தேவனுடைய தோட்டம்
என் வீட்டின் கதவுக்கு வெளியில், அழகை நினைவுகூரும் விதத்திலும் வாழ்க்கையின் சொற்பத்தன்மையை நினைவுபடுத்தும் விதத்திலும் சில காரியங்கள் இருக்கிறது. கடந்த வசந்த காலத்தில், என் மனைவி நிலவு மலர்ச் செடிகளை அங்கே நட்டார். அதில் முழு நிலவை ஒத்த பெரிய வட்டமான வெள்ளை பூக்கள் பூப்பதால் அச்செடிக்கு அவ்வாறு பெயரிடப்பட்டது. அதில் பூக்கும் ஒவ்வொரு பூவும் இரவில் பூத்து, காலையில் சூரிய ஒளி அதின் மீது பட்ட மாத்திரத்தில் வாடிவிடும். மீண்டும் பூக்காது. ஆனால் அந்த செடியானது தொடர்ந்து பூக்களை உற்பத்திசெய்துகொண்டேயிருக்கிறது. அதின் பூக்கள் ஒவ்வொரு நாள் மாலையையும் அலங்கரிக்கிறது. ஒவ்வொரு நாளும் அப்பூக்களை கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அதின் அழகை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
தற்காலிகமாய் உயிர்வாழும் இந்த பூக்கள் ஒரு வேதாகம சத்தியத்தை வெளிப்படுத்துகிறது. ஏசாயா தீர்;க்கதரிசியின் வார்த்தைகளை இங்ஙனம் பேதுரு நினைவுகூருகிறார்: “அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே. மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது” (1 பேதுரு 1:23-25). ஆனாலும் தேவன் அவருடைய வாக்குத்தத்தங்களை நிச்சயமாய் நிறைவேற்றுவார் என்று அவர் உறுதிகூறுகிறார் (வச. 25).
இந்த தோட்டத்தில் பூத்த பூவைப் போன்று மனுஷனுடைய ஆயுசுநாட்களும் சொற்பமானவைகள். ஆனாலும் மனுஷனுடைய அந்த சொற்ப ஜீவியத்திலும் ஓர் அழகை நாம் பார்;க்கமுடிகிறது. இயேசுவின் நற்செய்தியின் மூலம், நாம் கடவுளுடன் ஒரு புதிய ஆரம்பத்தை உருவாக்குகிறோம், அவருடைய அன்பான பிரசன்னத்தில், நித்திய வாழ்க்கையின் வாக்குறுதியை நம்புகிறோம். நம்முடைய ஜீவியம் சொற்பமாயிருந்தபோதிலும் அவருக்கு நாம் துதி ஏறெடுப்போம்.
தாங்கிப்பிடித்திருக்கும் நம்பிக்கை
“அப்பா எனக்கு பூக்களை பரிசாக அனுப்பியதால் அவர் வீட்டிற்கு வருப்போகிறார் என்பது எனக்குத் தெரியும்.” யுத்தத்தில் என்னுடைய அப்பா காணாமல்போனது தெரியாமல் என்னுடைய ஏழு வயது சகோதரி சொன்ன வார்த்தைகள் இவைகள். அப்பா போருக்கு செல்லுவதற்கு முன்னர், என் சகோதரியின் பிறந்தநாளை முன்னிட்டு அவளுக்கு பூக்களை பரிசாக முன்கூட்டியே ஆர்டர் செய்திருந்தார். அவர் தொலைந்த பின்பு அவைகள் வந்துசேர்ந்தன. அவள் சொன்னது சரியாகிப்போய்விட்டது. என்னுடைய அப்பா யுத்தத்தில் ஒரு பெரிய ஆபத்தை சந்தித்து, வீடு திரும்பினார். பல ஆண்டுகள் கடந்த பின்னரும் என் சகோதரி அந்த பூக்களை ஞாபகமாய் வைத்திருந்தாள். அதைப் பார்க்கும்போதெல்லாம் நம்பிக்கையோடு காத்திருத்தலின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வாள்.
உடைந்துபோன இந்த பாவ உலகத்தில் நம்பிக்கையை காத்துக்கொள்வது சாதாரணமானது அல்ல. அப்பாக்கள் எப்போதும் வீடுவந்து சேர்வதில்லை. பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் சிலவேளைகளில் நிராசையாகிப் போய்விடுகின்றன. ஆகிலும் கடினமான தருணங்களில் தேவன் நமக்கு நம்பிக்கையை அருளுகிறார். வேறொரு யுத்த காலத்தில், ஆபகூக் தீர்க்கதரிசி, பாபிலோனியர்களால் ஏற்படப்போகிற யுத்தத்தை முன்னறிவித்தார் (ஆபகூக் 1:6; 2 இராஜாக்கள் 24). ஆனாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று உறுதிகூறுகிறார் (ஆபகூக் 1:12-13). தேவன் கடந்த காலத்தில் செய்த நன்மைகளை நினைவுகூர்ந்தவராய், “அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்” (3:17-18) என்று அறிக்கையிடுகிறார்.
சில விளக்கவுரையாளர்கள், ஆபகூக் என்னும் பெயருக்கு “பற்றியிருத்தல்” என்று பொருள் கூறுகிறார்கள். அவர் நம்மை விடாமல் பற்றிப் பிடித்திருப்பதால், சோதனைகளின் மத்தியிலும் அவரை நம் ஒரே நம்பிக்கையாய் பற்றிப் பிடித்திருப்போம்.
வாலையும் நாக்கையும் அசைத்தல்
பெப் என்னும் நாய்க்குட்டி, ஆளுநரின் மனைவிக்கு சொந்தமான பூனையை கொன்றுவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அது அந்த தவறை செய்யவில்லை. கவர்னர் மாளிகையில் இருந்த மெத்தையை மென்று தின்றது வேண்டுமானால் அதின் குற்றமாய் இருக்கலாம்.
பெப், 1920களில் பென்சில்வேனியாவின் கவர்னர் கிஃபோர்ட் பிஞ்சோட்டிற்குச் சொந்தமான ஒரு இளம் லாப்ரடோர் வகையை சேர்ந்த நாய். அந்த குற்றத்திற்காய் பெப், கிழக்கு மாநில சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டது. அங்கு அதின் புகைப்படம் கைதி அடையாள எண்ணுடன் எடுக்கப்பட்டது. இதைப் பற்றி கேள்விப்பட்ட ஒரு பத்திரிகை நிருபர், அந்த செய்தியை பத்திரிக்கையில் பிரசுரித்தார். அவரது அறிக்கை செய்தித்தாளில் வெளிவந்ததால், பெப் உண்மையில் ஒரு பூனை கொலையாளி என்று பலர் நம்பினர்.
இஸ்ரவேலின் ராஜா சாலெமோன் தவறான செய்தியின் சக்தியை நன்கு அறிந்திருந்தார். அவர் எழுதும்போது “கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்” என்று எழுதுகிறார் (நீதிமொழிகள் 18:8). சில வேளைகளில் நம்முடைய மனித இயல்பின் பிரகாரம், உண்மையல்லாத செய்திகளையும் நிஜம் என்று நம்பத் தூண்டப்படுகிறோம்.
மற்றவர்கள் நம்மைப் பற்றிய பொய்களை நம்பினாலும், தேவனால் அதை நன்மையாய் முடியப்பண்ணக் கூடும். ஆளுநர் பெப்பை சிறைக்கு அனுப்பினார். ஆனால் பெப் அங்கிருந்த கைதிகளுக்கு சிநேகிதனாய் மாறியது. அது அங்குள்ள கைதிகளுக்கு ஆறுதலாய் இருந்து மனரீதியான சிகிச்சை கொடுத்தது.
மற்றவர்கள் என்ன சொன்னாலும், என்ன நினைத்தாலும் நம் வாழ்க்கைக்கான தேவனுடைய சித்தம் மாறாதது. மற்றவர்கள் நம்மைப் பற்றி கிசுகிசுக்கும்போது, அதைக் குறித்து நாம் பொருட்படுத்தாமல், தேவன் நம்மைக் குறித்து என்ன எண்ணுகிறார் என்பதையும் அவர் நம்மை அதிகமாய் நேசிக்கிறார் என்பதையுமே நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.
துதிகளை பிரஸ்தாபம்பண்ணுதல்
எங்கள் சபை அதின் முதல் கட்டிடத்தை கட்டியபோது, கட்டிடத்தின் உட்புற அலங்காரம் முடிவடைவதற்கு முன்பு, சுவர்களிலும் (கட்டிடத்தின் சட்டத்தை ஆதரிக்கும் உலர்வாலுக்குப் பின்னால் உள்ள செங்குத்து விட்டங்கள்) மற்றும் கான்கிரீட் தளங்களிலும் மக்கள் நன்றி தெரிவிக்கும் வாக்கியங்களை எழுதினார்கள். அந்த சட்டங்களை விலக்கிப் பார்த்தால் அவைகள் நன்றாய் தெரியும். நிறைய வேத வசனங்கள், மற்றும் “நீர் மிகவும் நல்லவர்” என்பது போன்ற துதி வாக்கியங்களும் ஜெபங்களும் அதில் இடம்பெற்றிருந்தன. “சவால்களுக்கு மத்தியில் தேவன் எங்களுக்கு எவ்வளவு நல்லவராய் இருந்தார் என்பதை அடுத்த தலைமுறையினர் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக நாங்கள் அந்த சாட்சியத்தை விட்டுச்சென்றோம்” என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
தேவன் நமக்கு செய்த நன்மைகளை நாம் நினைவுகூர்ந்து அதை மற்றவர்களுக்கும் அறிவிக்க வேண்டும். ஏசாயா தீர்க்கதரிசி, “கர்த்தர் எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் தக்கதாகவும்... கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம்பண்ணுவேன்” (ஏசாயா 63:7) என்று சொல்லுகிறார். மேலும் “அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்” (வச. 9) என்று சரித்திரத்தில் தன் ஜனத்தின் மீதான தேவனுடைய அன்பை அவர் தெரியப்படுத்துகிறார். அந்த அதிகாரத்தைத் தொடர்ந்து வாசிக்கும்போது, இஸ்ரவேலர்கள் இன்னும் நெருக்கத்தில் இருப்பதையும், தேவன் அவர்களுக்காக இடைபடவேண்டும் என்ற தீர்க்கதரிசியின் எதிர்பார்ப்பையும் நாம் காணமுடியும்.
இக்கட்டான தருணங்களில் தேவன் நமக்கு காண்பித்த இரக்கத்தை நினைவுகூரலாம். சவாலான வாழ்க்கைத் தருணங்களை நாம் சந்திக்கக்கூடும். ஆனால் அவர் இரக்கங்களுக்கு முடிவில்லை. அவர் நமக்கு செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து நன்றியுள்ள இருதயத்தோடு அவரை நோக்கிப் பார்க்கும்போது, அவர் நம்முடைய துதிகளுக்குப் பாத்திரர் என்னும் உண்மையை நாம் அறிந்துகொள்ளக்கூடும்.
சகோதரன் சவுல்
"ஆண்டவரே, தயவுசெய்து என்னை அங்குத் தவிர வேறு எங்கும் அனுப்புங்கள்." சுழற்சிமுறையில் பயிலிடம் மாற்றவேண்டியிருந்த மாணவனாக ஒரு வருடத்தைத் தொடங்குவதற்கு முன், ஒரு இளைஞனாக அதுவே என் ஜெபம். எங்குச் செல்வேன் என்று நான் அறியேன், ஆனால் எங்குச் செல்ல விரும்பவில்லை என்று நான் அறிவேன். நான் அந்த நாட்டின் மொழியைப் பேசவில்லை, அதன் பழக்கவழக்கங்கள் மற்றும் மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வுகளால் என் மனம் நிறைந்திருந்தது. எனவே என்னை வேறு இடத்திற்கு அனுப்பும்படி தேவனிடம் கேட்டேன்.
ஆனால் தேவன் தம் எல்லையற்ற ஞானத்தால் நான் செல்ல விரும்பாத இடத்திற்குத் துல்லியமாக என்னை அனுப்பினார். அவர் செய்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த மண்ணில் எனக்கு அன்பான நண்பர்கள் இருக்கிறார்கள். என் திருமணத்திற்கு என் சிறந்த நண்பர் ஸ்டீபன் அங்கே வந்தார். அவருக்கும் திருமணமாகிவிட்டது.
தேவன் மனமாற்றத்தை ஏற்படுத்தினால் அற்புதமான விஷயங்கள் நடக்கும்! அதுபோன்ற ஒரு மாற்றம் இரண்டு வார்த்தைகளால் விளக்கப்படுகிறது: "சகோதரனாகிய சவுலே" (அப்போஸ்தலர் 9:17).
அந்த வார்த்தைகள் அனனியாவிடமிருந்து வந்தவை, சவுலின் மனமாற்றத்திற்குப் பிறகு உடனடியாக அவரது பார்வையைக் குணப்படுத்த அழைக்கப்பட்டவர் (வ. 10-12). சவுலின் கடந்த காலத்தின் வன்முறை காரணமாக அனனியா முதலில் எதிர்த்தார், “உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன்.” (வச. 13) என்று ஜெபித்தார்.
ஆனால் அனனியா கீழ்ப்படிந்து சென்றார். அவர் மனம் மாறியதால், அனனியா விசுவாசத்தில் ஒரு புதிய சகோதரனைப் பெற்றார், சவுல் பவுலானார், மேலும் இயேசுவைப் பற்றிய நற்செய்தி வல்லமையுடன் பரவியது. உண்மையான மாற்றம் அவரால் எப்போதும் சாத்தியம்!
தேவன் முன் அமர்ந்திருத்தல்
உயிருள்ள ஒரு நபரின் முதல் புகைப்படம் 1838 இல் லூயிஸ் டாகுரே என்பவரால் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படம் ஒரு மதிய நேரத்தில் பாரீஸில் உள்ள ஒரு வெற்று நுழைவாயிலிருந்த ஒரு உருவத்தைச் சித்தரிக்கிறது. ஆனால் அதில் ஒரு தெளிவான மர்மம் இருக்கிறது; அந்த நேரத்தில் தெரு, நடைபாதை வண்டிகள் மற்றும் பாதசாரிகளின் போக்குவரத்தால் பரபரப்பாக இருந்திருக்க வேண்டும், ஆனால் அந்தப் படத்தில் அவ்வாறாக இல்லை
அந்த மனிதன் தனியாக இல்லை. புகைப்படம் எடுக்கப்பட்ட பிரபலமான பகுதியான "புலவர்ட் டு டெம்பிள்" இல் மக்கள் இருப்பார்கள். குதிரைகள் இருக்கும். அந்தப் படத்தில் அவ்வாறாகக் காட்டப்படவில்லை. புகைப்படத்தைச் செயலாக்குவதற்கான ஒளிப்படப்பிடிப்பு நேரம் (டாகுவேரியோ வகை ஒளிப்பட முறை என்பது பொதுப் பயன்பாட்டிற்கு வந்த முதல் ஒளிப்படப்பிடிப்பு முறை ஆகும்) ஒரு படத்தைப் பிடிக்க ஏழு நிமிடங்கள் எடுக்கும். அந்த நேரத்தில் அசைவில்லாமல் இருக்க வேண்டும். நடைபாதையில் இருந்த ஒரே நபர் புகைப்படம் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது, ஏனெனில் அவர் மட்டுமே அசையாமல் நின்று கொண்டிருந்தார். அவர் தனது காலணிகளை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்..
சில நேரங்களில் நிலைத்திருத்தல் என்பது செயலாலும் மற்றும் முயற்சியாலும் செய்ய முடியாததைச் செய்து முடிக்கிறது. சங்கீதம் 46:10ல், தேவன் தம்முடைய மக்களிடம், "நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்" எனக் குறிப்பிடுகிறார். "ஜாதிகள் கொந்தளிக்கும்போது" (வச.6), "பூமி நிலைமாறினாலும்” (வச.2), அமைதியாக அவரை நம்புபவர்கள், "ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணை" யை அவரில் கண்டடைவார்கள் (வச. 1).
"அமைதியாக இரு" என்று மொழிபெயர்க்கப்பட்ட எபிரேய வினைச்சொல் "முயற்சியை நிறுத்து" என்றும் குறிப்பிடுகிறது. நமது வரம்புக்குட்பட்ட முயற்சிகளில் நம்பிக்கை வைப்பதைக் காட்டிலும் நாம் தேவனில் இளைப்பாறும் போது, அவரே நம் அசைக்க முடியாத “அடைக்கலமும் பெலனும்" (வச. 1) என்று காண்கிறோம்.
தேவனுக்கு செவிகொடுத்தல்
எனது கல்லூரிக்கும், பாலைவனத்திலிருந்த என் வீட்டுக்குமான சாலை வெறுமையாக இருந்ததால், நான் எனது வாகனத்தை சற்று வேகமாக ஓரிருமுறை ஓட்டினேன். காரணம் அந்த சாலை நீண்ட, நெடிய சாலை. முதலில் நெடுஞ்சாலை காவல்துறையிடமிருந்து எனக்கு ஒரு எச்சரிக்கை வந்தது. பின்னர் அபராத சீட்டு வந்தது. என் வாகனத்தின் வேகத்தை நான் மறுபடியும் குறைக்காததால், இரண்டாவது தடவையாக, அதே இடத்தில் நான் பிடிபட்டேன்.
செவிசாய்க்க மறுப்பதால், விபரீதமான பின்விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும். இத்தகைய மோசமான உதாரணத்தை, நல்லவனாய் மற்றும் உண்மையான ராஜாவாயிருந்த யோசியாவின் வாழ்க்கையில் நாம் காண முடியும். எகிப்தின் ராஜாவாகிய நேகோ, அசீரியர்களுக்கு உதவுவதற்காக பாபிலோனுக்கு விரோதமாகப் படையெடுத்து வந்தபோது, யோசியா அவனுக்கு விரோதமாக வந்தான். நேகோ, யோசியாவிடம் ஸ்தானாபதிகளை அனுப்பி ,"நான் இப்போது உமக்கு விரோதமாய் அல்ல என்னோடே யுத்தம் பண்ணுகிற ஒருவனுக்கு விரோதமாய்ப் போகிறேன்; நான் தீவிரிக்க வேண்டுமென்று தேவன் சொன்னார்; தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காதபடிக்கு அவருக்கு எதிரிடை செய்வதை விட்டுவிடும் என்று சொல்லச் சொன்னான்" (வ.21). தேவனே நேகோவை அனுப்பியிருந்தார். யோசியா அதற்கு செவிகொடாமல் மெகிதோவின் பள்ளத்தாக்கிலே யுத்தம் பண்ணுவதற்கு வந்தான் (வ.22). யோசியா மிகவும் காயப்பட்டு மரணமடைந்தான், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யாவரும் அவனுக்காக துக்கம் கொண்டாடினார்கள் (வ.24).
தேவனை நேசித்த யோசியா, அவருக்கும், பிறர் மூலம் தனக்குக் கிடைத்த அவரின் ஞானத்திற்கும் செவிசாய்க்க நேரம் ஒதுக்காததால், தன் சுயவழிகளை நம்புவது நல்லதல்ல என்பதைக் கண்டுகொண்டான். நம்மை நாம் எப்பொழுதும் சோதித்துப் பார்க்கவும், தேவ ஞானத்தைப் பெற்றுக் கொள்ளவும் தேவன்தாமே நமக்குத் தாழ்மையைத் தந்து உதவுவாராக.
தேவனால் ஒருபோதும் புறக்கணிக்கப்படவில்லை
“சில நேரங்களில் நான் ஏதோ கண்ணுக்கே தெரியாதவள் போல உணர்கிறேன்" விமலா தன் தோழியிடம் பேசும்போது இந்த வார்த்தைகள் காற்றில் ஊசலாடின. விமலாவை அவள் சிறு குழந்தைகளுடன் கைவிட்டு, அவளது கணவன் வேறொறுவளோடு போய்விட்டான். அவள், "நான் அவருக்கு என் வாழ்விலேயே சிறந்த ஆண்டுகளைக் கொடுத்தேன். இப்போது யாரேனும் என்னைப் பார்த்துக்கொள்வார்கள் என்றோ என்னை அறிவதற்கு நேரம் ஒதுக்குவார்களோ என்று எனக்குத் தெரியவில்லை" என்றாள்.
அவளுடைய தோழி பதிலளித்தாள்: "நான் மிகவும் வருந்துகிறேன். எனக்கு ஆறு வயதாக இருந்தபோது என் அப்பாவும் போய்விட்டார். அது எங்களுக்கு, குறிப்பாக அம்மாவுக்குக் கடினமாக இருந்தது. ஆனால் ஒரு இரவில் அவள் என்னைத் தூங்கவைத்த போது, நான் மறக்கவே இல்லாத ஒன்றைச் சொன்னால்: 'தேவன் தன் கண்களை மூடுவதேயில்லை'. நான் வளர்ந்த பிறகு, தேவன் என்னை நேசிப்பதையும், எனக்கு எப்போதும் தூங்கும்போதும் கூட காவலாய் இருப்பதையும் அவள் எனக்குக் கற்பிக்க முயன்றதை விலக்கினாள்".
சீனாய் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த ஒரு சவாலான நேரத்தில் தமது ஜனங்களுடன் பகிர்ந்துகொள்ள மோசேக்குத் தேவன் அருளிய வார்த்தைகளை வேதாகமம் முன்வைக்கிறது: “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே” (எண்ணாகமம் 6:24-26). இந்த ஆசீர்வாதமானது ஜனங்கள் மீது ஆசாரியர்களால் மொழியப்பட வேண்டும்..
யாராவது நம்மைப் பார்க்கிறார்களா அல்லது உண்மையிலேயே புரிந்துகொள்கிறார்களா என்று நாம் ஏங்குகிற நிலைமையான வாழ்க்கையின் வனாந்தரங்களில் கூட தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். தேவனின் தயவான அவரது பிரகாசிக்கும் முகமும் மாறிடாத அன்பும் அவரை நேசிப்பவர்களை நோக்கித் திரும்புகிறது, நம்முடைய வலியினிமித்தம், அவரை நம்மால் உணர முடியாவிட்டாலும் கூட, தேவனுக்கு மறைவானவர்கள் என்று யாரும் இல்லை.
தேவனோடு புதிய துவக்கம்
"உன் பாவமும் இயேசுவைச் சிலுவையில் அறைந்ததா?" டச்சு ஓவியர் ரெம்ப்ராண்ட் 1633 ஆம் ஆண்டு வரைந்த தலைசிறந்த படைப்பான "தி ரைசிங் ஆஃப் தி கிராஸ்" -இல் கேட்கும் கேள்வி இதுவே. அந்த ஓவியத்தின் மையத்தில், இயேசு சிலுவையில் உயர்த்தி பிடிக்கப்பட்டிருக்கிறார். நான்கு பேர் அவரை சிலுவையோடு தூங்குகிறார்கள். ஆனால் அதில் ஒருவர் இயேசுவைச் சுற்றி இருந்த வெளிச்சத்தில் நிற்கிறார். அவர் அணிந்திருந்த ஆடை வித்தியாசமாயிருந்தது; அவர் ரெம்ப்ராண்ட் வாழ்ந்த காலத்திலிருந்த ஆடையை அணிந்திருந்தார். ஓவியர் அடிக்கடி அணிந்த தொப்பியையும் அணிந்திருந்தார். அவரது முகத்தை உற்று நோக்கினால், ரெம்ப்ராண்ட் தன்னையும் அந்த ஓவியத்தில் இணைத்துள்ளார், அது "இயேசுவின் மரணத்திற்கு என் பாவங்களும் காரணம்" என்று சொல்லுவது போலிருந்தது.
ஆனால், அதில் தனித்து நிற்கும் இன்னொருவரும் இருக்கிறார். அவர் குதிரையில் இருக்கிறார், ஓவியத்திலிருந்து பார்வையாளர்களை நேரடியாகப் பார்க்கிறார். சிலர் இதை ரெம்ப்ராண்டின் இரண்டாவது சுய உருவப்படமாகப் பார்க்கிறார்கள், "நீங்கள் இன்னும் இங்கே வரவில்லையா?" என்று பார்வையாலே தன்னை கவனிக்கும் அனைவரையும் கேட்பது போல் உள்ளது.
பவுல் தன்னையே அங்குக் கண்டார். நாமும் நம்மைக் காணலாம், காரணம் இயேசு நமக்காகவும் பாடுபட்டு மரித்தார். ரோமர் 5:10 இல், பவுல் தன்னையும் நம்மையும் "தேவனுக்குச் சத்துருக்கள்" என்று குறிப்பிடுகிறார். ஆனால் நம்முடைய பாவங்கள் இயேசுவின் மரணத்திற்குக் காரணமாயினும், அவருடைய மரணம் நம்மைத் தேவனோடு ஒப்புரவாக்குகிறது: "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்" (வ.8).
பாவமன்னிப்பு தேவைப்படும் பாவிகளாக ரெம்ப்ராண்ட் மற்றும் பவுலுடன் நாமும் நிற்கிறோம். தேவனுடனான புதிய ஆரம்பம் என்ற நமது ஆழ்ந்த தேவையை அவருடைய சிலுவையின் மூலம் இயேசு நமக்குப் பூர்த்தி செய்கிறார். இதை நமக்காக நாமே ஒருபோதும் செய்திட முடியாது.