எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

லேஸ்லி ஹோகட்டுரைகள்

உண்மையுள்ளவன், ஆனால் மறக்கப்படவில்லை

சீன், வளர்ந்தபோது குடும்பம் என்றால் என்ன என்பதைக் குறித்து குறைவாகவே அறிந்திருந்தான். அவனுடைய தாயார் மரித்துவிட்டார். அப்பாவும் எப்போதும் வீடு தங்குவதில்லை. அவன் எப்போதும் தனிமையாகவும் ஒதுக்கப்பட்டவனாகவும் உணர்ந்தான். அவனுக்கு அருகாமையில் வசித்த ஒரு தம்பதியினர் அவனை சந்தித்தனர். அவனை தங்களுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று, தங்களுடைய பிள்ளைகளை அண்ணன் என்றும் அக்கா என்றும் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். அது அவன் மற்றவர்களால் நேசிக்கப்படுகிறான் என்னும் உணர்வை அவனுக்கு தந்தது. அவனை அவர்கள் திருச்சபைக்கு அழைத்துச் சென்றனர். சீன் தற்போது, ஒரு உறுதியான இளைஞனாகவும், வாலிபர் கூட்டத் தலைவனாகவும் செயல்படுகிறான். 

இந்த தம்பதியினர் தங்களை சுற்றியிருக்கும் இளம் வாலிபர்களின் வாழ்க்கையை மாற்றும் முக்கியமான கருவியாய் செயல்பட்டாலும், அவர்கள் செய்த அந்த மேன்மையான செயல் அவர்களின் திருச்சபையில் இருந்த பெரும்பாலானோர்களுக்கு தெரியாது. ஆனால் விசுவாச வீரர்களின் விசுவாசத்தை கனப்படுத்திய தேவன், அவர்களையும் நிச்சயமாய் ஒரு நாளில் கனப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன். எபிரெயர் 11ஆம் அதிகாரம் நமக்கு நன்றாய் தெரிந்த பிரபல விசுவாச வீரர்களை பட்டியலிடுவதில் துவங்கி, நம் அறிவிற்குட்படாத பலரை “இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்(றவர்கள்)” (வச. 39) என்று வரிசைப்படுத்துகிறது. “உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை” (வச. 38) என்றும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். 

நம்முடைய கிரியைகளை மற்றவர்கள் பாராட்டவில்லையென்றாலும், தேவன் அதைப் பார்க்கிறார். அதை அறிவார். நாம் சொன்ன சில ஆறுதலான வார்த்தைகளோ அல்லது கிரியைகளோ சிறியதாயிருக்கலாம்; ஆனால் தேவன் அதை குறித்த காலத்தில் தன்னுடைய நாமத்திற்கு மகிமையாய் பயன்படுத்துவார். யாருக்கும் தெரியவில்லையென்றாலும், உன்னையும் உன் கிரியைகளையும் தேவன் அறிவார். 

தெரியாத வழி

நான் பிரையனுடன் ஓட்டத்தில் சேர ஒப்புக்கொண்டிருக்கக்கூடாது. அப்போது நான் வெளிநாட்டில் இருந்தேன். இந்த பாதை எங்கு செல்லும், எவ்வளவு தூரம் செல்வோம், நிலப்பரப்பு எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. மேலும் அவர் ஒரு வேக ஓட்டப்பந்தய வீரராக இருந்தார். அவருடன் ஓடும்போது, திரும்பிவந்துவிடலாமா? பிரையனுக்கு மட்டுமே வழி தெரிந்திருந்ததால், இப்போதைக்கு அவரை நம்புவதைத் தவிர நான் என்ன செய்ய முடியும்? நாங்கள் ஓட்டத்தை ஆரம்பித்தவுடன், நான் இன்னும் அதிகமாக கவலைப்பட்டேன். சீரற்ற நிலத்தில் அடர்ந்த காடு வழியாகச் செல்லும் பாதை கடினமானதாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக, பிரையன் என்னை அவ்வப்போது திரும்பிப்பார்த்து, வரவிருக்கும் கடினமான திட்டுகள் குறித்து எச்சரித்தார்.

இதுபோன்ற அறிமுகமில்லாத பிரதேசத்திற்குள் நுழையும்போது வேதாகம காலங்களில் சிலருக்கு இப்படித்தான் இருந்திருக்கக்கூடும்—கானானில் ஆபிரகாம், வனாந்தரத்தில் இஸ்ரவேலர்கள், நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளும் பணியில் இயேசுவின் சீஷர்கள். நிச்சயமாக அது கடினமாக இருக்கும் என்பதைத் தவிர, பயணம் எப்படி இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆனால் முன்னோக்கி செல்லும் வழியை அறிந்த ஒருவர் அவர்களை வழிநடத்தினார். அதை மேற்கொள்வதற்கான பெலனை தேவன் தங்களுக்கு அருளுவார் என்றும் அவர்களை தேவன் பாதுகாத்துக்கொள்வார் என்றும் அவர்கள் நம்பியிருந்தனர். முன்பாக என்ன இருக்கிறது என்பதை அறிந்த தேவன் அவர் என்பதினால், அவர்களால் அவரை நம்பிக்கையோடு பின்தொடரமுடியும்.

இந்த உறுதி தாவீது தப்பியோடியபோது ஆறுதலளித்தது. அவர் நிச்சயமற்ற ஒரு சூழ்நிலையிலிருந்தபோதிலும், தேவனைப் பார்த்து “என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்” (சங்கீதம் 142:3) என்று சொல்லுகிறார். வாழ்க்கையில் நமக்கு முன்பாக என்ன இருக்குமோ என்று அஞ்சும் நேரங்கள் உண்டு. ஆனால் நம்மோடு நடக்கும் ஆண்டவர் நம்முடைய வழியை அறிந்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம்.

துக்கத்தில் நம்பிக்கை

லூயிஸ் ஒரு கலகலப்பான, விளையாட்டுத்தனமான பெண். அவள் சந்திக்கிற அனைவரிடமும் சிரித்த முகத்துடன் பழகுவாள். ஐந்து வயதில் ஓர் அரிய நோயினால் பரிதாபமாக உயிரிழந்தாள். அவளுடைய திடீர் மரணம் அவளுடைய பெற்றோர் டே டேக்கும், பீட்டருக்கும், அவர்களுடன் பணிபுரிந்த எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் அனைவரும் வருந்தினோம்.

 

ஆனால் அவளுடைய பெற்றோர் டே டேயும், பீட்டரும் அதை கடந்து செல்வதற்கான வலிமையைக் கண்டுகொண்டனர். அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்று நான் டே டேவிடம் கேட்டபோது, லூயிஸ் இளைப்பாறும் இயேசுவின் அன்பான கரங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் அவர்கள் பெலனை பெற்றதாகச் சொன்னாள். "நித்திய வாழ்விற்குச் சென்ற எங்கள் மகளுக்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்," என்றும், "தேவனின் கிருபையினாலும், பலத்தினாலும், துக்கத்தின் வழியாக செல்லவும், அவர் ஒப்படைத்த பொறுப்பை தொடர்ந்து செய்யவும் முடிந்தது" என்றும் கூறினாள்.

 

டே டே யின் நம்பிக்கை மற்றும் ஆறுதல், தம்முடைய குமாரனில் தன்னை வெளிப்படுத்திய தேவனுக்குள் இருந்தது. வேதத்தில் விசுவாசம் வைப்பதென்பது வெறும் நம்பிக்கையை விட அதிகமானது. அவர் ஒருபோது மீறாத தம்முடைய வாக்குத்தத்தங்களின் அடிப்படையில் கொண்டுள்ள நிச்சயமாகும். பிரிந்த நண்பர்களுக்காக வருந்துபவர்களை பவுல் ஊக்குவித்தபடி, நம்முடைய துக்கத்தில் இந்த வல்லமை வாய்ந்த சத்தியத்தைப் பற்றிக்கொள்ளலாம்: ”இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடே கூடக் கொண்டுவருவார்”(I தெசலோனிக்கேயர் 4:14). இந்த உறுதியான நம்பிக்கை இன்று நமக்கு பலத்தையும், ஆறுதலையும் தரட்டும்; நமது துக்கத்திலும் கூட. 

ஆசீர்வதிக்கப்பட்ட வழக்கம்

காலையில் ரயிலில் கூட்டம் அலைமோதுவதைப் பார்த்து, திங்கட்கிழமை பரபரப்பை உணர்ந்தேன். நெரிசல் நிறைந்த கேபினில் இருந்தவர்களின் தூக்கம், எரிச்சலான முகம் ஆகியவற்றைப் பார்க்கும்போது அவர்கள் வேலைக்கு செல்லும் சரியான மனநிலையில் இல்லை என்பதை என்னால் சொல்லமுடியும். சிலர் உட்காரும் இருக்கையை பிடிக்க முண்டியடித்து முன்னேற, மேலும் பலர் உள்ளே நுழைய முற்பட்டதால் முகச் சுளிவுகள் வெடித்தன. இதோ வழக்கம்போல அலுவலகத்திற்கு செல்லும் ஒரு சாதாரண நாளாக இதுவும் நகர்ந்து செல்லுகிறது. 

திடீரென்று எனக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. சரியாய் ஒரு வருடத்திற்கு முன்பு, கோவிட்-19 தொற்று பரவிய நாட்களில் நம்முடைய அன்றாட வழக்கத்தை செயல்படுத்த முடியாமல் வீடுகளில் முடங்கிக் கிடந்தோம். உணவு உண்பதற்கு வெளியே செல்லமுடியாத நிலை. சிலர் அலுவலகங்களுக்கும் செல்லமுடியவில்லை. ஆனால் தற்போது நாம் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறோம். வழக்கம்போல செய்யும் இயல்பு காரியங்கள் சலிப்பு தட்டகூடியதாய் இருந்தாலும் அது ஆசீர்வாதம் என்னும் நற்செய்தியை நான் உணர்ந்தேன். 

சாலொமோன் ராஜா, நாம் அன்றாடம் ஏறெடுக்கும் பிரயாசங்களில் இருக்கும் அர்த்தமற்ற காரியங்களைக் குறித்து பேசுகிறார் (பிரசங்கி 2:17-23). சிலவேளைகளில் அது முடிவில்லாததாகவும், அர்த்தமற்றதாகவும் பிரயோஜனமற்றதாகவும் தெரியலாம் (வச. 21). ஆனாலும் புசித்து குடித்து ஒவ்வொரு நாளும் திருப்தியாய் இருப்பது தேவனிடத்திலிருந்து கிடைத்த நன்மை என்பதை அவர் வலியுறுத்துகிறார் (வச. 24). 

நாம் வழக்கமாய் செய்யும் காரியங்களினால் சலிப்படையும்போது, இந்த காரியங்கள் அனைத்தும் மேன்மையானது என்பதை அறிவோம். நாம் புசித்து, குடித்து, கையிட்டு செய்யும் பிரயாசங்களில் திருப்தியடைவது என்பது தேவன் நமக்கருளிய ஈவு என்று எண்ணி தேவனுக்கு நன்றி செலுத்துவோம் (3:13).

இயேசுவில் தொடருவோம்

காட்டுப்பகுதியில் ஓட்டப்பயிற்சி செய்யும்போது, அங்கு ஒரு குறுக்கு வழியைக் கண்டுபிடித்து, எனக்கு சற்றும் பரீட்சயமில்லாத அந்த பாதையில் சென்றேன். நான் வழியை தொலைத்து விட்டேனோ என்று எண்ணி, எனக்கு பின் ஓடிவந்த இன்னொரு சக பயிற்சியாளரைப் பார்த்து, நான் சரியான பாதையில் தான் செல்கிறேனா என்று கேட்டேன். 

“ஆம்” என்று அவர் உறுதியுடன் பதிலளித்தார். என்னுடைய சந்தேகப் பார்வையை அறிந்த அவர், “கவலைப்படாதீர்கள், நானும் பல தவறான வழிகளை தெரிந்தெடுத்திருக்கிறேன். ஆனால் பரவாயில்லை, ஓட்டப்பயிற்சியில் இதுவும் ஒரு அங்கம் தான்” என்று உற்சாகப்படுத்தினார். 

என்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு கச்சிதமாய் பொருந்தக்கூடிய என்னே நேர்த்தியான விளக்கம்! எத்தனை முறை நான் சோதனைக்குட்பட்டு, தேவனுடைய வழியை விட்டு திசைமாறி போயிருக்கிறேன்? ஆனால் நான் மீண்டும் விழுவேன் என்பதை தேவன் அறிந்திருந்தும் ஒவ்வொரு முறையும் என்னை மன்னித்து, தொடர்ந்து முன்னேறுவதற்கு கிருபை கொடுத்தார். நாம் தவறான பாதையில் செல்ல விரும்பும் சுபாவம் கொண்டவர்கள் என்பதை தேவன் நன்கு அறிந்திருக்கிறார். ஆனால் அவர் எப்போதும் நம்மை மன்னிப்பதற்கும், நம்முடைய பாவத்தை அறிக்கையிடும்போது அவருடைய ஆவியைக் கொண்டு நம்மை முற்றிலும் மறுரூபமாக்குவதற்கும் அவர் போதுமானவராயிருக்கிறார். 

பவுல் அப்போஸ்தலரும் இது விசுவாசப் பாதையின் ஒரு அங்கம் தான் என்பதை அறிந்திருந்தார். அவருடைய கடந்த கால பாவ வாழ்க்கை மற்றும் பலவீனங்களுக்கு மத்தியிலும் அவரால் கிறிஸ்துவைப் போல மாற முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார் (பிலிப்பியர் 3:12). “ஒன்று செய்கிறேன்” என்று சொல்லி, “பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (வச. 13-14) என்று குறிப்பிடுகிறார். இடறுதல் என்பது தேவனோடு நடக்கும் நம்முடைய பயணத்தின் ஒரு அங்கமே. நம்முடைய தப்பிதங்களின் மூலமாகவே அவர் நம்மை புடமிடுகிறார். மன்னிக்கப்பட்ட அவருடைய பிள்ளைகளாய் அவருடைய கிருபை நம்மை தொடர்ந்து ஓடச் செய்கிறது. 

தூரம் அல்லவே அல்ல

ராஜ் தனது இளமை பருவத்தில் இயேசுவை இரட்சகராக நம்பினார், ஆனால் விரைவில், அவர் நம்பிக்கையிலிருந்து விலகி, தேவனை விட்டு விலகி வாழ்க்கையை நடத்தினார். ஒரு நாள், இயேசுவுடனான தனது உறவைப் புதுப்பித்து மீண்டும் தேவாலயத்திற்குச் செல்ல அவர் முடிவெடுத்தார். இத்தனை ஆண்டுகளாக சபைக்கு வராததால் ஒரு பெண்ணால் திட்டப்பட்டார். பல வருடங்களாக அலைந்து திரிந்த ராஜின் அவமானத்தையும் குற்ற உணர்வையும் இந்தத் திட்டு மேலும் கூட்டியது. நான் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவனா என அவர் சந்தேகித்தார். சீமோன் பேதுரு இயேசுவை மறுதலித்தான்  (லூக்கா 22:34, 60-61) அதே வேளையில் அவனைத் தேவன் மீட்டெடுத்ததை (யோவான் 21:15-17) அவர் நினைவு கூர்ந்தார்.

பேதுரு தண்டனையை எதிர்பார்த்திருந்த போதிலும், அவர் பெற்றதெல்லாம் மன்னிப்பு மற்றும் மறுசீரமைப்பு மட்டுமே. இயேசு, பேதுரு தன்னை மறுதலித்ததைக் குறிப்பிடவில்லை, மாறாக கிறிஸ்துவின் மீதான தனது அன்பை மீண்டும் உறுதிப்படுத்தவும் அவரைப் பின்பற்றுபவர்களைக் கவனித்துக்கொள்ளவும் அவருக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தார் (யோவான் 21:15-17). பேதுரு அவரை மறுதலிக்கும் முன், இயேசு சொன்ன வார்த்தைகள் நிறைவேறிக் கொண்டிருந்தன: " நீ குணப்பட்டபின்பு உன் சகோதரை ஸ்திரப்படுத்து" (லூக்கா 22:32).

ராஜ், அதே மன்னிப்பு மற்றும் மறுசீரமைப்புக்காகத் தேவனிடம் கேட்டார், இன்று அவர் இயேசுவுடன் நெருக்கமாக நடப்பது மட்டுமல்லாமல் ஒரு தேவாலயத்தில் சேவைசெய்து மற்ற விசுவாசிகளையும் ஆதரிக்கிறார். நாம் தேவனிடமிருந்து எவ்வளவு தூரம் விலகியிருந்தாலும், அவர் நம்மை மன்னிக்கவும், நம்மை மீண்டும் வரவேற்கவும் மட்டுமல்ல, நம்மை மீட்டெடுக்கவும் தயாராக இருக்கிறார், அதனால் நாம் அவரை நேசிக்கவும், சேவை செய்யவும், மகிமைப்படுத்தவும் முடியும். நாம் ஒருபோதும் தேவனிடமிருந்து வெகுதொலைவில் இல்லை. அவருடைய அன்பான கரங்கள் நமக்காகவே திறந்திருக்கிறது.

இது ஓர் அடையாளமா?

அந்த வேலைவாய்ப்பு நன்றாக இருந்தது, பீட்டருக்குத் தேவையானதும்  அதுவே. பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு அந்த இளம் குடும்பத்தின் வேலைசெய்யும் இந்த ஒரே நபராக வேலைக்காகத் தீவிரமாக ஜெபித்தார். "நிச்சயமாக இது உன்  ஜெபங்களுக்கான தேவனின் பதில்" என்று அவரது நண்பர்கள் குறிப்பிட்டனர்.

இருப்பினும், வருங்கால முதலாளியைப் பற்றிப் படித்தறிந்த பின்னர் , ​​பீட்டர் சங்கடமாக உணர்ந்தார். அந்த நிறுவனம் சந்தேகத்திற்கிடமான வணிகங்களில் முதலீடு செய்திருந்தது மற்றும் ஊழல் குற்றச்சாட்டப்பட்டிருந்தது. வேதனையாக இருப்பினும் இறுதியில் பீட்டர் அந்த வாய்ப்பை நிராகரித்தார். "நான் சரியானதைச் செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புவதாக நம்புகிறேன், அவர் என் தேவையைச் சந்திப்பார் என்று நம்பினால் போதும்" என்று என்னிடம் பகிர்ந்தார்.

தாவீது சவுலை ஒரு குகையில் சந்தித்த செய்தி பீட்டருக்கு நினைவுக்கு வந்தது. தாவீதை கொல்ல துடித்த மனிதனைக் கொல்ல அவருக்குச் சரியான வாய்ப்பாக தோன்றியது, ஆனால் தாவீது மறுத்தார். “கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு கர்த்தர் என்னைக் காப்பாராக” (1சாமுவேல் 24:6) என்று காரணம் சொன்னார். சம்பவங்களைக் குறித்த தன் சொந்த கண்ணோட்டத்திற்கும், தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சரியானதைச் செய்வதற்கும் இடையேயான வித்தியாசத்தை தாவீது கவனமாகப் பகுத்தறிந்தார்.

சில சூழ்நிலைகளில் எப்போதும் "அடையாளங்களை" தேடுவதற்குப் பதிலாக, நமக்கு முன்னால் என்ன இருக்கிறது என்பதைப் பகுத்தறிவதற்கான ஞானம் மற்றும் வழிகாட்டுதலுக்காகத் தேவனையும் அவருடைய சத்தியத்தையும் கண்ணோக்குவோம். அவருடைய பார்வையில் சரியானதைச் செய்ய அவர் நமக்கு உதவுவார்.

உன் பங்கு, தேவனுடைய பங்கு

என்னுடைய சிநேகிதி ஜேனிஸ், அவளுடைய வேலை பார்க்கும் அலுவலகத்தில், ஒரு துறையைப் பொறுப்பேற்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டாள். ஆனால் அதைச் செய்வதற்கு அவள் பயந்தாள். தேவனிடம் ஜெபித்தாள். தேவன் அந்த பொறுப்பை ஏற்கும்படி அவளுக்கு உணர்த்தினார். ஆனாலும், அந்த பொறுப்பை ஏற்பதைக் குறித்த பயம் அவளிடம் காணப்பட்டது. சொற்ப அனுபவமுள்ள நான் எப்படி அந்த பொறுப்பை ஏற்பது? என்று தேவனிடம் கேட்டாள். “என்னை ஏன் இந்த ஸ்தானத்திற்கு ஏற்படுத்தினீர், நான் தோற்கப்போகிறேன்” என்று புலம்பினாள்.
பின்பாக ஒரு நாள், ஜேனிஸ் ஆதியாகமம் 12ஆம் அதிகாரத்தை வாசித்து, அதில் “நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ...அவன் புறப்பட்டுப்போனான்” என்ற ஆபிரகாமின் பங்களிப்பை அறிந்தாள் (வச.1,4). பண்டைய நாட்களில் யாரும் இது போல் செய்ததில்லை என்பதினால், இது ஒரு துணிச்சலான முயற்சி. ஆனால் எல்லாவற்றையும் பின்னாக தள்ளிவிடும்படியும், எல்லாவற்றையும் தான் பார்த்துக்கொள்வதாகவும் அறிவித்து, தன்னை நம்பும்படிக்கு தேவன் கட்டளையிட்டார். அங்கீகாரம்? உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்; ஆசீர்வாதம்? உன்னை ஆசீர்வதிப்பேன்; மதிப்பு? உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நோக்கம்? பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும். அவனுடைய வழியில் ஆபிரகாம் சில பெரிய தவறுகளைச் செய்திருந்தாலும், “விசுவாசத்தினாலே ஆபிரகாம்... கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்”(எபிரெயர் 11:8).
இந்த புரிந்துகொள்ளுதல் ஜேனிஸின் இருதயத்தில் பெரிய பாரத்தை நீக்கியது. அவள் பின்பாக என்னிடத்தில் சொன்னபோது,“என்னுடைய வேலையில் நான் வெற்றிபெற்றவளாய் இருக்கக் கவலைப்பட வேண்டியதில்லை. அந்த வேலையை நான் செய்வதற்குத் தேவன் மீது நம்பிக்கை வைப்பதில் என் கவனத்தை செலுத்த வேண்டும்.” என்று சொன்னாள். நமக்குத் தேவையான விசுவாசத்தை தேவன் அருளும்போது, நம்முடைய எல்லாவற்றிலும் அவரை நம்புவோம்.

ஓடுங்கள்

ஜப்பானின் பாரம்பரிய தற்காப்புக் கலையான அகிடோவின் முதல் படி நமக்கு வியப்பூட்டும். நம்மை யாராவது தாக்க வந்தால், முதலாவது நாம் ஓட வேண்டும் என்று அதின் ஆசிரியர் (சென்ஸெய்) எங்களுக்கு சொன்னார். “உங்களால் ஓட முடியவில்லை என்றால் மட்டும் சண்டை போடுங்கள்” என்று கண்டிப்பாய் சொன்னார். 

ஓட வேண்டுமா? நான் சற்றுத் தடுமாறினேன். இந்த அளவிற்கு திறமையான தற்காப்பு பயிற்சியாளர் நம்மை ஏன் ஓடச்சொல்லுகிறார்? இது சற்று முரணாக தென்பட்டது. ஆனால், சண்டையை தவிர்ப்பதே நம்மை தற்காக்கும் முதற்படி என்று அவர் விளக்கமளித்தார். ஆம் அது உண்மைதான்!

இயேசுவை கைது செய்ய பலர் வந்தபோது, பேதுரு நம்மை போலவே தன் பட்டயத்தை உருவி அதில் ஒருவனை தாக்குகிறான் (மத்தேயு 26:51; யோவான் 18:10). அதை கீழே போடச் சொன்ன இயேசு, “அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும்” (மத்தேயு 26:54) என்று கேட்கிறார்.

நியாயம் என்பது முக்கியம் என்றாலும், அதேபோல தேவனுடைய இராஜ்யத்தையும், நோக்கதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். அது நம்முடைய சத்துருக்களை நேசிக்கும்படியாகவும், தீமைக்கு நன்மை செய்யும்படியாகவும்(5:44) நம்மை அழைக்கும் தலைகீழான இராஜ்யம். இது உலகத்தின் சுபாவத்திற்கு நேர்மறையானது. ஆனால் அதைத்தான் தேவன் நமக்குள் உருவாக்க விரும்புகிறார். 

பேதுரு காயப்படுத்திய மனிதனின் காதை இயேசு மீண்டும் குணமாக்கினார் என்று லூக்கா 22:51 கூறுகிறது. இதுபோன்ற கடினமான தருணங்களை இயேசு கையாண்டதைப்போல, நாமும் எப்போதும் சமாதானத்தையும், புதிதாக்குதலையும் நாடுகையில், நமக்கு தேவையானதை தேவன் அருளுவார். 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

என்னால் உன்னை பார்க்கமுடிகிறது

கண்கண்ணாடி நிபுணர், மூன்று வயது ஆண்ட்ரியாஸ_க்கு முதல் கண்கண்ணாடியை போடுவதற்கு உதவினார். அதை அணிவித்த பின்பு, “கண்ணாடியில் பார்” என்றாள். ஆண்ட்ரியாஸ் அவளுடைய உருவத்தை கண்ணாடியில் பார்த்தாள். பின்பு அவள் மகிழ்ச்சியான முகத்துடன், தன் தந்தையிருந்த திசை நோக்கித் திரும்பினாள். பின்னர் ஆண்ட்ரியாஸின் தந்தை தனது மகனின் கன்னங்களில் வழிந்த கண்ணீரை மெதுவாக துடைத்து, “என்ன ஆச்சு?” என்று கேட்டார். ஆண்ட்ரியாஸ் தன் தந்தையின் கழுத்தைச் சுற்றிக் கொண்டாள். “என்னால் உங்களை பார்க்கமுடிகிறது.” அவள் சற்று பின்வாங்கி, தலையை சாய்த்து, தந்தையின் கண்களைப் பார்த்து, “என்னால் உங்களை பார்க்கமுடிகிறது” என்று சொன்னாள்.

நான் ஜெபத்தோடு வேதத்தை வாசிக்கும்போது, “அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமான” (கொலோசெயர் 1:15) ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை நோக்குவதற்கு பரிசுத்த ஆவியானவர் நம் கண்களை திறந்தருளுவாராக. இருப்பினும், வேதத்தின் மூலம் நாம் அறிவில் வளரும்போது, ஆவியானவரால் நம் பார்வை தெளிவடைந்தாலும், நித்தியத்தின் இந்தப் பக்கத்தில் தேவனின் எல்லையற்ற அபரிமிதத்தின் ஒரு காட்சியை மட்டுமே நாம் இன்னும் காண முடியும். பூமியில் நம் காலம் முடிந்ததும் அல்லது இயேசுவின் வருகை வரும்போது, நாம் அவரைத் தெளிவாகக் காண்போம் (1 கொரிந்தியர் 13:12). 

கிறிஸ்துவை முகமுகமாய் நாம் சந்தித்து அவர் நம்மை அறிந்திருக்கிறதுபோல நாமும் அவரை அறியும் அந்த மகிழ்ச்சி நிறைந்த தருணத்தில் நமக்கு சிறப்பு கண்ணாடிகள் தேவையில்லை. நம்முடைய அன்பான மற்றும் உயிருள்ள இரட்சகரை நாம் உற்று நோக்கி, “இயேசுவே, என்னால் உம்மை பார்;க்க முடிகிறது” என்று சொல்லும் வரை, நாம் உறுதியாக நிற்க வேண்டிய விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகியவற்றால் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் கிரியை செய்வார். “இயேசுவே, என்னால் உம்மை பார்;க்க முடிகிறது!”

ஒளிந்திருக்கும் பிரம்மாண்டம்

“தி அட்லாண்டிக்” என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆர்தர் ப்ரூக்ஸ் அப்புத்தகத்தை எழுதும்போது தைவானில் அமைந்துள்ள தேசிய அரண்மனை அருங்காட்சியகத்திற்குச் சென்றதைக் குறித்துக் கூறுகிறார். இது உலகின் மிகப்பெரிய சீனக் கலைகளின் தொகுப்புகளில் ஒன்றாகும். அருங்காட்சியக வழிகாட்டி கேட்டார், “இன்னும் வரையப்படாத ஒரு ஓவியத்தை கற்பனை செய்யும்படிக்கு உங்களிடத்தில் கேட்டால், நீங்கள் என்ன கற்பனை செய்வீர்கள்?” அதற்கு நான், “ஒரு வெற்று கேன்வாஸ்,” என்று பதிலளித்தேன். ஆனால் அந்த வழிகாட்டி, “ அதை நாம் வேறுவிதத்திலும் பார்க்கக்கூடும். அதில் ஓவியம் ஏற்கனவே இடம்பெற்றுள்ளது, கலைஞர்களின் வேலை வெறுமனே அதை வெளிக்கொண்டுவருவதே” என்று சொன்னார். 

எபேசியர் 2:10 இல், கைவேலை என்ற வார்த்தை, சில சமயங்களில் “வேலைப்பாடு" அல்லது “தலைசிறந்த படைப்பு" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இது கிரேக்க வார்த்தையான “பொய்மா” என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இதிலிருந்து நாம் கவிதை என்று அர்த்தங்கொடுக்கும் “பொயட்ரி” என்ற ஆங்கில வார்த்தையை பெறுகிறோம். தேவன் நம்மை கலைப் படைப்புகளாகவும் வாழும் கவிதைகளாகவும் படைத்துள்ளார். நம்முடைய ஓவியங்கள் தெளிவில்லாமல் இருந்தது. “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்” (வச. 1). அந்த அருங்காட்சியக வழிகாட்டியின் வார்த்தைகளை சுருக்கமாகச் சொல்வதானால், “ஓவியம் ஏற்கனவே ஒளிந்திருக்கிறது, ஒரு தெய்வீகமான ஓவியனின் வேலை அதை உயிர்பெறச்செய்வதே” என்பதாகும். அவருடைய கலைப்படைப்புகளாகிய நம்மை “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய்… நம்மை உயிர்ப்பித்தார்” (வச. 4-5).

நாம் பாடுகள் மற்றும் உபத்திரவங்களின் மத்தியில் கடந்துசெல்லும்போது, நம்முடைய தெய்வீக ஓவியர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதில் திருப்திகொள்ளலாம்: “ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” (பிலிப்பியர் 2:13). உங்களில் இருக்கும் ஓவியத்தை வெளிக்கொண்டுவர தேவன் கிரியை நடப்பித்துக்கொண்டிருக்கிறார்.

அழகான வடிவமைப்பு

ஒரு சர்வதேச ஆராய்ச்சிக் குழு, உழவாரன் என்னும் ஒரு குறிப்பிட்ட பறவையின் அசைவுகளைப் பிரதிபலிக்கும் ஃபிளாப்பிங்-விங் ட்ரோனை உருவாக்கியுள்ளது. இந்த உழவாரன் குருவிகள் மணிக்கு தொண்ணூறு மைல்கள் வரை பறக்கவும், வட்டமடிக்கவும், மூழ்கவும், விரைவாக திரும்பவும், திடீரென்று நிறுத்தவும் முடியும். இருப்பினும், ஆர்னிதோப்டர் ட்ரோன் என்னும் பறக்கும் எந்திரம் இன்னும் பறவையை விட தாழ்வானது. பறவைகளுக்கு “பல தசைகள் உள்ளன, அவை நம்பமுடியாத வேகத்தில் பறக்கவும், இறக்கைகளை மடக்கவும், திருப்பவும், இறகு துளைகளைத் திறக்கவும் மற்றும் ஆற்றலைச் சேமிக்கவும் உதவுகின்றன” என்று ஒரு ஆராய்ச்சியாளர் கூறுகிறார். அவரது ஆய்வின் முடிவில், “பறக்கும் உயிரின விமானத்தின் 10 சதவிகிதத்தை” மட்டுமே எங்களால் கண்டறிய முடிந்தது என்று அவர் ஒப்புக்கொள்கிறார். 

இந்த உலகத்தில் வாழும் உயிரினங்களுக்கு தேவன் அனைத்து சிறப்பியல்புகளையும் அருளியிருக்கிறார். அவற்றை தன்மைகளை ஆய்வுசெய்து அறிந்துகொள்வது நம்முடைய ஞானத்திற்கு பலம் சேர்க்கும். வாழ்க்கைக்கு தேவையான வாழ்வாதாரங்களை சேகரிக்கும் எறும்பு, தங்கள் வீட்டை கன்மலையில் தோண்டிவைக்கும் குழிமுசல்கள், கூட்டமாய் அணிவகுத்து வரும் வெட்டுக்கிளிகள் (நீதிமொழிகள் 30:25-27) ஆகியவைகள் நமக்கு விலைமதிப்பற்ற பாடங்களை கற்பிக்கிறது. 

தேவன் தன்னுடைய ஞானத்தினாலே பூமியை சிருஷ்டித்தார் என்று வேதம் சொல்லுகிறது (எரேமியா 10:12), அவருடைய அன்றாட சிருஷ்டிப்பின் இறுதியில் அவர் தன்னுடைய படைப்பை நல்லது” என்று கண்டார் (ஆதியாகமம் 1:4,10,12,18,21,25,31). “வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும்” (வச. 20) சிருஷ்டித்த அதே தேவன், அவற்றை புரிந்துகொள்வதற்கான ஞானத்தையும் நமக்கு அருளியிருக்கிறார். இன்று, அவருடைய இந்த அழகான இயற்கை படைப்பிலிருந்து நாம் கற்றுக்கொள்ள பிரயாசப்படுவோம்.