எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

வின் கோலியர்கட்டுரைகள்

பூத்து குலுங்கும் பாலைவனம்

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, எத்தியோப்பியாவில் சுமார் 40 சதவிகிதம் பசுமையான காடுகள் இருந்தது. ஆனால் தற்போது அது 4 சதவிகிதமாக மாறியுள்ளது. மரங்களைப் பாதுகாக்கத் தவறிய நிலையில், பயிர்களுக்கான பரப்பளவை அகற்றுவது சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு வழிவகுத்தது. மீதமுள்ள பச்சை நிறத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகள் திருச்சபைகளினால் பாதுகாக்கப்படுகின்றன. பல நூற்றாண்டுகளாக, உள்ளூர் எத்தியோப்பியன் ஆர்த்தடாக்ஸ் டெவாஹிடோ திருச்சபைகள் தரிசு பாலைவனத்தின் மத்தியில் இந்த சோலைகளை வளர்த்து வருகின்றன. நீங்கள் வான்வழிப் படங்களைப் பார்த்தால், பழுப்பு நிற மணலால் சூழப்பட்ட பசுமையான தீவுகளைக் காணலாம். திருச்சபை தலைவர்கள் தேவனுடைய படைப்பான மரங்களைப் பராமரிப்பது தேவனுக்கு கீழ்படிதலின் பிரதிபலிப்பு என்று தங்களை உக்கிராணக்காரர்களாய் கருதுகின்றனர்.

ஏசாயா தீர்க்கதரிசி, ஒரு வறண்ட பாலைவனத்தில் கொடூரமான வறட்சியினால் பாதிக்கப்பட்ட இஸ்ரவேல் மக்களுக்கு எழுதுகிறார். மேலும் ஏசாயா, “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும்” (ஏசாயா 35:1) என்று தேவன் அவர்களுக்காய் முன்குறித்திருக்கிற எதிர்காலத்தை உரைக்கிறார். தேவன் தன்னுடைய ஜனத்தை சுகமாக்க விரும்புகிறார். அவர் பூமியையும் சுகமாக்க விரும்புகிறார். தேவன், “புதிய வானத்தையும் புதிய பூமியையும்” (ஏசாயா 65:17) உண்டாக்குவார். தேவனுடைய புதுப்பிக்கப்பட்ட உலகத்தில், வனாந்திரம் “மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்” (35:2).

தேவனுடைய படைப்பின் மீதும் மக்களின் மீதும் அவர் காண்பிக்கும் அக்கறையானது நம்மையும் அவ்வாறு செய்வதற்கு தூண்டுகிறது. அவருடைய படைப்புகளை பராமரிப்பதின் மூலம் முழு உலகத்தையும் குணமாக்கும் அவருடைய பிரதான திட்டத்தின் அங்கத்தினர்களாய் நாம் மாறக்கூடும். அனைத்து வனாந்திரங்களையும் பூத்துக் குலுங்கச்செய்யும் தேவனுடைய திட்டத்தில் நாமும் பங்காளர்களாய் மாறலாம். 

பட்டணத்தில் மகிழ்ச்சி

2024 உலக டி20 கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதியபோது, கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலகக் கோப்பை போட்டிகளில் ஒன்று என்று பலர் அழைக்கும் நம்பமுடியாத போட்டியாக இருந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவின் இரண்டாவது டி 20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, நாடே கொண்டாட்டத்தில் வெடித்தது. மும்பை, டெல்லி, ஹைதராபாத் மற்றும் பிற நகரங்களில் லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் நிரம்பி வழிந்தனர். பல நகரங்கள் மூவர்ணக் கொடிகளால் நிறைந்த காட்சியை ஒரு விண்ணிலிருந்து கானும்போது அது மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்து வதாயிருந்தது.. மகிழ்ச்சியின் வெடிப்பில் நகரமே அதிர்ந்தது போல் இருந்தது

மகிழ்ச்சி எப்போதும் ஓர் அற்புதமான பரிசு. ஒரு நகரமும் அதிலுள்ள மக்களும் நீடித்த மகிழ்ச்சியை எவ்விதம் அனுபவிக்கக்கூடும் என்று நீதிமொழிகள் விவரிக்கிறது. “நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்” (நீதிமொழிகள் 11:10) என்று நீதிமொழிகள் கூறுகிறது. மனுஷீகத்தைக் குறித்த தேவனுடைய தெய்வீகத் திட்டத்தின்படி வாழ்கிறவர்கள், சமூகத்தில் நல்ல பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். அவ்வாறு செய்யும்போது தேவனுடைய நீதி ஆளுகை செய்கிறது என்கிற நற்செய்தியை மக்கள் பெறுகின்றனர். பேராசை குறைகிறது. ஏழைகளுக்கு ஆதரவு கிடைக்கிறது. ஒடுக்கப்பட்டவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். எப்பொழுதெல்லாம் தேவனுடைய திட்டத்திற்கேற்ற வாழ்க்கைமுறை செழித்தோங்குகிறதோ, அப்போது நகரத்தில் மகிழ்ச்சியும் “ஆசீர்வாதமும்” தங்கும் (வச. 11).

நாம் தேவனுடைய வழிகளை உண்மையாக பின்பற்றினால், அதன் விளைவு அனைவருக்கும் நன்மை அளிப்பதாய் இருக்கும். நாம் வாழும் முறை நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தை சிறப்பாகவும், முழுமையாகவும் மாற்றும். உலகை பண்படுத்துவதற்கான தெய்வீக முயற்சியில் ஓர் அங்கத்தினராய் செயல்படுவதற்கு தேவன் நம்மை அழைக்கிறார். நகரத்திற்கு மகிழ்ச்சியைக் கொண்டுவர அவர் நம்மை அழைக்கிறார். 

அடிப்படையை தவறவிடுதல்

பல தசாப்தங்களாக, துரித உணவு வகையில் மெக்டொனால்ட் நிறுவனம் தனது குவார்ட்டர் பவுண்டர் பர்கர் கொண்டு ஆண்டது. 1980 களில் அதின் போட்டி நிறுவனம் தனது அற்புதமான திட்டத்தால் அதனை வீழ்த்த நினைத்தது. ஏ அண்ட் டபுள்யு நிறுவனம் மெக்டொனால்டை விட பெரிதான தர்ட் பவுண்ட் பர்கரை அதே விலைக்கு விற்றது. மேலும் அதின் ருசிக்காக பல விருதுகளையும் வென்றது. ஆனால் அது நிலைக்கவில்லை. அதை வாங்க ஆளில்லை. இறுதியில், அவர்கள் அதை மெனுவிலிருந்து எடுத்துவிட்டனர். தர்ட் பவுண்ட் பர்கர் குவார்ட்டர் பவுண்டர் பர்கரை விட சிரியதென்று நுகர்வோர் தவறாய் புரிந்துகொண்டதே அதின் தோல்விக்கு காரணமென்று ஒரு ஆராய்ச்சி அறிக்கையிட்டது. 

அடிப்படைகளை தவறவிடுவது எவ்வளவு எளிது என்று இயேசு எச்சரித்தார். மதத் தலைவர்கள், அவர் சிலுவையில் அறையப்பட்ட வாரத்தில் அவரை இழிவுபடுத்த திட்டமிட்டனர், ஏழு முறை விதவையான ஒரு பெண்ணைப் பற்றி ஒரு விசித்திரமான, கற்பனையான காட்சியை முன்வைத்தனர் (மத்தேயு 22:23-28). இந்த சிக்கலான தடுமாற்றம் ஒரு பிரச்சனையே இல்லை என்று இயேசு பதிலளித்தார். மாறாக, அவர்கள் "வேதத்தையும் தேவனின் வல்லமையையும்" அறியவில்லை என்பதுதான் அவர்களின் பிரச்சனை (வச. 29). வேதவசனங்களின் நோக்கம் தர்க்கரீதியாகவும் தத்துவப் புதிர்களுக்கும் பதிலளிப்பதில்லை என்று இயேசு வலியுறுத்தினார். மாறாக, இயேசுவை அறியவும் நேசிக்கவும், அவரில் "நித்திய ஜீவனை" பெறவும் நம்மை வழிநடத்துவதே அவைகளின் முதன்மையான நோக்கம் (யோவான் 5:39). தலைவர்கள் தவறவிட்ட அடிப்படைகள் இவையே. 

நாம் அடிக்கடி அடிப்படைகளையும் தவறவிடுகிறோம். உயிரோடிருக்கும் இயேசுவை கண்டுகொள்வதே வேதத்தின் முக்கிய நோக்கம். அதைத் தவறவிட்டால் மனவேதனையே மிஞ்சும். 

மகிழ்ச்சியான நம்பிக்கை

கருணைக்கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ரூடியை ஒரு பெண், விலங்குகள் காப்பகத்திலிருந்து மீட்டார். அந்த நாய் அவளுக்கு துணையானது. பத்து ஆண்டுகளாக, ரூடி லிண்டாவின் படுக்கைக்கு அருகில் அமைதியாக தூங்கினது, ஆனால் அது திடீரென்று அவளுக்கு அருகில் குதித்து அவள் முகத்தை நக்க ஆரம்பித்தது. லிண்டா அதை திட்டினார், ஆனால் ஒவ்வொரு இரவும் ரூடி அதேபோல செய்தது. “விரைவில் அவர் என் மடியில் குதித்து, நான் அமரும் ஒவ்வொரு முறையும் என் முகத்தை நக்கியது” என்றார் லிண்டா.

ரூடியை பிராணிகள் நலமையத்திற்கு அழைத்துச் செல்ல அவள் திட்டமிட்டிருகையில்; ரூடி எத்தனை பிடிவாதமாக இருக்கிறது என்பதையும், அது தன் தாடையில் அதே இடத்தில் தன்னை எப்படி நக்குகிறது என்பதையும் லிண்டா சிந்திக்க ஆரம்பித்தாள். தயங்கியவாறே, லிண்டா மருத்துவரை அணுகுகையில், அவர் ரூடியிடம் ஒரு நுண்ணிய கட்டி இருப்பதைக் (எலும்பு புற்றுநோய்) கண்டறிந்தார். டாக்டர் லிண்டாவிடம், அவள் தாமதித்திருந்தால், அது அவளைக் கொன்றிருக்கும் என்றார். லிண்டா ரூடியின் உள்ளுணர்வை நம்பினாள், அவ்வாறு செய்ததில் அவள் மகிழ்ச்சியடைந்தாள்.

தேவனை நம்புவது ஜீவனுக்கும் மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று வேதம் மீண்டும் மீண்டும் சொல்கிறது. சங்கீதக்காரன், “கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்” (40:4) என்கிறார். சில மொழிபெயர்ப்புகள் இதை இன்னும் மிகைப்படுத்தி, “கர்த்தரை தங்கள் நம்பிக்கையாக கொள்பவர்கள் மகிழ்ச்சியானவர்கள்” (வ. 4) என்கிறது. சங்கீதங்களில் குறிப்பிடப்படும் “மகிழ்ச்சி”; மிகுதியாகவும், பொங்குகிற, உற்சாகமான மகிழ்ச்சியாகும்.

நாம் தேவனை நம்புகையில், ஆழமான, உண்மையான மகிழ்ச்சியே இறுதி முடிவு. இந்த நம்பிக்கை எளிதில் வராமல் இருக்கலாம், மேலும் முடிவுகள் நாம் எண்ணியது போல இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் தேவனை நம்பினால், நாம் நம்பியதற்காக மட்டற்ற மகிழ்ச்சி அடைவோம். 

தேவன் தருவதை உபயோகித்தல்

1920களின் வியப்பூட்டும் திட்டம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் சிட்டி ஹால் ஆகும். மைக்கேல் ஏஞ்சலோ தனது டேவிட் சிற்பத்திற்குப் பயன்படுத்திய அதே குவாரியில் எடுக்கப்பட்ட பளிங்குக் கற்கள் வெண்மையான படிக்கட்டுகளை பெருமைப்படுத்தின. அதின் கோபுரம் வெனிஸின் தூய மாற்கு ஆலய கோபுரத்தின் பிரதி, மேலும் தாமிரத்திலான குவிமாடம் (உருண்டையான கோபுரம்) பூமியின் தெற்கு அரைக்கோளத்திலேயே மிகப்பெரியது. கட்டிடம் கட்டுபவர்கள் ஒரு பெரிய சமாதான தூதனின் சிலையால் உச்சியை அலங்கரிக்க நினைத்தனர், ஆனால் ஒரு சிக்கல் இருந்தது: பணம் எதுவும் இல்லை. குழாய்களை செப்பனிடும் ஃபிரெட் ஜான்சன் உதவிக்கு வந்தார். அவர் ஒரு கழிப்பறை தொட்டி, ஒரு பழைய விளக்கு கம்பம் மற்றும் பயனற்ற உலோகத் துண்டுகளைப் பயன்படுத்தி, கோபுரத்தை ஏறக்குறைய நூறு ஆண்டுகளாக அலங்கரிக்கும், மகுடம் சூடிய மணிமுடியை உருவாக்கினார்.

ஃபிரெட் ஜான்சன் மற்றும் அவரிடம் இருந்ததைப் பயன்படுத்தினதைப் போலவே, நம்மிடம் உள்ள பெரிய அல்லது சிறிய அனைத்தையும் கொடுத்து தேவனின் பணியை செய்யலாம். இஸ்ரவேலை தலைமைதாங்கி எகிப்திலிருந்து வெளியேற்றும்படி மோசேயிடம் கடவுள் கேட்டபோது, மோசே “அவர்கள்.. என் வாக்குக்குச் செவிகொடார்கள்” (4:1) என்று தடுமாறினார். தேவன், “உன் கையில் இருக்கிறது என்ன” (வ. 2) என்று எளியமையான கேள்வியில் பதிலளித்தார். மோசேயிடம் கோலிருந்தது, வெறும் குச்சிதான். தேவன் அதைத் தரையிலே போடு என்றார், “அது சர்ப்பமாயிற்று” (வ. 3). பின்னர் அவர் சர்ப்பத்தை எடுக்க மோசேயிடம் அறிவுறுத்தினார், அது மீண்டும் ஒரு கோலாக மாறியது. மோசே செய்ய வேண்டியதெல்லாம், கோலை எடுத்துக்கொண்டு போவதும் மற்றதைச் செய்யம்படி அவரை நம்புவதுமே என்று தேவன் விளக்கினார். வியப்பூட்டும் வகையில், எகிப்தியர்களிடமிருந்து இஸ்ரவேலை மீட்க மோசேயின் கையில் இருந்த அந்த கோலை பயன்படுத்துவார் (7:10–12; 17:5–7).

நம்மிடம் இருப்பது நமக்கே பெரிதாகத் தோன்றாமல் இருக்கலாம், ஆனால் தேவனுக்கு நம்மிடம் இருப்பதே போதுமானதாக இருக்கும். நம்மிடம் உள்ள சாதாரண பொருட்களை எடுத்து தன் பணிக்கு பயன்படுத்துகிறார்.

கூடியிருப்பது நலம்

ஒரு புகைப்படக் கலைஞர் ஸ்டார்லிங்ஸ் பறவைகளையும் (கருப்பு நிற சிறிய பறவை), ஆயிரக்கணக்கான இந்தப் பறவைக் கூட்டம் வானத்தில் நிகழ்த்தும் பிரமிப்பூட்டும் “மர்மரிங்ஸ்” எனப்படும் தண்ணீர்போன்ற அசைவுகளையும் படம்பிடிக்கப் பல ஆண்டுகள் செலவிட்டார். இதை விண்ணில் பார்ப்பது ஒரு அலையின் அடியில் அமர்ந்திருப்பது போன்றது அல்லது பற்பல வடிவங்களில், கலைஞர்கள் தூரிகையினால் வரையும் கண்கவர் கண்ணாடி ஓவியம் போன்று உள்ளது. டென்மார்க்கில், இந்த ஸ்டார்லிங் பறவைகளின் அனுபவத்தை பிளாக் சன் என்பார்கள். மிகவும் வியப்பூட்டுவது, இந்த பறவைகள் தங்களுடைய இயற்கையான உள்ளுணர்வால் நெருக்கமாக அருகருகே பறப்பதுதான்; ஒரு பறவை கூட நகர்வில் தவறினால், அவைகள் குழப்பமடைந்து, மொத்த கூட்டமும் பேரழிவைச் சந்திக்க நேரிடும். இதைத் தவிர்க்கவே “மர்மரிங்ஸ்” முறை. ஒரு பருந்து அவைகளில் ஒன்றை இரையாக்க இறங்கும்போது, வேட்டையிலிருந்து தப்பிக்க இந்த சிறிய பறவைகள் நெருக்கமான அமைப்பில் கூட்டாக நகர்கின்றன. அவை தனியாக இருந்தால் அவற்றை எளிதாகப் பருந்து வேட்டையாடிவிடும்.

நாம் தனியாக இருப்பதை விட ஒன்றாக இருப்பது நல்லது. “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்” என்று பிரசங்கி கூறுகிறார். “ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான். இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்;” (பிரசங்கி 4:9-11). நாம் தனிமைப்படுத்தப்பட்டால் எளிதாகப் பலியாகிவிடுவோம். மற்றவர்களின் ஆறுதலோ, பாதுகாப்போ இல்லாமல் பலவீனமடைவோம்.

ஆனால் கூடிவாழும்போது நண்பர்கள் மூலம் உதவிகிடைக்கிறது, நாமும் உதவுகிறோம். “ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது” (வ12) என்று பிரசங்கி கூறுகிறார். தேவன் நம்மை வழிநடத்திட, நாம் கூடியிருப்பதே நலம்.

ஆயுதங்களிலிருந்து அணிகலன்கள்

என் மனைவி மிஸ்காவிடம் எத்தியோப்பியாவின் நெக்லஸ் மற்றும் காதணிகள் உள்ளன. அவர்களின் நேர்த்தியான எளிமை, அவர்களின் மெய்யான கலைத்திறனை வெளிப்படுத்துகிறது. இருப்பினும், இந்த நகைகளைப் பற்றி மிகவும் வியக்கத்தக்கது அவர்களின் கதை. பல தசாப்தங்களாக கடுமையான மோதல்கள் மற்றும் உள்நாட்டுப் போரின் காரணமாக, எத்தியோப்பியாவின் புவியியல் அமைப்பானது பீரங்கி குண்டுகள் மற்றும் தோட்டாக்களால் சிதறடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையின் ஒரு செயலாக, எத்தியோப்பியர்கள் எரிக்கப்பட்ட பூமியைத் துடைத்து, குப்பைகளை சுத்தம் செய்கிறார்கள். மேலும் எஞ்சியிருக்கும் குண்டுகள் மற்றும் தோட்டாக்களில் இருந்து கைவினைஞர்கள் நகைகளை உருவாக்குகிறார்கள்.

இந்தக் கதையைக் கேட்டபோது, தேவனுடைய வாக்குத்தத்தங்களை தைரியமாக அறிவிக்கும் மீகாவின் எதிரொலிகளைக் கேட்டேன். அவர் மக்களைக் குறித்து, ஒரு நாள் “அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்” (மீகா 4:3) என்று சொல்லுகிறார். தேவனுடைய வல்லமையான கிரியையினிமித்தம், கொல்ல மற்றும் ஊனப்படுத்துவதற்கான பயங்கரமான கருவிகள், வாழ்க்கையை வளர்ப்பதற்கான கருவிகளாக மாற்றப்படுகிறது. வரவிருக்கிற கர்த்தருடைய நாளில், “ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை” (வச. 3) என்றும் சொல்லுகிறார்.

மீகாவின் காலகட்டத்தைக் காட்டிலும் அதை நம்முடைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போலவே பார்க்கத் தோன்றுகிறது. பண்டைய காலத்தின் இஸ்ரவேல் தேசத்தைப் போலவே நாமும் வன்முறைகள் மற்றும் யுத்தங்களை சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலை எப்போதும் மாறாது என்பதுபோல் தோன்றுகிறது. ஆனால் தேவன் கிருபையோடும் குணமாக்கும் வல்லமையோடும் இந்த அதிர்ச்சியூட்டும் நாள் வரப்போகிறது என்று நமக்கு வாக்களிக்கிறார். அப்படியானால், இந்த உண்மையை இப்போதே நாம் நடைமுறைப்படுத்தவேண்டும். காயப்படுத்தும் ஆயுதங்களை ஆச்சரியப்படுத்தும் அணிகலன்களாய் மாற்றி, அவருடைய செயல்களை இப்போதிருந்தே செய்ய தேவன் நமக்கு உதவிசெய்வாராக. 

- விண் கோலியர்

தேவனின் மீது பதிந்திருக்கும் பார்வை

19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போதகர் தாமஸ் சால்மர்ஸ், குறுகலான மலைப்பாதையின் ஓரமாக சென்ற ஒரு குதிரை வண்டியின் பயணத்தைப் பற்றிய கதையைச் ஒன்றைச் சொன்னார். அந்த வண்டியின் குதிரைகளில் ஒன்று மிரண்டதினால் குதிரை வண்டி ஓட்டுநர், மலைப்பாதையில் இருந்து வண்டி விழாமல் விபத்தை தவிர்க்க மீண்டும் மீண்டும் சவுக்கினால் அதை அடித்தார். அந்த ஆபத்தான பகுதியில் தாண்டியபின் சால்மர்ஸ் வண்டி ஓட்டுநரிடம், ஏன் அந்த அளவுக்கு சவுக்கினால் அடித்தீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர், “குதிரைகளின் கவனத்தை திசை திருப்பவே நான் அப்படிச் செய்தேன். அந்நேரத்தில் குதிரைகளின் கவனத்தை வேறொரு இடத்தில் திருப்ப வேண்டிய அவசியம் இருந்தது,” என்றார்.

இந்த உலகத்தில் எங்கும் நம்மைச் சுற்றிலும் அச்சுறுத்தல்களும் அபாயங்களும் நிறைந்திருக்கின்றன, இப்படிப்பட்ட நேரத்தில் நாம் அனைவரின் கவனமும் திசைதிருப்பப் படுவது அவசியமாகிறது. ஆனால், அது வெறும் மனதளவில் மட்டுமல்ல ஒரு உளவியல் யுக்தியாகும். இந் நேரத்தில் நமக்குத் தேவையானது இப்படிப்பட்ட பயங்களையும் விட நிதர்சமான உண்மையில் நம் மனதை பதிப்பதுதான் அவசியம். ஏசாயா யூத நாட்டு மக்களுக்கு கூறியது போல, நாம் தேவனில் நம் சிந்தையை பதிப்பதே உண்மையான தேவை. “ உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர் ” (ஏசாயா 26:3).மேலும், “ கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார் ”(வசனம் 4 ).

சமாதானம்—இது தேவனை நம்பி அவரில் நிலைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும் பரிசாகும். இந்த சமாதானம் நம் மனக்குழப்பங்களை தற்காலிகமாக கட்டுப்படுத்தும் யுக்தியாக மட்டுமல்லஅதற்கும் மேலானது. யாரெல்லாம் தங்களடைய எதிர்காலத்தையும், நம்பிக்கையையும் மற்றும் கவலைகளையும் தேவனாகிய கர்த்தரிடம் ஒப்படைதுள்ளார்களேர அவர்களுக்கு, பரிசுத்த ஆவியானவர் முற்றிலும் மாறுபட்ட புதிய வாழ்கை முறையை அவர்களுக்கு அருளுகிறார்.

- விண் கோலியர்

புனிதர் நிக்

செயிண்ட் நிக்கோலஸ் (செயிண்ட் நிக்) என்று நாம் அறியும் நபர், கி.பி 270இல் ஒரு பணக்கார கிரேக்க குடும்பத்தில் பிறந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் சிறுவனாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். அவர் தனது மாமாவுடன் வாழ நேரிட்டது. அவர் அவரை நேசித்து, தேவனைப் பின்பற்றவும் கற்றுக்கொடுத்தார். நிக்கோலஸ் இளைஞனாக இருந்தபோது,திருமணத்திற்கு வரதட்சணை இல்லாத மூன்று சகோதரிகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டதாக புராணக்கதை கூறுகிறது. தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பது பற்றிய இயேசுவின் போதனைகளைப் பின்பற்ற விரும்பிய அவர், அவருடைய சொத்தை எடுத்து ஒவ்வொரு சகோதரிக்கும் ஒரு பொற்காசுகளைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக, நிக்கோலஸ் தனது மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும் மற்றவர்களைப் பராமரிப்பதற்கும் கொடுத்தார். அடுத்த நூற்றாண்டுகளில், நிக்கோலஸ் அவரது ஆடம்பரமான தாராள மனப்பான்மைக்காக கௌரவிக்கப்பட்டார். மேலும் அவர் சாண்டா கிளாஸ் என்று நாம் அறிந்த கதாபாத்திரத்தை ஊக்கப்படுத்தினார். 
இந்த பண்டிகை நாட்களின் பளிச்சிடும் விளம்பரங்களும் நமது கொண்டாட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், பரிசு வழங்கும் பாரம்பரியம் நிக்கோலஸ{டன் இணைகிறது. மேலும் அவருடைய தாராள மனப்பான்மை இயேசுவிடம் அவர் கொண்டிருந்த பக்தியின் அடிப்படையில் அமைந்தது. கிறிஸ்து கற்பனைக்கு எட்டாத தாராள மனப்பான்மை உடையவர் என்பதை நிக்கோலஸ் அறிந்திருந்தார். அவர் கொண்டுவந்த மிக ஆழமான பரிசு: தேவன். இயேசு என்றால் “தேவன்  நம்முடன் இருக்கிறார்" (மத்தேயு 1:23) என்று அர்த்தம். மேலும் அவர் நமக்கு வாழ்வின் பரிசைக் கொண்டு வந்தார். மரண உலகில், அவர் “தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (வச. 21). 
நாம் இயேசுவை நம்பும்போது, தியாகம் செய்யும் பெருந்தன்மை வெளிப்படுகிறது. நாம் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். தேவன் நமக்குக் கொடுப்பதுபோல நாமும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறோம். இது செயிண்ட் நிக்கின் கதை. எல்லாவற்றிற்கும் மேலாக இது தேவனுடைய கதை.  

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தாழ்மையுள்ள ஜோர்ன்

குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் ஜான் இவ்வளவாய் உயர்வாரென்று எவரும் எதிர்பார்க்கவில்லை. அவரது பார்வை குறைபாடும் இன்னும் பிற உடல் நலக்குறைகள் மத்தியிலும், அவர் நார்வேயில் உள்ள தனது கிராமத்தில் உள்ளவர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்தார். உடல் வேதனையின் காரணமாக தூங்க முடியாத இரவுகளில், அவர் ஜெபித்தார். ஜெபத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் நினைத்து, ஒவ்வொரு நபரையும் பேர் பேராகச் சொல்லி, அவர் இதுவரை சந்திக்காத பிள்ளைகளுக்காகக் கூட ஜெபித்தார். ஜனங்கள் அவருடைய கண்ணியத்தைப் பெரிதும் நேசித்து, அவருடைய புத்தியையும் அறிவுரையையும் பெறுவார்கள். நடைமுறையில் அவர்களுக்கு உதவ இயலாவிட்டாலும், அவருடைய அன்பைப் பெற்று அவர்கள் செல்லுகையில் அவர்கள் இன்னும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருவார்கள். ஜோர்ன் இறந்தபோது, அவருக்கு குடும்பம் இல்லாவிட்டாலும், அந்த வட்டாரத்திலேயே அவரது இறுதிச் சடங்கு வெகு விமர்சையாக இருந்தது. அவர் எண்ணியதைக் காட்டிலும் அவரது ஜெபம் மலர்ந்து மிகுந்த பலனைத் தந்தது.

இந்த தாழ்மையுள்ள மனிதர் அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றினார். அவர் தனது சிறையிருப்பிலும் தன் மூலம் தேவனிடம் திரும்பினவர்களை நேசித்தார், அவர்களுக்காக ஜெபித்தார். அவர் ரோமாபுரியின் சிறையிலிருந்தபோது, எபேசுவில் உள்ளவர்களுக்குத் தேவன் “ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை” தரும்படிக்கும், அவர்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் (எபேசியர் 1:17-19) ஜெபித்தார். அவர்கள் இயேசுவை அறிந்து, ஆவியின் வல்லமையால் அன்புடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்று ஏங்கினார்.

ஜானும் அப்போஸ்தலனாகிய பவுலும் தேவனிடம் தங்களை ஊற்றி, தாங்கள் நேசித்தவர்களுக்காக தங்களை அர்ப்பணித்து, ஜெபத்தில் தேவனுக்கு ஊழியம் செய்தனர். இன்று, நாம் பிறரை எவ்வாறு நேசிக்கிறோம், எப்படிச் சேவை செய்கிறோம் என்பதில் அவர்களுடைய உதாரணங்களைச் சிந்திப்போம். 

 

தேவனை குறித்த பிரமிப்பு

ஃபோபியா என்பது சில காரியங்கள் அல்லது சூழ்நிலைகளின் “எதேச்சையான பயம்” என வரையறுக்கப்படுகிறது. அராக்னோஃபோபியா என்பது சிலந்திகள் பற்றிய பயம் (இது பயப்படுவதற்கு முற்றிலும் சாதாரணமான பொதுவான விஷயம் என்று சிலர் சொல்லலாம்). பின்னர் குளோபோஃபோபியா (பலூன்கள் குறித்த பயம்) மற்றும் ஷாக்லெட்டோஃபோபியா (சாக்லேட் குறித்த பயம்) உள்ளது. இதுபோல சில நானூறு பயங்கள் உண்மையானவை மற்றும் ஆவணப்படுத்தப்பட்டவை. எதற்கு வேண்டுமானாலும் நாம் பயப்படக்கூடும் என்றே தோன்றுகிறது.

பத்து கட்டளைகளை பெற்றபின்னர், இஸ்ரவேலர்களின் பயம் குறித்து வேதாகமம் கூறுகிறது, “இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று” (யாத்திராகமம் 20:18). மோசேயோ அவர்களை இந்த சுவாரஸ்யமான வாக்கியங்களால் தேற்றினார்: “பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார்” (வ. 20). “பயப்படாதிருங்கள் ஆனால் பயந்திருங்கள்” என்று சொன்னதில் மோசே தனக்குத்தானே முரண்படுகிறார். உண்மையில், “பயம்” என்பதற்கு எபிரேய பாஷையில் குறைந்தபட்சம் இரண்டு அர்த்தங்கள் உள்ளன.எதைக் குறித்தாகிலும் நடுக்கமுண்டாகும் பயம் மற்றுதேவன் மீதுள்ள பயபக்தியான வியப்பு.

குளோபோஃபோபியா, ஷாக்லெட்டோஃபோபியா போன்ற பயங்கள் நமக்கு சிரிப்புண்டாக்கலாம். ஃபோபியாஸ் பற்றிய மிகவும் கவலைக்கிடமான அடிப்படை என்னவெனில், எல்லா வகையான விஷயங்களுக்கும் நாம் பயப்படக்கூடும். சிலந்திகளைப் போல நம் வாழ்வில் அச்சங்கள் ஊடுருவி, உலகம் ஒரு பயங்கரமான இடமாகத் தோன்றலாம். பயங்கள் மற்றும் அச்சங்களுடன் நாம் போராடும்போது, நம் தேவன் ஒரு வியத்தகு தேவன் என்பதை நினைவூட்டுவது நல்லது, இருளின் மத்தியில் இக்காலத்திற்கேற்ற அவருடைய ஆறுதலை நமக்களிக்கிறார். 

 

வேலையில் மனநிறைவு

தங்கள் பணி அர்த்தமுள்ளதாக மருத்துவர்கள் உணருகிறார்களா என்பதை அறிந்துகொள்ள, வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இரண்டு ஆய்வுகளை மேற்கொண்டனர். இரண்டு ஆய்வுகளும் பெரும்பாலான மருத்துவர்கள் தங்கள் பணியில் மன அழுத்தம் இருந்தாலும் அது அர்த்தமுள்ளதாகவே கருதுவதைக் கண்டறிந்துள்ளனர். அவர்களின் பணி திருப்திக்கான காரணத்தைக் கேட்டபோது, அவர்கள் நிரந்தரமான வேலை, பொறுப்புணர்வு, சுதந்திரம், வீட்டுவசதி, சக ஊழியர்கள் அவர்களை உணர்ந்த விதம் மற்றும் அவர்களின் திறன்களைப் பயன்படுத்துவதற்கும், கற்பிப்பதற்கும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் கிடைத்த வாய்ப்புகள் போன்ற காரணங்களைச் சொன்னார்கள்.

பிரசங்கியின் ஆசிரியரும் வேலையின் அர்த்தத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார். அவர், "மனுஷன் சூரியனுக்குக் கீழே இருக்கிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன?" (வ.22) என்று கேட்கிறார். நாம் நாள் முழுவதும் "அலுப்புடனும்" "துக்கத்துடனும்" வேலை செய்கிறோம், பின்னர் இரவிலும் நம் "மனதுக்கு இளைப்பாறுதலில்லை" (வ.23). வேலை "மாயையே" என்று அவர் முடிக்கிறார் (வ.23). இருப்பினும், மனுஷன் புசித்துக் குடித்து, தன்பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப்பார்க்திலும். அவனுக்கு ஒரு நன்மையுமில்லை இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது (வ.24) என்பதை உணர்கிறார். அவர் இல்லாமல் யாரால் உண்ண முடியும் அல்லது இன்பம் காண முடியும்? (வ.25). வீட்டிலோ அல்லது வெளியிலோ உடல் உழைப்பு அல்லது மன முயற்சியுடன் வேலை செய்வது ஒரு கெளரவம். நம்மில் பெரும்பாலோர் வேலை நாளின் முடிவில் திருப்தியைத் தேடுகிறோம். சிலர் இந்த திருப்தியைச் சேவை, பண ஆதாயம் அல்லது நட்பின் மூலம் கண்டடைய முயலலாம், இன்னும் பலர் வேலையைத் தேவன் கொடுத்த பாக்கியமென்று உணருமட்டும் வருத்தத்தோடு பிரயாசப்படுவார்கள் (ஆதியாகமம் 2:15). நாம் அதிருப்தி கொள்ளுகையில், நாம் தேவனிடம் செல்லலாம். ஏனெனில், எந்த வேலையும் நமக்கு முழு மனநிறைவை அளிக்காது என்பதுதான் உண்மை, ஆனால் நாம் செய்யும் வேலையில் மெய்யான அர்த்தத்தைக் கண்டறியத் தேவன் உதவுவார். ஆன் ஹரிகீர்த்தன்