எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆர்தர் ஜாக்சன்கட்டுரைகள்

கிறிஸ்துவில் நம் போராயுதங்கள்

போதகா் பெய்லியின் புதிய நண்பர், அவரது வாழ்க்கையில் சந்தித்த துஷ்பிரயோகங்கள் மற்றும் அடிமைத்தனத்தின் கதையை அவருடன் பகிர்ந்து கொண்டார். அந்த இளைஞன் இயேசுவின் விசுவாசியாக இருந்தபோதிலும், சிறுவயதிலேயே பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் ஆபாசப் படங்களை பார்க்கும் பழக்கம் கொண்டவனாயிருந்ததினால், அவனுடைய வயதிற்கு மிஞ்சிய பிரச்சனைகளை அந்த பருவத்தில் அவன் சந்திக்க நேரிட்டது. அவனுடைய அந்த இக்கட்டான வாழ்க்கை தருணத்தில் அந்த போதகர் அவனுக்கு உதவிசெய்தார்.

கிறிஸ்துவின் விசுவாசிகளாக, நாம் கண்ணுக்கு தெரியாத தீய சக்திகளுடன் போரிடுகிறோம் (2 கொரிந்தியர் 10:3-6). ஆனால் நமது ஆவிக்குரிய யுத்தங்களை போராடுவதற்கு நமக்கு யுத்த ஆயுதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவை உலகத்தின் ஆயுதங்கள் அல்ல. மாறாக, அவைகள் “அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது” (வச. 4). அதற்கு என்ன பொருள்? “அரண்கள்” என்பது நன்கு கட்டப்பட்ட, பாதுகாப்பான இடங்கள். நமது தேவன் கொடுத்த ஆயுதங்களில், “நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயதங்களைத் தரித்திருந்து எதிரியை தாக்கவும் அவனிடம் இருந்து பாதுகாக்கிறதிலும்” (6:7) நாம் தெளிவுள்ளவர்களாயிருப்போம். எபேசியர் 6:13-18, வேதம், விசுவாசம், இரட்சிப்பு, ஜெபம் மற்றும் பிற விசுவாசிகளின் ஆதரவு உட்பட நம்மைப் பாதுகாக்க உதவும் காரியங்களின் பட்டியலை விரிவுபடுத்துகிறது. நம்மை விட பெரிய மற்றும் வலிமையான சக்திகளை எதிர்கொள்ளும்போது, இந்த ஆவிக்குரிய ஆயுதங்களை கையகப்படுத்துவது, நிற்பதற்கும் தடுமாறுவதற்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்தும். தனியாகச் சமாளிக்க முடியாத அளவுக்குப் பெரிய சக்திகளுடன் போராடுபவர்களுக்கு உதவ தேவன் ஆலோசகர்களையும், பல நிபுணர்களையும் பயன்படுத்துகிறார். நல்ல செய்தி என்னவென்றால், இயேசுவின் மூலமாக நாம் போராடும் போது, நாம் முடங்கிப்போக அவசியமில்லை. தேவனுடைய சர்வாயுத வர்க்கம் நம்மிடத்தில் இருக்கிறது! 

 

என்னை பயன்படுத்தும்

ஒருமுறை ஜேம்ஸ் மோரிஸ் என்ற தேவமனிதர் “கல்வி அறிவில்லாத ஆனால் ஆவிக்குரிய உற்சாக இருதயமுடைய சாதாரண மனிதர்” என்று விவரிக்கப்பட்டார். ஆனால், ஆண்டவர்அவரைப் பயன்படுத்தினதால் அவர் அகஸ்டஸ் டாப்லேடியை இயேசு கிறிஸ்துவுக்குள் வழி நடத்தினார். 18ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அவரே, புகழ்பெற்ற காலம்காலமாக பாடப்படும் "பிளவுண்ட மலையே" என்ற பாட்டின் ஆசிரியரான டாப்லேடி ஆவார். மேரரிஸ் பிரசங்கிக்கும்போது அகஸ்டஸ் டாப்லேடி தான் பெற்ற அனுபவத்தை இவ்வாறு விவரிக்கிறார்: “தேவனுடைய மக்களுடன் ஒரு சேமிப்பு கொட்டிலில் கூடியிருந்தபோது, தனது பெயரையே சரியாக எழுத தெரியாத ஒருவரின் ஊழியம் வாயிலாக தேவனுடைய பிள்ளையாக நான் மாற்றப்பட்டேன் என்பது மிக வியப்பானது. இது நிச்சயமாக ஆண்டவரின் செயல், அது அற்புதமானது.”

மெய்யாகவே, தேவன் வியப்பூட்டும் காரியங்களை எதிர்பாராத இடங்களிலும், நாம் “தகுதி இல்லாத” அல்லது எளியவர்கள் என எண்ணும் நபர்களாலும் நிறைவேற்றுகிறார். 1 கொரிந்தியர் 1-ல், பவுல் இயேசுவை பின்பற்றும் மக்கள், உலகத்தாரின் பார்வையில் எவ்வளவு அற்பமாய் எண்ணப்பட்டார்கள் என்பதை நினைவூட்டுகிறார்: "எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை ” (வ.26) என குறிப்பிட்டுள்ளார். ஆனால் கொரிந்திய விசுவாசிகள் மிக சாதாரணமாக இருந்தாலும், தேவனின் கிருபையினால் யாதொருவரத்திலும் குறைவில்லாதவர்களாய் மற்றும் பயனுள்ள பாத்திரங்காளக இருந்தார்கள் (வ.7). உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப் பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.(வ.27-29)“தகுதியற்றவர்களாக ”எண்ணுகிறீர்களா? கவலைப்பட வேண்டாம். இயேசு உங்களுடன் இருந்தால், மற்றும் அவரால் பயன்படவேண்டும் என்று விரும்பினால், அதுவே போதுமானது. அப்படியானால் உங்கள் இதயத்தில் நீங்கள் ஏறெடுக்க வேண்டிய ஜெபம் : “ஆண்டவரே, என்னைப் பயன்படுத்தும்! என்பதாகும். 

 

சங்கடங்களும் ஆழமான விசுவாசமும்

சனிக்கிழமை காலை வேதவகுப்பின் போது, ஒரு அப்பா தனது அன்பான , திசைமாறிய மகள் ஊருக்குத் திரும்பியதால் பதற்றமடைந்தார். அவளுடைய நடத்தை காரணமாக, வீட்டில் அவளுடன் சங்கடத்துடனே இருந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லை, நீண்ட கால நோய் மற்றும் முதுமையின் தாக்கம் அதிகம் வாட்டத் துவங்கின. பல மருத்துவர்களிடம் பல முறை சென்றது குறைந்த பலனையே அளித்தது. அவள் மனம் தளர்ந்தாள். தேவனின் நடத்துதலின்படி, அன்று படித்த வேதபகுதி மாற்கு - 5 அவா்களுக்கு நம்பிக்கையும், மகிழ்ச்சியும் அளித்தது.

மாற்கு 5:23 இல் வியாதிப்பட்டிருந்த பிள்ளையின் தகப்பனான யவீரு, “என் குமாரத்தி மரண அவஸ்தைப்படுகிறாள்” என்று தத்தளித்தான். அச்சிறுமியைப் பார்க்கச் செல்லும் வழியில், பேரெழுதப்படாத ஒரு பெண்ணின் நீண்டகால உடல்நலக் குறையை இயேசு குணப்படுத்தினார். “மகளே உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” (வ.34) என்றார். யவீருவும் அந்தப் பெண்ணும், இயேசுவின் மீதான விசுவாசத்தால் உந்தப்பட்டு அவரைத் தேடினர், அவர்கள் ஏமாற்றமடையவில்லை. ஆனால் இரண்டு சம்பவங்களிலும், இயேசுவைச் சந்திக்கும் வரை, அவ்விருவரின் காரியங்களும் இன்னும் மோசமாகிக்கொண்டே இருந்தது.

வாழ்க்கையின் சங்கடங்களுக்குப் பாகுபாடு கிடையாது. ஆண்,பெண், வயது, இனம் ,வர்க்கம் என்ற எந்த பேதமும் இன்றி ,நாம் அனைவரும் குழப்புகிற, விடை தேடி அலைகிற சூழல்களை எதிர்கொள்கிறோம். பிரச்சனைகள் நம்மை இயேசுவிடமிருந்து பிரிக்குப்படிக்கு அனுமதிப்பதற்கு மாறாக, நாம் அவரைத் தொடும்போது அதை உணருகிறவரும் (வ. 30) நம்மை குணப்படுத்துகிறவருமாகிய அவரில் நமது விசுவாசத்தை வைக்கும்படி உந்தப்படுவதற்கு முயல்வோம். 

 

 விசுவாசத்தின் ஜெயம்

நான்கு வயது சிறுவனான கால்வினின் வழக்கமான சரீர ஆரோக்கிய சோதனையில் அவனது உடலில் சில எதிர்பாராத புள்ளிகள் கண்டறியப்பட்டன. அவனுக்கு சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, ஊசி போடப்பட்டு, அந்த இடத்தை கட்டுகட்டி அனுப்பினர். அந்த கட்டை அகற்றும் நாளில், அவனுடைய தந்தை கட்டை பிரிக்க முயன்றபோது, கால்வின் பயத்துடன் சிணுங்கினான். மகனுக்கு ஆறுதல் கூற முயன்று, அவனது தந்தை, “கால்வின், உன்னைக் காயப்படுத்தும் எதையும் நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று உனக்குத் தெரியும்!” என்று சொன்னார். கட்டை அகற்றும் பயத்தைவிட, தன் மகன் தன்னை நம்பவேண்டும் என்று அவனது தந்தை விரும்பினார்.

அசௌகரியத்தினால் நான்கு வயது குழந்தைகள் மட்டும் பயம் அடைவதில்லை. அறுவைசிகிச்சைகள், அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிதல், மன அல்லது உளவியல் சவால்கள் மற்றும் பலவிதமான பயங்கள், பெருமூச்சுகள், அழுகைகள் மற்றும் கூக்குரல்களை சந்திக்கும் அனைத்து தரப்பினர்களும் பயத்தினால் சூழப்படுகின்றனர்.

தாவீது, தன்மீது பொறாமைகொண்டு தன்னை கொல்ல வகைதேடிய சவுலிடமிருந்து தப்பித்து பெலிஸ்திய தேசத்திற்கு ஓடியபோதிலும், அங்கு அவர் கண்டுபிடிக்கப்பட்ட தருணம், வாழ்க்கையின் பயம் மிகுந்த ஓர் தருணமாயிருந்துள்ளது. அவர் அடையாளம் காணப்பட்டபோது, அவருக்கு என்ன நேரிடும் என்று கவலைப்பட்டார். (1 சாமுவேல் 21:10-11): “தாவீது... காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டான்.” இந்த சங்கடமான சூழ்நிலையைப் பற்றி யோசித்து, தாவீது “நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன் . . . தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்” (சங்கீதம் 56:3-4) என்று எழுதுகிறார்.

வாழ்க்கையின் அசௌகரியங்கள் நமக்கு அச்சத்தைத் தூண்டும்போது நாம் என்ன செய்வோம்? நம்முடைய பரலோகத் தகப்பன்மீது நம்பிக்கை வைக்கலாம். ஆர்தர் ஜாக்சன்

 

தேவனே என் துணையாளர்

என் நண்பர் ராலே தனது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை நோக்கி விரைகிறார்! அவரை நான் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எனக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஆதாராமாக அவர் இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஓர் புத்தகம் எழுதும் பணியை நிறைவுசெய்துவிட்டு, வேறொரு வேலையை செய்வதாக என்னிடம் கூறினார். அவற்றைக் கேட்க எனக்கு ஆர்வமாயிருந்தது ஆனால் ஆச்சரியப்படவில்லை.

தனது எண்பத்தைந்து வயதில், வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள காலேப் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை. தேவன் இஸ்ரவேலுக்கு வாக்களித்த கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்காக பல சகாப்தங்களாக வனாந்தர வாழ்க்கை மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், தேவபக்தியும் விசுவாசமும் அவரை தாங்கியது. அவர், “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:11) என்று உரைக்கிறார். அவர் எந்த வழிகளில் ஜெயங்கொள்வார்? “கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன்” (வச. 12) என்று காலேப் பதிலளிக்கிறார்.

வயது, வாழ்க்கையின் நிலை அல்லது சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனை முழுமனதோடு பற்றிகொள்ளும் யாவருக்கும் தேவன் உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். நமக்கு உதவும் நம் இரட்சகராகிய இயேசுவில், தேவன் வெளிப்பட்டார். சுவிசேஷங்கள், கிறிஸ்துவிடத்திலிருந்து தேவன்மீது விசுவாசம் வைப்பதை நமக்கு போதிக்கிறது. உதவிக்காக தேவனை அண்டிய யாவருக்கும் தேவன் தன் அக்கறையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எபிரெய நிருப ஆசிரியர் “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபிரெயர் 13:6) என்று அறிக்கையிடுகிறார். இளைஞரோ அல்லது வயதானவரோ, பலவீனமானவரோ அல்லது பலவானோ, கட்டுண்டவரோ அல்லது சுதந்திரவாளியோ, வேகமாக ஓடுகிறவரோ அல்லது முடவனோ, யாராக இருந்தாலும் இன்று அவருடைய உதவியைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுப்பது எது? 

தேர்ந்தெடுப்பு அவசியம்

பாஸ்டர் டாமியனின் தினசரி அலுவல் அட்டவணையில், வெவ்வேறு வாழ்க்கைப் பாதைகளைத் தெரிந்தெடுத்து மரணத்தை நெருங்கும் இரண்டு நபர்களை சந்திக்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்த்து. ஓர் மருத்துவமனையில் தன் குடும்பத்தாரால் விரும்பப்படும் ஓர் பெண் இருந்தாள். அவளது தன்னலமற்ற பொதுச்சேவை பலரின் அபிமானத்தை பெற்றதால் மற்ற விசுவாசிகள் அவளது அறையை நிரப்பி, ஆராதனை, பாடல், ஜெபம் என்று செய்தனர். மற்றொரு மருத்துவமனையில், பாஸ்டர் டாமியனின் தேவாலயத்தைச் சேர்ந்த இன்னொரு உறுப்பினரின் உறவினரும் இறக்கும் தருவாயில் இருந்தார். அவரது கடினமான இதயம் கடினமான வாழ்க்கைக்கு வழிவகுத்தது. மேலும் அவரது மோசமான முடிவுகள் மற்றும் தவறான செயல்களின் பின்னணியில் அவரது குடும்பம் வாழ்ந்து வந்தது. இந்த இரண்டு வெவ்வேறான சூழ்நிலைகள், அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் என்பதைப் பிரதிபலித்தது.

வாழ்க்கையில் தாங்கள் எங்கு செல்கிறோம் என்பதைக் கருத்தில்கொள்ளத் தவறியவர்கள் பெரும்பாலும் சங்கடமான, விரும்பத்தகாத, தனிமையான இடங்களில் சிக்கிக்கொள்கிறார்கள். நீதிமொழிகள் 14:12, “மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்” என்று கூறுகிறது. இளைஞர்கள் அல்லது வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது நலமுடையவர்கள், செல்வந்தர்கள் அல்லது வறியவர்கள் என யாராக இருந்தாலும், தங்களுடைய வாழ்க்கைப் பாதையை சரிசெய்வதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. அது நம்மை எங்கே கொண்டு செல்லும்? அது தேவனை கனப்படுத்துமா? அது மற்றவர்களுக்கு உதவக்கூடியதா அல்லது பாதிக்கக்கூடியதா? இயேசுவை விசுவாசிப்பவருக்கு இது சிறந்த பாதையா?

தேர்ந்தெடுப்புகள் மிகவும் முக்கியம். பரலோகத்தின் தேவன் அவருடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக, “நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28)என்று வாக்குப்பண்ணுகிறார். 

 

தேவனுக்கென்று நன்மை செய்தல்

அவர் வழக்கமாக தன்னுடன் பணத்தை எடுத்துச் செல்லவில்லை என்றாலும், வீட்டை விட்டு வெளியேறும் முன் கொஞ்சம் பணத்தை (சுமார் ₹400) பாக்கெட்டில் வைக்க தேவன் ஏவுவதை பேட்ரிக் உணர்ந்தார். அவர் பணிபுரிந்த பள்ளியில் மதிய உணவு நேரத்தில், ஒரு அவசரத் தேவையை பூர்த்திசெய்ய தேவன் அவரை எவ்வாறு ஆயத்தப்படுத்தினார் என்பதை அவர் புரிந்துகொண்டார். மதிய உணவு அறையின் சலசலப்புக்கு நடுவில், அவர் இந்த வார்த்தைகளைக் கேட்டார்: “ராணியின் [தேவையுள்ள ஒரு குழந்தைக்கு] கணக்கில் ₹400 போட வேண்டும், அப்போது அவள் வாரம் முழுவதும் மதிய உணவை சாப்பிடலாம் மற்றும் புத்தகங்கள் வாங்க முடியும்” ராணிக்கு உதவுவதற்காக பேட்ரிக் தனது பணத்தை கொடுத்தபோது அனுபவித்த உணர்வுகளை கற்பனை செய்து பாருங்கள்!

தீத்துவுக்கான நிருபத்தில், இயேசுவின் விசுவாசிகளுக்கு “நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல்” (3:5) என்று பவுல் நினைப்பூட்டினாலும், “நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி” (வ.8; பார்க்கவும் வ.14) சொன்னார். நம் வாழ்க்கை நேரம் இல்லாததாகவும், மிகவும் பளுவானதாகவும், பரபரப்பாகவும் இருக்கும். உங்கள் சொந்த நல்வாழ்வை கவனிப்பதே மிகப்பெரியதாக இருக்கும். ஆனாலும், இயேசுவை விசுவாசிக்கிறவர்களாக நாம் “நற்கிரியைகளுக்கு ஆயத்தமாக” இருக்க வேண்டும். நம்மிடம் இல்லாததையும் செய்ய முடியாததையும் நினைத்து விரக்தியடைவதற்குப் பதிலாக, தேவனின் நமக்கு உதவுவதற்கு ஏற்ப நம்மிடம் என்ன இருக்கிறது, என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்திப்போம். அவ்வாறு செய்வதன் மூலம், நாம் மற்றவர்களுக்கு அவர்களின் தேவையுள்ள நேரத்தில் உதவுகிறோம், மேலும் தேவன் மகிமைப்படுகிறார். “இவ்விதமாக மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத்தேயு 5:16). 

தேவனின் சீரமைப்பிற்கு கனிந்திருக்கிறது

நண்பரிடமிருந்து வந்த புகைப்படங்கள் பிரமிக்க வைக்கின்றன! அவரது மனைவிக்கு ஒரு ஆச்சரியமான பரிசை அவர் கொடுத்திருக்கிறார். அது ஒரு சீரமைக்கப்பட்ட சொகுசு 1965 போா்டு மஸ்தாங் காா் பரிசு. கவா்ச்சிகரமான, அடர் நீல வெளிப்புறம்; பிரகாசமான குரோம் விளிம்புகள்;, மறுஉருவாக்கம் செய்யப்பட்ட கருப்பு உட்புறம்;, மற்ற மேம்படுத்தல்களுடன் பொருந்தக்கூடிய மோட்டார் ஆகியவைகள் அதில் இடம்பெற்றிருந்தன. அதே வாகனத்தின் முந்தைய புகைப்படங்களும் இருந்தன. அதில் மந்தமான, தேய்ந்த, ஈர்க்க முடியாத மஞ்சள் பதிப்பு ஆகியவைகள் பழமையான காட்சியளித்தன. கற்பனை செய்வது கடினமாக இருந்தாலும், புதுப்பிக்கப்பட்ட வாகனம் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அது நிச்சயமாய் கண்ணைக் கவரக்கூடியதாய் இருந்தது. அதை புதிதாக்குவதற்கு நேரம், தேய்மான மாற்றம் போன்ற பிற காரணிகளும் அவசியப்பட்டது.

மீண்டு உருபெற்று வருவதற்கு காத்திருத்தல்! இதுவே சங்கீதம் 80இல் இடம்பெற்றிருக்கும் கர்த்தருடைய ஜனத்தின் வேண்டுதலாய் இருந்தது. அவர்கள் “சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்” (வச. 3; 7,9ஐ பார்க்கவும்) என்று தொடர்ந்து விண்ணப்பம்பண்ணினர். அவர்கள் எகிப்து தேசத்திலிருந்து மீட்கப்பட்டு செழிப்பான தேசத்தில் நாட்டப்பட்டாலும் (வச. 8-11), அவர்கள் தற்போது ஆசீர்வாதத்தை இழந்து காணப்பட்டனர். அவர்களின் முரட்டாட்டத்தினிமித்தம் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கரம் அவர்கள் மீது ஓங்கியிருந்தது (வச. 12-13). ஆகையினால் அவர்கள், “சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சச்செடியை விசாரித்தருளும்” (வச. 14) என்று கெஞ்சுகின்றனர்.

நீங்கள் எப்போதாவது மந்தமாக, தூரமாக அல்லது தேவனிடமிருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டதாக உணர்கிறீர்களா? மகிழ்ச்சியான ஆத்ம திருப்தி உங்களுக்கு இல்லையா? இயேசுவுடனும் அவருடைய சித்தத்துடனும் ஒத்துபோகாததால் அப்படி எண்ணுகிறீர்களா? மீண்டு வருவதற்கான நமது ஜெபங்களை தேவன் கேட்கிறார் (வச. 1). தேவனிடத்தில் அதை விண்ணப்பிப்பதற்கு உங்களுக்கு எது தடையாய் இருக்கிறது? 

- ஆர்தர் ஜாக்சன்

கலங்கிய ஆத்துமாக்கள், நேர்மையான ஜெபங்கள்

ஜனவரி 1957இல் அவரது வீட்டை குண்டுவெடிப்பு தாக்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்களுடைய வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு நிகழ்வு அவருடைய வாழ்நாள் முழுவதிலும் நினைவுகூரப்படுகிறது. அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்பைப் பெற்ற பிறகு, சிவில் உரிமைகள் இயக்கத்தில் இருந்து வெளியேறுவதைக் குறித்து கிங் யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் மனதிற்குள் ஜெபிக்க ஆரம்பித்தார். அவர், “நான் இங்கே சரியானது என்று நம்புவதற்கு ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறேன். ஆனால் இப்போது நான் பயப்படுகிறேன். என்னிடம் எதுவும் இல்லை. என்னால் தனியாக எதிர்கொள்ள முடியாத நிலைக்கு வந்துவிட்டேன்” என்று சொன்னார். அவரது ஜெபத்திற்கு பின்னர், அவருடைய இருதயத்தில் சமாதானத்தை உணர்ந்தவராய், “என்னுடைய பயம் ஒரேயடியாய் போய்விட்டது. என் நிச்சயமற்ற தன்மை மறைந்தது. நான் எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்தேன்” என்று சொன்னார்.  
யோவான் 12ல், “என் ஆத்துமா கலங்குகிறது” (வச. 27) என்று இயேசு ஒப்புக்கொண்டார். அவர் ஜெபத்தில் தன்னுடைய உள்ளான மனநிலைமையை வெளிப்படையாகக் காண்பித்தார். எனினும், தேவனை தன் ஜெபத்தின் மையமாக வைத்து ஜெபித்தார், “பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும்” (வச. 28). தேவனுடைய சித்தத்திற்கு தன்னை பூரணமாய் அர்ப்பணிப்பதே இயேசுவின் ஜெபத்திற்கு இருந்த முக்கியமான ஒரு அம்சம்.  
தேவனை மகிமைப்படுத்தலாமா வேண்டாமா என்ற எண்ணம் நம் இருதயத்தில் தோன்றும்போது,பயம் மற்றும் அசௌகரியத்தின் வேதனையை நாம் உணருவது இயல்பு. உறவுகள், பழக்கவழக்கங்கள் அல்லது பிற வடிவங்கள் (நல்லது அல்லது கெட்டது) பற்றி ஞானம் கடினமான முடிவுகளை எடுக்க தயங்குகிறது. நாம் எதை எதிர்கொண்டாலும், தைரியமாக தேவனிடம் ஜெபிக்கும்போது, நம்முடைய பயம் மற்றும் அசௌகரியத்தை வெல்வதற்கும், அவருக்கு மகிமையைக் கொண்டுவருவதற்கும் அவர் நம்மை பெலப்படுத்துவார்.  

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கொண்டாட்டத்திற்கு உகந்த செய்தி

இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக, மெதடிஸ்ட் பாடல் புத்தகத்தில் முதலாவதாக வைக்கப்பட்ட பாடல் சார்லஸ் வெஸ்லியால் எழுதப்பட்ட “ஓ ஆயிரம் நாவுகள் பாடுவதற்கு” என்ற பாடலே. “ஒருவருடைய மனந்திரும்புதலின் ஆண்டுவிழா” என்றே அப்பாடல் முதலாவது தலைப்பிடப்பட்டிருந்தது. இயேசுவின் மீதான அவரது நம்பிக்கையால் தூண்டப்பட்ட தீவிரமான புதுப்பித்தலை நினைவுகூரும் வகையில் இந்த பாடல் இயற்றப்பட்டது. மனந்திரும்பி கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு தேவனுடைய குணாதிசங்களின் மகிமையைப் பறைசாற்றும் பதினெட்டு வரிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

அத்தகைய நம்பிக்கை கொண்டாடத் தகுந்தது; பகிர்ந்து கொள்ளத்தக்கது. 2 தீமோத்தேயு 2ல், பவுல் தீமோத்தேயுவை தனது விசுவாசத்தில் உறுதியாக இருக்கவும், அதைப் பகிர்ந்து கொள்வதில் விடாமுயற்சியுடன் இருக்கவும் ஊக்குவிக்கிறார். மேலும், “இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன்” (வச. 8-9) என்று குறிப்பிடுகிறார். அவருடைய தெரிவுகளை இரண்டாவதாக யூகிப்பதற்குப் பதிலாக, பவுல் தீமோத்தேயுவுக்கு “தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்” (வச. 8) என்று சுவிசேஷத்தை நினைப்பூட்டுகிறார். அவர் ஆளுகை செய்வதற்காக அல்ல, ஊழியம் செய்வதற்காகவே வந்தார்; நாம் சமாதானமாய் இருக்கும்பொருட்டு உலகத்தின் பாவங்களுக்காய் அவர் மரித்தார். மரணம் ஜெயங்கொள்ளவில்லை. இயேசு கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார்.

மேலும் அது நம்பிக்கை கொண்டவர்களை விடுதலையை பெறுவது போல், அதின் செய்தியும் கட்டுப்பட்டு இருக்கவில்லை. சிறைச்சாலைகள், மருத்துவமனைகள், கல்லறைகள் போன்று மரணம் தன் ஆளுகையை செயல்படுத்தும் இடங்களில் கூட, “தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை” (வச. 9) என்று பவுல் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவில் அனைவருக்கும் நம்பிக்கை துளிர்விடுகிறது. அந்த செய்தி கொண்டாட்டத்திற்கு உகந்த செய்தி! 

 

ஜெபத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது

“நான் ஐம்பது ஆண்டுகளாக உங்களுக்காக ஜெபம் செய்கிறேன்,” என்று வயதான பெண் ஒருவர் கூறினார். என் நண்பன் லூ அவருடைய கண்களை ஆழ்ந்த நன்றியுடன் பார்த்தான். அவன் ஒரு இளைஞனாய் தனது தந்தை வளர்ந்த பல்கேரிய கிராமத்திற்குச் சென்றிருந்தான். இயேசுவின் விசுவாசியான அந்தப் பெண், அவருடைய தாத்தா பாட்டியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்தார். ஒரு கண்டத்திற்கு அப்பால் தொலைவில் லூவின் பிறப்பைக் கேள்விப்பட்ட உடனேயே அவள் லூவுக்காக ஜெபிக்க ஆரம்பித்தாள். இப்போது, அரை நூற்றாண்டுக்குப் பிறகு, அவர் ஒரு வணிகப் பயணமாக கிராமத்திற்குச் சென்றிருந்தான். அங்கு அவன் தனது நம்பிக்கையைப் பற்றி ஒரு குழுவிடம் பேசினான். ஏறக்குறைய முப்பது வயது வரை லூ இயேசுவின் விசுவாசியாக மாறவில்லை. இந்த வயதான தாயார் அவனை அணுகியபோது, அவன் இரட்சிக்கப்படுவதற்கு அவரது தொடர்ச்சியான ஜெபங்கள் அவன் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி அவன் ஆச்சரியப்பட்டான்.

பரலோகத்தின் இந்தப் பக்கத்தில் நாம் ஏறெடுக்கும் ஜெபங்களின் முழு விளைவை நாம் ஒருபோதும் அறிய மாட்டோம். ஆனால் வேதம் நமக்கு இந்த அறிவுரையை அளிக்கிறது: “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்” (கொலோசெயர் 4:2). கொலோசே என்ற சிறிய பட்டணத்தில் உள்ள விசுவாசிகளுக்கு பவுல் இந்த வார்த்தைகளை எழுதியபோது, அவர் எங்கு சென்றாலும் தேவன் தனது செய்திக்காக வாசலை திறந்தருளும்படிக்கு (வச. 4) ஜெபிக்கும்படியாய் கேட்கிறார்.

சில நேரங்களில் நாம் நினைக்கலாம், ஜெபம் என்ற ஆவிக்குரிய வரம் என்னிடம் இல்லை. ஆனால் வேதாகமத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஆவிக்குரிய வரங்களிலும் ஜெபம் இடம்பெறவில்லை. ஒருவேளை இதற்குக் காரணம், தேவன் கிரியை நடப்பிப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் உண்மையாக ஜெபிக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். 

 

கிறிஸ்துவில் ஒன்றாக இருப்பது சிறந்தது

டாக்டர் டிஃப்பனி கோல்சன் தனது சிறிய அமெரிக்க நகரமான இல்லினாய்ஸில் இருக்கும் ஈஸ்ட் செயிண்ட் லூயிஸில் பல வழிகளில் குற்றச் செயல்களின் தாக்கத்தைக் கண்டார். இருப்பினும், 2023 ஆம் ஆண்டில், நகரம் கொலைகளில் 31 சதவிகிதம் வீழ்ச்சியையும், ஒட்டுமொத்த குற்றங்களில் 37 சதவிகித வீழ்ச்சியையும் பதிவு செய்துள்ளது. என்ன நடந்தது? ஒரு கூட்டு முயற்சி. நகரின் பொதுப் பாதுகாப்பு அமலாக்கக் குழுவானது, மாநில மற்றும் நகர காவல்துறை, நகரப் பள்ளி மாவட்டம் மற்றும் நம்பிக்கை அமைப்பு உட்பட அனைத்தும் குடிமக்களுக்கு ஆதரவாக இணைந்து செயல்பட ஆரம்பித்ததே அதற்கு காரணம்.

“இது ஒரு திருமணம் என்று நாங்கள் கூறுகிறோம்,” என்று டாக்டர் கோல்சன் கூறினார். நகர கூட்டாளிகளின் அனைத்து உறுப்பினர்களும் குடிமக்களுக்கு உதவ ஒன்றாக இணைந்தனர். அவர் வழிநடத்தும் பள்ளியின் ரேபரவுண்ட் வெல்னஸ் சென்டர், குற்றம் அல்லது விபத்துகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாக பள்ளி சமூக சேவகர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை உள்ளடக்கியது. மற்ற ஏஜென்சிகள் தங்கள் தோ்ச்சிப் பெற்ற உதவியை பகிர்ந்து கொள்கின்றன. தெருவில் உள்ளவர்களுடன் அதிகம் பேசவும், கேட்கவும் காவல்துறை உறுதியளிக்கிறது.

சங்கீதக்காரனாகிய தாவீது “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” (சங்கீதம் 133:1) என்கிறார். மேலும் ஒருமித்து வாசம்பண்ணுவது “எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது” (வச. 3) என்று ஒப்பிடுகிறார். தேவன் மீது ஒருங்கிணைக்கும் நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளும் மக்களை தாவீது குறிப்பிடுகிறார். கொள்கைகள் அல்லது அரசியலால் பிரிக்கப்பட்டாலும் நாம் ஒன்று தான். இது குழப்பமாய் தெரியலாம், ஆனால் ஆசீர்வாதமான ஒன்று. கிறிஸ்தவ அன்பு தேவைப்படும் நாம் வாழும் ஊர்களில், ஒருவருக்கொருவர் அன்பு காண்பிக்கவேண்டியது விசுவாசிகளின் அழகான இலக்காய் அமைந்திருக்கிறது.