உள்ளான சுகத்திற்கான வேட்டை
அமெரிக்க மாநிலமான மிச்சிகனில் வசிக்கும் கார்சன், வேட்டையாடுவது, மீன்பிடிப்பது, பைக்குகள் ஓட்டுவது மற்றும் ஸ்கேட்போர்டில் செல்வது என்று எப்போதும் மும்முரமாகவே செயல்படுவார். அவர் வெளியே பொழுதைக் கழிப்பதில் அதிக பிரியப்பட்டார். ஆனால் அவர் திடீரென்று ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி விபத்திற்குள்ளானதால், அவருடைய மார்புக்கு கீழ் அனைத்தும் செயலிழந்துபோனது. விரைவில் மனச்சோர்வுக்குள் மூழ்கினார். அவருடைய எதிர்காலம் இருண்டுபோனது. அவனுடைய சிநேகிதர்களில் சிலர் அவனை மீண்டும் வேட்டைக்கு கூட்டிச்சென்றனர். அந்த தருணத்தில் தன்னுடைய துயரங்கள் அனைத்தையும் மறந்து சுற்றியிருக்கும் அனைத்து அழகையும் ரசித்தான். இந்த அனுபவம் அவனுக்கு உள்ளான இருதய சுகத்தை ஏற்படுத்தி, அவனுடைய வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தைக் கொடுத்தது. அவனைப் போல் இருப்பவர்களும் அந்த அனுபவத்தை பெறும் நோக்கத்தோடு, “வேட்டையிலிருந்து சுகத்துக்கு” (ர்ரவெ 2 ர்நயட) என்ற பெயரில் ஓர் இயக்கத்தை ஆரம்பித்தான். அவன், “என்னுடைய விபத்தானது எனக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவந்தது... நான் எப்போதும் செய்ய விரும்பியதை இப்போது மற்றவர்களுக்கு செய்வதின் மூலம் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று சொல்லுகிறான். மிகவும் கடுமையான சரீர குறைபாடுகள் உள்ளவர்களுக்கு தேவையான இடவசதியை ஒழுங்குசெய்து அவர்களுக்கு உள்ளான சுகத்தை கொடுப்பதில் இப்போது அவர் மும்முரமாய் செயல்பட்டு வருகிறான்.
நொருங்குண்ட இருதயங்களை காயங்கட்டும் ஒருவரின் வருகையைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்துள்ளார் (ஏசாயா 61). அவர் “இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும்... துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும்” கிரியை செய்வார் (வச. 1-2). இயேசு இந்த வேத வாக்கியங்களை தேவாலயத்தில் வாசித்த பின்பு, “உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று” (லூக்கா 4:21) என்றார். இயேசு நம்மை இரட்சிக்கவும் பூரணப்படுத்தவும் வந்தார்.
உங்களுக்கு உள்ளான சுகம் அவசியப்படுகிறதா? இயேசுவிடம் வாருங்கள், அவர் “ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையை” (ஏசாயா 61:3) உங்களுக்குக் கொடுப்பார்.
சேவை செய்யும் சவால்
பதிமூன்றே வயது நிரம்பிய டேஏவியன் மற்றவர்களுக்கு சேவை செய்யும் சவாலை மேற்கொண்டான். கோடை விடுமுறையின் போது, தன்னுடைய ஐம்பது புல்வெளிகளை இலவசமாக வெட்டும்படி குழந்தைகளுக்கு அழைப்புக் கொடுத்த ஒரு மனிதனைப் பற்றிய கதையை அவனும் அவனது அம்மாவும் கேட்டிருக்கிறார்கள். இராணுவ வீரர்கள், ஒற்றை அம்மாக்கள், ஊனமுற்றவர்கள், அல்லது உதவி தேவைப்படும் எவருக்கும் உதவுவதே அவர்களின் நோக்கம். அந்த புல்வெளிகளின் சொந்தக்காரர், வேலையின் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு நன்மை செய்வதின் அவசியத்தையும் அவர்களுக்கு விளங்கச்செய்தார். கோடையின் வெயில் சுட்டெரிக்கும் போதும், மற்றவர்களுக்கு சேவை செய்வதை விரும்பிய டீவியோன் அந்த சவாலை நேர்த்தியாய் செய்து முடித்தார்.
மற்றவர்களுக்கு சேவை செய்யும் சவால் கிறிஸ்தவர்களுக்கும் உண்டு. இயேசு மரிப்பதற்கு முந்தின நாள் இரவில், அவர் சீஷர்களோடு பந்தியிருந்தார் (யோவான் 13:1-2). அவர் கடந்துபோகப்போகிற உபத்திரம் மற்றும் மரணம் என்னும் பாதையைக் குறித்து அவர் நன்கு அறிந்திருந்த போதிலும், அவர் ஒரு துண்டை எடுத்து தன்னுடைய இடுப்பில் கட்டிக்கொண்டு சீஷர்களின் பாதங்களை கழுவினார் (வச. 3-5). மேலும் “ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்” என்று அவர்களிடம் வலியுறுத்தினார் (வச. 14).
நம்முடைய தாழ்மையான மாதிரியாகிய இயேசு மக்களிடம் கரிசனை காண்பித்தார். அவர் குருடருக்கு பார்வையும், வியாதியஸ்தருக்கு சுகமும் கொடுத்து இராஜ்யத்தின் நற்செய்தியை போதித்து, தன் சிநேகிதருக்காக தன்னுடைய ஜீவனையும் கொடுத்தார். கிறிஸ்து உங்களை நேசிப்பதால், இந்த வாரத்தில் யாருக்கு சேவை செய்யவேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்று அவரிடத்தில் கேளுங்கள்.
முற்றிலும் தனிமையா?
சமீபத்தில் மைக்கெல் ஏஞ்சலோவின் சிற்பகலைப் புகைப்படத்தை நோக்கிய போது,அதிலுள்ள மோசேயின் வலது கையில் தசைகள் வீங்கி இருப்பதைக் கண்டேன். அந்தத் தசை முன்னங்கையில் உள்ள ஒரு மெல்லிய தசையாகையால் அதை ஒருவர் உற்று நோக்கினால் இன்றி அதை கண்டறிய முடியாது. புரிந்துகொள்ளக் கடினமான குணாதிசயங்களைப் புரிந்து கொள்ளும் கலைஞராகிய மைக்கேல் ஏஞ்சலோ, மனிதர்களை உற்று நோக்கித் தனது சிற்பக் கலைகளைச் செதுக்குவார். அக்கலையுணர்வு அவருக்கே உரியதாகும். மைக்கேல் ஏஞ்சலோ கிரானைட்டுகளில் மனிதனின் உள்ளான ஆத்துமாவை வெளிப்படுத்துவதற்கு எடுத்த முயற்சி, முழுமையாக வெற்றி பெறவில்லை.
தேவன் ஒருவராலேயே மனிதனின் ஆழ்ந்த மனதின் உண்மைத்தன்மையை அறிய முடியும். எவ்வளவுதான் நாம் மனிதர்களை உற்று நோக்கினாலும், கவனித்தாலும், அவையெல்லாம் நிழலேயாகும். ஆனால் தேவன் நிழலுக்கு அப்பாற்பட்டதைப் பார்க்கிறார். அதைத்தான் தீர்க்கதரிசியாகிய எரேமியா "நீர் என்னை அறிந்திருக்கிறீர்", "என்னைக் காண்கிறீர்" எனக் குறிப்பிடுகிறார் (வ.12: 3). தேவனுடைய ஞானம் என்பது தத்துவம் சார்ந்தது அல்லது அறிவு சார்ந்ததோ அல்ல. அவர் நம்மை தூரத்தில் இருந்து கவனிப்பவர் அல்ல, அவர் நமது மனதின் உண்மையான நிலையைக் காண்கிறவராய் இருக்கிறார். நம்மாலேயே புரிந்து கொள்ளமுடியாத ஆழங்களையும் தேவன் அறிகிறவராயிருக்கிறார்.
நம்முடைய போராட்டங்கள் எதுவாயிருந்தாலும், நம்முடைய இதயங்களில் என்ன நடந்தாலும், தேவன் அதைக் காண்கிறார், அதை உண்மையிலேயே அறிந்திருக்கிறார்.
நாம் அந்நியர்கள்
புதிய மொழி, பள்ளிகள், பழக்கவழக்கங்கள், போக்குவரத்து மற்றும் வானிலை என்று புதிய நாட்டில் எல்லாமே மிகவும் வித்தியாசமாக இருந்தன. அவர்கள் எப்படி ஒத்துப்போவது என்று யோசித்தார்கள். அருகிலுள்ள தேவாலயத்தைச் சேர்ந்த மக்கள் ஒரு புதிய நாட்டில் அவர்களின் புதிய வாழ்க்கையில் அவர்களுக்கு உதவ முன்வந்தனர். பல்லவி, அந்த தம்பதியினரை உள்ளூர் உணவு சந்தைக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு என்ன இருக்கிறது, எப்படி பொருட்களை வாங்குவது என்பதைக் காட்டினார். அவர்கள் சந்தையில் சுற்றித் திரிந்தபோது, அவர்கள் தங்கள் தாயகத்திலிருந்து தங்களுக்குப் பிடித்த பழமான மாதுளைகளைப் பார்த்து, அவர்கள் கண்கள் விரிந்து, புன்னகைத்தனர். அவர்கள் ஒவ்வொறு குழந்தைகக்கும் ஒன்று வாங்கி, நன்றியுடன் பல்லவியின் கைகளிலும் ஒன்றைக் கொடுத்தனர். சிறிய பழங்களும் புதிய நண்பர்களும் அவர்களின் விசித்திரமான, புதிய நாட்டில் பெரிய ஆறுதலைக் கொடுத்தது.
தேவன், மோசேயின் மூலம், தம் ஜனங்களுக்கான நியாயப்பிரமாணத்தை கொடுத்தார், அதில் அந்நியனைச் சுதேசிபோல எண்ணுவதற்கான கட்டளையும் அடங்கும் (லேவியராகமம் 19:34). "நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக" என்று தேவன் மேலும் கட்டளையிட்டார். தேவனிடம் அன்பு கூருதலுக்குப் பிறகு, இயேசு இதை இரண்டாவது பெரிய கட்டளை என்று அழைத்தார் (மத்தேயு 22:39). ஏனெனில், "பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்" (சங்கீதம் 146:9).
தேவனுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர, புதிய நண்பர்கள் நம் நாட்டின் வாழ்க்கைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள அவர்களுக்கு உதவுகையில், நாமும் "பூமியில் அந்நியர்கள்" (எபிரெயர் 11:13) என்பதன் உண்மையான அர்த்தத்தை நினைவூட்டிக் கொள்ளலாம். மேலும் வரவிருக்கும் புதிய பரலோக தேசத்தின் எதிர்பார்ப்பில் நாம் வளருவோம்.
தாழ குனிதல்
தனது சிறிய மிதிவண்டியை, தனது சிறிய கால்களால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு வேகமாய் மிதித்து, ஓட்டிக்கொண்டிருந்த தன்னுடைய மகளை அந்த இளம் தாய் பின்தொடர்ந்தாள். ஆனால் அவள் நினைத்த வேகத்தை விட அதிக வேகமெடுக்கவே, கட்டுப்பாடின்றி மிதிவண்டியிலிருந்து கீழே விழுந்த சிறுமி, தனது கணுக்காலில் காயம் பட்டதென்று அழுதாள். அவள் தாயோ அமைதியாய் அவளருகே மண்டியிட்டு, தாழக் குனிந்து, கணுக்காலில் முத்தமிட்டாள் (வலி சரியாகிவிடுமாம்!). ஆச்சரியம்! அந்த சிறுமி குதித்தெழுந்து, மிதிவண்டியில் ஏறி மீண்டும் ஓட்ட ஆரம்பித்தாள். நமது வலிகளும்கூட இப்படி இலகுவாய் மாறினால் எவ்வளவு நலமாயிருக்கும்!
அப்போஸ்தலன் பவுல் தனது தொடர்ச்சியான உபத்திரவங்களின் மத்தியில் தேவனுடைய ஆறுதலை அனுபவித்ததால், அவரால் தொடர்ந்து முன்னேற முடிந்தது. 2 கொரிந்தியர் 11:23–29 இல், அவர் சந்தித்த உபத்திரவங்களில் சிலவற்றைப் பட்டியலிடுகிறார்: அடிகள், கசையடிகள், கல்லெறியப்படுதல், தூக்கமின்மை, பட்டினி, சபைகளைக் குறித்த கவலை. அவர் தேவன், "இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறார்" (1:3) என்பதை மிகநெருக்கமாக அறிந்துகொண்டார். இதையே மற்றுமொரு மொழிபெயர்ப்பு, "தேவன், மென்மையான அன்பைத் தரும் தகப்பன்' என்கிறது. அந்த தாய் தன் குழந்தையை தேற்றியதுபோல; தேவனும் நமது வேதனையின் மத்தியில் தாமே கீழே குனிந்து மென்மையாய் நம்மைப் பராமரிக்கிறார்.
தேவன் அன்பாய் தேற்றுகிற வழிமுறைகள் பலவாயும், வித்தியாசமானதுமாய் உள்ளன. நாம் தொடர்ந்து முன்னேற தமது வசனத்தின்மூலம் நம்மை ஊக்குவிப்பார் . நண்பர்கள் மூலமோ, யாராகிலும் மூலமோ நம்மோடு விசேஷித்தவிதமாக பேசி, நமது ஆவிக்கு ஆறுதலளிப்பார். நமது உபத்திரவங்கள் ஓயாததுதான், ஆனால் தேவன் கீழே குனிந்து நமக்கு உதவுவதால், நாம் மீண்டும் எழுந்து, ஓட துவங்கலாம்.
ஆக்கப்பூர்வமான விசுவாசம்
2021 ஜூன் மாதம், மாலை நேரத்தில் ஒரு சமூகத்தில் சூறாவளி புயல் வீசியது. அது அங்கிருந்த ஒரு குடும்பத்தினரின் கொட்டகையை அழித்தது. அது 1800ஆம் ஆண்டிலிருந்து அவர்களின் குடும்ப சொத்தாக இருந்ததினால், அதின் அழிவு அவர்களுக்கு சோகத்தை வருவித்தது. ஜானும் அவருடைய மனைவியும் அடுத்த நாள் காலை தேவாலயத்திற்குச் செல்லும் வழியில், காரில் சென்றுகொண்டிருந்தபோது, அவர்கள் அந்த சேதத்தைப் பார்த்து, எப்படி அவர்களுக்கு உதவ முன்வரலாம் என்று யோசித்தனர். ஏற்பட்டிருக்கிற அந்த சேதாரத்திலிருந்து முதலில் அவைகள் சுத்தம்செய்யப்பட வேண்டும் என்பதை உணர்ந்தனர். உடனே தங்கள் காரை ஒரு ஓரமாய் நிறுத்திவிட்டு, உடை மாற்றிக்கொண்டு, புயல் காற்றின் மூலமாய் அந்த வீட்டில் ஏற்பட்ட சேதாராத்தை சுத்தம் செய்ய துவங்கினர். அந்த குடும்பத்தினருக்கு உதவிசெய்ததின் மூலம், அவர்களுடைய விசுவாசத்தை ஆக்கபூர்வமான விசுவாசமாய் மாற்றினர்.
“கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது” (யாக்கோபு 2:26) என்று யாக்கோபு சொல்லுகிறார். அதற்கு ஆபிரகாமின் உதாரணத்தை காண்பிக்கிறார். அவர் எங்கு செல்கிறார் என்று தெரியாதபோது கீழ்ப்படிதலுடன் தேவனைப் பின்தொடர்ந்தார் (வச. 23; பார்க்க ஆதியாகமம் 12:1-4; 15:6; எபிரெயர் 11:8). எரிகோ பட்டணத்தை வேவு பார்க்க வந்த வேவுக்காரர்களை தன் வீட்டில் மறைத்து வைத்து, இஸ்ரவேல் தேவன் மீது தனக்கிருந்த விசுவாசத்தை வெளிப்படுத்திய ராகாபையும் யாக்கோபு உதாரணப்படுத்துகிறார் (யாக்கோபு 2:25; பார்க்க, யோசுவா 2; 6:17).
“ஒருவன் தனக்கு விசவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன?” (யாக்கோபு 2:14). “விசுவாசமே வேர், நற்கிரியைகளே பலன்; இரண்டும் நம்மிடம் இருக்கும்படிக்கு நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று மேத்யூ ஹென்றி குறிப்பிடுகிறார். நம்முடைய நற்கிரியைகள் தேவனுக்கு தேவையில்லை; ஆனால் நம்முடைய விசுவாசம் நற்கிரியைகளின் மூலமாகவே நிரூபிக்கப்படுகிறது.
தேவனை நேசித்து சார்ந்து கொள்ளுதல்
சுனில், வேடிக்கையான, புத்திசாலித்தனமான, எல்லோராலும் விரும்பப்படத்தக்கவன். ஆனால் அவன் மனவிரக்தியில் இருந்தது யாருக்கும் தெரியாமற்போயிற்று. அவன் தன்னுடைய 15ஆம் வயதில் தற்கொலை செய்துகொண்ட பின்னர், அவனுடைய தாயாராகிய பிரதீபா, “நாம் அதிகம் விரும்பும் ஒருவர் இப்படிச் செய்ததை கிரகிப்பது மிகவும் கடினமாயிருக்கிறது. சுனில்... அந்தத் தவறான முடிவிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளவில்லை” என்று கூறுகிறார். பிரதீபா, பல நாட்கள் தனிமையில் தன்னுடைய வேதனையை தேவனிடத்தில் ஊற்றியிருக்கிறாள். தன்னுடைய மகனுடைய தற்கொலைக்குப் பின்னர், “ஒரு வித்தியாசமான துயரத்தை நான் அனுபவித்தேன்” என்று சொல்லுகிறாள். ஆனால், அவளும் அவள் குடும்பத்தினரும், அந்த மீளா துயரத்தின் மத்தியிலும், தேவனை சார்ந்து கொள்வது எப்படி என்று கற்றுக்கொண்டனர். தற்போது, மனச்சோர்வுக்குள்ளாகும் நபர்களைத் தேடி அவர்களை நேசிக்கவும், அதிலிருந்து அவர்களை மீட்கவும் உதவுகின்றனர்.
“நேசித்து சார்ந்து கொள்” என்பதே பிரதீபாவின் இலட்சியமாகும். இதே கருத்தை, பழைய ஏற்பாட்டில், ரூத்தின் சரித்திரம் எடுத்துரைக்கிறது. நகோமி தன்னுடைய கணவனையும் இரண்டு குமாரர்களையும் இழந்து நிற்கதியாய் நின்றாள். அவள் குமாரனில் ஒருவனைத்தான் ரூத் மணந்திருந்தாள் (ரூத் 1:3-5). கசப்பானவளாய் விரக்தியிலிருந்த நகோமி, ரூத்தை அவளுடைய இனத்தாரிடத்திற்கு திரும்பிப் போய் சுகமாயிருக்கும்படி. கேட்டுக்கொண்டாள். தன் கணவனை இழந்த விரக்தியிலிருந்த ரூத்தோ, தன் மாமியாரை விடாமல் பற்றிக்கொண்டு, அவளைப் பராமரித்தாள் (வச. 14-17). இருவரும் நகோமியின் சொந்த ஊரான பெத்லெகேமுக்கு வந்தனர். ரூத்துக்கு அது அந்நிய தேசமாயிருந்தது. ஆனால் அவர்கள் ஒருவரோடொருவர் அன்பாயிருந்து, தேவனை சார்ந்திருந்தனர், தேவன் அவர்களின் தேவையை சந்தித்தார் (2:11-12).
நம்முடைய துயரங்களில், தேவனுடைய அன்பு நமக்கு நிலையானதாக இருக்கிறது. நாம் எப்போதும் தேவனை சார்ந்து கொள்ள அவர் நம்மோடிருக்கிறார். தேவன் மற்றவர்களை தேற்றவும் நம்மை பெலப்படுத்துவார்.
பிழைத்து வளர்கிறது
ஒரு ஆங்கில அனிமேஷன் திரைப்படம் ஒன்றில், ஒரு குகை மனிதன் குடும்பம், “ஒன்றாக இருந்தால் மட்டுமே உயிர்வாழ்வதற்கான ஒரே வழி” என்று நம்புகிறது. அவர்கள் உலகத்தைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் பயப்படுகிறார்கள். எனவே அவர்கள் வாழ பாதுகாப்பான இடத்தைத் தேடும்போது அவர்கள் தேர்ந்தெடுத்த இடத்தில் ஏற்கனவே ஒரு விசித்திரமான குடும்பத்தைக் கண்டுபிடித்த பிறகு அவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் விரைவில் தங்கள் புதிய உறவினரின் வேறுபாடுகளைத் தழுவிக்கொள்ளவும், அவர்களிடமிருந்து வலிமையைப் பெறவும், ஒன்றாக வாழவும் கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் அந்த உறவில் மகிழ்ச்சியடைகிறார்கள் என்பதும், வாழ்க்கையை முழுமையாய் வாழுவதற்கு மற்றவர்களும் தேவை என்பதை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள்.
நல்ல உறவில் இருப்பது ஆபத்தானது. மக்கள் நம்மை அவ்வப்போது காயப்படுத்தலாம். ஆயினும்கூட, நல்ல நோக்கத்திற்காய், தேவன் தம் மக்களை திருச்சபை என்னும் ஒரே சரீரமாய் ஏற்படுத்துகிறார். மற்றவர்களுடன் ஐக்கியம் கொள்வதில், நாம் முதிர்ச்சி அடைகிறோம் (எபேசியர் 4:13). தாழ்மை, சாந்தம் மற்றும் பொறுமை (வச. 2) ஆகிய நற்குணங்களுக்காய் அவரை சார்ந்திருக்கிறோம். நாம் ஒருவரையொருவர் “அன்பில்” கட்டியெழுப்புவதன் மூலம் ஒருவருக்கொருவர் உதவுகிறோம் (வச. 16). நாம் ஒன்று கூடும்போது, நம்முடைய தாலந்துகளைப் பயன்படுத்துகிறோம்; மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறோம். இது தேவனுடன் நடக்கவும், அவருக்காக சேவை செய்யவும் நம்மை ஊக்கப்படுத்துகிறது.
அவர் உங்களை நடத்துகையில், தேவ ஜனத்தின் மத்தியில் உங்களுடைய இடத்தை இன்னும் நீங்கள் கண்டுபிடியாதிருப்பீர்கள் என்றால், அதை கண்டுபிடியுங்கள். சாதாரணமாய் வாழ்வதை விடுத்து, பகிரப்பட்ட அன்பில் நீங்கள் தேவனுக்கு கனத்தை கொடுப்பீர்கள். மேலும் இயேசுவைப் போல மாறுவீர்கள். இயேசுவுடனும் மற்றவர்களுடனும் வளர்ந்து வரும் உறவின் மூலம் நாம் அனைவரும் அவரைச் சார்ந்து ஜீவிப்போம்.
மற்றவர்களுடன் நடப்பது
பில்லி, ஒரு அன்பான மற்றும் விசுவாசமான நாய். 2020 இல் இணையதள நட்சத்திரமாக மாறியது. அதின் உரிமையாளர் ரஸ்சல் கணுக்கால் உடைந்து, ஊன்றுகோலைப் பயன்படுத்தி நடந்துகொண்டிருந்தார். பில்லியும் அதின் உரிமையாளருடன் நடக்கும்போது நொண்டி நடக்க தொடங்கியது. கவலையடைந்த ரஸ்சல், பில்லியை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அவர் நாய்க்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர் கூறினார்! அது தானாக நடக்கும்போது நன்றாகவே நடக்கிறது. அது தன் உரிமையாளருடன் நடக்கும்போது மட்டும் போலியாக நொண்டுகிறது என்று கண்டறிந்தனர். இதைத்தான் மற்றவர்களுடைய வலியை உணருவது என்று நாம் அழைக்கிறோம்.
ரோம திருச்சபைக்கு பவுல் அப்போஸ்தலரின் ஆலோசனைகள் முன்னிலைப்படுத்தப்படுகிறது. பத்துக் கட்டளைகளில், கடைசி ஐந்து கட்டளைகளை அவர் சுருக்கிக் கூறுகிறார்: “உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” (ரோமர் 13:9). 8ஆம் வசனத்திலும் மற்றவர்களுடன் நடப்பதன் முக்கியத்துவத்தை நாம் பார்க்கலாம்: “ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்.”
எழுத்தாளர் ஜென்னி ஆல்பர்ஸ் அறிவுரை கூறுகிறார்: “ஒருவர் உடைந்திருக்கும்போது, அவர்களை சரிசெய்ய முயற்சிக்காதீர்கள் (அது உங்களால் முடியாது). யாராவது வேதனையிலிருக்கும்போது, அவர்களின் வலியைப் போக்க முயற்சிக்காதீர்கள் (அது உங்களால் முடியாது). மாறாக, அவர்களுடைய வலியில் அவர்களை நேசித்து, அவர்களோடு சேர்ந்து நடக்க முயற்சியுங்கள் (அது உங்களால் முடியும்). ஏனெனில் சில சமயங்களில், அவர்கள் தனியாக இல்லை என்பதை உணர்த்துவதே மக்களுக்கு அவசியமான ஒன்று.”
நம்முடைய இரட்சகராகிய இயேசு, நம்முடைய காயங்கள் மற்றும் வேதனைகளில் நம்மோடு நடப்பதால், மற்றவர்களுடன் நடப்பது என்றால் என்ன என்பதை நம்மால் அறியமுடியும்.