எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

எலிசா மோர்கன்கட்டுரைகள்

குடும்பம் மிகவும் முக்கியமானது

பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தொண்ணூறு வயது பாட்டியையும் பார்ப்பதற்காய், வெவ்வேறு மாகாணங்களில் வசித்த நான், எனது அக்கா மற்றும் தம்பியுடன் சேர்ந்து விமானத்தின் மூலமாய் வந்தோம். அவர் பக்கவாதத்தால் முடங்கி, பேசும் திறனை இழந்துவிட்டார். அவர் வலது கையை மட்டுமே பயன்படுத்தினார். நாங்கள் அவர்களது படுக்கையைச் சுற்றி நின்றபோது, அவர் அந்தக் கையை நீட்டி எங்களின் ஒவ்வொரு கைகளையும் எடுத்து, ஒன்றன்மேல் ஒன்றாக அவர்களது இதயத்தின்மீது வைத்து, அவற்றைத் தட்டிக்கொடுத்தார். இந்த வார்த்தைகளற்ற சைகையால், உடைபட்டு பிரிந்திருக்கும் எங்களது உடன்பிறப்பு உறவைக் குறித்து அவர் எங்களோடு தொடர்புகொண்டார். “குடும்பம் மிகவும் முக்கியமானது.”

திருச்சபை என்னும் தேவனுடைய குடும்பத்தில் நாமும் உடைக்கப்பட்டவர்களாய் பிரிந்து நிற்கக்கூடும். கசப்பு நம்மை பிரிந்திருக்கச் செய்யும். எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர், ஏசாவை அவனுடைய சகோதரனிடத்திலிருந்து பிரித்த கசப்பைக் குறித்து குறிப்பிடுகிறார் (எபிரெயர் 12:16). மேலும் சகோதர சகோதரிகளாகிய நாம் தேவனுடைய குடும்பத்தில் ஒருவரிலொருவர் ஐக்கியமாய் இருப்பதற்கு நமக்கு சவால் விடுகிறார். “யாவரோடும் சமாதானமாயிருக்கவும்... நாடுங்கள்” (வச. 14). அதாவது, தேவனுடைய குடும்பத்தில் அனைவரோடும் சமாதானமாய் வாழ்வதற்கு எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு பிரயாசப்படுவோம் என்று வலியுறுத்துகிறார். அத்தகைய ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்துகிறது, அவ்வாறு வாழ்வதற்கு தூண்டுகிறது.

குடும்பம் மிகவும் முக்கியமானது. அவற்றில் நமது பூமிக்குரிய குடும்பங்கள் மற்றும் தேவனுடைய விசுவாசக் குடும்பங்களும் இணைந்ததே. நாம் அன்போடும் ஐக்கியத்தோடும் இருக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் ஏறெடுப்போமா? 

 

குறுக்குச் சாலையில் தேவன்

பல நாட்கள் நோய்வாய்ப்பட்டு, பின்னர் உடல் சூடு அதிகரித்த பிறகு, என் கணவருக்கு அவசர சிகிச்சை தேவை என்பது தெளிவாகத் தெரிந்தது. உடனடியாக மருத்துவமனை அவரை அனுமதித்தது. ஒரு நாள் கடந்துபோனது. அடுத்த நாளில் அவர் சற்று தேறியிருந்தார். ஆகிலும் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கும் நிலையில் இல்லை. மருத்துவமனையில் தங்கி என் கணவரை பராமரித்துக்கொள்வதும், அதே நேரத்தில் பலர் பங்குபெறும் திட்டப்பணி வேலையை செய்வதற்கும் நான் மிகவும் சிரமப்பட்டேன். நான் நலமாக இருப்பேன் என்று என் கணவர் உறுதியளித்தார். ஆனால் அவரை பராமரிப்பதற்கும் என் வேலையை செய்வதற்கு இடையில் நான் சிக்கித் தவிக்க நேரிட்டது.

வாழ்க்கையின் இதுபோன்ற முக்கியமான தருணங்களில் தீர்மானம் எடுப்பதற்கு தேவ ஜனத்திற்கு தேவனுடைய உதவி தேவைப்படுகிறது. பெரும்பாலும் அவர்கள் தேவனுடைய கட்டளைகளை கைக்கொள்ள தவறிவிடுகின்றனர். ஆனால் மோசே, தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து ஜீவனைத் தெரிந்துகொள்ளும்படிக்கு அவர்களுக்கு வலியுறுத்துகிறார் (உபாகமம் 30:19). மேலும் எரேமியா தீர்க்கதரிசி, இஸ்ரவேல் ஜனங்களுக்கு “வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்” (எரேமியா 6:16) என்று ஜனங்களுடைய வழிநடத்துதலுக்கு அறிவுறுத்துகிறார். வேதாகமத்தில் பூர்வ பாதைகளும் கடந்த காலத்தில் கர்த்தர் செய்த நன்மைகளும் நம்மை நேர்த்தியாய் வழிநடத்தக்கூடியவைகள்.

நான் நடைமுறையில் குழப்பமான வாழ்க்கைப் பாதையில் இருப்பதாக கற்பனை செய்துகொண்டு, எரேமியாவின் ஞான போதனைனை கருத்தில்கொண்டேன். என் கணவருக்கு நான் தேவை. என் வேலையையும் நான் செய்தாக வேண்டும். என்னுடைய மேற்பார்வையாளர் என்னை அழைப்பித்து, வீட்டில் தங்கி கணவரை பராமரித்துக்கொள்ளும்படிக்கு என்னை ஊக்கப்படுத்தினார். தேவனுடைய இந்த கிருபைக்காய் நான் பெருமூச்சுடன் நன்றி சொன்னேன். தேவனுடைய வழிநடத்துதல் எப்போதும் தெளிவாக தெரிவதில்லை. ஆனால் அது நம்மை நோக்கி நிச்சமாய் வரும். நாம் குழப்பமான பாதையில் நிற்கும்போது, அது நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கிறது என்பதை நம்புவோம்.

- எலிசா மோர்கன்

திருச்சபையாயிரு!

கோவிட்-19 தொற்றுநோயின்போது, டேவ் மற்றும் கார்லா ஒரு தேவாலய வீட்டைத் தேடி பல மாதங்கள் செலவிட்டனர். தொற்று பரவிய காலங்கிளல் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது, பல்வேறு தனிப்பட்ட அனுபவங்களை மட்டுப்படுத்தி, அவற்றை மேலும் கடினமாக்கியது. அவர்கள் கிறிஸ்தவ திருச்சபையோடு ஐக்கியம்கொள்வதற்கு ஏங்கினர். “ஒரு திருச்சபையைக் கண்டுபிடிப்பது கடினமானது” என்று கார்லா எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார். என் திருச்சபை குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்கான எனது சொந்த ஏக்கத்திலிருந்து எனக்குள் ஒரு உணர்தல் எழுந்தது. “திருச்சபையாக இருப்பது கடினமானது" என்று நான் பதிலளித்தேன். அந்த காலங்களில், எங்கள் திருச்சபை சுற்றியுள்ள மக்களுக்கு உணவு வழங்குதல், ஆன்லைன் சேவைகளை உருவாக்குதல் மற்றும் ஆதரவுடனும் ஜெபத்துடனும் ஒவ்வொரு விசுவாசிகளுக்கும் போன் செய்து நலம் விசாரித்தது. அந்த சேவையில் நானும் எனது கணவரும் கலந்துகொண்டாலும், மாறக்கூடிய இந்த உலகத்தில் நாம் திருச்சபையாய் செயல்படுவது எப்படி என்று ஆச்சரியப்பட்டோம்.  
எபிரெயர் 10:25இல் ஆசிரியர் “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல்” இருக்கும்படிக்கு ஊக்குவிக்கிறார். ஒருவேளை உபத்திரவத்தின் நிமித்தமோ (வச. 32-34), சோர்வின் நிமித்தமாகவோ (12:3) ஐக்கியத்தை விடும் அபாயம் அவர்களுக்கு நேரிட்டிருக்கலாம். அவர்களுக்கு இந்த தூண்டுதல் அவசியப்பட்டது.  
இன்று, எனக்கும் ஒரு தூண்டுதல் தேவைப்படுகிறது. உங்களுக்கும் தேவைப்படுகிறதா? நடைமுறை சூழ்நிலைகள் நாம் கூடிவரும் திருச்சபையை பாதிக்கும் தருவாயில் நாம் திருச்சபையாய் நிலைநிற்போமா? ஆக்கப்பூர்வமாக ஒருவரையொருவர் ஊக்குவிப்போம். தேவன் நம்மை வழிநடத்துவது போல ஒருவரையொருவர் கட்டியெழுப்புவோம். நம்முடைய வளங்களைப் பகிர்ந்து கொள்வோம். ஆதரவான செய்திகளை பகிர்வோம். நம்மால் முடிந்தவரை சேகரிப்போம். ஒருவருக்கொருவர் ஜெபியுங்கள். நாமே திருச்சபையாக நிற்போம். 

தேவனில் பலப்படுதல்

கிரேஞ்சர் மெக்காய் ஒரு சிற்பக்கலைஞர். அவர் பறவைகளைக் குறித்து ஆய்வுசெய்து அவற்றை சிற்பமாய் வடிக்கிறவர். அவரது படைப்புகளில் ஒன்று “மீட்பு” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இது செங்குத்து நிலையில் உயரமாக நீட்டப்பட்ட வாத்து ஒன்றின் ஒற்றை வலது இறக்கையைக் காட்டுகிறது. அந்த சிற்பத்தின் கீழே பதிக்கப்பட்டிருந்த ஒரு தகட்டில், “பறப்பதில் பறவையின் மிகப்பெரிய பலவீனத்தின் தருணம், ஆனால் அதின் முன்னோக்கிச் செல்லும் பயணத்திற்கு வலிமையை சேகரிக்கும் தருணம்” என்று எழுதப்பட்டிருந்தது. கிரேஞ்சர் இந்த வசனத்தையும் சேர்த்து எழுதுகிறார்;: “என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” (2 கொரிந்தியர் 12:9). 
அப்போஸ்தலன் பவுல் இந்த வார்த்தைகளை கொரிந்து சபைக்கு எழுதினார். தனிப்பட்ட வாழ்க்கைப் போராட்டங்களோடு போராடிக்கொண்டிருக்கும்வேளையில், “என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று அதை அகற்றும்படிக்கும் தேவனிடத்தில் பவுல் கெஞ்சுகிறார். அவரது துன்பம் ஒரு உடல் நோயாகவோ அல்லது ஆன்மீக எதிர்ப்பாகவோ இருக்கலாம். இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய இரவில் தோட்டத்தில் இருந்ததைப் போல (லூக்கா 22:39-44), பவுல் தனது துன்பத்தை நீக்கும்படி கடவுளிடம் மீண்டும் மீண்டும் மன்றாடுகிறார். பரிசுத்த ஆவியானவர் அவருக்குத் தேவையான பலத்தை கொடுப்பதாக வாக்களிக்கிறார். “அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்” (2 கொரிந்தியர் 12:10) என்று பவுல் கற்றுக்கொண்டார்.  
ஓ, இந்த வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் முட்கள்! முன்னோக்கி செல்லும் பயணத்திற்கு ஒரு பறவை தன் பலத்தை சேகரிக்கிறது போல, நாம் எதிர்நோக்கும் காரியத்திற்காக தேவனின் பலத்தை நாம் பெற்றுக்கொள்ளமுடியும். அவருடைய பலத்தில் நாம் பலப்படுத்தப்படுகிறோம்.  

ஓய்வெடுக்க அனுமதி

சில கடற்கரை பாறைகளின் மேல் அமர்ந்தோம், நானும் என் நண்பன் சூசியும், பொங்கும் நுரைகளின் வழியே, கடல் நீர் சுருளையாகப் பொங்குவதைப் பார்த்தோம். பாறைகளில் ஒன்றன் பின் ஒன்றாக மோதும் அலைகளைப் பார்த்து சூசி, “எனக்குக் கடல் பிடிக்கும். அது ஓடிக்கொண்டே இருப்பதால், நான் நின்று பார்க்கலாம்" என்றார்.

நம் வேலையை இடைநிறுத்தி ஓய்வெடுக்க "அனுமதி" தேவை என்று நம்மில் சிலர் நினைக்கிறார்கள் என்பது சுவாரஸ்யமானது அல்லவா? சரி, அதைத்தான் நம் நல்ல தேவன் நமக்கு வழங்குகிறார்! ஆறு நாட்களுக்குத் தேவன், சுழலும் பூமி, ஒளி, நிலம், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களை உருவாக்கினார். ஏழாவது நாளில், தேவன் ஓய்வெடுத்தார் (ஆதியாகமம் 1:31-2:2). பத்து கட்டளைகளில், அவரை கனப்படுத்தக்கூடிய ஆரோக்கியமான வாழ்க்கைக்கான விதிகளைத் தேவன் பட்டியலிட்டார் (யாத்திராகமம் 20:3-17), ஓய்வுநாளை ஓய்வுநாளாக நினைவுகூர வேண்டும் (வவ. 8-11) என்பது அதிலொன்று. புதிய ஏற்பாட்டில், இயேசு ஊரில் உள்ள அனைத்து நோயாளிகளையும் குணப்படுத்துவதைக் காண்கிறோம் (மாற்கு 1:29-34). பின்னர் மறுநாள் அதிகாலையில் ஜெபிக்க ஒரு தனியான இடத்திற்குச் செல்கிறார் (வச. 35). நம் தேவன் நோக்கத்துடன் வேலை செய்தார் மற்றும் ஓய்வெடுத்தார்.

வேலையில் தேவனுடைய உதவி, ஓய்விற்கான அவரது அழைப்பு என இரண்டுமே நம்மைச் சுற்றி ரீங்காரமாக இசைக்கிறது. வசந்த காலத்தில் நட்டால், கோடையில் வளர்ச்சியும், இலையுதிர்காலத்தில் அறுவடையும், குளிர்காலத்தில் ஓய்வும் உண்டாகும். காலை, நன்பகல், மதியம், மாலை, இரவு. தேவன் நம் வாழ்க்கையில் வேலை மற்றும் ஓய்வு ஆகிய இரண்டையுமே ஏற்படுத்தியுள்ளார்,  இரண்டையும் செய்ய அனுமதியும் வழங்குகிறார்.

தேவனின் முழுமையான பராமரிப்பு

டேவிட் வெட்டெர் தனது வாழ்நாளெல்லாம் ஒரு குமிழியில் வாழ்ந்து, தனது பன்னிரண்டாம் வயதில் மரணமடைந்தார். “குமிழ் சிறுவன்” என்று செல்லப் பெயரிடப்பட்ட டேவிட், ஒருவகையான கடும் நோயெதிர்ப்பு குறையோடு பிறந்தார். அவனுடைய பெற்றோர் தங்களது மூத்த மகனை நோய்க்குப் பலிகொடுத்ததால், இளையவனின் உயிர்காக்க மனவுறுதியோடிருந்தனர். அவனுடைய ஆயுளை நீட்டிக்க, நாசாவின் விஞ்ஞானிகள் நெகிழியிலான ஒரு பாதுகாப்பு குமிழியை உண்டாக்கினர், மேலும் அவன் பெற்றோருக்கு விண்வெளி கவச உடையையும் அளித்தனர். இதனைக்கொண்டு, அவர்கள் டேவிட்டை வெளியிருந்து பராமரிக்க முடியும். நாம் நேசிப்பவர்களைப் பாதுகாக்க நாம் எவ்வளவாய் ஏங்குகிறோம்.

அபிகாயிலின் முட்டாள் கணவனான நாபாலினால் தாவீது ராஜா தவறிழைக்கப்பட்டார். கோபம் தலைக்கேறிய நிலையில், தனது சொந்த கைகளால் பழிதீர்க்க தாவீது வகைத்தேடினார். அபிகாயிலோ அவரை துரிதமாகச் சந்தித்து, “உம்முடைய பிராணனை வாங்க வகைதேடவும், ஒரு மனுஷன் எழும்பினாலும் என் ஆண்டவனுடைய ஆத்துமா உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஆதரவில் இருக்கிற ஜீவனுள்ளோருடைய கட்டிலே கட்டப்பட்டிருக்கும்” (1 சாமுவேல் 25:29) என்று ஞானமாக நினைப்பூட்டினாள். எஜமானன் தனது விலையேறப்பெற்றவற்றை ஒன்று சேர்த்து, பத்திரமாகச் சுமக்கும் செயலே “கட்டிலே கட்டுப்படுதல்” ஆகும். தேவன் தாவீதை பத்திரமாக “கட்டிலே” சுமக்க சித்தம் கொண்ட, அபிகாயில் நினைப்பூட்டினாள். தன்னுடையவற்றில் அல்ல, தேவனின் கரத்தில்தான் அவர் பாதுகாப்பாக இருப்பார். “நீர் விருதாவாய் இரத்தம் சிந்தாமலும், என் ஆண்டவனாகிய நீர் பழிவாங்காமலும் இருந்ததுண்டானால், அப்பொழுது என் ஆண்டவனாகிய உமக்குத் துக்கமும் இராது, மன இடறலும் இராது” (வ.31).

பிறருக்குப் பாதுகாப்பு தேவைப்படுகையில், நாம் சிறப்பாகவே செயல்படுகிறோம். ஆனாலும், தேவனின் பூரணமான பராமரிப்பில்தான் அவர்கள் உண்மையாகப் பாதுகாக்கப்படுவார்கள்.

 

“சிறிய” அற்புதங்கள்

எங்கள் திருமண நிகழ்வில், எங்கள் கூச்ச சுபாவமுள்ள நண்பர் டேவ் ஒரு மூலையில் ஒரு நீள்சதுர, திசுக்களால் மூடப்பட்ட ஒரு பொருளைப் பிடித்தபடி நின்றார். அவரது பரிசை வழங்குவதற்கான முறை வந்தபோது, அவர் அதை முன் கொண்டு வந்தார். இவானும் நானும் அதை அவிழ்த்து, கையால் செதுக்கப்பட்ட மரத் துண்டில் “தேவனுடைய சில அற்புதங்கள் மிகவும் சிறியவைகள்” என்று பொறிக்கப்பட்டிருந்தது. சின்னச் சின்ன விஷயங்களிலும் தேவன் கிரியை செய்கிறார் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும் வகையில், நாற்பத்தைந்து ஆண்டுகளாக எங்கள் வீட்டில் அந்த மரத்தகடு தொங்கவிடப்பட்டுள்ளது. கட்டணத்தை செலுத்துதல், உணவை பெற்றுக்கொள்ளுதல், மற்றும் வியாதி குணமாகுதல் போன்ற அனைத்திலும் தேவனுடைய கிரியை இருக்கிறது. 

சகரியா தீர்க்கதரிசியின் மூலம், எருசலேமையும் ஆலயத்தையும் மீண்டும் கட்டுவது குறித்த தேவ கட்டளையை யூதேயாவின் ஆளுநரான செருபாபேல் பெறுகிறார். பாபிலோனிய சிறையிலிருந்து திரும்பிய பிறகு, மெதுவான முன்னேற்றத்தின் ஒரு பருவம் தொடங்கியது. இஸ்ரவேலர்கள் ஊக்கம் அடைந்தனர். “அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்?” என்று தேவன் ஊக்கப்படுத்தினார் (சகரியா 4:10). அவர் தனது ஆசைகளை நம் மூலமாகவும் சில சமயங்களில் நம்மை மீறியும் நிறைவேற்றுகிறார். “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (வச. 6). 

நமக்குள்ளும் நம்மைச் சுற்றியும் கடவுளின் கிரியையின் வெளிப்படையான சிறியத்தன்மையைக் கண்டு நாம் சோர்வடையும் போது, அவருடைய சில அற்புதங்கள் ‘சிறியதாக" இருக்கலாம் என்பதை நினைவில் கொள்வோம். அவர் தனது பெரிய நோக்கங்களுக்காக கட்டியெழுப்ப சிறிய விஷயங்களை பயன்படுத்துகிறார்.

 

வரவேற்பு விரிப்பு

எனது உள்ளூரின் நவீன அங்காடியில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு விரிப்புகளைப் பார்த்துக்கொண்டே நடக்கையில், ​​அவற்றின் மீது பதிக்கப்பட்டிருந்த வாசகங்களைக் கவனித்தேன். "வணக்கம்!", இதய வடிவில் "இல்லம்" போன்றவை. நான் வழக்கமான ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன், "வரவேற்பு" அதை வீட்டில் வைத்த பின்னர், என் உள்ளதை ஆராய்ந்தேன். தேவன் விரும்புவதை உண்மையிலேயே என் இல்லம் வரவேற்கிறதா? துன்பப்படும் அல்லது குடும்ப பிரச்சனையால் துயரப்படும் சிறுபிள்ளையை? தேவையோடிருக்கும் அண்டை வீட்டாரை? அவசரமாக அழைக்கும் வெளியூரிலிருந்து வந்திருக்கும் குடும்ப அங்கத்தினரை?

மாற்கு 9 இல், அவரது பரிசுத்த பிரசன்னத்தைக் கண்டு பிரமித்து நின்ற பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானை விட்டு (வ.1-13) கீழே பிசாசு பிடித்திருந்த தனது மகன் குணமாவான் என்ற நம்பிக்கை இழந்த தகப்பனைக் கண்டு மகனைக் குணமாக்க, இயேசு மறுரூப மலையிலிருந்து இறங்கினார் (வ.14-29). பின்னர் இயேசு சம்பவிக்கப்போகும் தனது  மரணத்தைப் பற்றிய தனிப்பட்ட படிப்பினைகளைச்  சீடர்களுக்கு வழங்கினார் (வ.30-32). அவர்களோ அவருடைய கருத்தை மிகவும் தவறாகப் புரிந்துகொண்டனர் (வ.33-34). மறுமொழியாக, இயேசு ஒரு சிறுபிள்ளையை தம் மடிமீது அமர்த்தி, “இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்” (வ. 37). இங்கு ஏற்றுக்கொள்ளுதல் என்ற சொல்லுக்கு விருந்தினராகப் பெறுவதும்,  ஏற்பதும் என்று பொருள். தம்முடைய சீடர்கள் அனைவரையும் வரவேற்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். மதிக்கப்படாதவர்களையும், அசௌகரியம் உண்டாக்குகிறவர்களையும் கூட நாம் அவரை வரவேற்பது போல ஏற்றுக்கொள்ளவேண்டும்.

நான் எனது வரவேற்பு கம்பளத்தை மனதிற்கொண்டு, அவருடைய அன்பை நான் எப்படி மற்றவர்களுக்கு வழங்குகிறேன் என்று சிந்தித்தேன். இது இயேசுவைப் பொக்கிஷமான விருந்தினராக வரவேற்பதன் மூலம் தொடங்குகிறது. அவர் விரும்பும் வழியில் பிறரை வரவேற்கும்பொருட்டு, என்னை வழிநடத்திட நான் அவரை அனுமதிப்பேனா?

மகிழ்ச்சியில் ஊழியம் செய்தல்

ஆண்ட்ரூ கார்டு, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தலைமை அதிகாரியாக இருந்தார். வெள்ளை மாளிகையில் அவரது பங்கு பற்றிய ஒரு நேர்காணலில் அவர் விளக்கினார். “ஒவ்வொரு பணியாளரின் அலுவலகத்திலும், 'நாங்கள் ஜனாதிபதியின் விருப்பப்படி சேவை செய்கிறோம்” என்று ஒரு வடிவமைக்கப்பட்ட நோக்க அறிக்கை தொங்குகிறது. ஆனால் நாங்கள் ஜனாதிபதியை மகிழ்விக்கவோ அல்லது அவருடைய மகிழ்ச்சியை வெல்லவோ சேவை செய்யவில்லை; மாறாக, அவருடைய வேலையைச் செய்ய அவர் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை அவருக்கு சொல்ல நாங்கள் சேவை செய்கிறோம்.” அந்த வேலை, அமெரிக்காவை நேர்த்தியாய் ஆட்சி செய்வதாகும். 

அப்போஸ்தலனாகிய பவுல் அடிக்கடி வற்புறுத்தியபடி, நாம் பல வேளைகளில் ஒருவரையொருவர் ஒற்றுமையில் கட்டியெழுப்புவதை விடுத்து, மனிதர்களை பிரியப்படுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். எபேசியர் 4இல் பவுல், “சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்” (வச. 11-13) என்று சொல்லுகிறார். 15-16 வசனங்களில், மக்களை பிரியப்படுத்த முயற்சிக்கும் செய்கையை விட்டுவிடும்படிக்கு அறிவுறுத்தி, “அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு” செயல்பட்டால், “அது அன்பினாலே தனக்குப் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது” என்று வலியுறுத்துகிறார். 

இயேசுவின் விசுவாசிகளாக, நாம் மக்களைக் கட்டியெழுப்பவும் தேவனுடைய நோக்கங்களை நிறைவேற்றவும் ஊழியம் செய்கிறோம். நாம் மற்றவர்களைப் பிரியப்படுத்தினாலும் இல்லாவிட்டாலும், அவருடைய திருச்சபையில் ஒற்றுமையை உருவாக்க அவர் நம் மூலம் செயல்படும்போது நாம் தேவனை பிரியப்படுத்துவோம்.

 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார்.

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம்.

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26). 

 

ஒன்றுபட்டு வாழ்வோம்

எனது அமெரிக்கத் தோழி கேரல், 2016 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியா வந்தாள். அவள் வருவதற்கு முன்னர், இதன் பல்வேறு கலாச்சாரங்கள், உணவு வகைகள் மற்றும் மொழிகள் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாள். இருப்பினும், அவள் பெங்களூருவில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டபோது, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஒரு அன்பான சமூகத்தை உருவாக்குவதைக் கண்டு வியந்தாள். தேவன் எப்படி ஜனங்களை ஒன்றிணைத்தார் என்பதை கேரல் பார்த்தாள்.

ஒரு சமூகமாக ஒற்றுமையாக வாழ்வது என்றால் என்ன என்பதை ஆதி விசுவாசிகள் புரிந்துகொண்டனர். லூக்கா, "அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்" (வ.42) என்றெழுதினார். அவர்கள் வெவ்வேறு ஊர்கள், நகரங்கள் மற்றும் பின்னணியிலிருந்து வந்தவர்கள், எனினும் அவர்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். அவர்களின் சமூகத்தை அழகாக்கிய சில விஷயங்களில் ஒன்று அவர்களின் அன்றாட நடவடிக்கைகளாகும். அவர்கள் அப்போஸ்தலரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும், ஒருவரோடொருவர் நேரத்தைச் செலவிடுவதற்கும், கர்த்தரின் பந்தியை அனுசரிப்பதற்கும், ஒன்றாக ஜெபிப்பதற்கும் தங்களை அர்ப்பணித்திருந்தனர் (வ.42). அவர்கள் தங்கள் உடைமைகளைப் பகிர்ந்துகொண்டு, "மகிழ்ச்சியோடும் கபடமில்லலாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி" எப்போதும் தேவனைத் துதித்தனர் (வ.44-46). இதன் விளைவாக, தேவன் ஒவ்வொரு நாளும் புதிய மக்களை அவர்களின் சமூகத்தில் சேர்த்தார் (வ.47).

இயேசுவின் ஆதி சீடர்கள், ஒரு சமூகத்தின் மாதிரியை நமக்கு வழங்குகிறார்கள். வறுமை, துன்புறுத்தல் மற்றும் மரணத்தின் மத்தியிலும் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒரு சமூகம் என்றால் என்ன என்பதை அவர்கள் வெளிப்படுத்தினர். சபை ஆராதனைகள் அல்லது ஐக்கிய கூட்டங்களின் போது மட்டுமல்ல, நாம் ஏக கருத்துடையவர்களாய் இருக்கும்போது மட்டுமல்ல, எல்லா நேரங்களிலும் கிறிஸ்துவின் மூலம் ஒன்றுபடுவதற்கு நாமும் அழைக்கப்படுகிறோம். ஏனென்றால், கிறிஸ்துவை மையமாகக் கொண்ட நமது ஒற்றுமையை நாம் உலகிற்கு சாட்சியிடுகையில், தேவன் நம் அன்பின் சமூகத்தில் புதியவர்களைக் கொண்டுவருவார். 

 

தி இண்டியாமேன்

1950 மற்றும் 60 களில், சர்வதேச பேருந்து பாதை, 'தி ஹிப்பி டிரெயில்' ஐரோப்பாவை ஆசியாவின் முக்கிய தளங்களுடன் இணைத்தது. "பேடி" என்ற புனைபெயர் கொண்ட ஓய்வு பெற்ற ஆங்கிலேய ராணுவ வீரர் ஒருவர், இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்குவதன் மூலம் அடிக்கடி இந்தியாவிற்கு வரும் பயண வாய்ப்புகளைப் பயன்படுத்த முடிவு செய்தார். ‘தி இண்டியாமேன்’ என்று அழைக்கப்படும் பேருந்து லண்டனிலிருந்து கல்கத்தாவுக்கு வந்து மீண்டும் லண்டனுக்குச் சென்றது. பயணத்தின் தொடக்கத்தில், பயணிகள் ஆர்வத்துடன் பேருந்தில் ஏறினர், ஆனால் 60 நாட்களின் முடிவில் அவர்கள் இறுகிய கழுத்துப்பட்டை மற்றும் மூட்டுவலியுடன் இறங்கினர். முற்றிலும் சோர்ந்துபோனதால், அடுத்த பேருந்தில் வீடு திரும்புவதற்கு அவர்கள் தயாராகவே இருந்தனர்.

எலியா ஒரு உற்சாகமான தீர்க்கதரிசி. அவரது தீர்க்கதரிசன பயணத்தின் தொடக்கத்தில், அவர் மிகவும் உத்வேகத்துடன் இருந்தார். அவர் எந்த நிலையிலும் தேவனுக்குக் கீழ்ப்படிந்தார் மேலும் தீய ராஜாவான ஆகாப் மற்றும் அவனது ராணி யேசபேலை எதிர்க்கத் தயங்கவில்லை. இருப்பினும், சில காலம் கழித்து, எலியாவால் முன்செல்ல முடியவில்லை. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல யேசபேல் தனது தீர்க்கதரிசிகளைக் கொன்றதற்காக அவரது உயிரைப் பறிக்க வந்தாள் (வ.2). உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வடைந்த அவர், "போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்" என்று ஜெபித்தார் (வ.4). அவர் ஒரு மரத்தடியில் களைப்புடனும் சோர்வுடனும் தூங்கியபோது, அவரை ஊக்கப்படுத்தவும் உணவளிக்கவும் தேவன் ஒரு தூதனை அனுப்பினார் (வ.5-7). மீண்டும் ஒருமுறை பலப்படுத்தப்பட்ட எலியா பல நாட்கள் ஓரேபுக்கு நடந்தார் (வ.8). எலியாவும், ‘தி இண்டியாமேன்’ பயணிகளும் அடைந்த சோர்வு உங்களுக்குப் புரிந்திருக்கலாம். ஏமாற்றம், தோல்வி, இழப்பு மற்றும் துக்கம் என்ற திருப்பங்கள் மூலம், நாம் இளைப்படைந்து, சோர்வடைகிறோம். ஆனால் விரக்தியின் ஆழ்ந்த தருணங்களில், நாம் தேவனுக்கு மறைவாயிருக்கவில்லை என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அவர் நம் தேவைகளை அறிந்திருக்கிறார், புரிந்துகொள்கிறார், அவருடைய உதவி வெகு தொலைவில் இல்லை.