எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

சோச்சில் டிக்ஸன்கட்டுரைகள்

வாழ்க்கை மாற்றும் தெய்வீக பரிசு

நானும் எனது கணவரும் எங்களது இளைஞர் குழுவினரை பாராட்டி அவர்களுக்கு வேதாகமங்களை பரிசளித்தோம். “உங்கள் வாழ்க்கையை மாற்ற கடவுள் இந்த விலைமதிப்பற்ற பரிசுகளைப் பயன்படுத்துவார்” என்று நான் அவர்களுக்குச் சொன்னேன். அன்றிரவு, ஒரு சில மாணவர்கள் யோவானின் சுவிசேஷத்தை ஒன்றாக வாசிக்க தீர்மானித்தனர். எங்கள் வாராந்திர கூட்டங்களில் நாங்கள் அவர்களுக்குக் கற்பித்தபோது, வீட்டில் வேதத்தை வாசிக்க குழுவை தொடர்ந்து உற்சாகப்படுத்தினோம். பத்து ஆண்டுகள் கழித்து, எங்கள் மாணவர் ஒருவரை நான் சந்திக்க நேரிட்டது. அவள் என்னிடத்தில் “நீங்கள் கொடுத்த பைபிளை நான் இன்னும் பயன்படுத்துகிறேன்,” என்று சொன்னாள். அவளுடைய நம்பிக்கை நிரம்பிய வாழ்க்கையில் நான் ஆதாரங்களைக் கண்டேன்.

வேதத்தின் வசனங்களைப் படிக்கவும், நினைவில் வைத்துக்கொள்ளவும் தேவன் தம் ஜனத்திற்கு அதிகாரம் கொடுக்கிறார். வேதவாக்கியங்களின்படி (சங்கீதம் 119:9) வாழ்வதன் மூலம் தூய்மையின் பாதையில் இருக்க அவர் நமக்கு உதவுகிறார். பாவத்திலிருந்து நம்மை விடுவிக்கவும், நம்மை மாற்றவும் அவர் தம் மாறாத சத்தியங்களைப் பயன்படுத்தும்போது, நாம் அவரைத் தேடிக் கீழ்ப்படிய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் (வச. 10-11). தேவனை அறிந்துகொள்ளவும், வேதாகமத்தில் அவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவும்படி தினமும் தேவனிடத்தில் விண்ணப்பிக்க பிரயாசப்படுவோம் (வச. 12-13).

தேவனுடைய வழியில் வாழ்வதன் விலைமதிப்பற்ற மதிப்பை நாம் அடையாளம் காணும்போது, ஒருவன் “திரளான செல்வத்தில் களிகூருவதுபோல” (வச. 14-15) அவருடைய ஆலோசனையில் நாம் மகிழ்ச்சியடைய முடியும். சங்கீதக்காரனைப் போலவே நாமும் “உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்” (வச. 16) என்று பாடலாம். நம்மை பலப்படுத்த பரிசுத்த ஆவியானவரை நாம் அழைக்கும்போது, தேவன் நம்முயை வாழ்க்கை மாற்றும் பரிசாக நமக்குக் கொடுத்திருக்கிற வேதத்தை ஜெபத்துடன் வாசிக்கும் ஒவ்வொரு கணத்தையும் நாம் அனுபவிக்க முடியும்.

 

ஒவ்வொரு நொடியும் முக்கியம்

ஏப்ரல் 1912 இல் டைட்டானிக் கப்பல் ஒரு பனிப்பாறையில் மோதியபோது, ​​​​போதகர் ஜான் ஹார்பர் தனது ஆறு வயது மகளுக்கு, உயிர்காக்கும் சிறிய படகுகளிலிருந்த மிகக்குறைந்த காலியிடங்களில் ஒன்றைப் பெற்றார். அவர் சக பயணிக்குத் தனது உயிர் காக்கும் மிதவை ஆடையைக் கொடுத்து, கேட்கும் எவருடனும் நற்செய்தியைப் பகிர்ந்து கொண்டார். கப்பல் மூழ்கியது . நூற்றுக்கணக்கான மக்கள் ஒரு சாத்தியமற்ற மீட்புக்காக காத்திருந்தபோது, ​​​​ஹார்பர் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நீந்தினார், "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" (அப்போஸ்தலர் 16:31) என்றார்.

கனடாவின் ஒன்டாரியோவில் டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்தவர்களுக்கான சந்திப்பு கூட்டத்தில், ​​ஒருவர் தன்னை "ஜான் ஹார்பரின் கடைசி மாற்றம்" என்று குறிப்பிட்டார். ஹார்பரின் முதல் அழைப்பை அவர் நிராகரித்தாலும்,ஹார்பர் மீண்டும் அவரிடம் வேண்டிக்கொண்ட பின்னர், ​​​​அவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். தாழ் வெப்பநிலையால் பாதிக்கப்பட்டு பனிக்கட்டி நீரின் மேற்பரப்பில் மூழ்குவதற்கு முன்பும், இயேசுவைப் பகிர்ந்துகொள்வதற்காக ஹார்பர் தனது வாழ்க்கையின் கடைசி தருணங்களை அர்ப்பணித்ததை அவர் பார்த்தார்.

தீமோத்தேயுவிடம் பொறுப்பளிக்கையில், அப்போஸ்தலன் பவுல் தன்னலமற்ற சுவிசேஷ பணியில் இதேபோன்ற அவசரத்தையும் அர்ப்பணிப்பையும் ஊக்குவிக்கிறார். தேவனின் நிலையான பிரசன்னத்தையும், இயேசுவின் தவிர்க்க முடியாத வருகையையும் உறுதிசெய்து, நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணிப் பிரசங்கிக்குமாறு தீமோத்தேயுவுக்கு பவுல் கட்டளையிடுகிறார் (2 தீமோத்தேயு 4:1-2). சிலர் இயேசுவை நிராகரித்தாலும், இளம் பிரசங்கிக்குக் கவனம் செலுத்தும்படி அப்போஸ்தலன் நினைவூட்டுகிறார் (வ.3-5).

நம் நாட்கள் குறுகியவை, எனவே ஒவ்வொரு கணமும் முக்கியம். “இயேசு இரட்சிக்கிறார்!” என்று நாம் அறிவிக்கையில், ​​நம்முடைய பிதா பரலோகத்தில் நமக்கான இடத்தை உறுதிப்படுத்தினார் என்பதில் நாம் நிச்சயம் கொள்கிறோம்.

அன்பான கீழ்ப்படிதல்

எங்கள் திருமணத்தின்போது, எங்கள் போதகர் என்னிடம், “உன் கணவரை நேசிக்கவும், மதிக்கவும், கீழ்ப்படிவதாகவும் உறுதியளிக்கிறீர்களா? நீங்கள் இறக்கும் வரை இணைந்திருப்பீர்களா?” என்று கேட்டார். என் கணவரைப் பார்த்து, “கீழ்ப்படிதலா?”  என்று நான் கிசுகிசுத்தேன். நாங்கள் எங்கள் உறவை அன்பு மற்றும் மரியாதையின் அடிப்படையில் கட்டியெழுப்பினோம். நான் உறுதியயெடுக்கவேண்டும் என்று கேட்கப்பட்ட குருட்டுத்தனமான கீழ்ப்படிதல் அல்ல. நான் கீழ்படிதல் என்ற வார்த்தையை புரிந்துகொண்டு, மனப்பூர்வமாய் சம்மதம் தெரிவித்தபோது, அந்த நிகழ்வை என்னுடைய மாமனார் தன்னுடைய கேமராவில் படம்பிடித்தார். 

பல ஆண்டுகளாக, கீழ்ப்படிதல் என்ற வார்த்தைக்கான எனது எதிர்ப்பும், கணவன்-மனைவி இடையே உள்ள நம்பமுடியாத சிக்கலான உறவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தேவன் எனக்குக் காண்பித்தார். கீழ்ப்படிதல் என்றால் “அடிபணிக்கப்பட்ட” அல்லது “கட்டாயமான சமர்ப்பணம்” என்று நான் புரிந்திருந்தேன். இந்த புரிதலை வேதாகமம் ஆதரிக்கவில்லை. மாறாக, வேதாகமத்தில் உள்ள கீழ்ப்படிதல் என்ற வார்த்தை, நாம் தேவனை நேசிக்கக்கூடிய பல வழிகளை வெளிப்படுத்துகிறது. நானும் என் கணவரும் முப்பது வருட திருமண வாழ்க்கையை கொண்டாடிய போது, பரிசுத்த ஆவியின் வல்லமையால் நாங்கள் இன்னும் இயேசுவையும், ஒருவரையொருவரையும் அதிகமாய் நேசிக்க கற்றுக்கொண்டிருக்கிறோம்.

“நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” (யோவான் 14:15) என்று இயேசு சொன்னதின் மூலம், வேதவசனங்களுக்குக் கீழ்ப்படிவது அவருடன் தொடர்ந்து அன்பான மற்றும் நெருக்கமான உறவின் விளைவாக இருக்கும் என்று அவர் நமக்குக் காண்பித்துள்ளார் (வச. 16-21).

இயேசுவின் அன்பு தன்னலமற்றது, நிபந்தனையற்றது; ஒருபோதும் வலுக்கட்டாயமானதோ அல்லது தவறானதோ அல்ல. நம்முடைய எல்லா உறவுகளிலும் நாம் அவரைப் பின்பற்றி கனப்படுத்தும்போது, அவருக்குக் கீழ்ப்படிவதை ஞானமான, அன்பான நம்பிக்கை மற்றும் ஆராதனையின் விளைவாகக் காண பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவுவாராக. 

 

தேவனை நேசிக்காமல் இருக்கமுடியாது

தற்போது வளர்ச்சிப்பெற்றுள்ள என்து மகன் சேவியர், மழலையர் பள்ளியில் இருந்தபோது, அவன் கைகளை அகல விரித்து, “நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்” என்று சொன்னான். நானும் என் நீண்ட கைகளை விரித்து, “நானும் உன்னை மிகவும் நேசிக்கிறேன்” என்று பதிலுக்கு சொன்னேன். அவன் தன் கைகளை தன் இடுப்புப் பகுதியில் வைத்தவாறு, “நான் தான் உன்னை முதலில் நேசித்தேன்” என்றான். நான் தலையை அசைத்து ஆமோதித்தேன். “தேவன் முதலில் உன்னை என் கருவில் வைத்தபோதே நான் உன்னை நேசித்தேன்” என்றேன். சேவியரின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. “நீங்கள் வெற்றி பெற்றீர்கள்” என்றான். “இயேசு நம் இருவரையும் முதலில் நேசித்ததால், நாம் இருவருமே வெற்றிபெறுகிறோம்” என்று நான் சொன்னேன்.

சேவியர் தனது முதல் குழந்தையின் பிறப்புக்கு தயாராகிக்கொண்டிருக்கும்போது, அவன் தனது மகனை பிற்காலத்தில் நினைவுகூரும்போதெல்லாம் அவன்மீது அன்புசெலுத்தியதில் மகிழ்ச்சியடையவேண்டும் என்று நான் வேண்டுதல்செய்கிறேன். ஆனால் நான் ஒரு பாட்டியாகத் தயாராகும்போது, சேவியரும் அவருடைய மனைவியும் ஓர் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்று என்னிடம் சொன்ன தருணத்திலிருந்து நான் என் பேரனை எவ்வளவு நேசித்தேன் என்று ஆச்சரியப்படுகிறேன்.

இயேசு நம்மீது வைத்திருக்கும் அன்பு, அவரையும் மற்றவர்களையும் நேசிக்கும் திறனை நமக்குத் தருகிறது என்று அப்போஸ்தலர் யோவான் உறுதிப்படுத்துகிறார் (1 யோவான் 4:19). அவர் நம்மை நேசிக்கிறார் என்பதை அறிவது, அவருடனான நமது தனிப்பட்ட உறவை ஆழப்படுத்தும் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது (வச. 15-17). அவர் நம்மீது வைத்துள்ள அன்பின் ஆழத்தை நாம் உணர்ந்துகொள்ளும்போது (வச. 19), நாம் அவருக்கான அன்பில் வளரலாம். மேலும் பிற உறவுகளில் அன்பை வெளிப்படுத்தலாம் (வச. 20). அன்பு செய்வதற்கு இயேசு நமக்கு அதிகாரம் அளிப்பது மட்டுமல்லாமல், அன்பு செலுத்தும்படியும் கட்டளையிடுகிறார்: “தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்” (வச. 21). யார் அதிகம் நேசிக்கிறவர்கள் என்று வரும்போதெல்லாம், தேவனே எப்போதும் வெற்றிபெறுகிறார். நாம் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், நேசிப்பதில் தேவனை ஜெயிக்கமுடியாது.

 

தேவனே, உமக்கு செவிகொடுக்கிறேன்

தாயாரின் மடியில் அமர்ந்திருந்த குழந்தை கிரஹாமின் முதல் செவிப்புலன் கருவியை மருத்துவர்கள் அவரது காதில் பொருத்தியபோது, அசௌரியத்தால் நெருக்கப்பட்டான். மருத்துவர் அந்த சாதனத்தை இயக்கிய சில நிமிடங்களில், கிரஹாம் அழுகையை நிறுத்தினான். அவன் கண்கள் விரிந்தன. அவன் புன்னகைத்தான். தனது தாயின் குரல் அவனை ஆறுதல்படுத்துவதையும், ஊக்கப்படுத்துவதையும், அவன் பெயரை அழைப்பதையும் அவனால் கேட்க முடிந்தது.

குழந்தை கிரஹாம் தனது தாய் பேசும் சத்தத்தைக் கேட்டான். ஆனால் அவருடைய குரலை எப்படி அடையாளம் கண்டுகொள்வது என்றும் அவருடைய வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதற்கு அவனுக்கு உதவி தேவைப்பட்டது. இதேபோன்ற கற்றல் செயல்முறைக்கு இயேசு ஜனங்களை அழைக்கிறார். நாம் கிறிஸ்துவை நம் இரட்சகராக ஏற்றுக்கொண்டவுடன், அவர் நன்றாக அறிந்த மற்றும் தனிப்பட்ட முறையில் வழிநடத்துதலை பெறும் ஆடுகளாக மாறுகிறோம் (யோவான் 10:3). நாம் அவருடைய சத்தத்தைக் கேட்பதையும், செவிசாய்ப்பதையும் பயிற்சி செய்யும்போது, நாம் அவரை நம்புவதற்கும் கீழ்ப்படிவதற்கும் பிரயாசப்படுகிறோம் (வச. 4).

பழைய ஏற்பாட்டில், தேவன் தீர்க்கதரிசிகள் மூலம் பேசினார். புதிய ஏற்பாட்டில், மாம்சத்தில் உதித்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்வின் மூலம் ஜனங்களோடு நேரடியாக இடைபட்டார். இன்று நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்தி அவற்றை நேர்த்தியாய் புரிந்துகொள்ளச் செய்யும் தெய்வீக வார்த்தைகளை வேதத்தில் இடம்பெறச்செய்திருக்கும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமைக்கு நாம் பாத்திரவான்களாக்கப்பட்டுள்ளோம். வேதத்தின் மூலமாகவும் அவருடைய ஜனத்தின் மூலமாகவும் இயேசு நம்மிடத்தில் பேசுகிற வேளையில், ஜெபத்தின் மூலம் நாம் அவருடன் தொடர்புகொள்ள முடியும். வேதத்தின் வார்த்தைகளுடன் எப்போதும் ஒத்துப்போகும் தேவனுடைய சத்தத்தை நாம் அடையாளம் காணும்போது, “தேவனே, நான் உம் சத்தத்தைக் கேட்கிறேன்” என்று நன்றியுடன் துதி செலுத்தக்கூடும். 

இராஜ்ய சிந்தை நிறைந்த தலைமைத்துவம்

ஒருவருக்காக ஒருவர் ஜெபித்து, அவரவரின் புத்தகங்களைப் பற்றி பரப்புவதற்கு உதவிய கிறிஸ்தவ குழந்தைகள் புத்தக ஆசிரியர்களின் குழுவில் நான் சேர்ந்தபோது, ​​சிலர் "போட்டியாளர்களுடன் பணியாற்றும் இவர்கள் முட்டாள்கள்" என்றார்கள். ஆனால் எங்கள் குழு இராஜ்ஜிய எண்ணம் கொண்ட தலைமைத்துவத்திற்கும் சமூகத்தை மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது, போட்டிக்கு அல்ல. நாங்கள் ஒரே குறிக்கோளைப் பகிர்ந்துகொண்டோம்; நற்செய்தியைப் பரப்புவது. நாங்கள் ஒரே ராஜாவாகிய இயேசுவைச் சேவித்தோம். ஒன்றாக, கிறிஸ்துவுக்கான சாட்சியுடன் அதிகமான மக்களைச் சென்றடைகிறோம்.

தலைமைத்துவ அனுபவமுள்ள எழுபது மூப்பர்களை தேர்ந்தெடுக்கும்படி தேவன் மோசேயிடம் கேட்டபோது, "நீ ஒருவன் மாத்திரம் ஜனங்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடேகூட அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன்மேல் இருக்கிற ஆவியை அவர்கள்மேலும் வைப்பேன்" (எண்ணாகமம் 11:17) என்றார். பின்னர், யோசுவா இரண்டு மூப்பர்கள் தீர்க்கதரிசனம் சொல்வதைக் கண்டு, மோசேயிடம் அவர்களை நிறுத்தச் சொன்னார். மோசே அதற்கு, "நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே" என்றான் (வ. 29).

போட்டி அல்லது ஒப்பீடுகளில் நாம் கவனம் செலுத்தும் எந்த நேரத்திலும் அது மற்றவர்களுடன் வேலை செய்வதிலிருந்து நம்மைத் தடுக்கிறது, பரிசுத்த ஆவியானவர் அந்தச் சோதனையைத் தவிர்க்க நமக்கு பெலன் அளிக்க முடியும். நம்மில் இராஜ்ய எண்ணம் கொண்ட தலைமைத்துவத்தை வளர்க்கும்படி நாம் தேவனிடம் கேட்கும்போது, ​​அவர் உலகம் முழுவதும் நற்செய்தியைப் பரப்புகிறார், மேலும் நாம் சேர்ந்து அவருக்குச் சேவை செய்யும்போது நம் சுமைகளையும் குறைக்க முடியும்.

தேவனே அவற்றை படைத்தார்

கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி கடற்கரை மீன் கண்காட்சியில் நாங்கள் நுழைந்தபோது எனது மூன்று வயது மகன் சேவியர் என் கையை அழுத்தினான். உயரத்திலிருந்து தொங்கவிடப்பட்ட கூம்பு திமிங்கலத்தின் முழு அளவிலான எலும்புக்கூட்டை காண்பித்து, "எவ்வளவு பெரியது!" என்றான். ஒவ்வொரு காட்சியையும் நாங்கள் ஆராய்ந்து பார்க்கும்போது அவனது ஆச்சரியமான மகிழ்ச்சி பெருகியது. உணவளிக்கும் நேரத்தில் நீர்நாய்களால் தண்ணீர் தெறித்துச் சிதறியதை பார்த்து சிரித்தோம். நீல நீரில் நடனமாடும் தங்க பழுப்பு நிற ஜெல்லிமீன்களால் மயங்கி, ஒரு பெரிய கண்ணாடி மீன்வளச் சாளரத்தின் முன் அமைதியாக நின்றோம். "தேவன் சமுத்திரத்தின் ஒவ்வொரு உயிரினத்தையும் படைத்தார், உன்னையும் என்னையும் படைத்தது போலவே" என்றேன். "ஆஹா" என சேவியர் கிசுகிசுத்தான்.

சங்கீதம் 104 இல், சங்கீதக்காரன் தேவனின் அபரிமிதமான படைப்பை வியந்து, "கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்" (வ. 24) பாடினான். "பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு" (வ. 25) என்று அறிவித்தான். அவர் படைத்த அனைத்திற்கும் தேவனின் தாராளமான மற்றும் திருப்திகரமான போஷிப்புகளை அவன் பறைசாற்றினான் (வ. 27-28). ஒவ்வொன்றின் ஆயுசுநாட்களையும் தேவன் தீர்மானித்துள்ளார் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார் (வ. 29-30).

"நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்" (வ. 33) என்று நாமும் சங்கீதக்காரனோடு இனைந்து அா்ப்பனிப்போடு அறிக்கையிடுவோம். பெரியது முதல் சிறியது வரை ஒவ்வொரு உயிரினமும் நாம் தேவனை புகழ்வதற்கு வழிவகுக்கும், ஏனென்றால் அவை அனைத்தையும் அவரே படைத்தார்.

தேவனின் அன்பு கரங்களில்

மற்றுமொரு வியாதிக்குப்பின், எனக்கு புரியாத என் கட்டுப்பாட்டிலில்லாத ஒரு காரியத்தைக் குறித்து நான் அதிகம் பயந்தேன். ஒருநாள் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கட்டுரையில்,  "பூமியின் சுழற்சி வேகம்" அதிகரித்துள்ளதால் , பூமி "தடுமாறுகிறது" மற்றும் "வேகமாக சுழல்கிறது" என்பதாக விஞ்ஞானிகள் எழுதியிருந்ததை வாசித்தேன். "உலக கடிகார நேரத்திலிருந்து ஒரு விநாடியை அதிகாரப்பூர்வமாக நீக்க வேண்டும்" என்று அவர்கள் கூறினார்கள். ஒரு விநாடி இழப்பு பெரிதாகத் தோன்றவில்லை என்றாலும், பூமியின் சுழற்சி மாறக்கூடும் என்பது எனக்கு ஒரு பெரிய தாக்கத்தைக் கொடுத்தது. சிறிய உறுதியற்ற தன்மை கூட என் விசுவாசத்தைத் தடுமாறச் செய்யும். இருப்பினும், தேவன் அனைத்தையும் ஆளுகிறார் என்பதை அறிவது, நாம் அறியாதவை எவ்வளவு பயமுறுத்துகிறதாயினும் அல்லது நம் சூழ்நிலைகள் எவ்வளவு நிலையற்றதாயினும், தேவனை நம்ப எனக்கு உதவுகிறது.

சங்கீதம் 90-ல் மோசே சொன்னார், "பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்." (வ. 2). எல்லா படைப்பின் மீதும் தேவனின் எல்லையற்ற வல்லமை, கட்டுப்பாடு மற்றும் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டவராக, காலம் தேவனைக் கட்டுப்படுத்த முடியாது என்று மோசே அறிவித்தார் (வ.3-6).

தேவனையும் அவர் உருவாக்கிய அற்புதமான உலகத்தையும் அறிய நாம் முயலும்போது; அவர், காலத்தையும் அனைத்து படைப்பையும் தொடர்ந்து  நேர்த்தியாக ஆளுவதைக்  கண்டுகொள்ளலாம். நமது வாழ்விலும்கூட புரியாத மற்றும் புதிதாக அறிந்த ஒவ்வொரு காரியத்தின் மத்தியிலும், தேவனை நம்பலாம். அவருடைய அனைத்துப் படைப்புகளும் அவரின் அன்பான கரங்களில் பாதுகாப்பாக உள்ளன.

தேவனின் பேரன்பின் சுழற்சி

என் முப்பது வயதில், இயேசுவுக்கு என் வாழ்க்கையை அர்ப்பணித்தபின் புதிய விசுவாசியான என் உள்ளத்தில் அதிக கேள்விகள் இருந்தன. நான் வேதாகமத்தை வாசிக்கத் தொடங்கியபோது, கேள்விகள் இன்னும் அதிகமாயிற்று. "தேவனின் அனைத்து கட்டளைகளுக்கும் எப்படிக் கீழ்ப்படிய கூடும்? நான் இன்று காலைதான் என் கணவரை மனமுடையச் செய்துவிட்டேனே!" என்று ஒரு நண்பரிடம் கேட்டேன்.

"வேதாகமத்தை தொடர்ந்து வாசி, இயேசு உன்னை நேசிப்பது போல நீயும் பிறரை நேசிக்க உதவுமாறு பரிசுத்த ஆவியானவரிடம் மன்றாடு" என்றாள் தோழி.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தேவனுடைய பிள்ளையாக வாழ்ந்த பிறகு, அந்த எளிய ஆனால் ஆழமான சத்தியம் அவருடைய பேரன்பின் சுழற்சியின் மூன்று படிகளை கடைப்பிடிக்க இன்னும் எனக்கு உதவுகிறது: முதலாவதாக, அப்போஸ்தலன் பவுல், இயேசுவை பின்பற்றுவோர் வாழ்வில் அன்பே மையமாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தினார். இரண்டாவதாக, கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் "ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கான கடனை" கடைப்பிடிப்பதின் மூலம், ஆண்டவருக்கு கீழ்ப்படிவார்கள். "பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்." (ரோமர் 13:8). இறுதியாக, "அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது;"(வ.10) என்பதால் இதைச் கடைப்பிடிப்பதின் மூலம் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறோம்.

 

கிறிஸ்து சிலுவையில் நமக்காகப் பலியாகக் கொடுக்கப்பட்டதால் தேவனுடைய பேரன்பை நாம்  அனுபவித்திருப்பதால், நாம் நன்றியுள்ள இருதயத்தோடு இவ்வன்பைப் பிரதிபலிக்க முடியும். இயேசுவுக்கான நமது நன்றியுணர்வு, நமது வார்த்தைகள், செயல்கள் மற்றும் மனப்பான்மைகளால் மற்றவர்களை நேசிக்க வழிவகுக்கிறது. அன்பாகவே இருக்கும் உண்மையான தேவனிடமிருந்தே அந்த மெய்யான அன்பு பாய்ந்தோடுகிறது, (1 யோவான் 4:16,19).

அன்பு தேவனே, உம் பேரன்பின் சுழற்சியினால் இயங்கிட எங்களுக்கு உதவும்!

தொடர்புடைய தலைப்புகள்

> odb

சிறிய வழிகளில்

எல்சி புற்றுநோயால் தாக்கப்பட்டபோது, இயேசுவுடன் பரலோகத்தில் ஜீவிக்க செல்லுவதற்கு தயாராக இருந்தார். ஆனால் அவள் அந்த வியாதியிலிருந்து குணமடைந்தாள். தேவன் ஏன் தன் உயிரைக் காப்பாற்றினார் என்று அவளை யோசிக்க வைத்தது. “நான் என்ன நல்லது செய்ய முடியும்? என்னிடம் அதிக பணமோ திறமையோ இல்லை, என்னால் நடக்க முடியாது. நான் உங்களுக்கு எப்படி பயனுள்ளதாக இருக்க முடியும்?” என்று அவள் தேவனிடம் கேட்டாள். 

பின்னர் மற்றவர்களுக்கு சேவை செய்ய சிறிய, எளிய வழிகளைக் கண்டறிந்தார். அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் அவளுடைய வீட்டை சுத்தம் செய்கிறவர்களின் தேவையை அறிந்தாள். அவள் அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்தாள். அவ்வப்போது பணத்தைக் கொடுத்தாள். இந்த ரொக்கப் பரிசுகள் சிறியதாக இருந்தபோதிலும், அவை தொழிலாளர்களுக்கு உதவி செய்ய நீண்ட தூரம் சென்றன. அவள் அவ்வாறு செய்யும்போது, தேவன் அவளுக்கு கொடுப்பதை அவள் கண்டாள்: நண்பர்களும் உறவினர்களும் அவளுக்கு பரிசுகளையும் பணத்தையும் கொடுத்து மற்றவர்களுக்கு உதவிசெய்ய அவளைத் தூண்டினர்.

அவள் தனது கதையைப் பகிர்ந்து கொண்டபோது, 1 யோவான் 4:19இல் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்ற அழைப்பை எல்சி எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறார் என்பதை என்னால் சிந்திக்க முடியவில்லை: “அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.” மேலும் அப்போஸ்தலர் 20:35, “வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” என்று நினைப்பூட்டுகிறது. 

எல்சி கொடுத்தாள், ஏனென்றால் அவள் தேவனிடத்திலிருந்து பெற்றாள். அவள் கொடுத்ததைப் போலவே ஊக்கமும் பெற்றாள். ஆயினும்கூட, அன்பான, நன்றியுள்ள இதயம் மற்றும் தன்னிடம் இருப்பதைக் கொடுக்கத் தயாராக இருப்பதை விட அவளிடமிருந்து கொஞ்சம் அதிகமாகவே தேவைப்பட்டது. தேவன் கொடுக்கல்-வாங்கல் என்ற நல்லொழுக்க வட்டத்தில் அதிகமாய் அவளை பெருகச்செய்தார். அவர் நம்மை வழிநடத்தும் போது, கொடுத்து உதவ நன்றியுள்ள மற்றும் தாராள மனதைக் கொடுக்கும்படி அவரிடம் கேட்போம்!

 

இயேசு கறைகளை கழுவுகிறார்

வாஷிங் மெஷினில் என்னுடைய சட்டையை தேடி, “நீ என்ன வேடிக்கை காண்பிக்கிறாயா?” என்று உரக்க கத்தினேன். என் சட்டையை கண்டுபிடித்தேன். எனக்கு அதிர்ச்சியாயிருந்தது. 

என் வெள்ளை சட்டையில் மை புள்ளி இருந்தது. மையின் கறைகள் அங்கிருந்த அனைத்து ஆடைகளிலும் பரவியிருந்தது. நான் தெளிவாக என் சட்டை பைகளை சரிபார்க்கவில்லை. அதிலிருந்து கசிந்த ஒரு பேனா மை அனைத்து பாதிப்புகளையும் ஏற்படுத்தியிருந்தது. 

பாவத்தை விவரிக்க வேதம் பெரும்பாலும் கறை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. ஒரு கறை துணியில் ஊடுருவி, அவற்றை அழிக்கிறது. எரேமியா தீர்க்கதரிசி மூலம் தேவன் பாவத்தை விவரித்தார். அதன் கறை அவர்களின் தூய்மைக்கு அப்பாற்பட்டது என்பதை நினைவூட்டுகிறது: “நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும், உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (எரேமியா 2:22). 

அதிர்ஷ்டவசமாக, பாவம் நம்மை முழுவதுமாய் ஆளுகை செய்யப் போவதில்லை. ஏசாயா 1:18ல், பாவத்தின் கறையிலிருந்து நம்மைச் சுத்திகரிக்க முடியும் என்ற தேவனின் வாக்குறுதியை நாம் கேட்கிறோம்: “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.”

என் சட்டையில் இருந்து மை கறையை வெளியே எடுக்க முடியவில்லை. என் பாவத்தின் கறையை என்னால் அகற்றவும் முடியாது. அதிர்ஷ்டவசமாக, 1 யோவான் 1:9 வாக்களித்தபடி, தேவன் நம்மை கிறிஸ்துவில் சுத்திகரிக்கிறார்: “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.”

 

நிஜமாய் வாழுங்கள்

2000 ஆம் ஆண்டில் போதகர் எட் டாப்சனுக்கு ஏ.எல்.எஸ் இருப்பது கண்டறியப்பட்டபோது,ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்காக ஜெபித்தனர். குணமடைய நம்பிக்கையுடன் ஜெபித்தால் செய்தால், தேவன் உடனடியாக பதிலளிப்பார் என்று பலர் நம்பினர். எட்ஸின் தசைகள் சிறிது சிறிதாக சிதைவதற்கு காரணமான நோயுடன் பன்னிரண்டு ஆண்டுகள் போராடிய பிறகு (அவர் இறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு), தேவன் அவரை இன்னும் ஏன் குணப்படுத்தவில்லை என்று நினைக்கிறீர்கள் என்று ஒருவர் அவரிடம் கேட்டார். “நல்ல பதில் என்று ஒன்று இல்லை. அதினால் நான் கேட்கவில்லை” என்று அவர் பதிலளித்தார். அவரது மனைவி லோர்னா மேலும் கூறுகையில், “நீங்கள் எப்போதும் பதில்களைப் பெற வேண்டும் என்று வெறித்தனமாக இருந்தால், நீங்கள் உண்மையில் வாழ முடியாது" என்று சொன்னார்கள். 

எட் மற்றும் லோர்னாவின் வார்த்தைகளில் தேவனுக்கான கனத்தை உங்களால் உணர முடிகிறதா? அவருடைய ஞானம் தங்களுக்கு மேலானது என்பதை அவர்கள் அறிந்தார்கள். இருப்பினும் எட் ஒப்புக்கொண்டார், “நாளைய தினத்தைக் குறித்து கவலைப்படாமல் இருப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.” நோய் அதிகரிக்கும் இயலாமையை ஏற்படுத்தும் என்பதை அவர் புரிந்துகொண்டார். அடுத்த நாள் என்ன புதிய பிரச்சனை வரக்கூடும் என்று அவருக்குத் தெரியவில்லை.

நிகழ்காலத்தில் கவனம் செலுத்த உதவுவதற்காக, எட் இந்த வசனங்களை தனது காரில், குளியலறை கண்ணாடியில், மற்றும் அவரது படுக்கைக்கு அருகில் வைத்தார்: “நான் (கர்த்தர்) உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரெயர் 13:5). அவர் கவலைப்படத் தொடங்கும் போதெல்லாம், அவர் தனது எண்ணங்களை சத்தியத்தின் மீது மீண்டும் ஒருமுகப்படுத்த உதவும் வசனங்களை திரும்பத் திரும்பச் சொல்வார்.

அடுத்த நாள் எதைக் கொண்டு வரும் என்று யாருக்கும் தெரியாது. ஒருவேளை எட் பயிற்சி, நம் கவலைகளை நம்பிக்கையின் வாய்ப்புகளாக மாற்ற நமக்கு உதவிசெய்யக் கூடும்.