எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மோனிகா லா ரோஸ்கட்டுரைகள்

நன்றியுணர்வால் புதுப்பிக்கப்படல்

தனது மூளையில் புற்றுநோய் கட்டி இருப்பது அறியப்பட்டவுடன், அதை மேற்கொள்வதற்கான வழிமுறைகளில் அதிகமாக இருப்பது அதனை "எதிர்த்து போராடுவதேயென்று" கிறிஸ்டினா கோஸ்டா கவனித்தார். ஆனால் இந்த செயல்முறை விரைவில் சோர்வுறச்செய்வதையும் உணர்ந்தாள். அவள் "[தன்] சொந்த உடலுடன் ஒரு வருடத்திற்கு மேல் போராட விரும்பவில்லை." மாறாக, அவளைக் கவனித்துக் கொள்ளும் நிபுணர்களின் குழுவிற்கும், அவளுக்கு மிகவும் உதவியாக இருந்தவர்களுக்கும் தன் நன்றியுணர்வைக் காட்டுவது அதிக பலனளிப்பதை அறிந்தாள். எவ்வளவு கடினமான போராட்டமாக இருந்தாலும் நன்றியுணர்வு மனச்சோர்வை எதிர்க்க உதவுவதோடு, "நமது மூளையை மறுசீரமைப்பு பெறும்படி கட்டமைக்க உதவும்" என்பதை அவள் நேரடியாக அனுபவித்தாள்.

கோஸ்டாவின் வாழ்விலிருந்து நன்றியுணர்வைக் கடைப்பிடிப்பது என்பது, விசுவாசிகள் கடமைக்காகச் செய்வது மட்டுமல்ல என்பதை அறிந்தேன். நாம் நன்றி செலுத்தத் தேவன் தகுதியானவர் என்பது உண்மைதான் என்றாலும், அது நமக்கு மிகவும் நல்லது. நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து "என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே." (சங்கீதம் 103:2) என்று கூறும்போது, தேவனின் மகத்துவமுள்ள செயல்களை நாம் நினைக்கிறோம். அவைகள் அவர் தரும் பாவமன்னிப்பை நமக்கு உறுதிப்படுத்தி, நம் உள்ளத்திலும், உடலிலும் சுகத்தைத் தருகிறது, அவருடைய படைப்புகளான நாம் "அன்பையும் இரக்கத்தையும்" மற்றும் மட்டற்ற நன்மைகளையும் அனுபவிக்க வழி செய்கிறது (வ.3-5).

நாம் அனைத்து துன்பங்களிலும் பூரண சுகத்தை இவ்வாழ்நாளில் பெறாவிடினும், நன்றியுணர்வு நமது இருதயத்தைப் புதுப்பிக்கும், ஏனென்றால் நித்திய நித்திய காலமாய் தேவனின் கிருபையும், அன்பும் நம்முடன் இருக்கிறது (வ.17). 

துளித்துளியாய்

“எல்லாவற்றிலும்.. தேவனுக்கு சேவை செய்யும் மகிழ்ச்சிகரமான வழிகளையே நாம் தேடுகிறோம்" என்று பதினாறாம் நூற்றாண்டு விசுவாசி தெரேசா ஆஃப் அவிலா எழுதுகிறார். தேவனிடத்தில் முற்றிலுமாய் சரணடைவதை விட்டுவிட்டு, எளிமையான மகிழ்ச்சி தரக்கூடிய விதங்களில் தேவனிடத்தில் நாம் உறவுவைத்துக்கொள்ள விரும்பும் எண்ணங்களை அவர் கடுமையாக விமர்சிக்கிறார். நாம் மெதுவாக, தற்காலிகமாக, மற்றும் தயக்கத்துடன் நம் முழுமையோடு அவரை சார்ந்துகொள்ள முயற்சிக்கிறோம். ஆகையினால் தெரேசா, “நம்முடைய ஜீவியத்தை அவருக்காய் கொஞ்சம் கொஞ்சமாய் அர்ப்பணித்தாலும், அவரிடத்தில் நம்மை பூரணமாய் அர்ப்பணிக்கும் வரை அவர் கொடுக்கும் ஆசீர்வாதங்களை நாம் துளித்துளியாய் அனுபவிக்க பிரயாசப்படலாம்” என்று சொல்லுகிறார். 

மனிதர்களாகிய நம்மில் பலருக்கு நம்பிக்கை இயல்பாக வருவதில்லை. எனவே தேவனுடைய கிருபையையும் அன்பையும் நம்முடைய நம்பிக்கையை சார்ந்து அணுகினால், அது நமக்கு பிரச்சனையாகிவிடக்கூடும். 

ஆனால், 1 யோவான் 4-ல் நாம் வாசிக்கிறபடி, தேவன் நம் மீது அன்பு வைத்திருப்பதே பிரதானமானது (வச. 19). நாம் அவரை நேசிப்பதற்கு முன்பே அவர் நம்மை நேசித்தார். நமக்காக அவருடைய குமாரனை கொடுப்பதற்கும் அவர் ஆயத்தமாக இருந்தார். இந்த அன்பையே யோவான் ஆச்சரியமாகவும் நன்றியுடனும் குறிப்பிடுகிறார் (வச. 10).

படிப்படியாக, மெதுவாக, சிறிது சிறிதாக, தேவன் தம்முடைய அன்பைப் பெற நம் இதயங்களைக் குணப்படுத்துகிறார். துளித்துளியாக, அவருடைய கிருபை நம் பயங்களை அவரிடத்தில் சரணடையவைக்க உதவுகிறது (வச. 18). துளித்துளியாக, அவருடைய கிருபையும் அன்பும் நிறைந்த பொழிவை நாம் அனுபவிக்கும் வரை அவருடைய கிருபை நம் இதயங்களை அடைகிறது.

நல்லெண்ணத்தை உருவாக்குதல்

சிறந்த வணிக நடைமுறைகளைப் பற்றி நாம் சிந்திக்கும் போது, முதலில் நினைவுக்கு வருவது கருணை மற்றும் பெருந்தன்மை போன்ற குணங்கள் அல்ல. ஆனால் தொழில்முனைவோர் ஜேம்ஸ் ரீயின் கூற்றுப்படி, அவைகள் தான் முதலில் நினைவுக்கு வரவேண்டும் என்கிறார். நிதி அழிவின் விளிம்பில் உள்ள ஒரு நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ரீயின் அனுபவத்தில், அவர் “நல்லெண்ணம்” – “இரக்கம் காண்பிக்கும் குணம்” மற்றும் கொடுக்கும் மனப்பான்மை போன்றவைகளே அந்த நிறுவனத்தை விளிம்பு நிலையிலிருந்து மாற்றி வளர்ச்சியின் பாதையில் கொண்டுவந்தது என்கிறார். இந்த குணங்களை மையப்படுத்துவது மக்களுக்கு ஒருங்கிணைக்கவும், புதுமைப்படுத்தவும், சிக்கலைத் தீர்க்கவும் தேவையான நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்தது. ரீ சொல்லும்போது, “நல்லெண்ணம் என்பது ஒரு உண்மையான சொத்து. அது திரளாய் பெருகக்கூடிய சுபாவம் கொண்டது” என்கிறார்.

 

அன்றாட வாழ்க்கையிலும், மற்ற காரியங்களோடு ஒப்பிடும்போது, இரக்கம் போன்ற குணங்களை தெளிவற்ற மற்றும் அற்பமானதாக நினைப்பது இயல்பு. ஆனால் இத்தகைய குணங்கள் எல்லாவற்றிலும் மிக முக்கியமானவை என்று அப்போஸ்தலர் பவுல் நமக்கு கற்பிக்கிறார்.

புதிய விசுவாசிகளுக்கு பவுல் எழுதும்போது, கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் முதிர்ச்சி பெற்ற அங்கத்தினர்களாய் அவர்களை மறுரூபமடையச்செய்வதே ஆவியின் செயல்பாடு என்று குறிப்பிடுகிறார் (எபேசியர் 4:15). அதற்காக ஒவ்வொரு வார்த்தையும், கிரியையும் மற்றவர்களை எடுப்பித்து கட்டுகிற வகையில் இருந்தால் அது மதிப்பு மிக்கதாய் இருக்கும் (வச. 29). இரக்கம், தயவு, மற்றும் மன்னிப்பு ஆகியவைகளை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் முக்கியத்துவப்படுத்துவதின் மூலமே கிறிஸ்துவில் மறுரூபமாக்கும் அனுபவத்திற்குள் நாம் வரமுடியும் (வச. 32).

பரிசுத்த ஆவியானவர் நம்மை மற்ற கிறிஸ்தவர்களிடத்திற்கு வழிநடத்தும்போது, நாம் ஒருவரையொருவர் பார்த்து கற்றுக்கொள்ளும்போது நாம் வளர்ந்து முதிர்ச்சியடைகிறோம்.

இரக்கம்காட்டும் திறன்

பதினான்காம் நூற்றாண்டில் சியன்னாவைச் சேர்ந்த கேத்தரின் எழுதினார்: “உங்கள் காலில் முள் குத்தியிருக்கிறது. அதனால்தான் நீங்கள் இரவில் சில நேரங்களில் அழுகிறீர்கள்.” மேலும், “இந்த உலகில் சிலர் அதை வெளியே இழுக்க முடியும். அவர்கள் எடுக்கும் திறமை தேவனிடமிருந்து  கற்றுக்கொண்டது.” கேத்தரின் அந்த “திறமையை” வளர்ப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அதினிமித்தம் மற்றவர்களுடைய வேதனையை உணர்ந்து அவர்களுக்கு இரக்கம் காண்பிக்கிறவராய் மக்களால் இன்றும் நினைவுகூரப்படுகிறார். 

மென்மையும் திறமையும் தேவைப்படும் ஆழமாக பதிக்கப்பட்ட முள்ளாக அந்த வலியின் படம் என்னுள் நீடிக்கிறது. நாம் எவ்வளவு சிக்கலானவர்களாகவும் காயப்பட்டவர்களாகவும் இருக்கிறோம் என்பதையும், மற்றவர்கள் மீதும் நம் மீதும் உண்மையான இரக்கத்தை வளர்த்துக் கொள்ள ஆழமாக தோண்ட வேண்டியதன் அவசியத்தையும் ஏற்படுத்தும் வகையில் இது ஒரு தெளிவான நினைவூட்டலாகும்.

அல்லது, அப்போஸ்தலர் பவுல் விவரிக்கிறபடி, இயேசுவைப் போல மற்றவர்களை நேசிப்பதற்கு நல்ல எண்ணங்கள் மற்றும் நல்வாழ்த்துக்கள் தேவை என்பதை நமக்கு நினைவூட்டும் ஒரு படம்.  அதற்கு ஒருவர்மேலொருவர் பட்சமாயிருக்கவேண்டும் (ரோமர் 12:10). “நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த்தரித்திருங்கள்” (வச. 12). அதற்கு மகிழ்ச்சியாயிருக்கிறவர்களோடு மகிழ்ந்திருந்தால் மட்டும் போதாது; “அழுகிறவர்களுடனே அழுங்கள்” (வச. 15). அது நம் அனைவருக்கும் தேவைப்படுகிறது. 

உடைந்த இந்த உலகில், நாம் யாரும் காயமடையாமல் தப்பிக்க முடியாது. காயம் மற்றும் வடுக்கள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஆழமாகப் பதிந்துள்ளன. ஆனால் கிறிஸ்துவில் நாம் காணும் அன்பு இன்னும் ஆழமானது. இரக்கத்தின் தைலத்துடன் அந்த முட்களை வெளியே இழுக்கும் அளவுக்கு மென்மையான அன்பு, சிநேகிதனையும் எதிரியையும் அரவணைக்க தயாராக உள்ளது (வச. 14). 

தேவனுடைய செட்டைகளின் நிழலில்

எங்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் உள்ள குளத்தில் வாத்து குஞ்சுகளுடன் பல வாத்து குடும்பங்கள் உள்ளன. அந்த சிறிய குஞ்சுகள் மிகவும் மென்மையாகவும் அழகாகவும் இருக்கின்றன. நான் நடந்து செல்லும்போது அல்லது குளத்தைச் சுற்றி ஓடும்போது அவைகளைப் பார்க்காமல் இருக்கமுடியாது. ஆனால் நான் கண்ணில் படுவதைத் தவிர்க்கவும், வாத்துக்களுக்கு ஒரு பரந்த இடத்தைக் கொடுக்கவும் கற்றுக்கொண்டேன். இல்லையெனில், அதனுடைய பெற்றோர்கள் அதற்கு நான் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சி என்னை துரத்தும் அபாயம் நேரிடும். 

ஒரு பறவை தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் உருவகத்தை வைத்து தேவன் தன்னுடைய பிள்ளைகளை எவ்வளவு மென்மையாய் பாதுகாக்கிறார் என்று வேதம் அறிவிக்கிறது (சங்கீதம் 91:4). சங்கீதம் 61இல், இந்த வகையான தேவனுடைய பராமரிப்பை அனுபவிக்க முடியாமல் தாவீது திணருவதை நாம் பார்க்கக்கூடும். அவர் தேவனை “அடைக்கலம்” மற்றும் “பெலத்த துருகம்” (வச. 3) என்றும் விவரிக்கிறார். அவர் தற்போது “பூமியின் கடையாந்தரத்திலிருந்து” கூப்பிட்டு, “எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்” (வச. 2) என்று கெஞ்சுகிறார். அவர் மீண்டும் தேவனுடைய “செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன்” (வச. 4) என்று உறுதியாய் அறிவிக்கிறார். 

மேலும் தனது வலியையும், குணமடைவதற்கான ஏக்கத்தையும் தேவனிடம் கொண்டுவந்து, தாவீது தனக்கு தேவன் செவிசாய்த்ததை அறிந்து ஆறுதல் அடைந்தார் (வச. 5). தேவனுடைய உண்மைத்தன்மையின் காரணமாக, அவருடைய “நாமத்தை என்றைக்கும் கீர்த்தனம்பண்ணுவேன்” (வச. 8) என்பதை தாவீது நன்கு அறிந்திருந்தார். 

சங்கீதக்காரனைப் போலவே, நாமும் தேவனுடைய அன்பை விட்டு விலகி தொலைவில் இருப்பதை உணரும்போது, நம்முடைய வலியிலும் கூட, அவர் நம்முடன் இருக்கிறார், ஒரு தாய் பறவை தனது குட்டிகளைக் காப்பது போல் நம்மைப் பாதுகாத்து, பராமரித்து வருகிறார் என்பதை உறுதிப்படுத்துவதற்காக நாம் அவருடைய அன்பான கரங்களுக்குள் அடைக்கலம் புகலாம். 

மெதுவான கிருபை

“மெல்லமான ஆடை வடிவமைப்பு” பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த பிரபல இயக்கமானது, வேகமாகவும் மலிவாகவும் ஆடைகளை உற்பத்திசெய்யும் இயக்கத்திற்கு எதிரானது. இந்த வேகமான பாணியில் உருவாக்கப்படும் ஆடைகள் கடைவீதிகளுக்கு விற்பனைக்கு வந்த மாத்திரத்திலேயே, பழமையானதாக மாறிவிடுகிறது. அதிலும் சில பெரிய நிறுவனங்கள் அதிக அளவிலான ஆடைகளை அதே பாணியில் உற்பத்திசெய்து, அந்த வடிவமைப்பை பழமையானதாக மாற்றிவிடுகிறது. 

ஆனால் மெல்லமான ஆடை வடிவமைப்பு இயக்கமானது, பொறுமையாக மக்களை அணுகும்படிக்கு வலியுறுத்துகிறது. நவீன யுகத்திற்கேற்றாற்போல் உடனே நம்முடைய ஆடையை மாற்றிக்கொள்ளவேண்டிய நிர்பந்தத்திற்கு மத்தியில், அந்த இயக்கமானது நேர்த்தியாகவும் தரமாகவும், நீண்டகாலத்திற்கு உழைக்கக்கூடிய ஆடைகளை வடிவமைத்து அதை தேர்ந்தெடுக்க வலியுறுத்துகிறது. 

மெல்லமான இந்த ஆடை வடிவமைப்பு இயக்கத்தின் அழைப்பை ஏற்ற போது, வேகமான ஆடை வடிவமைப்பு இயக்கத்தின் நவீன ஆடையை தேர்ந்தெடுக்கும் பரபரப்பான எண்ணத்தைக் குறித்து நான் ஆச்சரியப்பட்டதுண்டு. கொலோசெயர் 3இல், கிறிஸ்துவில் மறுரூபமாக்கப்படும் அனுபவமானது துரிதமாய் நிகழும் காரியமல்ல என்பதை பவுல் வலியுறுத்துகிறார். இது வாழ்நாள் முழுவதும் மெல்லமாய் நிகழும் மறுரூப அனுபவமாகும். 

நவீன உலக ஆடைகளால் நாம் நம்மை அலங்கரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதைப் பார்க்கிலும், “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமை” (வச. 12) என்று நம்முடைய தாகத்தை மாற்றிக்கொள்ள பிரயாசப்படுவோம். கிறிஸ்து நம்முடைய இருதயத்தை மறுரூபமாக்கும் இந்த நித்திய பயணத்தில், நாம் பொறுமையைக் கற்றுக்கொள்ள பிரயாசப்படுவோம் (வச. 15).  

நான் ஒன்றுமில்லை! நீ யார்?

“நான் ஒன்றுமில்லை! நீ யார்?" என்று தொடங்கும் எமிலி டிக்கின்சனின் ஒரு கவிதையில், அடையாளம் இல்லாமல் இருப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை விடுத்து, யாரோ ஒருவராய் தாங்கள் இருக்கவிரும்பும் மக்களின் சிந்தையை அவர் சவால்விடுகிறார். “யாரோ ஒருவராய் இருப்பதற்கு ஏன் மந்தமாக உணரவேண்டும்! – தவளைபோல் யாரோ ஒருவராய் வாழ்வதற்கு ஏன் யோசிக்கிறோம்.”

யாரோ ஒருவராய் வாழ்வதற்கான தேவையை விட்டுவிடுவதில் ஏற்படும் சுதந்திரத்தை அனுபவிப்பது என்பது பவுல் அப்போஸ்தலரின் சாட்சியை நினைவுபடுத்துகிறது. பவுல் இயேசுவை சந்திக்கும் முன்பு, வெளியரங்கமாய் மக்களை ஈர்க்கும் மத அங்கீகாரங்களையும் மாம்சத்தின் மீது நம்பிக்கை வைப்பதற்கான நியாயமான காரணங்களையும் பவுல் கொண்டிருந்தார் (பிலிப்பியர் 3:4). 

ஆனால் இயேசுவை சந்தித்த பின்பு அனைத்தும் மாறியது. கிறிஸ்துவின் தியாகமான அன்பின் ஊடாய் தன்னுடைய மார்க்க ரீதியான சாதனைகளை பார்க்க பழகிய பவுல், “என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், ... கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்... (வச. 8) என்று அறிக்கையிடுகிறார். “நான் அவரை... அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்” (வச. 10) வாழ்வதே தன்னுடைய வாழ்க்கையின் முதன்மைக் குறிக்கோள் என்று சொல்லுகிறார்.

யாரோ ஒருவராய் நாம் மாற முயற்சிப்பது மந்தமான வாழ்க்கை. ஆனால் கிறிஸ்துவின் தியாகமான அன்பின் நிழலில் நம்முடைய சுயத்தை இழப்பது என்பது, ஜீவியத்தை புதுப்பிக்கும் புதுவாழ்வை நமக்கு அறிமுகப்படுத்துகிறது (வச. 9).

ஒவ்வொரு துக்கமும்

"நான் சந்திக்கும் ஒவ்வொரு துக்கத்தையும் அளவிடுகிறேன்," என்று பத்தொன்பதாம் நூற்றாண்டின் கவிஞர் எமிலி டிக்கின்சன் எழுதினார்: "குறுகிய ஆய்வு கண்களால் அது கடினமானதாயிருக்கிறதா அல்லது அவை எளிதானதுதானா என நான் ஆச்சரியப்படுகிறேன." மக்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் தாங்கள் காயப்படுத்தப்பட்ட விதவிதமான வழிமுறைகளை இந்த கவிதை எதிரொலிக்கிறது, ஏறக்குறைய தயக்கத்துடன், அவளது ஒரே ஆறுதலாக, கல்வாரியில் அவளது சொந்த காயங்கள்  தனது இரட்சகரின் காயங்களில் "துளைக்கப்பட்ட ஆறுதலாக" பிரதிபலிக்கப்பட்டதை கண்டு ”அக்காயங்களை என் காயங்களைப் போலவே உணருகிறேன்” என்றாள்.

 

வெளிப்படுத்தின விசேஷம் நம் இரட்சகராகிய இயேசுவை,” அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி“ என்று விவரிக்கிறது (5:6; பார்க்க வ. 12) அவருடைய காயங்கள் ஆறவில்லை. அவருடைய மக்களின் பாவம் மற்றும் விரக்தியைத் தம்மீது எடுத்துக்கொள்வதன் மூலம் சம்பாதித்த காயங்களின் (1 பேதுரு 2:24-25) மூலம் புதிய வாழ்க்கையையும், நம்பிக்கையையும் பெற முடியும்.

 

மேலும், இரட்சகர் தம் பிள்ளைகள் "யாவரின் கண்ணீரையும் துடைப்பார்" (21:4) என்று வெளிப்படுத்தின விசேஷம் அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி விவரிக்கிறது. இயேசு அவர்களின் வலியைக் குறைக்க மாட்டார், ஆனால் ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட துக்கத்தையும் உண்மையாகப் பார்த்து கவனித்துக்கொள்கிறார்.அவருடைய ராஜ்யத்தில் புதிய, குணப்படுத்தும் வாழ்க்கையின் யதார்த்தங்களுக்கு அவர்களை அழைக்கிறார், அங்கு ”இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின”. (வ.4) ஜீவத் தண்ணீரின் ஊற்றிலிருந்து செலவில்லாமல் குணப்படுத்தும் நீர் பாய்கிறது (வ. 6; பார்க்க 22:2).

 

நம்முடைய இரட்சகர் நம்முடைய ஒவ்வொரு துக்கத்தையும் சுமந்திருப்பதால், அவருடைய ராஜ்யத்தில் நாம் ஓய்வையும், சுகத்தையும் காணலாம்.

நம் அடைக்கலப் பட்டணம்

ஓய்வு பெற்ற ஆசிரியை டெபி ஸ்டீபன்ஸ் ப்ரோடர், முடிந்தவரை மரங்களை நடுவதற்கு மற்றவர்களை ஊக்கப்படுத்தினார். அதற்கு காரணம்? வெயிலின் உஷ்ணம். தட்பவெப்ப நிலை சார்ந்த காரணங்களை வைத்து பார்க்கும்போது, அமெரிக்காவில் பெரும்பாலானோரின் இறப்புக்கு உஷ்ணமே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. “நான் மரங்களை நடுவதிலிருந்து துவங்குகிறேன்” என்று அந்த பிரச்சனைக்கு அவர் தீர்வளிக்கிறார். சமுதாயத்தை வெயிலின் உஷ்ணத்திலிருந்து பாதுகாக்கும் ஒரு பெரிய தீர்வு மரங்களே. “இது சமுதாயத்தை அழகாக்கும் முயற்சியல்ல; மாறாக, வாழ்வா சாவா என்னும் போராட்டம்” என்று அவர் சொல்லுகிறார். 

நிழல் என்பது வெறும் புத்துணர்வூட்டக்கூடிய காரியம் மட்டுமல்ல; அது உயிரைக் காப்பாற்றக்கூடியது என்பதை 121ஆம் சங்கீதத்தை எழுதிய சங்கீதக்காரன் அறிந்திருந்தான். மத்திய கிழக்கில், சூரிய ஒளியின் ஆபத்து அதிகமாயிருக்கும். “பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை” (வச. 6) என்று தேவனுடைய பாதுகாப்பை விவரிக்கும் சங்கீதக்காரன், தேவனே நம்முடைய ஆபத்துக்காலத்தின் அடைக்கப்பட்டணம் என்பதை இந்த ஒப்புமையின் மூலம் விவரிக்கிறார். 

இந்த வேதவாக்கியம், கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்கு வலியோ வேதனையோ இல்லை என்று சொல்லவில்லை. “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு” (யோவான் 16:33) என்றே இயேசு சொல்லுகிறார். ஆனால் நிழல் என்ற இந்த உருவகத்தின் மூலம், நம்முடைய பாதையில் குறுக்கிடுவது எதுவாக இருப்பினும் தேவன் நம்மை அதிலிருந்து பாதுகாக்கிறார் என்பதை உறுதுபடுத்துகிறது (சங்கீதம் 121:7-8). அந்த இடத்தில் அவரை நம்புவதின் மூலமும், அவருடைய அன்பிலிருந்து நம்மை எதுவும் பிரிக்கமுடியாது என்று அறிவதின் மூலமும் நாம் இளைப்பாறுதலை அடையமுடியும் (யோவான் 10:28; ரோமர் 8:39).

தொடர்புடைய தலைப்புகள்

> odb

நேசிப்பதற்கான புதிய கட்டளை

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமான பாரம்பரியப்படி, ஐக்கிய பேரரசின் அரச குடும்பத்தினர் புனித வெள்ளிக்கு முந்தைய நாளான பெரிய வியாழன் அன்று தேவையானவர்களுக்கு பரிசுகளை வழங்குவார்கள். இந்த நடைமுறையானது மவுண்டி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் வேரூன்றியுள்ளது, இது லத்தீன் 'மாண்டடம்' அதாவது "கட்டளை" என்பதிலிருந்து வருகிறது. இயேசு தாம் இறப்பதற்கு முந்தைய இரவில் தம் நண்பர்களுக்குக் கொடுத்த புதிய கட்டளைதான் நினைவுகூரப்படுகிறது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” (யோவான் 13:34).

இயேசு தலைவராக இருந்தும், தம் நண்பர்களின் கால்களைக் கழுவுகையில், ஒரு ஊழியக்காரனான இருந்தார் (வச. 5). பின்னர் அவர் அவ்வாறே செய்யும்படி அவர்களை அழைத்தார்: "நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்." (வச. 15). மேலும் இன்னும் பெரிய தியாகமாக, அவர் சிலுவையில் மரித்து தனது உயிரைக் கொடுத்தார் (19:30). முழுமையான வாழ்வை நாம் அனுபவிக்க, கருணையினாலும் அன்பினாலும் அவர் தம்மையே கொடுத்தார்.

பிரித்தானிய அரச குடும்பம் தேவைப்படுபவர்களுக்கு சேவையாற்றும் பாரம்பரியம் இயேசுவின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கான அடையாளமாக தொடர்கிறது. இதுபோல வாய்ப்புள்ள சூழலில் நாம் பிறக்காமல் இருக்கலாம்; ஆனால் நாம் இயேசுவில் நம்பிக்கை வைக்கும் போது, ​​நாம் அவருடைய குடும்பத்தினராக மாறுகிறோம். நாமும் அவருடைய புதிய கட்டளையை நிறைவேற்றுவதன் மூலம் நம் அன்பைக் காட்டலாம். உள்ளிருந்து நம்மை மாற்றுவதற்கு நாம் தேவனின் ஆவியைச் சார்ந்திருக்கையில்; அக்கறையுடனும், உறுதியுடனும், கருணையுடனும் பிறரை அணுகலாம்.

கிறிஸ்துவில் கனிதரும் விசுவாசிகள்

சிண்டி ஒரு தொண்டு நிறுவனத்தில் தனது புதிய வேலைக்காக உற்சாகப்பட்டாள். மாற்றத்தை ஏற்படுத்த அரிய வாய்ப்பு. ஆனால் அவளுடைய சகபணியாளர்கள் அப்படியில்லை என்பதை அவள் விரைவில் கண்டுபிடித்தாள். தங்கள் நிறுவனத்தின் பணியை கேலி செய்தார்கள் மற்றும் லாபகரமான வேலைகளுக்கு வேறு இடங்களில் தேடியதால், மோசமான செயல்திறனுக்காக சாக்கு கூறினர். சிண்டி இந்த வேலைக்கு விண்ணப்பித்திருக்கவே வேண்டாம் என்றென்னினாள். தொலைவில் அற்புதமாக தோன்றியது அருகிலோ ஏமாற்றமளித்தது.

இன்றைய கதையில் (மாற்கு 11:13) குறிப்பிடப்பட்டுள்ள அத்தி மரத்தில் இயேசுவுக்கிருந்த பிரச்சனையும் இதுதான். இது பருவத்தின் ஆரம்பத்தில் இருந்தது, ஆனால் மரத்தின் இலைகள் அது ஆரம்பகால அத்திகளைக் கொண்டிருப்பதாக குறிக்கிறது. இல்லை, மரத்தில் இலைகள் துளிர்விட்டன, ஆனால் அது இன்னும் காய்க்கவில்லை. ஏமாற்றமடைந்த இயேசு, "இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கடவன்" (வச.14) என்று மரத்தை சபித்தார். மறுநாள் காலையில் மரம் வேரோடே பட்டுப்போயிருந்தது (வச. 20).

கிறிஸ்து ஒருமுறை நாற்பது நாட்கள் உபவாசம் இருந்தார், ஆகவே உணவு இல்லாமல் எப்படி இருக்க வேண்டும் என்று அவரறிவார். அத்தி மரத்தை சபிப்பது அவரது பசிக்காக இல்லை. இது ஒரு பொருள் பாடம். இந்த மரம் இஸ்ரவேலை குறிக்கிறது, அது மெய்யான மதத்தின் வேர்களை கொண்டிருந்தது, ஆனால் நோக்கத்தை இழந்துவிட்டது. அவர்கள் தேவனுடைய குமாரனாகிய தங்கள் மேசியாவைக் கொல்லப் போகிறார்கள். அவர்கள் எவ்வளவு கணியற்றிருந்திருக்க வேண்டும்?

தூரத்திலிருந்து நாம் அழகாகத் தோன்றலாம், ஆனால் இயேசு அருகில் வருகிறார், அவருடைய ஆவியால் மட்டுமே விளைவிக்கப்படும் கனியைத் தேடுகிறார். நமது கனிகள் கண்கவரும்வண்ணம் இருக்க வேண்டியதில்லை. ஆனால் அது இயற்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். அன்பு, சந்தோஷம் மற்றும் கடினமான காலங்களில் சமாதானம் போன்றவை (கலாத்தியர் 5:22). ஆவியானவரை சார்ந்து, இயேசுவுக்காக எப்போதும் கனி கொடுக்கலாம்.

அடிப்படையை தவறவிடுதல்

பல தசாப்தங்களாக, துரித உணவு வகையில் மெக்டொனால்ட் நிறுவனம் தனது குவார்ட்டர் பவுண்டர் பர்கர் கொண்டு ஆண்டது. 1980 களில் அதின் போட்டி நிறுவனம் தனது அற்புதமான திட்டத்தால் அதனை வீழ்த்த நினைத்தது. ஏ அண்ட் டபுள்யு நிறுவனம் மெக்டொனால்டை விட பெரிதான தர்ட் பவுண்ட் பர்கரை அதே விலைக்கு விற்றது. மேலும் அதின் ருசிக்காக பல விருதுகளையும் வென்றது. ஆனால் அது நிலைக்கவில்லை. அதை வாங்க ஆளில்லை. இறுதியில், அவர்கள் அதை மெனுவிலிருந்து எடுத்துவிட்டனர். தர்ட் பவுண்ட் பர்கர் குவார்ட்டர் பவுண்டர் பர்கரை விட சிரியதென்று நுகர்வோர் தவறாய் புரிந்துகொண்டதே அதின் தோல்விக்கு காரணமென்று ஒரு ஆராய்ச்சி அறிக்கையிட்டது.

அடிப்படைகளை தவறவிடுவது எவ்வளவு எளிது என்று இயேசு எச்சரித்தார். மதத் தலைவர்கள், அவர் சிலுவையில் அறையப்பட்ட வாரத்தில் அவரை இழிவுபடுத்த திட்டமிட்டனர், ஏழு முறை விதவையான ஒரு பெண்ணைப் பற்றி ஒரு விசித்திரமான, கற்பனையான காட்சியை முன்வைத்தனர் (மத்தேயு 22:23-28).  இந்த சிக்கலான தடுமாற்றம் ஒரு பிரச்சனையே இல்லை என்று இயேசு பதிலளித்தார். மாறாக, அவர்கள்  "வேதத்தையும் தேவனின் வல்லமையையும்" அறியவில்லை என்பதுதான் அவர்களின் பிரச்சனை (வச. 29). வேதவசனங்களின் நோக்கம் தர்க்கரீதியாகவும் தத்துவப் புதிர்களுக்கும் பதிலளிப்பதில்லை என்று இயேசு வலியுறுத்தினார். மாறாக, இயேசுவை அறியவும் நேசிக்கவும், அவரில் "நித்திய ஜீவனை" பெறவும் நம்மை வழிநடத்துவதே அவைகளின் முதன்மையான நோக்கம் (யோவான் 5:39). தலைவர்கள் தவறவிட்ட அடிப்படைகள் இவையே.

நாம் அடிக்கடி அடிப்படைகளையும் தவறவிடுகிறோம். உயிரோடிருக்கும் இயேசுவை கண்டுகொள்வதே வேதத்தின் முக்கிய நோக்கம். அதைத் தவறவிட்டால் மனவேதனையே மிஞ்சும்