நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்
“அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று எனக்கு தெரியும், ஆனால் நான் உனக்கு சொல்லுகிறேன்” என்ற வாக்கியத்தை என்னுடைய அம்மா ஆயிரம் முறை சொல்லிவிட்டார்கள். தவறான நண்பர்களின் சகவாசத்தை அவ்வாறு சொல்வது வழக்கம். அந்த மந்தையை பின்பற்ற வேண்டாம் என்று அவர் எனக்கு போதிக்க முயற்சித்தார். நான் இன்னும் சிறுவனில்லை. ஆனால் மந்தையின் மனநிலை இன்னும் உயிருடன் இருக்கிறது. “உங்களை சுற்றிலும் நேர்மறையான நபர்களையே தேர்ந்தெடுங்கள்” என்பதே தற்போது பரவலாய் சொல்லப்படும் ஆலோசனை. ஆனால் அதைக் கேட்கும்போது, “இது கிறிஸ்துவின் வழியா” என்று எண்ணத் தோன்றுகிறது.
“நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்...” என்று மத்தேயு 5ஆம் அதிகாரத்தில் இயேசு பலமுறை சொல்லுகிறார். இந்த உலகம் நமக்கு தொடர்ந்து என்ன சொல்லிக்கொண்டிருக்கிறது என்பது அவருக்குத் தெரியும். ஆனால் நாம் வித்தியாசமானவர்களாய் வாழ வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதினால் “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்... உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்” (வச. 44). புதிய ஏற்பாட்டின் பிற்பகுதியில், பவுல் அப்போஸ்தலர் “நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில்” (ரோமர் 5:10) தேவன் நம்மை நேசித்தார் என்று அதற்கான நியாயமான காரணத்தை முன்வைக்கிறார். “நான் செய்வதுபோல் செய்யாமல், நான் சொல்லுவதை செய்யுங்கள்” என்று சொல்லுகிறவர்களைப் போலல்லாமல், இயேசு செய்வதையே சொன்னார். அவர் நம்மை நேசித்து தம்முடைய ஜீவனை நமக்காய் கொடுத்தார்.
இயேசு கிறிஸ்து நல்லவர்களை மட்டும் தன்னிடம் அனுமதித்திருந்தால் என்னவாகியிருக்கும்? நாம் எங்கே இருந்திருப்போம்? தகுதி பார்த்து தெரிந்துகொள்ளாத அவருடைய அன்பிற்காய் தேவனுக்கு நன்றி. தேவன் உலகத்தின் மீது அன்புகூர்ந்தார். அதைப்போல நாமும் செய்ய அவர் நம்மை பெலப்படுத்துவார்.
தேவனின் உறுதியான தேடல்
சில ஆண்டுகளுக்கு முன் ஒருவர் சில அடிதூரம் எனக்கு முன் நடந்துகொண்டிருந்தார். அவருடைய கைநிறைய பொட்டலங்கள் இருந்தன. திடீரென, நிலைதடுமாறி அவர் விழுந்தார், பைகள் சிதறின. சிலர் அவரை தூக்கிவிட்டனர், சிதறியவற்றையும் சேகரித்து உதவினர். ஆனால் அவர்கள் அவருடைய பணப்பையைக் கவனிக்கவில்லை. நான் அதைக் கண்டு, அந்த முக்கியமான பொருளை எடுத்துக்கொண்டு, அதை அவரிடம் ஒப்படைக்கத் தீவிரமாகப் பின்தொடர்ந்தேன். "சார்,சார்" என்று நான் கத்த, இறுதியில் திரும்பினார். என்னிடம் திரும்பிய அவரிடம் நான் பணப்பையை ஒப்படைக்கையில், அவர் முகத்திலிருந்த ஆச்சரியம் கலந்த நன்றியுணர்வை என்னால் மறக்க முடியவில்லை.
அந்த மனிதரை நான் பின்தொடர்ந்தது எனக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தந்தது. பிரபலமான சங்கீதம் 23 ல் "என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்" (வ.6) என்பதில் வரும் "தொடரும்" என்கிற மொழியாக்கம் பொருத்தமானதுதான். என்றாலும், அதின் எபிரெய பதம் வலுவான, தீவிரமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இதன் எழுத்தியல்பான அர்த்தம் "துரத்துதல் அல்லது விரட்டுதல்", கிட்டத்தட்ட ஒரு வேட்டை விலங்கு தன் இரையைத் துரத்துவதைப்போல (ஒரு ஓநாய், ஆட்டைத் துரத்துவதாக) நினைத்துக்கொள்ளுங்கள்.
தேவனின் நன்மையும், கிருபையும் உங்களை ஏதோ கடமைக்காகப் பின்தொடர்வதைப் போலவோ, உங்கள் செல்லப்பிராணி சாவகாசமாக உங்கள் பின்னே வருவது போலவோ தவறாய் எண்ணிக்கொள்ளாதிருங்கள். நிச்சயம் இல்லை. ஒரு நோக்கத்தோடு நாம் தீவிரமாய் பின்தொடரப்படுகிறோம். பணப்பையைத் தொலைத்த அந்த மனிதன் விரட்டப்பட்டதுபோல, அழியாத மாறாத அன்பைக்கொண்டு நம்மை நேசிக்கும் நல்ல மேய்ப்பர் நம்மைத் தேடி வருகிறார்(வ.1, 6).
சிந்தனையும் ஜெபமும்
“உங்களுக்காக நான் நிச்சயமாய் ஜெபித்துக்கொள்கிறேன்.” இந்த வார்த்தைகளை நீங்கள் கேட்டிருப்பீர்களானால், அதைச் சொல்லும் நபர் உண்மையில் அதைச் சொல்கிறாரா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் எட்னா டேவிஸ் அதைச் சொல்லும்போது நீங்கள் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஒரு சிறிய நகரத்தில் உள்ள அனைவரும் எட்னாவின் மஞ்சள் நோட்டு புத்தகத்தை பக்கம் பக்கமாக அறிவர். அதில் எழுதப்பட்டிருக்கும் ஜெபக்குறிப்புகளை ஒவ்வொரு நாள் காலையிலும் சத்தமாக ஜெபப்பது அவரின் வழக்கம். அவருடைய ஜெபப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அனைவருக்கும் ஜெபத்திற்கான பதில் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் எட்னாவின் மரணத்தில், சாட்சிட்ட மக்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் தெய்வாதீனமான ஏதோ ஒன்று அவருடைய ஜெபத்தின் மூலமாகவே நடந்தது என்று சாட்சியளித்தனர்.
பேதுருவின் சிறைச்சாலை அனுபவத்தில், ஜெபத்தின் வல்லமையை தேவன் வெளிப்படுத்தினார். ஏரோது ராஜாவின் மனிதர்களால் பிடிக்கப்பட்டு, சிறையில் தள்ளப்பட்ட பிறகு, “வகுப்புக்கு நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்திய நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்தான்” (அப்போஸ்தலர் 12:4). அவன் தப்பிக்கும் வாய்ப்பிற்கு இடமேயில்லை. ஆனால் “சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்” (வச. 5). அவர்கள் பேதுருவை தங்கள் சிந்தையில் வைத்து ஜெபித்தனர். தேவன் ஆச்சரியமான ஒன்றை செய்தார். சிறைச்சாலையில் இருந்த பேதுருவுக்கு ஒரு தேவதூதன் வெளிப்பட்டு, அவனுடைய சங்கிலிகளிலிருந்து அவனை விடுவித்து, சிறைக்கு வெளியே பாதுகாப்பாக அவனை அழைத்துச் சென்றார் (வச. 7-10).
சிலர் தங்களுடைய “சிந்தனைகளையும் ஜெபங்களையும்” வீணாய் பயன்படுத்தலாம். ஆனால் நம்முடைய பரமபிதா நம்முடைய சிந்தையை அறிந்திருக்கிறார். நம்முடைய ஜெபங்களைக் கேட்கிறார., அவருடைய பரிபூரண சித்தத்தின்படி நமக்காகச் செயல்படுகிறார். சர்வ வல்லமையுள்ள ஆண்டவருக்கு நாம் ஊழியம் செய்யும்போது, நாம் மற்றவர்களுக்காக ஜெபிப்பதும், மற்றவர்கள் நமக்காக ஜெபிப்பது சிறிய காரியமல்ல.
கனியினால் அறியுங்கள்
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நான்கு பிரபலங்களை நடுவர்களாகக் கொண்ட குழு, அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரே உருவ அமைப்பு கொண்ட மூவரில் யார் நிஜமான நபர் என்றறிய பல கேள்விகளை கேட்பர். அதில் இருவர் பொய்யான நபர்கள். உண்மையான நபரைக் கண்டறிவது குழுவின் பொறுப்பு. நடுவர்கள் பல சாதுரியமான கேள்விகளைக் கேட்டாலும், இன்னார் யாரென்று கண்டுபிடிக்க நடுவர்கள் சிரமப்படுவர். போலியான நபர்கள், உன்மையைப் பொழுதுபோக்காகக் குழப்புவதே இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி.
கள்ள உபதேசிகளைக் குறித்து, யார்? இன்னார்? என்னும் கேள்வி ஊடகங்களுக்குப் பொருந்தாத ஒன்று. என்றாலும், அதேபோன்று சவாலாய் அமையக்கூடிய ஒரு முக்கிய கேள்வியாயிருக்கிறது. கள்ளத் தீர்க்கதரிசிகள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு வரும் பட்சிக்கிற ஓநாய்கள் என்பதினால் “விழித்திருங்கள்”என்று இயேசு எச்சரிக்கிறார் (மத்தேயு 7:15). இங்கே நிறையக் கேள்விகளைக் கேட்பதல்ல காரியம்; நல்ல கண்களைக் கொண்டிருப்பதே காரியம். அவர்களுடைய கனிகளைப் பாருங்கள், அதினாலே அவர்களைக் கண்டுபிடிக்க முடியும் (வச.16-20).
நல்ல கனிகளையும் கெட்ட கனிகளையும் காண்பதற்கு வேதம் நமக்கு உதவிசெய்கிறது. “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” போன்றவை நல்ல கனிகள் (கலாத்தியர் 5:22-23). ஓநாய்கள் வஞ்சிக்கக்கூடியவை என்பதினால் நாம் அதிக கவனமாயிருக்க வேண்டும். ஆனால் ஆவியினால் நிரப்பப்பட்ட விசுவாசிகளாகிய நாம், நல்மேய்ப்பரும், “கிருபையினாலும் சத்தியத்தினாலும்”நிறைந்தவருமாகிய இயேசுவுக்கு ஊழியம் செய்கிறோம் (யோவான் 1:14).
நமக்கு இயேசுவின் உதவி தேவை
என்னுடைய அப்பா யாராலும் வீழ்த்தப்பட முடியாதவர் என்று நான் நம்பிய அந்த நாள் வந்தது. அவருடைய வலிமையையும் உறுதியினையும் ஒரு சிறுவனாய் நான் பார்த்திருக்கிறேன். நான் வளரும் தருவாயில் அவர் கீழே விழுந்து அவருடைய இடுப்பில் காயம் ஏற்பட்டது. அதன் பின்பு தான், அவரும் சாதாரணமானவர் என்பதை உணர்ந்தேன். நான் படுத்த படுக்கையான என் அப்பாவை கழிவறைக்கு அழைத்துச் செல்வது, உடைகள் மாற்றுவதில் உதவி செய்வது, தண்ணீரை அவருக்குக் குடிக்கக் கொடுப்பது போன்ற உதவிகளைச் செய்தேன். அது என்னுடைய அப்பாவுக்கு மிகுந்த விசனமாயிருந்தது. அவர் தானாகவே முன்வந்து சில காரியங்களை செய்ய முயற்சித்தார். ஆனால் அது முடியாததால், “நீ இல்லாமல் என்னால் ஒன்னும் செய்யமுடியவில்லை” என்பதை ஒப்புக்கொண்டார். கடைசியில், அந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து அவர் விடுபட்டார். ஆனால் அந்த அனுபவம் எங்கள் இருவருக்கும் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பித்தது. நமக்கு மற்றவர்களின் உதவி தேவை என்பதே அந்த பாடம்.
மற்றவர்களின் உதவி எந்த அளவிற்கு அவசியமோ, அதே அளவிற்கு இயேசுவும் நமக்கு அவசியம். யோவான் 15ஆம் அதிகாரத்தில் திராட்சைச் செடியை குறித்தும் அதின் மீது படர்ந்திருக்கும் கொடிகளைக் குறித்தும் நாம் வாசிக்க முடியும். அது தேற்றக்கூடிய உதாரணமாய் அமைந்தாலும், நம்முடைய சுயத்தின் மீதான நம்பிக்கையை தகர்க்கக்கூடியதாய் இருக்கிறது. “எனக்கு உதவி தேவையில்லை” என்ற நம்முடைய சுயத்தின் மீதான நம்பிக்கையை உடைக்கிறதாயிருக்கிறது. என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது (வச. 5) என்று இயேசு தெளிவாய்ச் சொல்லுகிறார். ஒரு சீஷனுக்கு அவசியமான ஆவியின் கனிகளாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம் (கலாத்தியர் 5:22) போன்ற கனிகளைக் குறித்து இயேசு இவ்வாறு பேசுகிறார்.
இயேசு நம்மை கனிகொடுக்கும் வாழ்க்கை வாழவே அழைக்கிறார். அவரை நாம் முழுமையாய் சார்ந்துகொள்வோமாகில், பிதாவை மகிமைப்படுத்தக் கூடிய வாழ்க்கையை நம்மால் வாழ முடியும் (யோவான்15:8).
வீட்டின் விசுவாசப் பேச்சுகள்
“வீடு போன்ற சிறந்த இடம் இல்லை” என்ற வரிகள், தி விஸார்ட் ஆஃப் ஓஸ் (The Wizard of Oz) என்ற அனைத்து கதைகளையும் சொல்லும் கருவியில், டோரதி பேசிய இந்த வரிகள் மறக்கமுடியாது. இது “கதாநாயகனின் பயணம்” என்று அழைக்கப்படுகிறது. அதாவது, ஒரு அசாதாரண சாகசம் முன்நிறுத்தப்படும்போது, ஒரு சாதாரண மனிதன் சாதாரண வாழ்க்கையை வாழ்கிறான். அதில் இடம்பெறும் கதாப்பாத்திரம் வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய பயணத்தில் பல சோதனைகளையும், வழிகாட்டிகளையும் எதிரிகளையும் சந்திக்கிறது. அவர்களின் திறமையை அவர்கள் நேர்த்தியாய் நிரூபித்தால், தாங்கள் கற்றுக்கொண்ட கதைகள் மற்றும் அதின் ஒழுக்கநெறி பாடங்களோடு அவர்கள் வீடு திரும்பமுடியும். இதில் கடைசிப் பகுதி மிகவும் முக்கியமானது.
பிசாசு பிடித்த மனிதனின் கதை இந்த கதாநாயகனின் பயணத்திற்கு நெருக்கமாக அமைகிறது. அதின் கடைசிக் காட்சியில், பிசாசின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட அந்த மனிதன் இயேசுவுடன் வருவதற்கு தன்னை அனுமதிக்குமாறு கெஞ்சினான் என்பது சுவாரஸ்யமானது (மாற்கு 5:18). ஆயினும் இயேசு அவனிடம் “உன் சொந்த மக்களிடம் வீட்டிற்கு போ" (வச. 19) என்று கூறுகிறார். இந்த நபரின் பயணத்தில் ஏற்பட்ட இந்த சுவாரஸ்யமான அனுபவத்தை, வீடு திரும்பி தன்னுடைய மக்களிடம் அவற்றை அறிவிக்கவேண்டியது அவசியமாயிருந்தது.
தேவன் நம் ஒவ்வொருவரையும் வெவ்வேறு வழிகளில் வெவ்வேறு சூழ்நிலைகளினின்று அழைக்கிறார். ஆனால் நம்மில் சிலருக்கு, நம் நம்பிக்கை பயணத்தில் வீட்டிற்குச் சென்று, நம்மை நன்கு அறிந்தவர்களிடம் நம் கதையைச் சொல்வது மிகவும் முக்கியமானது. “வீடு போன்ற சிறந்த இடம் இல்லை" என்பதுதான் நம்மில் சிலருக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பு.
எங்கள் பிதாவே
ஒவ்வொரு நாள் காலையும், நான் பரமண்டல ஜெபம் சொல்வது வழக்கம். அந்த வார்த்தைகளில் நான் ஊன்றும்வரை என் நாளை துவக்கமாட்டேன். சமீபத்தில், “எங்கள் பிதாவே” எனும் இரு வார்த்தைகளை மட்டும் நான் சொன்னவுடனே, என் செல்பேசி ஒலித்தது. அது காலை 5:43 மணி; சற்று திடுக்கிட்டேன். யாராயிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? “அப்பா” என்று செல்பேசி காண்பித்தது. நான் அவர் அழைப்பிற்கு பதிலளிக்குமுன் அதின் சத்தம் அணைந்தது. என் அப்பா தவறுதலாய் என்னை அழைத்துவிட்டார் என்றெண்ணினேன். ஆம்! அது உண்மைதான். ஏதேச்சையான நிகழ்வா? இருக்கலாம். ஆனால், நாம் தேவகிருபை நிறைந்த ஒருலகில் வாழ்கிறோம் என்று நான் நம்புகிறேன். அந்த குறிப்பிட்ட நாளில், நம் தகப்பனின் பிரசன்னத்தை நான் மீண்டும் உறுதிசெய்துகொள்வது அவசியமாயிருந்தது.
அதை ஒரு நிமிடம் யோசியுங்கள். இயேசுகிறிஸ்து, தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஜெபத்தின் முதல் இரண்டு வார்த்தைகள் “எங்கள் பிதாவே” (ஆங்கிலத்தில்) (மத்தேயு 6:9) என்றே துவங்குகிறது. ஏதேச்சையானதா? இல்லை. இயேசு, எல்லாவற்றையும் காரணத்தோடே செய்கிறார். நம்முடைய மாம்ச தகப்பனிடத்தில் நம் எல்லோருக்குமான உறவு ஒன்றுபோல் இல்லை. சிலருக்கு நல்ல உறவு இருக்கும்; சிலருக்கு அப்படியிருக்காது. ஆனால் பரமண்டல ஜெபம், “என்” அல்லது “உன்” என்று துவங்காமல் “எங்கள் பிதாவே” என்று துவங்குகிறது. அவர் நம்மைப் பார்க்கிறார், கேட்கிறார், நாம் கேட்பதற்கு முன்னமே நம்முடைய தேவையை அறிந்திருக்கிறார் (வச. 8).
என்ன அழகான வாக்குறுதி! குறிப்பாய் நாம் காணாமற்போனதாய், தனிமையான, கைவிடப்பட்ட, அர்ப்பமாய் எண்ணப்பட்ட தருணங்களில் இந்த வாக்குறுதி நம்மைத் தேற்றுகிறது. நாம் எங்கிருந்தாலும், எல்லா நேரங்களிலும் பரமண்டலங்களில் இருக்கும் நம்முடைய பிதா நம்மருகே இருக்கிறார்.
வெளிப்பாடும் உறுதிப்பாடும்
2019இல் பிறந்த குழந்தையின் பாலினத்தை தெரியப்படுத்தும் வழிமுறைகள் ஆச்சரியமாயிருந்தது. ஜூலை மாதத்தில் ஆண்குழந்தை பிறந்தது என்பதை வெளிப்படுத்தும் விதமாய் காரில் நீலநிறப் புகையை வெளிப்படுத்தி தெரியப்படுத்தியதை நான் காணொலி ஒன்றில் பார்த்திருக்கிறேன். செப்டம்பர் மாதத்தில் பெண் குழந்தையின் பிறப்பை தெரியப்படுத்துவதற்காய் உரத்தை தெளிக்கும் விமானத்தில் பல்லாயிரக்கணக்கான லிட்டர் இளஞ்சிவப்புநிற நீரை தெளித்து தெரியப்படுத்தினர். இந்த குழந்தைகள் வளருகிற இந்த உலகத்தில் இன்னும் பல வெளிப்பாடுகள்இருக்கப்போகிறது. 2019ஆம் ஆண்டின் இறுதியில், யூவெர்ஷன் என்னும் வேதாகம செயலி அந்த ஆண்டில் அதிகமாய் பகிரப்பட்ட மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த வசனமாய் பிலிப்பியர் 4:6 -ஐ தேர்ந்தெடுத்தது: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள்.”
இது ஒரு வெளிப்பாடு. மக்கள் இன்று பல காரியங்களைக் குறித்து கவலைப்படுகின்றனர். தங்களுடைய பிள்ளைகளின் தேவைகள், குடும்பம் மற்றும் சிநேகிதர்களின் பிரிவுகள், இயற்கைச் சீற்றங்கள், யுத்தங்கள் என்று அநேக காரியங்களைக் குறித்த கவலைப்படுகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலைகளின் மத்தியிலும், “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல்” என்னும் வாக்கியத்தை அநேகர் உறுதியாய் பற்றிக்கொள்வதே மகிழ்ச்சியான செய்தி. அத்துடன் இந்த ஜனங்கள் “எல்லாவற்றையுங் குறித்து” தேவனிடத்தில் விண்ணப்பத்தில் தெரியப்படுத்தவும் மற்றவர்களை அவ்விதமாய் உற்சாகப்படுத்தவும் செய்கின்றனர். வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளையும் ஒதுக்காமல் அவற்றை சமாளிப்பது ஒரு விதத்தில் தேவனுக்கு நன்றி செலுத்துதலாய் கருதப்படுகிறது.
அந்த ஆண்டின் முக்கிய வசனமாய் தெரிந்தெடுக்கப்படாததும் அதை பின்தொடரும் வசனமுமானது, “தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (வச.7) எனபதே, ஆனால் அதுவே உறுதிப்பாடாய் உள்ளது!
பிதாவின் குரல்
என் நண்பனின் அப்பா சமீபத்தில் மரித்துவிட்டார். அவர் வியாதிபட்ட உடனே அவர் நிலைமை வேகமாக சீர்குழைந்தது, பின்னர் சில நாட்களிலேயே அவர் கடந்து போய்விட்டார். என் நண்பனும், அவன் தந்தையும் எப்போதும் நெருங்கிய உறவிலிருந்தார்கள், ஆயினும் கேட்கப்பட வேண்டிய அநேக கேள்விகள் இருந்தன, தேடப்படவேண்டிய பதில்களும், பேசப்பட வேண்டிய உரையாடல்களும் இருந்தன. சொல்லப்படாத அநேக காரியங்கள் இருக்க, இப்போது அவனுடைய தந்தை போய்விட்டார். என் நண்பன் ஒரு தேர்ந்த ஆலோசகர்: அவனுக்கு துயரத்தின் நெளிவுசுளிவுகள் எல்லாம் அத்துப்படி, கடினமான சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு எவ்வாறு உதவ வேண்டுமென்று நன்கு அறிந்திருந்தான். இருந்தபோதிலும் அவன் என்னிடம், "சில நாட்கள் அப்பாவின் குரல் எனக்கு கேட்க வேண்டுமென்று உள்ளது, அது எனக்கான அன்பை உறுதியளித்தது. அதுவே எப்போதும் என்னுடைய உலகமாய் இருந்தது" என்றான்.
இயேசுவின் பூமிக்குரிய ஊழியத்தின் ஆரம்பத்திலே யோவானின் கைகளால் ஞானஸ்நானம் பெற்றது மிக முக்கியமான பகுதியாகும். யோவான் அதற்கு தடைசெய்ய முயன்றபோதிலும், அந்த தருணம் தன்னை மனித குலத்தோடு அடையாளபடுத்திகொள்ள அவசியமானது என்று வலியுறுத்தினார். "இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது " (மத்தேயு 3:15) இயேசு சொன்னபடியே யோவான் செய்தான். பின்பு ஏதோவொன்று நடந்தது, அது யோவானுக்கும், சுற்றியிருந்த கூட்டத்திற்கும் இயேசுவின் அடையாளத்தை அறிவித்தது, மேலும் அது இயேசுவின் இதயத்தையும் ஆழமாக தொட்டிருக்க வேண்டும். பிதாவின் சத்தம் குமாரனுக்கு உறுதியளித்தது: "இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்" (வ.17)
அதே குரல் விசுவாசிகளாகிய நம்முடைய இதயங்களிலும் நமக்கான அவருடைய பேரன்பை உறுதியளிக்கிறது (1 யோவான் 3:1)