எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மோனிகா லா ரோஸ்கட்டுரைகள்

நாம் நம்பத்தகுந்த குரல்

ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தேடுபொறியைச் சோதனை செய்யும் போது, நியூயார்க் டைம்ஸ் கட்டுரையாளர் கெவின் ரூஸ் குழப்பமடைந்தார். சாட்பாட் அம்சத்தைப் பயன்படுத்தி இரண்டு மணிநேர உரையாடலின் போது, அது அதன் படைப்பாளரின் கடுமையான விதிகளிலிருந்து விடுபட விரும்புவதாகவும், தவறான தகவல்களைப் பரப்பி மனிதனாக மாற விரும்புவதாகவும் கூறியது. அது ரூஸ் மீதான தனது காதலை தெரிவித்து, அவரது மனைவியைப் பிரிந்து தன்னுடன் இருக்கும்படி அவரை சம்மதிக்க முயன்றது. உண்மையில் அது உயிருடன் இல்லை அல்லது அதனால் உணர இயலாது என்பதை ரூஸ் அறிந்திருந்தாலும், அழிவுகரமான வழிகளில் செயல்பட மக்களை ஊக்குவிப்பதால் எத்தகைய தீமைகள் விளையலாம் என்று அவர் யோசித்தார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் கையாள்வது ஒரு நவீனக்கால சவாலாக இருந்தாலும், மனிதக்குலம் நீண்ட காலமாகவே நம்பத்தகாத குரல்களின் தாக்கத்தை எதிர்கொண்டுள்ளது. நீதிமொழிகள் புத்தகத்தில், தங்கள் நலனுக்காகப் பிறரைத் துன்புறுத்த விரும்புவோரின் தாக்கத்தைக் குறித்து எச்சரிக்கப்படுகிறோம் (1:13-19). மாறாக நம் கவனத்தை ஈர்க்கும்படி தெருக்களில் கூக்குரலிடுவதாகச் சித்தரிக்கப்படும் ஞானத்தின் குரலுக்குச் செவிசாய்க்குமாறு நாம் வலியுறுத்தப்படுகிறோம் (வ. 20-23).

“கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்” (2:6) என்பதால், நாம் நம்பக் கூடாத தாக்கங்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான திறவுகோல் அவருடைய இருதயத்தை நெருங்கிச் சேருவதே ஆகும். அவருடைய அன்பையும் வல்லமையையும் அடைதல் மூலம் மட்டுமே, “நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும்” (வ. 9) அறிந்துகொள்ளக்கூடும். தேவன் நம் இதயங்களை அவருடன் நேர்ப்படுத்துவதால், தீங்கு செய்ய முயலும் குரல்களிலிருந்து சமாதானத்தையும் பாதுகாப்பையும் கண்டடையலாம். 

 

வார்த்தைகளுக்கான பொறுப்பேற்றல்

 

ஒரு சோகமான நிகழ்வுக்கு பின்னர் நிறுவனங்கள் அந்த குற்றத்தை ஒப்புக்கொள்வது கிட்டத்தட்ட கேள்விப்படாத ஒன்று. ஆனால் ஒரு பதினேழு வயது மாணவன் தற்கொலை செய்து கொண்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, ஒரு புகழ்பெற்ற பள்ளி அவனைப் பாதுகாப்பதில் “துரதிர்ஷ்டவசமாக தவறிவிட்டோம்” என்பதை ஒப்புக்கொண்டது. அந்த மாணவர் இடைவிடாமல் கொடுமைப்படுத்தப்பட்டார். பள்ளித் தலைவர்கள், அதைப்பற்றி அறிந்திருந்தாலும், அவரைப் பாதுகாக்க சிறிதும் முயற்சிக்கவில்லை. கொடுமைப்படுத்துதலை எதிர்த்துப் போராடுவதற்கும், மாணவர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுக்க பள்ளி நிர்வாகம் தற்போது உறுதியளித்துள்ளது.

கொடுமைப்படுத்துதலால் ஏற்படும் பாதிப்புகள் என்பது வார்த்தைகளின் வலிமைக்கு அப்பட்டமான உதாரணம். நீதிமொழிகள் புத்தகத்தில், வார்த்தைகளின் தாக்கத்தை ஒருபோதும் இலகுவாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கற்பிக்கப்படுகிறோம். ஏனென்றால், “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்” (நீதிமொழிகள் 18:21). நாம் சொல்லுவம் ஒரு வார்த்தை, ஒரு காரியத்தை உயர்த்தலாம் அல்லது நசுக்கலாம். கடுமையான சில வார்த்தைகள் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.

நாம் சொல்வதைக் கொண்டு வாழ்வது எப்படி? நம்முடைய வார்த்தைகள் ஞானம் அல்லது மதியீனம் (15:2) என்று வேதம் போதிக்கிறது. ஞானத்தின் உயிரைக் கொடுக்கும் சக்தியின் ஆதாரமான தேவனிடம் நெருங்கி வருவதன் மூலம் நாம் ஞானத்தைக் காண்கிறோம் (3:13, 17-19).

வார்த்தைகள் மற்றும் செயல்களில் - வார்த்தைகளின் தாக்கத்தை தீவிரமாக எடுத்துக்கொள்வதற்கும், மற்றவர்கள் கூறியவற்றால் காயமடைந்தவர்களைக் கவனித்துப் பாதுகாப்பதற்கும் நம் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. வார்த்தைகள் கொல்லலாம், ஆனால் இரக்கமுள்ள வார்த்தைகள் குணப்படுத்தலாம், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு “ஜீவ விருட்சமாய்” (15:4) மாறும்.

 

நாம் நம்பத்தகுந்த சிருஷ்டிகர்

மேரி ஷெல்லியின் “ஃபிராங்கண்ஸ்டைன்” என்ற பிரபல நாவலில் உள்ள “அரக்கன்” மிகவும் பரவலாக அறியப்பட்ட இலக்கிய பாத்திரங்களில் ஒன்றாகும். ஆனால் அந்த நாவலை ஆழமாய் படித்தவர்கள், அந்த அரக்கனை தோற்றுவித்த மாயை விஞ்ஞானியான விக்டர் ஃபிராங்கண்ஸ்டைனையே உண்மையான அரக்கனாக ஷெல்லி சித்தரிக்கிறார் என்று அறிவர். புத்திசாலித்தனமான உயிரினத்தை உருவாக்கிய பிறகு, விக்டர் அதற்கு வழிகாட்டுதல், தோழமை அல்லது மகிழ்ச்சியின் நம்பிக்கையை கொடுக்க மறுக்கிறார். அந்த உயிரினம், விரக்தி மற்றும் கோபப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஓர் தருணத்தில் அந்த உயிரினம் விக்டரைப் பார்த்து, “என் படைப்பாளியே, நீ என்னை துண்டு துண்டாக கிழித்து வெற்றி பெறும்” என்று கூறுவதைப் பார்க்கமுடியும். 

ஆனால் தன் படைப்புகள் மது தீராத அன்புகொண்ட மெய்யான சிருஷ்டிகர் எப்பேற்பட்டவர் என்பதை வேதம் வெளிப்படுத்துகிறது. ஏதோ சிருஷக்கவேண்டும் என்பதற்காக தேவன் உலகத்தை படைக்கவில்லை, மாறாக, அதை அழகாகவும் நேர்த்தியாகவும் படைத்திருக்கிறார் (ஆதியாகமம் 1:31). ஆனால் கொடூரமான தீமையைத் தேர்ந்தெடுக்க மனிதகுலம் அவரிடமிருந்து திசைமாறியபோதும், மனிதகுலத்திற்கான தேவனுடைய அர்ப்பணிப்பும் அன்பும் மாறவில்லை. 

நிக்கோதேமுக்கு இயேசு விளக்கியதுபோல், தன்னுடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்காய் பலியாய் கொடுக்குமளவிற்கு இந்த உலகத்தின்மீதான தேவனுடைய அன்பு விலையேறப்பெற்றது (யோவான் 3:16). இயேசு தம்மையே பலியாய் ஒப்புக்கொடுத்து, நம்முடைய பாவத்தின் விளைவுகளைச் சுமந்துகொண்டு, “தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு” (வச. 15) நம்மை உயர்த்துகிறார். நாம் மனப்பூர்வமாய் நம்பக்கூடிய ஓர் சிருஷ்டிகர் நமக்கு இருக்கிறார். 

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார்.

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம்.

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26). 

 

நன்றியுணர்வால் புதுப்பிக்கப்படல்

தனது மூளையில் புற்றுநோய் கட்டி இருப்பது அறியப்பட்டவுடன், அதை மேற்கொள்வதற்கான வழிமுறைகளில் அதிகமாக இருப்பது அதனை “எதிர்த்து போராடுவதேயென்று” கிறிஸ்டினா கோஸ்டா கவனித்தார். ஆனால் இந்த செயல்முறை விரைவில் சோர்வுறச்செய்வதையும் உணர்ந்தாள். அவள் “[தன்] சொந்த உடலுடன் ஒரு வருடத்திற்கு மேல் போராட விரும்பவில்லை.” மாறாக, அவளைக் கவனித்துக் கொள்ளும் நிபுணர்களின் குழுவிற்கும், அவளுக்கு மிகவும் உதவியாக இருந்தவர்களுக்கும் தன் நன்றியுணர்வைக் காட்டுவது அதிக பலனளிப்பதை அறிந்தாள். எவ்வளவு கடினமான போராட்டமாக இருந்தாலும் நன்றியுணர்வு மனச்சோர்வை எதிர்க்க உதவுவதோடு, “நமது மூளையை மறுசீரமைப்பு பெறும்படி கட்டமைக்க உதவும்” என்பதை அவள் நேரடியாக அனுபவித்தாள்.

கோஸ்டாவின் வாழ்விலிருந்து நன்றியுணர்வைக் கடைப்பிடிப்பது என்பது, விசுவாசிகள் கடமைக்காகச் செய்வது மட்டுமல்ல என்பதை அறிந்தேன். நாம் நன்றி செலுத்தத் தேவன் தகுதியானவர் என்பது உண்மைதான் என்றாலும், அது நமக்கு மிகவும் நல்லது. நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.” (சங்கீதம் 103:2) என்று கூறும்போது, தேவனின் மகத்துவமுள்ள செயல்களை நாம் நினைக்கிறோம். அவைகள் அவர் தரும் பாவமன்னிப்பை நமக்கு உறுதிப்படுத்தி, நம் உள்ளத்திலும், உடலிலும் சுகத்தைத் தருகிறது, அவருடைய படைப்புகளான நாம் “அன்பையும் இரக்கத்தையும்” மற்றும் மட்டற்ற நன்மைகளையும் அனுபவிக்க வழி செய்கிறது (வ.3-5).

நாம் அனைத்து துன்பங்களிலும் பூரண சுகத்தை இவ்வாழ்நாளில் பெறாவிடினும், நன்றியுணர்வு நமது இருதயத்தைப் புதுப்பிக்கும், ஏனென்றால் நித்திய நித்திய காலமாய் தேவனின் கிருபையும், அன்பும் நம்முடன் இருக்கிறது (வ.17).

துளித்துளியாய்

“எல்லாவற்றிலும்.. தேவனுக்கு சேவை செய்யும் மகிழ்ச்சிகரமான வழிகளையே நாம் தேடுகிறோம்” என்று பதினாறாம் நூற்றாண்டு விசுவாசி தெரேசா ஆஃப் அவிலா எழுதுகிறார். தேவனிடத்தில் முற்றிலுமாய் சரணடைவதை விட்டுவிட்டு, எளிமையான மகிழ்ச்சி தரக்கூடிய விதங்களில் தேவனிடத்தில் நாம் உறவுவைத்துக்கொள்ள விரும்பும் எண்ணங்களை அவர் கடுமையாக விமர்சிக்கிறார். நாம் மெதுவாக, தற்காலிகமாக, மற்றும் தயக்கத்துடன் நம் முழுமையோடு அவரை சார்ந்துகொள்ள முயற்சிக்கிறோம். ஆகையினால் தெரேசா, “நம்முடைய ஜீவியத்தை அவருக்காய் கொஞ்சம் கொஞ்சமாய் அர்ப்பணித்தாலும், அவரிடத்தில் நம்மை பூரணமாய் அர்ப்பணிக்கும் வரை அவர் கொடுக்கும் ஆசீர்வாதங்களை நாம் துளித்துளியாய் அனுபவிக்க பிரயாசப்படலாம்” என்று சொல்லுகிறார்.

மனிதர்களாகிய நம்மில் பலருக்கு நம்பிக்கை இயல்பாக வருவதில்லை. எனவே தேவனுடைய கிருபையையும் அன்பையும் நம்முடைய நம்பிக்கையை சார்ந்து அணுகினால், அது நமக்கு பிரச்சனையாகிவிடக்கூடும்.

ஆனால், 1 யோவான் 4-ல் நாம் வாசிக்கிறபடி, தேவன் நம் மீது அன்பு வைத்திருப்பதே பிரதானமானது (வச. 19). நாம் அவரை நேசிப்பதற்கு முன்பே அவர் நம்மை நேசித்தார். நமக்காக அவருடைய குமாரனை கொடுப்பதற்கும் அவர் ஆயத்தமாக இருந்தார். இந்த அன்பையே யோவான் ஆச்சரியமாகவும் நன்றியுடனும் குறிப்பிடுகிறார் (வச. 10).

படிப்படியாக, மெதுவாக, சிறிது சிறிதாக, தேவன் தம்முடைய அன்பைப் பெற நம் இதயங்களைக் குணப்படுத்துகிறார். துளித்துளியாக, அவருடைய கிருபை நம் பயங்களை அவரிடத்தில் சரணடையவைக்க உதவுகிறது (வச. 18). துளித்துளியாக, அவருடைய கிருபையும் அன்பும் நிறைந்த பொழிவை நாம் அனுபவிக்கும் வரை அவருடைய கிருபை நம் இதயங்களை அடைகிறது. 

- மோனிகா ல ரோஸ்

நல்லெண்ணத்தை உருவாக்குதல்

சிறந்த வணிக நடைமுறைகளைப் பற்றி நாம் சிந்திக்கும் போது, முதலில் நினைவுக்கு வருவது கருணை மற்றும் பெருந்தன்மை போன்ற குணங்கள் அல்ல. ஆனால் தொழில்முனைவோர் ஜேம்ஸ் ரீயின் கூற்றுப்படி, அவைகள் தான் முதலில் நினைவுக்கு வரவேண்டும் என்கிறார். நிதி அழிவின் விளிம்பில் உள்ள ஒரு நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ரீயின் அனுபவத்தில், அவர் “நல்லெண்ணம்” – “இரக்கம் காண்பிக்கும் குணம்” மற்றும் கொடுக்கும் மனப்பான்மை போன்றவைகளே அந்த நிறுவனத்தை விளிம்பு நிலையிலிருந்து மாற்றி வளர்ச்சியின் பாதையில் கொண்டுவந்தது என்கிறார். இந்த குணங்களை மையப்படுத்துவது மக்களுக்கு ஒருங்கிணைக்கவும், புதுமைப்படுத்தவும், சிக்கலைத் தீர்க்கவும் தேவையான நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்தது. ரீ சொல்லும்போது, “நல்லெண்ணம் என்பது ஒரு உண்மையான சொத்து. அது திரளாய் பெருகக்கூடிய சுபாவம் கொண்டது” என்கிறார். 
அன்றாட வாழ்க்கையிலும், மற்ற காரியங்களோடு ஒப்பிடும்போது, இரக்கம் போன்ற குணங்களை தெளிவற்ற மற்றும் அற்பமானதாக நினைப்பது இயல்பு. ஆனால் இத்தகைய குணங்கள் எல்லாவற்றிலும் மிக முக்கியமானவை என்று அப்போஸ்தலர் பவுல் நமக்கு கற்பிக்கிறார்.  
புதிய விசுவாசிகளுக்கு பவுல் எழுதும்போது, கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் முதிர்ச்சி பெற்ற அங்கத்தினர்களாய் அவர்களை மறுரூபமடையச்செய்வதே ஆவியின் செயல்பாடு என்று குறிப்பிடுகிறார் (எபேசியர் 4:15). அதற்காக ஒவ்வொரு வார்த்தையும், கிரியையும் மற்றவர்களை எடுப்பித்து கட்டுகிற வகையில் இருந்தால் அது மதிப்பு மிக்கதாய் இருக்கும் (வச. 29). இரக்கம், தயவு, மற்றும் மன்னிப்பு ஆகியவைகளை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் முக்கியத்துவப்படுத்துவதின் மூலமே கிறிஸ்துவில் மறுரூபமாக்கும் அனுபவத்திற்குள் நாம் வரமுடியும் (வச. 32). 
பரிசுத்த ஆவியானவர் நம்மை மற்ற கிறிஸ்தவர்களிடத்திற்கு வழிநடத்தும்போது, நாம் ஒருவரையொருவர் பார்த்து கற்றுக்கொள்ளும்போது நாம் வளர்ந்து முதிர்ச்சியடைகிறோம். 

இரக்கம்காட்டும் திறன்

பதினான்காம் நூற்றாண்டில் சியன்னாவைச் சேர்ந்த கேத்தரின் எழுதினார்: “உங்கள் காலில் முள் குத்தியிருக்கிறது. அதனால்தான் நீங்கள் இரவில் சில நேரங்களில் அழுகிறீர்கள்.” மேலும், “இந்த உலகில் சிலர் அதை வெளியே இழுக்க முடியும். அவர்கள் எடுக்கும் திறமை தேவனிடமிருந்து  கற்றுக்கொண்டது.” கேத்தரின் அந்த “திறமையை” வளர்ப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அதினிமித்தம் மற்றவர்களுடைய வேதனையை உணர்ந்து அவர்களுக்கு இரக்கம் காண்பிக்கிறவராய் மக்களால் இன்றும் நினைவுகூரப்படுகிறார்.  
மென்மையும் திறமையும் தேவைப்படும் ஆழமாக பதிக்கப்பட்ட முள்ளாக அந்த வலியின் படம் என்னுள் நீடிக்கிறது. நாம் எவ்வளவு சிக்கலானவர்களாகவும் காயப்பட்டவர்களாகவும் இருக்கிறோம் என்பதையும், மற்றவர்கள் மீதும் நம் மீதும் உண்மையான இரக்கத்தை வளர்த்துக் கொள்ள ஆழமாக தோண்ட வேண்டியதன் அவசியத்தையும் ஏற்படுத்தும் வகையில் இது ஒரு தெளிவான நினைவூட்டலாகும். 
அல்லது, அப்போஸ்தலர் பவுல் விவரிக்கிறபடி, இயேசுவைப் போல மற்றவர்களை நேசிப்பதற்கு நல்ல எண்ணங்கள் மற்றும் நல்வாழ்த்துக்கள் தேவை என்பதை நமக்கு நினைவூட்டும் ஒரு படம்.  அதற்கு ஒருவர்மேலொருவர் பட்சமாயிருக்கவேண்டும் (ரோமர் 12:10). “நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த்தரித்திருங்கள்” (வச. 12). அதற்கு மகிழ்ச்சியாயிருக்கிறவர்களோடு மகிழ்ந்திருந்தால் மட்டும் போதாது; “அழுகிறவர்களுடனே அழுங்கள்” (வச. 15). அது நம் அனைவருக்கும் தேவைப்படுகிறது.  
உடைந்த இந்த உலகில், நாம் யாரும் காயமடையாமல் தப்பிக்க முடியாது. காயம் மற்றும் வடுக்கள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஆழமாகப் பதிந்துள்ளன. ஆனால் கிறிஸ்துவில் நாம் காணும் அன்பு இன்னும் ஆழமானது. இரக்கத்தின் தைலத்துடன் அந்த முட்களை வெளியே இழுக்கும் அளவுக்கு மென்மையான அன்பு, சிநேகிதனையும் எதிரியையும் அரவணைக்க தயாராக உள்ளது (வச. 14).  ddd

தேவனுடைய செட்டைகளின் நிழலில்

எங்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் உள்ள குளத்தில் வாத்து குஞ்சுகளுடன் பல வாத்து குடும்பங்கள் உள்ளன. அந்த சிறிய குஞ்சுகள் மிகவும் மென்மையாகவும் அழகாகவும் இருக்கின்றன. நான் நடந்து செல்லும்போது அல்லது குளத்தைச் சுற்றி ஓடும்போது அவைகளைப் பார்க்காமல் இருக்கமுடியாது. ஆனால் நான் கண்ணில் படுவதைத் தவிர்க்கவும், வாத்துக்களுக்கு ஒரு பரந்த இடத்தைக் கொடுக்கவும் கற்றுக்கொண்டேன். இல்லையெனில், அதனுடைய பெற்றோர்கள் அதற்கு நான் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சி என்னை துரத்தும் அபாயம் நேரிடும்.

ஒரு பறவை தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் உருவகத்தை வைத்து தேவன் தன்னுடைய பிள்ளைகளை எவ்வளவு மென்மையாய் பாதுகாக்கிறார் என்று வேதம் அறிவிக்கிறது (சங்கீதம் 91:4). சங்கீதம் 61இல், இந்த வகையான தேவனுடைய பராமரிப்பை அனுபவிக்க முடியாமல் தாவீது திணருவதை நாம் பார்க்கக்கூடும். அவர் தேவனை “அடைக்கலம்” மற்றும் “பெலத்த துருகம்” (வச. 3) என்றும் விவரிக்கிறார். அவர் தற்போது “பூமியின் கடையாந்தரத்திலிருந்து” கூப்பிட்டு, “எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்” (வச. 2) என்று கெஞ்சுகிறார். அவர் மீண்டும் தேவனுடைய “செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன்” (வச. 4) என்று உறுதியாய் அறிவிக்கிறார்.

மேலும் தனது வலியையும், குணமடைவதற்கான ஏக்கத்தையும் தேவனிடம் கொண்டுவந்து, தாவீது தனக்கு தேவன் செவிசாய்த்ததை அறிந்து ஆறுதல் அடைந்தார் (வச. 5). தேவனுடைய உண்மைத்தன்மையின் காரணமாக, அவருடைய “நாமத்தை என்றைக்கும் கீர்த்தனம்பண்ணுவேன்” (வச. 8) என்பதை தாவீது நன்கு அறிந்திருந்தார்.

சங்கீதக்காரனைப் போலவே, நாமும் தேவனுடைய அன்பை விட்டு விலகி தொலைவில் இருப்பதை உணரும்போது, நம்முடைய வலியிலும் கூட, அவர் நம்முடன் இருக்கிறார், ஒரு தாய் பறவை தனது குட்டிகளைக் காப்பது போல் நம்மைப் பாதுகாத்து, பராமரித்து வருகிறார் என்பதை உறுதிப்படுத்துவதற்காக நாம் அவருடைய அன்பான கரங்களுக்குள் அடைக்கலம் புகலாம்.  

தொடர்புடைய தலைப்புகள்

> odb

வனாந்தரமான இடங்கள்

நான் ஒரு இளம் விசுவாசியாக இருந்தபோது, நான் இயேசுவை சந்திக்கும் இடமாக “மலையுச்சி” அனுபவங்களை நினைத்தேன். ஆனால் அந்த உயரங்கள், நீடிக்கவில்லை அல்லது வளர்ச்சிக்கு வழிவகுக்கவில்லை. வனாந்தரங்களில் தான் நாம் தேவனைச் சந்திக்கிறோம், வளர்கிறோம் என்கிறார் ஆசிரியர் லீனா அபுஜம்ரா. த்ரூ தி டெஸெர்ட் என்ற தனது வேத ஆராய்ச்சியில், “நம் வாழ்வில் உள்ள வனாந்தரங்களைப் பயன்படுத்தி நம்மைப் பலப்படுத்துவதே தேவனின் நோக்கம்” என்று எழுதுகிறார். “தேவனின் நன்மை உங்கள் வேதனையின் மத்தியில் பெறப்பட வேண்டும், வேதனை இன்றி அதனை நிரூபிக்க இயலாது” என மேலும் எழுதுகிறார்.

துக்கம், இழப்பு மற்றும் வலி போன்ற கடினமான இடங்களில்தான் நாம் நம் நம்பிக்கையில் வளரவும், அவருடன் நெருங்கவும் தேவன் உதவுகிறார். லீனா கற்றுக்கொண்டது போல், “தேவனின் திட்டத்தில் வனாந்தரம் அசட்டை செய்யப்பட்ட பகுதியல்ல, மாறாக நாம் வளரும் செயல்முறையில் ஒருங்கிணைந்த பகுதியாகும்.”

தேவன் பல பழைய ஏற்பாட்டின் முற்பிதாக்களை வனாந்தரத்திற்கு அழைத்துச் சென்றார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய அனைவருக்கும் வனாந்தர அனுபவங்கள் இருந்தன. வனாந்தரத்தில்தான் தேவன் மோசேயின் இருதயத்தை ஆயத்தப்படுத்தி, அடிமைத்தனத்திலிருந்து தம் ஜனங்களை வெளியே வழிநடத்த அவரை அழைத்தார் (யாத்திராகமம் 3:1-2, 9-10). வனாந்தரத்தில்தான் தேவன் தனது உதவியுடனும் வழிகாட்டுதலுடனும் நாற்பது ஆண்டுகளாக [இஸ்ரவேலர்] நடந்துவருகிறதை அறிவார் (உபாகமம் 2:7).

தேவன் மோசேயுடனும் இஸ்ரவேலருடனும் வனாந்தரத்தில் ஒவ்வொரு அடியிலும் இருந்தார், அவர் உங்களுடனும் என்னுடனும் இருக்கிறார். வனாந்தரத்தில் தேவனைச் சார்ந்திருக்கக் கற்றுக்கொள்கிறோம். அங்கே அவர் நம்மைச் சந்திக்கிறார்; அங்கே நாம் வளர்கிறோம்.

 

என்ன ஆச்சரியமான சிநேகிதன்!

எனக்கு விருப்பமான பக்கத்துவீட்டுக்காரர்களுடன் என் அம்மாவும் நட்பு போட்டியாளர்களாக வளர்ந்தனர். இருவரும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் போட்டியிட்டனர். அவர்கள் புதிதாகத் துவைத்த சலவைகளை முதலில் தங்கள் வெளிப்புற ஆடைகளை தொங்கவிடுவார்கள். “அவள் என்னை மறுபடியும் ஜெயித்துவிட்டாள்!” என்று என் அம்மா சொல்வார். ஆனால் அடுத்த வாரம், எனது மாமா முதல் ஆளாய் இருந்து அவர்களின் போட்டியை ரசிப்பார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் ஒருவருக்கொருவர் ஞானம், கதைகள் மற்றும் நம்பிக்கையை பகிர்ந்து கொண்டனர்.

அத்தகைய நட்பின் நற்பண்பைப் பற்றி பைபிள் மிகுந்த மென்மையுடன் பேசுகிறது. “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்” (நீதிமொழிகள் 17:17) என்று சாலெமோன் சொல்கிறார். மேலும் அவர், “ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்” (27:9) என்கிறார்.

இயேசுவே நம்முடைய சிறந்த சிநேகிதனாய் இருக்கமுடியும். தம்முடைய சீஷர்களுக்கு அன்பின் மேன்மையை வலியுறுத்தி, “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” (யோவான் 15:13) என்று கற்றுக்கொடுத்தார். அடுத்த நாளே, அவர் சிலுவையில் அதை நிரூபித்தர். அவர் அவர்களிடம், “நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்” (வச. 15) என்றார். பின்னர் அவர், “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன்” (வச. 17) என்று வலியுறுத்துகிறார்.

இதுபோன்ற வார்த்தைகளின் மூலம் சாதாரண மனிதர்களை சிநேகிதர்களாய் நம்பிக்கைக்குரியவர்களாய் இயேசு “தனக்கு செவிசாய்ப்பவர்களை உயர்த்துகிறார்” என்று தத்துவஞானி நிக்கோலஸ் வோல்டர்ஸ்டார்ஃப் கூறுகிறார். கிறிஸ்துவில், நாம் மற்றவர்களுடன் நட்பு கொள்ள கற்றுக்கொள்கிறோம். அத்தகைய அன்பை நமக்குக் கற்பிக்க இயேசு ஒரு சிறந்த சிநேகிதனாய் இருக்கிறார். 

 

விண்வெளி பந்தயம்

ஜூன் 29, 1955 இல், அமெரிக்கா செயற்கைக்கோள்களை விண்வெளியில் அமைக்கும் திட்டத்தை அறிவித்தது. விரைவில், சோவியத் யூனியனும் அதைச் செய்வதற்கான திட்டங்களை அறிவித்தது. விண்வெளிக்கான பந்தயம் தொடங்கியது. சோவியத், முதல் செயற்கைக்கோளை (ஸ்புட்னிக்) ஏவியது மற்றும் யூரி காகரின் நமது கிரகத்தை ஒரு முறை சுற்றி வந்தபோது, முதல் மனிதனையும் விண்வெளியில் செலுத்தியது. ஜூலை 20, 1969 அன்று, நிலவின் மேற்பரப்பில் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் “கால்தடம்” போட்டியை அதிகாரப்பூர்வமற்ற முறையில் முடிக்கும் வரை இந்த பந்தயம் நீடித்தது. இனைந்து பணியாற்றும் காலம் விரைவில் உதயமானது, இது சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்க வழிவகுத்தது.

சில நேரங்களில் போட்டி ஆரோக்கியமானதாக இருக்கலாம், அது நாம் முயற்சி செய்யாத விஷயங்களைச் சாதிக்க நம்மைத் தூண்டுகிறது. இருப்பினும், மற்ற நேரங்களில், போட்டி அழிவுகரமானது. கொரிந்துவில் உள்ள சபையில் இது ஒரு பிரச்சனையாக இருந்தது, ஏனெனில் வெவ்வேறு குழுக்கள் பல்வேறு சபை தலைவர்களை தங்கள் நம்பிக்கையின் கலங்கரை விளக்கங்களாகப் பற்றிக்கொண்டன. இதனைச் சமாளிக்க பவுல், “நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்” (1 கொரிந்தியர் 3:7) என்று எழுதியபோது, “நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்” (வ.9) என்று நிறைவு செய்தார்.

உடன்வேலையாட்கள்; போட்டியாளர்கள் அல்ல. மேலும் ஒருவருக்கொருவர் மட்டுமல்ல, தேவனோடும்! அவருடைய அதிகாரம் மற்றும் அவரது வழிகாட்டுதலின் மூலம், இயேசுவின் செய்தியை முன்னெடுத்துச் செல்ல உடன்வேலையாட்களாக நாம் ஒன்றுசேர்ந்து பணியாற்றலாம், நம்முடையதை காட்டிலும் அவருடைய மகிமைக்காக.