எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கேரன் ஹுவாங்கட்டுரைகள்

புதிதும், நிச்சயமானதும்

மூன்று ஆண்டுகளாக வீட்டுத் தேவைகளைத் தவிர, கவிதா தனக்காக எதையும் வாங்கவில்லை. கோவிட்-19 பெருந்தொற்று எனது தோழியின் வருமானத்தைப் பாதித்தது, அவள் எளிமையான வாழ்க்கை முறையை தழுவினாள். “ஒரு நாள், எனது வீட்டை சுத்தம் செய்யும் போது, எனது பொருட்கள் எவ்வளவு மோசமாகவும், பழையதாகவும் இருப்பதை கவனித்தேன். அப்போதுதான் எனக்கு புதிய பொருட்களின் அருமை புரிந்தது; அவை தரும் புத்துணர்வும் உற்சாக உணர்வும் தனிதான். என் சுற்றுப்புறமே சோர்ந்துபோய் பழையதாக தோன்றியது. எதிர்காலமே இல்லை என்பது போல் உணர்ந்தேன்” என்று பகிர்ந்துகொண்டாள்.

வேதாகமத்தில் உள்ள சற்றே வித்தியாசமான ஒரு புத்தகத்தால் கவிதா உற்சாகம் கொண்டாள். எருசலேம் பாபிலோனிடம் வீழ்ந்த பிறகு, எரேமியாவால் எழுதப்பட்ட புலம்பல், தீர்க்கதரிசியும், ஜனங்களும் அனுபவித்த துயரத்தின் ஆறா காயத்தை விவரிக்கிறது. எனினும், துயரத்தின் விரக்தியின் மத்தியிலும், நம்பிக்கைக்கான உறுதியான அடித்தளம் உள்ளது; அது தேவனின் அன்பு. “அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்” (3:22-23) என்று எரேமியா எழுதினார்.

ஒவ்வொரு நாளினூடும் தேவனின் ஆழமான அன்பு எப்பொழுதுமே புதிதாக உண்டாயிருப்பதை கவிதா உணர்ந்தாள் . எதிர்நோக்குவதற்கு இனி எதுவும் இல்லை என்று சூழ்நிலைகள் நம்மை உணர்த்தும்போதும், அவருடைய உண்மைத்தன்மையை நாம் சிந்தித்து, அவர் நம்மைப் போஷிப்பதை ஆவலுடன் எதிர்நோக்கலாம். நம் நம்பிக்கை வீண் போகாது என்பதையறிந்து, நாம் நிச்சயமாகத் தேவனில் நம்பிக்கை கொள்ளலாம் (வ. 24-25). ஏனெனில் அந்த நம்பிக்கை அவருடைய உறுதியான அன்பாலும், இரக்கத்தாலும் காக்கப்படுகிறது.

“தேவனின் அன்பு எப்படியோ ஒவ்வொரு நாளிலும் எனக்குப் புதிதாயுள்ளது. ஆகவே நான் நம்பிக்கையோடு எதிர்நோக்குவேன்” என்கிறாள் கவிதா. 

 

 

இரவு உணவின் மூலம் இரக்கம்

என் திருச்சபை தலைவர் ஹரோல்ட் மற்றும் அவரது மனைவி பாம் ஆகியோரின் இரவு உணவிற்கான அழைப்பு என் மனதிற்கு இதமாயிருந்தது. ஆனால் அந்த அழைப்பு என்னை பதட்டப்படுத்தியது. ஏனென்றால், வேதாகமத்தின் போதனைகளுக்கு முரணான கருத்துக்களைக் கற்பிக்கும் கல்லூரி வேதாகமப் படிப்புக் குழுவில் நான் சேர்ந்தேன். அவர்கள் அதைப் பற்றி ஒருவேளை என்னிடம் பேசுவார்களோ? என்று அஞ்சினேன்.

இரவு உணவை உட்கொண்டவாறே, அவர்கள் தங்கள் குடும்பத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டனர் மற்றும் என்னுடைய குடும்பத்தையம் விசாரித்து அறிந்தனர். நான் என்னுடைய வீட்டுப்பாடம் எழுதுவது குறித்தும், என் நாய் மற்றும் நான் நேசிக்கும் நபரைக் குறித்தும் அவா்களுடன் இயல்பாய் பேசினேன். அதன் பிறகுதான் நான் கலந்துகொண்ட குழுவைப் பற்றி மெதுவாக எச்சரித்து, அதன் போதனைகளில் என்ன தவறு என்று விளக்கினார்கள்.

அவர்களின் எச்சரிக்கை வேதாகம படிப்பில் வழங்கப்பட்ட பொய்களிலிருந்து என்னை விலக்கி, வேதத்தின் உண்மைகளுக்கு நெருக்கமாக அழைத்துச் சென்றது. யூதா தனது நிருபத்தில், தவறான போதகர்களைப் பற்றி வலுவான மொழியைப் பயன்படுத்துகிறார். “விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று” (யூதா 1:3) அவர்களை எச்சரிக்கிறார். கடைசிகாலத்திலே பரியாசக்காரர் இருப்பார்கள் என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்தி, அவர்கள் ஆவியில்லாத ஜென்மசுபாவக்காரர்கள் என்றும் குறிப்பிடுகிறார் (வச. 18-19). இருப்பினும் யூதா, விசுவாசிகளை “சிலருக்கு இரக்கம் பாராட்டுங்கள்” (வச. 22) என்று அவர்களோடு சத்தியத்தை சமரசம் செய்யாமல் அவர்களுக்கு இரக்கத்தைக் காண்பிக்கும்படி சொல்லுகிறார்.

ஹரோல்டும் அவரது மனைவி பாமும் நான் என் நம்பிக்கையில் உறுதியாக இல்லை என்பதை திருச்சபை அறிந்திருந்தது. ஆனால் அவர்கள் என்னை நியாயந்தீர்ப்பதற்குப் பதிலாக, அவர்கள் முதலில் தங்கள் நட்பை வழங்கினர். பின்னர் தங்கள் ஞானத்தை வழங்கினர். குழப்பத்தில் உள்ளவர்களுடன் பழகும்போது, ஞானத்தையும் இரக்கத்தையும் பயன்படுத்த, இதே அன்பையும் பொறுமையையும் தேவன் நமக்குத் தந்தருளுவாராக. 

தேவனால் அழைக்கப்பட்டு தயாா்படுத்தப்படல்

“சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கான உன்னுடைய வேலை, ஆன்சைட் வானொலி ஒலிபரப்பை ஏற்பாடு செய்வது” என்று என் முதலாளி என்னிடம் கூறினார். இது எனக்கு புதிய அனுபவம் என்பதால் நான் சற்று பயந்தேன். ஆண்டவரே, நான் இது போன்ற எதையும் இதற்கு முன்பாக செய்ததில்லை தயவாய் எனக்கு உதவிசெய்யும் என்று ஜெபித்தேன்.

எனக்கு வழிகாட்ட தேவன் ஆதாரங்களையும் மக்களையும் வழங்கினார். அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள், நான் வேலை மும்முரத்தில் இருக்கும்போது சில முக்கியக் காரியங்களை எனக்கு அவ்வப்போது நினைவூட்டுவதற்கென்று சில நபர்களை தேவன் எனக்கு ஏற்பாடு செய்துகொடுத்தார். அந்த ஒளிபரப்பு நன்றாக இருந்தது. ஏனென்றால், எனக்கு என்ன தேவை என்பதை தேவன் அறிந்திருந்தார். மேலும், எனக்கு அவர் கொடுத்த திறமைகளைப் பயன்படுத்த என்னை ஊக்கப்படுத்தினார்.

தேவன் நம்மை ஓர் பணிக்கு அழைத்தால், அதற்கு நம்மை தயார்படுத்துகிறார். அவர் பெசலெயேலை ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்ய நியமித்தபோது, பெசலெயேல் ஏற்கனவே ஓர் திறமையான கைவினைஞராக இருந்தான். தேவன் அவனை தம் ஆவியால் நிரப்பி, ஞானம், புரிதல், அறிவு மற்றும் எல்லாவிதமான திறமைகளாலும் அவனை மேலும் ஆயத்தப்படுத்தினார் (யாத்திராகமம் 31:3). தேவன் அவனுக்கு அகோலியாப் என்னும் ஒரு உதவியாளரையும், திறமையான பணியாளர்களையும் கொடுத்தார் (வச. 6). அவனது தலைமைத்துவத்தோடு இணைந்து செயல்பட்ட குழுவினர், ஆசரிப்புக்கூடாரம், அதன் அலங்காரங்கள் மற்றும் ஆசாரியர்களின் ஆடைகள் என்று அனைத்தையும் வடிவமைத்து உருவாக்கியது. இஸ்ரவேலர்கள் தேவனை வழிபடுவதற்கு இவைகள் கருவிகளாக இருந்தன (வச. 7-11).

பெசலெயேல் என்றால் “தேவனுடைய நிழலில்” என்று பொருள். கைவினைஞர்கள் தேவனுடைய பாதுகாப்பு, வல்லமை மற்றும் ஆசீர்வாதத்தின் கீழ் பணியாற்றினர். ஓர் பணியைச் செய்து முடிக்க தைரியமாக அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவோம். நமக்கு என்ன தேவை, எப்படி, எப்போது கொடுக்கவேண்டும் என்பது அவருக்குத் தெரியும். 

 

தேவன் நம் தேவைகளை அறிகிறார்

ரமேஷ் என்ற ஆட்டோரிக்ஷா டிரைவர் சாலையோர கடையில் காபி குடித்துள்ளார். கோவிட் -19 லாக்டவுனுக்குப் பிறகு தினசரி பயணிகள் மீண்டும் திரும்பினர். இன்றைய விளையாட்டு நிகழ்வு அதிக பயணிகளைக் குறிக்கிறது என்று அவர் நினைத்தார். இழந்த வருமானத்தை திரும்ப பெறுவேன். இறுதியாக, நான் கவலைப்படுவதை நிறுத்த முடியும்.
அவர் வாகனம் ஓட்டத் தொடங்கவிருந்தபோது, அருகிலுள்ள பெஞ்சில் சுமனைக் கண்டார். தெருவைப் பெருக்குபவர் பேச வேண்டும் என்பது போல் கலக்கத்துடன் காணப்பட்டார். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் முக்கியம் என்று ரமேஷ் நினைத்தான். அதிக பயணிகள், அதிக வருமானம். என்னால தாங்க முடியல. ஆனால் சுமனை அணுக வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என்பதை அவர் உணர்ந்தார், எனவே அவர் செய்தார்.

கவலைப்படாமல் இருப்பது எவ்வளவு கடினம் என்பதை இயேசு புரிந்துகொண்டார் (மத்தேயு 6:25-27). எனவே நம்முடைய பரலோகத் தகப்பன் நமக்குத் தேவையானதைத் துல்லியமாக அறிந்திருக்கிறார் என்று அவர் நமக்கு உறுதியளிக்கிறார் (வச. 32). நாம் கவலைப்படாமல், அவரை நம்பி, அவர் விரும்புவதைச் செய்வதில் நம்மை அர்ப்பணிக்கவேண்டும் என்று நினைவூட்டப்படுகிறோம் (வச. 31-33). நாம் அவருடைய நோக்கங்களைத் தழுவி, கீழ்ப்படிந்தால், “இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?” என்று அவரில் நம்பிக்கைக் கொள்ளலாம் (வச. 30). ரோனியுடன் லாண்டோ உரையாடியதால், அவர் இயேசுவை ஏற்றுக்கொள்ளும்படிக்கு ஜெபித்தார். “அன்றும் தேவன் தனக்கு தேவையான பயணிகளைக் கொடுத்து உதவினார்” என்று லாண்டோ குறிப்பிட்டார். மேலும் “நான் அவருடைய தேவைகளை பார்த்துக்கொள்ளும்போது அவர் என் தேவைகளை சந்திக்கிறார்” என்று தேவன் தனக்கு நினைப்பூட்டியதாக அறிவிக்கிறார். 

 

கிறிஸ்துவுக்காக ஓர் இதயம்

நீ வாயை மூடிக்கொண்டு இருக்கும் வரை, நீ எந்த தவறும் செய்ய மாட்டாய் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஒரு சக பணியாளரிடம், அவள் சொன்னவற்றை தவறாகப் புரிந்து கொண்ட பிறகு, என் கோபத்தை வெளிப்புறமாக மட்டும் அடக்கிக் கொண்டேன். நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒருவரையொருவர் பார்க்க வேண்டியிருப்பதால், தேவையானதை மட்டுமே பேசுவதென்று முடிவெடுத்தேன் (பேசுவதை குறைப்பதின் மூலம் பதிலடி கொடுக்க எண்ணினேன்). அமைதியான போக்கு எப்படி தவறாகும்?

இதயத்திலிருந்தே பாவம் புறப்படுகிறது என இயேசு சொன்னார் (மத்தேயு 15:18−20). எல்லாம் சரியாக இருக்கிறது என்று நினைக்கும்படி என் மௌனம் மக்களை முட்டாளாக்கியிருக்கலாம், ஆனால் அது தேவனை முட்டாளாக்கவில்லை. நான் கோபம் நிறைந்த இதயத்தை மறைத்துக் கொண்டிருக்கிறேன் என்பது அவருக்குத் தெரியும். நான் தங்கள் உதடுகளால் தேவனை கனம்பண்ணிய பரிசேயர்களைப் போலிருந்தேன், ஆனால் அவர்களின் இதயங்கள் அவரிடமிருந்து வெகு தொலைவில் இருந்தன (வச. 8). என் வெளித்தோற்றம் உண்மையான உணர்வுகளைக் காட்டாவிட்டாலும், கசப்பு எனக்குள் கொப்பளித்தது. என் பரலோக தகப்பனுடன் நான் எப்போதும் உணர்ந்த மகிழ்ச்சியும் நெருக்கமும் இல்லாமல் போய்விட்டது. பாவத்தை வளர்ப்பதும் மறைப்பதும் அவ்வாறு செய்கிறது.

தேவனின் கிருபையால், நான் எப்படி உணர்கிறேன் என்பதை என் சக ஊழியரிடம் கூறி மன்னிப்பு கேட்டேன். அவள் என்னை பெருந்தன்மையாக மன்னித்துவிட்டாள், இறுதியில் நாங்கள் நல்ல நண்பர்களானோம். “இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும்.. புறப்பட்டுவரும்” (வ.19) என்கிறார் இயேசு. நம் இதயத்தின் நிலைமை முக்கியமானது, ஏனெனில் அங்கே இருக்கும் தீமை நம் வாழ்வில் நிரம்பி வழியக்கூடும். நமது வெளிப்புறம் மற்றும் உட்புறம் இரண்டும் முக்கியம்.

இயேசு நிறுத்துகையில்

என் அலுவலகம் அருகே, பல நாட்களாக ஒரு பெட்டியில் முடங்கி, நோயுற்ற பூனை ஒன்று கத்திக்கொண்டே இருந்தது. ஜூன் மாதம் வரும்வரை; கைவிடப்பட்ட அந்தப் பூனையைக் கடந்து சென்ற பலரும் அதற்குக் கண்டுகொள்ளவில்லை. அவர் ஒரு தெரு துப்புரவாளர், அதை வீட்டிற்கு எடுத்துச் சென்றார், அங்கே தெருநாய்களாக இருந்த இரண்டு நாய்கள் மீட்கப்பட்டு அவருடன் வசித்து வந்தன.

“நான் அவற்றைப் பராமரிக்கிறேன், ஏனென்றால் யாரும் அவற்றைக் கண்டுகொள்வதில்லை. அவைகளில் நான் என்னையே காண்கிறேன், ஒரு துப்புரவாளரை யாரும் கண்டுகொள்வதில்லையே” என்கிறார் ஜுன்.

இயேசு எருசலேமுக்குச் செல்லும் வழியில், எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, யாராலும் கவனிக்கப்படாதிருந்த ஒரு குருடன் சாலையோரத்தில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார். பெருங்கூட்டம் போய்க் கொண்டிருந்தது, அனைவரின் பார்வையும் கிறிஸ்துவின்மீது; ஒருவர் கூட அந்தப் பிச்சைக்காரனுக்கு உதவ நிற்கவில்லை.

இயேசுவைத் தவிர எவரும் முன்வரவில்லை. திரள் கூட்டத்தின் ஆரவாரத்தின் மத்தியில், கேட்பாரற்ற அவனின் அழுகையை அவர் கேட்டார், “நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய்” என்று கிறிஸ்து கேட்டார். “ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும்.” என முழு உள்ளதோடு பதில் வந்தது. இயேசு அவனை நோக்கி: “நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்றார் (லூக்கா 18:41-42).

கேட்பாரற்றவரைப் போலச் சிலநேரங்களில் உணர்கிறோமா? நம்மை விட முக்கியமானவர்களாகத் தோன்றுபவர்களால் நமது அழுகுரல் மூழ்கிவிடுகிறதா? உலகம் கண்டுகொள்ளாதவர்களை நம் இரட்சகர் கவனிக்கிறார். உதவிக்கு அவரை அழையுங்கள்! பிறர் நம்மைக் கடந்து செல்லும்போது, அவர் நமக்காக தம்மை நிறுத்துவார்

இயேசுவில் வளா்தல்

நான் சிறுவனாயிருக்கும் போது, பெரியவர்களை ஞானிகளென்றும் தோற்கடிக்கப்படாதவர்களென்றும் நினைத்தேன். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் எனத் தெரியும், எனக்கும் நான் வளர்ந்த பிறகு, அன்றன்று நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரிய வரும் என்று நினைத்தேன். இப்படி, “ஒரு நாள்” என் வாழ்வில் பல ஆண்டுகளுக்குப் பின் வந்தது, அது எனக்குக் கற்றுக்கொடுத்தது என்னவென்றால், பல முறை, எனக்கு இன்னும் என்ன செய்வது என்று தெரியவில்லை என்பதே. குடும்பத்தில் நோய், வேலையில் பிரச்சினைகள் அல்லது ஒரு உறவில் மோதல் வந்தபோது, அந்த நேரத்தில் அவைகள் என் கட்டுப்பாட்டில் இல்லாததால், நான் போராட வேண்டியதாயிருந்தது, இவை எனக்கு விட்டு சென்ற ஒரே ஒரு வழி, நான் என் கண்களை மூடி, “ஆண்டவரே, என்ன செய்வதென்றே தெரியவில்லை எனக்கு உதவி செய்யும்” என்று மனதில் ஜெபிப்பது மட்டமேயாகும்.

அப்போஸ்தலன் பவுல் இந்த உதவியற்ற உணர்வை அனுபவித்தார். அவர் வாழ்விலிருந்த “முள்” அது சரீர நோயாக இருந்திருக்கலாம், அது அவருக்கு மிகுந்த வலியையும் தவிப்பையும் கொடுத்தது. ஆனால் இந்த முள்ளின் மூலம்தான் பவுல் தேவனின் அன்பும், வாக்குத்தத்தங்களும், மற்றும் ஆசீர்வாதங்களும் தனது பலவீனத்தினால் பாடுகளைச் சகிக்கவும், மேற்கொள்ளவும் போதுமானதாக இருந்ததை அனுபவித்தார் (2 கொரிந்தியர் 12:9). தனிப்பட்ட பலவீனமும் உதவியற்ற தன்மையும் தோல்வி அல்ல என்பதை அவர் கற்றுக்கொண்டார். தேவனை நம்பி அவரிடம் நம்மை அர்ப்பணிக்கையில், இந்த சூழ்நிலைகளில் அவர் கிரியை செய்யும் கருவிகளாக அவைகளை மாற்றுகின்றார் (வ. 9-10).

நாம் வளர்ந்துவிட்டதால், நாம் எல்லாம் அறிந்தவர்கள் என்று அர்த்தமல்ல. நிச்சயமாக, வயதுக்கேற்ற ஞானத்தில் வளர்கிறோம், ஆனால், நமது பலவீனங்கள் நிஜத்தில் நாம் எவ்வளவு பெலனற்றவர்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன. நம்முடைய உண்மையான பெலன் கிறிஸ்துவில் இருக்கிறது: “அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்;” (வ.10). உண்மையிலேயே “வளர்வது” என்பது நமக்குத் தேவனின் உதவி தேவை என்பதை உணரும்போது வரும் வல்லமையை அறிவது, நம்புவது மற்றும் கீழ்ப்படிவது.

இயேசுவில் நிலைத்திருத்தல்

 
சில வருடங்களுக்கு முன்பாக, நான் வேதாகமக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களில், ஒவ்வொரு வாரமும் எங்களுக்கு சிற்றாலய ஆராதனை நடைபெறும். அப்போது ஒருமுறை எங்கள் ஆராதனையில் மூன்று ஆசிரியர்கள் “கர்த்தர் சிறந்தவர்” என்னும் ஆங்கிலப் பாடலை முழு ஆர்வத்துடன் பாடினது எனக்கு நினைவிருக்கிறது. தங்கள் தேவனிடத்தில் அவர்களுக்கு இருந்த விசுவாசத்தை அவர்களின் முகங்கள் பிரகாசித்தது. சில ஆண்டுகளுக்கு பின்னர், சரீரப் பிரகாரமாய் அவர்கள் பாதிக்கப்பட்டபோது, அவர்களின் இந்த விசுவாசமே அதை மேற்கொள்வதற்கும் மற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்கும் அவர்களுக்கு உறுதுணையாயிருந்தது. 
இன்று என்னுடைய ஆசிரியர்களின் விசுவாசத்தை பிரதிபலித்த அந்த பாடல் என்னுடைய கடினமான தருணங்களில் எனக்கும் உறுதுணையாய் நிற்கிறது என்று சொல்வேன். எனக்கு அது சில விசுவாச வீரர்களின் உந்தப்பட்ட வாழ்க்கையை பிரதிபலிக்கும் பாடல்களில் ஒன்று. எபிரெயர் 12:2-3இல் “தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்த” (வச. 2) இயேசுவை நோக்கி பின்செல்ல இது நமக்கு நினைவுபடுத்துகிறது. 
போராட்டங்ளோ அல்லது உபத்திரவங்களோ, வாழ்க்கையின் எந்த சூழ்நிலையாயிருப்பினும், கர்த்தரையும் அவருடைய வார்த்தையையும் கைக்கொண்ட அநேகரை நாம் உதாரணங்களாய் எடுத்துக்கொள்ளக்கூடும். இயேசுவும் நமக்கு முன்னிருந்த பரிசுத்தவான்கள் அனைவரும் எவ்விதம் விசுவாசத்தில் பயணம் செய்தனரோ அதேபோன்று நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிற ஓட்டத்தில் நாம் பொறுமையோடே ஓடக்கடவோம் (வச. 1). ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு... அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்” (வச. 3) என்று ஆசிரியர் வலியுறுத்துகிறார். 
என்னுடைய ஆசிரியர்கள் தற்போது பரலோகத்தில் இருக்கிறார்கள். அங்கிருந்து, “விசுவாச வாழ்க்கை சவாலான ஒன்று, தொடர்ந்து ஓடு” என்று உற்சாகப்படுத்துக்கொண்டேயிருக்கிறார்கள். 

- கேரன் ஹவாங் 

என் தேவன் சமீபமாயிருக்கிறார்

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, லூர்து என்ற ஆசிரியை, மாணவர்களுக்கு நேருக்கு நேர் கற்பித்தார். ஆன்லைனில் வகுப்புகளை நடத்தச் சொன்னபோது, அவள் கவலைப்பட்டாள். “என்னுடைய கம்ப்யூட்டர் நன்றாக இல்லை," என்று அவள் சொன்னாள். “எனது மடிக்கணினி பழையது, மேலும் எனக்கு வீடியோ கான்பரன்சிங் இயங்குதளங்கள் பற்றித் தெரியாது” என்றும் சொன்னாள்.  
சிலருக்கு இது ஒரு சிறிய விஷயமாகத் தோன்றினாலும், அது அவளுக்கு பெரிய மன அழுத்தமாக இருந்தது. “நான் தனியாக வாழ்கிறேன், அதனால் எனக்கு உதவ யாரும் இல்லை,” “எனது மாணவர்கள் இதினிமித்தம் வகுப்பிலிருந்து வெளியேறிவிடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன். எனக்கு வருமானம் தேவை" என்று அவள் தன்னுடைய நிலையை விவரித்தாள். 
ஒவ்வொரு வகுப்பிற்கு முன்பும், லூர்து தனது மடிக்கணினி சரியாக வேலை செய்யவேண்டும் என்று ஜெபம் செய்வாள். “பிலிப்பியர் 4:5-6, வசனங்கள் என் திரையில் வால்பேப்பராக இருந்தது,” என்று அவள் சொன்னாள். “அந்த வார்த்தைகளில் நான் எப்படி ஒட்டிக்கொண்டேன்.” 
நீங்கள் எதைக் குறித்தும் கவலைப்படத் தேவையில்லை, ஏனென்றால் “கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” (பிலிப்பியர் 4:5) என்று என்று பவுல் நமக்கு அறிவுறுத்துகிறார். அவருடைய பிரசன்னம் பற்றிய தேவனுடைய வாக்குறுதியை நாம் கடைப்பிடிக்க வேண்டும். நாம் அவருடைய அருகாமையில் இளைப்பாறி, ஜெபத்தில் அவருக்கு எல்லாவற்றையும் ஒப்புக்கொடுக்கும்போது, பெரியதோ அல்லது சிறியதோ, அவருடைய இளைப்பாறுதல் நம் “இருதயங்களையும்... சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (வச. 7). 
“கணினி குறைபாடுகளை சரிசெய்வது பற்றிய வலைத்தளங்களுக்கு தேவன் என்னை வழிநடத்தினார்” என்று லூர்து கூறினாள். “எனது தொழில்நுட்ப வரம்புகளைப் புரிந்துகொண்ட மாணவர்களையும் தேவன் எனக்குக் கொடுத்தார்.” நாம் தேவனை பின்பற்ற முயற்சிப்பதால், தேவனின் பிரசன்னம், உதவி மற்றும் இளைப்பாறுதல் ஆகியவை நம் வாழ்வின் எல்லா நாட்களிலும் நாம் அனுபவிக்கக்கூடும். “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்” (வச. 4) என்று நாம் நம்பிக்கையோடே மற்றவர்களுக்கு சொல்லக்கூடும்.  

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தாழ்மையுள்ள ஜோர்ன்

குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் ஜான் இவ்வளவாய் உயர்வாரென்று எவரும் எதிர்பார்க்கவில்லை. அவரது பார்வை குறைபாடும் இன்னும் பிற உடல் நலக்குறைகள் மத்தியிலும், அவர் நார்வேயில் உள்ள தனது கிராமத்தில் உள்ளவர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்தார். உடல் வேதனையின் காரணமாக தூங்க முடியாத இரவுகளில், அவர் ஜெபித்தார். ஜெபத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் நினைத்து, ஒவ்வொரு நபரையும் பேர் பேராகச் சொல்லி, அவர் இதுவரை சந்திக்காத பிள்ளைகளுக்காகக் கூட ஜெபித்தார். ஜனங்கள் அவருடைய கண்ணியத்தைப் பெரிதும் நேசித்து, அவருடைய புத்தியையும் அறிவுரையையும் பெறுவார்கள். நடைமுறையில் அவர்களுக்கு உதவ இயலாவிட்டாலும், அவருடைய அன்பைப் பெற்று அவர்கள் செல்லுகையில் அவர்கள் இன்னும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருவார்கள். ஜோர்ன் இறந்தபோது, அவருக்கு குடும்பம் இல்லாவிட்டாலும், அந்த வட்டாரத்திலேயே அவரது இறுதிச் சடங்கு வெகு விமர்சையாக இருந்தது. அவர் எண்ணியதைக் காட்டிலும் அவரது ஜெபம் மலர்ந்து மிகுந்த பலனைத் தந்தது.

இந்த தாழ்மையுள்ள மனிதர் அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றினார். அவர் தனது சிறையிருப்பிலும் தன் மூலம் தேவனிடம் திரும்பினவர்களை நேசித்தார், அவர்களுக்காக ஜெபித்தார். அவர் ரோமாபுரியின் சிறையிலிருந்தபோது, எபேசுவில் உள்ளவர்களுக்குத் தேவன் “ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை” தரும்படிக்கும், அவர்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் (எபேசியர் 1:17-19) ஜெபித்தார். அவர்கள் இயேசுவை அறிந்து, ஆவியின் வல்லமையால் அன்புடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்று ஏங்கினார்.

ஜானும் அப்போஸ்தலனாகிய பவுலும் தேவனிடம் தங்களை ஊற்றி, தாங்கள் நேசித்தவர்களுக்காக தங்களை அர்ப்பணித்து, ஜெபத்தில் தேவனுக்கு ஊழியம் செய்தனர். இன்று, நாம் பிறரை எவ்வாறு நேசிக்கிறோம், எப்படிச் சேவை செய்கிறோம் என்பதில் அவர்களுடைய உதாரணங்களைச் சிந்திப்போம். 

 

தேவனை குறித்த பிரமிப்பு

ஃபோபியா என்பது சில காரியங்கள் அல்லது சூழ்நிலைகளின் “எதேச்சையான பயம்” என வரையறுக்கப்படுகிறது. அராக்னோஃபோபியா என்பது சிலந்திகள் பற்றிய பயம் (இது பயப்படுவதற்கு முற்றிலும் சாதாரணமான பொதுவான விஷயம் என்று சிலர் சொல்லலாம்). பின்னர் குளோபோஃபோபியா (பலூன்கள் குறித்த பயம்) மற்றும் ஷாக்லெட்டோஃபோபியா (சாக்லேட் குறித்த பயம்) உள்ளது. இதுபோல சில நானூறு பயங்கள் உண்மையானவை மற்றும் ஆவணப்படுத்தப்பட்டவை. எதற்கு வேண்டுமானாலும் நாம் பயப்படக்கூடும் என்றே தோன்றுகிறது.

பத்து கட்டளைகளை பெற்றபின்னர், இஸ்ரவேலர்களின் பயம் குறித்து வேதாகமம் கூறுகிறது, “இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று” (யாத்திராகமம் 20:18). மோசேயோ அவர்களை இந்த சுவாரஸ்யமான வாக்கியங்களால் தேற்றினார்: “பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார்” (வ. 20). “பயப்படாதிருங்கள் ஆனால் பயந்திருங்கள்” என்று சொன்னதில் மோசே தனக்குத்தானே முரண்படுகிறார். உண்மையில், “பயம்” என்பதற்கு எபிரேய பாஷையில் குறைந்தபட்சம் இரண்டு அர்த்தங்கள் உள்ளன.எதைக் குறித்தாகிலும் நடுக்கமுண்டாகும் பயம் மற்றுதேவன் மீதுள்ள பயபக்தியான வியப்பு.

குளோபோஃபோபியா, ஷாக்லெட்டோஃபோபியா போன்ற பயங்கள் நமக்கு சிரிப்புண்டாக்கலாம். ஃபோபியாஸ் பற்றிய மிகவும் கவலைக்கிடமான அடிப்படை என்னவெனில், எல்லா வகையான விஷயங்களுக்கும் நாம் பயப்படக்கூடும். சிலந்திகளைப் போல நம் வாழ்வில் அச்சங்கள் ஊடுருவி, உலகம் ஒரு பயங்கரமான இடமாகத் தோன்றலாம். பயங்கள் மற்றும் அச்சங்களுடன் நாம் போராடும்போது, நம் தேவன் ஒரு வியத்தகு தேவன் என்பதை நினைவூட்டுவது நல்லது, இருளின் மத்தியில் இக்காலத்திற்கேற்ற அவருடைய ஆறுதலை நமக்களிக்கிறார். 

 

வேலையில் மனநிறைவு

தங்கள் பணி அர்த்தமுள்ளதாக மருத்துவர்கள் உணருகிறார்களா என்பதை அறிந்துகொள்ள, வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இரண்டு ஆய்வுகளை மேற்கொண்டனர். இரண்டு ஆய்வுகளும் பெரும்பாலான மருத்துவர்கள் தங்கள் பணியில் மன அழுத்தம் இருந்தாலும் அது அர்த்தமுள்ளதாகவே கருதுவதைக் கண்டறிந்துள்ளனர். அவர்களின் பணி திருப்திக்கான காரணத்தைக் கேட்டபோது, அவர்கள் நிரந்தரமான வேலை, பொறுப்புணர்வு, சுதந்திரம், வீட்டுவசதி, சக ஊழியர்கள் அவர்களை உணர்ந்த விதம் மற்றும் அவர்களின் திறன்களைப் பயன்படுத்துவதற்கும், கற்பிப்பதற்கும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் கிடைத்த வாய்ப்புகள் போன்ற காரணங்களைச் சொன்னார்கள்.

பிரசங்கியின் ஆசிரியரும் வேலையின் அர்த்தத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார். அவர், "மனுஷன் சூரியனுக்குக் கீழே இருக்கிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன?" (வ.22) என்று கேட்கிறார். நாம் நாள் முழுவதும் "அலுப்புடனும்" "துக்கத்துடனும்" வேலை செய்கிறோம், பின்னர் இரவிலும் நம் "மனதுக்கு இளைப்பாறுதலில்லை" (வ.23). வேலை "மாயையே" என்று அவர் முடிக்கிறார் (வ.23). இருப்பினும், மனுஷன் புசித்துக் குடித்து, தன்பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப்பார்க்திலும். அவனுக்கு ஒரு நன்மையுமில்லை இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது (வ.24) என்பதை உணர்கிறார். அவர் இல்லாமல் யாரால் உண்ண முடியும் அல்லது இன்பம் காண முடியும்? (வ.25). வீட்டிலோ அல்லது வெளியிலோ உடல் உழைப்பு அல்லது மன முயற்சியுடன் வேலை செய்வது ஒரு கெளரவம். நம்மில் பெரும்பாலோர் வேலை நாளின் முடிவில் திருப்தியைத் தேடுகிறோம். சிலர் இந்த திருப்தியைச் சேவை, பண ஆதாயம் அல்லது நட்பின் மூலம் கண்டடைய முயலலாம், இன்னும் பலர் வேலையைத் தேவன் கொடுத்த பாக்கியமென்று உணருமட்டும் வருத்தத்தோடு பிரயாசப்படுவார்கள் (ஆதியாகமம் 2:15). நாம் அதிருப்தி கொள்ளுகையில், நாம் தேவனிடம் செல்லலாம். ஏனெனில், எந்த வேலையும் நமக்கு முழு மனநிறைவை அளிக்காது என்பதுதான் உண்மை, ஆனால் நாம் செய்யும் வேலையில் மெய்யான அர்த்தத்தைக் கண்டறியத் தேவன் உதவுவார். ஆன் ஹரிகீர்த்தன்