எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜாண் பிளேஸ்கட்டுரைகள்

இயேசுவைப் போல நேசித்தல்

இத்தாலியின் காஸ்னிகோவைச் சேர்ந்த டான் குசெப் பெரடெல்லி  அனைவராலும் நேசிக்கப்பட்டவர் என்று கூறப்பட்டது. "சமாதானமும் நன்மையும்" என்று வாழ்த்திக்கொண்டே, டான் ஒரு பழைய மோட்டார் சைக்கிளில் நகரத்தைச் சுற்றி வந்துகொண்டிருந்த ஒரு அன்பான மனிதர். அனைவருக்கும் அயராது நன்மைகளைச் செய்து வந்தார். ஆனால், அவரது வாழ்க்கையின் இறுதியில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உடல்நலம் கவலைக்கிடமானது. அவர் வாழ்ந்த அந்தப் பகுதி மக்கள் அவருக்கு உதவ ஒரு சுவாசக் கருவியை வாங்கி கொடுத்தனர். ஆனால், அவரது நிலை மேலும் மோசமடைந்தபோது, அவர் சுவாசக் கருவியைப் பயன்படுத்த மறுத்து, அதை தேவையள்ள ஒரு இளம் நோயாளிக்குப் பயன்படுத்த கேட்டுக்கொண்டார். அவர் மறுத்ததைக் கேட்டது யாரையும் ஆச்சரியப்படுத்தவில்லை, ஏனென்றால் பிறரை நேசிப்பதற்காகவே நேசிக்கப்பட்ட மற்றும் போற்றப்பட்ட ஒரு மனிதனுக்கான அவரது குணாதிசயத்தில் அது இருந்தது.

'நேசிக்கப்பட்டதற்காக நேசித்தல்', இதுவே அப்போஸ்தலன் யோவான் தனது சுவிசேஷம் முழுவதிலும் பறைசாற்றும் செய்தி. அன்புகூறப்படுவதும் பிறரிடம் அன்பு கூறுவதும், வானிலையைப் பொருட்படுத்தாமல் இரவும் பகலும் ஒலிக்கும் ஒரு ஆலய மணியைப் போன்றதாகும். யோவான் 15-ல், இப்படி அன்பு கூறுபவர்களின் உச்சகட்டம், அது அனைவராலும் விரும்பப்படுவதில்லை, ஆனால் அளவில்லாமல் எல்லோரையும் நேசிப்பதே மிகப்பெரிய அன்பு என்று யோவான் கூறுகிறார்: "ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அன்பு ஒருவரிடத்திலுமில்லை."(வ. 13).

மனிதர்களின் தியாக அன்பிற்கான எடுத்துக்காட்டுகள் எப்போதும் ஊக்குவிக்கின்றன. எனினும் தேவனின் மகாபெரிய அன்போடு ஒப்பிடுகையில் அவைகள் மங்கிப்போகின்றது. ஆனால் இயேசுவின் கட்டளையான, "நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது." (வ. 12) என்பது நாம் தவறவிடக்கூடாத அழைப்பு. ஆம், எல்லோரிடமும் அன்பாயிருப்போம்..

தேவனிடத்தில் அழைப்பு பெறுதல்

“வாழ்க்கைக்காய் தத்தெடுக்கப்பட்டது” என்னும் புத்தகத்தில், டாக்டர். ரஸ்ஸல் மூர் ஒரு குழந்தையைத் தத்தெடுப்பதற்காக அனாதை இல்லத்திற்கு தனது குடும்பத்தினர் மேற்கொண்ட பயணத்தை விவரிக்கிறார். அவர்கள் அந்த இல்லத்திற்குள் நுழையும் போது, அங்கு நிலவிய அமைதியான சூழல் அவர்களை திடுக்கிட வைத்தது. தொட்டிலில் இருந்த குழந்தைகள் அழவில்லை. அவைகளுக்கு எதுவும் தேவையில்லை என்பதினால் அல்ல; மாறாக, அழுதாலும் யாரும் அவர்கள் மீது அக்கறை காட்டமாட்டார்கள் என்பதை அவைகள் நன்று அனுபவித்திருந்தன என்பதினால் அமைதி காத்தனர். 

அந்த வார்த்தைகளை வாசிக்கையில் என் மனம் வலித்தது. எங்கள் குழந்தைகள் சிறியவர்களாக இருந்த எண்ணற்ற இரவுகள் எனக்கு நினைவிருக்கிறது. “அப்பா, எனக்கு உடம்பு சரியில்லை!” அல்லது “அம்மா, எனக்கு பயமாயிருக்கிறது!” என்று சொன்னமாத்திரத்தில் எங்களில் ஒருவர் செயலில் இறங்கி, அவர்களை ஆறுதல்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய அவர்களின் படுக்கையறைக்குச் சென்றது நினைவிருக்கிறது. எங்கள் குழந்தைகள் மீது எங்களுக்குள்ள அன்பு, அவர்களுடைய தேவையில் அவர்கள் எங்களை அழைப்பதற்கான காரணத்தை கொடுத்தது. 

பெரும்பாலான சங்கீதங்கள் தேவனிடத்தில் ஏறெடுக்கப்பட்ட அழுகைகளையும் புலம்பல்களையும் உள்ளடக்கியுள்ளது. அவர்களுடனான தனிப்பட்ட உறவின் அடிப்படையில் இஸ்ரவேல் தங்கள் புலம்பல்களை தேவனிடத்தில் கொண்டுவந்தது. தேவன் தன்னுடைய “சேஷ்டபுத்திரன்” (யாத்திராகமம் 4:22) என்னும் அங்கீகாரத்தைக் கொடுத்தார். அவர்களும் தங்களுடைய தேவைகளை தகப்பனிடத்தில் கொண்டுவந்தனர். இத்தகைய நேர்மையான நம்பிக்கை சங்கீதம் 25-ல் காணப்படுகிறது: “என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்... என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்.” பராமரிப்பாளரின் அன்பில் நம்பிக்கை கொண்ட குழந்தைகள் மட்டுமே அழுகிறார்கள். இயேசுவின் விசுவாசிகளாக, தேவனின் பிள்ளைகளாக அவரை நோக்கிக் கூப்பிடுவதற்கான காரணத்தை அவர் நமக்குத் தந்திருக்கிறார். அவர் நம்மை அதிகமாய் நேசிக்கிறபடியால் நம்முடைய ஜெபங்களைக் கேட்கிறார், நம்மை பாதுகாக்கிறார். 

என்ன அருமையான சிநேகிதன்!

என்னுடைய நீண்டகால நண்பனும் நானும் சந்தித்து பல ஆண்டுகள் ஆகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் என்னுடைய சிநேகிதன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டு வந்தார். அவருடைய ஊருக்கு எதிர்பாராதவிதமாய் செல்லவேண்டியிருந்ததினால் அவரை சந்திக்க நேரிட்டது. நாங்கள் இருவரும் உணவுவிடுதிக்குள் நுழையும்போது எங்கள் இருவருடைய கண்களும் கண்ணீரால் ததும்பியது. பல வருடங்களுக்கு முன்பாக அதே ஓட்டல் அறையில் நாங்கள் உட்கார்ந்து உணவு அருந்தியிருக்கிறோம். ஆனால் இப்போது மரணம் அருகாமையில் நின்று, வாழ்க்கையின் சொற்பத்தன்மையை எங்களுக்கு விளங்கச் செய்தது. சாகசங்கள், குறும்புகள், சிரிப்பு, இழப்பு, காதல் போன்ற உணர்வுகள் நிறைந்த நீண்ட நட்பிலிருந்து எங்கள் கண்களில் கண்ணீர் வந்தது. நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டபோது எங்கள் கண்களின் ஓரத்திலிருந்து அன்பு சிந்தியது.

இயேசுவும் கண்ணீர் சிந்தியிருக்கிறார். “ஆண்டவரே, வந்து பாரும்” (யோவான் 11:34) என்று யூதர்கள் இயேசுவிடம் சொன்னமாத்திரத்தில், தன்னுடைய நெருங்கிய சிநேகிதனான லாசருவின் கல்லறைக்கு முன்பாக இயேசு வந்து நிற்கிறார். இயேசு மனுஷீகத்தோடு மாம்சத்தை பகிர்ந்துகொண்டார் என்பதற்கு “இயேசு கண்ணீர்விட்டார்” (வச.35) என்றும் இரண்டு வார்த்தைகள் மிகுந்த ஆதாரமாய் அமைகிறது. யோவான் பதிவுசெய்யாத சில காரியங்கள் அங்கே நிகழ்ந்திருக்கக்கூடுமோ? ஆம். ஆகிலும் அங்கே நின்றிருந்த யூதர்கள், “இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார்” (வச. 36) என்று சொல்லுகிறார்கள். இந்த வரிகள், நம்முடைய எல்லா பெலவீனங்களையும் நன்கு அறிந்த ஒரு சிநேகிதரை நின்று ஆராதிக்க போதுமான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இயேசு மாம்சமும் இரத்தமும் கண்ணீரும் உடையவராயிருந்தார். இயேசு நம்மை நேசித்து புரிந்துகொள்ளும் இரட்சகர்.

நமது புகலிடம்

வட அமெரிக்காவில் எருமைகள் நடமாடிய இடம் அது. உண்மையில் அப்படியாகத்தான் ஆரம்பத்தில் அது இருந்தது. அப்பகுதியில் மக்கள் மந்தைகளுடனும், பயிர்களுடனும் குடியேறும் வரை, சமவெளி இந்தியர்கள் காட்டெருமைகளை அங்கே பின்பற்றி கொண்டிருந்தனர்.  பியர்ல் துறைமுகத்தில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இரசாயன உற்பத்தித் தளமாகப் பயன்படுத்தப்பட்டது, பின்னர் பனிப்போர் ஆயுதங்களை, இராணுவ துருப்புக்களை திரும்பப் பெறும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஒரு நாள் வழுக்கை கழுகுகளின் கூட்டம் அங்கே அடைக்கலம் புகுந்திருந்தது. விரைவில்  அவ்விடத்தில் “ராக்கி மவுண்டன் ஆர்சனல் தேசிய வனவிலங்கு புகலிடம்”  உருவானது. கொலராடோவின் டென்வர் பெருநகரத்தின் விளிம்புகளில் புல்வெளி, ஈரநிலம் மற்றும் வனப்பகுதி வாழ்விடமாகிய பதினைந்தாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இப்பகுதியானது இப்போது நாட்டின் மிகப்பெரிய நகர்ப்புற சரணாலயங்களில் ஒன்றாகும். கருங்கால் ஃபெரெட்டுகள் முதல் வழுக்கை கழுகுகள், துளையிடும் ஆந்தைகள் வரை முந்நூறுக்கும் மேற்பட்ட விலங்கினங்களுக்கு பாதுகாப்பான இல்லமாக இன்று உள்ளது. உங்களால் இதை யூகித்துப் பார்க்க முடிந்ததா? எருமைகள் நடமாடிய இடம்.

 

"தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்" (62:8) என சங்கீதக்காரன் கூறுகிறார். உலகில் உள்ள எந்தவொரு நம்பிக்கையான புகலிடத்தையும் விட, தேவனுடைய பிரசன்னம் நமக்கு உண்மையான அடைக்கலமாய், பாதுகாப்பாய் இருக்கிறது "அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்” (அப்போஸ்தலர் 17:28). எனவே "எல்லா நேரங்களிலும்" நாம் நம்பிக்கை வைக்கக்கூடிய நமது அடைக்கலம் தேவனே (சங்கீதம்62:8). அவர் நம்முடைய சரணாலயமாக இருக்கிறார். அவரிடம் நாம் தைரியமாக நம் எல்லா  ஜெபங்களாலும் நம் இருதயத்தில் உள்ளவைகளை ஊற்றலாம்.

 

தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்: அவர் நேற்றும், இன்றும், எப்போதும் அடைக்கலமானவராகவே இருக்கிறார். 

தொடர்பில் இருப்போம்

மேடலின், வாரம் ஒருமுறை தன் அம்மாவை போனில் தொடர்புகொண்டு அழைப்பதை வழக்கமாக வைத்திருந்தாள். ஆவிக்குரிய எழுத்தாளரான அவளது அம்மா தன்னுடைய முதிர்வயதில், “என்னோடு அடிக்கடி தொடர்பில் இரு” என்று சொல்லுவார்களாம். அதுபோலவே மேடலின் தனது குழந்தைகளையும் அழைத்து அந்த உறவை பராமரிக்க விரும்பினாள். சில நேரங்களில் அது குறிப்பிடத்தக்க கேள்விகள் மற்றும் பதில்கள் நிறைந்த நீண்ட உரையாடலாக இருந்தது. மற்ற நேரங்களில், அந்த தொலைபேசி எண் இன்னும் செயல்பாட்டில் இருக்கிறதா என்று பரிசோதிக்கும் சாதாரண அழைப்பாய் கூட இருந்தது. அவரது புத்தகமான “வாக்கிங் ஆன் வாட்டர்” என்ற புத்தகத்தில், “குழந்தைகள் தொடர்பில் இருப்பது நல்லது. குழந்தைகளாகிய நாம் அனைவரும் அப்பாவுடன் தொடர்பில் இருப்பது நல்லது” என்று எழுதுகிறார். 

மத்தேயு 6:9-13இல் இடம்பெற்றுள்ள பரமண்டல ஜெபம் நமக்கு தெரியும். அதின் துவக்கவரிகள் தொடர்ந்து இடம்பெறும் வரிகளுக்கு அடிப்படையாய் அமைகிறது என்பதினால் அது மிகவும் முக்கியமானது. மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்பதற்காய் நாம் ஜெபிக்கக்கூடாது (வச. 5). நம்முடைய ஜெபம் எவ்வளவு நீளமாயிருக்கிறது என்பது முக்கியமில்லை. “வீண்வார்த்தைகளை” பயன்படுத்தி ஜெபிக்க வேண்டியதில்லை (வச. 7). நாம் கேட்பதற்கு முன்பதாகவே நம்முடைய தேவைகளை அறிந்திருக்கிற தேவனிடத்தில் (வச. 8) ஜெபிக்க தூண்டுவது என்பது அவருடனான நம்முடைய உறவை வளர்த்துக்கொள்வதற்காகவே. பிதாவோடு உறவில் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இயேசு வலியுறுத்துகிறார். பின்பு “நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது” (வச. 9) என்று கற்றுக்கொடுக்கிறார். 

நம்முடைய தேவனோடும், உலகத்தின் பிதாவுமாயிருக்கிற தேவனிடத்தில் தொடர்புகொள்ள வைக்கிறதினால், ஜெபம் என்பது இன்றியமையாதது. 

ஊக்கமளிக்கும் நீர்

பசுமை அதிசயம்” என்றே அதை நான் அழைப்பேன். இது பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு வசந்த காலத்திலும் நடக்கிறது. குளிர்கால மாதங்களில் வெளியே வரும்போது, எங்கள் முற்றத்தில் உள்ள புல்தரை தூசிபடிந்து பழுப்பு நிறத்தில் இருந்ததால் அதைக் கடந்துபோகிறவர்கள், அது காய்ந்துவிட்டதென நினைக்கலாம். அமெரிக்காவின் மேற்கு மாநிலமான கொலராடோ மலையில் பனிபொழியும். ஆனால் அதின் சமவெளிகளின் காலநிலை வறண்டும், பெரும்பாலான மாதங்கள் வறட்சி மற்றும் வெப்ப எச்சரிக்கைகள் நிறைந்தவை. ஆனால் ஒவ்வொரு ஆண்டு மே மாத இறுதியில், நான் தண்ணீர் இறைக்கும் குழாய்களைத் திறப்பேன். அதிகமாக அல்ல ஆனால் சிறிய, சீரான நீர்ப்பாசனம். சுமார் இரண்டு வாரங்களில் உலர்ந்த மற்றும் பழுப்பு நிறமானது பசுமையாக உருவாகும்.

ஊக்கம் எவ்வளவு இன்றியமையாதது என்பதை அந்தப் பச்சைப்புல் எனக்கு நினைவூட்டியது. அது இல்லாமல், நம் வாழ்க்கையும் நம் விசுவாசமும் கிட்டத்தட்ட உயிரற்ற ஒன்றை ஒத்திருக்கும். ஆனால் நிலையான ஊக்கம் நம் இதயங்கள், எண்ணங்கள் மற்றும் ஆன்மாக்களுக்குச் செய்யக் கூடியது ஆச்சரியமானதாக இருக்கிறது. தெசலோனிக்கேயர்களுக்கு பவுல் எழுதிய முதல் கடிதம் இந்த உண்மையை வலியுறுத்துகிறது. மக்கள் பதற்றத்துடனும் அச்சத்துடனும் போராடினர். அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்த வேண்டும் என்று பவுல் நினைத்தார். ஒருவரையொருவர் ஊக்குவித்தல் மற்றும் ஒருவரையொருவர் கட்டியெழுப்புதல் (1 தெசலோனிக்கேயர் 5:11) போன்ற நற்கிரியையை தொடர்ந்து செய்யுமாறு வலியுறுத்தினார். அத்தகைய புத்துணர்ச்சி இல்லாவிட்டால், அவர்களுடைய விசுவாசம் வாடிவிடும் என்பதை அவர் அறிந்திருந்தார். பவுல் இதை நேரில் அனுபவித்தார், ஏனென்றால் அதே தெசலோனிய விசுவாசிகள் அவருக்கு ஒரு ஊக்கமாக இருந்தார்கள், அவரை கட்டியெழுப்பினார்கள். உங்களுக்கும் எனக்கும் ஊக்கமளிக்க அதே வாய்ப்பு உள்ளது

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்

“அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று எனக்கு தெரியும், ஆனால் நான் உனக்கு சொல்லுகிறேன்” என்ற வாக்கியத்தை என்னுடைய அம்மா ஆயிரம் முறை சொல்லிவிட்டார்கள். தவறான நண்பர்களின் சகவாசத்தை அவ்வாறு சொல்வது வழக்கம். அந்த மந்தையை பின்பற்ற வேண்டாம் என்று அவர் எனக்கு போதிக்க முயற்சித்தார். நான் இன்னும் சிறுவனில்லை. ஆனால் மந்தையின் மனநிலை இன்னும் உயிருடன் இருக்கிறது. “உங்களை சுற்றிலும் நேர்மறையான நபர்களையே தேர்ந்தெடுங்கள்” என்பதே தற்போது பரவலாய் சொல்லப்படும் ஆலோசனை. ஆனால் அதைக் கேட்கும்போது, “இது கிறிஸ்துவின் வழியா” என்று எண்ணத் தோன்றுகிறது. 

“நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்...” என்று மத்தேயு 5ஆம் அதிகாரத்தில் இயேசு பலமுறை சொல்லுகிறார். இந்த உலகம் நமக்கு தொடர்ந்து என்ன சொல்லிக்கொண்டிருக்கிறது என்பது அவருக்குத் தெரியும். ஆனால் நாம் வித்தியாசமானவர்களாய் வாழ வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதினால் “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்... உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்” (வச. 44). புதிய ஏற்பாட்டின் பிற்பகுதியில், பவுல் அப்போஸ்தலர் “நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில்” (ரோமர் 5:10) தேவன் நம்மை நேசித்தார் என்று அதற்கான நியாயமான காரணத்தை முன்வைக்கிறார். “நான் செய்வதுபோல் செய்யாமல், நான் சொல்லுவதை செய்யுங்கள்” என்று சொல்லுகிறவர்களைப் போலல்லாமல், இயேசு செய்வதையே சொன்னார். அவர் நம்மை நேசித்து தம்முடைய ஜீவனை நமக்காய் கொடுத்தார். 

இயேசு கிறிஸ்து நல்லவர்களை மட்டும் தன்னிடம் அனுமதித்திருந்தால் என்னவாகியிருக்கும்? நாம் எங்கே இருந்திருப்போம்? தகுதி பார்த்து தெரிந்துகொள்ளாத அவருடைய அன்பிற்காய் தேவனுக்கு நன்றி. தேவன் உலகத்தின் மீது அன்புகூர்ந்தார். அதைப்போல நாமும் செய்ய அவர் நம்மை பெலப்படுத்துவார். 

தேவனின் உறுதியான தேடல்

சில ஆண்டுகளுக்கு முன் ஒருவர் சில அடிதூரம் எனக்கு முன் நடந்துகொண்டிருந்தார். அவருடைய கைநிறைய பொட்டலங்கள் இருந்தன. திடீரென, நிலைதடுமாறி அவர் விழுந்தார், பைகள் சிதறின. சிலர் அவரை தூக்கிவிட்டனர், சிதறியவற்றையும் சேகரித்து உதவினர். ஆனால் அவர்கள் அவருடைய பணப்பையைக் கவனிக்கவில்லை. நான் அதைக் கண்டு, அந்த முக்கியமான பொருளை எடுத்துக்கொண்டு, அதை அவரிடம் ஒப்படைக்கத் தீவிரமாகப் பின்தொடர்ந்தேன். "சார்,சார்" என்று நான் கத்த, இறுதியில் திரும்பினார். என்னிடம் திரும்பிய அவரிடம் நான் பணப்பையை ஒப்படைக்கையில், அவர் முகத்திலிருந்த ஆச்சரியம் கலந்த நன்றியுணர்வை என்னால் மறக்க முடியவில்லை. 

அந்த மனிதரை நான் பின்தொடர்ந்தது எனக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தந்தது.  பிரபலமான சங்கீதம் 23 ல் "என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்" (வ.6) என்பதில் வரும் "தொடரும்" என்கிற மொழியாக்கம் பொருத்தமானதுதான். என்றாலும், அதின் எபிரெய பதம் வலுவான, தீவிரமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இதன் எழுத்தியல்பான அர்த்தம் "துரத்துதல் அல்லது விரட்டுதல்", கிட்டத்தட்ட ஒரு வேட்டை விலங்கு தன் இரையைத் துரத்துவதைப்போல (ஒரு ஓநாய், ஆட்டைத் துரத்துவதாக) நினைத்துக்கொள்ளுங்கள்.

தேவனின் நன்மையும், கிருபையும் உங்களை ஏதோ கடமைக்காகப் பின்தொடர்வதைப் போலவோ, உங்கள் செல்லப்பிராணி சாவகாசமாக உங்கள் பின்னே வருவது போலவோ தவறாய் எண்ணிக்கொள்ளாதிருங்கள். நிச்சயம் இல்லை. ஒரு நோக்கத்தோடு நாம் தீவிரமாய் பின்தொடரப்படுகிறோம். பணப்பையைத் தொலைத்த அந்த மனிதன் விரட்டப்பட்டதுபோல, அழியாத மாறாத அன்பைக்கொண்டு நம்மை நேசிக்கும் நல்ல மேய்ப்பர் நம்மைத் தேடி வருகிறார்(வ.1, 6).

சிந்தனையும் ஜெபமும்

“உங்களுக்காக நான் நிச்சயமாய் ஜெபித்துக்கொள்கிறேன்.” இந்த வார்த்தைகளை நீங்கள் கேட்டிருப்பீர்களானால், அதைச் சொல்லும் நபர் உண்மையில் அதைச் சொல்கிறாரா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் எட்னா டேவிஸ் அதைச் சொல்லும்போது நீங்கள் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஒரு சிறிய நகரத்தில் உள்ள அனைவரும் எட்னாவின் மஞ்சள் நோட்டு புத்தகத்தை பக்கம் பக்கமாக அறிவர். அதில் எழுதப்பட்டிருக்கும் ஜெபக்குறிப்புகளை ஒவ்வொரு நாள் காலையிலும் சத்தமாக ஜெபப்பது அவரின் வழக்கம். அவருடைய ஜெபப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அனைவருக்கும் ஜெபத்திற்கான பதில் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் எட்னாவின் மரணத்தில், சாட்சிட்ட மக்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் தெய்வாதீனமான ஏதோ ஒன்று அவருடைய ஜெபத்தின் மூலமாகவே நடந்தது என்று சாட்சியளித்தனர். 

பேதுருவின் சிறைச்சாலை அனுபவத்தில், ஜெபத்தின் வல்லமையை தேவன் வெளிப்படுத்தினார். ஏரோது ராஜாவின் மனிதர்களால் பிடிக்கப்பட்டு, சிறையில் தள்ளப்பட்ட பிறகு, “வகுப்புக்கு நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்திய நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்தான்” (அப்போஸ்தலர் 12:4). அவன் தப்பிக்கும் வாய்ப்பிற்கு இடமேயில்லை. ஆனால் “சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்” (வச. 5). அவர்கள் பேதுருவை தங்கள் சிந்தையில் வைத்து ஜெபித்தனர். தேவன் ஆச்சரியமான ஒன்றை செய்தார். சிறைச்சாலையில் இருந்த பேதுருவுக்கு ஒரு தேவதூதன் வெளிப்பட்டு, அவனுடைய சங்கிலிகளிலிருந்து அவனை விடுவித்து, சிறைக்கு வெளியே பாதுகாப்பாக அவனை அழைத்துச் சென்றார் (வச. 7-10).

சிலர் தங்களுடைய “சிந்தனைகளையும் ஜெபங்களையும்” வீணாய் பயன்படுத்தலாம். ஆனால் நம்முடைய பரமபிதா நம்முடைய சிந்தையை அறிந்திருக்கிறார். நம்முடைய ஜெபங்களைக் கேட்கிறார., அவருடைய பரிபூரண சித்தத்தின்படி நமக்காகச் செயல்படுகிறார். சர்வ வல்லமையுள்ள ஆண்டவருக்கு நாம் ஊழியம் செய்யும்போது, நாம் மற்றவர்களுக்காக ஜெபிப்பதும், மற்றவர்கள் நமக்காக ஜெபிப்பது சிறிய காரியமல்ல. 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார். 

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம். 

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26).

 

இயேசு – மெய்யான சமாதானக் காரணர்

1862, டிசம்பர் 30ஆம் தேதி, அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் மூண்டது. எதிர் துருப்புக்கள் ஓர் ஆற்றின் எதிர்பக்கங்களில் எழுநூறு மீட்டர் இடைவெளியில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் தீ மூட்டி குளிர்காய்ந்துகொண்டிருந்தபோது, மற்றொரு பகுதியில் சிப்பாய்கள் தங்கள் வயலின்களையும் ஹார்மோனியங்களையும் எடுத்துக்கொண்டு “யாங்கி டூடுல்” என்ற இசையை வாசிக்கத் துவங்கினர். பதிலுக்கு, மறுபக்கத்தில் இருந்த வீரர்கள் “டிக்ஸி” என்று ஓர் பாடல் இசையை  வாசித்தனர். அப்படி மாறி மாறி வாசிக்கையில், இறுதியில் இருதரப்பினரும் இணைந்து “ஹோம், ஸ்வீட் ஹோம்” என்ற இசையை வாசித்தனர். ஒன்றுக்கொன்று எதிரிகளாய் இருந்த இரண்டு தேசத்து இராணுவ வீரர்களும் இரவில் இசையைப் பகிர்ந்து, கற்பனைசெய்ய முடியாத அளவு சமாதானத்தை பிரதிபலித்தனர். இருப்பினும் அந்த மெல்லிசைப் போர்நிறுத்தம் குறுகிய காலமே நீடித்தது. மறுநாள் காலை, அவர்கள் தங்கள் இசைக்கருவிகளை கீழே வைத்துவிட்டு, தங்கள் துப்பாக்கிகளை கையில் எடுத்தனர். அந்த போரில் 24,645 வீரர்கள் உயிரிழந்தனர்.

அமைதியை உருவாக்குவதற்கான நமது மனித முயற்சிகள் தவிர்க்க முடியாமல் பெலனற்றுபோகிறது. பகைமைகள் ஓர் இடத்தில் அணைந்து, வேறொரு இடத்தில் நெருப்பை பற்றவைக்கிறது. ஓர் குடும்பப் பிரச்சனை திடீரென்று முடிவுக்கு வரும், சிறிது நாட்கள் கழித்து மறுபடியும் சூடுபிடிக்கும். நமக்கு நம்பிக்கையான சமாதானக் காரணர் தேவன் மட்டுமே என்று வேதம் சொல்லுகிறது. “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டு” (16:33) என்று இயேசு தெளிவுபடுத்துகிறார். இயேசுவில் நாம் இளைப்பாறக்கூடும். அவருடைய சமாதானப் பணியில் நாமும் இணைந்துகொள்ளும்போது, மெய்யான சமாதானத்தை அவர் நமக்கு அருளுவார். 

இவ்வுலகத்தின் உபத்திரவ பாதையிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியாது என்று இயேசு கூறுகிறார். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (வச. 33) என்று இயேசு சொல்லுகிறார். நம்முடைய முயற்சிகள் பல சமயங்களில் பயனற்றவையாக இருந்தாலும், நம் அன்பான தேவன் (வச. 27) இந்த உடைந்த உலகில் நமக்கு சமாதானத்தை அருளுகிறார். 

 

கிறிஸ்துவின் சமூகம்

“வீட்டையும், என் மனைவி, மகன் மற்றும் மகளையும் மறந்துவிடுவதே வெற்றிக்கான ஒரே வழி என்று எனக்குத் தெரியும்; ஆனால் என்னால் அதை செய்ய முடியாது என்று கண்டுபிடித்தேன்; அவை என் இதயம் மற்றும் ஆன்மாவில் பிணைக்கப்பட்டுள்ளன” என்று ஜோர்டன் கூறினார். அவர் ஓர் தொலைதூரப் பகுதியில் தனியாக, ஓர் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுக்கொண்டிருந்தார். அங்கு போட்டியாளர்கள் முடிந்தவரை குறைந்தபட்ச பொருட்களுடன் சமவெளியில் உயிர்வாழுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அங்கிருக்கக்கூடிய பயங்கரமான கரடிகள், உறைபனி, காயங்கள் மற்றும் பசி ஆகியவைகளை அவரால் சமாளிக்க முடிந்திருந்தும், தன் குடும்பத்தைவிட்டு பிரிந்திருக்கும் தனிமையை அவரால் மேற்கொள்ள முடியவில்லை. அந்த ஆட்டத்தை கைவிட அவைகள் அவரை கட்டாயப்படுத்தியது. 

வனாந்தரத்தில் உயிர்வாழ தேவையான அனைத்து காரியங்களும் நம்மிடம் இருந்தாலும், நம்முடைய சமூகத்தினின்று நாம் பிரிந்திருப்பது நம்மை தோல்விக்கு நேராய் நடத்தக்கூடும். பிரசங்கி புத்தகத்தில் ஞானி, “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்... ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்” (4:9-10) என்று குறிப்பிடுகிறார். கிறிஸ்துவை கனப்படுத்தும் சமூகம், குழப்பம் ஏற்படுத்தினாலும்கூட, அவைகள் நமது வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இந்த உலகத்தின் சோதனைகளை நாம் சொந்தமாகச் சமாளிக்க முயற்சித்தால் அவைகளை நாம் மேற்கொள்ள முடியாது. “ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்” (வச. 8) அவனுடைய பிரயாசம் விருதாவாயிருக்கிறது. சமூகத்தில் இல்லாமல் தனித்திருந்தால் நாம் அபாயத்தை சந்திக்கக்கூடும் (வச. 11-12). “முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது” (வச. 12). அன்பான, கிறிஸ்துவை மையமாகக் கொண்ட சமூகத்தின் பரிசு, ஊக்கத்தை அளிப்பது மட்டுமல்லாமல், சவாலான சூழ்நிலைகளிலும் செழிக்க நமக்கு பலத்தையும் அளிக்கிறது. நமக்கு மற்றவர்களின் ஆதரவும் அவசியப்படுகிறது.