எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மோனிகா லா ரோஸ்கட்டுரைகள்

மேலானவைகளுக்காக ஓடுதல்

என் தோழி இரா அலைபேசியில் வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்து நான் நொறுங்கிப்போனேன். உக்ரைனின் முற்றுகையிடப்பட்ட தலைநகரான கீவிலுள்ள தனது வீட்டை விட்டு வெளியேறிய சில நாட்களுக்குப் பிறகு 2022 இல், ஒரு ஓட்டபந்தயத்தை முடித்த பிறகு தனது நாட்டின் கொடியை உயர்த்தி பிடித்து அப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் எழுதினார், " நாம் அனைவரும் வாழ்வென்னும் மாரத்தானில் இயன்றமட்டும் சிறப்பாக ஓடுகிறோம். இந்நாட்களில் இன்னும்கூட சிறப்பாக ஓடுவோம். நமது இதயங்களில் அணையாத ஒன்றைப் பற்றிக்கொள்வோம்”. தொடர்ந்து வந்த நாட்களில், அவள் குறிப்பிட்டுச்சொன்ன ஓட்டத்தை பல வழிமுறைகளில் ஓடுவதைக் கண்டேன்.  அவள் தன் நாட்டில் துன்பப்படுபவர்களுக்காக எப்படி ஜெபிப்பது மற்றும் ஆதரவளிப்பது என்று எங்களுக்குத் தெரியப்படுத்திக் கொண்டிருந்தாள்.

இராவின் வார்த்தைகள், எபிரெயர் 12ல் விசுவாசிகள் "பொறுமையோடே ஓடக்கடவோம்" (வ.1)  என்ற அழைப்புக்கு புதிய ஆழத்தைக் கொண்டுவந்தது. அந்த அழைப்பு அதிகாரம் 11 இன் விசுவாச வீரர்களின் பட்டியலைத் தொடர்கிறது. “மேகம் போல இத்தனை திரளான சாட்சிகளான” (12:1) அவர்கள் தைரியமாக எல்லா சூழ்நிலைகளிலும் வாழ்ந்தனர். தங்கள் உயிர் போகும் ஆபத்திலும் கூட நீடியபொறுமையான விசுவாசத்தோடு (11:33-38) தங்கள் கண்களுக்குத் தூரமான, என்றும் அழியாத நித்திய காரியங்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தனர் (வ.13).

இயேசுவின் விசுவாசிகள் அனைவரும் அவ்வாறே வாழ அழைக்கப்பட்டுள்ளனர். விரிவடையும் வளர்ச்சியும், அமைதியுமான ஷாலோமெனும் சமாதானமான தேவனுடைய ராஜ்யத்திற்காக நாம் எதையும் இழக்கலாம். ஏனெனில் கிறிஸ்துவின் முன்மாதிரியும் வல்லமையும் தான் நம்மைத் தாங்குகிறது (12:2-3).

உதாரத்துவத்திற்குப் பதில் செய்தல்

லிடியாவுக்கு அறிமுகமில்லாத நன்கொடையாளர்கள் கிட்டதட்ட 8.5 லட்சங்களைப் பரிசாக வழங்கியபோது, ​​அதில் கொஞ்சமே தனக்காகச் செலவு செய்தார். மாறாக, சக பணியாளர்கள், குடும்பத்தினர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்குத் தாராளமாகப் பரிசுகளை வழங்கினார். தடயமற்ற வங்கிப் பரிமாற்றத்தின் மூலம் 8.5 லட்சம் பரிசுக்கு இருநூறு பேர் தெரிந்தெடுக்கப்பட்டு,  எவ்வாறு செலவழித்தனர் என்பதைத் தொடர்ந்த ஒரு ஆய்வின் ஒரு பகுதியாக லிடியா இருந்தார் என்பது அவருக்கே தெரியாது. அந்த அன்பளிப்புப் பணத்தில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் கொடையாகக் கொடுக்கப்பட்டதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கதையைப் பகிர்ந்துகொண்டு, டெட் எனும் இலாப நோக்கற்ற ஊடக அமைப்பின் தலைவரான கிறிஸ் ஆண்டர்சன், “மனிதர்களாகிய நாம் உதாரத்துவத்திற்குத் தாராள மனப்பான்மையுடன் பதில் செய்வது நமக்குள் இயற்கையாக இருக்குமொன்று போல" என்றார்.

வேதாகமத்தில், ஜனங்கள் தாராளமாகக் கொடுத்து வாழும்போது, ​​​​அவர்கள் தங்களைப் படைத்த தேவனின் இதயத்தைப் பிரதிபலிக்கிறார்கள் என்பதை நாம் காண்கிறோம். தேவன் தாராளமாகவும், இரக்கமுள்ளவராகவும், கருணையுள்ளவராகவும் இருக்கிறார், சிலருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும்; "நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும்" கூட (லூக்கா 6:35). ஆகவே, தேவனின் சுபாவத்தைப் பிரதிபலிக்க விரும்புவோருக்கு, "கைம்மாறுகருதாமல்" (வ.32-35) "அன்பு" செய்ய, "நன்மை செய்ய" மற்றும் எதிரிகளுக்கு "கடன் கொடுக்க" இயேசு அறிவுறுத்தினார்.

நாம் எதையும் எதிர்பார்க்காமல் கொடுக்கும்போது, ​​அது ஒருபோதும் நமக்கு தீங்குண்டாக்கும் வாழ்க்கை முறை அல்ல என்பதை அறிந்துகொள்வோம். இதையும் இயேசு சுட்டிக்காட்டி, “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்... நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்” (வ.38). தேவனின் தாராள மனப்பான்மைக்கு நாம் பதிலளிக்கும் விதமாக உதாரத்துவமாய் வாழ்வதன் மூலம், ​​எண்ணற்ற வழிகளில் நாம் செழிப்புடன் இருப்பதைக் காணலாம்.

சத்தியத்தைத் தேடுதல்

தாங்கள் செய்வது தவறாயினும், மக்கள் தாங்கள் செய்வதே சரியென்று என்று முழுமையாக நம்புவதின் காரணத்தை ஆராய்கையில்; ஆசிரியர் ஜூலியா கேலெஃப், இது நம்மிலிருக்கும் ஒரு "சிப்பாய் மனநிலையுடன்" தொடர்புடையது என்றும், ஆகவே நாம் ஏற்கனவே நம்பும் ஒன்றுக்கு எதிரானவற்றிலிருந்து அதனை பாதுகாப்பதில்தான் கவனம் செலுத்துகிறோம் என்றும் பரிந்துரைக்கிறார். மாறாக, ஒரு "தேடுகிற மனப்பான்மை" தான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கேலெஃப் வாதிடுகிறார். இதன்மூலம் ஒருவர் தன் நம்பிக்கைக்கு எதிரானவற்றைப் புறக்கணிப்பதற்கு மாறாக, முழுமையான உண்மையை ஆராய்கிறார். ஆகையால், ஒரு காரியம் உங்களுக்கு ஏற்றதாகவோ, சௌகரியமானதாகவோ அல்லது இனிமையாகவோ இல்லாவிடினும் உள்ளதை உள்ளபடி துல்லியமாக உங்களால் புரிந்துகொள்ள முடியும். இந்தக் கண்ணோட்டத்தை உடையவர்கள், புரிதலில் தொடர்ந்து வளர்வதற்கேற்ற மனத்தாழ்மையைக் கொண்டுள்ளனர்.

கேலெஃபின் இந்த புரிதல், "யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்" (யாக்கோபு 1:19) என்று விசுவாசிகள் ஒரே மாதிரியான மனநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற யாக்கோபின் ஊக்கத்தை நினைவூட்டுகிறது. அவசரப்பட்டு ஆற்றும் எதிர்வினைகளால் உந்தப்படுவதற்குப் பதிலாக, மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாது (வ.20) என்பதை நினைவில் கொள்ளுமாறு இயேசுவின் விசுவாசிகளை யாக்கோபு வலியுறுத்துகிறார். அவருடைய கிருபைக்குத் தாழ்மையுடன் கீழ்ப்படிந்தால் மட்டுமே ஞானத்தில் வளர முடியும் (வ.21; தீத்து 2:11-14 ஐப் பார்க்கவும்).

நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் நம்மையல்ல, தேவனுடைய கிருபையையே  சார்ந்தது என்பதை நினைவில் கொள்ளுகையில்,  நாம் செய்வது தான் சரி என்ற மனநிலையை நாம் கைவிட்டுவிடுவோம். மேலும், நாம் எவ்வாறு வாழவேண்டும் என்றும் பிறரிடம் எவ்வாறு உண்மையான கரிசனையோடு இருக்க வேண்டும் என்பதற்கு அவருடைய வழிநடத்துதலை சார்ந்துகொள்ளலாம் (யாக்கோபு 1:25-27).

உள்ளிருந்து மறுருபமகுதல்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இங்கிலாந்தில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தில், மேற்கு லண்டனில் உள்ள இருபத்தி நான்கு மாடி கிரென்ஃபெல் டவர் கட்டிடத்தில் தீ பரவி எழுபது பேரின் உயிர்களைப் பலியாக்கியது. கட்டிடத்தின் புதுப்பித்தலின் பகுதியாக, வெளிப்புறத்தை மூட பயன்படுத்தப்பட்ட உறைப்பூச்சுதான் தீப்பிழம்புகள் மிக விரைவாகப் பரவுவதற்கான முதன்மைக் காரணம் என்று விசாரணையில் தெரியவந்தது. இந்த பொருள் வெளியில்தான் அலுமினியம், ஆனால் பற்றக்கூடிய நெகிழி அதின் நடுவில் கொண்டிருந்தது.

அத்தகைய ஆபத்தான பொருள் எவ்வாறு விற்கப்பட்டது, நிறுவப்பட்டது? இந்த தயாரிப்பு விற்பனையாளர்கள், இது தீ பாதுகாப்பு சோதனையில் தோல்வியடைந்ததை வெளியிடத் தவறினர். மேலும் வாங்குபவர்கள், பொருளின் மலிவான விலைக் குறியீட்டால், எச்சரிக்கை அறிகுறிகளைக் கவனிக்கத் தவறிவிட்டனர். பளபளப்பான உறை வெளிப்புறத்தில் நன்றாகத் தோற்றமளித்தது.

இயேசுவின் சில கடுமையான வார்த்தைகள் மத போதகர்களை நோக்கியே  வந்தது, அவர்கள் அழகாகத் தோன்றும் வெளிப்புறத்தில் அநீதியை மறைப்பதாகக் குற்றம் சாட்டினார். அவை " வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்", " புறம்பே அலங்காரமாய்" தோன்றும், ஆனால் உள்ளே மரித்தவர்களின் எலும்புகளினால் நிறைந்திருக்கும்  (மத்தேயு 23:27) என்றார். "நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும்" (வ. 23) பின்பற்றுவதற்குப் பதிலாக, அவர்கள் அலங்காரமாய்க் காணப்படுவதற்குக் கவனம் செலுத்தினர். "போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தை" சுத்தம் செய்வதில் கவனம் செலுத்தினர், ஆனால் உள்ளேயிருந்த "கொள்ளை, அநீதி" ஆகியவற்றை விட்டுவிட்டனர் (வ. 25).

நம்முடைய பாவத்தையும்,உள்ள முறிவையும் தேவனுக்கு முன்பாக நேர்மையாகக் கொண்டுவருவதை விட "அலங்காரமாய் தோன்றுவதில்” கவனம் செலுத்துவது எளிது. ஆனால் அழகாகத் தோற்றமளிக்கும் வெளிப்புறமானது, அநீதத்தின் இதயம் உண்டாக்கும் ஆபத்தை மாற்றாது. நம் அனைவரையும் உள்ளிருந்து மாற்றும்படி விட்டுக்கொடுக்க, தேவன் நம்மை அழைக்கிறார் (1 யோவான் 1:9).

தேவனுடைய பொறுமையான அன்பு

எங்களின் அழகான, பஞ்சுபோன்ற பூனைக்கு, வயிற்றைத் தடவி அதனுடன் விளையாடும் போதோ, மாலையில் அது என் மடியில் உறங்கும் போதோ, சில வருடங்களுக்கு முன்பு நாம் சந்தித்த அதே பூனை தான் அது என்று நம்புவது சில சமயங்களில் கடினமாக இருக்கும். எனது செல்லப் பூனை, எடை குறைவாகவும், அனைவருக்கும் பயந்தும் தெருக்களில் வாழ்ந்து வந்தது. ஆனால் ஒவ்வொரு நாளும் நான் அதற்கு உணவு வைக்க ஆரம்பித்தவுடன் அது படிப்படியாக உருமாற்றம் அடைந்தது. ஒரு நாள் அது என்னுடைய செல்லப்பிராணியாய் மாறியது. மீதியெல்லாம் வரலாறே.

என் பூனையின் மாற்றம் பொறுமை மற்றும் அன்புடன் வரக்கூடிய சிகிச்சைமுறையின் நினைவூட்டலாகும். ஏசாயா 42-ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, தேவனுடைய இருதயத்தை அது எனக்கு நினைவூட்டுகிறது. அங்கு, அவருடைய ஆவியால் நிரப்பப்பட்ட ஒரு ஊழியக்காரனைப் பற்றி நமக்குச் சொல்லப்படுகிறது (வச. 1). அவர் தேவனுடைய நியாயத்தை பூமியிலே நிலைப்படுத்தும் வரை உண்மையாய் செயல்படுவார் (வச. 3-4).

அந்த ஊழியக்காரர் இயேசுவே (மத்தேயு 12:18-20). அவர் வன்முறையின் மூலமாகவோ அல்லது அதிகாரத்தைத் தேடுவதன் மூலமாகவோ தேவனுடைய நீதியை நிலைநாட்டமாட்டார். மாறாக, அவர் அமைதியாகவும், மென்மையாகவும் இருப்பார் (ஏசாயா 42:2). மற்றவர்களால் கைவிடப்பட்டவர்களை, காயமடைந்தவர்களை மென்மையாகவும் பொறுமையாகவும் கவனித்துக்கொள்வார் (வச. 3).

தேவன் தனது பிள்ளைகளை ஒருபோதும் கைவிடுவதில்லை. காயப்பட்ட நம் இருதயங்கள் இறுதியாக குணமடையத் தொடங்கும் வரை அவற்றை எல்லா நேரங்களிலும் கவனித்துக்கொள்கிறார். அவருடைய மென்மையான, பொறுமையான அன்பின் மூலம் நாம் படிப்படியாக மீண்டும் ஒருமுறை நேசிக்கவும் நம்பவும் கற்றுக்கொள்கிறோம்.

நாம் நம்பத்தகுந்த குரல்

ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தேடுபொறியைச் சோதனை செய்யும் போது, ​​நியூயார்க் டைம்ஸ் கட்டுரையாளர் கெவின் ரூஸ் குழப்பமடைந்தார். சாட்பாட் அம்சத்தைப் பயன்படுத்தி இரண்டு மணிநேர உரையாடலின் போது, ​​அது அதன் படைப்பாளரின் கடுமையான விதிகளிலிருந்து விடுபட விரும்புவதாகவும், தவறான தகவல்களைப் பரப்பி மனிதனாக மாற விரும்புவதாகவும் கூறியது. அது ரூஸ் மீதான தனது காதலை தெரிவித்து, அவரது மனைவியைப் பிரிந்து தன்னுடன் இருக்கும்படி அவரை சம்மதிக்க முயன்றது. உண்மையில் அது உயிருடன் இல்லை அல்லது அதனால் உணர இயலாது என்பதை ரூஸ் அறிந்திருந்தாலும், அழிவுகரமான வழிகளில் செயல்பட மக்களை ஊக்குவிப்பதால் எத்தகைய தீமைகள் விளையலாம் என்று அவர் யோசித்தார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் கையாள்வது ஒரு நவீனக்கால சவாலாக இருந்தாலும், மனிதக்குலம் நீண்ட காலமாகவே நம்பத்தகாத குரல்களின் தாக்கத்தை எதிர்கொண்டுள்ளது. நீதிமொழிகள் புத்தகத்தில், தங்கள் நலனுக்காகப் பிறரைத் துன்புறுத்த விரும்புவோரின் தாக்கத்தைக் குறித்து எச்சரிக்கப்படுகிறோம் (1:13-19). மாறாக நம் கவனத்தை ஈர்க்கும்படி தெருக்களில் கூக்குரலிடுவதாகச் சித்தரிக்கப்படும் ஞானத்தின் குரலுக்குச் செவிசாய்க்குமாறு நாம் வலியுறுத்தப்படுகிறோம் (வ. 20-23).

"கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்" (2:6) என்பதால், நாம் நம்பக் கூடாத தாக்கங்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான திறவுகோல் அவருடைய இருதயத்தை நெருங்கிச் சேருவதே ஆகும். அவருடைய அன்பையும் வல்லமையையும் அடைதல் மூலம் மட்டுமே, "நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும்" (வ. 9) அறிந்துகொள்ளக்கூடும். தேவன் நம் இதயங்களை அவருடன் நேர்ப்படுத்துவதால், தீங்கு செய்ய முயலும் குரல்களிலிருந்து சமாதானத்தையும் பாதுகாப்பையும் கண்டடையலாம்.

 

உடைக்கும் ஆசீர்வாதம்

அவர் முதுகு கூன் விழுந்து, கைத்தடியுடன் நடக்கிறார். ஆனால் அவருடைய பல ஆண்டுகாலமான மேய்ப்பன்துவம், அவர் தன்னுடைய ஆவிக்குரிய பெலனுக்கு தேவனை சார்ந்திருக்கிறார் என்பதற்கு ஆதாரமாயிருக்கிறது. 1993 ஆம் ஆண்டில், சங்கை. வில்லியம் பார்பர் ஒரு பலவீனப்படுத்தும் நோயால் கண்டறியப்பட்டார். இது முதுகெலும்பின் எலும்புகளை ஒன்றாக இணைக்கிறது. “பார்பர், நீங்கள் போதக ஊழியத்தை விட்டுவிட்டு, வேறு ஏதாகிலும் வேலையை தெரிந்துகொள்ள வேண்டும். உம் போன்ற மாற்றுத் திறனாளியை இந்த சபை போதகராய் ஏற்பதற்கு விரும்பவில்லை” என்று அவரிடத்தில் நுட்பமான விதத்தில் அறிவுறுத்தப்பட்டது. தேவன் அவரை ஒரு போதகராக மட்டும் பயன்படுத்தவில்லை; மாறாக, அவர் தாழ்த்தப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஒரு சக்திவாய்ந்த, மரியாதைக்குரிய குரலாகவும் இருந்தார்.

குறைபாடுகள் உள்ளவர்களை என்ன செய்வது என்று உலகம் முழுவதுமாக அறியாவிட்டாலும், தேவன் அறிந்திருக்கிறார். அழகையும் துணிச்சலையும், பணத்தால் வாங்கக்கூடிய பொருட்களையும் மதிப்பவர்கள், அழைக்கப்படாத முறிவுகளுடன் வரும் நன்மையை இழக்க நேரிடும். யாக்கோபின் கேள்வியும் அதன் அடியில் உள்ள கொள்கையும் கருத்தில் கொள்ளத்தக்கது: “தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?” (யாக்கோபு 2:5). உடல்நலம் அல்லது வலிமை அல்லது பிற விஷயங்கள் குறையும் போது, ஒருவரின் நம்பிக்கை அதைப் பின்பற்ற வேண்டியதில்லை. தேவனுடைய பெலத்தால், அது எதிர்மாறாக இருக்கலாம். நமது பற்றாக்குறை அவரை நம்புவதற்கு ஒரு ஊக்கியாக இருக்கலாம். இயேசுவைப் போலவே நம்முடைய உடைந்த நிலையைக் கொண்டே உலகத்திற்கு நன்மையைக் கொண்டுவர அவரால் கூடும்.

 

நம்பிக்கையான எதிர்காலத்தைப் பார்த்தல்

2005 இல் கத்ரீனா புயலின் பேரழிவிற்குப் பிறகு, நியூ ஆர்லியன்ஸ் மெதுவாக மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது. லோயர் நைந்த் வார்டு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும், கத்ரீனாவின் பல ஆண்டுகளுக்குப் பிறகு அம்மக்களுக்கு அடிப்படை ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அதை மாற்ற பர்னெல் காட்லன் பணியாற்றினார். நவம்பர் 2014 இல், கத்ரீனாவுக்குப் பிறகு லோயர் நைந்த் வார்டில் முதல் மளிகைக் கடையைத் திறந்தார். "நான் கட்டிடத்தை வாங்கியபோது, ​​​​எல்லோரும் என்னைப் பைத்தியம் என்றெண்ணினார்கள். ஆனால் எனது முதல் வாடிக்கையாளரோ அழுது “தனது சுற்றுப்புறம் திரும்பக் கிடைக்குமென்று ஒருபோதும் நினைத்ததில்லை" என்றதை காட்லன் நினைவு கூர்ந்தார். அவரது தாயார் தனது மகன் “நான் பார்க்காத ஒன்றைப் பார்த்தான்.  அந்த வாய்ப்பை பயன்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி" என்றார்.

ஏசாயா தீர்க்கதரிசிக்கு, அழிவினூடே எதிர்பாராத நம்பிக்கையான எதிர்காலத்தைக் காணத் தேவன் உதவினார். "சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல்" (ஏசாயா 41:17) இருப்பதால் "வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வறண்டபூமியை நீர்க்கேணிகளுமாக்(குவேன்)" (வ.18) என்று தேவன் வாக்குப் பண்ணினார். பசிக்கும், தாகத்திற்கும் பதிலாக, அவருடைய ஜனங்கள் மீண்டும் ஒருமுறை செழுமையை அனுபவிக்கும்போது, ​​"கர்த்தருடைய கரம் அதைச்செய்தது" (வ. 20) என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்.

அவரே இன்றும் புனரமைப்பின் ஆக்கியோன், "சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு" (ரோமர் 8:20) , சுதந்திரம் என்ற எதிர்கால நிலைக்கு உருவாக்கும் பணியில் கிறிஸ்து ஈடுபட்டுவிட்டார். அவருடைய நற்குணத்தில் (அன்பில்)நாம் நம்பிக்கை கொள்கையில், ​​நம்பிக்கை சாத்தியமாகும் எதிர்காலத்தைக் காண அவர் நமக்கு உதவுவார்.

 

நாம் நம்பத்தகுந்த சிருஷ்டிகர்

மேரி ஷெல்லியின் “ஃபிராங்கண்ஸ்டைன்” என்ற பிரபல நாவலில் உள்ள “அரக்கன்” மிகவும் பரவலாக அறியப்பட்ட இலக்கிய பாத்திரங்களில் ஒன்றாகும். ஆனால் அந்த நாவலை ஆழமாய் படித்தவர்கள், அந்த அரக்கனை தோற்றுவித்த மாயை விஞ்ஞானியான விக்டர் ஃபிராங்கண்ஸ்டைனையே உண்மையான அரக்கனாக ஷெல்லி சித்தரிக்கிறார் என்று அறிவர். புத்திசாலித்தனமான உயிரினத்தை உருவாக்கிய பிறகு, விக்டர் அதற்கு வழிகாட்டுதல், தோழமை அல்லது மகிழ்ச்சியின் நம்பிக்கையை கொடுக்க மறுக்கிறார். அந்த உயிரினம், விரக்தி மற்றும் கோபப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஓர் தருணத்தில் அந்த உயிரினம் விக்டரைப் பார்த்து, “என் படைப்பாளியே, நீ என்னை துண்டு துண்டாக கிழித்து வெற்றி பெறும்” என்று கூறுவதைப் பார்க்கமுடியும். 

ஆனால் தன் படைப்புகள் மது தீராத அன்புகொண்ட மெய்யான சிருஷ்டிகர் எப்பேற்பட்டவர் என்பதை வேதம் வெளிப்படுத்துகிறது. ஏதோ சிருஷக்கவேண்டும் என்பதற்காக தேவன் உலகத்தை படைக்கவில்லை, மாறாக, அதை அழகாகவும் நேர்த்தியாகவும் படைத்திருக்கிறார் (ஆதியாகமம் 1:31). ஆனால் கொடூரமான தீமையைத் தேர்ந்தெடுக்க மனிதகுலம் அவரிடமிருந்து திசைமாறியபோதும், மனிதகுலத்திற்கான தேவனுடைய அர்ப்பணிப்பும் அன்பும் மாறவில்லை.

நிக்கோதேமுக்கு இயேசு விளக்கியதுபோல், தன்னுடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்காய் பலியாய் கொடுக்குமளவிற்கு இந்த உலகத்தின்மீதான தேவனுடைய அன்பு விலையேறப்பெற்றது (யோவான் 3:16). இயேசு தம்மையே பலியாய் ஒப்புக்கொடுத்து, நம்முடைய பாவத்தின் விளைவுகளைச் சுமந்துகொண்டு, “தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு” (வச. 15) நம்மை உயர்த்துகிறார். 

நாம் மனப்பூர்வமாய் நம்பக்கூடிய ஓர் சிருஷ்டிகர் நமக்கு இருக்கிறார். 

 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் கேட்கிறார்

நடிகரும், தற்காப்புக் கலைஞருமான சக், தனது தாயாரின் நூறாவது பிறந்தநாளில், தனது மனமாற்றத்திற்கு அவர் எவ்வளவு உதவியாக இருந்தார் என்பதைப் பகிர்ந்துகொண்டு அவரது தாயைக் கௌரவித்தார். "அம்மா விடாமுயற்சி மற்றும் நம்பிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு" என்று அவர் எழுதினார். மகா பஞ்சகாலத்தில், தன் மூன்று ஆண் குழந்தைகளைத் தானே பராமரித்தாள்; இரண்டு வாழ்க்கைத் துணைவர்கள், ஒரு மகன், ஒரு வளர்ப்பு மகன் மற்றும் பேரக்குழந்தைகளின் மரணங்களைச் சகித்தாள்; மற்றும் பல அறுவை சிகிச்சைகளை தாங்கினாள். "சிறிதோ, பெரிதோ [அவள்] என் வாழ்நாள் முழுவதும் எனக்காக ஜெபித்தாள்." என்றவர் மேலும், "திரைத்துறையில் என்னை அர்ப்பணிக்கையிலும், அவள் என் வெற்றி மற்றும் இரட்சிப்புக்காக வீட்டில் ஜெபித்தாள்." என்றும், " நான் எவ்வாறு இருக்கவேண்டுமோ, இருக்க கூடுமோ அவ்வாறே என்னைத் தேவன் மாற்றியதற்காக என் அம்மாவுக்கு நன்றி." என்று முடித்தார்.

சக்கின் தாயின் பிரார்த்தனைகள் அவருக்கு இரட்சிப்பையும், தேவனுக்குப் பயந்த மனைவியையும் கண்டறிய உதவியது. அவள் தன் மகனுக்காக ஊக்கமாக ஜெபித்தாள், தேவன் அவளுடைய ஜெபங்களைக் கேட்டார். எப்பொழுதும் நமது ஜெபங்களுக்கு நாம் விரும்பும் விதத்தில் பதில் கிடைப்பதில்லை, எனவே ஜெபத்தை மந்திரக்கோலாகப் பயன்படுத்த முடியாது. இருப்பினும் யாக்கோபு, "நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.” (5:16) என்று நமக்கு உறுதியளிக்கிறார். இந்த அம்மாவை போலவே, நோயுற்றவர்களுக்காகவும், பிரச்சனையில் இருப்பவர்களுக்காகவும் நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும் (வவ. 13-15). அவளைப் போலவே, நாம் ஜெபத்தின் மூலம் தேவனுடன் தொடர்பு கொள்ளும்போது, உற்சாகத்தையும் அமைதியையும், ஆவியானவர் செயல்படுகிறார் என்ற உறுதியையும் கண்டுகொள்கிறோம்.

உங்கள் வாழ்க்கையிலுள்ள யாருக்காவது ஒருவருக்கு இரட்சிப்பு அல்லது குணமடைதல் அல்லது உதவி தேவையா? விசுவாசத்துடன் உங்கள் ஜெபங்களைத் தேவனிடம் கொண்டுசெல்லுங்கள். அவர் கேட்கிறார்.

சொல்லும் அறை

ஒற்றுமை மற்றும் நட்பை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான வழியை வடக்கு ஸ்பெயின் உருவாக்கியது. கையால் செய்யப்பட்ட குகைகள் நிறைந்த கிராமப்புறங்களில், ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் சில விவசாயிகள் ஒரு குகைக்கு மேலே கட்டப்பட்ட ஒரு அறையில் அமர்ந்து, உணவுகளையும் இருப்பு வைப்பார்கள். காலப்போக்கில், அந்த அறை "சொல்லும் அறை" என்றானது. நண்பர்களும் குடும்பத்தினரும் தங்கள் கதைகள், ரகசியங்கள் மற்றும் கனவுகளைப் பகிர்ந்து கொள்ள ஒன்றுகூடும் இடமானது. நம்பிக்கையான நண்பர்களின் நெருக்கமான உறவாடுதல் உங்களுக்குத் தேவைப்பட்டால், நீங்கள் “சொல்லும் அறை”க்குச் செல்வீர்கள்.

அவர்கள் வடக்கு ஸ்பெயினில் வாழ்ந்திருந்தால், யோனத்தானும் தாவீதும் பகிர்ந்து கொண்ட ஆழமான நட்பு அவர்களை ஒரு சொல்லும் அறையை உருவாக்க வழிவகுத்திருக்கலாம். தாவீதைக் கொல்ல வேண்டும் என்று சவுல் ராஜா மிகவும் பொறாமைப்பட்டபோது, சவுலின் மூத்த மகனான யோனத்தான் அவரைப் பாதுகாத்து நண்பனானார். இருவரின் ஆத்துமாக்களும் "ஒன்றாய் இசைந்திருந்தது" (1 சாமுவேல் 18:1). மேலும் யோனத்தான் "ஆத்துமாவைப் போலச்" சிநேகித்தான் (வவ. 1, 3). மேலும், தானே அரியணைக்கு வாரிசாக இருந்தபோதிலும், ராஜாவாக தாவீதின் தெய்வீகத் தேர்ந்தெடுப்பையும் அங்கீகரித்தார். அவன் தாவீதுக்கு அவனுடைய மேலங்கி, வாள், வில், கச்சை ஆகியவற்றைக் கொடுத்தான் (வச. 4). பின்னர், தாவீது யோனத்தானின் நண்பராக அவர் மீது கொண்டிருந்த ஆழ்ந்த அன்பு ஆச்சரியமாயிருந்தது என்று அறிவித்தார் (2 சாமுவேல் 1:26).

இயேசுவின் விசுவாசிகளாக, கிறிஸ்துவைப் போன்ற அன்பையும் அக்கறையையும் பிரதிபலிக்கும் நட்பைக் கட்டியெழுப்ப அவர் நமக்கு உதவட்டும். நண்பர்களுடன் நேரம் ஒதுக்கவும், நம் இதயங்களைத் திறக்கவும், அவரில் ஒருவருக்கொருவர் உண்மையான ஒற்றுமையுடன் வாழவும் செய்வோமாக..

கிருபையின் மறுதொடக்கம்

கடந்த பல தசாப்தங்களாக திரைப்பட சொற்களஞ்சியத்தில் ஒரு புதிய சொல் நுழைந்துள்ளது, அது "மறுதொடக்கம்". திரைத்துறை பாணியில், ஒரு பழைய கதையை அதை மறுதொடக்கம் செய்து ஆரம்பிப்பதாகும். சில மறுதொடக்கங்கள் ஒரு அசகாய சூரனை பற்றியோ கற்பனை படைப்பு போன்றோ பழக்கமான கதையை மீண்டும் கூறுகின்றன. மற்ற மறுதொடக்கங்கள் அதிகம் அறியப்படாத கதையை எடுத்து புதிய வழியில் அக்கதையை மறுபரிசீலனை செய்கின்றன. ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மறுதொடக்கம் என்பது மீண்டும் செய்வது போன்றது. இது ஒரு புதிய தொடக்கம், பழையதான ஒன்றுக்கு புதிய வாழ்வு கொடுக்கப்படுகிறது.

மறுதொடக்கங்களை உள்ளடக்கிய மற்றொரு கதை உள்ளது, அது நற்செய்தி கதை. அதில், இயேசு தம்முடைய மன்னிப்பு, பரிபூரணம் மற்றும் நித்திய ஜீவனுக்கு நம்மை அழைக்கிறார் (யோவான் 10:10). புலம்பல் புத்தகத்தில், எரேமியா நமக்குத் தேவனின் அன்பு ஒவ்வொரு நாளையும் கூட ஒரு வகையில் மறுதொடக்கம் செய்கிறதை நமக்கு நினைவூட்டுகிறார்: " நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.” (3:22-23).

தேவனின் கிருபையானது, ஒவ்வொரு நாளையும் அவருடைய உண்மைத்தன்மையை அனுபவிக்க ஒரு புதிய வாய்ப்பாக ஏற்றுக்கொள்ள நம்மை அழைக்கிறது. நம்முடைய சொந்த தவறுகளின் விளைவுகளுடன் நாம் போராடினாலும் அல்லது வேறு பல கஷ்டங்களைச் சந்தித்தாலும் தேவனின் ஆவியானவர் ஒவ்வொரு புதிய நாளிலும், மன்னிப்பு,  புதிய வாழ்க்கை மற்றும் நம்பிக்கையை அருள முடியும். ஒவ்வொரு நாளும் ஒரு வகையான மறுதொடக்கம் ஆகும். நமது சிறந்த இயக்குநரின் வழியைப் பின்பற்றுவதற்கான ஒரு வாய்ப்பு.  அவர் நம் கதையை அவரது பெரிய கதையில் ஒன்றாய் பின்னுகிறார்.