எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மோனிகா லா ரோஸ்கட்டுரைகள்

மேலானவைகளுக்காக ஓடுதல்

என் தோழி இரா அலைபேசியில் வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து நான் நொறுங்கிப்போனேன். உக்ரைனின் முற்றுகையிடப்பட்ட தலைநகரான கீவிலுள்ள தனது வீட்டை விட்டு வெளியேறிய சில நாட்களுக்குப் பிறகு 2022 இல், ஒரு ஓட்டபந்தயத்தை முடித்த பிறகு தனது நாட்டின் கொடியை உயர்த்தி பிடித்து அப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் எழுதினார், " நாம் அனைவரும் வாழ்வென்னும் மாரத்தானில் இயன்றமட்டும் சிறப்பாக ஓடுகிறோம். இந்நாட்களில் இன்னும்கூட சிறப்பாக ஓடுவோம். நமது இதயங்களில் அணையாத ஒன்றைப் பற்றிக்கொள்வோம்”. தொடர்ந்து வந்த நாட்களில், அவள் குறிப்பிட்டுச்சொன்ன ஓட்டத்தை பல வழிமுறைகளில் ஓடுவதைக் கண்டேன்.  அவள் தன் நாட்டில் துன்பப்படுபவர்களுக்காக எப்படி ஜெபிப்பது மற்றும் ஆதரவளிப்பது என்று எங்களுக்குத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தாள்.

இராவின் வார்த்தைகள், எபிரெயர் 12ல் விசுவாசிகள் "பொறுமையோடே ஓடக்கடவோம்" (வ.1)  என்ற அழைப்புக்கு புதிய ஆழத்தைக் கொண்டுவந்தது. அந்த அழைப்பு அதிகாரம் 11 இன் விசுவாச வீரர்களின் பட்டியலைத் தொடர்கிறது. “மேகம் போல இத்தனை திரளான சாட்சிகளான” (12:1) அவர்கள் தைரியமாக எல்லா சூழ்நிலைகளிலும் வாழ்ந்தனர். தங்கள் உயிர் போகும் ஆபத்திலும் கூட நீடியபொறுமையான விசுவாசத்தோடு (11:33-38) தங்கள் கண்களுக்குத் தூரமான, என்றும் அழியாத நித்திய காரியங்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தனர் (வ.13).

இயேசுவின் விசுவாசிகள் அனைவரும் அவ்வாறே வாழ அழைக்கப்பட்டுள்ளனர். விரிவடையும் வளர்ச்சியும், அமைதியுமான ஷாலோமெனும் சமாதானமான தேவனுடைய ராஜ்யத்திற்காக நாம் எதையும் இழக்கலாம். ஏனெனில் கிறிஸ்துவின் முன்மாதிரியும் வல்லமையும் தான் நம்மைத் தாங்குகிறது (12:2-3).

புதிய ஆரம்பம்

சங்கீதம் 120ஐக் குறித்த தன்னுடைய நேர்த்தியான விளக்கத்தில், யூஜின் பீட்டர்சன், “நாம் சத்தியம் என்று எதை நம்பியிருந்தோமோ அது பொய் என்ற வலிமிகுந்த உணர்வைப் பெறும்போதே கிறிஸ்தவ விழிப்புணர்வு துவங்குகிறது” என்கிறார். சங்கீதம் 120, எருசலேமுக்கு பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களால் பாடப்பட்ட “உன்னதப்பாடல்” வரிசையில் (120-134) முதலாவதாய் இடம்பெற்றுள்ளது. பீட்டர்சன் இந்த கருத்தை “ஒரே திசையில் நிலையான கீழ்ப்படிதல்” என்னும் பதிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த சங்கீதங்கள் அனைத்தும் தேவனிடத்தில் கிட்டிசேரும் ஆவிக்குரிய பயணத்தை முன்வைக்கிறது. 

நம்முடைய புதுமையான ஒன்றின் தேவையைக் குறித்த ஆழமான விழிப்புணர்வுடன் மட்டுமே துவங்கக்கூடியது. பீட்டர்சன் சொல்லுவதுபோல, “கிறிஸ்தவ பாதையில் ஒருவன் ஈர்க்கப்படுவதற்கு அவன் வெறுக்க பழகவேண்டும்…. கிருபையின் பாதையை தெரிந்துகொள்வதற்கு முன்பு உலகத்தின் பாதைகளை வெறுக்க பழகவேண்டும்.” 

நம்மை சுற்றிலும் இருக்கக்கூடிய இந்த உலகத்தைப் பார்த்து நாம் எளிதில் உடைக்கப்பட்டவர்களாயும் சோர்வடைந்தவர்களாயும் கருதக்கூடும். மற்றவர்களுக்கு ஏற்படுகிற தீங்கை இவ்வுலகம் அலட்சியப்படுத்துகிறது. சங்கீதம் 120, இதை தெளிவாய் சொல்லுகிறது: “நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும் போது யுத்தத்துக்கு எத்தனப்படுகிறார்கள்” (வச. 7). 

நம்முடைய பொய்களிலிருந்து விலக்கி சமாதானத்திற்குள் நடத்தும் நம்முடைய ஒரே உதவி வரும் கன்மலையாகிய நமது இரட்சகரினால், நம்முடைய காயங்கள் அனைத்தையும் புதிய ஆரம்பமாய் மாற்றமுடியும் என்று நம்புவதில் சுகமும் சுதந்திரமும் இருக்கிறது (121:2). இந்த புதிய ஆண்டிற்குள் நாம் நுழையும்போது, அவரையும் அவருடைய வழிகளையும் நாம் நோக்குவோம்.

முன்னேறு! விலகிச் செல்லாதே!

“ஓய்வு” என்ற கவிதையில், வேலை செய்வதிலிருந்து ஓய்வு நேரத்தை பிரிக்கும் நமது போக்கை கவிஞர் நயமாக சவால் விடுகிறார். உண்மையான உழைப்போடு வருவதுதான் உண்மையான ஓய்வாகுமல்லவா? நீங்கள் உண்மையான ஓய்வு நேரத்தை அனுபவிக்க விரும்பினால், வாழ்க்கையின் கடமைகளைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, “இன்னும் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்; - அதைப் பயன்படுத்துங்கள் - வீணாக்காதீர்கள்; இல்லையெனில் அது ஓய்வாய் கருதப்படாது” என்று ஆசிரியர் வலியுறுத்துகிறார். உனக்கு முன்பாக அழகு நிற்கிறது, அதைக் கண்டு உன் வேலையைச் செய்து, ஓய்வை அனுபவியுங்கள் என்று வரிகள் நீளுகிறது. 

உண்மையான ஓய்வு மற்றும் மகிழ்ச்சி ஆகிய இரண்டும், அன்பு மற்றும் சேவையின் மூலமாகவே கிடைக்கிறது என்று கவிஞர் முடிக்கிறார். இது தெசலோனிக்கேயர்களுக்கு பவுலின் ஆலோசனையை நினைவுபடுத்துகிறது. தனது அழைப்பை விவரித்து, விசுவாசிகளை ஊக்குவித்த பிறகு, “தேவனுக்கு  நீங்கள் பாத்திரராய் நடக்கவேண்டுமென்று” (வச. 11) விசுவாசிகளுக்கு தொடர்ந்து புத்தி சொல்லுகிறார். 

அத்தகைய வாழ்க்கையை, நேர்மை, அன்பு மற்றும் சேவை ஆகியவற்றைக் கொண்டு விளக்குகிறார். “ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து” (3:12) உங்களை ஆசீர்வதிப்பார் என்று பவுல் வேண்டிக்கொள்ளுகிறார். மேலும், “அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும்வேண்டுமென்று” சபையை ஊக்குவிக்கிறார் (4:11). தேவனை நேசித்து, அவர் நமக்கு எந்தெந்த விதங்களில் உதவியிருக்கிறாரோ, அதேபோன்று மற்றவர்களுக்கு உதவிசெய்து விசுவாச வாழ்க்கையின் அழகை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் வாழ்க்கை முறையே மெய்யான ஓய்வாகும் (வச. 12).

அல்லது கவிஞர் சொல்வது போல், உண்மையான மகிழ்ச்சி, “அன்பு மற்றும் சேவையில் நிலைத்திருக்கிறது.” அதுதான் உண்மையான ஓய்வு.

தேவனின் மிருதுவான கிருபை

எமிலி டிக்கின்சன் என்னும் கவிஞர் தன்னுடைய பாடல் வரியொன்றில், “அனைத்து சத்தியத்தையும் சொல்லுங்கள்; ஆனால், கனிவாய் சொல்லுங்கள்” என்று பாடுகிறார். ஏனெனில், தேவனுடைய சத்தியங்களையும்; மகிமையையும் பலவீனமான நாம் முழுமையாய் விளங்கிக்கொள்ள இயலாது. ஆகையால் தேவனுடைய கிருபையையும் சத்தியத்தையும் கனிவாகவும், தெளிவாகவும், இலைமறைகாயாகவும் அறிவிப்பது நல்லது. சத்தியம் படிப்படியாய் ஒளிரவேண்டும்; இல்லையெனில், ஒவ்வொருவரும் குருடனாய் இருக்க நேரிடும்.
எபேசியர் 4ஆம் அதிகாரத்தில் விசுவாசிகளை, “மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி” (வச.2) செயல்படும்படி வலியுறுத்தும் பவுல், இதே போன்ற ஒரு விவாதத்தை மேற்கொள்கிறார். கிறிஸ்து நமக்குக் காண்பிக்கும் கிருபையான வழிமுறைகளே விசுவாசிகளின் சாந்தகுணத்திற்கும், பிறரைத் தாங்கும் சுபாவத்திற்கும் அஸ்திபாரமென்று விளக்குகிறார். இயேசுவும் மனிதனாக அவதரித்து (வச.9-10), மக்கள் எளிதில் அவரை நம்பவும் ஏற்றுக்கொள்ளவும் கூடிய விதத்தில் அவர் தன்னை எளிமையாய் வெளிப்படுத்தினார்.

“நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும்வரைக்கும்;” (வச.11), தேவன் மென்மையான மற்றும் அன்பின் வழிகளில் மக்கள் வளரவேண்டிய விதத்தில் அவர்களுக்குத் தன்னை தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறார். நாம் முதிர்ச்சியடையும்போது, பலவீனமான வழிகளில் நம்பிக்கையைத் தேடாமல் (வச.10), கிறிஸ்துவின் அன்பின் மாதிரியைப் பின்பற்றுகிறவர்களாய் இருப்போம் (வச.15-16).

நமது எதிர்காலத்திற்கான தேவ உதவி

உளவியலாளர் மெக் ஜேவை பொறுத்தமட்டில், நமக்கு முற்றிலும் அந்நியர்களைப் பற்றி நாம் எப்படிச் சிந்திக்கிறோமோ, அப்படியே நம் மனதும் நம்முடைய எதிர்காலத்தைக் குறித்துச் சிந்திக்குமாம். ஏன்? இதற்குக் காரணம் "அனுதாப இடைவெளி" எனும் உணர்வுதான். அதாவது நமக்குத் தனிப்பட்ட விதத்தில் பரிச்சயமில்லாதவர்களைக் குறித்த அக்கறையோ, கரிசனையோ நமக்கு இல்லாமல் போகும் போது, எதிர்காலத்தில் அவ்வுணர்வே நம்மை நமக்கு அந்நியர்களாக்கிவிடுமாம். இதனைச் சமாளிக்க, ஜே இளைஞர்களுக்குத் தங்கள் வருங்காலத்தில் எப்படியாக அவர்கள் இருக்க விரும்புகிறார்களோ, அதை நிகழ்காலத்தில் கற்பனை செய்து, தங்கள் நடக்கைகளைத் திட்டமிட்டு, அதற்கேற்றாற்போல மாற்றிக்கொள்ளும்படி பயிற்றுவிக்கிறார்.

சங்கீதம் 90 ல் நமது வாழ்வை வெறும் நிகழ்காலமாக மட்டுமில்லாமல் அதை முழுமையாகப் பார்க்க, "நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்." (வ.12) என்று தேவனிடம் உதவி கேட்க அழைக்கப்படுகிறோம். இந்த உலகில் நமது நாட்கள் மிகக்குறுகியது என்பதை நினைவில்கொண்டால் நாம் தேவனைச் சார்ந்துகொள்ளவேண்டிய அவசியத்தை நன்கு உணருவோம். இன்று மட்டுமின்றி, "வாழ்நாளெல்லாம்" (வ.14) நமக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் உண்டாகத் தேவனின் உதவி நமக்கு வேண்டும். நம்மைக் குறித்து மட்டுமின்றி வருங்கால சந்ததிகளைக் குறித்தும் நாம் சிந்திக்க (வ.16) தேவனின் உதவி நமக்கு அவசியம். மேலும் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள குறுகிய காலத்தில் அவருக்கு ஊழியம் செய்ய, நமது கைகளின் கிரியை உறுதிப்பட (வ.17) தேவனின் உதவி நமக்கு வேண்டும்.

தாழ்மையே சத்தியம்

தேவன் தாழ்மையை ஏன் கனப்படுத்துகிறார் என்னும் கேள்விக்கு பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த விசுவாசி ஆவிலாவின் தெரசா உடனே பதில் கண்டுபிடித்தார்: ஏனென்றால், தேவன் என்பது உயர்வான உண்மை, அதேபோல் தாழ்மையும் உண்மை... நமக்குள் இருக்கும் நல்லவைகள் எதுவுமே நம்மிடமிருந்து வருவதில்லை. மாறாக, தண்ணீரண்டையில் நாட்டப்பட்ட மரத்தைப் போல, கிருபையின் தண்ணீரண்டையிலிருந்தும், நம்முடைய படைப்புகளுக்கு உயிர்கொடுக்கும் சூரியனிலிருந்தும் தான் நம் உழைப்பிற்கு பலன் கிடைக்கிறது. தெரசா, “தாழ்மையே ஜெபத்தின் அஸ்திபாரம்; ஜெபத்தில் எந்த அளவிற்கு நம்மை தாழ்த்துகிறோமோ, அந்த அளவிற்கு தேவன் நம்மை உயர்த்துவார்” என்று ஜெபமே அந்தத் மனத்தாழ்மையை நமக்கு கொடுக்கும் என அறிவுறுத்துகிறார். 

தாழ்மையைக் குறித்த தெரசாவின் வார்த்தைகள் யாக்கோபு 4ஆம் அதிகாரத்தின் வார்த்தைகளை எதிரொலிக்கிறது. அதில் யாக்கோபு, தேவ கிருபையை சார்ந்து வாழும் வாழ்க்கைக்கு விரோதமான பெருமையைக் குறித்து எச்சரிக்கிறார் (வச. 1-6). பேராசை, மனச்சோர்வு, தொடர் பிரச்சனைகள் ஆகியவைகளால் சூழப்பட்ட வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விடுபெறுவதற்கு ஒரே வழி, நம்முடைய பெருமையை அகற்றி, மனத்தாழ்மையினால் நம்முடைய இருதயத்தை நிறைப்பதே என்று யாக்கோபு வலியுறுத்துகிறார். இன்னும் தெளிவாய் சொன்னால், “கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்” (வச. 10). 

கிருபையின் தண்ணீரண்டையில் நாம் நாட்டப்படுவோமாகில், பரத்திலிருந்து வரும் ஞானத்தினால் நாம் போஷிக்கப்படுவது நிச்சயம் (3:17). அவரில் நிலைத்திருந்தால் மாத்திரமே நாம் சத்தியத்தில் பலப்பட முடியும்.

திறவுகோல்

“தி ஹ்யூமன் கண்டிஷன்” (The Human Condition) என்னும் பிரபலமான தன்னுடைய புத்தகத்தில், தாமஸ் கீட்டிங் இந்த மறக்கமுடியாத கதையை பகிர்கிறார். ஒரு குருவானவர், தனது வீட்டின் சாவியைத் தொலைத்துவிட்டு, புல் வெளியில் தேடிக்கொண்டு இருந்தராம். அவரது சீடர்கள் அவர்த் தேடுவதைக் கண்டதும், அவர்களும் தேடினார்களாம். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக, புத்திசாலித்தனமான சீடர்களில் ஒருவர், “குருவே, சாவியை எங்கே தொலைத்தீர்கள் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்று கேட்க, அதற்கு குருவானவர், “அதை நான் வீட்டில் தொலைத்தேன்” என்று சொன்னாராம். “அப்படியானால் நாம் ஏன் அதை இங்கே தேடுகிறோம்?" என்று கேட்டாராம். அதற்கு அவர், “அதை விட இங்கு தான் வெளிச்சம் அதிகமாக இருக்கிறது” என்று பதிலளித்தாராம். 

“தேவனுடைய பிரசன்னத்தை அனுபவிக்கும் நெருக்கமான உறவு என்னும் சாவியை நாம் தொலைத்துவிட்டோம். அந்த அனுபவம் இல்லாமல், நம்மால் எதுவும் செய்ய முடியாது. அது நம்மோடிருந்தால் அனைத்தும் நேர்த்தியாய் இருக்கும்" என்று கீட்டிங் நிறைவுசெய்கிறார்.

வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளில் தேவன் நம்மோடிருந்தார் என்பதை சுலபமாய் மறந்துவிடுகிறோம். ஆனால் எல்லா தவறுகளையும் நாம் தவிர்க்கும்போது, உண்மையான நன்மையை நமக்கு தருவதற்கு அவர் ஆயத்தமாய் இருக்கிறார். மத்தேயு 11இல், தேவன் தம்முடைய வழிகளை “ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து,”; “பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால்” (வச. 25) இயேசு பிதாவை துதிக்கிறார். பின்னர் அவர், “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே!" (வச. 28) இளைப்பாறுதலுக்காய் தம்மிடம் வரும்படி அழைக்கிறார்.

சிறு குழந்தைகளைப் போலவே, “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்” (வச. 29) என்று சொன்ன நம்முடைய குருவிடத்திலிருந்து மெய்யான இளைப்பாறுதலை நாம் பெற்றுக்கொள்ள முடியும். நம்மை நித்திய வீட்டிற்கு அழைத்துச்செல்ல அவர் ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கிறார். 

 

நம்பகமான அன்பு

ஏன் அதைப் பற்றி என்னால் யோசிக்காமல் இருக்கமுடியவில்லை? என் உணர்ச்சிகள் சோகம், குற்ற உணர்ச்சி, கோபம் மற்றும் குழப்பம் ஆகியவற்றால் நிறைந்திருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, எச்சரிப்பு சத்தத்திற்கு செவிகொடுக்காததினால், எனக்கு நெருக்கமான ஒருவருடனான உறவைத் துண்டிக்கும் வேதனையான முடிவை எடுத்தேன். ஆனால் இன்று நான் இருக்கும் அதே ஊரில் தான் அவளும் இருக்கிறாள் என்பதை கேள்விப்பட்டவுடன், என்னுடைய எண்ணம் கடந்த கால நிகழ்வுகளை எனக்கு நினைப்பூட்டியது.

என் மனதை அமைதிப்படுத்த நான் சிரமப்பட்டபோது, வானொலியில் ஒரு பாடல் ஒலித்தது. அந்த பாடல் துரோகத்தின் வேதனையை மட்டுமல்லாது, அந்த தீங்கு விளைவித்த நபருடன் மீண்டும் சேருவதற்கு துடிக்கும் இருதயத்தை பிரதிபலித்தது. அந்த பாடலைக் கேட்ட மாத்திரத்தில், என் இருதயத்தின் ஆழத்தில் இருந்த துக்கத்தை அறிந்து என்னையறியாமல் நான் கண்ணீர் சிந்த ஆரம்பித்தேன்.

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக” என்று பவுல் ரோமர் 12:9இல் அன்பைக் கடந்துசெல்லும் அனைத்தும் உண்மையானவை அல்ல என்பதை வலியுறுத்துகிறார். ஆயினும்கூட, உண்மையான அன்பை அறிந்து கொள்வதே நம் இதயத்தின் ஆழமான ஏக்கமாகும் - அது சுயத்தையோ சூழ்ச்சியையோ கொண்டுள்ள அன்பு அல்ல; இரக்கமும் தியாகமும் கொண்டுள்ள அன்பு. அன்பு என்பது பயத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒரு தேவையல்ல; மாறாக, இருவரின் நலனையும் பொருட்படுத்தும் ஓர் அன்பான அர்ப்பணிப்பு (வச. 10-13).

அதுவே நற்செய்தியாகிய சுவிசேஷம். கடைசியாக, நாம் நம்பக்கூடிய, நமக்கு எப்போதும் சேதம் விளைவிக்காத அன்பை நாம் கிறிஸ்துவின் மூலம் அடையாளம் கண்டுகொண்டோம் (13:10). சுதந்திரமாய் வாழும் வாழ்க்கையே அவருடைய அன்பில் வாழ்வதாகும்.

ஆழமான துயரம்

குணப்படுத்தமுடியாத ஒரு அரியவகை மூளைப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட கரோலின், ஒரு வித்தியாசமான சேவையினால் வாழ்வில் நம்பிக்கையும், நோக்கத்தையும் பெற்றாள். ஒரு தன்னார்வ புகைப்படக்காரராக, கடும் வியாதியுற்ற பிள்ளைகளையும், அவர்கள் குடும்பங்களையும் புகைப்படம் எடுத்தார். இந்த சேவையின் மூலமாய், குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளோடு இருக்கும் விலையேறப்பெற்ற தருணங்கள் புகைப்படமாகின. துயரமான, இன்பமான மற்றும் அழகான எல்லா தருணங்களும் படமாக்கப்பட்டது. அந்த குடும்பங்கள் அனைத்தும், இக்கட்டான தருணங்களிலும் அன்புகாட்டவே தெரிந்துகொண்டதாக அவள் அறிவிக்கிறாள்.
துயரத்தை படம் பிடிப்பதில் சொல்ல முடியாத ஒரு வல்லமை இருக்கிறது. அதின் அழிக்கக்கூடிய வல்லமையும், அதேநேரத்தில் அவற்றின் மத்தியில் இருக்கும் அழகையும், நம்பிக்கையையும் நாம் அனுபவிக்கமுடியும்.
யோபு புத்தகம் முழுமையும், கடினமான சூழ்நிலைகளின் மத்தியில் நடைபெற்ற ஒரு துயரத்தின் புகைப்படம் எனலாம் (1:18-19). பல நாட்கள் யோபுவோடு அமர்ந்திருந்த அவனுடைய நண்பர்கள், அவனுடைய அந்த துயரத்தினால் சலிப்படைந்து, அதை குறைக்கும்பொருட்டு, அது தேவனுடைய நியாயத்தீர்ப்பு என்று விளக்குகின்றனர். ஆனால் அதில் ஒன்றையும் ஏற்காத யோபு, இந்த துயர நிலையின் அனுபவத்தை சாட்சியாக, “கருங்கல்லிலே உளிவெட்டாகவும் ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும்” (19:24) என்கிறான்.
யோபு புத்தகத்தில், நம் துயரங்களினூடே ஜீவனுள்ள தேவனுக்கு நேரே திரும்புவது உளிவெட்டாகப் பதிந்துள்ளது (வச. 26-27). அவர் நம் வேதனையில் நம்மை தேற்றி, மரணத்திலிருந்து உயிர்தெழுதலுக்கு நம்மை

தொடர்புடைய தலைப்புகள்

> odb

சொல்லும் அறை

ஒற்றுமை மற்றும் நட்பை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான வழியை வடக்கு ஸ்பெயின் உருவாக்கியது. கையால் செய்யப்பட்ட குகைகள் நிறைந்த கிராமப்புறங்களில், ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் சில விவசாயிகள் ஒரு குகைக்கு மேலே கட்டப்பட்ட ஒரு அறையில் அமர்ந்து, உணவுகளையும் இருப்பு வைப்பார்கள். காலப்போக்கில், அந்த அறை "சொல்லும் அறை" என்றானது. நண்பர்களும் குடும்பத்தினரும் தங்கள் கதைகள், ரகசியங்கள் மற்றும் கனவுகளைப் பகிர்ந்து கொள்ள ஒன்றுகூடும் இடமானது. நம்பிக்கையான நண்பர்களின் நெருக்கமான உறவாடுதல் உங்களுக்குத் தேவைப்பட்டால், நீங்கள் “சொல்லும் அறை”க்குச் செல்வீர்கள்.

அவர்கள் வடக்கு ஸ்பெயினில் வாழ்ந்திருந்தால், யோனத்தானும் தாவீதும் பகிர்ந்து கொண்ட ஆழமான நட்பு அவர்களை ஒரு சொல்லும் அறையை உருவாக்க வழிவகுத்திருக்கலாம். தாவீதைக் கொல்ல வேண்டும் என்று சவுல் ராஜா மிகவும் பொறாமைப்பட்டபோது, சவுலின் மூத்த மகனான யோனத்தான் அவரைப் பாதுகாத்து நண்பனானார். இருவரின் ஆத்துமாக்களும் "ஒன்றாய் இசைந்திருந்தது" (1 சாமுவேல் 18:1). மேலும் யோனத்தான் "ஆத்துமாவைப் போலச்" சிநேகித்தான் (வவ. 1, 3). மேலும், தானே அரியணைக்கு வாரிசாக இருந்தபோதிலும், ராஜாவாக தாவீதின் தெய்வீகத் தேர்ந்தெடுப்பையும் அங்கீகரித்தார். அவன் தாவீதுக்கு அவனுடைய மேலங்கி, வாள், வில், கச்சை ஆகியவற்றைக் கொடுத்தான் (வச. 4). பின்னர், தாவீது யோனத்தானின் நண்பராக அவர் மீது கொண்டிருந்த ஆழ்ந்த அன்பு ஆச்சரியமாயிருந்தது என்று அறிவித்தார் (2 சாமுவேல் 1:26).

இயேசுவின் விசுவாசிகளாக, கிறிஸ்துவைப் போன்ற அன்பையும் அக்கறையையும் பிரதிபலிக்கும் நட்பைக் கட்டியெழுப்ப அவர் நமக்கு உதவட்டும். நண்பர்களுடன் நேரம் ஒதுக்கவும், நம் இதயங்களைத் திறக்கவும், அவரில் ஒருவருக்கொருவர் உண்மையான ஒற்றுமையுடன் வாழவும் செய்வோமாக..

கிருபையின் மறுதொடக்கம்

கடந்த பல தசாப்தங்களாக திரைப்பட சொற்களஞ்சியத்தில் ஒரு புதிய சொல் நுழைந்துள்ளது, அது "மறுதொடக்கம்". திரைத்துறை பாணியில், ஒரு பழைய கதையை அதை மறுதொடக்கம் செய்து ஆரம்பிப்பதாகும். சில மறுதொடக்கங்கள் ஒரு அசகாய சூரனை பற்றியோ கற்பனை படைப்பு போன்றோ பழக்கமான கதையை மீண்டும் கூறுகின்றன. மற்ற மறுதொடக்கங்கள் அதிகம் அறியப்படாத கதையை எடுத்து புதிய வழியில் அக்கதையை மறுபரிசீலனை செய்கின்றன. ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மறுதொடக்கம் என்பது மீண்டும் செய்வது போன்றது. இது ஒரு புதிய தொடக்கம், பழையதான ஒன்றுக்கு புதிய வாழ்வு கொடுக்கப்படுகிறது.

மறுதொடக்கங்களை உள்ளடக்கிய மற்றொரு கதை உள்ளது, அது நற்செய்தி கதை. அதில், இயேசு தம்முடைய மன்னிப்பு, பரிபூரணம் மற்றும் நித்திய ஜீவனுக்கு நம்மை அழைக்கிறார் (யோவான் 10:10). புலம்பல் புத்தகத்தில், எரேமியா நமக்குத் தேவனின் அன்பு ஒவ்வொரு நாளையும் கூட ஒரு வகையில் மறுதொடக்கம் செய்கிறதை நமக்கு நினைவூட்டுகிறார்: " நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.” (3:22-23).

தேவனின் கிருபையானது, ஒவ்வொரு நாளையும் அவருடைய உண்மைத்தன்மையை அனுபவிக்க ஒரு புதிய வாய்ப்பாக ஏற்றுக்கொள்ள நம்மை அழைக்கிறது. நம்முடைய சொந்த தவறுகளின் விளைவுகளுடன் நாம் போராடினாலும் அல்லது வேறு பல கஷ்டங்களைச் சந்தித்தாலும் தேவனின் ஆவியானவர் ஒவ்வொரு புதிய நாளிலும், மன்னிப்பு,  புதிய வாழ்க்கை மற்றும் நம்பிக்கையை அருள முடியும். ஒவ்வொரு நாளும் ஒரு வகையான மறுதொடக்கம் ஆகும். நமது சிறந்த இயக்குநரின் வழியைப் பின்பற்றுவதற்கான ஒரு வாய்ப்பு.  அவர் நம் கதையை அவரது பெரிய கதையில் ஒன்றாய் பின்னுகிறார்.

தேவனின் சத்தத்தை அறிதல்

பல வருட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, ஓநாய்கள் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்வதற்குத் தனித்துவமான குரல்களைக் கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் அறிந்துகொண்டனர். ஒரு குறிப்பிட்ட ஒலி பகுப்பாய்வு குறியீட்டைப் பயன்படுத்தி, ஒரு பெண் ஓநாயின் ஊளையில் உள்ள பல்வேறு சப்த அளவுகள் மற்றும் சுருதிகள் குறிப்பிட்ட ஓநாய்களை 100 சதவீத துல்லியத்துடன் அடையாளம் காண உதவியது என்பதை ஒரு விஞ்ஞானி உணர்ந்தார்.

தேவன் தனது பிரியமான படைப்புகளின் தனித்துவமான குரல்களை அறிந்துகொண்டதற்கான பல உதாரணங்களை வேதாகமம் காட்டுகிறது. அவர் மோசேயை பெயர் சொல்லி அழைத்து நேரடியாகப் பேசினார் (யாத்திராகமம் 3:4-6). சங்கீதக்காரன் தாவீது, "நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார்" (சங்கீதம் 3:4) என்று அறிவித்தார். தேவனுடைய ஜனங்கள் அவருடைய குரலை அறிந்துகொள்வதின் அவசியத்தை அப்போஸ்தலன் பவுலும் வலியுறுத்தினார்.

எபேசிய மூப்பர்களிடம் விடைபெறும் போது, எருசலேமுக்குச் செல்லும்படி ஆவியானவர் தன்னை "கட்டாயப்படுத்தினார்" என்று பவுல் கூறினார். தேவனின் சத்தத்தைப் பின்பற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் உறுதிப்படுத்தினார், ஆனால் போகுமிடத்தில் சம்பவிப்பவற்றை அறியாதிருந்தார் (அப்போஸ்தலர் 20:22). "கொடிதான ஓநாய்கள்" சபைக்குள்ளிருந்து கூட "எழும்பி.. மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று" என்று அப்போஸ்தலன் எச்சரித்தார் (வச. 29-30). பின்னர், தேவனுடைய சத்தியத்தைப் பகுத்தறிவதில் இடைவிடாமல் விழித்திருங்கள் அவர் மூப்பர்களை ஊக்குவித்தார் (வச. 31).தேவன் நமக்குச் செவிசாய்த்து பதிலளிப்பார் என்பதை அறிந்துகொள்ளும் பாக்கியம் இயேசுவின் விசுவாசிகள் அனைவருக்கும் உண்டு. பரிசுத்த ஆவியின் வல்லமையும் நம்மிடம் உள்ளது, அவர் தேவனின் குரலை அடையாளம் காண உதவுகிறார், அது எப்போதும் வேத வார்த்தைகளுடன் ஒத்துப்போகிறது.