எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

லிண்டா வாஷிங்டன்கட்டுரைகள்

புத்தியுள்ள கட்டுநர்

வேளிநாட்டவரான ட்ரூத் என்று அழைக்கப்படுகிற “இசபெல்லா பாம்ஃப்ரீ” என்ற பெண், 1797இல் நியூயார்க்கில் அடிமையாய் பிறந்தவள். அவளுடைய எல்லா குழந்தைகளும் அடிமைகளாகவே விற்கப்பட்டாலும்; 1826இல் அவளும் அவளுடைய மகளும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு தங்களை பணம்கொடுத்து விடுவித்த அந்த குடும்பத்துடனே தங்கிக்கொண்டனர். தன்னுடைய குடும்பத்தை சிதறடித்த இந்த அநீதியான அடிமைத்தன வாழ்க்கையோடு பழக விரும்பாமல், தன்னுடைய இளைய மகன் பீட்டரை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்க சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டாள் - அந்த நாட்களில் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க பெண்ணுக்கு இது ஒரு அற்புதமான சாதனையாகும். தேவனுடைய துணையில்லாமல் தன் பிள்ளைகளை வளர்க்கமுடியாது என்று நம்பி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு தேவனுடைய சத்தியத்தில் தன் வாழ்க்கைக்கு அஸ்திபாரம்போட்டதற்கு அடையாளமாய் தன் பெயரை sojourner truth (வெளிநாட்டு சத்தியம்) என்று மாற்றிக்கொண்டாள். நீதிமொழிகள் 14ன் ஆசிரியரான சாலமோன் ராஜா, “புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்” (வச. 1) என்று கூறுகிறார். அதற்கு மாறாக, “புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.” தேவனுடைய ஞானத்தைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்த வீடுகட்டுகிற உருவகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. புத்தியோடு கட்டுவது எப்படி? மற்றவர்களை கட்டியெழுப்புகிற வார்த்தைகளை பேசுவதின் மூலமாக (எபே. 4:29; 1 தெச. 5:11) அதைச் செய்யமுடியும். தன் வீட்டை இடித்துப்போடுவது எப்படி? நீதிமொழிகள் 14 அதற்கும் பதிலளிக்கிறது. “மூடன் வாயிலே அவன் அகந்தைக்கேற்ற மிலாறுண்டு” (வச. 3).

கடிமான தருணத்தில் தேவனிடத்தில் அடைக்கலம் புகுந்த இந்த “இசபெல்லாவிற்கு” என்ற பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட தேவ ஞானத்திற்காய் நன்றி. உங்களுடைய பிள்ளைகளை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும் தேவை உங்களுக்கு இல்லாமலிருக்கலாம். ஆனால் அந்த பெண் தன் வீட்டைக் கட்டியதுபோல், “தேவ ஞானம்” என்னும் அஸ்திபாரத்தின் மீது நம் வீட்டை கட்டவேண்டியது அவசியம். 

பெலவீனரை விடுவி

சுவிட்சர்லாந்தில் விடுமுறையை கழிப்பதையா? அல்லது ப்ராக்  நகரில் ஆபத்தில் இருக்கும் குழந்தைகளை மீட்டுக் கொள்வதையா? எதை நீ தேர்ந்தெடுப்பாய்? நிக்கோலாஸ் வின்டன் என்ற சாதாரண மனிதன், இரண்டாவதை தெரிந்து கொண்டார். 1938 ஆம் ஆண்டு, செக்கோஸ்லோவேகியாவுக்கும், ஜெர்மனிக்கும் இடையே யுத்தம் ஆரம்பிப்பதைப் போல இருந்த போது, ப்ராக்கிலுள்ள அகதிகள் முகாமை நிக்கோலாஸ் பார்வையிட்ட போது, அநேக யூதக்      குழந்தைகள் பரிதாபமான நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதைக் கவனித்தார். அவர்களுக்கு கட்டாயமாக உதவும்படி, ஒரு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டியதின் அவசியத்தை உணர்ந்தார்.  இரண்டாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு முன்பு, அங்குள்ள நூற்றுக்கணக்கான குழந்தைகளை, ப்ராக்கிலிருந்து பாதுகாப்பாக பிரிட்டன் தேசத்திற்கு கடத்தி, பிரிட்டனைச் சேர்ந்த குடும்பங்களால் பாதுகாக்கப் பட, தேவையான பணத்தைச் சேகரித்தார்.

அவருடைய செயல் சங்கீதம் 82 க்கு எடுத்துக் காட்டாக       அமைந்தது. “ஏழைக்கும், திக்கற்ற பிள்ளைக்கும்  நியாயம் செய்து” விடுவி (வ.3) என்கின்றார். இந்த சங்கீதத்தை எழுதிய ஆசாப், தன்னுடைய ஜனங்களைத் தேவையிலிருப்போரின் நலனுக்காக எழும்பும் படி தூண்டுகின்றார். “பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்” (வ.4) என்கின்றார். நிக்கோலாஸ் ஓய்வுயின்றி உழைத்து அந்த    குழந்தைகளை மீட்டது போல, சங்கீதக்காரனும் தங்களின் நியாயத்துக்காக பேசமுடியாத ஏழைகளுக்கும், விதவைகளுக்கும் நீதியையும் பாதுகாப்பையும் தரும்படி அவர்கள் சார்பாக பேசும்படி கூறுகின்றார்.

தற்காலத்தில் எவ்விடமும் யுத்தத்தினாலும், புயலினாலும், மற்ற கஷ்டங்களினாலும் தேவையில் இருக்கும் மக்களைப் பார்க்கின்றோம். நம்மால் அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாவிட்டாலும் நாம் ஜெபத்தில் அவர்களை நினைப்போம், இந்த சூழ் நிலையில், இருப்பவர்களுக்கு நாம் எந்த விதத்தில் உதவலாம் என்பதை தேவன் நம் வாழ்வில் காட்டுவார்.

நெருப்பில் புடமிடப்படல்

24 காரட் தங்கம் என்பது, ஒரு சில மாசுக்களைக் கொண்ட, 100%  சுத்தமான தங்கமாகும். ஆனால், இத்தகைய சுத்தத்தை அடைவது மிகக் கடினம். சாதாரணமாக, சுத்திகரிப்பாளர்கள் இரண்டு சுத்திகரிப்பு முறைகளைக் கையாளுகின்றனர். இவற்றுள், மில்லர் முறை, விரைவாகவும், குறைந்த செலவிலும் செய்யக் கூடியது. ஆனால், இதன் விளைவாகக் கிடைக்கக் கூடிய தங்கம் 99.95% தான் சுத்தமாக இருக்கும். வோல்ஹில் முறையில் சுத்திகரிப்பதற்கு அதிக நேரம் எடுக்கும், அதிக செலவாகும். ஆனால் இதில் கிடைக்கும் தங்கம் 99.99% சுத்தமானது.

வேதாகமம் எழுதப் பட்ட காலத்தில், தங்கத்தைச் சுத்திகரிக்க, நெருப்பை பயன் படுத்தினர். நெருப்பு, மாசுக்களை உருகிய தங்கத்தின் மேற்பரப்பிற்குக் கொண்டு வந்து விடும், அதனை எளிதில் நீக்கி விடலாம். ஆசியா மைனரிலுள்ள (வடக்கு துருக்கி) இயேசுவின் விசுவாசிகளுக்கு அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதிய முதல் கடிதத்தில், அக்கினியால் பொன் சுத்திகரிக்கப் படுவதுபோல,  விசுவாசியின் வாழ்வில், சோதனைகள் செயல்படும் என்று ஒப்பிடுகின்றார். அந்நாட்களில் அநேக கிறிஸ்தவர்கள், அவர்களின் விசுவாசத்தின் நிமித்தம், ரோமானியர்களால் துன்புறுத்தப்பட்டனர். பேதுரு அதனை நேரில் பார்த்தவர். துன்பங்கள் வழியாக “உண்மையான விசுவாசம்” வெளிப்படுத்தப்படும் என்று பேதுரு  விளக்குகின்றார் (1 பேதுரு 1:7).

ஒரு வேளை நீயும் சுத்திகரிக்கப் படும் நெருப்பில் இருப்பதைப் போன்று உணரலாம்.  புடமிடும் நெருப்பின் உஷ்ணமாகிய பின்னடைவு, வியாதி அல்லது மற்ற சவால்களை உணரலாம். நாம் இந்த வேதனையின் மத்தியில் தேவனை நோக்கி, இந்த சுத்திகரிப்பு முறையை சீக்கிரம் முடித்துவிடுமாறு கெஞ்சலாம். ஆனால், வாழ்வு வேதனைப் படுத்தினாலும், நமக்கு எது சிறந்தது என்பதை தேவன் அறிவார். இரட்சகரோடு தொடர்பில் இரு, அவர் தரும் ஆறுதலையும் சமாதானத்தையும் பெற்றுக்கொள்.

ஒரு ராஜரீக பங்கு

ராஜ பரம்பரையில் முடிசூட்டப்படுவதற்கு தயாராக இருக்கும் ஒருவரைக் குறித்து பொதுமக்கள் அதிகமாக அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்பர். மற்றவர்களை மறந்துவிடுவர். பிரிட்டன் அரச குடும்பத்தின் வரிசையில், கிட்டத்தட்ட அறுபது பேர் அரியணையில் ஏறினர். அவர்களில் ஒருவரான ஃப்ரெட்ரிக் வின்சர், அந்த வரிசையில் நாற்பத்தொன்பதாவது இடத்தில் வந்தார். அவர் தன்னைப் பொது மக்களின் பார்வைக்கு காண்பிப்பதை தவிர்த்து, தன்னுடைய வாழ்க்கை முறையை முழுமையாகத் தொடர்ந்தார், அவர் பொருளாதார நிபுணராகப் பணிபுரிந்தார். “பணிபுரியும் ராஜபரம்பரையினராக” அவரை- அரச பரம்பரையிலுள்ள முக்கியமான நபரான அவருக்கு, அக்குடும்பத்தில் அங்கம் வகிப்பதற்கான சம்பளத்தை வழங்கவில்லை.

தாவீதின் மகனான நாத்தான் (2 சாமு.5:14) அரச குடும்பத்தைச்    சேர்ந்தவன், ஆயினும் மக்களின் பார்வைக்கு வெளியே இருந்தான். அவனைக் குறித்து சிறிதளவே கூறப்பட்டள்ளது. ஆனால், மத்தேயு சுவிசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில், தாவீதின் மகனான சாலமோன் (யோசேப்பின் வம்சத்தில், மத்.1:6) குறிப்பிடப்பட்டுள்ளார். லூக்காவில் குறிப்பிடப்பட்டுள்ள வம்ச வரலாறு மரியாளின் வம்சத்தைக் குறிக்கின்றது, அதில் நாத்தானின் பெயர் வருகின்றது (லூக். 3:31). நாத்தான் அரச செங்கோலைப் பிடிக்கவில்லையெனினும், நிலையான தேவனுடைய இராஜியத்தில் ஒரு பங்கினைப் பெறுகின்றான்.

 கிறிஸ்துவின் விசுவாசிகளாகிய நாமும் ராஜரீகத்தைப் பெறுகின்றோம். அப்போஸ்தலனாகிய யோவான், “தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்” (யோவா.1:12) என எழுதுகின்றார். நாம் அனைவராலும் கவனிக்கப் படுகின்றவர்களாக இல்லையெனினும், நாம் தேவனுடைய பிள்ளைகள்! நாம் தேவனை பிரதிபலிக்கின்றவர்களாக இவ்வுலகில் வாழும்படி தேவன் நம்மை வைத்துள்ளார். ஒரு நாள் நாம் அவரோடு கூட அரசாளுவோம் (2 தீமோ.2:11-13). நாத்தானைப் போன்று நாமும் உலகை ஆளும் கிரீடத்தை பெறாமலிருக்கலாம், ஆனால் நாம் தேவனுடைய ராஜியத்தில் அவரோடு கூட ஆளுகை செய்யும் பங்கினைப் பெறுவோம்.

துக்கம் தலைகீழாக மாறியது

ஓர் ஆங்கில திரைப் படம், ஓநாய்களின் உணர்வுகளையும், செயல் பாடுகளையும் குறித்து காட்டுகின்றது. அவை மகிழ்ச்சியாக இருக்கும் போது தங்களின் வாலை ஆட்டும், முரட்டுத் தனமாக விளையாடும். ஆனால் அதன் கூட்டத்தில் ஓர் ஓநாய் மரித்தால் அவை தங்கள் வாலைத் தொங்கவிட்டுக் கொண்டு, கவலை தோய் ந்த குரலில் ஊளையிடும்.

துக்கம் என்பது ஒரு வலிமையான உணர்வு. அதை நம்முடைய உறவினரின் மரணத்தின் போதோ அல்லது நம்பிக்கையை இழந்த வேளைகளிலோ நாம் அனைவருமே அநுபவித்திருப்போம். மகதலேனா மரியாள் இதை அநுபவித்தாள். அவள் கிறிஸ்துவின் ஆதரவாளர்களின் கூட்டத்தில் இருந்தாள், அவள் இயேசுவோடும், அவருடைய சீஷர்களோடும் பிரயாணம் பண்ணினாள் (லூக்.8:1-3). ஆனால் அவருடைய கொடிய சிலுவை மரணம், அவர்களை இயேசுவிடமிருந்து பிரித்து விட்டது. இப்பொழுது மரியாள் இயேசுவிற்கு கடைசியாகச் செய்யக் கூடியது, அவருடைய உடலுக்கு சுகந்தவர்க்கங்கள் பூசுவது ஒன்றுதான், ஆனால் ஓய்வு நாள் குறுக்கிட்டது, வாரத்தின் முதல் நாளில் சுகந்த வர்க்கங்களோடு கல்லறையினிடத்தில் வந்த மரியாள், உயிரற்ற, நொறுக்கப் பட்ட உடலைப் பார்ப்பதற்குப் பதிலாக, உயிருள்ள இரட்சகரைப் பார்த்தாள் என்பது எப்படியிருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்! அவள் தனக்கு முன்பாக நின்ற மனிதனை முதலில் அடையாளம் கண்டு கொள்ள முடிய வில்லை, ஆனால் அவர் அவளுடைய பெயரைச் சொல்லி அழைத்த போது, அவர் இயேசு என்று அறிந்துகொண்டாள். அந்த நிமிடமே அவளுடைய துக்கம் சந்தோஷமாக மாறியது. இப்பொழுது மரியாள் பகிர்ந்துகொள்ளும்படி மகிழ்ச்சியான செய்தியை வைத்திருக்கின்றாள், “நான் கர்த்தரைக் கண்டேன்!” (யோவா. 20:18) என்பதே அச்செய்தி.

இருள் சூழ்ந்த இவ்வுலகினுள் இயேசு விடுதலையையும், வாழ்வையும் கொண்டு வந்தார், அவர் எதற்காக இவ்வுலகிற்கு வந்தாரோ, அதை உயிர்த்தெழுந்ததன் மூலம் நிறைவேற்றினார், இந்த உண்மை கொண்டாடத் தகுந்தது. மரியாளைப் போன்று, நாமும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடுவோம், அவர் உயிரோடிருக்கிறார் என்ற நற்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வோம்! அல்லேலூயா!

விரக்தியின் காட்சி

சமீப காலத்தில் ஒரு புகைப்படக்காரர், இருதயத்தை பிழியச்செய்யும் ஒரு படத்தை எடுத்தார், அந்தப் படத்தில் ஒரு விவசாயி, மனமுடைந்தவராய் தன்னுடைய வறண்டு, வெடித்துக் காணப்படும் வயலில் தனிமையில் உட்கார்ந்திருக்கின்றார். இந்தப் புகைப் படம், அநேகப் பத்திரிகைகளின் முகப்புப் படமாக வெளி வந்தது. வறட்சியினால், பயிர்கள் காய்ந்து போன நிலையில், விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் அவல நிலையைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ளும்படி இப்படம் வெளியிடப்பட்டது.

விரக்தியின் மற்றொரு காட்சியை, புலம்பலின் புத்தகம் நமக்குக் காட்டுகின்றது. எருசலேம் நகரம் அழிக்கப்பட்ட போது, யூதாவின் நிலையை நமக்குக் காட்டுகின்றது. நேபுகாத்நேச்சாரின் படைகள் இந்தப் பட்டணத்தை அழிப்பதற்கு முன்பு, முற்றிக்கை போட்டிருந்ததால், மக்கள் பட்டினியால் அவதியுற்றனர் (2 இரா. 24:10-11). பல ஆண்டுகளாக இந்த மக்கள் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்ததே இந்த உபத்திரவத்திற்கெல்லாம் காரணம். புலம்பல் புத்தகத்தை எழுதியவர், தன்னுடைய ஜனங்களுக்காக தேவனை நோக்கிக் கதறுகின்றார் (புல. 2:11-12).

சங்கீதம் 107ஐ எழுதியவரும் இஸ்ரவேலரின் சரித்திரத்தில் வந்த ஒரு நம்பிக்கையற்ற நேரத்தைப் பற்றி குறிப்பிடுகின்றார் (இஸ்ரவேலர் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த போது, (வச. 4-5), கடினமான வேளைகளில் ஏறெடுக்கப்படும் ஒரு செயலுக்கு நேராக அவர்களின் கவனம் திருப்பப் படுகின்றது. அவர்கள் “தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்” (வச. 6), என்ன ஆச்சரியமான பதில், தேவன் “அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்”.

நம்பிக்கையிழந்த நிலையா? அமைதியாக இராதே. தேவனை நோக்கிக் கதறு, தேவன் கேட்கின்றார், உனக்கு நம்பிக்கையைத் தரும்படி அவர் காத்திருக்கின்றார். அவர் நம்முடைய கடின சூழலை விட்டு நம்மை ஒவ்வொரு முறையும் விடுவியாமல் போனாலும், அவருடைய பிரசன்னம் எப்பொழுதும் நம்மோடிருக்கும்.

நிலைத்திருக்கும் விசுவாசம்

எர்னஸ்ட் ஷக்கில்டன் (1874-1922), 1914 ஆம் ஆண்டு, அண்டார்டிக்கா சமுத்திரத்தைக் கடக்கும் முயற்சியில், ஒரு குழுவினரை வழிநடத்தினார். இதற்காக ஆயத்தப்படுத்தின கப்பலுக்கு “எண்டியுரன்ஸ்” (சகிப்புத் தன்மையுடையது) என்று பெயரிட்டார். அந்தக் கப்பல், வெட்டெல் கடலில், கடுமையான பனியில் அகப்பட்டுக் கொண்டது. அவர்கள் தப்பிப் பிழைப்பதற்கு அதிக சகிப்புத்தன்மையோடு ஓட வேண்டியதாயிற்று. அவர்கள் உலகத்தோடு தொடர்பு கொள்ள எந்த வகையிலும் முடியாத நிலையில், ஷக்கில்டனும் அவருடைய குழுவினரும், உயிர் காக்கும் படகுகள் உதவியால் அருகிலுள்ள யானைத் தீவின் கரையை அடைந்தனர். அக்குழுவின் அநேகர் அத்தீவிலேயே தங்கிவிட, ஷக்கில்டனும் மேலும் ஐந்து பேரும், இரண்டு வாரங்கள் நடந்து, 800 மைல்களைக் கடந்து, தெற்கு ஜியார்ஜியாவை அடைந்தனர். அங்கு வந்த பின், தங்கள் குழுவிலுள்ள மற்றவர்களுக்கு உதவியைப் பெற்றளித்தனர். தோல்வியடைந்த அவர்களின் பிரயாணம், வெற்றியாக முடிந்து, சரித்திரத்தில் இடம் பிடித்தது. ஷக்கில்டன் குழுவினர் அனைவரும் தப்பிப் பிழைத்ததால், அவர்களின் தைரியத்தையும், சகிப்புத்தன்மையையும் நன்றியோடு நினைப்போம்.

அப்போஸ்தலனாகிய பவுல், சகித்தலை நன்கு அறிவார். இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்திற்காக, ஒரு விசாரணைக்கு ரோமாபுரிக்குச் சென்ற போது, அவர் சென்ற கப்பல் கொடிய புயலில் சிக்கிக் கொண்டது. தேவதூதன் மூலம் அந்தக் கப்பல் மூழ்கிப் போகும் என்பதை பவுல் அறிந்து கொண்டான். பவுல் அக்கப்பலில் பிரயாணம் செய்த அனைவரையும் ஊக்கப்படுத்தி, கரையை அடையச் செய்தார். அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வர் என்ற வாக்கிற்காக தேவனுக்கு நன்றி செலுத்தினார். அவர்களின் கப்பல் மட்டும் சேதமானது (அப். 27:23-24).

பேரழிவுகளை நாம் சந்திக்கும் போது, தேவனாகிய கர்த்தர் அனைத்தையும் உடனே சரியாக்கி விட வேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் தேவன் நம்பிக்கையைக் கொடுத்து, நாம் சகித்து வளரும்படி செய்கிறார். பவுல் ரோமாபுரியாருக்கு எழுதும் போது, “உபத்திரவம் பொறுமையை………உண்டாக்குகிறது” (ரோம. 5:3) என்கிறார். எனவே, கடினமான நேரங்களில் தேவன் மீது நம்பிக்கையாயிருந்து, ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவோம்.

வெண்பனியின் அற்புதம்

பதினேழாம் நூற்றாண்டில் சர். ஐசக் நியூட்டன் ஒரு முக்கோணப்பட்டகத்தை பயன் படுத்தி, வெள்ளை ஒளியில் அடங்கியுள்ள வெவ்வேறு வண்ணங்களைப் பார்க்கும்படி உதவினார். வெள்ளை ஒளி ஒரு பொருளின் வழியாகச் செல்லும் போது, அப்பொருள் ஒரு குறிப்பிட்ட வண்ணத்தில் காட்சியளிக்கிறது என்பதையும் கண்டுபிடித்தார். ஒரு சிறிய பனிக்கட்டி, பார்ப்பதற்கு ஒளி புகக் கூடியதாக இருக்கிறது. ஆனால் அந்த பனிக்கட்டி அநேக சிறிய படிகங்களால் இணக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. அவையனைத்து படிகங்கள் வழியாக வெள்ளை ஒளி செல்லும் போது பனிக்கட்டி வெண்மையாகவே தெரிகிறது.

வேதாகமம் மற்றொரு நிறமுடைய ஒன்றினைக் குறிப்பிடுகிறது. அது பாவம். யூதா ஜனங்களின் பாவங்களைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக தேவன் வெளிப்படுத்துகின்றார். “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும்,”  “இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும்,” என்று குறிப்பிடுகிறார். தேவன் அவற்றை “உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்” என்கின்றார் (ஏசா.1:18) அது எப்படியாகும்? யூதா ஜனங்கள் தங்களுடைய பாவங்களை விட்டு மனம் திரும்பி, தேவனுடைய மன்னிப்பைத் தேட வேண்டும்.                                                           தேவனுடைய மன்னிப்பைப் பெற ஒரு நிரந்தர வழியை ஏற்படுத்திக்கொடுத்த இயேசுவே உமக்கு நன்றி. இயேசு கிறிஸ்து “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்” என்றார் (யோவா. 8:12). நாம் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டால், தேவன் நம் பாவங்களை மன்னிக்கிறார். சிலுவையில் கிறிஸ்து நிறைவேற்றின தியாகத்தின் ஒளி நமக்குள்ளாக ஊடுருவிச் செல்கின்றது. அந்த ஒளியில் தேவன் நம்மைக் காண்கின்றார், இயேசுவைப் போல குற்றமற்றவராக நம்மையும் காண்கின்றார்.

நாம் செய்த தவறுகளின் குற்ற உணர்வினாலும், அவமானத்தாலும் நாம் உழல அவசியமில்லை, மாறாக தேவன் அருளும் மன்னிப்பைப் பற்றிக் கொள்வோம், அது நம்மை  “உறைந்த மழையைப் போல வெண்மையாக்கும்.”

பெலவீனரைப் பெலப்படுத்தல்

1967 ல், அமெரிக்க பாடகரான, டோட்டி ராம்போ எழுதிய “அவர், நான் செய்யும்  தவறுகளையெல்லாம் தாண்டி, என்னுடைய தேவைகளைப் பார்க்கிறார்” (He Looked Beyond My Fault and Saw My Need) என்ற பாடலை நான் சிறுவனாக இருந்த போது கேட்டிருக்கின்றேன். ஆனால், அப்பொழுது, நான் அந்தப் பாடலின் ஆழ்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை. பின்னர் தான் உண்மையைத் தெரிந்து கொண்டேன். டோட்டியின் சகோதரன் எடி, அநேகத் தவறுகளைச் செய்தபடியால், தன்னை யாரும் நேசிக்க மாட்டார்கள் என அவன் கருதினான், ஆனால் தேவனுடைய நிபந்தனையற்ற அன்பு அவனுக்குண்டு. தேவன் அவனுடைய பெலவீனங்களை அறிவார், ஆனாலும் அவனை நேசிக்கிறார் என்பதை டோட்டி, இப்பாடலின் மூலம், அவனிடம் உறுதியாகக் கூறினாள். 

இஸ்ரவேலரும், யூதா ஜனங்களும் பெலவீனத்தை உணர்ந்த அநேக நேரங்களில் தேவனுடைய நிபந்தனையற்ற அன்பு அவர்களுக்குக் காட்டப்பட்டதைக் காண்கின்றோம். தேவன், ஏசாயா போன்ற தீர்க்கதரிசிகளை, நிலையற்ற அந்த ஜனங்களிடம் அனுப்பி, செய்திகளைக் கொடுக்கின்றார். ஏசாயா 35 ல், தீர்க்கதரிசி, தேவன் அவர்களை மீட்டுக்கொள்வார் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறார். அவர்கள் நம்பிக்கையைத் தழுவிக்கொள்ளும் பொழுது, உற்சாகத்தைப் பெற்றுக்கொள்வார்கள் என்கின்றார். “தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்” (வ.3) என்கின்றார். உற்சாகத்தைப் பெற்றுக்கொண்ட தேவனுடைய ஜனங்கள், மற்றவர்களையும் திடப்படுத்தும்படி அழைக்கின்றார், இதைத் தான் ஏசாயா, வசனம் 4 ல், ”மனம் பதறுகிறவர்களைப் பார்த்து, நீங்கள் பயப்படாதிருங்கள்; திடன் கொள்ளுங்கள்” என்று தைரியப்படுத்துங்கள்” என்று கூறுகிறார்.

நீயும் பெலவீனமாக இருக்கிறாயா? உன்னுடைய பரலோகத்தந்தையிடம் பேசு. அவர் பெலவீனரைத் தமது வேத வார்த்தையாலும், தமது வல்லமையுள்ள பிரசன்னத்தாலும் பெலப்படுத்துகின்றார். அப்படியானால் நீயும் மற்றவர்களை உற்சாகப்படுத்த முடியும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவின் தன்மையை பிரதிபலித்தல்

மேஜையில் இரண்டு முகங்கள் தனித்து நின்றன. ஒன்று கசப்பான கோபத்தால் சுருங்கி, மற்றொன்று உணர்ச்சி வலியில் முறுக்கி இருந்தது. பழைய நண்பர்களின் சந்திப்பு இப்போது கோபத்தின் கூச்சலானது, ஒருத்தி தன் நம்பிக்கைகளுக்காக மற்றொருத்தியைத் திட்டினாள். முதல் பெண் உணவகத்தை விட்டு வெளியேறும் வரை தகராறு தொடர்ந்தது, இது மற்றவளை அவமானத்தால் நிலைகுலைத்தது.

கருத்து வேறுபாட்டைச் சகித்துக்கொள்ள முடியாத காலத்தில் நாம் உண்மையில் வாழ்கிறோமா? இரண்டு பேர் ஒத்துப்போக முடியாது என்பதால் ஏதோவொன்று தீயது என்று அர்த்தம் இல்லை. கடுமையான அல்லது அடிபணியாத பேச்சு ஒருபோதும் ஏற்புடையதல்ல, மேலும் வலுவான நம்பிக்கைகள் கண்ணியத்தையும் இரக்கத்தையும் மிஞ்சக்கூடாது.

ரோமர்12, “ஒருவரையொருவர் கனம்பண்ணுகிறது” மற்றும் பிறருடன் “ஏகசிந்தையுள்ள வர்களாயிருப்பது” (வ.10, 16) எப்படி என்பதற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக உள்ளது. தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கான அடையாளமான பண்பு, நாம் ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள அன்பே என்று இயேசு சுட்டிக்காட்டினார் (யோவான் 13:35). பெருமையும் கோபமும் நம்மை எளிதில் தடம் புரளச் செய்யும் அதே வேளையில், நாம் பிறரிடம் காட்ட வேண்டும் என்று தேவன் விரும்பும் அன்பிற்கு நேர் மாறாகவும் இருக்கிறது.

நம் உணர்ச்சிகள் மீதான கட்டுப்பாட்டை இழக்கையில், பிறரைக் குறை கூறாமல் இருப்பது ஒரு சவால்தான், ஆனால் “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” (ரோமர் 12:18) என்ற வார்த்தைகள் கிறிஸ்துவின் தன்மையைப் பிரதிபலிக்கும் ஒரு வாழ்க்கையை வாழ வேண்டிய பொறுப்பை வேறு யார் மீதும் சுமத்த முடியாது என்பதைக் காட்டுகிறது. அது அவருடைய நாமம் தரிக்கப்பட்ட நம் ஒவ்வொருவர் மீதும் உள்ளது. 

 

நான் ஓட்டுநர் மட்டுமே

“அப்பா, நான் என் தோழியுடன் இரவு தங்கலாமா?” பயிற்சி முடிந்து காரில் ஏறிக் கொண்டே என் மகள் கேட்டாள். “கண்ணே, உனக்கே பதில் தெரியும். நான் ஓட்டுநர் மட்டும்தான். முடிவை நான் அறியேன், அம்மாவிடம் கேட்கலாம்” என்றேன்.

“நான் ஓட்டுநர் மட்டுமே” என்றது எங்கள் வீட்டில் நகைச்சுவையாகிவிட்டது. தினமும், நான் எங்கே இருக்க வேண்டும்? எப்போது, யாரை எங்கு அழைத்துச் செல்லவேண்டும்? என்று ஒழுங்கமைக்கும் எனது மனைவியிடம் கேட்கிறேன். மூன்று யுவதிகளுடன், ஒரு “வாகன ஓட்டுநராக” இரவில் வாகனம் ஓடுவதை இரண்டாவது வேலையாகவே உணர்கிறேன். பெரும்பாலும், நான் அறியாதவை எனக்குத் தெரியாமலேயே இருக்கும். எனவே, எல்லாவற்றையும் தீர்மானிக்கும் எசமானியுடன் நான் சரிபார்க்க வேண்டும்.

மத்தேயு 8 இல், இயேசு ஒருவரைச் சந்தித்தார், அவர் கட்டளைகளைப் பின்பற்றுதல் மற்றும் அளித்தல் குறித்து அறிந்திருந்தார். ஒரு ரோமானிய நூற்றுக்கு அதிபதியாக, அவனுக்கு கீழ்ப்பட்டவர்களுக்குக் கட்டளையிட அதிகாரம் இருப்பதைப் போலவே, இயேசுவுக்குக் குணமாக்கும் அதிகாரம் உண்டு என்பதை அவன் புரிந்துகொண்டான். “ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தும், எனக்குக் கீழ்ப்படிகிற சேவகருமுண்டு;” (வ. 8-9). கிறிஸ்து அவனுடைய விசுவாசத்தைப் பாராட்டினார் (வவ. 10,13), அவருடைய அதிகாரம் எவ்வாறு செயல்பாட்டில் இருக்கிறது என்பதை அவன் புரிந்துகொண்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

அப்படியானால் நாம் எப்படி இருக்கிறோம்? இயேசுவிடமிருந்து நமது அன்றாடப் பணிகளைப் பெற்று, அவர்மீதே நம்பிக்கை கொள்வது எவ்வாறு இருக்கும்? ஏனென்றால், நாம் “வெறும் ஓட்டுநர்” என்று நினைத்தாலும், ஒவ்வொரு பணிக்கும் ராஜ்ய அர்த்தமும் நோக்கமும் உள்ளது. 

 

கிறிஸ்துவில் முடிப்பவர்களாக இருத்தல்

கலாவதி தனது கொள்ளுப்பேரனான ராஜேஷுக்காக பின்னிக்கொண்டிருந்த கம்பளிச்சட்டையை முடிப்பதற்குள் இறந்துவிட்டார். அதை நிறைவுசெய்ய மற்றொரு ஆர்வமுள்ள பின்னல்காரரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. “நிறைவு செய்பவர்கள்” எனப்பட்ட தன்னார்வ கைவினைஞர்களையும், தங்கள் பணிகளை முடிப்பதற்கு முன்னரே இந்த வாழ்க்கையை விட்டு வெளியேறினவர்களின் அன்புக்குரியவர்களையும் இணைக்கும் ஒரு நிறுவனத்திற்கு நன்றி. “நிறைவு செய்பவர்கள்” துக்கப்படுபவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் ஒரு பணியை முடிக்க தங்கள் நேரத்தையும் திறமையையும் அன்புடன் செலவிடுகின்றனர்.

தேவன் எலியாவின் பணிக்காகவும்கூட ஒரு “நிறைவு செய்பவரை” நியமித்தார். இஸ்ரவேலர்கள் தேவனின் உடன்படிக்கையை நிராகரித்து தீர்க்கதரிசிகளைக் கொல்வதைக் கண்டு அந்தத் தீர்க்கதரிசி தனிமையாகவும் மனச்சோர்வுடனும் இருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, தேவன் எலியாவிடம் “எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு” (1 இராஜாக்கள் 19:16) என அறிவுறுத்தினார். தேவனுடைய சத்தியத்தைப் பிரகடனப்படுத்துவதற்கான பணியானது எலியாவின் மரணத்திற்குப் பின்னரும் தொடரும் என்பதை இது உறுதி செய்தது.

எலியாவுக்குப் பின் தேவனின் தீர்க்கதரிசியாகத் தொடரும்படி தேவன் அவரை அழைத்தார் என்று எலிசாவுக்கு காண்பிக்க, எலியா “அவன்மேல் தன் சால்வையைப் போட்டான்” (வ. 19). தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வமான தேவசெய்தியை அறிவிப்பவா் ஒருவரின் அதிகாரத்தைக் குறிக்க ஒரு தீர்க்கதரிசியின் சால்வை பயன்படுத்தப்பட்டதால் (பார்க்க 2 இராஜாக்கள் 2:8), இந்த செயல் எலிசாவின் தீர்க்கதரிசிக்கான அழைப்பைத் தெளிவாக்கியது. இயேசுவை விசுவாசிக்கிறவர்களாக, தேவனின் அன்பைப் பிறருடன் பகிரவும், “[அவருடைய] புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு” (1 பேதுரு 2:9) அழைக்கப்பட்டிருக்கிறோம். இப்பணியானது நம் ஆயுளை விட அதிகமாக இருப்பினும், அவர் இப்பணியை ஆதரிப்பார் என்றும், அவரை அறிவிக்கும் உன்னதமான வேலைக்கு பிற “நிறைவு செய்பவர்களை” தொடர்ந்து அழைப்பார் என்றும் நாம் நிச்சயம் நம்பலாம்.