எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மைக் விட்மெர்கட்டுரைகள்

வீட்டு தெய்வங்கள்

அந்த வேதபாட குழுவிலிருந்த ஆண்கள் கிட்டத்தட்ட எண்பது வயதுடையவர்கள். அவர்கள் இச்சையோடு போராடுவதை அறிந்து நான் ஆச்சரியப்பட்டேன். இளமையில் தொடங்கிய அந்த யுத்தம் இன்னும் நீடிக்கிறது. ஒவ்வொரு நாளும் அவர்கள் இந்த பகுதியில் இயேசுவைப் பின்பற்றுவதாக உறுதியளித்தனர். அவர்கள் தோல்வியுற்ற தருணங்களுக்காக மன்னிப்பு கேட்டார்கள்.

தேவமனிதர்கள், வாழ்க்கையில் இன்னும் அடிப்படை சோதனைகளுக்கு எதிராக போராடுவது நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அவ்வாறு இருக்க வேண்டியதில்லை. நம் வாழ்வில் தேவனுடைய இடத்தைப் பிடிக்க எத்தனிக்கும் எதுவும் விக்கிரகமே. இதுபோன்ற காரியங்கள் முடிந்துவிட்டன என்று நாம் நினைக்கையில் மீண்டும் அவை தலைதூக்கலாம்.

வேதத்தில், தனது மாமனாகிய லாபானிடமிருந்தும், சகோதரன் ஏசாவிடமிருந்தும் யாக்கோபு காப்பாற்றப்படுகிறார். அவர் தேவனை ஆராதிக்கவும், அவருடைய பல ஆசீர்வாதங்களைக் கொண்டாடவும் பெத்தேலுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். ஆனால் அவருடைய குடும்பம் யாக்கோபு அடக்கம் செய்ய வேண்டிய அந்நிய தெய்வங்களை இன்னும் வைத்திருந்தது (ஆதியாகமம் 35:2-4). யோசுவா புத்தகத்தின் முடிவில், இஸ்ரவேல் தங்கள் எதிரிகளைத் தோற்கடித்து கானானில் குடியேறிய பிறகு, “அப்படியானால் இப்பொழுதும் உங்கள் நடுவே இருக்கிற அந்நிய தேவர்களை அகற்றிவிட்டு, உங்கள் இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு நேராகத் திருப்புங்கள்” (யோசுவா 24:23) என்று அவர்களை அறிவுறுத்த வேண்டியிருந்தது. தாவீது ராஜாவின் மனைவி மீகாள் விக்கிரகங்களை வைத்திருந்தாள், அவனைக் கொல்ல வந்த வீரர்களை ஏமாற்றுவதற்காக அவனுடைய படுக்கையில் ஒன்றை வைத்திருந்தாள். (1சாமுவேல் 19:11-16).

நாம் நினைப்பதை விட விக்கிரகங்கள் மிகவும் பரவலாக காணப்படுகின்றன. தேவன் நம் தகுதியைக் காட்டிலும் அதிக பொறுமையுடன் இருக்கிறார். விக்கிரகங்களிடம் திரும்புவதற்கான சோதனைகள் வரும், ஆனால் தேவனின் மன்னிப்பு பெரியது. நாம் இயேசுவுக்காகப் பிாித்தெடுக்கப்பட்ட வாழ்வை மேற்கொள்வோம். நம்முடைய பாவங்களை விட்டு விலகி, அவரில் மன்னிப்பைக் கண்டடைவோமாக.

 

நமது ஆவிக்குரிய வரம்பை எப்படி பாதுகாப்பது

ராக்கி திரைப்படங்கள் ஓர் குத்துச்சண்டை வீரரின் கதையைச் சொல்கிறது. அவர் ஹெவிவெயிட் சாம்பியனாவதற்கு சாத்தியமில்லாத முரண்பாடுகளை முறியடித்து, எப்படி வாழ்க்கையில் ஜெயித்தார் என்பதை சொல்கிறது. ராக்கி திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தில், வெற்றியடைந்த ராக்கி தனது சொந்த சாதனைகளால் ஈர்க்கப்படுகிறார். தொலைக்காட்சி விளம்பரங்கள் அவரின் உடற்பயிற்சி நேரத்தை வீணாக்கின. அதின் விளைவாய் அவருடைய எதிர்தரப்பினர் மூலம் குத்துச்சண்டையில் தோல்வியை தழுவுகிறார். மீண்டும் சுதாரித்து, தன்னுடைய பழைய நிலைக்கு எவ்வாறு வருகிறார் என்பதே படத்தின் மீதிக் கதை.

ஆவிக்குரிய அர்த்தத்தில் சொல்லவேண்டுமாகில், யூதாவின் ராஜா ஆசா தனது சண்டை முனையை இழந்துவிட்டான். அவனது ஆட்சியின் ஆரம்பத்தில், அவன் கடினமான முரண்பாடுகளை எதிர்கொண்டு தேவனை நம்பினான். வலிமைமிக்க கூஷியர்கள் தாக்கத் தயாரானபோது, “எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்” (2 நாளாகமம் 14:11) என்று ஆசா ஜெபித்தான். தேவன் அவனுடைய ஜெபத்திற்குப் பதிலளித்தார். யூதேயா தேசம் அவர்களுடைய எதிரிகளை மேற்கொண்டது (வச. 12-15).

பல ஆண்டுகளுக்குப் பிறகு, யூதேயா மீண்டும் அச்சுறுத்தப்பட்டது. இம்முறை ஆசா தேவனை புறக்கணித்து, அந்நிய தேசத்து ராஜாவிடம் உதவிகேட்கிறான் (16:2-3). அது அவனுக்கு நன்றாகத் தோன்றியது. ஆனால் தேவன் மகிழ்ச்சியடையவில்லை. அவன் தேவனை நம்புவதை நிறுத்திவிட்டதாக அனானி தீர்க்கதரிசி ஆசாவிடம் கூறினான் (வச. 7-8). அவன் ஏன் முன்போல் இப்போது தேவனை நம்பவில்லை?

நம் தேவன் முற்றிலும் நம்பகமானவர். அவருடைய கண்கள் “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி” பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது (வச. 9). நாம் முற்றிலும் தேவனை சார்ந்துகொண்டு, நம்முடைய ஆவிக்குரிய முனையை சரியாய் வைத்திருக்கும்போது, அவருடைய பெலனை உணரலாம். 

தாராளமான அன்பு

விமானத்தில் என்னருகே அமர்ந்தவள்; தான் மதம் சாராதவள் என்றும், நிறைய கிறிஸ்தவர்கள் வசிக்கும் நகரத்திற்கு குடிபெயர்ந்திருப்பதாகவும் என்னிடம் கூறினாள். அவளது அயலகத்தாரில் அதிகமானோர் திருச்சபையின் வழிபாட்டிற்கு செல்வதாக அவள் குறிப்பிடுகையில், அவளுடைய அனுபவத்தைப் பற்றி நான் கேட்டேன். அவர்களின் பெருந்தன்மைக்கு தன்னால் ஒருபோதும் கைமாறு செய்ய முடியாது என்றார். தனது ஊனமுற்ற தந்தையை புதிய நாட்டிற்கு அழைத்து வந்தபோது, அவளுடைய அண்டை வீட்டார் அவளது வீட்டிற்கு ஒரு சாய்வுதளத்தை உருவாக்கி, மருத்துவமனை படுக்கை மற்றும் மருத்துவப் பொருட்களை தானமாக வழங்கினர். அவள், “கிறிஸ்தவனாக இருப்பது ஒருவரை அன்பானவராக ஆக்குகிறது என்றால், எல்லோரும் கிறிஸ்தவராக வேண்டும்” என்றாள்.

இயேசு என்ன நம்பினாரோ அதையே அவள் சொன்னாள், “இவ்விதமாக மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத்தேயு 5:16). பேதுரு இயேசுவின் கட்டளையை கேட்டு அதையே அறிவித்தார், “புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்” (1 பேதுரு 2:12).

இயேசுவை விசுவாசிக்காத நம் அயலகத்தாருக்கு நாம் எதை நம்புகிறோம், ஏன் நம்புகிறோம் என்று புரியாமல் இருக்கலாம். நமது தாராளமான அன்பை இன்னும் அவர்களால் புரிந்து கொள்ள முடியாத வரை, நமது நம்பிக்கையை திணிக்க வேண்டாம். மேலும் அவள் தன்னுடைய கிறிஸ்தவ அயலகத்தார், தான் அக்கறைகொள்ளவிட்டாலும், “அவர்களில் ஒருவராக” அவளிடம் கரிசனைகொள்வதை கண்டு வியந்தாள். கிறிஸ்துவினிமித்தம் தான் நேசிக்கப்படுவதை அறிந்திருந்தாள், மேலும் தேவனுக்கு நன்றி கூறுகிறாள். அவள் இன்னும் அவரை நம்பவில்லை, ஆனால் மற்றவர்கள் நம்புவதால் அவள் நன்றியுள்ளவளாக இருக்கிறாள். 

அந்நியரை உபசரித்தல்

“எவ்ரிதிங் சாட் இஸ் அன்ட்ரூ” என்ற புத்தகத்தில், டேனியல் நயேரி தனது தாய் மற்றும் சகோதரியுடன் சித்திரவதையிலிருந்து தப்பிக்க, ஒரு அகதி முகாம் மூலம் அமெரிக்காவின் பாதுகாப்பான இடத்திற்கு ஒடி வந்த கொடூரமான பயணத்தை விவரிக்கிறார். அவர்களுக்கு நிதி உதவிசெய்ய, முன்பின் தெரியாத ஒரு வயதான தம்பதியினர் முன்வந்தனா். பல ஆண்டுகள் கழிந்தும், டேனியல் அதைக் கிரகிக்கக் கூடாமல், “உங்களால் நம்ப முடிகிறதா? கண்மூடித்தனமாக அதைச் செய்தனர். நாங்கள் சந்தித்ததே இல்லை. நாங்கள் தீயவர்களாக இருந்திருந்தால், அதற்கான விலைக்கிரயத்தை அவர்கள் கொடுத்திருக்க வேண்டும். என் வாழ்வில் அதுபோன்ற துணிச்சல், இரக்கம் மற்றும் தீவிரத்தைக் கண்டதேயில்லை” என்று எழுதுகிறார்.

இப்படிப்பட்ட கரிசனையைப் பிறர் மீது நாம் காட்டும்படி தேவன் விரும்புகிறார். அந்நியரிடம் இரக்கமாயிருக்கும்படி, இஸ்ரவேலரிடம் தேவன் கூறினார். “நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே” (லேவியராகமம் 19:34). இயேசுவுக்குள்ளான புறஜாதி விசுவாசிகளுக்கு (நம்மில் பெரும்பாலானோர்) “அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், . . . புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள் (எபேசியர் 2:12) என்று நினைவூட்டினார். ஆகவே, யூதரும் புறஜாதியுமான முன்பு அந்நியராயிருந்த நம் அனைவர்க்கும், “அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்” (எபிரெயர் 13:2) என அவர் கட்டளையிடுகிறார்.

இப்போது தனக்கென ஒரு குடும்பத்துடன் வளர்ந்துள்ள டேனியல், தங்களுக்கு உதவிய ஜிம் மற்றும் ஜீன் டாவ்சனை, “அவ்வளவு கிறிஸ்தவ தன்மையோடு இருந்தனர், அகதிகளின் குடும்பத்தை தங்களுக்கு வீடு கிடைக்கும் வரை தங்களோடு வாழ அனுமதித்தனர்” பாராட்டுகிறார்.

தேவன் அந்நியரை ஏற்றுக்கொள்கிறார், அவர்களை ஏற்றுக்கொள்ளுமாறு நம்மையும் தூண்டுகிறார்.

தழும்புகளிலிருந்து கற்றுக்கொள்ளுதல்

ஃபே அவள் வயிற்றில் உள்ள தழும்புகளைத் தொட்டாள். உணவுக்குழாய்-வயிற்று புற்றுநோயை அகற்ற இன்னுமொரு அறுவை சிகிச்சையை அவள் தாங்கவேண்டியிருந்தது. இந்த நேரத்தில் மருத்துவர்கள் அவளது வயிற்றின் ஒரு பகுதியை எடுத்து, அதில் அவர்களுடைய வேலையின் அளவை அடையாளம் தெரிந்துகொள்வதற்காக ஒரு சிறு பகுதியை தைக்காமல் விட்டுவிட்டனர். அவள் தனது கணவரிடம், “வடுக்கள், புற்றுநோயின் வலியை அல்லது குணமாகுதலின் துவக்கத்தைக் குறிக்கின்றன. எனது இந்த வடுக்களை குணமாகுதவலின் அடையாளமாக நான் தேர்வு செய்கிறேன்” என்று சொன்னாள்.  
யாக்கோபு இரவு முழுவதும் தேவனோடு போராடிய பின்பு, இதுபோன்ற ஒரு தேர்வை தெரிந்தெடுத்தான். கர்த்தருடைய மனுஷன் யாக்கோபின் தொடை சந்தை பிடிக்க, யாக்கோபு சுளுக்கின் நிமித்தம் சோர்வாகவும் தளர்வுடனும் காணப்பட்டான். சில மாதங்களுக்குப் பிறகு, யாக்கோபு தனது இடுப்பை மென்மையாய் நீவியபோது அவன் எதைப் பிரதிபலித்தான் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது? 
இந்த போராட்டம் நடைபெற்றதற்கு பின்னணியாக, அவரது பல வருட வஞ்சகத்திற்காக அவன் வருத்தத்தால் நிரப்பப்பட்டானா? கர்த்தருடைய தூதன் அவன் யார் என்ற உண்மை விளங்கும் வரைக்கும் அவனை ஆசீர்வதிக்க மறுத்தார். பின்பு யாக்கோபு, தான் குதிங்காலை பிடித்தவன் என்ற உண்மையை ஒப்புக்கொண்டார் (ஆதியாகமம் 25:26 ஐப் பார்க்கவும்). அவர் தனது சகோதரன் ஏசாவையும் மாமனார் லாபானையும் தந்திரமாக கையாண்டு, அவர்கள் மூலம் ஆதாயம் பெறுகிறான். யாக்கோபோடு போராடிய கர்த்தருடைய தூதன், அவன் தேவனோடும் மனிதனோடும் போராடி மேற்கொண்டபடியால், அவனுக்கு இஸ்ரவேல் என்று பெயர் சூட்டுகிறான் (வச. 28).  
யாக்கோபின் இந்த தொடைச்சுளுக்கானது அவனது பழைய வஞ்சக வாழ்க்கையின் முடிவையும் தேவனுடனான அவனது புதிய வாழ்க்கையின் துவக்கத்தையும் குறிக்கிறது. அதாவது, யாக்கோபின் முடிவையும் இஸ்ரவேலின் துவக்கத்தையும் குறிக்கிறது. தேவன் அவன் மூலமாய் பலமாய் கிரியை செய்யும் அளவிற்கு, அவனது அந்த தளர்வானது தேவன் மீது முற்றிலுமாய் சாய்ந்துகொள்வதற்கு அவனுக்கு வழிவகுத்தது.  

தேவன் போதுமானவர்

எலன், பண நெருக்கடியில் இருந்தாள். எனவே கிறிஸ்மஸ_க்கு கிடைக்கும் போனஸ் பெற்றதில் மகிழ்ச்சியடைந்தாள். அவள் பெற்றுக்கொண்ட பணம் அவளுடைய தேவைக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் அவள் அந்த பணத்தை வங்கியில் போடும்போது, அவனுக்கு மற்றுமொரு ஆச்சரியம் காத்திருந்தது. கிறிஸ்மஸ் பரிசாக, வங்கி தனது ஜனவரி மாத அடமானத் தொகையை தனது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ததாக அவளுக்கு அறிவிக்கப்பட்டது. இப்போது அவளும் அவளுடைய கணவரும் மற்ற செலவுகளை செய்யலாம். இன்னும் யாராவது ஒருவரை கிறிஸ்மஸ் பரிசுடன் ஆச்சரியப்படுத்தக்கூடும்.  
நாம் எதிர்பார்ப்பதை விட தேவன் நம்மை ஆசீர்வதிக்க அவருக்கு வழி தெரியும். நகோமி தனது கணவன் மற்றும் குமாரர்களின் மரணத்தால் கசப்பாகவும் உடைந்தும் இருந்தாள் (ரூத் 1:20-21). அவளது அவநம்பிக்கையான அந்த சூழ்நிலையை போவாஸ் மாற்றினார். போவாஸ் நகோமியின் மருமகளை மறுமணம் செய்து, அவர்கள் தங்குவதற்கான வீட்டையும் கொடுத்தார் (4:10). 
நகோமி எதிர்பார்த்ததும் அதுதான். ஆனால் பின்னர் தேவன் ரூத்துக்கும் போவாஸ{க்கும் ஒரு குமாரனைக் கொடுத்து ஆசீர்வதித்தார். நாகோமிக்கு “ஆத்துமாவுக்கு ஆறுதல்செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்” (வச. 15) என்று பேரன் கொடுக்கப்படுகிறான். அது அவளுக்கு மிகவும் போதுமானதாக இருந்திருக்கும். அதைப் பார்த்த பெத்லகேமின் ஸ்திரீகள், “நகோமிக்கு ஒரு ஆண் பிள்ளை பிறந்தது!” (வச. 17) என்று சொன்னர்கள். பின்னர் சின்ன ஓபேத் வளர்ந்து, “தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பனாய்” ஆனார் (வச. 17). நகோமியின் குடும்பம் வரலாற்றில் மிக முக்கியமான வம்சமான இஸ்ரவேலின் ராஜ வம்சத்தைச் சேர்ந்தது! அதுவே போதுமானதாக இருந்திருக்கும். இருப்பினும், தாவீது இயேசுவின் முற்பிதாவாய் மாறினார். 
நாம் கிறிஸ்துவை விசுவாசித்தால், நகோமியின் ஆசீர்வாதங்கள் நமக்கும் கிட்டும். அவர் நம்மை மீட்கும் வரையில் நம்மிடத்தில் எதுவும் இல்லை. இப்போது நாம் நம் தகப்பனால் முழுவதுமாய் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளோம். அவர் மற்றவர்களை ஆசீர்வதிக்க நம்மை ஆசீர்வதிப்பார். இது நம்மடைய தேவையைக் காட்டிலும் அதிகமானது.  

தேவனால் வீட்டிற்கு வரவேற்கப்பட்டது

ஷெர்மன் ஸ்மித், மியாமி பல்கலைக்கழகத்திற்காக அமெரிக்க கால்பந்து விளையாட டெலாண்ட் மெக்கல்லௌவை நியமித்த பிறகு, டெலாண்ட் ஸ்மித்தை மிகவும் நேசித்தார். டெலாண்ட்டுக்கு தகப்பன் ஸ்தானத்தில் ஸ்மித் செயல்பட்டார். டெலாண்ட், ஸ்மித் மீது மிகுந்த அபிமானத்தைக் கொண்டிருந்தார். மேலும் அவர் எதிர்பார்த்த மனிதனாக மாறுவதையே அவர் நோக்கமாகக் கொண்டிருந்தார். பல தசாப்தங்களுக்குப் பிறகு, டெலாண்ட் தன்கை பெற்றெடுத்த தாயை கண்டறிந்தபோது, அவள் “உன் தந்தையின் பெயர் ஷெர்மன் ஸ்மித்” என்ற சொல்லி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ஆம், அதே ஷெர்மன் ஸ்மித் தான். பயிற்சியாளர் ஸ்மித் தனக்கு ஒரு மகன் இருப்பதை அறிந்து திகைத்தார். மேலும் டெலாண்ட் தன் மனதில் கற்பனை செய்த தந்தையின் உருவத்தில் இருக்கும் அதே நபரே தனது தந்தையாய் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.  
அடுத்த முறை அவர்கள் சந்தித்தபோது, ஷெர்மன் டெலாண்டைக் கட்டிப்பிடித்து, “என் மகனே” என்றார். டெலாண்ட் ஒரு தந்தையிடமிருந்து அந்த வார்த்தையை இதுவரை கேட்டதில்லை. ஸ்மித் மிகுந்த பெருமிதத்தோடு அதைச் சொல்லும் இடத்தில் தான் இருக்கிறோம் என்பதை டெலாண்ட் அறிந்திருந்தான். “இவன் என் மகன்,” என்று சொல்லிவிட்டு அவர் திகைப்பில் ஆழ்ந்தார். 
நம் பரலோகத் தகப்பனின் பரிபூரண அன்பினால் நாமும் மூழ்கடிக்கப்பட வேண்டும். யோவான் எழுதும்போது, “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” (1 யோவான் 3:1) என்று எழுதுகிறார். ஸ்மித்தைப் போன்ற ஒருவர் தனது அப்பாவாக இருக்க முடியும் என்று நினைக்கத் துணியாத டெலாண்டைப் போல நாங்கள் திகைத்துப் போனோம். அது உண்மையில் உண்மையா? ஆம் நாமும் அப்படித்தான் இருக்கிறோம் (வச. 1) என்று யோவான் சொல்லுகிறார்.  
நீங்கள் இயேசுவை விசவாசித்தால், அவருடைய பிதா உங்களுக்கும் அப்பாதான். நீங்கள் உலகில் திக்கற்றவராய் உணரலாம். ஆனால் உண்மை என்னவென்றால், உங்களுக்கு ஒரு தந்தை இருக்கிறார். அவர் மிகவம் நேர்த்தியானவர். அவர் உங்களை தன்னுடைய பிள்ளை என்று அழைப்பதில் பெருமைப்படுகிறார்.  

மூன்று ராஜாக்கள்

புகழ்பெற்ற ஹாமில்டனின் இசையில், இங்கிலாந்தின் மன்னரான மூன்றாம் ஜார்ஜ், நகைச்சுவையாக ஒரு கார்ட்டூன் சித்திரத்தில் குழப்பமான வில்லனாக சித்தரிக்கப்படுகிறார். இருப்பினும், ஜார்ஜ் மன்னரின் புதிய வாழ்க்கை வரலாறு, அவர் ஹாமில்டன் அல்லது அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தில் விவரிக்கப்பட்டுள்ள கொடுங்கோலன் இல்லை என்று கூறியது.

அமெரிக்கர்கள் சொல்லுவது போல ஜார்ஜ் கொடூரமான சர்வாதிகாரியாக இருந்திருந்தால், அவர்களின் சுதந்திரப் போராட்டங்களை செயல்படுத்தவிடாமல் தடுத்திருக்கலாம். ஆனால் அவர் தனது “நாகரிகமான, நல்ல சுபாவத்தால்” அப்படி செய்யவில்லை. 

ஜார்ஜ் மன்னன் வருத்தத்துடன் இறந்தானா? யாருக்குத் தெரியும்? அவர் தனது குடிமக்களிடம் கடுமையாக செயல்பட்டிருந்தால், அவரது ஆட்சி ஒருவேளை இன்னும் வெற்றிகரமாக இருந்திருக்குமா?

அந்த விவாதம் தேவையற்றது. வேதாகமத்தில் யோராம் ராஜாவைப் பற்றி வாசிக்கிறோம். “யோராம் தன் தகப்பனுடைய ராஜ்யபாரத்திற்கு வந்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின்பு, அவன் தன்னுடைய சகோதரர் எல்லாரையும் இஸ்ரவேலின் பிரபுக்களில் சிலரையும் பட்டயத்தால் கொன்றுபோட்டான்” (2 நாளாகமம் 21:4). “அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்” (வச. 6). அவனது இரக்கமற்ற ஆட்சி அவனது மக்களை அந்நியப்படுத்தியது. அவர்கள் அவனது மரணத்திற்காக அழவில்லை. “அவனுடைய ஜனங்கள் அவனுக்காகக் கொளுத்தவில்லை” (வச. 19).

மூன்றாம் ஜார்ஜ் மிகவும் மென்மையாக இருந்தாரா என்று வரலாற்றாசிரியர்கள் விவாதிக்கலாம். ஆனால் யோராம் நிச்சயமாக மிகவும் கொடுங்கோலனாக இருந்தான். “கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய்” (யோவான் 1:14) வந்த இயேசுவின் வழியே ஒரே சிறந்த வழி. கிறிஸ்துவின் எதிர்பார்ப்புகள் உறுதியானவை (அவர் உண்மையை எதிர்பார்க்கிறார்). ஆனாலும் அவர் தோல்வியுற்றவர்களை அரவணைக்கிறார் (அவர் கிருபையை நீட்டிக்கிறார்). தம்மை விசுவாசிக்கிற நம்மை அவருடைய வழியைப் பின்பற்றும்படி இயேசு அழைக்கிறார். பின்னர், அவருடைய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின் மூலம், அவர் அவ்வாறு செய்ய நமக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்.  

தேவன் உன்னை பேர்ச்சொல்லி அழைக்கிறார்

நடாலியா, கல்வி கற்பதாக முடிவுசெய்து வேறு நாட்டிற்குச் சென்றார். ஆனால் அவள் தங்கியிருந்த புதிய வீட்டில் இருந்த தகப்பன் ஒருவன் அவளை உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தத் தொடங்கினான். ஊதியம் இல்லாமல் தனது வீட்டையும் குழந்தைகளையும் பராமரிக்கும்படி அவளை கட்டாயப்படுத்தினான். அவன் அவளை வெளியே செல்லவோ அல்லது தொலைபேசியைப் பயன்படுத்தவோ அனுமதிக்கவில்லை. அவள் அவனுடைய அடிமையாகிவிட்டாள். 
ஆகார் என்பவள் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பணிவிடை செய்த ஒரு எகிப்திய அடிமை. அவர்கள் அவளை “என் அடிமைப்பெண்” என்றும் “உன் அடிமைப்பெண்” என்றும் (ஆதியாகமம் 16:2, 5-6) அழைக்கிறதை பார்க்கமுடியும். அவளை வைத்து தன் சந்ததியை வளர்த்துக்கொள்ளும் நோக்கத்தோடு அவளை பயன்படுத்திக் கொண்டனர்.  
தேவன் எவ்வளவு வித்தியாசமானவர்! கர்ப்பவதியாய் இருந்த ஆகாருக்கு தேவதூதன் வனாந்திரத்தில் முதல் முறையாக வெளிப்படுகிறான். தேவதூதன் என்பது தேவனுடைய தூதுவனாகவோ, சிலவேளைகளில் தேவனாகவேகூட இருக்கக்கூடும். ஆகார் தேவதூதனை தேவன் என்று எண்ணி, “என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன்” (வச. 13) என்று சொல்லுகிறாள். தேவதூதன் தேவனாக இருந்தால், அவர் மாம்சத்தில் உதித்து, தேவனை நமக்கு வெளிப்படுத்திய தேவனுடைய குமாரனாக இருக்கலாம். அவர் அவளுடைய பெயரைச் சொல்லி அழைக்கிறார், “சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்?” (வச. 8).  
தேவன் நடாலியாவைக் கண்டு, அவள் மீது அக்கறைக் கொள்ளும் நபர்களின் மூலம் அவளுடைய அடிமைத்தன வாழ்க்கையை விடுவித்தார். அவள் தற்போது செவிலியராய் பணிபுரிந்துகொண்டிருக்கிறாள். தேவன் ஆகாரைப் பார்த்து அவளை பேர்ச்சொல்லி அழைத்தார். தேவன் உங்களையும் பார்க்கிறார். நீங்கள் ஒருவேளை முக்கியத்துவமற்றவராய் கருதப்படலாம். இயேசு உங்களை பேர்ச்சொல்லி அழைக்கிறார். அவரிடத்தில் ஓடிவாருங்கள்.  

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் தலைசிறந்த படைப்பு

மூளை இயங்கும் முறையைப் புரிந்துகொள்வதில் நரம்பணுவியல் பெரும் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அதைப் புரிந்துகொள்வதற்கான ஆரம்பக் கட்டத்தில்தான் இன்னும் இருப்பதாக விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள். மூளையின் கட்டமைப்பு, அதன் செயல்பாட்டின் சில அம்சங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பதிலளிக்கும் பகுதிகள், நமது உணர்வுகளைச் செயல்படுத்துதல், இயக்கங்களை உருவாக்குதல் மற்றும் உணர்ச்சிகளைக் கொண்டிருக்கும் பகுதிகள் ஆகியவற்றை அவர்கள் புரிந்துள்ளார்கள். ஆனால் நடத்தை, கருத்து மற்றும் நினைவாற்றலுக்கான தொடர்புகள் அனைத்தும் , அவர்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. வியப்பூட்டும் வண்ணமாக , தேவனால் உருவாக்கப்பட்ட தலைசிறந்த படைப்பான மனிதனைப் பற்றி புரிந்து கொள்வதே கடினமாக இருக்கிறது.

மனித உடலின் அதிசயங்களை, உருவக நடையில், தாவீது கொண்டாடினார், “என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்” (சங்கீதம் 139:13) என்பது இயற்கைமுறை மீதிருக்கும் தேவனின் சர்வ ஆளுகைக்குச் சான்றாகும். அவர் , “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள்” (வச. 14) என்று எழுதினார். முன்னோர்கள் தாயின் வயிற்றில் ஒரு குழந்தையின் வளர்ச்சியைப் பெரிய மர்மமாகக் கருதினர் (பிரசங்கி 11:5 ஐப் பார்க்கவும்). மனித உடலின் வியக்கத்தக்கப் புதிர்களைப் பற்றிய குறைந்த அறிவே இருந்தாலும், தாவீது தேவனின் அற்புதமான கிரியை மற்றும் பிரசன்னத்தை பிரமிப்புடனும் ஆச்சரியத்துடனும் வியந்தார் (சங்கீதம் 139:17-18).

மனித உடலின் வியப்பான, அற்புதமான புதிர்கள், நமது மகாதேவனின் வல்லமை மற்றும் சர்வ ஆளுகையைப் பிரதிபலிக்கிறது. துதிப்பது , வியப்பது மற்றும் பிரமிப்பது மட்டுமே நம்மால் செய்யக்கூடியது.

 

மீட்டெடுக்கும் பயிற்சி

நீங்கள் எப்போதாவது ஒரு கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, அதை இடையில் நிறுத்திவிட்டு, அது எப்போது நிகழ்ந்தது அல்லது யார் என்று குழம்பி யோசித்திருக்கிறீர்களா? வயதாவதினால் நினைவாற்றல் மங்கிவிடும் என்று நாம் அடிக்கடி நம்புகிறோம். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் அந்த கருத்தை ஆதரிக்கவில்லை. உண்மையில், அவை நமது நினைவாற்றல் பிரச்சனையல்ல என்பதைக் குறிப்பிடுகின்றன. அந்த நினைவுகளை மீட்டெடுப்பது நமது திறமை என்று கருதுகின்றன. நினைவுகளை சில வழக்கமான ஒத்திகை இல்லாமல் அணுகுவது கடினமாகிவிடும்.

அந்த மீட்டெடுப்பு திறனை மேம்படுத்துவதற்கான வழிகளில் ஒன்று, வழக்கமான திட்டமிடப்பட்ட செயல்கள் அல்லது குறிப்பிட்ட நினைவகத்தை நினைவுபடுத்தும் அனுபவங்கள். நமது சிருஷ்டிக்கர்த்தர் இதை அறிந்திருந்தார். எனவே அவர் இஸ்ரவேல் புத்திரருக்கு வாரத்தில் ஒரு நாளை தேவனை ஆராதிக்கும் ஓய்வுநாளாக ஏற்படுத்தியிருந்தார். அத்தகைய ஓய்வினிமித்தம் நாம் மனப் பயிற்சிக்கான வாய்ப்பைப் பெறுகிறோம். “கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி(னார்)” (யாத்திராகமம் 20:11). இது நம்மால் உண்டானது அல்ல; தேவனுடைய திட்டம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.

நம் வாழ்க்கையின் அவசரத்தில், தேவன் நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் என்ன செய்திருக்கிறார் என்ற நினைவுகளில் சில நேரங்களில் நம் பிடியை நாம் இழக்க நேரிடுகிறது. நம் வாழ்க்கையை யார் உன்னிப்பாகக் கண்காணிக்கிறார்கள் என்பதையும், நாம் அதிகமாகவும் தனிமையாகவும் உணரும்போது அவர் நம்மோடு இருப்பதாக வாக்களித்ததை நாம் மறந்துவிடுகிறோம். நம்முடைய வழக்கமான வாழ்க்கைப் பயணத்திலிருந்து ஒரு நாளை ஓய்வுநாளாய் ஆசரிப்பதின் மூலம் நாம் தேவனையும் “அவர் செய்த சகல உபகாரங்களையும்” (சங்கீதம் 103:2) நினைவுகூர வலியுறுத்தப்படுகிறோம். 

 

செப்னாவின் கல்லறை

தமிழ் அரசியல்வாதியான கருணாநிதி, சென்னை மெரினா கடற்கரையில் தனது ஆசான் சி.என்.அண்ணாதுரையின் அருகில் அடக்கம் செய்யப்பட விரும்பினார். அவரது பகுத்தறிவு நம்பிக்கை காரணமாக, எந்த மதச் சடங்குகளும் செய்யப்படுவதை அவர் விரும்பவில்லை.

ஒரு பெரிய நினைவுச்சின்னம் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் உண்டு என்றாலும் அவரது நம்பிக்கையானது அவரை மரணம் என்ற யதார்த்தத்திலிருந்து விலக்கி விடவில்லை என்பதுதான் உண்மை. நாம் இறந்தாலும் வாழ்க்கை கடந்து செல்கிறது என்பதே கசப்பான உண்மை.

யூதாவின் வரலாற்றில் ஒரு இக்கட்டான நேரத்தில், “அரமனை விசாரிப்புக்காரனான” செப்னா, மரணத்திற்குப் பிறகு தனக்கான மரபை நிலைநாட்ட, தனக்கென ஒரு கல்லறையை ஏற்படுத்தினான். ஆனால் தேவன், அவனுடைய தீர்க்கதரிசி ஏசாயா மூலம், “உயர்ந்த ஸ்தலத்திலே தன் கல்லறையை வெட்டி, கன்மலையிலே தனக்கு வாசஸ்தலத்தைத் தோண்டுகிறவனைப்போல, நீ உனக்கு இங்கே கல்லறையை வெட்டும்படிக்கு உனக்கு இங்கே என்ன இருக்கிறது? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்?” (ஏசாயா 22:16) என்றார். மேலும் தீர்க்கதரிசி, “அவர் உன்னை உருண்டையைப்போல அகலமும் விசாலமுமான தேசத்திலே சுழற்றி எறிந்துவிடுவார்; அங்கே நீ சாவாய்” (வ.18) என்றார்.

செப்னா தவறாகப் புரிந்துகொண்டான். நாம் எங்கே புதைக்கப்பட்டோம் என்பதல்ல, நாம் யாரைச் சேவிக்கிறோம் என்பதே முக்கியம். இயேசுவைச் சேவிப்பவர்களுக்கு இந்த அளவிட முடியாத ஆறுதல் உண்டு: “கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள்.. பாக்கியவான்கள்” (வெளிப்படுத்தின விசேஷம் 14:13). நமது “மரணத்தை” ஒருபோதும் அலட்சியப்படுத்தாத தேவனை நாம் சேவிக்கிறோம். அவர் நமது வருகையை எதிர்பார்த்து நம்மை தமது வீட்டிற்கு வரவேற்கிறார்!