எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டேவ் பிரானன்கட்டுரைகள்

நட்சத்திரங்களை ஆராய்தல்

2021 ஆம் ஆண்டில், ஒரு பன்னாட்டு முயற்சியானது ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை ஏவுவதற்கு வழிவகுத்தது. இது பிரபஞ்சத்தை சிறப்பாக ஆராய பூமியிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மைல்கள் தூரம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்த விசித்திரமான தொலைநோக்கியானது, ஆழமான விண்வெளியில் ஊடுருவி நட்சத்திரங்களையும் மற்ற வான அதிசயங்களையும் ஆராய்ச்சி செய்யும்.  
இது உண்மையில் ஆச்சரியமான ஒரு வானியல் தொழில்நுட்பம். இது நேர்த்தியாய் வேலை செய்தால், அற்புதமான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை நமக்குக் கொடுக்கும். ஆனால் அதன் பணி புதியது அல்ல. ஏசாயா தீர்க்கதரிசி நட்சத்திரங்களை அண்ணாந்து பார்த்து, “உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே” (ஏசாயா 40:26) என்று விவரிக்கிறார். “இரவுக்கு இரவு” (சங்கீதம் 19:2) அவைகள் அனைத்தும் இந்த ஆச்சரியமான அண்டசராசங்களை சிருஷ்டித்த தேவனுடைய புகழையும், இரவு வானத்தை ஒளிரச்செய்யும் ஒளிக்கீற்றுகளைக் குறித்தும் விவரித்துக்கொண்டிருக்கின்றன (வச. 3).  
ஒளிரக்கூடிய இதுபோன்ற நட்சத்திரங்கள் அனைத்தையும் அவர் தொகையிடுகிறார்: “அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்” (சங்கீதம் 147:4). சில நேர்த்தியான கண்டுபிடிப்புகளை மனிதன் கண்டுபிடித்து அவற்றை ஆகாயத்திற்கு ஆராய்ச்சி செய்யும்பொருட்டு அனுப்பிவைப்பதின் மூலம், வசீகரிக்கும் ஆச்சரியங்களை அறிய நேரிடுகிறது. அவைகள் அனைத்தும் அவற்றை உண்டாக்கியவரின் மகிமையை விளங்கப்பண்ணுகிறது. ஆம்! “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது” (19:1), நட்சத்திரங்களும் வெளிப்படுத்துகிறது.  

மன்னிப்பின் வல்லமை

ஒரு நாசக்கார கும்பலால் கடத்தப்பட்ட பதினேழு மிஷனரிகளைப் பற்றி 2021ஆம் செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. அவர்களுடைய மீட்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அந்தக் குழுவை (குழந்தைகள் உட்பட) கொலை செய்துவிடுவதாக அந்த கும்பல் மிரட்டியது. ஆனால் ஆச்சரியமான வகையில், பிணையக் கைதிகளாய் சிக்கியிருந்த அனைத்து மிஷனரிகளும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடத்தை வந்து சேர்ந்த மாத்திரத்தில், அவர்களை சிறைபிடித்தவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பினர்: “அன்பின் மன்னிக்கும் சக்தியானது, வன்முறையின் வெறுப்பின் சக்தியைக் காட்டிலும் வலிமைவாய்ந்தது என்பதை இயேசு வார்த்தையின் மூலமாகவும் அவருடைய வாழ்க்கையின் மூலமாகவும் எங்களுக்குக் கற்பித்திருக்கிறார். எனவே, நாங்கள் உங்களை மனப்பூர்வமாய் மன்னிக்கிறோம்” என்பதே அந்த செய்தி.  
மன்னிப்பு சக்தி வாய்ந்தது என்பதை இயேசு தெளிவுபடுத்தியுள்ளார். அவர் “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்” (மத்தேயு 6:14) என்று கூறுகிறார். பின்பாக, எத்தனை முறை மன்னிக்கவேண்டும் என்னும் பேதுருவின் கேள்விக்கு இயேசு பதிலளிக்கும்போது, “ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்” (18:22) என்று இயேசு சொல்லுகிறார். மேலும் சிலுவையில், “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34) என்று தெய்வீக மன்னிப்பை இயேசு வெளிப்படுத்திக் காண்பித்தார்.  
இருதரப்பினரும் மனப்பூர்வமாய் காயமாற்றப்பட்டு, ஒப்புரவாகும்போதே மன்னிப்பானது முழுமையடைகிறது. நம்மை பாதிப்படையச் செய்த செயல்களை நினைவிலிருந்து அகற்றி, மற்றவர்களை காயப்படுத்தாமல் உறவுகளை எவ்விதம் பேணவேண்டும் என்பதைக் குறித்த பகுத்தறிவை பெறுவது என்பது தேவனுடைய அன்பையும் வல்லமையையும் பிரதிபலிக்கும் ஆதாரங்களாய் வாழக்;கையை மாற்றும். தேவநாம மகிமைக்காய், மற்றவர்களை மன்னிக்கும் வழிகளை ஆராய்வோம்.

இதை ஏன் செய்ய வேண்டும்?

எனது ஆறாம் வகுப்பு பேரன் மோகனுக்கு சில கடினமான கணக்கு வீட்டுப்பாடங்களில் நான் உதவி செய்து கொண்டிருந்தபோது, பொறியியலாளராக வேண்டும் என்ற தனது கனவை என்னிடம் கூறினான். அவனது பாடத்தில் உள்ள அச்சு ரேகைகளை உபயோகிக்கக் கற்றுக்கொண்ட பின்னர் அவன், "நான் எப்போது இந்த பொருட்களைப் பயன்படுத்தப் போகிறேன்?" என்றான்.

என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை, "சரி, மோகன் நீ ஒரு பொறியியலாளராக மாறினால், நீ பயன்படுத்தப் போகும் பொருட்கள் இவைதான்" என்றேன். கணிதத்திற்கும் அவன் எதிர்பார்க்கும் எதிர்காலத்திற்கும் உள்ள தொடர்பை அவன் உணரவில்லை.

சில சமயங்களில் நாம் வேதத்தை அப்படித்தான் பார்க்கிறோம். நாம் பிரசங்கங்களைக் கேட்கும்போதும், வேதத்தின் சில பகுதிகளைப் படிக்கும்போதும், “இதெல்லாம் எனக்குத் தேவையா?” என்று நாம் நினைக்கலாம். சங்கீதக்காரன் தாவீதிடம் சில பதில்கள் உண்டு. வேதாகமத்தில் காணப்படும் தேவனின் சத்தியங்கள் "ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதும்", "பேதையை ஞானியாக்குகிறதும்" மற்றும் "இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதும்" (சங்கீதம் 19:7-8) போன்ற ஆற்றலுள்ளவை என்றார். சங்கீதம் 19ல் குறிப்பிடப்பட்டுள்ள வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்களில் (மேலும் வேதாகமத்தின் அனைத்து பகுதிகளிலும்) காணப்படும் வேதத்தின் ஞானம், நம்மை ஆவியானவரின் வழிநடத்துதலை அனுதினமும் நம்பியிருக்க நமக்கு உதவுகிறது (நீதிமொழிகள் 2:6).

மேலும் வேதவசனங்கள் இல்லாவிடில் அவரை அனுபவிக்கவும், அவருடைய அன்பையும் வழிகளையும் நன்றாக அறிந்துகொள்ளவும் தேவன் நமக்கு அளித்திருக்கும் இன்றியமையாத வழியை நாம் இழந்துவிடுவோம். வேதத்தை ஏன் படிக்க வேண்டும்? ஏனென்றால், "கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது." (சங்கீதம் 19:8).

எளிய உண்மை

நானும் என் மனைவியும் சைக்கிள் ஓட்டும்போது,  ​​நாங்கள் எத்தனை மைல்கள் கடந்துள்ளோம் என்பதை அறிய விரும்பினோம். எனவே, நான் தூரமானி (தூரத்தை அளக்கும் கருவி) ஒன்றை வாங்க ஒரு சைக்கிள்  கடைக்குச் சென்று, அதனுடன் ஒரு கையடக்க கணினியையும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன். கணினியோடு இணைப்பது சற்று சிக்கலாயிருந்தது.

மீண்டும் சைக்கிள் கடைக்குச் சென்றேன், அதை எனக்கு விற்றவர் சிறிது நேரத்திலேயே வேலை செய்ய வைத்தார். நான் எண்ணியது போல அதைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல என்பதை உணர்ந்தேன்.

வாழ்க்கையில், புதிய விஷயங்கள் மற்றும் புதிய யோசனைகள் சிக்கலானதாகத் தோன்றலாம். உதாரணமாக, இரட்சிப்பைப் பற்றிச் சிந்தியுங்கள். தேவனின் பிள்ளையாக மாறுவது சிக்கலானது என்று சிலர் நினைக்கலாம்.

ஆயினும்கூட, வேதாகமம் அதை எளிய வார்த்தைகளில் அறிவிக்கிறது: "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" (அப்போஸ்தலர் 16:31). பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் எதுவும் இல்லை. தீர்க்க வேண்டிய புதிர்களும் இல்லை.

இதுவே எளிய உண்மை: நாம் எல்லாரும் பாவஞ்செய்து (ரோமர் 3:23), நம்முடைய பாவத்தின் தண்டனையான மரணம் மற்றும் தம்மிடமிருந்து நித்திய பிரிவினையிலிருந்து நம்மை இரட்சிக்க, இயேசு பூமிக்கு வந்தார் (மத்தேயு 1:21; 1 பேதுரு 2:24). அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் (ரோமர் 10:9). அவர் நமக்காகச் செய்ததை நம்புவதன் மூலம் நாம் ஆவிக்குரிய மரணத்திலிருந்து நித்திய ஜீவனுக்கென இரட்சிக்கப்படுகிறோம் (யோவான் 3:16)

நீங்கள் வெறுமனே இயேசுவை நம்புவதும் விசுவாசிப்பதும் என்னவென்று சிந்தித்துப் பாருங்கள். அவர் உங்களுக்கு, ஜீவனை பரிபூரணமாக (யோவான் 10:10) அருளுவாராக.

இயேசுவோடு ஒப்புரவாகுதல்

“விமானத்தில் ஏற தயாராகுங்கள்” என்ற அழைப்பு சத்தம் தொனித்தது. ஒரு வாலிபர் குழுவின் தலைவனாகவும், சிறப்புச் செய்தியாளராகவும் ஒரு மிஷனரி பயணத்திலிருந்தேன். நுழைவு சீட்டையும், கடவுச்சீட்டையும் எடுக்க என் பையில் துழாவி, அதிர்ந்தேன்! கடவுச்சீட்டு அதில் இல்லை.

என்னை விட்டுவிட்டு என் குழுவினர் விமானம் ஏறினர். புதிய கடவுச்சீட்டு பெற நான்கு நாட்கள் கடுமையாக முயன்றேன். நூற்றுக்கணக்கான தொலைப்பேசி அழைப்புகள், நாட்டின் தலைநகர் வரை பயனற்ற ஒரு பயணம், அங்கிருந்து மீண்டும் என் ஊருக்கு நீண்ட பயணம், பக்கத்து ஊரில் இரண்டு நாட்கள் தங்கியிருத்தல், பின்பு எங்கள் உள்ளூர் அரசியல்வாதியின் அலுவலக உதவியுடன் எனக்கு புதிய கடவுச்சீட்டு கிடைத்து, என் குழுவினரோடு இணைந்தேன்.

கடவுசீட்டு ஒரு எளிய, சிறிய புத்தகம் தான். ஆனால், என் பயணத்திற்கு இருந்த ஒரே உத்தரவாதி அதுமட்டுமே. புதிய கடவுசீட்டை பெற நான் கடினமாய் செயலாற்றினபோதும், இதனை எனது நித்திய பயண இலக்கோடு ஒப்பிடுகையில் மதிப்பற்றதாகவே தோன்றியது. அது இயேசுவின் மீதிருக்கும் விசுவாசமே, ஆம் நமது பாவங்களிலிருந்து இரட்சிப்படையவும், அவருடனான புதிய வாழ்விற்கும் நமக்குள்ள ஒரே உத்தரவாதி அதுவே.

"இப்பொழுதே இரட்சணிய நாள்" (2 கொரிந்தியர் 6:2) என்று வேதாகமம் சொல்கிறது. கிறிஸ்துவில் வெளிப்பட்ட இரட்சிப்பென்னும் விடியலைத்தான் பவுல் இங்கே விவரிக்கிறார். அவரை விசுவாசிக்கும்போது, நாம் தேவனுடைய அன்பையும், அனைத்து சிருஷ்டிக்குமான அவரது மீட்பையும், சீர்பொருத்தும் கிரியையையும் அனுபவிப்போம். இன்றே, “தேவனோடே ஒப்புரவாகுங்கள்” (5:20) என்பதின் பொருளை மெய்யாகவே அறிந்துகொண்டதை நிச்சயப்படுத்திக்கொள்வோம்.

 

கிறிஸ்துவுக்கென நன்மதிப்பு

புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரி நாட்களில், சார்லி வார்டு இரண்டு விளையாட்டுகளில் மாணவர் அணி வீரராக இருந்தார். 1993 ஆம் ஆண்டில், இளம் பந்தெறி வீரனாக, கல்லூரி அளவில் நாட்டின் சிறந்த அமெரிக்கக் கால்பந்து வீரராக ஹெய்ஸ்மேன் கோப்பையை வென்றார். மேலும் அவர் கூடைப்பந்து அணியிலும் சிறந்து விளங்கினார்.

ஒருநாள் போட்டிக்கு முன்னான உரையாடலில், ​​அவரது கூடைப்பந்து பயிற்சியாளர் தனது வீரர்களுடன் பேசும்போது சில மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இது சார்லிக்கு பிடிக்கவில்லை என்பதைக் கவனித்த அவர், "சார்லி, என்னவாயிற்று ?" என்று கேட்க, வார்டு, “அய்யா, உங்களுக்குத் தெரியும், பயிற்சியாளர் பவுடன் [கால்பந்து பயிற்சியாளர்] இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை, மேலும் அவர் எங்களை மிகவும் கடினமாக விளையாட வைப்பார்" என்றார்.

கிறிஸ்துவை பிரதிபலிக்கும் சார்லியின் சுபாவம், இந்தப் பிரச்சினையைப் பற்றி அவரது கூடைப்பந்து பயிற்சியாளரிடம் மென்மையாகப் பேசச் செய்தது. உண்மையில், அவர் சார்லியிடம் பேசியதை குறித்து: "ஒரு தூதன் உங்களைப் பார்ப்பது போல் இருந்தது" என்று அந்த பயிற்சியாளர் ஒரு நிருபரிடம் கூறினார்.

அவிசுவாசிகளிடம் நல்மதிப்பையும், கிறிஸ்துவுக்கென உண்மையுள்ள சாட்சியையும் பேணுவது கடினம். ஆனால் அதே சமயம், அவர் நமக்கு உதவி செய்து வழிநடத்தும்போது, ​​இயேசுவின் விசுவாசிகள் அவரைப் போலவே மேலும் வளர முடியும். தீத்து 2ல், வாலிபரும், மற்றும் பொதுவாக அனைத்து விசுவாசிகளும், "தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும்" (வ.6) மற்றும் "நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பே(சவும்)சுகிறவனுமாயிருப்பாயாக” (வ.8) அழைக்கப்படுகிறார்கள்.

கிறிஸ்துவின் பெலத்தால்  நாம் அவ்வாறு வாழும்போது, ​​​​அவரைக் கனப்படுத்துவது மட்டுமல்லாமல், ஒரு நன்மதிப்பையும் உருவாக்குவோம். தேவன் நமக்குத் தேவையான ஞானத்தை வழங்குவதால், நாம் சொல்வதற்குச் செவிகொடுக்க ஜனங்களுக்கு நியாயமான காரணம் உண்டாயிருக்கும்.

இயேசுவைப் பற்றி மக்களிடம் பேசுங்கள்

பவுல் யூதர்களின் சுத்திகரிப்பு முறைமைக்காக ஆலயத்திற்குச் சென்றிருந்தார் (அப் 21:26). ஆனால் அவர் நியாயப்பிரமாணத்திற்கு எதிராகப் போதிப்பதாகக் கருதிய சில கிளர்ச்சியாளர்கள், அவரை கொல்ல முயன்றனர் (வ.31). ரோமானிய வீரர்கள் விரைந்து தலையிட்டு, பவுலைக் கைது செய்து, அவரைக் கட்டி, ஆலய பகுதியிலிருந்து கொண்டு சென்றனர்; “இவனை அகற்றும்” (வ.36) என்று அந்தக் கும்பல் கூச்சலிட்டது.

இந்த அச்சுறுத்தலுக்கு அப்போஸ்தலன் எவ்வாறு எதிர்வினையாற்றினார்? படைகளின் தளபதியிடம், "ஜனங்களுடனே பேசும்படி எனக்கு உத்தரவாகவேண்டுமென்று" என்று கேட்டார் (வ. 39). ரோமானியத் தலைவர் அனுமதி அளித்தபோது; ​​பவுல், இரத்தம் ஒழுக காயத்துடன், கோபமான கூட்டத்தினரிடம் திரும்பி, இயேசுவின் மீதான தனது நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டார் (22:1-16).

இச்சம்பவம் நிகழ்ந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த பழைய வேதாகம கதையோடு நம்மைச் சம்பந்தப்படுத்திப் பார்ப்பதே கடினமாக இருக்கும். மிகச் சமீபத்தில், விசுவாசிகளைத் தொடர்ந்து துன்புறுத்தும் ஒரு நாட்டில், சிறையில் அடைக்கப்பட்ட இயேசுவின் விசுவாசியான ஒரு  நண்பரைப் பார்க்கச் சென்ற பீட்டர் என்ற நபர் கைது செய்யப்பட்டார். பீட்டர் ஒரு இருண்ட சிறை அறையில் தூக்கி எறியப்பட்டார் மற்றும் விசாரணையின் போது கண்கள் கட்டப்பட்டிருந்தார். கண்கட்டை அவிழ்த்தபோது, ​​நான்கு வீரர்கள் துப்பாக்கியுடன் தன்னை குறி வைத்திருப்பதைக் கண்டார். பீட்டரின் மறுமொழி? அவர் அதை “அவரது நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு சரியான வாய்ப்பு" என்று கண்டார்.

இயேசுவுக்காக ஓடுதல்

100 மீட்டர் விரைவோட்டத்தை பற்றி நாம் குறிப்பிடுகையில், ​​தற்போதைய உலக சாதனையாளரான உசைன் போல்ட் நினைவுக்கு வரலாம். ஆனால் ஜூலியா "ஹரிக்கேன்" ஹாக்கின்ஸை நாம் மறக்க முடியாது. 2021 ஆம் ஆண்டில், லூசியானா முதியோருக்கான விளையாட்டுப் போட்டியில் ஜூலியா 100 மீட்டர் விரைவோட்டத்தில் மற்ற அனைத்து ஓட்டப்பந்தய வீரர்களுக்கும் முன்பாக இறுதிக் கோட்டைக் கடந்து வெற்றி பெற்றார். அவரது நேரம் போல்ட்டின் 9.58 வினாடிகளை விடச் சற்று குறைவு;  60 வினாடிகளுக்கு மேல். ஆனால் அவளுக்கு 105 வயது!

ஒரு பெண் இந்த வயதிலும் வேக ஓட்டம் ஓடிக்கொண்டிருப்பது பெரிய காரியம். மேலும் இயேசுவை தங்கள் இலக்காகக் கொண்டு ஓடுவதை நிறுத்தாத விசுவாசிகளைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு இன்னும் நிறைய உண்டு (எபிரெயர் 12:1-2). வாழ்க்கையின் முதுமையிலும் உண்மையுள்ளவர்களைப் பற்றி சங்கீதக்காரன் இவ்வாறு கூறுகிறார்: “நீதிமான் பனையைப் போல் செழித்து . . . அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்” (92:12-14).

இவ்வகையான தரத்தையுடைய முதிர்ந்த விசுவாசிகள், அப்போஸ்தலனாகிய பவுல் தீத்துவுக்கு எழுதிய நிருபத்தில் மேலும் அறிவுறுத்தலைக் காணலாம். முதிர்வயதுள்ள புருஷர்கள் "விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்கும்படி" (தீத்து 2:2), முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் "நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும்" (வ. 3) சொல்கிறார்.

ஓட்டத்தை நிறுத்துவதற்கு முதிர்ந்த விசுவாசிகளுக்கு அழைப்பு இல்லை. தடகள பாதையில் ஜூலியா செய்வது போல் அல்ல, ஆனால் அவர்களுக்குத் தேவையான பெலனை அவர் வழங்குவதால் தேவனை மகிமைப்படுத்தும் வழிகளில் ஓடவேண்டும். அவருக்கும் பிறருக்கும் நன்றாக ஊழியம் செய்ய அனைவரும் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவோம்.

தேவன் அருளிய பாதுகாப்பு

நானும் என் மனைவியும் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான மைல்கள் மிதிவண்டியில், எங்கள் வீட்டைச் சுற்றியுள்ள பாதைகளில் ஒட்டுகிறோம். இந்த அனுபவத்தை மேம்படுத்த, எங்கள் மிதிவண்டிகளுடன்  சில பாகங்களை இணைத்துள்ளோம். ஜெனிபரின் மிதிவண்டியில் ஒரு முன் விளக்கு, ஒரு பின் விளக்கு, ஒரு ஓட்ட அளவி மற்றும் ஒரு சிறிய பூட்டு  ஆகியவை உள்ளன. என்னுடையதில்  தண்ணீர் புட்டி வைக்கும் பகுதியுண்டு. உண்மையில், இத்தகைய உதிரி இணைப்பு பாகங்களின்றி ஒவ்வொரு நாளும் எங்கள் பாதையில் வெற்றிகரமாகச் சவாரி செய்து, போதுமான தூரத்தை எளிதாகக் கடக்க முடியும். இவைகள் உதவிகரமானவை ஆனால் அவசியமானவையல்ல.

எபேசியர் புத்தகத்தில், அப்போஸ்தலன் பவுல் மற்றுமொரு துணை பாகங்களைப் பற்றி எழுதுகிறார்; ஆனால் இவை அத்தியாவசியமானவை. இயேசுவின் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசத்தை வெற்றிகரமாக வாழ்ந்திட,  இவற்றை "தரித்துக்கொள்ளுங்கள்" என்றார். நம் வாழ்க்கை எளிதான பயணங்கள் அல்ல. நாம் ஒரு யுத்தத்தில் இருக்கிறோம், அதில் நாம் "பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்க" (6:11) வேண்டும், எனவே நாம் நன்கு தயாராக இருக்க வேண்டும்.

வேத ஞானம் இன்றி, நாம் தவறானதை ஏற்றுக்கொள்ள நடத்தப்படலாம். இயேசு தமது "சத்தியத்தின்படி" வாழ்ந்திட நமக்கு உதவாவிடில், நாம் பொய்களுக்கு அடிபணிவோம் (வ.14). "சுவிசேஷம்" இன்றி நமக்கு "சமாதானம்" இல்லை (வ.15). "விசுவாசம்" நம்மைக் காக்காவிடில், நாம் சந்தேகத்திற்கு ஆளாவோம் (வ.16). நமது "இரட்சிப்பு" மற்றும் பரிசுத்த ஆவியானவர், தேவனுக்காக நன்றாய் வாழும்படி நம்மை நங்கூரமிடுகிறாா் (வ.17). இதுவே நமது கவசம்.

வாழ்க்கையின் உண்மையான ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கும்  பாதையில் நாம் பயணிப்பது எவ்வளவு அவசியம். பாதையில் எதிரிடும் சவால்களுக்குக் கிறிஸ்து நம்மை ஆயத்தப்படுத்தும்போது; தேவன் அளிக்கும் சர்வாயுதவர்க்கத்தை நாம் “தரித்துக்கொள்ளுகையில்” நாம் அதனை நிறைவேற்றுகிறோம்.

 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

உங்கள் வியாகுலங்கள் கேட்கப்பட்டது

“இயற்பியல்” என்ற புத்தகத்தில், ஆசிரியர்கள் சார்லஸ் ரிபோர்க் மான் மற்றும் ஜார்ஜ் ரான்சம் ட்விஸ் ஆகியோர், “யாருமில்லாத தனிமையான காட்டில் மரம் விழுந்தால், அந்த சத்தத்தைக் கேட்க அருகில் எந்த மிருகமும் இல்லையென்றால், அது ஒலி எழுப்புமா?” என்ற கேள்வியை கேட்கிறார்கள். பல ஆண்டுகளாக, இந்த கேள்வி, ஒலி, உணர்தல் மற்றும் இருப்பு பற்றிய தத்துவ மற்றும் அறிவியல் விவாதங்களைத் தூண்டியது. இருப்பினும், ஒரு உறுதியான பதில் இன்னும் கண்டறியப்படவில்லை.  
ஒரு நாள் இரவில் நான் சோர்ந்துபோய் கவலையாயிருந்த தருணத்தில், நான் யாரிடத்திலும் சொல்லாமல், இந்த கேள்வியைக் குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தேன்: “உதவிக்கான என்னுடைய அழுகுரலுக்கு யாருமே செவிகொடுக்காத வேளையில், தேவன் அதைக் கேட்கிறாரா?” 
116-ம் சங்கீதத்தை எழுதியவர், மரண அச்சுறுத்தலை எதிர்கொண்டு, பாடுகள் அனுபவித்ததால், கைவிடப்பட்டவராக உணர்ந்திருக்கலாம். எனவே அவர் தேவனை அழைத்தார். அழைத்தால் அவர் கேட்கிறார், கேட்டு அவருக்கு உதவிசெய்வார் என்பதை அறிந்திருந்தார். “கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால்… அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால்..” அவரை தொழுதுகொள்வதாக சங்கீதக்காரன் அறிவிக்கிறான் (வச. 1-2). நம்முடைய வேதனையை யாரும் அறியாத நேரத்தில் தேவன் அறிகிறார். நம்முடைய அழுகுரலை யாரும் கேட்காதவேளையில் தேவன் கேட்கிறார்.  
கடினமான தருணங்களில் தேவன் தன்னுடைய அன்பையும் பாதுகாப்பையும் அருளுவார் என்று அறிந்து, இளைப்பாறலாம் (வச. 7). “இளைப்பாறுதல்” (மனோக்) என்பதற்கு பயன்படுத்தப்படும் எபிரெய வார்த்தையானது யாருமில்லாத பாதுகாப்பான ஓர் இடத்தைக் குறிக்கிறது. தேவன் நம்மோடு இருக்கிறார் என்ற உறுதியுடன் நாம் இளைப்பாறுதலையும் உதவியையும் பெற்றுக்கொள்ளலாம்.  
அந்த இரண்டு இயற்பியல் ஆசிரியர்கள் கேட்ட கேள்வியானது பல்வேறு பதில்களை கொண்டுவந்தது. ஆனால் தேவன் நம்முடைய வியாகுலத்தைக் கேட்கிறாரா? என்னும் கேள்விக்கு ஆம்! என்ற ஒற்றை பதில் மட்டுமே உள்ளது.  

பாட்டியின் ஆராய்ச்சி

எமோரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் பாட்டிமார்களின் மூளையை ஆய்வு செய்தனர். அவர்களுக்கு முன்பாக அவர்களுடைய மகனுடைய போட்டோவையும், பேரக் குழந்தையின் போட்டோவையும், அவர்களுக்கு அறிமுகமில்லாத இன்னொரு குழந்தையின் போட்டோவையும் காண்பித்து அவர்களின் உணர்ச்சி அனுதாபங்கள் பரிசோதிக்கப்பட்டது. அதில் தங்களுடைய சொந்த பிள்ளைகளை விட தங்கள் பேரப்பிள்ளைகளின் மீதான அனுதாபங்கள் அவர்களுக்கு அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுடைய சொந்த பிள்ளையைக் காட்டிலும் பேரப்பிள்ளைகள் அதிக அபிமானமாக தெரிவதால், இதனை “அழகான காரணி” என்று அழைக்கின்றனர்.  
“இதிலென்ன ஆச்சரியம்” என்று நீங்கள் சொல்லுவதற்கு முன்னால் அந்த ஆராய்ச்சியை செயல்படுத்திய ஜேம்ஸ் ரில்லிங் என்பவரின் கூற்றைக் கேட்போம். அவர், “அவர்களின் பேரக்குழந்தை சிரிக்கும்போது, பாட்டியும் சிரிக்கிறாள்; அவர்களின் பேரக்குழந்தை அழும்போது, பாட்டி, அதின் வலியையும் வேதனையையும் உணருகிறாள்” என்று சொல்லுகிறார்.  
தேவன் தன்னுடைய ஜனத்தைப் பார்க்கும்போது அவருடைய “எம்.ஆர்.ஐ ஸ்கேனை” ஒரு தீர்க்கதரிசி வரைகிறார்: “அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்” (செப்பனியா 3:17). அதனை சிலர் வேறுவிதமாகவும் மொழிபெயர்க்கின்றனர்: நீ அவருடைய இருதயத்தை திருப்தியடையச் செய்வாய், அவர் கெம்பீரமாய் பாடுவார்.” ஒரு அன்பான பாட்டியாய் தேவன் நம்முடைய வேதனையை அறிகிறார். “அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்” (ஏசாயா 63:9). “கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறார்” (சங்கீதம் 149:4).  
நாம் சோர்வுறும்போது, நம்மைக் குறித்த தேவனுடைய உணர்வுகள் மெய்யானவைகள் என்பதை நினைவுகூருவது நல்லது. அவர் நம்மை பொருட்படுத்தாமல் எங்கேயோ தூரத்தில் வாழும் தேவனல்ல. அவர் நம்மில் மகிழ்ந்திருக்கிற தேவன். இது அவரை நாம் கிட்டிச்சேருகிற நேரம். அவருடைய புன்னகையை உணருவோம்; அவர் பாடலைக் கேட்டு ரசிப்போம்.  

தேவன் பெயர்களை அறிந்திருக்கிறார்

 நான் திருச்சபையின் வாலிபர் குழு தலைவியாய் பொறுப்பேற்று, பல வாலிபர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்த வேளையில், ஒரு ஞாயிற்றுக்கிழமையின்போது தன் தாயின் அருகாமையில் அமர்ந்திருந்த ஒரு இளம் வாலிப பெண்ணிடம் பேசினேன். அதிக வெட்கப்படும் அந்த பெண்ணைப் பார்த்து, ஒரு புன்னகையோடு அவளுடைய பெயரை நான் சொல்லி அழைத்து எப்படி இருக்கிறாய் என்று கேட்டேன். அவள் தன்னுடைய தலையை உயர்த்தி, அழகான கண்கள் விரிய என்னைப் பார்த்து, “உங்களுக்கு என்னுடைய பெயர் ஞாபகம் இருக்கிறதா?” என்று ஆச்சரியமாய் கேட்டாள். வயதில் மூத்தவர்களாய் நிறைந்திருந்த அந்த திருச்சபையில் அந்த பெண்ணின் பெயரை குறிப்பிட்டு அழைத்ததால், அவளுடன் நம்பிக்கையான ஒரு உறவை ஏற்படுத்த என்னால் முடிந்தது. அவளை ஒரு பொருட்டாக எண்ணுகிறார்கள் என்ற நம்பிக்கை அவளுடைய சுயமதிப்பை கூடச் செய்தது.  
ஏசாயா 43ஆம் அதிகாரத்தில் அதேபோன்ற ஒரு செய்தியை இஸ்ரவேலர்களுக்கு சொல்லும்படிக்கு தேவன் ஏசாயா தீர்க்கதரிசியை பயன்படுத்துகிறார். தேவன் இஸ்ரவேலர்களை காண்கிறார் மற்றும் அவர்களை மதிப்பிடுகிறார் என்பதே அச்செய்தி. சிறையிருப்பிலும் வனாந்திரத்திலும் தேவன் அவர்களைக் கண்டு அவர்களை பேர்ச்சொல்லி அழைக்கிறார் (வச. 1). அவர்கள் வேறுயாரோ அல்ல; அவர்கள் தேவனுக்கு சொந்தமானவர்கள். அவர்கள் கைவிடப்பட்டவர்களாய் தெரிந்தாலும், அவர்கள் தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றவர்கள், அவர்களைக் குறித்த அவருடைய அன்பு மாறாதது (வச. 4). தேவன் அவர்களை பேர்ச் சொல்லி அழைக்கிறார் என்பதை அவர்களுக்கு நினைப்பூட்டுவதின் மூலம் அவர்களுடைய அந்த இக்கட்டான தருணத்தில் தேவன் அவர்களுக்கு செய்யப்போகிற நன்மைகளை அறிவிக்கிறார். அவர்கள் பாடுகளின் பாதையில் பயணிக்கும்போது தேவன் அவர்களோடே இருப்பார் (வச. 2). தேவன் அவர்களின் பெயர்களை அறிந்திருப்பதால் அவர்கள் பயப்படவோ அல்லது கவலைப்படவோ தேவையில்லை.  
நாம் நம்முடைய வாழ்க்கையின் ஆழமான ஆழிகளைக் கடக்கும்போது தேவன் அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரின் பெயர்களையும் அறிந்திருக்கிறார் என்பதே நமக்கான நற்செய்தி.