எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

பில் கிரவுடர்கட்டுரைகள்

சேவை மனப்பான்மை

எனது “மாமா” மோகன் காலமானபோது, பலர் பலவகையான அஞ்சலிகளைச் செலுத்தினர். இருப்பினும் அந்த இறுதி மரியாதைகள் அனைத்தும் ஒன்றையே மையமாகக் கொண்டிருந்தன; மோகன் பிறருக்குச் சேவை செய்வதன் மூலம் தேவன் மீதான தனது அன்பைக் காட்டினார். இரண்டாம் உலகப் போரின்போது அவர் நிராயுதபாணியாகப் போர்க்களம் சென்று அங்கே மருத்துவ பணியாற்றினார், இதுவே அவரது சேவை மனப்பான்மைக்கு இணையற்ற உதாரணம். தனது துணிச்சலுக்காக இராணுவத்தின் உயர்ந்த கெளரவங்களைப் பெற்றார், ஆனால் மோகன் போரின் போதும், அதற்குப் பின்னரும், தனது இரக்கமுள்ள சேவைக்காகவே மிகவும் நினைவுகூரப்பட்டார்.

மோகனின் தன்னலமற்ற தன்மை, கலாத்தியருக்கு பவுல் எழுதியதை நினைவூட்டுகிறது:”சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்” (கலாத்தியர் 5:13) என்றெழுதினார். ஆனால் எப்படி? நாம் உடைந்திருக்கையில், பிறரைக் காட்டிலும் நமக்கே முன்னுரிமை கொடுக்க தூண்டப்படுகிறோம். எனவே இந்த இயற்கைக்கு மாறான தன்னலமற்ற தன்மை எங்கிருந்து வருகிறது?

பிலிப்பியர் 2:4-5ல் பவுல், “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவகளையும் நோக்குவானாக.கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது” என்று ஊக்கமளிக்கிறார். கிறிஸ்து நம்மீதுள்ள அதீத அன்பால் சிலுவையில் மரணத்தைக் கூட அனுபவிக்கத் தயாராக இருந்ததை பவுல் விவரிக்கிறார். அவருடைய ஆவியானவர் கிறிஸ்துவின் மனதை நம்மில் உண்டாக்கும்போது மட்டுமே, நாம் பிரித்தெடுக்கப்பட்டு பிறருக்காகத் தியாகம் செய்ய இயலும். அது இயேசு நமக்காக தம்மையே கொடுத்தபோது செய்த அதீத தியாகத்தைப் பிரதிபலிக்கும். நம்மில் உள்ள ஆவியானவரின் கிரியைக்கு நாம் அடிபணிவோமாக. 

 

உங்கள் விசுவாசத்தை பகிருங்கள்

1701 ஆம் ஆண்டில், சர்ச் ஆஃப் இங்கிலாந்து, உலகம் முழுவதும் மிஷனரிகளை அனுப்ப நற்செய்தி பிரச்சார சங்கத்தை நிறுவியது. அவர்கள் தேர்ந்தெடுத்த இலட்சிய வாா்த்தைகளாக ட்ரான்சியன்ஸ் அடியுவா நோஸ், லத்தீன் மொழியில் “வந்து எங்களுக்கு உதவுங்கள்!” இயேசுவைப் பின்பற்றுபவர்கள் அவருடைய அன்பு மற்றும் மன்னிப்பின் செய்தியை மிகவும் அவசியமான ஒரு உலகத்திற்கு எடுத்துச் செல்வதால், முதல் நூற்றாண்டிலிருந்து நற்செய்தி ஸ்தானாதிபதிகளின் அழைப்பு இதுவே.

“வந்து எங்களுக்கு உதவுங்கள்” என்ற சொற்றொடர், அப்போஸ்தலர் 16 இல் விவரிக்கப்பட்டுள்ள “மக்கெதோனியா அழைப்பிலிருந்து” வருகிறது. பவுலும் அவரது குழுவும் ஆசியா மைனரின் மேற்குக் கடற்கரையில் உள்ள துரோவாவுக்கு வந்தார்கள்(இன்றைய துருக்கி, வ.8). அங்கே, பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தானொருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது. (வ.9) அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, பவுலும் அவர் குழுவினரும் உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போனார்கள் (வ. 10)அழைப்பின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொண்டனர்.

எல்லோரும் கடல்களைக் கடக்க அழைக்கப்படுவதில்லை, ஆனால் நமது ஜெபங்கள் மற்றும் நிதிகளால் அதை செய்பவர்களை நாம் ஆதரிக்கலாம். நாம் அனைவரும் இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் நமது அறையிலோ, தெருவிலோ அல்லது சமூகத்திலோ யாரிடமாவது சொல்ல முடியும். நமது நல்ல தேவன் நாம் கடந்துபோய், எல்லாவற்றிலும் மேலான உதவியாகிய இயேசுவின் நாமத்தில் கிடைக்கும் மன்னிப்பின் வாய்ப்பை மக்களுக்கு வழங்கசெய்ய ஜெபிப்போம்.

தேவனின் ஞானமான நோக்கங்கள்

இந்தியா வரலாறுகளால் நிரம்பியுள்ளது. நீங்கள் செல்லும் இடமெல்லாம், வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்களின் நினைவுச்சின்னங்கள் அல்லது முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் இடங்களைக் காணலாம். ஆனால் இங்கிலாந்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு வேடிக்கையான செய்தி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன் வாயிலருகே உள்ள ஒரு பலகையில், “இந்த இடத்தில், செப்டம்பர் 5, 1782 அன்று, எதுவும் நடக்கவில்லை” என்று எழுதப்பட்டுள்ளது.

அநேக வேளையில் நம்முடைய ஜெபத்திற்குப் பதில் கிடைக்காதது போலவே தோன்றுகிறது. அவர் இப்போதே பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்புடன், நாம் மீண்டும் மீண்டும் ஜெபிக்கிறோம், நமது விண்ணப்பங்களை நமது தந்தையிடம் கொண்டு வருகிறோம். சங்கீதக்காரனாகிய தாவீதும் ஜெபிக்கையில் இப்படிப்பட்ட விரக்தியை வெளிப்படுத்தினான்: “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?” (சங்கீதம் 13:1). அதே வண்ணம் நாமும் எளிதாக “ஆண்டவரே, நீர் பதிலளிக்க இன்னும் எவ்வளவு காலம்?” எனலாம்.

எனினும், நம் தேவன் ஞானத்தில் மட்டுமல்ல, அவருடைய நேரத்திலும் பூரணர். எனேவ தாவீது சொன்னான், “நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்”(வ. 5). பிரசங்கி 3:11, “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” என்று நமக்கு நினைவூட்டுகிறது. ‘நேர்த்தியாக” என்ற சொல்லுக்கு “பொருத்தமானது” அல்லது “மகிழ்ச்சியின் காரணம்” என்று பொருள். தேவன் நாம் விரும்பியபடி நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர் எப்போதும் தனது ஞானமுள்ள நோக்கங்களைச் செயல்படுத்துகிறார். அவர் பதில் கொடுக்கும்போது, அது சரியாகவும், நல்லதாகவும், அழகாகவும் இருக்கும் என்று நாம் மனதார நம்பலாம்.

கிறிஸ்து பிறப்பின் வாக்குத்தத்தம்

நவம்பர் 1962இல், இயற்பியலாளர் ஜான் மௌச்லி, “சராசரியான பையன் அல்லது பெண் கணினியில் தேர்ச்சிபெற முடியாது என்று கருதுவதற்கு எந்த காரணமும் இல்லை” என்று கூறுகிறார்.  மௌச்லியின் கணிப்பு அந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கதாகத் தோன்றியது. ஆனால் அது ஆச்சரியப்படுத்தும் வகையில் துல்லியமானது. இன்று, கணினி அல்லது கையடக்க சாதனத்தைப் பயன்படுத்துவது ஒரு குழந்தை கற்றுக் கொள்ளும் ஆரம்ப திறன்களில் ஒன்றாகும். 
மௌச்லியின் கணிப்பு உண்மையாகிவிட்டாலும், கிறிஸ்துவின் வருகையைப் பற்றி வேதாகமத்தில் கூறப்பட்ட மிக முக்கியமான கணிப்புகள் உள்ளன. உதாரணமாக, மீகா 5:2இல், “எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும் இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது” என்று அறிவிக்கிறது. தாவீதின் வம்சாவளியில் வரும்படிக்கு இயேசுவை பெத்லகேமுக்கு தேவன் அனுப்பினார் (லூக்கா 2:4-7 பார்க்கவும்). 
இயேசுவின் முதல் வருகையை துல்லியமாக முன்னறிவித்த அதே வேதாகமம், அவருடைய இரண்டாம் வருகையையும் உறுதியளிக்கிறது (அப் 1:11). இயேசு தம்முடைய சீஷர்களிடம், அவர்களுக்காக தான் திரும்பி வருவதாக வாக்குப்பண்ணுகிறார் (யோவான் 14:1-4). 
இயேசுவின் பிறப்பைச் சுற்றியுள்ள அனைத்து காரியங்களையும் ஆராயும் இந்த கிறிஸ்மஸ் நன்னாளிலே, அவரை நாம் முகமுகமாய் தரிசிக்கப்போகும் அவருடைய வருகை தியானித்து, அதற்காக நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள பிரயாசப்படுவோம்.  

அனைத்து துதிகளுக்கும் பாத்திரர்

ஃபெரான்டே மற்றும் டீச்சர் குழுவினர், சிறந்த பியானோ டூயட் குழுவாக பலர் கருதுகின்றனர். அவர்களின் கூட்டு முயற்சி அழகான இசையை வருவித்தது. எனவே அவர்களின் பாணி, நான்கு கைகள் ஆனால் ஒரே சிந்தை என்று புகழப்பட்டது. அவர்களின் இசையைக் கேட்கிறவர்கள், அவர்கள் எந்த அளவிற்கு கடினமாகப் பிரயாசப்பட்டிருக்கக்கூடும் என்பதை அறியக்கூடும்.  
ஆனால் அதுமட்டுமில்லை. அவர்கள் அதை நேசித்து செய்கிறார்கள். அவர்கள் 1989இல் ஓய்வு பெற்ற பிறகும், ஃபெரான்டே மற்றும் டீச்சர் எப்போதாவது ஒரு உள்ளூர் பியானோ ஸ்டோரில் அவ்வப்போது எதிர்பாராத இசை நிகழ்ச்சியை நடத்துவார்கள். அவர்கள் இசையை முழுவதுமாய் விரும்பினார்கள்.  
தாவீதும் இசையமைப்பதை விரும்பினார். ஆனால் அவர் தனது பாடலுக்கு ஒரு உயர்ந்த நோக்கத்தைக் கொடுக்க தேவனோடு இணைந்து செயல்பட்டார். அவரது சங்கீதங்கள் அவரது போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையையும், கர்த்தரைச் சார்ந்து வாழ வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் உறுதிப்படுத்துகின்றன. ஆயினும்கூட, அவரது தனிப்பட்ட தோல்விகள் மற்றும் குறைபாடுகளுக்கு மத்தியில், அவர் ஏறெடுத்த துதிகள் இருள் சூழ்ந்த நேரத்திலும் அவருடைய மகத்துவத்தைப் பிரதிபலித்து ஆவிக்குரிய சுருதியை நேர்த்தியாக்கியது. தாவீதின் துதிகளுக்கு பின்பாக இருக்கும் அவருடைய மனதை சங்கீதம் 18:1 பிரதிபிலிக்கிறது: என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். 
மேலும் தாவீது, “துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்” (வச. 3) என்றும் “எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்(டேன்)” (வச. 4) என்று தேவனிடத்தில் திரும்புகிறார். நம்முடைய சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், நாமும் அவ்வாறே நம் தேவனைத் துதிக்கவும் மகிமைப்படுத்தவும் நம் இருதயங்களை உயர்த்துவோம். அவரே சகல துதிகளுக்கும் பாத்திரர்!  

புறப்பட ஆயத்தம்

கொரோனா பெருந்தொற்றின் நாட்களில், தங்கள் நேசத்திற்குரியவர்களை அநேகர் இழந்து வாடினர். நவம்பர் 27, 2020 அன்று, பீ கிரவுடர் என்னும் என்னுடைய 95வயது நிரம்பிய தாயார், கொரோனாவினால் அல்லாமல் இயற்கையாய் மரணமடைந்தபோது நாங்களும் அந்த வரிசையில் சேர நேரிட்டது. மற்ற பல குடும்பங்களைப் போல, தாயின் இழப்பிற்காய் துக்கங்கொண்டாடவோ, அவர்களுடைய வாழ்க்கையை நினைவுகூரவோ அல்லது ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தவோ கூட எங்களால் முடியவில்லை. அதற்குப் பதிலாக, அவர்களுடைய அன்பான செல்வாக்கைக் கொண்டாட நாங்கள் வேறு வழிகளைப் பயன்படுத்தினோம். தேவன் அவர்களை நித்திய வீட்டிற்கு அழைத்தால், அவர்கள் செல்லத் தயாராகவும் ஆர்வமாக இருக்கிறார் என்று அவர்கள் வற்புறுத்தியதில் இருந்து எங்களுக்கு மிகுந்த ஆறுதல் கிடைத்தது. அவர்களுடைய அந்த நம்பிக்கை அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கும் மரணத்தை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதற்கும் சான்றாக அமைந்தது.

பவுல் மரணத்தை எதிர்கொள்ளும்போது, “கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்… ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்; அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்” (பிலிப்பியர் 1:21,23-24) என்று சொல்லுகிறார். பவுல் பூமியில் தரித்திருந்து மற்றவர்களுக்கு உதவிசெய்ய எண்ணினாலும் தேவன் அவரை தன்னுடைய நித்திய வீட்டில் சேர்த்துக்கொண்டார்.

இந்த நம்பிக்கையானது, இம்மைக்குரிய வாழ்க்கையிலிருந்து மறுமையில் நாம் அடியெடுத்து வைக்கும் நம்முடைய வாழ்க்கையை வித்தியாசமாய் அணுகுகிறது. நம்முடைய இந்த நம்பிக்கையானது மற்றவர்களுடைய இழப்பில் அவர்களுக்கு ஆறுதலளிக்கக்கூடிய வகையில் அமைகிறது. நாம் நேசிப்பவர்களின் இழப்பைக் குறித்து நாம் துக்கங்கொண்டாடினாலும், கிறிஸ்தவர்களாகிய நாம் “நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போல” (1 தெசலோனிக்கேயர் 4:13) துக்கிக்க தேவையில்லை. மெய்யான விசுவாசமானது அவரை அறிந்தவர்களின் சொத்து.  

பயத்திற்கான காரணம்

நான் சிறுவனாய் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, எங்கள் பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களை துன்புறுத்தும் செயல்கள் அதிகப்படியாய் நடந்தேறிக்கொண்டிருக்கும். எங்களை துன்புறுத்தும் மூத்த மாணவர்களிடம் நாங்கள் எங்கள் பயத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும்போது, அவர்கள் “நீ பயப்படுகிறாயா? என்னைப் பார்த்தால் உனக்கு பயமாய் இல்லையா? உன்னைக் காப்பாற்ற இங்கு யாருமில்லை!” என்று அச்சுறுத்துவது இன்னும் பயத்தை அதிகரிக்கும்.  
பெரும்பாலான நேரங்களில் ஒரு நன்மையான விளைவுக்காகவே நான் பயப்பட்டேன். ஏற்கனவே இதுபோல அடிவாங்கிய அனுபவம் எனக்கு இருந்ததால், மறுபடியும் அந்த அனுபவம் வேண்டாம் என்று எண்ணினேன். நான் பயத்தால் பீடிக்கப்படும்போது, என்ன செய்யவேண்டும்? யாரை நம்பவேண்டும்? நீங்கள் எட்டு வயது சிறுவனாயிருக்கும்போது, உங்களைக் காட்டிலும் வயதில் மூத்த, பெரிய மற்றும் வலிமையான ஒருவன் உங்களை துன்புறுத்தும்போது நீங்கள் பயத்தால் ஆட்கொள்ளப்படுவது என்பது இயல்பு.  
தாவீது போராட்டத்தை சந்தித்தபோது, அவன் அதை பயத்தோடு அணுகாமல், தைரித்துடன் அணுகினான். அந்த போராட்டங்களை அவன் தனித்து சந்திக்கவில்லை என்பது அவனுக்குத் தெரியும். அவன் எழுதும்போது, “கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?” (சங்கீதம் 118:6) என்று எழுதுகிறான். ஒரு சிறுவனாய் தாவீதின் இந்த மனவுறுதியை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் நான் வளர்ந்து இயேசுவோடு நடக்கும் அனுபவத்தில் தேறிய பின்பு, அவர் எல்லா பயங்களைக் காட்டிலும் பெரியவர் என்பதை புரிந்துகொண்டேன்.  
நாம் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நிஜமே. ஆகிலும் நாம் பயப்படத் தேவையில்லை. இந்த உலகத்தை படைத்த சிருஷ்டிகர் நம்மோடிருக்கிறார். அவர் நமக்கு போதுமானவர்.  

நான் யார்?

ராபர்ட் டோட் லிங்கன் தனது தந்தையும் அமெரிக்க ஜனாதிபதியுமான ஆபிரகாம் லிங்கனின் நிழலிலேயே வளர்ந்தார். ஆனால் அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, ராபர்ட் அவருடைய தந்தையை வைத்தே அடையாளப்படுத்தப்பட்டார். லிங்கனின் நெருங்கிய நண்பரான நிக்கோலஸ் முர்ரே பட்லர், ராபர்ட் சொல்லும்போது, “மக்கள் என்னை ஒரு போர் செயலாளராக பார்க்கவில்லை, ஆபிரகாம் லிங்கனின் மகனாகவே பார்க்க விரும்புகிறார்கள். யாரும் என்னை இங்கிலாந்துக்கு அமைச்சராக பார்க்கவில்லை, அவர்கள் ஆபிரகாம் லிங்கனின் மகனாகவே பார்க்கிறார்கள். புல்மேன் நிறுவனத்தின் தலைவராக யாரும் என்னை பார்க்கவில்லை, அவர்கள் ஆபிரகாம் லிங்கனின் மகனாகவே பார்க்க விரும்புகின்றனர்” என்று சொன்னதாக அறிவித்தார்.

பிரபலமானவர்களின் பிள்ளைகள் மட்டும் இந்த ஏமாற்றத்தை வாழ்க்கையில் அனுபவிப்பதில்லை. நம்மை யாரும் சரியாய் எடைபோடுவதில்லை என்கிற உணர்வு நம் எல்லோருக்குமே இருக்கிறது. ஆயினும், தேவன் நம்மை நேசிக்கிறார் என்பதைக் காட்டிலும் மேலான மதிப்பை நாம் பெற்றுக்கொள்ள முடியாது.

அப்போஸ்தலனாகிய பவுல், நம்முடைய பாவங்களில் நாம் யார் என்பதையும், கிறிஸ்துவுக்குள் நாம் யாராக மாறுகிறோம் என்பதையும் அறிந்திருந்தார். “அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்” (ரோமர் 5:6) என்று பவுல் எழுதுகிறார். நாம் பெலவீனர்களாய் இருந்தபோதிலும் தேவன் நம்மை நேசிக்கிறார். பவுல், “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (வச.8) என்று எழுதுகிறார். தேவன் தன்னுடைய குமாரனை சிலுவைக்கு ஒப்புக்கொடுத்ததின் மூலம் நம்மேல் வைத்த அன்பை விளங்கப்பண்ணினார்.

நாம் யார்? நாம் தேவனுக்கு பிரியமான பிள்ளைகள். அதைக்காட்டிலும் ஒருவன் என்னத்தை எதிர்பார்க்கக்கூடும்?

நீங்கள் சோர்ந்திருக்கும் வேளையில்

தயவுசெய்து அமைதியாக இருக்கவும் கிரீன் பேங்க் என்பது மேற்கு வர்ஜீனியாவின் கரடுமுரடான அப்பலாச்சியன் மலைகளில் உள்ள ஒரு சிறிய சமூகம். இந்த நகரம் அப்பகுதியில் உள்ள பல சிறிய நகரங்களைப் போலிருந்தாலும், ஒரு பெரிய வித்தியாசமுமிருந்தது. அங்கே 142 குடும்பங்களுக்கும் இணைய வசதி கிடையாது. இந்த கிரீன் பாங்கில் உள்ள தொலைநோக்கி வானத்தில் தொடர்ந்து செயல்படுவதற்கு, அருகிலுள்ள வை-பை அல்லது அலைபேசி கோபுரங்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் குறிக்கீட்டைத் தடைசெய்துள்ளனர். அதனால் கிரீன் பேங்க், வட அமெரிக்காவில் தொழில்நுட்ப இரைச்சலற்ற இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

 
சில சமயங்களில், அமைதியான சூழலே முன்னோக்கிச் செல்வதற்கான சிறந்த வழியாகும்; குறிப்பாக தேவனுடனான நமது உறவில். இயேசுவே பிதாவுடன் பேசுவதற்கு அமைதியான, ஒதுங்கிய இடங்களுக்கு சென்றதன் மூலம் நமக்கு முன்மாதிரியை விட்டுச் சென்றுள்ளார். லூக்கா 5:16ல், "அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்” என வாசிக்கிறோம். அவர் அடிக்கடி அவ்வாறு செய்தார். இது கிறிஸ்துவின் வழக்கமான நடைமுறையாகும். மேலும், இது நமக்கு முன்மாதிரியாக அமைகிறது. இவ்வுலகத்தின் சிருஷ்டிகர் தனது பிதாவை இவ்வளவாய் சார்ந்திருந்தால், நாம் எவ்வளவாய் அவரை சார்ந்திருக்க வேண்டியதாயிருக்கிறது! 

சரியான தேவனின் பிரசன்னத்தில் புதுபெலன் பெற அமைதியான இடத்திற்கு செல்லுகையில், அவருடைய பெலத்தால் புதுப்பிக்கப்பட்டு தொடர்ந்து முன்னேற நம்மை ஆயத்தப்படுத்துகிறது. அத்தகைய இடத்தை இன்று நீங்கள் எங்கே காணலாம்? 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தாழ்மையுள்ள ஜோர்ன்

குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் ஜான் இவ்வளவாய் உயர்வாரென்று எவரும் எதிர்பார்க்கவில்லை. அவரது பார்வை குறைபாடும் இன்னும் பிற உடல் நலக்குறைகள் மத்தியிலும், அவர் நார்வேயில் உள்ள தனது கிராமத்தில் உள்ளவர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்தார். உடல் வேதனையின் காரணமாக தூங்க முடியாத இரவுகளில், அவர் ஜெபித்தார். ஜெபத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் நினைத்து, ஒவ்வொரு நபரையும் பேர் பேராகச் சொல்லி, அவர் இதுவரை சந்திக்காத பிள்ளைகளுக்காகக் கூட ஜெபித்தார். ஜனங்கள் அவருடைய கண்ணியத்தைப் பெரிதும் நேசித்து, அவருடைய புத்தியையும் அறிவுரையையும் பெறுவார்கள். நடைமுறையில் அவர்களுக்கு உதவ இயலாவிட்டாலும், அவருடைய அன்பைப் பெற்று அவர்கள் செல்லுகையில் அவர்கள் இன்னும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருவார்கள். ஜோர்ன் இறந்தபோது, அவருக்கு குடும்பம் இல்லாவிட்டாலும், அந்த வட்டாரத்திலேயே அவரது இறுதிச் சடங்கு வெகு விமர்சையாக இருந்தது. அவர் எண்ணியதைக் காட்டிலும் அவரது ஜெபம் மலர்ந்து மிகுந்த பலனைத் தந்தது.

இந்த தாழ்மையுள்ள மனிதர் அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றினார். அவர் தனது சிறையிருப்பிலும் தன் மூலம் தேவனிடம் திரும்பினவர்களை நேசித்தார், அவர்களுக்காக ஜெபித்தார். அவர் ரோமாபுரியின் சிறையிலிருந்தபோது, எபேசுவில் உள்ளவர்களுக்குத் தேவன் “ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை” தரும்படிக்கும், அவர்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் (எபேசியர் 1:17-19) ஜெபித்தார். அவர்கள் இயேசுவை அறிந்து, ஆவியின் வல்லமையால் அன்புடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்று ஏங்கினார்.

ஜானும் அப்போஸ்தலனாகிய பவுலும் தேவனிடம் தங்களை ஊற்றி, தாங்கள் நேசித்தவர்களுக்காக தங்களை அர்ப்பணித்து, ஜெபத்தில் தேவனுக்கு ஊழியம் செய்தனர். இன்று, நாம் பிறரை எவ்வாறு நேசிக்கிறோம், எப்படிச் சேவை செய்கிறோம் என்பதில் அவர்களுடைய உதாரணங்களைச் சிந்திப்போம். 

 

தேவனை குறித்த பிரமிப்பு

ஃபோபியா என்பது சில காரியங்கள் அல்லது சூழ்நிலைகளின் “எதேச்சையான பயம்” என வரையறுக்கப்படுகிறது. அராக்னோஃபோபியா என்பது சிலந்திகள் பற்றிய பயம் (இது பயப்படுவதற்கு முற்றிலும் சாதாரணமான பொதுவான விஷயம் என்று சிலர் சொல்லலாம்). பின்னர் குளோபோஃபோபியா (பலூன்கள் குறித்த பயம்) மற்றும் ஷாக்லெட்டோஃபோபியா (சாக்லேட் குறித்த பயம்) உள்ளது. இதுபோல சில நானூறு பயங்கள் உண்மையானவை மற்றும் ஆவணப்படுத்தப்பட்டவை. எதற்கு வேண்டுமானாலும் நாம் பயப்படக்கூடும் என்றே தோன்றுகிறது.

பத்து கட்டளைகளை பெற்றபின்னர், இஸ்ரவேலர்களின் பயம் குறித்து வேதாகமம் கூறுகிறது, “இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று” (யாத்திராகமம் 20:18). மோசேயோ அவர்களை இந்த சுவாரஸ்யமான வாக்கியங்களால் தேற்றினார்: “பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார்” (வ. 20). “பயப்படாதிருங்கள் ஆனால் பயந்திருங்கள்” என்று சொன்னதில் மோசே தனக்குத்தானே முரண்படுகிறார். உண்மையில், “பயம்” என்பதற்கு எபிரேய பாஷையில் குறைந்தபட்சம் இரண்டு அர்த்தங்கள் உள்ளன.எதைக் குறித்தாகிலும் நடுக்கமுண்டாகும் பயம் மற்றுதேவன் மீதுள்ள பயபக்தியான வியப்பு.

குளோபோஃபோபியா, ஷாக்லெட்டோஃபோபியா போன்ற பயங்கள் நமக்கு சிரிப்புண்டாக்கலாம். ஃபோபியாஸ் பற்றிய மிகவும் கவலைக்கிடமான அடிப்படை என்னவெனில், எல்லா வகையான விஷயங்களுக்கும் நாம் பயப்படக்கூடும். சிலந்திகளைப் போல நம் வாழ்வில் அச்சங்கள் ஊடுருவி, உலகம் ஒரு பயங்கரமான இடமாகத் தோன்றலாம். பயங்கள் மற்றும் அச்சங்களுடன் நாம் போராடும்போது, நம் தேவன் ஒரு வியத்தகு தேவன் என்பதை நினைவூட்டுவது நல்லது, இருளின் மத்தியில் இக்காலத்திற்கேற்ற அவருடைய ஆறுதலை நமக்களிக்கிறார். 

 

வேலையில் மனநிறைவு

தங்கள் பணி அர்த்தமுள்ளதாக மருத்துவர்கள் உணருகிறார்களா என்பதை அறிந்துகொள்ள, வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இரண்டு ஆய்வுகளை மேற்கொண்டனர். இரண்டு ஆய்வுகளும் பெரும்பாலான மருத்துவர்கள் தங்கள் பணியில் மன அழுத்தம் இருந்தாலும் அது அர்த்தமுள்ளதாகவே கருதுவதைக் கண்டறிந்துள்ளனர். அவர்களின் பணி திருப்திக்கான காரணத்தைக் கேட்டபோது, அவர்கள் நிரந்தரமான வேலை, பொறுப்புணர்வு, சுதந்திரம், வீட்டுவசதி, சக ஊழியர்கள் அவர்களை உணர்ந்த விதம் மற்றும் அவர்களின் திறன்களைப் பயன்படுத்துவதற்கும், கற்பிப்பதற்கும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் கிடைத்த வாய்ப்புகள் போன்ற காரணங்களைச் சொன்னார்கள்.

பிரசங்கியின் ஆசிரியரும் வேலையின் அர்த்தத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார். அவர், "மனுஷன் சூரியனுக்குக் கீழே இருக்கிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன?" (வ.22) என்று கேட்கிறார். நாம் நாள் முழுவதும் "அலுப்புடனும்" "துக்கத்துடனும்" வேலை செய்கிறோம், பின்னர் இரவிலும் நம் "மனதுக்கு இளைப்பாறுதலில்லை" (வ.23). வேலை "மாயையே" என்று அவர் முடிக்கிறார் (வ.23). இருப்பினும், மனுஷன் புசித்துக் குடித்து, தன்பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப்பார்க்திலும். அவனுக்கு ஒரு நன்மையுமில்லை இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது (வ.24) என்பதை உணர்கிறார். அவர் இல்லாமல் யாரால் உண்ண முடியும் அல்லது இன்பம் காண முடியும்? (வ.25). வீட்டிலோ அல்லது வெளியிலோ உடல் உழைப்பு அல்லது மன முயற்சியுடன் வேலை செய்வது ஒரு கெளரவம். நம்மில் பெரும்பாலோர் வேலை நாளின் முடிவில் திருப்தியைத் தேடுகிறோம். சிலர் இந்த திருப்தியைச் சேவை, பண ஆதாயம் அல்லது நட்பின் மூலம் கண்டடைய முயலலாம், இன்னும் பலர் வேலையைத் தேவன் கொடுத்த பாக்கியமென்று உணருமட்டும் வருத்தத்தோடு பிரயாசப்படுவார்கள் (ஆதியாகமம் 2:15). நாம் அதிருப்தி கொள்ளுகையில், நாம் தேவனிடம் செல்லலாம். ஏனெனில், எந்த வேலையும் நமக்கு முழு மனநிறைவை அளிக்காது என்பதுதான் உண்மை, ஆனால் நாம் செய்யும் வேலையில் மெய்யான அர்த்தத்தைக் கண்டறியத் தேவன் உதவுவார். ஆன் ஹரிகீர்த்தன்