எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜாண் பிளேஸ்கட்டுரைகள்

இயேசுவைப் போல நேசித்தல்

இத்தாலியின் காஸ்னிகோவைச் சேர்ந்த டான் குசெப் பெரடெல்லி அனைவராலும் நேசிக்கப்பட்டவர் என்று கூறப்பட்டது. “சமாதானமும் நன்மையும்” என்று வாழ்த்திக்கொண்டே, டான் ஒரு பழைய மோட்டார் சைக்கிளில் நகரத்தைச் சுற்றி வந்துகொண்டிருந்த ஒரு அன்பான மனிதர். அனைவருக்கும் அயராது நன்மைகளைச் செய்து வந்தார். ஆனால், அவரது வாழ்க்கையின் இறுதியில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உடல்நலம் கவலைக்கிடமானது. அவர் வாழ்ந்த அந்தப் பகுதி மக்கள் அவருக்கு உதவ ஒரு சுவாசக் கருவியை வாங்கி கொடுத்தனர். ஆனால், அவரது நிலை மேலும் மோசமடைந்தபோது, அவர் சுவாசக் கருவியைப் பயன்படுத்த மறுத்து, அதை தேவையள்ள ஒரு இளம் நோயாளிக்குப் பயன்படுத்த கேட்டுக்கொண்டார். அவர் மறுத்ததைக் கேட்டது யாரையும் ஆச்சரியப்படுத்தவில்லை, ஏனென்றால் பிறரை நேசிப்பதற்காகவே நேசிக்கப்பட்ட மற்றும் போற்றப்பட்ட ஒரு மனிதனுக்கான அவரது குணாதிசயத்தில் அது இருந்தது.

‘நேசிக்கப்பட்டதற்காக நேசித்தல்’, இதுவே அப்போஸ்தலன் யோவான் தனது சுவிசேஷம் முழுவதிலும் பறைசாற்றும் செய்தி. அன்புகூறப்படுவதும் பிறரிடம் அன்பு கூறுவதும், வானிலையைப் பொருட்படுத்தாமல் இரவும் பகலும் ஒலிக்கும் ஒரு ஆலய மணியைப் போன்றதாகும். யோவான் 15-ல், இப்படி அன்பு கூறுபவர்களின் உச்சகட்டம், அது அனைவராலும் விரும்பப்படுவதில்லை, ஆனால் அளவில்லாமல் எல்லோரையும் நேசிப்பதே மிகப்பெரிய அன்பு என்று யோவான் கூறுகிறார்: “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அன்பு ஒருவரிடத்திலுமில்லை.”(வ. 13).

மனிதர்களின் தியாக அன்பிற்கான எடுத்துக்காட்டுகள் எப்போதும் ஊக்குவிக்கின்றன. எனினும் தேவனின் மகாபெரிய அன்போடு ஒப்பிடுகையில் அவைகள் மங்கிப்போகின்றது. ஆனால் இயேசுவின் கட்டளையான, “நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.” (வ. 12) என்பது நாம் தவறவிடக்கூடாத அழைப்பு. ஆம், எல்லோரிடமும் அன்பாயிருப்போம்..

தேவனிடத்தில் அழைப்பு பெறுதல்

“வாழ்க்கைக்காய் தத்தெடுக்கப்பட்டது” என்னும் புத்தகத்தில், டாக்டர். ரஸ்ஸல் மூர் ஒரு குழந்தையைத் தத்தெடுப்பதற்காக அனாதை இல்லத்திற்கு தனது குடும்பத்தினர் மேற்கொண்ட பயணத்தை விவரிக்கிறார். அவர்கள் அந்த இல்லத்திற்குள் நுழையும் போது, அங்கு நிலவிய அமைதியான சூழல் அவர்களை திடுக்கிட வைத்தது. தொட்டிலில் இருந்த குழந்தைகள் அழவில்லை. அவைகளுக்கு எதுவும் தேவையில்லை என்பதினால் அல்ல; மாறாக, அழுதாலும் யாரும் அவர்கள் மீது அக்கறை காட்டமாட்டார்கள் என்பதை அவைகள் நன்று அனுபவித்திருந்தன என்பதினால் அமைதி காத்தனர்.

அந்த வார்த்தைகளை வாசிக்கையில் என் மனம் வலித்தது. எங்கள் குழந்தைகள் சிறியவர்களாக இருந்த எண்ணற்ற இரவுகள் எனக்கு நினைவிருக்கிறது. “அப்பா, எனக்கு உடம்பு சரியில்லை!” அல்லது “அம்மா, எனக்கு பயமாயிருக்கிறது!” என்று சொன்னமாத்திரத்தில் எங்களில் ஒருவர் செயலில் இறங்கி, அவர்களை ஆறுதல்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய அவர்களின் படுக்கையறைக்குச் சென்றது நினைவிருக்கிறது. எங்கள் குழந்தைகள் மீது எங்களுக்குள்ள அன்பு, அவர்களுடைய தேவையில் அவர்கள் எங்களை அழைப்பதற்கான காரணத்தை கொடுத்தது.

பெரும்பாலான சங்கீதங்கள் தேவனிடத்தில் ஏறெடுக்கப்பட்ட அழுகைகளையும் புலம்பல்களையும் உள்ளடக்கியுள்ளது. அவர்களுடனான தனிப்பட்ட உறவின் அடிப்படையில் இஸ்ரவேல் தங்கள் புலம்பல்களை தேவனிடத்தில் கொண்டுவந்தது. தேவன் தன்னுடைய “சேஷ்டபுத்திரன்” (யாத்திராகமம் 4:22) என்னும் அங்கீகாரத்தைக் கொடுத்தார். அவர்களும் தங்களுடைய தேவைகளை தகப்பனிடத்தில் கொண்டுவந்தனர். இத்தகைய நேர்மையான நம்பிக்கை சங்கீதம் 25-ல் காணப்படுகிறது: “என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்... என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்.” பராமரிப்பாளரின் அன்பில் நம்பிக்கை கொண்ட குழந்தைகள் மட்டுமே அழுகிறார்கள். இயேசுவின் விசுவாசிகளாக, தேவனின் பிள்ளைகளாக அவரை நோக்கிக் கூப்பிடுவதற்கான காரணத்தை அவர் நமக்குத் தந்திருக்கிறார். அவர் நம்மை அதிகமாய் நேசிக்கிறபடியால் நம்முடைய ஜெபங்களைக் கேட்கிறார், நம்மை பாதுகாக்கிறார். 

- ஜாண் பிளேஸ்

என்ன அருமையான சிநேகிதன்!

என்னுடைய நீண்டகால நண்பனும் நானும் சந்தித்து பல ஆண்டுகள் ஆகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் என்னுடைய சிநேகிதன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டு வந்தார். அவருடைய ஊருக்கு எதிர்பாராதவிதமாய் செல்லவேண்டியிருந்ததினால் அவரை சந்திக்க நேரிட்டது. நாங்கள் இருவரும் உணவுவிடுதிக்குள் நுழையும்போது எங்கள் இருவருடைய கண்களும் கண்ணீரால் ததும்பியது. பல வருடங்களுக்கு முன்பாக அதே ஓட்டல் அறையில் நாங்கள் உட்கார்ந்து உணவு அருந்தியிருக்கிறோம். ஆனால் இப்போது மரணம் அருகாமையில் நின்று, வாழ்க்கையின் சொற்பத்தன்மையை எங்களுக்கு விளங்கச் செய்தது. சாகசங்கள், குறும்புகள், சிரிப்பு, இழப்பு, காதல் போன்ற உணர்வுகள் நிறைந்த நீண்ட நட்பிலிருந்து எங்கள் கண்களில் கண்ணீர் வந்தது. நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டபோது எங்கள் கண்களின் ஓரத்திலிருந்து அன்பு சிந்தியது.  
இயேசுவும் கண்ணீர் சிந்தியிருக்கிறார். “ஆண்டவரே, வந்து பாரும்” (யோவான் 11:34) என்று யூதர்கள் இயேசுவிடம் சொன்னமாத்திரத்தில், தன்னுடைய நெருங்கிய சிநேகிதனான லாசருவின் கல்லறைக்கு முன்பாக இயேசு வந்து நிற்கிறார். இயேசு மனுஷீகத்தோடு மாம்சத்தை பகிர்ந்துகொண்டார் என்பதற்கு “இயேசு கண்ணீர்விட்டார்” (வச.35) என்றும் இரண்டு வார்த்தைகள் மிகுந்த ஆதாரமாய் அமைகிறது. யோவான் பதிவுசெய்யாத சில காரியங்கள் அங்கே நிகழ்ந்திருக்கக்கூடுமோ? ஆம். ஆகிலும் அங்கே நின்றிருந்த யூதர்கள், “இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார்” (வச. 36) என்று சொல்லுகிறார்கள். இந்த வரிகள், நம்முடைய எல்லா பெலவீனங்களையும் நன்கு அறிந்த ஒரு சிநேகிதரை நின்று ஆராதிக்க போதுமான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இயேசு மாம்சமும் இரத்தமும் கண்ணீரும் உடையவராயிருந்தார். இயேசு நம்மை நேசித்து புரிந்துகொள்ளும் இரட்சகர்.  

நமது புகலிடம்

வட அமெரிக்காவில் எருமைகள் நடமாடிய இடம் அது. உண்மையில் அப்படியாகத்தான் ஆரம்பத்தில் அது இருந்தது. அப்பகுதியில் மக்கள் மந்தைகளுடனும், பயிர்களுடனும் குடியேறும் வரை, சமவெளி இந்தியர்கள் காட்டெருமைகளை அங்கே பின்தொடர்ந்து கொண்டிருந்தனர். பியர்ல் துறைமுகத்தில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இரசாயன உற்பத்தித் தளமாகப் பயன்படுத்தப்பட்டது, பின்னர் பனிப்போர் ஆயுதங்களை, இராணுவ துருப்புக்களைத் திரும்பப் பெறும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஒரு நாள் வழுக்கைக் கழுகுகளின் கூட்டம் அங்கே அடைக்கலம் புகுந்திருந்தது. விரைவில் அவ்விடத்தில் "ராக்கி மவுண்டன் ஆர்சனல் தேசிய வனவிலங்கு புகலிடம்” உருவானது. கொலராடோவின் டென்வர் பெருநகரத்தின் விளிம்புகளில் புல்வெளி, ஈரநிலம் மற்றும் வனப்பகுதி வாழ்விடமாகிய பதினைந்தாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இப்பகுதியானது இப்போது நாட்டின் மிகப்பெரிய நகர்ப்புற சரணாலயங்களில் ஒன்றாகும். கருங்கால் ஃபெரெட்டுகள் முதல் வழுக்கை கழுகுகள், துளையிடும் ஆந்தைகள் வரை முந்நூறுக்கும் மேற்பட்ட விலங்கினங்களுக்குப் பாதுகாப்பான இல்லமாக இன்று உள்ளது. உங்களால் இதை யூகித்துப் பார்க்க முடிந்ததா? எருமைகள் நடமாடிய இடம். 
 
"தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்" (62:8) என சங்கீதக்காரன் கூறுகிறார். உலகில் உள்ள எந்தவொரு நம்பிக்கையான புகலிடத்தையும் விட, தேவனுடைய பிரசன்னம் நமக்கு உண்மையான அடைக்கலமாய், பாதுகாப்பாய் இருக்கிறது "அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்" (அப்போஸ்தலர் 17:28), எனவே "எல்லா நேரங்களிலும்" நாம் நம்பிக்கை வைக்கக்கூடிய நமது அடைக்கலம் தேவனே (சங்கீதம் 62:8). அவர் நம்முடைய சரணாலயமாக இருக்கிறார். அவரிடம் நாம் தைரியமாக நம் எல்லா ஜெபங்களாலும் நம் இருதயத்தில் உள்ளவைகளை ஊற்றலாம். தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்: அவர் நேற்றும், இன்றும், எப்போதும் அடைக்கலமானவராகவே இருக்கிறார்

தொடர்பில் இருப்போம்

மேடலின், வாரம் ஒருமுறை தன் அம்மாவை போனில் தொடர்புகொண்டு அழைப்பதை வழக்கமாக வைத்திருந்தாள். ஆவிக்குரிய எழுத்தாளரான அவளது அம்மா தன்னுடைய முதிர்வயதில், “என்னோடு அடிக்கடி தொடர்பில் இரு” என்று சொல்லுவார்களாம். அதுபோலவே மேடலின் தனது குழந்தைகளையும் அழைத்து அந்த உறவை பராமரிக்க விரும்பினாள். சில நேரங்களில் அது குறிப்பிடத்தக்க கேள்விகள் மற்றும் பதில்கள் நிறைந்த நீண்ட உரையாடலாக இருந்தது. மற்ற நேரங்களில், அந்த தொலைபேசி எண் இன்னும் செயல்பாட்டில் இருக்கிறதா என்று பரிசோதிக்கும் சாதாரண அழைப்பாய் கூட இருந்தது. அவரது புத்தகமான “வாக்கிங் ஆன் வாட்டர்” என்ற புத்தகத்தில், “குழந்தைகள் தொடர்பில் இருப்பது நல்லது. குழந்தைகளாகிய நாம் அனைவரும் அப்பாவுடன் தொடர்பில் இருப்பது நல்லது” என்று எழுதுகிறார்.  
மத்தேயு 6:9-13இல் இடம்பெற்றுள்ள பரமண்டல ஜெபம் நமக்கு தெரியும். அதின் துவக்கவரிகள் தொடர்ந்து இடம்பெறும் வரிகளுக்கு அடிப்படையாய் அமைகிறது என்பதினால் அது மிகவும் முக்கியமானது. மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்பதற்காய் நாம் ஜெபிக்கக்கூடாது (வச. 5). நம்முடைய ஜெபம் எவ்வளவு நீளமாயிருக்கிறது என்பது முக்கியமில்லை. “வீண்வார்த்தைகளை” பயன்படுத்தி ஜெபிக்க வேண்டியதில்லை (வச. 7). நாம் கேட்பதற்கு முன்பதாகவே நம்முடைய தேவைகளை அறிந்திருக்கிற தேவனிடத்தில் (வச. 8) ஜெபிக்க தூண்டுவது என்பது அவருடனான நம்முடைய உறவை வளர்த்துக்கொள்வதற்காகவே. பிதாவோடு உறவில் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இயேசு வலியுறுத்துகிறார். பின்பு “நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது” (வச. 9) என்று கற்றுக்கொடுக்கிறார்.  
நம்முடைய தேவனோடும், உலகத்தின் பிதாவுமாயிருக்கிற தேவனிடத்தில் தொடர்புகொள்ள வைக்கிறதினால், ஜெபம் என்பது இன்றியமையாதது.  

ஊக்கமளிக்கும் நீர்

பசுமை அதிசயம்” என்றே அதை நான் அழைப்பேன். இது பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு வசந்த காலத்திலும் நடக்கிறது. குளிர்கால மாதங்களில் வெளியே வரும்போது, எங்கள் முற்றத்தில் உள்ள புல்தரை தூசிபடிந்து பழுப்பு நிறத்தில் இருந்ததால் அதைக் கடந்துபோகிறவர்கள், அது காய்ந்துவிட்டதென நினைக்கலாம். அமெரிக்காவின் மேற்கு மாநிலமான கொலராடோ மலையில் பனிபொழியும். ஆனால் அதின் சமவெளிகளின் காலநிலை வறண்டும், பெரும்பாலான மாதங்கள் வறட்சி மற்றும் வெப்ப எச்சரிக்கைகள் நிறைந்தவை. ஆனால் ஒவ்வொரு ஆண்டு மே மாத இறுதியில், நான் தண்ணீர் இறைக்கும் குழாய்களைத் திறப்பேன். அதிகமாக அல்ல ஆனால் சிறிய, சீரான நீர்ப்பாசனம். சுமார் இரண்டு வாரங்களில் உலர்ந்த மற்றும் பழுப்பு நிறமானது பசுமையாக உருவாகும்.

ஊக்கம் எவ்வளவு இன்றியமையாதது என்பதை அந்தப் பச்சைப்புல் எனக்கு நினைவூட்டியது. அது இல்லாமல், நம் வாழ்க்கையும் நம் விசுவாசமும் கிட்டத்தட்ட உயிரற்ற ஒன்றை ஒத்திருக்கும். ஆனால் நிலையான ஊக்கம் நம் இதயங்கள், எண்ணங்கள் மற்றும் ஆன்மாக்களுக்குச் செய்யக் கூடியது ஆச்சரியமானதாக இருக்கிறது. தெசலோனிக்கேயர்களுக்கு பவுல் எழுதிய முதல் கடிதம் இந்த உண்மையை வலியுறுத்துகிறது. மக்கள் பதற்றத்துடனும் அச்சத்துடனும் போராடினர். அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்த வேண்டும் என்று பவுல் நினைத்தார். ஒருவரையொருவர் ஊக்குவித்தல் மற்றும் ஒருவரையொருவர் கட்டியெழுப்புதல் (1 தெசலோனிக்கேயர் 5:11) போன்ற நற்கிரியையை தொடர்ந்து செய்யுமாறு வலியுறுத்தினார். அத்தகைய புத்துணர்ச்சி இல்லாவிட்டால், அவர்களுடைய விசுவாசம் வாடிவிடும் என்பதை அவர் அறிந்திருந்தார். பவுல் இதை நேரில் அனுபவித்தார், ஏனென்றால் அதே தெசலோனிய விசுவாசிகள் அவருக்கு ஒரு ஊக்கமாக இருந்தார்கள், அவரை கட்டியெழுப்பினார்கள். உங்களுக்கும் எனக்கும் ஊக்கமளிக்க அதே வாய்ப்பு உள்ளது

'கிட்டத்தட்ட உண்மை' எனப்படுவதும் பொய்யே

ஒளிப்பதிவு? சிறப்பாக இருந்தது. தோற்றம்? நம்பக்கூடியது. கருத்து? சுவாரஸ்யமானதும், தொடர்புள்ளதுமானது. பாலிவுட் நடிகரான அமீர் கான், வழக்கத்திற்கு மாறான அரசியல் ரீதியான அறிக்கைகளை வெளியிடும் காணொளியாக அது இருந்தது. இணையத்தில் பலர் இது உண்மை என்று நம்பினர், மேலும் இது நடிகரின் புதிய அறிவிப்பாக இருக்கலாம் என்றும்  எண்ணினர்.

ஆனால் இந்த பிரபலமான காணொளி போலியானது. இது செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி நடிகரின் போலியான ஆள்மாறாட்டம் ஆகும், மேலும் இது கலகத்தை உருவாக்கும் சுயநல நோக்கோடு புனையப்பட்டது. உண்மையில் அந்த அறிக்கைகளை நடிகர் வெளியிடவில்லை, மேலும் காணொளியானது அதிக பரபரப்பானது போலவே, அது பொய்யை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

நமது தொழில்நுட்பங்களின் காரணமாக, பொய்கள் பெரிதாக்கப்பட்டு, அவை உண்மை என்று நம்மை நம்ப வைக்கும் அளவுக்குப் பெருகிக்கொண்டிருக்கும் யுகத்தில் நாம் வாழ்கிறோம். தெய்வீக ஞானத்தின் தொகுப்பான நீதிமொழிகள் என்ற புத்தகம், உண்மைக்கும் பொய்க்கும் இடையே உள்ள அப்பட்டமான வித்தியாசத்தைப் பற்றி அடிக்கடி பேசுகிறது. "சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய் நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்" (12:19). அடுத்த பழமொழியே நமக்குச் சொல்கிறது, "தீங்கைப் பிணைக்கிறவர்களின் இருதயத்தில் இருக்கிறது கபடம்; சமாதானம்பண்ணுகிற ஆலோசனைக்காரருக்கு உள்ளது சந்தோஷம்" (வ.20).

தேவனின் கட்டளைகள் முதல் பாலிவுட் நடிகர்கள் பற்றிய காணொளிகள் வரை, அனைத்திற்கும் நேர்மை பொருந்தும். சத்தியம்  "என்றென்றைக்கும்  நிலைத்திருக்கும்"

சோ்ந்திருந்து மலைகளை மேற்கொள்ளுதல்

இந்த பழமொழியை சில மாற்றங்களோடு நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் அல்லது பார்த்திருக்கலாம்: "நீங்கள் வேகமாகச் செல்ல விரும்பினால், தனியாகச் செல்லுங்கள். ஆனால் நீங்கள் வெகுதூரம் செல்ல விரும்பினால், ஒன்றாகச் செல்லுங்கள்" இது ஒரு அழகான சிந்தனை, இல்லையா? ஆனால் இந்த வார்த்தைகள் அழகானவை மட்டுமல்ல, உண்மையும் கூட என்பதை உறுதிப்படுத்த ஏதேனும் திடமான ஆராய்ச்சி உள்ளதா?

ஆம்! உண்மையில், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் அத்தகைய ஒரு ஆய்வு, மக்கள் தனியாகச் செல்வதைக் காட்டிலும்  வேறு ஒருவருடன் செல்லும்போதும் மலைகளின் தூர அளவு கணிசமாகக் குறைவதாக தெரிவதை அது நிரூபித்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், "சமுதாய ஆதரவு" முக்கியமானது; அது மலைகளின் அளவைக் கூட நம் மனதில் சுருங்கச் செய்கிறது.

யோனத்தானுடனான நட்பில் அந்த வகையான ஊக்கம் அழகானதாகவும் உண்மையாகவும் இருப்பதை தாவீது கண்டார். தாவீதின் கதையில் சவுல் ராஜாவின் பொறாமையான கோபம் தனது உயிரை வாங்கக்கூடிய அளவு  கடக்க முடியாத மலை போல் இருந்தது (பார்க்க 1 சாமுவேல் 19:9-18). எந்தவொரு ஆதரவுமின்றி, இந்த விஷயத்தில் அவரது நெருங்கிய தோழனின்றி, கதை முற்றிலும் வேறுபட்டிருக்கலாம். ஆனால் யோனத்தான், "தன் தகப்பன் தாவீதை நிந்தித்துச் சொன்னது அவனுக்கு மனநோவாயிருந்தது" (20:34), தனது நண்பருக்கு ஆதரவாக நின்றார். "அவன் ஏன் கொல்லப்பட வேண்டும்?" என்று கேட்டார் (வ. 32). தேவன் நியமித்த அவர்களுடைய நட்பு தாவீதை இஸ்ரவேலின் ராஜாவாக ஆக்க அனுமதித்தது.

நமது நட்பு முக்கியமானது. தேவன் நமது மையத்தில் இருக்கும்போது, ​​நாம் கற்பனை செய்வதை விடப் பெரிய காரியங்களைச் செய்ய ஒருவரையொருவர் ஊக்குவிக்லாம்.

மீட்டெடுக்கும் பயிற்சி

நீங்கள் எப்போதாவது ஒரு கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, அதை இடையில் நிறுத்திவிட்டு, அது எப்போது நிகழ்ந்தது அல்லது யார் என்று குழம்பி யோசித்திருக்கிறீர்களா? காலப்போக்கில் நினைவாற்றல் மங்கிவிடும் என்று நாம் அடிக்கடி நம்புகிறோம். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் அந்த கருத்தை ஆதரிக்கவில்லை. உண்மையில், அவை நமது நினைவாற்றல் பிரச்சனையல்ல என்பதைக் குறிப்பிடுகின்றன. அந்த நினைவுகளை மீட்டெடுப்பது நமது திறமை என்று கருதுகின்றன. நினைவுகளை சில வழக்கமான ஒத்திகை இல்லாமல் அணுகுவது கடினமாகிவிடும்.

அந்த மீட்டெடுப்பு திறனை மேம்படுத்துவதற்கான வழிகளில் ஒன்று, வழக்கமான திட்டமிடப்பட்ட செயல்கள் அல்லது குறிப்பிட்ட நினைவகத்தை நினைவுபடுத்தும் அனுபவங்கள். நமது சிருஷ்டிக்கர்த்தர் இதை அறிந்திருந்தார். எனவே அவர் இஸ்ரவேல் புத்திரருக்கு வாரத்தில் ஒரு நாளை தேவனை ஆராதிக்கும் ஓய்வுநாளாக ஏற்படுத்தியிருந்தார். அத்தகைய ஓய்வினிமித்தம் நாம் மனப் பயிற்சிக்கான வாய்ப்பைப் பெறுகிறோம். “கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி(னார்)” (யாத்திராகமம் 20:11). இது நம்மால் உண்டானது அல்ல; தேவனுடைய திட்டம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். 

நம் வாழ்க்கையின் அவசரத்தில், தேவன் நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் என்ன செய்திருக்கிறார் என்ற நினைவுகளில் சில நேரங்களில் நம் பிடியை நாம் இழக்க நேரிடுகிறது. நம் வாழ்க்கையை யார் உன்னிப்பாகக் கண்காணிக்கிறார்கள் என்பதையும், நாம் அதிகமாகவும் தனிமையாகவும் உணரும்போது அவர் நம்மோடு இருப்பதாக வாக்களித்ததை நாம் மறந்துவிடுகிறோம். நம்முடைய வழக்கமான வாழ்க்கைப் பயணத்திலிருந்து ஒரு நாளை ஓய்வுநாளாய் ஆசரிப்பதின் மூலம் நாம் தேவனையும் “அவர் செய்த சகல உபகாரங்களையும்” (சங்கீதம் 103:2) நினைவுகூர வலியுறுத்தப்படுகிறோம். 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவுக்காக உற்சாகத்தை பகிர்தல்

எங்கள் அயலகத்தரான மணியை நாங்கள் முதன்முதலில் சந்தித்தபோது, அவர் கையில் வைத்திருந்த பையிலிருந்து நன்கு தேய்ந்த வேதாகமத்தை வெளியே எடுத்தார். கண்கள் பிரகாசிக்க, அவர் வேதத்தைப் பற்றி விவாதிக்க விரும்புகிறீர்களா என்று கேட்டார். நாங்களும் தலையசைக்க, அவர் குறிப்பெடுத்த சில பத்திகளை புரட்டினார். அவர் தனது குறிப்புகள் நிறைந்த ஒரு பதிவேட்டை எங்களிடம் காட்டினார், மேலும் கணினியை பயன்படுத்தி விளக்க இது தொடர்பான பிற தகவல்களை தான் தயாரித்திருப்பதாக கூறினார்.

அவர் ஒரு கடினமான குடும்ப சூழ்நிலையிலிருந்து எவ்வாறு வந்தார் என்பதை எங்களிடம் கூறினார். மேலும், தனியாக மோசமான நிலையில், இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் தனது நம்பிக்கையின் அடித்தளமாக ஏற்றுக்கொண்டார் (அப்போஸ்தலர் 4:12). வேதத்தின் கோட்பாடுகளைப் பின்பற்ற ஆவியானவர் உதவியதால் அவருடைய வாழ்க்கை மாறிவிட்டது. மணி தனது வாழ்க்கையை பல ஆண்டுகளுக்கு முன்பே தேவனிடம் அர்ப்பணித்திருந்தாலும், அவரது உற்சாகம் புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் இருந்தது.

இவரது வைராக்கியம்; இயேசுவுடன் பல வருடங்கள் நடந்துகொண்டிருந்த ஒருவராக எனது ஆவிக்குரிய ஈடுபாட்டை கருத்தில் கொள்ள என்னை தூண்டியது. “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்” (ரோமர் 12:11) என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். இயேசு எனக்காகச் செய்த அனைத்திற்கும் தொடர்ந்து நன்றி செலுத்துவதைப் பிரதிபலிக்கும் மனப்பான்மையை என்னில் வளர்க்க வேதத்தை நான் அனுமதிக்காத வரை, அது ஒரு கடினமான கட்டளையாக தோன்றுகிறது.

வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் உணர்வுபூர்வமான ஏற்றத் தாழ்வுகளைப் போலல்லாமல், கிறிஸ்துவுக்கான வைராக்கியம் அவருடன் எப்போதும் பெருகிக்கொண்டேயிருக்கும் உறவிலிருந்தே வருகிறது. அவரைப் பற்றி நாம் எவ்வளவு அதிகமாகக் கற்றுக்கொள்கிறோமோ, அவ்வளவு விலைமதிப்பற்றவராக அவர் மாறுகிறார், மேலும் அவருடைய நற்குணம் நம் ஆத்துமாவை நிரப்பி இவ்வுலகில் வழிந்தோடுகிறது.

தேவன் தருவதை உபயோகித்தல்

1920களின் வியப்பூட்டும் திட்டம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் சிட்டி ஹால் ஆகும். மைக்கேல் ஏஞ்சலோ தனது டேவிட் சிற்பத்திற்குப் பயன்படுத்திய அதே குவாரியில் எடுக்கப்பட்ட பளிங்குக் கற்கள் வெண்மையான படிக்கட்டுகளை பெருமைப்படுத்தின. அதின் கோபுரம் வெனிஸின் தூய மாற்கு ஆலய கோபுரத்தின் பிரதி, மேலும் தாமிரத்திலான குவிமாடம் (உருண்டையான கோபுரம்) பூமியின் தெற்கு அரைக்கோளத்திலேயே மிகப்பெரியது. கட்டிடம் கட்டுபவர்கள் ஒரு பெரிய சமாதான தூதனின் சிலையால் உச்சியை அலங்கரிக்க நினைத்தனர், ஆனால் ஒரு சிக்கல் இருந்தது: பணம் எதுவும் இல்லை. குழாய்களை செப்பனிடும் ஃபிரெட் ஜான்சன் உதவிக்கு வந்தார். அவர் ஒரு கழிப்பறை தொட்டி, ஒரு பழைய விளக்கு கம்பம் மற்றும் பயனற்ற உலோகத் துண்டுகளைப் பயன்படுத்தி, கோபுரத்தை ஏறக்குறைய நூறு ஆண்டுகளாக அலங்கரிக்கும், மகுடம் சூடிய மணிமுடியை உருவாக்கினார்.

ஃபிரெட் ஜான்சன் மற்றும் அவரிடம் இருந்ததைப் பயன்படுத்தினதைப் போலவே, நம்மிடம் உள்ள பெரிய அல்லது சிறிய அனைத்தையும் கொடுத்து தேவனின் பணியை செய்யலாம். இஸ்ரவேலை தலைமைதாங்கி எகிப்திலிருந்து வெளியேற்றும்படி மோசேயிடம் கடவுள் கேட்டபோது, மோசே “அவர்கள்.. என் வாக்குக்குச் செவிகொடார்கள்” (4:1) என்று தடுமாறினார். தேவன், “உன் கையில் இருக்கிறது என்ன” (வ. 2) என்று எளியமையான கேள்வியில் பதிலளித்தார். மோசேயிடம் கோலிருந்தது, வெறும் குச்சிதான். தேவன் அதைத் தரையிலே போடு என்றார், “அது சர்ப்பமாயிற்று” (வ. 3). பின்னர் அவர் சர்ப்பத்தை எடுக்க மோசேயிடம் அறிவுறுத்தினார், அது மீண்டும் ஒரு கோலாக மாறியது. மோசே செய்ய வேண்டியதெல்லாம், கோலை எடுத்துக்கொண்டு போவதும் மற்றதைச் செய்யம்படி அவரை நம்புவதுமே என்று தேவன் விளக்கினார். வியப்பூட்டும் வகையில், எகிப்தியர்களிடமிருந்து இஸ்ரவேலை மீட்க மோசேயின் கையில் இருந்த அந்த கோலை பயன்படுத்துவார் (7:10–12; 17:5–7).

நம்மிடம் இருப்பது நமக்கே பெரிதாகத் தோன்றாமல் இருக்கலாம், ஆனால் தேவனுக்கு நம்மிடம் இருப்பதே போதுமானதாக இருக்கும். நம்மிடம் உள்ள சாதாரண பொருட்களை எடுத்து தன் பணிக்கு பயன்படுத்துகிறார்.

தேவன் நமது அடைக்கலம்

2019 ஆம் ஆண்டின் வியத்தகு திரைப்படமான ‘லிட்டில் வுமன்’, என்னிடமிருந்த அதின் மூல நாவலின் பழையதாகிப்போன பிரதியை படிக்க உந்தியது. குறிப்பாக, விவேகமும் மென்மையும் படைத்த தாயார் மர்மியின் ஆறுதல் வார்த்தைகளை. அந்த நாவல் சித்தரித்த அவளுடைய உறுதியான நம்பிக்கையால் நான் ஈர்க்கப்பட்டேன், இது அவளுடைய மகள்களுக்கு ஊக்கமளிக்கும் பல வார்த்தைகளில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. எனக்குப் பிரத்யேகமாகத் தெரிந்தது இதுதான்: “சிக்கல்கள் மற்றும் சோதனைகள் . . . பல இருக்கலாம், ஆனால் உங்கள் பரலோகத் தகப்பனின் பலத்தையும் மென்மையையும் நீங்கள் உணரக் கற்றுக்கொண்டால், அவற்றையெல்லாம் வென்று வாழலாம்.”

மர்மியின் வார்த்தைகள் நீதிமொழிகளில் காணப்படும் சத்தியத்தை எதிரொலிக்கின்றன, “கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்” (18:10). எதிரிகளின் தாக்குதல் போன்ற காரணமாக, ஆபத்தின் போது பாதுகாப்பு இடங்களாக பழங்கால நகரங்களில் துருகங்கள் கட்டப்பட்டன. அதுபோலவே, தேவனிடம் ஓடுவதன் மூலமே, இயேசுவை நம்புபவர்கள், “நமக்கு அடைக்கலமும் பெலனுமாக” (சங்கீதம் 46:1)உள்ளவரின் பராமரிப்பில் சமாதானத்தை அனுபவிக்க முடியும்.

நீதிமொழிகள் 18:10, பாதுகாப்பு என்பது தேவனின் “நாமத்தில்” இருந்து வருகிறது என்று சொல்கிறது. அவர் நாமமானது அவர் யார் என்ற அனைத்தையும் குறிக்கிறது. வேதவசனம் தேவனை, “இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்” (யாத்திராகமம் 34:6) என்கிறது. தேவனின் பாதுகாப்பு அவரது வல்லமையான பலத்திலிருந்து வருகிறது, அதே போல் அவரது மென்மையும் அன்பும் காயப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க அவரை ஏக்கமுற செய்கிறது. போராடும் அனைவருக்கும், நம்முடைய பரலோகத் தகப்பன் தம்முடைய பலத்திலும் மென்மையிலும் அடைக்கலம் அருள்கிறார்.