தேவன் பார்க்கிறார், புரிந்துகொள்கிறார், பாதுகாக்கிறார்
சில நேரங்களில், நாள்பட்ட வலி மற்றும் சோர்வுடன் வாழ்வது என்பது வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு தனக்கு யாருமில்லை என்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது. தேவனோ அல்லது மற்றவர்களோ என்னை பார்க்கவில்லை என்பதை நான் உணர்ந்தேன். எனது நாயுடன் அதிகாலையில் நான் ஜெபநடை ஏறெடுக்கும்போது, இதுபோன்ற உணர்வுகள் என்னை வெகுவாய் பாதித்தது. தூரத்தில் காற்று நிரப்பப்பட்ட பெரிய பலூன் பறந்து சென்றுகொண்டிருந்ததைப் பார்த்தேன். அதில் பயணம் செய்யும் நபர்கள் பூமியை உயரத்திலிருந்து பார்த்து ரசிக்கமுடியும். நான் என் அயலவர்களின் வீடுகளை நடந்து கடந்தபோது, பெருமூச்சு விட்டேன். அந்த மூடிய கதவுகளுக்குப் பின்னால் எத்தனை பேர் கண்ணுக்குத் தெரியாதவர்களாகவும் முக்கியமற்றவர்களாகவும் உணர்கிறார்கள்? நான் என் நடைப்பயணத்தை முடித்தவுடன், நான் அவர்களைப் பார்க்கிறேன், அவர்களைக் கவனித்துக்கொள்கிறேன் என்பதை என் அண்டை வீட்டாருக்குத் தெரியப்படுத்த எனக்கு வாய்ப்புகளைத் தரும்படி தேவனிடம் கேட்டேன். அவரும் அப்படித்தான்.
தேவன் எத்தனை நட்சத்திரங்களைப் படைத்தார் என்னும் தொகை அவருக்கு தெரியும். ஒவ்வொரு நட்சத்திரங்களையும் அவர் பேர்சொல்லி அழைப்பது (சங்கீதம் 147:5), சிறு விஷயங்களுக்கும் அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காண்பிக்கிறது. அவருடைய வல்லமை, ஞானம், பகுத்தறிவு ஆகியவைகள் காலவரம்பற்றவைகள் (வச. 5).
தேவன் ஒவ்வொரு அவிசுவாசத்தின் அழுகையையும் கேட்கிறார்; ஒவ்வொரு அமைதியான கண்ணீரையும் அவர் தெளிவாகக் காண்கிறார். ஒவ்வொரு திருப்தி பெருமூச்சையும் அவர் அறிந்திருக்கிறார். நாம் எப்போது தடுமாறுகிறோம், எப்போது வெற்றிபெறுகிறோம் என்பதை அவர் பார்க்கிறார். நம்முடைய ஆழ்ந்த அச்சங்களையும், நமது உள்ளார்ந்த எண்ணங்களையும், நம்முடைய பயங்கரமான கனவுகளையும் அவர் புரிந்துகொள்கிறார். நாம் எங்கு இருந்தோம், எங்கு செல்கிறோம் என்பது அவருக்குத் தெரியும். நம் அண்டை வீட்டாரைப் பார்க்கவும், கேட்கவும், நேசிக்கவும் தேவன் நமக்கு உதவுவதால், நம்மைப் பார்க்கவும், புரிந்து கொள்ளவும், கவனித்துக் கொள்ளவும் அவரை முழுமையாய் நம்பலாம்.
இயேசுவைப் போல் நேசித்தல்
ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் ஒரு ரயில் நிலையத்தில் நேர்த்தியாய் உடையணிந்த ஒரு இளைஞன், ஒரு இருக்கையில் அமர்ந்து ரயிலுக்காகக் காத்திருந்தான். அவன் டை கட்டுவதில் சிரமப்பட்டபோது, ஒரு வயதான பெண்மணி தன் கணவரிடம் அவனுக்கு உதவிசெய்யும்படிக்கு கேட்டுக்கொண்டார். அந்த முதியவர் குனிந்து அந்த இளைஞனுக்கு டை முடிச்சு போடுவது எப்படி என்று கற்றுக்கொடுக்க ஆரம்பித்தபோது, யாரோ ஒருவன் மூவரையும் புகைப்படம் எடுத்தான். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலானபோது, அதைப் பார்த்த பலர் பலன் எதிர்பாராமல் உதவிசெய்வதின் முக்கியத்துவத்தைக் குறித்த தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டனர்.
மற்றவர்களுக்கு இரக்கம் காண்பித்தல் என்பது கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில், இயேசு நமக்கு செய்த தியாகமான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. இது தேவனுடைய அன்பின் பிரதிபலிப்பு. மேலும் “நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே” இயேசு சீஷர்களிடம் விரும்பிய ஒரு காரியம். சகோதரனையோ சகோதரியையோ வெறுப்பதை கொலைபாதகத்திற்கு யோவான் சமமாக்குகிறார் (வச. 15). பின்பு இயேசுவையே அன்பின் கிரியைகளுக்கு அவர் மாதிரியாக்குகிறார் (வச. 16).
தன்னலமற்ற அன்பை நிரூபிக்க அதிகப்படியான தியாகத்தை செய்திருக்கவேண்டிய அவசியமில்லை. மாறாக, தேவ சாயலில் படைக்கப்பட்ட சக மனிதனுடைய தேவையை நம்முடைய தேவைக்கு மேலாக வைப்பதே தன்னலமற்ற அன்பாகும். மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யும் வாய்ப்பு கிட்டும் சில முக்கியமான தருணங்களில் தன்னலமற்ற அன்பை பிரதிபலிக்கக்கூடும். நம்முடைய சுகமான சுயநல வட்டத்தை விட்டு வெளியேறி, நாம் செய்ய வேண்டிய அவசியமாய் தெரியாத உதவிகளையும் மற்றவர்களுக்கு செய்யும்போது, நாம் அவர்களை இயேசு நேசிப்பதுபோல் நேசிக்கத் துவங்குகிறோம் என்று அர்த்தம்.
துதியின் கண்ணீர்
சில ஆண்டுகளுக்கு முன்னால் மருத்துவமனையில் மிகுந்த சரீர பெலவீனத்தோடு இருந்த என்னுடைய தாயாரை நான் பராமரிக்கவேண்டியிருந்தது. அவருடைய கடைசி நான்கு மாதங்கள் அவரை பராமரிக்க கர்த்தர் எனக்கு உதவிசெய்தார். அவருடைய இழப்பின் துக்கத்தை தாங்கும்பொருட்டு தேவன் என்னை பெலப்படுத்தவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். என்னுடைய இந்த பல்வேறு போராட்டங்களின் மத்தியில் தேவனை துதிக்க பிரயாசப்பட்டேன். ஆனாலும் என்னுடைய தாயார் தன்னுடைய இறுதி மூச்சை விடும் வேளையில் நான் கட்டுப்பாட்டை மீறி, “அல்லேலூயா” என்ற முணுமுணுத்தேன். சில ஆண்டுகள் கழித்து சங்கீதம் 30ஐ நான் வாசிக்கும் வரையில், அந்த இக்கட்டான வேளையில் நான் தேவனுக்கு நன்றி சொல்லி துதித்ததைக் குறித்து நான் குற்றமனசாட்சியுடன் இருந்தேன்.
ஆலயப் பிரதிஷ்டையின்போது பாடப்பட்ட இந்த சங்கீததத்தில், தாவீது தேவனுடைய கிருபைக்காகவும் இரக்கத்திற்காகவும் நன்றிசெலுத்துகிறார் (வச. 1-3). அவருடைய பரிசுத்த நாமத்தை துதியுங்கள் என்று மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறார் (வச. 4). மேலும் தேவன் கஷ்டத்தையும் நம்பிக்கையையும் எவ்விதம் ஒன்றாகப் பிணைக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார் (வச. 5). துக்கம், மகிழ்ச்சி, பாதுகாப்பு மற்றும் திகைப்பு என்று பல உணர்வுகளை பகிர்கிறார் (வச. 6-7). தேவனுடைய உதவிக்காக ஏறெடுக்கப்பட்ட அவருடைய கதறல்கள், தேவன் மீதான அவருடைய நம்பிக்கையை காண்பிக்கிறது (வச. 7-10). தாவீதின் அழுகை, நடனம், துக்கம் மற்றும் மகிழ்ச்சியின் தருணங்களோடு அவரது துதி சத்தமும் பின்னிப்பிணைக்கப்பட்டுள்ளது (வச. 11). பாடுகளை சகித்துக்கொள்வதின் இரகசியத்தையும், சிக்கலான தன்மையையும் ஒப்புக்கொள்வது போலவும், தேவனுடைய கிருபையை முற்றிலும் சார்ந்துகொண்டு, தாவீது தேவனுக்கு தன்னுடைய பக்தியை பிரதிபலித்தான் (வச. 12).
தாவீதைப் போல நாமும் “என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்” (வச. 12) என்று பாடலாம். நாம் மகிழ்ச்சியாயிருக்கிறோமோ அல்லது காயப்பட்டிருக்கிறோமோ, தேவன் மீதான நம்முடைய நம்பிக்கையை பிரதிபலிக்கச்செய்து, மகிழ்ச்சியான துதி சத்தத்தோடும் கண்ணீரின் துதிகளோடும் அவருக்கு நன்றி செலுத்தக்கடவோம்.
தேவனின் சத்தத்தை அறிதல்
பல வருட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, ஓநாய்கள் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்வதற்குத் தனித்துவமான குரல்களைக் கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் அறிந்துகொண்டனர். ஒரு குறிப்பிட்ட ஒலி பகுப்பாய்வு குறியீட்டைப் பயன்படுத்தி, ஒரு பெண் ஓநாயின் ஊளையில் உள்ள பல்வேறு சப்த அளவுகள் மற்றும் சுருதிகள் குறிப்பிட்ட ஓநாய்களை 100 சதவீத துல்லியத்துடன் அடையாளம் காண உதவியது என்பதை ஒரு விஞ்ஞானி உணர்ந்தார்.
தேவன் தனது பிரியமான படைப்புகளின் தனித்துவமான குரல்களை அறிந்துகொண்டதற்கான பல உதாரணங்களை வேதாகமம் காட்டுகிறது. அவர் மோசேயை பெயர் சொல்லி அழைத்து நேரடியாகப் பேசினார் (யாத்திராகமம் 3:4-6). சங்கீதக்காரன் தாவீது, "நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார்" (சங்கீதம் 3:4) என்று அறிவித்தார். தேவனுடைய ஜனங்கள் அவருடைய குரலை அறிந்துகொள்வதின் அவசியத்தை அப்போஸ்தலன் பவுலும் வலியுறுத்தினார்.
எபேசிய மூப்பர்களிடம் விடைபெறும் போது, எருசலேமுக்குச் செல்லும்படி ஆவியானவர் தன்னை "கட்டாயப்படுத்தினார்" என்று பவுல் கூறினார். தேவனின் சத்தத்தைப் பின்பற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் உறுதிப்படுத்தினார், ஆனால் போகுமிடத்தில் சம்பவிப்பவற்றை அறியாதிருந்தார் (அப்போஸ்தலர் 20:22). "கொடிதான ஓநாய்கள்" சபைக்குள்ளிருந்து கூட "எழும்பி.. மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று" என்று அப்போஸ்தலன் எச்சரித்தார் (வச. 29-30). பின்னர், தேவனுடைய சத்தியத்தைப் பகுத்தறிவதில் இடைவிடாமல் விழித்திருங்கள் அவர் மூப்பர்களை ஊக்குவித்தார் (வச. 31).தேவன் நமக்குச் செவிசாய்த்து பதிலளிப்பார் என்பதை அறிந்துகொள்ளும் பாக்கியம் இயேசுவின் விசுவாசிகள் அனைவருக்கும் உண்டு. பரிசுத்த ஆவியின் வல்லமையும் நம்மிடம் உள்ளது, அவர் தேவனின் குரலை அடையாளம் காண உதவுகிறார், அது எப்போதும் வேத வார்த்தைகளுடன் ஒத்துப்போகிறது.
பாவங்களை களையெடுத்தல்
எங்கள் தாழ்வாரத்தில் தோட்டக் குழாய்க்கு அடுத்ததாக ஒரு தளிர் துளிர்ப்பதை நான் கவனித்தபோது, அதனால் என்னவாகப்போகிறது என்று புறக்கணித்தேன். ஒரு சிறிய களை எப்படி நமது புல்வெளியைக் காயப்படுத்தும்? ஆனால் வாரங்கள் செல்ல செல்ல, அந்த களை ஒரு சிறிய புதரின் அளவு வளர்ந்து எங்கள் முற்றத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அதன் தேவையற்ற தண்டுகள் எங்கள் நடைபாதையின் ஒரு பகுதியில் வளைந்து மற்ற பகுதிகளில் முளைத்தன. அதன் அபாயகரமான வளர்ச்சியைப் புரிந்துகொண்ட நான், என் கணவரின் துணையோடு காட்டுக் களைகளை வேருடன் தோண்டி, களைக்கொல்லியைக் கொண்டு எங்கள் முற்றத்தைப் பாதுகாத்தேன்.
அதேபோலவே பாவத்தின் இருப்பை நாம் புறக்கணிக்கும்போது அல்லது மறுக்கும்போது, அதின் அபாயகரமான வளர்ச்சியால் நமது வாழ்வில் படர்ந்து, நமது அந்தரங்கத்தை இருளாக்கிவிடும். பாவமில்லாத நமது தேவனிடம் எவ்வளவேனும் இருளில்லை. அவருடைய பிள்ளைகளாகிய நாம், பாவங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம், அதனால் நாம் "அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே" (1 யோவான் 1:7) நடக்கலாம். மனந்திரும்புதலின் மூலம், நாம் மன்னிப்பு மற்றும் பாவத்திலிருந்து விடுதலையை அனுபவிக்கிறோம் (வ. 8-10). நமக்காக இயேசுவென்னும் மிகச்சிறப்பாகப் பரிந்துபேசுகிறவர் உண்டு (2:1). அவர் நம் பாவங்களுக்கான இறுதி விலையை மனமுவந்து செலுத்தினார். ”நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற" (வச. 2) அவருடைய ஜீவரத்தமே அந்த கிரயம்.
நம்முடைய பாவம் தேவனால் சுட்டிக்காட்டப்படும்போது, நாம் மறுப்பு, தவிர்ப்பு அல்லது பொறுப்பிலிருந்து விலகுவதைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் நாம் ஒப்புக்கொண்டு மனந்திரும்பும்போது, நாம் அவரோடும் பிறரோடும் கொண்டிருக்கும் உறவிற்குத் தீங்கு விளைவிக்கும் பாவங்களை அவர் களையெடுக்கிறார்.
தாழ்ந்திருப்பினும் தேவனால் நேசிக்கப்படுதல்
ஒரு நாள் சபையில், வருகை தந்திருந்த ஒரு குடும்பத்தை வாழ்த்தினேன். அவர்களோடிருந்த சிறுமியின் சக்கர நாற்காலி அருகே மண்டியிட்டு, எனது வளர்ப்பு நாயான கேலீக்கு அவளை அறிமுகப்படுத்தி, அவளுடைய இனிய தோற்றத்தையும், இளஞ்சிவப்பு கண்ணாடிகள் மற்றும் காலணிகளையும் பாராட்டினேன். அவளால் பேசமுடியாது என்றாலும், அவள் எங்கள் உரையாடலை ரசித்ததாக அவளுடைய புன்னகையே எனக்குச் சொன்னது. எனது புதிய தோழியின் கண்ணில் படுவதைத் தவிர்த்து, மற்றொரு சிறுமி நெருங்கினாள். அவள், "அவளுடைய உடை எனக்குப் பிடிக்கும் என்று அவளிடம் சொல்லுங்கள்" என்று கிசுகிசுத்தாள். நான், “நீயே அவளிடம் சொல்லு. அவள் உன்னைப் போலவே அன்பானவள்" என்றேன். எங்கள் புதிய தோழி வித்தியாசமான முறையில் பேசினாலும், அவளுடன் உரையாடுவது எவ்வளவு எளிது என்பதையும், அவளைப் பார்த்துப் புன்னகைப்பது அவள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் நேசிக்கப்படுவதையும் உணர உதவும் என்பதை விளக்கினேன்.
வேதாகமத்திலும் இந்த உலகத்திலும், மக்கள் பெரும்பாலும் ஒதுக்கப்படுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் மாறுபட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். எவ்வாறாயினும், நமது மகாதேவன் நம் வேறுபாடுகளில் மகிழ்கிறார், அவருடனும் அவருடைய குடும்பத்துடனும் நெருங்கிட நம்மை அழைக்கிறார். சங்கீதம் 138ல் தாவீது, “உம்மை என் முழுஇருதயத்தோடும் துதிப்பேன்; 'தேவர்களுக்கு' முன்பாக உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்" என்றார் (வ.1). அவர், "கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்" (வ.6) என்று கூறுகிறார்.
தேவன், உன்னதர் மற்றும் பரிசுத்தர், அவருடைய சிருஷ்டியாக நம்மை, குறிப்பாக நாம் நம்மைத் தாழ்த்திக் கொள்ளும்போது, கருணையுடன் பார்க்கிறார். நாம் பிறரை அன்பாகப் பார்க்கவும், அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளவும் உதவுமாறு அவரிடம் கேட்கும் அதேநேரம் நாம் தாழ்ந்தவர்களாயினும் அவரால் நேசிக்கப்படுகிறோம் என்பதை உறுதிப்படுத்தியதற்காக அவருக்கு நன்றி சொல்லலாம்!
ஜீவனைக் காட்டிலும் மேல்
மற்றொரு எதிர்பாராத உடல்நலக்குறைவுக்குப் பிறகு, மலைகளில் இளைப்பாறிட என் கணவரோடும் மற்ற குழுவினரோடும் நானும் சேர்ந்துகொண்டேன். அந்த மலையின் உச்சியில் உள்ள சிறிய தேவாலயத்திற்குச் செல்லும் மர படிக்கட்டுகளில் நான் ஏறினேன். இருட்டில் தனியாக, பிளந்திருந்த ஒரு படியில் ஓய்வெடுக்க நின்றேன். இசை தொடங்கியதும், "எனக்கு உதவும், ஆண்டவரே" என்று நான் மெல்லிய குரலில் சொன்னேன். நான் சிறிய அறைக்குள் நுழையும் வரை மெதுவாக நடந்தேன். நீடித்த வலியினுடே சுவாசித்தேன், வனாந்தரத்திலும் தேவன் நமக்குச் செவிகொடுக்கிறார் என்பதற்கு நன்றியோடிருந்தேன்.
தேவனை ஆராதிக்கும் மிக நெருக்கமான தருணங்கள் வனாந்தரத்தில் நிகழ்ந்ததை வேதாகமம் பதிவு செய்கிறது. யூதாவின் வனாந்தரத்தில் மறைந்திருந்தபோதும், அநேகமாக தன் மகன் அப்சலோமிடமிருந்து தப்பி ஓடிக் கொண்டிருக்கும்போது, தாவீது ராஜா இவ்வாறு பாடினார்: “தேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது” (சங்கீதம் 63:1). தேவனின் வல்லமையையும் மகிமையையும் அனுபவித்த தாவீது, தேவனின் அன்பை "ஜீவனைப்பார்க்கிலும்" நல்லது என்று கருதினார் (வ.3), அதுவே அவர் வனாந்தரத்தில் இருந்தபோதும் வாழ்நாள் முழுவதும் ஆராதனை செய்யக் காரணம் (வ.2-6). அவர், “நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன். என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது” (வ.7-8) என்றார்.
தாவீதைப் போலவே, நம்முடைய சூழ்நிலைகள் அல்லது நமக்கு எதிராக நிற்பவர்களின் உறுதியைப் பொருட்படுத்தாமல், தேவனைத் துதிப்பதின் மூலம் தேவனுக்குள்ளான நமது நம்பிக்கையை வெளிக்காட்டலாம் (வ.11). நாம் கஷ்டப்பட்டாலும், சில நேரங்களில் நம்மிடம் தவறு இல்லையென்றாலும், தேவனின் அன்பு எப்போதும் ஜீவனைக்காட்டிலும் நல்லது என்பதை நம்பலாம்.
தேவனுக்கு திருப்பி கொடுத்தல்
ஒரு வருடம், எங்கள் சபையின் தலைவர்கள் எங்கள் வழக்கமான வாராந்திர காணிக்கைகளுக்கு மேலாக, ஒரு புதிய உடற்பயிற்சி கூடத்தைக் கட்டுவதற்குச் சபையாரிடம் கேட்டனர். இது எங்கள் கூடுகையில் உள்ள குடும்பங்களுக்கு ஊழியம் செய்யப் பயன்படும். ஊனத்துடன் வாழ்வதால் உண்டாகும் மருத்துவச் செலவுகளை ஜெபத்துடன் பரிசீலித்த பிறகு, “நாம் இதைச் செய்யக் கூடுமா?” என்று என் கணவரைக் கேட்டேன். அவர் தலையசைத்தார். அவர், "நாம் கொடுப்பதெல்லாம் ஏற்கனவே தேவனுக்குரியவையே, அவர் நமக்குத் தேவையான அனைத்தையும் தருவார்" என்றார். தேவன் செய்தார்! பத்தாண்டிற்குப் பிறகு, எங்கள் சபை குடும்பங்கள் இன்றும் அவ்விடத்தில் மக்களுக்குச் சேவை செய்வதன் மூலம் இயேசுவுக்குச் சேவை செய்யும் பாக்கியம் பெற்றுள்ளனர்.
1 நாளாகமம் 29 இல், தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிசும் ஆலயத்தைக் கட்டப்போகிறவருமான தனது மகன் சாலமோனை ஆதரிப்பதில் தனது உறுதிப்பாட்டை இஸ்ரவேலின் மூப்பர்களுக்கு தாவீது ராஜா காட்டினார் (வ.1-5). எல்லோரும் அதைப் பின்பற்றி, "மனப்பூர்வமாய் கொடுத்தார்கள்" மற்றும் " சந்தோஷப்பட்டார்கள்" (வ.6, 9). தாவீது தேவனைப் புகழ்ந்து, "வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்" என்று அறிவித்தார் (வ.11). அவர்: "எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய பரிசுத்த நாமத்திற்கென்று உமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, நாங்கள் சவதரித்திருக்கிற இந்தப்பொருள்கள் எல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது; எல்லாம் உம்முடையது." (வ.6) என்று ஜெபித்தார்.
தேவன் நமக்குச் செய்த, அளித்த அனைத்தையும், குறிப்பாக இயேசுவுடனான தனிப்பட்ட உறவென்னும் பரிசை நாம் கருதும்போது, சகல நன்மைகளையும் அருளுபவருக்கு நமது ஆராதனையைச் செலுத்தி, தேவனுக்குத் திரும்பக் கொடுப்பதன் மூலம் நமது நன்றியையும் அன்பையும் காட்டலாம்!
உண்மை ஒருபோதும் மாறாது
என் மகன் சேவியர் சிறுவனாக இருந்தபோது, நானும் அவனும் ஒரு கற்பனையான சிறுவர் கதையைப் படித்தோம். அதில் ஒரு சிறுவன் தனது ஆசிரியருக்கு எதிராக, பேனாவிற்கு தானே சொந்தமாக ஒரு மாற்றுப் பெயரை வைக்கிறான். அவன் தனது சக ஐந்தாம் வகுப்பு மாணவர்களைப் பேனாக்களுக்குத் தான் உருவாக்கிய புதிய பெயரைப் பயன்படுத்தச் சொல்கிறான். சிறுவனின் இந்த மாற்றுப் பெயர் பற்றிய செய்தி ஊர் முழுவதும் பரவியது. இறுதியில், நாடு முழுவதும் உள்ள மக்கள் பேனாக்களைக் குறிப்பிடும் முறையை மாற்றிக்கொண்டனர், காரணம் எல்லோரும் ஒரு சிறுவன் ஏற்படுத்திய மாற்றுப் பெயரை உலகளாவிய உண்மையாக ஏற்றுக்கொண்டனர்.
சரித்திரம் முழுவதும், குறையுள்ள மனிதர்கள் மாற்றமடைந்து கொண்டேயிருக்கும் நிஜத்தின் பரிமாணங்கள் அல்லது தங்களுக்குச் சவுகரியமான யதார்த்தங்களை தங்கள் விருப்பங்களுக்கு ஏற்றவாறு தழுவிக்கொண்டனர். இருப்பினும், வேதகமாம் ஒரே சத்தியத்தையும், ஒரே மெய் தேவனையும், இரட்சிப்புக்கான ஒரே வழியையும் சுட்டிக்காட்டுகிறது. அது கிறிஸ்துவே. அவர் மூலமே "கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும்" (ஏசாயா 40:5). சிருஷ்டிக்கப்பட்ட எல்லாவற்றையும் போலவே மனிதர்களும் தற்காலிகமானவர்கள், தவறிழைக்கக்கூடியவர்கள் மற்றும் நம்பத்தகாதவர்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி உறுதிப்படுத்தினார் (வ.6-7). அவர், "புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்" (வ.8) என்றார்.
வரப்போகும் கிறிஸ்துவை பற்றிய ஏசாயாவின் தீர்க்கதரிசனம் நம்பகமான அடித்தளத்தையும், பாதுகாப்பான புகலிடத்தையும், உறுதியான நம்பிக்கையையும் அளிக்கிறது. இயேசுவே வார்த்தையாக இருப்பதால் நாம் தேவனுடைய வார்த்தையை நம்பலாம் (யோவான் 1:1). இயேசுவே என்றும் மாறாத உண்மை.