சொல்லும் அறை
ஒற்றுமை மற்றும் நட்பை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான வழியை வடக்கு ஸ்பெயின் உருவாக்கியது. கையால் செய்யப்பட்ட குகைகள் நிறைந்த கிராமப்புறங்களில், ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும் சில விவசாயிகள் ஒரு குகைக்கு மேலே கட்டப்பட்ட ஒரு அறையில் அமர்ந்து, உணவுகளையும் இருப்பு வைப்பார்கள். காலப்போக்கில், அந்த அறை "சொல்லும் அறை" என்றானது. நண்பர்களும் குடும்பத்தினரும் தங்கள் கதைகள், ரகசியங்கள் மற்றும் கனவுகளைப் பகிர்ந்து கொள்ள ஒன்றுகூடும் இடமானது. நம்பிக்கையான நண்பர்களின் நெருக்கமான உறவாடுதல் உங்களுக்குத் தேவைப்பட்டால், நீங்கள் “சொல்லும் அறை”க்குச் செல்வீர்கள்.
அவர்கள் வடக்கு ஸ்பெயினில் வாழ்ந்திருந்தால், யோனத்தானும் தாவீதும் பகிர்ந்து கொண்ட ஆழமான நட்பு அவர்களை ஒரு சொல்லும் அறையை உருவாக்க வழிவகுத்திருக்கலாம். தாவீதைக் கொல்ல வேண்டும் என்று சவுல் ராஜா மிகவும் பொறாமைப்பட்டபோது, சவுலின் மூத்த மகனான யோனத்தான் அவரைப் பாதுகாத்து நண்பனானார். இருவரின் ஆத்துமாக்களும் "ஒன்றாய் இசைந்திருந்தது" (1 சாமுவேல் 18:1). மேலும் யோனத்தான் "ஆத்துமாவைப் போலச்" சிநேகித்தான் (வவ. 1, 3). மேலும், தானே அரியணைக்கு வாரிசாக இருந்தபோதிலும், ராஜாவாக தாவீதின் தெய்வீகத் தேர்ந்தெடுப்பையும் அங்கீகரித்தார். அவன் தாவீதுக்கு அவனுடைய மேலங்கி, வாள், வில், கச்சை ஆகியவற்றைக் கொடுத்தான் (வச. 4). பின்னர், தாவீது யோனத்தானின் நண்பராக அவர் மீது கொண்டிருந்த ஆழ்ந்த அன்பு ஆச்சரியமாயிருந்தது என்று அறிவித்தார் (2 சாமுவேல் 1:26).
இயேசுவின் விசுவாசிகளாக, கிறிஸ்துவைப் போன்ற அன்பையும் அக்கறையையும் பிரதிபலிக்கும் நட்பைக் கட்டியெழுப்ப அவர் நமக்கு உதவட்டும். நண்பர்களுடன் நேரம் ஒதுக்கவும், நம் இதயங்களைத் திறக்கவும், அவரில் ஒருவருக்கொருவர் உண்மையான ஒற்றுமையுடன் வாழவும் செய்வோமாக..
இயேசுவில் இளைப்பாறுதலை கண்டறிதல்
அமைதியற்ற ஆத்துமாவிற்குத் திருப்தி தருவது செல்வாக்கும் வெற்றியும் அல்ல. இந்த உண்மைக்கு, மரித்துப்போன அந்த புகழ்பெற்ற இசைக் கலைஞர் சாட்சி. அமெரிக்க இசை மற்றும் பொழுதுபோக்கிற்கான பிரபல பத்திரிக்கையின் தரவரிசையில், இவரது இசை தொகுப்புகள் நாற்பது முறைக்கும் மேல் முதலிடம் பிடித்ததுமில்லாமல், இவரது தனிப் பாடல்கள் பலமுறை முதலிடம் பிடித்தது. ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்தும், சிறையிலும் சில நாட்கள் கழித்த இவர் தன் சாதனைகளின் மத்தியிலும் ஒரு நாள் இவ்வாறாக புலம்பினார்: "நான் சாதனை செய்திருந்தாலும், திருமண வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும், என் மனதில் என்னால் மேற்கொள்ள முடியாத ஒரு அமைதியின்மை நிலவுகிறது, நான் மரிக்கும் வரைக்கும் அது தொடரும்" என்றார். துரதிருஷ்டவசமாக இறப்பதற்கு முன் கூட, அந்த அமைதியை அவர் கண்டறியவில்லை.
இந்த இசை கலைஞனைப் போலப் பாவத்தினாலும், அதின் பாதிப்புகளாலும் வருத்தப்பட்டுச் சோர்ந்துபோன அனைவரையும் தன்னிடம் தனிப்பட்ட முறையில் வரும்படி இயேசு அழைக்கிறார். "என்னிடத்தில் வாருங்கள்" என்கிறார். நாம் இயேசுவில் உள்ள மீட்பை பெறுகையில், அவர் நமது பாரங்கள் அனைத்தையும் நீக்கி நமக்கு இளைப்பாறுதல் அளிக்கிறார் (மத்தேயு 11: 28). நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவரை விசுவாசிப்பதும், அவர் அளிக்கும் பரிபூரண வாழ்வை எவ்வாறு வாழ்வதென்று அவரிடம் கற்றுக்கொள்வதுமே (யோவான் 10:10). இயேசுவின் சீஷத்துவம் எனும் நுகத்தை நாம் ஏற்றுக்கொண்டால் அதின் முடிவு நமது ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் (மத்தேயு 11:29).
நாம் இயேசுவிடம் வருவதென்பது, நம் விருப்பத்தின்படி வாழும் சுதந்திரம் அல்ல. அமைதியற்ற நமது ஆத்துமாக்களுக்குச் சமாதானத்தை அருளி, நம்முடைய பாரங்களைக் குறைத்து, அவரில் வாழும் வழிக்குள்ளாய் நம்மை நடத்துகிறார். அவர் நமக்கு உண்மையான சமாதானத்தை தருகிறார்.
போலியான மதிப்பீடுகள் அல்ல
ஒரு வாடகை பகிர்வு சவாரி வாடிக்கையாளர், ஒரு ஓட்டுநர் உலகின் மிக நாற்றமான பழத்தைச் சாப்பிடுவதையும், மற்றொரு ஓட்டுநர் காதலியுடன் சண்டையிடுவதையும், மற்றொருவர் அவரை ஒரு மோசடி திட்டத்தில் முதலீடு செய்யும்படி முயன்றதையும் சகித்துக்கொண்டதாகப் பகிர்ந்துகொண்டார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மோசமான மதிப்பீட்டிற்குப் பதிலாக, அவர் ஓட்டுநர்களுக்கு ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைக் கொடுத்தார். அவர், “அவர்கள் அனைவரும் நல்ல மனிதர்களாகத் தோன்றினர். எனது மோசமான மதிப்பீட்டின் காரணமாக அவர்கள் அந்த பயன்பாட்டுச் செயலியிலிருந்து வெளியேற்றப்படுவதை நான் விரும்பவில்லை" என்றும் விளக்கமளித்தார். அவர் போலியாக விமர்சித்திருந்தார். ஓட்டுநர்களிடம் இருந்தும், பிறரிடமிருந்தும் உண்மையை மறைத்தார்.
வெவ்வேறு காரணங்களுக்காக, நாம் பிறரிடமிருந்து உண்மையை மறைக்கலாம். ஆனால் எபேசுவின் விசுவாசிகள் கிறிஸ்துவில் புதிய சிருஷ்டிகளாக, ஒருவருக்கொருவர் உண்மையைப் பேசும்படி அப்போஸ்தலன் பவுல் ஊக்கப்படுத்தினார். இதற்கு "நீதி மற்றும் பரிசுத்தம்" (எபேசியர் 4:24) எனும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியிருந்தது அதாவது அவருக்காக பிரித்தெடுக்கப்பட்டதும் ,அவருடைய வழிகளைப் பிரதிபலிப்பதுமான ஒரு வாழ்க்கை. அவர்கள் ஒருவருக்கொருவர் உண்மையைப் பேசுவதின் மூலம் பொய்யை மாற்றியமைக்க வேண்டும். ஏனெனில் பொய்கள் பிரித்துச் சீர்குலைக்கும், உண்மையோ நம்மை விசுவாசிகளாக இணைத்திடும். அவர், "அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்" (வ.25) என்று எழுதினார்.
மற்ற விசுவாசிகளுடனான நமது ஐக்கியத்தைச் சீர்குலைக்கக்கூடிய பொய்களையும், ஒருவருக்கொருவர் "போலி மதிப்பீடுகளை" வழங்குவதையும் எதிர்த்து நிற்கும் தைரியத்தை இயேசு நமக்கு அளிக்கிறார். அவர் நம்மை வழிநடத்துவதற்கேற்ப அன்பான ஒரு வாழ்க்கை வாழ்வது, "தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து" (வ.32) உண்மையின் வெளிப்பாடுகளைப் பகிர்ந்து கொள்ள வழிவகுக்கும்.
தேவன் அனைத்தையும் அறிவார்
தேவன் மெய்யாகவே அனைத்தையும் அறிந்தவர். ஆனால் ஒரு பத்திரிகை கட்டுரையின்படி, நமது அலைபேசி தகவல்கள் மூலம் அரசாங்கம் நம்மைப் பற்றி நிறைய அறிந்திருக்கிறது. அலைபேசி வைத்திருக்கும் ஒவ்வொருவரும் "மீத்தரவை" உருவாக்குகிறார்கள், அது "மின்னணு தகவல் தடயங்களை" விட்டுச் செல்கிறது. ஒவ்வொரு தனித்தனியான தரவுகளும் முக்கியமற்றதாகத் தோன்றினாலும், அதை ஒன்றிணைத்து பகுப்பாய்வு செய்யும் போது, அது "வடிவமைக்கப்பட்டதிலேயே மிகச் சக்திவாய்ந்த புலனாய்வுக் கருவிகளில் ஒன்றாக" மாறுகிறது. நமது மீத்தரவைக் கண்டுபிடிப்பதன் மூலம், எந்த நேரத்தில் நாம் எங்கிருந்தோம் அல்லது எங்கு இருக்கிறோம் என்பதை புலனாய்வாளர்கள் கண்டுபிடிக்கலாம்.
தேசியப் பாதுகாப்பு மையத்தின் இந்த மின்னணு பகுப்பாய்வை விட உன்னதமானதாக, தேவனுடனான உறவில் நாம் எங்கு இருக்கிறோம் என்பதனை அவரறிவார் என்று தாவீது கூறினார். சங்கீதம் 139 இல், நம்முள் இருப்பவற்றை ஆராய்ந்து அறிந்திருக்கிற (வ.1) தேவனிடம் ஜெபத்தை ஏறெடுக்கிறார். சங்கீதக்காரன், "தேவனே என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்" (வ.23) என்று எழுதினார். அவர் நம்மைப் பற்றிய அனைத்தையும் அறிந்தும் (வ.2-6), எங்கும் நிறைந்தும் இருக்கிறார் (வ.7-12), மேலும் நம் “உள்ளிந்திரியங்களை” (வ.13-16) படைத்தும், அறிந்தும் உள்ளார். அவருடைய ஆலோசனைகள் நமது மனுஷீகமான புரிதலை விட உயர்ந்தவை (வ.17-18), நாம் நம் சத்துருக்களை எதிர்கொள்ளுகையிலும் அவர் நம்முடன் இருக்கிறார் (வ.19-22).
தேவனை அனைத்தையும் அறிந்தவராக, எப்போதும் இருப்பவராக, சர்வ வல்லமையுள்ளவராக இருப்பதால்; நாம் எங்கு இருந்தோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம், எதனால் உருவாக்கப்பட்டுள்ளோம் என்பதை அவர் சரியாக அறிவார். ஆனால் அவருடைய வழிகளில் நடக்க நமக்கு உதவும் ஒரு அன்பான தகப்பன் அவர். இன்று வாழ்க்கை பாதையில் அவரைப் பின்தொடர்வோம்.
இயேசு நமது மீட்பர்
ஒரு சாதாரண தொங்கு கயிா்கூர்தி பயணமாகப் பாகிஸ்தான் பள்ளத்தாக்கில் ஆரம்பித்த அந்த பயணம், பயங்கரமான சோதனையாக மாறியது. சவாரி தொடங்கிய சிறிது நேரத்திலேயே, இரண்டு துணை கயிறுகள் அறுந்து விழுந்ததில், பள்ளிக் குழந்தைகள் உட்பட எட்டு பயணிகள் நூற்றுக்கணக்கான அடிகளுக்கு மேல் அந்தரங்கத்தில் தொங்கினர். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பன்னிரண்டு மணி நேர மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். அவர்கள் ஜிப்லைன்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் பலவற்றைப் பயன்படுத்தி பயணிகளை மீட்டனர்.
நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அந்த மீட்புக் குழுவினர் பாராட்டப்பட வேண்டியவர்கள், ஆனால் பாவம் மற்றும் மரணத்திலிருந்து நம்மைக் காப்பாற்றி மீட்கும் இயேசுவின் நித்திய பணியுடன் ஒப்பிடுகையில் அவர்களின் பணி பெரிதல்ல. கிறிஸ்து பிறப்பதற்கு முன், ஒரு தூதன் மரியாளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி யோசேப்பை அறிவுறுத்தினார், ஏனெனில் அவளுடைய கரு "பரிசுத்த ஆவியினால்" (மத்தேயு 1:18, 20) அருளப்பட்டது. யோசேப்பு தன் மகனுக்கு இயேசு என்று பெயரிடவும் சொல்லப்பட்டான், ஏனெனில் அவர், "அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்" (வ.21). இருப்பினும், இந்த பெயர் முதல் நூற்றாண்டில் பொதுவானதாக இருந்தபோதிலும், இந்த குழந்தை மட்டுமே இரட்சகராக இருக்கத் தகுதி பெற்றது (லூக்கா 2:30-32). மனந்திரும்பி தம்மை நம்புகிற அனைவரின் நித்திய இரட்சிப்பையும் முத்திரையிட்டுப் பாதுகாக்கக் கிறிஸ்து சரியான நேரத்தில் வந்தார்.
நாம் அனைவரும் பாவம் மற்றும் மரணத்தின் தொங்கூர்தியில் சிக்கி, தேவனிடமிருந்து நித்திய பிரிவின் பள்ளத்தாக்கில் தொங்கிக் கொண்டிருந்தோம். ஆனால் தம்முடைய அன்பினாலும் கிருபையினாலும் இயேசு நம்மை மீட்டு, நம் பரலோகத் தகப்பனிடம் பாதுகாப்பாகக் கொண்டுவர வந்தார். அவரை துதிப்போம்!
கிறிஸ்துவில் வலுவான ஆதரவு
லண்டன் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஒரு ஓட்டப்பந்தய வீரர், பெரிய பந்தயத்தில் தனியாக ஓடக்கூடாது என்பது ஏன் இன்றியமையாதது என்பதை அனுபவித்தார். பல மாதங்கள் கடினமான ஆயத்தங்களுக்குப் பிறகு, அவர் வலுவான இடத்தில் முடிக்க விரும்பினார். ஆனால் அவர் இறுதி கோட்டை நோக்கித் தடுமாறியபோது, இருமடங்கு சோர்வுடன் சரிவின் விளிம்பில் இருப்பதை உணர்ந்தார். அவர் தரையில் விழுவதற்கு முன், இரண்டு சக வீரர்கள் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டனர்; ஒருவர் இடதுபுறமும் மற்றவர் வலதுபுறமும் நின்று, போராடும் ஓட்டப்பந்தய வீரருக்கு ஓட்டத்தை முடிக்க உதவினார்கள்.
அந்த ஓட்டப்பந்தய வீரரைப் போலவே, பிரசங்கியின் எழுத்தாளரும், பிறர் நம்முடன் வாழ்க்கைப் பந்தயத்தில் ஓடுவதால் ஏற்படும் பல முக்கியமான நன்மைகளை நமக்கு நினைவூட்டுகிறார். சாலொமோன், "ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்" (பிரசங்கி 4:9) என்ற கொள்கையை முன்வைத்தார். கூட்டு முயற்சிகள் மற்றும் பரஸ்பர உழைப்பின் நன்மைகளை அவர் முக்கியத்துவப்படுத்தினார். கூட்டாண்மையில், "அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்" (வ. 9) என்றும், கடினமான காலங்களில் "ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்" (வ.10) என்றும் அவர் எழுதினார். இருண்ட மற்றும் குளிரான இரவுகளில், நண்பர்களின் அரவணைப்பில் "சூடுண்டாகும்" (வ.11). மேலும் ஆபத்தின் போது, "ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்துநிற்கலாம்" (வ. 12). யாருடைய வாழ்க்கை ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ளதோ, அவர்களால் பெரும் வலிமையைப் பெற முடியும்.
நம்முடைய எல்லா குறைகள் மற்றும் பலவீனங்களுடன், இயேசுவை விசுவாசிக்கிற குழுவின் வலுவான ஆதரவும் பாதுகாப்பும் நமக்குத் தேவை. அவர் நம்மை வழிநடத்திச் செல்லுகையில், நாம் ஒன்றாக முன்னேறுவோமாக.
ஆவிக்குரிய மேன்மை
அமெரிக்காவைச் சேர்ந்த ஜே ஸ்பைட்ஸ், டி.என்.ஏ பரிசோதனையை மேற்கொண்டபோது, அவர் பெற்ற முடிவுகளுக்கு எதுவும் அவரை தயார்படுத்தியிருக்க முடியாது. அவற்றில் ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அவர் மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனின் தேசத்தின் இளவரசர்! விரைவில் விமானத்தில் ஏறி அந்த நாட்டுக்கு விஜயம் செய்தார். அவர் வந்ததும், அரச குடும்பத்தினர் அவரை வரவேற்று, ஒரு பண்டிகை கொண்டாட்டம், ஆடல், பாடல், பதாகைகள் மற்றும் அணிவகுப்பு ஆகியவற்றால் வரவேற்றனர்.
தேவனுடைய நற்செய்தி அறிவிப்பாக இயேசு பூமிக்கு வந்தார். அவர் தனது சொந்த மக்களாகிய இஸ்ரவேல் தேசத்திற்கு நற்செய்தியைக் கூறவும், இருளிலிருந்து வெளியேறும் வழியைக் காட்டவும் செய்தார். “மெய்யான ஒளியை” (யோவான் 1:9) நிராகரித்து, அவரை மேசியாவாக ஏற்க மறுத்து (வச. 11) பலர் செய்தியை அக்கறையின்மையுடன் பெற்றனர். ஆனால் நம்பிக்கையின்மையும் அக்கறையின்மையும் எல்லா மக்களிடையேயும் காணப்படவில்லை. சிலர் மனத்தாழ்மையுடனும் மகிழ்ச்சியுடனும் கிறிஸ்துவின் அழைப்பைப் பெற்று, பாவத்திற்காக தேவனுடைய இறுதிப் பலியாக அவரை ஏற்றுக்கொண்டனர். மேலும் அவருடைய நாமத்தின் மீது விசுவாசம் வைத்தனர். இந்த உண்மையுள்ள மீதியானவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அவர்கள் ஆவிக்குரிய மறுபிறப்படைந்து ராஜவம்ச பிள்ளைகளாய் “தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்” (வச. 12).
நாம் பாவம் மற்றும் இருளில் இருந்து திரும்பும்போது, இயேசுவை பெற்றுக்கொண்டு, அவருடைய நாமத்தில் விசுவாசம் வைக்கும்போது, நாம் தேவனுடைய பிள்ளைகள், அவருடைய ராஜ குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் என்பதைக் கண்டுபிடிப்போம். ராஜாவின் பிள்ளைகளாக இருக்கும் பொறுப்புகளை ஏற்று வாழும்போது ஆசீர்வாதங்களை அனுபவிப்போம்.
கிறிஸ்துவுக்குள் உண்மையை பேசுதல்
ஒரு நபர் தனது தனிப்பட்ட போக்குவரத்து டிக்கெட்டுகளை பொய் சொல்லி பெறுதில் வல்லவர். அவர் நீதிமன்றத்தில் பல்வேறு நீதிபதிகள் முன் ஆஜரானபோது, “நான் என் சிநேகிதியுடன் சண்டையிட்டேன், அவள் எனக்குத் தெரியாமல் என் காரை எடுத்துச் சென்றுவிட்டாள்" என்று கதை சொல்லுவார். மேலும், பணியில் இருந்தபோது தவறான நடத்தைக்காக அவர் பலமுறை கண்டிக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞர்கள் இறுதியாக அவர் மீது நான்கு பொய்ச் சாட்சியங்கள் மற்றும் ஐந்து மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இந்த மனிதருக்கு, பொய் சொல்வது வாழ்நாள் பழக்கமாகிவிட்டது.
இதற்கு நேர்மாறாக, உண்மையைச் சொல்வது கிறிஸ்தவர்களுக்கு ஒரு முக்கியமான பழக்கம் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். எபேசியர்களுக்கு அவர்கள் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு ஒப்படைப்பதன் மூலம் பழைய வாழ்க்கை முறையை விட்டுவிடுவார்கள் என்று அவர் நினைப்பூட்டினார் (எபேசியர் 2:1-5). இப்போது, அவர்கள் புதிய நபர்களைப் போல வாழ வேண்டும், அவர்களின் வாழ்க்கையில் குறிப்பிட்ட செயல்களை இணைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு நாம் “பொய்யைக் களைந்து,” “அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்” (4:25) என்று ஆலோசனைக் கொடுக்கப்படுகிறது. அது திருச்சபையின் ஒற்றுமையைப் பாதுகாக்கும், எபேசியர்கள் எப்போதும் தங்கள் வார்த்தைகள் செயல்கள் மூலம் "மற்றவர்களைக் கட்டியெழுப்புவதாக" இருக்க வேண்டும் (வச. 29).
பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவுவது போல (வச. 3-4), இயேசுவின் விசுவாசிகள் தங்கள் வார்த்தைகளிலும் செயல்களிலும் சத்தியத்திற்காக பிரயாசப்படுவோம். அப்போது திருச்சபை ஒன்றுபடும், தேவன் மகிமைப்படுத்தப்படுவார்.
மூடப்படாத பாவங்கள்
ஒரு திருடன் தொலைபேசி பழுதுபார்க்கும் கடையை உடைத்து, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியின் கண்ணாடியை உடைத்து, தொலைபேசிகள் மற்றும் பலவற்றை திருட ஆரம்பித்தான். அட்டைப் பெட்டியால் தலையை மூடிக்கொண்டு கண்காணிப்பு கேமராவில் இருந்து தனது அடையாளத்தை மறைக்க முயன்றான். ஆனால் திருட்டின் போது, பெட்டி சிறிது நேரம் சாய்ந்து, அவனது முகத்தை வெளிப்படுத்திக் காண்பித்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு, கடையின் உரிமையாளர் கொள்ளையடிக்கும் வீடியோ காட்சிகளைப் பார்த்து, காவல்துறைக்கு அழைப்பு விடுத்தார். அவர்கள் கொள்ளையனை அருகிலுள்ள இன்னொரு கடைக்கு வெளியே கைது செய்தனர். மறைந்திருக்கும் ஒவ்வொரு பாவமும் ஒரு நாள் வெளிப்படும் என்பதை இந்த சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது.
நம் பாவங்களை மறைக்க முயற்சிப்பது மனித இயல்பு. ஆனால் பிரசங்கியில், நாம் தேவனுடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வாசிக்கிறோம். ஏனென்றால் மறைவான ஒவ்வொன்றும் அவருடைய நீதியான பார்வைக்கும் நியாயமான தீர்ப்புக்கும் முன் கொண்டுவரப்படும் (12:14). பிரசங்கி, “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே” (வச. 13) என்று சொல்லுகிறார். பத்துக் கட்டளைகள் கண்டித்த மறைவான விஷயங்கள் கூட (லேவியராகமம் 4:13) அவருடைய மதிப்பீட்டிலிருந்து தப்ப முடியாது. நன்மையோ தீமையோ, ஒவ்வொரு செயலையும் அவர் நியாயத்தீர்ப்புக்குக் கொண்டு வருவார். ஆனால், அவருடைய கிருபையின் காரணமாக, இயேசுவினால் நம்முடைய பாவங்களுக்கான மன்னிப்பையும், நமக்கான அவருடைய தியாகத்தையும் நாம் காணலாம் (எபேசியர் 2:4-5).
அவருடைய கட்டளைகளை நாம் உணர்ந்து உள்வாங்கிக் கொள்ளும்போது, அது அவரைப் பற்றிய பயபக்திக்கும், பொருந்தக்கூடிய வாழ்க்கை முறைக்கும் வழிவகுக்கும். நம்முடைய பாவங்களை அவரிடம் கொண்டுபோய், அவருடைய அன்பான, மன்னிக்கும் இதயத்தை புதிதாக அனுபவிப்போம்.