ஊடுருவும் தைலமரம்
நீலகிரி மலைகளில் ஏறும் போது யூகலிப்டஸ் தைல மரங்களின் இனிமையான வாசனை உங்கள் உணர்வுகளை நிரப்புகிறது. ஆனால் தைல மரம் இந்த மலைகளுக்குச் சொந்தமானது அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆங்கிலேய வணிகர்களுக்கு கோடைக்காலத்தைத் தாங்கக்கூடியதாக மாற்றுவதற்காகக் காலனித்துவ காலத்தில் பயிரிடப்பட்ட ஒரு ஆக்கிரமிப்பு இனமாகும். அப்பாவித்தனமாய் தோன்றும் ஒரு செயல் இப்போது சூழலியலில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்துகிறது, ஏனெனில் விலங்குகள் அதன் விஷ இலைகளைச் சாப்பிட முடியாது. உணவு தேடி வயல்கள் மற்றும் பயிர்களை இவை தாக்குகின்றன, இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் இவற்றைத் திருப்பி தாக்குகின்றனர். பூர்வீக வகை தாவரங்களை மீண்டும் அறிமுகப்படுத்த இப்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், முந்தைய தவறுகள் இன்னும் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
கலாத்திய சபைக்கு நிருபம் எழுதியவர், மாம்ச இச்சையைத் திருப்திப்படுத்துவதற்கு எதிராக அவர்களை எச்சரிக்கிறார் (வ.16). விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் (வ.19-21) போன்றவை மாம்ச இச்சைகள் என்று அவர் வரையறுக்கிறார். ஒரு ஆக்கிரமிப்பு இனத்தைப் போலவே, இந்த வெளித்தோற்றத்தில் பாதிப்பில்லாத பாவங்கள் வேரூன்றி, இறுதியில் நமக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். எனினும், நாம் "ஆவிக்கேற்றபடி" நடந்துகொண்டால் மேற்கொள்ள முடியும் என்று அவர் நமக்கு உறுதியளிக்கிறார் (வ.17). அப்போது நாம் அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகிய கனிகளைக் கொடுப்போம் (வ.22-23).
பாவத்தின் ஆக்கிரமிப்பு விளைவுகளை நீங்கள் எதிர்கொள்ளும்போது, நமக்கு நம்பிக்கை உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். இயேசு நமக்காக அனுப்பிய ஆவியானவர், சரியான பாதையில் நடக்க நமக்கு உதவ வல்லவர் (2 கொரிந்தியர் 5:5). மாம்சமும் ஆவியும் எப்போதும் முரண்படுவதால் முதலில் கடினமாக இருக்கலாம் (வ.17), ஆனால் இயேசுவில் நாம் பாவத்தின் ஆக்கிரமிப்பை மேற்கொள்ள முடியும்.
தேவனின் வாழ்க்கையை மாற்றும் பரிசு
நானும் எனது கணவரும் எங்களது இளைஞர் குழுவினரை பாராட்டி அவர்களுக்கு வேதாகமங்களை பரிசளித்தோம். “உங்கள் வாழ்க்கையை மாற்ற கடவுள் இந்த விலைமதிப்பற்ற பரிசுகளைப் பயன்படுத்துவார்” என்று நான் அவர்களுக்குச் சொன்னேன். அன்றிரவு, ஒரு சில மாணவர்கள் யோவானின் சுவிசேஷத்தை ஒன்றாக வாசிக்க தீர்மானித்தனர். எங்கள் வாராந்திர கூட்டங்களில் நாங்கள் அவர்களுக்குக் கற்பித்தபோது, வீட்டில் வேதத்தை வாசிக்க குழுவை தொடர்ந்து உற்சாகப்படுத்தினோம். பத்து ஆண்டுகள் கழித்து, எங்கள் மாணவர் ஒருவரை நான் சந்திக்க நேரிட்டது. அவள் என்னிடத்தில் “நீங்கள் கொடுத்த பைபிளை நான் இன்னும் பயன்படுத்துகிறேன்,” என்று சொன்னாள். அவளுடைய நம்பிக்கை நிரம்பிய வாழ்க்கையில் நான் ஆதாரங்களைக் கண்டேன்.
வேதத்தின் வசனங்களைப் படிக்கவும், நினைவில் வைத்துக்கொள்ளவும் தேவன் தம் ஜனத்திற்கு அதிகாரம் கொடுக்கிறார். வேதவாக்கியங்களின்படி (சங்கீதம் 119:9) வாழ்வதன் மூலம் தூய்மையின் பாதையில் இருக்க அவர் நமக்கு உதவுகிறார். பாவத்திலிருந்து நம்மை விடுவிக்கவும், நம்மை மாற்றவும் அவர் தம் மாறாத சத்தியங்களைப் பயன்படுத்தும்போது, நாம் அவரைத் தேடிக் கீழ்ப்படிய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் (வச. 10-11). தேவனை அறிந்துகொள்ளவும், வேதாகமத்தில் அவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவும்படி தினமும் தேவனிடத்தில் விண்ணப்பிக்க பிரயாசப்படுவோம் (வச. 12-13).
தேவனுடைய வழியில் வாழ்வதன் விலைமதிப்பற்ற மதிப்பை நாம் அடையாளம் காணும்போது, ஒருவன் “திரளான செல்வத்தில் களிகூருவதுபோல” (வச. 14-15) அவருடைய ஆலோசனையில் நாம் மகிழ்ச்சியடைய முடியும். சங்கீதக்காரனைப் போலவே நாமும் “உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்” (வச. 16) என்று பாடலாம். நம்மை பலப்படுத்த பரிசுத்த ஆவியானவரை நாம் அழைக்கும்போது, தேவன் நம்முயை வாழ்க்கை மாற்றும் பரிசாக நமக்குக் கொடுத்திருக்கிற வேதத்தை ஜெபத்துடன் வாசிக்கும் ஒவ்வொரு கணத்தையும் நாம் அனுபவிக்க முடியும்.

ஒரு தேசிய முகாமிடல்
ஆண்ட்ரூ கார்டு, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தலைமை அதிகாரியாக இருந்தார். வெள்ளை மாளிகையில் அவரது பங்கு பற்றிய ஒரு நேர்காணலில் அவர் விளக்கினார். “ஒவ்வொரு பணியாளரின் அலுவலகத்திலும், 'நாங்கள் ஜனாதிபதியின் விருப்பப்படி சேவை செய்கிறோம்” என்று ஒரு வடிவமைக்கப்பட்ட நோக்க அறிக்கை தொங்குகிறது. ஆனால் நாங்கள் ஜனாதிபதியை மகிழ்விக்கவோ அல்லது அவருடைய மகிழ்ச்சியை வெல்லவோ சேவை செய்யவில்லை; மாறாக, அவருடைய வேலையைச் செய்ய அவர் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை அவருக்கு சொல்ல நாங்கள் சேவை செய்கிறோம்.” அந்த வேலை, அமெரிக்காவை நேர்த்தியாய் ஆட்சி செய்வதாகும்.
அப்போஸ்தலனாகிய பவுல் அடிக்கடி வற்புறுத்தியபடி, நாம் பல வேளைகளில் ஒருவரையொருவர் ஒற்றுமையில் கட்டியெழுப்புவதை விடுத்து, மனிதர்களை பிரியப்படுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். எபேசியர் 4இல் பவுல், “சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்” (வச. 11-13) என்று சொல்லுகிறார். 15-16 வசனங்களில், மக்களை பிரியப்படுத்த முயற்சிக்கும் செய்கையை விட்டுவிடும்படிக்கு அறிவுறுத்தி, “அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு” செயல்பட்டால், “அது அன்பினாலே தனக்குப் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது” என்று வலியுறுத்துகிறார்.
இயேசுவின் விசுவாசிகளாக, நாம் மக்களைக் கட்டியெழுப்பவும் தேவனுடைய நோக்கங்களை நிறைவேற்றவும் ஊழியம் செய்கிறோம். நாம் மற்றவர்களைப் பிரியப்படுத்தினாலும் இல்லாவிட்டாலும், அவருடைய திருச்சபையில் ஒற்றுமையை உருவாக்க அவர் நம் மூலம் செயல்படும்போது நாம் தேவனை பிரியப்படுத்துவோம்.

மீன் வாசனை பானை
வீட்டில் மீன் குழம்பு செய்ய மட்டுமே பயன்படுத்தும் மண் பானை உள்ளது. அது மற்ற பானைகளிலிருந்து வித்தியாசமாகத் தெரியாது. நாங்கள் அதில் மீன் சமைக்க ஆரம்பிக்கும் முன் அது எந்த வகையிலும் தனித்துவமானதாக இல்லை. இருப்பினும், இப்போது வேறு எந்த உணவையும் தயாரிப்பதற்கு அதனைப் பயன்படுத்த முடியாது, ஏனென்றால் அதில் நாம் எதைச் சமைத்தாலும் அதில் கொஞ்சம் "மீன்" வாசம் இருக்கும். ஆயினும்கூட, இது நீர்வாழ் உயிர் உணவுகளுக்கான எங்களுடைய பிரேத்யேகமான பானையாகும், ஏனென்றால் ஒவ்வொரு முறையும் அதில் சமைக்கும்போது, குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபத்தில், நாம் வீட்டில் பயன்படுத்தும் வெவ்வேறு பானைகளைப் பற்றிப் பேசுகிறார். சில பாத்திரங்கள் "கனத்திற்கு" என்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன, சில "கனவீனத்திற்குமானவை" (வ.20) என்று அவர் விளக்குகிறார். பின்னர், பவுல் தேவஜனங்களுக்கு ஒப்பாக இதனைப் பயன்படுத்துகிறார் (வ.14). தேவஜனங்கள் விசேஷித்த நோக்கங்களுக்காகப் பிரித்தெடுக்கப்பட்டுள்ளனர், எனவே அவர்கள் எந்த நற்கிரியையும் செய்ய "எஜமானுக்கு உபயோகமானதாக" (வ.21)இருக்க முடியும் என்று அவர்களுக்குத் தொடர்ந்து நினைப்பூட்டுமாறு (வ.14) தீமோத்தேயுவிடம் கூறுகிறார். இப்போது அவர் அவர்களை விசேஷித்தவர்களாக்கியதால், அவர்கள் சண்டையிடுதல், அவபக்தியான பேச்சு, தீய இச்சைகள் மற்றும் புத்தியீனமான வாக்குவாதங்களிலிருந்து விலகி வாழ அழைக்கப்பட்டனர் (வ.14-24). அவர்கள் "நீதி, விசுவாசம், அன்பு மற்றும் சமாதானத்தை அடையவும்" மற்றும் "எல்லாரிடத்திலும் சாந்தமாகவும்" (வ.21-22) தேவனால் அங்கீகரிக்கப்பட்டவர்களாகப் பிரித்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
பவுலின் செய்தி நமக்கும் பொருந்தும். கிறிஸ்துவின் நாமத்தை அறிக்கையிடும் நாம் அவரால் அறியப்பட்டும் தெரிந்துகொள்ளப்பட்டும் இருக்கிறோம் (வ.19). நாம் இயேசுவை விசுவாசிக்கும்போது, நாம் ஒவ்வொருவரும் தேவனின் பயன்பாட்டிற்காகப் பிரித்தெடுக்கப்பட்ட ஒரு விசேஷித்த பாத்திரமாக மாறுகிறோம். தேவனின் சுபாவத்தைப் பிரதிபலிக்காத விஷயங்களை நாமும் கைவிட வேண்டும் என்பதே இதன் பொருள் (வ.19). அதற்குப் பதிலாக, நாம் “எஜமானுக்கு உபயோகமானதாக” இருக்கும் பொருட்டு, தேவன் விரும்புவதைச் செய்வதற்கு நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும். நமது எஜமான் பயன்படுத்தக்கூடிய மண்பாண்டங்களாக இருப்போம் (1 கொரிந்தியர் 4:7).
