எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

வின் கோலியர்கட்டுரைகள்

அடிப்படையை தவறவிடுதல்

பல தசாப்தங்களாக, துரித உணவு வகையில் மெக்டொனால்ட் நிறுவனம் தனது குவார்ட்டர் பவுண்டர் பர்கர் கொண்டு ஆண்டது. 1980 களில் அதின் போட்டி நிறுவனம் தனது அற்புதமான திட்டத்தால் அதனை வீழ்த்த நினைத்தது. ஏ அண்ட் டபுள்யு நிறுவனம் மெக்டொனால்டை விட பெரிதான தர்ட் பவுண்ட் பர்கரை அதே விலைக்கு விற்றது. மேலும் அதின் ருசிக்காக பல விருதுகளையும் வென்றது. ஆனால் அது நிலைக்கவில்லை. அதை வாங்க ஆளில்லை. இறுதியில், அவர்கள் அதை மெனுவிலிருந்து எடுத்துவிட்டனர். தர்ட் பவுண்ட் பர்கர் குவார்ட்டர் பவுண்டர் பர்கரை விட சிரியதென்று நுகர்வோர் தவறாய் புரிந்துகொண்டதே அதின் தோல்விக்கு காரணமென்று ஒரு ஆராய்ச்சி அறிக்கையிட்டது.

அடிப்படைகளை தவறவிடுவது எவ்வளவு எளிது என்று இயேசு எச்சரித்தார். மதத் தலைவர்கள், அவர் சிலுவையில் அறையப்பட்ட வாரத்தில் அவரை இழிவுபடுத்த திட்டமிட்டனர், ஏழு முறை விதவையான ஒரு பெண்ணைப் பற்றி ஒரு விசித்திரமான, கற்பனையான காட்சியை முன்வைத்தனர் (மத்தேயு 22:23-28).  இந்த சிக்கலான தடுமாற்றம் ஒரு பிரச்சனையே இல்லை என்று இயேசு பதிலளித்தார். மாறாக, அவர்கள்  "வேதத்தையும் தேவனின் வல்லமையையும்" அறியவில்லை என்பதுதான் அவர்களின் பிரச்சனை (வச. 29). வேதவசனங்களின் நோக்கம் தர்க்கரீதியாகவும் தத்துவப் புதிர்களுக்கும் பதிலளிப்பதில்லை என்று இயேசு வலியுறுத்தினார். மாறாக, இயேசுவை அறியவும் நேசிக்கவும், அவரில் "நித்திய ஜீவனை" பெறவும் நம்மை வழிநடத்துவதே அவைகளின் முதன்மையான நோக்கம் (யோவான் 5:39). தலைவர்கள் தவறவிட்ட அடிப்படைகள் இவையே.

நாம் அடிக்கடி அடிப்படைகளையும் தவறவிடுகிறோம். உயிரோடிருக்கும் இயேசுவை கண்டுகொள்வதே வேதத்தின் முக்கிய நோக்கம். அதைத் தவறவிட்டால் மனவேதனையே மிஞ்சும்

மகிழ்ச்சியான நம்பிக்கை

கருணைக்கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ரூடியை ஒரு பெண், விலங்குகள் காப்பகத்திலிருந்து மீட்டார். அந்த நாய் அவளுக்கு துணையானது. பத்து ஆண்டுகளாக, ரூடி லிண்டாவின் படுக்கைக்கு அருகில் அமைதியாக தூங்கினது, ஆனால் அது திடீரென்று அவளுக்கு அருகில் குதித்து அவள் முகத்தை நக்க ஆரம்பித்தது. லிண்டா அதை திட்டினார், ஆனால் ஒவ்வொரு இரவும் ரூடி அதேபோல செய்தது. "விரைவில் அவர் என் மடியில் குதித்து, நான் அமரும் ஒவ்வொரு முறையும் என் முகத்தை நக்கியது" என்றார் லிண்டா.

ரூடியை பிராணிகள் நலமையத்திற்கு அழைத்துச் செல்ல அவள் திட்டமிட்டிருகையில்; ​​ரூடி எத்தனை பிடிவாதமாக இருக்கிறது என்பதையும், அது தன் தாடையில் அதே இடத்தில் தன்னை எப்படி நக்குகிறது என்பதையும் லிண்டா சிந்திக்க ஆரம்பித்தாள். தயங்கியவாறே, லிண்டா மருத்துவரை அணுகுகையில், அவர் ரூடியிடம் ஒரு நுண்ணிய கட்டி இருப்பதைக் (எலும்பு புற்றுநோய்) கண்டறிந்தார். டாக்டர் லிண்டாவிடம், அவள் தாமதித்திருந்தால், அது அவளைக் கொன்றிருக்கும் என்றார். லிண்டா ரூடியின் உள்ளுணர்வை நம்பினாள், அவ்வாறு செய்ததில் அவள் மகிழ்ச்சியடைந்தாள்.

தேவனை நம்புவது ஜீவனுக்கும் மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று வேதம் மீண்டும் மீண்டும் சொல்கிறது. சங்கீதக்காரன், "கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்" (40:4) என்கிறார். சில மொழிபெயர்ப்புகள் இதை இன்னும் மிகைப்படுத்தி, "கர்த்தரை தங்கள் நம்பிக்கையாக கொள்பவர்கள் மகிழ்ச்சியானவர்கள்" (வ. 4) என்கிறது. சங்கீதங்களில் குறிப்பிடப்படும் "மகிழ்ச்சி"; மிகுதியாகவும், பொங்குகிற, உற்சாகமான மகிழ்ச்சியாகும்.

நாம் தேவனை நம்புகையில், ​​ஆழமான, உண்மையான மகிழ்ச்சியே இறுதி முடிவு. இந்த நம்பிக்கை எளிதில் வராமல் இருக்கலாம், மேலும் முடிவுகள் நாம் எண்ணியது போல இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் தேவனை நம்பினால், நாம் நம்பியதற்காக மட்டற்ற மகிழ்ச்சி அடைவோம்.

தேவன் தருவதை உபயோகித்தல்

1920களின் வியப்பூட்டும் திட்டம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் சிட்டி ஹால் ஆகும். மைக்கேல் ஏஞ்சலோ தனது டேவிட் சிற்பத்திற்குப் பயன்படுத்திய அதே குவாரியில் எடுக்கப்பட்ட பளிங்குக் கற்கள் வெண்மையான படிக்கட்டுகளை  பெருமைப்படுத்தின. அதின் கோபுரம் வெனிஸின் தூய மாற்கு ஆலய கோபுரத்தின் பிரதி, மேலும் தாமிரத்திலான குவிமாடம் (உருண்டையான கோபுரம்) பூமியின் தெற்கு அரைக்கோளத்திலேயே மிகப்பெரியது. கட்டிடம் கட்டுபவர்கள் ஒரு பெரிய சமாதான தூதனின் சிலையால் உச்சியை அலங்கரிக்க நினைத்தனர், ஆனால் ஒரு சிக்கல் இருந்தது: பணம் எதுவும் இல்லை. குழாய்களை செப்பனிடும் ஃபிரெட் ஜான்சன் உதவிக்கு வந்தார். அவர் ஒரு கழிப்பறை தொட்டி, ஒரு பழைய விளக்கு கம்பம் மற்றும் பயனற்ற உலோகத் துண்டுகளைப் பயன்படுத்தி, கோபுரத்தை ஏறக்குறைய நூறு ஆண்டுகளாக அலங்கரிக்கும், மகுடம் சூடிய மணிமுடியை உருவாக்கினார்.

ஃபிரெட் ஜான்சன் மற்றும் அவரிடம் இருந்ததைப் பயன்படுத்தினதைப் போலவே, நம்மிடம் உள்ள பெரிய அல்லது சிறிய அனைத்தையும் கொடுத்து தேவனின் பணியை செய்யலாம். இஸ்ரவேலை தலைமைதாங்கி எகிப்திலிருந்து வெளியேற்றும்படி மோசேயிடம் கடவுள் கேட்டபோது, ​​மோசே "அவர்கள்.. என் வாக்குக்குச் செவிகொடார்கள்" (4:1) என்று தடுமாறினார். தேவன், "உன் கையில் இருக்கிறது என்ன" (வ. 2) என்று எளியமையான கேள்வியில் பதிலளித்தார். மோசேயிடம் கோலிருந்தது, வெறும் குச்சிதான். தேவன் அதைத் தரையிலே போடு என்றார், "அது சர்ப்பமாயிற்று" (வ. 3). பின்னர் அவர் சர்ப்பத்தை எடுக்க மோசேயிடம் அறிவுறுத்தினார், அது மீண்டும் ஒரு கோலாக மாறியது. மோசே செய்ய வேண்டியதெல்லாம், கோலை எடுத்துக்கொண்டு போவதும் மற்றதைச் செய்யம்படி அவரை நம்புவதுமே என்று தேவன் விளக்கினார். வியப்பூட்டும் வகையில், எகிப்தியர்களிடமிருந்து இஸ்ரவேலை மீட்க மோசேயின் கையில் இருந்த அந்த கோலை பயன்படுத்துவார் (7:10–12; 17:5–7).

நம்மிடம் இருப்பது நமக்கே பெரிதாகத் தோன்றாமல் இருக்கலாம், ஆனால் தேவனுக்கு நம்மிடம் இருப்பதே போதுமானதாக இருக்கும். நம்மிடம் உள்ள சாதாரண பொருட்களை எடுத்து தன் பணிக்கு பயன்படுத்துகிறார்.

கூடியிருப்பது நலம்

ஒரு புகைப்படக் கலைஞர் ஸ்டார்லிங்ஸ் பறவைகளையும் (கருப்பு நிற சிறிய பறவை), ஆயிரக்கணக்கான இந்தப் பறவைக் கூட்டம் வானத்தில் நிகழ்த்தும் பிரமிப்பூட்டும் "மர்மரிங்ஸ்" எனப்படும் தண்ணீர்போன்ற அசைவுகளையும் படம்பிடிக்கப் பல ஆண்டுகள் செலவிட்டார். இதை விண்ணில் பார்ப்பது ஒரு அலையின் அடியில் அமர்ந்திருப்பது போன்றது அல்லது பற்பல வடிவங்களில், கலைஞர்கள் தூரிகையினால் வரையும் கண்கவர் கண்ணாடி ஓவியம் போன்று உள்ளது. டென்மார்க்கில், இந்த ஸ்டார்லிங் பறவைகளின் அனுபவத்தை பிளாக் சன் என்பார்கள். மிகவும் வியப்பூட்டுவது, இந்த பறவைகள் தங்களுடைய இயற்கையான உள்ளுணர்வால் நெருக்கமாக அருகருகே பறப்பதுதான்; ஒரு பறவை கூட நகர்வில் தவறினால், அவைகள் குழப்பமடைந்து, மொத்த கூட்டமும் பேரழிவைச் சந்திக்க நேரிடும். இதைத் தவிர்க்கவே "மர்மரிங்ஸ்" முறை. ஒரு பருந்து அவைகளில் ஒன்றை இரையாக்க இறங்கும்போது, வேட்டையிலிருந்து தப்பிக்க இந்த சிறிய பறவைகள் நெருக்கமான அமைப்பில் கூட்டாக நகர்கின்றன. அவை தனியாக இருந்தால் அவற்றை எளிதாகப் பருந்து வேட்டையாடிவிடும்.

நாம் தனியாக இருப்பதை விட ஒன்றாக இருப்பது நல்லது. "ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்" என்று பிரசங்கி கூறுகிறார். " ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான். இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்;" (பிரசங்கி 4:9-11). நாம் தனிமைப்படுத்தப்பட்டால் எளிதாகப் பலியாகிவிடுவோம். மற்றவர்களின் ஆறுதலோ, பாதுகாப்போ இல்லாமல் பலவீனமடைவோம்.

ஆனால் கூடிவாழும்போது நண்பர்கள் மூலம் உதவிகிடைக்கிறது, நாமும் உதவுகிறோம். "ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது" (வ12) என்று பிரசங்கி கூறுகிறார். தேவன் நம்மை வழிநடத்திட,  நாம் கூடியிருப்பதே நலம்.

ஆயுதங்களிலிருந்து அணிகலன்கள்

என் மனைவி மிஸ்காவிடம் எத்தியோப்பியாவின் நெக்லஸ் மற்றும் காதணிகள் உள்ளன. அவர்களின் நேர்த்தியான எளிமை, அவர்களின் மெய்யான கலைத்திறனை வெளிப்படுத்துகிறது. இருப்பினும், இந்த துண்டுகளைப் பற்றி மிகவும் வியக்கத்தக்கது அவர்களின் கதை. பல தசாப்தங்களாக கடுமையான மோதல்கள் மற்றும் உள்நாட்டுப் போரின் காரணமாக, எத்தியோப்பியாவின் புவியியல் அமைப்பானது பீரங்கி குண்டுகள் மற்றும் தோட்டாக்களால் சிதறடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையின் ஒரு செயலாக, எத்தியோப்பியர்கள் எரிக்கப்பட்ட பூமியைத் துடைத்து, குப்பைகளை சுத்தம் செய்கிறார்கள். மேலும் எஞ்சியிருக்கும் குண்டுகள் மற்றும் தோட்டாக்களில் இருந்து கைவினைஞர்கள் நகைகளை உருவாக்குகிறார்கள்.

இந்தக் கதையைக் கேட்டபோது, தேவனுடைய வாக்குத்தத்தங்களை தைரியமாக அறிவிக்கும் மீகாவின் எதிரொலிகளைக் கேட்டேன். அவர் மக்களைக் குறித்து, ஒரு நாள் “அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்” (மீகா 4:3) என்று சொல்லுகிறார். தேவனுடைய வல்லமையான கிரியையினிமித்தம், கொல்ல மற்றும் ஊனப்படுத்துவதற்கான பயங்கரமான கருவிகள், வாழ்க்கையை வளர்ப்பதற்கான கருவிகளாக மாற்றப்படுகிறது. வரவிருக்கிற கர்த்தருடைய நாளில், “ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை” (வச. 3) என்றும் சொல்லுகிறார். 

மீகாவின் காலகட்டத்தைக் காட்டிலும் அதை நம்முடைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போலவே பார்க்கத் தோன்றுகிறது. பண்டைய காலத்தின் இஸ்ரவேல் தேசத்தைப் போலவே நாமும் வன்முறைகள் மற்றும் யுத்தங்களை சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலை எப்போதும் மாறாது என்பதுபோல் தோன்றுகிறது. ஆனால் தேவன் கிருபையோடும் குணமாக்கும் வல்லமையோடும் இந்த அதிர்ச்சியூட்டும் நாள் வரப்போகிறது என்று நமக்கு வாக்களிக்கிறார். அப்படியானால், இந்த உண்மையை இப்போதே நாம் நடைமுறைப்படுத்தவேண்டும். காயப்படுத்தும் ஆயுதங்களை ஆச்சரியப்படுத்தும் அணிகலன்களாய் மாற்றி, அவருடைய செயல்களை இப்போதிருந்தே செய்ய தேவன் நமக்கு உதவிசெய்வாராக.

கடவுள் மீது நிலைத்திருக்கும் பார்வை

2011 ஆம் ஆண்டு ஜப்பானில் புகுஷிமா டெய்ச்சி அணுசக்தி பேரழிவு, பூகம்பத்தால் ஏற்பட்டது. அதின் விளைவாய் பெரிய அளவு நச்சு வாயுக்கள் வெளியேற்றப்பட்டன. 150,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. “புகுஷிமாவில் கண்ணுக்குத் தெரியாத ஒரு பனி விழுந்து, தொடர்ந்து விழுந்து, அப்பகுதியையே மூடியது போல் உள்ளது” என்று உள்ளூர்வாசி ஒருவர் கூறினார். கதிர்வீச்சின் பாதிப்புகள் அங்கிருந்த பயிர்கள், இறைச்சி மற்றும் தாவரத்திலிருந்து வெகு தொலைவுக்கு பரவியிருந்தது. கதிர்வீச்சின் அந்த கொடிய விஷங்களை எதிர்த்துப் போராட, உள்ளூர்வாசிகள் கதிர்வீச்சை உறிஞ்சும் தாவரமான சூரியகாந்தியை நடவு செய்தனர். அவர்கள் இருநூறாயிரத்திற்கும் மேற்பட்ட விதைகளை நட்டனர். இப்போது ஃபுகுஷிமாவில் மில்லியன் கணக்கான சூரியகாந்தி பூக்கள் பூத்துள்ளன.

சூரியகாந்தி, முழு உலகத்தையும் குணமாக்கும் கிறிஸ்துவின் செய்கையை பிரதிபலிக்கும் தேவனுடைய வடிவமைப்பு. இயேசு “நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்” (ஏசாயா 53:4). இந்த உலகத்தின் தீமை, வன்முறை மற்றும் நச்சுகள்  மற்றும் மனிதர்களாகிய நாம் நம்மை நாமே அழித்துக்கொள்ளும் அனைத்து வழிகளையும் அவர் தனக்குள் ஏற்றுக்கொண்டார். நம்முடைய பாவங்கள் அனைத்தையும் அவர் தன் மீது ஏற்றுக்கொண்டார். இயேசு சிலுவையில் தன்னுடைய மீறுதல்களுக்காய் அல்லாமல், “நம்முடைய மீறுதல்களினிமித்தம்” (வச. 5) அறையப்பட்டார். அவர் நம்முடைய பாவங்களுக்காக மரித்ததினால் நாம் பூரணமாக்கப்பட்டோம். அவருடைய தழும்புகளாலே நாம் குணமாகிறோம் (வச. 5). 

கிறிஸ்து தொலைவில் நின்று நம்மை மன்னிக்கிற தேவனில்லை, அவர் நமக்குள் இருக்கும் தீமைகளையும் பாவங்களையும் அவருக்குள் எடுத்துக்கொள்கிறார். இயேசு அனைத்தையும் உறிஞ்சிக்கொள்கிறார். மேலும் அவர் நம்மை ஆவிக்குரிய ரீதியாகவும் சுகமாக்குகிறார். 

புனிதர் நிக்

செயிண்ட் நிக்கோலஸ் (செயிண்ட் நிக்) என்று நாம் அறியும் நபர், கி.பி 270இல் ஒரு பணக்கார கிரேக்க குடும்பத்தில் பிறந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் சிறுவனாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். அவர் தனது மாமாவுடன் வாழ நேரிட்டது. அவர் அவரை நேசித்து, தேவனைப் பின்பற்றவும் கற்றுக்கொடுத்தார். நிக்கோலஸ் இளைஞனாக இருந்தபோது,திருமணத்திற்கு வரதட்சணை இல்லாத மூன்று சகோதரிகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டதாக புராணக்கதை கூறுகிறது. தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பது பற்றிய இயேசுவின் போதனைகளைப் பின்பற்ற விரும்பிய அவர், அவருடைய சொத்தை எடுத்து ஒவ்வொரு சகோதரிக்கும் ஒரு பொற்காசுகளைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக, நிக்கோலஸ் தனது மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும் மற்றவர்களைப் பராமரிப்பதற்கும் கொடுத்தார். அடுத்த நூற்றாண்டுகளில், நிக்கோலஸ் அவரது ஆடம்பரமான தாராள மனப்பான்மைக்காக கௌரவிக்கப்பட்டார். மேலும் அவர் சாண்டா கிளாஸ் என்று நாம் அறிந்த கதாபாத்திரத்தை ஊக்கப்படுத்தினார்.

இந்த பண்டிகை நாட்களின் பளிச்சிடும் விளம்பரங்களும் நமது கொண்டாட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், பரிசு வழங்கும் பாரம்பரியம் நிக்கோலஸ{டன் இணைகிறது. மேலும் அவருடைய தாராள மனப்பான்மை இயேசுவிடம் அவர் கொண்டிருந்த பக்தியின் அடிப்படையில் அமைந்தது. கிறிஸ்து கற்பனைக்கு எட்டாத தாராள மனப்பான்மை உடையவர் என்பதை நிக்கோலஸ் அறிந்திருந்தார். அவர் கொண்டுவந்த மிக ஆழமான பரிசு: தேவன். இயேசு என்றால் “தேவன்  நம்முடன் இருக்கிறார்" (மத்தேயு 1:23) என்று அர்த்தம். மேலும் அவர் நமக்கு வாழ்வின் பரிசைக் கொண்டு வந்தார். மரண உலகில், அவர் “தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (வச. 21).

நாம் இயேசுவை நம்பும்போது, தியாகம் செய்யும் பெருந்தன்மை வெளிப்படுகிறது. நாம் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். தேவன் நமக்குக் கொடுப்பதுபோல நாமும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறோம். இது செயிண்ட் நிக்கின் கதை. எல்லாவற்றிற்கும் மேலாக இது தேவனுடைய கதை.

மேய்ப்பனின் சத்தத்தை அறிதல்

நான் அமெரிக்காவில் ஒரு பண்ணையில் வசிக்கும் சிறுவனாக இருந்தபோது, என்னுடைய நெருங்கிய நண்பருடன் பல மதிய வேளைகளில் சுற்றித் திரிந்து மகிழ்ந்தோம். நாங்கள் காடுகளுக்குள் நடந்துசெல்வோம். குதிரைகளில் சவாரி செய்வோம், பந்தய அரங்கிற்குச் செல்வோம், மாடுகளையும் குதிரைகளையும் பார்ப்பதற்காக தொழுவத்திற்குச் செல்வோம். ஆனால் என் அப்பாவின் விசில் சத்தம் கேட்ட மாத்திரத்தில் நான் என்ன வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும், அப்படியே வீட்டிற்கு ஓடிவிடுவேன். அந்த சிக்னல் சத்தம் கேட்டால், என் தந்தை என்னை அழைக்கிறார் என்பதை நான் சரியாய் புரிந்துவைத்திருந்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த விசில் சத்தம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. 

இயேசு தம் சீஷர்களிடம் தாம் மேய்ப்பன் என்றும், அவரைப் பின்பற்றுபவர்கள் ஆடுகள் என்றும் கூறினார். “ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது” (யோவான் 10:3). பரிசேயர்களும், வேதபாரகர்களும் கிறிஸ்துவின் சீஷர்களின் அதிகாரத்தை கேள்வியெழுப்பி அவர்களை குழப்பத்திற்குள்ளாக்கியபோது, தன்னுடைய அன்பின் சத்தம் மற்றெல்லாருடைய சத்தத்தைக் காட்டிலும் தெளிவாய் கேட்கும் என்று அறிவிக்கிறார். ஆடுகள் அவருடைய (மேய்ப்பனுடைய) சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவருக்குப் பின்செல்லுகிறது (வச. 4). 

நாம் இயேசுவின் குரலைக் கேட்கும்போது கவனமாக இருப்போம். அதை நிராகரிக்கும் மதியீனத்தைத் தவிர்ப்போம். ஏனென்றால் அடிப்படை உண்மை என்னவெனில், மேய்ப்பன் தெளிவாகப் பேசுகிறார், அவனுடைய ஆடுகள் அவருடைய குரலைக் கேட்கின்றன. ஒருவேளை வேதாகமத்தின் ஒரு வசனத்தின் மூலமாகவோ, விசுவாசியான நண்பரின் வார்த்தைகள் மூலமாகவோ அல்லது ஆவியின் தூண்டுதலின் மூலமாகவோ இயேசு நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார், நாம் கேட்கிறோம்.

ஆபத்தில் தலைக்குனிவு

1892 ஆம் ஆண்டில், காலராவால் பாதிக்கப்பட்ட ஒரு குடியிருப்பாளர் தற்செயலாக எல்பே நதி வழியாக ஜெர்மனியின் முழு நீர் விநியோகமான ஹாம்பர்க்கிற்கு நோயைப் பரப்பினார். வாரங்களுக்குள், பத்தாயிரம் குடிமக்கள் இறந்தனர். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஜெர்மன் நுண்ணுயிரியலாளர் ராபர்ட் கோச், காலரா நோயானது நீரின் மூலம் பரவுகிறது என்பதைக் கண்டுபிடித்தார். கோச்சின் கண்டுபிடிப்பு, பெரிய ஐரோப்பிய நகரங்களில் உள்ள அதிகாரிகளை தங்கள் தண்ணீரைப் பாதுகாக்க வடிகட்டுதல் அமைப்புகளில் முதலீடு செய்யத் தூண்டியது. இருப்பினும் ஹாம்பர்க் அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை. செலவுகளை மேற்கோள் காட்டி, சந்தேகத்திற்குரிய அறிவியலைக் குற்றம் சாட்டி, அவர்களின் நகரம் பேரழிவை நோக்கிக் கொண்டிருந்தபோது தெளிவான எச்சரிக்கைகளை அவர்கள் புறக்கணித்தனர்.

பிரச்சனைகளைக் கண்டும் செயல்பட மறுக்கும் நம்மைப் பற்றி நீதிமொழிகள் புத்தகம் நிறைய கூறுகிறது. “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகளோ நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்” (27:12). ஆபத்து வருகிறது என்பதை தேவன் நமக்கு வெளிப்படுத்தும்போது, அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை ஏறெடுப்பது தான் பொது அறிவு. துரிதமாய் செல்பட்டால் அதின் போக்கை நம்மால் மாற்றக்கூடும். அல்லது அவர் அளிக்கும் தகுந்த முன்னெச்சரிக்கைகளுடன் நம்மை தயார் செய்துகொள்ளக்கூடும். எதுவுமே செய்யாமல் இருப்பது முட்டாள்தனம். நாம் அனைவரும் எச்சரிக்கை அறிகுறிகளைத் தவறவிடாமல், பேரழிவில் கவனம் செலுத்தி அதை எப்படியாவது தடுக்க முயற்சிக்கலாம். “பேதைகளோ நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்” (வச. 12). 

வேதாகமத்திலும் இயேசுவின் வாழ்க்கையிலும், நாம் பின்பற்ற வேண்டிய பாதையை தேவன் நமக்குக் காண்பிக்கிறார். நாம் நிச்சயமாக சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றி எச்சரிக்கிறார். நாம் முட்டாளாக இருந்தால், ஆபத்தில் தலைகுனிந்து முன்னேறுவோம். மாறாக, அவர் கிருபையால் நம்மை வழிநடத்தும்போது, நாம் அவருடைய ஞானத்திற்கு செவிசாய்த்து பாதையை மாற்றுவோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

எனக்குப் பதிலாக இயேசு

இருபது வயது செல்வந்தன் ஒருவன் தன் நண்பர்களுடன் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, ​​பாதசாரி மீது மோதியதால் அவா் மரணமடைந்தாா். அந்த இளைஞனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் ஆஜரானவர் (பின்னர் சிறைத்தண்டனை அனுபவித்தவர்) குற்றத்தைச் செய்த ஓட்டுநருக்கு மாற்றாக வந்தவர் என்று சிலர் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் சில நாடுகளில் நடக்கிறது, அங்கு மக்கள் தங்கள் குற்றங்களுக்காக தண்டனை பெறுவதை தவிர்க்க தங்களை போலவே தோற்றமளிக்கும் பிறரை வாடகைக்கு அமர்த்துகின்றனர்.

இது அவதூறும் மூர்க்கமுமான செயலாக இருக்கலாம், ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு நமது சார்பில் மாற்றாக ஆனார், மேலும் " அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்" (1 பேதுரு 3:18). தேவனின் பாவமற்ற பலியாக, அவரை விசுவாசிப்பவர்களின் பொருட்டு கிறிஸ்து துன்பப்பட்டு ஒரேதரம் மரித்தார் (எபிரெயர் 10:10). நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் அவர் சிலுவையில் தம்முடைய சரீரத்திலே தண்டனையை ஏற்றுக்கொண்டார். இன்று ஒரு குற்றவாளிக்கு மாற்றாக சில பணத்தைப் பெற ஒப்புக்கொள்ளும் ஒரு நபரைப் போலல்லாமல், கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்கு "நம்பிக்கையை" அளித்தது, அவர் தாமாகவே, விருப்பத்துடன் நமக்காகத் தம் ஜீவனை கொடுத்தார் (1 பேதுரு 3:15, 18; யோவான் 10:15). நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் அகற்ற அவர் அவ்வாறு செய்தார்.

இயேசு நமக்கு பதிலாக மரித்ததின் மூலம் மட்டுமே, தேவையிலுள்ள பாவிகளாகிய நாம் அன்பான தேவனுடன் ஒரு உறவைப் பெற முடியும் மற்றும் முழுமையாக அவருடன் ஆவிக்குரிய உறவை பெற முடியும் என்ற இந்த ஆழமான சத்தியத்தில் நாம் மகிழ்ச்சியடைவோம், ஆறுதலையும் நம்பிக்கையையும் பெறுவோம்.

நேசிப்பதற்கான புதிய கட்டளை

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமான பாரம்பரியப்படி, ஐக்கிய பேரரசின் அரச குடும்பத்தினர் புனித வெள்ளிக்கு முந்தைய நாளான பெரிய வியாழன் அன்று தேவையானவர்களுக்கு பரிசுகளை வழங்குவார்கள். இந்த நடைமுறையானது மவுண்டி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் வேரூன்றியுள்ளது, இது லத்தீன் 'மாண்டடம்' அதாவது "கட்டளை" என்பதிலிருந்து வருகிறது. இயேசு தாம் இறப்பதற்கு முந்தைய இரவில் தம் நண்பர்களுக்குக் கொடுத்த புதிய கட்டளைதான் நினைவுகூரப்படுகிறது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” (யோவான் 13:34).

இயேசு தலைவராக இருந்தும், தம் நண்பர்களின் கால்களைக் கழுவுகையில், ஒரு ஊழியக்காரனான இருந்தார் (வச. 5). பின்னர் அவர் அவ்வாறே செய்யும்படி அவர்களை அழைத்தார்: "நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்." (வச. 15). மேலும் இன்னும் பெரிய தியாகமாக, அவர் சிலுவையில் மரித்து தனது உயிரைக் கொடுத்தார் (19:30). முழுமையான வாழ்வை நாம் அனுபவிக்க, கருணையினாலும் அன்பினாலும் அவர் தம்மையே கொடுத்தார்.

பிரித்தானிய அரச குடும்பம் தேவைப்படுபவர்களுக்கு சேவையாற்றும் பாரம்பரியம் இயேசுவின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கான அடையாளமாக தொடர்கிறது. இதுபோல வாய்ப்புள்ள சூழலில் நாம் பிறக்காமல் இருக்கலாம்; ஆனால் நாம் இயேசுவில் நம்பிக்கை வைக்கும் போது, ​​நாம் அவருடைய குடும்பத்தினராக மாறுகிறோம். நாமும் அவருடைய புதிய கட்டளையை நிறைவேற்றுவதன் மூலம் நம் அன்பைக் காட்டலாம். உள்ளிருந்து நம்மை மாற்றுவதற்கு நாம் தேவனின் ஆவியைச் சார்ந்திருக்கையில்; அக்கறையுடனும், உறுதியுடனும், கருணையுடனும் பிறரை அணுகலாம்.

கிறிஸ்துவில் கனிதரும் விசுவாசிகள்

சிண்டி ஒரு தொண்டு நிறுவனத்தில் தனது புதிய வேலைக்காக உற்சாகப்பட்டாள். மாற்றத்தை ஏற்படுத்த அரிய வாய்ப்பு. ஆனால் அவளுடைய சகபணியாளர்கள் அப்படியில்லை என்பதை அவள் விரைவில் கண்டுபிடித்தாள். தங்கள் நிறுவனத்தின் பணியை கேலி செய்தார்கள் மற்றும் லாபகரமான வேலைகளுக்கு வேறு இடங்களில் தேடியதால், மோசமான செயல்திறனுக்காக சாக்கு கூறினர். சிண்டி இந்த வேலைக்கு விண்ணப்பித்திருக்கவே வேண்டாம் என்றென்னினாள். தொலைவில் அற்புதமாக தோன்றியது அருகிலோ ஏமாற்றமளித்தது.

இன்றைய கதையில் (மாற்கு 11:13) குறிப்பிடப்பட்டுள்ள அத்தி மரத்தில் இயேசுவுக்கிருந்த பிரச்சனையும் இதுதான். இது பருவத்தின் ஆரம்பத்தில் இருந்தது, ஆனால் மரத்தின் இலைகள் அது ஆரம்பகால அத்திகளைக் கொண்டிருப்பதாக குறிக்கிறது. இல்லை, மரத்தில் இலைகள் துளிர்விட்டன, ஆனால் அது இன்னும் காய்க்கவில்லை. ஏமாற்றமடைந்த இயேசு, "இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கடவன்" (வச.14) என்று மரத்தை சபித்தார். மறுநாள் காலையில் மரம் வேரோடே பட்டுப்போயிருந்தது (வச. 20).

கிறிஸ்து ஒருமுறை நாற்பது நாட்கள் உபவாசம் இருந்தார், ஆகவே உணவு இல்லாமல் எப்படி இருக்க வேண்டும் என்று அவரறிவார். அத்தி மரத்தை சபிப்பது அவரது பசிக்காக இல்லை. இது ஒரு பொருள் பாடம். இந்த மரம் இஸ்ரவேலை குறிக்கிறது, அது மெய்யான மதத்தின் வேர்களை கொண்டிருந்தது, ஆனால் நோக்கத்தை இழந்துவிட்டது. அவர்கள் தேவனுடைய குமாரனாகிய தங்கள் மேசியாவைக் கொல்லப் போகிறார்கள். அவர்கள் எவ்வளவு கணியற்றிருந்திருக்க வேண்டும்?

தூரத்திலிருந்து நாம் அழகாகத் தோன்றலாம், ஆனால் இயேசு அருகில் வருகிறார், அவருடைய ஆவியால் மட்டுமே விளைவிக்கப்படும் கனியைத் தேடுகிறார். நமது கனிகள் கண்கவரும்வண்ணம் இருக்க வேண்டியதில்லை. ஆனால் அது இயற்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அன்பு, சந்தோஷம் மற்றும் கடினமான காலங்களில் சமாதானம் போன்றவை (கலாத்தியர் 5:22). ஆவியானவரை சார்ந்து, இயேசுவுக்காக எப்போதும் கனி கொடுக்கலாம்.