நம்பிக்கையே வெற்றியின் இரகசியம்
நான் இதனை எழுதிக் கொண்டிருக்கும்போது என்னுடைய விருப்பமான கால்பந்த குழு எட்டு முறை தொடர்ந்து தோல்வியைத் தழுவியது. ஓவ்வொரு முறை தோற்கும் போதும், இவர்கள் மீண்டும் இதே காலத்தில் வெற்றியைப் பெற மடியும் என நம்புவதற்கு கடினமாயிருந்தது. ஒவ்வொரு வாரமும் பயிற்சியாளர் சில மாற்றங்களைக் கொடுத்தார். ஆனால், அவையொன்றும் வெற்றியைத் தரவில்லை. என்னுடன் பணிபுரிபவர்களோடு நான் உரையாடிக் கொண்டிருந்தபோது வேடிக்கையாக, “வெறும் நம்பிக்கை மட்டும் வெற்றியைக் கொண்டு வந்து விடாது, நம்பிக்கை ஒரு போர்கலையல்ல” என நகைச்சுவையாகக் கூறினேன்.
ஒருவேளை இது கால்பந்து விளையாட்டிற்கு உண்மையாயிருக்கலாம். ஆனால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் இது நேர்மாறானது. தேவன் மீது நம்பிக்கையை உருவாக்கிக் கொள்வதோடு மட்டுமல்ல, அவரைப் பற்றிக் கொள்வதும், விசுவாசமாயிருப்பதுமே வெற்றியின் இரகசியம். இந்த உலகம் நம்மை ஏமாற்றமடையச் செய்கின்றது. ஆனால், நம்பிக்கை நம்மை தேவனுடைய உண்மையின் மீது உறுதியாயிருக்கச் செய்து, கொந்தளிக்கும் நேரங்களில் நம்மை இயங்கச் செய்கின்றது.
மீகா இந்த உண்மையை நன்கு புரிந்து கொண்டார். இஸ்ரவேலர் தேவனைவிட்டு அந்நிய தெய்வங்களிடம் திரும்பிய போது, அவர் மனமுடைந்து போனார். “ஐயோ… தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப் போனான்; மனுஷரில் செம்மையானவன் இல்லை” (7:1-2) எனப் புலம்புகின்றார். பின்னர் அவர் தன் உண்மையான நம்பிக்கையின் மீது கவனத்தைக் கொண்டு வந்து, “நானோவென்றால் கர்த்தரை நோக்கிக் கொண்டு என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்” (வச. 7) என்கின்றார்.
கடினமான வேளைகளில் நம்பிக்கையை விடாதிருக்க என்ன செய்யலாம்? மீகா நமக்கு வழிகாட்டுகின்றார் கவனி, காத்திரு, ஜெபி, தேவன் செய்த நன்மைகளை நினைவுகூர். நம்முடைய சூழ்நிலைகள் நம்மை மேற்கொண்டாலும் தேவன் நம் கதறலைக் கேட்கின்றார். இத்தகைய நேரங்களில் தேவனைப் பற்றிக் கொண்டு, நாம் தேவன் மீது கொண்டுள்ள நம்பிக்கையோடு செயல்படுவதே நமது வெற்றி. நம் வாழ்கையில் புயலை மேற்கொள்ள இந்த ஒரே போர்க் கலைதான் நமக்கு உதவமுடியும்.
பயப்படாதிருங்கள்
எப்பொழுது ஒரு தேவதூதன் தோன்றினாலும் அவன் கூறும் முதல் வார்த்தை, “பயப்படாதிருங்கள்” என்பதாக வேதாகமத்தில் காண்கின்றோம். இது நமக்கு ஆச்சரியத்தைக் தருகிறது. இயற்கைக்கு அப்பாற்பட்டது புவியைத் தொடும் போது, அதைத் காணும் மாந்தர் பயத்தால் முகங்குப்புற விழுகின்றனர். ஆனால், தேவன் தன்னைக் காண்பிக்கும் போது பயப்படத்தக்க ரூபத்தில் இருப்பதில்லையென லூக்கா கூறுகின்றார். இயேசு கிறிஸ்து பிறந்த போது, விலங்குகளின் மத்தியிலிருந்தார், தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டார். நாம் பயப்படாமலிருக்கும்படி தேவன் இத்தகைய அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்தார். ஒரு புதிதாகப் பிறந்த குழந்தையைவிட பயப்படாமலிருக்கத்தக்கது எது?
புவியிலிருக்கும் போது இயேசு தேவனாகவும், மனிதனாகவும் வாழ்ந்தார். அவர் அற்புதங்களைச் செய்தார். பாவங்களை மன்னித்தார். ஆனால், தேவன் பிரகாசமான மேகஸ்தம்பம் அல்லது அக்கினி ஸ்தம்பத்தின் மூலம் வெளிப்படுவதற்கு, யூதர்கள் பழக்கப்பட்டிருந்ததால் அவர்களால் மனிதனான இயேசுவின் மூலம் தேவனைப் பார்க்க முடியவில்லை, குழப்பமடைந்தனர். பெத்லகேமில் பிறந்த ஒரு குழந்தை, ஒரு தச்சனின் மகன், நாசரேத்தூரிலுள்ள ஒரு மனிதன் எப்படி தேவனிடமிருந்து வந்த மேசியாவாக இருக்க முடியும் எனக் கேட்டனர்.
ஏன் தேவன் மனித வடிவில் வந்தார்? பன்னிரண்டு வயது நிரம்பிய இயேசு தேவாலயத்தில் போதகர்களுடன் விவாதித்தக் காட்சி ஒரு சாட்சியாகவுள்ளது. “அவர் பேசக் கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும், அவர் சொன்ன மாறுத்தரங்களையும் குறித்துப் பிரமித்தார்கள்” என லூக்கா குறிப்பிடுகின்றார் (2:47) முதல் முறையாக சாதாரண ஜனங்கள் தேவனோடு உரையாடுவதைக் காண்கின்றார்கள்.
இயேசு அவருடைய பெற்றோர், போதகர், ஏழை விதவை என்று யாவரோடும் பேசுகின்றார். அவர் முதலில் “பயப்படாதிருங்கள்” என்று சொல்லிக் கொள்ளவில்லை. இயேசுவின் மூலம் தேவன் நம்மருகில் வந்துள்ளார்.
தலைவனைப் பின்பற்றல்
எங்கள் வீட்டிற்கு மேலுள்ள ஆகாயத்தில் மூன்று போர் ஜெட் விமானங்கள் அலறிக்கொண்டு வானத்தில் ஒழுங்காக, மிகக் குறுகிய இடைவெளியில் பறந்தன. அவை பார்ப்பதற்கு ஒன்று போல தெரிந்தது. “வாவ்” என நான் என் கணவன் டானிடம் கூறினேன். “கண்ணைக் கவர்வதாகவுள்ளது” என அவர் ஆமோதித்தார். நாங்கள் ஒரு விமானப்படை தளத்தினருகில் வசிப்பதால் இதுபோன்ற காட்சிகளைக் காண்பது எங்களுக்குப் புதிதல்ல.
ஒவ்வொரு முறையும் இந்த ஜெட் விமானங்கள் எங்களுக்கு மேல் பறக்கும் போது நான் அதே கேள்வியையே கேட்கின்றேன். எப்படி அவைகளால், தங்கள் கட்டுப்பாட்டை இழக்காமல் இத்தனை நெருக்கமாகப் பறக்க முடிகிறது? ஒரு வெளிப்படையான காரணமென்னவெனில் தாழ்மை என தெரிந்து கொண்டேன். வழிநடத்தும் முதல் விமானி தகுந்த, சரியான வேகத்தில், சரியான பாதையில் செல்கின்றார் என்ற நம்பிக்கையோடு, மற்ற இரு விமானிகளும் தாங்கள் செல்லும் திசையைக் குறித்து எந்த தனிப்பட்ட விருப்பத்தையும் மேற்கொள்ளாமலும், தலைவன் செல்லும் பாதையைக் குறித்து எந்தக் கேள்வியையும் கேட்காமலும் பின்பற்றுகின்றனர். ஆனால், அவர்கள் தங்கள் அனிவகுப்பில் நிலைத்திருந்து நெருக்கமாகத் தொடர்கின்றனர். அதன் விளைவு, நான் ஒரு வலிமையான குழு.
இயேசுவைப் பின்பற்றுபவர்களும் இவர்களைப் போன்றெ தான். “ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” (லூக். 9:23) என இயேசு சொல்கின்றார்.
தன்னை வெறுத்தலும், பாடுகளும் நிறைந்தது அவருடைய பாதை. அது பின்பற்றக் கடினமானது. ஆனால், அவருடைய உண்மையான சீடனாக இருக்க, நாமும் நம்முடைய தனிப்பட்ட ஆசைகளை தள்ளிவிட்டு, நம்மையே கவனித்துக்கொண்டிருப்பதை விட்டு விட்டு, ஆவியின் பாரத்தைச் சுமந்து கொண்டு அநுதினமும் பிறருக்கு ஊழியம் செய்ய அழைக்கப்படுகின்றோம். அப்படியே நாம் அவரை மிக நெருக்கமாகத் தொடர வேண்டும்.
நம்மையே தாழ்த்தி, அவரோடு நெருங்கி நடப்பது எத்தனை அருமையானக் காட்சி! அவர் நம்மை வழிநடத்த நாம் அவரோடு நெருங்கி, நாமும் அவரும் ஒன்றாயிருப்பது போல நடக்க வேண்டும். அப்படியானால், பிறர் நம்மை காண மாட்டார்கள் ஆனால், கிறிஸ்துவைக் காண்பார்கள். அப்படியிருக்கும் போது பிறர் நம்மைக்காண பார்த்து “வாவ்” என்பர்.
ஒரு கிறிஸ்மஸ் கடிதம்
ஒவ்வொரு கிறிஸ்மஸ் காலத்திலும் என்னுடைய நண்பனொருவன், அந்த ஆண்டில் நடந்த எல்லாக் காரியங்களைக் குறித்தும், எதிர்கால கனவுகளைப்பற்றியும் தன் மனைவிக்கு நீண்ட கடிதம் எழுதுவான். தான் அவளை மிகவும் நேசிப்பதாகவும் அதற்கான காரணம் என்னவென்றும் எழுதுவான். தன்னுடைய ஒவ்வொரு மகளுக்கும் இதேப்போன்று கடிதம் எழுதுவான். அவனுடைய அன்பின் வார்த்தைகள் மறக்கமுடியாத கிறிஸ்மல் பரிசாக அமையும்.
உண்மையான கிறிஸ்மஸ் அன்பின் கடிதம் எதுவெனில், ‘வார்த்தை மாம்சமானார்’ என்பதே. யோவான் இந்த உண்மையை சுவிசேஷத்தில் முக்கியப்படுத்திக் காட்டியுள்ளார். “ஆதியிலே வார்த்தையிருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது” (யோவா. 1:1) பழங்கால கிரேக்கத் தத்துவங்கள் வார்த்தையை ஓர் உன்னத மனம் அல்லது உண்மையோடு இணைக்கப்படல் எனக் குறிப்பிடுகின்றன. ஆனால், யோவான் வார்த்தையை ஒரு மனிதனாக வெளிப்படுத்துகின்றார். தேவக் குமாரனாகிய இயேசு ஆதியில் தேவனோடு இருந்தார் (வச. 2). இந்த வார்த்தை பிதாவினுடைய “ஒரே பேரானக் குமாரன்” மாம்சமாகி, நம்மிடையே வாசம்பண்ணினார் (வச. 14) வார்த்தையாகிய இயேசுவின் மூலம் தேவன் தம்மை முழுமையாக வெளிப்படுத்தினார்.
வேத அறிஞர்கள் இந்த அழகிய மர்மத்தோடு பல நூற்றாண்டுகளாகப் போராடிக் கொண்டிருந்தனர். நாம் முழுமையாக புரிந்து கொள்ளாவிடினும் வார்த்தையாகிய இயேசு நம்முடைய உலகின் இருளை நீக்க வந்த மெய்யான ஒளி (வச. 9). நாம் அவரை நம்புவோமேயாகில் நாம் தேவனுடைய அன்புப் பிள்ளைகள் என்கின்ற பரிசைப் பெற்று அநுபவிக்கலாம்.
இயேசுவே நமக்குத் தரப்பட்ட அன்பின் கடிதம் அவர் வந்து நம்மிடையே வாசம் பண்ணுகின்றார். இது ஓர் ஆச்சரியமான கிறிஸ்மஸ் பரிசு.
பெரிய விழித்தெழல்
என்னுடைய மகன்கள் சிறியவர்களாக இருந்தபோது, எங்கள் குடும்ப நண்பர்களோடு நாங்கள் களித்த நாட்களைப் பற்றிய நினைவுகளை ஒரு பொக்கிஷமாக என் நினைவில் வைத்துள்ளேன். பெரியவர்கள் இரவு வெகுநேரம் வரை பேசிக் கொண்டிருப்போம். எங்களுடைய குழந்தைகள் விளையாடி சோர்ந்து ஒரு சோபாவில் அல்லது ஒரு நாற்காலியில் படுத்து உறங்கிவிடுவர்.
நாங்கள் திரும்ப வேண்டிய நேரம் வரும்போது, நான் என்னுடைய மகன்களை என் கரத்தில் அணைத்து சுமந்து காருக்குக் கொண்டு சென்று பின் இருக்கையில் படுக்கச் செய்து, எங்கள் வீட்டிற்குத் திரும்புவோம். வீடு வந்ததும் அவர்களை அப்படியேத் தூக்கி அவர்களுடைய படுக்கையில் கிடத்தி, வாழ்த்தி முத்தமிட்டு விளக்குகளை அணைத்துவிட்டு வருவேன். மறுநாள் காலையில் அவர்கள் தங்கள் வீட்டில் எழுந்திருப்பார்கள்.
இந்த நிகழ்வு, நாம் இயேசுவுக்குள் நித்திரையடையும் (1 தெச. 4:14) இரவினைக் குறித்து என்னைச் சிந்திக்க வைத்தது. நாம் நித்திரையடைந்து… நம்முடைய நித்திய வீட்டில் விழிப்போம். நம்முடைய வாழ்நாட்களில் நாம் அநுபவித்த அத்தனை சோர்வையும் நித்திய வீடு மாற்றிவிடும்.
பழைய ஏற்பாட்டில் உபாகமத்தில் வரும் ஒரு பகுதி என்னை வியப்படையச் செய்தது. “அப்படியே… மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின் படியே மரித்தான்” (34:5). எபிரெய வழக்கப்படி “மோசே தேவனுடைய வாயைத் தொட்டபடியே மரித்தான்” என வரும் சொற்டொடரை பழங்கால போதகர்கள் “ தேவனுடைய முத்தத்தோடு” என மொழி பெயர்த்தனர்.
இப்புவியில் நம்முடைய கடைசி மூச்சின் போது தேவன் குனிந்து நம்மை முத்தமிட்டு வாழ்த்துவார் என்பதைக் கற்பனை செய்துபார்த்தால் அது சற்று மிகைப்பட்டதாகத் தோன்றுகின்றது. ஜான் டோன் இதனையே நமக்கு ஏற்றாற்போல் “ஒரு சிறிய தூக்கம் முடிந்து, நாம் நித்தியத்திற்குள் விழிப்போம்” எனக் கூறியுள்ளார்.
வெட்கத்திற்குப் பதிலாக மரியாதை
இந்த ஆண்டிலும் மீண்டும் அந்தக் காலம் வந்தது. குடும்பங்கள் ஒன்று சேர்ந்து பண்டிகையைக் கொண்டாடும் காலம் அது. திருமணமாகாதவர், குழந்தையில்லாதவர் என தங்களில் ஏதோவொரு குறையுள்ளது எனக் கருதும் சிலர், தங்களைக் கேள்விகேட்கும் ஆர்வமிக்க உறவினரைச் சந்திக்க பயப்படுகின்றனர்.
திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தையில்லாதிருந்த எலிசபெத்தின் அவல நிலையை நினைத்துப் பாருங்கள். எலிசபெத், சகரியா தம்பதியினருக்கு தேவனுடைய கண்களில் தயவு கிடைக்கவில்லை
(1 சாமு. 1:5-6) எனக் கருதுவர், அத்தோடு அதனைக் கேவலமாகவும் கருதுவர். ஆனால், அவர்கள் நீதியுள்ளவர்களாய் வாழ்ந்த போதிலும் (லூக். 1:6) அவர்களுடைய அண்டை வீட்டாரும், உறவினரும் வேறுவிதமாகக் கருதியிருப்பர்.
எதுவாயிருப்பினும் எலிசபெத்தும் அவளுடைய கணவனும் தேவனுக்குப் பணி செய்வதில் உண்மையுள்ளவர்களாயிருந்தனர். இருவருக்குமே வயது சென்ற போது ஓர் அற்புதம் நடந்தது. தேவன் அவளுடைய ஜெபத்தைக் கேட்டார் (வச. 13). தேவன் தம்முடைய தயவைக் காட்ட விருப்பமுடையவர் (வச. 24). ஒருவேளை அவர் கொடுப்பதற்குத் தாமதித்தாலும் அவருடைய நேரம் சரியானதாகவும் அவருடைய ஞானம் நேர்த்தியானதாகவும் இருக்கும். எலிசபெத்திற்கும் அவளுடைய கணவனுக்கும் தேவன் ஒரு சிறந்த பரிசை வைத்திருந்தார், ஒரு குழந்தை, அது மேசியாவின் வருகைக்கு முன்னோடியாக வந்தது (ஏசா. 40:3-5).
உனக்கும் ஏதோவொரு குறைவு உள்ளதால் நீயும் நிறைவற்றவனாக உன்னை நினைக்கின்றாயா? அது ஒரு பல்கலைகழகத்தின் பட்டமாகவோ, வீடாகவோ இருக்கலாம். எலிசபெத்தைப் போன்று தேவனுடைய திட்டம் உன்னில் நிறைவேறும்படி பொறுமையோடு காத்திரு. அவருக்கு உண்மையாய் வாழ்ந்திரு உன்னுடைய சூழ்நிலை எவ்வாறிருந்தாலும் தேவன் உன்மூலம் கிரியை செய்து கொண்டிருக்கிறார். அவர் உன் உள்ளத்தையறிவார். உன்வேண்டுதலைக் கேட்கின்றார்.
கண்ணாடிகளும், கேட்பவர்களும்
உகாண்டா தேசத்தில், கம்பாலாவிலுள்ள ஒரு விடுதியிலிருந்து நான் வெளியே வந்த போது, என்னை ஒரு கருத்தரங்கிற்கு அழைத்துச் செல்ல வந்திருந்தவளின் முகத்தில் ஒரு வேடிக்கைக் கலந்த சிரிப்பைக் கவனித்தேன். “சிரிக்கும் படி என்ன உள்ளது” எனக் கேட்டேன். அவள் சிரித்துக் கொண்டே, “உன்னுடைய தலைமுடியைச் சீவினாயா?” எனக் கேட்டாள். அப்பொழுது நான் என்னைக் குறித்துச் சிரித்துக் கொண்டேன். ஏனெனில், உண்மையிலேயே நான் தலைச்சீவ மறந்துவிட்டேன். நான் விடுதியிலுள்ள கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தேன். பின் எப்படி தலைச்சீவ மறந்து இப்படி வந்தேன்?
வேதாகமத்தைக் கற்றுக் கொள்வதை இன்னும் பயனுள்ளதாக்கிக் கொள்ள யாக்கோபு நடைமுறை செயலோடு ஒப்பிட்டு ஒரு புதிய கோணத்தைத் தருகின்றார். நாம் தலைசீவியுள்ளோமா, முகம் கழுவியுள்ளோமா, சட்டையின் பொத்தானகளைச் சரியாக இணைத்துள்ளோமா என சரி செய்து கொள்ள கண்ணாடியைப் பார்க்கின்றோம். நம்முடைய குணம், நடத்தை, எண்ணம், மற்றும் செயல்பாடுகள் சரியாகவுள்ளனவா என ஆராய்ந்து அறிந்துகொள்ள வேதாகமம பயன்படுகின்றது (யாக். 1:23-24) நம்முடைய வாழ்வை தேவன் வெளிப்படுத்தியுள்ளபடி அமைத்துக்கொள்ள வேதாகமம் உதவுகிறது. நம்முடைய நாவையடக்கவும் (வச. 26) திக்கற்ற பிள்ளைகளையும், விதவைகளையும் விசாரிக்கவும், (வச. 27) தேவனுடைய ஆவியானவர் நமக்குள்ளேயிருந்து நம்மை எச்சரிப்பவற்றிற்குச் செவிகொடுக்கவும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் நம்மைக் காத்துக் கொள்ளவும் (வச. 27) உதவுகிறது.
நாம் ”சுயாதீனப் பிரமாணமாகிய பூரணப் பிரமாணத்தைக் கவனமாக உற்றுப் பார்த்து நம் வாழ்வில் நடைமுறைப் படுத்துவோமேயாகில், நம் செய்கையில் பாக்கியவானாயிருப்போம் (வச. 25) வேதப்புத்தகமாகிய கண்ணாடியைப் பார்த்து “ ஆத்துமாவை இரட்சிக் வல்லமையுள்ளதாயிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்வோம்” (வச. 21).
மொசைக் கற்களின் அழகு
இஸ்ரவேல் நாட்டில் ‘என் கேரம்’ என்ற இடத்திலுள்ள தேவாலயத்தை பார்வையிடச் சென்றிருந்த போது அந்த ஆலயத்தின் வளாகத்தில் அமர்ந்திருந்து அதன் அழகை ரசித்துக் கொண்டிருந்தேன். அங்கு அறுபத்தேழு மொசைக் கற்களில் லூக்கா 1:46-55 வரையுள்ள வார்த்தைகள் வௌ;வேறு மொழிகளில் எழுதப்பட்டிருந்த அழகினைக் கண்டு வியந்து நின்றேன். “மரியாளின் கீதம்” என்று அழைக்கப்படும் இந்த வார்த்தைகள், தேவதூதன் மரியாளிடம் அவள் மேசியாவின் தாயாகப் போகின்றாள் என அறிவித்தபோது, மரியாள் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தின வார்த்தைகளே இப்பாடல்.
ஓவ்வொரு சட்டத்திலுமுள்ள மரியாளின் வார்த்தைகள், “என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது… வல்லமையுள்ளவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்” (வச. 46-49) என ஆரம்பிக்கின்றன. அந்த மொசைக் கற்களில் பதிக்கப்பட்டுள்ள வேதாகமப் பாடல் ஒரு ஸ்தோத்திரப் பாடல். தேவன் தனக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் உண்மையுள்ளவராகவேயிருக்கிறார் என்பதை நினைத்து மரியாள் தேவனைப் போற்றிப் பாடும் பாடல்.
தேவனுடைய கிருபையைப் பெற்ற மரியாள் நன்றியுணர்வோடு, தன் இரட்சகராகிய தேவனில் மகிழ்ந்து பாடுகின்றாள் (வச. 47) தேவனுடைய இரக்கம் அவருக்குப் பயந்தவர்களுக்குத் தலைமுறை தலைமுறையாக இருக்கிறது (வச. 50). கடந்த நாட்கள் முழுவதும் தேவன் இஸ்ரவேலரைப் பாதுகாத்து வந்திருக்கிறார், தம் ஜனங்களுக்காக அவர் செய்த வல்லமையுள்ள அவருடைய செயல்களுக்காகவும் அவரைப் போற்றுகின்றார் (வச. 51) தங்களுடைய அனுதின தேவைகளையெல்லாம் தேவன் தம் கரத்திலிருந்து தருகின்றார் என்று சொல்லி நன்றி செலுத்துகின்றார் (வச. 53).
தேவன் நமக்குச் செய்துள்ள நன்மைகளையும் பெரிய காரியங்களையும் நினைத்து அவருக்குத் துதி செலுத்தும் போது நமக்கு மகிழ்ச்சியைத் தரும் என்பதை மரியாள் நமக்குக் காண்பித்துள்ளாள். இந்த கிறிஸ்மஸ் நாட்களில் நாமும் தேவன் நமக்கு கடந்த ஆண்டு முழுவதும் பாராட்டியுள்ள நன்மைகளை நினைத்துப் பார்த்து அதிக அழகான ஒரு நன்றிப் பாடலை எழுதமுடியம்.
பரலோகத்தின் அன்புப் பாடல்
1936 ஆம் ஆண்டு பாடலாசிரியர் பில்லி ஹில் என்பவர் ஒரு பிரபல்யமான பாடலை வெளியிட்டார். அது “அன்பின் மகிமை” என்ற பாடல். சில ஆண்டுகளுக்குமுன், அன்பினால் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும் சிறிய காரியங்களால் ஏற்படும் மகிழ்ச்சியைக் குறித்து ஒரு நாட்டினர் பாடிக் கொண்டிருந்தனர். ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், பாடலாசிரியர் பீட்டர் சீற்ரா இதே தலைப்பில் அதிக உணர்வுபூர்வமான பாடல் ஒன்றை எழுதினார். அவருடைய கற்பனையில் இருவர் நீடித்து வாழ்வதாகவும், அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டவர்களாகவும், எல்லாவற்றையும் அன்பின் மகிமைக்காகச் செய்ததாகவும் எழுதினார்.
வேதாகமத்தின் கடைசி புத்தகமான வெளிப்படுத்தலில் ஒரு புதிய அன்புப் பாடல் விளக்கப்பட்டுள்ளது. அது ஒரு நாள் புவியிலும் பரலோகத்திலுமுள்ள அனைவராலும் பாடப்படும் பாடல் (வெளி. 5:9,13). அந்தப் பாடலின் இசை ஆரம்பத்தில் ஒரு துயரத்தொனியோடு ஆரம்பிக்கின்றது. பூமியில் காண்கின்ற அநியாயங்கள் ஒன்றிற்கும் பதிலேயில்லை என்பதைக் கண்ட யோவான், இதை எழுதியவர் அழுகின்றார் (வச. 3-4). ஆனால், உண்மையான மகிமையையும் உண்மை அன்பின் கதையையும் தெரிந்து கொண்டபோது யோவானின் முகம் பிரகாசிக்கின்றது. அந்த பாடலின் இசை உச்சக் கட்டத்தை எட்டுகின்றது (வச. 12-13). படைப்புகளெல்லாம் வல்லமையுள்ள யூதா கோத்திரத்துச் சிங்கத்தைப் போற்றிப் பாடுகின்றன (வச. 5) அவர் நம்மை மீட்பதற்காக தன்னையே ஓர் ஆட்டுக்குட்டியைப் போல பலியிடப்படும்படி அன்பினால் அர்ப்பணித்தார். எனவே வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழுள்ள சிருஷ்டிகளும், சமுத்திரத்திலுள்ள யாவும் அவரை வணக்கமாய் பணிந்து கொண்டன (வச. 13).
ஒரு சிறிய அன்பின் செயலை பாடலாகப் பாடும் போது அது இதுவரைப் பாடப்பட்ட பாடல்களிலெல்லாம் அனைவரையும் அசைக்கும் பாடலாகத் திகழ்கின்றது. நாம் பாடும் மகிமையின் பாடல் யாவும் தேவனுடைய உள்ளத்தை வெளிப்படுத்துகின்றன. நாம் அவரைப் பாடுகின்றோம், ஏனெனில், அவரே பாடலைத் தந்தவர்.