எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டேவ் பிரானன்கட்டுரைகள்

தேவனுடைய கிருபை வரம்

நான் பணியாற்றிக்கொண்டிருந்த கல்லூரியில் எழுதும் வகுப்பிற்கான பேப்பர்களை தரம் பிரித்துக் கொண்டிருந்தபோது, ஒரு குறிப்பிட்ட தாள் என்னைக் கவர்ந்தது. மிகவும் நன்றாக எழுதப்பட்டிருந்தது! அது நன்றாக எழுதப்பட்டது என்பதை துரிதமாய் கண்டுபிடித்தேன். சற்று உன்னிப்பாய் அதை கவனத்துப் பார்த்துபோது, அது ஆன்லைனிலிருந்து திருடப்பட்டது என்பதை கண்டுபிடிக்க நேரிட்டது. 

மாணவியின் இந்த தந்திரமான தவறு கண்டுபிடிக்கப்பட்டதைத் தெரிவிக்கும் வகையில் நான் அவளுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அவள் இந்தத் தாளில் பூஜ்ஜியம் மதிப்பெண்னையே பெறுகிறாள். ஆனால் அவள் இன்னொரு ஒழுங்கான தாளை எழுதமுடியும். அதற்கு அவள், “நான் அவமானமாய் உணர்கிறேன், மிகவும் வருந்துகிறேன். தகுதியற்ற எனக்கு நீங்கள் காட்டும் கிருபைக்காய் நன்றி" என்று பதில் அனுப்பியிருந்தாள். நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் இயேசுவின் கிருபையைப் பெற்றே ஜீவிக்கிறோம், அப்படியிருக்கும்போது உன் மேல் கிருபை காண்பிக்காமல் என்னால் எப்படி இருக்க முடியும்” என்று அவளுக்கு நான் பதிலளித்தேன்.

தேவனுடைய கிருபை நம் வாழ்க்கையை மேம்படுத்தவும், நம் தவறுகளிலிருந்து நம்மை மீட்டெடுக்கவும் பல வழிகள் உள்ளன. அது இரட்சிப்பை அளிக்கிறது என்று பேதுரு கூறுகிறார். “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே... நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோம்” (அப்போஸ்தலர் 15:11). அது பாவம் நம்மை மேற்கொள்ளாதிருக்கும்படி செய்கிறது என்று பவுல் சொல்லுகிறார்: “நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது” (ரோமர் 6:14). பேதுரு, கிருபை நம்மை உதவிசெய்யத் தூண்டுகிறது என்கிறார்: “அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்” (1 பேதுரு 4:10). 

கிருபை. தேவனால் இலவசமாகக் கொடுக்கப்பட்டது (எபேசியர் 4:7). மற்றவர்களை நேசிக்கவும் ஊக்கப்படுத்தவும் இந்த வரத்தைப் பயன்படுத்துவோம்.

கிறிஸ்துவில் ஐக்கியம்

எங்கள் ஞாயிறு காலை ஆராதனைக்குப் பிறகு விளக்குகளை அணைப்பதற்கும் தேவாலயத்தைப் பூட்டுவதற்கும் யார் பொறுப்பு என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த நபரைப் பற்றி எனக்கு ஒன்று தெரியும்: ஞாயிற்றுக்கிழமை இரவு உணவை அவர் தாமதமாகவே உண்ண நேரிடும். ஏனென்றால், பல விசுவாசிகள் ஆராதனைக்கு பின்னர், தேவாலயத்தில் சுற்றித் திரிவதை விரும்புகிறார்கள். அவர்களின் வாழ்க்கை தீர்மானங்கள், இதய பிரச்சினைகள், அனுதின போராட்டங்கள் மற்றும் பலவற்றைப் பற்றி பேசுகிறார்கள். ஆராதனை முடிந்து சபையில் ஒவ்வொருவரையும் பார்த்து ஐக்கியங்கொள்ளும் அந்த தருணம் மிகவும் மகிழ்ச்சிகரமானது.

ஐக்கியம் என்பது கிறிஸ்துவைப் போல் வாழும் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகும். சக விசுவாசிகளுடன் நேரத்தை செலவழிப்பதன் மூலம் வரும் ஐக்கியம் இல்லாமல், ஒரு விசுவாசியாக இருந்தால் பல நன்மைகளை நாம் வாழ்க்கையில் இழக்க நேரிடும்.

உதாரணமாக, “ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்” (1 தெசலோனிக்கேயர் 5:11) என்று பவுல் வலியுறுத்துகிறார். எபிரெயரின் ஆசிரியர், சபைக்கூடிவருதலை விட்டுவிடாதிருங்கள் (10:25) என்று கூறுகிறார். ஏனென்றால் “ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்” என்றும் ஆலோசிக்கிறார். மேலும் அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து” (வச. 24) செயல்படும்படிக்கு அறிவுறுத்துகிறார்.

இயேசுவுக்காக வாழ அர்ப்பணிக்கப்பட்ட மக்களாக, “பலவீனரை தாங்குங்கள்” என்னும் ஆலோசனையை ஏற்று, நீடிய சாந்தமாய் இருக்கும்போது, விசுவாசத்திற்கும் தேவனுடைய ஊழியத்திற்கும் நாம் நம்மை தகுதிப்படுத்துகிறோம் (1 தெசலோனிக்கேயர் 5:14). தேவனுடைய துணையோடு அவ்வாறு வாழும்போது, மெய்யான ஐக்கியத்தை அனுபவிக்கவும், “உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்போதும் நன்மை செய்ய” நாம் நாடலாம் (வச. 15).

தேவனுக்கு முன் சமம்

விடுமுறை நாட்களில், நானும் எனது மனைவியும் அதிகாலையில் பைக் சவாரி செய்து மகிழ்ந்தோம். ஒரு பாதை எங்களை பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள வீடுகளின் சுற்றுப்புறத்தின் வழியாக அழைத்துச் சென்றது. பல்வேறு நபர்களை நாங்கள் பார்த்தோம்: குடியிருப்பாளர்கள் தங்கள் நாய்களுடன் நடந்து செல்வது, சக பைக் ஓட்டுபவர்கள் மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் புதிய வீடுகளை கட்டுவது அல்லது நன்கு பராமரிக்கப்பட்ட நிலப்பரப்புகளை பராமரிப்பது. பலதரப்பட்ட மக்களை நான் பார்க்க நேரிட்டபோது, ஒரு மதிப்புமிக்க உண்மை எனக்கு நினைவூட்டப்பட்டது. நமக்குள் நிஜமாகவே எந்த வேறுபாடும் இல்லை. பணக்காரன் அல்லது ஏழை, முதலாளி அல்லது தொழிலாளி வர்க்கம் போன்று எந்த வேறுபாடும் இல்லை. அன்று காலை அந்தத் தெருவில் நாங்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருந்தோம். “ஐசுவரியவானும் தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் கர்த்தர்” (நீதிமொழிகள் 22:2). நமக்கும் வேறுபாடுகள் இருப்பினும், நாம் அனைவரும் தேவ சாயலில் சிருஷ்டிக்கப்பட்டுள்ளோம் (ஆதியாகமம் 1:27).

அதுமட்டுமின்றி, தேவனுக்கு முன்பாக நாம் அனைவரும் சமமாக இருக்கிறோம் என்பது, நம்முடைய பொருளாதார, சமூக மற்றும் இன வேறுபாடுகளைக் களைந்து, நாம் எல்லோரும் பாவிகளாய் இருக்கிறோம் என்பதிலும் ஒரு ஒற்றுமை வெளிப்படுகிறது: “எல்லோரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகி” (ரோமர் 3:23). நாமெல்லாரும் கீழ்படியாமையினிமித்தம் பாவஞ்செய்து, அவருக்கு முன்பாக குற்றவாளிகளாய் இருக்கிறோம். நமக்கு இயேசு தேவை.

நாம் அடிக்கடி பல்வேறு காரணங்களுக்காக மக்களை குழுக்களாக பிரிக்கிறோம். ஆனால், உண்மையில், நாம் அனைவரும் மனித இனத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம். பாவிகளுக்கும் இரட்சகர் அவசியம் என்பதினால் நாம் அனைவரும் ஒரே சூழ்நிலையில் இருந்தாலும், அவருடைய கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம் (வச. 24).

முகவரி அட்டையும் ஜெபமும்

சமீபத்தில் விதவையான பெண் ஒருவள் மிகுந்த கவலையில் ஆழ்ந்தாள். இன்ஷ_ரன்ஸ் பாலிசியில் இருந்து சில முக்கிய நிதிகளைச் சேகரிக்க, கணவரின் உயிரைப் பறித்த விபத்து பற்றிய முக்கிய தகவல்கள் அவளுக்குத் தேவைப்பட்டன. அவளுக்கு உதவுவதாகக் கூறிய ஒரு போலீஸ் அதிகாரியிடம் அவள் பேசினாள். ஆனால் அவள் அவருடைய முகவரி அட்டையை தொலைத்துவிட்டாள். அதனால் அவள் உதவிக்காக தேவனிடம் மன்றாடி ஜெபித்தாள். சிறிது நேரம் கழித்து, அவள் தேவாலயத்தின் வெளிப்புறமாக நடந்துசென்றுகொண்டிருக்கையில் தேவாலயத்தின் ஜன்னல் ஒன்றில் ஒரு முகவரி அட்டையைப் பார்த்தாள். ஆம், அவள் தொலைத்த அதே போலீஸ்காரரின் அட்டை. அது எப்படி அங்கு வந்தது என்று அவளுக்குத் தெரியவில்லை, ஆனால் அது ஏன் அங்கு வந்தது என்பது அவளுக்குத் தெரியும்.

அவள் ஜெபத்தைத் தீவிரமாக எடுத்துக் கொண்டாள். ஏன் கூடாது? தேவன் நம் விண்ணப்பங்களுக்கு செவிசாய்க்கிறார் என்று வேதம் கூறுகிறது. பேதுரு சொல்லும்போது “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதல்களுக்குக் கவனமாயிருக்கிறது” (1 பேதுரு 3:12) என்று கூறுகிறார். 

ஜெபத்திற்கு தேவன் எவ்வாறு பதிலளித்தார் என்பதற்கு வேதாகமம் பல எடுத்துக்காட்டுகளைத் தருகிறது. அதில் வியாதிப்பட்ட யூதேயாவின் ராஜாவாகிய எசேக்கியாவும் ஒருவர். அவர் மரித்துவிடுவார் என்று ஏசாயா தீர்க்கதரிசியே தீர்க்கதரிசனம் சொல்லிவிட்டார். ஆனால் ராஜாவே என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்திருந்தான். “அவன் கர்த்தரை நோக்கி... விண்ணப்பம்பண்ணினான்” (2 இராஜ. 20:2). உடனே தேவன் ஏசாயா தீர்க்கதரிசியை நோக்கி, “உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்” (வச. 5) என்று அவனிடம் சொல்லும்படிக்கு சொன்னார். எசேக்கியாவுக்கு மேலும் பதினைந்து ஆண்டுகள் ஆயுள் கூட்டப்பட்டது.

ஜன்னலில் அட்டை தென்பட்டதுபோல தேவன் எப்போதும் நமக்கு பதிலளிப்பதில்லை. ஆனால் கடினமான சூழ்நிலைகள் எழும்போது, அவற்றை நாம் தனியாக எதிர்கொள்ள மாட்டோம் என்று அவர் நமக்கு உறுதியளிக்கிறார். தேவன் நம்மைப் பார்க்கிறார், அவர் நம்முடன் இருக்கிறார் - நம் ஜெபங்களைக் கேட்கிறார்.

ஜீவனைக் கண்டடைதல்

வேதாகமக் கல்லூரியில் சேர்ந்து வேதத்தைக் குறித்து படிப்பது என்பது, பிரெட் எடுத்த இயல்பான தீர்மானம். அவன் தன்னுடைய வாழ்நாள் முழுவதிலும் - பள்ளி, வீடு, திருச்சபை என்று கிறிஸ்தவர்களால் சூழப்பட்டே வாழ்ந்திருக்கிறான். மேலும் அவன் தன்னுடைய கல்லூரிப் படிப்பையும் கிறிஸ்தவ ஊழியத்தைக் குறித்தே படிக்கிறான். 

ஆனால் அவனுடைய இருபத்தியோராம் வயதில், ஒரு திருச்சபையின் சிறிய கூட்டத்தில் 1 யோவான் நிருபத்திலிருந்து போதகர் பிரசங்கிக்க, ஒரு புதிய காரியத்தைக் கண்டுபிடித்தான். அவன் அறிவைச் சார்ந்தும் மார்க்கத்தின் பிடியில் சிக்கியிருந்ததையும் அறிந்து, தான் இன்னும் இரட்சிக்கப்படவில்லை என்பதை உணர்ந்தான். அன்று இயேசு அவனுடைய இருதயத்தில், “நீ இன்னும் என்னை அறியவில்லை!” என்று மெல்லிய சத்தத்தோடு பேசுவதை உணார்ந்தான். 

யோவானின் செய்தி தெளிவாக உள்ளது: “இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்” (1 யோவான் 5:1). கிறிஸ்துவை விசுவாசிப்பதினால் மட்டுமே நம்மால் உலகத்தை ஜெயிக்கமுடியும் என்று யோவான் சொல்லுகிறார் (வச. 4). வெறும் அறிவினால் மட்டும் அது சாத்தியமல்ல. மாறாக, அவர் நமக்காய் சிலுவையில் செய்த தியாகத்தின் மீதான நேர்த்தியான விசுவாசத்தினால் அது சாத்தியமாகக்கூடும். அந்நாளிலே, பிரெட் கிறிஸ்துவை மாத்திரம் நம்பப்பழகிக்கொண்டார். 

இன்று கிறிஸ்துவின் மீதான பிரெட்டின் பாரத்தைக் குறித்தும் அவருடைய இரட்சிப்பைக் குறித்தும் மறைவானது ஒன்றுமில்லை. அவர் பிரசங்கபீடத்தில் ஒவ்வொரு முறை நின்று கர்த்தருடைய வார்த்தையை பிரசங்கிக்கும்போது, அது தெளிவாக பிரதிபலிக்கிறது. 

“தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன்” (வச. 11-12). கிறிஸ்துவில் மறுவாழ்வு பெற்ற நம் அனைவரையும் தேற்றக்கூடிய நேர்த்தியான ஆறுதல் இது. 

ஏதாகிலும் கேள்வி?

ஆன், பல ஆண்டுகளாக அறிந்திருந்த வாய்வழி அறுவை சிகிச்சை நிபுணரை ஆரம்ப பரிசோதனைக்காக சந்தித்தார். அவர் அவளிடம், “உனக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா?” என்று கேட்டார். அவள், “ஆம்! கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்திற்குச் சென்றீர்களா?” என்று கேட்டாள். அவளுடைய கேள்வி அவரை குற்றப்படுத்தும் நோக்குடன் கேட்கப்பட்டதில்லை, மாறாக, விசுவாசத்தைக் குறித்த உரையாடலைத் துவக்குவதற்காக கேட்கப்பட்ட கேள்வியாயிருந்தது. 

அந்த மருத்துவரின் திருச்சபை அனுபவங்கள் அந்த அளவிற்கு சொல்லும்படியாக இருக்கவில்லை. ஆனின் உரையாடலுக்கு பின்னர், அவருடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் பங்களிப்பையும் திருச்சபையின் முக்கியத்துவத்தையும் அறிய நேரிட்டது. அதன் பின்பு, அந்த மருத்துவரின் பெயர் பதிக்கப்பட்ட வேதாகமத்தை ஆன் அவருக்கு பரிசாகக் கொடுத்தபோது, அவர் கண்கலங்கினார். 

சில நேரங்களில் நாம் விவாதிக்கவோ அல்லது நம் விசுவாசத்தை ஆக்ரோஷமாக பகிர்ந்து கொள்வதையோ விரும்புவதில்லை. ஆனால் இயேசுவைப் பற்றி அறிவிப்பதற்கு ஒரு நேர்த்தியான வழி இருக்கிறது – கேள்வி கேட்டு உரையாடலைத் துவக்குங்கள். 

அனைத்தும் அறிந்த தேவனாய் இருந்த ஒரு மனிதனாய் இயேசு அநேக கேள்விகளைக் கேட்டிருக்கிறார். அவருடைய நோக்கங்கள் நமக்குத் தெரியாவிட்டாலும், அவருடைய கேள்விகள் மற்றவர்களை பதிலளிக்கத் தூண்டியது என்பது தெளிவாகிறது. அவர் தனது சீஷனான அந்திரேயாவிடம், “என்ன தேடுகிறீர்கள்” (யோவான் 1:38) என்று கேட்கிறார். பார்வையற்ற பர்திமேயுவிடம், “நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய்” (மாற்கு 10:51; லூக்கா 18:41) என்று கேட்கிறார். அவர் வியாதியஸ்தனிடம், “சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா” (யோவான் 5:6) என்று கேட்கிறார். இயேசு இந்த ஆரம்ப கேள்விகளைக் கேட்ட அத்தனை பேருடைய வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்படுகிறது.

யாரிடத்தில் விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்கள்? சரியான கேள்விகளை அவர்களிடத்தில் கேட்கும் ஞானத்தை தேவனிடம் கேளுங்கள்.

வித்தியாசமான செய்கை

மேரி ஸ்லெஸர், 1800களின் பிற்பகுதியில் ஆப்பிரிக்க நாடான கலாபருக்கு (தற்போதைய நைஜீரியா) கப்பலில் சென்றபோது, மறைந்த டேவிட் லிவிங்ஸ்டோனின் மிஷனரிப் பணியைத் தொடர ஆர்வமாக இருந்தார். ஆனால் சக மிஷனரிகளின் பிள்ளைகளுக்கு பாடம் கற்பிக்கும் பணியே அவளுக்குக் கொடுக்கப்பட்ட முதல் ஊழியம். அவள் அதை எதிர்பார்க்காததால் சோர்ந்துபோனார். ஆகையால் அவள் ஒரு துணிச்சலான காரியத்தை செய்ய முன்வந்தாள். அவள் ஊழியம் செய்யும் மக்கள் வாழும் இடத்திற்கே குடியேறினாள். அவர்களுடைய மொழியை கற்றுக்கொண்டு, அவர்களுடைய வாழ்க்கைமுறையை தத்தெடுத்துக்கொண்டு, அவர்களின் உணவையே உண்ண நேரிட்டது. ஆதரவற்ற எண்ணற்ற குழந்தைகளை பராமரித்தாள். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக, அந்த மக்களுக்கு அவள் நம்பிக்கையையும் நற்செய்தியையும் பிரஸ்தாபப்படுத்தினாள்.

நம்மை சுற்றிவாழும் மக்களின் தேவைகளை சந்தித்தலின் முக்கியத்துவத்தை பவுல் அப்போஸ்தலர் நன்கு அறிந்திருந்தார். 1 கொரிந்தியர் 12:4-5இல், “வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே. ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே” என்று குறிப்பிடுகிறார். ஆகையால் மக்களின் தேவையை அறிந்து அவர் ஊழியம் செய்தார். ஒரு கட்டத்தில், பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன் (9:22) என்று சொல்லுகிறார். 

நான் அறிந்த ஒரு தேவாலயம் சமீபத்தில், ஊனமுற்றவர்களும் இலகுவாய் ஆராதிக்கும்படியாக “அனைத்து திறன்” ஊழியம் ஒன்றைத் துவங்கியது. இது சுவிசேஷத்தை சமுதாயத்திற்கு இலகுவாய் கொண்டுசெல்லும் பவுல் அப்போஸ்தலரின் அணுகுமுறைக்கு ஒத்தது.

நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு முன்பாக நம்முடைய விசுவாசத்தை வெளிப்படுத்தும்போது, புதுப்புது வழிகளில் அவர்களுக்கு இயேசுவை அறிமுகப்படுத்த தேவன் நம்மை வழிநடத்துவார்.

இருளில் இருந்து ஒளிக்கு

ஆகாஷை அவனது இருண்ட மன அழுத்தத்தில் இருந்து வெளியே கொண்டு வர முடியவில்லை. லாரி விபத்தில் பலத்த காயமடைந்த அவன் தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு மிஷனரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். எட்டு அறுவை சிகிச்சைகள் மூலம் அவனது உடைந்த எலும்புகள் சரி செய்யப்பட்டன. ஆனால் அவனால் சாப்பிட முடியவில்லை. அவன் மனச்சோர்வில் இருந்தான். அவனைச் சார்ந்திருந்த அவன் குடும்பத்திற்கு உதவ முடியாமல் போனதால், அவனுக்கு உலகமே இருண்டது.

 

ஒரு நாள் ஒரு பார்வையாளர் ஆகாஷிடம் யோவானின் நற்செய்தியை அவனது மொழியில் வாசித்து, அவனுக்காக ஜெபம் செய்தார். இயேசுவின் மூலம் தேவனின் இலவச ஈவுகளாகிய மன்னிப்பு மற்றும் இரட்சிப்பின் நம்பிக்கையை உணர்ந்தபடியால் அவர் மீது தன் நம்பிக்கையை வைத்தான். அவனது மனச்சோர்வு விரைவில் விலகியது. அவன் வீடு திரும்பியதும், புதிதாகக் கண்டறிந்த தன் நம்பிக்கையைக் குறித்து சொல்ல முதலில் பயந்தான். கடைசியாக, அவன் தன் குடும்பத்தாரிடம் இயேசுவைப் பற்றி சொன்னான். அவர்களில் ஆறு பேரும் அவரை நம்பினார்கள்!

 

யோவானின் நற்செய்தி, இருள் சூழ்ந்த உலகிற்கான ஒளியின் கலங்கரை விளக்கமாகும். அதில், “]தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு” (3:16) என்று வாசிக்கிறோம். “[இயேசுவின்] என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு” (5:24) என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். ”ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான்” (6:35) என்று இயேசு  கூறுவதை கேட்கிறோம். உண்மையில், “சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்”.(3 :21)

 

நாம் சந்திக்கும் பிரச்சனைகள் பெரியதாக இருக்கலாம், ஆனால் இயேசு அவைகளிக்காட்டிலும் மிக பெரியவர். அவர் நமக்கு ”ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்(தார்)” (10:10). ஆகாஷைப் போலவே, இவ்வுலகில் உங்கள் நம்பிக்கையை மனிதகுலம் அனைத்துக்கும் ஒளியாகிய இயேசுவின் மீது வைப்பீர்களாக.                                                                

பிரிவு வார்த்தைகள்

ஜான் பெர்கின்ஸ், மரிப்பதற்கு முன்பாக அவருடைய ஆதரவாளர்களுக்கு ஒரு செய்தியை விட்டுச் செல்கிறார். இன நல்லிணக்கத்தின் போராளியாக அறியப்பட்ட பெர்கின்ஸ், “மனந்திரும்புதலே தேவனிடம் திரும்புவதற்கான ஒரே வழி. நீங்கள் மனந்திரும்பாவிட்டால், நீங்கள் அனைவரும் அழிந்து போவீர்கள்” என்று தன் கடைசி வார்த்தைகளை பதிவுசெய்கிறார். 

இதே வார்த்தைகளை வேதாகமத்தில் இயேசுவோடு சேர்த்து அநேகர் பயன்படுத்தியிருக்கின்றனர். இயேசு, “நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்” (லூக்கா 13:3) என்று சொல்லுகிறார். பேதுரு, “உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்” (அப்போஸ்தலர் 3:20) என்று சொல்லுகிறார். 

வேதாகமத்தில் வெகுகாலத்திற்கு முன்பாகவே அனைத்து ஜனங்களின் மனந்திரும்புதலை விரும்பிய ஒரு மனிதர் இருக்கிறார். தீர்;க்கதரிசியும், ஆசாரியனும், நியாயாதிபதியுமாயிருக்கிற சாமுவேல், “இஸ்ரவேலர் அனைவரையும் நோக்கி” (1 சாமுவேல் 12:1) சொன்னது என்னவென்றால், “பயப்படாதேயுங்கள்; நீங்கள் இந்தப் பெல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரைவிட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழுஇருதயத்தோடும் சேவியுங்கள்” (வச. 20) என்று சொல்லுகிறார். தீமையிலிருந்து விலகி முழுஇருதயத்தோடும் தேவனை தேடச்செய்வதே அவருடைய மனந்திரும்புதலின் செய்தி. 

நாமெல்லாரும் பாவம் செய்து தேவனை விட்டு வழிவிலகிப்போனோம். நாமெல்லாருக்கும் மனந்திரும்புதல் அவசியப்படுகிறது. அதாவது, பாவத்தை விட்டு வழிவிலகி, நம்மை மன்னித்து வழிநடத்தும் இயேசுவிடம் திரும்புவது. தேவன் தன்னுடைய நாமத்தை கனப்படுத்தும் மனிதர்களுடைய வாழ்க்கையில் செயல்படுத்தும் மனந்திரும்புதலின் வல்லமையை அறிந்த ஜான் பெர்கின்ஸ் மற்றும் சாமுவேல் என்னும் இந்த இரண்டு மனிதர்களுடைய வார்த்தைகளுக்கும் செவிகொடுப்போம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

எனக்குப் பதிலாக இயேசு

இருபது வயது செல்வந்தன் ஒருவன் தன் நண்பர்களுடன் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, ​​பாதசாரி மீது மோதியதால் அவா் மரணமடைந்தாா். அந்த இளைஞனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் ஆஜரானவர் (பின்னர் சிறைத்தண்டனை அனுபவித்தவர்) குற்றத்தைச் செய்த ஓட்டுநருக்கு மாற்றாக வந்தவர் என்று சிலர் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் சில நாடுகளில் நடக்கிறது, அங்கு மக்கள் தங்கள் குற்றங்களுக்காக தண்டனை பெறுவதை தவிர்க்க தங்களை போலவே தோற்றமளிக்கும் பிறரை வாடகைக்கு அமர்த்துகின்றனர்.

இது அவதூறும் மூர்க்கமுமான செயலாக இருக்கலாம், ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு நமது சார்பில் மாற்றாக ஆனார், மேலும் " அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்" (1 பேதுரு 3:18). தேவனின் பாவமற்ற பலியாக, அவரை விசுவாசிப்பவர்களின் பொருட்டு கிறிஸ்து துன்பப்பட்டு ஒரேதரம் மரித்தார் (எபிரெயர் 10:10). நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் அவர் சிலுவையில் தம்முடைய சரீரத்திலே தண்டனையை ஏற்றுக்கொண்டார். இன்று ஒரு குற்றவாளிக்கு மாற்றாக சில பணத்தைப் பெற ஒப்புக்கொள்ளும் ஒரு நபரைப் போலல்லாமல், கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்கு "நம்பிக்கையை" அளித்தது, அவர் தாமாகவே, விருப்பத்துடன் நமக்காகத் தம் ஜீவனை கொடுத்தார் (1 பேதுரு 3:15, 18; யோவான் 10:15). நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் அகற்ற அவர் அவ்வாறு செய்தார்.

இயேசு நமக்கு பதிலாக மரித்ததின் மூலம் மட்டுமே, தேவையிலுள்ள பாவிகளாகிய நாம் அன்பான தேவனுடன் ஒரு உறவைப் பெற முடியும் மற்றும் முழுமையாக அவருடன் ஆவிக்குரிய உறவை பெற முடியும் என்ற இந்த ஆழமான சத்தியத்தில் நாம் மகிழ்ச்சியடைவோம், ஆறுதலையும் நம்பிக்கையையும் பெறுவோம்.

நேசிப்பதற்கான புதிய கட்டளை

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமான பாரம்பரியப்படி, ஐக்கிய பேரரசின் அரச குடும்பத்தினர் புனித வெள்ளிக்கு முந்தைய நாளான பெரிய வியாழன் அன்று தேவையானவர்களுக்கு பரிசுகளை வழங்குவார்கள். இந்த நடைமுறையானது மவுண்டி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் வேரூன்றியுள்ளது, இது லத்தீன் 'மாண்டடம்' அதாவது "கட்டளை" என்பதிலிருந்து வருகிறது. இயேசு தாம் இறப்பதற்கு முந்தைய இரவில் தம் நண்பர்களுக்குக் கொடுத்த புதிய கட்டளைதான் நினைவுகூரப்படுகிறது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” (யோவான் 13:34).

இயேசு தலைவராக இருந்தும், தம் நண்பர்களின் கால்களைக் கழுவுகையில், ஒரு ஊழியக்காரனான இருந்தார் (வச. 5). பின்னர் அவர் அவ்வாறே செய்யும்படி அவர்களை அழைத்தார்: "நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்." (வச. 15). மேலும் இன்னும் பெரிய தியாகமாக, அவர் சிலுவையில் மரித்து தனது உயிரைக் கொடுத்தார் (19:30). முழுமையான வாழ்வை நாம் அனுபவிக்க, கருணையினாலும் அன்பினாலும் அவர் தம்மையே கொடுத்தார்.

பிரித்தானிய அரச குடும்பம் தேவைப்படுபவர்களுக்கு சேவையாற்றும் பாரம்பரியம் இயேசுவின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கான அடையாளமாக தொடர்கிறது. இதுபோல வாய்ப்புள்ள சூழலில் நாம் பிறக்காமல் இருக்கலாம்; ஆனால் நாம் இயேசுவில் நம்பிக்கை வைக்கும் போது, ​​நாம் அவருடைய குடும்பத்தினராக மாறுகிறோம். நாமும் அவருடைய புதிய கட்டளையை நிறைவேற்றுவதன் மூலம் நம் அன்பைக் காட்டலாம். உள்ளிருந்து நம்மை மாற்றுவதற்கு நாம் தேவனின் ஆவியைச் சார்ந்திருக்கையில்; அக்கறையுடனும், உறுதியுடனும், கருணையுடனும் பிறரை அணுகலாம்.

கிறிஸ்துவில் கனிதரும் விசுவாசிகள்

சிண்டி ஒரு தொண்டு நிறுவனத்தில் தனது புதிய வேலைக்காக உற்சாகப்பட்டாள். மாற்றத்தை ஏற்படுத்த அரிய வாய்ப்பு. ஆனால் அவளுடைய சகபணியாளர்கள் அப்படியில்லை என்பதை அவள் விரைவில் கண்டுபிடித்தாள். தங்கள் நிறுவனத்தின் பணியை கேலி செய்தார்கள் மற்றும் லாபகரமான வேலைகளுக்கு வேறு இடங்களில் தேடியதால், மோசமான செயல்திறனுக்காக சாக்கு கூறினர். சிண்டி இந்த வேலைக்கு விண்ணப்பித்திருக்கவே வேண்டாம் என்றென்னினாள். தொலைவில் அற்புதமாக தோன்றியது அருகிலோ ஏமாற்றமளித்தது.

இன்றைய கதையில் (மாற்கு 11:13) குறிப்பிடப்பட்டுள்ள அத்தி மரத்தில் இயேசுவுக்கிருந்த பிரச்சனையும் இதுதான். இது பருவத்தின் ஆரம்பத்தில் இருந்தது, ஆனால் மரத்தின் இலைகள் அது ஆரம்பகால அத்திகளைக் கொண்டிருப்பதாக குறிக்கிறது. இல்லை, மரத்தில் இலைகள் துளிர்விட்டன, ஆனால் அது இன்னும் காய்க்கவில்லை. ஏமாற்றமடைந்த இயேசு, "இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கடவன்" (வச.14) என்று மரத்தை சபித்தார். மறுநாள் காலையில் மரம் வேரோடே பட்டுப்போயிருந்தது (வச. 20).

கிறிஸ்து ஒருமுறை நாற்பது நாட்கள் உபவாசம் இருந்தார், ஆகவே உணவு இல்லாமல் எப்படி இருக்க வேண்டும் என்று அவரறிவார். அத்தி மரத்தை சபிப்பது அவரது பசிக்காக இல்லை. இது ஒரு பொருள் பாடம். இந்த மரம் இஸ்ரவேலை குறிக்கிறது, அது மெய்யான மதத்தின் வேர்களை கொண்டிருந்தது, ஆனால் நோக்கத்தை இழந்துவிட்டது. அவர்கள் தேவனுடைய குமாரனாகிய தங்கள் மேசியாவைக் கொல்லப் போகிறார்கள். அவர்கள் எவ்வளவு கணியற்றிருந்திருக்க வேண்டும்?

தூரத்திலிருந்து நாம் அழகாகத் தோன்றலாம், ஆனால் இயேசு அருகில் வருகிறார், அவருடைய ஆவியால் மட்டுமே விளைவிக்கப்படும் கனியைத் தேடுகிறார். நமது கனிகள் கண்கவரும்வண்ணம் இருக்க வேண்டியதில்லை. ஆனால் அது இயற்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அன்பு, சந்தோஷம் மற்றும் கடினமான காலங்களில் சமாதானம் போன்றவை (கலாத்தியர் 5:22). ஆவியானவரை சார்ந்து, இயேசுவுக்காக எப்போதும் கனி கொடுக்கலாம்.