Archives: ஜனவரி 2019

சுவிகாரப் புத்திரன்

சமுதாயத் தொண்டு செய்யும் ஒருவர் வீடற்ற குழந்தைகளுக்கென ஓர் இல்லம் கட்டியபோது, நான் மிகவும் மகிழ்ந்தேன். அத்தோடு நின்றுவிடாமல், அந்த மனிதன் அதையும் விட மேலாக அப்படிப்பட்ட வீடற்ற குழந்தைகளிலொன்றைத் தனக்குச் சொந்தமாக தத்தெடுத்துக் கொண்டபோது மெய்சிலிர்த்துப் போனோன். அநேக அனாதைக் குழந்தைகள் தங்களை ஆதரிக்க ஒரு வளர்ப்புத் தந்தை கிடைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியடைவர். ஆனால், அந்த வளர்ப்புத் தந்தை தங்களுக்கு உதவுபவர் மட்டுமல்ல, தங்களைச் சொந்தமாக ஏற்றுக் கொள்கிறாரென கேட்கும்போது, அது அவர்களுக்கு எப்படியிருக்கும்?

நீயும் தேவனுடைய பிள்ளையாயிருந்தால், அது உனக்குச் கிடைத்த ஈவு என்பதை
நீ அறிந்திருக்கின்றாய். வெறுமனே, தேவன் நம்மை நேசித்ததினால் தம்முடைய ஒரேபேறான குமாரனை, "நாம் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படி" (யோவா. 3:16). அனுப்பியிருந்தால், அது நமக்குப் போதுமானது. நாம் தேவனைக் குறைகூறவும் முடியாது. ஆனால், அது தேவனுக்குப் போதுமானதாகயில்லை. “நம்மை மீட்டுக் கொள்ளத்தக்கதாக" தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினார். அத்தோடு அது முடிந்து விடவும் இல்லை. ஆனால், “நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி" (கலா. 4:4-5) தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினார்.

அப்போஸ்தலனாகிய பவுல் நம்மை “தேவனுடைய புத்திரர்" என்றே குறிப்பிடுகின்றார். ஏனெனில், அவருடைய நாட்களில் மகனுக்குத்தான் தந்தையின் சுதந்திரத்தையடையும் உரிமையிருந்தது. எந்த மனுஷனும், மனுஷியும் இயேசுவின் பேரில் விசுவாசமாயிருந்தால் அவர்களெல்லாரும் தேவனுடைய பிள்ளைகளென்கிற சுதந்தரத்தைப் பெறுகின்றோம் என பவுல் கூறுகின்றார் (வச. 7).

தேவன், வெறுமனே உன்னை மீட்கிறவர் மட்டுமல்ல, அவர் உன்னை நேசிக்கின்றார், உன்னைத் தன்னுடைய சொந்த குடும்பத்தில் சேர்த்துக் கொள்கின்றார். தன்னுடைய நாமத்தை உன்மேல் எழுதுகின்றார் (வெளி. 3:12). உன்னைத் தன்னுடைய பிள்ளையெனப் பெருமையாகக் கூறுகின்றார். இதைவிட மேலாக அன்புகூர நமக்கு யாரிருக்கின்றார்கள்? தேவனை விட முக்கியமானவராக நமக்கு யாரிருக்கக் கூடும்? நீ தேவனால் ஆசீர்வதிக்கப்படுவதோடு, அவருடைய பிள்ளையாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டாய உன் தந்தை உன்னை நேசிக்கின்றார்.

பாசிகளும், நுண்பாசிகளும்

“நுண்பாசி என்பது என்ன?" என நான் என் சிநேகிதியைக் கேட்டேன். நான் அவளுடைய தோள்மீது சாய்ந்து, அவள் நுண்ணோக்கி மூலம் எடுத்துக் கொண்ட படங்களை, அவளுடைய அலைபேசியில் பார்த்துக் கொண்டிருந்தேன். “ஓ, இது பாசியைப் போன்றது. இதனைப் பார்ப்பது சற்றுக் கடினமானது. சிலவேளைகளில் லென்சுகளில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டுக் கொண்டு தான் பார்க்க முடியும் அல்லது அவை இறந்த பின் தான் பார்கக் முடியும்" என விளக்கினாள். அவள், ஒன்றன் பின் ஒன்றாக படங்களைக் காட்டி விளக்கிய போது, நான் வியந்துபோனேன். நுண்ணோக்கிகளின் மூலம் பார்க்கக் கூடிய அத்தனை சிறிய உயிரினங்களில் தேவன் வைத்துள்ள நுணுக்கமான அமைப்புகளைக் குறித்து நினைத்துக் கொண்டேயிருந்தேன்.

தேவனுடைய படைப்புகளுக்கும் அவருடைய செயல்களுக்கும் முடிவேயில்லை. இதனைக் குறித்து யோபுவின் நண்பனான எலிகூகூட, யோபு தன் இழப்புகளின் மத்தியில் போராடிக் கொண்டிருந்தபோது அவனுக்கு சுட்டிக் காட்டுகின்றான். எலிகூ தன் நண்பனிடம்," யோபே, இதற்குச் செவிகொடும்; தரித்து நின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப் பாரும். தேவன் அவைகளைத் திட்டம் பண்ணி, தம்முடைய மேகத்தின் மின்னலைப் பிரகாசிக்கப்பண்ணும் விதத்தை அறிவீரோ? மேகங்கள் தொங்கும்படி வைக்கும் நிறையையும், பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைளையும்... அறிவீரோ?" (யோபு 37:14-16). தேவனுடைய படைப்புகளையும், அவற்றின் சிக்கலான நுணுக்கங்களையும் புரிந்து கொள்ள மனித அறிவு போதாது.

நாம் கண்களால் காணமுடியாத அவருடைய படைப்புகளும், தேவனுடைய வல்லமையையும் மகிமையையும் வெளிப்படுத்துகின்றன. அவருடைய மகிமை நம்மைச் சூழ்ந்துள்ளது. நாம் எவற்றின் வழியே கடந்து சென்றாலும், அவைகளைக் காணவும் புரிந்து கொள்ளவும் முடியாவிட்டாலும் தேவன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். அவரை நாம் இன்று போற்றுவோம், ஏனெனில், “அவர் ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணிமுடியாத அதிசயங்களையும் செய்கிறார்" (யோபு. 5:9).

வானங்களைக் கிழித்துக் கொண்டு

சமீபத்தில் நான் என்னுடைய சிநேதிதியுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, அவள் தன்னுடைய விசுவாசத்தை விட்டு விட்டதாகவும், நாம் அடிக்கடி சொல்லக் கேட்டுள்ள ஒரு குற்றச் சாட்டைக் காரணமாகக் கூறினாள். ஒன்றுமே செய்யாமலிருக்கும் ஒரு தேவனை நான் எப்படி நம்புவது? எனக் கேட்டாள். இந்த துணிச்சலான கேள்வி நம்மில் அநேகருக்கு எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தோன்றலாம். நாம் தீவிரவாத செயல்களைக் குறித்துச் செய்தித்தாளில் வாசிக்கும் போதும், நம்முடைய உள்ளத்தை உடைக்கக் கூடிய காரியங்களின் வழியே கடந்து செல்லும் போதும் இத்தகைய கேள்வி நமக்கும் தோன்றலாம். என்னுடைய சிநேகிதியின் சார்பில் தேவன் செயல்பட வேண்டிய தேவையுள்ளது என்பதை அவளுடைய வேதனை வெளிப்படுத்தியது. நாம் அனைவருமே உணர்ந்திருக்கும் ஓர் ஏக்கம் அவளிடம் இருந்தது.

இஸ்ரவேலர் தங்களுடைய நிலப்பரப்பை நன்கு அறிவர். பாபிலோனிய பேரரசு இஸ்ரவேலரின் தேசத்தைக் கைப்பற்றிக் கொண்டது. இஸ்ரவேலரை இரும்புக் கரம் கொண்டு நசுக்கி எருசலேமை தீக்கிரையாக்கி புகைந்து கொண்டிருக்கும் குப்பை மேடாக்கினர். நம்மை விடுவிக்கிறவராக இருந்த தேவன் எங்கே? (ஏசா. 63:11-15) என்ற கேள்வியோடிருந்த ஜனங்களின் இருண்ட உள்ளத்தில் ஏசாயா தீர்க்கதரிசி தேவனுடைய வார்த்தைகளைப் போடுகின்றார். அதே இடத்திலிருந்தே ஏசாயா தைரியமாக ஒரு ஜெபத்தை ஏறெடுக்கின்றார். “தேவரீர் வானங்களைச் கிழித்திறங்கி... வாரும்" (64:1) என்கின்றார். ஏசாயாவின் வேதனையும், கவலையும் அவரை தேவனைவிட்டு விலகிப் போகச் செய்யவில்லை. ஆனால், அவர் இன்னும் அதிகமாக தேவனைத் தேடவும் அவரைக் கிட்டிச் சேரவும் செய்தது.

நம்முடைய சந்தேகங்களும் துன்பங்களும் நமக்கு ஒரு வித்தியாசமான ஈவைத் தருகின்றன. நாம் தேவனை விட்டு எவ்வளவு தூரமாய் காணாமல் போய் விட்டோமென்பதையும், தேவன் நம்மிடம் வரும்படியான தேவையில் இருக்கிறோமென்பதையும் அவை நமக்குக் காட்டுகின்றன. இப்பொழுது நாம் நடக்கக் கூடாததும், மறக்க முடியாததுமான கதைகளைக் காண்கின்றோம். இயேசுவின் மூலம் தேவன் வானங்களைக் கிழித்துக் கொண்டு கீழே இறங்கி வந்தார். கிறிஸ்து தன்னுடைய சொந்த சரீரத்தைக் கிழிக்கப்பட ஒப்புக் கொடுத்தார். எனவே அவருடைய அன்பினாலே அவர் நம்மை மேற்கொள்ள முடிந்தது. இயேசுவின் மூலம் தேவன் நம்மருகில் இருக்கின்றார்.

மனநிலையை சரிசெய்பவர்

நான் வாரந்தோறும் செல்கின்றபடி, இரயில் நிலையத்தில் காத்திருந்தபோது, வாடிக்கையாளர்கள் இரயிலில் ஏறுவதற்கு வரிசையில் நின்றது போல, எதிர்மறையான எண்ணங்கள் என்னுடைய மனதில் நிரம்பி நின்றன. கடன் மீதான கவலை, என்னிடம் பிறர் கூறிய அன்பற்ற வார்த்தைகள், எங்கள் குடும்ப நபர் ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதத்தில் உதவ முடியாத நிலை என பல எண்ணங்கள் எனக்குள் ஓடிக் கொண்டிருக்கும் போது, இரயிலும் வந்தது. நான் பயங்கரமான மனநிலையில் இருந்தேன்.

இரயிலில் ஏறி உட்கார்ந்ததும் மற்றொரு சிந்தனை என் உள்ளத்தில் வந்தது. என்னுடைய புலம்பலையெல்லாம் ஒரு காகிதத்தில் எழுதி தேவனிடம் கொடுக்கும்படி தோன்றியது. என்னுடைய குற்றச்சாட்டுகளையெல்லாம் என்னுடைய குறிப்பேட்டில் கொட்டியபின்னர், நான் என்னுடைய தொலைபேசியை எடுத்து நான் சேமித்து வைத்துள்ள துதிபாடல்களைக் கவனித்தேன். அவற்றை நான் முடிக்கும்முன்பே என்னுடைய மனநிலை முற்றிலும் மாறியது.

சங்கீதம் 94 ஐ எழுதியவர் நியமித்துள்ள வகையின்படியே நானும் ஏறக்குறைய பின்பற்றி வருகின்றேன். சங்கீதக்காரனும் முதலில் தன்னுடைய குறைகளைக் கொட்டித் தீர்க்கின்றார். “பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து பெருமைக்காரருக்குப் பதிலளியும்... துன்மார்க்கருக்கு விரோதமாய் என் பட்சத்தில் எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரருக்கு விரோதமாய் என் பட்சத்தில் நிற்பவன் யார்? (சங். 94:2,16). அவன் தேவனிடம், விதவைகளுக்கும், அனாதைகளுக்கும் இழைக்கப்படும் அநீதத்தைப் பற்றி பேசும்போது எதையும் மறைவாக வைக்கவில்லை. தன்னுடைய புலம்பலையெல்லாம் தேவனிடம் கொடுத்துவிட்ட பின்பு, அந்த சங்கீதம் தேவனைப் போற்றும்படி மாறுகிறது. “கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார்" (வச. 22) என தேவனைப் போற்றுகின்றார்.

நாமும் நம்முடைய புலம்பலையெல்லாம் தன்னிடம் கொண்டுவரும்படி தேவன் அழைக்கின்றார். அவரே நம்முடைய பயம், கவலை, உதவியற்ற நிலை யாவையும் துதியாக மாற்றுபவர்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் உன்னை மறப்பதில்லை

நான் சிறுவயதில் தபால் தலைகளை சேகரித்தேன். எனது பொழுதுபோக்கைப் பற்றி கேள்விப்பட்ட என் தாத்தா, தினமும் தனது அலுவலகத் தபாலில் இருந்து தபால் தலைகளைச் சேமிக்கத் தொடங்கினார். நான் என் தாத்தா பாட்டியை சந்திக்கும் போதெல்லாம், பலவிதமான அழகான முத்திரைகள் நிரப்பப்பட்ட ஒரு உறையை என்னிடம் கொடுப்பார். “நான் என்னுடைய அலுவலில் மும்முரமாக இருந்தாலும் உன்னை நான் மறக்கமாட்டேன” என்று ஒருமுறை என்னிடம் கூறினார். 
பாசத்தை வெளிப்படையாய் காண்பிக்கும் திறன் தாத்தாக்களுக்கு கொடுக்கப்படவில்லை. ஆனால் நான் அவருடைய அன்பை ஆழமாக உணர்ந்தேன். எல்லையற்ற ஆழமான வழியில், “நான் உன்னை மறப்பதில்லை” (ஏசாயா 49:15) என்று சொன்னதினிமித்தம் தேவன் இஸ்ரவேலின் மீது தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார். விக்கிரகாராதனைக்காகவும் கீழ்ப்படியாமைக்காகவும் பாபிலோனில் துன்பப்பட்ட தேவனுடைய ஜனங்கள், “ஆண்டவர் என்னை மறந்தார்” (வச. 14) என்று புலம்பினர். ஆனால் தம்முடைய ஜனங்கள் மீதான கர்த்தருடைய அன்பு மாறவில்லை. அவர் அவர்களுக்கு மன்னிப்பையும் மறுசீரமைப்பையும் உறுதியளித்தார் (வச. 8-13). 
“என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்” (வச. 16) இஸ்ரவேலரிடம் தேவன் சொன்னார். இன்று நமக்கும் அப்படியே சொல்கிறார். அவருடைய உறுதியளிக்கும் வார்த்தைகளை நான் சிந்திக்கையில், அது நம்மீதான அன்பையும் நம்முடைய இரட்சிப்பிற்காகவும் விரிந்திருக்கும் இயேசுவின் ஆணியடிக்கப்பட்ட தழும்புகள் நிறைந்த கைகளை மிகவும் ஆழமாக நினைவூட்டுகிறது (யோவான் 20:24-27). என் தாத்தாவின் தபால் தலைகள் மற்றும் அவரது மென்மையான வார்த்தைகள் போல, தேவன் மன்னிக்கும் தனது கரத்தை அவரது அன்பின் நித்திய அடையாளமாக நீட்டினார். அவருடைய என்றும் மாறாத அன்பிற்காக அவருக்கு நன்றி சொல்வோம். அவர் நம்மை என்றும் மறக்கமாட்டார். 

திருச்சபையாயிரு!

கோவிட்-19 தொற்றுநோயின்போது, டேவ் மற்றும் கார்லா ஒரு தேவாலய வீட்டைத் தேடி பல மாதங்கள் செலவிட்டனர். தொற்று பரவிய காலங்கிளல் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது, பல்வேறு தனிப்பட்ட அனுபவங்களை மட்டுப்படுத்தி, அவற்றை மேலும் கடினமாக்கியது. அவர்கள் கிறிஸ்தவ திருச்சபையோடு ஐக்கியம்கொள்வதற்கு ஏங்கினர். “ஒரு திருச்சபையைக் கண்டுபிடிப்பது கடினமானது” என்று கார்லா எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார். என் திருச்சபை குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்கான எனது சொந்த ஏக்கத்திலிருந்து எனக்குள் ஒரு உணர்தல் எழுந்தது. “திருச்சபையாக இருப்பது கடினமானது" என்று நான் பதிலளித்தேன். அந்த காலங்களில், எங்கள் திருச்சபை சுற்றியுள்ள மக்களுக்கு உணவு வழங்குதல், ஆன்லைன் சேவைகளை உருவாக்குதல் மற்றும் ஆதரவுடனும் ஜெபத்துடனும் ஒவ்வொரு விசுவாசிகளுக்கும் போன் செய்து நலம் விசாரித்தது. அந்த சேவையில் நானும் எனது கணவரும் கலந்துகொண்டாலும், மாறக்கூடிய இந்த உலகத்தில் நாம் திருச்சபையாய் செயல்படுவது எப்படி என்று ஆச்சரியப்பட்டோம்.  
எபிரெயர் 10:25இல் ஆசிரியர் “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல்” இருக்கும்படிக்கு ஊக்குவிக்கிறார். ஒருவேளை உபத்திரவத்தின் நிமித்தமோ (வச. 32-34), சோர்வின் நிமித்தமாகவோ (12:3) ஐக்கியத்தை விடும் அபாயம் அவர்களுக்கு நேரிட்டிருக்கலாம். அவர்களுக்கு இந்த தூண்டுதல் அவசியப்பட்டது.  
இன்று, எனக்கும் ஒரு தூண்டுதல் தேவைப்படுகிறது. உங்களுக்கும் தேவைப்படுகிறதா? நடைமுறை சூழ்நிலைகள் நாம் கூடிவரும் திருச்சபையை பாதிக்கும் தருவாயில் நாம் திருச்சபையாய் நிலைநிற்போமா? ஆக்கப்பூர்வமாக ஒருவரையொருவர் ஊக்குவிப்போம். தேவன் நம்மை வழிநடத்துவது போல ஒருவரையொருவர் கட்டியெழுப்புவோம். நம்முடைய வளங்களைப் பகிர்ந்து கொள்வோம். ஆதரவான செய்திகளை பகிர்வோம். நம்மால் முடிந்தவரை சேகரிப்போம். ஒருவருக்கொருவர் ஜெபியுங்கள். நாமே திருச்சபையாக நிற்போம். 

பாரபட்சமும் தேவசிநேகமும்

“நான் எதிர்பார்த்தது நீ இல்லை. நான் உன்னை வெறுக்கிறேன் என்று நினைத்தேன், ஆனால் அப்படியில்லை.” அந்த இளைஞனின் வார்த்தைகள் கடுமையாகத் தெரிந்தது. ஆனால் அவை உண்மையில் கருணை காட்டுவதற்கான முயற்சியாக இருந்தது. நான் அவர் வசிக்கும் நாட்டில் படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய அந்த தேசம் பல தசாப்தங்களுக்கு முன்னர் என்னுடைய தேசத்தோடு யுத்தம் செய்தது. நாங்கள் ஒன்றாக வகுப்பில் ஒரு குழு விவாதத்தில் கலந்துகொண்டோம். அவர் தொலைவில் இருப்பதை நான் கவனித்தேன். நான் அவரை ஏதாகிலும் புண்படுத்திவிட்டேனா என்று நான் கேட்டபோது, அவர், “இல்லை . . . . அதுதான் விஷயம். என் தாத்தா அந்தப் போரில் கொல்லப்பட்டார், அதற்காக நான் உங்கள் மக்களையும் உங்கள் நாட்டையும் வெறுத்தேன். ஆனால் இப்போது நமக்குள் எந்த அளவிற்கு ஒத்துப்போகிறது என்பதைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். நாம் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது!” என்று பதிலளித்தார். 
பாரபட்சம் என்னும் உணர்வு மனித இனத்தைப் போலவே மிகவும் பழமையானது. இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பு, இயேசு நாசரேத்தில் வாழ்ந்ததைப் பற்றி நாத்தான்வேல் முதன்முதலில் கேள்விப்பட்டபோது, அவனுடைய பாரபட்சம் தெளிவாகத் தெரிந்தது: “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?” (யோவான் 1:46) என்று சொல்கிறார். நாத்தான்வேல் இயேசுவைப் போலவே கலிலேயா பகுதியில் வாழ்ந்தவர். தேவனுடைய மேசியா வேறொரு இடத்திலிருந்து வருவார் என்று அவர் ஒருவேளை நினைத்திருக்கக்கூடும். மற்ற கலிலேயர்களும் நாசரேத்தை இழிவாகப் பார்த்தனர். ஏனென்றால் அது ஒரு சிறிய அடையாளமில்லாத ஊராக இருந்தது.  
இது மிகவும் தெளிவாக உள்ளது. நாத்தான்வேலின் பதில், இயேசு அவனை நேசிப்பதற்கு தடையாக இருக்கவில்லை. மேலும் அவன் மறுரூபமாக்கப்பட்டு இயேசுவின் சீஷனாக மாறுகிறான். நாத்தான்வேல் பின்பாக, “நீர் தேவனுடைய குமாரன்” (வச. 49) என்று இயேசுவின் மகத்துவத்தை சாட்சியிடுகிறான். தேவனுடைய மறுரூபமாக்கும் அன்பிற்கு எதிராக நிற்கக்கூடிய எந்த பாரபட்சமும் இல்லை.