எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

வின் கோலியர்கட்டுரைகள்

பாழானவற்றிற்கு அப்பாலான தேவனின் வாக்குத்தத்தம்

"லாரா புயல்" மெக்சிகோ வளைகுடா வழியாக அமெரிக்காவின் லூசியானா கடற்கரையை நோக்கி வீசியதால், தீவிர எச்சரிக்கை விடப்பட்டது. மணிக்கு 150 மைல் வேகத்தில் காற்று வீசுவதை ஒரு ஷெரிப் குறிப்பிட்டு, இந்த அதிர்ச்சியூட்டும் செய்தியை வெளியிட்டார்: “தயவுசெய்து வெளியேறுங்கள். ஆனால் நீங்கள் இங்கேயே இருந்தால், எங்களால் உங்களைத் தொடர்பு கொள்ள முடியாவிட்டால், உங்கள் பெயர், முகவரி, தேசிய அடையாள எண் மற்றும் நெருக்கமானவர்களின் பெயரை எழுதி பத்திரமாக உங்கள் சட்டைப் பையில் வைக்கவும். அது இங்கே வரக்கூடாது என்று வேண்டிக்கொள்ளுங்கள்” என்றார். லாரா புயல் நிலத்தைத் தாக்கியவுடன், அதின் அழிவுகரமான விளைவை அவர்களால் பார்க்க மட்டுமே முடியும் என்று மீட்புக் குழுவினருக்குத் தெரியும். அதன் வீரியத்திற்குமுன் உதவியற்றவர்களாய் இருப்பர்.

பழைய ஏற்பாட்டிலிருந்த தேவஜனங்கள் இயற்கையான அல்லது ஆவிக்குரிய பேரழிவை எதிர்கொண்ட போதெல்லாம், அவருடைய வார்த்தைகள் மிகவும் உறுதியானதாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் இருந்தன, அழிவின் மத்தியிலும் அவருடைய பிரசன்னத்தை வாக்களித்தன. “அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச் செய்து.. அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்” (ஏசாயா 51:3) என்றார். மேலும், தேவன் எப்பொழுதும் தம்முடைய மக்களுக்கு மீட்பையும் குணமாகுதலையும் உறுதியளித்தார். அவர்கள் அவரை மட்டுமே நம்பும்போதே அது அவர்களை நிச்சயமாகப் பின்தொடரும். "வானம் புகையைப்போல் ஒழிந்துபோம்" என்றாலும், தேவன் கூறினார் அவருடைய "இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்" (வ. 6) என்று. பாதிப்பு எப்படிப்பட்டதாயினும், அவர்களுக்கான அவரது உறுதியான நன்மை ஒருபோதும் தடைப்படாது.

தேவன் நம்மைக் கஷ்டங்களுக்கு விலக்குவதில்லை, ஆனால் அவருடைய சீர்பொருத்தும் குணமாக்குதலானது, பேரழிவிற்கு மேம்பட்டது என்று அவர் வாக்களிக்கிறார்.

 

அன்பு மரணத்தைப் போல வலியது

நெதர்லாந்தின் ரோர்மாண்டில் உள்ள புராட்டஸ்டன்ட் மற்றும் கத்தோலிக்க கல்லறைகளுக்கு இடையில் நீண்டு கிடக்கும் பழைய செங்கல் சுவரை சுற்றி நீங்கள் உலாவினால், ஒரு வினோதமான காட்சியைக் காண்பீர்கள். ஒவ்வொரு பக்கத்திலும், சுவருக்கு எதிராக ஒரே மாதிரியான இரண்டு உயரமான கல்லறை தலைக்கற்கள் நிற்கின்றன, ஒன்று புராட்டஸ்டன்ட் கணவருக்கும் மற்றொன்று அவரது கத்தோலிக்க மனைவிக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கலாச்சார விதிகளின்படி அவர்கள் தனித்தனி கல்லறைகளில் புதைக்கப்பட வேண்டும். இருப்பினும், அவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்டவிதியை ஏற்கவில்லைபோல; அவர்களின் வழக்கத்திற்கு மாறான தலைக்கற்கள் வேலியிடப்பட்ட தடைக்கு மேலே செல்லும் அளவுக்கு உயரமாக இருப்பதால், மேலே ஒரு அல்லது இரண்டு அடி காற்று இடைவெளி மட்டுமே அவர்களைப் பிரிக்கும். ஒவ்வொன்றின் மேலுள்ள ஒரு கை சிற்பம் மற்றொன்றைத் தொடும், ஒருவருக்கொருவர் கரம் பிடித்துக் கொள்கின்றன. மரணத்திலும் தம்பதிகள் பிரிந்து வாழ மறுத்தனர்.

உன்னதப்பாட்டு அன்பின் வலிமையை விளக்குகிறது. "நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது" (8:6) என்று சாலொமோன் கூறுகிறார். மெய்யான அன்பு ஆற்றல் வாய்ந்தது, மூர்க்கமானது. "அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது" (வ.6). மெய்யான அன்பு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, ஊமையாக்கப்படாது, அழிக்கப்படவும் முடியாது. சாலொமோன் எழுதுகிறார்: “திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது" (வ.7).

"தேவன் அன்பாகவே இருக்கிறார்" (1 யோவான் 4:16). நமது வலிமையான அன்பு, அவர் நம்மீது கொண்ட கொடிதான அன்பின் உடைந்த பிம்பம் மட்டுமே. உண்மையான எந்த அன்பிற்கும், பற்றிப்பிடிக்கும் எந்த அன்பிற்கும் அவர்தான் மெய்யான ஆதாரம்.

நன்றாய் செலவிடப்பட்ட நேரம்

மார்ச் 14, 2019 அன்று, நாசா ராக்கெட்டுகள் தீ பிளம்புகளுடன் மேலெ எழுந்து, விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச்சைச் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சுமந்து சென்றன. கோச் 328 நாட்களுக்குப் பூமிக்குத் திரும்பாமல்,  நீண்ட தொடர்ச்சியான விண்வெளிப் பயணத்திற்கான சாதனையைப் படைத்த பெண்ணானாா். ஒவ்வொரு நாளும், பூமியிலிருந்து சுமார் 254 மைல்களுக்கு மேல் வாழும் விண்வெளி வீரரின் நேரத்தை, ஒரு திரை ஐந்து நிமிட அதிகரிப்புகளில் கண்காணிக்கும். அவளுக்கு எண்ணற்ற தினசரி பணிகள் (உணவு முதல் பரிசோதனைகள் வரை) இருந்தன, மற்றும் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒரு சிவப்புக் கோடு திரையில் கோச் கால அட்டவணைக்கு முன்னால் இருக்கிறாரா அல்லது பின்னால் இருக்கிறாரா என்பதைத் தொடர்ந்து காட்டியது. ஒரு கணமும் வீணாகவில்லை.

நம் வாழ்க்கையில் ஊடுருவி நம்மை ஆளும் சிவப்புக் கோடு போன்ற எதையும் அப்போஸ்தலன் பவுல் நிச்சயமாகப் பரிந்துரைக்கவில்லை என்றாலும், நம்முடைய விலைமதிப்பற்ற, வரையறுக்கப்பட்ட நேரத்தைக் கவனமாகப் பயன்படுத்துமாறு நம்மை ஊக்குவித்தார். "ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்" (எபேசியர் 5:15-16) என்று அவர் எழுதினார். தேவனின் ஞானம் நமது நாட்களை நல்ல நோக்கங்களினாலும் அக்கறைகளாலும் நிரப்பிடவும்; அவருக்குக் கீழ்ப்படிவதைப் பயிலவும்; நமது பிறரை நேசிக்கவும்; உலகில் இயேசுவின் தொடர்ச்சியான மீட்புப் பணியில் பங்கேற்கவும் பயன்படுத்தும்படி அறிவுறுத்துகிறது. துரதிர்ஷ்டவசமாக, ஞானத்தின் போதனைகளைப் புறக்கணித்து, மாறாக  நமது நேரத்தை மதியற்றவா்களாகப் பயன்படுத்துவதும் (வ. 17), சுயநலமான அல்லது அழிவுகரமான நோக்கங்களில் நம் ஆண்டுகளைக் கழிப்பதும் முற்றிலும் சாத்தியமே.

இது நேரத்தைக் குறித்து அதீத வருத்தப்படுவதற்கல்ல, மாறாகக் கீழ்ப்படிதலுடனும் நம்பிக்கையுடனும் தேவனைப் பின்பற்றுவதைக் குறித்தது. நம்முடைய நாட்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்த அவர் நமக்கு உதவுவார்.

பசித்தோருக்கு உணவு

பல ஆண்டுகளாக, 'ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்கா' என்ற பகுதி கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வறட்சி பயிர்களை நாசமாக்கியது, கால்நடைகளைக் கொன்றது மற்றும் அது இலட்சக் கணக்கானவர்களைப் பாதிக்கிறது. கென்யாவின் கஹுமா அகதிகள் முகாமில் உள்ள ஜனங்கள் போர்கள் மற்றும் அடக்குமுறைகளிலிருந்து தப்பியவர்களைக் காட்டிலும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள். ஒரு இளம் தாய் தன் குழந்தையை முகாம் அதிகாரிகளிடம் கொண்டு வந்ததை சமீபத்திய அறிக்கை விவரித்தது. குழந்தை கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்பட்டு, “அவளுடைய முடி மற்றும் சருமம், உலர்ந்தும் உடைந்துமிருந்தது", அவள் சிரிக்க மாட்டாள், சாப்பிட மாட்டாள். அவளது சின்னஞ்சிறு உடல் செத்துக்கொண்டிருந்தது. நிபுணர்கள் உடனடியாக செயல்பட்டனர். தேவைகள் இன்னும் பல இருந்தாலும்; அதிர்ஷ்டவசமாக, உடனடி பிறப்பு மற்றும் இறப்பு தேவைகளைச் சந்திக்க ஒரு உள்கட்டமைப்பு கட்டப்பட்டது.

இதுபோன்ற நம்பிக்கையற்ற பகுதிகள்தான் தேவஜனங்கள் அவருடைய ஒளியையும் அன்பையும் பிரகாசிக்க அழைக்கப்பட்ட இடங்களாகும் (ஏசாயா 58:8). ஜனங்கள் பட்டினியால் வாடும்போது, ​​நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அல்லது அச்சுறுத்தலுக்கு ஆளாகும்போது, ​​தேவன் தம் ஜனங்களே முதலாவதாக  உணவு, மருந்து மற்றும் பாதுகாப்பு என்று அனைத்தையும் இயேசுவின் நாமத்தால் வழங்கும்படி அழைக்கிறார். பண்டைய இஸ்ரவேர்கள் உபவாசத்திலும் ஜெபத்திலும் உண்மையாக இருப்பதாக எண்ணிக்கொண்டு, "பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும்" (வ.7) போன்ற இரக்கமுள்ள பணிகளைப் புறக்கணித்ததால் ஏசாயா அவர்களைக் கண்டித்தார்.

பசியுள்ளவர்களுக்குச் சரீர மற்றும் ஆவிக்குரிய ரீதியாக உணவளிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அவர் தேவையைப் பூர்த்தி செய்திட  அவர் நமக்குள்ளும், நம் மூலமாகவும் செயல்படுகிறார்.

தேவனில் ஒழுக்கமான வாழ்க்கை

அது ஜூன் 2016, ராணி எலிசபெத்தின் தொண்ணூறாவது பிறந்தநாள். அவளது வண்டியிலிருந்து, ராணி கூட்டத்தை நோக்கி கை அசைத்து, சிவப்பு நிற சீருடையணிந்த வீரர்களின் மிகசீரான நீண்ட வரிசைகளுக்கு முன்னால் கடந்து சென்றாா்கள். இங்கிலாந்தில் அது உஷ்ணமான நாள், மேலும் காவலர்கள் தங்கள் பாரம்பரிய அடர் கம்பளி கால்சட்டை, தாடை வரை பொத்தான்கள் போடப்பட்ட கம்பளி மேலாடைகள் மற்றும் பாரிய கரடி-உரோம தொப்பிகளை அணிந்திருந்தனர். வீரர்கள் சூரியனுக்குக் கீழே கடுமையான வரிசைகளில் நின்றபோது, ​​​​ஒரு காவலர் மயக்கமடையத் தொடங்கினார். வியத்தகு வகையில், அவர் தன்னை கடுமையாகிக் கட்டுப்படுத்தி, வெறுமனே முன்னோக்கி விழுந்தார், மணல் சரளையில் அவரது முகம் புதைந்தபோது அவரது உடல் ஒரு பலகை போன்று நேராக இருந்தது. அங்கே அவர் அப்படியே கிடந்தார், விறைப்பாகவே விழுந்து கிடந்தார்.

இந்த காவலர் சுயகட்டுப்பாட்டைக் கற்றுக்கொள்வதற்கும், அவர் மயங்கி விழுந்தபோதும் தனது உடலைச் சரியான இடத்தில் வைத்திருப்பதற்கும் பல வருடப் பயிற்சியும் ஒழுக்கமும் தேவைப்பட்டது. அப்போஸ்தலனாகிய பவுல் இப்படிப்பட்ட பயிற்சியை விவரிக்கிறார்: "என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்" (1 கொரிந்தியர் 9:27 ) என்று அவர் எழுதினார். “பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள்” (வ. 25) என்று அவர் கண்டுணர்கிறார்.

தேவனின் கிருபையே (நம் சுய முயற்சிகள் அல்ல) நாம் செய்யும் எல்லாவற்றுக்கும் வலுவூட்டும் ஆதாரமாக இருந்தாலும், நமது ஆவிக்குரிய வாழ்க்கை கடுமையான ஒழுக்கத்திற்குப் பாத்திரமானது. நம் மனதையும், இருதயத்தையும், உடலையும் ஒழுங்குபடுத்தத் தேவன் நமக்கு உதவுவதால், சோதனைகள் அல்லது கவனச்சிதறல்களுக்கு மத்தியிலும் கூட, நம் கவனத்தை அவர் மீது வைக்கக் கற்றுக்கொள்கிறோம்.

பொறுப்பற்ற தன்மை மற்றும் கவனக்குறைவு

லிண்டிஸ்ஃபார்ன், பரிசுத்த தீவு என்றும் அழைக்கப்படுகிறது. இது இங்கிலாந்தில் உள்ள ஒரு அலை தீவு ஆகும். இது ஒரு குறுகிய சாலை மூலம் பிரதான நிலப்பரப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு முறை, தரைப்பாலத்தை கடல் மூடுகிறது. அதிக அலைகள் ஏற்படும்போது, அதைக் கடக்கும்போது ஏற்படும் ஆபத்துகள் குறித்துப் பலகைகள் பார்வையாளர்களை எச்சரிக்கின்றன. ஆயினும்கூட, சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து எச்சரிக்கைகளை அலட்சியம் செய்வதால் பெரும்பாலும் நீரில் மூழ்கிய கார்களின் மேல் உட்கார்ந்து அல்லது அவர்கள் மீட்கப்படக்கூடிய உயர்ந்த பாதுகாப்பு குடிசைகளுக்கு நீந்தி தப்புகிறார்கள். சூரிய உதயத்தைக் கணிப்பதபோல, அலைகளின் வரவை கணிக்கமுடியும். எச்சரிக்கைகள் எல்லா இடங்களிலும் உள்ளன. நீங்கள் அவர்களை தவறவிட முடியாது. ஆயினும்கூட, ஒரு எழுத்தாளர் லிண்டிஸ்ஃபார்ன் “பொறுப்பற்றவர்கள் அலையை கடக்க முயற்சிக்கும் இடம்" என்று கூறுகிறார். 

“மூர்க்கங்கொண்டு துணிகரமாய்” இருப்பது மதியீனம் என்று நீதிமொழிகள் நமக்குச் சொல்கிறது (14:16). ஒரு பொறுப்பற்ற நபர் ஞானம் அல்லது புத்திசாலித்தனமான ஆலோசனையை சிறிதும் பொருட்படுத்துவதில்லை; மற்றவர்களிடம் கவனம் அல்லது விடாமுயற்சியுடன் அக்கறை காட்டுவதில்லை (வச. 7-8). எவ்வாறாயினும், ஞானம் நம்மைக் கேட்கவும் சிந்திக்கவும் தாமதப்படுத்துகிறது. இதனால் நாம் உணர்ச்சிவசப்படுவதில்லை அல்லது அரைகுறையான யோசனைகளால் (வச. 6). நல்ல கேள்விகளைக் கேட்கவும், நம் செயல்களின் தாக்கங்களைக் கருத்தில் கொள்ளவும் ஞானம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. பொறுப்பில்லாத பேதைகள் உறவுகளைப் பொருட்படுத்தாமல் சத்தியத்தை புறக்கணித்து நடக்கிறார்கள், “விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்” (வச. 15). 

நாம் சில சமயங்களில் தீர்க்கமாகவோ அல்லது வேகமாகவோ செயல்பட வேண்டியிருக்கும் போது, நாம் பொறுப்பற்ற தன்மையை எதிர்க்கலாம். நாம் தேவனுடைய ஞானத்தைப் பெற்று பயிற்சி செய்யும்போது, நமக்கு அவசியப்படும் வேளைகளில் அவர் நம்மை வழிநடத்துவார் (வச. 15).

சுத்தமாக்கும் அறிக்கையிடுதல்

ஜனங்கள் மரிக்கும் தறுவாயில், அவர்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்கவும்,  அவர்கள் உயிருடன் இருந்தபோது பகிர்ந்து கொள்ளாத ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ளவும் சம்பளத்திற்காக பணியமர்த்தப்பட்ட ஒருவர் இருக்கிறார். இரங்கல் செய்திகள் வாசிக்கப்படுகையில் அவர்  குறுக்கிடுவார். திகைக்கும் பொறுப்பாளர்கள் எதிர்க்கத் துவங்குகையில், அவர்களை உட்காரச் சொல்வதுமுண்டு. ஒருமுறை இவர் எழுந்து நின்று  சவப்பெட்டியிலிருந்தவர் எவ்வாறு அதிர்ஷ்ட குலுக்கலில் வென்று, பின்பு அதை யாரிடமும் சொல்லாமல் பல ஆண்டுகளாகத் தன்னை வெற்றிபெற்ற ஒரு தொழிலதிபராகப் பிறரிடம் காட்டிக்கொண்டார் என்பதை விளக்கினார். இந்த வாடகைக்கு அமர்த்தப்பட்டவர், விதவையான ஒரு மனைவியிடம் அவரது கணவனின் பல பாலியல் துரோகங்களை அறிக்கையிட்டார். இவரது  செயல்கள் சொந்த நலனுக்காகப் பிறரைச் சுரண்டுவதோ அல்லது நல்ல நோக்கத்தில் செய்யப்படுகிறதோ என்று கேட்கலாம், ஆனால் ஜனங்கள் தங்களுடைய கடந்தகால பாவங்களிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்ற மக்களின் வாஞ்சை இதில் அப்பட்டமாகத் தெரிகிறது.

வேறொருவர் நமக்காக அறிக்கை செய்வதென்பது (குறிப்பாக நாம் இறந்த பிறகு) இரகசியங்களைக் கையாள்வதற்கான ஒரு பயனற்ற மற்றும் ஆபத்தான வழியாகும். எவ்வாறாயினும், இந்தக் கதைகள் ஒரு ஆழமான உண்மையை வெளிப்படுத்துகின்றன: நம் சுமையை இறக்கிட, நாம் அறிக்கையிட வேண்டும். அறிக்கையிடலானது நாம் மறைத்த, புரையோடச் செய்த காரியங்களைச் சுத்தப்படுத்துகிறது. "நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்" (5:16) என்று யாக்கோபு கூறுகிறார். அறிக்கையிடல்  நம்மைக் கட்டி வைத்திருக்கும் சுமைகளிலிருந்து விடுவிக்கிறது, தேவனுடன் நெருங்கிட நம்மை விடுவிக்கிறது. அவரிடமும், நமது விசுவாச அங்கத்தினரோடும் திறந்த மனதுடன் ஜெபிக்கச் செய்கிறது. அறிக்கையிடல் குணப்படுத்துகிறது.

தேவனிடமும் நமக்கு நெருக்கமானவர்களிடமும் நாம் புதைக்க ஆசைப்படும் வலிகள் மற்றும் தோல்விகளை ஒப்புக்கொண்டு, ஒரு திறந்த வாழ்க்கை வாழ யாக்கோபு நம்மை  அழைக்கிறார். இந்த சுமைகளை நாம் மட்டும் சுமக்க வேண்டியதில்லை. அறிக்கையிடல் நமக்கான ஒரு பரிசு. நம் இருதயத்தைச் சுத்திகரிக்கவும், நம்மை விடுவிக்கவும் தேவன் அதைப் பயன்படுத்துகிறார்.

 

கொண்டாட்டத்தின் காலம்

வர்ஜீனியாவிலுள்ள எங்கள் முன்னாள் திருச்சபையில், ரிவானா ஆற்றில் வைத்து ஞானஸ்நானம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது. அங்கு பெரும்பாலும் சூரிய ஒளியின் வெப்பம் அதிகமாக இருக்கும்; ஆனால் தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும். எங்கள் ஞாயிற்றுக்கிழமை ஆராதனை முடிந்த பிறகு, நாங்கள் எங்கள் கார்களிலும் கேரவனிலும் அவ்விடத்திற்கு செல்வோம். அங்கு அண்டை வீட்டார் மற்றும் அவர்களின் பிள்ளைகள் விளையாட்டு மைதானத்தில் குவிந்து விளையாடிக்கொண்டிருப்பர். நாங்கள் அவர்களை அமைதியாகக் கடந்து ஆற்றிற்கு செல்வோம். குளிர்ந்த நீரில் நின்று, நான் வேதவாக்கியங்களை வாசித்து, ஞானஸ்நானம் பெறுபவர்களை தேவனுடைய அன்பின் இந்த உறுதியான வெளிப்பாட்டில் மூழ்கச் செய்வேன். அவர்கள் ஆற்றிலிருந்து வெளிப்பட்டதும், ஆரவாரமும் கைதட்டல்களும் வெடித்தன. கரையில் ஏறி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் புதிதாக ஞானஸ்நானம் பெற்றவர்களை அணைத்துக் கொண்டனர். நாங்கள் கேக், பானங்கள் மற்றும் சிற்றுண்டிகளை சாப்பிட்டோம். என்ன நடக்கிறது என்பதை அக்கம்பக்கத்தினர் எப்போதும் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் அது ஒரு கொண்டாட்டம் என்று அவர்களுக்குத் தெரியும்.

லூக்கா 15இல், கெட்ட குமாரனைப் பற்றிய இயேசுவின் கதை (வச. 11-32), எப்போதெல்லாம் ஒருவர் மனந்திரும்பி தகப்பனுடைய வீட்டிற்கு வருகிறார்களோ, அது ஒரு கொண்டாட்டத்திற்கான தருணம் என்பதை வெளிப்படுத்துகிறது. தேவனுடைய அழைப்பிற்கு யாராவது ஆம் என்று சொன்னால், அது விருந்திற்கான நேரம். தகப்பனை மறுதலித்த மகன் திரும்பி வந்தபோது, ததப்பன் உடனடியாக அவனுக்கு எதிர்கொண்டுபோய், அழகான வஸ்திரம், பளபளப்பான மோதிரம் மற்றும் புதிய பாதரட்சைகளை அவனுக்குக் கொடுக்கிறார். ‘கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்” (லூக்கா 15:23) என்கிறார். தேவனுடைய குடும்பத்தில் யாரெல்லாம் புதிதாய் இணைகிறார்களோ, அது நிச்சயமாகவே கொண்டாட்டத்தின் தருணமாய் இருக்கும் (வச. 24). 

 

விடுதலையின் தேவன்

ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் அடிமைத்தனத்திலிருந்த மக்களை விடுவித்தார் ,எதிரிகளும் சரணடைந்தனர். எனினும் டெக்சாஸ் மாநிலம் அடிமைகளின் சுதந்திரத்தை இன்னும் அறியவில்லை. ஜூன் 19, 1865 அன்று, கோர்டன் கிரேன்ஜர் என்ற இராணுவ தளபதி டெக்சாஸில் உள்ள ஒரு நகரத்திற்குள் நுழைந்து, அடிமைப்படுத்தப்பட்ட அனைத்து நபர்களையும் விடுவிக்குமாறு கட்டளையிட்டார். சுதந்திரத்தின் பிரகடனத்தைக் கேட்டபோது, சங்கிலிகள் அறுந்து. அடிமைத்தனத்திலிருந்தவர்கள் அடைந்த அதிர்ச்சியையும் , மகிழ்ச்சியையும் கற்பனை செய்து பாருங்கள்.

தேவன் ஒடுக்கப்பட்டவர்களைக் காண்கிறார், அநீதியால் நசுக்கப்படுபவர்களுக்கு அவர் மெய்யாகவே விடுதலை அளிப்பார். மோசேயின் காலத்தில் இருந்ததைப் போலவே இப்போதும் அது உண்மையாக இருக்கிறது. எரிகிற முட்செடியிலிருந்து அவசர செய்தியுடன் தேவன் அவனுக்கு வெளிப்பட்டு, "எகிப்தில் இருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து(தேன்)" (யாத்திராகமம் 3:7) என்றார். அவர் இஸ்ரேலுக்கு எதிரான எகிப்தின் மிருகத்தனத்தைப் பார்த்தது மட்டுமன்றி, அதைக்குறித்து ஏதோவொன்று செய்யத் திட்டமிட்டுமிருந்தார். "அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி...நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்" (வ.8) என்று தேவன் முழங்கினார். அவர் இஸ்ரேலுக்குச் சுதந்திரத்தை அறிவிக்கச் சித்தம் கொண்டார். மோசே அவருடைய வாயாக இருப்பார்:"நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன்" (வ.10) என்று தன் ஊழியனிடம் கூறினார்.

தேவனுடைய வேளை நாம் எதிர்பார்ப்பதுபோல விரைவாக வரவில்லை  என்றாலும், ஒரு நாள் அவர் நம்மை எல்லா அடிமைத்தனத்திலிருந்தும், அநீதியிலிருந்தும் விடுவிப்பார். ஒடுக்கப்பட்ட அனைவருக்கும் நம்பிக்கையையும். விடுதலையையும் தருகிறார்.

 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

மனம் தளராதீர்கள்

இளைப்பு. சத்யா, தனது புதிய வேலையில் ஒன்பது மாதத்திற்குப்பின் இதை உணர்ந்தான். இயேசுவின் விசுவாசியாக,  தனது பணியைச் செய்யவும் சவால்களை எதிர்கொள்ளவும் தேவனின் நியமங்களையே பின்பற்றும்படி நாடினான். ஆனால், மனிதர்கள் சார்ந்த பிரச்சனைகள் நீடித்தன, நிர்வாகத்திலும் சிறிதளவே முன்னேற்றம் இருந்தது. தான் கையாலாகாதவனாக உணர்ந்தான்.

ஒருவேளை, சத்யாவைப் போல நீங்களும் சோர்ந்திருக்கலாம். உங்களுக்கு நல்லது எதுவெனத் தெரியும், ஆனாலும் அதைச் செய்வதற்கு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பெலனற்றவர்களாக உணரலாம். மனம் தளராதீர்கள். அப்போஸ்தலன் பவுல் நம்மை இந்த வார்த்தைகளால் ஊக்குவிக்கிறார்: "நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்" (கலாத்தியர் 6:9) இங்கே, ஒரு விவசாயியின் உருவகத்தைப் பயன்படுத்துகிறார். அநேக விவசாயிகள் அறிந்துள்ளதுபோல, விதைப்பது கடினமான வேலை.

“ஆவிக்கென்று” (வ.8) விதைப்பதும் கடினமான வேலையே. ஆவியானவரின் நடத்துதலைப் பின்பற்றி, அவரை கனப்படுத்தும் வாழ்வை வாழ நாடுகின்ற இயேசுவின் விசுவாசிகள் களைத்து, மனம் தளரக்கூடும். ஆனால், நாம் அவரது வாக்கைப் பற்றிக்கொண்டால், அறுவடையும் வரும். நாம் ”நித்தியஜீவனை” அறுப்போம் (வ.8. பார்க்க: யோவான் 17:3) கிறிஸ்து திரும்பி வருகையில் தேவ ஆசீர்வாதமாக நாம் பெறப்போகும் மகா விளைச்சல்; இந்த வாழ்க்கையிலும் அவரை அறிவதன்மூலம் உண்டாகும் நம்பிக்கையும் சந்தோஷமும் நமக்குண்டு. நாம் ஏற்ற காலத்தில் அறுப்போம், இந்த காலநேரமானது பருவங்களாலோ காலசூழ்நிலைகளாலோ அல்லாமல் பூரணமான தேவனுடைய சித்தத்தின்படியே தீர்மானிக்கப்படுகிறது. அறுவடை வரும்வரை, தேவபெலத்தால் நாம் தொடர்ந்து விதைப்போம்.

 

இலகுவானதும், கடினமானதும்

மார்க் ஒரு உற்சாகமான இளம் போதகர். ஒரு காலை வேளையில், தனது மகன் ஓவனுடன் பந்து விளையாடுகையில், ஓவன் தடுமாறி விழுந்து மரித்தான். நிலைகுலைந்து போன மார்க், இன்றும் அதற்காக வேதனைப்படுகிறார். ஆனால், அந்த வலியினூடே மிகுந்த மனதுருக்கமுடைய போதகரா க மாறியுள்ளார். மார்க்கின் துயரத்தில் பங்கேற்ற நான், “தேவன் ஒருவனை ஆழமாக காயப்படுத்துமட்டும், அவன் அவரால் அபிரிதமாக ஆசிர்வதிக்கபடுது சந்தேகமே " என்று ஏ.டபல்யு.டோசர் குறிப்பிட்டிருந்த தனது புரிதலுக்கு, மார்க்கின் சோதனையும் ஒரு சான்றோ என்று வியக்கிறேன்.

ஆனால், அது உண்மையில் அவ்வளவு எளிதல்ல. இஸ்ரவேலர்களின் பயணத்தை கவனித்தால், தேவனின் அறிவதர்கரிய வழிமுறைகளில் சிலவற்றைக் கற்றுக்கொள்ளலாம். புதிதாய் தோன்றிய தேசத்திற்குத் தேவன், “ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி" (யாத்திராகமம் 13:17) எகிப்திலிருந்து எளிதான பாதையில் அழைத்து வந்தார். எனினும் சில வசனங்கள் தள்ளி, தேவன் மோசேயிடம் பார்வோன் தனது இராணுவத்தோடு இவர்களை பின்தொடரும்படிக்கு பாளயமிறங்க சொன்னார் (14:1-4). பார்வோன் இந்த பொறியில் வீழ்ந்தான். இஸ்ரவேலர்கள் மிகவும் பயந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள் (வ.10). “கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” (வ.14) என்று மோசே அவர்களைத் திடப்படுத்தினான்.

தேவன் தமது ஜனங்களை வளர்க்கவும், தமக்கு மகிமையுண்டாக்கவும்; கடினம் மற்றும் எளிதுமான இரண்டு பாதைகளையும் உபயோகிக்கிறார். தேவன், "நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன்" (வ.4) என்று வாக்குரைத்தார். இஸ்ரவேலர் அவ்வாறே செய்தனர். நாமும் அவ்வாறே செய்யலாம். எளிதோ, கடிதோ ஒவ்வொரு சோதனையினூடே தேவன் நமது விசுவாசத்தைக் கட்டுவிக்கிறார். வாழ்க்கையின் எளிதான காலத்தில், அவரில் இளைப்பாறுங்கள். வாழ்க்கையின் கடினமான நேரத்தில், அவர் உங்களைச் சுமக்கட்டும்.

தேவனோடு புதிய துவக்கம்

"உன் பாவமும் இயேசுவைச் சிலுவையில் அறைந்ததா?" டச்சு ஓவியர் ரெம்ப்ராண்ட் 1633 ஆம் ஆண்டு வரைந்த தலைசிறந்த படைப்பான "தி ரைசிங் ஆஃப் தி கிராஸ்" -இல் கேட்கும் கேள்வி இதுவே. அந்த ஓவியத்தின் மையத்தில்,  இயேசு சிலுவையில் உயர்த்தி பிடிக்கப்பட்டிருக்கிறார். நான்கு பேர் அவரை சிலுவையோடு தூங்குகிறார்கள். ஆனால் அதில் ஒருவர் இயேசுவைச் சுற்றி இருந்த வெளிச்சத்தில் நிற்கிறார். அவர் அணிந்திருந்த ஆடை வித்தியாசமாயிருந்தது; அவர் ரெம்ப்ராண்ட் வாழ்ந்த காலத்திலிருந்த ஆடையை அணிந்திருந்தார். ஓவியர் அடிக்கடி அணிந்த தொப்பியையும் அணிந்திருந்தார். அவரது முகத்தை உற்று நோக்கினால், ரெம்ப்ராண்ட் தன்னையும் அந்த ஓவியத்தில் இணைத்துள்ளார், அது "இயேசுவின் மரணத்திற்கு என் பாவங்களும் காரணம்" என்று சொல்லுவது போலிருந்தது.

ஆனால், அதில் தனித்து நிற்கும் இன்னொருவரும் இருக்கிறார். அவர் குதிரையில் இருக்கிறார், ஓவியத்திலிருந்து பார்வையாளர்களை நேரடியாகப் பார்க்கிறார். சிலர் இதை ரெம்ப்ராண்டின் இரண்டாவது சுய உருவப்படமாகப் பார்க்கிறார்கள், "நீங்கள் இன்னும் இங்கே வரவில்லையா?" என்று பார்வையாலே தன்னை கவனிக்கும் அனைவரையும் கேட்பது போல் உள்ளது.

பவுல் தன்னையே அங்குக் கண்டார். நாமும் நம்மைக் காணலாம், காரணம் இயேசு நமக்காகவும் பாடுபட்டு மரித்தார். ரோமர் 5:10 இல், பவுல் தன்னையும் நம்மையும் "தேவனுக்குச் சத்துருக்கள்" என்று குறிப்பிடுகிறார். ஆனால் நம்முடைய பாவங்கள் இயேசுவின் மரணத்திற்குக் காரணமாயினும், அவருடைய மரணம் நம்மைத் தேவனோடு ஒப்புரவாக்குகிறது: "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்" (வ.8).

பாவமன்னிப்பு தேவைப்படும் பாவிகளாக ரெம்ப்ராண்ட் மற்றும் பவுலுடன் நாமும் நிற்கிறோம். தேவனுடனான புதிய ஆரம்பம் என்ற நமது ஆழ்ந்த தேவையை அவருடைய சிலுவையின் மூலம் இயேசு நமக்குப் பூர்த்தி செய்கிறார். இதை நமக்காக நாமே ஒருபோதும் செய்திட முடியாது.