எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

tim gustafsonகட்டுரைகள்

ஒரு தேசிய முகாம்

மேற்கு ஆப்பிரிக்க வானத்துக்கும் எங்களுக்கும் இடையில் எதுவும் இல்லாதபடிக்கு, நட்சத்திரங்களின் கீழ் நாங்கள் முகாமிட்டோம். வறண்ட காலங்களில் கூடாரம் தேவையில்லை. ஆனால் நெருப்பு முக்கியமானது. “நெருப்பை அணைய விடாதே” என்று அப்பா ஒரு குச்சியால் மரக்கட்டைகளைத் தூண்டினார். நெருப்பு வனவிலங்குகளை எங்களுக்கு அருகாமையில் வரவிடாமல் தூரத்தில் வைத்திருந்தது. தேவனுடைய படைப்புகள் அற்புதமானவைகள் தான். ஆனால் உங்கள் முகாமில் சிறுத்தை அல்லது பாம்பு வந்துபோவதை நீங்கள் ஒருபோதும் விரும்பமாட்டீhர்கள்.

அப்பா கானாவின் மேல் பிராந்தியத்தில் ஒரு மிஷனரியாக பணியாற்றினார். அவருக்கு அனைத்து சூழ்நிலைகளிலிருந்தும் பாடத்தை கற்றுக்கொடுக்கும் திறன் இருந்தது. அந்த முகாமும் விதிவிலக்கல்ல.

தேவன் தம் ஜனங்களுக்கும், முகாம்களை போதிக்கிற ஒரு ஸ்தலமாகவே அனுமதித்திருந்தார். வருடத்திற்கு ஒருமுறை, ஒரு வாரம் முழுவதும், இஸ்ரவேலர்கள் “பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும்” (லேவியராகமம் 23:40) வைத்து தங்களுக்கான வீடுகளைக் கட்டிக்கொண்டு மகிழ்ந்திருக்க அனுமதிக்கப்பட்டனர். அதற்கு இரண்டு நோக்கங்கள் இருந்தது. தேவன் அவர்களிடம், “நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணினதை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு, ஏழுநாள் கூடாரங்களில் குடியிருக்கக்கடவீர்கள்” (வச. 42-43) என்று சொல்லுகிறார். ஆனாலும், அந்த நாட்கள் பண்டிகையாய் ஆசரிக்கப்படவேண்டும். “உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள்” (வச. 40). 

முகாமிடுவது என்பது உங்கள் வேடிக்கையான யோசனையாக இருக்காது. ஆனால் தேவன் தனது நன்மையை நினைவுகூர ஒரு மகிழ்ச்சியான வழியாக இஸ்ரவேலருக்கு ஒரு வார முகாமை ஏற்படுத்தினார். விடுமுறை நாட்களின் அர்த்தத்தை நாம் எளிதில் மறந்து விடுகிறோம். நம் பண்டிகைகள் நம் அன்பான தேவனின் தன்மையை நமக்கு வெளிப்படுத்தும் மகிழ்ச்சியான நினைவூட்டல்களாக இருக்கலாம். அவர் அதில் நமக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறார். 

 

செப்னாவின் கல்லறை

தமிழ் அரசியல்வாதியான கருணாநிதி, சென்னை மெரினா கடற்கரையில் தனது ஆசான் சி.என்.அண்ணாதுரையின் அருகில் அடக்கம் செய்யப்பட விரும்பினார். அவரது பகுத்தறிவு நம்பிக்கை காரணமாக, எந்த மதச் சடங்குகளும் செய்யப்படுவதை அவர் விரும்பவில்லை.

ஒரு பெரிய நினைவுச்சின்னம் அவர் அடக்கம் செய்யப்பட்ட  இடத்தில் உண்டு  என்றாலும் அவரது நம்பிக்கையானது அவரை மரணம் என்ற யதார்த்தத்திலிருந்து விலக்கி விடவில்லை என்பதுதான் உண்மை. நாம் இறந்தாலும் வாழ்க்கை கடந்து செல்கிறது என்பதே கசப்பான உண்மை.

யூதாவின் வரலாற்றில் ஒரு இக்கட்டான நேரத்தில், "அரமனை விசாரிப்புக்காரனான" செப்னா, மரணத்திற்குப் பிறகு தனக்கான மரபை நிலைநாட்ட, தனக்கென ஒரு கல்லறையை ஏற்படுத்தினான். ஆனால் தேவன், அவனுடைய தீர்க்கதரிசி ஏசாயா மூலம், "உயர்ந்த ஸ்தலத்திலே தன் கல்லறையை வெட்டி, கன்மலையிலே தனக்கு வாசஸ்தலத்தைத் தோண்டுகிறவனைப்போல, நீ உனக்கு இங்கே கல்லறையை வெட்டும்படிக்கு உனக்கு இங்கே என்ன இருக்கிறது? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்?" (ஏசாயா 22:16) என்றார். மேலும் தீர்க்கதரிசி, "அவர் உன்னை உருண்டையைப்போல அகலமும் விசாலமுமான தேசத்திலே சுழற்றி எறிந்துவிடுவார்; அங்கே நீ சாவாய்" (வ.18) என்றார்.

செப்னா தவறாகப் புரிந்துகொண்டான்.  நாம் எங்கே புதைக்கப்பட்டோம் என்பதல்ல,  நாம் யாரைச் சேவிக்கிறோம் என்பதே முக்கியம். இயேசுவைச் சேவிப்பவர்களுக்கு இந்த அளவிட முடியாத ஆறுதல் உண்டு: “கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள்.. பாக்கியவான்கள்” (வெளிப்படுத்தின விசேஷம் 14:13). நமது "மரணத்தை" ஒருபோதும் அலட்சியப்படுத்தாத தேவனை நாம் சேவிக்கிறோம். அவர் நமது வருகையை எதிர்பார்த்து நம்மை தமது வீட்டிற்கு வரவேற்கிறார்!

ஓர் தனிக் குரல்

முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த பாரிஸ் அமைதி மாநாட்டிற்குப் பிறகு, பிரெஞ்சு மார்ஷல் ஃபெர்டினாண்ட் ஃபோச் கசப்புடன், “இது சமாதானம் அல்ல. இது இருபது வருட தற்காலிக போர் நிறுத்தம்” என்றார். “அனைத்து போர்களையும் முடிவுக்குக் கொண்டுவரும் போரானது” பயங்கர மோதலாக இருக்கும் என்ற பிரபலமான கருத்துக்கு ஃபோச்சின் கருத்து முரண்பட்டது. இருபது ஆண்டுகள் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இரண்டாம் உலகப் போர் வெடித்தது. ஃபோச் சொன்னது சரிதான்.

நீண்ட காலத்திற்கு முன்பு, தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசியான மிகாயா, இஸ்ரேலுக்கு கடுமையான இராணுவ முடிவுகளைத் தொடர்ந்து தீர்க்கதரிசனமாய் உரைத்தார் (2 நாளாகமம் 18:7). இதற்கு நேர்மாறாக, ஆகாபின் நானூறு பொய் தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு யுத்தத்தில் வெற்றியை முன்னறிவித்தனர். ஆகாபின் அரண்மனையைச் சேர்நத ஒருவன் மிகாயாவிடம், “இதோ, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படிக்கு நன்மையாகச் சொல்லும் என்றான்” (வச. 12). 

அதற்கு மிகாயா, “என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று”..(வச. 13), “இஸ்ரவேலர் எல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல மலைகளில் சிதறப்பட்டதைக் கண்டேன்” (வச. 16) என்று சொல்லுகிறான். மிகாயா சொன்னது சரிதான். அராமியர்கள் ஆகாபை யுத்தத்தில் கொன்றனர் (வச. 33-34; 1 இராஜாக்கள் 22:35-36).

மிகாயாவைப் போலவே, இயேசுவைப் பின்பற்றும் நாமும் பிரபலமான மக்களின் நம்பிக்கைகளுக்கு முரணாகவே போதிக்கிறோம். இயேசு, “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6) என்று சொல்லுகிறார். இந்த செய்தி முரண்பாடாய் தெரிவதினால் அநேகர் அதை விரும்புவதில்லை. ஆனாலும் கிறிஸ்து ஓர்ஆறுதலான செய்தியைக் கொண்டு வருகிறார். தம்மிடம் வருகிற யாவரையும் அவர் வரவேற்கிறார்.

 

தேவனுடைய சமாதானத் தூதுவர்கள்

நோரா, நியாயத்தின் தேவையை உறுதியாய் அறிந்திருந்ததினால், அறப்போராட்டத்திற்குச் சென்றாள். திட்டமிட்டபடி, ஆர்ப்பாட்டம் அமைதியாக நடந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் டவுன்டவுன் என்ற பகுதியில் சத்தமேயில்லாமல் அமைதியான முறையில் ஊர்வலமாய் சென்றனர். 

அப்போது இரண்டு பேருந்துகள் திடீரென்று கொண்டுவரப்பட்டது. வெளியூர்களில் இருந்து போராட்டக்காரர்கள் வந்திருந்தனர். சடுதியில் ஓர் கலவரம் வெடித்தது. மனம் உடைந்தவளாய் நோரா அங்கிருந்து வெளியேறினாள். அவர்களின் நல்ல எண்ணம் பலனளிக்கவில்லை என்று அவளுக்கு தோன்றியது.

அப்போஸ்தலனாகிய பவுல் எருசலேம் ஆலயத்திற்குச் சென்றபோது, பவுலை எதிர்த்தவர்கள் அவரை அங்கே பார்த்தனர். அவர்கள் ஆசியா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் (அப்போஸ்தலர் 21:27). அவர்கள் தங்களுடைய வாழ்க்கை முறைக்கு இயேசுவை அச்சுறுத்தலாகக் கருதினர். பவுலைப் பற்றிய பொய்களையும் வதந்திகளையும் கூச்சலிட்டு, அவர்கள் துரிதமாய் பிரச்சனையைக் கிளப்பினார்கள் (வச. 28-29). ஒரு கலவரக் கூட்டத்தினர் பவுலை ஆலயத்திலிருந்து இழுத்து சென்று அடித்தது. காவலாளிகள் துரிதமாய் ஓடிவந்தனர்.

பவுல் கைதுசெய்யப்படுகையில், மக்களிடத்தில் பேச முடியுமா என்று ரோம தளபதியிடம் அனுமதி கேட்டார் (வச. 37-38). அனுமதி கிடைத்ததும், அவர் கூட்டத்தினரிடம் அவர்களின் சொந்த மொழியில் பேசி, அவர்களை ஆச்சரியப்படுத்தி, அவர்களை ஈர்த்தார் (வச. 40). பெரிய கலகத்தை, தான் எவ்விதம் பிரயோஜனமற்ற ஓர் மதத்திலிருந்து மீட்கப்பட்டேன் என்னும் இரட்சிப்பின் சாட்சியைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பாக பவுல் மாற்றிக்கொண்டார் (22:2-21).

சிலர் வன்முறை மற்றும் பிரிவினையை விரும்புகிறார்கள். சோர்ந்துபோகாதிருங்கள். அவர்கள் ஜெயங்கொள்ளமாட்டார்கள். இந்த அவநம்பிக்கையான உலகத்தில் தம் ஒளியையும் அமைதியையும் பிரதிபலிக்க தைரியமான விசுவாசிகளை தேவன் தேடுகிறார். ஓர் நெருக்கடியான சூழ்நிலை, தேவனுடைய அன்பைப் பகிர்ந்துகொள்ளும் அழகான வாய்ப்பாக இருக்கக்கூடும். 

 

ஒரே ஒரு தொடுதல்

ஒரு சாதாரண தொடுதல் தான். ஆனால், அது காலினின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது இயேசுவின் விசுவாசிகளுக்கு அதிக எதிர்ப்பைத் தெரிவிக்கும் பகுதிக்குச் சென்று, தொண்டு செய்யும்படி அவனுடைய குழுவினர் ஆயத்தப்படுகையில், அவனுடைய மன அழுத்தம் வெகுவாக அதிகரித்தது. அவன் தன் கவலைகளை, அக்குழுவிலுள்ள ஒருவரோடு பகிர்ந்தான். அந்த நண்பன் நின்று, தன் கையை அவன் தோள் மீது வைத்து, அவனை ஊக்கப்படுத்தும் சில வார்தைகளைப் பகிர்ந்து கொண்டான். காலின் ,அந்த தொடுதலை, தன் வாழ்வின் திருப்பு முனையாக நினைத்துப் பார்க்கின்றான். தேவன் அவனோடு இருக்கிறார் என்ற உண்மை வல்லமையாக அவனுக்குள் கிரியை செய்தது.

இயேசுவுக்கு மிக அன்பான சீடனான யோவான், சுவிசேஷத்தைப் பரப்பியதற்காக நாடு கடத்தப்பட்டு, பத்மு தீவில் தனித்து விடப்பட்டான். அப்பொழுது அவன், “எக்காளசத்தம் போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக்” கேட்டான் (வெளி. 1:10). அதனைத் தொடர்ந்து தேவனுடைய தரிசனத்தைக் கண்டான். அப்பொழுது யோவான், “செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தான்” பயந்து நடுங்கிய அந்த வேளையில், ஆறுதலையும், தைரியத்தையும் பெற்றுக்கொண்டு, எழுத ஆரம்பிக் கின்றான். “அவர் தம்முடைய வலது கரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;” (வச. 17) என்றெழுதினான்.

தேவன் நம்முடைய வசதியான வாழ்விலிருந்து நம்மை வெளியே எடுத்து, புதிய காரியங்களைக் காண்பிக்கின்றார், நம்மை வளைய வைத்து, வளரச் செய்கின்றார். நமக்கு தைரியத்தையும், ஆறுதலையும் தந்து எல்லா சூழ்நிலைகளின் வழியாகவும் கடந்து செல்லப் பண்ணுகின்றார். நம் சோதனைகளின் மத்தியில், நம்மை அவர் தனியே விடுவதில்லை. எல்லாவற்றையும் அவர் கட்டுப்படுத்துகின்றார், நம்மை அவருடைய கரங்களில் வைத்துள்ளார்.

 

மாயக்காரரைக் குறித்து தேவன்

“என்னுடைய குழுவிலுள்ள நபர் ஒருவர் இதைச் செய்திருந்தால் நான் மிகவும் வருத்தப் பட்டிருப்பேன்’’ என்று ஒரு கிரிக்கெட் வீரர், 2016 ஆம் ஆண்டு நடை பெற்ற ஒரு போட்டியில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட்வீரர் ஒருவர் ஏமாற்றியதைக் குறித்து இப்படிச் சொன்னார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அதே கிரிக்கெட் வீரர், இதே போன்ற மற்றொரு ஏமாற்று வேலையைச் செய்தமைக்காகப் பிடிபட்டார். 

இப்படிப்பட்ட மாய்மாலமான செயல்கள் நம்மை அதிர்ச்சியடையச் செய்கின்றன .ஆதியாகமம் 38ல் குறிப்பிடப் பட்டுள்ள யூதாவின் மாய்மாலம் மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்துகின்றது. தாமாரைத் திருமணம் செய்த தனது இரு மகன்களும் மரித்த பின்பு, யூதா அவளுக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல் இருந்து விடுகிறான் (வச. 8-11). ஏமாற்றமடைந்த தாமார் தன்னை மறைத்து, ஒரு வேசியைப் போல முக்காடிட்டுக் கொண்டு யூதாவைச் சந்தித்து, அவனோடு சேருகின்றாள் (வச. 15-16).

ஆனால் கைம்பெண்ணான தன்னுடைய மருமகள் கர்ப்பவதியானாள் என்று கேள்வி பட்டபோது ,அவன் அவளைக் கொலை செய்யும்படி எழும்புகின்றான். “அவளை வெளியே கொண்டு வாருங்கள்; அவள் சுட்டெரிக்கப்பட வேண்டும்” என்கின்றான் (வச. 24). ஆனால், யூதாவே அதற்குக் காரணமானவன் என்பதற்கு அவள் சான்று வைத்திருந்தாள் (வச. 25).

அங்கு யூதா உண்மையை மறைத்திருக்கலாம். ஆனால் அவன் தன்னுடைய இரட்டை வேடத்தை ஒத்துக்கொண்டான். அவளுடைய எதிர்காலத்திற்கான பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றான். என்னிலும் அவள் நீதியுள்ளவள் என்கின்றான் (வச. 26).

யூதா மற்றும் தாமாரின் இருண்ட பகுதியை தேவன் பிணைத்து நமக்கான மீட்பின் கதையை உருவாக்குகின்றார். தாமாரின் பிள்ளைகள், இயேசுவின் முன்னோர்கள் பட்டியலில் இடம் பெறுகின்றனர் (மத். 1:2-3).

ஆதியாகமம் 38ஆம் அதிகாரம் ஏன் வேதாகமத்தில் இடம் பெற்றது? ஒன்று, மனிதனின் திருக்குள்ள இருதயத்தைக் காட்டவும் ,மற்றொன்று தேவனின் அன்பும், கிருபையும்,கருணையும் நிறைந்த இருதயத்தைக் காட்டவுமே.

 

நான் யார் ?

டேவ், தன்னுடைய வேலையை ஆர்வத்தோடு செய்து கொண்டிருந்தான். ஆனால், நீண்ட காலமாக அவன் ஏதோவொன்றை நோக்கி இழுக்கப்  படுவதை உணர்ந்தான். இப்பொழுது ,அவன் தன் கனவினை நனவாக்க, தேவபணி செய்யும் படி காலெடுத்து வைத்துள்ளான். ஆனால் அவனுக்குள் அநேக சந்தேகங்கள் தோன்றிக் கொண்டேயிருந்தன.

அவன் தன் நண்பனிடம்,” நான் இந்த பணிக்குத் தகுதியானவன் அல்ல” என்றான். “இந்தப் பணிக் குழு என்னுடைய உண்மையான குணத்தை அறிந்திருக்கவில்லை. நான் நல்லவனல்ல” என்று கூறினான்.

டேவ்வைப் போன்ற ஒருவரான மோசேயை நினைத்துப் பார்ப்போம். அவருடைய தலைமைத்துவ பண்பும், பெலனும், பத்து கட்டளைகளுமே நம் நினைவிற்கு வருகின்றன. ஆனால் மோசே, ஒரு மனிதனைக் கொன்று விட்டு வனாந்திரத்திற்கு ஓடிப்போனதை நாம் மறந்து விடுகிறோம். அவருடைய முன் கோபத்தையும், தேவன் அழைத்த போது உடனே சரியெனக் கூறத் தயங்கியதையும் நாம் பெரியதாக நினைப்பதில்லை.

  தேவன் புறப்படும் படி கட்டளை கொடுத்த போது (யாத். 3:1-10), மோசே தனக்கு போதிய தகுதி இல்லையென தட்டிக் கழிக்கின்றான். அவன் தேவனோடு நீண்ட வாக்கு வாதங்களைச் செய்கின்றான். தேவனிடம், “நான் எம்மாத்திரம் ?” (வச. 11) எனக் கேட்கின்றான். தேவன் அவனிடம் “நான் இருக்கிறவராக இருக்கிறேன்” (வச. 14) என்கின்றார். இந்த மர்மப்பெயரை நம்மால் விளக்க முடியாது. நம்முடைய விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட தேவன் தன்னுடைய முடிவில்லாத தன்மையை மோசேக்கு விளக்குகின்றார்.

நம்மை பெலவீனனாக  காட்டும் உணர்வு நமக்குள் வலுவாக உள்ளது. தேவன் நம்மை பயன்படுத்துவதற்குத் தடையாக நாம் இதனை பயன்படுத்துவோமாயின் நாம் அவரை துக்கப்படுத்துகின்றோம். நம்முடைய பெலவீனங்களைப் பெரிதாக்கி, அவருடைய பணியைச் செய்ய மறுக்கும் போது, தேவன் நமக்குப் போதுமானவராக இல்லை என கூறுகின்றோம்.

நான் யார்? என்பது கேள்வியல்ல, இருக்கிறவராக இருக்கிறேன் என்றவர் யார் என்பதே கேள்வி.

எவ்வளவு விலையானாலும்

கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலைப் பற்றிய திரைப்படம், ஆரம்ப நாட்களில் சபைகளில் ஏற்பட்ட துன்பங்களை அப்படியே காட்டுகின்றது. அந்த திரைப்படத்தில் வருகின்ற சிறிய கதாப்பாத்திரங்கள் கூட இயேசுவைப் பின்பற்றுவது மிகவும் ஆபத்தானது என வெளிப்படுத்துகின்றன. அப்படத்தில் வரும் கதாபாத்திரங்களான அடிபடும் ஒரு பெண், அடிக்கப் படும் ஒரு ஆண் இன்னும் தங்கள் உயிரையேயிழந்த நபர்கள் 1, 2, 3 எனக் காணும் போது, இவ்வாறு சிந்திக்கத் தோன்றும்.

கிறிஸ்துவோடு நம்மை ஐக்கியப் படுத்துவது என்பது மிகவும் விலையேறப் பெற்றது. உலகின் பல பகுதிகளில் நடைபெறும் காரியங்கள்  இயேசுவைப் பின்பற்றுவது மிக ஆபத்தானது எனக் காட்டுகின்றது. இன்றும் அநேக ஆலயங்கள் இத்தகைய துன்பங்களைச் சந்திக்கின்றன. நம்மில் சிலர் தங்களுடைய விசுவாசத்தினிமித்தம் இழிவாக நடத்தப் படலாம், அல்லது தங்களுக்கு வர வேண்டிய பதவி உயர்வு அவர்களின் விசுவாசத்தினிமித்தம் கொடுக்கப் படாமல் தடுக்கப் பட்டிருக்கலாம்.

ஆயினும் சமுதாய அந்தஸ்தை தியாகம் செய்வதற்கும், தங்களுடைய வாழ்வையே தியாகம் செய்வதற்கும் மிகப் பெரிய வேறுபாடுள்ளது. உண்மையில் தன்னார்வம், பொருளாதார நிலைப்பாடு, சமுதாய அந்தஸ்து ஆகியவை எப்பொழுதும் மனிதனை ஈர்த்துக் கொள்ளுபவை. இத்தகைய செயல்களை இயேசுவின் காலத்தில் அவரைப் பின்பற்றியவர்களிடமும்  காண்கிறோம். இயேசு சிலுவையில் அறையப் படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு வரை அநேக இஸ்ரவேலர் இயேசுவைப் புறக்கணித்த போதும் (யோவா. 12:37) அதிகாரிகளிலும் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். (வச. 42) என யோவான் எழுதுகின்றார். ஆனாலும் அவர்கள் தங்கள் விசுவாசத்தை அறிக்கை பண்ணாதிருந்தார்கள். ஏனெனில் அவர்கள் தேவனுடைய பாராட்டுதலை விட மனிதனின் புகழ்ச்சியையே அதிகம் விரும்பினார்கள் (வ42-43)

இன்றைக்கும் சமுதாயச் சூழல்கள், கிறிஸ்துவின் மீது நாம் வைத்துள்ள  விசுவாசத்தை மறைத்துக் கொள்ளச் செய்கின்றது. ஆனால் என்ன விளைவைச் சந்திக்க நேர்ந்தாலும், நாம் அனைவரும் மனிதனின் புகழ்ச்சியை நாடாமல் தேவனுடைய பார்வைக்கு நலமானதைச் செய்ய ஒன்றுபட்டு நிற்போம்.

போர்க்களத்திற்குச் செல்லாமல்

ஒரு சிறு பிள்ளையாக, தன் பெற்றோரிடம் மிகவும் கடினமான வார்த்தைகளை அவள் பேசினாள். அதுவே அவள் பெற்றோரிடம் கடைசியாக பேசின வார்த்தைகள் என்பதை அவள் சிறிதளவும் உணரவில்லை. இப்பொழுது, பல வருடங்கள் ஆலோசனை கொடுத்த போதும், அவளால் தன்னை மன்னிக்கவே முடியவில்லை. குற்ற உணர்வும், ஆழமான துக்கமும் அவளை முடக்கி வைத்தது.

நாம் எல்லாரும் ஆழமான துக்கத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சில துக்கங்கள் மகா பயங்கரமானவைகள். ஆனால், வேதாகமம் இந்த மாபெரும் துக்கத்தில் இருந்து கடந்து செல்ல வழியினைக் காட்டுகின்றது. ஒரு உதாரணத்தை நாம் காணலாம்.

தாவீது ராஜா செய்ததற்கு ஒரு இனிப்பு மூலாம் பூச முடியாது. அது 'இராஜாக்கள் போருக்குப் போகின்ற காலம்." ஆனால் தாவீது 'எருசலேமிலேயே தங்கிவிட்டார்" (2 சாமு. 11:1). போர்க்களத்திலிருந்து

தூரத்தில் இருந்தபடியால், அடுத்தவனுடைய மனைவியை கொள்ளையிட்டதுமன்றி, அதை ஒரு கொலையின் மூலமாக மூடி மறைக்கிறான் (வச. 2-5, 14-15). தேவன் தாவீதின் கீழ்நோக்கி மூழ்குதலைத் தடுத்து நிறுத்தினார். ஆனால், இராஜா மீதமுள்ள தன் வாழ்நாளில், தன் பாவத்தை அறிந்தவனாக வாழவேண்டும்.

தாவீது சாம்பலில் இருந்து எழுந்தவுடனே, அவனுடைய தளபதி யோவாப், தாவீது முன்னிருந்து நடத்தவேண்டிய போரினை ஜெயித்து வந்தான். யோவாப் தாவீதிற்கு சவால் கொடுக்கிறார், 'நீர் மற்ற ஜனங்களைக் கூட்டிக்கொண்டு வந்து பட்டணத்தை முற்றிகைபோட்டு பிடிக்க வேண்டும்". இறுதியாக தாவீது கர்த்தர் விரும்பின இடத்திற்கு ஒரு தேசத்தின் தலைவனாகவும், இராணுவத்தின் தலைவனாகவும் வந்து சேர்ந்தார் (வச. 29).

நாம் நம்முடைய கடந்தகால நிகழ்வுகள் நம்மை அழுத்த அனுமதிக்கும் போது, நாம் கர்த்தருடைய கிருபை போதுமானதாக இல்லை என்றே கூறுவதாக அமைகிறது. அது நாம் என்ன பாவத்தை செய்திருக்கிறோம் என்பதைப் பொறுத்ததாக இல்லாமல் இருக்கிறது. நம்முடைய தகப்பன் நமக்கு முழுமையான மன்னிப்பினை அருளுகிறார். தாவீது தன் போர்க்களத்திற்குத் திரும்பச் சென்றதுபோல நாமும் அவருடைய கிருபையைப் பெற்று வாழலாம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

சிறிய வழிகளில்

எல்சி புற்றுநோயால் தாக்கப்பட்டபோது, இயேசுவுடன் பரலோகத்தில் ஜீவிக்க செல்லுவதற்கு தயாராக இருந்தார். ஆனால் அவள் அந்த வியாதியிலிருந்து குணமடைந்தாள். தேவன் ஏன் தன் உயிரைக் காப்பாற்றினார் என்று அவளை யோசிக்க வைத்தது. “நான் என்ன நல்லது செய்ய முடியும்? என்னிடம் அதிக பணமோ திறமையோ இல்லை, என்னால் நடக்க முடியாது. நான் உங்களுக்கு எப்படி பயனுள்ளதாக இருக்க முடியும்?” என்று அவள் தேவனிடம் கேட்டாள். 

பின்னர் மற்றவர்களுக்கு சேவை செய்ய சிறிய, எளிய வழிகளைக் கண்டறிந்தார். அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் அவளுடைய வீட்டை சுத்தம் செய்கிறவர்களின் தேவையை அறிந்தாள். அவள் அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்தாள். அவ்வப்போது பணத்தைக் கொடுத்தாள். இந்த ரொக்கப் பரிசுகள் சிறியதாக இருந்தபோதிலும், அவை தொழிலாளர்களுக்கு உதவி செய்ய நீண்ட தூரம் சென்றன. அவள் அவ்வாறு செய்யும்போது, தேவன் அவளுக்கு கொடுப்பதை அவள் கண்டாள்: நண்பர்களும் உறவினர்களும் அவளுக்கு பரிசுகளையும் பணத்தையும் கொடுத்து மற்றவர்களுக்கு உதவிசெய்ய அவளைத் தூண்டினர்.

அவள் தனது கதையைப் பகிர்ந்து கொண்டபோது, 1 யோவான் 4:19இல் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்ற அழைப்பை எல்சி எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறார் என்பதை என்னால் சிந்திக்க முடியவில்லை: “அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.” மேலும் அப்போஸ்தலர் 20:35, “வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” என்று நினைப்பூட்டுகிறது. 

எல்சி கொடுத்தாள், ஏனென்றால் அவள் தேவனிடத்திலிருந்து பெற்றாள். அவள் கொடுத்ததைப் போலவே ஊக்கமும் பெற்றாள். ஆயினும்கூட, அன்பான, நன்றியுள்ள இதயம் மற்றும் தன்னிடம் இருப்பதைக் கொடுக்கத் தயாராக இருப்பதை விட அவளிடமிருந்து கொஞ்சம் அதிகமாகவே தேவைப்பட்டது. தேவன் கொடுக்கல்-வாங்கல் என்ற நல்லொழுக்க வட்டத்தில் அதிகமாய் அவளை பெருகச்செய்தார். அவர் நம்மை வழிநடத்தும் போது, கொடுத்து உதவ நன்றியுள்ள மற்றும் தாராள மனதைக் கொடுக்கும்படி அவரிடம் கேட்போம்!

 

இயேசு கறைகளை கழுவுகிறார்

வாஷிங் மெஷினில் என்னுடைய சட்டையை தேடி, “நீ என்ன வேடிக்கை காண்பிக்கிறாயா?” என்று உரக்க கத்தினேன். என் சட்டையை கண்டுபிடித்தேன். எனக்கு அதிர்ச்சியாயிருந்தது. 

என் வெள்ளை சட்டையில் மை புள்ளி இருந்தது. மையின் கறைகள் அங்கிருந்த அனைத்து ஆடைகளிலும் பரவியிருந்தது. நான் தெளிவாக என் சட்டை பைகளை சரிபார்க்கவில்லை. அதிலிருந்து கசிந்த ஒரு பேனா மை அனைத்து பாதிப்புகளையும் ஏற்படுத்தியிருந்தது. 

பாவத்தை விவரிக்க வேதம் பெரும்பாலும் கறை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது. ஒரு கறை துணியில் ஊடுருவி, அவற்றை அழிக்கிறது. எரேமியா தீர்க்கதரிசி மூலம் தேவன் பாவத்தை விவரித்தார். அதன் கறை அவர்களின் தூய்மைக்கு அப்பாற்பட்டது என்பதை நினைவூட்டுகிறது: “நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும், உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” (எரேமியா 2:22). 

அதிர்ஷ்டவசமாக, பாவம் நம்மை முழுவதுமாய் ஆளுகை செய்யப் போவதில்லை. ஏசாயா 1:18ல், பாவத்தின் கறையிலிருந்து நம்மைச் சுத்திகரிக்க முடியும் என்ற தேவனின் வாக்குறுதியை நாம் கேட்கிறோம்: “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.”

என் சட்டையில் இருந்து மை கறையை வெளியே எடுக்க முடியவில்லை. என் பாவத்தின் கறையை என்னால் அகற்றவும் முடியாது. அதிர்ஷ்டவசமாக, 1 யோவான் 1:9 வாக்களித்தபடி, தேவன் நம்மை கிறிஸ்துவில் சுத்திகரிக்கிறார்: “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.”

 

நிஜமாய் வாழுங்கள்

2000 ஆம் ஆண்டில் போதகர் எட் டாப்சனுக்கு ஏ.எல்.எஸ் இருப்பது கண்டறியப்பட்டபோது,ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்காக ஜெபித்தனர். குணமடைய நம்பிக்கையுடன் ஜெபித்தால் செய்தால், தேவன் உடனடியாக பதிலளிப்பார் என்று பலர் நம்பினர். எட்ஸின் தசைகள் சிறிது சிறிதாக சிதைவதற்கு காரணமான நோயுடன் பன்னிரண்டு ஆண்டுகள் போராடிய பிறகு (அவர் இறப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு), தேவன் அவரை இன்னும் ஏன் குணப்படுத்தவில்லை என்று நினைக்கிறீர்கள் என்று ஒருவர் அவரிடம் கேட்டார். “நல்ல பதில் என்று ஒன்று இல்லை. அதினால் நான் கேட்கவில்லை” என்று அவர் பதிலளித்தார். அவரது மனைவி லோர்னா மேலும் கூறுகையில், “நீங்கள் எப்போதும் பதில்களைப் பெற வேண்டும் என்று வெறித்தனமாக இருந்தால், நீங்கள் உண்மையில் வாழ முடியாது" என்று சொன்னார்கள். 

எட் மற்றும் லோர்னாவின் வார்த்தைகளில் தேவனுக்கான கனத்தை உங்களால் உணர முடிகிறதா? அவருடைய ஞானம் தங்களுக்கு மேலானது என்பதை அவர்கள் அறிந்தார்கள். இருப்பினும் எட் ஒப்புக்கொண்டார், “நாளைய தினத்தைக் குறித்து கவலைப்படாமல் இருப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.” நோய் அதிகரிக்கும் இயலாமையை ஏற்படுத்தும் என்பதை அவர் புரிந்துகொண்டார். அடுத்த நாள் என்ன புதிய பிரச்சனை வரக்கூடும் என்று அவருக்குத் தெரியவில்லை.

நிகழ்காலத்தில் கவனம் செலுத்த உதவுவதற்காக, எட் இந்த வசனங்களை தனது காரில், குளியலறை கண்ணாடியில், மற்றும் அவரது படுக்கைக்கு அருகில் வைத்தார்: “நான் (கர்த்தர்) உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரெயர் 13:5). அவர் கவலைப்படத் தொடங்கும் போதெல்லாம், அவர் தனது எண்ணங்களை சத்தியத்தின் மீது மீண்டும் ஒருமுகப்படுத்த உதவும் வசனங்களை திரும்பத் திரும்பச் சொல்வார்.

அடுத்த நாள் எதைக் கொண்டு வரும் என்று யாருக்கும் தெரியாது. ஒருவேளை எட் பயிற்சி, நம் கவலைகளை நம்பிக்கையின் வாய்ப்புகளாக மாற்ற நமக்கு உதவிசெய்யக் கூடும்.