எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

பாட்ரிசியா ரேபோன்கட்டுரைகள்

கிறிஸ்துவில் ஒன்றாக இருப்பது சிறந்தது

டாக்டர் டிஃப்பனி கோல்சன் தனது சிறிய அமெரிக்க நகரமான இல்லினாய்ஸில் இருக்கும் ஈஸ்ட் செயிண்ட் லூயிஸில் பல வழிகளில் குற்றச் செயல்களின் தாக்கத்தைக் கண்டார். இருப்பினும், 2023 ஆம் ஆண்டில், நகரம் கொலைகளில் 31 சதவிகிதம் வீழ்ச்சியையும், ஒட்டுமொத்த குற்றங்களில் 37 சதவிகித வீழ்ச்சியையும் பதிவு செய்துள்ளது. என்ன நடந்தது? ஒரு கூட்டு முயற்சி. நகரின் பொதுப் பாதுகாப்பு அமலாக்கக் குழுவானது, மாநில மற்றும் நகர காவல்துறை, நகரப் பள்ளி மாவட்டம் மற்றும் நம்பிக்கை அமைப்பு உட்பட அனைத்தும் குடிமக்களுக்கு ஆதரவாக இணைந்து செயல்பட ஆரம்பித்ததே அதற்கு காரணம். 

“இது ஒரு திருமணம் என்று நாங்கள் கூறுகிறோம்,” என்று டாக்டர் கோல்சன் கூறினார். நகர கூட்டாளிகளின் அனைத்து உறுப்பினர்களும் குடிமக்களுக்கு உதவ ஒன்றாக இணைந்தனர். அவர் வழிநடத்தும் பள்ளியின் ரேபரவுண்ட் வெல்னஸ் சென்டர், குற்றம் அல்லது விபத்துகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாக பள்ளி சமூக சேவகர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை உள்ளடக்கியது. மற்ற ஏஜென்சிகள் தங்கள் பலத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. தெருவில் உள்ளவர்களுடன் அதிகம் பேசவும், கேட்கவும் காவல்துறை உறுதியளிக்கிறது.

சங்கீதக்காரனாகிய தாவீது “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” (சங்கீதம் 133:1) என்கிறார். மேலும் ஒருமித்து வாசம்பண்ணுவது “எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது” (வச. 3) என்று ஒப்பிடுகிறார். தேவன் மீது ஒருங்கிணைக்கும் நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளும் மக்களை தாவீது குறிப்பிடுகிறார். கொள்கைகள் அல்லது அரசியலால் பிரிக்கப்பட்டாலும் நாம் ஒன்று தான். இது குழப்பமாய் தெரியலாம், ஆனால் ஆசீர்வாதமான ஒன்று. கிறிஸ்தவ அன்பு தேவைப்படும் நாம் வாழும் ஊர்களில், ஒருவருக்கொருவர் அன்பு காண்பிக்கவேண்டியது விசுவாசிகளின் அழகான இலக்காய் அமைந்திருக்கிறது. 

 

தனிமையானவர்க்கு தோழன்

ஹோலி குக், வேலைக்காக லண்டன் சென்றபோது, ஒரு நண்பர் கூட அவளுக்கில்லை. அவளுடைய விடுமுறை நாட்கள் கொடுமையாக இருந்தது. தனிமையுணர்வு உள்ள மக்கள் அதிகமுள்ள நகரங்களில் லண்டன் முன்னிலை வகிக்கிறது. அதின் அண்டை நாடான போர்ச்சுகல் லிஸ்பனில் வசிப்பவர்களில் 10 சதவீதத்துடன் ஒப்பிடும்போது  ​​ 55 சதவீத லண்டன் மக்கள் தாங்கள் தனிமையில் இருப்பதாகக் கூறுவதாக உலகளாவிய கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது.

பிறரோடு இணைந்திருக்க, ஹோலி தனது அச்சத்தை விட்டு, தி லண்டன் லோன்லி கேர்ள்ஸ் கிளப் என்ற சமூக ஊடகக் குழுவை உருவாக்கினாள், அதில் சுமார் முப்பத்தைந்தாயிரம் பேர் சேர்ந்துள்ளனர். சில வாரங்களுக்கு ஒருமுறை சிறிய குழுக்களாகச் சந்தித்து பூங்காக்களைச் சுற்றிப்பார்த்தல், கலைப் பாடங்கள், ஆபரணங்கள் வடிவமைத்தல், இரவு உணவுகள் மற்றும் நாய்க்குட்டிகளுடன் வெளிப்புற உடற்பயிற்சி வகுப்புகள் போன்றவற்றைச் செய்கின்றனர்.

தனிமையென்னும் போராட்டம் புதிதல்ல, தனிமையுணர்வுக்கான பரிகாரியும் புதியவரல்ல. நமது அனாதி தேவன், "தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்" (சங்கீதம் 68:6) என்று தாவீது எழுதினார். கிறிஸ்துவைப் போன்ற நண்பர்களுக்கு நேராக நம்மை நடத்தும்படி தேவனிடம் கேட்பது ஒரு பரிசுத்த பாக்கியம், எனவே நாம் அவரிடம் தாராளமாக இந்த வேண்டுகோளை எடுத்துச்செல்லலாம். அவர், "தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்" (வ. 5) என்றும், தாவீது, "எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே" (வ.19) என்றும் சொல்கிறார்.

இயேசு நமக்கு எவ்வளவு நல்ல நண்பர்! ஒவ்வொரு கணமும் தம்முடைய மகிமையான பிரசன்னத்தில் தொடங்கி அவர் நம்மோடு என்றென்றும் இருக்கும் நண்பர்களைத் தருகிறார். ஹோலி சொல்வது போல், "நண்பர்களுடனான நேரம் மனதுக்கு உகந்தது"

வானத்தை அண்ணாந்து பார்

அலெக்ஸ் ஸ்மாலி, அனைவரும் சீக்கிரமாய் எழுந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார், ஏன்? சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஆகியவற்றைப் பார்ப்பதற்க்காக. பிரமிப்பைத் தூண்டும் வானிலை விளைவுகள் குறித்த பிரிட்டிஷ் ஆய்வின் முதன்மை ஆராய்ச்சியாளரான ஸ்மாலியின் கூற்றுப்படி, அந்த விரைவான தருணங்கள் நாளின் மிகவும் அழகான, பிரமிக்க வைக்கும் நேரங்களாகும். நீல வானங்கள் அல்லது பளபளக்கும் இரவுக் காட்சிகளைவிடவும், அற்புதமான சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனம் மனநிலையை மேம்படுத்தலாம்; நேர்மறையான உணர்ச்சிகளை அதிகரிக்கலாம் மற்றும் மனஅழுத்தத்தைக் குறைக்கலாம். ஸ்மாலி கூறும்போது, “பெரிய மற்றும் மிகப்பெரிய அல்லது இந்த பிரமிப்பு உணர்வை உருவாக்கும் ஒன்றை நீங்கள் காணும்போது, உங்கள் சொந்த பிரச்சனைகள் குறைந்துவிடும், ஆகையால் நீங்கள் அவற்றைப் பற்றி அதிகம் கவலைப்படவேண்டாம்” என்று குறிப்பிடுகிறார். 

ஆச்சரியமான அவரது கண்டுபிடிப்புகள் தீர்க்கதரிசி எரேமியாவின் கண்டுபிடிப்புகளை எதிரொலிக்கின்றன: “ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகா பலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையம் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை” (எரேமியா 32:17). 

தாவீது ராஜாவும் தேவனுடைய படைப்பைப் பார்த்து, “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது” (சங்கீதம் 19:1) என்கிறார். சூரியனைப் பொறுத்தவரை, அது வானத்தின் ஒரு முனையில் உதித்து மறுமுனையில் சுற்றி, அதின் வெப்பத்தால் யாரும் பாதிக்கப்படாத வகையில் செயல்படுகிறது. ஆகையால், தாவீது எழுதும்போது, “கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது” (வச. 7) என்று எழுதுகிறார். தேவனுடைய மகிமையான படைப்பு சர்வ வல்லமையுள்ள சிருஷ்டிகரை பிரதிபலிக்கிறது. வானத்தை அண்ணாந்து பார்த்து, அவரை வியக்க ஏன் இன்று நேரம் ஒதுக்கக்கூடாது!

 

கிறிஸ்துவில் நம்முடைய புதிய சுபாவம்

எங்களுக்கு சொந்தமான பைன்மரமானது, பைன்கூம்புகளையும் ஊசியிலைகளையும் உதிர்க்கத் துவங்கியது. மர மருத்துவர் அதை ஒருமுறை ஆராய்ந்துப் பார்த்துப் பிரச்சனையை விளக்கினார். அவர் “இது ஓர் ஊசியிலை கொண்ட பைன் மரம்” என்று சொன்னார். அவர் வேறு ஏதாகிலும் புதிய விளக்கத்தைக் கொடுப்பார் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் மீண்டும் “இது ஓர் ஊசியிலை மரம்” என்று சாதாரணமாய் சொல்லிவிட்டார். ஊசியிலை பைன் மரங்கள் அவற்றை உதிர்க்கும் விதத்திலேயே உண்டாக்கப்பட்டுள்ளது. அதனை யாராலும் மாற்றியமைக்க முடியாது. 

அதிர்ஷ்டவசமாக, நமது ஆவிக்குரிய வாழ்க்கையானது மாற்றவே முடியாத செயல்கள் அல்லது அணுகுமுறைகளால் வரையறுக்கப்படவில்லை. எபேசுவில் புதிய விசுவாசிகளுக்கு இந்த விடுதலையான உண்மையை பவுல் வலியுறுத்தினார். புறஜாதி மக்கள் தங்கள் “புத்தியில் அந்தகாரப்பட்டு” இருக்கிறார்கள் என்றும் அவர்கள் தேவனுக்கு அந்நியராய் இருக்கிறார்கள் என்றும் “சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்” என்றும் குறிப்பிடுகிறார் (எபேசியர் 4:18-19).

ஆனால் இயேசுவையும் அவருடைய சத்தியத்தையும் கேட்டறிந்த பின்னர், “பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோடுங்கள்” (வச. 22) என்று வலியுறுத்துகிறார். நம்முடைய பழைய வாழ்க்கையானது இச்சையினாலும் காமவிகாரங்களினாலும் எவ்விதம் பாதிக்கப்பட்டிருந்தது என்று குறிப்பிடுகிறார். மேலும் “உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்” என்று குறிப்பிடுகிறார் (வச. 22-24). 

பின்னர் அவர் வாழ்வதற்கான புதிய வழிகளைப் பட்டியலிடுகிறார். பொய் சொல்லாதிருங்கள். கோபத்தை வெறுத்திடுங்கள். சபிப்பதை நிறுத்துங்கள். திருடுவதை விட்டுவிடுங்கள். அதற்கு பதிலாக, “குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்” (வச. 28) என்று வலியுறுத்துகிறார். கிறிஸ்துவில் உருவான நம்முடைய புதிய சுபாவம், நம்முடைய இரட்சகருக்கு விருப்பமான, நமது அழைப்பிற்கு தகுதியான ஓர் வாழ்க்கையை வாழ வழிவகுக்கிறது. 

 

தேவன் நமக்கு உதவுகையில் நாமும் உதவுதல்

நியூசிலாந்தின் ஓலே காசோவ் சைக்கிள் ஓட்டுவதை விரும்பினார். ஒரு காலை, ஒரு முதியவர் தனது வாக்கருடன் ஒரு பூங்காவில் தனியாக இருப்பதைக் கண்டபோது, ​​ஓலே ஒரு எளிய யோசனையால் ஈர்க்கப்பட்டதை உணர்ந்தார். சைக்கிள் சவாரியின் மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் முதியவா்களுக்கு ஏன் வழங்கக்கூடாது? எனவே, ஒரு நாளில் வாடகை மூன்று சக்கர சைக்கிளை ஒரு முதியோர் காப்பகத்தில் நிறுத்தி, அங்குள்ள அனைவருக்கும் சவாரி செய்தார். அதின் ஊழியரும், வயதான குடியானவரும் சைக்கிளிங் வித்தவுட் ஏஜ் அமைப்பின் முதல் பயனர் ஆனபோது அவர் மகிழ்ச்சியடைந்தார்.

இப்போது, ​​இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, சைக்கிள் ஓட்ட இயலாதவர்களுக்கு உதவும் ஓலேயின் கனவு, சுமார் 575,000 முதியவர்களை 2.5 லட்சம் சவாரிகளால் ஆசீர்வதித்துள்ளது. எங்கே போகிறார்கள்? ஒரு நண்பரைப் பார்க்கவோ, ஐஸ்கிரீம் சாப்பிடவோ, மேலும் தென்றல் காற்றை அனுபவிக்கவுமே. இதின் பங்காளர்கள் தாங்கள் நன்றாக உறங்குவதாகவும், சாப்பிடுவதாகவும் மற்றும் தனிமையாக உணர்வதில்லை என்றும் கூறுகிறார்கள்.

இத்தகைய ஈவு ஏசாயா 58:10-11 இல் உள்ள தம்முடைய ஜனங்களுக்கான தேவனின் அழகான வார்த்தைகளை நடைமுறைப்படுத்துகிறது. "சிக்கலில் உள்ளவர்களுக்கு உதவுங்கள்" "அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப்போலாகும்" என்று அவர் அவர்களிடம் கூறினார். "கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்." என்று தேவன் வாக்களித்தார்

தேவன் அவர்களிடம் "உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க் கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்" (வ.12) என்றார். அவர் நம் மூலம் என்ன செய்ய முடியும்? அவர் நமக்கு உதவுகையில், பிறருக்கு உதவ நாமும் எப்போதும் தயாராக இருப்போம்.

இயேசு நமக்குள் வாசம்பண்ணுகிறார்

மேற்கு அமெரிக்காவிலுள்ள உள்ள எனது மாநிலத்தில் பனிப்புயல் வீசியதால், என் விதவை தாயார் புயலிலிருந்து சற்று தப்பிக்கொள்ள, என் குடும்பத்துடன் இருக்க ஒப்புக்கொண்டார். எனினும், பனிப்புயலுக்குப் பிறகு, அவர் வீட்டிற்குத் திரும்பவில்லை. அவருடைய வாழ்நாள் முழுவதும் எங்களுடன் வசிக்க, எங்களுடன் குடியேறினாள். அவரது வருகை எங்கள் குடும்பத்தை பல நல்ல மாற்றங்களைக் கொண்டுவந்தது. குடும்பத்தினர்களுக்கான ஞானமுள்ள ஆலோசனை, அறிவுரை மற்றும் முன்னோர்களின் கதைகள் போன்றவற்றை அவர் தினசரி பகிர்ந்துகொளண்டார். அவரும் என் கணவரும் ஒரே மாதிரியான நகைச்சுவை உணர்வையும் விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தையும் பகிர்ந்துகொண்டு சிறந்த நண்பர்களானார்கள். இனி ஒரு விருந்தினராக இல்லை, அவர் நிரந்தரமான மற்றும் முக்கிய குடும்பத்தினராக இருந்தார். தேவன் அவரை நித்திய வீட்டிற்கு அழைத்த பிறகும் அவா் கொண்டுவந்த மாற்றங்கள் எங்கள் இதயங்களில் இருக்கும்.

இந்த அனுபவம், இயேசுவைப் பற்றி யோவான், "நமக்குள்ளே வாசம்பண்ணினார்" (யோவான் 1:14) என்று வர்ணிப்பதை நினைவூட்டுகிறது. இது மிகவும் கவனிக்கப்படவேண்டிய விளக்கமாகும், ஏனெனில் அசல் கிரேக்கத்தில் வாசம் பண்ணினார் என்ற வார்த்தை "ஒரு கூடாரம் அமைத்தல்" என்று பொருள்படும். மற்றொரு மொழிபெயர்ப்பு கூறுகிறது, அவர் "நம்மிடையே தமது வசிப்பிடத்தை ஏற்படுத்தினார்" என்று.

விசுவாசத்தினால் நாமும் இயேசுவை நம்மோடு வசிப்பவராக நம் இதயத்தில் ஏற்கிறோம். பவுல் எழுதியுள்ளாா், "நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி" (எபேசியர் 3:16–17).

ஒரு சாதாரண விருந்தினராக அல்ல, இயேசு அவரைப் பின்பற்றும் அனைவருக்கும் அதிகாரமளிக்கும் நிரந்தர குடியிருப்பாளர். நாம் நம் இதயத்தின் கதவுகளை அகலத் திறந்து அவரை வரவேற்போம்.

தேவனின் திறந்த வாசல்கள்

ஒரு பெருநகர் அருகிலுள்ள எனது புதிய பள்ளியில், வழிகாட்டி ஆலோசகர் என்னை ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்தபின், மிகக் குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்கள் உள்ள ஆங்கில வகுப்பை எனக்கு கொடுத்தார்.  நான் எனது முந்தைய பள்ளியிலிருந்து சிறந்த தேர்ச்சி, சிறந்த மதிப்பெண்கள் மற்றும் எனது எழுத்துக்கான முதல்வரின் விருதுடன் வந்திருந்தேன். ஆனால் இந்தப் புதிய பள்ளியில் "சிறந்த" வகுப்பிற்கான கதவு எனக்குத் திறக்கப்படவில்லை. வழிகாட்டி ஆலோசகர் நான் பொருத்தமற்றவனோ அல்லது தயாராகவோ இல்லை என்று முடிவு செய்திருந்தார்.

இப்படிப்பட்ட சகஜமான பின்னடைவுகளை ஆதிதிருச்சபையான பிலதெல்பியா தன் அனுபவத்தில் பெற்றிருந்தது. சிறிய மற்றும் எளிமையான அந்த திருச்சபை இருந்த நகரம் சமீபத்திய ஆண்டுகளில் பூகம்பங்களால் பாதிக்கப்பட்டு பெரும் சேதத்தைச் சந்தித்திருந்தது. மேலும் சாத்தானின் எதிர்ப்பை சந்தித்தனர் (வெளிப்படுத்துதல் 3:9). புறக்கணிக்கப்பட்ட இந்த திருச்சபைக்கு உயிர்த்தெழுந்த இயேசு, "உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்ட படியினாலே" (வ.8) எனக் குறிப்பிட்டார். ஆகையால், "ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர்" (வ.7) அவர்களுக்கு "எவராலும் மூட முடியாத இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் " (வ.8) என்றார்.

நமது ஊழியத்திற்கும் இது பொருந்தும். சில கதவுகள் திறக்கப்படுவதே இல்லை. இருப்பினும்,  ஒரு வழிகாட்டி ஆலோசகர் கதவை அடைத்தாலும், தேவன் எனக்கு நிச்சயமாகவே கதவுகளைத் திறந்துள்ளார், அவருக்காக நான் எழுதுவதன் மூலம், உலகளாவிய உள்ளங்களைத் தொடும் வாய்ப்பை தந்தார். உங்களையும் மூடிய கதவுகள் தடுக்காது. இயேசு "நானே வாசல்" என்றார் (யோவான் 10:9). அவர் திறக்கும் கதவுகளுக்குள் நுழைந்து அவரைப் பின்பற்றுவோம்.

அன்புடன் அளிக்கப்பட்ட ஈவு

க்வென்டோலின் ஸ்டுல்கிஸ் தனது திருமண த்திற்கு, தான் அதிகமாக விரும்பிய ஆடையை அணிந்திருந்தார். பிறகு அவள் தான் அறியாத ஒரு நபருக்கு அதைக் கொடுத்துவிட்டாள். தூசிபடிய  ஒரு அலமாரியில் இருப்பதைவிட மேலான நோக்கம் ஆடைக்கு உண்டு என்று ஸ்டுல்கிஸ் நம்பினார். மற்ற மணப்பெண்களும் இதற்கு இசைந்தனர். தற்போது ஏராளமான பெண்கள் திருமண ஆடைகளை நன்கொடையாக வழங்கவும், பெற்றுக்கொள்ளவும் சமூக வலைத்தளத்தில் இணைந்துள்ளனர். ஒரு நன்கொடையாளர் "இந்த ஆடை ஒரு மனைகளிடமிருந்து வேறு ஒரு மணமகளுக்கென்று தொடர்ந்து கொடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும் என்று நம்புகிறேன்; மேலும் மேலும் இது பயன்படுத்தப்படுவதால் தேய்ந்து, கிழிந்து போய் அதன் வாழ்க்கையின் இறுதியில் சிதைந்து போகிறது" என்கிறார்..

தாராளமாகக் கொடுக்கும் குணம், உண்மையில் ஒரு கொண்டாட்ட உணர்வைத் தரும். எழுதப்பட்டதுபோல, "வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு. உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்." (நீதிமொழிகள் 11:24-25)

அப்போஸ்தலன் பவுல் புதிய ஏற்பாட்டில் இக்கொள்கையைப் போதித்தார். அவர் எபேசுவின் விசுவாசிகளிடம் விடைபெறுகையில், அவர்களை ஆசிர்வதித்தார் (அப்போஸ்தலர் 20:32) மற்றும் உதாரத்துவமாகக் கொடுப்பதின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு நினைவூட்டினார். பவுல் தனது நெறிமுறைகளை அவர்கள் பின்பற்றுவதற்கு ஒரு எடுத்துக்காட்டாகச் சுட்டிக்காட்டினார். "இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்." (வ. 35).

நம் வாழ்வில் உதாரத்துவமாய் கொடுத்தல் தேவனைப் பிரதிபலிக்கிறது. "அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். . . . (யோவான் 3:16). அவர் நம்மை வழிநடத்திட, அவருடைய மகிமையான முன்மாதிரியைப் பின்பற்றுவோம்.

பகிர்தலின் மூலம் பரிவு

ஒரு இளம் ஊழியர், யாரேனும் ஒருவரை ஆசீர்வதிக்க ஒவ்வொரு நாளும் தேவன் தன்னை பயன்படுத்தவேண்டும் என்று காலையிலே ஜெபிப்பாராம். அவர் எதிர்பார்க்கும் அந்த ஆச்சரியமான தருணங்கள் அவ்வப்போது அவருக்கு சம்பவிக்கும். ஒரு நாள் அவர் வேலைசெய்யும் அலுவலகத்தில் இருந்த சக ஊழியரிடம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அவர் இவரிடம் இயேசுவைக் குறித்த விசாரித்தார். இவரும் அவரிடம் வெகு சாதாரணமாக அவருடைய கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்தார். விவாதங்களோ, கோபங்களோ அவர்களுடைய பேச்சில் இல்லை. பரிசுத்த ஆவியானவருடைய நடத்துதலினால், அன்பான மற்றும் எளிமையான ஒரு சத்தியத்தைப் பகிரும் தருணமாய் அது இருந்தது என்று அந்த ஊழியர் சொன்னார். தேவனைக் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வம்கொண்ட இன்னொரு புதிய சிநேகிதர் அவருக்கு கிடைத்துவிட்டார். 

மற்றவர்களுக்கு இயேசுவைக் குறித்த சொல்லுவதற்கு பரிசுத்த ஆவியானவரை சார்ந்துகொள்ளுதல் அவசியம். இயேசு தன்னுடைய சீஷர்களிடம், “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” (அப்போஸ்தலர் 1:8) என்று கட்டளையிடுகிறார். 

“ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” (கலாத்தியர் 5:22-23). அந்த இளம் ஊழியர் ஆவியானவரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்ததுபோல, பேதுரு, “கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்” (1 பேதுரு 3:15) என்று சொல்லுகிறார். 

கிறிஸ்துவை விசுவாசிப்பதினிமித்தம் பாடுகளை அனுபவிக்க நேரிடும்வேளையிலும், நாம் ஆவியானவரால் நடத்தப்படுகிறோம் என்பதை நம்முடைய வார்த்தைகள் வெளிப்படுத்தும். பின்பு நம்முடைய கிரியைகள் மற்றவர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

சிறிய வழிகளில்

எல்சி புற்றுநோயால் தாக்கப்பட்டபோது, இயேசுவுடன் பரலோகத்தில் ஜீவிக்க செல்லுவதற்கு தயாராக இருந்தார். ஆனால் அவள் அந்த வியாதியிலிருந்து குணமடைந்தாள். தேவன் ஏன் தன் உயிரைக் காப்பாற்றினார் என்று அவளை யோசிக்க வைத்தது. “நான் என்ன நல்லது செய்ய முடியும்? என்னிடம் அதிக பணமோ திறமையோ இல்லை, என்னால் நடக்க முடியாது. நான் உங்களுக்கு எப்படி பயனுள்ளதாக இருக்க முடியும்?” என்று அவள் தேவனிடம் கேட்டாள். 

பின்னர் மற்றவர்களுக்கு சேவை செய்ய சிறிய, எளிய வழிகளைக் கண்டறிந்தார். அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் அவளுடைய வீட்டை சுத்தம் செய்கிறவர்களின் தேவையை அறிந்தாள். அவள் அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்தாள். அவ்வப்போது பணத்தைக் கொடுத்தாள். இந்த ரொக்கப் பரிசுகள் சிறியதாக இருந்தபோதிலும், அவை தொழிலாளர்களுக்கு உதவி செய்ய நீண்ட தூரம் சென்றன. அவள் அவ்வாறு செய்யும்போது, தேவன் அவளுக்கு கொடுப்பதை அவள் கண்டாள்: நண்பர்களும் உறவினர்களும் அவளுக்கு பரிசுகளையும் பணத்தையும் கொடுத்து மற்றவர்களுக்கு உதவிசெய்ய அவளைத் தூண்டினர்.

அவள் தனது கதையைப் பகிர்ந்து கொண்டபோது, 1 யோவான் 4:19இல் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்ற அழைப்பை எல்சி எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறார் என்பதை என்னால் சிந்திக்க முடியவில்லை: “அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.” மேலும் அப்போஸ்தலர் 20:35, “வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” என்று நினைப்பூட்டுகிறது. 

எல்சி கொடுத்தாள், ஏனென்றால் அவள் தேவனிடத்திலிருந்து பெற்றாள். அவள் கொடுத்ததைப் போலவே ஊக்கமும் பெற்றாள். ஆயினும்கூட, அன்பான, நன்றியுள்ள இதயம் மற்றும் தன்னிடம் இருப்பதைக் கொடுக்கத் தயாராக இருப்பதை விட அவளிடமிருந்து கொஞ்சம் அதிகமாகவே தேவைப்பட்டது. தேவன் கொடுக்கல்-வாங்கல் என்ற நல்லொழுக்க வட்டத்தில் அதிகமாய் அவளை பெருகச்செய்தார். அவர் நம்மை வழிநடத்தும் போது, கொடுத்து உதவ நன்றியுள்ள மற்றும் தாராள மனதைக் கொடுக்கும்படி அவரிடம் கேட்போம்!

 

இயேசு கறைகளை கழுவுகிறார்

வாஷிங் மெஷினில் என்னுடைய சட்டையை தேடி, “நீ என்ன வேடிக்கை காண்பிக்கிறாயா?” என்று உரக்க கத்தினேன். என் சட்டையை கண்டுபிடித்தேன். எனக்கு அதிர்ச்சியாயிருந்தது. 

என் வெள்ளை சட்டையில் மை புள்ளி இருந்தது. மையின் கறைகள் அங்கிருந்த அனைத்து ஆடைகளிலும் பரவியிருந்தது. நான் தெளிவாக என் சட்டை பைகளை சரிபார்க்கவில்லை. அதிலிருந்து கசிந்த ஒரு பேனா மை அனைத்து பாதிப்புகளையும் ஏற்படுத்தியிருந்தது. 

பாவத்தை விவரிக்க வேதம் பெரும்பாலும் கறை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. ஒரு கறை துணியில் ஊடுருவி, அவற்றை அழிக்கிறது. எரேமியா தீர்க்கதரிசி மூலம் தேவன் பாவத்தை விவரித்தார். அதன் கறை அவர்களின் தூய்மைக்கு அப்பாற்பட்டது என்பதை நினைவூட்டுகிறது: “நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும், உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (எரேமியா 2:22). 

அதிர்ஷ்டவசமாக, பாவம் நம்மை முழுவதுமாய் ஆளுகை செய்யப் போவதில்லை. ஏசாயா 1:18ல், பாவத்தின் கறையிலிருந்து நம்மைச் சுத்திகரிக்க முடியும் என்ற தேவனின் வாக்குறுதியை நாம் கேட்கிறோம்: “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.”

என் சட்டையில் இருந்து மை கறையை வெளியே எடுக்க முடியவில்லை. என் பாவத்தின் கறையை என்னால் அகற்றவும் முடியாது. அதிர்ஷ்டவசமாக, 1 யோவான் 1:9 வாக்களித்தபடி, தேவன் நம்மை கிறிஸ்துவில் சுத்திகரிக்கிறார்: “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.”

 

நிஜமாய் வாழுங்கள்

2000 ஆம் ஆண்டில் போதகர் எட் டாப்சனுக்கு ஏ.எல்.எஸ் இருப்பது கண்டறியப்பட்டபோது,ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்காக ஜெபித்தனர். குணமடைய நம்பிக்கையுடன் ஜெபித்தால் செய்தால், தேவன் உடனடியாக பதிலளிப்பார் என்று பலர் நம்பினர். எட்ஸின் தசைகள் சிறிது சிறிதாக சிதைவதற்கு காரணமான நோயுடன் பன்னிரண்டு ஆண்டுகள் போராடிய பிறகு (அவர் இறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு), தேவன் அவரை இன்னும் ஏன் குணப்படுத்தவில்லை என்று நினைக்கிறீர்கள் என்று ஒருவர் அவரிடம் கேட்டார். “நல்ல பதில் என்று ஒன்று இல்லை. அதினால் நான் கேட்கவில்லை” என்று அவர் பதிலளித்தார். அவரது மனைவி லோர்னா மேலும் கூறுகையில், “நீங்கள் எப்போதும் பதில்களைப் பெற வேண்டும் என்று வெறித்தனமாக இருந்தால், நீங்கள் உண்மையில் வாழ முடியாது" என்று சொன்னார்கள். 

எட் மற்றும் லோர்னாவின் வார்த்தைகளில் தேவனுக்கான கனத்தை உங்களால் உணர முடிகிறதா? அவருடைய ஞானம் தங்களுக்கு மேலானது என்பதை அவர்கள் அறிந்தார்கள். இருப்பினும் எட் ஒப்புக்கொண்டார், “நாளைய தினத்தைக் குறித்து கவலைப்படாமல் இருப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.” நோய் அதிகரிக்கும் இயலாமையை ஏற்படுத்தும் என்பதை அவர் புரிந்துகொண்டார். அடுத்த நாள் என்ன புதிய பிரச்சனை வரக்கூடும் என்று அவருக்குத் தெரியவில்லை.

நிகழ்காலத்தில் கவனம் செலுத்த உதவுவதற்காக, எட் இந்த வசனங்களை தனது காரில், குளியலறை கண்ணாடியில், மற்றும் அவரது படுக்கைக்கு அருகில் வைத்தார்: “நான் (கர்த்தர்) உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரெயர் 13:5). அவர் கவலைப்படத் தொடங்கும் போதெல்லாம், அவர் தனது எண்ணங்களை சத்தியத்தின் மீது மீண்டும் ஒருமுகப்படுத்த உதவும் வசனங்களை திரும்பத் திரும்பச் சொல்வார்.

அடுத்த நாள் எதைக் கொண்டு வரும் என்று யாருக்கும் தெரியாது. ஒருவேளை எட் பயிற்சி, நம் கவலைகளை நம்பிக்கையின் வாய்ப்புகளாக மாற்ற நமக்கு உதவிசெய்யக் கூடும்.