எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ரெமி ஓயேடெல்கட்டுரைகள்

பூரண வாழ்வு

பதினேழாம் நூற்றாண்டு தத்துவ ஞானி தாமஸ் ஹாப்ஸ் என்பவர், “மனித வாழ்வு இயற்கையிலேயே தனிமையானது, மோசமானது, ஏழ்மையானது, முரட்டுத்தனமானது மற்றும் குறுகியது” என எழுதினார். மேலும் மற்றவரைக் காட்டிலும் நாம் உயர வேண்டும் என்ற உள் நோக்கத்தினால், சண்டையிடும் தூண்டுதலைக் கொண்டுள்ளது என்றார். எனவே, சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட ஓர் அரசாங்கம் தேவை என்றார்.

மனிதகுலத்தைப் பற்றிய இந்த இருண்ட கருத்து, இயேசு கூறியவற்றை விளக்குவதாக உள்ளது. “எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக் காரருமாயிருக்கிறார்கள்” (யோவா.10:8) என்று இயேசு கூறுகின்றார். ஆனால், விரக்தியின் மத்தியில் இயேசு நம்பிக்கையைத் தருகின்றார். “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறோன்றுக்கும் வரான்” என்கின்றார், ஆனால், தேவன் நற்செய்தியைத் தருகின்றார். “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் அது பரிபூரணப்படவும் வந்தேன்” (வ.10) என்கின்றார்.

மேய்ப்பனானவர் தன் ஆடுகளுக்கு கொடுக்கும் புதிய வாழ்வைப் பற்றி சங்கீதம் 23, காட்டுகின்றது. அவர் நம்மோடு இருக்கும் போது நமக்கு குறைவு ஒன்றும் ஏற்படுவதில்லை (வ.1), நாம் புத்துணர்ச்சி பெறுகின்றோம் (வ.3). அவர் தன்னுடைய சித்தத்திற்கு நேராக, சரியான பாதையில் நம்மை நடத்துகின்றார், ஆகையால் நம்முடைய வாழ்வின் இருண்ட வேளைகளிலும் நாம் பயப்படத்தேவையில்லை. அவர் நம்மைத் தேற்றும்படி, நம்மோடு இருக்கின்றார் (வ.3-4). நாம் துன்பங்களைச் சந்திக்கும் போது, அவற்றை வெற்றியாக முடியப் பண்ணுகின்றார், நம்மை அவருடைய ஆசீர்வாதங்களால் நிரப்புகின்றார் (வ.5). ஒவ்வொரு நாளும் அவருடைய அன்பும் நன்மையும் நம்மைத் தொடரும். அவருடைய பிரசன்னம் எப்பொழுதும் நம்மோடிருக்கும் பாக்கியத்தை நாம் பெற்றுள்ளோம் (வ.6).

மேய்ப்பனின் குரலுக்கு நாம் செவி கொடுப்போம். அவர் நம்மோடு இருந்து நமக்குத் தரும் செழிப்பான பரிபூரண வாழ்வை நாம் பெற்று,      அநுபவிப்போம்.

நன்கு அளக்கப் பட்டது

ஸ்டெல்லா, ஒரு நாள், ஒரு பெட்ரோல் நிரப்பும் மையத்தில் ஒரு பெண்ணைச் சந்திக்கின்றாள், அவள் தன்னுடைய வீட்டில் வங்கி அட்டையை விட்டு விட்டு வந்திருந்தாள். தன்னுடைய குழந்தையோடு, தனித்து விடப்பட்டவளாய், அங்கு வருபவர்களிடம் உதவி கேட்டாள். அந்நேரத்தில் வேலையில் இல்லாதிருந்தும், ஸ்டெல்லா அவளுக்கு ரூபாய் 500 செலவளித்தாள், அறிமுகமில்லாத அப்பெண்ணுடைய வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்ப உதவினாள். அநேக நாட்களுக்குப் பின், அவள் வீட்டிற்குத் திரும்பிய போது, ஒரு பரிசுக் கூடையில் சிறுவருக்கான விளையாட்டுப் பொருட்களும், மற்றும் சில பொருட்களும் அவளுடைய வீட்டின் தாள்வாரத்தில் காத்திருந்தது. அந்த அறியாத நபரின் நண்பர்கள், ஸ்டெல்லாவின் இரக்கத்தை, மறக்கமுடியாத கிறிஸ்மஸ் பரிசுகளின் மூலம், அவளுடைய 500 ரூபாயை ஆசிர்வாதமாக மாற்றியுள்ளனர்.

இருதயத்தை மகிழ்விக்கும் இந்த கதை, இயேசு கூறிய, “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப் படும்” (லூக். 6:38) என்ற வார்த்தைகளை நினைவு படுத்துகின்றது.

இதைக் கேட்கும் போது, நமக்கும் கொடுக்கும் போது என்ன கிடைக்கும் என்பதில் கவனம் செலுத்த தோன்றும், ஆனால் அப்படிச் செய்யும் போது, நாம் கொடுத்தலின் உண்மையை இழந்து விடுவோம். இயேசு இந்த வார்த்தைகளைக் கூறுவதற்கு முன்பு, “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மை செய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாய் இருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே” (வ.35) என்று கூறியுள்ளார்.

நாம் பொருட்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக கொடுப்பதில்லை; நாம் கொடுக்கின்றோம், ஏனெனில், தேவன் நம்முடைய தாராள ஈகையில் பிரியமாயிருக்கின்றார். நாம் பிறர்மேல் செலுத்தும் அன்பு, தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பைக் காட்டுகின்றது.

அடுத்து வருவது என்ன?

1968 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 3ஆம் நாள் இரவில், முனைவர். மார்டின் லுத்தர் கிங் கடைசி உரையை ஆற்றிய போது, “நான் மலையின் உச்சிக்கு சென்று விட்டேன்” என்றார். அதன் மூலம் அவர் தான் அதிக நாட்கள் வாழப்போவதில்லை என்பதைத் தெரிவித்தார். மேலும் அவர், “நாம் இன்னமும் கடினமான நாட்களைச் சந்திக்க நேரிடும், ஆயினும் அது என்னை எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை. ஏனெனில் நான் மலையின் உச்சியில் இருக்கிறேன், நான் மேலே வாக்களிக்கப்பட்ட தேசத்தைக் காண்கின்றேன். நான் உங்களோடு அங்கு செல்வதில்லை……ஆனால் நான் இந்த இரவில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். நான் எதைக் குறித்தும் கவலைப் படவில்லை, எந்த மனிதனைக் குறித்தும் பயப்படவில்லை, என்னுடைய கண்கள் தேவனுடைய வருகையின் மகிமையைக் கண்டது” என்றார். மறு நாளில் அவர் கொலை செய்யப்பட்டார்.

அப்போஸ்தலனாகிய பவுலும் தன்னுடைய மரணத்திற்கு முன்பாக தன்னுடைய சீஷனான தீமோத்தேயுவிற்கு எழுதும் போது, “நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப் பட்டுப் போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது… இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்” (2 தீமோ. 4:6,8) என்கின்றார். இப்பூமியில் அவருடைய வாழ்நாள் நிறைவடையப் போகின்றது என்பதை முனைவர்.கிங் அறிந்திருந்ததைப் போல, பவுலும் அறிந்திருந்தார். இருவருமே வாழ்வில் நம்பமுடியாத அளவு முக்கியத்துவத்தை உணர்ந்த போதும் தங்களுக்கு முன்பாக வைக்கப் பட்டிருந்த நித்திய வாழ்வைக் குறித்த தரிசனத்தைப் பெற்றிருந்தனர். இருவருமே அடுத்தபடியாக தங்களுக்கு நடக்க இருந்ததை வரவேற்றனர்.

இவர்களைப் போன்று நாமும் நம்முடைய கண்களை, “காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கி” திருப்புவோமாக, “ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்” (2 கொரி. 4:18).

விலையேறப்பெற்ற பிரிவு

மிகவும் புகழ்ச்சி பெற்ற சிற்ப கலைஞரான லிஸ் ஷெப்பர்ட், தன்னுடைய சிற்பங்களையெல்லாம் பார்வைக்கு வைத்தார். மரணப் படுக்கையில் இருந்த தன்னுடைய தந்தையோடு தான் செலவிட்ட, அதிமுக்கியமான அந்த விலையேறப்பெற்ற கடைசி நேரத்தைக் குறித்து அந்தக் காட்சிப் பொருட்களில் தெரிவித்திருந்தாள். அது வெறுமையையும், இழப்பையும் குறித்து வெளிப்படுத்தியது. நீ மிகவும் நேசிக்கும் நபர்கள் இப்போது நாம் போய் பார்க்க முடியாத இடத்தில் இருக்கின்றனர் என்ற உணர்வைக் காட்டியது.

மரணம் விலையேறப் பெற்றது என்ற கருத்து நம்முடைய எண்ணங்களுக்கு மாறானதாகத் தோன்றலாம். “கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது” (சங். 116:15) என சங்கீதக்காரன் கூறுகின்றார். தேவன் அவருடைய பிள்ளைகளின் மரணத்தை பொக்கிஷமாகக் கருதுகின்றார், அவர்கள் இந்த உலகத்தைவிட்டு கடந்து செல்லும் போது, தேவன் அவர்களை தன்னுடைய வீட்டிற்கு வரவேற்கிறார்.

தேவனுக்கு உண்மையான ஊழியக்காரர் (பரிசுத்தவான்கள்) என்று அழைக்கப்படுபவர்கள் யார்? தேவன் அவர்களை மீட்டுக்கொண்டதால், நன்றியோடு அவருக்குப் பணிபுரிபவர்கள், அவருடைய பெயரைச் சொல்லி கூப்பிடுபவர்கள், அவருடைய சமுகத்தில், தாங்கள் பேசுகின்ற வார்த்தைகளை நிறைவேற்றுகின்றவர்கள் (சங். 116:16-18) என சங்கீதக்காரன் கூறுகின்றார். இவர்கள் தேவனோடு நடக்கும்படி தெரிந்துகொண்டவர்கள், அவர் தந்த விடுதலையைப் பெற்றுக் கொண்டவர்கள், அவரோடுள்ள உறவில் வளரும்படி தங்களை பழக்கிக் கொண்டவர்கள்.

இப்படிச் செய்கின்றவர்கள் எப்பொழுதும் “தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டதும், விலையேறப் பெற்றதுமாயிருக்கிற” தேவனோடு இருப்பார்கள். “இதோ, தெரிந்து கொள்ளப்பட்டதும், விலையேறப் பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அதின் மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை” என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது (1 பேது. 2:4-6). நாம் தேவன் பேரில் நம்பிக்கையாயிருக்கும் போது, இவ்வுலக வாழ்வை விட்டு நாம் பிரிந்து செல்வது அவருடைய பார்வையில் அருமையாயிருக்கும்.

தேவனுடைய உண்மைத் தன்மை

சி.எஸ். லுவிஸ் எழுதிய நார்னியாவின் நடபடிகள் என்ற புத்தகத்திலுள்ள கதையில், அநேக ஆண்டுகளுக்குப் பின், ஆஸ்லான் என்ற வல்லமையுள்ள சிங்கம் திரும்பி வந்த போது, நார்னியாவிலுள்ள சிங்கமும், அனைத்து விலங்குகளும், சூனியக்காரியும் அவளுடைய அலமாரியும் நடுங்கின. அவர்களின் மகிழ்ச்சி துயரமாக மாறியது. வெள்ளை சூனியக்காரி, கடைசியாகக் கேட்டுக்கொண்ட வேண்டுகோளை ஆஸ்லான் கொடுத்தபோதும், அவள் தோற்கடிக்கப்பட்டாள். ஆஸ்லான் உறுமியபோது அனைவரின் செவிகளும் பிளக்கும் அளவுக்கு வல்லமையுடையதாக இருந்ததால், நார்னியாவிலுள்ள அனைவரும் ஆஸ்லானின் பெலத்தையுணர்ந்தனர், அத்தோடு அந்த சூனியக்காரியும் பயத்தில் ஓடிவிட்டாள். எல்லாவற்றையும் இழந்து விட்டதைப் போன்று காணப்பட்டாலும், அசுரத்தனமான அந்த சூனியக் காரியைக் காட்டிலும், ஆஸ்லான் சர்வ வல்லமை பொருந்தியவன் என்பதை நிரூபித்தான்.

லூவிஸ்ஸின் கதையில் வரும் ஆஸ்லானின் சீடர்களைப் போன்று, ஒரு நாள் காலை எலிசாவின் வேலைக்காரன் எழுந்தபோது, அவனும் எலிசாவும் தங்கியிருக்கிற மலையைச் சுற்றிலும் எதிரியின் படைகள் சூழ்ந்திருக்கிறதைக் காண்கின்றான். அப்பொழுது வேலைக்காரன், “ஐயோ, என் ஆண்டவனே, என்ன செய்வோம்” என்றான் (2 இரா. 6:15). அப்பொழுது தீர்க்கதரிசி மிகவும் அமைதியாக பதிலளிக்கிறார். “பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்” (வச. 16) என்றார். பின்னர் எலிசா தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணி, “கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும்” என்றார் (வச. 17). “உடனே கர்த்தர் அந்த வேலைக்காரனின் கண்களைத் திறந்தார். இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும், இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்” (வச. 17). முதலில் வெறுமையைக்கண்ட வேலைக்கரனின் கண்களை, சர்வ வல்ல தேவன் எதிரியின் படைகளைக் காட்டிலும் அதிகமான வீரர்களைக் காணும்படிச் செய்தார்.

நம்முடைய கடினமான வேளைகள், நாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என  நம்பும்படிச் செய்யலாம். ஆனால் நம்முடைய கண்களைத் திறந்து, அவர் சர்வ வல்லவர் என்பதைக் காணும்படி தேவன் விரும்புகின்றார்.

தேவன் தலையிடும் போது

“இந்தக் குழந்தை அருமையானது” (This Child is Beloved) என்ற தலைப்பில் வரும் கவிதையில், ஒரு அமெரிக்க போதகர், அவரை அவருடைய பெற்றோர், கருவிலேயே அழித்து விட எண்ணியும் அவர் பிறந்து விட்ட கதையை எழுதுகின்றார். அநேக எதிர்பாராத நிகழ்வுகள், அவரைக் கருவில் அழித்துவிடாதபடி தடுத்தது. கடைசியாக பெற்றோர், அக்குழந்தையை வரவேற்கத் திட்டமிட்டனர். தேவன் அவருடைய உயிரைப் பாதுகாக்க எண்ணினார் என்பதையறிந்த அவர், வருமானம் ஈட்டக் கூடிய தன்னுடைய எதிர்காலத்தை தள்ளிவிட்டு, முழு நேர ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்தார். இன்றைக்கு அவர், லண்டனிலுள்ள ஓர் ஆலயத்தில் உண்மையுள்ள போதகராகப் பணியாற்றுகின்றார்.

இஸ்ரவேலர்களின் சரித்திரத்தைப் பார்க்கும் போது, இந்த போதகரைப் போன்று, இவர்களின் கைவிடப்பட்ட நிலையின்போதும், தேவன் தலையிட்டுச் செயல் படுவதைக் காண்கின்றோம். அவர்கள், வனாந்திரத்தில் பிரயாணம் பண்ணி, மோவாப் எல்லையினருகில் வந்த போது, மோவாப்பின் ராஜா பாலாக் பார்க்கின்றான். அவர்களின் எண்ணிக்கையும், அவர்கள் பிற நாடுகளைக் கைப்பற்றியதையும் கண்ட போது, மிகவும் பயந்து, பிலேயாம் என்ற குறிசொல்கிறவனைத் தங்களுக்கு அமர்த்தி, இந்த எதிர்பராத கூட்டத்தினைச் சபிக்குமாறு கூறுகின்றான் (எண். 22:2-6).

ஆனால், வியத்தகு காரியம் அங்கு நடைபெற்றது. பிலேயாம், அவர்களைச் சபிக்கும் படி வாயைத் திறந்த போதெல்லாம், அவர்களை ஆசீர்வதித்தான், “ இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளைப் பெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது,” என்றான். மேலும், “அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதுமில்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்;………தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணினார்” (எண்.23:20-22). அவர்களுக்கு  எதிராக ஒரு யுத்தம் எழும்பிக் கொண்டிருப்பதைக்கூட அறியாத இஸ்ரவேலரை, தேவன் பாதுகாக்கின்றார்! 

நாம் பார்க்கின்றோமோ இல்லையோ,  இன்றைக்கும், தேவன் அவருடைய பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டேயிருக்கின்றார். நம்மை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றழைக்கும் நம்முடைய ஆச்சரியமான தேவனை, நாம் நன்றியோடு ஆராதிப்போம்.

நேர்த்தியாக வைக்கப்பட்டுள்ளது

நாம் வசிக்கும் கிரகம், சூரியனிலிருந்து  துல்லியமாக, மிகச்சரியான தொலைவில் இருப்பதால், அதன் வெப்பத்தின் சரியான பலனைப் பெற முடிகிறது. இன்னும் சற்று நெருங்கினால், புதனில் நடப்பது போன்று, பூமியிலுள்ள தண்ணீர் யாவையும் ஆவியாகி விடும். இன்னும் சற்று தள்ளிப் போனால், செவ்வாய் கிரகத்தில் நடப்பது போன்று, அனைத்தும் உறைந்து போகும். சரியான அளவு ஈர்ப்பு விசையை உருவாக்கும் படி, புவியின் உருவ அளவு அமைந்துள்ளது. ஈர்ப்பு விசை குறைவாக இருந்தால், நிலவில் உள்ளது போல எந்த உயிரினமும் வாழமுடியாமல் போய் விடும், அதிக ஈர்ப்பு விசை இருந்தால், நச்சு வாயுக்கள் எல்லாம் ஈர்க்கப்பட்டு, வியாழனில் உள்ளது போல் உயிரினங்கள் சுவாசிக்க முடியாத வளிமண்டலமாகி விடும்.

இயற்பியல், வேதியல், மற்றும் உயிரியலின் நுணுக்கமான பிணைப்புகளால் அமைந்துள்ள இவ்வுலகம், அதிநவீன படைப்பாளரின் கைத்திறனைக் காட்டுகின்றது. நாம் புரிந்து கொள்ள முடியாத காரியங்களைக் குறித்து, தேவன் யோபிடம் பேசும் போது, நாம் இந்த சிக்கலான  கைவினையின் ஒரு சிறிய பகுதியைப் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. “நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிற போது, நீ எங்கேயிரு ந்தாய்?.....அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல் போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு. அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்?” (யோபு 38:4-6) என தேவன் யோபுவிடம் கேட்டார். 

பரந்து விரிந்துள்ள படைப்புகளும், புவியின் மகா சமுத்திரங்களும், “கர்ப்பத்திலிருந்து உதிக்கிறது போல் சமுத்திரம் புரண்டு வந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவரும்,…….இம்மட்டும் வா, மிஞ்சி வராதே.” (வ.8-11) என்றவருக்கு முன்பாக வணங்கி நிற்கிறதைக் காணும் போது, நம்மை வியக்கச் செய்கிறது. நம்மை வியக்கச் செய்யும், விடியற்காலத்து நட்சத்திரங்களின் பாடல்களோடு, நாமும் பாடுவோம், தேவ புத்திரரோடு சேர்ந்து நாமும் மகிழ்ச்சியோடு ஆர்ப்பரிப்போம். (வ.7), ஏனெனில் இந்த அகன்ற உலகத்தை தேவன் நமக்காகவே உருவாக்கியுள்ளார் என்பதைத் தெரிந்து கொண்டு, அவர் மீது நம்பிக்கையோடிருப்போம்.

கொடுப்பவரின் மகிழ்ச்சி

டிக்கிள் மீ எல்மோ(Tickle Me Elmo), காபேஜ் பாட்ச் கிட்ஸ் (Cabbage Patch Kids ), த ஃபர்பீ (The Furby) இவையெல்லாம் என்னவென்று நினைவிருக்கின்றதா ? இவையெல்லாம், கிறிஸ்மஸ் காலத்தில், சிறுவர்களுக்கு கொடுக்கப்படும் பிரசித்திப் பெற்ற வெகுமதிகள். இந்த வரிசையில் வரும் வேறு சில வெகுமதிகள்- மோனோபோலி, நைன்டென்டோ கேம் பாய், மற்றும் வீ என்ற விளையாட்டுகள்.

நாமெல்லாருமே கிறிஸ்மஸ் காலத்தில் வெகுமதிகள் கொடுப்பதில் மகிழ்ச்சியடைவோம். ஆனால் முதல் கிறிஸ்மஸ் அன்று, தேவன் கொடுத்த வெகுமதியின் மூலம், அவர் அடைந்த மகிழ்ச்சியை ஒப்பிடவே முடியாது. இந்த பரிசு, ஒரு குழந்தையாக, பெத்லகேமில், ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தது (லூக். 2:7).

அவர் தாழ்மையாகப் பிறந்த போதிலும், அவருடைய பிறப்பை தேவதூதன் அறிவித்தான். அந்த தூதன், “பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” (வச. 10-11), என்றான். இந்த அற்புத செய்திக்குப் பின்னர், “பரம சேனையின் திரள்”  தோன்றி, “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக,” என்று தேவனைத் துதித்தார்கள் (வச. 13-14).

இந்த கிறிஸ்மஸ் காலத்தில், நீங்கள் நேசிக்கும் நபர்களுக்கு பரிசுகளைக் கொடுத்து மகிழுங்கள், ஆனால் எதற்காக வெகுமதிகளைக் கொடுக்கிறோம் என்பதைக் காணத் தவறிவிடாதிருங்கள். தேவன் நமக்குத் தந்த மிகப் பெரிய நற்கொடை, அவருடைய படைப்புகளாகிய நம்மை, பாவத்திலிருந்து மீட்பதற்கு தன்னுடைய சொந்த  மகனையே தந்ததில் அடங்கியுள்ளது. அவர் தம்மைத் தந்ததால், நாமும் கொடுக்கின்றோம். நாம் நன்றியோடு ஆராதிப்போம்!

பேராசையுள்ள பிடி

சிறுவனும் கொட்டைகளும் என்ற, பழங்கால நீதிக் கதையில், ஒரு சிறு பையன் கொட்டைகள் வைக்கப்பட்டிருந்த ஜாடியினுள் கையைவிட்டு, கை நிறைய கொட்டைகளை அள்ளிக் கொண்டு, கையை வெளியே எடுக்க முயற்சிக்கிறான். கொட்டைகளோடு கையை வெளியே எடுக்க முடியவில்லை. தான் அள்ளிக் கொண்டதில், ஒன்றையும் விட தயாராக இல்லாத அச்சிறுவன் அழ ஆரம்பிக்கின்றான், சில கொட்டைகளை விட்டு விட்டு, கையை வெளியே எடுக்க ஆலோசனை கொடுக்கப்படுகிறது. பேராசை என்பது கடினமான எஜமானன்.

இந்தக் கதை தரும் நீதியை, பிரசங்கியின் ஞான ஆசிரியர் நமக்கும் கூறுகின்றார். அவர் சோம்பேறி, பேராசைக்காரன் ஆகிய இருவரின் ஒற்றுமை, வேற்றுமைகளைக் குறிப்பிடுகிறார். “மூடன் தன் கைகளைக் கட்டிக் கொண்டு, தன் சதையையே தின்கிறான். வருத்தத்தோடும், மனச்சஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் கொண்டிருப்பதைப் பார்க்கிலும், அமைச்சலோடு ஒரு கைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம்.”(4:5-6). என்கின்றார். சோம்பேறி, தான் அழிந்து போகும் மட்டும் காரியங்களைத் தள்ளி போட்டுக் கொண்டேயிருப்பான், செல்வத்தைச் சேகரிப்பவனும், ஒரு நாள் , தன்னுடைய “பிரயாசம் யாவும் வீண், வருந்தத் தக்க வேலையை செய்தேனே “என்பான் (வச. 8)

பேராசையோடு பொருளைச் சேகரிக்க கஷ்டப்படுவதை விட்டு விட்டு, இருப்பதில் திருப்தியடைந்தவர்களாய் வாழ வேண்டும் என்பதே ஆசிரியரின் விருப்பம். நமக்கென்று தேவன் கொடுத்திருப்பது எப்பொழுதும் இருக்கும். இயேசு நமக்குச் சொல்வது,”மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?’ (மாற். 8:36)

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனே என் துணையாளர்

என் நண்பர் ராலே தனது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை நோக்கி விரைகிறார்! அவரை நான் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எனக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஆதாராமாக அவர் இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஓர் புத்தகம் எழுதும் பணியை நிறைவுசெய்துவிட்டு, வேறொரு வேலையை செய்வதாக என்னிடம் கூறினார். அவற்றைக் கேட்க எனக்கு ஆர்வமாயிருந்தது ஆனால் ஆச்சரியப்படவில்லை.

தனது எண்பத்தைந்து வயதில், வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள காலேப் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை. தேவன் இஸ்ரவேலுக்கு வாக்களித்த கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்காக பல சகாப்தங்களாக வனாந்தர வாழ்க்கை மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், தேவபக்தியும் விசுவாசமும் அவரை தாங்கியது. அவர், “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:11) என்று உரைக்கிறார். அவர் எந்த வழிகளில் ஜெயங்கொள்வார்? “கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன்” (வச. 12) என்று காலேப் பதிலளிக்கிறார்.

வயது, வாழ்க்கையின் நிலை அல்லது சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனை முழுமனதோடு பற்றிகொள்ளும் யாவருக்கும் தேவன் உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். நமக்கு உதவும் நம் இரட்சகராகிய இயேசுவில், தேவன் வெளிப்பட்டார். சுவிசேஷங்கள், கிறிஸ்துவிடத்திலிருந்து தேவன்மீது விசுவாசம் வைப்பதை நமக்கு போதிக்கிறது. உதவிக்காக தேவனை அண்டிய யாவருக்கும் தேவன் தன் அக்கறையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எபிரெய நிருப ஆசிரியர் “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபிரெயர் 13:6) என்று அறிக்கையிடுகிறார். இளைஞரோ அல்லது வயதானவரோ, பலவீனமானவரோ அல்லது பலவானோ, கட்டுண்டவரோ அல்லது சுதந்திரவாளியோ, வேகமாக ஓடுகிறவரோ அல்லது முடவனோ, யாராக இருந்தாலும் இன்று அவருடைய உதவியைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுப்பது எது? 

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார்.

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம்.

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26). 

 

ஒன்றுபட்டு வாழ்வோம்

எனது அமெரிக்கத் தோழி கேரல், 2016 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியா வந்தாள். அவள் வருவதற்கு முன்னர், இதன் பல்வேறு கலாச்சாரங்கள், உணவு வகைகள் மற்றும் மொழிகள் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாள். இருப்பினும், அவள் பெங்களூருவில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டபோது, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஒரு அன்பான சமூகத்தை உருவாக்குவதைக் கண்டு வியந்தாள். தேவன் எப்படி ஜனங்களை ஒன்றிணைத்தார் என்பதை கேரல் பார்த்தாள்.

ஒரு சமூகமாக ஒற்றுமையாக வாழ்வது என்றால் என்ன என்பதை ஆதி விசுவாசிகள் புரிந்துகொண்டனர். லூக்கா, "அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்" (வ.42) என்றெழுதினார். அவர்கள் வெவ்வேறு ஊர்கள், நகரங்கள் மற்றும் பின்னணியிலிருந்து வந்தவர்கள், எனினும் அவர்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். அவர்களின் சமூகத்தை அழகாக்கிய சில விஷயங்களில் ஒன்று அவர்களின் அன்றாட நடவடிக்கைகளாகும். அவர்கள் அப்போஸ்தலரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும், ஒருவரோடொருவர் நேரத்தைச் செலவிடுவதற்கும், கர்த்தரின் பந்தியை அனுசரிப்பதற்கும், ஒன்றாக ஜெபிப்பதற்கும் தங்களை அர்ப்பணித்திருந்தனர் (வ.42). அவர்கள் தங்கள் உடைமைகளைப் பகிர்ந்துகொண்டு, "மகிழ்ச்சியோடும் கபடமில்லலாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி" எப்போதும் தேவனைத் துதித்தனர் (வ.44-46). இதன் விளைவாக, தேவன் ஒவ்வொரு நாளும் புதிய மக்களை அவர்களின் சமூகத்தில் சேர்த்தார் (வ.47).

இயேசுவின் ஆதி சீடர்கள், ஒரு சமூகத்தின் மாதிரியை நமக்கு வழங்குகிறார்கள். வறுமை, துன்புறுத்தல் மற்றும் மரணத்தின் மத்தியிலும் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒரு சமூகம் என்றால் என்ன என்பதை அவர்கள் வெளிப்படுத்தினர். சபை ஆராதனைகள் அல்லது ஐக்கிய கூட்டங்களின் போது மட்டுமல்ல, நாம் ஏக கருத்துடையவர்களாய் இருக்கும்போது மட்டுமல்ல, எல்லா நேரங்களிலும் கிறிஸ்துவின் மூலம் ஒன்றுபடுவதற்கு நாமும் அழைக்கப்படுகிறோம். ஏனென்றால், கிறிஸ்துவை மையமாகக் கொண்ட நமது ஒற்றுமையை நாம் உலகிற்கு சாட்சியிடுகையில், தேவன் நம் அன்பின் சமூகத்தில் புதியவர்களைக் கொண்டுவருவார்.