ஆசிர்வாதத்தை தவறவிடுதல்
1799ஆம் ஆண்டில் கொன்ராட் ரீட் என்னும் பன்னிரண்டு வயது சிறுவன், வட கரோலினாவில் அவர்களுக்கு சொந்தமான நிலத்தில், மின்னும் ஒரு பாறையை கண்டெடுத்தான். புலம்பெயர்ந்த ஏழை விவசாயியான தன் அப்பாவிடம் அதை காண்பிக்க வீட்டிற்கு கொண்டுவந்தான். அந்த பாறையின் மதிப்பு தெரியாத அவனுடைய அப்பா, அதை கதவு நிறுத்தத்திற்கு பயன்படுத்திக்கொண்டார். அந்த வழியாய் அவர்களின் குடும்பம் பல ஆண்டுகள் நடந்துபோயிருக்கிறது.
ஒரு நாள் அந்த ஏழரை கிலோ எடைகொண்ட அந்த தங்கப் பாறையை, அவ்வூரில் வசிக்கும் நகை வியாபாரி பார்த்தார். உடனே இந்த விவசாயக் குடும்பம் செல்வந்தர்களாய் மாறினர். அவர்களுடைய அந்த நிலமே அமெரிக்காவின் தங்கம் கிடைக்கும் முதல் பெரிய நிலமாக அடையாளப்படுத்தப்பட்டது.
சிலநேரம் நம் சுய திட்டங்களையும், வழிகளையும் முன்நிறுத்தி, ஆசீர்வாதங்களை கடந்துபோவதுண்டு. கீழ்படியாமையினால் பாபிலோனியர்களால் சிறைபிடிக்கப்பட்ட பின்னர், தேவன் இஸ்ரவேலுக்கு மீண்டும் ஒரு மீட்பை அறிவித்தார். ஆனால், அவர்கள் எதில் குறைந்து போயினர் என்றும் அவர்களுக்கு நினைப்பூட்டினார். “இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே. ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்” என்று தேவன் அறிவிக்கிறார். “பாபிலோனிலிருந்து புறப்படுங்கள்... இதைக் கெம்பீரசத்தமாய்க் கூறிப் பிரசித்தப்படுத்துங்கள்” என்று அவர்களின் பழைய வழியை விட்டு புதிய வழிக்கு திரும்புவதற்கு உற்சாகப்படுத்துகிறார் (எசாயா 48:17-18, 20).
பாபிலோனிலிருந்து புறப்படுவது என்பது, நம்முடைய பழைய பாவ வழிகளிலிருந்து, அவருக்கு செவிகொடுத்தால் நமக்கு நன்மை செய்யக் காத்திருக்கும் தேவனிடத்தில் திரும்புவது என்று பொருள்படுகிறது.
அன்பால் சுமக்கப்படுதல்
என் நான்கு வயது பேரன், என் மடியில் அமர்ந்து என் வழுக்கை தலையை மெல்ல தட்டியவாறே, ஏதோ ஆராய்ந்தான். “தாத்தா உங்கள் முடிக்கு என்னானது?” எனக் கேட்டான். நான் சிரித்தவாறே, “ஓ அதுவா, காலப்போக்கில் அது கொட்டிவிட்டது” என்றேன். எதையோ சிந்தித்தவனாய், “அது பரவாயில்லை, நான் என் முடியில் கொஞ்சத்தை உங்களுக்குத் தருகிறேன்” என்றான்.
அவன் மனதுருகத்தை எண்ணி புன்னகைத்தவாறே அவனை இறுக்கி அணைத்தேன். அந்த சந்தோஷ தருவாயில் அவன் என்மேல் கொண்ட அன்பை தேவனின் தன்னலமில்லா, உதாரத்துவமான அன்பின் பிரதிபலிப்பாக யோசிக்க ஆரம்பித்தேன்.
ஜி.கே. செஸ்டர்டன், “நாம் பாவம் செய்து வயதுசென்றவர்களானோம், ஆனால் நம் தகப்பன் நம்மை விட இளமையாகவே இருக்கிறார்” என்றெழுதினார். இதன் பொருள் “நீண்ட ஆயுசுள்ளவர்” (தானியேல் 7:9) பாவத்தினால் கறைபடாமல் இருக்கிறார் என்கிறார். தேவன் காலங்களுக்கு அப்பாற்பட்டவர். மேலும் தடுமாற்றமில்லாத நிலையான அன்பினால் நம்மை நேசிக்கிறவர். “உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்து வந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்" என்று ஏசாயா 46இல் தம் ஜனங்களுக்கு அவர் அருளிய வாக்கை நிறைவேற்ற அவர் போதுமானவரும், பூரண சித்தமுள்ளவராகவும் உள்ளார் (வச. 4).
ஐந்து வசனங்கள் தள்ளி அவர், “நானே தேவன், எனக்குச் சமானமில்லை” (வச. 9) என விளக்குகிறார். இருக்கிறவராகவே இருக்கிறேன் (யாத்திராகமம் 3:14) என்பவர் நம்மை மிக ஆழமாக நேசிக்கிறார். எனவே கடைசி எல்லையான சிலுவை மரணம் வரைச்சென்று, நம் பாவத்தின் முழுச்சுமையையும் சுமந்தார். இதனால் நாம் அவரிடமாய் திரும்பி, நம் பாரங்கள் நீங்கி அவரை சதாகாலமும் நன்றியோடு ஆராதிக்கலாம்.
ஒவ்வொரு நொடியும் முக்கியம்
நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தின் நூலக காப்பகத்தில் உள்ள ஒரு நின்றுபோன கடிகார முட்கள் திகிலான ஒரு கதையை சொல்கின்றன. அவை சரியாக 8:19 மற்றும் 56 வினாடிகள் நேரத்தைக் காட்டும், அதுவே அக்கடிகாரத்தின் சொந்தக்காரரான எலிசா மிச்சேல் என்பவர், அபலாசியன் மலைப்பகுதிகளில் உள்ள நீர்வீழ்ச்சியில் ஜூன் 27, 1857 அன்று காலை சறுக்கிவிழுந்து மரித்த சரியான நேரம்.
தற்பொழுது அவர் பெயரிலேயே மவுண்ட் மிச்சேல் என்றழைக்கப்படும் அந்த சிகரத்தில், அச்சிகரமே மிசிசிபியின் கிழக்கில் உள்ள உயரமான சிகரம் என்ற தன் கூற்றை நிரூபிக்க சில ஆதாரங்களை அப்பொழுது பல்கலைக்கழக பேராசிரியர் மிச்சேல் திரட்டிக்கொண்டிருந்தார் (அவர் கூற்று சரியே). அவர் விழுந்த இடத்தின் அருகேயேயிருந்த மலை உச்சியில் தான் அவர் கல்லறையும் உள்ளது.
சமீபத்தில், நான் அந்த மலையுச்சியில் ஏறினபோது தான் என் அழிவுத்தன்மையையும், மிச்சேலையும் ஒப்பிட்டு, எங்கள் இருவருக்கும் எவ்வளவு குறுகிய காலமே உள்ளது என்றுணர்ந்தேன். மேலும் இயேசு தன் வருகையை குறித்து தன் சீஷர்களிடம் ஒலிவ மலையில் கூறிய வார்த்தைகள் “நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார். ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்” (மத்தேயு 24:44) என்று கூறியதை சிந்தித்தேன்.
அவர் வந்து தம் நித்திய ராஜ்யத்தை ஸ்தாபிக்கும் நாளையோ அல்லது நம்மை இவ்வுலகிலிருந்து தம்மிடமாய் அழைக்கப்போகும் காலமோ நம்மில் யாருக்கும் தெரியாது என்பதை இயேசு தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஆனால் ஆயத்தமாயிருக்கவும், விழித்திருக்கவும் (வச. 42) அவர் நமக்கு ஆலோசனை சொல்லுகிறார்.
டிக், டிக் என கடிகார முள்ளைப் போல நம் வாழ்க்கை வேகமாய் ஓடுகிறது. ஆனால் எவ்வளவு காலம்? நம் வாழ்வின் நொடிகளை நம் இரக்கமுள்ள இரட்சகரின் அன்பில் கழித்து, அவருக்காக பணியாற்றிக் காத்திருப்போமாக.
சாட்சி குறியீடுகள்
“அது தெரிகிறதா?” என என்னைக் கேட்டவாறே, என் தாத்தாவின் பழைய கடிகாரத்தை பழுதுபார்த்தவர் அதிலிருந்த சிறிய, நுட்பமான ஒரு குறியீட்டை ஒளிரும் வெளிச்சத்தில் காட்டினார். “சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பழுதுபார்த்த ஒருவர் இதைக் குறித்திருக்கலாம், இதை “சாட்சிக் குறி” என்பர். இக்கடிகாரம் எவ்வாறு இயங்குகிறது என்பதை நான் அறிவதற்கு இது உதவுகிறது” என்றார்.
பழங்காலங்களில் பழுது கையேடுகள், தொழில்நுட்ப குறிகள் இல்லாததால், இதுபோன்ற நகரும் பாகங்களில் ஏற்படும் பழுதுகளை கண்டறிய, நுட்பமான “சாட்சி குறிகள்” அதை எதிர்காலத்தில் பழுதுபார்ப்பவர்களுக்கு உதவியது. அது நேரத்தை மிச்சமாக்கும் செயல் மட்டுமல்ல. எதிர்காலத்தில் அதை பழுதுபார்ப்பவர்களுக்கு செய்யப்படும் ஒரு தயவான உதவி.
மற்றவர்களுக்கு உதவிசெய்வதின் மூலம் இந்த உடைக்கப்பட்ட உலகத்தில் நம்முடைய “சாட்சிக் குறியை” விட்டுச் செல்லுமாறு வேதம் நம்மை ஊக்குவிக்கிறது. ரோம திருச்சபைக்கு பவுல் அப்போஸ்தலர், “நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்” (ரோமர் 15:2) என்று எழுதுகிறார். இதுவே நமக்கு பொறுமையையும், ஆறுதலையும் அளிக்கும் தேவனின் (வச. 6) நல்ல உதாரணம். இது பரலோகத்திலும் பூலோகத்திலும் ஒரு நல்ல குடிமகனாய் வாழ்வதைக் குறிக்கிறது.
நம் “சாட்சி குறிகள்” அற்பமாய் தோன்றலாம், ஆனால் யாரோ ஒருவரின் வாழ்வில் முக்கிய திருப்பத்தை அது உண்டாக்கும். ஊக்குவிக்கும் வார்த்தைகள், தேவையின்போது செய்யப்படும் பண உதவி, கரிசணையோடு பிறர் குறைகளைக் கேட்பது போன்ற இரக்கச் செயல்கள் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும். தேவனுக்கென ஒரு குறியீட்டை நீங்கள் யாரோ ஒருவருடைய வாழ்வில் இன்று உண்டாக்க தேவன் உங்களுக்கு உதவுவாராக.
தேவனில் ஊக்கமடைதல்
1925ஆம் ஆண்டு, ஒரு உணவு விடுதியில் உதவியாளராய் பணிபுரிந்த லாங்ஸ்டன் ஹியூஸ் எனும் எழுத்தாளர், அவரை அதிகமாய் பாதித்த கவிஞரான வச்செல் லின்ட்சே, தான் பணிபுரியும் உணவு விடுதியில் தங்கியிருப்பதைக் கேள்விப்பட்டார். ஹியூஸ், சற்று தயக்கத்துடன் லின்ட்சேவிடம் தன்னுடைய கவிதைகளை வாசித்துக் காண்பித்தார். அதை லின்ட்சே பொதுக்கூட்டத்தில், வெளிப்படையாய் சொல்லி அவரைப் பாராட்டினார். லின்ட்சேவின் இந்த பாராட்டு ஹியூஸ்க்கு பல்கலைக்கழகத்தின் கல்வி ஊக்கத்தொகையை பெறுவதற்கும், எழுத்துத் துறையில் சாதிப்பதற்கும் வழிவகுத்தது.
எந்தவொரு சிறிய பாராட்டும் வெகுவாக நம்மை ஊக்குவிக்கும், குறிப்பாக தேவன் அதில் இருக்கையில். தாவீதைக் கொல்ல நினைத்த சவுலிடமிருந்து, தாவீது தப்பியோடிய சம்பவத்தை வேதம் கூறுகிறது. சவுலின் குமாரன் யோனத்தான், தாவீதைத் தேடி கண்டுபிடித்து, தேவனிடத்தில் பலப்படுவதற்கு உதவி செய்கிறான். “நீர் பயப்பட வேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டுபிடிக்கமாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்” என்று ஆறுதல் கூறுகிறான் (1சாமுவேல் 23:15-17).
யோனாத்தான் சொன்னது சரிதான். தாவீது ராஜாவாகிறான். யோனத்தான், தாவீதை “தேவனுக்குள்” (வச.16) திடப்படுத்தினான். அது, தாவீதை பெலப்படுத்தியது. தேவன், கிறிஸ்துவுக்குள் “நித்திய ஆறுதலையும், நல்நம்பிக்கையையும்” அருளுகிறார் (2 தெசலோனிக்கேயர் 2:16). அவருக்கு முன்பாக நம்மை நாம் தாழ்த்துகையில், அவரைப் போல் நம்மை உயர்த்துவதற்கு யாராலும் முடியாது.
நம்மைச் சுற்றிலுமுள்ள மக்களுக்கு தேவனுடைய திடப்படுத்துதல் அவசியம். யோனத்தான், தாவீதைத் தேடியது போல நாமும் அவர்களைத் தேடி, அன்பான வார்த்தைகளையும், உதவிகளையும் நல்கும்போது, தேவன் மற்றதைப் பார்த்துக் கொள்வார். இந்த உலக வாழ்க்கை எப்படியிருந்தாலும், அவரை நம்பியவர்களுக்கு நித்தியத்தில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது.
தேவன் பட்சமாய் சாய்தல்
ஹாரியட் டப்மேனால் எழுத, படிக்க முடியாது. ஒரு இளம்பெண்ணாக, தன்னுடைய கொடூரமான எஜமானால் அவள் தலையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் அவளை வாழ்நாள் முழுதும் வலிப்பினாலும், ஞாபக மறதியினாலும் பாதித்தது. ஆனால் அவளுடைய அடிமைத்தனத்திலிருந்து தப்பியவுடனே, தேவன் அவளைக்கொண்டு அவளைப் போன்ற சுமார் முன்னூறு பேரை மீட்டார்.
தான் மீட்டவர்களால் "மோசே" என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஹாரியட், வீரமாக பத்தொன்பது முறை உள்நாட்டுப் போருக்கு முன்பாக தெற்கு பக்கம் போய், அங்குள்ள தன்னைப் போன்ற மற்றவர்களை மீட்டார். அவளை உயிருடன் பிடித்தாலோ அல்லது கொன்றாலோ தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டும், அவளுடைய உயிருக்கு எப்பொழுதுமே ஆபத்து இருந்தும், அவள் இதை தொடர்ந்து செய்தாள். இயேசுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட விசுவாசியாக இருந்த அவள், எப்பொழுதும் தன்னுடைய பிரயாணங்களில் ஒரு பாட்டு புத்தகத்தையும், வேதாகமத்தையும் எடுத்துக்கொண்டு போய் மற்றவர்கள் அவளுக்கு வசனங்களை படிக்க கேட்பாள். அவைகளை அற்பணத்தோடு மனப்பாடம் செய்து அடிக்கடி மேற்கோள் காட்டுவாள் "நான் எப்பொழுதும் ஜெபம் செய்வேன்; என்னுடைய வேலையை குறித்து, எங்கேயும் நான் எப்பொழுதும் தேவனோடு பேசிக் கொண்டிருப்பேன்" என்று அவள் கூறுகிறாள். மேலும் அவளுடைய சிறிய வெற்றிகளுக்கு கூட தேவனையே காரணராக கூறினாள். ஆதி கிறிஸ்தவர்களுக்கு, அப்போஸ்தலன் பவுலின் அறிவுரைகள் இவளுடைய வாழ்வில் வல்லமையாக வெளிப்பட்டது "எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது." (1 தெசலோனிக்கேயர் 5:16-18).
நாம் எப்போதும் தேவன் பட்சம் சாய்ந்து, ஜெபத்தை நம்பியே வாழ்ந்து, அவரை நம்முடைய கடினமான சூழ்நிலைகளிலும் கூட துதிக்கும் போது, அவர் நம்முடைய மிக சவாலான பணிகளையும் செய்து முடிப்பதற்கு ஏற்ற பெலன் அளிப்பார். நம்முடைய இரட்சகர் நாம் எதிர்கொள்ளும் எதையும் விட மிகவும் பெரியவர், நாம் அவரை நோக்கி பார்க்கும்போது அவர் நம்மை நடத்துவார்.
அன்பின் சிறந்த பரிசு
என் மகன் ஜெஃப் ஒரு கடையை விட்டு வெளியே வந்தபோது, அங்கே தரையில் ஒரு நடைப்பயிற்சி சட்டகம் (வாக்கர்) கிடந்ததைப் பார்த்தான். யாரோ அதை தவறவிட்டிருக்கிறார்கள் என்று ஊகித்து, அங்கே யாருக்காவது ஏதாவது உதவி தேவைப்படுமோ என்று அந்தக் கட்டிடத்திற்கு பின்னால் சென்று பார்த்தபோது அங்கு ஒரு ஆதரவற்ற நபர் நடைபாதையில் மயங்கிக் கிடந்ததைப் பார்த்தான்.
ஜெஃப் அவரை எழுப்பி நன்றாக இருக்கிறாரா என்று விசாரித்தான். “நான் இறந்து போவதற்காகக் குடித்தேன். என்னுடைய கூடாரம் புயலில் சிதைந்துவிட்டது. எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். நான் வாழ விரும்பவில்லை" என்று அவர் வேதனையுடன் கூறினார்.
ஜெஃப் ஒரு கிறிஸ்தவ மறுவாழ்வு மையத்தை தொடர்புகொண்டான். தன் வீட்டிற்கு உடனே ஓடிப்போய் தன்னுடைய முகாமிடும் கூடாரத்தை எடுத்துக் கொண்டு வந்தான். அந்த மனிதரிடம் “உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டபோது, அவரும் “ஜெஃப்ரி” என்றார். ஜெஃப் தன்னுடைய பெயரும் அதுதான் என்பதை அவரிடம் சொல்லவில்லை. ஆனால் “அப்பா, அது நானாகக் கூட இருக்கலாம்” என்று பின்பு என்னிடம் கூறினான்.
ஜெஃப் ஒரு காலத்தில் போதைப் பொருளுக்கு அடிமையாயிருந்தவன். தேவனிடமிருந்து அவன் பெற்ற இரக்கத்தினால் தான் அந்த மனிதருக்கு உதவி செய்ய முன்வந்தான். ஏசாயா தீர்க்கதரிசி “நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழி தப்பித் திரிந்து அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம் எல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப்பண்ணினார்," (ஏசாயா 53:6) என்று தேவன் நம்மீது வைத்த இரக்கத்தைப் பற்றி எடுத்துரைக்கிறார். கிறிஸ்து நம் மீட்பர்; நம்மை விரக்தியில் தொலைந்து போகவோ, தனிமையாகவோ, நம்பிக்கை இழக்கவோ அனுமதிக்கவில்லை. அவர் நம்மை அடையாளங்கண்டு தம்முடைய அன்பிலே தூக்கியெடுத்து, நாம் மீட்பைப் பெற்று அவருக்குள் புதிதான வாழ்க்கையைத் தொடர நம்மை தேர்ந்தெடுத்திருக்கிறார். இதை விட பெரிய பரிசு வேறெதுவும் இல்லை.
முடிவில்லா அன்பு
எப்போதெல்லாம் தாத்தா என்னை கடற்கரைக்கு அழைத்துச் செல்லுகிறாரோ, அப்போதெல்லாம் தன்னுடைய கைக்கடிகாரத்தை கழற்றி வைத்து விடுவார்” என்று பிரியங்கா நினைவுகூர்ந்தாள். “ஏன்? என்று ஒரு நாள் அவரைக் கேட்டேன்.”
“அதற்கு அவர் புன்னகையுடன், ஏனென்றால் உன்னோடு நான் செலவு செய்யும் தருணங்கள் எவ்வளவு முக்கியம் என்று நீ அறிய வேண்டும்; காலம் செல்வது தெரியாமல் நான் உன்னுடன் இருக்க விரும்புகிறேன்" என்று அவர் பதிலளித்தார்.
இந்த ஞாபகங்களை, பிரியங்கா அவளுடைய தாத்தாவின் இறுதிச் சடங்கின்போது பகிர்ந்தார். இது அவளுடைய மறக்க முடியாத நினைவுகளில் ஒன்று. மற்றவர்கள் நமக்காக நேரம் செலவிடும்போது, அதை நாம் எவ்வளவு மதிப்பாய் உணர்கிறோம் என்பதை நான் பிரதிபலித்தபோது, அது தேவனின் அன்பின் அக்கறையை வெளிப்படுத்தும் வேத வசனங்களை நினைவுபடுத்துகிறது.
தேவன் எப்போதும் நம்மோடு நேரம் செலவிடுகிறார். “நீர் உமது கையை திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தி ஆக்குகிறீர். கர்த்தர் தம் வழிகளில் எல்லாம் நீதி உள்ளவரும், தமது கிரியைகளில் எல்லாம் கிருபை உள்ளவருமாய் இருக்கிறார். கர்த்தர் சமீபமாய் இருக்கிறார்” (வச. 16-18) என்று சங்கீதம் 145ல் தாவீது வேண்டுதல் செய்கிறார்.
நம் வாழ்வின் ஒவ்வொரு விநாடியும், தேவனுடைய நன்மையும் அக்கறையும் நம்மைத் தாங்கி, நமக்கு சுவாசிக்க காற்றும் உண்ண உணவும் அளிக்கிறது. அவர் அன்பில் நிறைந்தவராய், நுட்பமான விஷயங்களையும் தன்னுடைய கிருபையினால் படைத்தார்.
தேவனுடைய அன்பு ஆழமானது; அவர் அளிக்கும் நன்மையும் கிருபையும் முடிவில்லாதது. அவர் நித்திய வாழ்விற்கு போகும் வாசலைக் காட்டுகிறார். அவருடைய பிரசன்னத்தில் நாம் களிகூருவோம். “நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்; நேரம் போவதே தெரியாமல், நித்திய காலமாய் நான் உன்னோடு இருக்க விரும்புகிறேன்.”
சிங்கம், ஆடு, இரட்சகர்!
நியூயார்க் பொது நூலகத்தின் வாயிலை கவனிப்பதுபோன்று இரண்டு கல்லால் ஆன சிங்கங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். மார்பிள் கற்களால் செதுக்கப்பட்ட அந்த சிங்கங்கள், 1911ஆம் ஆண்டு நூலகம் நிறுவப்பட்டதிலிருந்து அங்கிருக்கிறது. அந்த நூலகத்தின் ஸ்தாபகர்களை கனப்படுத்தும் விதத்தில், துவக்கத்தில் அந்த சிங்கங்களுக்கு லியோ லெனாக்ஸ் என்றும் லியோ அஸ்டர் என்று பெயரிடப்பட்டது. ஆனால் நியூயார்க்கின் கடினமான ஒரு காலகட்டத்தில், அதின் மேயர் ப்யோரெல்லா லகார்டியா, அந்த சிங்கங்களுக்கு வலிமை மற்றும் பொறுமை என்று பெயர் மாற்றினார். நியூயார்க் மக்களுக்கு அவை இரண்டு அந்த சவாலான தருணத்தில் அவசியம் என்று கருதினார். அந்த சிங்கங்கள் இன்னும் வலிமை மற்றும் பொறுமை என்றே அழைக்கப்படுகிறது.
வேதாகமம் ஜீவனுள்ள, வலிமையான, கடினமான தருணங்களில் உற்சாகத்தை கொடுக்கும் சிங்கத்தைப் பற்றி நமக்கு அறிவிக்கிறது. அந்த சிங்கம் பல நாமங்களால் அறியப்பட்டுள்ளது. தன்னுடைய பரலோக தரிசனத்தில் அப்போஸ்தலர் யோவான், தேவனுடைய நியாயத்தீர்ப்பையும் மீட்பையும் கொண்டுள்ள யாராலும் திறக்ககூடாத ஒரு முத்திரை புஸ்தகத்தைப் பார்க்கிறார். அப்போது, “நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார்” என்று யோவானுக்கு சொல்லுகிறார் (வெளி. 5:5).
அடுத்த வசனத்தில் யோவான் புதிதான ஒன்றை காண்கிறார்: “இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கு... மத்தியிலே நிற்கக்கண்டேன்” (வச. 6). சிங்கமும் ஆட்டுக்குட்டியும் ஒரே நபர்: இயேசு. அவரே வெற்றிசிறக்கும் ராஜா. அவரே “உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி!” (யோவான் 1:29). அவருடைய பெலத்தினாலும் சிலுவையினாலும் நாம் இரக்கத்தையும் மன்னிப்பையும் பெற்றுக்கொள்கிறோம். எனவே அவர் நித்தியமானவர் என்னும் மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் நாம் வாழலாம்.