எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

லிசா எம். சாம்ராகட்டுரைகள்

தேவனின் வல்லமையுள்ள பிரசன்னம்.

2020 ஆம் ஆண்டு அமெரிக்க அரசியலமைப்பில் பெண்கள் ஓட்டளிப்பதற்கான வாக்குரிமை கொடுக்கப்பட்ட நூறாவது வருஷ நினைவாண்டு கொண்டாடப்பட்டது. அதற்காகப் பேரணியில் சென்றவர்கள் "ஆண்டவர் வசனம் தந்தார்; அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி" (சங்கீதம் 68:11) என்று எழுதப்பட்ட பதாகைகளைப் பிடித்துச் செல்வது பழைய புகைப்படங்களில் காண முடிந்தது.

சங்கீதம் 68இல் தாவீது, தேவன் கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார் (வ.6), சம்பூரண மழையைப் பெய்யப்பண்ணி; இளைத்துப்போன அவரது  சுதந்தரத்தைத் திடப்படுத்தி,  தம்முடைய தயையினாலே ஏழைகளைப் பராமரிக்கிறார் (வ.9,10) என்றும் குறிப்பிடுகிறார். முப்பத்தியைந்து வசனங்கள் கொண்ட இச்சங்கீதத்தில் 'தேவன்' என்ற சொல் நாற்பத்திரண்டு முறை கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் அவர் எப்போதும் அவர்களோடிருப்பார், அவர்களை அநீதியிலிருந்தும், பாடுகளிலிருந்தும் மீட்க உதவி செய்கிறார் என்பதற்காகவும் அப்படி உபயோகிக்கப்பட்டுள்ளது. அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி (வ. 11‌).             

ஓட்டுரிமை கிடைத்ததற்காகப் பேரணி சென்ற பெண்கள் சங்கீதம் 68ல் உள்ள வசனத்தைப் புரிந்திருந்தார்களா என்பதை‌விட, பதாகைகளிலிருந்த வசனங்கள் காலத்தை வென்ற தேவனுடைய உண்மையை வெளிக்காட்டியது. திக்கற்றவர்களுக்கும், விதவைகளுக்கும் தகப்பனாகிய தேவன் (வ.5‌) அவர்களுக்கு முன்னே சென்று, அவர்களை வழிநடத்தி ஆசீர்வாதமும், நிம்மதியும், சந்தோஷமும் பெற்றுக்கொள்ள உதவுகிறார்.                   

தேவனுடைய பிரசன்னம் அவருடைய ஜனங்களுடன் எப்பொழுதுமிருந்து, அவர்களைச் சிறந்த வழியில் நடத்தி, ஆபத்துக்கும், துன்பங்களுக்கும் விலக்கிக் காக்கிறதென்பதை நினைக்கும் போது  இன்று நாம் ஊக்கமடைவோமாக‌. தமது ஆவியானவர் மூலமாகத் தேவன் இன்றும் நம்முடன் கடந்த காலத்தைப்போலவே வல்லமையுள்ளவராக இருக்கிறார்.

களிகூரும் அன்பு

ரவியும் பானுவும் ஒருவரையொருவர் பார்த்து முகமலர்ந்தனர். அவர்கள்  அகமகிழ்ச்சியைப் பார்க்கும்போது, ​கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அவர்களது திருமணத் திட்டங்கள் பல தலைகீழாய் மாற்றப்பட்டிருந்ததை உங்களால் யூகிக்கவே முடியாது. இருபத்தைந்து குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இருந்தபோதும், இருவரிடமிருந்தும் மகிழ்ச்சியும் சமாதானமும் ஒளிர்ந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பினிமித்தம் திருமண உடன்படிக்கை செய்து, தங்களைத் தாங்கிய தேவனின் அன்புக்கு நன்றியைத் தெரிவித்தனர்.

தேவன் தம் ஜனங்கள் மீது கொண்டிருக்கும் மகிழ்ச்சி மற்றும் அன்பை விவரிக்க ஏசாயா தீர்க்கதரிசி, மணவாளனும் மணவாட்டியும் ஒருவர் மீதொருவர் கொண்டிருக்கும் களிப்பை உருவகமாக வடிக்கிறார். தேவனின் வாக்குப்பண்ணப்பட்ட  விடுதலையை  விளக்க அழகான கவிதை நடையில், ஏசாயா தமது வாசகர்களுக்குத் தேவன் அவர்களுக்கு வழங்கிய இரட்சிப்பானது உருக்குலைந்த உலகில் வாழும் யதார்த்தத்தில் பிரதிபலிக்கிறது என்று நினைவுபடுத்தினார். அது இதயம் நொறுங்குண்டவர்களுக்கு ஆறுதல், துயரப்படுபவர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் அவரது ஜனங்களின் தேவைகளுக்கான ஏற்பாடு (ஏசாயா 61:1-3). தேவன் தம் ஜனங்களுக்கு உதவினார், ஏனென்றால் மணமகனும், மணமகளும் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பில் களிப்பதுபோல, "உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்" (62:5).

தேவன் நம்மில் களிகூருகிறார் மற்றும் நம்முடனான உறவை விரும்புகிறார் என்பது வியத்தகு உண்மை. உருக்குலைந்த உலகில் வாழ்வதன் விளைவுகளால் நாம் போராடும்போது கூட, நம்மை நேசிக்கும் தேவன் ஒருவருண்டு. அதிருப்தி கொள்ளாமல், களிப்புடன் "என்றென்றும் நிலைத்திருக்கும்" (சங்கீதம் 136:1)  நீடித்த அன்புடன் நேசிக்கிறார்.

மன்னிக்கும் அன்பு

80 ஆண்டுகால திருமண வாழ்க்கை. மே 31, 2021 அன்று எனது கணவரின் மாமா பீட் மற்றும் அத்தை ரூத் அதைக் கொண்டாடினர். 1941இல் ரூத் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, அவர்களுக்குள் ஏற்பட்ட சந்திப்பு திருமணம் செய்யும் ஆர்வத்தை ஏற்படுத்தி, பள்ளியிலிருந்து பட்டம்பெற்ற பின்னர் இருவரும் தங்களுடைய சுயவிருப்பத்தின் பிரகாரம் திருமணம் செய்துகொண்டனர். தேவனே அவர்களை இணைத்ததாகவும் இத்தனை ஆண்டுகளாக அவர்களை வழிநடத்தினார் என்றும் அவர்கள் நம்புகின்றனர். 

இந்த 80 ஆண்டுகள் திருமண வாழ்வில் பீட்டும் ரூத்தும் மன்னிப்பை தேர்ந்தெடுத்து தங்கள் திருமண வாழ்க்கையை பலப்படுத்த முயற்சித்தனர். ஆரோக்கியமான உறவில் இருப்பவர்கள் அனைவரும் நாம் மற்றவர்களை காயப்படுத்துகிற சுபாவங்களில் மன்னிப்பின் அவசியத்தை அறிந்திருப்பர். அது தவறான வார்த்தைகள், நிறைவேற்றத் தவறின வாக்குறுதிகள், செய்ய மறந்த பொறுப்புகள் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாய் வாழவேண்டும் என்று பவுல் விசுவாசிகளுக்கு அறிவுறுத்தும் வேதப்பகுதியில் மன்னிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும்” (கொலோசெயர் 3:12) தரித்துக்கொள்ளுமாறு விசுவாசிகளுக்கு வலியுறுத்திய பின்னர், “ஒருவரையொருவர் தாங்கி... ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (3:13) என்று ஊக்கப்படுத்துகிறார். அவர்களுடைய அனைத்து பேச்சுகளும் அன்பினால் ஊன்றப்பட்டிருக்கவேண்டும் என்பதை முக்கியமாய் வலியுறுத்துகிறார் (வச. 14). 

விசுவாச மரபு

2019இல், அமெரிக்காவிலுள்ள இயேசுவின் விசுவாசிகளின் மத்தியில் காணப்பட்ட ஆவிக்குரிய பாரம்பரியத்தை குறித்த ஆய்வின்படி ஆவிக்குரிய முன்னேற்றத்தில் தாய்மார்களும், பாட்டிகளும் பெரும்பங்காற்றுவதாக அறிக்கை கூறுகிறது. ஆவிக்குரிய பின்னணியை சேர்ந்தவர்களில் மூன்றில் இருவர் தங்கள் விசுவாசத்திற்கு தங்கள் தாயை காரணமாகவும், மூன்றில் ஒருவர் தங்கள் தாத்தா பாட்டிகளை (பெரும்பாலும் பாட்டிகள்) காரணமாக கூறுகின்றனர்.

"மீண்டுமீண்டுமாக ஆவிக்குரிய வளர்ச்சியில் தாயின் நிலையான பங்களிப்பை இந்த ஆய்வு காட்டுகிறது" என அந்த ஆய்வின் ஆசிரியர் வியக்கிறார். வேதத்திலும் இதுபோன்ற தாக்கத்தை பார்க்கிறோம்.

தனது சீடனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபத்தில் பவுல், தீமோத்தேயுவின் விசுவாசமானது அவனுடைய பாட்டியாகிய லோவிசாலினாலும் தாயாகிய ஐனிக்கேயாவாலும் கொடுக்கப்பட்டதை உறுதிப்படுத்துகிறார் (2 தீமோத்தேயு 1:5). ஆதித்திருச்சபை தலைவர் ஒருவரின் வாழ்விலிருந்த இரு பெண்களின் தாக்கத்தை குறித்த தனிப்பட்ட குறிப்பு எவ்வளவு இனிமையானது. "'நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு..பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்."' (3:14–15) என்று தீமோத்தேயுவை ஊக்குவிக்க பவுல் கூறுவதிலும் அவர்களின் தாக்கத்தை காணமுடியும்.

வலிமையான ஆவிக்குரிய மரபு ஒரு வரமாகும். ஆயினும் தீமோத்தேயுவின் விசுவாசத்தை வடிவமைத்த நல்ல தாக்கங்கள் நமது வளர்ப்பில் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நமது ஆவிக்குரிய வளர்ச்சியை வடிவமைக்கும் உன்னதமான தாக்கங்களை உண்டாக்கும் அநேகர் நமக்குண்டு. அனைத்திற்கும் மேலாக, நம்மை சுற்றிலுமிருப்பர்களுக்கு உண்மையான விசுவாசத்திற்கு ஒரு மாதிரியையும், நிலைத்திருக்கும் மரபையும் விட்டுச்செல்லும் வாய்ப்பும் நமக்குண்டு.

கிறிஸ்துமஸ் ஒளி

எனது பார்வைக்கு அந்த கிறிஸ்துமஸ் மரம் பற்றியெரிவது போலிருந்தது. இது செயற்கை விளக்குகளின் அலங்காரத்தால் உண்டாகும் வெளிச்சம் அல்ல மாறாக நிஜமான நெருப்பு. எனது ஜெர்மானிய நண்பரின் பாரம்பரியமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு நாங்கள் குடும்பமாக அழைக்கப்பட்டோம், "பழைய ஜெர்மானிய முறை" எனும் அந்த கொண்டாட்ட முறையில் கிறிஸ்துமஸ் மரத்தைப் பாரம்பரிய இனிப்பு வகைகளாலும், எரியும் மெழுகுவர்த்திகளாலும் அலங்கரித்திருந்தனர் (பாதுகாப்பு காரணமாக ஒரு இரவு மட்டுமே அந்த புதிதாய் வெட்டப்பட்ட மரத்தை எரியும்படி செய்தனர்).

பற்றியெரிவதைப் போலக் காட்சியளித்த அம்மரத்தை நான் காண்கையில், எரியும் செடியில் தேவன் மோசேயை சந்தித்ததை நினைத்தேன். வனாந்தரத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த மோசே, அங்கே பற்றியெரிந்தும், கருகாமலிருக்கும்  முட்செடியின் காட்சியினால் வியந்தான். அதை ஆராயச் சற்றே அருகில் சென்றபோது, தேவன் அழைத்தார். முட்செடியிலிருந்து வெளிவந்த செய்தி நியாயத்தீர்ப்புக்கானது அல்ல மாறாக இஸ்ரவேலர்களின் மீட்புக்கானது. எகிப்தில் அடிமைகளாய் இருந்த தன் ஜனத்தின் உபத்திரவத்தைப் பார்த்து, அவர்களிடும் கூக்குரலைக் கேட்டு, அவர்களை மீட்கத் தேவன் இறங்கினார் (யாத்திராகமம் 3:8).

இஸ்ரவேலர்களை எகிப்தியரிடமிருந்து தேவன் மீட்டிருக்க, இந்த ஒட்டுமொத்த மனிதக்குலத்திற்குமே மீட்பு தேவையாயிருந்தது. வெறும் சரீர ரீதியான உபத்திரவங்களிலிருந்து மட்டுமல்ல மாறாகத் தீமையும் மரணமும் இந்த உலகத்தில் ஏற்படுத்தின பாதிப்புகளிலிருந்து மீட்பு தேவை. இதற்குப் பல நூற்றாண்டுகள் கழித்து தேவன் பதிலளித்தார், தம்முடைய குமாரனாகிய இயேசு எனும் ஒளியை அனுப்பினார் (யோவான் 1:9–10). உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி அல்ல, அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார் ((3:17).

கால்பதித்தல்

“கால் பதித்தல்”(Walk On) என்பது பென் மால்க்கம்சன் என்பவருடைய நினைவுப் பதிவு. கால்பந்து விளையாட்டில் கொஞ்சமும் அனுபவமில்லாத இவன், தன்னுடைய அனுபவத்தைத் தானே பகிர்கிறான். அவனுடைய எதிர்பார்ப்புக்கு முரணாக, அவன் கல்லூரியின் கால்பந்து அணியில் தேர்வு செய்யப்பட்டான்.
அந்த அணியில் சேர்ந்தபின்பு, இந்த எதிர்பாராத வாய்ப்பைக் கொண்டு தேவன் தன்னுடைய வாழ்க்கையில் வைத்திருக்கும் திட்டத்தைச் செயல்படுத்தத் தூண்டப்பட்டான். ஆனால் அவனுடைய சக வீரர்களின் மாறுபட்ட கருத்துக்கள் அவனைச் சோர்வுறச் செய்தது. தேவனுடைய வழிநடத்துதலுக்காய் மால்க்கம்சன் ஜெபித்தபோது, “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும்...நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்” (ஏசாயா 55:11) என்ற ஏசாயாவுக்கு தேவன் நினைவுபடுத்திய வார்த்தைகளைத் தேவன் நினைப்பூட்டினார். ஏசாயாவின் வார்த்தைகளினால் உந்தப்பட்ட மால்க்கம்சன் தன் சகவீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வேதாகமத்தைப் பரிசளித்தான். அவர்கள் அதை மீண்டும் புறக்கணித்தனர். ஆனால் ஆண்டுகள் கழிந்த பின்பு அவருடைய அணியில் இருந்த ஒருவர் அந்த வேதாகமத்தைத் திறந்து வாசித்து, தேவன் மீதான தன்னுடைய தாகத்தை அவனுடைய மரணத்திற்கு முன்பாக பிரதிபலித்தான் என்பதை அறிந்துகொண்டான்.
நம்மில் பலரும், நம்முடைய நண்பர்களுடனோ அல்லது குடும்ப நபர்களுடனோ இயேசுவைப் பகிர்ந்துகொண்டதினால் புறக்கணிப்பைச் சந்தித்திருக்கலாம். நாம் உடனடி மாற்றத்தைப் பார்க்க முடியாவிட்டாலும், வல்லமையுள்ள தேவனுடைய வார்த்தையானது குறித்த காலத்தில் பலன் கொடுக்கும் என்பதை விசுவாசிப்போம்.

அல்லேலூயா

உலகப் புகழ்பெற்ற “மேசியா கீதம்” என்ற இசையை இயற்ற, இசையமைப்பாளர் ஹாண்டலுக்கு, வெறும் இருபத்து நான்கு நாட்களே தேவைப்பட்டதென்பது வியக்கத்தகு  விஷயமாகும். இந்த இசைக் கச்சேரி பிரபலமான "அல்லேலூயா கோரஸ்" என்ற பல்லவியோடு ஆரம்பித்து சுமார் இரண்டு மணி நேரம் கழித்தே, உச்சத்தை எட்டும். வெளிப்படுத்தின விசேஷம் 11:15 ல் கூறப்பட்டுள்ள, இந்த சேர்ந்திசைப் பாடலை, பாடல் குழுவினர் உற்சாகத்தோடு, எக்காளங்களும், முரசுகளும் ஒலிக்க "அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார்" என்று பாடுவர். இப்பாடல், பரலோகில் இயேசுவுடனான நித்திய நம்பிக்கையை ஜெயதொனியாக அறிவிக்கும் பாடலேயாகும்.

தன்னுடைய இறுதி நாட்களை நெருங்கிக்கொண்டிருந்த அப்போஸ்தலனாகிய யோவான், வெளிப்படுத்தின விசேஷத்தில், தான் தரிசனமாகக் கண்ட, கிறிஸ்துவின் வருகையோடு உச்சம்பெறும் நிகழ்வுகளை எழுதுகிறார். அக்கருத்தே மேசியா கீதத்திலும் இருந்தது. யோவான், உயிர்த்தெழுந்த இயேசுவானவர் திரும்பி வரும்போது, பாடகர் சத்தத்துடன் ஆரவாரம் உண்டாயிருக்குமென்பதை மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார் (19:1–8).

இயேசு கிறிஸ்து இருளின் அதிகாரத்தையும், மரணத்தையும் வென்று, சமாதானத்தின் ராஜ்யத்தை நிலை நாட்டியமைக்காய், உலகம் மகிழ்ந்து கொண்டாடும். ஒரு நாள் தேவப் பிள்ளைகளாகிய நாமனைவரும் சேர்ந்து, இயேசு கிறிஸ்துவின் மாட்சிமையையும், அவருடைய முடிவில்லா ராஜ்யத்தையும் குறித்து கம்பீரமாய்ப் பாடுவோம் (7:9). அதுவரை விசுவாசத்தோடு வாழ்ந்து, உழைத்து, ஜெபித்துக் காத்திருப்போம்.

மீண்டும் கண்டெடுக்கப்பட்டது

1937 ல் வான்டெரெர் w24 என்ற மாடல் காருக்கு ஒரு பெரும் சரித்திர பின்னணி இருந்தது. பிரிட்டிஷ் அரசால் வீட்டுக்காவலில் அடைபட்டிருந்த நேதாஜி, கொல்கத்தாவிலிருந்த தனது பாரம்பரிய வீட்டிலிருந்து தப்பிக்க, இந்த வாகனம்தான் உதவியது. இந்த சரித்திர உண்மையால் பூரித்த ஆடி நிறுவனம், சுமார் ஆறுமாதங்கள் செலவழித்து இந்தக் காரை சீராக்கியது. நேதாஜி தப்பித்த சம்பவத்தை நினைவுகூரும் 75 ஆம் ஆண்டான, 2017 ஆம் ஆண்டில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் பிரணாப் முக்கர்ஜீ, இந்த அறியக் கண்டெடுப்பை மக்கள் பார்வைக்கு வெளிக்கொண்டு வந்தார்.

பொக்கிஷங்கள் பலவகைகளில் மறையலாம். 2 நாளாகமத்தில் தொலைந்த பொக்கிஷம் ஒன்று மீண்டும் கண்டெடுக்கப்பட்டதை நாம் வாசிக்கிறோம். யோசியா இஸ்ரவேலின் ராஜாவாகி பதினெட்டு ஆண்டுகள் கழித்து, எருசலேமின் தேவாலயத்தைப் பழுதுபார்த்தான். நியாயப்பிரமாணப் புஸ்தகம் எனப்படும் பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்கள், எதிரிகளின் தொடர்தாக்குதல் காரணமாகப் பலஆண்டுகளாக மறைந்து, மறக்கப்பட்டுப்போனது. அப்பொழுது இல்க்கியா என்ற ஆசாரியன், கர்த்தருடைய ஆலயத்திலே அதைக் கண்டெடுத்தான் (2 நாளாகமம் 34:15).

இந்தக் கண்டெடுப்பைக் குறித்து யோசியாவுக்கு அறிவிக்கப்பட்டபோது, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டான். அப்போது அவன், இஸ்ரவேல் ஜனங்களனைவரும், நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியுள்ள அனைத்துக் காரியங்களுக்கும் கீழ்ப்படியும்பொருட்டு, முழுப்புஸ்தகத்தையும் வாசித்துக் கேட்பதற்காக, அவர்களை ஒன்று திரட்டினான் (வ.30–31).

இன்றும் நமது வாழ்வின் விலைமதிப்பற்ற பொக்கிஷமான, வேதத்தின் அறுபத்தாறு புஸ்தகங்களை வாசிக்கும், வியத்தகு ஆசீர்வாதம் நமக்குக் கிடைத்திருக்கிறது.

உடைத்து அழகாக்கப்படுதல்

குஜராத் மாகாணத்தின் பிரபலமான “ரோகன் ஓவியங்கள்” பார்ப்பதற்கு மிகவும் எளிமையாய் தெரியலாம். ஆனால் அந்த ஓவியத்தின் ஒரு சிறு பகுதியை வடிவமைப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிறதுஎன்பதை அறிந்துகொள்ளவேண்டும். நொறுக்கப்பட்ட கனிம அடிப்படையிலான வர்ணங்களை ஆமணக்கு எண்ணெயுடன் கலந்து, “மெல்லமான ஓவியம்” என்று நாம் அழைக்கும் இந்த ஓவியத்தை தயார் செய்வதற்கு ஆறு மணி நேரத்திற்கு மேலாக எடுக்கும். அதை உன்னிப்பாய் கவனித்தால், அதின் வேலைப்பாடுகளும் அழகும் தெரியும். சுவிசேஷமும் ஏறத்தாழ இதைப்போன்றதே. உடைக்கப்பட்ட கனிமங்களால் உருவாக்கப்பட்ட இந்த ஓவியத்தைப் போலவே, இயேசு தன் பாடுகளின் மூலம் உடைக்கப்பட தன்னை ஒப்புக்கொடுத்து, முழு உலகத்திற்குமான நம்பிக்கைக்குக் காரணரானார்.

நம்முடைய வாழ்க்கையில் உடைக்கப்பட்ட மற்றும் நொறுக்கப்பட்ட அனுபவங்களை தேர்ந்தெடுத்து, அதை புதிய அழகான காரியங்களாய் மாற்றுவதற்கு தேவன் விரும்புகிறார். தாவீது, தன்னுடைய சுயத்தினால் உடைக்கப்பட்ட வாழ்க்கையை மாற்றுவதற்கு தேவனுடைய உதவியை நாடினார். இன்னொருவனுடைய மனைவியை இச்சித்து, அவள் நிமித்தம் அவளுடைய கணவனை கொலை செய்யத் துணிந்த தன்னுடைய தவறை உணர்ந்து தாவீது பாடிய பாடலே சங்கீதம் 51. தாவீது, “நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை” (வச. 17) தேவனுக்கு அர்ப்பணித்து, இரக்கத்திற்காய் கெஞ்சினான். நருங்குண்டதும் என்பதற்கு பயன்படுத்தப்பட்ட எபிரேயப் பதம், “நித்கே.” அதற்கு, “சுக்குநூறாய் நொருங்கியது” என்று பொருள்.

தாவீதின் இருதயத்தை தேவன் புதிதாக்குவதற்கு (வச. 10), அது முழுவதுமாய் நொறுக்கப்படவேண்டியிருந்தது. மன்னிக்கிறதில் தயைபெருத்த உண்மையுள்ள தேவனிடத்தில் தாவீது தன்னுடைய உடைக்கப்பட்ட இருதயத்தை ஒப்படைத்தான்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

சொல்லும் அறை

ஒற்றுமை மற்றும் நட்பை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான வழியை வடக்கு ஸ்பெயின் உருவாக்கியது. கையால் செய்யப்பட்ட குகைகள் நிறைந்த கிராமப்புறங்களில், ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் சில விவசாயிகள் ஒரு குகைக்கு மேலே கட்டப்பட்ட ஒரு அறையில் அமர்ந்து, உணவுகளையும் இருப்பு வைப்பார்கள். காலப்போக்கில், அந்த அறை "சொல்லும் அறை" என்றானது. நண்பர்களும் குடும்பத்தினரும் தங்கள் கதைகள், ரகசியங்கள் மற்றும் கனவுகளைப் பகிர்ந்து கொள்ள ஒன்றுகூடும் இடமானது. நம்பிக்கையான நண்பர்களின் நெருக்கமான உறவாடுதல் உங்களுக்குத் தேவைப்பட்டால், நீங்கள் “சொல்லும் அறை”க்குச் செல்வீர்கள்.

அவர்கள் வடக்கு ஸ்பெயினில் வாழ்ந்திருந்தால், யோனத்தானும் தாவீதும் பகிர்ந்து கொண்ட ஆழமான நட்பு அவர்களை ஒரு சொல்லும் அறையை உருவாக்க வழிவகுத்திருக்கலாம். தாவீதைக் கொல்ல வேண்டும் என்று சவுல் ராஜா மிகவும் பொறாமைப்பட்டபோது, சவுலின் மூத்த மகனான யோனத்தான் அவரைப் பாதுகாத்து நண்பனானார். இருவரின் ஆத்துமாக்களும் "ஒன்றாய் இசைந்திருந்தது" (1 சாமுவேல் 18:1). மேலும் யோனத்தான் "ஆத்துமாவைப் போலச்" சிநேகித்தான் (வவ. 1, 3). மேலும், தானே அரியணைக்கு வாரிசாக இருந்தபோதிலும், ராஜாவாக தாவீதின் தெய்வீகத் தேர்ந்தெடுப்பையும் அங்கீகரித்தார். அவன் தாவீதுக்கு அவனுடைய மேலங்கி, வாள், வில், கச்சை ஆகியவற்றைக் கொடுத்தான் (வச. 4). பின்னர், தாவீது யோனத்தானின் நண்பராக அவர் மீது கொண்டிருந்த ஆழ்ந்த அன்பு ஆச்சரியமாயிருந்தது என்று அறிவித்தார் (2 சாமுவேல் 1:26).

இயேசுவின் விசுவாசிகளாக, கிறிஸ்துவைப் போன்ற அன்பையும் அக்கறையையும் பிரதிபலிக்கும் நட்பைக் கட்டியெழுப்ப அவர் நமக்கு உதவட்டும். நண்பர்களுடன் நேரம் ஒதுக்கவும், நம் இதயங்களைத் திறக்கவும், அவரில் ஒருவருக்கொருவர் உண்மையான ஒற்றுமையுடன் வாழவும் செய்வோமாக..

கிருபையின் மறுதொடக்கம்

கடந்த பல தசாப்தங்களாக திரைப்பட சொற்களஞ்சியத்தில் ஒரு புதிய சொல் நுழைந்துள்ளது, அது "மறுதொடக்கம்". திரைத்துறை பாணியில், ஒரு பழைய கதையை அதை மறுதொடக்கம் செய்து ஆரம்பிப்பதாகும். சில மறுதொடக்கங்கள் ஒரு அசகாய சூரனை பற்றியோ கற்பனை படைப்பு போன்றோ பழக்கமான கதையை மீண்டும் கூறுகின்றன. மற்ற மறுதொடக்கங்கள் அதிகம் அறியப்படாத கதையை எடுத்து புதிய வழியில் அக்கதையை மறுபரிசீலனை செய்கின்றன. ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மறுதொடக்கம் என்பது மீண்டும் செய்வது போன்றது. இது ஒரு புதிய தொடக்கம், பழையதான ஒன்றுக்கு புதிய வாழ்வு கொடுக்கப்படுகிறது.

மறுதொடக்கங்களை உள்ளடக்கிய மற்றொரு கதை உள்ளது, அது நற்செய்தி கதை. அதில், இயேசு தம்முடைய மன்னிப்பு, பரிபூரணம் மற்றும் நித்திய ஜீவனுக்கு நம்மை அழைக்கிறார் (யோவான் 10:10). புலம்பல் புத்தகத்தில், எரேமியா நமக்குத் தேவனின் அன்பு ஒவ்வொரு நாளையும் கூட ஒரு வகையில் மறுதொடக்கம் செய்கிறதை நமக்கு நினைவூட்டுகிறார்: " நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.” (3:22-23).

தேவனின் கிருபையானது, ஒவ்வொரு நாளையும் அவருடைய உண்மைத்தன்மையை அனுபவிக்க ஒரு புதிய வாய்ப்பாக ஏற்றுக்கொள்ள நம்மை அழைக்கிறது. நம்முடைய சொந்த தவறுகளின் விளைவுகளுடன் நாம் போராடினாலும் அல்லது வேறு பல கஷ்டங்களைச் சந்தித்தாலும் தேவனின் ஆவியானவர் ஒவ்வொரு புதிய நாளிலும், மன்னிப்பு,  புதிய வாழ்க்கை மற்றும் நம்பிக்கையை அருள முடியும். ஒவ்வொரு நாளும் ஒரு வகையான மறுதொடக்கம் ஆகும். நமது சிறந்த இயக்குநரின் வழியைப் பின்பற்றுவதற்கான ஒரு வாய்ப்பு.  அவர் நம் கதையை அவரது பெரிய கதையில் ஒன்றாய் பின்னுகிறார்.

தேவனின் சத்தத்தை அறிதல்

பல வருட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, ஓநாய்கள் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்வதற்குத் தனித்துவமான குரல்களைக் கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் அறிந்துகொண்டனர். ஒரு குறிப்பிட்ட ஒலி பகுப்பாய்வு குறியீட்டைப் பயன்படுத்தி, ஒரு பெண் ஓநாயின் ஊளையில் உள்ள பல்வேறு சப்த அளவுகள் மற்றும் சுருதிகள் குறிப்பிட்ட ஓநாய்களை 100 சதவீத துல்லியத்துடன் அடையாளம் காண உதவியது என்பதை ஒரு விஞ்ஞானி உணர்ந்தார்.

தேவன் தனது பிரியமான படைப்புகளின் தனித்துவமான குரல்களை அறிந்துகொண்டதற்கான பல உதாரணங்களை வேதாகமம் காட்டுகிறது. அவர் மோசேயை பெயர் சொல்லி அழைத்து நேரடியாகப் பேசினார் (யாத்திராகமம் 3:4-6). சங்கீதக்காரன் தாவீது, "நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார்" (சங்கீதம் 3:4) என்று அறிவித்தார். தேவனுடைய ஜனங்கள் அவருடைய குரலை அறிந்துகொள்வதின் அவசியத்தை அப்போஸ்தலன் பவுலும் வலியுறுத்தினார்.

எபேசிய மூப்பர்களிடம் விடைபெறும் போது, எருசலேமுக்குச் செல்லும்படி ஆவியானவர் தன்னை "கட்டாயப்படுத்தினார்" என்று பவுல் கூறினார். தேவனின் சத்தத்தைப் பின்பற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் உறுதிப்படுத்தினார், ஆனால் போகுமிடத்தில் சம்பவிப்பவற்றை அறியாதிருந்தார் (அப்போஸ்தலர் 20:22). "கொடிதான ஓநாய்கள்" சபைக்குள்ளிருந்து கூட "எழும்பி.. மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று" என்று அப்போஸ்தலன் எச்சரித்தார் (வச. 29-30). பின்னர், தேவனுடைய சத்தியத்தைப் பகுத்தறிவதில் இடைவிடாமல் விழித்திருங்கள் அவர் மூப்பர்களை ஊக்குவித்தார் (வச. 31).தேவன் நமக்குச் செவிசாய்த்து பதிலளிப்பார் என்பதை அறிந்துகொள்ளும் பாக்கியம் இயேசுவின் விசுவாசிகள் அனைவருக்கும் உண்டு. பரிசுத்த ஆவியின் வல்லமையும் நம்மிடம் உள்ளது, அவர் தேவனின் குரலை அடையாளம் காண உதவுகிறார், அது எப்போதும் வேத வார்த்தைகளுடன் ஒத்துப்போகிறது.