எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆர்தர் ஜாக்சன்கட்டுரைகள்

 விசுவாசத்தின் ஜெயம்

நான்கு வயது சிறுவனான கால்வினின் வழக்கமான சரீர ஆரோக்கிய சோதனையில் அவனது உடலில் சில எதிர்பாராத புள்ளிகள் கண்டறியப்பட்டன. அவனுக்கு சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, ஊசி போடப்பட்டு, அந்த இடத்தை கட்டுகட்டி அனுப்பினர். அந்த கட்டை அகற்றும் நாளில், அவனுடைய தந்தை கட்டை பிரிக்க முயன்றபோது, கால்வின் பயத்துடன் சிணுங்கினான். மகனுக்கு ஆறுதல் கூற முயன்று, அவனது தந்தை, “கால்வின், உன்னைக் காயப்படுத்தும் எதையும் நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று உனக்குத் தெரியும்!” என்று சொன்னார். கட்டை அகற்றும் பயத்தைவிட, தன் மகன் தன்னை நம்பவேண்டும் என்று அவனது தந்தை விரும்பினார்.

அசௌகரியத்தினால் நான்கு வயது குழந்தைகள் மட்டும் பயம் அடைவதில்லை. அறுவைசிகிச்சைகள், அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிதல், மன அல்லது உளவியல் சவால்கள் மற்றும் பலவிதமான பயங்கள், பெருமூச்சுகள், அழுகைகள் மற்றும் கூக்குரல்களை சந்திக்கும் அனைத்து தரப்பினர்களும் பயத்தினால் சூழப்படுகின்றனர்.

தாவீது, தன்மீது பொறாமைகொண்டு தன்னை கொல்ல வகைதேடிய சவுலிடமிருந்து தப்பித்து பெலிஸ்திய தேசத்திற்கு ஓடியபோதிலும், அங்கு அவர் கண்டுபிடிக்கப்பட்ட தருணம், வாழ்க்கையின் பயம் மிகுந்த ஓர் தருணமாயிருந்துள்ளது. அவர் அடையாளம் காணப்பட்டபோது, அவருக்கு என்ன நேரிடும் என்று கவலைப்பட்டார். (1 சாமுவேல் 21:10-11): “தாவீது... காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டான்.” இந்த சங்கடமான சூழ்நிலையைப் பற்றி யோசித்து, தாவீது “நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன் . . . தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்” (சங்கீதம் 56:3-4) என்று எழுதுகிறார்.

வாழ்க்கையின் அசௌகரியங்கள் நமக்கு அச்சத்தைத் தூண்டும்போது நாம் என்ன செய்வோம்? நம்முடைய பரலோகத் தகப்பன்மீது நம்பிக்கை வைக்கலாம். ஆர்தர் ஜாக்சன்

 

தேவனே என் துணையாளர்

என் நண்பர் ராலே தனது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை நோக்கி விரைகிறார்! அவரை நான் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எனக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஆதாராமாக அவர் இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஓர் புத்தகம் எழுதும் பணியை நிறைவுசெய்துவிட்டு, வேறொரு வேலையை செய்வதாக என்னிடம் கூறினார். அவற்றைக் கேட்க எனக்கு ஆர்வமாயிருந்தது ஆனால் ஆச்சரியப்படவில்லை.

தனது எண்பத்தைந்து வயதில், வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள காலேப் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை. தேவன் இஸ்ரவேலுக்கு வாக்களித்த கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்காக பல சகாப்தங்களாக வனாந்தர வாழ்க்கை மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், தேவபக்தியும் விசுவாசமும் அவரை தாங்கியது. அவர், “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:11) என்று உரைக்கிறார். அவர் எந்த வழிகளில் ஜெயங்கொள்வார்? “கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன்” (வச. 12) என்று காலேப் பதிலளிக்கிறார்.

வயது, வாழ்க்கையின் நிலை அல்லது சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனை முழுமனதோடு பற்றிகொள்ளும் யாவருக்கும் தேவன் உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். நமக்கு உதவும் நம் இரட்சகராகிய இயேசுவில், தேவன் வெளிப்பட்டார். சுவிசேஷங்கள், கிறிஸ்துவிடத்திலிருந்து தேவன்மீது விசுவாசம் வைப்பதை நமக்கு போதிக்கிறது. உதவிக்காக தேவனை அண்டிய யாவருக்கும் தேவன் தன் அக்கறையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எபிரெய நிருப ஆசிரியர் “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபிரெயர் 13:6) என்று அறிக்கையிடுகிறார். இளைஞரோ அல்லது வயதானவரோ, பலவீனமானவரோ அல்லது பலவானோ, கட்டுண்டவரோ அல்லது சுதந்திரவாளியோ, வேகமாக ஓடுகிறவரோ அல்லது முடவனோ, யாராக இருந்தாலும் இன்று அவருடைய உதவியைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுப்பது எது? 

தேர்ந்தெடுப்பு அவசியம்

பாஸ்டர் டாமியனின் தினசரி அலுவல் அட்டவணையில், வெவ்வேறு வாழ்க்கைப் பாதைகளைத் தெரிந்தெடுத்து மரணத்தை நெருங்கும் இரண்டு நபர்களை சந்திக்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்த்து. ஓர் மருத்துவமனையில் தன் குடும்பத்தாரால் விரும்பப்படும் ஓர் பெண் இருந்தாள். அவளது தன்னலமற்ற பொதுச்சேவை பலரின் அபிமானத்தை பெற்றதால் மற்ற விசுவாசிகள் அவளது அறையை நிரப்பி, ஆராதனை, பாடல், ஜெபம் என்று செய்தனர். மற்றொரு மருத்துவமனையில், பாஸ்டர் டாமியனின் தேவாலயத்தைச் சேர்ந்த இன்னொரு உறுப்பினரின் உறவினரும் இறக்கும் தருவாயில் இருந்தார். அவரது கடினமான இதயம் கடினமான வாழ்க்கைக்கு வழிவகுத்தது. மேலும் அவரது மோசமான முடிவுகள் மற்றும் தவறான செயல்களின் பின்னணியில் அவரது குடும்பம் வாழ்ந்து வந்தது. இந்த இரண்டு வெவ்வேறான சூழ்நிலைகள், அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் என்பதைப் பிரதிபலித்தது.

வாழ்க்கையில் தாங்கள் எங்கு செல்கிறோம் என்பதைக் கருத்தில்கொள்ளத் தவறியவர்கள் பெரும்பாலும் சங்கடமான, விரும்பத்தகாத, தனிமையான இடங்களில் சிக்கிக்கொள்கிறார்கள். நீதிமொழிகள் 14:12, “மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்” என்று கூறுகிறது. இளைஞர்கள் அல்லது வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது நலமுடையவர்கள், செல்வந்தர்கள் அல்லது வறியவர்கள் என யாராக இருந்தாலும், தங்களுடைய வாழ்க்கைப் பாதையை சரிசெய்வதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. அது நம்மை எங்கே கொண்டு செல்லும்? அது தேவனை கனப்படுத்துமா? அது மற்றவர்களுக்கு உதவக்கூடியதா அல்லது பாதிக்கக்கூடியதா? இயேசுவை விசுவாசிப்பவருக்கு இது சிறந்த பாதையா?

தேர்ந்தெடுப்புகள் மிகவும் முக்கியம். பரலோகத்தின் தேவன் அவருடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக, “நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28)என்று வாக்குப்பண்ணுகிறார். 

 

தேவனுக்கென்று நன்மை செய்தல்

அவர் வழக்கமாக தன்னுடன் பணத்தை எடுத்துச் செல்லவில்லை என்றாலும், வீட்டை விட்டு வெளியேறும் முன் கொஞ்சம் பணத்தை (சுமார் ₹400) பாக்கெட்டில் வைக்க தேவன் ஏவுவதை பேட்ரிக் உணர்ந்தார். அவர் பணிபுரிந்த பள்ளியில் மதிய உணவு நேரத்தில், ஒரு அவசரத் தேவையை பூர்த்திசெய்ய தேவன் அவரை எவ்வாறு ஆயத்தப்படுத்தினார் என்பதை அவர் புரிந்துகொண்டார். மதிய உணவு அறையின் சலசலப்புக்கு நடுவில், அவர் இந்த வார்த்தைகளைக் கேட்டார்: “ராணியின் [தேவையுள்ள ஒரு குழந்தைக்கு] கணக்கில் ₹400 போட வேண்டும், அப்போது அவள் வாரம் முழுவதும் மதிய உணவை சாப்பிடலாம் மற்றும் புத்தகங்கள் வாங்க முடியும்” ராணிக்கு உதவுவதற்காக பேட்ரிக் தனது பணத்தை கொடுத்தபோது அனுபவித்த உணர்வுகளை கற்பனை செய்து பாருங்கள்!

தீத்துவுக்கான நிருபத்தில், இயேசுவின் விசுவாசிகளுக்கு “நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல்” (3:5) என்று பவுல் நினைப்பூட்டினாலும், “நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி” (வ.8; பார்க்கவும் வ.14) சொன்னார். நம் வாழ்க்கை நேரம் இல்லாததாகவும், மிகவும் பளுவானதாகவும், பரபரப்பாகவும் இருக்கும். உங்கள் சொந்த நல்வாழ்வை கவனிப்பதே மிகப்பெரியதாக இருக்கும். ஆனாலும், இயேசுவை விசுவாசிக்கிறவர்களாக நாம் “நற்கிரியைகளுக்கு ஆயத்தமாக” இருக்க வேண்டும். நம்மிடம் இல்லாததையும் செய்ய முடியாததையும் நினைத்து விரக்தியடைவதற்குப் பதிலாக, தேவனின் நமக்கு உதவுவதற்கு ஏற்ப நம்மிடம் என்ன இருக்கிறது, என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்திப்போம். அவ்வாறு செய்வதன் மூலம், நாம் மற்றவர்களுக்கு அவர்களின் தேவையுள்ள நேரத்தில் உதவுகிறோம், மேலும் தேவன் மகிமைப்படுகிறார். “இவ்விதமாக மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத்தேயு 5:16). 

தேவனின் சீரமைப்பிற்கு கனிந்திருக்கிறது

நண்பரிடமிருந்து வந்த புகைப்படங்கள் பிரமிக்க வைக்கின்றன! அவரது மனைவிக்கு ஒரு ஆச்சரியமான பரிசை அவர் கொடுத்திருக்கிறார். அது ஒரு சீரமைக்கப்பட்ட சொகுசு 1965 போா்டு மஸ்தாங் காா் பரிசு. கவா்ச்சிகரமான, அடர் நீல வெளிப்புறம்; பிரகாசமான குரோம் விளிம்புகள்;, மறுஉருவாக்கம் செய்யப்பட்ட கருப்பு உட்புறம்;, மற்ற மேம்படுத்தல்களுடன் பொருந்தக்கூடிய மோட்டார் ஆகியவைகள் அதில் இடம்பெற்றிருந்தன. அதே வாகனத்தின் முந்தைய புகைப்படங்களும் இருந்தன. அதில் மந்தமான, தேய்ந்த, ஈர்க்க முடியாத மஞ்சள் பதிப்பு ஆகியவைகள் பழமையான காட்சியளித்தன. கற்பனை செய்வது கடினமாக இருந்தாலும், புதுப்பிக்கப்பட்ட வாகனம் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அது நிச்சயமாய் கண்ணைக் கவரக்கூடியதாய் இருந்தது. அதை புதிதாக்குவதற்கு நேரம், தேய்மான மாற்றம் போன்ற பிற காரணிகளும் அவசியப்பட்டது.

மீண்டு உருபெற்று வருவதற்கு காத்திருத்தல்! இதுவே சங்கீதம் 80இல் இடம்பெற்றிருக்கும் கர்த்தருடைய ஜனத்தின் வேண்டுதலாய் இருந்தது. அவர்கள் “சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்” (வச. 3; 7,9ஐ பார்க்கவும்) என்று தொடர்ந்து விண்ணப்பம்பண்ணினர். அவர்கள் எகிப்து தேசத்திலிருந்து மீட்கப்பட்டு செழிப்பான தேசத்தில் நாட்டப்பட்டாலும் (வச. 8-11), அவர்கள் தற்போது ஆசீர்வாதத்தை இழந்து காணப்பட்டனர். அவர்களின் முரட்டாட்டத்தினிமித்தம் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கரம் அவர்கள் மீது ஓங்கியிருந்தது (வச. 12-13). ஆகையினால் அவர்கள், “சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சச்செடியை விசாரித்தருளும்” (வச. 14) என்று கெஞ்சுகின்றனர்.

நீங்கள் எப்போதாவது மந்தமாக, தூரமாக அல்லது தேவனிடமிருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டதாக உணர்கிறீர்களா? மகிழ்ச்சியான ஆத்ம திருப்தி உங்களுக்கு இல்லையா? இயேசுவுடனும் அவருடைய சித்தத்துடனும் ஒத்துபோகாததால் அப்படி எண்ணுகிறீர்களா? மீண்டு வருவதற்கான நமது ஜெபங்களை தேவன் கேட்கிறார் (வச. 1). தேவனிடத்தில் அதை விண்ணப்பிப்பதற்கு உங்களுக்கு எது தடையாய் இருக்கிறது? 

- ஆர்தர் ஜாக்சன்

கலங்கிய ஆத்துமாக்கள், நேர்மையான ஜெபங்கள்

ஜனவரி 1957இல் அவரது வீட்டை குண்டுவெடிப்பு தாக்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்களுடைய வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு நிகழ்வு அவருடைய வாழ்நாள் முழுவதிலும் நினைவுகூரப்படுகிறது. அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்பைப் பெற்ற பிறகு, சிவில் உரிமைகள் இயக்கத்தில் இருந்து வெளியேறுவதைக் குறித்து கிங் யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் மனதிற்குள் ஜெபிக்க ஆரம்பித்தார். அவர், “நான் இங்கே சரியானது என்று நம்புவதற்கு ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறேன். ஆனால் இப்போது நான் பயப்படுகிறேன். என்னிடம் எதுவும் இல்லை. என்னால் தனியாக எதிர்கொள்ள முடியாத நிலைக்கு வந்துவிட்டேன்” என்று சொன்னார். அவரது ஜெபத்திற்கு பின்னர், அவருடைய இருதயத்தில் சமாதானத்தை உணர்ந்தவராய், “என்னுடைய பயம் ஒரேயடியாய் போய்விட்டது. என் நிச்சயமற்ற தன்மை மறைந்தது. நான் எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்தேன்” என்று சொன்னார்.  
யோவான் 12ல், “என் ஆத்துமா கலங்குகிறது” (வச. 27) என்று இயேசு ஒப்புக்கொண்டார். அவர் ஜெபத்தில் தன்னுடைய உள்ளான மனநிலைமையை வெளிப்படையாகக் காண்பித்தார். எனினும், தேவனை தன் ஜெபத்தின் மையமாக வைத்து ஜெபித்தார், “பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும்” (வச. 28). தேவனுடைய சித்தத்திற்கு தன்னை பூரணமாய் அர்ப்பணிப்பதே இயேசுவின் ஜெபத்திற்கு இருந்த முக்கியமான ஒரு அம்சம்.  
தேவனை மகிமைப்படுத்தலாமா வேண்டாமா என்ற எண்ணம் நம் இருதயத்தில் தோன்றும்போது,பயம் மற்றும் அசௌகரியத்தின் வேதனையை நாம் உணருவது இயல்பு. உறவுகள், பழக்கவழக்கங்கள் அல்லது பிற வடிவங்கள் (நல்லது அல்லது கெட்டது) பற்றி ஞானம் கடினமான முடிவுகளை எடுக்க தயங்குகிறது. நாம் எதை எதிர்கொண்டாலும், தைரியமாக தேவனிடம் ஜெபிக்கும்போது, நம்முடைய பயம் மற்றும் அசௌகரியத்தை வெல்வதற்கும், அவருக்கு மகிமையைக் கொண்டுவருவதற்கும் அவர் நம்மை பெலப்படுத்துவார்.  

தேவனின் மகத்துவங்களை சொல்லுங்கள்

எங்கள் சபையின் சாட்சி நேரத்தில், ஜனங்கள் தங்கள் வாழ்க்கையில் தேவன் எவ்வாறு கிரியை செய்தார் என்பதை சாட்சியாய் பகிருவார்கள். ஆன்ட்டி அல்லது சகோதரி லாங்ஃபோர்ட் என்று எங்கள் சபைக் குடும்பத்தினரால் அறியப்பட்ட அவர், தேவனை மனதார துதிப்பதில் பெயர்பெற்றவர். அவர் தனது இரட்சிப்பின் சாட்சியை பகிர்ந்துகொண்டபோது, ஒரு அழகான ஊழியத்தை செய்வார் என்று எவரும் எதிர்பார்க்கலாம். ஆம்! தன்னுடைய ஜீவியத்தை கிருபையாய் மாற்றி தேவனுக்கு துதி செலுத்த அவருடைய இருதயம் துடித்தது.  
இதேபோல், 66 ஆம் சங்கீதத்தை எழுதிய சங்கீதக்காரனின் சாட்சியில், தேவன் தன்னுடைய ஜனங்களுக்கு செய்த நன்மைகளை எண்ணி அவருடைய இருதயம் பூரிப்படைகிறது. “தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்; அவர் மனுப்புத்திரரிடத்தில் நடப்பிங்குங் கிரியையில் பயங்கரமானவர்” (வச. 5). அற்புதமான விதத்தில் அவர்களை தேவன் நடத்திவந்தார் (வச. 6). பாதுகாத்தல் (வச. 9) மற்றும் உபத்திரவம் மற்றும் அனுபவங்கள் ஆகியவற்றின் பாதையில் கடந்து நன்மையான இடத்தை அவருடைய ஜனங்கள் அடைந்திருக்கின்றனர் (வச. 10-12). கிறிஸ்தவ விசுவாசிகளுடன் நமக்கு சில பொதுவான வாழ்க்கை அனுபவங்கள் இருப்பினும், ஒவ்வொருவருடைய வாழ்க்கைப் பயணத்திலும் பிரத்யேகமான அனுபவங்கள் அவரவர்க்கு கிடைக்கின்றன. தேவன் தம்மை உங்களுக்கு வெளிப்படுத்திக் காண்பித்த தருணங்கள் உங்கள் வாழ்க்கையில் உண்டா? உங்கள் வாழ்க்கையில் அவர் எவ்வாறு கிரியை செய்தார் என்பதைக் கேட்க வேண்டிய மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது மதிப்புக்குரியது. “தேவனுக்கு பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்” (வச. 16).  
 

அனைவருக்கும் ஒரே கதவு

எனது குழந்தைப் பருவத்தில் இருந்த உணவகத்தின் நெறிமுறைகள் 1950களின் பிற்பகுதியிலும் 1960களின் முற்பகுதியிலும் சமூக மற்றும் இன இயக்கவியலுக்கு இசைவாக இருந்தன.

சமையலறை உதவியாளர் மேரி, சமையல்காரர் மற்றும் என்னைப் போன்று பாத்திரங்களைக் கழுவுபவர்கள் எல்லாம் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் உணவுபரிமாறும் இடத்தில் இருப்பவர்கள் எல்லாம் வெள்ளையர்கள். கறுப்பின வாடிக்கையாளர்கள் உணவை ஆர்டர் செய்யலாம். ஆனால் அவர்கள் அதை பின் வாசலில் வந்து வாங்கிக்கொள்ளவேண்டும். இத்தகைய கொள்கைகள் அந்த சகாப்தத்தில் கறுப்பர்களின் சமத்துவமற்ற சிகிச்சையை வலுப்படுத்தியது. அந்த காலத்தைக் கடந்து நாம் வெகுதூரம் வந்துவிட்டாலும், தேவனின்; சாயலில் உருவாக்கப்பட்ட மக்களாக நாம் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம் என்பதில் இன்னும் வளர்ச்சிக்கு இடம் உள்ளது.

ரோமர் 10:8-13 போன்ற வேதப்பகுதிகள், தேவனுடைய குடும்பத்திற்கு அனைவருக்கும் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளதைக் காண்பிக்கிறது. அங்கே பின் கதவு இல்லை. சுத்திகரிப்பு மற்றும் மன்னிப்புக்காக இயேசுவின் மரணத்தை நம்புவதன் மூலம் அந்த வாசலின் வழியாய் எவரும் பிரவேசிக்கலாம். இந்த மறுரூப அனுபவத்திற்கு வேதம் கொடுக்கும் பெயர் “இரட்சிப்பு” (வச. 9,13). உங்கள் சமூகசூழ்நிலை அல்லது இனநிலை அல்லது மற்றவர்களின் நிலை ஆகியவை சமன்பாட்டிற்கு காரணியாக இல்லை. “அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்” (வச. 11-12). இயேசுவைக் குறித்த வேதத்தின் சாட்சியை நீங்கள் உங்கள் இருதயத்தில் நம்புகிறீர்களா? இந்த குடும்பத்திற்கு நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள்!

அதிகப்படியான தயவு

துரித உணவு ஹோட்டல் ஊழியர் கெவின் ஃபோர்டு இருபத்தேழு வருடங்களில் ஒரு மாற்றத்தையும் தவறவிடவில்லை. அவரது பல ஆண்டுகள் செய்த சேவையை நினைவுகூரும் வகையில் அவர் பெற்ற ஒரு எளிமையான பரிசுக்காக அவரது பணிவான நன்றியைக் காட்டும் வீடியோ வெளியான பிறகு, ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு தங்கள் பொருளாதாரத்தின் மூலம் அன்பை காண்பிக்க ஒன்று திரண்டனர். “இது ஒரு கனவு நனவாகும் தருணம்” என்று அவர் அதைக் குறித்து சொல்லுகிறார். ஒரே வாரத்தில் 2,50,000 டாலர்கள் நிதி திரட்டப்பட்டது.

சிறைபிடித்து கொண்டுபோகப்பட்ட யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனும் மிகவும் இரக்கமுள்ளவனாயிருந்தான். பாபிலோனிய ராஜாவின் கருணையால் அவர் விடுவிக்கப்படுவதற்கு முன்பு அவர் முப்பத்தேழு ஆண்டுகள் சிறையில் அடைபட்டு இருந்தார். “யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து வெளிப்படப்பண்ணி... அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய ஆசனத்தைத் தன்னோடே பாபிலோனில் இருந்த ராஜாக்களுடைய ஆசனங்களுக்கு மேலாகவைத்து” (எரேமியா 52:31-32) அவனை கனப்படுத்தினான். யோயாக்கீனுக்கு புதிய பதவியும், புதிய வஸ்திரமும், புதிய வீடும் கொடுக்கப்பட்டது. அவனுடைய புதிய வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.

இந்த கதையானது, கிறிஸ்துவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் விசுவாசிக்கிற கிறிஸ்தவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள முடியாத இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக்கொள்ளும்போது அவர்களின் ஆவிக்குரிய ஜீவியத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழக்கூடும் என்பதை சித்தரிக்கிறது. அவர்கள் மரண இருளிலிருந்து ஜீவனுக்கும் வெளிச்சத்துக்கும் கொண்டுவரப்படுவர். தேவனுடைய அதிகப்படியான இரக்கத்தினால் அவர்கள் தேவனுடைய குடும்பத்திற்கு வரவேற்கப்படுகிறார்கள்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் தலைசிறந்த படைப்பு

மூளை இயங்கும் முறையைப் புரிந்துகொள்வதில் நரம்பணுவியல் பெரும் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அதைப் புரிந்துகொள்வதற்கான ஆரம்பக் கட்டத்தில்தான் இன்னும் இருப்பதாக விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள். மூளையின் கட்டமைப்பு, அதன் செயல்பாட்டின் சில அம்சங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பதிலளிக்கும் பகுதிகள், நமது உணர்வுகளைச் செயல்படுத்துதல், இயக்கங்களை உருவாக்குதல் மற்றும் உணர்ச்சிகளைக் கொண்டிருக்கும் பகுதிகள் ஆகியவற்றை அவர்கள் புரிந்துள்ளார்கள். ஆனால் நடத்தை, கருத்து மற்றும் நினைவாற்றலுக்கான தொடர்புகள் அனைத்தும் , அவர்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. வியப்பூட்டும் வண்ணமாக , தேவனால் உருவாக்கப்பட்ட தலைசிறந்த படைப்பான மனிதனைப் பற்றி புரிந்து கொள்வதே கடினமாக இருக்கிறது.

மனித உடலின் அதிசயங்களை, உருவக நடையில், தாவீது கொண்டாடினார், “என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்” (சங்கீதம் 139:13) என்பது இயற்கைமுறை மீதிருக்கும் தேவனின் சர்வ ஆளுகைக்குச் சான்றாகும். அவர் , “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள்” (வச. 14) என்று எழுதினார். முன்னோர்கள் தாயின் வயிற்றில் ஒரு குழந்தையின் வளர்ச்சியைப் பெரிய மர்மமாகக் கருதினர் (பிரசங்கி 11:5 ஐப் பார்க்கவும்). மனித உடலின் வியக்கத்தக்கப் புதிர்களைப் பற்றிய குறைந்த அறிவே இருந்தாலும், தாவீது தேவனின் அற்புதமான கிரியை மற்றும் பிரசன்னத்தை பிரமிப்புடனும் ஆச்சரியத்துடனும் வியந்தார் (சங்கீதம் 139:17-18).

மனித உடலின் வியப்பான, அற்புதமான புதிர்கள், நமது மகாதேவனின் வல்லமை மற்றும் சர்வ ஆளுகையைப் பிரதிபலிக்கிறது. துதிப்பது , வியப்பது மற்றும் பிரமிப்பது மட்டுமே நம்மால் செய்யக்கூடியது.

 

மீட்டெடுக்கும் பயிற்சி

நீங்கள் எப்போதாவது ஒரு கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, அதை இடையில் நிறுத்திவிட்டு, அது எப்போது நிகழ்ந்தது அல்லது யார் என்று குழம்பி யோசித்திருக்கிறீர்களா? வயதாவதினால் நினைவாற்றல் மங்கிவிடும் என்று நாம் அடிக்கடி நம்புகிறோம். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் அந்த கருத்தை ஆதரிக்கவில்லை. உண்மையில், அவை நமது நினைவாற்றல் பிரச்சனையல்ல என்பதைக் குறிப்பிடுகின்றன. அந்த நினைவுகளை மீட்டெடுப்பது நமது திறமை என்று கருதுகின்றன. நினைவுகளை சில வழக்கமான ஒத்திகை இல்லாமல் அணுகுவது கடினமாகிவிடும்.

அந்த மீட்டெடுப்பு திறனை மேம்படுத்துவதற்கான வழிகளில் ஒன்று, வழக்கமான திட்டமிடப்பட்ட செயல்கள் அல்லது குறிப்பிட்ட நினைவகத்தை நினைவுபடுத்தும் அனுபவங்கள். நமது சிருஷ்டிக்கர்த்தர் இதை அறிந்திருந்தார். எனவே அவர் இஸ்ரவேல் புத்திரருக்கு வாரத்தில் ஒரு நாளை தேவனை ஆராதிக்கும் ஓய்வுநாளாக ஏற்படுத்தியிருந்தார். அத்தகைய ஓய்வினிமித்தம் நாம் மனப் பயிற்சிக்கான வாய்ப்பைப் பெறுகிறோம். “கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி(னார்)” (யாத்திராகமம் 20:11). இது நம்மால் உண்டானது அல்ல; தேவனுடைய திட்டம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.

நம் வாழ்க்கையின் அவசரத்தில், தேவன் நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் என்ன செய்திருக்கிறார் என்ற நினைவுகளில் சில நேரங்களில் நம் பிடியை நாம் இழக்க நேரிடுகிறது. நம் வாழ்க்கையை யார் உன்னிப்பாகக் கண்காணிக்கிறார்கள் என்பதையும், நாம் அதிகமாகவும் தனிமையாகவும் உணரும்போது அவர் நம்மோடு இருப்பதாக வாக்களித்ததை நாம் மறந்துவிடுகிறோம். நம்முடைய வழக்கமான வாழ்க்கைப் பயணத்திலிருந்து ஒரு நாளை ஓய்வுநாளாய் ஆசரிப்பதின் மூலம் நாம் தேவனையும் “அவர் செய்த சகல உபகாரங்களையும்” (சங்கீதம் 103:2) நினைவுகூர வலியுறுத்தப்படுகிறோம். 

 

செப்னாவின் கல்லறை

தமிழ் அரசியல்வாதியான கருணாநிதி, சென்னை மெரினா கடற்கரையில் தனது ஆசான் சி.என்.அண்ணாதுரையின் அருகில் அடக்கம் செய்யப்பட விரும்பினார். அவரது பகுத்தறிவு நம்பிக்கை காரணமாக, எந்த மதச் சடங்குகளும் செய்யப்படுவதை அவர் விரும்பவில்லை.

ஒரு பெரிய நினைவுச்சின்னம் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் உண்டு என்றாலும் அவரது நம்பிக்கையானது அவரை மரணம் என்ற யதார்த்தத்திலிருந்து விலக்கி விடவில்லை என்பதுதான் உண்மை. நாம் இறந்தாலும் வாழ்க்கை கடந்து செல்கிறது என்பதே கசப்பான உண்மை.

யூதாவின் வரலாற்றில் ஒரு இக்கட்டான நேரத்தில், “அரமனை விசாரிப்புக்காரனான” செப்னா, மரணத்திற்குப் பிறகு தனக்கான மரபை நிலைநாட்ட, தனக்கென ஒரு கல்லறையை ஏற்படுத்தினான். ஆனால் தேவன், அவனுடைய தீர்க்கதரிசி ஏசாயா மூலம், “உயர்ந்த ஸ்தலத்திலே தன் கல்லறையை வெட்டி, கன்மலையிலே தனக்கு வாசஸ்தலத்தைத் தோண்டுகிறவனைப்போல, நீ உனக்கு இங்கே கல்லறையை வெட்டும்படிக்கு உனக்கு இங்கே என்ன இருக்கிறது? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்?” (ஏசாயா 22:16) என்றார். மேலும் தீர்க்கதரிசி, “அவர் உன்னை உருண்டையைப்போல அகலமும் விசாலமுமான தேசத்திலே சுழற்றி எறிந்துவிடுவார்; அங்கே நீ சாவாய்” (வ.18) என்றார்.

செப்னா தவறாகப் புரிந்துகொண்டான். நாம் எங்கே புதைக்கப்பட்டோம் என்பதல்ல, நாம் யாரைச் சேவிக்கிறோம் என்பதே முக்கியம். இயேசுவைச் சேவிப்பவர்களுக்கு இந்த அளவிட முடியாத ஆறுதல் உண்டு: “கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள்.. பாக்கியவான்கள்” (வெளிப்படுத்தின விசேஷம் 14:13). நமது “மரணத்தை” ஒருபோதும் அலட்சியப்படுத்தாத தேவனை நாம் சேவிக்கிறோம். அவர் நமது வருகையை எதிர்பார்த்து நம்மை தமது வீட்டிற்கு வரவேற்கிறார்!