தாழ்ந்திருப்பினும் தேவனால் நேசிக்கப்படுதல்
ஒரு நாள் சபையில், வருகை தந்திருந்த ஒரு குடும்பத்தை வாழ்த்தினேன். அவர்களோடிருந்த சிறுமியின் சக்கர நாற்காலி அருகே மண்டியிட்டு, எனது வளர்ப்பு நாயான கேலீக்கு அவளை அறிமுகப்படுத்தி, அவளுடைய இனிய தோற்றத்தையும், இளஞ்சிவப்பு கண்ணாடிகள் மற்றும் காலணிகளையும் பாராட்டினேன். அவளால் பேசமுடியாது என்றாலும், அவள் எங்கள் உரையாடலை ரசித்ததாக அவளுடைய புன்னகையே எனக்குச் சொன்னது. எனது புதிய தோழியின் கண்ணில் படுவதைத் தவிர்த்து, மற்றொரு சிறுமி நெருங்கினாள். அவள், "அவளுடைய உடை எனக்குப் பிடிக்கும் என்று அவளிடம் சொல்லுங்கள்" என்று கிசுகிசுத்தாள். நான், “நீயே அவளிடம் சொல்லு. அவள் உன்னைப் போலவே அன்பானவள்" என்றேன். எங்கள் புதிய தோழி வித்தியாசமான முறையில் பேசினாலும், அவளுடன் உரையாடுவது எவ்வளவு எளிது என்பதையும், அவளைப் பார்த்துப் புன்னகைப்பது அவள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் நேசிக்கப்படுவதையும் உணர உதவும் என்பதை விளக்கினேன்.
வேதாகமத்திலும் இந்த உலகத்திலும், மக்கள் பெரும்பாலும் ஒதுக்கப்படுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் மாறுபட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். எவ்வாறாயினும், நமது மகாதேவன் நம் வேறுபாடுகளில் மகிழ்கிறார், அவருடனும் அவருடைய குடும்பத்துடனும் நெருங்கிட நம்மை அழைக்கிறார். சங்கீதம் 138ல் தாவீது, “உம்மை என் முழுஇருதயத்தோடும் துதிப்பேன்; 'தேவர்களுக்கு' முன்பாக உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்" என்றார் (வ.1). அவர், "கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்" (வ.6) என்று கூறுகிறார்.
தேவன், உன்னதர் மற்றும் பரிசுத்தர், அவருடைய சிருஷ்டியாக நம்மை, குறிப்பாக நாம் நம்மைத் தாழ்த்திக் கொள்ளும்போது, கருணையுடன் பார்க்கிறார். நாம் பிறரை அன்பாகப் பார்க்கவும், அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளவும் உதவுமாறு அவரிடம் கேட்கும் அதேநேரம் நாம் தாழ்ந்தவர்களாயினும் அவரால் நேசிக்கப்படுகிறோம் என்பதை உறுதிப்படுத்தியதற்காக அவருக்கு நன்றி சொல்லலாம்!
ஜீவனைக் காட்டிலும் மேல்
மற்றொரு எதிர்பாராத உடல்நலக்குறைவுக்குப் பிறகு, மலைகளில் இளைப்பாறிட என் கணவரோடும் மற்ற குழுவினரோடும் நானும் சேர்ந்துகொண்டேன். அந்த மலையின் உச்சியில் உள்ள சிறிய தேவாலயத்திற்குச் செல்லும் மர படிக்கட்டுகளில் நான் ஏறினேன். இருட்டில் தனியாக, பிளந்திருந்த ஒரு படியில் ஓய்வெடுக்க நின்றேன். இசை தொடங்கியதும், "எனக்கு உதவும், ஆண்டவரே" என்று நான் மெல்லிய குரலில் சொன்னேன். நான் சிறிய அறைக்குள் நுழையும் வரை மெதுவாக நடந்தேன். நீடித்த வலியினுடே சுவாசித்தேன், வனாந்தரத்திலும் தேவன் நமக்குச் செவிகொடுக்கிறார் என்பதற்கு நன்றியோடிருந்தேன்.
தேவனை ஆராதிக்கும் மிக நெருக்கமான தருணங்கள் வனாந்தரத்தில் நிகழ்ந்ததை வேதாகமம் பதிவு செய்கிறது. யூதாவின் வனாந்தரத்தில் மறைந்திருந்தபோதும், அநேகமாக தன் மகன் அப்சலோமிடமிருந்து தப்பி ஓடிக் கொண்டிருக்கும்போது, தாவீது ராஜா இவ்வாறு பாடினார்: “தேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது” (சங்கீதம் 63:1). தேவனின் வல்லமையையும் மகிமையையும் அனுபவித்த தாவீது, தேவனின் அன்பை "ஜீவனைப்பார்க்கிலும்" நல்லது என்று கருதினார் (வ.3), அதுவே அவர் வனாந்தரத்தில் இருந்தபோதும் வாழ்நாள் முழுவதும் ஆராதனை செய்யக் காரணம் (வ.2-6). அவர், “நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன். என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது” (வ.7-8) என்றார்.
தாவீதைப் போலவே, நம்முடைய சூழ்நிலைகள் அல்லது நமக்கு எதிராக நிற்பவர்களின் உறுதியைப் பொருட்படுத்தாமல், தேவனைத் துதிப்பதின் மூலம் தேவனுக்குள்ளான நமது நம்பிக்கையை வெளிக்காட்டலாம் (வ.11). நாம் கஷ்டப்பட்டாலும், சில நேரங்களில் நம்மிடம் தவறு இல்லையென்றாலும், தேவனின் அன்பு எப்போதும் ஜீவனைக்காட்டிலும் நல்லது என்பதை நம்பலாம்.
தேவனுக்கு திருப்பி கொடுத்தல்
ஒரு வருடம், எங்கள் சபையின் தலைவர்கள் எங்கள் வழக்கமான வாராந்திர காணிக்கைகளுக்கு மேலாக, ஒரு புதிய உடற்பயிற்சி கூடத்தைக் கட்டுவதற்குச் சபையாரிடம் கேட்டனர். இது எங்கள் கூடுகையில் உள்ள குடும்பங்களுக்கு ஊழியம் செய்யப் பயன்படும். ஊனத்துடன் வாழ்வதால் உண்டாகும் மருத்துவச் செலவுகளை ஜெபத்துடன் பரிசீலித்த பிறகு, “நாம் இதைச் செய்யக் கூடுமா?” என்று என் கணவரைக் கேட்டேன். அவர் தலையசைத்தார். அவர், "நாம் கொடுப்பதெல்லாம் ஏற்கனவே தேவனுக்குரியவையே, அவர் நமக்குத் தேவையான அனைத்தையும் தருவார்" என்றார். தேவன் செய்தார்! பத்தாண்டிற்குப் பிறகு, எங்கள் சபை குடும்பங்கள் இன்றும் அவ்விடத்தில் மக்களுக்குச் சேவை செய்வதன் மூலம் இயேசுவுக்குச் சேவை செய்யும் பாக்கியம் பெற்றுள்ளனர்.
1 நாளாகமம் 29 இல், தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிசும் ஆலயத்தைக் கட்டப்போகிறவருமான தனது மகன் சாலமோனை ஆதரிப்பதில் தனது உறுதிப்பாட்டை இஸ்ரவேலின் மூப்பர்களுக்கு தாவீது ராஜா காட்டினார் (வ.1-5). எல்லோரும் அதைப் பின்பற்றி, "மனப்பூர்வமாய் கொடுத்தார்கள்" மற்றும் " சந்தோஷப்பட்டார்கள்" (வ.6, 9). தாவீது தேவனைப் புகழ்ந்து, "வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்" என்று அறிவித்தார் (வ.11). அவர்: "எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய பரிசுத்த நாமத்திற்கென்று உமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, நாங்கள் சவதரித்திருக்கிற இந்தப்பொருள்கள் எல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது; எல்லாம் உம்முடையது." (வ.6) என்று ஜெபித்தார்.
தேவன் நமக்குச் செய்த, அளித்த அனைத்தையும், குறிப்பாக இயேசுவுடனான தனிப்பட்ட உறவென்னும் பரிசை நாம் கருதும்போது, சகல நன்மைகளையும் அருளுபவருக்கு நமது ஆராதனையைச் செலுத்தி, தேவனுக்குத் திரும்பக் கொடுப்பதன் மூலம் நமது நன்றியையும் அன்பையும் காட்டலாம்!
உண்மை ஒருபோதும் மாறாது
என் மகன் சேவியர் சிறுவனாக இருந்தபோது, நானும் அவனும் ஒரு கற்பனையான சிறுவர் கதையைப் படித்தோம். அதில் ஒரு சிறுவன் தனது ஆசிரியருக்கு எதிராக, பேனாவிற்கு தானே சொந்தமாக ஒரு மாற்றுப் பெயரை வைக்கிறான். அவன் தனது சக ஐந்தாம் வகுப்பு மாணவர்களைப் பேனாக்களுக்குத் தான் உருவாக்கிய புதிய பெயரைப் பயன்படுத்தச் சொல்கிறான். சிறுவனின் இந்த மாற்றுப் பெயர் பற்றிய செய்தி ஊர் முழுவதும் பரவியது. இறுதியில், நாடு முழுவதும் உள்ள மக்கள் பேனாக்களைக் குறிப்பிடும் முறையை மாற்றிக்கொண்டனர், காரணம் எல்லோரும் ஒரு சிறுவன் ஏற்படுத்திய மாற்றுப் பெயரை உலகளாவிய உண்மையாக ஏற்றுக்கொண்டனர்.
சரித்திரம் முழுவதும், குறையுள்ள மனிதர்கள் மாற்றமடைந்து கொண்டேயிருக்கும் நிஜத்தின் பரிமாணங்கள் அல்லது தங்களுக்குச் சவுகரியமான யதார்த்தங்களை தங்கள் விருப்பங்களுக்கு ஏற்றவாறு தழுவிக்கொண்டனர். இருப்பினும், வேதகமாம் ஒரே சத்தியத்தையும், ஒரே மெய் தேவனையும், இரட்சிப்புக்கான ஒரே வழியையும் சுட்டிக்காட்டுகிறது. அது கிறிஸ்துவே. அவர் மூலமே "கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும்" (ஏசாயா 40:5). சிருஷ்டிக்கப்பட்ட எல்லாவற்றையும் போலவே மனிதர்களும் தற்காலிகமானவர்கள், தவறிழைக்கக்கூடியவர்கள் மற்றும் நம்பத்தகாதவர்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி உறுதிப்படுத்தினார் (வ.6-7). அவர், "புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்" (வ.8) என்றார்.
வரப்போகும் கிறிஸ்துவை பற்றிய ஏசாயாவின் தீர்க்கதரிசனம் நம்பகமான அடித்தளத்தையும், பாதுகாப்பான புகலிடத்தையும், உறுதியான நம்பிக்கையையும் அளிக்கிறது. இயேசுவே வார்த்தையாக இருப்பதால் நாம் தேவனுடைய வார்த்தையை நம்பலாம் (யோவான் 1:1). இயேசுவே என்றும் மாறாத உண்மை.
நம்பத்தகுந்த நமது தகப்பன்
எனது ஆறடி மூன்றங்குலம் உயரமான மகன் சேவியர், சிரித்து குறுநடை போடும் தனது குழந்தையான ஆனந்தை எளிதாக உயரே தூக்கினான். அவன் தனது மகனின் சிறிய கால்களைத் தனது பெரிய கைகளால் சுற்றிப் பிடித்து, அவற்றைத் தனது உள்ளங்கையில் உறுதியாகப் பற்றினான். தன் நீண்ட கையை நீட்டி, தன் மகன் தன்னிச்சையாக சமநிலைப்பட ஊக்குவித்தான், ஆனால் தேவைப்பட்டால் அவனைப் பிடிக்க மற்றொரு கையை தயாராக வைத்திருந்தான். ஆனந்த், கால்களை நிமிர்த்தி நின்றான். பரந்த புன்னகையுடன், கைகளைப் பக்கவாட்டில் வைத்தபடி, அவனது கண்கள் தந்தையின் பார்வையில் பதிந்தன.
நமது பரலோகத் தகப்பன் மீது கவனம் செலுத்துவதன் நன்மைகளை ஏசாயா தீர்க்கதரிசி அறிவித்தார்: “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” (ஏசாயா 26:3). அவரை வேத வாக்கியங்களின் மூலம் தேடுவதற்கும், ஜெபத்தினாலும் ஆராதனையினாலும் அவருடன் இணைந்திருக்கவும் தங்களை அர்ப்பணித்திட தேவஜனங்களை அவர் ஊக்குவித்தார். அத்தகைய உண்மையுள்ளவர்கள், தகப்பனுடனான தங்கள் உறுதியான ஐக்கியத்தின் மூலம் கட்டப்பட்ட ஒரு திடமான நம்பிக்கையை அனுபவிப்பார்கள்.
தேவனின் பிரியமான பிள்ளைகளாகிய நாம், "கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்." (வ.4) என்று தைரியமாக அபயமிடலாம். ஏன்? ஏனென்றால் பரலோகத்தில் இருக்கும் நம்முடைய பிதா நம்பத்தக்கவர். அவரும், அவா் வாா்த்தைகளும் ஒருபோதும் மாறாது.
நாம் நம் பரலோகத் தகப்பன் மீது நம் கண்களைப் பதிக்கும்போது, அவர் நம் கால்களை அவருடைய கரங்களில் உறுதியாக வைப்பார். அவர் எப்போதும் அன்பாகவும், உண்மையாகவும், நல்லவராகவும் இருப்பார் என்று நாம் உறுதி கொள்ளலாம்!
தேவன் நம் கதைகளை உபயோகிக்கிறார்
நான் நினைவுகளுக்காக சேமித்தவற்றின் பெட்டியைத் திறந்து, பத்து வாரக் கருவில் இருக்கும் குழந்தையின் கால்களின் சரியான அளவு மற்றும் வடிவத்தைக் கொண்ட ஒரு சிறிய, வெள்ளி சட்டகத்தை வெளியே எடுத்தேன். பத்து சிறு கால்விரல்களைத் தடவியபடியே, எனது முதல் கருச்சிதைவையும், நான் "அதிர்ஷ்டசாலி, அவ்வளவாய் துன்பப்பட வேண்டியதில்லை" என்று சொன்னவர்களையும் நினைவு கூர்ந்தேன். என் வயிற்றில் ஒருமுறை துடித்த இதயம் போல என் குழந்தையின் பாதங்கள் உண்மையானவை என்பதை அறிந்து நான் துக்கமடைந்தேன். என்னை மனச்சோர்விலிருந்து விடுவித்ததற்காகவும், குழந்தையை இழந்து வருந்தும் மற்றவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகவும் எனது கதையைப் பயன்படுத்தியதற்காகத் தேவனுக்கு நன்றி தெரிவித்தேன். என் கருச்சிதைவுக்கு இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு, நானும் என் கணவரும் இழந்த குழந்தைக்குக் காய் என்று பெயரிட்டோம், சில மொழிகளில் "மகிழ்ச்சி" என்று பொருள். எனது இழப்பால் நான் இன்னும் வேதனைப்பட்டாலும், என் இதயத்தைக் குணப்படுத்தியதற்காகவும், மற்றவர்களுக்கு உதவ எனது கதையைப் பயன்படுத்தியதற்காகவும் தேவனுக்கு நன்றி கூறுகிறேன்.
107-ம் சங்கீதத்தை எழுதியவர், தேவனுடைய மாறாத தன்மையால் களிகூர்ந்து இவ்வாறு பாடினார்: “கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது.” (வ.1). "கர்த்தரால்.. மீட்கப்பட்(டவர்கள்)டு" "அப்படிச் சொல்லக்கடவர்கள்" (வ. 2 ,3), "அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக" (வ. 9) என்று அவர் வலியுறுத்தினார். தேவன் ஒருவரே "தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று" (வ. 8) என்ற வாக்குத்தத்தத்துடன் அவர் நம்பிக்கை அளித்தார்.
கிறிஸ்துவின் சிலுவை பலியின் மூலம் மீட்கப்பட்டவர்களாயினும் கூட, துக்கத்திலிருந்தும் துன்பங்களிலிருந்தும் எவரும் தப்ப இயலாது. எவ்வாறாயினும், தேவனின் இரக்கத்தை நாம் அனுபவிக்க முடியும், ஏனெனில் அவர் நம் கதைகளைப் பயன்படுத்தி மற்றவர்களை தமது மீட்கும் அன்பிற்கு நேராய் நடத்துகிறார்.
தேவன் நமக்கு செவிகொடுக்கிறார்
முதலாம் வகுப்பு படிக்கும் மாணவன் அவசர உதவிக்கான எண்ணை அழைத்தான். அவசரகால ஆபரேட்டர் பதிலளித்தார். “எனக்கு உதவி தேவை" என்றான் சிறுவன். ஒரு பெண் அறைக்குள் நுழைந்து, "ஜானி, நீ என்ன செய்கிறாய்?" என்று கேட்கும் வரை, ஆபரேட்டர் அவனுக்கு உதவினார். ஜானி தனது கணித வீட்டுப்பாடத்தை செய்ய முடியாது என்று விளக்கினான். எனவே அவனுக்கு உதவி தேவைப்படும்போதெல்லாம் உதவி எண்ணை தொடர்புகொள் என்று அவனது தாயார் கற்றுக் கொடுத்ததைச் செய்தான். அவசர எண்ணை அழைத்தான். ஜானிக்கு, வீட்டுப்பாடத்தை செய்வதே தற்போதையை தேவையாய் இருந்தது. கருணையுடன் கேட்கும் அந்தச் சிறுவனின் வீட்டுப் பாடங்களுக்கு உதவுவதே அந்தத் தருணத்தில் முதன்மையானதாய் இருந்தது.
சங்கீதக்காரனாகிய தாவீதுக்கு உதவி தேவைப்பட்டபோது, “கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்” (சங்கீதம் 39:4). தேவனை “நீரே என் நம்பிக்கை” (வச. 7) என்கிறார். “என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்” (வச. 12) என்று கெஞ்சுகிறார். பின்னர் தன்னிடத்தில் பொறுமையாயிருக்கும்படிக்கு தாவீது தேவனிடத்தில் மன்றாடுகிறார் (வச. 13). தாவீதின் தேவைகள் பேசப்படாவிட்டாலும், வேதாகமம் முழுவதும் தேவன் தன்னுடன் இருப்பார் என்றும், தன்னுடைய ஜெபங்களைக் கேட்டு பதிலளிப்பார் என்றும் தாவீது அறிவித்தார்.
கர்த்தருடைய நிலைத்தன்மையில் நாம் வைத்திருக்கும் நம்பிக்கையானது, நமது நிலையற்ற உணர்வுகளைச் செயல்படுத்த அனுமதிக்கிறது. அதே சமயம் மாறாத ஒரு தேவனுக்கு மிகப் பெரிய அல்லது சிறிய கோரிக்கை என்று எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. அவர் நமக்குச் செவிசாய்க்கிறார், நம்மீது அக்கறை காட்டுகிறார், நாம் செய்யும் ஒவ்வொரு ஜெபத்திற்கும் பதிலளிக்கிறார்.
அதிகம் இயேசுவைப் போலத் தோன்றுதல்
தேவன் பெரிய சாம்பல் ஆந்தையை உருமறைப்பில் வல்லதாக வடிவமைத்துள்ளார். அதன் வெள்ளியும் சாம்பலுமான இறகுகள் ஒரு வண்ணமயமான வடிவ அமைப்பைக் கொண்டுள்ளன, இது அவை மரங்களில் அமரும் போது அவற்றின் பட்டையுடன் இரண்டற கலக்க உதவுகிறது. ஆந்தைகள் தன்னை மறைத்துக்கொள்ள விரும்பினால், அவை மேலான பார்வையிலிருந்து ஒளிந்துகொள்கின்றன, அவற்றின் இறகு உருமறைப்பு உதவியுடன் அவற்றின் சூழலோடு ஒன்றாகக் கலக்கின்றன.
தேவஜனங்களும் பெரும்பாலும் பெரிய சாம்பல் ஆந்தையைப் போன்றவர்களே. விருப்பத்தோடு அல்லது விருப்பமின்றியே எவ்வாறாயினும் நாமும் உலகத்தோடு எளிதில் கலந்து, கிறிஸ்துவின் விசுவாசிகளுக்கான அடையாளத்தை மறைக்க முடியும். பிதாவானவரால்
"உலகத்தில் தெரிந்தெடுத்து" அவருக்காகத் தரப்பட்டவர்களும், தம்முடைய "வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறவர்களுமான" தமது சீடர்களுக்காக (யோவான் 17:6) இயேசு ஜெபித்தார். குமாரனாகிய தேவன், பிதாவாகிய தேவனிடம் தாம் அவர்களை விட்டுப் பிரிந்த பிறகு, அவர்களைப் பரிசுத்தத்திலும் நிலைத்திருத்தலிலும் சந்தோஷமாக வாழ அவர்களைப் பாதுகாத்து அதிகாரமளிக்கும்படி வேண்டினார் (வ. 7-13). அவர் கூறினார், "நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்" (வ. 15). தம்முடைய சீஷர்கள் பரிசுத்தமாக்கப்பட்டு, பிரித்தெடுக்கபட வேண்டும் என்பதை இயேசு அறிந்திருந்தார், அதனால் அவர் அவர்களை நிறைவேற்றும்படி அனுப்பிய நோக்கத்தை அவர்களால் நிறைவேற்ற முடியும் (வ. 16-19).
உலகத்துடன் கலக்கும் உருமறைப்பில் சிறந்தவர்களாக மாறும்படியான தூண்டுதலிலிருந்து மீள, பரிசுத்த ஆவியானவரால் நமக்கு உதவ முடியும். நாம் தினமும் அவருக்கு அடிபணியும்போது, நாம் அதிகம் இயேசுவைப் போல மாற முடியும். நாம் ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழும்போது, அவர் தமது சகல மகிமையோடும் பிறரை கிறிஸ்துவிடம் இழுப்பார்.
கிரியையில் அன்பு
கணவனைப் பிரிந்த அந்த தாயார், ஐந்து வருடங்களுக்கும் மேலாக நற்குணசாலியான முதியவரின் வீட்டருகே வசித்து வந்தார். ஒரு நாள், அவள் நலனில் அக்கறை கொண்டு, அவள் வீட்டுக் கதவைத் தட்டினார். "ஒரு வாரமாக உன்னைப் பார்க்கவில்லையே, உன்னை நலம் விசாரிக்கவே வந்தேன்" என்று அவர் கூறினார். அவரது "கரிசனையான விசாரிப்பு" அவளை ஊக்கப்படுத்தியது. சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால், தன்னையும் தன் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளும் அன்பான மனிதனைப் பாராட்டினாள்.
இலவசமாகக் கொடுப்பதற்கும் விலையேறப்பெற்றதாய் பெறுவதற்குமான இரக்கம் எனும் வெகுமதியால், வெறுமனே நலலவர்களாக இருப்பதைக் கடந்து கிறிஸ்துவின் அன்பைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் பிறருக்கு ஊழியம் செய்கிறோம். எபிரேயரின் எழுத்தாளர், இயேசுவை விசுவாசிப்பவர்களிடம், “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்” (எபிரெயர் 13:15) என்றார். பின்னர் தங்கள் விசுவாசத்தை வாழ்ந்து காண்பிக்கும் பொருட்டு, "அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்" (வ. 16) என்று ஆக்கியோன் எழுதினார்.
இயேசுவின் நாமத்தை அறிக்கையிட்டு, அவரை ஆராதிப்பது மகிழ்ச்சியும் பாக்கியமும் ஆகும். ஆனால் இயேசுவைப் போல நாம் அன்பு செலுத்தும்போது, தேவன் மீதான உண்மையான அன்பை வெளிப்படுத்துகிறோம். நம் சொந்தக் குடும்பங்களுக்குள்ளும் அதற்கு அப்பாலும் பிறரை நன்றாக நேசிக்க நம்மை ஆற்றல் படுத்தவும், அப்படிப்பட்ட வாய்ப்புகள் குறித்து உணர்வுள்ளவர்களாக்கவும் பரிசுத்த ஆவியானவரிடம் மன்றாடலாம். அத்தகைய ஊழிய தருணங்களின் மூலம், கிரியை செய்யும் அன்பின் வல்லமையான செய்தியின் மூலம் இயேசுவைப் பகிர்ந்து கொள்வோம்.