எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆனி சிட்டாஸ்கட்டுரைகள்

நீங்கள் இயேசுவிடம் என்ன கேட்பீர்கள்?

"இந்த காலையில் இயேசு நம்முடன் மேஜையில் பிரத்தியட்சமாக அமர்ந்திருந்தால், நீங்கள் அவரிடம் என்ன கேட்க விரும்புகிறீர்கள்?" ஜோ, தனது குழந்தைகளிடம் காலை உணவின்போது விசாரித்தார். அவர் வீட்டுச் சிறுவர்கள் தங்களுக்கான கடினமான கேள்வியைக் குறித்து யோசித்தார்கள். அவர்கள் மிகவும் கடினமான கணித புதிர்களை இயேசுவிடம் கேட்க வேண்டும் என்றும், பிரபஞ்சம் உண்மையில் எவ்வளவு பெரியது என்று அவர் சொல்லிக் கேட்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர். அப்போது அவரது மகள், "நான் அவரை அணைக்கும்படி கேட்பேன்" என்றாள்.

இந்த பிள்ளைகளுக்காக இயேசுவின் கண்களில் இருக்கும் அன்பை உங்களால் கற்பனை செய்ய முடியவில்லையா? அவர்களின் வேண்டுகோள்களுக்கு மகிழ்ச்சியுடன் அவர் இணங்குவார் என்று நான் நினைக்கிறேன், இல்லையா? அவர் சிறுவர்களுக்கு வேடிக்கை காட்டுவதாகவும், சிறுமியிடம் தனது கரங்களைத் திறப்பதாகவும் நான் கற்பனை செய்கிறேன். தன்னை அணைக்கும்படியான ஜோவின் மகளின் ஆசையைக் குறிப்பாக அவர் விரும்பலாம், இது அவரது அன்பிற்காக ஏங்கும் மற்றும் அவரை நேசிக்கும் இதயத்தையும் வெளிப்படுத்துகிறது.

சிறுவர்கள் சார்ந்துகொள்ளுகிறவர்கள், மேலும் இயேசு வலிமையானவர் மற்றும் அன்பானவர் என்பதை அவர்கள் அறிவார்கள். "எவனாகிலும் சிறுபிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் " (லூக்கா 18:17) என்று அவர் கூறினார். அவருடைய கிருபை, மன்னிப்பு மற்றும் இரட்சிப்புக்கான தேவையை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்று கிறிஸ்து ஏங்குகிறார். அவருக்கு அருகில் இருக்க விரும்பும் தாழ்மையான இதயங்களை அவர் விரும்புகிறார்.

நீங்கள் இயேசுவிடம் ஏதாவது கேட்க விரும்புகிறீர்களா? நாம் அனைவரும் நிச்சயமாக நமக்கான கேள்விகளைக் கொண்டிருப்போம்! அல்லது ஒருவேளை நீங்கள் அவருடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறீர்களா? அந்த அணைப்பிற்காகவும், உங்களுக்குத் தேவையான பலவற்றிற்காகவும் இப்போது அவரிடம் ஓடுங்கள்.

 

நன்மைக்காகத் தேவனுக்கு ஊழியஞ்செய்தல்

விமல் ஒரு புதிய நகரத்திற்குக் குடிபெயர்ந்தார், அவர் ஆராதிப்பதற்கு ஒரு சபையையும் விரைவில் தேடிக்கொண்டார். அவர் சில வாரங்கள் ஆராதனைக்குச் சென்றார். பின்னர் ஒரு ஞாயிறன்று, அவர் போதகரிடம் ஏதாவது ஒரு முறையில் ஊழியம் செய்திட விரும்புவதைப் பற்றிப் பேசினார்.  "நான் துடைப்பத்தால் சுத்தம் செய்யவே விரும்பினேன்" என்றார். ஆராதனைக்கு நாற்காலிகள் அடுக்குவது, கழிப்பறைகளைச் சுத்தம் செய்வது என்று அவர் துவங்கினார். விமலின் திறமை போதிப்பதில் இருப்பதைச் சபை குடும்பத்தினர் பின்னர் கண்டுபிடித்தனர், ஆனால் அவர் எதையும் செய்யத் தயாராக இருந்தார்.

இயேசு தம்முடைய சீஷர்களில் இருவரான யாக்கோபு, யோவான் மற்றும் அவர்களது தாயாருக்கு ஊழியத்தைக் குறித்ததான பாடத்தைக் கற்பித்தார். கிறிஸ்து தமது ராஜ்யத்தோடு வருகையில்,  அவளுடைய மகன்களுக்கு ஒவ்வொரு பக்கத்திலும் முக்கியமான இடம் வேண்டும் என்று அவர்களின் தாய் கேட்டுக் கொண்டாள் (மத்தேயு 20:20-21). மற்ற சீஷர்கள் இதைக் கேள்விப்பட்டு அவர்கள் மீது கோபம் கொண்டார்கள். ஒருவேளை அவர்களும் தங்களுக்காக அந்த பதவிகளை விரும்பினார்களா? பிறர் மீது அதிகாரம் செலுத்துவது வாழ்வதற்கான வழி அல்ல (வ. 25-26), மாறாகப் பணிவிடை செய்வதே மிக முக்கியமானது என்று இயேசு அவர்களிடம் கூறினார். "உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்" (வ. 26).

"துடைப்பத்தால் சுத்தம் செய்தல்" என்ற விமலின் வார்த்தைகள்; கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்ய, நம் சமூகங்களிலும் சபைகளிலும் நாம் ஒவ்வொருவரும் என்ன செய்திடலாம் என்பதற்கான நடைமுறை பாடம். விமல்  தனது வாழ்க்கையில் தேவன் மீதான கொண்டுள்ள ஆர்வத்தை இவ்வாறு விவரித்தார்: "நான் தேவனின் மகிமைக்காகவும், உலகின்  நன்மைக்காகவும், என் சொந்த மகிழ்ச்சிக்காகவும் ஊழியம் செய்ய விரும்புகிறேன்." தேவன் நம்மை வழிநடத்துகையில்,  நீங்களும் நானும் எவ்வாறு "துடைப்பத்தைக் கையிலெடுப்போம்"?

தற்போது கிருபை

எனது நண்பன் ஜெரியின் வேலை ஸ்தலத்தில் சிறிய இடைவேளையில் ஒன்றாக மதிய உணவு சாப்பிடுவதற்காக ஒரு துரித உணவு விடுதிக்கு விரைந்தோம். அதே நேரத்தில் வாசலில் வந்த ஆறு இளைஞர்கள் எங்களுக்கு முன்னால் உள்ளே நுழைந்தனர். எங்களுக்கு அதிக நேரம் இல்லை என்பதை அறிந்து, உள்ளுக்குள் முணுமுணுத்தோம். அவர்கள் ஒவ்வொருவரும் முதலில் ஆர்டர் செய்யலாம் என்பதை உறுதிப்படுத்த இரு வரிசைகளிலும் ஒரு குழுவாக நின்றார்கள். “இப்போது கிருபை காண்பியுங்கள்” என்று ஜெரி தனக்குத்தானே கிசுகிசுப்பதை நான் கேட்டேன். ஆஹா! நிச்சயமாக, முதலில் எங்கள் தேவைகள் சந்திக்க நாங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தால் எங்களுக்கு நலமானதாக இருந்திருக்கும். ஆனால் என்னுடையது மட்டுமல்ல, மற்றவர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பற்றி சிந்திக்க எங்களுக்கு ஒரு சிறந்த நினைவூட்டலாக அத்தருணம் அமைந்தது. 

அன்பு “அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது” (1 கொரிந்தியர் 13:5) என்று வேதம் போதிக்கிறது. “அடிக்கடி . . . மற்றவர்களின் நலன், திருப்தி, நன்மை ஆகியவற்றைத் தனக்கென விரும்புகிறது,” என்று இந்த அன்பைப் பற்றி வேத விளக்கவுரையாளர் மேத்யூ ஹென்றி எழுதுகிறார். தேவனுடைய அன்பு மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

நம்மில் பலர் எளிதில் எரிச்சலடையும் ஒரு உலகில், மற்றவர்களிடம் பொறுமையாக இருப்பதற்கும் கருணை காட்டுவதற்கும் தேவனிடத்தில் உதவி மற்றும் கிருபையை அடிக்கடி கேட்கிறோம் (வச. 4). நீதிமொழிகள் 19:11, “மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை” என்று கூறுகிறது. 

அதுதான் கடவுளுக்கு கனம் தரும் அன்பான செயல், மேலும் அவர் தனது அன்பைப் பற்றிய எண்ணங்களை மற்றவர்களுக்குக் கொண்டு வர அதைப் பயன்படுத்தலாம்.

தேவனுடைய பலத்துடன், இப்போது மற்றவர்களுக்கு கருணை காண்பிக்க ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்வோம். 

 

தேவனுடைய தட்டில் வைத்துவிடுங்கள்

பல ஆண்டுகளாக, ஒரு தாய் வியாதிப்பட்டிருந்த தனது வாலிப மகளுக்கு மருத்துவ ரீதியாக உதவி, நல்ல ஆலோசனை மற்றும் சிறந்த மருந்துகளைப் பெற்றுத் தந்து, அவளுக்காக ஜெபித்துக் கொண்டுமிருந்தாள். மகளுடைய சரீரத்தின் ஏற்ற தாழ்வான நிலையற்ற தன்மை, அம்மாவின் இதயத்தை  நாளுக்கு நாள் கணமூட்டியது. அடிக்கடி சோகத்தால் சோர்வடைந்து, தனக்கும் பராமரிப்பு வேண்டும் என்பதை உணர்ந்தாள். ஒரு நண்பர் அவளது கவலைகளையும், தன்னால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களையும் சிறிய காகிதத் துண்டுகளில் எழுதி, "தேவனுடைய தட்டில்" வைத்து அவளது படுக்கையில் வைக்குமாறு பரிந்துரைத்தார். இந்த எளிய நடைமுறை அனைத்து மன அழுத்தத்தையும் அகற்றவில்லை, ஆனால் அந்தத் தட்டைப் பார்க்கும்போது அவளுக்கு அந்த கவலைகள் தேவனுடைய தட்டில் இருப்பதை நினைவூட்டுகிறது, அவை அவளுடையது அல்ல.

ஒரு விதத்தில், தாவீதின் பல சங்கீதங்கள் அவனுடைய உபத்திரவங்களைப்  பட்டியலிட்டு, அவற்றை 'தேவனுடைய தட்டில்' வைப்பதற்கான வழியாக இருந்தன (சங்கீதம் 55:1, 16-17). அவரது மகன் அப்சலோமின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியானது இங்கே விவரிக்கப்பட்டிருக்குமானால், தாவீதின் "நெருங்கிய நண்பன்" அகித்தோப்பேலும் உண்மையில் அவருக்குத் துரோகம் செய்து அவரைக் கொல்லும் சதித்திட்டத்தில் ஈடுபட்டான் (2 சாமுவேல் 15-16). எனவே "அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் (தாவீது) கூக்குரலிட்டார்"  தேவன் அவருடைய ஜெபத்தைக் கேட்டார் (சங்கீதம் 55:1-2, 16-17). அவர் "கர்த்தர்மேல் பாரத்தைவைத்துவிட" தெரிந்துகொண்டார் மற்றும் அவரது பராமரிப்பை அனுபவித்தார் (வ. 22).

கவலைகளும் பயங்களும் நம் அனைவரையும் பாதிக்கின்றன என்பதை நாம் உண்மையாக ஒப்புக் கொள்ளலாம். தாவீதைப் போன்ற எண்ணங்கள் நமக்கும் இருக்கலாம்: “ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்” (வ. 6). தேவன் அருகில் இருக்கிறார், சூழ்நிலைகளை மாற்றும் ஆற்றல் உள்ளவர் அவரே. அனைத்தையும் அவரது தட்டில் வையுங்கள்.

நிஜமாய் வாழுங்கள்

2000 ஆம் ஆண்டில் போதகர் எட் டாப்சனுக்கு ஏ.எல்.எஸ் இருப்பது கண்டறியப்பட்டபோது,ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்காக ஜெபித்தனர். குணமடைய நம்பிக்கையுடன் ஜெபித்தால் செய்தால், தேவன் உடனடியாக பதிலளிப்பார் என்று பலர் நம்பினர். எட்ஸின் தசைகள் சிறிது சிறிதாக சிதைவதற்கு காரணமான நோயுடன் பன்னிரண்டு ஆண்டுகள் போராடிய பிறகு (அவர் இறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு), தேவன் அவரை இன்னும் ஏன் குணப்படுத்தவில்லை என்று நினைக்கிறீர்கள் என்று ஒருவர் அவரிடம் கேட்டார். “நல்ல பதில் என்று ஒன்று இல்லை. அதினால் நான் கேட்கவில்லை” என்று அவர் பதிலளித்தார். அவரது மனைவி லோர்னா மேலும் கூறுகையில், “நீங்கள் எப்போதும் பதில்களைப் பெற வேண்டும் என்று வெறித்தனமாக இருந்தால், நீங்கள் உண்மையில் வாழ முடியாது" என்று சொன்னார்கள். 

எட் மற்றும் லோர்னாவின் வார்த்தைகளில் தேவனுக்கான கனத்தை உங்களால் உணர முடிகிறதா? அவருடைய ஞானம் தங்களுக்கு மேலானது என்பதை அவர்கள் அறிந்தார்கள். இருப்பினும் எட் ஒப்புக்கொண்டார், “நாளைய தினத்தைக் குறித்து கவலைப்படாமல் இருப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.” நோய் அதிகரிக்கும் இயலாமையை ஏற்படுத்தும் என்பதை அவர் புரிந்துகொண்டார். அடுத்த நாள் என்ன புதிய பிரச்சனை வரக்கூடும் என்று அவருக்குத் தெரியவில்லை.

நிகழ்காலத்தில் கவனம் செலுத்த உதவுவதற்காக, எட் இந்த வசனங்களை தனது காரில், குளியலறை கண்ணாடியில், மற்றும் அவரது படுக்கைக்கு அருகில் வைத்தார்: “நான் (கர்த்தர்) உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரெயர் 13:5). அவர் கவலைப்படத் தொடங்கும் போதெல்லாம், அவர் தனது எண்ணங்களை சத்தியத்தின் மீது மீண்டும் ஒருமுகப்படுத்த உதவும் வசனங்களை திரும்பத் திரும்பச் சொல்வார்.

அடுத்த நாள் எதைக் கொண்டு வரும் என்று யாருக்கும் தெரியாது. ஒருவேளை எட் பயிற்சி, நம் கவலைகளை நம்பிக்கையின் வாய்ப்புகளாக மாற்ற நமக்கு உதவிசெய்யக் கூடும். 

 

நீ பிரியமானவன்(ள்)

தன் சோகத்தை வெளிப்படுத்த, அந்த இளம் பெண் மாலினி, ஒரு மரத் துண்டில், "“உண்மையைச் சொல்வதானால், நான் சோகமாக இருக்கிறேன். யாரும் என்னுடன் சேர விரும்பவில்லை, என்னை நேசிக்கும் ஒரே நபரையும் நான் இழந்துவிட்டேன். நான் தினமும் அழுகிறேன்" என்றெழுதி எழுதி பூங்காவில் வைத்துவிட்டாள்.

யாரோ ஒருத்தி அந்தக் குறிப்பைக் கண்டெடுத்தபோது, ​​பூங்காவிற்கு ஒரு பெரிய எழுத்துப் பலகையைக் கொண்டு வந்து, மக்கள் தங்கள் எண்ணங்களை மாலினிக்காக எழுதச் சொன்னாள். அருகிலுள்ள பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், "நாங்கள் உன்னை நேசிக்கிறோம்", "தேவன் உன்னை நேசிக்கிறார்", "நீ பிரியமானவள்" என்றெல்லாம் பல ஆதரவான வார்த்தைகளை எழுதிச் சென்றனர்.  பள்ளி முதல்வரும் "அவளிடம் உள்ள வெறுமை நிரம்பும்படி அவளுக்கு உதவிட நாம் எடுக்கும் சிறிய முயற்சி இது. அவள் நம் அனைவரையும் பிரதிபலிக்கிறாள், ஏனெனில் ஒரு கட்டத்தில் நாம் அனைவரும் சோகத்தையும் துன்பத்தையும் அனுபவிப்போம் அல்லது அனுபவிக்கிறோம்" என்றார்.

"நீ பிரியமானவள்" என்ற வார்த்தை, மோசே இறப்பதற்குச் சற்று முன்பு  இஸ்ரவேல் கோத்திரமான பென்யமீனுக்கு அளித்த அற்புதமான ஆசீர்வாதத்தை எனக்கு நினைவூட்டுகிறது, " கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்" (உபாகமம் 33:12). மோசே தேவனுக்காக ஒரு வலிமையான தலைவராக இருந்தார், எதிரி நாடுகளைத் தோற்கடித்தார், பத்து கட்டளைகளைப் பெற்றார், தேவனைப் பின்பற்ற அவர்களுக்கு அறைகூவல் விடுத்தார். அவர் அவர்களைத் தேவனின் கண்ணோட்டத்தில் கண்டு மரித்தார். பிரியமானவன் என்ற வார்த்தையை நாமும் நமக்கு உரிமையாக்கிக் கொள்ளலாம். ஏனென்றால் இயேசு கூறினார், "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3:16).

இயேசுவின் ஒவ்வொரு விசுவாசியும் அவருக்கு "பிரியமானவர்கள்" என்ற சத்தியத்தில் உறுதியாக இளைப்பாறிட  அவர் நமக்கு உதவுவதால், மாலினியின் புதிய நண்பர்களைப் போலவே மற்றவர்களையும் நேசிக்க முற்படுவோம்.

 

இதுவே காலம்

எனது நண்பர்களான அல் மற்றும் கேத்தி ஷிஃபர் அவர்களின் இரண்டாம் உலகப் போரின் காலகட்ட விமானத்தை கண்காட்சியில் பறக்கவிட்டபோது, வயதான போர் வீரர்களின் உணர்ச்சிகள்தான் அவர்களுக்கு முக்கியமாய் தோன்றியது. தாங்கள் பணியாற்றிய போர்கள் மற்றும் அவர்கள் பறந்த விமானங்கள் பற்றி பேசுவதற்காக அவர்கள் முன்வந்தனர். அவர்களின் பெரும்பாலான போர்க் கதைகள் கண்ணீருடன் சொல்லப்பட்டன. பலர் தங்கள் நாட்டுக்கு சேவை செய்யும்போது பெற்ற சிறந்த செய்தி, “போர் முடிந்துவிட்டது, வீரர்களே; வீட்டிற்குச் செல்லவேண்டிய நேரம் இது” என்பதாகும். 

முந்தைய தலைமுறையினரின் இந்த வார்த்தைகள், பிசாசோடு விசுவாச யுத்தத்தில் ஈடுபட்டுள்ள கிறிஸ்தவர்களோடு தொடர்புடையது. பேதுரு “உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” (1 பேதுரு 5:8) என்று நம்மை எச்சரிக்கிறார். அவன் பல்வேறு வழிகளில் நம்மை தூண்டி, துன்பத்திலும் துன்புறுத்தலிலும் ஊக்கமின்மையைப் பயன்படுத்தி, இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையிலிருந்து நம்மை விலக்க முயற்சிக்கிறான். பேதுரு தனது முதல் வாசகர்களுக்கும் இன்று நமக்கும் “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்” (1 பேதுரு 5:8) என்று சவால் விடுக்கிறார். நாம் பரிசுத்த ஆவியானவரைச் சார்ந்து இருக்கிறோம். எனவே சத்துரு நம்மை யுத்தத்தில் சரணடையச் செய்து நம்மை வீழ்த்த அனுமதிக்கமாட்டோம்.

ஓர் நாள் இயேசு திரும்பி வருவார் என்பதை நாம் அறிவோம். அவர் வரும்போது, அவருடைய வார்த்தைகள் அந்த போர்க்கால வீரர்கள் உணர்ந்ததைப் போன்ற விளைவை ஏற்படுத்தும். நம் கண்களில் கண்ணீரையும், நம் இதயங்களில் மகிழ்ச்சியையும் வரவழைக்கும்: “போர் முடிந்துவிட்டது, வீரர்களே; வீட்டிற்குச் செல்லவேண்டிய நேரம் இது."

 

இடமாற்றம்

2020-ல் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது, எனது நண்பர் ஜோன் மாரடைப்பால் இறந்துவிட்டார். முதலில் அவரது குடும்பத்தார், தங்களது திருச்சபையில் அவரது நினைவுச் சடங்கு நடைபெறும் என்று அறிவித்தனர். ஆனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அதை வீட்டில் நடத்துவது நல்லது என்று பின்னர் தீர்மானிக்கப்பட்டது. அதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக “ஜோன் வார்னர்ஸ் - இடமாற்றம்!” என்று ஆன்லைனில் புதிய அறிவிப்பு போடப்பட்டது. 

ஆம், அவருடைய குடியிருப்பு இடம் மாறிவிட்டது! அவர் பூமியிலிருந்து பரலோகத்திற்கு சென்றுவிட்டார். தேவன் அவருடைய வாழ்க்கையை பல ஆண்டுகளுக்கு முன்பே மறுரூபமாக்கியிருந்தார். அவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக தேவனுக்கு அன்புடன் ஊழியம் செய்தார். மருத்துவமனையில் இறக்கும் தருவாயில் கிடந்தபோதும், போராடிக்கொண்டிருக்கும் தனக்குப் பிடித்த மற்றவர்களைப் பற்றிக் கேட்டார். இப்போது அவர் தேவனோடு இருக்கிறார். அவருடைய குடியிருப்பு மாற்றப்பட்டுவிட்டது. 

அப்போஸ்தலனாகிய பவுலுக்கு, கிறிஸ்துவுடன் வேறொரு இடத்தில் இருக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது (2 கொரிந்தியர் 5:8). ஆனால் மக்களுக்கு ஊழியம் செய்வதற்காக, அவர் பூமியில் தங்கியிருக்கவேண்டியது அவசியம் என்று கருதினார். அவர் பிலிப்பியர்களுக்கு எழுதியபோது, “அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்” (பிலிப்பியர் 1:24) என்று எழுதுகிறார். ஜோன் போன்ற ஒருவருக்காக நாம் துக்கப்படுகையில், அவர்கள் இப்பூமியில் பலருக்கு அவசியப்படலாம் என்று நீங்கள் தேவனிடத்தில் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களுடைய குடியிருப்பை மாற்றுவதற்கென்று தேவன் உகந்த நேரத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். 

ஆவியின் பெலத்தில், தேவனை முகமுகமாய் தரிசிக்கும் நாள் வரும்வரை, இப்போது “அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்” (2 கொரிந்தியர் 5:9). அதுவே நமக்கு மேன்மையாயிருக்கும்.  

 

தூதர் துணை

பரிசோதனைமேல் பரிசோதனை செய்துகொண்டேயிருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபடியால், பினு மிகவும் சோர்வாகவும் பாரமாகவும் கருதினாள். அவளுடைய உடம்பில் ஏதாவது புற்றுநோய் கட்டிகள் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பதாக மருத்துவர்கள் அவளிடம் தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் தேவன் தம்முடைய பிரசன்னத்தின் வாக்குறுதிகளாலும், அவள் ஜெபிக்கும்போது அல்லது வேதத்தைப் படிக்கும்போது ஓர் நித்திய சமாதானத்தையும் கொண்டு அவளை ஊக்கப்படுத்தினார். அவள் நிச்சயமற்ற மனநிலையுடன் போராடினாள். மேலும் தேவனிடத்தில், ஒருவேளை “இப்படியிருந்தால்...” என்று தன்னுடைய பயத்தை அதிகமாய் பகிர ஆரம்பித்தாள். தீவிர அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு நாள் காலை பினு தன்  கண்ணில்பட்ட யாத்திராகமம் 23ல் ஒரு வசனத்தை வாசித்தாள். அது: “வழியில் உன்னைக் காக்கிறதற்கும்... இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” (வச. 20)

அந்த வார்த்தைகளை தேவன் மோசேயின் மூலம் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலருக்குக் கூறினார். தம்முடைய ஜனங்கள் பின்பற்றும்படியாக தேவன் நியாயப்பிரமாணங்களைக் கொடுத்து, அவர்களைப் புதிய தேசத்திற்கு அழைத்துச் சென்றார் (வச. 14-19). ஆனால் அவர்களுடைய பாததையில் அவர்களை பாதுகாப்பதற்காக, “ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” என்று கூறுகிறார். பினுவின் வாழ்க்கை நிலைமை இதுவாக இல்லாவிட்டாலும், தேவ தூதர்களைக் கொண்டு கர்த்தர் தம்முடைய ஜனத்தை பாதுகாப்பதை மற்ற வேதப்பகுதிகளின் மூலம் அவள் அறிந்தாள். சங்கீதம் 91:11, “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்” என்று சொல்லுகிறது. மேலும் எபிரெயர் 1:14, “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” என்று குறிப்பிடுகிறது. 

நாம் கிறிஸ்துவை அறிந்திருந்தால், நமக்கும் ஊழியம் செய்ய ஒரு துதன் அனுப்பப்படுகிறார் என்பதை விசுவாசிப்போம்.

 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனால் ஒருபோதும் புறக்கணிக்கப்படவில்லை

“சில நேரங்களில் நான் ஏதோ கண்ணுக்கே தெரியாதவள் போல உணர்கிறேன்" விமலா தன் தோழியிடம் பேசும்போது இந்த வார்த்தைகள் காற்றில் ஊசலாடின. விமலாவை அவள் சிறு குழந்தைகளுடன் கைவிட்டு, அவளது கணவன் வேறொறுவளோடு போய்விட்டான். அவள், "நான் அவருக்கு என் வாழ்விலேயே சிறந்த ஆண்டுகளைக் கொடுத்தேன். இப்போது யாரேனும் என்னைப் பார்த்துக்கொள்வார்கள் என்றோ என்னை அறிவதற்கு நேரம் ஒதுக்குவார்களோ என்று எனக்குத் தெரியவில்லை" என்றாள்.

அவளுடைய தோழி பதிலளித்தாள்: "நான் மிகவும் வருந்துகிறேன். எனக்கு ஆறு வயதாக இருந்தபோது என் அப்பாவும் போய்விட்டார். அது எங்களுக்கு, குறிப்பாக அம்மாவுக்குக் கடினமாக இருந்தது. ஆனால் ஒரு இரவில் அவள் என்னைத் தூங்கவைத்த போது, நான் மறக்கவே இல்லாத ஒன்றைச் சொன்னால்: 'தேவன் தன் கண்களை மூடுவதேயில்லை'. நான் வளர்ந்த பிறகு, ​​தேவன் என்னை நேசிப்பதையும், எனக்கு எப்போதும் தூங்கும்போதும் கூட காவலாய் இருப்பதையும் அவள் எனக்குக் கற்பிக்க முயன்றதை விலக்கினாள்".

சீனாய் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த ஒரு சவாலான நேரத்தில் தமது ஜனங்களுடன் பகிர்ந்துகொள்ள மோசேக்குத் தேவன் அருளிய வார்த்தைகளை வேதாகமம் முன்வைக்கிறது: “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே” (எண்ணாகமம் 6:24-26). இந்த ஆசீர்வாதமானது ஜனங்கள் மீது ஆசாரியர்களால் மொழியப்பட வேண்டும்..

யாராவது நம்மைப் பார்க்கிறார்களா அல்லது உண்மையிலேயே புரிந்துகொள்கிறார்களா என்று நாம் ஏங்குகிற நிலைமையான வாழ்க்கையின் வனாந்தரங்களில் கூட தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். தேவனின் தயவான அவரது பிரகாசிக்கும் முகமும் மாறிடாத அன்பும் அவரை நேசிப்பவர்களை நோக்கித் திரும்புகிறது, நம்முடைய வலியினிமித்தம், அவரை நம்மால் உணர முடியாவிட்டாலும் கூட, தேவனுக்கு மறைவானவர்கள் என்று யாரும் இல்லை.

நமது திட்டங்களும் தேவ திட்டங்களும்

பல ஆண்டுகளுக்கு முன்பு, என் கணவர் தனது சபையைச் சேர்ந்த ஒரு குழுவினருடன் ஆப்பிரிக்காவுக்குச் செல்ல தீர்மானித்தார். கடைசி நிமிடத்தில், குழுவினர் பயணிக்க முடியாமல் தடைப்பட்டனர். அனைவரும் ஏமாற்றமடைந்தனர், ஆனால் விமான கட்டணம், தங்குமிடம் மற்றும் உணவுக்காக அவர்கள் சேகரித்த பணத்தை அவர்கள் பார்க்க முயற்சித்த மக்களுக்கு நன்கொடையாக வழங்கினர். வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலமாக ஒரு கட்டிடத்தைக் கட்டுவதற்கு மக்கள் அதைப் பயன்படுத்தினர்.

சமீபத்தில், ஒரு ஜெபக்கூட்டத்தில், ​​​​என் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு பயணம் செய்திருந்த கிராமத்தில் வாழ்ந்த ஒருவரைச் சந்தித்தார். இந்த நபர் ஒரு ஆசிரியர், அவர் தினமும் அதே கட்டிடத்தின் வழியாக நடந்து செல்வதாகக் கூறினார். அப்பகுதியில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உபயோகமாகத் தேவன் அதைப் பயன்படுத்தினார் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

நம்முடைய திட்டங்களும், விருப்பங்களும் தேவனின் மனதில் கொண்டிருப்பவற்றோடு எப்போதும் ஒத்துப்போவதில்லை. ஏனென்றால்,  "என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்" (ஏசாயா 55:8). தேவனுடைய வழிகள் நம்மிடமிருந்து வேறுபட்டவை மாத்திரம் அல்ல; அவருடைய வழிகள் "உயர்ந்தவை" மற்றும் சிறந்தவை, ஏனெனில் அவர் செய்வதெல்லாம் அவர் யார் என்பதோடு ஒத்துப்போகிறது (வ.9). அவருக்கு ஊழியஞ்செய்வதற்கான நமது முயற்சிகள் நாம் திட்டமிட்டபடி நடக்காதபோது இந்த சத்தியம் நமக்கு நம்பிக்கையூட்டுகிறது.

சில சூழ்நிலைகளில் தேவன் இடைப்பட்டதை நாம் அறிந்துகொள்வதற்கு, பல ஆண்டுகள் கழித்துத் திரும்பிப் பார்க்க நேரிடலாம். இருப்பினும், தற்போதைக்கு, அவருடைய நாமத்தால் உலகத்தை நாம் தொடர்ந்து எதிர்கொள்ளுகையில், ​​தேவன் எப்போதும் வல்லமையுடன் செயல்படுகிறார் என்பதை நாம் நினைவில் கொள்ளலாம் (வ.11).

 

தேவன் நம் பின்னே ஓடி வருகிறார்

பல ஆண்டுகளாக, சஞ்சய் ஒரு அடிமைத்தனத்துடன் போராடினார், அது அவரை தேவனிடம் நெருங்கவிடாமல் தடுத்தது. அவருடைய அன்புக்கு நான் எவ்வாறு தகுதியுடையவனாக இருக்க முடியும்? என்று அவர் குழம்பினார். எனவே, அவர் தொடர்ந்து சபைக்குச் சென்றபோதும், ​​தேவனிடம் தன்னை இணைக்கக் கூடாதபடிக்கு ஒரு பெரும் பள்ளம் இருப்பதாக உணர்ந்தார்.

ஆனாலும், சஞ்சய் எப்பொழுது ஊக்கமாய் ஜெபித்தாலும், தேவன் அவருக்குப் பதிலளிப்பதாகத் தோன்றியது. கடினமான காலங்களில் அவரை உற்சாகப்படுத்தவும் ஆறுதலளிக்கவும் தக்கவர்களைத் தேவன் அனுப்பினார். சில வருடங்களுக்குப் பிறகு, தேவன் தன்னைத் தொடர்ந்து விரட்டி வருவதையும், அவர் எப்போதும் தன்னை நேசிப்பதையும் அக்கறை காட்டுவதையும் சஞ்சய் உணர்ந்தார். அப்போதுதான் தேவனின் மன்னிப்பிலும் அன்பிலும் அவர் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார். "இப்போது, ​​நான் மன்னிக்கப்பட்டேன் என்பதை அறிவேன். மேலும் நான் இன்னும் என் அடிமைத்தனத்துடன் போராடிக் கொண்டிருந்தாலும், அவரிடம் நெருங்கும்படிக்கு என்னைத் தேவனுக்கு விட்டுக்கொடுக்க முடியும்" என்று அவர் கூறினார்.

எசேக்கியேல் 34:11-16 தம் மக்களைப் பின்தொடர்ந்த ஒரு தேவனைப் பற்றி நமக்குச் சொல்கிறது. "நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்" என்று அவர் கூறினார், அவற்றை மீட்பதாகவும், அவற்றுக்கு அபிரிதமானவற்றை வழங்குவதாகவும் வாக்களித்தார் (வ.11). அவர்களுடைய மனுஷீகமான தலைவர்கள் அவர்களைக் கைவிட்ட பிறகும், அவர்களும் தங்கள் மெய்யான மேய்ப்பருக்குக் கீழ்ப்படியாமல் போனபோதும் (வ.1-6) இது நிகழ்ந்தது. நாம் உதவியற்ற சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சரி அல்லது நம்முடைய சொந்த பாவத்தின் விளைவுகளுடன் போராடிக் கொண்டிருந்தாலும் சரி, தேவன் நம்மை அன்பினால் பின்தொடர்கிறார். அவருடைய இரக்கத்தாலும், கிருபையாலும், அவர் நம்மை மீண்டும் அவரிடமாய் இழுக்கிறார். நீங்கள் தேவனை மறந்திருந்தால், அவரிடம் திரும்புங்கள். பின்னர், அவர் வழிநடத்துவதற்கேற்ப, ​​ஒவ்வொரு நாளும் அவருடன் தொடர்ந்து நடங்கள்.