல்வது என்று எப்போதும் மும்முரமாகவே செயல்படுவார். அவர் வெளியே பொழுதைக் கழிப்பதில் அதிக பிரியப்பட்டார். ஆனால் அவர் திடீரென்று ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி விபத்திற்குள்ளானதால், அவருடைய மார்புக்கு கீழ் அனைத்தும் செயலிழந்துபோனது. விரைவில் மனச்சோர்வுக்குள் மூழ்கினார். அவருடைய எதிர்காலம் இருண்டுபோனது. அவனுடைய சிநேகிதர்களில் சிலர் அவனை மீண்டும் வேட்டைக்கு கூட்டிச்சென்றனர். அந்த தருணத்தில் தன்னுடைய துயரங்கள் அனைத்தையும் மறந்து சுற்றியிருக்கும் அனைத்து அழகையும் ரசித்தான். இந்த அனுபவம் அவனுக்கு உள்ளான இருதய சுகத்தை ஏற்படுத்தி, அவனுடைய வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தைக் கொடுத்தது. அவனைப் போல் இருப்பவர்களும் அந்த அனுபவத்தை பெறும் நோக்கத்தோடு, “வேட்டையிலிருந்து சுகத்துக்கு” (ர்ரவெ 2 ர்நயட) என்ற பெயரில் ஓர் இயக்கத்தை ஆரம்பித்தான். அவன், “என்னுடைய விபத்தானது எனக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவந்தது... நான் எப்போதும் செய்ய விரும்பியதை இப்போது மற்றவர்களுக்கு செய்வதின் மூலம் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று சொல்லுகிறான். மிகவும் கடுமையான சரீர குறைபாடுகள் உள்ளவர்களுக்கு தேவையான இடவசதியை ஒழுங்குசெய்து அவர்களுக்கு உள்ளான சுகத்தை கொடுப்பதில் இப்போது அவர் மும்முரமாய் செயல்பட்டு வருகிறான். 

நொருங்குண்ட இருதயங்களை காயங்கட்டும் ஒருவரின் வருகையைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்துள்ளார் (ஏசாயா 61). அவர் “இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும்... துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும்” கிரியை செய்வார் (வச. 1-2). இயேசு இந்த வேத வாக்கியங்களை தேவாலயத்தில் வாசித்த பின்பு, “உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று” (லூக்கா 4:21) என்றார். இயேசு நம்மை இரட்சிக்கவும் பூரணப்படுத்தவும் வந்தார். 

உங்களுக்கு உள்ளான சுகம் அவசியப்படுகிறதா? இயேசுவிடம் வாருங்கள், அவர் “ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையை” (ஏசாயா 61:3) உங்களுக்குக் கொடுப்பார்.

சேவை செய்யும் சவால்

பதிமூன்றே வயது நிரம்பிய டேஏவியன் மற்றவர்களுக்கு சேவை செய்யும் சவாலை மேற்கொண்டான். கோடை விடுமுறையின் போது, தன்னுடைய ஐம்பது புல்வெளிகளை இலவசமாக வெட்டும்படி குழந்தைகளுக்கு அழைப்புக் கொடுத்த ஒரு மனிதனைப் பற்றிய கதையை அவனும் அவனது அம்மாவும் கேட்டிருக்கிறார்கள். இராணுவ வீரர்கள், ஒற்றை அம்மாக்கள், ஊனமுற்றவர்கள், அல்லது உதவி தேவைப்படும் எவருக்கும் உதவுவதே அவர்களின் நோக்கம். அந்த புல்வெளிகளின் சொந்தக்காரர், வேலையின் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு நன்மை செய்வதின் அவசியத்தையும் அவர்களுக்கு விளங்கச்செய்தார். கோடையின் வெயில் சுட்டெரிக்கும் போதும், மற்றவர்களுக்கு சேவை செய்வதை விரும்பிய டீவியோன் அந்த சவாலை நேர்த்தியாய் செய்து முடித்தார். 

மற்றவர்களுக்கு சேவை செய்யும் சவால் கிறிஸ்தவர்களுக்கும் உண்டு. இயேசு மரிப்பதற்கு முந்தின நாள் இரவில், அவர் சீஷர்களோடு பந்தியிருந்தார் (யோவான் 13:1-2). அவர் கடந்துபோகப்போகிற உபத்திரம் மற்றும் மரணம் என்னும் பாதையைக் குறித்து அவர் நன்கு அறிந்திருந்த போதிலும், அவர் ஒரு துண்டை எடுத்து தன்னுடைய இடுப்பில் கட்டிக்கொண்டு சீஷர்களின் பாதங்களை கழுவினார் (வச. 3-5). மேலும் “ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்” என்று அவர்களிடம் வலியுறுத்தினார் (வச. 14). 

நம்முடைய தாழ்மையான மாதிரியாகிய இயேசு மக்களிடம் கரிசனை காண்பித்தார். அவர் குருடருக்கு பார்வையும், வியாதியஸ்தருக்கு சுகமும் கொடுத்து இராஜ்யத்தின் நற்செய்தியை போதித்து, தன் சிநேகிதருக்காக தன்னுடைய ஜீவனையும் கொடுத்தார். கிறிஸ்து உங்களை நேசிப்பதால், இந்த வாரத்தில் யாருக்கு சேவை செய்யவேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்று அவரிடத்தில் கேளுங்கள். 

முற்றிலும் தனிமையா?

சமீபத்தில் மைக்கெல் ஏஞ்சலோவின் சிற்பகலைப் புகைப்படத்தை நோக்கிய போது,அதிலுள்ள மோசேயின் வலது கையில் தசைகள் வீங்கி இருப்பதைக் கண்டேன். அந்தத் தசை முன்னங்கையில் உள்ள ஒரு மெல்லிய தசையாகையால் அதை ஒருவர் உற்று நோக்கினால் இன்றி அதை கண்டறிய முடியாது. புரிந்துகொள்ளக் கடினமான குணாதிசயங்களைப் புரிந்து கொள்ளும் கலைஞராகிய மைக்கேல் ஏஞ்சலோ, மனிதர்களை உற்று நோக்கித் தனது சிற்பக் கலைகளைச் செதுக்குவார். அக்கலையுணர்வு அவருக்கே உரியதாகும். மைக்கேல் ஏஞ்சலோ கிரானைட்டுகளில் மனிதனின் உள்ளான ஆத்துமாவை வெளிப்படுத்துவதற்கு எடுத்த முயற்சி, முழுமையாக வெற்றி பெறவில்லை.                                    

தேவன் ஒருவராலேயே மனிதனின் ஆழ்ந்த மனதின் உண்மைத்தன்மையை அறிய முடியும். எவ்வளவுதான் நாம் மனிதர்களை உற்று நோக்கினாலும், கவனித்தாலும், அவையெல்லாம் நிழலேயாகும். ஆனால் தேவன் நிழலுக்கு அப்பாற்பட்டதைப் பார்க்கிறார். அதைத்தான் தீர்க்கதரிசியாகிய எரேமியா "நீர் என்னை அறிந்திருக்கிறீர்", "என்னைக் காண்கிறீர்" எனக் குறிப்பிடுகிறார் (வ.12: 3). தேவனுடைய ஞானம் என்பது தத்துவம் சார்ந்தது அல்லது அறிவு சார்ந்ததோ அல்ல.‌ அவர் நம்மை தூரத்தில் இருந்து கவனிப்பவர் அல்ல, அவர் நமது மனதின் உண்மையான நிலையைக் காண்கிறவராய் இருக்கிறார். நம்மாலேயே புரிந்து கொள்ளமுடியாத ஆழங்களையும் தேவன் அறிகிறவராயிருக்கிறார்.   

நம்முடைய போராட்டங்கள் எதுவாயிருந்தாலும், நம்முடைய இதயங்களில் என்ன நடந்தாலும், தேவன் அதைக் காண்கிறார், அதை உண்மையிலேயே அறிந்திருக்கிறார். 

நாம் அந்நியர்கள்

புதிய மொழி, பள்ளிகள், பழக்கவழக்கங்கள், போக்குவரத்து மற்றும் வானிலை என்று புதிய நாட்டில் எல்லாமே மிகவும் வித்தியாசமாக இருந்தன. அவர்கள் எப்படி ஒத்துப்போவது என்று யோசித்தார்கள். அருகிலுள்ள தேவாலயத்தைச் சேர்ந்த மக்கள் ஒரு புதிய நாட்டில் அவர்களின் புதிய வாழ்க்கையில் அவர்களுக்கு உதவ  முன்வந்தனர். பல்லவி, அந்த  தம்பதியினரை உள்ளூர் உணவு சந்தைக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு என்ன இருக்கிறது, எப்படி பொருட்களை வாங்குவது என்பதைக் காட்டினார். அவர்கள் சந்தையில் சுற்றித் திரிந்தபோது, ​​அவர்கள் தங்கள் தாயகத்திலிருந்து தங்களுக்குப் பிடித்த பழமான மாதுளைகளைப் பார்த்து, அவர்கள் கண்கள் விரிந்து, புன்னகைத்தனர். அவர்கள் ஒவ்வொறு குழந்தைகக்கும் ஒன்று வாங்கி, நன்றியுடன் பல்லவியின் கைகளிலும் ஒன்றைக் கொடுத்தனர். சிறிய பழங்களும் புதிய நண்பர்களும் அவர்களின் விசித்திரமான, புதிய நாட்டில் பெரிய ஆறுதலைக் கொடுத்தது.

தேவன், மோசேயின் மூலம், தம் ஜனங்களுக்கான நியாயப்பிரமாணத்தை கொடுத்தார், அதில் அந்நியனைச் சுதேசிபோல எண்ணுவதற்கான கட்டளையும் அடங்கும் (லேவியராகமம் 19:34). "நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக" என்று தேவன் மேலும் கட்டளையிட்டார். தேவனிடம் அன்பு கூருதலுக்குப் பிறகு, இயேசு இதை இரண்டாவது பெரிய கட்டளை என்று அழைத்தார் (மத்தேயு 22:39). ஏனெனில், "பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்" (சங்கீதம் 146:9).

தேவனுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர, புதிய நண்பர்கள் நம் நாட்டின் வாழ்க்கைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள அவர்களுக்கு உதவுகையில், நாமும்  "பூமியில் அந்நியர்கள்" (எபிரெயர் 11:13) என்பதன் உண்மையான அர்த்தத்தை நினைவூட்டிக் கொள்ளலாம். மேலும் வரவிருக்கும் புதிய பரலோக தேசத்தின் எதிர்பார்ப்பில் நாம் வளருவோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

எனக்குப் பதிலாக இயேசு

இருபது வயது செல்வந்தன் ஒருவன் தன் நண்பர்களுடன் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, ​​பாதசாரி மீது மோதியதால் அவா் மரணமடைந்தாா். அந்த இளைஞனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் ஆஜரானவர் (பின்னர் சிறைத்தண்டனை அனுபவித்தவர்) குற்றத்தைச் செய்த ஓட்டுநருக்கு மாற்றாக வந்தவர் என்று சிலர் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் சில நாடுகளில் நடக்கிறது, அங்கு மக்கள் தங்கள் குற்றங்களுக்காக தண்டனை பெறுவதை தவிர்க்க தங்களை போலவே தோற்றமளிக்கும் பிறரை வாடகைக்கு அமர்த்துகின்றனர்.

இது அவதூறும் மூர்க்கமுமான செயலாக இருக்கலாம், ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு நமது சார்பில் மாற்றாக ஆனார், மேலும் " அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்" (1 பேதுரு 3:18). தேவனின் பாவமற்ற பலியாக, அவரை விசுவாசிப்பவர்களின் பொருட்டு கிறிஸ்து துன்பப்பட்டு ஒரேதரம் மரித்தார் (எபிரெயர் 10:10). நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் அவர் சிலுவையில் தம்முடைய சரீரத்திலே தண்டனையை ஏற்றுக்கொண்டார். இன்று ஒரு குற்றவாளிக்கு மாற்றாக சில பணத்தைப் பெற ஒப்புக்கொள்ளும் ஒரு நபரைப் போலல்லாமல், கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்கு "நம்பிக்கையை" அளித்தது, அவர் தாமாகவே, விருப்பத்துடன் நமக்காகத் தம் ஜீவனை கொடுத்தார் (1 பேதுரு 3:15, 18; யோவான் 10:15). நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் அகற்ற அவர் அவ்வாறு செய்தார்.

இயேசு நமக்கு பதிலாக மரித்ததின் மூலம் மட்டுமே, தேவையிலுள்ள பாவிகளாகிய நாம் அன்பான தேவனுடன் ஒரு உறவைப் பெற முடியும் மற்றும் முழுமையாக அவருடன் ஆவிக்குரிய உறவை பெற முடியும் என்ற இந்த ஆழமான சத்தியத்தில் நாம் மகிழ்ச்சியடைவோம், ஆறுதலையும் நம்பிக்கையையும் பெறுவோம்.

நேசிப்பதற்கான புதிய கட்டளை

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமான பாரம்பரியப்படி, ஐக்கிய பேரரசின் அரச குடும்பத்தினர் புனித வெள்ளிக்கு முந்தைய நாளான பெரிய வியாழன் அன்று தேவையானவர்களுக்கு பரிசுகளை வழங்குவார்கள். இந்த நடைமுறையானது மவுண்டி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் வேரூன்றியுள்ளது, இது லத்தீன் 'மாண்டடம்' அதாவது "கட்டளை" என்பதிலிருந்து வருகிறது. இயேசு தாம் இறப்பதற்கு முந்தைய இரவில் தம் நண்பர்களுக்குக் கொடுத்த புதிய கட்டளைதான் நினைவுகூரப்படுகிறது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” (யோவான் 13:34).

இயேசு தலைவராக இருந்தும், தம் நண்பர்களின் கால்களைக் கழுவுகையில், ஒரு ஊழியக்காரனான இருந்தார் (வச. 5). பின்னர் அவர் அவ்வாறே செய்யும்படி அவர்களை அழைத்தார்: "நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்." (வச. 15). மேலும் இன்னும் பெரிய தியாகமாக, அவர் சிலுவையில் மரித்து தனது உயிரைக் கொடுத்தார் (19:30). முழுமையான வாழ்வை நாம் அனுபவிக்க, கருணையினாலும் அன்பினாலும் அவர் தம்மையே கொடுத்தார்.

பிரித்தானிய அரச குடும்பம் தேவைப்படுபவர்களுக்கு சேவையாற்றும் பாரம்பரியம் இயேசுவின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கான அடையாளமாக தொடர்கிறது. இதுபோல வாய்ப்புள்ள சூழலில் நாம் பிறக்காமல் இருக்கலாம்; ஆனால் நாம் இயேசுவில் நம்பிக்கை வைக்கும் போது, ​​நாம் அவருடைய குடும்பத்தினராக மாறுகிறோம். நாமும் அவருடைய புதிய கட்டளையை நிறைவேற்றுவதன் மூலம் நம் அன்பைக் காட்டலாம். உள்ளிருந்து நம்மை மாற்றுவதற்கு நாம் தேவனின் ஆவியைச் சார்ந்திருக்கையில்; அக்கறையுடனும், உறுதியுடனும், கருணையுடனும் பிறரை அணுகலாம்.

கிறிஸ்துவில் கனிதரும் விசுவாசிகள்

சிண்டி ஒரு தொண்டு நிறுவனத்தில் தனது புதிய வேலைக்காக உற்சாகப்பட்டாள். மாற்றத்தை ஏற்படுத்த அரிய வாய்ப்பு. ஆனால் அவளுடைய சகபணியாளர்கள் அப்படியில்லை என்பதை அவள் விரைவில் கண்டுபிடித்தாள். தங்கள் நிறுவனத்தின் பணியை கேலி செய்தார்கள் மற்றும் லாபகரமான வேலைகளுக்கு வேறு இடங்களில் தேடியதால், மோசமான செயல்திறனுக்காக சாக்கு கூறினர். சிண்டி இந்த வேலைக்கு விண்ணப்பித்திருக்கவே வேண்டாம் என்றென்னினாள். தொலைவில் அற்புதமாக தோன்றியது அருகிலோ ஏமாற்றமளித்தது.

இன்றைய கதையில் (மாற்கு 11:13) குறிப்பிடப்பட்டுள்ள அத்தி மரத்தில் இயேசுவுக்கிருந்த பிரச்சனையும் இதுதான். இது பருவத்தின் ஆரம்பத்தில் இருந்தது, ஆனால் மரத்தின் இலைகள் அது ஆரம்பகால அத்திகளைக் கொண்டிருப்பதாக குறிக்கிறது. இல்லை, மரத்தில் இலைகள் துளிர்விட்டன, ஆனால் அது இன்னும் காய்க்கவில்லை. ஏமாற்றமடைந்த இயேசு, "இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கடவன்" (வச.14) என்று மரத்தை சபித்தார். மறுநாள் காலையில் மரம் வேரோடே பட்டுப்போயிருந்தது (வச. 20).

கிறிஸ்து ஒருமுறை நாற்பது நாட்கள் உபவாசம் இருந்தார், ஆகவே உணவு இல்லாமல் எப்படி இருக்க வேண்டும் என்று அவரறிவார். அத்தி மரத்தை சபிப்பது அவரது பசிக்காக இல்லை. இது ஒரு பொருள் பாடம். இந்த மரம் இஸ்ரவேலை குறிக்கிறது, அது மெய்யான மதத்தின் வேர்களை கொண்டிருந்தது, ஆனால் நோக்கத்தை இழந்துவிட்டது. அவர்கள் தேவனுடைய குமாரனாகிய தங்கள் மேசியாவைக் கொல்லப் போகிறார்கள். அவர்கள் எவ்வளவு கணியற்றிருந்திருக்க வேண்டும்?

தூரத்திலிருந்து நாம் அழகாகத் தோன்றலாம், ஆனால் இயேசு அருகில் வருகிறார், அவருடைய ஆவியால் மட்டுமே விளைவிக்கப்படும் கனியைத் தேடுகிறார். நமது கனிகள் கண்கவரும்வண்ணம் இருக்க வேண்டியதில்லை. ஆனால் அது இயற்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அன்பு, சந்தோஷம் மற்றும் கடினமான காலங்களில் சமாதானம் போன்றவை (கலாத்தியர் 5:22). ஆவியானவரை சார்ந்து, இயேசுவுக்காக எப்போதும் கனி கொடுக்கலாம்.