எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

லேஸ்லி ஹோகட்டுரைகள்

சிறிய வழிகளில்

எல்சி புற்றுநோயால் தாக்கப்பட்டபோது, இயேசுவுடன் பரலோகத்தில் ஜீவிக்க செல்லுவதற்கு தயாராக இருந்தார். ஆனால் அவள் அந்த வியாதியிலிருந்து குணமடைந்தாள். தேவன் ஏன் தன் உயிரைக் காப்பாற்றினார் என்று அவளை யோசிக்க வைத்தது. “நான் என்ன நல்லது செய்ய முடியும்? என்னிடம் அதிக பணமோ திறமையோ இல்லை, என்னால் நடக்க முடியாது. நான் உங்களுக்கு எப்படி பயனுள்ளதாக இருக்க முடியும்?” என்று அவள் தேவனிடம் கேட்டாள். 

பின்னர் மற்றவர்களுக்கு சேவை செய்ய சிறிய, எளிய வழிகளைக் கண்டறிந்தார். அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் அவளுடைய வீட்டை சுத்தம் செய்கிறவர்களின் தேவையை அறிந்தாள். அவள் அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்தாள். அவ்வப்போது பணத்தைக் கொடுத்தாள். இந்த ரொக்கப் பரிசுகள் சிறியதாக இருந்தபோதிலும், அவை தொழிலாளர்களுக்கு உதவி செய்ய நீண்ட தூரம் சென்றன. அவள் அவ்வாறு செய்யும்போது, தேவன் அவளுக்கு கொடுப்பதை அவள் கண்டாள்: நண்பர்களும் உறவினர்களும் அவளுக்கு பரிசுகளையும் பணத்தையும் கொடுத்து மற்றவர்களுக்கு உதவிசெய்ய அவளைத் தூண்டினர்.

அவள் தனது கதையைப் பகிர்ந்து கொண்டபோது, 1 யோவான் 4:19இல் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்ற அழைப்பை எல்சி எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறார் என்பதை என்னால் சிந்திக்க முடியவில்லை: “அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.” மேலும் அப்போஸ்தலர் 20:35, “வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” என்று நினைப்பூட்டுகிறது. 

எல்சி கொடுத்தாள், ஏனென்றால் அவள் தேவனிடத்திலிருந்து பெற்றாள். அவள் கொடுத்ததைப் போலவே ஊக்கமும் பெற்றாள். ஆயினும்கூட, அன்பான, நன்றியுள்ள இதயம் மற்றும் தன்னிடம் இருப்பதைக் கொடுக்கத் தயாராக இருப்பதை விட அவளிடமிருந்து கொஞ்சம் அதிகமாகவே தேவைப்பட்டது. தேவன் கொடுக்கல்-வாங்கல் என்ற நல்லொழுக்க வட்டத்தில் அதிகமாய் அவளை பெருகச்செய்தார். அவர் நம்மை வழிநடத்தும் போது, கொடுத்து உதவ நன்றியுள்ள மற்றும் தாராள மனதைக் கொடுக்கும்படி அவரிடம் கேட்போம்!

 

கர்த்தருடைய புயத்தில்

அந்தத் துளையிடும் கருவியின்  சத்தம் ஐந்து வயது சாராவை பயமுறுத்தியது. அவள் பல் மருத்துவரின் நாற்காலியில் இருந்து குதித்து ஓடி மீண்டும் உள்ளே வருவதற்கு மறுத்துவிட்டாள். சூழ்நிலையைப் புரிந்துகொண்டு தலையசைத்தவாறே, பல் மருத்துவர் அவளுடைய தந்தையைப் பார்த்து, “நீங்கள் நாற்காலியில் ஏறி அமருங்கள்” என்று கூறினார். ஜேசனும், சிகிச்சை எவ்வளவு இலகுவானது என்பதை காண்பிப்பதற்காக மருத்துவர் தன்னை ஏறி அமரும்படிக்கு சொல்லுகிறார் என்று எண்ணி, நாற்காலியில் ஏறி அமர்ந்தார். ஆனால், மருத்துவர் அவளிடம் திரும்பி, “இப்போது மேலே ஏறி அப்பாவின் மடியில் உட்காரு” என்றார். அவளது தந்தை இப்போது அவளை உறுதியளிக்கும் கரங்களில் ஏந்தியிருப்பதால், சாரா முற்றிலும் நிதானமாகிவிட்டாள். இப்போது பல் மருத்துவரால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கமுடிந்தது. 

அன்று, ஜேசன் தன் பரலோகத் தகப்பனின் பிரசன்னத்தின் ஆறுதலைப் பற்றிய ஓர் சிறந்த பாடத்தைக் கற்றுக்கொண்டார். “சில வேளைகளில் நாம் கடந்துசெல்லவேண்டிய துயரமான பாதையினூடாய்  தேவன் நம்மை நடத்திச்செல்வார்.” ஆனால் “நான் உன்னோடேகூட இருக்கிறேன்” என்று அவர் விளங்கப்பண்ணுகிறார். 

 சங்கீதம் 91, தேவனுடைய ஆறுதலான பிரசன்னத்தையும் வல்லமையையும் பற்றிக் கூறுகிறது. அவை நம்முடைய சோதனைகளை எதிர்கொள்ள நமக்கு பெலனை அளிக்கிறது. அவருடைய வல்லமையின் கரத்தில் பாதுகாப்பாய் இருப்பது நமக்கு ஆறுதல் அளிக்கிறது. அதே போன்று அவரை நேசிப்பவர்களுக்கு “அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்” (வச. 15) என்று வாக்களிக்கப்படுகிறது. 

வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பல சவால்கள் மற்றும் சோதனைகள் உள்ளன. மேலும் நாம் தவிர்க்க முடியாமல் வலியையும் துன்பத்தையும் கடந்து செல்லவேண்டியிருக்கும். ஆனால் தேவனுடைய வல்லமையின் கரங்கள் நம்மைச் சுற்றியிருப்பதால், நம் நெருக்கடிகளையும் சூழ்நிலைகளையும் நாம் தாங்கிக்கொள்ள முடிகிறது. மேலும் நாம் அவரில் வளரும்போது, நம் விசுவாசத்தைப் பலப்படுத்துவாராக.

பரலோகத்தில் எஜமானன்

சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகம் 2022 இல், புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்கள் அனைவருக்கும் மாதம் ஒருநாள் ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்று அறிவித்தது. எவ்வாறாயினும், அந்த நாட்களில் தங்கள் அன்புக்குரியவர்களைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என்று முதலாளிகள் கவலைப்பட்டனர். பராமரிப்புக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்வதன் மூலம் இதை தீர்க்க கூடும் என்றாலும், ஓய்வின் அவசியத்தை பொருட்படுத்தாத அவர்களின் அணுகுமுறை அவ்வளவு சுலபமாகத் தீர்வு காணவில்லை.

மற்றவர்களை கவனமாக நடத்துவது ஒரு புதிய பிரச்சினை அல்ல. அப்போஸ்தலனாகிய பவுல், வேலையாட்கள் தங்கள் எஜமானர்களின் சொத்தாகக் கருதப்பட்ட காலத்தில் வாழ்ந்தார். ஆயினும்கூட, கிறிஸ்துவின் சாயலுள்ள குடும்பங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த சபைக்கான அவரது அறிவுறுத்தல்களின் கடைசி வரியில், எஜமானர்கள் தங்கள் ஊழியர்களை "செவ்வையாய்" நடத்த வேண்டும் என்று கூறுகிறார் (கொலோசெயர் 4:1). மற்றொரு மொழிபெயர்ப்பு, "அவர்களுக்கு நியாயம் செய்யுங்கள்" என்கிறது.

"மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே" (3:24) பணியாற்றும்படி வேலைகாரர்களுக்கு பவுல் சொல்வது போல், எஜமானர்களுக்கும் "பரலோகத்தில் எஜமான் இருக்கிறாரென்று" (4:1) அவர்கள் மீதான இயேசுவின் அதிகாரத்தை நினைவுபடுத்துகிறார். கிறிஸ்துவின் அதிகாரமே இறுதியானது என்று வாழ கொலோசெய விசுவாசிகளை ஊக்குவிப்பதே அவரது நோக்கம். நாம் எஜமானாக அல்லது பணியாளனாக இருந்தாலும், நம் வீடுகள் அல்லது சமூகங்களில் மற்றவர்களுடன் நாம் நடப்பதில், "நீதியும் செவ்வையுமாய்" (வ.1) இருக்க நமக்கு உதவுமாறு தேவனிடம் கேட்கலாம்.

கிறிஸ்துவுக்குள் பூரணமாய் சரணடைதல்

1920 ஆம் ஆண்டில், ஒரு சீன போதகரின் ஆறாவது மகனான ஜான் சுங், அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க உதவித்தொகை பெற்றார். அவர் உயர்ந்த மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றார். முதுகலை படிப்பை முடித்து, முனைவர் பட்டமும் பெற்றார். ஆனால் அவர் தனது படிப்பைத் தொடரும்போது, தேவனை விட்டு விலகிச் சென்றார். பின்னர், 1927இல் ஒரு இரவு, அவர் தனது வாழ்க்கையை கிறிஸ்துவிடம் ஒப்படைத்தார் மற்றும் ஒரு போதகராகும் அழைப்பைப் பெற்றார். 

பல அதிக ஊதியம் பெறும் வாய்ப்புகள் அவருக்கு சீனாவில் மீண்டும் காத்திருந்தன. ஆனால் அவருடைய இலட்சியங்களை ஒதுக்கி வைக்கும்படிக்கு பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டார். அவரது அர்ப்பணிப்பின் அடையாளமாக, அவர் தனது பெற்றோருக்கு கனம்செலுத்தும் நோக்கத்தோடு தனது பிஎச்டி சான்றிதழை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற அனைத்து விருதுகளையும் கடலில் வீசினார்.

தம்முடைய சீடராக மாறுவது பற்றி இயேசு சொன்னதை ஜான் சங் புரிந்துகொண்டார்: “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” (மாற்கு 8:36). நாம் நம்மையே வெறுத்து, கிறிஸ்துவையும் அவருடைய வழிநடத்துதலையும் பின்பற்றுவதற்காக நமது பழைய வாழ்க்கையை விட்டு மனம்திரும்பும்போது (வச. 34-35), அவரைப் பின்பற்றுவதிலிருந்து நம்மைத் திசைதிருப்பும் தனிப்பட்ட ஆசைகளையும் பொருள் ஆதாயத்தையும் தியாகம் செய்ய தோன்றும். 

அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளாக, ஜான் தனது தேவன் கொடுத்த பணியை முழு மனதுடன் நிறைவேற்றினார். சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு நற்செய்தியை அறிவித்தார். நாம் எப்படி? நாம் பிரசங்கிகளாகவோ அல்லது மிஷனரிகளாகவோ இருக்க அழைக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் தேவன் நம்மை எங்கு ஊழியம் செய்ய அழைக்கிறாரோ, அவருடைய ஆவி நம்மில் கிரியை செய்வதால், நாம் அவருக்கு முழுமையாக சரணடைவோமாக.

தேவனின் பொருட்டு சேவை செய்தல்

இங்கிலாந்தின் ராணி எலிசபெத் செப்டம்பர் 2022இல் இறந்தபோது, அவரது இறுதி ஊர்வலத்தில் அணிவகுத்துச் செல்ல ஆயிரக்கணக்கான வீரர்கள் நிறுத்தப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தியாகமான சேவை மக்களால் பார்க்கப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதை பெரிய கௌரவமாகக் கருதினர். “அவரது மாட்சிமைக்காக எங்கள் கடைசி கடமையை செய்ய இது ஒரு வாய்ப்பு” என்று ஒரு இராணுவ வீரர் கூறினார். அவரைப் பொறுத்தவரை, அவர் என்ன செய்தார் என்பது அல்ல, ஆனால் அவர் அதை யாருக்காக செய்கிறார் என்பது ஒரு முக்கியமான வேலையாக மாறியது.

வாசஸ்தலத்தின் அலங்காரப் பொருட்களைக் கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்ட லேவியர்களும் இதே நோக்கத்தைக் கொண்டிருந்தனர். ஆசாரியர்களைப் போலல்லாமல், கெர்சோனியர்கள், கோகாத்தியர்கள் மற்றும் மெராரியர்களுக்கு சாதாரணமான வேலைகள் ஒதுக்கப்பட்டன: பெட்டி, மேஜை, குத்துவிளக்கு, பீடங்கள், ஆராதனைக்கேற்ற பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுகள், தொங்குதிரை அதினுடைய எல்லா வேலைகளுக்கும் நியமிக்கப்பட்டனர் (எண்கள் 3:25-26, 28, 31, 36-37). அவர்கள் இந்த ஆசரிப்புகூடார வேலைக்காக தேவனால் நியமிக்கப்பட்டனர். அவர்களின் சந்ததியர் அதை தொடர்ந்துசெய்ய கட்டளையிடப்பட்டனர். 

என்ன ஒரு ஊக்கமளிக்கும் சிந்தனை! இன்று, நம்மில் பலர் வேலையில், வீட்டில் அல்லது தேவாலயத்தில் என்ன செய்கிறோம் என்பது பட்டங்களையும் சம்பளத்தையும் மதிக்கும் உலகிற்கு அற்பமானதாகத் தோன்றலாம். ஆனால் தேவன் வேறு விதமாக பார்க்கிறார். நாம் அவர் பொருட்டு ஊழியம் செய்து அவருடைய நாம மகிமைக்காகப் பிரயாசப்படுவோமாகில் நம்முடைய பணியானது முக்கியமான ஒன்றாய் மாறுகிறது என்பதில் ஐயமில்லை.

ஜெபத்தின் மூலம் அன்பு

பல ஆண்டுகளாக, ஜான் தேவாலயத்தில் ஒருவித எரிச்சலுடன் இருந்தார். அவர் மோசமான மனநிலையுடையவர், அடிக்கடி முரட்டுத்தனமாக இருந்தார். தனக்கான “சேவை” செய்யப்படவில்லை என்றும், தன்னார்வலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் வேலையை ஒழுங்காகச்  செய்யவில்லை என்றும் அவர் தொடர்ந்து புகார் கூறிக்கொண்டேயிருந்தார். அவரை நேசிக்கப்படுவதற்கு மிகவும் கடினமானவராய் இருந்தார். 

அதனால் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டபோது,அவருக்காக பிரார்த்தனை செய்வது எனக்கு கடினமாக இருந்தது. அவரது கடுமையான வார்த்தைகள் மற்றும் விரும்பத்தகாத குணத்தின் நினைவுகள் என் மனதை நிரப்பின. ஆனால் இயேசுவின் அன்பின் அழைப்பை நினைவுகூர்ந்ததால், ஒவ்வொரு நாளும் ஜானுக்காக ஒரு எளிய பிரார்த்தனை செய்ய நான் உந்தப்பட்டேன். சில நாட்களுக்குப் பிறகு, அவருடைய விரும்பத்தகாத குணங்களைப் பற்றி நான் கொஞ்சம் குறைவாகவே சிந்திக்க ஆரம்பித்தேன். அவருக்கு வலிக்கவேண்டும் என்று நான் ஒரு காலத்தில் எண்ணியதுண்டு. ஆனால் இப்போதோ, அவரை இழந்துவிடுவோமோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது. 

ஜெபம், நம்மையும், நம் உணர்வுகளையும், மற்றவர்களுடனான நமது உறவுகளையும் தேவனுக்கு வெளிப்படுத்திக் காண்பித்து, அவருடைய பார்வையை எல்லாவற்றிலும் நுழைய அனுமதிக்கிறது என்பதை நான் உணர்கிறேன். நம்முடைய சித்தத்தையும் உணர்ச்சிகளையும் மாற்றும்பொருட்டு பரிசுத்த ஆவியானவரிடத்தில் நாம் விண்ணப்பிக்கும்போது, அவர் நம்முடைய இருதயங்களை மெதுவாகவும் நிலையாகவும் மறுரூபமாக்குவார். நம் எதிரிகளை நேசிப்பதற்கான இயேசுவின் அழைப்பு ஜெபத்திற்கான அழைப்போடு இறுகப் பிணைக்கப்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை: “உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்” (லூக்கா 6:28).

ஜானைக் குறித்து நலமானதை யோசிக்க நான் இன்னும் போராடுகிறேன் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் ஆவியானவருடைய துணையோடு, தேவனுடைய பார்வையோடும் இதயத்தோடும் அவரை மன்னிப்புக்கும் அன்புக்கும் தகுதியானவராய் பார்க்க நான் பழகிக்கொண்டிருக்கிறேன். 

உண்மையுள்ளவன், ஆனால் மறக்கப்படவில்லை

சீன், வளர்ந்தபோது குடும்பம் என்றால் என்ன என்பதைக் குறித்து குறைவாகவே அறிந்திருந்தான். அவனுடைய தாயார் மரித்துவிட்டார். அப்பாவும் எப்போதும் வீடு தங்குவதில்லை. அவன் எப்போதும் தனிமையாகவும் ஒதுக்கப்பட்டவனாகவும் உணர்ந்தான். அவனுக்கு அருகாமையில் வசித்த ஒரு தம்பதியினர் அவனை சந்தித்தனர். அவனை தங்களுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று, தங்களுடைய பிள்ளைகளை அண்ணன் என்றும் அக்கா என்றும் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். அது அவன் மற்றவர்களால் நேசிக்கப்படுகிறான் என்னும் உணர்வை அவனுக்கு தந்தது. அவனை அவர்கள் திருச்சபைக்கு அழைத்துச் சென்றனர். சீன் தற்போது, ஒரு உறுதியான இளைஞனாகவும், வாலிபர் கூட்டத் தலைவனாகவும் செயல்படுகிறான். 

இந்த தம்பதியினர் தங்களை சுற்றியிருக்கும் இளம் வாலிபர்களின் வாழ்க்கையை மாற்றும் முக்கியமான கருவியாய் செயல்பட்டாலும், அவர்கள் செய்த அந்த மேன்மையான செயல் அவர்களின் திருச்சபையில் இருந்த பெரும்பாலானோர்களுக்கு தெரியாது. ஆனால் விசுவாச வீரர்களின் விசுவாசத்தை கனப்படுத்திய தேவன், அவர்களையும் நிச்சயமாய் ஒரு நாளில் கனப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன். எபிரெயர் 11ஆம் அதிகாரம் நமக்கு நன்றாய் தெரிந்த பிரபல விசுவாச வீரர்களை பட்டியலிடுவதில் துவங்கி, நம் அறிவிற்குட்படாத பலரை “இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்(றவர்கள்)” (வச. 39) என்று வரிசைப்படுத்துகிறது. “உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை” (வச. 38) என்றும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். 

நம்முடைய கிரியைகளை மற்றவர்கள் பாராட்டவில்லையென்றாலும், தேவன் அதைப் பார்க்கிறார். அதை அறிவார். நாம் சொன்ன சில ஆறுதலான வார்த்தைகளோ அல்லது கிரியைகளோ சிறியதாயிருக்கலாம்; ஆனால் தேவன் அதை குறித்த காலத்தில் தன்னுடைய நாமத்திற்கு மகிமையாய் பயன்படுத்துவார். யாருக்கும் தெரியவில்லையென்றாலும், உன்னையும் உன் கிரியைகளையும் தேவன் அறிவார். 

தெரியாத வழி

நான் பிரையனுடன் ஓட்டத்தில் சேர ஒப்புக்கொண்டிருக்கக்கூடாது. அப்போது நான் வெளிநாட்டில் இருந்தேன். இந்த பாதை எங்கு செல்லும், எவ்வளவு தூரம் செல்வோம், நிலப்பரப்பு எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. மேலும் அவர் ஒரு வேக ஓட்டப்பந்தய வீரராக இருந்தார். அவருடன் ஓடும்போது, திரும்பிவந்துவிடலாமா? பிரையனுக்கு மட்டுமே வழி தெரிந்திருந்ததால், இப்போதைக்கு அவரை நம்புவதைத் தவிர நான் என்ன செய்ய முடியும்? நாங்கள் ஓட்டத்தை ஆரம்பித்தவுடன், நான் இன்னும் அதிகமாக கவலைப்பட்டேன். சீரற்ற நிலத்தில் அடர்ந்த காடு வழியாகச் செல்லும் பாதை கடினமானதாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக, பிரையன் என்னை அவ்வப்போது திரும்பிப்பார்த்து, வரவிருக்கும் கடினமான திட்டுகள் குறித்து எச்சரித்தார்.

இதுபோன்ற அறிமுகமில்லாத பிரதேசத்திற்குள் நுழையும்போது வேதாகம காலங்களில் சிலருக்கு இப்படித்தான் இருந்திருக்கக்கூடும்—கானானில் ஆபிரகாம், வனாந்தரத்தில் இஸ்ரவேலர்கள், நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளும் பணியில் இயேசுவின் சீஷர்கள். நிச்சயமாக அது கடினமாக இருக்கும் என்பதைத் தவிர, பயணம் எப்படி இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆனால் முன்னோக்கி செல்லும் வழியை அறிந்த ஒருவர் அவர்களை வழிநடத்தினார். அதை மேற்கொள்வதற்கான பெலனை தேவன் தங்களுக்கு அருளுவார் என்றும் அவர்களை தேவன் பாதுகாத்துக்கொள்வார் என்றும் அவர்கள் நம்பியிருந்தனர். முன்பாக என்ன இருக்கிறது என்பதை அறிந்த தேவன் அவர் என்பதினால், அவர்களால் அவரை நம்பிக்கையோடு பின்தொடரமுடியும்.

இந்த உறுதி தாவீது தப்பியோடியபோது ஆறுதலளித்தது. அவர் நிச்சயமற்ற ஒரு சூழ்நிலையிலிருந்தபோதிலும், தேவனைப் பார்த்து “என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்” (சங்கீதம் 142:3) என்று சொல்லுகிறார். வாழ்க்கையில் நமக்கு முன்பாக என்ன இருக்குமோ என்று அஞ்சும் நேரங்கள் உண்டு. ஆனால் நம்மோடு நடக்கும் ஆண்டவர் நம்முடைய வழியை அறிந்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம்.

துக்கத்தில் நம்பிக்கை

லூயிஸ் ஒரு கலகலப்பான, விளையாட்டுத்தனமான பெண். அவள் சந்திக்கிற அனைவரிடமும் சிரித்த முகத்துடன் பழகுவாள். ஐந்து வயதில் ஓர் அரிய நோயினால் பரிதாபமாக உயிரிழந்தாள். அவளுடைய திடீர் மரணம் அவளுடைய பெற்றோர் டே டேக்கும், பீட்டருக்கும், அவர்களுடன் பணிபுரிந்த எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் அனைவரும் வருந்தினோம்.

 

ஆனால் அவளுடைய பெற்றோர் டே டேயும், பீட்டரும் அதை கடந்து செல்வதற்கான வலிமையைக் கண்டுகொண்டனர். அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்று நான் டே டேவிடம் கேட்டபோது, லூயிஸ் இளைப்பாறும் இயேசுவின் அன்பான கரங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் அவர்கள் பெலனை பெற்றதாகச் சொன்னாள். "நித்திய வாழ்விற்குச் சென்ற எங்கள் மகளுக்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்," என்றும், "தேவனின் கிருபையினாலும், பலத்தினாலும், துக்கத்தின் வழியாக செல்லவும், அவர் ஒப்படைத்த பொறுப்பை தொடர்ந்து செய்யவும் முடிந்தது" என்றும் கூறினாள்.

 

டே டே யின் நம்பிக்கை மற்றும் ஆறுதல், தம்முடைய குமாரனில் தன்னை வெளிப்படுத்திய தேவனுக்குள் இருந்தது. வேதத்தில் விசுவாசம் வைப்பதென்பது வெறும் நம்பிக்கையை விட அதிகமானது. அவர் ஒருபோது மீறாத தம்முடைய வாக்குத்தத்தங்களின் அடிப்படையில் கொண்டுள்ள நிச்சயமாகும். பிரிந்த நண்பர்களுக்காக வருந்துபவர்களை பவுல் ஊக்குவித்தபடி, நம்முடைய துக்கத்தில் இந்த வல்லமை வாய்ந்த சத்தியத்தைப் பற்றிக்கொள்ளலாம்: ”இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடே கூடக் கொண்டுவருவார்”(I தெசலோனிக்கேயர் 4:14). இந்த உறுதியான நம்பிக்கை இன்று நமக்கு பலத்தையும், ஆறுதலையும் தரட்டும்; நமது துக்கத்திலும் கூட. 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

சிறிய வழிகளில்

எல்சி புற்றுநோயால் தாக்கப்பட்டபோது, இயேசுவுடன் பரலோகத்தில் ஜீவிக்க செல்லுவதற்கு தயாராக இருந்தார். ஆனால் அவள் அந்த வியாதியிலிருந்து குணமடைந்தாள். தேவன் ஏன் தன் உயிரைக் காப்பாற்றினார் என்று அவளை யோசிக்க வைத்தது. “நான் என்ன நல்லது செய்ய முடியும்? என்னிடம் அதிக பணமோ திறமையோ இல்லை, என்னால் நடக்க முடியாது. நான் உங்களுக்கு எப்படி பயனுள்ளதாக இருக்க முடியும்?” என்று அவள் தேவனிடம் கேட்டாள். 

பின்னர் மற்றவர்களுக்கு சேவை செய்ய சிறிய, எளிய வழிகளைக் கண்டறிந்தார். அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் அவளுடைய வீட்டை சுத்தம் செய்கிறவர்களின் தேவையை அறிந்தாள். அவள் அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்தாள். அவ்வப்போது பணத்தைக் கொடுத்தாள். இந்த ரொக்கப் பரிசுகள் சிறியதாக இருந்தபோதிலும், அவை தொழிலாளர்களுக்கு உதவி செய்ய நீண்ட தூரம் சென்றன. அவள் அவ்வாறு செய்யும்போது, தேவன் அவளுக்கு கொடுப்பதை அவள் கண்டாள்: நண்பர்களும் உறவினர்களும் அவளுக்கு பரிசுகளையும் பணத்தையும் கொடுத்து மற்றவர்களுக்கு உதவிசெய்ய அவளைத் தூண்டினர்.

அவள் தனது கதையைப் பகிர்ந்து கொண்டபோது, 1 யோவான் 4:19இல் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்ற அழைப்பை எல்சி எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறார் என்பதை என்னால் சிந்திக்க முடியவில்லை: “அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.” மேலும் அப்போஸ்தலர் 20:35, “வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” என்று நினைப்பூட்டுகிறது. 

எல்சி கொடுத்தாள், ஏனென்றால் அவள் தேவனிடத்திலிருந்து பெற்றாள். அவள் கொடுத்ததைப் போலவே ஊக்கமும் பெற்றாள். ஆயினும்கூட, அன்பான, நன்றியுள்ள இதயம் மற்றும் தன்னிடம் இருப்பதைக் கொடுக்கத் தயாராக இருப்பதை விட அவளிடமிருந்து கொஞ்சம் அதிகமாகவே தேவைப்பட்டது. தேவன் கொடுக்கல்-வாங்கல் என்ற நல்லொழுக்க வட்டத்தில் அதிகமாய் அவளை பெருகச்செய்தார். அவர் நம்மை வழிநடத்தும் போது, கொடுத்து உதவ நன்றியுள்ள மற்றும் தாராள மனதைக் கொடுக்கும்படி அவரிடம் கேட்போம்!

 

இயேசு கறைகளை கழுவுகிறார்

வாஷிங் மெஷினில் என்னுடைய சட்டையை தேடி, “நீ என்ன வேடிக்கை காண்பிக்கிறாயா?” என்று உரக்க கத்தினேன். என் சட்டையை கண்டுபிடித்தேன். எனக்கு அதிர்ச்சியாயிருந்தது. 

என் வெள்ளை சட்டையில் மை புள்ளி இருந்தது. மையின் கறைகள் அங்கிருந்த அனைத்து ஆடைகளிலும் பரவியிருந்தது. நான் தெளிவாக என் சட்டை பைகளை சரிபார்க்கவில்லை. அதிலிருந்து கசிந்த ஒரு பேனா மை அனைத்து பாதிப்புகளையும் ஏற்படுத்தியிருந்தது. 

பாவத்தை விவரிக்க வேதம் பெரும்பாலும் கறை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. ஒரு கறை துணியில் ஊடுருவி, அவற்றை அழிக்கிறது. எரேமியா தீர்க்கதரிசி மூலம் தேவன் பாவத்தை விவரித்தார். அதன் கறை அவர்களின் தூய்மைக்கு அப்பாற்பட்டது என்பதை நினைவூட்டுகிறது: “நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும், உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (எரேமியா 2:22). 

அதிர்ஷ்டவசமாக, பாவம் நம்மை முழுவதுமாய் ஆளுகை செய்யப் போவதில்லை. ஏசாயா 1:18ல், பாவத்தின் கறையிலிருந்து நம்மைச் சுத்திகரிக்க முடியும் என்ற தேவனின் வாக்குறுதியை நாம் கேட்கிறோம்: “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.”

என் சட்டையில் இருந்து மை கறையை வெளியே எடுக்க முடியவில்லை. என் பாவத்தின் கறையை என்னால் அகற்றவும் முடியாது. அதிர்ஷ்டவசமாக, 1 யோவான் 1:9 வாக்களித்தபடி, தேவன் நம்மை கிறிஸ்துவில் சுத்திகரிக்கிறார்: “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.”

 

நிஜமாய் வாழுங்கள்

2000 ஆம் ஆண்டில் போதகர் எட் டாப்சனுக்கு ஏ.எல்.எஸ் இருப்பது கண்டறியப்பட்டபோது,ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்காக ஜெபித்தனர். குணமடைய நம்பிக்கையுடன் ஜெபித்தால் செய்தால், தேவன் உடனடியாக பதிலளிப்பார் என்று பலர் நம்பினர். எட்ஸின் தசைகள் சிறிது சிறிதாக சிதைவதற்கு காரணமான நோயுடன் பன்னிரண்டு ஆண்டுகள் போராடிய பிறகு (அவர் இறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு), தேவன் அவரை இன்னும் ஏன் குணப்படுத்தவில்லை என்று நினைக்கிறீர்கள் என்று ஒருவர் அவரிடம் கேட்டார். “நல்ல பதில் என்று ஒன்று இல்லை. அதினால் நான் கேட்கவில்லை” என்று அவர் பதிலளித்தார். அவரது மனைவி லோர்னா மேலும் கூறுகையில், “நீங்கள் எப்போதும் பதில்களைப் பெற வேண்டும் என்று வெறித்தனமாக இருந்தால், நீங்கள் உண்மையில் வாழ முடியாது" என்று சொன்னார்கள். 

எட் மற்றும் லோர்னாவின் வார்த்தைகளில் தேவனுக்கான கனத்தை உங்களால் உணர முடிகிறதா? அவருடைய ஞானம் தங்களுக்கு மேலானது என்பதை அவர்கள் அறிந்தார்கள். இருப்பினும் எட் ஒப்புக்கொண்டார், “நாளைய தினத்தைக் குறித்து கவலைப்படாமல் இருப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.” நோய் அதிகரிக்கும் இயலாமையை ஏற்படுத்தும் என்பதை அவர் புரிந்துகொண்டார். அடுத்த நாள் என்ன புதிய பிரச்சனை வரக்கூடும் என்று அவருக்குத் தெரியவில்லை.

நிகழ்காலத்தில் கவனம் செலுத்த உதவுவதற்காக, எட் இந்த வசனங்களை தனது காரில், குளியலறை கண்ணாடியில், மற்றும் அவரது படுக்கைக்கு அருகில் வைத்தார்: “நான் (கர்த்தர்) உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரெயர் 13:5). அவர் கவலைப்படத் தொடங்கும் போதெல்லாம், அவர் தனது எண்ணங்களை சத்தியத்தின் மீது மீண்டும் ஒருமுகப்படுத்த உதவும் வசனங்களை திரும்பத் திரும்பச் சொல்வார்.

அடுத்த நாள் எதைக் கொண்டு வரும் என்று யாருக்கும் தெரியாது. ஒருவேளை எட் பயிற்சி, நம் கவலைகளை நம்பிக்கையின் வாய்ப்புகளாக மாற்ற நமக்கு உதவிசெய்யக் கூடும்.