எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜேம்ஸ் பேங்க்ஸ்கட்டுரைகள்

சகோதரன் சவுல்

"ஆண்டவரே, தயவுசெய்து என்னை அங்குத் தவிர வேறு எங்கும் அனுப்புங்கள்." சுழற்சிமுறையில் பயிலிடம் மாற்றவேண்டியிருந்த மாணவனாக ஒரு வருடத்தைத் தொடங்குவதற்கு முன், ஒரு இளைஞனாக அதுவே என் ஜெபம். எங்குச் செல்வேன் என்று நான் அறியேன், ஆனால் எங்குச் செல்ல விரும்பவில்லை என்று நான் அறிவேன். நான் அந்த நாட்டின் மொழியைப் பேசவில்லை, அதன் பழக்கவழக்கங்கள் மற்றும் மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வுகளால் என் மனம் நிறைந்திருந்தது. எனவே என்னை வேறு இடத்திற்கு அனுப்பும்படி தேவனிடம் கேட்டேன்.

ஆனால் தேவன் தம் எல்லையற்ற ஞானத்தால் நான் செல்ல விரும்பாத இடத்திற்குத் துல்லியமாக என்னை அனுப்பினார். அவர் செய்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த மண்ணில் எனக்கு அன்பான நண்பர்கள் இருக்கிறார்கள்.  என் திருமணத்திற்கு என் சிறந்த நண்பர் ஸ்டீபன் அங்கே வந்தார். அவருக்கும் திருமணமாகிவிட்டது.

தேவன் மனமாற்றத்தை ஏற்படுத்தினால் அற்புதமான விஷயங்கள் நடக்கும்! அதுபோன்ற ஒரு மாற்றம் இரண்டு வார்த்தைகளால் விளக்கப்படுகிறது: "சகோதரனாகிய சவுலே" (அப்போஸ்தலர் 9:17).

அந்த வார்த்தைகள் அனனியாவிடமிருந்து வந்தவை, சவுலின் மனமாற்றத்திற்குப் பிறகு உடனடியாக அவரது பார்வையைக் குணப்படுத்த அழைக்கப்பட்டவர் (வ. 10-12). சவுலின் கடந்த காலத்தின் வன்முறை காரணமாக அனனியா முதலில் எதிர்த்தார், “உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன்.” (வச. 13) என்று ஜெபித்தார்.

ஆனால் அனனியா கீழ்ப்படிந்து சென்றார். அவர் மனம் மாறியதால், அனனியா விசுவாசத்தில் ஒரு புதிய சகோதரனைப் பெற்றார், சவுல் பவுலானார், மேலும் இயேசுவைப் பற்றிய நற்செய்தி வல்லமையுடன் பரவியது. உண்மையான மாற்றம் அவரால் எப்போதும் சாத்தியம்!

தேவன் முன் அமர்ந்திருத்தல்

உயிருள்ள ஒரு நபரின் முதல் புகைப்படம் 1838 இல் லூயிஸ் டாகுரே என்பவரால் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படம் ஒரு மதிய நேரத்தில் பாரீஸில் உள்ள ஒரு வெற்று நுழைவாயிலிருந்த ஒரு உருவத்தைச் சித்தரிக்கிறது. ஆனால் அதில் ஒரு தெளிவான மர்மம் இருக்கிறது; அந்த நேரத்தில் தெரு, நடைபாதை வண்டிகள் மற்றும் பாதசாரிகளின் போக்குவரத்தால் பரபரப்பாக இருந்திருக்க வேண்டும், ஆனால் அந்தப் படத்தில் அவ்வாறாக இல்லை

அந்த மனிதன் தனியாக இல்லை. புகைப்படம் எடுக்கப்பட்ட பிரபலமான பகுதியான "புலவர்ட் டு டெம்பிள்" இல் மக்கள் இருப்பார்கள். குதிரைகள் இருக்கும். அந்தப் படத்தில் அவ்வாறாகக் காட்டப்படவில்லை. புகைப்படத்தைச் செயலாக்குவதற்கான ஒளிப்படப்பிடிப்பு நேரம் (டாகுவேரியோ வகை ஒளிப்பட முறை என்பது பொதுப் பயன்பாட்டிற்கு வந்த முதல் ஒளிப்படப்பிடிப்பு முறை ஆகும்) ஒரு படத்தைப் பிடிக்க ஏழு நிமிடங்கள் எடுக்கும். அந்த நேரத்தில் அசைவில்லாமல் இருக்க வேண்டும். நடைபாதையில் இருந்த ஒரே நபர் புகைப்படம் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது, ஏனெனில் அவர் மட்டுமே அசையாமல் நின்று கொண்டிருந்தார். அவர் தனது காலணிகளை சுத்தப்படுத்திக்  கொண்டிருந்தார்..

சில நேரங்களில் நிலைத்திருத்தல் என்பது செயலாலும் மற்றும் முயற்சியாலும் செய்ய முடியாததைச் செய்து முடிக்கிறது. சங்கீதம் 46:10ல், தேவன் தம்முடைய மக்களிடம், "நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்" எனக் குறிப்பிடுகிறார். "ஜாதிகள் கொந்தளிக்கும்போது" (வச.6), "பூமி நிலைமாறினாலும்” (வச.2), அமைதியாக அவரை நம்புபவர்கள், "ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணை" யை  அவரில் கண்டடைவார்கள் (வச. 1).

"அமைதியாக இரு" என்று மொழிபெயர்க்கப்பட்ட எபிரேய வினைச்சொல் "முயற்சியை நிறுத்து" என்றும் குறிப்பிடுகிறது. நமது வரம்புக்குட்பட்ட முயற்சிகளில் நம்பிக்கை வைப்பதைக் காட்டிலும் நாம் தேவனில் இளைப்பாறும் போது, அவரே நம் அசைக்க முடியாத “அடைக்கலமும் பெலனும்" (வச. 1) என்று காண்கிறோம்.

தேவனுக்கு செவிகொடுத்தல்

எனது கல்லூரிக்கும், பாலைவனத்திலிருந்த என் வீட்டுக்குமான  சாலை வெறுமையாக இருந்ததால், நான் எனது வாகனத்தை சற்று வேகமாக ஓரிருமுறை ஓட்டினேன். காரணம் அந்த சாலை நீண்ட, நெடிய சாலை. முதலில் நெடுஞ்சாலை காவல்துறையிடமிருந்து எனக்கு ஒரு எச்சரிக்கை வந்தது. பின்னர் அபராத சீட்டு வந்தது. என் வாகனத்தின் வேகத்தை நான் மறுபடியும் குறைக்காததால், இரண்டாவது தடவையாக, அதே இடத்தில் நான் பிடிபட்டேன்‌.                         

செவிசாய்க்க மறுப்பதால், விபரீதமான பின்விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும். இத்தகைய மோசமான உதாரணத்தை, நல்லவனாய் மற்றும் உண்மையான ராஜாவாயிருந்த யோசியாவின் வாழ்க்கையில் நாம் காண முடியும். எகிப்தின் ராஜாவாகிய நேகோ, அசீரியர்களுக்கு உதவுவதற்காக பாபிலோனுக்கு விரோதமாகப் படையெடுத்து வந்தபோது, யோசியா அவனுக்கு விரோதமாக வந்தான். நேகோ, யோசியாவிடம் ஸ்தானாபதிகளை அனுப்பி ,"நான் இப்போது உமக்கு விரோதமாய் அல்ல என்னோடே யுத்தம் பண்ணுகிற ஒருவனுக்கு விரோதமாய்ப் போகிறேன்; நான் தீவிரிக்க வேண்டுமென்று தேவன் சொன்னார்; தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காதபடிக்கு அவருக்கு எதிரிடை செய்வதை விட்டுவிடும் என்று சொல்லச் சொன்னான்" (வ.21). தேவனே நேகோவை அனுப்பியிருந்தார். யோசியா அதற்கு செவிகொடாமல் மெகிதோவின் பள்ளத்தாக்கிலே யுத்தம் பண்ணுவதற்கு வந்தான் (வ.22). யோசியா மிகவும் காயப்பட்டு மரணமடைந்தான், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யாவரும் அவனுக்காக துக்கம் கொண்டாடினார்கள் (வ.24).

தேவனை நேசித்த யோசியா, அவருக்கும், பிறர் மூலம் தனக்குக் கிடைத்த அவரின் ஞானத்திற்கும் செவிசாய்க்க நேரம் ஒதுக்காததால், தன் சுயவழிகளை நம்புவது நல்லதல்ல என்பதைக் கண்டுகொண்டான். நம்மை நாம் எப்பொழுதும் சோதித்துப் பார்க்கவும், தேவ ஞானத்தைப் பெற்றுக் கொள்ளவும் தேவன்தாமே நமக்குத் தாழ்மையைத் தந்து உதவுவாராக.                  

தேவனால் ஒருபோதும் புறக்கணிக்கப்படவில்லை

“சில நேரங்களில் நான் ஏதோ கண்ணுக்கே தெரியாதவள் போல உணர்கிறேன்" விமலா தன் தோழியிடம் பேசும்போது இந்த வார்த்தைகள் காற்றில் ஊசலாடின. விமலாவை அவள் சிறு குழந்தைகளுடன் கைவிட்டு, அவளது கணவன் வேறொறுவளோடு போய்விட்டான். அவள், "நான் அவருக்கு என் வாழ்விலேயே சிறந்த ஆண்டுகளைக் கொடுத்தேன். இப்போது யாரேனும் என்னைப் பார்த்துக்கொள்வார்கள் என்றோ என்னை அறிவதற்கு நேரம் ஒதுக்குவார்களோ என்று எனக்குத் தெரியவில்லை" என்றாள்.

அவளுடைய தோழி பதிலளித்தாள்: "நான் மிகவும் வருந்துகிறேன். எனக்கு ஆறு வயதாக இருந்தபோது என் அப்பாவும் போய்விட்டார். அது எங்களுக்கு, குறிப்பாக அம்மாவுக்குக் கடினமாக இருந்தது. ஆனால் ஒரு இரவில் அவள் என்னைத் தூங்கவைத்த போது, நான் மறக்கவே இல்லாத ஒன்றைச் சொன்னால்: 'தேவன் தன் கண்களை மூடுவதேயில்லை'. நான் வளர்ந்த பிறகு, ​​தேவன் என்னை நேசிப்பதையும், எனக்கு எப்போதும் தூங்கும்போதும் கூட காவலாய் இருப்பதையும் அவள் எனக்குக் கற்பிக்க முயன்றதை விலக்கினாள்".

சீனாய் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த ஒரு சவாலான நேரத்தில் தமது ஜனங்களுடன் பகிர்ந்துகொள்ள மோசேக்குத் தேவன் அருளிய வார்த்தைகளை வேதாகமம் முன்வைக்கிறது: “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே” (எண்ணாகமம் 6:24-26). இந்த ஆசீர்வாதமானது ஜனங்கள் மீது ஆசாரியர்களால் மொழியப்பட வேண்டும்..

யாராவது நம்மைப் பார்க்கிறார்களா அல்லது உண்மையிலேயே புரிந்துகொள்கிறார்களா என்று நாம் ஏங்குகிற நிலைமையான வாழ்க்கையின் வனாந்தரங்களில் கூட தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். தேவனின் தயவான அவரது பிரகாசிக்கும் முகமும் மாறிடாத அன்பும் அவரை நேசிப்பவர்களை நோக்கித் திரும்புகிறது, நம்முடைய வலியினிமித்தம், அவரை நம்மால் உணர முடியாவிட்டாலும் கூட, தேவனுக்கு மறைவானவர்கள் என்று யாரும் இல்லை.

தேவனோடு புதிய துவக்கம்

"உன் பாவமும் இயேசுவைச் சிலுவையில் அறைந்ததா?" டச்சு ஓவியர் ரெம்ப்ராண்ட் 1633 ஆம் ஆண்டு வரைந்த தலைசிறந்த படைப்பான "தி ரைசிங் ஆஃப் தி கிராஸ்" -இல் கேட்கும் கேள்வி இதுவே. அந்த ஓவியத்தின் மையத்தில்,  இயேசு சிலுவையில் உயர்த்தி பிடிக்கப்பட்டிருக்கிறார். நான்கு பேர் அவரை சிலுவையோடு தூங்குகிறார்கள். ஆனால் அதில் ஒருவர் இயேசுவைச் சுற்றி இருந்த வெளிச்சத்தில் நிற்கிறார். அவர் அணிந்திருந்த ஆடை வித்தியாசமாயிருந்தது; அவர் ரெம்ப்ராண்ட் வாழ்ந்த காலத்திலிருந்த ஆடையை அணிந்திருந்தார். ஓவியர் அடிக்கடி அணிந்த தொப்பியையும் அணிந்திருந்தார். அவரது முகத்தை உற்று நோக்கினால், ரெம்ப்ராண்ட் தன்னையும் அந்த ஓவியத்தில் இணைத்துள்ளார், அது "இயேசுவின் மரணத்திற்கு என் பாவங்களும் காரணம்" என்று சொல்லுவது போலிருந்தது.

ஆனால், அதில் தனித்து நிற்கும் இன்னொருவரும் இருக்கிறார். அவர் குதிரையில் இருக்கிறார், ஓவியத்திலிருந்து பார்வையாளர்களை நேரடியாகப் பார்க்கிறார். சிலர் இதை ரெம்ப்ராண்டின் இரண்டாவது சுய உருவப்படமாகப் பார்க்கிறார்கள், "நீங்கள் இன்னும் இங்கே வரவில்லையா?" என்று பார்வையாலே தன்னை கவனிக்கும் அனைவரையும் கேட்பது போல் உள்ளது.

பவுல் தன்னையே அங்குக் கண்டார். நாமும் நம்மைக் காணலாம், காரணம் இயேசு நமக்காகவும் பாடுபட்டு மரித்தார். ரோமர் 5:10 இல், பவுல் தன்னையும் நம்மையும் "தேவனுக்குச் சத்துருக்கள்" என்று குறிப்பிடுகிறார். ஆனால் நம்முடைய பாவங்கள் இயேசுவின் மரணத்திற்குக் காரணமாயினும், அவருடைய மரணம் நம்மைத் தேவனோடு ஒப்புரவாக்குகிறது: "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்" (வ.8).

பாவமன்னிப்பு தேவைப்படும் பாவிகளாக ரெம்ப்ராண்ட் மற்றும் பவுலுடன் நாமும் நிற்கிறோம். தேவனுடனான புதிய ஆரம்பம் என்ற நமது ஆழ்ந்த தேவையை அவருடைய சிலுவையின் மூலம் இயேசு நமக்குப் பூர்த்தி செய்கிறார். இதை நமக்காக நாமே ஒருபோதும் செய்திட முடியாது.

ஊக்கமளிக்கும் மக்கள்

"தீவரமான ஊக்கம்", லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் எனும் காவிய தொகுப்பை எழுதும்போது ஜே.ஆர்.ஆர். டோல்கியன், தனது நண்பரும் சக எழுத்தாளருமான சி.எஸ்.லூயிஸ் தனக்களித்த தனிப்பட்ட ஆதரவை விவரிக்கப் பயன்படுத்திய சொற்றொடர் இது. இந்த எழுத்து தொடரில், டோல்கீனின் பணி கடினமானதாகவும் பிழையற்றதுமாக இருந்தது, மேலும் அவர் தனிப்பட்ட முறையில் இரண்டு முறைக்கு மேல் நீண்ட கையெழுத்துப் பிரதிகளைத் தட்டச்சு செய்தார். அவர் அவைகளை லூயிஸிடம் அனுப்பியபோது, ​​"நீண்ட வருடங்கள் அதற்காக நீங்கள் செலவழித்தது நியாயமானது" என்று லூயிஸ் பதிலளித்தார்.

வேதாகமத்தில் நன்கு அறியப்பட்ட ஊக்குவிப்பாளர், சீப்புருவை சேர்ந்த யோசே ஆவார். அவர் பர்னபா ("ஆறுதலின் மகன்" என்று பொருள்) என்று அழைக்கப்படுகிறார், அப்போஸ்தலர்கள் அவருக்குக் கொடுத்த பெயர் (அப்போஸ்தலர் 4:36). பவுலுக்காக அப்போஸ்தலர்களிடம் வாதிட்டவர் பர்னபா (9:27). பின்னர், யூதரல்லாத விசுவாசிகள் இயேசுவில் நம்பிக்கை வைக்கத் தொடங்கியபோது பர்னபா, ​"சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான்" (11:23) என்று லூக்கா நமக்கு கூறுகிறார். லூக்கா அவரை, "அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்" என்று விவரிக்கிறார், மேலும் அவரால் "அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்" (வச. 24) என்கிறார்.

ஊக்கமளிக்கும் வார்த்தைகளின் மதிப்பை அளவிட இயலாது. விசுவாசமும் அன்பும் கொண்ட வார்த்தைகளை நாம் பிறரிடம் பகிருகையில், "நித்திய ஆறுதலை" (2 தெசலோனிக்கேயர் 2:16) அளிக்கும் தேவனானவர், ஒருவரின் வாழ்வை நித்தியகாலத்திற்கும் மாற்றிடும்படி நாம் பகிா்ந்துகொள்வதை வைத்து கிரியை செய்வாராக. இன்று ஒருவருக்கு ""தீவரமான ஊக்கம் " வழங்க அவர் நமக்கு உதவுவாராக!

அளவிடமுடியா இரக்கம்

இரண்டு நண்பர்கள் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடையில் மடிக்கணினி வாங்கச் சென்றபோது, ​​அவர்கள் கூடைப்பந்து ஜாம்பவான் ஷாகில் ஓ'நீலை சந்தித்தனர். ஓ'நீல், சமீபத்தில்தான் தனது சகோதரி மற்றும் தனது முன்னாள் சக வீரரின் இழப்பை அனுபவித்தார் என்பதை அறிந்திருந்த அவர்கள், பரிவுணர்வோடு தங்கள் இரங்கலைத் தெரிவித்தனர். பின்னர் இருவரும் கடைக்குத் திரும்பிய பிறகு, ஷக் அவர்களை அணுகி, அவர்களுக்கான சிறந்த மடிக்கணினியைத் தெரிவு செய்யும்படி சொன்னார். பின்னர் அவர் அதை அவர்களுக்காக வாங்கினார், ஏனெனில் அவர்கள் அவரை ஒரு கடினமான நேரத்தைக் கடக்கும் ஒரு நபராகப் பார்த்ததினால், அவர்களின் இரக்கத்தால் ஈர்க்கப்பட்டார்.

அந்த சந்திப்பிற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, சாலொமோன், "தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மைசெய்துகொள்ளுகிறான்" (நீதிமொழிகள் 11:17) என எழுதினார். பிறரின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உதவவும் ஊக்குவிக்கவும் நம்மால் முடிந்ததைச் செய்யும்போது, ​​நாமும் பலனடைகிறோம். இது வெறும்  மடிக்கணினியோ  அல்லது மற்ற பொருட்கள் பற்றினதோ மட்டுமல்ல, ஆனால் இந்த உலகம் அளவிட முடியாதபடி தேவன் நம்மை ஆசீர்வதிக்கும் வழிமுறைகளைக் கொண்டுள்ளார், "நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ மானத்தைக் காப்பாள்; பராக்கிரமசாலிகள் ஐசுவரியத்தைக் காப்பார்கள்" (வ.16) என்று சாலொமோன் அதே அத்தியாயத்தில் முன்பு ஒரு வசனத்தை விளக்கியது போல். தேவனிடம் பணத்தைக் காட்டிலும் அதிக மதிப்புள்ள பரிசுகள் உள்ளன, மேலும் அவர் தனது பரிபூரண ஞானத்திலும் வழிமுறைகளில் அவற்றைத் தாராளமாக அளந்து பகிர்கிறார்.

இரக்கமும் பெருந்தன்மையும் தேவனின் சுபாவத்தை ஒரு பகுதியாகும், ஆகவே அவை நம் சொந்த உள்ளங்களிலும் வாழ்க்கையிலும் வெளிப்படுவதைக் காண அவர் விரும்புகிறார். சாலொமோன் இந்த காரியத்தை இரத்தின சுருக்கமாக : "எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்" (வ. 25) என்றார்.

எல்லைகளைக் கடந்த அன்பு

“தேவன் எங்களுக்கு மிகவும் நல்லவராக இருந்தார்! எங்கள் திருமண  ஆண்டுவிழாவிற்காக நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்"  ராதாவின் குரல் சீராக இருந்தது, அவள் கண்களில் கண்ணீர் அவளது உண்மையைக் காட்டியது. எங்களுடைய சிறிய குழுவிலிருந்தவர்கள் மிகவும் மனம் நெகிழ்ந்தனர். ராதாவுக்கும் அவரது கணவருக்கும் கடந்த வருடங்களில் என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும். ஒரு விசுவாசி என்றாலும், ராகுல் திடீரென கடுமையான மனநோயால் பாதிக்கப்பட்டார் மேலும் அவர்களின் நான்கு வயது மகளின் உயிரைப் பறித்தார். அவர் பல ஆண்டுகள் மனநல காப்பகத்தில் இருக்க வேண்டியிருந்தது, ஆனால் ராதா அவரைச் சந்தித்தார், மேலும் தேவன் அற்புதமாகக் குணப்படுத்தினார், அவளை மன்னிக்க உதவினார். ஆழ்ந்த மனவேதனைகள் இருந்தபோதிலும், அவர்களுக்கிடையேயான அன்பு வளர்ந்தது.

அத்தகைய அன்பும் மன்னிப்பும் ஒரே ஒரு ஆதாரத்திலிருந்து மட்டுமே வர முடியும். தாவீது தேவனைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார், “அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும்.. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.” (சங்கீதம் 103:10, 12).

தேவன் நமக்குக் காண்பிக்கும் இரக்கமானது அவருடைய அளவிடப்படமுடியா அன்பின் மூலம் வருகிறது: “பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ.. அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது” (வ.11). அந்த மிகவும் ஆழமான அன்பு அவரை சிலுவை மற்றும் கல்லறையின் ஆழத்திற்குச் சென்று நம்முடைய பாவங்களைப் போக்கும்படி தூண்டியது, இதனால் "அவரை ஏற்றுக்கொண்டவர்கள்" (யோவான் 1:12) அனைவரையும் அவர் தம்மிடமாய் கொண்டு வர முடியும்.

"தேவன் எங்களுக்கு மிகவும் நல்லவராக இருக்கிறார்!" ராதா சொன்னது சரிதான். அவருடைய அன்பும் மன்னிப்பும் நினைத்துப்பார்க்க முடியாத எல்லைகளுக்கு அப்பால் சென்று நித்திய வாழ்வை நமக்களிக்கிறது.

கண்டு விசுவாசிக்கும்போது

“நான் பார்ப்பதை என்னால் நம்ப முடியவில்லை!” என் மனைவி, காரி, என்னை ஜன்னலுக்கு அழைத்து, எங்கள் முற்றத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை எங்கள் வேலிக்கு வெளியே உள்ள காடுகளில் ஒரு வயது முதிர்ந்த பெண்மானைக் காட்டினாள். எங்கள் வீட்டு வேலிக்குள் இருந்த பெரிய நாய்கள், வேகமாய் அந்த மானை நோக்கி ஓடின, ஆனால் அவைகளைப் பார்த்து குரைக்கவில்லை. ஏறக்குறைய ஒரு மணி நேரம் அவைகள் முன்னும் பின்னுமாக நடந்தன. அந்த பெண் மான் நின்று நாய்களைப் பார்த்தபோது, நாய்களும் தங்கள் முன்னங்கால்களை நேராக்கிக் கொண்டு, மீண்டும் ஓடத் தயாரான நிலையில், மீண்டும் குனிந்துகொண்டன. இது வேட்டையாடும் விலங்கினத்தின் வழக்கமான நடத்தை இல்லை. அந்த பெண் மானும் நாய்களும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தன. ஒருவருக்கொருவர் சகவாசத்தை அனுபவித்துக்கொண்டிருந்தன!

காரிக்கும் எனக்கும், அந்த நிகழ்வு வரப்போகிற தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்த காட்சியைக் காண்பித்தது. ஏசாயா தீர்க்கதரிசி, “இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்” (ஏசாயா 65:17) என்ற வார்த்தைகளுடன் தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிய தேவனுடைய வாக்குத்தத்தத்தை அறிவிக்கிறார். மேலும்; “ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்” (வச. 25) என்றும் கூறுகிறார். இனி வேட்டையாடுதல் இல்லை. அவர்கள் வெறும் நண்பர்களாகவே இருப்பர். 

தேவனுடைய நித்திய ராஜ்யத்தில் மிருக ஜீவன்கள் இடம்பெற்றிருக்கும் என்பதை ஏசாயாவின் வார்த்தைகள் நமக்குக் காண்பிக்கின்றன. தேவன் தனது படைப்பிற்காக, குறிப்பாக “தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு” என்னென்ன ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறார் என்பதை அவை நமக்கு சுட்டிக்காட்டுகின்றன (1 கொரிந்தியர் 2:9). அது எவ்வளவு அழகான இடமாக இருக்கப்போகிறது! விசுவாசத்தின் மூலம் நாம் அவரை நம்பும்போது, அவருடைய சமூகத்தில் நித்திய காலமாய் இளைப்பாறுதலை அனுபவிக்கக்கூடிய யதார்த்தத்தை நாம் காணும்படிக்கு அவர் நம்மை பெலப்படுத்துகிறார். 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் கேட்கிறார்

நடிகரும், தற்காப்புக் கலைஞருமான சக், தனது தாயாரின் நூறாவது பிறந்தநாளில், தனது மனமாற்றத்திற்கு அவர் எவ்வளவு உதவியாக இருந்தார் என்பதைப் பகிர்ந்துகொண்டு அவரது தாயைக் கௌரவித்தார். "அம்மா விடாமுயற்சி மற்றும் நம்பிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு" என்று அவர் எழுதினார். மகா பஞ்சகாலத்தில், தன் மூன்று ஆண் குழந்தைகளைத் தானே பராமரித்தாள்; இரண்டு வாழ்க்கைத் துணைவர்கள், ஒரு மகன், ஒரு வளர்ப்பு மகன் மற்றும் பேரக்குழந்தைகளின் மரணங்களைச் சகித்தாள்; மற்றும் பல அறுவை சிகிச்சைகளை தாங்கினாள். "சிறிதோ, பெரிதோ [அவள்] என் வாழ்நாள் முழுவதும் எனக்காக ஜெபித்தாள்." என்றவர் மேலும், "திரைத்துறையில் என்னை அர்ப்பணிக்கையிலும், அவள் என் வெற்றி மற்றும் இரட்சிப்புக்காக வீட்டில் ஜெபித்தாள்." என்றும், " நான் எவ்வாறு இருக்கவேண்டுமோ, இருக்க கூடுமோ அவ்வாறே என்னைத் தேவன் மாற்றியதற்காக என் அம்மாவுக்கு நன்றி." என்று முடித்தார்.

சக்கின் தாயின் பிரார்த்தனைகள் அவருக்கு இரட்சிப்பையும், தேவனுக்குப் பயந்த மனைவியையும் கண்டறிய உதவியது. அவள் தன் மகனுக்காக ஊக்கமாக ஜெபித்தாள், தேவன் அவளுடைய ஜெபங்களைக் கேட்டார். எப்பொழுதும் நமது ஜெபங்களுக்கு நாம் விரும்பும் விதத்தில் பதில் கிடைப்பதில்லை, எனவே ஜெபத்தை மந்திரக்கோலாகப் பயன்படுத்த முடியாது. இருப்பினும் யாக்கோபு, "நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.” (5:16) என்று நமக்கு உறுதியளிக்கிறார். இந்த அம்மாவை போலவே, நோயுற்றவர்களுக்காகவும், பிரச்சனையில் இருப்பவர்களுக்காகவும் நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும் (வவ. 13-15). அவளைப் போலவே, நாம் ஜெபத்தின் மூலம் தேவனுடன் தொடர்பு கொள்ளும்போது, உற்சாகத்தையும் அமைதியையும், ஆவியானவர் செயல்படுகிறார் என்ற உறுதியையும் கண்டுகொள்கிறோம்.

உங்கள் வாழ்க்கையிலுள்ள யாருக்காவது ஒருவருக்கு இரட்சிப்பு அல்லது குணமடைதல் அல்லது உதவி தேவையா? விசுவாசத்துடன் உங்கள் ஜெபங்களைத் தேவனிடம் கொண்டுசெல்லுங்கள். அவர் கேட்கிறார்.

சொல்லும் அறை

ஒற்றுமை மற்றும் நட்பை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான வழியை வடக்கு ஸ்பெயின் உருவாக்கியது. கையால் செய்யப்பட்ட குகைகள் நிறைந்த கிராமப்புறங்களில், ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் சில விவசாயிகள் ஒரு குகைக்கு மேலே கட்டப்பட்ட ஒரு அறையில் அமர்ந்து, உணவுகளையும் இருப்பு வைப்பார்கள். காலப்போக்கில், அந்த அறை "சொல்லும் அறை" என்றானது. நண்பர்களும் குடும்பத்தினரும் தங்கள் கதைகள், ரகசியங்கள் மற்றும் கனவுகளைப் பகிர்ந்து கொள்ள ஒன்றுகூடும் இடமானது. நம்பிக்கையான நண்பர்களின் நெருக்கமான உறவாடுதல் உங்களுக்குத் தேவைப்பட்டால், நீங்கள் “சொல்லும் அறை”க்குச் செல்வீர்கள்.

அவர்கள் வடக்கு ஸ்பெயினில் வாழ்ந்திருந்தால், யோனத்தானும் தாவீதும் பகிர்ந்து கொண்ட ஆழமான நட்பு அவர்களை ஒரு சொல்லும் அறையை உருவாக்க வழிவகுத்திருக்கலாம். தாவீதைக் கொல்ல வேண்டும் என்று சவுல் ராஜா மிகவும் பொறாமைப்பட்டபோது, சவுலின் மூத்த மகனான யோனத்தான் அவரைப் பாதுகாத்து நண்பனானார். இருவரின் ஆத்துமாக்களும் "ஒன்றாய் இசைந்திருந்தது" (1 சாமுவேல் 18:1). மேலும் யோனத்தான் "ஆத்துமாவைப் போலச்" சிநேகித்தான் (வவ. 1, 3). மேலும், தானே அரியணைக்கு வாரிசாக இருந்தபோதிலும், ராஜாவாக தாவீதின் தெய்வீகத் தேர்ந்தெடுப்பையும் அங்கீகரித்தார். அவன் தாவீதுக்கு அவனுடைய மேலங்கி, வாள், வில், கச்சை ஆகியவற்றைக் கொடுத்தான் (வச. 4). பின்னர், தாவீது யோனத்தானின் நண்பராக அவர் மீது கொண்டிருந்த ஆழ்ந்த அன்பு ஆச்சரியமாயிருந்தது என்று அறிவித்தார் (2 சாமுவேல் 1:26).

இயேசுவின் விசுவாசிகளாக, கிறிஸ்துவைப் போன்ற அன்பையும் அக்கறையையும் பிரதிபலிக்கும் நட்பைக் கட்டியெழுப்ப அவர் நமக்கு உதவட்டும். நண்பர்களுடன் நேரம் ஒதுக்கவும், நம் இதயங்களைத் திறக்கவும், அவரில் ஒருவருக்கொருவர் உண்மையான ஒற்றுமையுடன் வாழவும் செய்வோமாக..

கிருபையின் மறுதொடக்கம்

கடந்த பல தசாப்தங்களாக திரைப்பட சொற்களஞ்சியத்தில் ஒரு புதிய சொல் நுழைந்துள்ளது, அது "மறுதொடக்கம்". திரைத்துறை பாணியில், ஒரு பழைய கதையை அதை மறுதொடக்கம் செய்து ஆரம்பிப்பதாகும். சில மறுதொடக்கங்கள் ஒரு அசகாய சூரனை பற்றியோ கற்பனை படைப்பு போன்றோ பழக்கமான கதையை மீண்டும் கூறுகின்றன. மற்ற மறுதொடக்கங்கள் அதிகம் அறியப்படாத கதையை எடுத்து புதிய வழியில் அக்கதையை மறுபரிசீலனை செய்கின்றன. ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மறுதொடக்கம் என்பது மீண்டும் செய்வது போன்றது. இது ஒரு புதிய தொடக்கம், பழையதான ஒன்றுக்கு புதிய வாழ்வு கொடுக்கப்படுகிறது.

மறுதொடக்கங்களை உள்ளடக்கிய மற்றொரு கதை உள்ளது, அது நற்செய்தி கதை. அதில், இயேசு தம்முடைய மன்னிப்பு, பரிபூரணம் மற்றும் நித்திய ஜீவனுக்கு நம்மை அழைக்கிறார் (யோவான் 10:10). புலம்பல் புத்தகத்தில், எரேமியா நமக்குத் தேவனின் அன்பு ஒவ்வொரு நாளையும் கூட ஒரு வகையில் மறுதொடக்கம் செய்கிறதை நமக்கு நினைவூட்டுகிறார்: " நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.” (3:22-23).

தேவனின் கிருபையானது, ஒவ்வொரு நாளையும் அவருடைய உண்மைத்தன்மையை அனுபவிக்க ஒரு புதிய வாய்ப்பாக ஏற்றுக்கொள்ள நம்மை அழைக்கிறது. நம்முடைய சொந்த தவறுகளின் விளைவுகளுடன் நாம் போராடினாலும் அல்லது வேறு பல கஷ்டங்களைச் சந்தித்தாலும் தேவனின் ஆவியானவர் ஒவ்வொரு புதிய நாளிலும், மன்னிப்பு,  புதிய வாழ்க்கை மற்றும் நம்பிக்கையை அருள முடியும். ஒவ்வொரு நாளும் ஒரு வகையான மறுதொடக்கம் ஆகும். நமது சிறந்த இயக்குநரின் வழியைப் பின்பற்றுவதற்கான ஒரு வாய்ப்பு.  அவர் நம் கதையை அவரது பெரிய கதையில் ஒன்றாய் பின்னுகிறார்.