குடும்பத்தின் ஒரு நபராக நடிக்கும்படி நடிகை டயான் குருசெர்க்கு ஒரு பாத்திரம் கொடுக்கப்பட்டது. அவள் அதில் தன்னுடைய கணவனையும் குழந்தையையும் இழந்த ஓர் இளம் மனைவியாகவும், தாயாகவும் நடிக்க வேண்டும். ஆனால், நிஜ வாழ்வில் அவள் இந்த அளவுக்கு வேதனைகளை அநுபவித்ததேயில்லை. எனவே அவளால் அதனை நம்பக்கூடிய அளவுக்கு நடிக்க முடியும் என அவளுக்குத் தோன்றவில்லை. ஆனாலும் அவள் அதனை ஏற்றுக் கொண்டாள். அதற்குத் தன்னை தயாரிக்கும்படி, துயரத்தின் பள்ளத்தாக்கினை கடந்து கொண்டிருக்கும் அத்தகையோரினைக் தாங்கும்படி நடத்தப்பட்ட கூட்டங்களில் அவள் பங்கு பெற்றாள்.

அக்கூட்டத்தினர் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டபோது, ஆரம்பத்தில் அவள் அவர்களுக்கு ஆலோசனைகளையும் சிந்தனையையும் கொடுத்தாள். நம்மில் அநேகரைப் போன்று அவளும் அவர்களுக்கு உதவியாக இருக்க விரும்பினாள். ஆனால், நாட்கள் செல்ல, செல்ல அவள் பேசுவதை நிறுத்தினாள். அவர்களின் பகிர்தலைக் கேட்க ஆரம்பித்தாள். உண்மையில் அப்பொழுதுதான் அவர்களோடு கடினப் பாதையில் நடக்க ஆரம்பித்தாள். அவள் தன்னுடைய செவிகளைச் சாய்த்தபோதுதான் அவளால் உண்மையை உணர முடிந்தது.

இஸ்ரவேல் ஜனங்களின் மீது எரேமியாவின் குற்றச்சாட்டு என்னவெனின், அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்படி தங்கள் செவிகளைத் திருப்புவதில்லை. எரேமியா அவர்களை அறிவில்லாத ஜனங்கள், முட்டாள்களென கடினமான வார்த்தைகளால் குறிப்பிடுகின்றார் (எரே. 5:21). தேவன் தம்முடைய அன்பான வார்த்தைகளையும், அறிவுரைகளையும், ஊக்கத்தையும், எச்சரிக்கையையும் தொடர்ந்து நம் வாழ்வில் கொடுப்பதன் மூலம் செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறார். நாம் கற்றுக் கொண்டு முதிர்ச்சி பெற வேண்டுமென்பதே நம் தந்தையின் ஆவல். நாம் கற்றுக்கொள்ள பயன்படுத்தவே செவிகளைத் தந்துள்ளார். இப்பொழுது கேள்வியென்னவெனில், தேவனுடைய இருதயத்தின் வாஞ்சையைத் தெரிந்துகொள்ள நம் செவிகளை நாம் பயன்படுத்துகின்றோமா? என்பதே.