எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

எலிசா மோர்கன்கட்டுரைகள்

குடும்பம் மிகவும் முக்கியமானது

எங்கள் மாமாவின் இறுதி ஊர்வலத்திற்காகவும் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தொண்ணூறு வயது பாட்டியையும் பார்ப்பதற்காய், வெவ்வேறு மாகாணங்களில் வசித்த நான், எனது அக்கா மற்றும் தம்பியுடன் சேர்ந்து விமானத்தின் மூலமாய் வந்தோம். அவர் பக்கவாதத்தால் முடங்கி, பேசும் திறனை இழந்துவிட்டார். அவர் வலது கையை மட்டுமே பயன்படுத்தினார். நாங்கள் அவர்களது படுக்கையைச் சுற்றி நின்றபோது, அவர் அந்தக் கையை நீட்டி எங்களின் ஒவ்வொரு கைகளையும் எடுத்து, ஒன்றன்மேல் ஒன்றாக அவர்களது இதயத்தின்மீது வைத்து, அவற்றைத் தட்டிக்கொடுத்தார். இந்த வார்த்தைகளற்ற சைகையால், உடைபட்டு பிரிந்திருக்கும் எங்களது உடன்பிறப்பு உறவைக் குறித்து அவர் எங்களோடு தொடர்புகொண்டார். “குடும்பம் மிகவும் முக்கியமானது.”

திருச்சபை என்னும் தேவனுடைய குடும்பத்தில் நாமும் உடைக்கப்பட்டவர்களாய் பிரிந்து நிற்கக்கூடும். கசப்பு நம்மை பிரிந்திருக்கச் செய்யும். எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர், ஏசாவை அவனுடைய சகோதரனிடத்திலிருந்து பிரித்த கசப்பைக் குறித்து குறிப்பிடுகிறார் (எபிரெயர் 12:16). மேலும் சகோதர சகோதரிகளாகிய நாம் தேவனுடைய குடும்பத்தில் ஒருவரிலொருவர் ஐக்கியமாய் இருப்பதற்கு நமக்கு சவால் விடுகிறார். “யாவரோடும் சமாதானமாயிருக்கவும்... நாடுங்கள்” (வச. 14). அதாவது, தேவனுடைய குடும்பத்தில் அனைவரோடும் சமாதானமாய் வாழ்வதற்கு எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு பிரயாசப்படுவோம் என்று வலியுறுத்துகிறார். அத்தகைய ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்துகிறது, அவ்வாறு வாழ்வதற்கு தூண்டுகிறது. 

குடும்பம் மிகவும் முக்கியமானது. அவற்றில் நமது பூமிக்குரிய குடும்பங்கள் மற்றும் தேவனுடைய விசுவாசக் குடும்பங்களும் இணைந்ததே. நாம் அன்போடும் ஐக்கியத்தோடும் இருக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் ஏறெடுப்போமா? 

 

பிறரை நேசிப்பதன் மூலம் தேவனை நேசி

ஆல்பா குடும்பம் பதின்மூன்று மாத இடைவெளியில் ஒரே மாதிரியான இரண்டு இரட்டையர்களைப் பெற்றெடுக்கும் அரிய நிகழ்வை அனுபவித்தது. அவர்கள் தங்கள் பெற்றார் கடமைகளையும் வேலைகளையும் எப்படி சமாளித்தார்கள்? அவர்கலருகே இருந்த நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் உதவினர். இரண்டு தாத்தா பாட்டிகளும் பகலில் ஒரு இரட்டைக் குழந்தைகளைப் பராமரித்தனர், அதனால் பெற்றோர்கள் வேலை செய்து காப்பீட்டிற்கு பணம் செலுத்தலாம். ஒரு நிறுவனம் ஒரு வருடத்திற்கான அணையாடைகளை வழங்கியது. தம்பதியரின் சக பணியாளர்கள் தங்கள் தனிப்பட்ட விடுப்புநாட்களில் உதவினர். "எங்கள் சுற்றத்தார் இல்லாமல் நாங்கள் அதை செய்திருக்க முடியாது," என்று அவர்கள் கூறினார்கள். உண்மையில், ஒரு நேரடி நேர்காணலின் போது, ​​சக தொகுப்பாளினி தனது மைக்கைக் கழற்றிவீசி, குறுநடை போடும் குழந்தைக்குப்பின் ஓடினார்; நண்பர்களைப்போல தன் பங்காற்றினார்!

மத்தேயு 25:31-46 இல், நாம் பிறருக்கு சேவை செய்கையில், ​​​​தேவனைச் சேவிக்கிறோம் என்பதைக் குறிக்க இயேசு ஒரு உவமையைச் சொல்கிறார். பசித்தோருக்கு உணவு, தவித்தோர்க்கு தண்ணீர், வீடற்றவர்களுக்கு உறைவிடம், நிர்வாணிகளுக்கு உடைகள், நோயுற்றோருக்குக் குணமளித்தல் (வ. 35-36) உள்ளிட்ட சேவைச் செயல்களைப் பட்டியலிட்ட பிறகு, இயேசு, “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” (வ.40) என்று முடிக்கிறார்.

நம்முடைய இரக்கத்தை உண்மையாக பெறுவது இயேசுவேயென்று கற்பனை செய்வது, நமது சுற்றுப்புறங்களிலும்; குடும்பங்களிலும்; சபைகளிலும்; உலகிலும் சேவை செய்வதற்கான உண்மையான உந்துதலாகும். பிறரின் தேவைகளுக்கு தியாகமாக நாம் செலவிட அவர் நம்மை உணர்த்துகையில், ​​நாம் அவருக்குச் சேவை செய்கிறோம். நாம் பிறரை நேசிக்கையில், ​​நாம் தேவனை நேசிக்கிறோம்.

குறுக்கு வழியில் தேவன்

பல நாட்கள் நோய்வாய்ப்பட்டு, பின்னர் உடல் சூடு அதிகரித்த பிறகு, என் கணவருக்கு அவசர சிகிச்சை தேவை என்பது தெளிவாகத் தெரிந்தது. உடனடியாக மருத்துவமனை அவரை அனுமதித்தது. ஒரு நாள் கடந்துபோனது. அடுத்த நாளில் அவர் சற்று தேறியிருந்தார். ஆகிலும் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கும் நிலையில் இல்லை. மருத்துவமனையில் தங்கி என் கணவரை பராமரித்துக்கொள்வதும், அதே நேரத்தில் பலர் பங்குபெறும் பணி வேலையை செய்வதற்கும் நான் மிகவும் சிரமப்பட்டேன். நான் நலமாக இருப்பேன் என்று என் கணவர் உறுதியளித்தார். ஆனால் அவரை பராமரிப்பதற்கும் என் வேலையை செய்வதற்கு இடையில் நான் சிக்கித் தவிக்க நேரிட்டது. 

வாழ்க்கையின் இதுபோன்ற முக்கியமான தருணங்களில் தீர்மானம் எடுப்பதற்கு தேவ ஜனத்திற்கு தேவனுடைய உதவி தேவைப்படுகிறது. பெரும்பாலும் அவர்கள் தேவனுடைய கட்டளைகளை கைக்கொள்ள தவறிவிடுகின்றனர். ஆனால் மோசே, தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து ஜீவனைத் தெரிந்துகொள்ளும்படிக்கு அவர்களுக்கு வலியுறுத்துகிறார் (உபாகமம் 30:19). மேலும் எரேமியா தீர்க்கதரிசி, இஸ்ரவேல் ஜனங்களுக்கு “வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்” (எரேமியா 6:16) என்று ஜனங்களுடைய வழிநடத்துதலுக்கு அறிவுறுத்துகிறார். வேதாகமத்தில் பூர்வ பாதைகளும் கடந்த காலத்தில் கர்த்தர் செய்த நன்மைகளும் நம்மை நேர்த்தியாய் வழிநடத்தக்கூடியவைகள்.  

நான் நடைமுறையில் குழப்பமான வாழ்க்கைப் பாதையில் இருப்பதாக கற்பனை செய்துகொண்டு, எரேமியாவின் ஞான போதனைனை கருத்தில்கொண்டேன். என் கணவருக்கு நான் தேவை. என் வேலையையும் நான் செய்தாக வேண்டும். என்னுடைய மேற்பார்வையாளர் என்னை அழைப்பித்து, வீட்டில் தங்கி கணவரை பராமரித்துக்கொள்ளும்படிக்கு என்னை ஊக்கப்படுத்தினார். தேவனுடைய இந்த கிருபைக்காய் நான் பெருமூச்சுடன் நன்றி சொன்னேன். தேவனுடைய வழிநடத்துதல் எப்போதும் தெளிவாக தெரிவதில்லை. ஆனால் அது நம்மை நோக்கி நிச்சமாய் வரும். நாம் குழப்பமான பாதையில் நிற்கும்போது, அது நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கிறது என்பதை நம்புவோம்.

திருச்சபையாயிரு!

கோவிட்-19 தொற்றுநோயின்போது, டேவ் மற்றும் கார்லா ஒரு தேவாலய வீட்டைத் தேடி பல மாதங்கள் செலவிட்டனர். தொற்று பரவிய காலங்கிளல் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது, பல்வேறு தனிப்பட்ட அனுபவங்களை மட்டுப்படுத்தி, அவற்றை மேலும் கடினமாக்கியது. அவர்கள் கிறிஸ்தவ திருச்சபையோடு ஐக்கியம்கொள்வதற்கு ஏங்கினர். “ஒரு திருச்சபையைக் கண்டுபிடிப்பது கடினமானது” என்று கார்லா எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார். என் திருச்சபை குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்கான எனது சொந்த ஏக்கத்திலிருந்து எனக்குள் ஒரு உணர்தல் எழுந்தது. “திருச்சபையாக இருப்பது கடினமானது" என்று நான் பதிலளித்தேன். அந்த காலங்களில், எங்கள் திருச்சபை சுற்றியுள்ள மக்களுக்கு உணவு வழங்குதல், ஆன்லைன் சேவைகளை உருவாக்குதல் மற்றும் ஆதரவுடனும் ஜெபத்துடனும் ஒவ்வொரு விசுவாசிகளுக்கும் போன் செய்து நலம் விசாரித்தது. அந்த சேவையில் நானும் எனது கணவரும் கலந்துகொண்டாலும், மாறக்கூடிய இந்த உலகத்தில் நாம் திருச்சபையாய் செயல்படுவது எப்படி என்று ஆச்சரியப்பட்டோம்.

எபிரெயர் 10:25இல் ஆசிரியர் “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல்” இருக்கும்படிக்கு ஊக்குவிக்கிறார். ஒருவேளை உபத்திரவத்தின் நிமித்தமோ (வச. 32-34), சோர்வின் நிமித்தமாகவோ (12:3) ஐக்கியத்தை விடும் அபாயம் அவர்களுக்கு நேரிட்டிருக்கலாம். அவர்களுக்கு இந்த தூண்டுதல் அவசியப்பட்டது.

இன்று, எனக்கும் ஒரு தூண்டுதல் தேவைப்படுகிறது. உங்களுக்கும் தேவைப்படுகிறதா? நடைமுறை சூழ்நிலைகள் நாம் கூடிவரும் திருச்சபையை பாதிக்கும் தருவாயில் நாம் திருச்சபையாய் நிலைநிற்போமா? ஆக்கப்பூர்வமாக ஒருவரையொருவர் ஊக்குவிப்போம். தேவன் நம்மை வழிநடத்துவது போல ஒருவரையொருவர் கட்டியெழுப்புவோம். நம்முடைய வளங்களைப் பகிர்ந்து கொள்வோம். ஆதரவான செய்திகளை பகிர்வோம். நம்மால் முடிந்தவரை சேகரிப்போம். ஒருவருக்கொருவர் ஜெபியுங்கள். நாமே திருச்சபையாக நிற்போம்.

தேவனில் பலப்படுதல்

கிரேஞ்சர் மெக்காய் ஒரு சிற்பக்கலைஞர். அவர் பறவைகளைக் குறித்து ஆய்வுசெய்து அவற்றை சிற்பமாய் வடிக்கிறவர். அவரது படைப்புகளில் ஒன்று “மீட்பு” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இது செங்குத்து நிலையில் உயரமாக நீட்டப்பட்ட வாத்து ஒன்றின் ஒற்றை வலது இறக்கையைக் காட்டுகிறது. அந்த சிற்பத்தின் கீழே பதிக்கப்பட்டிருந்த ஒரு தகட்டில், “பறப்பதில் பறவையின் மிகப்பெரிய பலவீனத்தின் தருணம், ஆனால் அதின் முன்னோக்கிச் செல்லும் பயணத்திற்கு வலிமையை சேகரிக்கும் தருணம்” என்று எழுதப்பட்டிருந்தது. கிரேஞ்சர் இந்த வசனத்தையும் சேர்த்து எழுதுகிறார்;: “என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” (2 கொரிந்தியர் 12:9).

அப்போஸ்தலன் பவுல் இந்த வார்த்தைகளை கொரிந்து சபைக்கு எழுதினார். தனிப்பட்ட வாழ்க்கைப் போராட்டங்களோடு போராடிக்கொண்டிருக்கும்வேளையில், “என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று அதை அகற்றும்படிக்கும் தேவனிடத்தில் பவுல் கெஞ்சுகிறார். அவரது துன்பம் ஒரு உடல் நோயாகவோ அல்லது ஆன்மீக எதிர்ப்பாகவோ இருக்கலாம். இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய இரவில் தோட்டத்தில் இருந்ததைப் போல (லூக்கா 22:39-44), பவுல் தனது துன்பத்தை நீக்கும்படி கடவுளிடம் மீண்டும் மீண்டும் மன்றாடுகிறார். பரிசுத்த ஆவியானவர் அவருக்குத் தேவையான பலத்தை கொடுப்பதாக வாக்களிக்கிறார். “அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்” (2 கொரிந்தியர் 12:10) என்று பவுல் கற்றுக்கொண்டார். 

ஓ, இந்த வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் முட்கள்! முன்னோக்கி செல்லும் பயணத்திற்கு ஒரு பறவை தன் பலத்தை சேகரிக்கிறது போல, நாம் எதிர்நோக்கும் காரியத்திற்காக தேவனின் பலத்தை நாம் பெற்றுக்கொள்ளமுடியும். அவருடைய பலத்தில் நாம் பலப்படுத்தப்படுகிறோம். 

ஓய்வெடுக்க அனுமதி

சில கடற்கரை பாறைகளின் மேல் அமர்ந்தோம், நானும் என் நண்பன் சூசியும், பொங்கும் நுரைகளின் வழியே, கடல் நீர் சுருளையாகப் பொங்குவதைப் பார்த்தோம். பாறைகளில் ஒன்றன் பின் ஒன்றாக மோதும் அலைகளைப் பார்த்து சூசி, “எனக்குக் கடல் பிடிக்கும். அது ஓடிக்கொண்டே இருப்பதால், நான் நின்று பார்க்கலாம்" என்றார்.

நம் வேலையை இடைநிறுத்தி ஓய்வெடுக்க "அனுமதி" தேவை என்று நம்மில் சிலர் நினைக்கிறார்கள் என்பது சுவாரஸ்யமானது அல்லவா? சரி, அதைத்தான் நம் நல்ல தேவன் நமக்கு வழங்குகிறார்! ஆறு நாட்களுக்குத் தேவன், சுழலும் பூமி, ஒளி, நிலம், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களை உருவாக்கினார். ஏழாவது நாளில், தேவன் ஓய்வெடுத்தார் (ஆதியாகமம் 1:31-2:2). பத்து கட்டளைகளில், அவரை கனப்படுத்தக்கூடிய ஆரோக்கியமான வாழ்க்கைக்கான விதிகளைத் தேவன் பட்டியலிட்டார் (யாத்திராகமம் 20:3-17), ஓய்வுநாளை ஓய்வுநாளாக நினைவுகூர வேண்டும் (வவ. 8-11) என்பது அதிலொன்று. புதிய ஏற்பாட்டில், இயேசு ஊரில் உள்ள அனைத்து நோயாளிகளையும் குணப்படுத்துவதைக் காண்கிறோம் (மாற்கு 1:29-34). பின்னர் மறுநாள் அதிகாலையில் ஜெபிக்க ஒரு தனியான இடத்திற்குச் செல்கிறார் (வச. 35). நம் தேவன் நோக்கத்துடன் வேலை செய்தார் மற்றும் ஓய்வெடுத்தார்.

வேலையில் தேவனுடைய உதவி, ஓய்விற்கான அவரது அழைப்புஎன இரண்டுமே நம்மைச் சுற்றி ரீங்காரமாக இசைக்கிறது. வசந்த காலத்தில் நட்டால், கோடையில் வளர்ச்சியும், இலையுதிர்காலத்தில் அறுவடையும், குளிர்காலத்தில் ஓய்வும் உண்டாகும். காலை, நன்பகல், மதியம், மாலை, இரவு. தேவன் நம் வாழ்க்கையில் வேலை மற்றும் ஓய்வு ஆகிய இரண்டையுமே ஏற்படுத்தியுள்ளார்,  இரண்டையும் செய்ய அனுமதியும் வழங்குகிறார்.

இளஞ்சிவப்பு கோட்

பிரெண்டா பெரிய விற்பனை மையத்தின் வெளியே செல்லும் பாதை வழியாய் வந்தபோது, இளஞ்சிவப்பு நிறத்தில் ஏதோ ஒன்று அவளுடைய பார்வையைக் கவர்ந்தது. அந்த பஞ்சுமிட்டாய் நிற கோர்ட் அவளை வெகுவாய் கவர்ந்தது. ஓ! ஹோலி இதை எப்படி விரும்புவாள்? ஒற்றைத் தாயாக அவளுடன் பணிபுரியும் அவளின் சிநேகிதிக்கு இப்படி ஒரு கோர்ட் அவசியப்படும் என்று யோசித்தாள். ஆனால் அவள் தனக்கென்று செலவுசெய்து இந்த கோர்ட்டை ஒருபோதும் வாங்கமாட்டாள் என்பதையும் ப்ரெண்டா நன்கு அறிந்திருந்தாள். கடும் யோசனைக்கு பின்னர், அந்த கோர்ட்டை விலைகொடுத்து வாங்கி, அதை ஹோலியின் வீட்டிற்கு அனுப்பிவைத்தாள். அத்துடன் “நீங்கள் மிகவும் நேசிக்கப்படுகிறீர்கள்” என்று பெயர் குறிப்பிடாத அட்டையை வைத்து அனுப்பி, அதைக் குறித்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள். 

மகிழ்ச்சி என்பது தேவன் ஏவும் கொடுத்தலுக்கு கிடைக்கும் துணை சலுகையாகும். கொரிந்திய திருச்சபை விசுவாசிகளுக்கு, “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2 கொரிந்தியர் 9:7) என்று கொடுத்தலின் மேன்மையை வலியுறுத்துகிறார். அத்துடன், “பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்” (வச. 6) என்றும் குறிப்பிடுகிறார்.

சிலவேளைகளில் நாம் காணிக்கைப் பெட்டியில் காணிக்கை போடுகிறோம். சிலவேளைகளில் தகுதியான ஊழியங்களுக்கு அனுப்புகிறோம். சிலவேளைகளில் தேவையிலிருக்கும் நம்முடைய சிநேகிதர்களுக்கு கொடுத்து நம்முடைய அன்பை வெளிப்படுத்த ஏவப்படுகிறோம். பலசரக்கு பைகள், உணவுப்பொருட்கள்... சிலவேளைகளில் இளஞ்சிவப்பு கோர்ட் போன்ற காரியங்கள் அதற்கு வழிவகுக்கலாம். 

துரித உணவு உற்சாகம்

அன்று மதிய உணவிற்குத் துரித உணவை மரியா எடுத்துக்கொண்டு காலியான இருக்கையில் அமர்ந்தாள். பர்கரை  சுவைத்தவாறே சுற்றிலும் பார்த்த அவளின் பார்வை பல இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்த ஒரு வாலிபன் மீது பதிந்தது. அழுக்கான ஆடைகள், களைந்த தலைமுடி, காலியான காகித கோப்பையைக் கசக்கிக்கொண்டிருந்த கைகள். அவன் பசியோடிருக்கிறான். இவளால் எப்படி உதவக்கூடும்? பணம் கொடுப்பது நல்ல யோசனை அல்ல. உணவு வாங்கிக்கொடுத்தால், ஒருவேளை சங்கடப்படுவானோ?

அப்பொழுதுதான் ரூத்தின் சரித்திரத்தில், ஐசுவரியவானாகிய போவாஸ் வறுமையால் வாடும் அந்த புலம்பெயர்ந்த விதவை தன் வயலின் அறுவடையில் மிஞ்சியதைச் சேகரிக்க அவளை அன்பாய் ஏற்றுக்கொண்டதை மரியா நினைத்துப்பார்த்தாள். மேலும், "போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஈனம் பண்ணவேண்டாம். அவள் பொறுக்கிக்கொள்ளும்படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள் என்று கட்டளையிட்டான் "(ரூத் 2:15–16). பெண்கள் தங்கள் ஜீவனத்திற்காக ஆண்களையே அதிகம் சார்ந்திருக்கும் அந்த கலாச்சாரத்தில், போவாஸ் தேவனின் அன்பான பராமரிப்பை வெளிப்படுத்தினார். இறுதியில் போவாஸ் ரூத்தை விவாகஞ்செய்து, அவளுடைய விதவை நிலையிலிருந்து அவளை மீட்டான் (4:9–10).

மரியா எழுந்து போகையில், அந்த வாலிபனின் கண்ணைப் பார்த்துக்கொண்டே, அருகிலிருந்த இருக்கையில் புதிய உணவுப்பொட்டலம் ஒன்றை வைத்துச் சென்றாள். அவன் பசியாயிருந்தால், இந்தத் துரித உணவை சேகரித்துக்கொள்ளலாம். இவ்வாறாக வேதாகமத்தில் உள்ள சம்பவங்கள் நூதனமான முறையில் நாம் செயல்படுவதற்கு நம்மை உற்சாகப்படுத்துகின்றன.

மகிழ்ச்சியாய் நன்றி செலுத்துதல்

உளவியல் நிபுணர் ராபர்ட் எம்மன்ஸ், வார நிகழ்வுகளை குறிப்பெடுக்கும்படி மூன்று குழுவினர்களை பிரித்தார். அதில் ஒரு குழுவினர், அவர்கள் நன்றி செலுத்தக்கூடிய ஐந்து காரியங்களை எழுதினர். ஒரு குழுவினர் அவர்கள் சந்தித்த ஐந்து பிரச்சனைகளை எழுதினர். ஒரு குழுவினர், தங்களுடைய வாழ்க்கையில் எளிமையான விதத்தில் பாதிப்பை ஏற்படுத்திய ஐந்து காரியங்களை எழுதியிருந்தனர். அந்த ஆய்வின் முடிவில், தங்கள் நன்றியுணர்வை வெளிப்படுத்திய குழுவைச் சேர்ந்தவர்களே தங்கள் எதிர்காலத்தைக் குறித்த நேர்மறையான எண்ணம் கொண்டவர்கள் என்றும், குறைவான சரீர வியாதிகள் உடையவர்கள் என்றும் கண்டறியப்பட்டனர்.
நன்றியுள்ளவர்களாயிருத்தல் என்பது வாழ்க்கையை நாம் பார்க்கும் விதத்தை மாற்றுகிறது. நன்றி சொல்லுதல் நம்மை மகிழ்ச்சியடையவும் செய்கிறது. தேவனுக்கு நன்றியுள்ளவர்களாயிருப்பதால் ஏற்படும் நன்மைகளை வேதம் நமக்கு அறிவிப்பதின் மூலம் தேவனுடைய சுபாவத்தை வெளிப்படுத்துகிறது. சங்கீதங்கள், “கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும்... உள்ளது (சங்கீதம் 100:5) என்றும் அவருடைய மாறாத கிருபைக்காகவும் ஆச்சரியமான கிரியைகளுக்காகவும் நன்றி செலுத்தும்படி தேவ ஜனத்திற்கு மீண்டும் மீண்டும் அழைப்பு விடுக்கிறது (107:8,15,21,31).
பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தை பவுல் நிறைவுசெய்யும்போது, அவருக்கு ஊழியத்தில் உறுதுணையாயிருந்தவர்களுக்கு தன் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் விதத்திலேயே அதை எழுதுகிறார். அவர் “எல்லாப் புத்திக்கும் மேலான” தேவசமாதானத்தோடு (4:7) தன் நன்றியை வெளிப்படுத்துகிறார். தேவனையும் அவர் செய்த நன்மைகளையும் நினைவுகூரும்போது, கவலைகள் இல்லாமல் எல்லா சூழ்நிலைகளிலும் நம் நன்றியை வெளிப்படுத்தமுடியும். நன்றி செலுத்துதல் என்பது நமக்கு தேவசமாதானத்தை அருளி, நம்முடைய இருதயத்தையும் சிந்தையையும் பாதுகாத்து, வாழ்க்கையின் பார்வையையே மாற்றிவிடும். நன்றியுள்ள இருதயம் மகிழ்ச்சியின் ஆவிக்கு ஊட்டமளிக்கும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இணைந்து இயேசுவுக்கு ஊழியம் செய்தல்

மைக்ரோனேசியாவில் உள்ள ஓர் தீவில் சிக்கித்தவிக்கும் இரண்டு ஆண்களுக்கு உதவ மீட்புப் பணியாளர்கள் பிரயாசப்பட்டனர். அவர்களுக்கு சுகாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு அவர்களை விரைந்து காப்பாற்றுவதற்கு குழுவாய் செயல்படவேண்டியது அவசியமாய் தோன்றியது. அவர்களை முதலில் கண்டுபிடித்த விமானி, அவர்களின் அருகாமையிலிருந்த ஆஸ்திரேலிய கப்பலுக்கு செய்தியனுப்பினார். கப்பல், இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியது, அவை உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கின. பின்னர், அமெரிக்க கடலோர காவல்படை அங்கு வந்து ஆட்களை சரிபார்த்து தகவல் அளித்தனர். இறுதியாக, ஓர் மைக்ரோனேசிய ரோந்துப் படகு அவர்களை பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்துவிட்டது.

நாம் இணைந்து செயல்பட்டால் நிறைய சாதிக்க முடியும். பிலிப்பிய விசுவாசிகள் அப்போஸ்தலர் பவுலை ஆதரிக்க தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்தனர். லீதியாளும் அவரது குடும்பத்தினரும் அவரை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றனர் (அப்போஸ்தலர் 16:13-15). கிலேமெந்து, எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் (இவர்கள் ஒத்துப்போகவில்லை) அனைவரும் நற்செய்தியைப் பரப்புவதற்கு அப்போஸ்தலருடன் நேரடியாக வேலை செய்தனர் (பிலிப்பியர் 4:2-3). பின்னர், பவுல் ரோமில் சிறையில் அடைக்கப்பட்டபோது, தேவாலயம் (விசுவாசிகள்) அவரது பராமரிப்புக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தை சேகரித்து, எப்பாபிராத்து மூலம் (வச. 14-18) விநியோகித்தது. பவுல் அப்போஸ்தலரின் ஊழியத்திற்காக பிலிப்பிய திருச்சபை தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருந்திருக்கக் கூடும் (1:19).

இந்த பண்டைய திருச்சபை விசுவாசிகள் ஒன்றாக இணைந்து ஊழியம் செய்ததற்கான எடுத்துக்காட்டுகள் இன்று நம்மை ஊக்குவிக்கும். தேவன் நம்மை வழிநடத்தி, நமக்கு அதிகாரம் கொடுத்ததால், ஜெபிக்கவும் மற்றவர்களுக்கு ஊழியம்செய்யவும், சக விசுவாசிகளுடன் ஒத்துழைக்கவும், நம்மால் இயன்றதைவிட அதிகமாக செய்யமுடிகிறது. “தனித்து வேலை செய்தால் நாம் ஒரு துளி, ஆனால் இணைந்து வேலை செய்தால் நாம் சமுத்திரம்.”

 

தேவனே என் துணையாளர்

என் நண்பர் ராலே தனது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை நோக்கி விரைகிறார்! அவரை நான் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எனக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஆதாராமாக அவர் இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஓர் புத்தகம் எழுதும் பணியை நிறைவுசெய்துவிட்டு, வேறொரு வேலையை செய்வதாக என்னிடம் கூறினார். அவற்றைக் கேட்க எனக்கு ஆர்வமாயிருந்தது ஆனால் ஆச்சரியப்படவில்லை. 

தனது எண்பத்தைந்து வயதில், வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள காலேப் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை. தேவன் இஸ்ரவேலுக்கு வாக்களித்த கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்காக பல சகாப்தங்களாக வனாந்தர வாழ்க்கை மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், தேவபக்தியும் விசுவாசமும் அவரை தாங்கியது. அவர், “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:11) என்று உரைக்கிறார். அவர் எந்த வழிகளில் ஜெயங்கொள்வார்? “கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன்” (வச. 12) என்று காலேப் பதிலளிக்கிறார். 

வயது, வாழ்க்கையின் நிலை அல்லது சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனை முழுமனதோடு பற்றிகொள்ளும் யாவருக்கும் தேவன் உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். நமக்கு உதவும் நம் இரட்சகராகிய இயேசுவில், தேவன் வெளிப்பட்டார். சுவிசேஷங்கள், கிறிஸ்துவிடத்திலிருந்து தேவன்மீது விசுவாசம் வைப்பதை நமக்கு போதிக்கிறது. உதவிக்காக தேவனை அண்டிய யாவருக்கும் தேவன் தன் அக்கறையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எபிரெய நிருப ஆசிரியர் “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபிரெயர் 13:6) என்று அறிக்கையிடுகிறார். இளைஞரோ அல்லது வயதானவரோ, பலவீனமானவரோ அல்லது பலவானோ, கட்டுண்டவரோ அல்லது சுதந்திரவாளியோ, வேகமாக ஓடுகிறவரோ அல்லது முடவனோ, யாராக இருந்தாலும் இன்று அவருடைய உதவியைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுப்பது எது?

 

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார். 

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம். 

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26).