எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

எலிசா மோர்கன்கட்டுரைகள்

தேவனின் முழுமையான பராமரிப்பு

டேவிட் வெட்டெர் தனது வாழ்நாளெல்லாம் ஒரு குமிழியில் வாழ்ந்து, தனது பன்னிரண்டாம் வயதில் மரணமடைந்தார். “குமிழ் சிறுவன்” என்று செல்லப் பெயரிடப்பட்ட டேவிட், ஒருவகையான கடும் நோயெதிர்ப்பு குறையோடு பிறந்தார். அவனுடைய பெற்றோர் தங்களது மூத்த மகனை நோய்க்குப் பலிகொடுத்ததால், இளையவனின் உயிர்காக்க மனவுறுதியோடிருந்தனர். அவனுடைய ஆயுளை நீட்டிக்க, நாசாவின் விஞ்ஞானிகள் நெகிழியிலான ஒரு பாதுகாப்பு குமிழியை உண்டாக்கினர், மேலும் அவன் பெற்றோருக்கு விண்வெளி கவச உடையையும் அளித்தனர். இதனைக்கொண்டு, அவர்கள் டேவிட்டை வெளியிருந்து பராமரிக்க முடியும். நாம் நேசிப்பவர்களைப் பாதுகாக்க நாம் எவ்வளவாய் ஏங்குகிறோம்.

அபிகாயிலின் முட்டாள் கணவனான நாபாலினால் தாவீது ராஜா தவறிழைக்கப்பட்டார். கோபம் தலைக்கேறிய நிலையில், தனது சொந்த கைகளால் பழிதீர்க்க தாவீது வகைத்தேடினார். அபிகாயிலோ அவரை துரிதமாகச் சந்தித்து, “உம்முடைய பிராணனை வாங்க வகைதேடவும், ஒரு மனுஷன் எழும்பினாலும் என் ஆண்டவனுடைய ஆத்துமா உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஆதரவில் இருக்கிற ஜீவனுள்ளோருடைய கட்டிலே கட்டப்பட்டிருக்கும்” (1 சாமுவேல் 25:29) என்று ஞானமாக நினைப்பூட்டினாள். எஜமானன் தனது விலையேறப்பெற்றவற்றை ஒன்று சேர்த்து, பத்திரமாகச் சுமக்கும் செயலே “கட்டிலே கட்டுப்படுதல்” ஆகும். தேவன் தாவீதை பத்திரமாக “கட்டிலே” சுமக்க சித்தம் கொண்ட, அபிகாயில் நினைப்பூட்டினாள். தன்னுடையவற்றில் அல்ல, தேவனின் கரத்தில்தான் அவர் பாதுகாப்பாக இருப்பார். “நீர் விருதாவாய் இரத்தம் சிந்தாமலும், என் ஆண்டவனாகிய நீர் பழிவாங்காமலும் இருந்ததுண்டானால், அப்பொழுது என் ஆண்டவனாகிய உமக்குத் துக்கமும் இராது, மன இடறலும் இராது” (வ.31).

பிறருக்குப் பாதுகாப்பு தேவைப்படுகையில், நாம் சிறப்பாகவே செயல்படுகிறோம். ஆனாலும், தேவனின் பூரணமான பராமரிப்பில்தான் அவர்கள் உண்மையாகப் பாதுகாக்கப்படுவார்கள்.

 

“சிறிய” அற்புதங்கள்

எங்கள் திருமண நிகழ்வில், எங்கள் கூச்ச சுபாவமுள்ள நண்பர் டேவ் ஒரு மூலையில் ஒரு நீள்சதுர, திசுக்களால் மூடப்பட்ட ஒரு பொருளைப் பிடித்தபடி நின்றார். அவரது பரிசை வழங்குவதற்கான முறை வந்தபோது, அவர் அதை முன் கொண்டு வந்தார். இவானும் நானும் அதை அவிழ்த்து, கையால் செதுக்கப்பட்ட மரத் துண்டில் “தேவனுடைய சில அற்புதங்கள் மிகவும் சிறியவைகள்” என்று பொறிக்கப்பட்டிருந்தது. சின்னச் சின்ன விஷயங்களிலும் தேவன் கிரியை செய்கிறார் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும் வகையில், நாற்பத்தைந்து ஆண்டுகளாக எங்கள் வீட்டில் அந்த மரத்தகடு தொங்கவிடப்பட்டுள்ளது. கட்டணத்தை செலுத்துதல், உணவை பெற்றுக்கொள்ளுதல், மற்றும் வியாதி குணமாகுதல் போன்ற அனைத்திலும் தேவனுடைய கிரியை இருக்கிறது. 

சகரியா தீர்க்கதரிசியின் மூலம், எருசலேமையும் ஆலயத்தையும் மீண்டும் கட்டுவது குறித்த தேவ கட்டளையை யூதேயாவின் ஆளுநரான செருபாபேல் பெறுகிறார். பாபிலோனிய சிறையிலிருந்து திரும்பிய பிறகு, மெதுவான முன்னேற்றத்தின் ஒரு பருவம் தொடங்கியது. இஸ்ரவேலர்கள் ஊக்கம் அடைந்தனர். “அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்?” என்று தேவன் ஊக்கப்படுத்தினார் (சகரியா 4:10). அவர் தனது ஆசைகளை நம் மூலமாகவும் சில சமயங்களில் நம்மை மீறியும் நிறைவேற்றுகிறார். “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (வச. 6). 

நமக்குள்ளும் நம்மைச் சுற்றியும் கடவுளின் கிரியையின் வெளிப்படையான சிறியத்தன்மையைக் கண்டு நாம் சோர்வடையும் போது, அவருடைய சில அற்புதங்கள் ‘சிறியதாக" இருக்கலாம் என்பதை நினைவில் கொள்வோம். அவர் தனது பெரிய நோக்கங்களுக்காக கட்டியெழுப்ப சிறிய விஷயங்களை பயன்படுத்துகிறார்.

 

வரவேற்பு விரிப்பு

எனது உள்ளூரின் நவீன அங்காடியில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு விரிப்புகளைப் பார்த்துக்கொண்டே நடக்கையில், ​​அவற்றின் மீது பதிக்கப்பட்டிருந்த வாசகங்களைக் கவனித்தேன். "வணக்கம்!", இதய வடிவில் "இல்லம்" போன்றவை. நான் வழக்கமான ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன், "வரவேற்பு" அதை வீட்டில் வைத்த பின்னர், என் உள்ளதை ஆராய்ந்தேன். தேவன் விரும்புவதை உண்மையிலேயே என் இல்லம் வரவேற்கிறதா? துன்பப்படும் அல்லது குடும்ப பிரச்சனையால் துயரப்படும் சிறுபிள்ளையை? தேவையோடிருக்கும் அண்டை வீட்டாரை? அவசரமாக அழைக்கும் வெளியூரிலிருந்து வந்திருக்கும் குடும்ப அங்கத்தினரை?

மாற்கு 9 இல், அவரது பரிசுத்த பிரசன்னத்தைக் கண்டு பிரமித்து நின்ற பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானை விட்டு (வ.1-13) கீழே பிசாசு பிடித்திருந்த தனது மகன் குணமாவான் என்ற நம்பிக்கை இழந்த தகப்பனைக் கண்டு மகனைக் குணமாக்க, இயேசு மறுரூப மலையிலிருந்து இறங்கினார் (வ.14-29). பின்னர் இயேசு சம்பவிக்கப்போகும் தனது  மரணத்தைப் பற்றிய தனிப்பட்ட படிப்பினைகளைச்  சீடர்களுக்கு வழங்கினார் (வ.30-32). அவர்களோ அவருடைய கருத்தை மிகவும் தவறாகப் புரிந்துகொண்டனர் (வ.33-34). மறுமொழியாக, இயேசு ஒரு சிறுபிள்ளையை தம் மடிமீது அமர்த்தி, “இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்” (வ. 37). இங்கு ஏற்றுக்கொள்ளுதல் என்ற சொல்லுக்கு விருந்தினராகப் பெறுவதும்,  ஏற்பதும் என்று பொருள். தம்முடைய சீடர்கள் அனைவரையும் வரவேற்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். மதிக்கப்படாதவர்களையும், அசௌகரியம் உண்டாக்குகிறவர்களையும் கூட நாம் அவரை வரவேற்பது போல ஏற்றுக்கொள்ளவேண்டும்.

நான் எனது வரவேற்பு கம்பளத்தை மனதிற்கொண்டு, அவருடைய அன்பை நான் எப்படி மற்றவர்களுக்கு வழங்குகிறேன் என்று சிந்தித்தேன். இது இயேசுவைப் பொக்கிஷமான விருந்தினராக வரவேற்பதன் மூலம் தொடங்குகிறது. அவர் விரும்பும் வழியில் பிறரை வரவேற்கும்பொருட்டு, என்னை வழிநடத்திட நான் அவரை அனுமதிப்பேனா?

மகிழ்ச்சியில் ஊழியம் செய்தல்

ஆண்ட்ரூ கார்டு, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தலைமை அதிகாரியாக இருந்தார். வெள்ளை மாளிகையில் அவரது பங்கு பற்றிய ஒரு நேர்காணலில் அவர் விளக்கினார். “ஒவ்வொரு பணியாளரின் அலுவலகத்திலும், 'நாங்கள் ஜனாதிபதியின் விருப்பப்படி சேவை செய்கிறோம்” என்று ஒரு வடிவமைக்கப்பட்ட நோக்க அறிக்கை தொங்குகிறது. ஆனால் நாங்கள் ஜனாதிபதியை மகிழ்விக்கவோ அல்லது அவருடைய மகிழ்ச்சியை வெல்லவோ சேவை செய்யவில்லை; மாறாக, அவருடைய வேலையைச் செய்ய அவர் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை அவருக்கு சொல்ல நாங்கள் சேவை செய்கிறோம்.” அந்த வேலை, அமெரிக்காவை நேர்த்தியாய் ஆட்சி செய்வதாகும். 

அப்போஸ்தலனாகிய பவுல் அடிக்கடி வற்புறுத்தியபடி, நாம் பல வேளைகளில் ஒருவரையொருவர் ஒற்றுமையில் கட்டியெழுப்புவதை விடுத்து, மனிதர்களை பிரியப்படுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். எபேசியர் 4இல் பவுல், “சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்” (வச. 11-13) என்று சொல்லுகிறார். 15-16 வசனங்களில், மக்களை பிரியப்படுத்த முயற்சிக்கும் செய்கையை விட்டுவிடும்படிக்கு அறிவுறுத்தி, “அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு” செயல்பட்டால், “அது அன்பினாலே தனக்குப் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது” என்று வலியுறுத்துகிறார். 

இயேசுவின் விசுவாசிகளாக, நாம் மக்களைக் கட்டியெழுப்பவும் தேவனுடைய நோக்கங்களை நிறைவேற்றவும் ஊழியம் செய்கிறோம். நாம் மற்றவர்களைப் பிரியப்படுத்தினாலும் இல்லாவிட்டாலும், அவருடைய திருச்சபையில் ஒற்றுமையை உருவாக்க அவர் நம் மூலம் செயல்படும்போது நாம் தேவனை பிரியப்படுத்துவோம்.

 

பாவத்திலிருந்து பரிசுத்தத்திற்கு

சிறுமியாக, என் மகள் பாலாடைக்கட்டிகளுடன் விளையாடுவதை விரும்பினாள். அதின் இரண்டு துளைகளிலிருந்து அவளது பளபளப்பான கண்கள் எட்டிப்பார்த்து, "அம்மா பாருங்கள்" என்று சொல்லி, முகமூடியைப் போல வெளிர் மஞ்சள் நிற சதுரத்தை முகத்தில் வைப்பாள். ஒரு இளம் தாயாக, அந்த முகமூடி எனது உண்மையான, அன்பு நிறைந்த ஆனால் மிகவும் அபூரணமான கிரியைகளை எனக்கு நினைப்பூட்டியது. அவை குறைவுள்ளவை, பரிசுத்தமானவை அல்ல.

தேவனுக்காகப் பிரித்தெடுக்கப்பட்ட, அவரைப் போல வாழ வகையறுக்கப்பட்டிருக்கும் அந்த பரிசுத்தமான வாழ்வை வாழ நாம் எவ்வளவாய் ஏங்கினாலும் ,பரிசுத்தத்திற்கு பதிலாக,நாளுக்கு நாள் குறைவுகளே  நம்மிடம் காணப்படுகிறது.

 

2 தீமோத்தேயு 1:6-7ல், பவுல் தனது இளம் சீடன் தீமோத்தேயுவிடம் அவருடைய பரிசுத்த அழைப்பின்படி வாழ அவரை வலியுறுத்துகிறார். அப்போஸ்தலன் பின்னர் "[தேவன்]  நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும்....கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்." (வச. 9) என்று தெளிவுபடுத்தினார். இப்படிப்பட்ட வாழ்க்கை நம் குணத்தால் அல்ல, தேவனின் கிருபையாலேயே சாத்தியமாகும். இது, "ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட" (வச. 9) கிருபை என்று பவுல் தொடர்கிறார். தேவனின் கிருபையை ஏற்று, அவை அருளும் வல்லமையை அடித்தளமாக்கி வாழ முடியுமா?

பெற்றோர், கடமை, திருமணம், வேலை, அல்லது நம் அயலாரை நேசித்தல் என்று எதுவாக இருந்தாலும், தேவன் நம்மை ஒரு பரிசுத்த வாழ்க்கைக்கு அழைக்கிறார் .நாம் பரிபூரணமாக இருக்க முயல்வதால் அல்ல, மாறாக அவருடைய கிருபையால்.

 

குடும்பம் மிகவும் முக்கியமானது

எங்கள் மாமாவின் இறுதி ஊர்வலத்திற்காகவும் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தொண்ணூறு வயது பாட்டியையும் பார்ப்பதற்காய், வெவ்வேறு மாகாணங்களில் வசித்த நான், எனது அக்கா மற்றும் தம்பியுடன் சேர்ந்து விமானத்தின் மூலமாய் வந்தோம். அவர் பக்கவாதத்தால் முடங்கி, பேசும் திறனை இழந்துவிட்டார். அவர் வலது கையை மட்டுமே பயன்படுத்தினார். நாங்கள் அவர்களது படுக்கையைச் சுற்றி நின்றபோது, அவர் அந்தக் கையை நீட்டி எங்களின் ஒவ்வொரு கைகளையும் எடுத்து, ஒன்றன்மேல் ஒன்றாக அவர்களது இதயத்தின்மீது வைத்து, அவற்றைத் தட்டிக்கொடுத்தார். இந்த வார்த்தைகளற்ற சைகையால், உடைபட்டு பிரிந்திருக்கும் எங்களது உடன்பிறப்பு உறவைக் குறித்து அவர் எங்களோடு தொடர்புகொண்டார். “குடும்பம் மிகவும் முக்கியமானது.”

திருச்சபை என்னும் தேவனுடைய குடும்பத்தில் நாமும் உடைக்கப்பட்டவர்களாய் பிரிந்து நிற்கக்கூடும். கசப்பு நம்மை பிரிந்திருக்கச் செய்யும். எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர், ஏசாவை அவனுடைய சகோதரனிடத்திலிருந்து பிரித்த கசப்பைக் குறித்து குறிப்பிடுகிறார் (எபிரெயர் 12:16). மேலும் சகோதர சகோதரிகளாகிய நாம் தேவனுடைய குடும்பத்தில் ஒருவரிலொருவர் ஐக்கியமாய் இருப்பதற்கு நமக்கு சவால் விடுகிறார். “யாவரோடும் சமாதானமாயிருக்கவும்... நாடுங்கள்” (வச. 14). அதாவது, தேவனுடைய குடும்பத்தில் அனைவரோடும் சமாதானமாய் வாழ்வதற்கு எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு பிரயாசப்படுவோம் என்று வலியுறுத்துகிறார். அத்தகைய ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்துகிறது, அவ்வாறு வாழ்வதற்கு தூண்டுகிறது. 

குடும்பம் மிகவும் முக்கியமானது. அவற்றில் நமது பூமிக்குரிய குடும்பங்கள் மற்றும் தேவனுடைய விசுவாசக் குடும்பங்களும் இணைந்ததே. நாம் அன்போடும் ஐக்கியத்தோடும் இருக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் ஏறெடுப்போமா? 

 

பிறரை நேசிப்பதன் மூலம் தேவனை நேசி

ஆல்பா குடும்பம் பதின்மூன்று மாத இடைவெளியில் ஒரே மாதிரியான இரண்டு இரட்டையர்களைப் பெற்றெடுக்கும் அரிய நிகழ்வை அனுபவித்தது. அவர்கள் தங்கள் பெற்றார் கடமைகளையும் வேலைகளையும் எப்படி சமாளித்தார்கள்? அவர்கலருகே இருந்த நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் உதவினர். இரண்டு தாத்தா பாட்டிகளும் பகலில் ஒரு இரட்டைக் குழந்தைகளைப் பராமரித்தனர், அதனால் பெற்றோர்கள் வேலை செய்து காப்பீட்டிற்கு பணம் செலுத்தலாம். ஒரு நிறுவனம் ஒரு வருடத்திற்கான அணையாடைகளை வழங்கியது. தம்பதியரின் சக பணியாளர்கள் தங்கள் தனிப்பட்ட விடுப்புநாட்களில் உதவினர். "எங்கள் சுற்றத்தார் இல்லாமல் நாங்கள் அதை செய்திருக்க முடியாது," என்று அவர்கள் கூறினார்கள். உண்மையில், ஒரு நேரடி நேர்காணலின் போது, ​​சக தொகுப்பாளினி தனது மைக்கைக் கழற்றிவீசி, குறுநடை போடும் குழந்தைக்குப்பின் ஓடினார்; நண்பர்களைப்போல தன் பங்காற்றினார்!

மத்தேயு 25:31-46 இல், நாம் பிறருக்கு சேவை செய்கையில், ​​​​தேவனைச் சேவிக்கிறோம் என்பதைக் குறிக்க இயேசு ஒரு உவமையைச் சொல்கிறார். பசித்தோருக்கு உணவு, தவித்தோர்க்கு தண்ணீர், வீடற்றவர்களுக்கு உறைவிடம், நிர்வாணிகளுக்கு உடைகள், நோயுற்றோருக்குக் குணமளித்தல் (வ. 35-36) உள்ளிட்ட சேவைச் செயல்களைப் பட்டியலிட்ட பிறகு, இயேசு, “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” (வ.40) என்று முடிக்கிறார்.

நம்முடைய இரக்கத்தை உண்மையாக பெறுவது இயேசுவேயென்று கற்பனை செய்வது, நமது சுற்றுப்புறங்களிலும்; குடும்பங்களிலும்; சபைகளிலும்; உலகிலும் சேவை செய்வதற்கான உண்மையான உந்துதலாகும். பிறரின் தேவைகளுக்கு தியாகமாக நாம் செலவிட அவர் நம்மை உணர்த்துகையில், ​​நாம் அவருக்குச் சேவை செய்கிறோம். நாம் பிறரை நேசிக்கையில், ​​நாம் தேவனை நேசிக்கிறோம்.

குறுக்கு வழியில் தேவன்

பல நாட்கள் நோய்வாய்ப்பட்டு, பின்னர் உடல் சூடு அதிகரித்த பிறகு, என் கணவருக்கு அவசர சிகிச்சை தேவை என்பது தெளிவாகத் தெரிந்தது. உடனடியாக மருத்துவமனை அவரை அனுமதித்தது. ஒரு நாள் கடந்துபோனது. அடுத்த நாளில் அவர் சற்று தேறியிருந்தார். ஆகிலும் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கும் நிலையில் இல்லை. மருத்துவமனையில் தங்கி என் கணவரை பராமரித்துக்கொள்வதும், அதே நேரத்தில் பலர் பங்குபெறும் பணி வேலையை செய்வதற்கும் நான் மிகவும் சிரமப்பட்டேன். நான் நலமாக இருப்பேன் என்று என் கணவர் உறுதியளித்தார். ஆனால் அவரை பராமரிப்பதற்கும் என் வேலையை செய்வதற்கு இடையில் நான் சிக்கித் தவிக்க நேரிட்டது. 

வாழ்க்கையின் இதுபோன்ற முக்கியமான தருணங்களில் தீர்மானம் எடுப்பதற்கு தேவ ஜனத்திற்கு தேவனுடைய உதவி தேவைப்படுகிறது. பெரும்பாலும் அவர்கள் தேவனுடைய கட்டளைகளை கைக்கொள்ள தவறிவிடுகின்றனர். ஆனால் மோசே, தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து ஜீவனைத் தெரிந்துகொள்ளும்படிக்கு அவர்களுக்கு வலியுறுத்துகிறார் (உபாகமம் 30:19). மேலும் எரேமியா தீர்க்கதரிசி, இஸ்ரவேல் ஜனங்களுக்கு “வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்” (எரேமியா 6:16) என்று ஜனங்களுடைய வழிநடத்துதலுக்கு அறிவுறுத்துகிறார். வேதாகமத்தில் பூர்வ பாதைகளும் கடந்த காலத்தில் கர்த்தர் செய்த நன்மைகளும் நம்மை நேர்த்தியாய் வழிநடத்தக்கூடியவைகள்.  

நான் நடைமுறையில் குழப்பமான வாழ்க்கைப் பாதையில் இருப்பதாக கற்பனை செய்துகொண்டு, எரேமியாவின் ஞான போதனைனை கருத்தில்கொண்டேன். என் கணவருக்கு நான் தேவை. என் வேலையையும் நான் செய்தாக வேண்டும். என்னுடைய மேற்பார்வையாளர் என்னை அழைப்பித்து, வீட்டில் தங்கி கணவரை பராமரித்துக்கொள்ளும்படிக்கு என்னை ஊக்கப்படுத்தினார். தேவனுடைய இந்த கிருபைக்காய் நான் பெருமூச்சுடன் நன்றி சொன்னேன். தேவனுடைய வழிநடத்துதல் எப்போதும் தெளிவாக தெரிவதில்லை. ஆனால் அது நம்மை நோக்கி நிச்சமாய் வரும். நாம் குழப்பமான பாதையில் நிற்கும்போது, அது நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கிறது என்பதை நம்புவோம்.

திருச்சபையாயிரு!

கோவிட்-19 தொற்றுநோயின்போது, டேவ் மற்றும் கார்லா ஒரு தேவாலய வீட்டைத் தேடி பல மாதங்கள் செலவிட்டனர். தொற்று பரவிய காலங்கிளல் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது, பல்வேறு தனிப்பட்ட அனுபவங்களை மட்டுப்படுத்தி, அவற்றை மேலும் கடினமாக்கியது. அவர்கள் கிறிஸ்தவ திருச்சபையோடு ஐக்கியம்கொள்வதற்கு ஏங்கினர். “ஒரு திருச்சபையைக் கண்டுபிடிப்பது கடினமானது” என்று கார்லா எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார். என் திருச்சபை குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்கான எனது சொந்த ஏக்கத்திலிருந்து எனக்குள் ஒரு உணர்தல் எழுந்தது. “திருச்சபையாக இருப்பது கடினமானது" என்று நான் பதிலளித்தேன். அந்த காலங்களில், எங்கள் திருச்சபை சுற்றியுள்ள மக்களுக்கு உணவு வழங்குதல், ஆன்லைன் சேவைகளை உருவாக்குதல் மற்றும் ஆதரவுடனும் ஜெபத்துடனும் ஒவ்வொரு விசுவாசிகளுக்கும் போன் செய்து நலம் விசாரித்தது. அந்த சேவையில் நானும் எனது கணவரும் கலந்துகொண்டாலும், மாறக்கூடிய இந்த உலகத்தில் நாம் திருச்சபையாய் செயல்படுவது எப்படி என்று ஆச்சரியப்பட்டோம்.

எபிரெயர் 10:25இல் ஆசிரியர் “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல்” இருக்கும்படிக்கு ஊக்குவிக்கிறார். ஒருவேளை உபத்திரவத்தின் நிமித்தமோ (வச. 32-34), சோர்வின் நிமித்தமாகவோ (12:3) ஐக்கியத்தை விடும் அபாயம் அவர்களுக்கு நேரிட்டிருக்கலாம். அவர்களுக்கு இந்த தூண்டுதல் அவசியப்பட்டது.

இன்று, எனக்கும் ஒரு தூண்டுதல் தேவைப்படுகிறது. உங்களுக்கும் தேவைப்படுகிறதா? நடைமுறை சூழ்நிலைகள் நாம் கூடிவரும் திருச்சபையை பாதிக்கும் தருவாயில் நாம் திருச்சபையாய் நிலைநிற்போமா? ஆக்கப்பூர்வமாக ஒருவரையொருவர் ஊக்குவிப்போம். தேவன் நம்மை வழிநடத்துவது போல ஒருவரையொருவர் கட்டியெழுப்புவோம். நம்முடைய வளங்களைப் பகிர்ந்து கொள்வோம். ஆதரவான செய்திகளை பகிர்வோம். நம்மால் முடிந்தவரை சேகரிப்போம். ஒருவருக்கொருவர் ஜெபியுங்கள். நாமே திருச்சபையாக நிற்போம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனால் ஒருபோதும் புறக்கணிக்கப்படவில்லை

“சில நேரங்களில் நான் ஏதோ கண்ணுக்கே தெரியாதவள் போல உணர்கிறேன்" விமலா தன் தோழியிடம் பேசும்போது இந்த வார்த்தைகள் காற்றில் ஊசலாடின. விமலாவை அவள் சிறு குழந்தைகளுடன் கைவிட்டு, அவளது கணவன் வேறொறுவளோடு போய்விட்டான். அவள், "நான் அவருக்கு என் வாழ்விலேயே சிறந்த ஆண்டுகளைக் கொடுத்தேன். இப்போது யாரேனும் என்னைப் பார்த்துக்கொள்வார்கள் என்றோ என்னை அறிவதற்கு நேரம் ஒதுக்குவார்களோ என்று எனக்குத் தெரியவில்லை" என்றாள்.

அவளுடைய தோழி பதிலளித்தாள்: "நான் மிகவும் வருந்துகிறேன். எனக்கு ஆறு வயதாக இருந்தபோது என் அப்பாவும் போய்விட்டார். அது எங்களுக்கு, குறிப்பாக அம்மாவுக்குக் கடினமாக இருந்தது. ஆனால் ஒரு இரவில் அவள் என்னைத் தூங்கவைத்த போது, நான் மறக்கவே இல்லாத ஒன்றைச் சொன்னால்: 'தேவன் தன் கண்களை மூடுவதேயில்லை'. நான் வளர்ந்த பிறகு, ​​தேவன் என்னை நேசிப்பதையும், எனக்கு எப்போதும் தூங்கும்போதும் கூட காவலாய் இருப்பதையும் அவள் எனக்குக் கற்பிக்க முயன்றதை விலக்கினாள்".

சீனாய் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த ஒரு சவாலான நேரத்தில் தமது ஜனங்களுடன் பகிர்ந்துகொள்ள மோசேக்குத் தேவன் அருளிய வார்த்தைகளை வேதாகமம் முன்வைக்கிறது: “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே” (எண்ணாகமம் 6:24-26). இந்த ஆசீர்வாதமானது ஜனங்கள் மீது ஆசாரியர்களால் மொழியப்பட வேண்டும்..

யாராவது நம்மைப் பார்க்கிறார்களா அல்லது உண்மையிலேயே புரிந்துகொள்கிறார்களா என்று நாம் ஏங்குகிற நிலைமையான வாழ்க்கையின் வனாந்தரங்களில் கூட தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். தேவனின் தயவான அவரது பிரகாசிக்கும் முகமும் மாறிடாத அன்பும் அவரை நேசிப்பவர்களை நோக்கித் திரும்புகிறது, நம்முடைய வலியினிமித்தம், அவரை நம்மால் உணர முடியாவிட்டாலும் கூட, தேவனுக்கு மறைவானவர்கள் என்று யாரும் இல்லை.

நமது திட்டங்களும் தேவ திட்டங்களும்

பல ஆண்டுகளுக்கு முன்பு, என் கணவர் தனது சபையைச் சேர்ந்த ஒரு குழுவினருடன் ஆப்பிரிக்காவுக்குச் செல்ல தீர்மானித்தார். கடைசி நிமிடத்தில், குழுவினர் பயணிக்க முடியாமல் தடைப்பட்டனர். அனைவரும் ஏமாற்றமடைந்தனர், ஆனால் விமான கட்டணம், தங்குமிடம் மற்றும் உணவுக்காக அவர்கள் சேகரித்த பணத்தை அவர்கள் பார்க்க முயற்சித்த மக்களுக்கு நன்கொடையாக வழங்கினர். வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலமாக ஒரு கட்டிடத்தைக் கட்டுவதற்கு மக்கள் அதைப் பயன்படுத்தினர்.

சமீபத்தில், ஒரு ஜெபக்கூட்டத்தில், ​​​​என் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு பயணம் செய்திருந்த கிராமத்தில் வாழ்ந்த ஒருவரைச் சந்தித்தார். இந்த நபர் ஒரு ஆசிரியர், அவர் தினமும் அதே கட்டிடத்தின் வழியாக நடந்து செல்வதாகக் கூறினார். அப்பகுதியில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உபயோகமாகத் தேவன் அதைப் பயன்படுத்தினார் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

நம்முடைய திட்டங்களும், விருப்பங்களும் தேவனின் மனதில் கொண்டிருப்பவற்றோடு எப்போதும் ஒத்துப்போவதில்லை. ஏனென்றால்,  "என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்" (ஏசாயா 55:8). தேவனுடைய வழிகள் நம்மிடமிருந்து வேறுபட்டவை மாத்திரம் அல்ல; அவருடைய வழிகள் "உயர்ந்தவை" மற்றும் சிறந்தவை, ஏனெனில் அவர் செய்வதெல்லாம் அவர் யார் என்பதோடு ஒத்துப்போகிறது (வ.9). அவருக்கு ஊழியஞ்செய்வதற்கான நமது முயற்சிகள் நாம் திட்டமிட்டபடி நடக்காதபோது இந்த சத்தியம் நமக்கு நம்பிக்கையூட்டுகிறது.

சில சூழ்நிலைகளில் தேவன் இடைப்பட்டதை நாம் அறிந்துகொள்வதற்கு, பல ஆண்டுகள் கழித்துத் திரும்பிப் பார்க்க நேரிடலாம். இருப்பினும், தற்போதைக்கு, அவருடைய நாமத்தால் உலகத்தை நாம் தொடர்ந்து எதிர்கொள்ளுகையில், ​​தேவன் எப்போதும் வல்லமையுடன் செயல்படுகிறார் என்பதை நாம் நினைவில் கொள்ளலாம் (வ.11).

 

தேவன் நம் பின்னே ஓடி வருகிறார்

பல ஆண்டுகளாக, சஞ்சய் ஒரு அடிமைத்தனத்துடன் போராடினார், அது அவரை தேவனிடம் நெருங்கவிடாமல் தடுத்தது. அவருடைய அன்புக்கு நான் எவ்வாறு தகுதியுடையவனாக இருக்க முடியும்? என்று அவர் குழம்பினார். எனவே, அவர் தொடர்ந்து சபைக்குச் சென்றபோதும், ​​தேவனிடம் தன்னை இணைக்கக் கூடாதபடிக்கு ஒரு பெரும் பள்ளம் இருப்பதாக உணர்ந்தார்.

ஆனாலும், சஞ்சய் எப்பொழுது ஊக்கமாய் ஜெபித்தாலும், தேவன் அவருக்குப் பதிலளிப்பதாகத் தோன்றியது. கடினமான காலங்களில் அவரை உற்சாகப்படுத்தவும் ஆறுதலளிக்கவும் தக்கவர்களைத் தேவன் அனுப்பினார். சில வருடங்களுக்குப் பிறகு, தேவன் தன்னைத் தொடர்ந்து விரட்டி வருவதையும், அவர் எப்போதும் தன்னை நேசிப்பதையும் அக்கறை காட்டுவதையும் சஞ்சய் உணர்ந்தார். அப்போதுதான் தேவனின் மன்னிப்பிலும் அன்பிலும் அவர் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார். "இப்போது, ​​நான் மன்னிக்கப்பட்டேன் என்பதை அறிவேன். மேலும் நான் இன்னும் என் அடிமைத்தனத்துடன் போராடிக் கொண்டிருந்தாலும், அவரிடம் நெருங்கும்படிக்கு என்னைத் தேவனுக்கு விட்டுக்கொடுக்க முடியும்" என்று அவர் கூறினார்.

எசேக்கியேல் 34:11-16 தம் மக்களைப் பின்தொடர்ந்த ஒரு தேவனைப் பற்றி நமக்குச் சொல்கிறது. "நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்" என்று அவர் கூறினார், அவற்றை மீட்பதாகவும், அவற்றுக்கு அபிரிதமானவற்றை வழங்குவதாகவும் வாக்களித்தார் (வ.11). அவர்களுடைய மனுஷீகமான தலைவர்கள் அவர்களைக் கைவிட்ட பிறகும், அவர்களும் தங்கள் மெய்யான மேய்ப்பருக்குக் கீழ்ப்படியாமல் போனபோதும் (வ.1-6) இது நிகழ்ந்தது. நாம் உதவியற்ற சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சரி அல்லது நம்முடைய சொந்த பாவத்தின் விளைவுகளுடன் போராடிக் கொண்டிருந்தாலும் சரி, தேவன் நம்மை அன்பினால் பின்தொடர்கிறார். அவருடைய இரக்கத்தாலும், கிருபையாலும், அவர் நம்மை மீண்டும் அவரிடமாய் இழுக்கிறார். நீங்கள் தேவனை மறந்திருந்தால், அவரிடம் திரும்புங்கள். பின்னர், அவர் வழிநடத்துவதற்கேற்ப, ​​ஒவ்வொரு நாளும் அவருடன் தொடர்ந்து நடங்கள்.