அன்பான எச்சரிப்பு
2010 ஆம் ஆண்டு, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவை சுனாமி தாக்கி நானூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை அமைப்பு சரியாக செயல்பட்டிருந்தால் உயிரிழப்புகளைத் தடுத்திருக்கலாம் அல்லது வெகுவாக குறைத்திருக்கலாம். சுனாமியை முன்கூட்டியே அறிவிக்கும் கருவிகள் துண்டிக்கப்பட்டு செல்பாட்டில் இல்லாமல் இருந்தன.
இயேசு, தம்முடைய சீஷர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை பாதிக்கும் மனந்திரும்பாத பாவங்களைக் குறித்து எச்சரிப்பு விடுக்கும்படிக்கு அவர்களுக்கு வலியுறுத்தினார். ஒருவருக்கு விரோதமாய் பாவம் செய்த விசுவாசிக்கு, அவருடைய பாவத்தை தாழ்மையுடனும் தனிப்பட்ட விதத்தில் ஜெபத்தோடும் சுட்டிக்காட்டவேண்டும் என்று இயேசு குறிப்பிடுகிறார் (மத்தேயு 18:15). அவர் மனந்திரும்பினால், அவருடனான பிரச்சனை நீங்கி, உறவு புதுப்பிக்கப்படும் (வச. 16). பாவம் செய்த அந்த நபர் மனந்திரும்பாவிடில், அந்த பிரச்சனையை சபையின் முன்னிலையில் கொண்டுவரவேண்டும் (வச. 17). தவறிழைத்தவர் தன் தவறைக் குறித்து மனம்வருந்தாத பட்சத்தில், அவர்களை சபையை விட்டு வெளியேற்ற வேண்டும். ஆனாலும் தொடர்ந்து அவர்களுக்காக ஜெபித்து கிறிஸ்துவின் அன்பை பிரதிபலிக்கத் தவறக்கூடாது.
கிறிஸ்துவின் பிரதிநிதிகளாய் நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களின் மனந்திரும்பாத பாவங்களை மென்மையாகவும் நேர்மையாகவும் அன்புடனும் எச்சரித்து, பரலோக தேவனிடத்திலும் மற்ற சக விசுவாசிகளிடத்திலுமான அவர்களின் உறவைப் புதுப்பிக்க பிரயாசப்படுவோம். இயேசு “அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன” என்று வாக்களித்திருக்கிறார் (வச. 20).
அன்பினிமித்தம்
மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்பது என்பது உங்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பலப்படுத்துகிறது. ஆனால் உயர்நிலை பள்ளியில் படிக்கும் ஒரு வீராங்கனைக்கு ஓட்டப்பந்தயம் என்றால் தள்ளிக்கொண்டுபோவது என்று விளங்கியிருக்கிறது. ஒவ்வொரு பயிற்சியின்போதும், பதினான்கு வயது நிரம்பிய சூசன் பெர்க்மான் தன்னுடைய மூத்த சகோதரன் ஜெஃப்ரியை அவனுடைய சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டே ஓடுவாள். ஜெஃப்ரி பிறந்து இருபத்தி இரண்டு மாதத்தில் அவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அதின் விளைவாய் கடுமையான மூளை பாதிப்பு மற்றும் பெருமூளை வாதம் ஏற்பட்டது. இன்று சூசன் தன்னுடைய சகோதரனுக்காக அவளுடைய தனிப்பட்ட ஓட்டப்பந்தய இலக்குகளை தியாகம் செய்துவிட்டாள். ஆகையினால் ஜெஃப்ரியும் ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொள்ளமுடிகிறது. இந்த தியாகமான அன்பு ஆச்சரியப்படவைக்கிறது.
பவுல் அப்போஸ்தலர் “ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்” என்று எழுதும்போது இந்த அன்பையும் தியாகத்தையும் சிந்தையில் வைத்தே எழுதியிருக்கிறார் (ரோமர் 12:10). ரோமத் திருச்சபையில் இருக்கும் விசுவாசிகள் பொறாமை, கோபம் மற்றும் ஆழமான கருத்து வேறுபாடுகளுடன் போராடுகிறார்கள் என்பதை பவுல் அறிந்திருந்தார் (வச. 18). எனவே, தெய்வீக அன்பு அவர்களின் இதயங்களை ஆள அனுமதிக்கும்படி அவர் அவர்களை ஊக்குவித்தார். கிறிஸ்துவின் அன்பில் வேரூன்றிய இந்த வகையான அன்பு, மற்றவர்களுக்கு மேன்மையான நன்மையை கொடுக்க பிரயாசப்படும். அது நேர்மையானதாகவும், தயாள குணம் படைத்ததாகவும் வெளிப்படும் (வச. 13). இந்த வழியில் அன்பு செலுத்துகிறவர்கள் தங்களைக் காட்டிலும் மற்றவர்களை கனம் பெற்றவர்களாய் கருதுவார்கள் (வச. 16).
கிறிஸ்தவர்களாகிய நாம், மற்றவர்களுக்கு துணைபுரிந்து ஓட்டத்தை நேர்த்தியாய் ஓடச்செய்து இலக்கை அடையச்செய்யும் அன்பின் ஓட்டத்தை ஓடிக்கொண்டிருக்கிறோம். அது கடினமானதாய் தெரிந்தாலும் அது இயேசுவுக்கு கனத்தைக் கொண்டுவருகிறது. அன்பினிமித்தம் நாம் அவரை சார்ந்துகொண்டு, மற்றவர்களை நேசிக்கவும் அவர்களுக்கு சேவை செய்யவும் பிரயாசப்படுவோம்.
சிறு துண்டைக் காட்டிலும் அதிகமானது
நாமெல்லாரும் ஒரு புதிய இடத்திற்கு போகும்போது, பழைய இடத்தின் ஞாபகங்களில் நம்மில் ஒரு பகுதியை விட்டுச் செல்வது இயல்பு. ஆனால் அதற்கு நேர்மாறாக, அண்டார்டிகாவில் உள்ள வில்லாஸ் லாஸ் எஸ்ட்ரெல்லாஸ் என்ற குளிர் வெறிச்சோடிய இடத்தில் நீண்டகாலமாக வசிப்பவராக மாற, உங்களிடமிருந்து ஒரு பகுதியை விட்டுச் செல்வது மிகவும் அவசியம். அருகில் உள்ள மருத்துவமனை 625 மைல்கள் தொலைவில் இருப்பதால், ஒரு நபர் தனது அப்பென்டிக்ஸ் குடல் வெடித்தால் அதிகமான பாதிப்பிற்குள்ளாகவேண்டியிருக்கும். எனவே ஒவ்வொரு குடிமகனும் அங்கு செல்வதற்கு முன் முதலில் குடல் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
ஆச்சரியமாயிருக்கிறதல்லவா? ஆனால் தேவனுடைய இராஜ்யத்தின் குடிமக்களாய் மாறுவதற்கு இது பெரிய ஆச்சரியமல்ல. ஏனென்றால், ஜனங்கள் தங்கள் சொந்த வழியில் தேவனை பின்பற்ற முயற்சிப்பதால் தேவனுடைய சீஷராவது என்றால் என்ன என்பதை இயேசு விவரிக்கிறார் (மத்தேயு 16:25-27). அவர் சொல்லும்போது, “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்” (வச. 24) என்று சொல்லுகிறார். இது தேவனுடைய இராஜ்யத்திற்கு தடையாயிருக்கும் அனைத்தையும் விட்டுவிடுவதைக் குறிக்கிறது. மேலும் நாம் சிலுவை சுமக்க தயாராகும்போது, சமுதாய மற்றும் அரசியல் பாதிப்புகளை மரணபரியந்தம் சகிப்பதற்கு நாம் ஆயத்தமாயுள்ளோம் என்பதை அறிக்கையிடுகிறோம். விட்டுவிடுவது, மற்றும் எடுத்துச் செல்வதோடு தேவனை பின்பற்றும் விருப்பத்தையும் தேர்ந்தெடுக்கவேண்டும். அவருடைய ஊழியத்தையும் தியாகத்தையும் பிரகடனப்படுத்துவதற்கு இது தேவனுடைய படிப்படியான உருவாக்கும் திட்டமாகும்.
இயேசுவைப் பின்பற்றுவது என்பது நம்முடைய வாழ்க்கையில் ஒரு சிறு பகுதியை விட்டுச் செல்வதைக் காட்டிலும் அதிகமானது. அவரைப் பின்பற்றுவது என்பது, அவருடைய உதவியோடு, அவருக்கு ஒப்புக்கொடுத்து நம்முடைய சரீரத்தையும் அவருக்கும் முற்றிலும் கீழ்ப்படுத்துவதாகும்.
சொல்லும் அறை
ஒற்றுமை மற்றும் நட்பை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான வழியை வடக்கு ஸ்பெயின் உருவாக்கியது. கையால் செய்யப்பட்ட குகைகள் நிறைந்த கிராமப்புறங்களில், ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் சில விவசாயிகள் ஒரு குகைக்கு மேலே கட்டப்பட்ட ஒரு அறையில் அமர்ந்து, உணவுகளையும் இருப்பு வைப்பார்கள். காலப்போக்கில், அந்த அறை "சொல்லும் அறை" என்றானது. நண்பர்களும் குடும்பத்தினரும் தங்கள் கதைகள், ரகசியங்கள் மற்றும் கனவுகளைப் பகிர்ந்து கொள்ள ஒன்றுகூடும் இடமானது. நம்பிக்கையான நண்பர்களின் நெருக்கமான உறவாடுதல் உங்களுக்குத் தேவைப்பட்டால், நீங்கள் “சொல்லும் அறை”க்குச் செல்வீர்கள்.
அவர்கள் வடக்கு ஸ்பெயினில் வாழ்ந்திருந்தால், யோனத்தானும் தாவீதும் பகிர்ந்து கொண்ட ஆழமான நட்பு அவர்களை ஒரு சொல்லும் அறையை உருவாக்க வழிவகுத்திருக்கலாம். தாவீதைக் கொல்ல வேண்டும் என்று சவுல் ராஜா மிகவும் பொறாமைப்பட்டபோது, சவுலின் மூத்த மகனான யோனத்தான் அவரைப் பாதுகாத்து நண்பனானார். இருவரின் ஆத்துமாக்களும் "ஒன்றாய் இசைந்திருந்தது" (1 சாமுவேல் 18:1). மேலும் யோனத்தான் "ஆத்துமாவைப் போலச்" சிநேகித்தான் (வவ. 1, 3). மேலும், தானே அரியணைக்கு வாரிசாக இருந்தபோதிலும், ராஜாவாக தாவீதின் தெய்வீகத் தேர்ந்தெடுப்பையும் அங்கீகரித்தார். அவன் தாவீதுக்கு அவனுடைய மேலங்கி, வாள், வில், கச்சை ஆகியவற்றைக் கொடுத்தான் (வச. 4). பின்னர், தாவீது யோனத்தானின் நண்பராக அவர் மீது கொண்டிருந்த ஆழ்ந்த அன்பு ஆச்சரியமாயிருந்தது என்று அறிவித்தார் (2 சாமுவேல் 1:26).
இயேசுவின் விசுவாசிகளாக, கிறிஸ்துவைப் போன்ற அன்பையும் அக்கறையையும் பிரதிபலிக்கும் நட்பைக் கட்டியெழுப்ப அவர் நமக்கு உதவட்டும். நண்பர்களுடன் நேரம் ஒதுக்கவும், நம் இதயங்களைத் திறக்கவும், அவரில் ஒருவருக்கொருவர் உண்மையான ஒற்றுமையுடன் வாழவும் செய்வோமாக..
இயேசுவில் இளைப்பாறுதலை கண்டறிதல்
அமைதியற்ற ஆத்துமாவிற்குத் திருப்தி தருவது செல்வாக்கும் வெற்றியும் அல்ல. இந்த உண்மைக்கு, மரித்துப்போன அந்த புகழ்பெற்ற இசைக் கலைஞர் சாட்சி. அமெரிக்க இசை மற்றும் பொழுதுபோக்கிற்கான பிரபல பத்திரிக்கையின் தரவரிசையில், இவரது இசை தொகுப்புகள் நாற்பது முறைக்கும் மேல் முதலிடம் பிடித்ததுமில்லாமல், இவரது தனிப் பாடல்கள் பலமுறை முதலிடம் பிடித்தது. ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்தும், சிறையிலும் சில நாட்கள் கழித்த இவர் தன் சாதனைகளின் மத்தியிலும் ஒரு நாள் இவ்வாறாக புலம்பினார்: "நான் சாதனை செய்திருந்தாலும், திருமண வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும், என் மனதில் என்னால் மேற்கொள்ள முடியாத ஒரு அமைதியின்மை நிலவுகிறது, நான் மரிக்கும் வரைக்கும் அது தொடரும்" என்றார். துரதிருஷ்டவசமாக இறப்பதற்கு முன் கூட, அந்த அமைதியை அவர் கண்டறியவில்லை.
இந்த இசை கலைஞனைப் போலப் பாவத்தினாலும், அதின் பாதிப்புகளாலும் வருத்தப்பட்டுச் சோர்ந்துபோன அனைவரையும் தன்னிடம் தனிப்பட்ட முறையில் வரும்படி இயேசு அழைக்கிறார். "என்னிடத்தில் வாருங்கள்" என்கிறார். நாம் இயேசுவில் உள்ள மீட்பை பெறுகையில், அவர் நமது பாரங்கள் அனைத்தையும் நீக்கி நமக்கு இளைப்பாறுதல் அளிக்கிறார் (மத்தேயு 11: 28). நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவரை விசுவாசிப்பதும், அவர் அளிக்கும் பரிபூரண வாழ்வை எவ்வாறு வாழ்வதென்று அவரிடம் கற்றுக்கொள்வதுமே (யோவான் 10:10). இயேசுவின் சீஷத்துவம் எனும் நுகத்தை நாம் ஏற்றுக்கொண்டால் அதின் முடிவு நமது ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் (மத்தேயு 11:29).
நாம் இயேசுவிடம் வருவதென்பது, நம் விருப்பத்தின்படி வாழும் சுதந்திரம் அல்ல. அமைதியற்ற நமது ஆத்துமாக்களுக்குச் சமாதானத்தை அருளி, நம்முடைய பாரங்களைக் குறைத்து, அவரில் வாழும் வழிக்குள்ளாய் நம்மை நடத்துகிறார். அவர் நமக்கு உண்மையான சமாதானத்தை தருகிறார்.
நமது குருவைப் போல
ஒரு வைரல் வீடியோவில், மூன்று வயது வெள்ளை பட்டை கராத்தே மாணவி தனது பயிற்சியாளரை தத்ரூபமாகப் பிரதிபலித்தாள். ஆர்வத்துடனும் உறுதியுடனும் அந்தச் சிறுமி தன் ஆசானோடு மாணவர்க்கான உறுதிமொழியைக் கூறினாள். பின்னர், நிதானத்துடனும் கவனத்துடனும், அழகான மற்றும் ஆற்றலின் சிறிய பிம்பமாகிய அவள், தன் ஆசிரியர் சொன்ன மற்றும் செய்த அனைத்தையும் பின்பற்றினாள். அவள் மிக அற்புதமாக அதைச் செய்தாள்!
இயேசு ஒருமுறை கூறினார், "சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்." (லூக்கா 6:40). உதாரத்துவம், அன்பு மற்றும் குற்றப்படுத்தாமை போன்றவற்றில் தம்மை பிரதிபலிக்குமாறு தம் சீடர்களுக்கு வலியுறுத்தினார் (வ. 37-38) மற்றும் அவர்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள் என்பதைப் பகுத்தறிந்துகொள்வது அவசியமென்றும் அவர் தம் சீடர்களிடம் கூறினார்: “ குருடனுக்குக் குருடன் வழிகாட்டக்கூடுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா” (வ. 39). குருட்டு வழிகாட்டிகளாக மக்களைப் பேரழிவிற்கு இட்டுச் செல்லும் பரிசேயர்களை இந்த தரநிலை தகுதியற்றதாக்கியது என்பதை அவருடைய சீடர்கள் பகுத்தறிய வேண்டியிருந்தது (மத்தேயு 15:14). மேலும் அவர்கள் தங்கள் குருவைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, கிறிஸ்துவின் சீடர்களின் நோக்கம் இயேசுவைப் போல் ஆக வேண்டும் என்பதுதான். ஆகவே, தாராள மனப்பான்மை மற்றும் அன்பைப் பற்றிய கிறிஸ்துவின் போதனைகளைக் கவனமாகக் கவனித்து, அதைப் பின்பற்றுவது அவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது.
இன்று இயேசுவைப் பின்பற்ற முயலும் விசுவாசிகளாகிய நாம் அறிவிலும், ஞானத்திலும், நடத்தையிலும் அவரைப் போல் ஆக, நம் வாழ்வை நம் மாபெரும் குருவிடம் ஒப்படைப்போம். உதாரத்துவமான, அன்பான வழிகளைப் பிரதிபலிக்க அவர் மட்டுமே நமக்கு உதவ முடியும்.
நம் அனைத்து காரியங்களிலும்
1954 இல், மார்ட்டின் லூத்தர் "வியாபாரிகளுக்கிடையே பொதுவான ஒரு விதிமுறை உண்டு, 'மற்றவர்களைக் குறித்து எனக்கு எந்த கரிசனையும் கிடையாது. எனது லாபமும் எனது பேராசையும் நிறைவேறினபின்புதான் மற்ற எல்லாமே'. இது அவர்களுடைய பிரதானமான சட்டமாயுள்ளது" என்றார். இதற்கு இருநூறாண்டுகள் கழிந்து, நியூ ஜெர்சி மாகாணத்தின் மவுண்ட் ஹாலி பகுதியைச் சேர்ந்த ஜான் வுல்மேன் என்பவர் இயேசுவின் மீதிருந்த பற்றுதலை தனது தையற்கடை தொழிலில் வெளிக்காட்டினார். அடிமைகளின் விடுதலைக்கு ஆதரவளிக்கும் விதத்தில், கட்டாய வேலைவாங்குதலில் ஈடுபட்ட நிறுவனங்களின் பஞ்சு மற்றும் சாயப் பொருட்களை வாங்க மறுத்துவிட்டார். சுத்த மனசாட்சியோடு அவர் தனக்கடுத்தவரையும் நேசித்து, தனது காரியங்களில் உத்தமத்தையும் உண்மையையும் காத்து வாழ்ந்தார்.
அப்போஸ்தலன் பவுலும், "கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே" (2 கொரிந்தியர் 1:12) வாழ பிரயாசப்பட்டார். கொரிந்து பட்டணத்தில் ஒருவன், இயேசுவின் அப்போஸ்தலன் என்கிற தன்னுடைய அதிகாரத்தைக் குறைத்து மதிப்பிட்டபோது, அவர்கள் மத்தியில் தான் நடந்துகொண்ட விதத்தைத் தற்காத்தார். தன்னுடைய வார்த்தைகளும் எழுத்துக்களும், நுட்பமான பரிசோதனையைக்கூட எதிர்கொள்ளக்கூடியவை என்றெழுதினார் (வ.13). தன்னையல்ல, தன்னுடைய செயல்திறனுக்குத் தேவனின் கிருபையையும் வல்லமையையும் தான் சார்ந்துகொண்டிருப்பதை வெளிக்காட்டினார் (வ.12). சுருங்கச் சொன்னால், கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசமே பவுலின் அனைத்து காரியங்களிலும் பரவியிருந்தது.
கிறிஸ்துவின் தூதுவர்களான நாமும் தொழில், குடும்பம் என்று நமது அனைத்து காரியங்களிலும் நற்செய்தியை ஒலிக்கச்செய்வதில் கவனமாயிருப்போம். தேவனின் கிருபையாலும் வல்லமையாலும் அவருடைய அன்பைப் பிறருக்கு நாம் வெளிக்காட்டுகையில், நாம் தேவனைக் கனப்படுத்துகிறோம்; பிறரையும் நேசிக்கிறோம்.
இது போதும்
ஒரு திரைப்படத்தில், ஏழை விவசாயி ஒருவர் தன்னுடைய மூன்று மகள்களுக்குத் திருமணம் முடிக்கச் சிரமப்படுகிறார். தேவனிடம், தனது பொருளாதாரத்தைக் குறித்து இப்படிச் சொல்கிறார்: "தேவனே நீர் அநேக ஏழைகளைப் படைத்துள்ளீர். ஏழையாய் இருப்பது அவமானமல்ல என்று புரிகிறது, ஆனால் அதில் பெருமையும் இல்லையே. எனவே எனக்குச் சிறிது ஆஸ்தி இருப்பதில் தவறென்ன, நான் ஐசுவரியவானாய் இருந்தால் உமது பிரம்மாண்டமான நித்திய திட்டம் நிறைவேறாதோ?"
ஷோலேம் அலெய்க்கேம் என்ற இத்திரைப்பட வசனகர்த்தா இந்த விவசாயி மூலம் இவ்வார்த்தைகளைப் பேசுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, ஆகூர் இதேபோல யதார்த்தமான ,சற்று வித்தியாசமான ஜெபத்தைத் தேவனிடம் ஏறெடுப்பதை நீதிமொழிகள் புஸ்தகத்தில் பார்க்கலாம். ஆகூர் தேவனிடம் தனக்குச் செல்வத்தையும் வறுமையையும் தரவேண்டாமென்றும், மாறாகத் தனது படியை அளந்து போஷிக்குமாறும் கேட்கிறார் (நீதிமொழிகள் 30:8-9). அதிகமாக இருந்தால் பெருமையடைந்து தேவனை மறுதலிப்பவனாக மாறிவிடக்கூடும், தரித்திரனாக விட்டால் தான் பிறரிடம் திருடி தேவனின் நாமத்திற்கு அவமரியாதை உண்டாக்கக்கூடும் என்றும் அறிந்திருந்தார் (வ.9). தன்னை போஷிப்பவர் தேவனே என்பதை ஆகூர் புரிந்துகொண்டார். எனவே, தனது அனுதின தேவைகளுக்கு "படியை அளந்து" போடுமாறு கேட்கிறார். தேவனைப் பின்தொடர்வதையும், அவரால் மட்டுமே உண்டாகும் நிறைவையும் ஆகூரின் ஜெபம் வெளிக்காட்டுகிறது.
ஆகூரின் இந்த மனநிலை நமக்கும் இருப்பதாக, தேவன் ஒருவரே நம்மை போஷிக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்வோமாக. அவருடைய நாமம் மகிமைப்படும் விதத்தில் பொருளாதார உயர்வுகளை நாடுகிற நாம், அவருக்குமுன் மனநிறைவோடு வாழவும் பழகலாம். ஏனெனில் அவர் "அளந்து போடுகிறவர்" மட்டுமல்ல, அதற்கும் மேலாகவே அளிப்பவர்.
ஜாக்கிரதையாய் இருங்கள்
ஒருவன் தன் சிநேகிதர்களுடன் பனிச்சரிவு எச்சரிக்கை பலகைகள் பதிக்கப்பட்டிருந்த பனிச்சறுக்கு விடுதியின் வாயில் வழியாகச் சென்று பனிச்சறுக்கு விளையாட்டை ஆரம்பித்தார். கீழிறங்கும் இரண்டாவது பயணத்தில், யாரோ ஒருவர், “பனிச்சரிவு!” என்று சப்தமிட, ஆனால் அந்த மனிதன் தப்பிக்க முடியாமல் பனியில் இறந்து போனான். சிலர் அவரை கத்துக்குட்டி என்று விமர்சித்தனர். ஆனால் அவர் கத்துக்குட்டியில்லை. அவர் ஒரு “சான்றளிக்கப்பட்ட பனிச்சரிவு பயிற்சியாளர்.” “அவர் பாதுகாப்பாய் பயணிக்காததினால் தான் மரித்துவிட்டார்" என்று விபத்தில் மரித்தவர்களைக் குறுpத்து பனிச்சறுக்கு வீரர்களும், பனிச்சரிவு பயிற்சியாளர்களும் தவறான காரணங்களைக் கொடுக்க அதிக வாய்ப்புள்ளது என்று ஒரு ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.
இஸ்ரவேலர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குச் செல்லத் தயாரானபோது, தம்முடைய ஜனங்கள் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் காத்துக்கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்பினார். எனவே, அவருடைய அனைத்து “கட்டளைகளையும் நியாயங்களையும்” (உபாகமம் 4:1-2) கைக்கொள்ளும்படிக்கும், அதைக் கைக்கொள்ளாதவர்கள் மீது தேவன் அனுமதித்த நியாயத்தீர்ப்பையும் நினைவுகூரும்படிக்கு அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் தங்களைத் தாங்களே பரிசோதிக்கவும், தங்கள் உள்ளான வாழ்க்கையைக் கண்காணிக்கவும் “சாக்கிரதையாய்" இருக்கவேண்டும் (வச. 10). இது வெளியேயிருந்து வரும் ஆவிக்குரிய ஆபத்துகளிலிருந்தும் உள்ளான பொறுப்பற்ற தன்மையிலிருந்தும் அவர்களை காப்பாற்ற அவர்களுக்கு உதவியாயிருக்கும்.
நம்முடைய பாதுகாப்பைத் தகர்த்து, அக்கறையின்மை மற்றும் சுய வஞ்சனைக்கு ஆளாவது இயல்பு. நாம் வாழ்க்கையில் தோற்காமல் இருக்கும்பொருட்டும், அவருடைய கிருபையினிமித்தம் பாவமன்னிப்பையும் நமக்கு அருளுவாராக. அவருடைய ஆலோசனைகளுக்கு செவிகொடுப்பதினிமித்தமும், நம்முடைய பாதுகாப்பைப் பலப்படுத்தி, நல்ல தீர்மானங்களை எடுப்போம்.