ஆயத்தம் செய்யப்பட்டுள்ள நற்கிரியைகள்
வெளிநாட்டில், ஒரு தெரு வழியே நானும் என் மனைவியும் சென்று கொண்டிருந்த போது, கம்பீரமான ஒரு மனிதன் எங்களை நோக்கி வந்த போது நாங்கள் பயத்தால் பின்வாங்கினோம். எங்களுடைய விடுமுறை நாட்கள் மோசமாகப் போய் கொண்டிருந்தது. சிலர் எங்களிடம் கத்தினர், எங்களை ஏமாற்றினர், அநேக முறை அச்சுறுத்தலையும் சந்தித்தோம். ஒரு வேளை மீண்டும் எங்களை கீழே தள்ளப் போகின்றாரா? என்ன ஆச்சரியம்! அந்த மனிதன் அவருடைய பட்டணத்தின் சிறந்த காட்சியை எங்கிருந்து பார்த்தால் தெளிவாகக் காண முடியும் எனச் சுட்டிக்காட்டினார். பின்னர், அவர் எங்களுக்கு ஒரு சாக்லேட் கட்டியைக் கொடுத்து விட்டு சிரித்து எங்களை விட்டுப் பிரிந்து சென்றார். அந்த சிறிய செயல் அந்த நாளையும் எங்களுடைய முழுபயணத்தையும் மகிழ்ச்சியாக்கியது. எங்களை மகிழச் செய்த அந்த மனிதனையும், தேவனையும் நன்றியோடு நினைக்கச் செய்தது.
அந்த மனிதன் இரு அந்நியர்களுக்கு உதவும்படி அவரைத் தூண்டியது யார்? அவர் அந்த நாள் முழுவதும் சாக்லேட் கட்டிகளோடு, யாரிடமாகிலும் கொடுத்து ஆசிர்வதிக்கும்படி திரிந்து கொண்டிருந்தாரா?
ஒரு சிறிய நற்கிரியை, பெரிய மகிழ்ச்சியைத் தந்து, ஒருவரை தேவனுக்கு நேராக வழிநடத்த முடிகிறது என்பதை நினைத்து ஆச்சரியப்பட்டேன். வேதாகமம் நற்கிரியைகள் செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது (யாக். 2:17,24). அது ஒருவேளை சவால் மிக்கதாகத் தோன்றினாலும் தேவன் நம்மை இத்தகைய காரியங்களைச் செய்யும்படி அவர் நமக்கு பெலனளிக்கிறார், நமக்கு உறுதியளிக்கின்றார். ''அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கின்றார்" (எபே. 2:10).
இன்று யாரோ ஒருவருக்கு ஊக்கமளிக்கும் சில வார்த்தைகள் தேவையென்பதையறிந்து தேவன் நம்மை அவர்களோடு தொடர்பு கொள்ளச் செய்கின்றார். பிறருக்கு உதவும்படி நமக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கின்றார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவருக்குக் கீழ்படிந்து செயல்படுதலே.
அன்பு நம்மை மாற்றும்
நான் இயேசு கிறிஸ்துவைச் சந்திக்கும் முன்பு மிகவும் ஆழமாகக் காயப்பட்டிருந்தேன். நான் மேலும் காயப்பட்டு விடுவேனோ என்ற பயத்தில் யாரிடமும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக்கொள்ள பயந்தேன். நான் ஆலனைத் திருமணம் செய்துகொள்ளும் வரை என்னுடையத் தாயாரே எனக்கு நெருங்கிய சிநேகிதியாக இருந்தார்கள். ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் நான் என்னுடைய திருமணத்தை முறித்துக் கொள்ள இருந்த போது, பாலர் பள்ளி செல்லும் என்னுடைய குழந்தை சேவியரை தூக்கிக் கொண்டு ஆலய ஆராதனைக்குச் சென்றேன். நான் அங்கு வெளியே செல்லும் கதவண்டை உட்கார்ந்தேன். விசுவாசிப்பதற்கு பயந்தும், உதவியை எதிர்பார்த்தும்
அவலநிலையிலிருந்தேன்.
நல்ல வேளையாக, அங்கிருந்த விசுவாசிகள் முன் வந்து, எங்களுடைய குடும்பத்திற்காக ஜெபித்தனர். ஜெபத்தின் மூலமாயும், வேதத்தை வாசிப்பதன் மூலமாயும் தேவனோடு உறவை எவ்வாறு ஏற்படுத்திக்கொள்வது என்று கற்றுக் கொடுத்தனர். நாட்கள் சென்றபோது கிறிஸ்துவின் அன்பும், அவரைப் பின்பற்றுகின்றவர்களும், என்னை மாற்றினர்.
அந்த முதல் ஆராதனைக்குப் பின் இரண்டு வருடங்கள் கழித்து அந்த ஆலய ஆராதனையில் ஆலன் சேவியர் மற்றும் என்னை ஞானஸ்நானம் எடுக்கும்படி கேட்டுக் கொண்டனர். சில நாட்களுக்குப் பின் நாங்கள் வழக்கம் போல வார இறுதியில் பேசிக் கொள்வது போன்று என் தாயாருடன் பேசிக் கொண்டிருந்தபோது ''நீ முற்றிலும் மாறுபட்டிருக்கின்றாய். இயேசுவைப் பற்றி மேலும் எனக்குச் சொல்" என என்னிடம் கேட்டுக் கொண்டார். சில மாதங்கள் சென்றன. அவர்களும் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள்.
இயேசு வாழ்வை மாற்றினார். இயேசுவைச் சந்திக்கும் வரை சபைகளைத் துன்பப்படுத்திக் கொண்டிருந்த சவுலின் வாழ்வை மாற்றினார் (அப். 9:1-5). மற்றவர்கள் அவன் இயேசுவைக் குறித்து மேலும் கற்றுக் கொள்ள உதவினர் (வச. 17-19). அவனுடைய திடீர் வாழ்வு மாற்றம் அவனை ஆவியில் நிறைந்து போதனை செய்பவராக அவனை பெலப்படுத்தியது (வச. 20-22).
நாம் இயேசுவை முதலில் சந்தித்த விதம் சவுலுடையதைப் போன்று தீடீரென ஏற்பட்டதாயிருக்க அவசியமில்லை. நம்முடைய வாழ்வு மாற்றமும் வேகமானதாகவோ திடீரென ஏற்பட்டதாகவோ இருக்க முடியாது. ஆனாலும் கிறிஸ்துவின் அன்பு நம்முடைய வாழ்வை மாற்றுவதை நம்முடைய சுற்றத்தார் கவனிப்பர். காலம் செல்லும்போது நாமும் மற்றவர்களுக்கு தேவன் நமக்குச் செய்தவற்றைச் சொல்வதற்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.
இருதயத்தின் அசைவுகள்
அமெரிக்க ஐக்கிய நாட்டின் மக்கட்தொகை அலுவலக அறிக்கைபடி, அமெரிக்கர்கள் தங்கள் வாழ்நாளில் சராசரியாக பதினொன்று முதல் பன்னிரண்டு முறையாவது தங்களுடைய வாழும் இடத்தை மாற்றிக் கொள்வர். சமீபத்தில் ஓர் ஆண்டில் 28 மில்லியன் மக்கள் தங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு மற்றொரு இடத்திற்கு நகர்ந்து புதிய வீட்டில் குடியேறியுள்ளனர்.
இஸ்ரவேலரின் 40 ஆண்டுகள் வனாந்திரப்பயணத்தில், ஒரே குடும்பமாகிய ஒரு தேசத்தின் மக்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு, தேவனுடைய பிரசன்னம் வழிநடத்தியது. அவர்கள் ஒரு புதிய தேசத்தைச் சுதந்தரிக்கும் நம்பிக்கையோடு பிரயாணம் செய்தனர். இந்தக் காரியம் அடிக்கடி நடந்தது. அதனைக் குறித்து வேதத்தில் நாம் வாசிக்கும் போது வேடிக்கையாகவுள்ளது. அந்த மிகப் பெரிய குடும்பம் திரும்பத் திரும்ப தங்கள் உடைமைகளைக் கட்டுவதும், கட்டவழிப்பதும் நடந்தேறிக் கொண்டேயிருந்தது. அவர்களுடைய உடைமைகளை மட்டுமல்ல, மேகத்திலிருந்து தேவன் மோசேயைச் சந்தித்த தேவனுடைய ஆசரிப்புக் கூடாரம் மற்றும் உடன்படிக்கைப் பெட்டி ஆகியவற்றையும், அவற்றின் விரிப்புகளையும் கட்டிக் கொண்டுச் சென்றனர் (யாத். 25:22).
அநேக ஆண்டுகளுக்குப் பின்னர் இயேசு, இஸ்ரவேலரின் பிரயாண நாட்களுக்கு ஒரு முழு அர்த்தத்தைக் கொடுத்தார். ஒரு மேகத்திலிருந்து வழிநடத்துவதற்குப் பதிலாக அவரே நேரில் வந்தார். அவர், 'என்னைப் பின்பற்றி வா" (மத். 4:19) என்று சொன்ன போது மிக முக்கியமான முகவரி மாற்றம் அவர்களுடைய இருதயத்தில் ஏற்படும்படிச் செய்தார். நண்பர்களையும், எதிரிகளையும் ஒரு ரோம சிலுவையின் அடிவாரத்திற்கு வழி நடத்திச் சென்று, மேகத்தில் தோன்றிய தேவன், அவருடைய ஆசரிப்பு கூடாரத்தில் பேசிய கர்த்தர், எவ்வாறு அவர்களை மீட்கப் போகின்றாரென்பதைக் காண்பித்தார்.
தம் முகவரியை மாற்றுவது போல, இருதயத்தின் அசைவுகளும் நிலையானதல்ல. ஆனால், ஒரு நாள் நம் தந்தையின் வீட்டிலுள்ள ஜன்னல் வழியே நாம் கடந்து வந்த பாதையைப் பார்க்கும் போது, இயேசு நம்மை எத்தனை தூரம் வழிநடத்தி வந்துள்ளார் என்பதைக் காண்போம்.
நான் பார்க்க முடிந்ததெல்லாம்
ஒரு குளிர்ந்த நாளில், உறையும் பனியில், ஓர் ஏரிக்கரையில் பனியினால் மூடப்பட்ட கலங்கரை விளக்கின் அழகினை கிறிஸ்டா பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் தன்னுடைய அலைபேசியை எடுத்து இந்தக் காட்சியைப் படம் பிடிக்க முயற்சித்தபோது, அவளுடைய கண்ணாடி பனிப் படலத்தால் மூடப்பட்டது. அவளால் அதன் வழியே ஒன்றும் பார்க்க முடியவில்லை. எனவே அவள் தன்னுடைய கேமராவை அந்தக் கலங்கரை விளக்கிற்கு நேராகத் திருப்பி மூன்று படங்களை, வெவ்வேறு கோணங்களில் எடுத்தாள். பின்பு அவள் அந்தப் படங்களைப் பார்த்த போது தான் அவளுடைய கேமரா ''செல்பி" நிலையிலிருந்திருக்கின்றதை உணர்ந்தாள். அவள் சிரித்துக் கொண்டே, ''என்னுடைய கவனம் என்மீது, என்மீதேயிருந்திருக்கின்றது. நான் பார்க்க முடிந்ததெல்லாம் என்னையே" என்று கூறினாள். கிறிஸ்டாவின் படங்கள் என்னை அத்தகைய ஒரு தவறினைக் குறித்துச் சிந்திக்கத் தூண்டின. நாம் நம்மீதே கவனம் செலுத்தும் போது, தேவனுடைய திட்டத்தினைக் குறித்த பெரிய காட்சியைக் காணத் தவறிவிடுகின்றோம்.
இயேசுவின் உறவினனான யோவான் தன் மீது கவனம் செலுத்தும்படி தான் வரவில்லையென்பதை தெளிவாகத் தெரிந்து கொண்டான். ஆரம்பத்திலிருந்தே அவன் தன்னுடைய அழைப்பு, பிறரை தேவக்குமாரனான இயேசுவிடம் திருப்புவதேயென்பதை நன்கு கண்டறிந்து கொண்டார். இயேசுவும் அவருடைய சீடர்களும் தன்னிடம் வரக்கண்ட யோவான், ''இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி" (யோவா. 1:29) எனத் தெரிவிக்கின்றார். அத்தோடு, "இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக நான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்க வந்தேன்" என்றார் (வச. 31). யோவானுடைய சீடர்கள் அவரிடம் வந்து, அநேகர் இயேசுவைப் பின்பற்றிச் செல்கின்றனர் எனத் தகவல் கொடுத்த போது, யோவான் அவர்களிடம், 'நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்... அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்" (3:28-30) என்று கூறினார்.
நம்முடைய வாழ்வின் முழுகவனமும் இயேசுவின் மீதும் அவரை முழுமனதோடும் அன்பு செய்வதிலேயுமே இருக்கட்டும்.
கேட்பதற்கே செவிகள் உருவாக்கப்பட்டன
குடும்பத்தின் ஒரு நபராக நடிக்கும்படி நடிகை டயான் குருசெர்க்கு ஒரு பாத்திரம் கொடுக்கப்பட்டது. அவள் அதில் தன்னுடைய கணவனையும் குழந்தையையும் இழந்த ஓர் இளம் மனைவியாகவும், தாயாகவும் நடிக்க வேண்டும். ஆனால், நிஜ வாழ்வில் அவள் இந்த அளவுக்கு வேதனைகளை அநுபவித்ததேயில்லை. எனவே அவளால் அதனை நம்பக்கூடிய அளவுக்கு நடிக்க முடியும் என அவளுக்குத் தோன்றவில்லை. ஆனாலும் அவள் அதனை ஏற்றுக் கொண்டாள். அதற்குத் தன்னை தயாரிக்கும்படி, துயரத்தின் பள்ளத்தாக்கினை கடந்து கொண்டிருக்கும் அத்தகையோரினைக் தாங்கும்படி நடத்தப்பட்ட கூட்டங்களில் அவள் பங்கு பெற்றாள்.
அக்கூட்டத்தினர் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டபோது, ஆரம்பத்தில் அவள் அவர்களுக்கு ஆலோசனைகளையும் சிந்தனையையும் கொடுத்தாள். நம்மில் அநேகரைப் போன்று அவளும் அவர்களுக்கு உதவியாக இருக்க விரும்பினாள். ஆனால், நாட்கள் செல்ல, செல்ல அவள் பேசுவதை நிறுத்தினாள். அவர்களின் பகிர்தலைக் கேட்க ஆரம்பித்தாள். உண்மையில் அப்பொழுதுதான் அவர்களோடு கடினப் பாதையில் நடக்க ஆரம்பித்தாள். அவள் தன்னுடைய செவிகளைச் சாய்த்தபோதுதான் அவளால் உண்மையை உணர முடிந்தது.
இஸ்ரவேல் ஜனங்களின் மீது எரேமியாவின் குற்றச்சாட்டு என்னவெனின், அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்படி தங்கள் செவிகளைத் திருப்புவதில்லை. எரேமியா அவர்களை அறிவில்லாத ஜனங்கள், முட்டாள்களென கடினமான வார்த்தைகளால் குறிப்பிடுகின்றார் (எரே. 5:21). தேவன் தம்முடைய அன்பான வார்த்தைகளையும், அறிவுரைகளையும், ஊக்கத்தையும், எச்சரிக்கையையும் தொடர்ந்து நம் வாழ்வில் கொடுப்பதன் மூலம் செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறார். நாம் கற்றுக் கொண்டு முதிர்ச்சி பெற வேண்டுமென்பதே நம் தந்தையின் ஆவல். நாம் கற்றுக்கொள்ள பயன்படுத்தவே செவிகளைத் தந்துள்ளார். இப்பொழுது கேள்வியென்னவெனில், தேவனுடைய இருதயத்தின் வாஞ்சையைத் தெரிந்துகொள்ள நம் செவிகளை நாம் பயன்படுத்துகின்றோமா? என்பதே.
மீட்கப்பட்டது
2003 ஆம் ஆண்டு வந்த மோர்மார் வெட்டுக் கிளிகளின் படையெடுப்பால் 25 மில்லியன் டாலர் பயிரிழப்பு ஏற்பட்டதாகக் கணக்கிடப்பட்டது. ஜனங்கள் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் 25 மில்லியன் டாலர் பயிரிழப்பு ஏற்பட்டதாகக் கணக்கிடப்பட்டது. ஜனங்கள் வெட்டுக்கிளிகளின் மேல் கால்வைக்காமல் ஓர் எட்டு கூட நடக்கக் கூடாதபடி அதன் எண்ணிக்கை மிகவும் பெரியதாயிருந்தது. 1848 ஆம் ஆண்டு முதன் முதலில் இந்த பச்சை வெட்டுக்கிளிகள் பவுஞ்சுகளாக வந்தபோது, ஒவ்வொரு வெட்டுக்கிளியும் தன் வாழ்நாளில் 38 பவுண்டு தாவரங்களை உண்கின்றன என கணக்கிடப்பட்டது. இவற்றின் படையெடுப்பின் விளைவாக ஒரு விவசாயியின் வாழ்விலும், ஒரு மாநிலம் மற்றும் ஒரு நாட்டின் பொருளாதாரத்திலும் பேரழிவு ஏற்பட்டது.
யூதா ஜனங்கள் அனைவரும் கீழ்படியாமற் போனபடியால், இத்தகைய ஒரு பெருங்கூட்டமான பூச்சிகள் யூதா தேசம் முழுவதிலும் இதுவரைக் கண்டிராத அளவு பெரிய நாசத்தை ஏற்படுத்தின என பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி யோவேல் விளக்குகின்றார். அவர் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பைக் குறித்து முன்னறிவித்தார் (வேத வல்லுனர்கள் இதனை ஓர் அந்நிய இராணுவப் படையினருக்குச் சமமானதாகக் குறிப்பிடுகின்றனர்) (யோவேல் 1:2). அந்த வெட்டுக்கிளிகள் தாங்கள் காண்கின்ற யாவற்றையும் நாசமாக்கி, ஜனங்களை பஞ்சத்திற்கும் வறுமைக்கும் உள்ளாக்கின. எனினும் ஜனங்கள் தங்களுடைய பாவ வழியை விட்டுத் திரும்பி தேவனிடம் மன்னிப்பு கேட்கும் போது 'வெட்டுக்கிளிகளும்... பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்" என தேவன் கூறுவதாகத் தெரிவிக்கின்றார்.
யூதாவிடமிருந்து நாமும் ஒரு பாடத்தை கற்றுக் கொள்ளலாம். இந்தப் பூச்சிகளைப் போன்று நம்முடைய தவறுகள் தேவன் நமக்கு வைத்திருக்கின்ற நன்மைகளையும் தேவனுடைய வாசனை வீசும் வாழ்வையும் இழக்கச் செய்கின்றன. நம்முடைய பழைய வாழ்வை விட்டுவிட்டு நாம் தேவனிடம் திரும்பும் போது, தேவன் நம்முடைய வெட்கத்தை மாற்றி அவருக்குள் ஒரு நிறைவான வாழ்வை மீண்டும் தருகின்றார்.
ஆழ்ந்த அன்பு
எட்வின் ஸ்டான்டன் முதன் முறையாக அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லின்கனைத் தனிப்பட்ட முறையிலும், தன் பணியினிமித்தமும் சந்தித்த போது அவரிடம் தரக் குறைவாக நடந்து கொண்டார். அவரைக் குறித்து, "நீண்ட பற்கள் கொண்ட உயிரினம்" எனவும் குறிப்பிட்டார். ஆனால், லின்கன் ஸ்டான்டனின் திறமையைப் பாராட்டியதோடு அவரை மன்னிக்கவும் செய்தார். அதோடல்லாமல் ஓர் உள்நாட்டு போரின் போது, ஸ்டான்டனை முக்கிய கேபினெட் உறுப்பினராக பதவியுர்வளித்தார். பிற்பாடு ஸ்டான்டன், லின்கனை ஒரு நண்பனாக ஏற்றுக் கொண்டு அன்பு செய்தார். போர்ட் அரங்கில் ஜனாதிபதி சுடப்பட்டபோது, அன்றிரவு முழுவதும் லின்கனின் படுக்கையருகிலேயே அமர்ந்திருந்த ஸ்டான்டன், அவர் மரித்த போது கண்ணீரோடு, 'இப்பொழுது அவர் தலைமுறைகளுக்குச் சொந்தமாவார்" எனக் கூறினார்.
ஒப்புரவாதல் என்பது ஓர் அழகிய காரியம். அப்போஸ்தலனாகிய பேதுரு, இயேசுவைப் பின் பற்றுகின்றவர்களுக்கு எழுதும் போது, ''எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்" (1 பேது. 4:8) என்கின்றார். இந்த வார்த்தைகளின் மூலம், பேதுரு இயேசுகிறிஸ்துவை மறுதலித்ததையும் (லூக். 22:54-62) பின்னர் அவர் (நாமும்) சிலுவையின் வழியே இயேசுவின் மன்னிப்பைப் பெற்றுக்கொண்டதையும் நினைத்து அதிசயித்தேன்.
இயேசு தன்னுடைய மரனத்தின் மூலம் வெளிப்படுத்தின ஆழந்த அன்பு நம்மை நம்முடைய பாவங்களிலிருந்து விடுதலையளித்து, தேவனோடு ஒப்புரவாகும்படி வழியைத் திறந்து கொடுத்தது (கொலோ. 1:19-20). அவருடைய மன்னிக்கும் சிந்தை நாமும் பிறரை மன்னிக்கும்படி பெலனளிக்கின்றது. ஏனெனில் பிறரை மன்னிப்பது நம்முடைய சொந்த முயற்சியால் முடியாதகாரியம். அவரே நமக்கு மன்னிக்கும் சிந்தையைத் தரும்படி நாம் அவரிடம் கேட்க வேண்டும். நாம் பிறரை நேசிக்கின்றோம், ஏனெனில் நமது இரட்சகர் அனைவரையும் நேசிக்கின்றார். நாம் பிறரை மன்னிக்க முடிகின்றது, ஏனெனில் அவர் நம்மை மன்னிக்கின்றார். பின்னானவைகளைக் கடந்து, முன்னோக்கி அவரோடு நடந்து புதிய, அழகிய கிருபாசனத்தண்டையில் சேர தேவன் நமக்கு பெலனளிக்கின்றார்.
சுவிகாரப் புத்திரன்
சமுதாயத் தொண்டு செய்யும் ஒருவர் வீடற்ற குழந்தைகளுக்கென ஓர் இல்லம் கட்டியபோது, நான் மிகவும் மகிழ்ந்தேன். அத்தோடு நின்றுவிடாமல், அந்த மனிதன் அதையும் விட மேலாக அப்படிப்பட்ட வீடற்ற குழந்தைகளிலொன்றைத் தனக்குச் சொந்தமாக தத்தெடுத்துக் கொண்டபோது மெய்சிலிர்த்துப் போனோன். அநேக அனாதைக் குழந்தைகள் தங்களை ஆதரிக்க ஒரு வளர்ப்புத் தந்தை கிடைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியடைவர். ஆனால், அந்த வளர்ப்புத் தந்தை தங்களுக்கு உதவுபவர் மட்டுமல்ல, தங்களைச் சொந்தமாக ஏற்றுக் கொள்கிறாரென கேட்கும்போது, அது அவர்களுக்கு எப்படியிருக்கும்?
நீயும் தேவனுடைய பிள்ளையாயிருந்தால், அது உனக்குச் கிடைத்த ஈவு என்பதை
நீ அறிந்திருக்கின்றாய். வெறுமனே, தேவன் நம்மை நேசித்ததினால் தம்முடைய ஒரேபேறான குமாரனை, "நாம் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படி" (யோவா. 3:16). அனுப்பியிருந்தால், அது நமக்குப் போதுமானது. நாம் தேவனைக் குறைகூறவும் முடியாது. ஆனால், அது தேவனுக்குப் போதுமானதாகயில்லை. “நம்மை மீட்டுக் கொள்ளத்தக்கதாக" தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினார். அத்தோடு அது முடிந்து விடவும் இல்லை. ஆனால், “நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி" (கலா. 4:4-5) தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினார்.
அப்போஸ்தலனாகிய பவுல் நம்மை “தேவனுடைய புத்திரர்" என்றே குறிப்பிடுகின்றார். ஏனெனில், அவருடைய நாட்களில் மகனுக்குத்தான் தந்தையின் சுதந்திரத்தையடையும் உரிமையிருந்தது. எந்த மனுஷனும், மனுஷியும் இயேசுவின் பேரில் விசுவாசமாயிருந்தால் அவர்களெல்லாரும் தேவனுடைய பிள்ளைகளென்கிற சுதந்தரத்தைப் பெறுகின்றோம் என பவுல் கூறுகின்றார் (வச. 7).
தேவன், வெறுமனே உன்னை மீட்கிறவர் மட்டுமல்ல, அவர் உன்னை நேசிக்கின்றார், உன்னைத் தன்னுடைய சொந்த குடும்பத்தில் சேர்த்துக் கொள்கின்றார். தன்னுடைய நாமத்தை உன்மேல் எழுதுகின்றார் (வெளி. 3:12). உன்னைத் தன்னுடைய பிள்ளையெனப் பெருமையாகக் கூறுகின்றார். இதைவிட மேலாக அன்புகூர நமக்கு யாரிருக்கின்றார்கள்? தேவனை விட முக்கியமானவராக நமக்கு யாரிருக்கக் கூடும்? நீ தேவனால் ஆசீர்வதிக்கப்படுவதோடு, அவருடைய பிள்ளையாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டாய உன் தந்தை உன்னை நேசிக்கின்றார்.
பாசிகளும், நுண்பாசிகளும்
“நுண்பாசி என்பது என்ன?" என நான் என் சிநேகிதியைக் கேட்டேன். நான் அவளுடைய தோள்மீது சாய்ந்து, அவள் நுண்ணோக்கி மூலம் எடுத்துக் கொண்ட படங்களை, அவளுடைய அலைபேசியில் பார்த்துக் கொண்டிருந்தேன். “ஓ, இது பாசியைப் போன்றது. இதனைப் பார்ப்பது சற்றுக் கடினமானது. சிலவேளைகளில் லென்சுகளில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டுக் கொண்டு தான் பார்க்க முடியும் அல்லது அவை இறந்த பின் தான் பார்கக் முடியும்" என விளக்கினாள். அவள், ஒன்றன் பின் ஒன்றாக படங்களைக் காட்டி விளக்கிய போது, நான் வியந்துபோனேன். நுண்ணோக்கிகளின் மூலம் பார்க்கக் கூடிய அத்தனை சிறிய உயிரினங்களில் தேவன் வைத்துள்ள நுணுக்கமான அமைப்புகளைக் குறித்து நினைத்துக் கொண்டேயிருந்தேன்.
தேவனுடைய படைப்புகளுக்கும் அவருடைய செயல்களுக்கும் முடிவேயில்லை. இதனைக் குறித்து யோபுவின் நண்பனான எலிகூகூட, யோபு தன் இழப்புகளின் மத்தியில் போராடிக் கொண்டிருந்தபோது அவனுக்கு சுட்டிக் காட்டுகின்றான். எலிகூ தன் நண்பனிடம்," யோபே, இதற்குச் செவிகொடும்; தரித்து நின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப் பாரும். தேவன் அவைகளைத் திட்டம் பண்ணி, தம்முடைய மேகத்தின் மின்னலைப் பிரகாசிக்கப்பண்ணும் விதத்தை அறிவீரோ? மேகங்கள் தொங்கும்படி வைக்கும் நிறையையும், பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைளையும்... அறிவீரோ?" (யோபு 37:14-16). தேவனுடைய படைப்புகளையும், அவற்றின் சிக்கலான நுணுக்கங்களையும் புரிந்து கொள்ள மனித அறிவு போதாது.
நாம் கண்களால் காணமுடியாத அவருடைய படைப்புகளும், தேவனுடைய வல்லமையையும் மகிமையையும் வெளிப்படுத்துகின்றன. அவருடைய மகிமை நம்மைச் சூழ்ந்துள்ளது. நாம் எவற்றின் வழியே கடந்து சென்றாலும், அவைகளைக் காணவும் புரிந்து கொள்ளவும் முடியாவிட்டாலும் தேவன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். அவரை நாம் இன்று போற்றுவோம், ஏனெனில், “அவர் ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணிமுடியாத அதிசயங்களையும் செய்கிறார்" (யோபு. 5:9).