
பயன்பாட்டிற்கு உதவாத சிறு கயிறுகள்
மார்கரெட் அத்தையின் சிக்கன சுபாவம் மிகவும் புகழ்பெற்றது. அவருடைய மரணத்திற்கு பின்னர், அவருடைய மருமகள் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை சீரமைக்கும் சலிப்பான வேலையை தொடங்கினாள். மேசையில் ஒரு டிராயரில் இருந்த பிளாஸ்டிக் பை ஒன்றில் வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிறு கயிறுகள் தென்பட்டது. அந்த பிளாஸ்டிக் பையின் மீது ஒட்டியிருந்த லேபிளில், “பயன்படுத்த முடியாத அளவிற்கு சிறிய கயிறுகள்” என்று எழுதப்பட்டிருந்தது.
பயன்படுத்த முடியாத ஒன்றை சேகரித்து வைக்கும்படிக்கு ஒருவரை எது ஊக்கப்படுத்தியது? ஒருவேளை, இந்த நபர் தன்னுடைய வாழ்க்கையில் பற்றாக்குறையை அதிகமாய் அனுபவித்த நபராய் இருந்திருக்கலாம்.
இஸ்ரவேலர்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியேறியபோது, அவர்கள் பாடுகள் நிறைந்த வாழ்க்கையை விட்டு புறப்பட்டனர். ஆனால் அவர்கள் விரைவிலேயே தங்கள் பாதையில் கிரியை செய்த தேவனுடைய அற்புதக் கரத்தை மறந்து, ஆகாரத்திற்காய் முறுமுறுக்கத் துவங்கினர்.
தேவன் அவர்கள் தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று விரும்பினார். அவர்களுடைய வனாந்திர வாழ்க்கையில் அவர்களுக்கு வானத்து மன்னாவை புசிக்கக்கொடுத்து, அதை “ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்” (யாத்திராகமம் 16:4) என்று மோசே மூலம் கட்டளையிடுகிறார். ஆனால் ஓய்வு நாளில் மன்னா கொடுக்கப்படாது என்பதினால், ஓய்வுநாளுக்கு முந்தின நாளான ஆறாம் நாளில் மக்கள் இரட்டிப்பாய் சேகரித்துக்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டனர் (வச. 5,25). சில இஸ்ரவேலர்கள் அதற்கு கீழ்ப்படிந்தனர். சிலர் கீழ்ப்படியாமல் விளைவை சந்தித்தனர் (வச. 27-28).
தாராளமாய் கிடைக்கும் தருணங்களில், பற்றாக்குறையை மனதில் வைத்து பொருட்களை எடுத்து பதுக்கி வைக்க நாம் தூண்டப்படுவது இயல்பு. அனைத்தையும் நம் கைகளில் எடுப்பது அவசியமில்லை. “பயன்படாத சிறிய கயிறு துண்டுகளையோ” மற்ற பொருட்களையோ நாம் பதுக்கி வைக்கவேண்டிய அவசியமில்லை. “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரெயர் 13:5) என்று நமக்கு வாக்குபண்ணியிருக்கிற தேவன் மீது நம்முடைய விசுவாசத்தை வைப்போம்.

இயேசுவைப் போல் நேசித்தல்
ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் ஒரு ரயில் நிலையத்தில் நேர்த்தியாய் உடையணிந்த ஒரு இளைஞன், ஒரு இருக்கையில் அமர்ந்து ரயிலுக்காகக் காத்திருந்தான். அவன் டை கட்டுவதில் சிரமப்பட்டபோது, ஒரு வயதான பெண்மணி தன் கணவரிடம் அவனுக்கு உதவிசெய்யும்படிக்கு கேட்டுக்கொண்டார். அந்த முதியவர் குனிந்து அந்த இளைஞனுக்கு டை முடிச்சு போடுவது எப்படி என்று கற்றுக்கொடுக்க ஆரம்பித்தபோது, யாரோ ஒருவன் மூவரையும் புகைப்படம் எடுத்தான். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலானபோது, அதைப் பார்த்த பலர் பலன் எதிர்பாராமல் உதவிசெய்வதின் முக்கியத்துவத்தைக் குறித்த தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டனர்.
மற்றவர்களுக்கு இரக்கம் காண்பித்தல் என்பது கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில், இயேசு நமக்கு செய்த தியாகமான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. இது தேவனுடைய அன்பின் பிரதிபலிப்பு. மேலும் “நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே” இயேசு சீஷர்களிடம் விரும்பிய ஒரு காரியம். சகோதரனையோ சகோதரியையோ வெறுப்பதை கொலைபாதகத்திற்கு யோவான் சமமாக்குகிறார் (வச. 15). பின்பு இயேசுவையே அன்பின் கிரியைகளுக்கு அவர் மாதிரியாக்குகிறார் (வச. 16).
தன்னலமற்ற அன்பை நிரூபிக்க அதிகப்படியான தியாகத்தை செய்திருக்கவேண்டிய அவசியமில்லை. மாறாக, தேவ சாயலில் படைக்கப்பட்ட சக மனிதனுடைய தேவையை நம்முடைய தேவைக்கு மேலாக வைப்பதே தன்னலமற்ற அன்பாகும். மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யும் வாய்ப்பு கிட்டும் சில முக்கியமான தருணங்களில் தன்னலமற்ற அன்பை பிரதிபலிக்கக்கூடும். நம்முடைய சுகமான சுயநல வட்டத்தை விட்டு வெளியேறி, நாம் செய்ய வேண்டிய அவசியமாய் தெரியாத உதவிகளையும் மற்றவர்களுக்கு செய்யும்போது, நாம் அவர்களை இயேசு நேசிப்பதுபோல் நேசிக்கத் துவங்குகிறோம் என்று அர்த்தம்.

மன்னிப்பின் வல்லமை
ஒரு நாசக்கார கும்பலால் கடத்தப்பட்ட பதினேழு மிஷனரிகளைப் பற்றி 2021ஆம் செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. அவர்களுடைய மீட்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அந்தக் குழுவை (குழந்தைகள் உட்பட) கொலை செய்துவிடுவதாக அந்த கும்பல் மிரட்டியது. ஆனால் ஆச்சரியமான வகையில், பிணையக் கைதிகளாய் சிக்கியிருந்த அனைத்து மிஷனரிகளும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடத்தை வந்து சேர்ந்த மாத்திரத்தில், அவர்களை சிறைபிடித்தவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பினர்: “அன்பின் மன்னிக்கும் சக்தியானது, வன்முறையின் வெறுப்பின் சக்தியைக் காட்டிலும் வலிமைவாய்ந்தது என்பதை இயேசு வார்த்தையின் மூலமாகவும் அவருடைய வாழ்க்கையின் மூலமாகவும் எங்களுக்குக் கற்பித்திருக்கிறார். எனவே, நாங்கள் உங்களை மனப்பூர்வமாய் மன்னிக்கிறோம்” என்பதே அந்த செய்தி.
மன்னிப்பு சக்தி வாய்ந்தது என்பதை இயேசு தெளிவுபடுத்தியுள்ளார். அவர் “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்” (மத்தேயு 6:14) என்று கூறுகிறார். பின்பாக, எத்தனை முறை மன்னிக்கவேண்டும் என்னும் பேதுருவின் கேள்விக்கு இயேசு பதிலளிக்கும்போது, “ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்” (18:22) என்று இயேசு சொல்லுகிறார். மேலும் சிலுவையில், “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34) என்று தெய்வீக மன்னிப்பை இயேசு வெளிப்படுத்திக் காண்பித்தார்.
இருதரப்பினரும் மனப்பூர்வமாய் காயமாற்றப்பட்டு, ஒப்புரவாகும்போதே மன்னிப்பானது முழுமையடைகிறது. நம்மை பாதிப்படையச் செய்த செயல்களை நினைவிலிருந்து அகற்றி, மற்றவர்களை காயப்படுத்தாமல் உறவுகளை எவ்விதம் பேணவேண்டும் என்பதைக் குறித்த பகுத்தறிவை பெறுவது என்பது தேவனுடைய அன்பையும் வல்லமையையும் பிரதிபலிக்கும் ஆதாரங்களாய் வாழக்;கையை மாற்றும். தேவநாம மகிமைக்காய், மற்றவர்களை மன்னிக்கும் வழிகளை ஆராய்வோம்.

படைப்பைக் கண்டறிதல்
யூரேசிய நாடான ஜார்ஜியாவில் உள்ள க்ருபேரா-வோரோன்ஜா என்ற குகையானது பூமியில் இதுவரை ஆராயப்பட்ட ஆழமான குகைகளில் ஒன்றாகும். ஆய்வாளர்கள் குழுவானது அதின் செங்குத்து குகைகளின் பயமுறுத்தும் ஆழத்தை 2,197 மீட்டர் வரை ஆய்வு செய்துள்ளது. அதாவது, பூமிக்குள் 7,208 அடி வரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ இதே போன்று நானூறு குகைகள் நாட்டின் பிற பகுதிகளிலும், உலகம் முழுமையிலும் இருக்கின்றன. அவைகள் எல்லாவற்றிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு, புதிய கண்டெடுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
படைப்பின் ஆச்சரியங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் கண்டெடுக்கப்பட, நாம் வாழும் பூமியைக் குறித்த நம்முடைய புரிதலை வலுவாக்குவதோடு, தேவனுடைய கரத்தின் அற்புதமான கிரியைகளைக் கண்டு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது (ஆதியாகமம் 1:26-28). சங்கீதக்காரன் நம் அனைவரையும் தேவனின் மகத்துவத்தை “கெம்பீரமாய்ப் பாடி” சங்கீர்த்தனம் பண்ணுவதற்கு அழைப்பு விடுக்கிறார் (வச. 1). நாளை புவி தினத்தை கொண்டாடும் வேளையில், தேவனின் ஆச்சரியமான படைப்பைக் குறித்து தியானிப்போம். படைப்பின் ஆச்சரியங்கள் அனைத்தையும் நாம் கண்டுபிடித்துவிட்டோமோ இல்லையோ, அவைகள் அனைத்தையும் ஆதாரமாய் வைத்து அவருக்கு முன்பாக தலைவணங்கி ஆராதிப்போம் (வச. 6).
அவர் தனது படைப்பின் பரந்த, பூகோள இடங்களை மட்டும் அறியவில்லை. நம் இருதயத்தின் ஆழத்தையும் அவர் அறிந்திருக்கிறார். ஜார்ஜியாவின் குகைகளைப் போலல்லாமல், வாழ்க்கையின் இருள் சூழ்ந்த ஆழமான பள்ளத்தாக்குகளை கடந்து செல்வோம். அதுபோன்ற தருணங்களில் தேவன் நம்முடைய பயணத்தை மென்மையாகவும் உறுதியாகவும் பராமரிக்கிறார் என்பதை அறிவோம். சங்கீதக்காரனுடைய வார்த்தைகளின் படி, “நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே” (வச. 7) என்பதை மறந்துவிடவேண்டாம்.
