எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மார்வின் வில்லியம்ஸ்கட்டுரைகள்

நம்மை நாமே காத்துக்கொள்ள முயற்சித்தல்

பல ஆண்டுகளுக்கு முன்பு, நியூயார்க் நகரம் “பாதுகாப்பாக இருங்கள், ஸ்டே புட்” என்ற விளம்பரப் பிரச்சாரம், மின்தூக்கியில் சிக்கிக்கொள்பவர்களின் அறிவூட்டலுக்காக ஏறெடுக்கப்பட்டது. அவ்வாறு சிக்கிக்கொண்ட பயணிகள் பயத்தில் மின்தூக்கியின் கதவை திறக்கமுயன்றபோதும், வேறு வழிகளில் வெளியேற முயன்றபோதும் உயிரிழக்க நேரிட்டுள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். உதவிக்கு அழைப்பதற்கும், அவசரகால பதிலளிப்பவர்கள் வரும் வரை காத்திருப்பதற்கும் அலாரம் பொத்தானைப் பயன்படுத்துவதே அத்தருணத்தில் சிறந்த செயல்திட்டமாகும்.

அப்போஸ்தலனாகிய பவுல் மிகவும் வித்தியாசமான மீட்புத் திட்டத்தை விவரித்தார். பாவத்தினால் பின்னாக இழுக்கப்படுபவர்களுக்கு உதவும் வகையில் இத்திட்டம் அமைந்தது. அவர் எபேசியர்களுக்கு “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்” (எபேசியர் 2:1) என்று அவர்களுடைய முழுமையான ஆவிக்குரிய உதவியற்ற தன்மையை பவுல் அவர்களுக்கு நினைவுபடுத்தினார். அவர்களும் பிசாசுக்கு கீழ்படிந்து அந்த வலையிலே சிக்கியிருந்தனர் (வச. 2). இதன் விளைவாக அவர்கள் தேவனுடைய கோபாக்கினைக்கு ஆளாகினர். ஆனால் அவர் அவர்களை ஆவிக்குரிய இருளில் சிக்கவைக்கவில்லை. அந்தகார இருளில் இருந்த நீங்கள் “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்” (வச. 5,8) என்று பவுல் எழுதுகிறார். தேவனுடைய மீட்பு நம்முடைய விசுவாசத்தில் பிரதிபலிக்கப்படுகிறது. விசுவாசம் என்றால் நம்மை நாமே மீட்டுக்கொள்ள முடியாது என்று தேவனிடத்தில் உதவிகோருவது என்ற அர்த்தம்.

தேவனுடைய கிருபையால், பாவத்தின் வலையில் இருந்து மீட்கப்படுவது நம்மிடம் இருந்து உருவானது அல்ல. இது இயேசுவின் மூலமாக நமக்கருளப்பட்ட “தேவனுடைய ஈவு” (வச. 8). 

விழித்திருந்து ஜெபியுங்கள்

 

ஆவிக்குரிய போராட்டங்களில் ஈடுபடும்போது, கிறிஸ்தவ விசுவாசிகள் ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதை ஞானமற்ற முறையில் செய்தால் எவ்வளவு ஆபத்தானது என்பதை புளோரிடாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கண்டுபிடித்தார். அவர் ஜெபிக்கும்போது கண்களை மூடுவது வழக்கம். அவ்வாறு ஒர்நாள் தன்னுடைய காரை ஓட்டிக்கொண்டு செல்கையில், ஜெபிக்க தன் கண்ணை மூடமுற்பட்டு, ஓர் நிறுத்தத்தில் நிற்கத்தவறி, வேறு பாதை வழியாக குறுக்கிட்டுபோய், ஓர் வீட்டு உரிமையாளரின் முற்றத்தில் தன் காரை நிறுத்தினார். அதிலிருந்து தன்னுடைய காரை பின்பாக எடுக்க முயன்று தோற்றுப்போனார். காயம் ஏற்படவில்லை என்றாலும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காகவும், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காகவும் அவருக்கு போலீஸ் அபராதம் விதித்தது. இந்த ஜெப வீராங்கனை எபேசியர் 6:18-ன் முக்கிய பகுதியை தவறவிட்டுவிட்டார்: “விழித்துக்கொண்டிருங்கள்!”

எபேசியர் 6ல் இடம்பெற்றுள்ள சர்வாயுதவர்கத்தின் பகுதிகளாக, அப்போஸ்தலர் பவுல் இரண்டு இறுதி காரியங்களை உள்ளடக்குகிறார். முதலில், நாம் ஆவிக்குரிய யுத்தங்களை ஜெபத்துடன் செய்யவேண்டும். இதன் பொருள் ஆவியில் ஜெபிப்பது—அவருடைய வல்லமையை நம்புவது. மேலும், அவருடைய வழிகாட்டுதலில் இளைப்பாறுதலடைதல், அவரது தூண்டுதல்களுக்கு பதிலளித்தல், எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லா வகையான ஜெபங்களையும் ஜெபித்தல் ஆகியவைகளும் உள்ளடங்கும் (வச. 18). இரண்டாவதாக, “விழித்துக்கொண்டிருங்கள்” என்று பவுல் நம்மை உற்சாகப்படுத்துகிறார். இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவதற்கும் (மாற்கு 13:33), சோதனையை ஜெயிப்பதற்கும் (14:38), மற்ற விசுவாசிகளுக்காகப் பரிந்துபேசுவதற்கும் ஆவிக்குரிய விழிப்புணர்வு நமக்கு உதவும் (எபேசியர் 6:18).

நாம் தினமும் ஆவிக்குரிய யுத்தங்களில் ஈடுபடும்போது, தீய சக்திகளை எதிர்த்துப் போரிட்டு, கிறிஸ்துவின் வெளிச்சத்தால் இருளை விரட்டி, விழித்திருந்து ஜெபிக்கும் அணுகுமுறையுடன் நம் வாழ்வில் ஜெயம்பெறுவோம். 

 

கசக்கும் திருடப்பட்ட இனிப்பு

ஜெர்மானிய தேசத்தில் இருபது டன்களுக்கும் அதிகமான சாக்லேட் நிரப்பப்பட்ட டிரக்கின் குளிரூட்டப்பட்ட டிரெய்லரை திருடர்கள் திருடிச் சென்றனர். திருடப்பட்ட இனிப்பின் மதிப்பிடப்பட்ட தொகை 80,000 டாலர்கள் (சுமார் 66 லட்சம்). வழக்கத்திற்கு மாறாக யாராவது அதிகப்படியான சாக்லேட்டுகளை விநியோகிப்பது தெரிந்தால், உடனடியாக அதைப் புகாரளிக்க உள்ளுர் காவல்துறையினா் கேட்டுக்கொண்டனர். பெரிய அளவிலான இனிப்புகளைத் திருடியவர்கள் பிடிபட்டு வழக்குத் தொடரப்பட்டால் அவர்கள் கசப்பான மற்றும் திருப்தியற்ற விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!

நீதிமொழிகள் இந்தக் கொள்கையை உறுதிப்படுத்துகின்றன: “வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும்; பின்போ அவனுடைய வாய் பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்” (20:17). வஞ்சகமாகவோ அல்லது தவறாகவோ நாம் பெற்றுக்கொண்ட விஷயங்கள் முதலில் தற்காலிக இன்பத்தையளிக்கும் வகையில் இனிமையாகத் தோன்றலாம். ஆனால் சுவையானது இறுதியில் மாறிவிடும். மேலும் நம்முடைய தவறான செய்கை நம்மை சிக்கலில் கொண்டுபோய் விட்டுவிடும். குற்ற உணர்வு, பயம், பாவம் ஆகியவற்றின் கசப்பான விளைவுகள், நம் வாழ்க்கையையும் நற்பெயரையும் அழித்துவிடும். “பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும்” (வச. 11). நம்முடைய வார்த்தை மற்றும் செயல்கள் நமது சுயநல ஆசைகளை வெளிப்படுத்தாமல், தூய்மையான தேவனுடையஇருதயத்தை பிரதிபலிக்கட்டும்.

நாம் சோதிக்கப்படும்போது, அவருக்கு உண்மையாய் செயல்படுவதற்கு தேவன் நம்மை பெலப்படுத்துபடிக்கு அவரிடத்தில் விண்ணப்பிக்கலாம். நம்முடைய தற்காலிக இன்பத்திற்கு நம்மை அடிபணியச் செய்யாமல், நிரந்திர மகிமைக்கு நம்மை நடத்திச்செல்லும்படிக்கு அவரிடத்தில் நாம் விண்ணப்பிக்கலாம். 

எனக்குப் பதிலாக இயேசு

இருபது வயது செல்வந்தன் ஒருவன் தன் நண்பர்களுடன் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, பாதசாரி மீது மோதியதால் அவா் மரணமடைந்தாா். அந்த இளைஞனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் ஆஜரானவர் (பின்னர் சிறைத்தண்டனை அனுபவித்தவர்) குற்றத்தைச் செய்த ஓட்டுநருக்கு மாற்றாக வந்தவர் என்று சிலர் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் சில நாடுகளில் நடக்கிறது, அங்கு மக்கள் தங்கள் குற்றங்களுக்காக தண்டனை பெறுவதை தவிர்க்க தங்களை போலவே தோற்றமளிக்கும் பிறரை வாடகைக்கு அமர்த்துகின்றனர். 

இது அவதூறும் மூர்க்கமுமான செயலாக இருக்கலாம், ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு நமது சார்பில் மாற்றாக ஆனார், மேலும் " அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்" (1 பேதுரு 3:18). தேவனின் பாவமற்ற பலியாக, அவரை விசுவாசிப்பவர்களின் பொருட்டு கிறிஸ்து துன்பப்பட்டு ஒரேதரம் மரித்தார் (எபிரெயர் 10:10). நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் அவர் சிலுவையில் தம்முடைய சரீரத்திலே தண்டனையை ஏற்றுக்கொண்டார். இன்று ஒரு குற்றவாளிக்கு மாற்றாக சில பணத்தைப் பெற ஒப்புக்கொள்ளும் ஒரு நபரைப் போலல்லாமல், கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்கு "நம்பிக்கையை" அளித்தது, அவர் தாமாகவே, விருப்பத்துடன் நமக்காகத் தம் ஜீவனை கொடுத்தார் (1 பேதுரு 3:15, 18; யோவான் 10:15). நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் அகற்ற அவர் அவ்வாறு செய்தார். 

இயேசு நமக்கு பதிலாக மரித்ததின் மூலம் மட்டுமே, தேவையிலுள்ள பாவிகளாகிய நாம் அன்பான தேவனுடன் ஒரு உறவைப் பெற முடியும் மற்றும் முழுமையாக அவருடன் ஆவிக்குரிய உறவை பெற முடியும் என்ற இந்த ஆழமான சத்தியத்தில் நாம் மகிழ்ச்சியடைவோம், ஆறுதலையும் நம்பிக்கையையும் பெறுவோம். 

தேவன் மட்டுமே திருப்தியாக்குவார்

பெரிய இறால், ஷவர்மா, சாலடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல உணவு வகைகள் அந்த வீட்டு உரிமையாளரிடம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் விருந்து வைக்கவில்லை. உண்மையில், அவர் அந்த வகையறாவான உணவை வாங்கவுமில்லை; அவரது ஆறு வயது மகன் செய்தான். இது எப்படி நடந்தது? தந்தை தூங்குவதற்கு முன் தனது மகனை தனது அலைபேசியில் விளையாட அனுமதித்தார், அவனோ பல உணவகங்களில் இருந்து விலையுயர்ந்த உணவுகளை தாராளமாக வாங்க அதைப் பயன்படுத்தினான். “ஏன் இப்படி செய்தாய்?” என தந்தை, போா்வைக்குப் பின் மறைந்திருந்த மகனிடம் கேட்டார். ஆறு வயது சிறுவன், “எனக்கு பசித்தது” என்றான். சிறுவனின் பசியும், முதிர்ச்சியின்மையும் அதிக விலைக்கிரயம் செலுத்த வழிவகுத்தது.

ஏசாவின் பசியும் அவருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை விட அதிக நஷ்டத்தை அளித்தது. ஆதியாகமம் 25ல் உள்ள கதை, அவர் சோர்வடைந்து உணவுக்காக ஏங்குவதை காட்டுகிறது. அவர் தன் சகோதரனிடம், “அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன்” (வ.30) என்றான். அதற்கு யாக்கோபு ஏசாவின் சேஷ்ட புத்திரபாகத்தை கேட்டார் (வ.31). அந்த பிறப்புரிமையில், முதற்பேறான ஏசாவின் அதிகாரம், தேவனின் வாக்குதத்தங்களின் ஆசீர்வாதம், சொத்தில் இருமடங்கு பங்கு மற்றும் குடும்பத்தின் ஆவிக்குரிய தலைவராக இருக்கும் பாக்கியம் ஆகியவை அடங்கும். தன் பசிக்கு தானே பலியான ஏசா, “புசித்துக் குடித்து” மற்றும் “தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்” (வ. 34).

நாம் சோதிக்கப்பட்டு, எதையாவது விரும்பும்போது நமது பசி நம்மைக் கொடிய தவறுகளுக்கும் பாவங்களுக்கும் இட்டுச் செல்ல விடாமல், பசியுள்ள ஆத்துமாவை “நன்மைகளால்” (சங்கீதம் 107:9) திருப்திப்படுத்துகிற பரலோகத் தகப்பனை மட்டும் அணுகுவோம்.

அதிர்ஷ்டம்மல்ல, ஆனால் கிறிஸ்து

இப்பிரபஞ்சத்தில் சுமார் 700 குயிண்டிலியன் (7 மற்றும் 20 பூஜ்ஜியங்கள்) கிரகங்கள் உள்ளதாக டிஸ்கவர் என்ற இதழ் கூறுகிறது. ஆனால் பூமியைப் போன்ற கிரகம் வேறில்லை. வானியற்பியல் ஆராய்ச்சியாளர் எரிக் ஜாக்ரிசன், ஒரு கிரகத்தில் உயிரினம் வாழத் தேவையானது சரியான வெப்பநிலை மற்றும் நீா் வளம். அது “அதிர்ஷ்டவசமான” மண்டலத்தில் சுற்றிவரும் கிரகத்தில்தான் இவ்வாறு அமையும் எனக் கூறுகிறார். 700 குயின்டிலியன் கோள்களில், பூமியில் மட்டுமே உயிரிகள் வாழத் தகுதியாக உள்ளது எனத் தெரிகிறது. ஜாக்ரிசன் முடிவாகக் கூறும்போது, எப்படியோ பூமி்க்கு “மிகவும் அதிர்ஷ்டம்” அடித்துள்ளது என்கிறார்.

அதிர்ஷ்ட தேவதையால் இந்தப் பிரபஞ்சம் தோன்றவில்லை, மாறாக இயேசுவின் கிரியையே காரணம் என்று பவுல் கொலோசெய சபைக்கு தீர்க்கமாக கூறியுள்ளார். அப்போஸ்தலன், கிறிஸ்துவை உலகின் சிருஷ்டிகராக முன்னிறுத்துகிறார்; “ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது” (கொலோ 1:16). இயேசு இந்த உலகத்தைப் படைத்த வல்லமையுள்ள சிருஷ்டிகர் மட்டுமல்ல, “எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது” (வ.17) என பவுல் சொல்கிறார். அதிக வெப்பமாயும், மிகவும் குளிராகவும் இல்லாமல், மனிதன் வாழ்வதற்கேற்ற ஒரு சீதோஷ்ண நிலையைக் கொண்டுள்ளது. தான் படைத்ததை, தமது பூரண ஞானத்தாலும் எல்லையில்லா வல்லமையாலும் இயேசு நிலைநிறுத்துகிறார்.

தேவனின் படைப்பின் அழகில் நாமும் பங்குடையவர்களாய் அதை அனுபவிக்கும்போது, அதிர்ஷ்ட தேவதையின் கிரியையே இது என்று எண்ணாமல், “சகல பரிபூரணமும் வாசமாயிருக்கும்” (வ.19) நோக்கமுள்ள, இறையாண்மையுள்ள, வல்லமையுள்ள அன்பானவரையே எண்ணுவோம்..

ஜீவக்கிரீடம

பன்னிரண்டு வயதான லீஅடியானெஸ் ரோட்ரிகஸ்-எஸ்பாடா, 5-கே ஓட்டத்திற்கு (3 மைல்களுக்கு மேல்) தாமதமாகிவிடுமோ என்று கவலைப்பட்டார். அரை-மராத்தானில் பங்கேற்பாளர்களுடன் (13 மைல்களுக்கு மேல்!) அவள் தொடங்கும் நேரத்துக்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்னதாகவே, ஓட்டப்பந்தய வீரர்களின் குழுவுடன் கிளம்பினாள். லீஅடியானெஸ் மற்ற ஓட்டப்பந்தய வீரர்களோடு ஓடுக்கொண்டிருக்கையில், அவர்களுக்கு சிறிது முன்னிலையில் இருந்தாள். நான்காவது மைலில், இறுதிக்கோடு அவளுடைய கண்களுக்கு தென்படாததால், அவள் நீண்ட மற்றும் கடினமான பந்தயத்தில் பங்கேற்றிருப்பதாக உணர்ந்தாள். அவள் ஆட்டத்தைக் கைவிடுவதற்குப் பதிலாக, தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தாள். இந்த திடீர் ஓட்டப்பந்தய வீராங்கணை தனது 13.1-மைல் பந்தயத்தை நிறைவு செய்து, ஆட்டத்தை நிறைவுசெய்த 2,111 பேர்களில் 1,885வது இடத்தைப் பிடித்தார். இதுவே விடாமுயற்சி! 
ஆதித்திருச்சபை முதலாம் நூற்றாண்டில் உபத்திரவத்தை சந்தித்தபோது, பல கிறிஸ்தவர்கள் தங்கள் ஓட்டத்தை நிறுத்திக்கொள்ள தீர்மானித்தனர். ஆனால் அவர்களை தொடர்ந்து ஓடும்படிக்கு யாக்கோபு அவர்களை ஊக்கப்படுத்தினார். அவர்கள் சோதனையை பொறுமையோடே சகித்தால், தேவன் இரட்டிப்பான ஆசீர்வாதங்களை அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்குப்பண்ணுகிறார் (யாக்கோபு 1:4,12). முதலாவதாக, “நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது” (வச. 4). இரண்டாவது, இம்மையிலும் மறுமையிலும் வாழும் வாழ்க்கையில் தேவனுடைய மகிமையில் இருக்கும் வாய்ப்பான ஜீவக்கிரீடத்தை தருவேன் என்று வாக்குப்பண்ணுகிறார் (வச. 12). 
கிறிஸ்தவ ஓட்டத்தின் இடையில், பெரும்பாலான கிறிஸ்தவர்கள் ஓட்டத்தின் கடினத்தை உணர்ந்து இது தங்களுக்கான ஓட்டமில்லை என்று ஓட்டத்தை நிறுத்திக்கொள்ள விழைகின்றனர். ஆனால் தேவன் நமக்குத் தேவையானதை கொடுப்பதால், நாம் விடாமுயற்சியுடன் ஓடிக்கொண்டேயிருக்க முடியும்.  

ஓராண்டில் வேதாகமம்

ஒரு இரக்கமுள்ள தன்னார்வலர் அவரது துணிச்சலான செயலுக்காக “காக்கும் தூதன்” என்று அழைக்கப்பட்டார். ஜேக் மன்னா ஒரு வேலை தளத்தில் சோலார் பேனல்களை நிறுவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஐந்து வயது சிறுமியைக் காணாமல் எல்லோரும் தேடிக்கொண்டிருக்க, இவரும் அக்குழுவில் சேர்ந்துகொண்டனர். அக்கம்பக்கத்தினர் அவர்களது கேரேஜ்கள் மற்றும் முற்றங்களில் தேடியபோது, மன்னா அவளை அருகிலுள்ள காட்டுப் பகுதியில் தேடினார். அங்கு புதைமணலில் சிக்கியயிருந்த சிறுமியை அவர் கண்டுபிடித்து, அவளை அந்த இக்கட்டான நிலையில் இருந்து வெளியே இழுத்து, அவளுடைய தாயிடத்தில் பத்திரமாய் ஒப்படைத்தார்.  
அந்தச் சிறுமியைப் போலவே தாவீதும் மீட்கப்பட்டார். அவருடைய இருதயத்திலிருந்து எழும்பிய கதறலுக்கு தேவன் பதிலளிக்க, தாவீது “பொறுமையுடன்” (சங்கீதம் 40:1) காத்திருக்கிறார். தேவனும் பதிலளித்தார். தேவன் அவருடைய கூக்குரலுக்கு செவிகொடுத்து, “பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து” (வச. 2) அவனை தூக்கியெடுத்து காப்பாற்றியதின் மூலம் பதிலளித்தார். தாவீதின் வாழ்க்கைக்கு உறுதியான அடித்தளத்தை அளித்தார். வாழ்க்கையின் சேற்றுச் சதுப்பு நிலத்திலிருந்து கடந்த கால மீட்புகள், துதி பாடல்களைப் பாடுவதற்கும், எதிர்காலச் சூழ்நிலைகளில் தேவனை நம்புவதற்கும், மற்றவர்களுடன் அவருடைய சத்தியத்தைப் பகிர்ந்துகொள்வதற்கும் அவனது ஆர்வத்தை வலுப்படுத்தியது (வச. 3-4). 
பொருளாதாரச் சிக்கல்கள், திருமணக் குழப்பங்கள், பற்றாக்குறை போன்ற வாழ்க்கைச் சவால்களில் நாம் நம்மைக் காணும்போது, தேவனிடம் கூக்குரலிட்டு, அவருடைய கிரியைக்காய் பொறுமையுடன் காத்திருப்போம் (வச. 1). அவர் ஜீவிக்கிறார். ஆபத்துக் காலத்தில் எங்களுக்கு உதவவும், நிற்க உறுதியான இடத்தை வழங்கவும் தயாராக இருக்கிறார். 

தேவனிடம் சரணடைதல்

தங்களுக்கு தாங்களே உதவி செய்துகொள்கிறவர்களுக்கு தேவன் உதவுவதில்லை. அவரை நம்பி சார்ந்துகொள்வபவர்களுக்கே தேவன் உதவிசெய்கிறார். சுவிசேஷயத்தை மையமாயக் கொண்ட வெற்றிகரமான தொலைக்காட்சித் தொடரான “தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்” என்ற தொடரில் இயேசுவாக நடிக்கும் ஜோனத்தன் ரூமி, இதை 2018 ஆம் ஆண்டு மே மாதம் உணர்ந்தார். லாஸ் ஏஞ்சல்ஸில் எட்டு வருடங்களாக வசித்த ரூமி, கிட்டத்தட்ட உடைந்துபோன நிலைமையில் இருந்தார். இருந்த உணவை உட்கொண்டு, வேறு வேலை ஏதும் கிடைக்காமல் தவித்தார். அவர் தன்னுடைய இருதயத்தை தேவனுடைய பாதத்தில் ஊற்றி, தனது ஜீவியத்தை தேவனிடத்தில் சரணடையச் செய்தார். “நான் சரணடைகிறேன், நான் சரணடைகிறேன்” என்ற வார்த்தைகளை சொல்லி ஜெபித்தார். அந்த நாளின் மாலையில், அவர் தபாலில் நான்கு காசோலைகளைப் பெற்றுக்கொண்டார். மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட படத்தில் இயேசுவின் கதாப்பாத்திரத்தில் நடிக்க தெரிந்தெடுக்கப்பட்டார். தன்னை விசுவாசிப்பவர்களுக்கு தேவன் உதவிசெய்வார் என்பதை ரூமி கண்டுபிடித்தார்.

“பொல்லாதவர்கள்" (சங்கீதம் 37:1) மீது பொறாமை கொள்வதற்கும் வருத்தப்படுவதற்கும் பதிலாக, எல்லாவற்றையும் தேவனிடம் ஒப்படைக்கும்படி சங்கீதக்காரன் நமக்கு அழைப்பு விடுக்கிறார். நாம் அவரை மையமாக வைத்து, நன்மை செய்யவும் மனமகிழ்ச்சியாயிருப்பதற்கும் தேவன் நமக்கு கட்டளையிடுகிறார் (வச. 3-4). மேலும் நம்முடைய ஆசைகள், பிரச்சனைகள், கவலைகள் மற்றும் தினசரி அனைத்தையும் அவரிடம் சரணடையுங்கள். தேவன் நம்மை வழிநடத்தி நமக்கு சமாதானத்தை அருளுவார் (வச. 5-6). கிறிஸ்தவர்களாக, நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கும் அதிகாரம் அவருடையது.

நாம் தேவனிடத்தில் சரணடைந்து அவரையே நம்புவோம். அவர் நம்முடைய வாழ்க்கையில் கிரியை நடப்பித்து, தேவயான மாற்றத்தை கொண்டுவருவார்.  

தொடர்புடைய தலைப்புகள்

> odb

சரியாய் எதிர்வினையாற்றுங்கள்

கௌரவால் தன் கண்களை நம்ப முடியவில்லை. "அவர்கள் ஏன் இந்த வெள்ளை உடையில் இருக்கும் நல்ல மாமாவை அடிக்கிறார்கள்" என்று எண்ணினான். அவன் இயேசுவைப் போல உடையணிந்த ஒரு நபர் தெருக்களில் ஊர்வலமாகச் செல்வதையும் , போலி இரத்தம் சொட்டச் சொட்டவும், வீரர்களைப் போல உடையணிந்தவர்களால் சாட்டையால் அடிக்கப்படுவதையும் கண்டான். அது ஒரு சபையின் புனித வெள்ளி பவனி. ஆனால் அந்த காட்சி கௌரவுக்கு மிகவும் நிஜமாக இருந்தது. கௌரவ் ஒரு மனநலிவு நோயாளி, மேலும் அவனது நிலை அவனை மிகவும் ஆர்வத்துடனும் இரக்கத்துடனும் இருக்கும்படி செய்தது. அம்மாவின் புடவையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு, “அம்மா, தயவு செய்து அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள்!” என்று புலம்பியபடியே அவன் இதயம் இரக்கத்தால் நிறைந்தது.

கௌரவரைப் போல இரக்கமுள்ளவர்களாக இருக்க நாம் அழைக்கப்படுகிறோம். சிலருக்கு எளிதில் இரக்கம் உண்டாகலாம் என்றாலும், மற்ற நமக்கோ அதைப் பயிற்சி செய்ய வேண்டும். கொலோசெ சபையினர்க்கு தங்கள் பழைய வாழ்க்கை முறையை "அகற்ற" வலுவாக வலியுறுத்தப்பட்டது. அழுக்காகவும் கந்தையாகவும் இருந்த ஆடையைத் தூக்கி எறிவது போல, கோபம், மூர்க்கம் , பொறாமை, வாயில் பிறக்கலாகாத தூஷணம், வம்பு வார்த்தைகள் (வ.8) ஆகியவற்றைக் கொண்டிருந்த தங்கள் உலகத்துக்குரிய சுபாவத்தைக் களைந்துவிடும்படி அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். மாறாக, இரக்கம், தயவு, மனத்தாழ்மை மற்றும்நீடிய பொறுமை (V.12)ஆகிய நற்பண்புகளை அணிந்துகொள்ள அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர், அவை " இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும்" (சங்கீதம் 145:8). கொண்ட தங்கள் சிருஷ்டிகரைப் பிரதிபலிக்கின்றன.

இரக்கம், கருணை, தாழ்மை மற்றும் தயவு ஆகியவை இன்றைய உலகில் பெரும்பாலும் பலவீனங்களாகக் கருதப்படுகின்றன. ஆனாலும் இதைத்தான் மற்றவர்கள் நம்மில் பார்க்க வேண்டும், அனுபவிக்க வேண்டும் (வ.12). சக பணியாளர்கள், அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான நமது அனுதின உறவுகளில் இந்த குணாதிசயங்களுடன் செயல்படுவது எப்போதும் எளிதானது அல்ல. ஆனால் சூழ்நிலைகள் எப்படிப்பட்டதாயினும் நாம் சரியாக எதிர்வினையாற்ற உறுதிகொள்ள வேண்டும், ஏனெனில் இந்த வழிமுறையில்தான் நாம் கிறிஸ்துவின் சீடர்கள் என்பதை உலகம் அறியும் ரெபேக்கா விஜயன்

 

ஆவிக்குரிய சுவடை விட்டுச்செல்லுதல்

இளம்வாலிப வயதினர்களாக, எங்களுடைய அம்மா இயேசுவை ஏற்றுக்கொள்ள தீர்மானித்த முடிவை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அவருக்குள் நாங்கள் கண்ட மாற்றங்களை எங்களால் மறுக்க முடியவில்லை. அவரிடத்தில் அதிக மனநிறைவும் மகிழ்ச்சியும் காணப்பட்டது. திருச்சபையிலும் உண்மையாய் ஊழியம்செய்ய ஆரம்பித்தார். வேதத்தைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவருக்கு அதிகம் இருந்ததினால் வேதாகமக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். சில வருடங்களுக்குப் பிறகு, என் சகோதரி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தாள். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து நானும் இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, என் தந்தையும் எங்களுடன் சேர்ந்தார். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் என் அம்மாவின் தீர்மானம் எங்களுடைய குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரையும் படிப்படியாய் பாதித்தது.

அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு தனது கடைசி நிருபத்தை எழுதி, இயேசுவின் மீதான விசுவாசத்தில் நிலைத்திருக்க ஊக்குவித்தபோது, தீமோத்தேயுவின் ஆவிக்குரிய பாரம்பரியத்தைக் குறித்து குறிப்பிடுகிறார். “அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்” (2 தீமோத்தேயு 1:5).

அம்மாக்கள் மற்றும் பாட்டிகளே, உங்கள் முடிவுகள் தலைமுறைகளை பாதிக்கலாம்.

தீமோத்தேயுவின் அம்மாவும் பாட்டியும் எவ்வளவு அழகாக அவருடைய விசுவாசத்தை வளர்க்க உதவினார்கள். அதனால் அவர் தேவனுடைய அழைப்பிற்கு பாத்திரவானாய் மாறினார்.

இந்த அன்னையர் தினத்திலும் இதற்கு பின்னரும், இயேசுவைப் பின்பற்ற முடிவு செய்த தாய்மார்களை கௌரவிப்போம்.

நம் அன்புக்குரியவர்களுக்காக ஆவிக்குரிய சுவடை விட்டுச் செல்வோம். 

 

அன்பு, வாழ்வு மற்றும் போஷிப்பு

 

எனது பாட்டியின் நினைவு நாளில், நானும் எனது கணவரும் அவரது கல்லறைக்குச் சென்று அவரது கல்லறையில் ரோஜாக்களை வைத்தோம். என் கணவர் அவளைச் சந்தித்ததே இல்லை. எனவே, அவர் அவளைப் பற்றி என்னிடம் கேட்டபோது, நான் அவளுக்குப் பிடித்த பாடல்களைப் பாடினேன், அவளது விஸ்தாரமான கிறிஸ்துமஸ் சமையலைப் பற்றிப் பேசினேன், காட்டுக் காளான்களை எப்படித அறிவது என்று அவளுக்குத் தெரியும் என்று நான் அவரிடம் சொன்னபோது சிரித்தேன். அவள் சரீரப்பிரகாரம் எங்களுடன் இல்லாவிட்டாலும், அவளுடைய கல்லறைக்குச் சென்று அவளது கதைகளைப் பகிர்ந்துகொண்டது, அவளுடைய அன்பு, வாழ்க்கை மற்றும் உணவு பற்றிய நினைவுகளால் என் மனதை நிரப்பியது. இயேசு மரிப்பதற்கு முன், அவர் தனது சீடர்களுடன் ஒரு தாராளமான பஸ்கா விருந்தை பகிர்ந்து கொண்டார். அவர் விரைவில் பாடுபட்டு மரிப்பாா் என்று அவர்களிடம் கூறினார் (வ.15). உண்மையில், அதே இரவில் அவர் கைதுசெய்யப்படுவார் (லூக்கா 22:54). இந்த சூழ்நிலையில், இயேசு அப்பத்தை எடுத்து, தேவனை ஸ்தோத்திரித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, “ இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்" என்றார் (வ.19). “இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது” (வ.20) என்று கூறி, ஒரு பாத்திரத்தில் திராட்சரசத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார்.

மறுநாள் இயேசு சிலுவையில் அறையப்பட்டார். அவர் மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் எழுந்தார், இறுதியில் பரலோகத்திற்குத் திரும்பினார். ஆயினும் இன்றும் கூட, அவருடைய சீஷர்களாகிய நாம் இன்னும் அவரை நினைவுகூரும் வகையில் அப்பம் பிட்டு, திராட்சரசம் பகிர்ந்து கொள்கிறோம், ஏனென்றால் அது இயேசுவினால் நிறுவப்பட்ட ஒரு அழகான நினைவுச்சம்பவமாகவும், மேலும் அவர் மீண்டும் வருவதற்கான நித்திய வாக்குறுதியாகவும் இருக்கிறது (வ.15-18). நாம் இயேசுவைச் சரீர ரீதியாகப் பார்க்கவோ தொடவோ முடியாமல் போகலாம், ஆனால் அவர் உயிருடன் இருக்கிறார் என்றும், அவருடைய அன்பு, வாழ்க்கை மற்றும் போஷிப்பால் ஒவ்வொரு நாளும் நம்மை நிரப்புகிறார் என்பதையும் நாம் அறிவோம். நாம் அப்பம் பிட்கும்போது, இயேசுவின் வாக்குறுதியை நினைவுகூர்ந்து, அவர் நம்மில் செயல்படவும் உள்ளிருந்து அவரைப் போல நம்மை மாற்றவும் அவரை அனுமதிப்போம்.