எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மைக் விட்மெர்கட்டுரைகள்

அந்நியரை உபசரித்தல்

"எவ்ரிதிங் சாட் இஸ் அன்ட்ரூ" என்ற புத்தகத்தில், டேனியல் நயேரி தனது தாய் மற்றும் சகோதரியுடன் சித்திரவதையிலிருந்து தப்பிக்க, ஒரு அகதி முகாம் மூலம் அமெரிக்காவின் பாதுகாப்பான இடத்திற்கு ஒடி வந்த கொடூரமான பயணத்தை விவரிக்கிறார். அவர்களுக்கு நிதி உதவிசெய்ய, முன்பின் தெரியாத ஒரு வயதான தம்பதியினர் முன்வந்தனா். பல ஆண்டுகள் கழிந்தும், டேனியல் அதைக் கிரகிக்கக் கூடாமல்,  "உங்களால் நம்ப முடிகிறதா? கண்மூடித்தனமாக அதைச் செய்தனர். நாங்கள் சந்தித்ததே இல்லை. நாங்கள் தீயவர்களாக இருந்திருந்தால், அதற்கான விலைக்கிரயத்தை அவர்கள் கொடுத்திருக்க வேண்டும். என் வாழ்வில் அதுபோன்ற துணிச்சல், இரக்கம் மற்றும் தீவிரத்தைக் கண்டதேயில்லை" என்று எழுதுகிறார்.

இப்படிப்பட்ட கரிசனையைப் பிறர் மீது நாம் காட்டும்படி தேவன் விரும்புகிறார். அந்நியரிடம் இரக்கமாயிருக்கும்படி, இஸ்ரவேலரிடம் தேவன் கூறினார். "நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே" (லேவியராகமம் 19:34). இயேசுவுக்குள்ளான புறஜாதி விசுவாசிகளுக்கு (நம்மில் பெரும்பாலானோர்) "அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், … புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள் (எபேசியர் 2:12) என்று நினைவூட்டினார். ஆகவே, யூதரும் புறஜாதியுமான முன்பு அந்நியராயிருந்த நம் அனைவர்க்கும், "அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்" (எபிரெயர் 13:2) என அவர் கட்டளையிடுகிறார்.

இப்போது தனக்கென ஒரு குடும்பத்துடன் வளர்ந்துள்ள டேனியல், தங்களுக்கு உதவிய ஜிம் மற்றும் ஜீன் டாவ்சனை, "அவ்வளவு கிறிஸ்தவ தன்மையோடு இருந்தனர், அகதிகளின் குடும்பத்தை தங்களுக்கு வீடு கிடைக்கும் வரை தங்களோடு வாழ அனுமதித்தனர்" பாராட்டுகிறார்.

தேவன் அந்நியரை ஏற்றுக்கொள்கிறார், அவர்களை ஏற்றுக்கொள்ளுமாறு நம்மையும் தூண்டுகிறார்.

தழும்புகளிலிருந்து கற்றுக்கொள்ளுதல்

ஃபே அவள் வயிற்றில் உள்ள தழும்புகளைத் தொட்டாள். உணவுக்குழாய்-வயிற்று புற்றுநோயை அகற்ற இன்னுமொரு அறுவை சிகிச்சையை அவள் தாங்கவேண்டியிருந்தது. இந்த நேரத்தில் மருத்துவர்கள் அவளது வயிற்றின் ஒரு பகுதியை எடுத்து, அதில் அவர்களுடைய வேலையின் அளவை அடையாளம் தெரிந்துகொள்வதற்காக ஒரு சிறு பகுதியை தைக்காமல் விட்டுவிட்டனர். அவள் தனது கணவரிடம், “வடுக்கள், புற்றுநோயின் வலியை அல்லது குணமாகுதலின் துவக்கத்தைக் குறிக்கின்றன. எனது இந்த வடுக்களை குணமாகுதவலின் அடையாளமாக நான் தேர்வு செய்கிறேன்” என்று சொன்னாள்.

யாக்கோபு இரவு முழுவதும் தேவனோடு போராடிய பின்பு, இதுபோன்ற ஒரு தேர்வை தெரிந்தெடுத்தான். கர்த்தருடைய மனுஷன் யாக்கோபின் தொடை சந்தை பிடிக்க, யாக்கோபு சுளுக்கின் நிமித்தம் சோர்வாகவும் தளர்வுடனும் காணப்பட்டான். சில மாதங்களுக்குப் பிறகு, யாக்கோபு தனது இடுப்பை மென்மையாய் நீவியபோது அவன் எதைப் பிரதிபலித்தான் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது?

இந்த போராட்டம் நடைபெற்றதற்கு பின்னணியாக, அவரது பல வருட வஞ்சகத்திற்காக அவன் வருத்தத்தால் நிரப்பப்பட்டானா? கர்த்தருடைய தூதன் அவன் யார் என்ற உண்மை விளங்கும் வரைக்கும் அவனை ஆசீர்வதிக்க மறுத்தார். பின்பு யாக்கோபு, தான் குதிங்காலை பிடித்தவன் என்ற உண்மையை ஒப்புக்கொண்டார் (ஆதியாகமம் 25:26 ஐப் பார்க்கவும்). அவர் தனது சகோதரன் ஏசாவையும் மாமனார் லாபானையும் தந்திரமாக கையாண்டு, அவர்கள் மூலம் ஆதாயம் பெறுகிறான். யாக்கோபோடு போராடிய கர்த்தருடைய தூதன், அவன் தேவனோடும் மனிதனோடும் போராடி மேற்கொண்டபடியால், அவனுக்கு இஸ்ரவேல் என்று பெயர் சூட்டுகிறான் (வச. 28).

யாக்கோபின் இந்த தொடைச்சுளுக்கானது அவனது பழைய வஞ்சக வாழ்க்கையின் முடிவையும் தேவனுடனான அவனது புதிய வாழ்க்கையின் துவக்கத்தையும் குறிக்கிறது. அதாவது, யாக்கோபின் முடிவையும் இஸ்ரவேலின் துவக்கத்தையும் குறிக்கிறது. தேவன் அவன் மூலமாய் பலமாய் கிரியை செய்யும் அளவிற்கு, அவனது அந்த தளர்வானது தேவன் மீது முற்றிலுமாய் சாய்ந்துகொள்வதற்கு அவனுக்கு வழிவகுத்தது.

தேவன் போதுமானவர்

எலன், பண நெருக்கடியில் இருந்தாள். எனவே கிறிஸ்மஸ_க்கு கிடைக்கும் போனஸ் பெற்றதில் மகிழ்ச்சியடைந்தாள். அவள் பெற்றுக்கொண்ட பணம் அவளுடைய தேவைக்கு போதுமானதாக இருந்தது. ஆனால் அவள் அந்த பணத்தை வங்கியில் போடும்போது, அவனுக்கு மற்றுமொரு ஆச்சரியம் காத்திருந்தது. கிறிஸ்மஸ் பரிசாக, வங்கி தனது ஜனவரி மாத அடமானத் தொகையை தனது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ததாக அவளுக்கு அறிவிக்கப்பட்டது. இப்போது அவளும் அவளுடைய கணவரும் மற்ற செலவுகளை செய்யலாம். இன்னும் யாராவது ஒருவரை கிறிஸ்மஸ் பரிசுடன் ஆச்சரியப்படுத்தக்கூடும்.

நாம் எதிர்பார்ப்பதை விட தேவன் நம்மை ஆசீர்வதிக்க அவருக்கு வழி தெரியும். நகோமி தனது கணவன் மற்றும் குமாரர்களின் மரணத்தால் கசப்பாகவும் உடைந்தும் இருந்தாள் (ரூத் 1:20-21). அவளது அவநம்பிக்கையான அந்த சூழ்நிலையை போவாஸ் மாற்றினார். போவாஸ் நகோமியின் மருமகளை மறுமணம் செய்து, அவர்கள் தங்குவதற்கான வீட்டையும் கொடுத்தார் (4:10).

நகோமி எதிர்பார்த்ததும் அதுதான். ஆனால் பின்னர் தேவன் ரூத்துக்கும் போவாஸ{க்கும் ஒரு குமாரனைக் கொடுத்து ஆசீர்வதித்தார். நாகோமிக்கு “ஆத்துமாவுக்கு ஆறுதல்செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்” (வச. 15) என்று பேரன் கொடுக்கப்படுகிறான். அது அவளுக்கு மிகவும் போதுமானதாக இருந்திருக்கும். அதைப் பார்த்த பெத்லகேமின் ஸ்திரீகள், “நகோமிக்கு ஒரு ஆண் பிள்ளை பிறந்தது!” (வச. 17) என்று சொன்னர்கள். பின்னர் சின்ன ஓபேத் வளர்ந்து, “தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பனாய்” ஆனார் (வச. 17). நகோமியின் குடும்பம் வரலாற்றில் மிக முக்கியமான வம்சமான இஸ்ரவேலின் ராஜ வம்சத்தைச் சேர்ந்தது! அதுவே போதுமானதாக இருந்திருக்கும். இருப்பினும், தாவீது இயேசுவின் முற்பிதாவாய் மாறினார்.

நாம் கிறிஸ்துவை விசுவாசித்தால், நகோமியின் ஆசீர்வாதங்கள் நமக்கும் கிட்டும். அவர் நம்மை மீட்கும் வரையில் நம்மிடத்தில் எதுவும் இல்லை. இப்போது நாம் நம் தகப்பனால் முழுவதுமாய் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளோம். அவர் மற்றவர்களை ஆசீர்வதிக்க நம்மை ஆசீர்வதிப்பார். இது நம்மடைய தேவையைக் காட்டிலும் அதிகமானது.

தேவனால் வீட்டிற்கு வரவேற்கப்பட்டது

ஷெர்மன் ஸ்மித், மியாமி பல்கலைக்கழகத்திற்காக அமெரிக்க கால்பந்து விளையாட டெலாண்ட் மெக்கல்லௌவை நியமித்த பிறகு, டெலாண்ட் ஸ்மித்தை மிகவும் நேசித்தார். டெலாண்ட்டுக்கு தகப்பன் ஸ்தானத்தில் ஸ்மித் செயல்பட்டார். டெலாண்ட், ஸ்மித் மீது மிகுந்த அபிமானத்தைக் கொண்டிருந்தார். மேலும் அவர் எதிர்பார்த்த மனிதனாக மாறுவதையே அவர் நோக்கமாகக் கொண்டிருந்தார். பல தசாப்தங்களுக்குப் பிறகு, டெலாண்ட் தன்கை பெற்றெடுத்த தாயை கண்டறிந்தபோது, அவள் “உன் தந்தையின் பெயர் ஷெர்மன் ஸ்மித்” என்ற சொல்லி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ஆம், அதே ஷெர்மன் ஸ்மித் தான். பயிற்சியாளர் ஸ்மித் தனக்கு ஒரு மகன் இருப்பதை அறிந்து திகைத்தார். மேலும் டெலாண்ட் தன் மனதில் கற்பனை செய்த தந்தையின் உருவத்தில் இருக்கும் அதே நபரே தனது தந்தையாய் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். 

அடுத்த முறை அவர்கள் சந்தித்தபோது, ஷெர்மன் டெலாண்டைக் கட்டிப்பிடித்து, “என் மகனே” என்றார். டெலாண்ட் ஒரு தந்தையிடமிருந்து அந்த வார்த்தையை இதுவரை கேட்டதில்லை. ஸ்மித் மிகுந்த பெருமிதத்தோடு அதைச் சொல்லும் இடத்தில் தான் இருக்கிறோம் என்பதை டெலாண்ட் அறிந்திருந்தான். “இவன் என் மகன்,” என்று சொல்லிவிட்டு அவர் திகைப்பில் ஆழ்ந்தார்.

நம் பரலோகத் தகப்பனின் பரிபூரண அன்பினால் நாமும் மூழ்கடிக்கப்பட வேண்டும். யோவான் எழுதும்போது, “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” (1 யோவான் 3:1) என்று எழுதுகிறார். ஸ்மித்தைப் போன்ற ஒருவர் தனது அப்பாவாக இருக்க முடியும் என்று நினைக்கத் துணியாத டெலாண்டைப் போல நாங்கள் திகைத்துப் போனோம். அது உண்மையில் உண்மையா? ஆம் நாமும் அப்படித்தான் இருக்கிறோம் (வச. 1) என்று யோவான் சொல்லுகிறார். 

நீங்கள் இயேசுவை விசவாசித்தால், அவருடைய பிதா உங்களுக்கும் அப்பாதான். நீங்கள் உலகில் திக்கற்றவராய் உணரலாம். ஆனால் உண்மை என்னவென்றால், உங்களுக்கு ஒரு தந்தை இருக்கிறார். அவர் மிகவம் நேர்த்தியானவர். அவர் உங்களை தன்னுடைய பிள்ளை என்று அழைப்பதில் பெருமைப்படுகிறார்.

மூன்று ராஜாக்கள்

புகழ்பெற்ற ஹாமில்டனின் இசையில், இங்கிலாந்தின் மன்னரான மூன்றாம் ஜார்ஜ், நகைச்சுவையாக ஒரு கார்ட்டூன் சித்திரத்தில் குழப்பமான வில்லனாக சித்தரிக்கப்படுகிறார். இருப்பினும், ஜார்ஜ் மன்னரின் புதிய வாழ்க்கை வரலாறு, அவர் ஹாமில்டன் அல்லது அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தில் விவரிக்கப்பட்டுள்ள கொடுங்கோலன் இல்லை என்று கூறியது. அமெரிக்கர்கள் சொல்லுவது போல ஜார்ஜ் கொடூரமான சர்வாதிகாரியாக இருந்திருந்தால், அவர்களின் சுதந்திரப் போராட்டங்களை செயல்படுத்தவிடாமல் தடுத்திருக்கலாம். ஆனால் அவர் தனது “நாகரிகமான, நல்ல சுபாவத்தால்” அப்படி செய்யவில்லை.

ஜார்ஜ் மன்னன் வருத்தத்துடன் இறந்தானா? யாருக்குத் தெரியும்? அவர் தனது குடிமக்களிடம் கடுமையாக செயல்பட்டிருந்தால், அவரது ஆட்சி ஒருவேளை இன்னும் வெற்றிகரமாக இருந்திருக்குமா?

அந்த விவாதம் தேவையற்றது. வேதாகமத்தில் யோராம் ராஜாவைப் பற்றி வாசிக்கிறோம். “யோராம் தன் தகப்பனுடைய ராஜ்யபாரத்திற்கு வந்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின்பு, அவன் தன்னுடைய சகோதரர் எல்லாரையும் இஸ்ரவேலின் பிரபுக்களில் சிலரையும் பட்டயத்தால் கொன்றுபோட்டான்” (2 நாளாகமம் 21:4). “அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்” (வச. 6). அவனது இரக்கமற்ற ஆட்சி அவனது மக்களை அந்நியப்படுத்தியது. அவர்கள் அவனது மரணத்திற்காக அழவில்லை. “அவனுடைய ஜனங்கள் அவனுக்காகக் கொளுத்தவில்லை” (வச. 19). 

மூன்றாம் ஜார்ஜ் மிகவும் மென்மையாக இருந்தாரா என்று வரலாற்றாசிரியர்கள் விவாதிக்கலாம். ஆனால் யோராம் நிச்சயமாக மிகவும் கொடுங்கோலனாக இருந்தான். “கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய்” (யோவான் 1:14) வந்த இயேசுவின் வழியே ஒரே சிறந்த வழி. கிறிஸ்துவின் எதிர்பார்ப்புகள் உறுதியானவை (அவர் உண்மையை எதிர்பார்க்கிறார்). ஆனாலும் அவர் தோல்வியுற்றவர்களை அரவணைக்கிறார் (அவர் கிருபையை நீட்டிக்கிறார்). தம்மை விசுவாசிக்கிற நம்மை அவருடைய வழியைப் பின்பற்றும்படி இயேசு அழைக்கிறார். பின்னர், அவருடைய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின் மூலம், அவர் அவ்வாறு செய்ய நமக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார். 

தேவன் உன்னை பேர்ச்சொல்லி அழைக்கிறார்

நடாலியா, கல்வி கற்பதாக முடிவுசெய்து வேறு நாட்டிற்குச் சென்றார். ஆனால் அவள் தங்கியிருந்த புதிய வீட்டில் இருந்த தகப்பன் ஒருவன் அவளை உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தத் தொடங்கினான். ஊதியம் இல்லாமல் தனது வீட்டையும் குழந்தைகளையும் பராமரிக்கும்படி அவளை கட்டாயப்படுத்தினான். அவன் அவளை வெளியே செல்லவோ அல்லது தொலைபேசியைப் பயன்படுத்தவோ அனுமதிக்கவில்லை. அவள் அவனுடைய அடிமையாகிவிட்டாள்.

ஆகார் என்பவள் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பணிவிடை செய்த ஒரு எகிப்திய அடிமை. அவர்கள் அவளை “என் அடிமைப்பெண்” என்றும் “உன் அடிமைப்பெண்” என்றும் (ஆதியாகமம் 16:2, 5-6) அழைக்கிறதை பார்க்கமுடியும். அவளை வைத்து தன் சந்ததியை வளர்த்துக்கொள்ளும் நோக்கத்தோடு அவளை பயன்படுத்திக் கொண்டனர். 

தேவன் எவ்வளவு வித்தியாசமானவர்! கர்ப்பவதியாய் இருந்த ஆகாருக்கு தேவதூதன் வனாந்திரத்தில் முதல் முறையாக வெளிப்படுகிறான். தேவதூதன் என்பது தேவனுடைய தூதுவனாகவோ, சிலவேளைகளில் தேவனாகவேகூட இருக்கக்கூடும். ஆகார் தேவதூதனை தேவன் என்று எண்ணி, “என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன்” (வச. 13) என்று சொல்லுகிறாள். தேவதூதன் தேவனாக இருந்தால், அவர் மாம்சத்தில் உதித்து, தேவனை நமக்கு வெளிப்படுத்திய தேவனுடைய குமாரனாக இருக்கலாம். அவர் அவளுடைய பெயரைச் சொல்லி அழைக்கிறார், “சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்?” (வச. 8). 

தேவன் நடாலியாவைக் கண்டு, அவள் மீது அக்கறைக் கொள்ளும் நபர்களின் மூலம் அவளுடைய அடிமைத்தன வாழ்க்கையை விடுவித்தார். அவள் தற்போது செவிலியராய் பணிபுரிந்துகொண்டிருக்கிறாள். தேவன் ஆகாரைப் பார்த்து அவளை பேர்ச்சொல்லி அழைத்தார். தேவன் உங்களையும் பார்க்கிறார். நீங்கள் ஒருவேளை முக்கியத்துவமற்றவராய் கருதப்படலாம். இயேசு உங்களை பேர்ச்சொல்லி அழைக்கிறார். அவரிடத்தில் ஓடிவாருங்கள். 

ஆவியில் விடுதலை

ஆர்வில்லுக்கோ, வில்பர் ரைட்டுக்கோ விமான ஓட்டிக்கான உரிமம் இல்லை. இருவரும் கல்லூரிக்கும் செல்லவில்லை. அவர்கள் பறக்க வேண்டுமென்ற லட்சியமும், தைரியமும் கொண்ட மிதிவண்டி பழுதுபார்ப்பவர்கள். டிசம்பர் 17, 1903ல், அவர்கள் “ரைட் ஃப்ளையர்” என்ற பறக்கும் இயந்திரத்தை நான்கு முறை மாறி மாறி பறக்க செய்தனர். அவற்றில் நீண்ட பயணம் ஒரு நிமிடமே நீடித்தது, ஆனால் அது நமது உலகையே மாற்றிவிட்டது.

.

பேதுருவுக்கும், யோவானுக்கும் பிரசிங்கிக்கும் உரிமம் இல்லை. இருவரும் வேதாகம கல்லூரிக்கு சென்றதும் இல்லை. அவர்கள் மீனவர்கள், இயேசுவின் ஆவியால் நிரப்பப்பட்டு, தைரியமாக நற்செய்தியை அறிவித்தனர்: "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்." (அப்போஸ்தலர் 4:12).

 

ரைட் சகோதரர்களின் சுற்றத்தார் உடனடியாக அவர்களின் சாதனையைப் பாராட்டவில்லை, அவர்களின் சொந்த ஊர் செய்தித்தாள் அவர்களின் கதையை நம்பவில்லை; உண்மையாக இருந்தாலும், அவர்கள் பறந்தது குறுகிய தூரமாக தான் இருக்க முடியும் எனக் கூறியது. பலமுறை அவ்வாறு பறந்து சாதனை புரிந்த பின்னரே அவர்கள் உண்மையிலேயே என்ன செய்தார்கள் என பொதுமக்கள் அடையாளம் கண்டு கொண்டனர்.

 

மதத் தலைவர்களுக்கு பேதுருவையும், யோவானையும் பிடிக்கவில்லை, மேலும் இயேசுவைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதை நிறுத்தும்படி கட்டளையிட்டார்கள். பேதுரு, "முடியவே முடியாது" என்றான். "நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்" (வ.20).

 

நீங்களும் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை நீங்கள் மற்றவர்களால் தூற்றப்பட்டிருக்கலாம். பரவாயில்லை. இயேசுவின் ஆவி உங்களிடம் இருந்தால், அவருக்காக தைரியமாக வாழ விடுதலையுடன் நீங்கள் இருக்கிறீர்கள்!  

எதிரிகள் மீது எரிகிற தழல்களை குவித்தல்

சிறைக் காவலரிடம் இருந்து தினமும் அடிவாங்குவதை டான் சகித்துக் கொண்டார். அப்படிப்பட்ட கடினமான மனிதனை நேசிக்கும்படிக்கு கிறிஸ்துவால் உணர்த்தப்பட்டதால், ஒரு நாள் காலை நேரத்தில் அவரிடத்தில் அடிவாங்கும்போது, “ஐயா, என் வாழ்நாள் முழுவதும் நான் தினமும் உங்களைப் பார்க்கப் போகிறேன் என்றால், நாம் நண்பர்களாக மாறலாமே” என்று கூறினார். அந்த சிறைக்காவலாளியோ, “இல்லை! நாம் எப்போதும் நண்பர்களாக மாறவே முடியாது” என்றார். ஆனால் டான் வற்புறுத்தி தன் கையை அவரிடமாய் நீட்டினார். 

அந்த சிறை அதிகாரி உறைந்து நின்றார். அவர் அவருடைய கையைக் குலுக்க, அந்த அதிகாரி அவருடைய கையை உறுதியாய் பற்றிக்கொண்டார். அவருடைய கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அவர் “டான், என்னுடைய பெயர் ரொசாக். நான் உன் சிநேகிதனாயிருக்க விரும்புகிறேன்” என்று சொன்னாராம். அதற்கு பின்பு, அந்த சிறையதிகாரி, டானை அடிக்க தன் கையை ஓங்கியதேயில்லையாம். 

வேதம், “உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு. அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார்” (நீதிமொழிகள் 25:21-22) என்று சொல்லுகிறது. இந்த எரிகிற தழல் உருவகமானது, எகிப்தியர்களின் சடங்காச்சாரத்தை நினைவுகூருகிறது. அங்கு குற்றவாளி தனது தலையின் மீது சூடான நிலக்கரியின் கிண்ணத்தை சுமந்து கொண்டு தனது மனந்திரும்புதலை வெளிப்படுத்தும் வழக்கம் நடைமுறையிலிருந்தது. அதுபோலவே, நம்முடைய இரக்கம் நம் எதிரிகளை வெட்கத்தால் முகம் சிவக்கச் செய்யலாம், ஆனால் அது அவர்களை மனந்திரும்புவதற்கு வழிவகுக்கும்.

உங்கள் சத்துரு யார்? யாரை நீங்கள் வெறுக்கிறீர்கள்? டான் தன்னுடைய இருதயத்தையும் தன்னுடைய எதிரியின் இருதயத்தையும் மாற்றும் வல்லமை கிறிஸ்துவின் இரக்கத்திற்கு உண்டு என்று நம்பினார். நாமும் அவ்வாறு நம்ப முடியும்.

இப்போது இது வெறுமையாயிருக்கிறது

எனது சகோதரர்களும் எனது குடும்பத்தினரும், நாங்கள் சிறுவயது முதல் வாழ்ந்து வந்த எங்கள் வீட்டிலிருந்த பெற்றோரின் பொருட்களை இடமாற்றம் செய்யும் வேலையில் ஈடுபட்டோம். அன்றைய நாளின் மத்தியானத்தில், கடைசியாய் பொருட்களை அவ்வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வருமுன்பு, இனி அந்த வீட்டிற்கு நாங்கள் போகப்போவதில்லை என்பதை அறிந்து, அவ்வீட்டின் பின்புற வராந்தாவில் நின்று நாங்கள் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். என் அம்மா என் பக்கம் திரும்பி, “இப்போது இது வெறுமையாயிருக்கிறது” என்று என்னிடம் சொன்னபோது, எனக்கு கண்ணீர் வந்தது. 54 வருடங்கள் நாங்கள் வாழ்ந்த அந்த வீடு தற்போது வெறுமையாயிருக்கிறது. அதைக் குறித்து என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. 

எரேமியாவின் புலம்பல்களின் முதல் வசனத்தோடு என் இதயத்தின் வலி எதிரொலிக்கிறது: “ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே!” (1:1). “அவளுடைய திரளான பாதகங்களினிமித்தம்” (வச. 5) எருசலேம் வெறுமையாய் அமர்ந்திருக்கிறது. அதனுடைய ஜனங்கள் மனந்திரும்ப மறுத்து தேவனுக்கு விரோதமாய் கலகம்பண்ண நினைத்ததால், தேவன் அதின் குடிகளை சிறையிருப்பிற்கு அனுப்பினார் (வச. 18). அனால் என்னுடைய பெற்றோர், பாவத்தினிமித்தம் வீட்டை காலிசெய்யவில்லை. ஆனால் ஆதாமின் பாவத்தினிமித்தம் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையில் பெலவீனத்திற்கு நேராய் கடந்துசெல்லுகிறான். நமக்கும் வயதாகும்போது, நம்மால் பராமரிக்க முடியாத வீட்டிற்குள் நாம் தனிமையாய் வாழமுடியாது. 

ஆனால் எங்களுடைய அந்த அழகான வீட்டில் நாங்கள் வாழ்ந்த அந்த நினைவுகளுக்காய் நான் நன்றிசெலுத்துகிறேன். வேதனை என்பது அன்பின் விலை. எங்கள் பெற்றோரின் வீட்டை மட்டுமல்ல; எங்கள் பெற்றோரையும் சீக்கிரத்தில் நான் இழக்க நேரிடும். அப்போதும் நான் அழுவேன். இந்த வேதனையான பிரிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைத்தையும் சீரமைக்கும்படிக்கு இயேசுவின் வருகையை எதிர்நோக்குகிறேன். அவர் மீது என் நம்பிக்கை இருக்கிறது. 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

பரலோகத்தில் எஜமானன்

சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகம் 2022 இல், புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்கள் அனைவருக்கும் மாதம் ஒருநாள் ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்று அறிவித்தது. எவ்வாறாயினும், அந்த நாட்களில் தங்கள் அன்புக்குரியவர்களைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என்று முதலாளிகள் கவலைப்பட்டனர். பராமரிப்புக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்வதன் மூலம் இதை தீர்க்க கூடும் என்றாலும், ஓய்வின் அவசியத்தை பொருட்படுத்தாத அவர்களின் அணுகுமுறை அவ்வளவு சுலபமாகத் தீர்வு காணவில்லை.

மற்றவர்களை கவனமாக நடத்துவது ஒரு புதிய பிரச்சினை அல்ல. அப்போஸ்தலனாகிய பவுல், வேலையாட்கள் தங்கள் எஜமானர்களின் சொத்தாகக் கருதப்பட்ட காலத்தில் வாழ்ந்தார். ஆயினும்கூட, கிறிஸ்துவின் சாயலுள்ள குடும்பங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த சபைக்கான அவரது அறிவுறுத்தல்களின் கடைசி வரியில், எஜமானர்கள் தங்கள் ஊழியர்களை "செவ்வையாய்" நடத்த வேண்டும் என்று கூறுகிறார் (கொலோசெயர் 4:1). மற்றொரு மொழிபெயர்ப்பு, "அவர்களுக்கு நியாயம் செய்யுங்கள்" என்கிறது.

"மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே" (3:24) பணியாற்றும்படி வேலைகாரர்களுக்கு பவுல் சொல்வது போல், எஜமானர்களுக்கும் "பரலோகத்தில் எஜமான் இருக்கிறாரென்று" (4:1) அவர்கள் மீதான இயேசுவின் அதிகாரத்தை நினைவுபடுத்துகிறார். கிறிஸ்துவின் அதிகாரமே இறுதியானது என்று வாழ கொலோசெய விசுவாசிகளை ஊக்குவிப்பதே அவரது நோக்கம். நாம் எஜமானாக அல்லது பணியாளனாக இருந்தாலும், நம் வீடுகள் அல்லது சமூகங்களில் மற்றவர்களுடன் நாம் நடப்பதில், "நீதியும் செவ்வையுமாய்" (வ.1) இருக்க நமக்கு உதவுமாறு தேவனிடம் கேட்கலாம்.

“இருக்கிறேன் என்பவர்”

தத்துவம் மற்றும் இலக்கியப் பேராசிரியரான ஜாக், புத்திசாலியும் கூட. தனது பதினைந்து வயதில் தன்னை நாத்திகராக அறிவித்தார், மேலும் இளமைப் பருவத்தில் தனது "நாத்திக நம்பிக்கையை" பிடிவாதமாக பற்றியிருந்தார். கிறிஸ்தவ நண்பர்கள் அவரிடம் விளக்க முயன்றனர். ஜாக் கூறியது போல், "அனைவரும், அனைத்தும் மறுபுறம் சேர்ந்திருந்தன" ஆனால் வேதாகமம் மற்ற இலக்கியங்கள் மற்றும் புராணங்களிலிருந்து வேறுபட்டது என்பதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. நற்செய்திகளைப் பற்றி அவர், "ஒரு கட்டுக்கதை எப்போதாவது உண்மையாகி, மனித உருவேற்பேற்றால் அது இப்படித்தான் இருக்கும்" என்றெழுதினார்.

ஒரு வேதாகம பகுதி ஜாக்கை மிகவும் பாதித்தது; யாத்திராகமம் 3. தேவன் மோசேயை எகிப்திலிருந்து இஸ்ரவேலர்களை வழிநடத்த அழைத்தார். மோசே தேவனிடம், " பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம்" (வ.11) என்றான். தேவன், "இருக்கிறவராக இருக்கிறேன்" (வ.14) என பதிலளித்தார். இந்த பத்தி, வார்த்தைகள் மற்றும் பெயர்கள் குறித்த சற்று கருகலாக இருப்பினும் ஆதியிலிருந்திருக்கும் தேவனின் நித்திய பிரசன்னத்தை பிரதிபலிக்கிறது. சுவாரஸ்யமாக, "ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்" (யோவான் 8:58) என்று இயேசு சொன்னபோது அதையே எதிரொலித்தார்.

சி.எஸ். லூயிஸ் என்று பிரபலமாக அழைக்கப்படும் ஜாக், இந்தப் பத்தியால் ஆழமாக தொடப்பட்டார். ஒரே மெய்யான தேவன் சொல்ல வேண்டியது இதுதான்; அவர் "இருக்கிறவர்" என்று மட்டுமே. வாழ்க்கையை மாற்றும் ஒரு தருணத்தில், லூயிஸ் "தன்னை விட்டுக்கொடுத்து, தேவனே கடவுள் என்று ஒப்புக்கொண்டார்." லூயிஸ் இயேசுவை ஏற்றுக்கொள்ளும் பயணத்தின் தொடக்கமாக இது இருந்தது.

ஒருவேளை நாம் லூயிஸ் போல் நம்ப இயலாமல் போராடலாம் அல்லது ஒரு மந்தமான நம்பிக்கையுடன் இருக்கலாம். தேவன் உண்மையிலேயே நம் வாழ்வில் "இருக்கிறவரா?" என்று நம்மை நாமே ஆராயலாம்.

இராஜ்ய சிந்தை நிறைந்த தலைமைத்துவம்

ஒருவருக்காக ஒருவர் ஜெபித்து, அவரவரின் புத்தகங்களைப் பற்றி பரப்புவதற்கு உதவிய கிறிஸ்தவ குழந்தைகள் புத்தக ஆசிரியர்களின் குழுவில் நான் சேர்ந்தபோது, ​​சிலர் "போட்டியாளர்களுடன் பணியாற்றும் இவர்கள் முட்டாள்கள்" என்றார்கள். ஆனால் எங்கள் குழு இராஜ்ஜிய எண்ணம் கொண்ட தலைமைத்துவத்திற்கும் சமூகத்தை மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது, போட்டிக்கு அல்ல. நாங்கள் ஒரே குறிக்கோளைப் பகிர்ந்துகொண்டோம்; நற்செய்தியைப் பரப்புவது. நாங்கள் ஒரே ராஜாவாகிய இயேசுவைச் சேவித்தோம். ஒன்றாக, கிறிஸ்துவுக்கான சாட்சியுடன் அதிகமான மக்களைச் சென்றடைகிறோம்.

தலைமைத்துவ அனுபவமுள்ள எழுபது மூப்பர்களை தேர்ந்தெடுக்கும்படி தேவன் மோசேயிடம் கேட்டபோது, "நீ ஒருவன் மாத்திரம் ஜனங்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடேகூட அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன்மேல் இருக்கிற ஆவியை அவர்கள்மேலும் வைப்பேன்" (எண்ணாகமம் 11:17) என்றார். பின்னர், யோசுவா இரண்டு மூப்பர்கள் தீர்க்கதரிசனம் சொல்வதைக் கண்டு, மோசேயிடம் அவர்களை நிறுத்தச் சொன்னார். மோசே அதற்கு, "நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே" என்றான் (வ. 29).

போட்டி அல்லது ஒப்பீடுகளில் நாம் கவனம் செலுத்தும் எந்த நேரத்திலும் அது மற்றவர்களுடன் வேலை செய்வதிலிருந்து நம்மைத் தடுக்கிறது, பரிசுத்த ஆவியானவர் அந்தச் சோதனையைத் தவிர்க்க நமக்கு பெலன் அளிக்க முடியும். நம்மில் இராஜ்ய எண்ணம் கொண்ட தலைமைத்துவத்தை வளர்க்கும்படி நாம் தேவனிடம் கேட்கும்போது, ​​அவர் உலகம் முழுவதும் நற்செய்தியைப் பரப்புகிறார், மேலும் நாம் சேர்ந்து அவருக்குச் சேவை செய்யும்போது நம் சுமைகளையும் குறைக்க முடியும்.