எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மின்னி ஆபிரகாம்கட்டுரைகள்

வன்கண்ணை முறியடித்தல்

மாலதி வீட்டை விட்டு வெளியில் வரும் போதெல்லாம், குறிப்பாக விசேஷங்களுக்கு அலங்கரித்துக் கொள்ளும்போது, அம்மா கவலையுடன், கட்டாயமாக முகத்தில் எங்காவது ஒரு கரும்புள்ளி வைப்பாள். அவளுடைய அம்மா தொடர்ந்து அவளைக் கவனித்து, "வன்கண்ணை" தடுக்க சடங்குகளைச் செய்தார். தமிழில் த்ரிஷ்டி அல்லது ஹிந்தியில் நாசர் என்று அழைக்கப்படும் "வன்கண்" இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் அஞ்சப்படுகிறது. மாலதியின் அம்மாவைப் போலவே, யாராவது தங்களைப் பொறாமையுடன் பார்க்கும் போதெல்லாம், அவர்களுக்கு ஏதாவது தீங்கு நேரிடும் என்று பலர் பயப்படுகிறார்கள்.

அறியாத பயம் நம்மை முடக்கும் போது, மூடநம்பிக்கையின் அடிப்படையிலான விரைவான தீர்வுகளைத் தேடலாம். ஆனால், தீமோத்தேயுவின் ஆசிரியர் இவை பிசாசுகளின் உபதேசம் என்கிறார் (வ.1). விசுவாசிகளுக்கும் "கட்டுக்கதைகளுக்கும்" (வ.7) சம்பந்தமில்லை என்று ஆசிரியர் எச்சரிக்கிறார். மூடநம்பிக்கைகள் மற்றும் கதைகள் போன்ற நமக்குப் பயத்தை ஏற்படுத்தும் இந்த விஷயங்கள் இயேசுவை விசுவாசிக்கும் நம்மில் எவ்வளவேனும் இருக்கக்கூடாது (வ.3-7). மாறாக, நாம் தேவபக்தியுடன் இருக்கவும், தேவனைச் சார்ந்திருக்கவும் நம்மைப் பயிற்றுவிக்க வேண்டும் (வ.7). ஏனெனில், கிறிஸ்து தனது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் சாத்தானை வென்றபோது, அவர் இருளின் வல்லமைகளை என்றென்றும் தோற்கடித்தார். நாம் பயப்பட வேண்டியதில்லை, "ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்" (வ11).

எனவே, எபேசியரில் பவுல் சொல்வது போல், பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய் நம்மைப் பாதுகாக்கும் விசுவாசத்தின் கேடகம் உட்பட, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை (எபேசியர் 6:14-17) அணிவோம். சத்துரு நம்மை வெல்ல முடியாது, நிச்சயமற்ற எதிர்காலத்தைக் குறித்தும் நாம் பயப்படத் தேவையில்லை, ஏனென்றால் சத்துருவை வென்ற இயேசுவே வெற்றியாளர் (1 யோவான் 5:18). 

 

பெஹலே ஆப்

கருணை மற்றும் விருந்தோம்பலின் இந்தியாவின் முடிசூடா தலைநகரம் லக்னோ. பின்வரும் நகைச்சுவையில் இது பொருத்தமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது: "ஏன் பயணிகள் லக்னோ ரயில் நிலையத்தை விட்டு வெளியே வருவதில்லை? ஏனென்றால் அவர்கள் ரயில் நிலைய நடைபாதையில் ஒருவருக்கொருவர், "பெஹலே ஆப்!" ("நீங்கள் முதலில்" என்று மொழிபெயர்க்கிறது) என்று சொல்லி நகராமல் இருப்பதாலே". மற்றவர்களை முதலில் செல்ல அனுமதிப்பது பற்றி லக்னோ மக்களிடம் இருந்து நாட்டின் பிற பகுதிகள் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒப்புக்கொள்ளத்தக்கது.

ஆனால் இயேசுவைப் பின்பற்றுபவர்களான நமக்கோ தாழ்மைக்கான நமது அளவுகோல் இயேசுவே. இயேசு சொன்னார், "உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்" (மத்தேயு 23:11). அண்ட சராசரத்தின் சிருஷ்டிகராகிய அவர், "அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போல" (ஏசாயா 53:7) நடத்தப்படுவதற்கு அனுமதித்தபோது, அவர் நமக்குத் தாழ்மையை விளக்கிக் காட்டினார். பவுல் பிலிப்பி சபைக்கு எழுதிய நிருபத்தில், கிறிஸ்துவின் தலைமையின் அளவை குறித்து நம் கவனத்தை ஈர்க்கிறார். இயேசு, சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி இருக்க அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார் (வ.6-8) என்ற உண்மையை நாம் சிந்தையில் கொள்ள அவர் நமக்கு உதவுகிறார். இந்த கீழ்ப்படிதலுள்ள தாழ்மையே அவரது அந்தஸ்தை மேலும் உயர்த்தியது, அவருக்கு உலகின் ஒரே மீட்பராக "மேலான நாமத்தை" வழங்கியது (வ.9-11).

தாழ்மையான இதயம் கொள்வது எளிதல்ல. மற்றவரின் தேவைகளை நம் தேவைக்கு மேல் வைப்பது மிகவும் கடினம். குடும்பம் அல்லது நண்பர்கள் போன்ற நாம் விரும்பும் நபர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பது அவ்வளவு கடினம் அல்ல, ஆனால் அந்நியர்களின் தேவைகளை நம்முடைய தேவைகளுக்கு மேல் வைப்பது கடினம் (மாற்கு 12:31). உண்மையான தாழ்மையின் தன்மையை இயேசு நமக்குக் காட்டினார். நாம் பின்பற்றும்படி அவர் நமக்கு ஒரு உதாரணம் கொடுத்தார். தாழ்மையானது கடினமாக இருந்தாலும், நாம் கைக்கொள்ள வேண்டிய ஒன்று. 

சட்டப்பூர்வமான விடுதலை

இந்தியாவில் கொத்தடிமைத் தொழிலாளர் அல்லது பந்துவா மஸ்தூரி 1976 இல் சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் சில பகுதிகளில் இந்த நடைமுறை இன்னும் தொடர்கிறது. மக்கள் தங்களுடைய உழைப்பை அடகு வைத்து, திருப்பிச் செலுத்த முடியாத கடனைப் பெறும்போது கொத்தடிமை சுழற்சி தொடங்குகிறது. அவர்களுக்குக் கடன் வழங்குபவர்கள் தங்களுக்கு வேலை செய்து கடனைச் செலுத்தக் கோருகிறார்கள், ஆனால் அவர்களுக்குச் சொற்ப ஊதியமே தருகின்றனர். இதன் விளைவாக, தொழிலாளர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கடனளிப்பவரின் சொத்தாகவே வாழ்ந்து, சில சமயங்களில் தலைமுறைகளுக்கு நீட்டிக்கப்படும் கடன்களை அடைக்க முயல்கின்றனர். சட்டப்படி, அவர்கள் சுதந்திரமாக இருக்கவும், மறுவாழ்வு பெறத் தகுதியுடையவர்களாகவும் இருந்தாலும், பல தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. இதன் விளைவாக, ஆயிரக்கணக்கானோர் அடிமைத்தனத்தில் தவிக்கின்றனர்.

கிணற்றருகே இருந்த சமாரிய ஸ்தீரியும் சமூக நெறிகளுக்கு அடிமையாக இருந்தாள். அவளுடைய வாழ்க்கை முறையின் காரணமாக அவள் ஜனங்களால் ஒதுக்கப்பட்டதால் அவள் தனியாக வந்தாள். இதைச் சிக்கலாக்கும் வகையில், யூதக் கண்ணோட்டத்தில், அவள் ஒரு சமாரிய பெண்; புறக்கணிக்கப்பட்டவள் (வ.20). ஆனால் இயேசுவுடனான உரையாடல் அவளை அங்கீகரிக்கப்பட்டவளாகவும், திடப்பட்டவளாகவும் உணரச் செய்தது. இயேசு அவளை இரட்சிக்க வந்திருந்தபோதும், அதை அவள் அறியவில்லை. குடிக்க அவளிடம் தண்ணீர் கேட்டபோது, அவரது அசாதாரணமான பார்வை மற்றும் செயலால் அவள் திகைத்தாள். ஆனால் அவர்தான் எதிர்பார்க்கப்பட்ட மேசியா என்பதை அவள் உணர்ந்தபோது, அவள் மகிழ்ச்சியுடன் தன் கிராம மக்களை இயேசுவிடம் கொண்டு வந்தாள்.

இயேசுவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் இரட்சிக்கப்படுவான் (யோவான் 3:16). இயேசு நமக்காகச் சிலுவையில் மரித்தபோது நம்முடைய பாவங்களின் கடன் அடைக்கப்பட்டது. அவர் நமது சுயாதீனத்தை விலைக்கு வாங்கி, நம்மை என்றென்றும் விடுதலையாக்கினார். மூடநம்பிக்கை, பாரம்பரியம் அல்லது சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள் போன்ற பாரங்களை நாம் சுமக்க வேண்டாம் . அவர் வழங்குவதை ஏற்றுக்கொள்ளும்போது நாம் விடுதலை பெறுகிறோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

நல்ல பிரியாணி

வர்ஷாவின் உணவுக் கடையில் அதிகம் விற்பனையாகும் உணவு அவரது பிரியாணிதான். அவள் வெங்காயத்தை பொன் நிறமாக மாறும் வரை கவனமாக வறுத்தெடுப்பாள். எனவே, வழக்கமான வாடிக்கையாளர் ஒருவர், “உங்கள் பிரியாணி சுவை வித்தியாசமானது. சுவை மேம்பட்டதாக தெரியவில்லை” என்றார்.

வர்ஷாவின் புதிய உதவியாளர், இந்த முறை அதைத் தயாரித்து, அது ஏன் வித்தியாசமானது என்பதை விளக்கினார்: “வழக்கமான முறையில் நான் வெங்காயத்தை வறுக்கவில்லை, ஏனென்றால் நான் அதை வீட்டில் அவ்வாறு செய்வது வழக்கம். மிளகாய் தூளும் அதிகம் சேர்த்தேன். என் கருத்துப்படி, அது நன்றாக சுவைக்கிறது.” செய்முறை வழக்கத்தைப் புறக்கணித்துவிட்டு, அதற்குப் பதிலாக அதை தன்னுடைய பாணியில் அவள் செய்து காண்பித்தாள்.

நான் சில சமயங்களில் தேவனுடைய ஆலோசனைகளுக்கு இப்படித்தான் பதிலளிப்பேன். வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ள அவருடைய கட்டளைகளை முழுமையாகக் கடைப்பிடிப்பதற்குப் பதிலாக, நான் என் கருத்துக்களுக்கு உட்பட்டு என் வழியில் செல்கிறேன்.

சீரிய இராணுவத்தின் படைத்தளபதியான நாகமானும் இதேபோன்ற தவறை செய்யும் விளிம்பில் இருந்தான். தன் தொழுநோய் குணமாக யோர்தானில் தன்னைக் கழுவும்படி எலிசா தீர்க்கதரிசி மூலம் தேவனுடைய அறிவுறுத்தலைப் பெற்றபோது, பெருமிதம் கொண்ட படைவீரன் கோபமடைந்தான். தேவனுடைய கட்டளையை விட அவனது சுயகருத்து மேலானது என்று நம்பி, தனது தேவையை எவ்வாறு நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதற்கான தனது சொந்த எதிர்பார்ப்புகளை அவன் பேசினான் (2 இராஜாக்கள் 5:11-12). இருப்பினும், எலிசாவின் வார்த்தைகளுக்கு செவிசாய்க்கும்படி அவனுடைய ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்தினர் (வச. 13). இதன் விளைவாக, நாகமான் குணமடைந்தான்.

நாம் தேவனுடைய வழியில் விஷயங்களைச் செய்யும்போது, விவரிக்க முடியாத சமாதானத்தை அனுபவிக்கிறோம். அவருடைய நோக்கங்களை நிறைவேற்றுவதில் அவருடன் இணைந்து பணியாற்றுவோம். 

.

இராஜ்ய வடிவில் பணித்தளம்

இங்கிலாந்தின் தொழிற்சாலைகள் இருண்ட இடங்களாக இருந்தன. இறப்புகள் அதிகமாக நிகழ்ந்தன. தொழிலாளர்கள் பெரும்பாலும் வறுமையில் வாழ்ந்தனர். “சேரியில் வசிக்கும் உழைக்கும் வர்க்கம் எவ்வாறு இலட்சியங்களை வளர்த்துக் கொள்ள முடியும்,” என்று எண்ணிய ஜார்ஜ் கேட்பரி, தனது விரிவடையும் சாக்லேட் வணிகத்திற்காக ஒரு புதிய வகையான தொழிற்சாலையை உருவாக்கினார். அது அவரது தொழிலாளர்களுக்கு பெருமளவில் பயனளித்தது. இதன் விளைவாக, முன்னூறுக்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட போர்ன்வில்லே என்ற அந்த குக்கிராமம், விளையாட்டு மைதானங்கள், பள்ளிகள் மற்றும் கேட்பரியின் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான தேவாலயங்கள் என்று வடிவமைக்கப்பட்டது. அவர்களுக்கு நல்ல ஊதியமும் மருத்துவ சேவையும் வழங்கப்பட்டது. இவை அனைத்திற்கும் கேட்பரி கிறிஸ்துவின் மீது வைத்த நம்பிக்கையே காரணம்.

தேவனுடைய சித்தம் “பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று இயேசு ஜெபிக்கக் கற்றுக்கொடுக்கிறார் (மத்தேயு 6:10). காட்பரி செய்தது போல், இயேசு கற்றுக்கொடுத்த ஜெபத்தின் அடிப்படையில், நம்முடைய பணியிடங்கள் அன்றன்றுள்ள ஆகாரத்தை சம்பாதிக்கும் இடமாகவும் கடனாளிகளை மன்னிக்கிற இடமாகவும் இருக்கவேண்டும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்க உதவுகிறது (வச. 11-12). ஒரு வேலையாளுக்கு, “கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து” (கொலேசெயர் 3:23) வேலை செய்ய ஊக்குவிக்கிறது. முதலாளிகளாக, ஊழியர்களுக்கு “வேலைக்காரருக்கு நீதியும் செவ்வையுமானதைச் செய்ய” (4:1) ஊக்குவிக்கிறது. நமது பங்கு எதுவாக இருந்தாலும், ஊதியமாக இருந்தாலும் சரி, தன்னார்வமாக இருந்தாலும் சரி, நாம் சேவை செய்பவர்களின் நல்வாழ்வைக் கவனிப்பதைக் குறிக்கிறது.

ஜார்ஜ் கேட்பரியைப் போலவே, தேவன் நம் சுற்றுப்புறங்களுக்கும் பணியிடங்களுக்கும் பொறுப்பாக இருந்தால், விஷயங்கள் எப்படி வித்தியாசமாக இருக்கும் என்று கற்பனை செய்யலாம். ஏனெனில் அவர் இருக்கும் போது மக்கள் செழித்து வளர்கிறார்கள். 

 

மீட்டெடுக்கும் பயிற்சி

நீங்கள் எப்போதாவது ஒரு கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, அதை இடையில் நிறுத்திவிட்டு, அது எப்போது நிகழ்ந்தது அல்லது யார் என்று குழம்பி யோசித்திருக்கிறீர்களா? வயதாவதினால் நினைவாற்றல் மங்கிவிடும் என்று நாம் அடிக்கடி நம்புகிறோம். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் அந்த கருத்தை ஆதரிக்கவில்லை. உண்மையில், அவை நமது நினைவாற்றல் பிரச்சனையல்ல என்பதைக் குறிப்பிடுகின்றன. அந்த நினைவுகளை மீட்டெடுப்பது நமது திறமை என்று கருதுகின்றன. நினைவுகளை சில வழக்கமான ஒத்திகை இல்லாமல் அணுகுவது கடினமாகிவிடும்.

அந்த மீட்டெடுப்பு திறனை மேம்படுத்துவதற்கான வழிகளில் ஒன்று, வழக்கமான திட்டமிடப்பட்ட செயல்கள் அல்லது குறிப்பிட்ட நினைவகத்தை நினைவுபடுத்தும் அனுபவங்கள். நமது சிருஷ்டிக்கர்த்தர் இதை அறிந்திருந்தார். எனவே அவர் இஸ்ரவேல் புத்திரருக்கு வாரத்தில் ஒரு நாளை தேவனை ஆராதிக்கும் ஓய்வுநாளாக ஏற்படுத்தியிருந்தார். அத்தகைய ஓய்வினிமித்தம் நாம் மனப் பயிற்சிக்கான வாய்ப்பைப் பெறுகிறோம். “கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி(னார்)” (யாத்திராகமம் 20:11). இது நம்மால் உண்டானது அல்ல; தேவனுடைய திட்டம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.

நம் வாழ்க்கையின் அவசரத்தில், தேவன் நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் என்ன செய்திருக்கிறார் என்ற நினைவுகளில் சில நேரங்களில் நம் பிடியை நாம் இழக்க நேரிடுகிறது. நம் வாழ்க்கையை யார் உன்னிப்பாகக் கண்காணிக்கிறார்கள் என்பதையும், நாம் அதிகமாகவும் தனிமையாகவும் உணரும்போது அவர் நம்மோடு இருப்பதாக வாக்களித்ததை நாம் மறந்துவிடுகிறோம். நம்முடைய வழக்கமான வாழ்க்கைப் பயணத்திலிருந்து ஒரு நாளை ஓய்வுநாளாய் ஆசரிப்பதின் மூலம் நாம் தேவனையும் “அவர் செய்த சகல உபகாரங்களையும்” (சங்கீதம் 103:2) நினைவுகூர வலியுறுத்தப்படுகிறோம்.