எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

tim gustafsonகட்டுரைகள்

தேவனுடைய சமாதானத் தூதுவர்கள்

நோரா, நியாயத்தின் தேவையை உறுதியாய் அறிந்திருந்ததினால், அறப்போராட்டத்திற்குச் சென்றாள். திட்டமிட்டபடி, ஆர்ப்பாட்டம் அமைதியாக நடந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் டவுன்டவுன் என்ற பகுதியில் சத்தமேயில்லாமல் அமைதியான முறையில் ஊர்வலமாய் சென்றனர். 

அப்போது இரண்டு பேருந்துகள் திடீரென்று கொண்டுவரப்பட்டது. வெளியூர்களில் இருந்து போராட்டக்காரர்கள் வந்திருந்தனர். சடுதியில் ஓர் கலவரம் வெடித்தது. மனம் உடைந்தவளாய் நோரா அங்கிருந்து வெளியேறினாள். அவர்களின் நல்ல எண்ணம் பலனளிக்கவில்லை என்று அவளுக்கு தோன்றியது.

அப்போஸ்தலனாகிய பவுல் எருசலேம் ஆலயத்திற்குச் சென்றபோது, பவுலை எதிர்த்தவர்கள் அவரை அங்கே பார்த்தனர். அவர்கள் ஆசியா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் (அப்போஸ்தலர் 21:27). அவர்கள் தங்களுடைய வாழ்க்கை முறைக்கு இயேசுவை அச்சுறுத்தலாகக் கருதினர். பவுலைப் பற்றிய பொய்களையும் வதந்திகளையும் கூச்சலிட்டு, அவர்கள் துரிதமாய் பிரச்சனையைக் கிளப்பினார்கள் (வச. 28-29). ஒரு கலவரக் கூட்டத்தினர் பவுலை ஆலயத்திலிருந்து இழுத்து சென்று அடித்தது. காவலாளிகள் துரிதமாய் ஓடிவந்தனர்.

பவுல் கைதுசெய்யப்படுகையில், மக்களிடத்தில் பேச முடியுமா என்று ரோம தளபதியிடம் அனுமதி கேட்டார் (வச. 37-38). அனுமதி கிடைத்ததும், அவர் கூட்டத்தினரிடம் அவர்களின் சொந்த மொழியில் பேசி, அவர்களை ஆச்சரியப்படுத்தி, அவர்களை ஈர்த்தார் (வச. 40). பெரிய கலகத்தை, தான் எவ்விதம் பிரயோஜனமற்ற ஓர் மதத்திலிருந்து மீட்கப்பட்டேன் என்னும் இரட்சிப்பின் சாட்சியைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பாக பவுல் மாற்றிக்கொண்டார் (22:2-21).

சிலர் வன்முறை மற்றும் பிரிவினையை விரும்புகிறார்கள். சோர்ந்துபோகாதிருங்கள். அவர்கள் ஜெயங்கொள்ளமாட்டார்கள். இந்த அவநம்பிக்கையான உலகத்தில் தம் ஒளியையும் அமைதியையும் பிரதிபலிக்க தைரியமான விசுவாசிகளை தேவன் தேடுகிறார். ஓர் நெருக்கடியான சூழ்நிலை, தேவனுடைய அன்பைப் பகிர்ந்துகொள்ளும் அழகான வாய்ப்பாக இருக்கக்கூடும். 

 

ஒரே ஒரு தொடுதல்

ஒரு சாதாரண தொடுதல் தான். ஆனால், அது காலினின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது இயேசுவின் விசுவாசிகளுக்கு அதிக எதிர்ப்பைத் தெரிவிக்கும் பகுதிக்குச் சென்று, தொண்டு செய்யும்படி அவனுடைய குழுவினர் ஆயத்தப்படுகையில், அவனுடைய மன அழுத்தம் வெகுவாக அதிகரித்தது. அவன் தன் கவலைகளை, அக்குழுவிலுள்ள ஒருவரோடு பகிர்ந்தான். அந்த நண்பன் நின்று, தன் கையை அவன் தோள் மீது வைத்து, அவனை ஊக்கப்படுத்தும் சில வார்தைகளைப் பகிர்ந்து கொண்டான். காலின் ,அந்த தொடுதலை, தன் வாழ்வின் திருப்பு முனையாக நினைத்துப் பார்க்கின்றான். தேவன் அவனோடு இருக்கிறார் என்ற உண்மை வல்லமையாக அவனுக்குள் கிரியை செய்தது.

இயேசுவுக்கு மிக அன்பான சீடனான யோவான், சுவிசேஷத்தைப் பரப்பியதற்காக நாடு கடத்தப்பட்டு, பத்மு தீவில் தனித்து விடப்பட்டான். அப்பொழுது அவன், “எக்காளசத்தம் போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக்” கேட்டான் (வெளி. 1:10). அதனைத் தொடர்ந்து தேவனுடைய தரிசனத்தைக் கண்டான். அப்பொழுது யோவான், “செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தான்” பயந்து நடுங்கிய அந்த வேளையில், ஆறுதலையும், தைரியத்தையும் பெற்றுக்கொண்டு, எழுத ஆரம்பிக் கின்றான். “அவர் தம்முடைய வலது கரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;” (வச. 17) என்றெழுதினான்.

தேவன் நம்முடைய வசதியான வாழ்விலிருந்து நம்மை வெளியே எடுத்து, புதிய காரியங்களைக் காண்பிக்கின்றார், நம்மை வளைய வைத்து, வளரச் செய்கின்றார். நமக்கு தைரியத்தையும், ஆறுதலையும் தந்து எல்லா சூழ்நிலைகளின் வழியாகவும் கடந்து செல்லப் பண்ணுகின்றார். நம் சோதனைகளின் மத்தியில், நம்மை அவர் தனியே விடுவதில்லை. எல்லாவற்றையும் அவர் கட்டுப்படுத்துகின்றார், நம்மை அவருடைய கரங்களில் வைத்துள்ளார்.

 

மாயக்காரரைக் குறித்து தேவன்

“என்னுடைய குழுவிலுள்ள நபர் ஒருவர் இதைச் செய்திருந்தால் நான் மிகவும் வருத்தப் பட்டிருப்பேன்’’ என்று ஒரு கிரிக்கெட் வீரர், 2016 ஆம் ஆண்டு நடை பெற்ற ஒரு போட்டியில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட்வீரர் ஒருவர் ஏமாற்றியதைக் குறித்து இப்படிச் சொன்னார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அதே கிரிக்கெட் வீரர், இதே போன்ற மற்றொரு ஏமாற்று வேலையைச் செய்தமைக்காகப் பிடிபட்டார். 

இப்படிப்பட்ட மாய்மாலமான செயல்கள் நம்மை அதிர்ச்சியடையச் செய்கின்றன .ஆதியாகமம் 38ல் குறிப்பிடப் பட்டுள்ள யூதாவின் மாய்மாலம் மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்துகின்றது. தாமாரைத் திருமணம் செய்த தனது இரு மகன்களும் மரித்த பின்பு, யூதா அவளுக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல் இருந்து விடுகிறான் (வச. 8-11). ஏமாற்றமடைந்த தாமார் தன்னை மறைத்து, ஒரு வேசியைப் போல முக்காடிட்டுக் கொண்டு யூதாவைச் சந்தித்து, அவனோடு சேருகின்றாள் (வச. 15-16).

ஆனால் கைம்பெண்ணான தன்னுடைய மருமகள் கர்ப்பவதியானாள் என்று கேள்வி பட்டபோது ,அவன் அவளைக் கொலை செய்யும்படி எழும்புகின்றான். “அவளை வெளியே கொண்டு வாருங்கள்; அவள் சுட்டெரிக்கப்பட வேண்டும்” என்கின்றான் (வச. 24). ஆனால், யூதாவே அதற்குக் காரணமானவன் என்பதற்கு அவள் சான்று வைத்திருந்தாள் (வச. 25).

அங்கு யூதா உண்மையை மறைத்திருக்கலாம். ஆனால் அவன் தன்னுடைய இரட்டை வேடத்தை ஒத்துக்கொண்டான். அவளுடைய எதிர்காலத்திற்கான பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றான். என்னிலும் அவள் நீதியுள்ளவள் என்கின்றான் (வச. 26).

யூதா மற்றும் தாமாரின் இருண்ட பகுதியை தேவன் பிணைத்து நமக்கான மீட்பின் கதையை உருவாக்குகின்றார். தாமாரின் பிள்ளைகள், இயேசுவின் முன்னோர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றனர் (மத். 1:2-3).

ஆதியாகமம் 38ஆம் அதிகாரம் ஏன் வேதாகமத்தில் இடம் பெற்றது? ஒன்று, மனிதனின் திருக்குள்ள இருதயத்தைக் காட்டவும் ,மற்றொன்று தேவனின் அன்பும், கிருபையும்,கருணையும் நிறைந்த இருதயத்தைக் காட்டவுமே.

 

நான் யார் ?

டேவ், தன்னுடைய வேலையை ஆர்வத்தோடு செய்து கொண்டிருந்தான். ஆனால், நீண்ட காலமாக அவன் ஏதோவொன்றை நோக்கி இழுக்கப்  படுவதை உணர்ந்தான். இப்பொழுது ,அவன் தன் கனவினை நனவாக்க, தேவபணி செய்யும் படி காலெடுத்து வைத்துள்ளான். ஆனால் அவனுக்குள் அநேக சந்தேகங்கள் தோன்றிக் கொண்டேயிருந்தன.

அவன் தன் நண்பனிடம்,” நான் இந்த பணிக்குத் தகுதியானவன் அல்ல” என்றான். “இந்தப் பணிக் குழு என்னுடைய உண்மையான குணத்தை அறிந்திருக்கவில்லை. நான் நல்லவனல்ல” என்று கூறினான்.

டேவ்வைப் போன்ற ஒருவரான மோசேயை நினைத்துப் பார்ப்போம். அவருடைய தலைமைத்துவ பண்பும், பெலனும், பத்து கட்டளைகளுமே நம் நினைவிற்கு வருகின்றன. ஆனால் மோசே, ஒரு மனிதனைக் கொன்று விட்டு வனாந்திரத்திற்கு ஓடிப்போனதை நாம் மறந்து விடுகிறோம். அவருடைய முன் கோபத்தையும், தேவன் அழைத்த போது உடனே சரியெனக் கூறத் தயங்கியதையும் நாம் பெரியதாக நினைப்பதில்லை.

  தேவன் புறப்படும் படி கட்டளை கொடுத்த போது (யாத். 3:1-10), மோசே தனக்கு போதிய தகுதி இல்லையென தட்டிக் கழிக்கின்றான். அவன் தேவனோடு நீண்ட வாக்கு வாதங்களைச் செய்கின்றான். தேவனிடம், “நான் எம்மாத்திரம் ?” (வச. 11) எனக் கேட்கின்றான். தேவன் அவனிடம் “நான் இருக்கிறவராக இருக்கிறேன்” (வச. 14) என்கின்றார். இந்த மர்மப்பெயரை நம்மால் விளக்க முடியாது. நம்முடைய விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட தேவன் தன்னுடைய முடிவில்லாத தன்மையை மோசேக்கு விளக்குகின்றார்.

நம்மை பெலவீனனாக  காட்டும் உணர்வு நமக்குள் வலுவாக உள்ளது. தேவன் நம்மை பயன்படுத்துவதற்குத் தடையாக நாம் இதனை பயன்படுத்துவோமாயின் நாம் அவரை துக்கப்படுத்துகின்றோம். நம்முடைய பெலவீனங்களைப் பெரிதாக்கி, அவருடைய பணியைச் செய்ய மறுக்கும் போது, தேவன் நமக்குப் போதுமானவராக இல்லை என கூறுகின்றோம்.

நான் யார்? என்பது கேள்வியல்ல, இருக்கிறவராக இருக்கிறேன் என்றவர் யார் என்பதே கேள்வி.

எவ்வளவு விலையானாலும்

கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலைப் பற்றிய திரைப்படம், ஆரம்ப நாட்களில் சபைகளில் ஏற்பட்ட துன்பங்களை அப்படியே காட்டுகின்றது. அந்த திரைப்படத்தில் வருகின்ற சிறிய கதாப்பாத்திரங்கள் கூட இயேசுவைப் பின்பற்றுவது மிகவும் ஆபத்தானது என வெளிப்படுத்துகின்றன. அப்படத்தில் வரும் கதாபாத்திரங்களான அடிபடும் ஒரு பெண், அடிக்கப் படும் ஒரு ஆண் இன்னும் தங்கள் உயிரையேயிழந்த நபர்கள் 1, 2, 3 எனக் காணும் போது, இவ்வாறு சிந்திக்கத் தோன்றும்.

கிறிஸ்துவோடு நம்மை ஐக்கியப் படுத்துவது என்பது மிகவும் விலையேறப் பெற்றது. உலகின் பல பகுதிகளில் நடைபெறும் காரியங்கள்  இயேசுவைப் பின்பற்றுவது மிக ஆபத்தானது எனக் காட்டுகின்றது. இன்றும் அநேக ஆலயங்கள் இத்தகைய துன்பங்களைச் சந்திக்கின்றன. நம்மில் சிலர் தங்களுடைய விசுவாசத்தினிமித்தம் இழிவாக நடத்தப் படலாம், அல்லது தங்களுக்கு வர வேண்டிய பதவி உயர்வு அவர்களின் விசுவாசத்தினிமித்தம் கொடுக்கப் படாமல் தடுக்கப் பட்டிருக்கலாம்.

ஆயினும் சமுதாய அந்தஸ்தை தியாகம் செய்வதற்கும், தங்களுடைய வாழ்வையே தியாகம் செய்வதற்கும் மிகப் பெரிய வேறுபாடுள்ளது. உண்மையில் தன்னார்வம், பொருளாதார நிலைப்பாடு, சமுதாய அந்தஸ்து ஆகியவை எப்பொழுதும் மனிதனை ஈர்த்துக் கொள்ளுபவை. இத்தகைய செயல்களை இயேசுவின் காலத்தில் அவரைப் பின்பற்றியவர்களிடமும்  காண்கிறோம். இயேசு சிலுவையில் அறையப் படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு வரை அநேக இஸ்ரவேலர் இயேசுவைப் புறக்கணித்த போதும் (யோவா. 12:37) அதிகாரிகளிலும் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். (வச. 42) என யோவான் எழுதுகின்றார். ஆனாலும் அவர்கள் தங்கள் விசுவாசத்தை அறிக்கை பண்ணாதிருந்தார்கள். ஏனெனில் அவர்கள் தேவனுடைய பாராட்டுதலை விட மனிதனின் புகழ்ச்சியையே அதிகம் விரும்பினார்கள் (வ42-43)

இன்றைக்கும் சமுதாயச் சூழல்கள், கிறிஸ்துவின் மீது நாம் வைத்துள்ள  விசுவாசத்தை மறைத்துக் கொள்ளச் செய்கின்றது. ஆனால் என்ன விளைவைச் சந்திக்க நேர்ந்தாலும், நாம் அனைவரும் மனிதனின் புகழ்ச்சியை நாடாமல் தேவனுடைய பார்வைக்கு நலமானதைச் செய்ய ஒன்றுபட்டு நிற்போம்.

போர்க்களத்திற்குச் செல்லாமல்

ஒரு சிறு பிள்ளையாக, தன் பெற்றோரிடம் மிகவும் கடினமான வார்த்தைகளை அவள் பேசினாள். அதுவே அவள் பெற்றோரிடம் கடைசியாக பேசின வார்த்தைகள் என்பதை அவள் சிறிதளவும் உணரவில்லை. இப்பொழுது, பல வருடங்கள் ஆலோசனை கொடுத்த போதும், அவளால் தன்னை மன்னிக்கவே முடியவில்லை. குற்ற உணர்வும், ஆழமான துக்கமும் அவளை முடக்கி வைத்தது.

நாம் எல்லாரும் ஆழமான துக்கத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சில துக்கங்கள் மகா பயங்கரமானவைகள். ஆனால், வேதாகமம் இந்த மாபெரும் துக்கத்தில் இருந்து கடந்து செல்ல வழியினைக் காட்டுகின்றது. ஒரு உதாரணத்தை நாம் காணலாம்.

தாவீது ராஜா செய்ததற்கு ஒரு இனிப்பு மூலாம் பூச முடியாது. அது 'இராஜாக்கள் போருக்குப் போகின்ற காலம்." ஆனால் தாவீது 'எருசலேமிலேயே தங்கிவிட்டார்" (2 சாமு. 11:1). போர்க்களத்திலிருந்து

தூரத்தில் இருந்தபடியால், அடுத்தவனுடைய மனைவியை கொள்ளையிட்டதுமன்றி, அதை ஒரு கொலையின் மூலமாக மூடி மறைக்கிறான் (வச. 2-5, 14-15). தேவன் தாவீதின் கீழ்நோக்கி மூழ்குதலைத் தடுத்து நிறுத்தினார். ஆனால், இராஜா மீதமுள்ள தன் வாழ்நாளில், தன் பாவத்தை அறிந்தவனாக வாழவேண்டும்.

தாவீது சாம்பலில் இருந்து எழுந்தவுடனே, அவனுடைய தளபதி யோவாப், தாவீது முன்னிருந்து நடத்தவேண்டிய போரினை ஜெயித்து வந்தான். யோவாப் தாவீதிற்கு சவால் கொடுக்கிறார், 'நீர் மற்ற ஜனங்களைக் கூட்டிக்கொண்டு வந்து பட்டணத்தை முற்றிகைபோட்டு பிடிக்க வேண்டும்". இறுதியாக தாவீது கர்த்தர் விரும்பின இடத்திற்கு ஒரு தேசத்தின் தலைவனாகவும், இராணுவத்தின் தலைவனாகவும் வந்து சேர்ந்தார் (வச. 29).

நாம் நம்முடைய கடந்தகால நிகழ்வுகள் நம்மை அழுத்த அனுமதிக்கும் போது, நாம் கர்த்தருடைய கிருபை போதுமானதாக இல்லை என்றே கூறுவதாக அமைகிறது. அது நாம் என்ன பாவத்தை செய்திருக்கிறோம் என்பதைப் பொறுத்ததாக இல்லாமல் இருக்கிறது. நம்முடைய தகப்பன் நமக்கு முழுமையான மன்னிப்பினை அருளுகிறார். தாவீது தன் போர்க்களத்திற்குத் திரும்பச் சென்றதுபோல நாமும் அவருடைய கிருபையைப் பெற்று வாழலாம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கவலைகளை களையெடுக்கவும்

எனது வீட்டு முற்றத்தில் உள்ள ஒரு நடவு இயந்திரத்தின் மூலம் சில விதைகளை விதைத்துவிட்டு, அதன் விளைச்சலைப் பார்க்க காத்திருந்தேன். பத்து முதல் பதினான்கு நாட்களுக்குள் விதைகள் முளைக்கும் என்று அறிந்து, நான் அதற்கு நீர் பாய்ச்சி பராமரித்தேன். விரைவில் சில பச்சை இலைகள் மண்ணிலிருந்து வெளியேறுவதைக் கண்டேன். ஆனால் அவை களைகள் என்று எனது கணவர் என்னிடம் சொன்னபோது நான் பதற்றமடைந்தேன். நான் வளர்க்க முயற்சிக்கும் செடிகளை அவை நெரித்துவிடாதபடி விரைவாக அவைகளை வெளியே இழுக்கும்படி எனது கணவர் என்னை ஊக்குவித்தார்.

நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய ஊடுருவல்காரர்களைக் கையாள்வதன் முக்கியத்துவத்தையும் இயேசு அறிவிக்கிறார். அவர் தனது உவமையின் ஓர் பகுதியை இவ்வாறு விளக்கினார்: விதைப்பவன் ஒருவன் தன்னுடைய விதைகளை விதைத்தபோது, அவற்றுள் “சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது” (மத்தேயு 13:7). முட்களும் களைகளும் தாவரங்களின் வளர்ச்சியை வெகுவாய் பாதிக்கக்கூடியவைகள் (வச. 22). அதுபோல கவலைகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வேதத்தை வாசிப்பதும் ஜெபிப்பதும் நமது விசுவாசத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள். ஆனால் கவலையின் முட்களைக் களையெடுப்பதில் நான் கவனம்செலுத்தவேண்டும் என்பதை உணர்ந்தேன். அவைகள் என்னுள் விதைக்கப்பட்ட நல்ல வசனத்தை நெருக்கி, தவறாய் என்னை திசைதிருப்பக்கூடும். 

வேதத்தில் காணப்படும் ஆவியின் கனிகளானது, அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்றவற்றை உள்ளடக்கியது (கலாத்தியர் 5:22). ஆனால் நாம் அந்த பலனைக் கொடுப்பதற்கு, தேவனுடைய வல்லமையோடு நம்மைத் திசைதிருப்பக்கூடிய அல்லது நம்முடைய கவனத்தை மாற்றக்கூடிய சந்தேகம் போன்ற கவலையின் களைகளை புறம்பாக்கிட வேண்டும். 

 

இணைந்து இயேசுவுக்கு ஊழியம் செய்தல்

மைக்ரோனேசியாவில் உள்ள ஓர் தீவில் சிக்கித்தவிக்கும் இரண்டு ஆண்களுக்கு உதவ மீட்புப் பணியாளர்கள் பிரயாசப்பட்டனர். அவர்களுக்கு சுகாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு அவர்களை விரைந்து காப்பாற்றுவதற்கு குழுவாய் செயல்படவேண்டியது அவசியமாய் தோன்றியது. அவர்களை முதலில் கண்டுபிடித்த விமானி, அவர்களின் அருகாமையிலிருந்த ஆஸ்திரேலிய கப்பலுக்கு செய்தியனுப்பினார். கப்பல், இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியது, அவை உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கின. பின்னர், அமெரிக்க கடலோர காவல்படை அங்கு வந்து ஆட்களை சரிபார்த்து தகவல் அளித்தனர். இறுதியாக, ஓர் மைக்ரோனேசிய ரோந்துப் படகு அவர்களை பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்துவிட்டது.

நாம் இணைந்து செயல்பட்டால் நிறைய சாதிக்க முடியும். பிலிப்பிய விசுவாசிகள் அப்போஸ்தலர் பவுலை ஆதரிக்க தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்தனர். லீதியாளும் அவரது குடும்பத்தினரும் அவரை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றனர் (அப்போஸ்தலர் 16:13-15). கிலேமெந்து, எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் (இவர்கள் ஒத்துப்போகவில்லை) அனைவரும் நற்செய்தியைப் பரப்புவதற்கு அப்போஸ்தலருடன் நேரடியாக வேலை செய்தனர் (பிலிப்பியர் 4:2-3). பின்னர், பவுல் ரோமில் சிறையில் அடைக்கப்பட்டபோது, தேவாலயம் (விசுவாசிகள்) அவரது பராமரிப்புக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தை சேகரித்து, எப்பாபிராத்து மூலம் (வச. 14-18) விநியோகித்தது. பவுல் அப்போஸ்தலரின் ஊழியத்திற்காக பிலிப்பிய திருச்சபை தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருந்திருக்கக் கூடும் (1:19).

இந்த பண்டைய திருச்சபை விசுவாசிகள் ஒன்றாக இணைந்து ஊழியம் செய்ததற்கான எடுத்துக்காட்டுகள் இன்று நம்மை ஊக்குவிக்கும். தேவன் நம்மை வழிநடத்தி, நமக்கு அதிகாரம் கொடுத்ததால், ஜெபிக்கவும் மற்றவர்களுக்கு ஊழியம்செய்யவும், சக விசுவாசிகளுடன் ஒத்துழைக்கவும், நம்மால் இயன்றதைவிட அதிகமாக செய்யமுடிகிறது. “தனித்து வேலை செய்தால் நாம் ஒரு துளி, ஆனால் இணைந்து வேலை செய்தால் நாம் சமுத்திரம்.”

 

தேவனே என் துணையாளர்

என் நண்பர் ராலே தனது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை நோக்கி விரைகிறார்! அவரை நான் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எனக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஆதாராமாக அவர் இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஓர் புத்தகம் எழுதும் பணியை நிறைவுசெய்துவிட்டு, வேறொரு வேலையை செய்வதாக என்னிடம் கூறினார். அவற்றைக் கேட்க எனக்கு ஆர்வமாயிருந்தது ஆனால் ஆச்சரியப்படவில்லை. 

தனது எண்பத்தைந்து வயதில், வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள காலேப் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை. தேவன் இஸ்ரவேலுக்கு வாக்களித்த கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்காக பல சகாப்தங்களாக வனாந்தர வாழ்க்கை மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், தேவபக்தியும் விசுவாசமும் அவரை தாங்கியது. அவர், “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:11) என்று உரைக்கிறார். அவர் எந்த வழிகளில் ஜெயங்கொள்வார்? “கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன்” (வச. 12) என்று காலேப் பதிலளிக்கிறார். 

வயது, வாழ்க்கையின் நிலை அல்லது சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனை முழுமனதோடு பற்றிகொள்ளும் யாவருக்கும் தேவன் உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். நமக்கு உதவும் நம் இரட்சகராகிய இயேசுவில், தேவன் வெளிப்பட்டார். சுவிசேஷங்கள், கிறிஸ்துவிடத்திலிருந்து தேவன்மீது விசுவாசம் வைப்பதை நமக்கு போதிக்கிறது. உதவிக்காக தேவனை அண்டிய யாவருக்கும் தேவன் தன் அக்கறையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எபிரெய நிருப ஆசிரியர் “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபிரெயர் 13:6) என்று அறிக்கையிடுகிறார். இளைஞரோ அல்லது வயதானவரோ, பலவீனமானவரோ அல்லது பலவானோ, கட்டுண்டவரோ அல்லது சுதந்திரவாளியோ, வேகமாக ஓடுகிறவரோ அல்லது முடவனோ, யாராக இருந்தாலும் இன்று அவருடைய உதவியைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுப்பது எது?