கிரேஞ்சர் மெக்காய் ஒரு சிற்பக்கலைஞர். அவர் பறவைகளைக் குறித்து ஆய்வுசெய்து அவற்றை சிற்பமாய் வடிக்கிறவர். அவரது படைப்புகளில் ஒன்று “மீட்பு” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இது செங்குத்து நிலையில் உயரமாக நீட்டப்பட்ட வாத்து ஒன்றின் ஒற்றை வலது இறக்கையைக் காட்டுகிறது. அந்த சிற்பத்தின் கீழே பதிக்கப்பட்டிருந்த ஒரு தகட்டில், “பறப்பதில் பறவையின் மிகப்பெரிய பலவீனத்தின் தருணம், ஆனால் அதின் முன்னோக்கிச் செல்லும் பயணத்திற்கு வலிமையை சேகரிக்கும் தருணம்” என்று எழுதப்பட்டிருந்தது. கிரேஞ்சர் இந்த வசனத்தையும் சேர்த்து எழுதுகிறார்;: “என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” (2 கொரிந்தியர் 12:9).

அப்போஸ்தலன் பவுல் இந்த வார்த்தைகளை கொரிந்து சபைக்கு எழுதினார். தனிப்பட்ட வாழ்க்கைப் போராட்டங்களோடு போராடிக்கொண்டிருக்கும்வேளையில், “என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று அதை அகற்றும்படிக்கும் தேவனிடத்தில் பவுல் கெஞ்சுகிறார். அவரது துன்பம் ஒரு உடல் நோயாகவோ அல்லது ஆன்மீக எதிர்ப்பாகவோ இருக்கலாம். இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய இரவில் தோட்டத்தில் இருந்ததைப் போல (லூக்கா 22:39-44), பவுல் தனது துன்பத்தை நீக்கும்படி கடவுளிடம் மீண்டும் மீண்டும் மன்றாடுகிறார். பரிசுத்த ஆவியானவர் அவருக்குத் தேவையான பலத்தை கொடுப்பதாக வாக்களிக்கிறார். “அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்” (2 கொரிந்தியர் 12:10) என்று பவுல் கற்றுக்கொண்டார். 

ஓ, இந்த வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் முட்கள்! முன்னோக்கி செல்லும் பயணத்திற்கு ஒரு பறவை தன் பலத்தை சேகரிக்கிறது போல, நாம் எதிர்நோக்கும் காரியத்திற்காக தேவனின் பலத்தை நாம் பெற்றுக்கொள்ளமுடியும். அவருடைய பலத்தில் நாம் பலப்படுத்தப்படுகிறோம்.