மார்ச், 2019 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: மார்ச் 2019

மிகப்பெரிய பரிசு

பல ஆண்டுகளாக என்னுடைய சிநேகிதி பார்பரா எனக்கு அதிக எண்ணிக்கையில், என்னை ஊக்கப்படுத்தும் அட்டைகளையும், சிந்திக்க வைக்கும் பரிசுகளையும் கொடுத்துவந்தாள். நான் அவளிடம் இயேசு கிறிஸ்துவை என்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டுள்ளேன் என்று சொன்னபோது, இதுவரை கொடுத்ததையெல்லாம் விட மிகப் பெரிய பரிசாக என்னுடைய முதல் வேதபுத்தகத்தைக் கொடுத்தாள். 'நீ தேவனோடு நெருக்கமாக வளர்ந்து, ஆவியில் முதிர்ச்சியடைந்து, அவரை அனுதினமும் சந்தித்து, வேதம் வாசித்து, ஜெபித்து, அவர் மீது நம்பிக்கையோடு, அவருக்குக் கீழ்படிந்திரு" என்றார். பார்பரா தேவனைப் பற்றி இன்னும் நன்கு அறிந்துகொள்ள என்னை அழைத்துச் சென்றபோது, என்னுடைய வாழ்வு முற்றிலும் மாறியது.

அப்போஸ்தலனாகிய பிலிப்புவைப் பற்றி பார்பரா எனக்கு நினைப்பூட்டினாள். இயேசு, பிலிப்புவிடம் தன்னைப் பின்பற்றும்படி அழைத்தபோது (யோவா. 1:43), அந்த அப்போஸ்தலன் உடனடியாகத் தன்னுடைய நண்பன் நாத்தான்வேலிடம், 'நியாயப்பிரமாணத்திலே மோசேயும், தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம் (வச. 45) என்றான். நாத்தான்வேல் சந்தேகித்த போது, பிலிப்பு வாக்குவாதமோ, விமர்சனமோ பண்ணவுமில்லை, அவனை விட்டுவிடவுமில்லை. ஆனால், நேருக்கு நேர் சந்திக்கும் படி இயேசுவிடம் அழைத்து வந்தான். 'வந்து பார்" என்றான் (வச. 46).

நாத்தான்வேல் இயேசுவை, 'தேவனுடைய குமாரன்", 'இஸ்ரவேலின் ராஜா" (வச. 49) என்று வெளிப்படுத்தினதைக் கேட்ட பிலிப்பு எப்படி மகிழ்ந்திருப்பான் என்பதை என்னால் உணரமுடிகிறது. தன்னுடைய நண்பன் 'மிகப்பெரியவற்றை" காணத் தவறவில்லை என்பது எத்தனை ஆசீர்வாதமாயிருக்கிறது. இயேசு அவனிடம், 'இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய்" (வச. 50) என்றார்.

தேவனோடு நமக்குள்ள நெருங்கிய உறவை பரிசுத்த ஆவியானவர் துவக்கி வைக்கின்றார். அவரை விசுவாசத்தோடு ஏற்றுக் கொள்பவர்களின் உள்ளத்தில் பரிசுத்த ஆவியானவர் வாசம்பண்ணுகின்றார். இயேசுவை நன்கு அறிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவர் உதவுகின்றார். இயேசுவைச் சந்திக்க நாம் பிறரை அழைத்துவரும்படி பரிசுத்த ஆவியானவர் வேதத்தின் மூலம் கிரியை செய்கின்றார். இயேசுவை மேலும் அறிந்துகொள்ள அழைப்பதே, நாம் பெற்றுக்கொள்ளவும், கொடுக்கவும் ஏற்ற மிகச்சிறந்த பரிசு.

படைப்பவரும் காப்பவரும்

பெரிதாக்கிக் காட்டும் ஒரு லென்ஸையும், நுண்ணிய ஓர் இடுக்கியையும் கொண்டு வேலை செய்துகொண்டிருக்கும், சுவிஸ் கடிகாரம் செய்யும் பிலிப், அதிக கவனத்தோடு அந்த கடிகாரத்தின் பாகங்களை எப்படி பிரிப்பது, சுத்தப்படுத்துவது, மீண்டும் அந்த இயந்திரத்தின் நுண்ணிய பாகங்களை எப்படி பொருத்துவது என எனக்கு விளக்கிக் காண்பித்தார். அதிலுள்ள மிக நுணுக்கமான பகுதிகளுக்குள்ளே, கடிகாரத்திற்குத் தேவையான மிக முக்கியமான, ஒரு சிறிய சுருள்வில்லைக் (ஸ்பிரிங்) காண்பித்தார். அந்த முக்கிய சுருள்வில்தான் அங்குள்ள கியர் அமைப்பினை இயங்கச்செய்து சரியான நேரத்தைக் காட்ட உதவுகின்றது. எத்தனை சிறப்புமிக்க கடிகாரமாயிருந்தாலும் இந்த முக்கிய ஸ்பிரிங் இல்லாமல் இயங்க முடியாது என்றார்.

புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள எபிரெயர் புத்தகத்தில் அதனை எழுதியவர் இயேசுவின் மூலமாக தேவன் பரலோகத்தையும், பூலோகத்தையும் படைத்தார் என்பதால், இயேசுவை மனதாரப் போற்றுகின்றார்.

ஒரு சிறப்புமிக்க கடிகாரத்தின் நுணுக்கங்களைப் போன்று, இந்த உலகின் ஒவ்வொரு நுணுக்கமும் இயேசுவால் படைக்கப்பட்டது (எபி. 1:2). சூரிய மண்டலம் முதல் நம்முடைய விரல் ரேகையில் தனித்துவம் வரை எல்லாம் அவராலேயே படைக்கப்பட்டது.

ஒரு கடிகாரத்தின் இயக்கத்திற்கு நுண்ணிய முதன்மை சுருள்வில் எப்படி முக்கியமானதோ அப்படியே எல்லாப் படைப்புகளும் இயங்கவும், செழித்தோங்கவும் காரணமான இயேசு படைப்பாளியையும் விட மேலாகத் திகழ்கின்றார். அவருடைய பிரசன்னம், 'தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்கிறவராய்" (வச. 3) காணப்படுகின்றார். மேலும் அவருடைய படைப்புகள் அனைத்தையும் அவற்றின் வியத்தகு இணைப்புகளோடு இணைந்து இயங்கச் செய்யவும் வல்லமையுள்ளதுமாயிருக்கிறது.

படைப்புகளின் அழகை அனுபவிக்கும் வாய்ப்பு உனக்கிருப்பதால், 'எல்லாம் அவருக்குள் நிலை நிற்கிறது" (கொலோ. 1:17) என்பதையும் நினைவில் கொள். இயேசுவே எல்லா படைப்புகளுக்கும், அவற்றின் பராமரிப்புக்கும் காரணர் என்பதை உணரும்போது நம் உள்ளத்தில் எழும் மகிழ்ச்சியோடு நாம் அவரைப் போற்றி புகழ்வோம். அவருடைய படைப்புகளின் தேவைகளையெல்லாம் அவரே தருகின்றார் என்பதையும் நினைத்துப் போற்றுவோம்.

பிரகாசமான விளக்குகள்

2015 ஆம் ஆண்டு கோடைகாலத்தில், கென்யாவிலுள்ள நைரோபி என்ற இடத்திலுள்ள மாதரே என்ற பின்தங்கிய பகுதிக்குச் சென்ற எங்கள் ஆலயத்தின் குழுவினர், அங்கு கண்ட காட்சியால் அதிர்ந்து போயினர். அங்கு நாங்கள் அழுக்கடைந்த

பள்ளிக்கூடத்தையும், துருபிடித்த உலோகச் சுவர்களையும் நலிவடைந்த மரச்சாமான்களையும் கண்டோம். மிகவும் தாழ்ந்த நிலையிலுள்ள அம்மக்களினிடையே ஒரே ஒரு நபர் மட்டும் மாறுபட்டு காணப்பட்டாள்.

அவளுடைய பெயர் பிரிலியன்ட். அந்த பெயர் அவளுக்குச் சற்றும் பொருத்தமாயில்லை. அவள் அங்குள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியை. அவளுக்குள் மகிழ்ச்சியும் தன்னுடைய சேவையைக் குறித்த ஒரு தீர்மானமும் இருந்தது. அவள் வண்ணமிகு உடையணிந்திருந்தாள். அவளுடைய தோற்றமும், அவள் மகிழ்ச்சியோடு அக்குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்த விதமும் எங்களை வியப்படையச் செய்தது.

முதலாம் நூற்றாண்டில் பிலிப்பி பட்டணத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்களிடம் இவ்வுலகில் அவர்கள் எப்படி இருக்க வேண்டுமென பவுல் அவர்களுக்கு எழுதியதைப் போன்று பிரிலியன்ட் -ம் தன்னைச் சுற்றி வாழ்ந்தவர்களுக்கு ஒரு பிரகாசமான ஒளியைக் கொடுத்தாள். ஆவியில் பரிசுத்தம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த உலகில், இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகள் வானத்தின் சுடர்களைப் போலப் பிரகாசிக்க வேண்டுமென பவுல் கூறுகின்றார் (பிலி. 2:15). நாம் செய்யவேண்டிய செயல் திட்டம் ஒன்றும் மாறிவிடவில்லை. பிரகாசமான விளக்குகள் எங்கும் தேவையாயிருக்கின்றது. 'தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார் (வச. 13) என்பதைக் கேட்கும் போது எத்தனை ஆர்வமாயிருக்கிறது. இயேசு தன்னைப் பின்பற்றுபவர்கள், எப்படியிருக்கவேண்டுமென விரும்புகின்றாரோ அப்படியே அவருடைய விசுவாசிகள் பிரகாசிக்க வேண்டும். இன்னும் அவர் நமக்குச் சொல்வது, 'நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்... மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது" (மத். 5:14-16) என்பதே.

தேவனால் சூழப்பட்டிருக்கிறோம்

கூட்டம் நிறைந்துள்ள ஒரு விமான நிலையத்தில், ஓர் இளம் தாய் தனிமையாகப் போராடிக் கொண்டிருந்தார். அவளுடைய சிறிய குழந்தை கோபத்தில் இருந்தது. அது கத்திக் கொண்டும், உதைத்துக் கொண்டும், விமானத்திற்குள் ஏற மறுத்தும், முரட்டாட்டம் பண்ணிக் கொண்டிருந்தது. தன்னால் தாங்க முடியாமல் தவித்த அந்த கர்ப்பிணியானத் தாய், கடைசியாக கைவிட்டாள். வெறுப்படைந்தவளாய் தரையில் உட்கார்ந்து தன் முகத்தை மூடிக் கொண்டு விம்மி அழ ஆரம்பித்தாள்.

உடனடியாக ஆறு அல்லது ஏழு முன்னறிமுகமில்லாத பெண் பிரயாணிகள் அந்தப் பெண்ணையும், குழந்தையையும் சூழ்ந்துகொண்டனர். தின்பண்டங்களைக் கொடுத்தனர், தண்ணீர் கொடுத்தனர், அன்போடு அணைத்துக் கொண்டனர், ஒரு குழந்தைக்கான பாடலையும் பாடினர். அவர்களின் அன்பும் அரவணைப்பும் அந்தக் குழந்தை அமைதியாக அமர்ந்தது. அனைத்துப் பெண்களும் தங்கள் இருக்கைக்குத் திரும்பினர். அவர்கள் தாங்கள் என்ன செய்தோமென விவாதிக்கவில்லை. ஆனால், தங்களின் உதவி சரியான நேரத்தில் அந்த இளம்தாயை பெலப்படுத்தியது என்று தெரிந்துகொண்டனர்.

இந்தக் காட்சி சங்கீதம் 125ல் காட்டப்பட்டுள்ள அழகிய உண்மையை விளக்கிக் காட்டுகின்றது. வசனம் 2ல் 'கர்த்தர் இது முதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்" இது சுறுசுறுப்பான எருசலேம் நகரம் எவ்வாறிருக்கும் என்பதை நமக்கு நினைப்பூட்டுகின்றது. எருசலேம், ஒலிவமலை, சீயோன் மலை, மோரியா மலை என அநேக மலைகளால் சூழப்பட்ட ஒரு நகரம்.

இதே போன்று தேவன் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் அவர்களுக்குப் பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் இருந்து அவர்களின் ஆத்துமாவைப் பாதுகாக்கின்றார். 'இது முதல் என்றென்றைக்கும் பாதுகாக்கின்றார். கடினமான நாட்களிலும் 'எனக்கொத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்" (சங். 121:1) என்று சங்கீதக்காரன் கூறுவது போல தேவனை நோக்கிப் பார். தேவன் உறுதியான உதவிகளோடு காத்திருக்கின்றார். நிலையான நம்பிக்கையைத் தருகின்றார். அவர் மாறாத அன்புடையவர்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தோலுக்கு உள்ளே கிரியை

சிறுவயதில் நானும் என் சகோதரியும் அடிக்கடி மோதிக் கொண்டேயிருப்போம். அதில் ஒரு குறிப்பிட்ட தருணம் என் நினைவில் இன்னும் இருக்கிறது. நாங்கள் இருவரும் சத்தத்தை உயர்த்தி ஒருவரையொருவர் திட்டிக்கொண்டிருந்தவேளையில், அவள் சொன்ன ஒரு காரியம் என்னால் மன்னிக்கவே முடியாத வகையில் இருந்தது. எங்களுக்கிடையில் வளர்ந்து வரும் பகைமையைக் கண்ட என் பாட்டி, “தேவன் உங்களுக்கு வாழ்க்கையில் ஒரேயொரு சகோதரியைத் தான் கொடுத்திருக்கிறார். நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பரிவு காண்பிக்க பழக வேண்டும்” என்று ஒருவரையொருவர் நேசிக்க வேண்டிய எங்களது பொறுப்பை எங்களுக்கு எடுத்துச் சொன்னார். எங்களை அன்பினாலும் புரிதலினாலும் நிரப்பும்பொருட்டு தேவனிடத்தில் நாங்கள் ஜெபித்தபோது, ஒருவரையொருவர் நாங்கள் எந்தவிதத்தில் காயப்படுத்தினோம் என்பதையும் எப்படி மன்னிக்கவேண்டும் என்பதையும் தேவன் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.  
கோபத்தையும் கசப்பையும் உள்ளுக்குள் வைத்திருப்பது சாதாரணமாய் தெரியலாம். ஆனால் தேவனின் துணையோடு நம்முடைய எரிச்சலின் ஆவியை விட்டுவிட்டு, தேவன் கொடுக்கும் சமாதானத்தை நாம் உணரவேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (எபேசியர் 4:31). இந்த மாம்சத்தின் உணர்வுகளுக்கு அடிமைப்படாமல், கிறிஸ்துவை மாதிரியாய் வைத்து, ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் நம்மை மன்னித்ததுபோல, நாமும் ஒருவருக்கொருவர் மன்னிப்பை செயல்படுத்துவோம் (வச. 32). நமக்கு மன்னிப்பது கடினமாய் தோன்றினால், அவர் ஒவ்வொரு நாளும் நமக்கு அருளும் கிருபையை நாம் சார்ந்துகொள்வோம். நாம் எத்தனை முறை விழுந்தாலும், அவர் கிருபை நம்மை விட்டு விலகுவதில்லை (புலம்பல் 3:22). தேவன் நம்முடைய இருதயங்களில் இருக்கும் கசப்பை நீக்குவதற்கு நமக்கு உதவிசெய்வார். அதினால் நாம் நம்பிக்கையோடு அவருடைய அன்பிற்கு உட்பட்டவர்களாய் நிலைத்திருப்போம்.  

மலைமுகடுகளின் பாதை

ஒரு கவிஞரும், ஆன்மீக எழுத்தாளருமான கிறிஸ்டினா ரோசெட்டி, தனக்கு எதுவும் எளிதில் வரவில்லை என்பதை உணர்ந்தார். அவள் தனது வாழ்நாள் முழுவதும் மனச்சோர்வு மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டார். அவளுடைய வாழ்க்கையில் மூன்று நிச்சயதார்த்தங்கள் நிறுத்தப்பட்ட துக்கத்தை தாங்கினார். இறுதியில் அவள் புற்றுநோயால் மரித்துப்போனாள்.  
தாவீது இஸ்ரவேலின் ராஜரீகத்தில் அமர்த்தப்பட்டபோது, அவன் ஒரு வெற்றிகரமான போர்வீரனாக அடையாளப்படுத்தப்பட்டான். ஆனால் அவனுடைய வாழ்நாள் முழுவதிலும் அவன் பாடுகளை சகிக்கவேண்டியிருந்தது. அவனுடைய ஆட்சியின் இறுதியில், அவனுடைய நம்பிக்கைக்கு பாத்திரமாயிருந்த நபர்களோடு சேர்ந்து அவனுடைய சொந்த குமாரனே அவனுக்கு விரோதமாய் திரும்பினான் (2 சாமுவேல் 15:1-12). ஆகையினால் தாவீது ஆசாரியனாகிய அபியாத்தார், சாதோக் மற்றும் தேவனுடைய உடன்படிக்கை பெட்டியையும் எடுத்துக்கொண்டு எருசலேமை விட்டு ஓடினான் (வச. 14,24).  
அபியாத்தார் தேவனுக்கு பலிகளை செலுத்திய பின்பு, தாவீது ஆசாரியர்களைப் பார்த்து, “தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நான் அதையும் அவர் வாசஸ்தலத்தையும் பார்க்கிறதற்கு, என்னைத் திரும்ப வரப்பண்ணுவார்” (வச. 25) என்று சொன்னான். அவனுடைய குழப்பத்தின் மத்தியிலும் தாவீது, “(தேவன்) உன்மேல் எனக்குப் பிரியமில்லை என்பாராகில், இதோ, இங்கே இருக்கிறேன்; அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்குச் செய்வாராக என்றான்” (வச. 26). அவனால் தேவனை நம்ப முடியும் என்பதை அறிந்திருந்தான்.  
கிறிஸ்டினா ரோசெட்டி தேவனை நம்பினாள். அவளுடைய வாழ்க்கை நம்பிக்கையோடு நிறைவடைந்தது. நாம் கடந்து செல்லும் பாதையானது, மலைமுகடுகளாய் தென்படலாம். ஆனால் அங்கே நம்மை விரிந்த கைகளோடு வரவேற்கும் நம்முடைய பரமபிதா நமக்காய் காத்திருக்கிறார்.  

நீலக்கல் திருச்சபை மணிகள்

 நீலக்கல் பாறை என்பது ஆச்சரியமான ஒரு பாறை. அதை அடைக்கும்போது, அதில் சிதறும் சில நீலக்கற்கள் இசையொலி ஏற்படுத்தும். “மணியோசை” என்று பொருள்படும் மேன்க்ளோசோக் என்ற ஒரு வெல்ஷ் கிராமத்தில், பதினெட்டாம் நூற்றாண்டு வரை இந்த நீலக்கற்களை தேவாலய மணிகளாகப் பயன்படுத்தினர். இங்கிலாந்தின் பிரபலமான ஸ்டோன்ஹென்ச் என்ற நீலக்கற்பாறை மிச்சங்கள், இசையை ஏற்படுத்தும் விதமான அமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க தோன்றுகிறது. சில ஆராய்ச்சியாளர்கள், ஸ்டோன்ஹென்சில் இடம்பெற்றுள்ள இந்த நீலக்கற்கள் அதிலிருந்து இருநூறு மைல் தொலைவில் அமைந்திருந்த இந்த மேன்க்ளோசோக் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கணிக்கிறார்கள்.  
இசையை ஏற்படுத்தும் இந்த நீலக்கற்கள் என்பது தேவனுடைய படைப்பில் ஒரு ஆச்சரியமாய் திகழ்கிறது. இயேசு குருத்தோலை ஞாயிற்றில் எருசலேமுக்குள் பிரவேசிக்கும்போது சொன்ன காரியத்தை நினைவுபடுத்துகிறது. ஜனங்கள் இயேசுவைச் சுற்றிலும் கூச்சலிட, அவர்களை அதட்டும்படிக்கு மார்க்கத் தலைவர்கள் இயேசுவை கேட்கிறார்கள். இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக, “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 19:40) என்கிறார்.  
நீலக்கற்களினால் இசையெழுப்பக்கூடும் என்றால், கல்லுகளே சிருஷ்டிகரை கூப்பிடும் என்று இயேசு சொல்லுவதை கருத்தில்கொண்டால், நம்மை உண்டாக்கி மீட்டுக்கொண்ட நம்முடைய நேசருக்கு எவ்வளவாய் நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்! அவர் நம் அனைத்து துதிகளுக்கும் பாத்திரர். அவருக்கு துதி செலுத்த பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருள்செய்வாராக. அனைத்து சிருஷ்டியும் அவரை பணிகின்றன.