எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜேம்ஸ் பேங்க்ஸ்கட்டுரைகள்

எஜமானனா அல்லது ஊழியனா

"நான் எஜமானனா அல்லது ஊழியனா?", பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தனது குடும்பத்திற்கு எது சிறந்தது என்று ஆராயும்போது இந்தக் கேள்வியை தனக்குத்தானே கேட்டுக் கொண்டார். திரளான செல்வத்தால் வரக்கூடிய சோதனைகளைப் பற்றி நன்கு அறிந்த அவர், அந்த சவாலை தனது வாரிசுகளும் எதிர்கொள்ள விரும்பவில்லை. எனவே அவர் தனது நிறுவனத்தின் உரிமையை கைவிட்டு, தனது அதிகார பங்குகளில் 100 சதவீதத்தையும் ஒரு அறக்கட்டளைக்கு கையளித்தார். தனக்குச் சொந்தமான அனைத்தும் தேவனுக்கே சொந்தமானது என்பதை அவர் புரிந்துகொண்டது, தனது குடும்பம் வேலை செய்து சம்பாதிக்கும்படி தீர்மானிக்க அவருக்கு உதவியது. அதே நேரத்தில் வருங்கால லாபத்தை தேவனின் ஊழியத்திற்கு நிதியளிப்பதற்காக பயன்படுத்தவும் உதவியது.

சங்கீதம் 50:10 இல் தேவன் தனது ஜனங்களிடம், "சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்" என்கிறார். சர்வத்தையும் சிருஷ்டித்தவரான அவருக்கு நம்மிடம் ஒன்றும் தேவையுமில்லை, அவர் யாரிடமும் கடன்பட்டவருமல்ல. "உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை" (வ.9) என்கிறார். நமக்குள்ளவற்றையும், நாம் பயன்படுத்தும் அனைத்தையும் அவர் தாராளமாக வழங்குகிறார். மேலும் வேலை செய்ய பெலனையும் திறனையும் அளிக்கிறார். இப்படியிருக்க, சங்கீதம் சொல்வதுபோல அவரே நமது மனமார்ந்த ஆராதனைக்கு பாத்திரர்.

தேவனே அனைத்துக்கும் சொந்தக்காரர். ஆனால் அவருடைய நற்குணத்தின் காரணமாக, அவர் தன்னைத் தானே கொடுக்கத் தெரிந்துகொண்டார். தம்மிடம் வரும் எவருடனும் உறவை ஏற்படுத்துகிறார். இயேசு "ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யுவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார்" (மாற்கு 10:45). ஈவுகளை காட்டிலும் ஈந்தவரை நாம் மதித்து ஈவுகளைக் கொண்டு அவருக்கு ஊழியஞ்செய்கையில், அவருக்குள் என்றென்றும் களிகூரும் பாக்கியமடைவோம்.

கிறிஸ்துவின் அடிச்சுவடில்

மன்னர் குடும்பம் அணியும் விலைமிக்க காலணிகளை அணிந்தால் எப்படி இருக்கும்? கப்பல் பணியாளர் மற்றும் செவிலியரின் மகளான ஏஞ்சலா கெல்லி அதை அறிவாள். மறைந்த மகாராணி எலிசபெத்திற்குக் கடந்த இரண்டு தசாப்தங்களாக அதிகாரப்பூர்வ ஆடை வடிவமைப்பாளராகவும் கெல்லி இருந்தார். வயதான மகாராணியின் புதிய காலணிகளை பழக்குவிப்பதற்காக, அதை அணிந்து அரண்மனை மைதானத்தைச் சுற்றி நடப்பது அவளது பொறுப்புகளில் ஒன்றாகும். அதற்குக் காரணம் இருந்தது; அவர்கள் ஒரே காலணி அளவை உடையவர்கள், மகாராணி சில நேரங்களில் அரண்மனை விழாக்களில் நீண்ட நேரம் நிற்க வேண்டியது இருக்கும், கெல்லிக்கு வயதான மகாராணியின் மீதுள்ள இரக்கத்தால் இந்த அசௌகரியத்திற்கு உதவ முடிந்தது.

எலிசபெத் மகாராணிக்குத் தனிப்பட்ட முறையில் கெல்லி செய்யும் இந்தக் காரியம், கொலோசேயா் (இக்கால துருக்கியின் ஒரு பகுதி) சபைக்கு பவுல் எழுதின, " . . .இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு " (கொலோசெயர் 3:12) என்ற ஊக்கமான வார்த்தைகளைச் சிந்திக்கச் செய்கிறது. நம் வாழ்க்கை "அவர்மேல் கட்டப்பட்ட(தாக)" (2:6) இருக்கையில், நாம் "தேவனால் தெரிந்துகொள்ளப் பட்ட பரிசுத்தரும் பிரியருமாய்" இருப்போம் (3:12). நம்முடைய "பழைய மனுஷனை" களைந்துபோட்டு, "புதிய மனுஷனை"த் தரித்துக்கொள்ள (வ. 9-10) அவர் நமக்கு உதவுகிறார். எனவே தேவன் நம்மை நேசித்து மன்னித்ததால், மற்றவர்களை நேசிப்பவர்கள் மற்றும் மன்னிப்பவர்களாக வாழலாம் (வ.13-14).

தங்கள் அனுதின போராட்டங்களில் இரக்கம் வேண்டி, தங்களைப் புரிந்து தங்கள் "காலணிகளை" நாம் அணியும்படி தேவையிலுள்ளவர்கள் நம்மைச் சுற்றிலும் உண்டு. நாம் அவ்வாறு செய்கையில், நமக்காக எப்போதும் இரக்கத்துடன் இருக்கும் ராஜாவாம் இயேசுவின் கால்சுவடுகளில் நடக்கிறோம்.

எண்ணிமுடியாத அன்பு

“நான் உன்னை எப்படி நேசிப்பது? அதற்கான வழிகளை யோசிக்கிறேன்.” போர்;ச்சுகீசிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட எலிசபெத் பாரெட் பிரவுனிங்கினின் அந்த வார்த்தைகள் ஆங்கில மொழியில் மிகவும் பிரபலமான கவிதைகளில் ஒன்றாகும். அவர்கள் திருமணத்திற்கு முன்பு ராபர்ட் பிரவுனிங்கிற்கு அவ்வாறு கவிதை எழுதினாராம். அக்கவிதையைப் பார்த்து ராபர்ட் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, அந்த முழு கவிதைத் தொகுப்பையும் பிரசுரிக்குமாறு ஊக்குவித்தாராம். அக்கவிதை தொகுப்பின் மொழியானது மிகவும் மென்மையாக இருப்பதினாலும் தனிப்பட்ட ரீதியில் இருப்பதினாலும், பாரெட் அவற்றை போர்;ச்சுகீசிய எழுத்தாளரின் எழுத்துக்களைப் போல அவற்றை வெளியிட்டாராம். 

மற்றவர்களிடம் அன்பை வெளிப்படையாக வெளிப்படுத்தும்போது சில சமயங்களில் நாம் சங்கடமாக உணரலாம். ஆனால் வேதாகமம், தேவனுடைய அன்பை பிரபல்யப்படுத்துவதில் சற்றும் தயங்கவில்லை. எரேமியா தீர்க்கதரிசி, “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்” (எரேமியா 31:3) என்று தேவன் தன் ஜனத்தின் மீது வைத்திருக்கும் மென்மையான அன்பை விளங்கப்பண்ணுகிறார். ஜனங்கள் தேவனை விட்டு திரும்பினாலும், தேவன் அவர்களை மீண்டும் தன்னிடமாய் சேர்த்துக்கொள்ளுகிறார். “இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடப்போகிறேன்” (வச. 2) என்று தேவன் வாக்குப்பண்ணுகிறார். 

இயேசு, தேவனுடைய மறுசீரமைக்கும் அன்பின் இறுதி வெளிப்பாடாக இருக்கிறார். அவரிடம் திரும்பும் அனைவருக்கும் சமாதானத்தையும் இளைப்பாறுதலையும் அருளுகிறார். தொழுவத்திலிருந்து சிலுவை வரை, வெறுமையான கல்லறை வரை, வழிதப்பிப் போன உலகத்தை தம்மிடமாய் சேர்க்கும் தேவனுடைய சித்தத்தின் திருவுருவமாய் இயேசு திகழ்கிறார். வேதத்தை முழுவதுமாய் படியுங்கள், அப்போது தேவனுடைய அன்பை எண்ணுவதற்கான அநேக வழிகளை தெரிந்துகொள்வீர்கள். அவைகள் நித்தியமானவைகள் என்பதினால், அவற்றை நம்மாய் எண்ணி முடியாது.

கிறிஸ்துவில் புது அங்கீகாரம்

“நான் ஒரு காலத்தில் இருந்தவன் அல்ல. நான் ஒரு புதிய நபர்." தன் பள்ளிக் கூடுகையில் என்னும் மகன் சொன்ன அந்த எளிய வார்த்தைகள், தேவன் அவனுடைய வாழ்க்கையில் செய்த நன்மைகளை விவரித்தது. ஹெராயின் என்னும் போதை வஸ்துக்கு அடிமையாயிருந்த ஜெஃப்ரி, அதே பாவ கண்ணோட்டத்தோடே தன்னுடைய வாழ்க்கையை பார்க்க நேரிட்டது. ஆனால் தற்போது அவன் தன்னை தேவனுடைய பிள்ளையாய் பார்க்க ஆரம்பித்துவிட்டான். 

வேதாகமம் இந்த வாக்குறுதியுடன் நம்மை ஊக்குவிக்கிறது: “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (2 கொரிந்தியர் 5:17). நம்முடைய கடந்தகாலத்தில் நாம் யாராக இருந்தோம், நாம் என்ன செய்துகொண்டிருந்தோம் என்பது முக்கியமில்லை, ஆனால் நாம் இயேசுவை விசுவாசித்து, அவருடைய சிலுவை கொடுக்கும் பாவமன்னிப்பை பெற்றுக்கொண்ட பின்பு நாம் புது சிருஷ்டியாய் மாறிவிடுகிறோம். ஏதேன் தோட்டத்தில் நாம் பாவத்தால் தேவனிடத்திலிருந்து பிரிக்கப்பட்டோம். ஆனால் “தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கினார்” (வச. 18-19). நாம் அவரால் சுத்திகரிக்கப்பட்டு, அவருடைய குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருக்கத்தக்க அவருடைய அன்பான பிள்ளைகளாயிருக்கிறோம். 

இயேசு நம்மை பாவத்திலிருந்தும் அதன் ஆதிக்க வல்லமையிலிருந்தும் விடுவித்து, தேவனுடன் ஒரு புதிய உறவை மீட்டெடுக்கிறார். ஆகையால் நாம் இனி நமக்காக வாழாமல், “தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி” வாழுவோம் (2 கொரிந்தியர் 5:15). இந்த புத்தாண்டு தினத்தில், அவருடைய மறுரூபமாக்கும் அன்பு நம்மை புதிய அடையாளத்துடனும் நோக்கத்துடனும் வாழத் தூண்டுகிறது என்பதை நினைவில் கொள்வோம். இது மற்றவர்களை நம் இரட்சகரிடம் வழிநடத்த உதவுகிறது. அவர்களும் புதிய சிருஷ்டிகளாக மாற முடியும்!

கிறிஸ்மஸ் நட்சத்திரம்

“நீ அந்த நட்சத்திரத்தைக் கண்டுபிடித்துவிட்டால், வீட்டிற்கு வரும் வழியை நீ கண்டுபிடித்துவிடலாம்.” சிறுவயதில் வடக்கு நட்சத்திரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது என்று என் தந்தை எனக்குக் கற்றுக் கொடுத்தபோது சொன்ன வார்த்தைகள் இது. என்னுடைய அப்பா போர்க்காலத்தில் ஆயுதப் படைகளில் பணிபுரிந்தார். அவரது வாழ்க்கை பெரும்பாலும் இரவு நேர பயணங்களாய் இருந்த தருணங்கள் அவைகள். அதனால் பல விண்மீன்களின் பெயர்கள் மற்றும் இருப்பிடங்கள் ஆகியவற்றை எனக்கு கற்றுக்கொடுத்து, அதை நான் சரியாய் தெரிந்திருக்கிறேனா என்பதை அவ்வப்போது உறுதிசெய்துகொள்வார். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக பொலாரிஸ் நட்சத்திரத்தைக் எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது. அந்த நட்சத்திரத்தின் இருப்பிடத்தை அறிந்தால், நான் எங்கிருந்தாலும் திசையின் உணர்வைப் பெற முடியும்; நான் இருக்க வேண்டிய இடத்தைக் கண்டுபிடிக்க முடியும்.

முக்கியமான மற்றொரு நட்சத்திரத்தைப் பற்றி வேதம் கூறுகிறது. “கிழக்கிலிருந்து சாஸ்திரிகள்” (இன்று ஈரான் மற்றும் ஈராக்கைச் சூழ்ந்துள்ள ஒரு பகுதியிலிருந்து) ராஜாவாகப் பிறந்திருக்கிறவரின் பிறப்புக்கான அறிகுறிகளை வானத்தில் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எருசலேமுக்கு வந்து, “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்” (மத்தேயு 2:1-2).

பெத்லகேமின் நட்சத்திரம் தோன்றுவதற்கு என்ன காரணம் என்று வான சாஸ்திரிகளுக்குத் தெரியாது. ஆனால் இயேசுவை உலகத்திற்கு விடிவெள்ளி நட்சத்திரமாய் சுட்டிக்காட்ட தேவன் அதை உண்டாக்கினார் என்று வேதம் சொல்லுகிறது (வெளிப்படுத்துதல் 22:16). கிறிஸ்து நம் பாவங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றவும், நம்மை மீண்டும் தேவனிடம் வழிநடத்தவும் வந்தார். அவரைப் பின்தொடர்வதே நம் வீட்டிற்கு செல்லும் ஒரே வழி.

பாரபட்சமும் தேவசிநேகமும்

“நான் எதிர்பார்த்தது நீ இல்லை. நான் உன்னை வெறுக்கிறேன் என்று நினைத்தேன், ஆனால் அப்படியில்லை.” அந்த இளைஞனின் வார்த்தைகள் கடுமையாகத் தெரிந்தது. ஆனால் அவை உண்மையில் கருணை காட்டுவதற்கான முயற்சியாக இருந்தது. நான் அவர் வசிக்கும் நாட்டில் படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய அந்த தேசம் பல தசாப்தங்களுக்கு முன்னர் என்னுடைய தேசத்தோடு யுத்தம் செய்தது. நாங்கள் ஒன்றாக வகுப்பில் ஒரு குழு விவாதத்தில் கலந்துகொண்டோம். அவர் தொலைவில் இருப்பதை நான் கவனித்தேன். நான் அவரை ஏதாகிலும் புண்படுத்திவிட்டேனா என்று நான் கேட்டபோது, அவர், “இல்லை . . . . அதுதான் விஷயம். என் தாத்தா அந்தப் போரில் கொல்லப்பட்டார், அதற்காக நான் உங்கள் மக்களையும் உங்கள் நாட்டையும் வெறுத்தேன். ஆனால் இப்போது நமக்குள் எந்த அளவிற்கு ஒத்துப்போகிறது என்பதைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். நாம் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது!” என்று பதிலளித்தார்.

பாரபட்சம் என்னும் உணர்வு மனித இனத்தைப் போலவே மிகவும் பழமையானது. இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பு, இயேசு நாசரேத்தில் வாழ்ந்ததைப் பற்றி நாத்தான்வேல் முதன்முதலில் கேள்விப்பட்டபோது, அவனுடைய பாரபட்சம் தெளிவாகத் தெரிந்தது: “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?” (யோவான் 1:46) என்று சொல்கிறார். நாத்தான்வேல் இயேசுவைப் போலவே கலிலேயா பகுதியில் வாழ்ந்தவர். தேவனுடைய மேசியா வேறொரு இடத்திலிருந்து வருவார் என்று அவர் ஒருவேளை நினைத்திருக்கக்கூடும். மற்ற கலிலேயர்களும் நாசரேத்தை இழிவாகப் பார்த்தனர். ஏனென்றால் அது ஒரு சிறிய அடையாளமில்லாத ஊராக இருந்தது.

இது மிகவும் தெளிவாக உள்ளது. நாத்தான்வேலின் பதில், இயேசு அவனை நேசிப்பதற்கு தடையாக இருக்கவில்லை. மேலும் அவன் மறுரூபமாக்கப்பட்டு இயேசுவின் சீஷனாக மாறுகிறான். நாத்தான்வேல் பின்பாக, “நீர் தேவனுடைய குமாரன்” (வச. 49) என்று இயேசுவின் மகத்துவத்தை சாட்சியிடுகிறான். தேவனுடைய மறுரூபமாக்கும் அன்பிற்கு எதிராக நிற்கக்கூடிய எந்த பாரபட்சமும் இல்லை.

தடைகள் உடைந்தது

“குஞ்சு பறவைகள் நாளை பறக்கும்!” எங்கள் முன் வராந்தாவில் தொங்கும் கூடையில் சிட்டுக்குருவிகள் குடும்பம் செய்து வரும் முன்னேற்றம் குறித்து என் மனைவி காரி மகிழ்ச்சியடைந்தாள். அவள் தினமும் அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மா குருவி கூட்டிற்கு உணவைக் கொண்டு வருவதைப் புகைப்படம் எடுத்தாள்.

காரி மறுநாள் அதிகாலையில் எழுந்து அவைகளைப் பார்க்க முயற்சித்தாள். அதற்கு அவள் கூட்டை மூடியிருந்த சில பசுமையை ஒதுக்கி நகர்த்தினாள். ஆனால் குஞ்சு பறவைகளைப் பார்ப்பதற்குப் பதிலாக, ஒரு பாம்பின் குறுகிய கண்கள் அவளை சந்தித்தன. ஒரு பாம்பு செங்குத்தான சுவற்றின் மீது ஏறி, கூட்டிற்குள் நுழைந்து, குஞ்சுகள் அனைத்தையும் விழுங்கியது.

காரி மனம் உடைந்து, கோபமடைந்தார். நான் அப்போது வெளியூருக்கு சென்றிருந்தபடியால், பாம்பை அகற்ற அவளுடைய தோழியின் உதவியை நாடினாள். ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. 

தன் பாதையில் அழிவை விட்டுச் சென்ற மற்றொரு பாம்பைப் பற்றி வேதம் கூறுகிறது. ஏதேன் தோட்டத்தில் இருந்த பாம்பு ஏவாளை ஏமாற்றியது: “அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது” (ஆதியாகமம் 3:4-5). 

ஏவாள் மற்றும் ஆதாமின் கீழ்ப்படியாமையின் விளைவாக “பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய” வலுசர்ப்பத்தினால் (வெளிப்படுத்தல் 20:2) பாவமும் மரணமும் உலகில் நுழைந்தன. ஆனால் “பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்” (1 யோவான் 3:8). அவர் மூலமாகவே தேவனுடனான நம்முடைய உறவு புதுப்பிக்கப்படுகிறது. அவர் ஒரு நாளில் சகலத்தையும் புதிதாக்குவார் (வெளிப்படுத்தல் 21:5).

தேவனுடைய எதிர்பாராத வழிகள்

போதகர் தன்னுடைய பிரசங்க காகிதத்தை தன் கண்களுக்கு அருகாமையில் கொண்டுவந்து அதைப் பார்த்து படித்தார். அவர் கிட்டப்பார்வை கொண்டவர் என்பதினால், அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் அவர் கவனமாய் படிக்கும்பொருட்டு அவ்வாறு செய்தார். ஆகிலும் ஜோனத்தன் எட்வர்ட்ஸின் பிரசங்கங்கள், எழுப்புதல் தீயை பரவச்செய்து, ஆயிரக்கணக்கானோரை விசுவாசத்திற்குள் கொண்டுவந்தது. 

தேவன் அடிக்கடி எதிர்பாராத காரியங்களைக் கொண்டு அவருடைய நேர்த்தியான சித்தத்தை நிறைவேற்றுகிறார். மக்களை தேவனுடைய சிலுவை அன்பிற்கு நேராய் ஈர்க்கும் முயற்சியில் எழுத்துப்பணியை ஏறெடுத்த பவுல் அப்போஸ்தலர், “ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்” (1 கொரிந்தியர் 1:27) என்று எழுதுகிறார். தெய்வீக ஞானமானது தவிர்க்கமுடியாத சக்தியுடன் வரும் என்று உலகம் எதிர்பார்த்தது. மாறாக, நம்முடைய பாவங்களிலிருந்து நம்மைக் காப்பாற்ற இயேசு சாதாரணமாகவும் தாழ்மையின் ரூபத்திலும் வந்தார். அதனால் “அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” (வச. 30).

நித்தியமான, அனைத்து ஞானமுமுள்ள தேவன் ஒரு மனிதக் குழந்தையாக இவ்வுலகத்தில் அவதரித்தார். அவருடைய வீட்டிற்கு செல்லும் வழியைக் நமக்குக் காண்பிப்பதற்காக, அவர் வளர்ந்து, துன்பப்பட்டு, மரித்து, உயிரோடு எழுத்தளுளினார். நம்முடைய சொந்த பலத்தில் நம்மால் ஒருபோதும் சாதிக்க முடியாத பெரிய காரியங்களைச் செய்வதற்கு அவர் தாழ்மையான வழிகளையும் மக்களையும் பயன்படுத்த விரும்புகிறார். நாம் சித்தமாயிருந்தால், அவர் நம்மையும் பயன்படுத்தக்கூடும்.

தேவனுடைய எதிர்பாராத வழிகள்

போதகர் தன்னுடைய பிரசங்க காகிதத்தை தன் கண்களுக்கு அருகாமையில் கொண்டுவந்து அதைப் பார்த்து படித்தார். அவர் கிட்டப்பார்வை கொண்டவர் என்பதினால், அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் அவர் கவனமாய் படிக்கும்பொருட்டு அவ்வாறு செய்தார். ஆகிலும் ஜோனத்தன் எட்வர்ட்ஸின் பிரசங்கங்கள், எழுப்புதல் தீயை பரவச்செய்து, ஆயிரக்கணக்கானோரை விசுவாசத்திற்குள் கொண்டுவந்தது. 

தேவன் அடிக்கடி எதிர்பாராத காரியங்களைக் கொண்டு அவருடைய நேர்த்தியான சித்தத்தை நிறைவேற்றுகிறார். மக்களை தேவனுடைய சிலுவை அன்பிற்கு நேராய் ஈர்க்கும் முயற்சியில் எழுத்துப்பணியை ஏறெடுத்த பவுல் அப்போஸ்தலர், “ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்” (1 கொரிந்தியர் 1:27) என்று எழுதுகிறார். தெய்வீக ஞானமானது தவிர்க்கமுடியாத சக்தியுடன் வரும் என்று உலகம் எதிர்பார்த்தது. மாறாக, நம்முடைய பாவங்களிலிருந்து நம்மைக் காப்பாற்ற இயேசு சாதாரணமாகவும் தாழ்மையின் ரூபத்திலும் வந்தார். அதனால் “அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” (வச. 30).

நித்தியமான, அனைத்து ஞானமுமுள்ள தேவன் ஒரு மனிதக் குழந்தையாக இவ்வுலகத்தில் அவதரித்தார். அவருடைய வீட்டிற்கு செல்லும் வழியைக் நமக்குக் காண்பிப்பதற்காக, அவர் வளர்ந்து, துன்பப்பட்டு, மரித்து, உயிரோடு எழுத்தளுளினார். நம்முடைய சொந்த பலத்தில் நம்மால் ஒருபோதும் சாதிக்க முடியாத பெரிய காரியங்களைச் செய்வதற்கு அவர் தாழ்மையான வழிகளையும் மக்களையும் பயன்படுத்த விரும்புகிறார். நாம் சித்தமாயிருந்தால், அவர் நம்மையும் பயன்படுத்தக்கூடும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

நேசிப்பதற்கான புதிய கட்டளை

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமான பாரம்பரியப்படி, ஐக்கிய பேரரசின் அரச குடும்பத்தினர் புனித வெள்ளிக்கு முந்தைய நாளான பெரிய வியாழன் அன்று தேவையானவர்களுக்கு பரிசுகளை வழங்குவார்கள். இந்த நடைமுறையானது மவுண்டி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் வேரூன்றியுள்ளது, இது லத்தீன் 'மாண்டடம்' அதாவது "கட்டளை" என்பதிலிருந்து வருகிறது. இயேசு தாம் இறப்பதற்கு முந்தைய இரவில் தம் நண்பர்களுக்குக் கொடுத்த புதிய கட்டளைதான் நினைவுகூரப்படுகிறது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” (யோவான் 13:34).

இயேசு தலைவராக இருந்தும், தம் நண்பர்களின் கால்களைக் கழுவுகையில், ஒரு ஊழியக்காரனான இருந்தார் (வச. 5). பின்னர் அவர் அவ்வாறே செய்யும்படி அவர்களை அழைத்தார்: "நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்." (வச. 15). மேலும் இன்னும் பெரிய தியாகமாக, அவர் சிலுவையில் மரித்து தனது உயிரைக் கொடுத்தார் (19:30). முழுமையான வாழ்வை நாம் அனுபவிக்க, கருணையினாலும் அன்பினாலும் அவர் தம்மையே கொடுத்தார்.

பிரித்தானிய அரச குடும்பம் தேவைப்படுபவர்களுக்கு சேவையாற்றும் பாரம்பரியம் இயேசுவின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கான அடையாளமாக தொடர்கிறது. இதுபோல வாய்ப்புள்ள சூழலில் நாம் பிறக்காமல் இருக்கலாம்; ஆனால் நாம் இயேசுவில் நம்பிக்கை வைக்கும் போது, ​​நாம் அவருடைய குடும்பத்தினராக மாறுகிறோம். நாமும் அவருடைய புதிய கட்டளையை நிறைவேற்றுவதன் மூலம் நம் அன்பைக் காட்டலாம். உள்ளிருந்து நம்மை மாற்றுவதற்கு நாம் தேவனின் ஆவியைச் சார்ந்திருக்கையில்; அக்கறையுடனும், உறுதியுடனும், கருணையுடனும் பிறரை அணுகலாம்.

கிறிஸ்துவில் கனிதரும் விசுவாசிகள்

சிண்டி ஒரு தொண்டு நிறுவனத்தில் தனது புதிய வேலைக்காக உற்சாகப்பட்டாள். மாற்றத்தை ஏற்படுத்த அரிய வாய்ப்பு. ஆனால் அவளுடைய சகபணியாளர்கள் அப்படியில்லை என்பதை அவள் விரைவில் கண்டுபிடித்தாள். தங்கள் நிறுவனத்தின் பணியை கேலி செய்தார்கள் மற்றும் லாபகரமான வேலைகளுக்கு வேறு இடங்களில் தேடியதால், மோசமான செயல்திறனுக்காக சாக்கு கூறினர். சிண்டி இந்த வேலைக்கு விண்ணப்பித்திருக்கவே வேண்டாம் என்றென்னினாள். தொலைவில் அற்புதமாக தோன்றியது அருகிலோ ஏமாற்றமளித்தது.

இன்றைய கதையில் (மாற்கு 11:13) குறிப்பிடப்பட்டுள்ள அத்தி மரத்தில் இயேசுவுக்கிருந்த பிரச்சனையும் இதுதான். இது பருவத்தின் ஆரம்பத்தில் இருந்தது, ஆனால் மரத்தின் இலைகள் அது ஆரம்பகால அத்திகளைக் கொண்டிருப்பதாக குறிக்கிறது. இல்லை, மரத்தில் இலைகள் துளிர்விட்டன, ஆனால் அது இன்னும் காய்க்கவில்லை. ஏமாற்றமடைந்த இயேசு, "இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கடவன்" (வச.14) என்று மரத்தை சபித்தார். மறுநாள் காலையில் மரம் வேரோடே பட்டுப்போயிருந்தது (வச. 20).

கிறிஸ்து ஒருமுறை நாற்பது நாட்கள் உபவாசம் இருந்தார், ஆகவே உணவு இல்லாமல் எப்படி இருக்க வேண்டும் என்று அவரறிவார். அத்தி மரத்தை சபிப்பது அவரது பசிக்காக இல்லை. இது ஒரு பொருள் பாடம். இந்த மரம் இஸ்ரவேலை குறிக்கிறது, அது மெய்யான மதத்தின் வேர்களை கொண்டிருந்தது, ஆனால் நோக்கத்தை இழந்துவிட்டது. அவர்கள் தேவனுடைய குமாரனாகிய தங்கள் மேசியாவைக் கொல்லப் போகிறார்கள். அவர்கள் எவ்வளவு கணியற்றிருந்திருக்க வேண்டும்?

தூரத்திலிருந்து நாம் அழகாகத் தோன்றலாம், ஆனால் இயேசு அருகில் வருகிறார், அவருடைய ஆவியால் மட்டுமே விளைவிக்கப்படும் கனியைத் தேடுகிறார். நமது கனிகள் கண்கவரும்வண்ணம் இருக்க வேண்டியதில்லை. ஆனால் அது இயற்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அன்பு, சந்தோஷம் மற்றும் கடினமான காலங்களில் சமாதானம் போன்றவை (கலாத்தியர் 5:22). ஆவியானவரை சார்ந்து, இயேசுவுக்காக எப்போதும் கனி கொடுக்கலாம்.

அடிப்படையை தவறவிடுதல்

பல தசாப்தங்களாக, துரித உணவு வகையில் மெக்டொனால்ட் நிறுவனம் தனது குவார்ட்டர் பவுண்டர் பர்கர் கொண்டு ஆண்டது. 1980 களில் அதின் போட்டி நிறுவனம் தனது அற்புதமான திட்டத்தால் அதனை வீழ்த்த நினைத்தது. ஏ அண்ட் டபுள்யு நிறுவனம் மெக்டொனால்டை விட பெரிதான தர்ட் பவுண்ட் பர்கரை அதே விலைக்கு விற்றது. மேலும் அதின் ருசிக்காக பல விருதுகளையும் வென்றது. ஆனால் அது நிலைக்கவில்லை. அதை வாங்க ஆளில்லை. இறுதியில், அவர்கள் அதை மெனுவிலிருந்து எடுத்துவிட்டனர். தர்ட் பவுண்ட் பர்கர் குவார்ட்டர் பவுண்டர் பர்கரை விட சிரியதென்று நுகர்வோர் தவறாய் புரிந்துகொண்டதே அதின் தோல்விக்கு காரணமென்று ஒரு ஆராய்ச்சி அறிக்கையிட்டது.

அடிப்படைகளை தவறவிடுவது எவ்வளவு எளிது என்று இயேசு எச்சரித்தார். மதத் தலைவர்கள், அவர் சிலுவையில் அறையப்பட்ட வாரத்தில் அவரை இழிவுபடுத்த திட்டமிட்டனர், ஏழு முறை விதவையான ஒரு பெண்ணைப் பற்றி ஒரு விசித்திரமான, கற்பனையான காட்சியை முன்வைத்தனர் (மத்தேயு 22:23-28).  இந்த சிக்கலான தடுமாற்றம் ஒரு பிரச்சனையே இல்லை என்று இயேசு பதிலளித்தார். மாறாக, அவர்கள்  "வேதத்தையும் தேவனின் வல்லமையையும்" அறியவில்லை என்பதுதான் அவர்களின் பிரச்சனை (வச. 29). வேதவசனங்களின் நோக்கம் தர்க்கரீதியாகவும் தத்துவப் புதிர்களுக்கும் பதிலளிப்பதில்லை என்று இயேசு வலியுறுத்தினார். மாறாக, இயேசுவை அறியவும் நேசிக்கவும், அவரில் "நித்திய ஜீவனை" பெறவும் நம்மை வழிநடத்துவதே அவைகளின் முதன்மையான நோக்கம் (யோவான் 5:39). தலைவர்கள் தவறவிட்ட அடிப்படைகள் இவையே.

நாம் அடிக்கடி அடிப்படைகளையும் தவறவிடுகிறோம். உயிரோடிருக்கும் இயேசுவை கண்டுகொள்வதே வேதத்தின் முக்கிய நோக்கம். அதைத் தவறவிட்டால் மனவேதனையே மிஞ்சும்