எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

பில் கிரவுடர்கட்டுரைகள்

பயத்திற்கான காரணம்

நான் சிறுவனாய் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, எங்கள் பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களை துன்புறுத்தும் செயல்கள் அதிகப்படியாய் நடந்தேறிக்கொண்டிருக்கும். எங்களை துன்புறுத்தும் மூத்த மாணவர்களிடம் நாங்கள் எங்கள் பயத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும்போது, அவர்கள் “நீ பயப்படுகிறாயா? என்னைப் பார்த்தால் உனக்கு பயமாய் இல்லையா? உன்னைக் காப்பாற்ற இங்கு யாருமில்லை!” என்று அச்சுறுத்துவது இன்னும் பயத்தை அதிகரிக்கும். 

பெரும்பாலான நேரங்களில் ஒரு நன்மையான விளைவுக்காகவே நான் பயப்பட்டேன். ஏற்கனவே இதுபோல அடிவாங்கிய அனுபவம் எனக்கு இருந்ததால், மறுபடியும் அந்த அனுபவம் வேண்டாம் என்று எண்ணினேன். நான் பயத்தால் பீடிக்கப்படும்போது, என்ன செய்யவேண்டும்? யாரை நம்பவேண்டும்? நீங்கள் எட்டு வயது சிறுவனாயிருக்கும்போது, உங்களைக் காட்டிலும் வயதில் மூத்த, பெரிய மற்றும் வலிமையான ஒருவன் உங்களை துன்புறுத்தும்போது நீங்கள் பயத்தால் ஆட்கொள்ளப்படுவது என்பது இயல்பு. 

தாவீது போராட்டத்தை சந்தித்தபோது, அவன் அதை பயத்தோடு அணுகாமல், தைரித்துடன் அணுகினான். அந்த போராட்டங்களை அவன் தனித்து சந்திக்கவில்லை என்பது அவனுக்குத் தெரியும். அவன் எழுதும்போது, “கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?” (சங்கீதம் 118:6) என்று எழுதுகிறான். ஒரு சிறுவனாய் தாவீதின் இந்த மனவுறுதியை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் நான் வளர்ந்து இயேசுவோடு நடக்கும் அனுபவத்தில் தேறிய பின்பு, அவர் எல்லா பயங்களைக் காட்டிலும் பெரியவர் என்பதை புரிந்துகொண்டேன். 

நாம் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நிஜமே. ஆகிலும் நாம் பயப்படத் தேவையில்லை. இந்த உலகத்தை படைத்த சிருஷ்டிகர் நம்மோடிருக்கிறார். அவர் நமக்கு போதுமானவர்.

நான் யார்?

ராபர்ட் டோட் லிங்கன் தனது தந்தையும் அமெரிக்க ஜனாதிபதியுமான ஆபிரகாம் லிங்கனின் நிழலிலேயே வளர்ந்தார். ஆனால் அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, ராபர்ட் அவருடைய தந்தையை வைத்தே அடையாளப்படுத்தப்பட்டார். லிங்கனின் நெருங்கிய நண்பரான நிக்கோலஸ் முர்ரே பட்லர், ராபர்ட் சொல்லும்போது, “மக்கள் என்னை ஒரு போர் செயலாளராக பார்க்கவில்லை, ஆபிரகாம் லிங்கனின் மகனாகவே பார்க்க விரும்புகிறார்கள். யாரும் என்னை இங்கிலாந்துக்கு அமைச்சராக பார்க்கவில்லை, அவர்கள் ஆபிரகாம் லிங்கனின் மகனாகவே பார்க்கிறார்கள். புல்மேன் நிறுவனத்தின் தலைவராக யாரும் என்னை பார்க்கவில்லை, அவர்கள் ஆபிரகாம் லிங்கனின் மகனாகவே பார்க்க விரும்புகின்றனர்” என்று சொன்னதாக அறிவித்தார்.

பிரபலமானவர்களின் பிள்ளைகள் மட்டும் இந்த ஏமாற்றத்தை வாழ்க்கையில் அனுபவிப்பதில்லை. நம்மை யாரும் சரியாய் எடைபோடுவதில்லை என்கிற உணர்வு நம் எல்லோருக்குமே இருக்கிறது. ஆயினும், தேவன் நம்மை நேசிக்கிறார் என்பதைக் காட்டிலும் மேலான மதிப்பை நாம் பெற்றுக்கொள்ள முடியாது.

அப்போஸ்தலனாகிய பவுல், நம்முடைய பாவங்களில் நாம் யார் என்பதையும், கிறிஸ்துவுக்குள் நாம் யாராக மாறுகிறோம் என்பதையும் அறிந்திருந்தார். “அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்” (ரோமர் 5:6) என்று பவுல் எழுதுகிறார். நாம் பெலவீனர்களாய் இருந்தபோதிலும் தேவன் நம்மை நேசிக்கிறார். பவுல், “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (வச.8) என்று எழுதுகிறார். தேவன் தன்னுடைய குமாரனை சிலுவைக்கு ஒப்புக்கொடுத்ததின் மூலம் நம்மேல் வைத்த அன்பை விளங்கப்பண்ணினார்.

நாம் யார்? நாம் தேவனுக்கு பிரியமான பிள்ளைகள். அதைக்காட்டிலும் ஒருவன் என்னத்தை எதிர்பார்க்கக்கூடும்?

அமைதியின் ஜெபம்

கிரீன் பேங்க் என்பது மேற்கு வர்ஜீனியாவின் கரடுமுரடான அப்பலாச்சியன் மலைகளில் உள்ள ஒரு சிறிய சமூகம். இந்த நகரம் அப்பகுதியில் உள்ள பல சிறிய நகரங்களை போலிருந்தாலும், ஒரு பெரிய வித்தியாசமுமிருந்தது. அங்கே 142 குடும்பங்களுக்கும் இணைய வசதி கிடையாது. இந்த கிரீன் பாங்கில் உள்ள தொலைநோக்கி வானத்தில் தொடர்ந்து செயல்படுவதற்கு, அருகிலுள்ள வை-பை அல்லது அலைபேசி கோபுரங்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் குறிக்கீட்டை தடைசெய்துள்ளனர். அதனால் கிரீன் பேங்க், வட அமெரிக்காவில் தொழில்நுட்ப இரைச்சலற்ற இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது .

 

சில சமயங்களில், அமைதியான சூழலே முன்னோக்கிச் செல்வதற்கான சிறந்த வழியாகும்; குறிப்பாக தேவனுடனான நமது உறவில். இயேசுவே பிதாவுடன் பேசுவதற்கு அமைதியான, ஒதுங்கிய இடங்களுக்கு சென்றதன் மூலம் நமக்கு முன்மாதிரியை விட்டுச் சென்றுள்ளார். லூக்கா 5:16ல், “அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்” (லூக்கா 5:16) என வாசிக்கிறோம். அவர் அடிக்கடி அவ்வாறு செய்தார். இது கிறிஸ்துவின் வழக்கமான நடைமுறையாகும். மேலும், இது நமக்கு சரியான முன்மாதிரியாக அமைகிறது. இவ்வுலகத்தின் சிருஷ்டிகர் தனது பிதாவை இவ்வளவாய் சார்ந்திருந்தால், நாம் எவ்வளவாய் அவரை சார்ந்திருக்க வேண்டியதாயிருக்கிறது!

 

தேவனின் பிரசன்னத்தில் புதுபெலன் பெற அமைதியான இடத்திற்கு செல்லுகையில், அவருடைய பெலத்தால் புதுப்பிக்கப்பட்டு தொடர்ந்து முன்னேற நம்மை ஆயத்தப்படுத்துகிறது. அத்தகைய இடத்தை இன்று நீங்கள் எங்கே காணலாம்?

தியாகத்தை நினைவுகூருதல்

ஞாயிற்றுக்கிழமை காலை வழிபாட்டைத் தொடர்ந்து, எனது மாஸ்கோ ஹோஸ்ட் என்னை கோட்டைக்கு வெளியே உள்ள ஒரு உணவகத்தில் மதிய உணவுக்கு அழைத்துச் சென்றார். வந்துசேர்ந்தவுடன், திருமண உடையில் புதுமணத் தம்பதிகள் வரிசையாக கிரெம்ளின் சுவருக்கு வெளியே யாரென்று தெரியாத இராணுவ வீரரின் கல்லறையை நெருங்குவதை நாங்கள் கவனித்தோம். அவர்களுடைய அந்த மகிழ்ச்சியான நாளில், அந்த மகிழ்ச்சிக்கு காரணமான இராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும்பொருட்டு அவ்வாறு செய்வது அவர்களின் வழக்கம். அந்த புதுமணத் தம்பதிகள் அங்கே சென்று கல்லறையில் மலர் வளையம் வைத்து, புகைப்படம் எடுத்துக்கொள்வதை பார்க்க ஆச்சரியமாய் இருந்தது. 

நம்முடைய வாழ்க்கையில் நிறைவை உண்டாக்கும்பொருட்டு தியாகமாய் தங்களை அர்ப்பணித்தவர்களுக்கு நன்றிசெலுத்துவதற்கு நாமெல்லாரும் கடமைப்பட்டிருக்கிறோம். அந்த தியாகங்கள் அனைத்தும் முக்கியமற்றவைகள் அல்ல, அதேநேரத்தில் அவைகள் மிகவும் முக்கியமானவைகளும் அல்ல. சிலுவையின் அடிவாரத்தில் இயேசு நமக்காக செய்த பெரிய தியாகத்தைப் பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கை எந்த அளவிற்கு முழுமையாக இரட்சகருக்குக் கடன்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள துவங்குகிறோம். 

கர்த்தருடைய பந்தியில் இடம்பெற்றிருக்கும் அப்பமும் திராட்சை ரசமும், இயேசுவின் சிலுவை தியாகத்தை நம்மை நினைவுகூரச்செய்கிறது. பவுல், “நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்” (1 கொரிந்தியர் 11:26) என்று எழுதுகிறார். கர்த்தருடைய பந்தியை அநுசரிக்கும் அந்த நாள் முழுவதிலும், இயேசு நமக்குள்ளும் நமக்காகவும் செய்த தியாகத்தை நாம் நினைவுகூரப் பிரயாசப்படுவோம்.

கதை சொல்

அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மகன் ராபர்ட் டோட் லிங்கன், மூன்று முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றார்: அவரது சொந்த தந்தையின் மரணம் மற்றும் ஜனாதிபதிகள் ஜேம்ஸ் கார்பீல்ட் மற்றும் வில்லியம் மெக்கின்லியின் படுகொலைகள்.

ஆனால் வரலாற்றின் மிக முக்கியமான நான்கு நிகழ்வுகளில் அப்போஸ்தலனாகிய யோவான் பங்கேற்றிருக்கிறார்: இயேசுவின் கடைசி இராப்போஜனம், கெத்சமெனேயில் கிறிஸ்துவின் பாடுகள், சிலுவையில் அறையப்படுதல் மற்றும் அவரது உயிர்த்தெழுதல். இந்த சம்பவங்களை அவர் நேரில் சாட்சியிட்டதற்கான காரணத்தை யோவான் நன்கு அறிந்திருந்தார். யோவான் 21:24ல் “அந்தச் சீஷனே இவைகளைக்குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்” என்று யோவான் எழுதுகிறார். 

தன்னுடைய 1 யோவான் நிருபத்தில் யோவான் இதை மறுவுறுதி செய்துள்ளார். அவர் “ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப் பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்” (1:1) என்று எழுதுகிறார். யோவான் தான் நேரில் கண்ட சாட்சியங்களை எழுதும்படிக்கு ஏவப்படுகிறார். ஏன்? “நீங்கள் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்” (வச. 3) என்று பதிலளிக்கிறார். 

நம் வாழ்வின் நிகழ்வுகள் ஆச்சரியமானதாகவோ அல்லது சாதாரணமானதாகவோ இருக்கலாம், ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும் தேவன் அவற்றை ஒழுங்குபடுத்தி நம்மை சாட்சியாய் நிறுத்துகிறார். கிறிஸ்துவின் அருளிலும் ஞானத்திலும் நாம் இளைப்பாறும்போது, வாழ்க்கையின் ஆச்சரியமான தருணங்களிலும் அவருக்காகப் பேசுவோம்.

நீலக்கல் திருச்சபை மணிகள்

நீலக்கல் பாறை என்பது ஆச்சரியமான ஒரு பாறை. அதை அடைக்கும்போது, அதில் சிதறும் சில நீலக்கற்கள் இசையொலி ஏற்படுத்தும். “மணியோசை” என்று பொருள்படும் மேன்க்ளோசோக் என்ற ஒரு வெல்ஷ் கிராமத்தில், பதினெட்டாம் நூற்றாண்டு வரை இந்த நீலக்கற்களை தேவாலய மணிகளாகப் பயன்படுத்தினர். இங்கிலாந்தின் பிரபலமான ஸ்டோன்ஹென்ச் என்ற நீலக்கற்பாறை மிச்சங்கள், இசையை ஏற்படுத்தும் விதமான அமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க தோன்றுகிறது. சில ஆராய்ச்சியாளர்கள், ஸ்டோன்ஹென்சில் இடம்பெற்றுள்ள இந்த நீலக்கற்கள் அதிலிருந்து இருநூறு மைல் தொலைவில் அமைந்திருந்த இந்த மேன்க்ளோசோக் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கணிக்கிறார்கள். 

இசையை ஏற்படுத்தும் இந்த நீலக்கற்கள் என்பது தேவனுடைய படைப்பில் ஒரு ஆச்சரியமாய் திகழ்கிறது. இயேசு குருத்தோலை ஞாயிற்றில் எருசலேமுக்குள் பிரவேசிக்கும்போது சொன்ன காரியத்தை நினைவுபடுத்துகிறது. ஜனங்கள் இயேசுவைச் சுற்றிலும் கூச்சலிட, அவர்களை அதட்டும்படிக்கு மார்க்கத் தலைவர்கள் இயேசுவை கேட்கிறார்கள். இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக, “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 19:40) என்கிறார். 

நீலக்கற்களினால் இசையெழுப்பக்கூடும் என்றால், கல்லுகளே சிருஷ்டிகரை கூப்பிடும் என்று இயேசு சொல்லுவதை கருத்தில்கொண்டால், நம்மை உண்டாக்கி மீட்டுக்கொண்ட நம்முடைய நேசருக்கு எவ்வளவாய் நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்! அவர் நம் அனைத்து துதிகளுக்கும் பாத்திரர். அவருக்கு துதி செலுத்த பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருள்செய்வாராக. அனைத்து சிருஷ்டியும் அவரை பணிகின்றன.

நண்பர்கள் மற்றும் எதிரிகள்

அறிஞர் கென்னத்.இ.பெய்லி, சர்வதேச கூடுகையில் ஒரு வித்தியாசமான போக்கைப் பின்பற்றிய ஒரு ஆப்பிரிக்க நாட்டின் தலைவரைப் பற்றிக் கூறினார். அவர் இஸ்ரேலுடனும் அதைச் சுற்றியுள்ள நாடுகளுடனும் நல்ல உறவை ஏற்படுத்தினார். இந்த ஆபத்தான சமநிலையை அவரது நாடு எவ்வாறு கையாள்கிறது என்று யாரோ அவரிடம் கேட்டபோது, ​​அவர் "எங்கள் நண்பர்களை நாங்கள் தேர்வு செய்கிறோம். எங்கள் எதிரிகளை [எங்களுக்காக] தேர்ந்தெடுக்க எங்கள் நண்பர்களை நாங்கள் அனுமதிப்பதில்லை” என்று பதிலளித்தார்.

அது புத்திசாலித்தனமானது மற்றும் யதார்த்தமான நடைமுறை. அந்த ஆப்பிரிக்க நாடு சர்வதேச அளவில் முன்மாதிரியாக இருந்ததை போல, பவுல் தன் வாசகர்களும் தனிப்பட்ட விதத்தில் செய்ய ஊக்குவித்தார். கிறிஸ்துவால் மாற்றப்பட்ட வாழ்க்கையின் குணாதிசயங்களைப் பற்றிய நீண்ட விளக்கத்தின் மத்தியில், “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். ரோமர் 12:18” என்றார். நாம் பிறரிடம் கொண்டிருக்கும் உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்படி, நம் எதிரிகளை நாம் நடத்தும் விதம் கூட (வவ. 20-21) தேவன் மீதான நமது நம்பிக்கை மற்றும் சார்ந்திருப்பை வெளிப்படுத்துகிறதென வலியுறுத்துகிறார்.

எல்லோருடனும் சமாதானமாக வாழ்வது எப்போதும் சாத்தியமாகாது (ஆகையால்தான், பவுல் "கூடுமானால்" என்கிறார்). ஆனால் தேவனுடைய ஞானம் நம் வாழ்க்கையை வழிநடத்த அனுமதிப்பதே இயேசுவின் விசுவாசிகளாகிய நமது பொறுப்பு (யாக்கோபு 3:17-18), அதனால் நம்மைச் சுற்றியுள்ளவர்களோடு சமாதானம் செய்பவர்களாக நாம் உறவாடுகிறோம் (மத்தேயு 5:9). சமாதான பிரபுவைக் கௌரவிக்க இதைவிட வேறு என்ன வழி இருக்க முடியும்?

தகவலும் ஆதாரமும்

டோரிஸ் கியர்ன்ஸ் குட்வின் ஆபிரகாம் லிங்கனைப் பற்றி ஒரு புத்தகம் எழுத முடிவு செய்தபோது, ​​அமெரிக்காவின் பதினாறாவது ஜனாதிபதியைப் பற்றி ஏற்கனவே சுமார் பதினான்காயிரம் புத்தகங்கள் எழுதப்பட்டிருப்பது அவரை மிரட்டியது. இந்த அன்புத் தலைவரைப் பற்றி என்ன சொல்ல முடியும்? தளராத குட்வின் பணியின் விளைவுதான் A Team of Rivals: The Political Genius of Abraham Lincoln. லிங்கனின் தலைமைத்துவ பாணி பற்றிய அவரது புதிய கண்ணோட்டம், அதைச் சிறந்த மற்றும் மதிப்பாய்வு செய்யப்பட்ட புத்தகமாக உருவாக்கியது.

அப்போஸ்தலராகிய யோவான் இயேசுவின் ஊழியம் மற்றும் பாடுகள் பற்றிய தமது சுவிசேஷத்தை எழுதுகையில், வித்தியாசமான சவாலை எதிர்கொண்டார். யோவானின் நற்செய்தியின் இறுதி வசனம், "இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென்." (யோவான் 21:25) என்கிறது. யோவானிடம் அதிகமான காரியங்கள் இருந்தன. 

எனவே யோவானின் உத்தியானது, அவருடைய சுவிசேஷம் முழுவதும் இயேசுவின் "நானே" கூற்றுக்களை ஆதரிக்கும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட அற்புதங்களில் (அடையாளங்கள்) மட்டுமே கவனம் செலுத்துவதாகும். ஆயினும்கூட, இந்த உத்திக்குப் பின்னால் இந்த நித்திய நோக்கம் இருந்தது: "இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது " (வச. 31). மலைபோன்ற ஆதாரங்களில், இயேசுவை நம்புவதற்கு யோவான் ஏராளமான காரணங்களைச் சொன்னார். இன்று அவரைப் பற்றி யாரிடம் சொல்ல முடியும்?

மக்கள் கூட்டம்

தத்துவஞானியும் எழுத்தாளருமான ஹேன்னா அரெண்ட் (1906-75), “சரித்திரத்தில் மனிதர்கள் மிகவும் பலம்வாய்ந்த பேரரசர்களையும் எதிர்த்து அவர்கள் முன்பு தலைவணங்க மறுத்திருக்கின்றனர்” என்று குறிப்பிடுகிறார். மேலும், “அதில் சிலர் மக்கள் கூட்டத்தை எதிர்க்கவும், கலகக்கார கூட்டத்திற்கு முன் துணிச்சலாய் நிற்கவும், ஆயுதமில்லாமல் அவர்களின் வெறித்தனமான செய்கைகளை மேற்கொள்ளவும் துணிந்திருக்கின்றனர்” என்று சொல்லுகிறார். அரெண்ட் ஒரு யூத பெண்மணியாக, அவளுடைய சொந்த தேசமான ஜெர்மனியில் இதை நேரில்  பார்த்திருக்கிறார். மக்களால் புறக்கணிக்கப்படுவது என்பது பயங்கரமான ஒரு காரியம். 

பவுல் அப்போஸ்தலரும் அதுபோன்ற ஒரு புறக்கணிப்பை அனுபவித்திருக்கிறார். பரிசேயனாகவும் யூத போதகராகவும் பயிற்சிபெற்ற அவர், உயிர்த்தெழுந்த இயேசுவை சாட்சியிட்டபோது, அவருடைய வாழ்க்கை தலைகீழாய் மாறியது. கிறிஸ்தவர்களை துன்பப்படுத்தும்பொருட்டு தமஸ்குவுக்கு பவுல் கடந்துபோகிறான் (அப்போஸ்தலர் 9). அவருடைய மனந்திரும்புதலுக்கு பின்னர், அவர் தம்முடைய சொந்த ஜனத்தினால் புறக்கணிக்கப்பட்டார். அவர்களால் அவருக்கு நேரிட்ட துன்பங்களை பவுல் தன்னுடைய 2 கொரிந்தியர் நிருபத்தில் குறிப்பிட்டுள்ளார். அவற்றில், “அடிகள்” மற்றும் “காவல்கள்” ஆகியவைகள் உள்ளடங்கும் (6:5).  

அந்த புறக்கணிப்பை கோபத்துடனும் கசப்புடனும் கையாளுவதற்கு பதிலாக, அவர்கள் தேவனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பவுல் விரும்பினார். அவர் எழுதும்போது, “எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது... மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே” (ரோமர் 9:1-3) என்று சொல்லுகிறார். 

தேவன் நம்மை அவருடைய குடும்பத்தில் வரவேற்கும்போது, நம்முடைய சத்துருக்களையும் அவருடைய குடும்பத்தில் சேர்த்துக்கொள்ளட்டும். 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

என்னால் உன்னை பார்க்கமுடிகிறது

கண்கண்ணாடி நிபுணர், மூன்று வயது ஆண்ட்ரியாஸ_க்கு முதல் கண்கண்ணாடியை போடுவதற்கு உதவினார். அதை அணிவித்த பின்பு, “கண்ணாடியில் பார்” என்றாள். ஆண்ட்ரியாஸ் அவளுடைய உருவத்தை கண்ணாடியில் பார்த்தாள். பின்பு அவள் மகிழ்ச்சியான முகத்துடன், தன் தந்தையிருந்த திசை நோக்கித் திரும்பினாள். பின்னர் ஆண்ட்ரியாஸின் தந்தை தனது மகனின் கன்னங்களில் வழிந்த கண்ணீரை மெதுவாக துடைத்து, “என்ன ஆச்சு?” என்று கேட்டார். ஆண்ட்ரியாஸ் தன் தந்தையின் கழுத்தைச் சுற்றிக் கொண்டாள். “என்னால் உங்களை பார்க்கமுடிகிறது.” அவள் சற்று பின்வாங்கி, தலையை சாய்த்து, தந்தையின் கண்களைப் பார்த்து, “என்னால் உங்களை பார்க்கமுடிகிறது” என்று சொன்னாள்.

நான் ஜெபத்தோடு வேதத்தை வாசிக்கும்போது, “அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமான” (கொலோசெயர் 1:15) ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை நோக்குவதற்கு பரிசுத்த ஆவியானவர் நம் கண்களை திறந்தருளுவாராக. இருப்பினும், வேதத்தின் மூலம் நாம் அறிவில் வளரும்போது, ஆவியானவரால் நம் பார்வை தெளிவடைந்தாலும், நித்தியத்தின் இந்தப் பக்கத்தில் தேவனின் எல்லையற்ற அபரிமிதத்தின் ஒரு காட்சியை மட்டுமே நாம் இன்னும் காண முடியும். பூமியில் நம் காலம் முடிந்ததும் அல்லது இயேசுவின் வருகை வரும்போது, நாம் அவரைத் தெளிவாகக் காண்போம் (1 கொரிந்தியர் 13:12). 

கிறிஸ்துவை முகமுகமாய் நாம் சந்தித்து அவர் நம்மை அறிந்திருக்கிறதுபோல நாமும் அவரை அறியும் அந்த மகிழ்ச்சி நிறைந்த தருணத்தில் நமக்கு சிறப்பு கண்ணாடிகள் தேவையில்லை. நம்முடைய அன்பான மற்றும் உயிருள்ள இரட்சகரை நாம் உற்று நோக்கி, “இயேசுவே, என்னால் உம்மை பார்;க்க முடிகிறது” என்று சொல்லும் வரை, நாம் உறுதியாக நிற்க வேண்டிய விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகியவற்றால் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் கிரியை செய்வார். “இயேசுவே, என்னால் உம்மை பார்;க்க முடிகிறது!”

ஒளிந்திருக்கும் பிரம்மாண்டம்

“தி அட்லாண்டிக்” என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆர்தர் ப்ரூக்ஸ் அப்புத்தகத்தை எழுதும்போது தைவானில் அமைந்துள்ள தேசிய அரண்மனை அருங்காட்சியகத்திற்குச் சென்றதைக் குறித்துக் கூறுகிறார். இது உலகின் மிகப்பெரிய சீனக் கலைகளின் தொகுப்புகளில் ஒன்றாகும். அருங்காட்சியக வழிகாட்டி கேட்டார், “இன்னும் வரையப்படாத ஒரு ஓவியத்தை கற்பனை செய்யும்படிக்கு உங்களிடத்தில் கேட்டால், நீங்கள் என்ன கற்பனை செய்வீர்கள்?” அதற்கு நான், “ஒரு வெற்று கேன்வாஸ்,” என்று பதிலளித்தேன். ஆனால் அந்த வழிகாட்டி, “ அதை நாம் வேறுவிதத்திலும் பார்க்கக்கூடும். அதில் ஓவியம் ஏற்கனவே இடம்பெற்றுள்ளது, கலைஞர்களின் வேலை வெறுமனே அதை வெளிக்கொண்டுவருவதே” என்று சொன்னார். 

எபேசியர் 2:10 இல், கைவேலை என்ற வார்த்தை, சில சமயங்களில் “வேலைப்பாடு" அல்லது “தலைசிறந்த படைப்பு" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இது கிரேக்க வார்த்தையான “பொய்மா” என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இதிலிருந்து நாம் கவிதை என்று அர்த்தங்கொடுக்கும் “பொயட்ரி” என்ற ஆங்கில வார்த்தையை பெறுகிறோம். தேவன் நம்மை கலைப் படைப்புகளாகவும் வாழும் கவிதைகளாகவும் படைத்துள்ளார். நம்முடைய ஓவியங்கள் தெளிவில்லாமல் இருந்தது. “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்” (வச. 1). அந்த அருங்காட்சியக வழிகாட்டியின் வார்த்தைகளை சுருக்கமாகச் சொல்வதானால், “ஓவியம் ஏற்கனவே ஒளிந்திருக்கிறது, ஒரு தெய்வீகமான ஓவியனின் வேலை அதை உயிர்பெறச்செய்வதே” என்பதாகும். அவருடைய கலைப்படைப்புகளாகிய நம்மை “தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய்… நம்மை உயிர்ப்பித்தார்” (வச. 4-5).

நாம் பாடுகள் மற்றும் உபத்திரவங்களின் மத்தியில் கடந்துசெல்லும்போது, நம்முடைய தெய்வீக ஓவியர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதில் திருப்திகொள்ளலாம்: “ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்” (பிலிப்பியர் 2:13). உங்களில் இருக்கும் ஓவியத்தை வெளிக்கொண்டுவர தேவன் கிரியை நடப்பித்துக்கொண்டிருக்கிறார்.

அழகான வடிவமைப்பு

ஒரு சர்வதேச ஆராய்ச்சிக் குழு, உழவாரன் என்னும் ஒரு குறிப்பிட்ட பறவையின் அசைவுகளைப் பிரதிபலிக்கும் ஃபிளாப்பிங்-விங் ட்ரோனை உருவாக்கியுள்ளது. இந்த உழவாரன் குருவிகள் மணிக்கு தொண்ணூறு மைல்கள் வரை பறக்கவும், வட்டமடிக்கவும், மூழ்கவும், விரைவாக திரும்பவும், திடீரென்று நிறுத்தவும் முடியும். இருப்பினும், ஆர்னிதோப்டர் ட்ரோன் என்னும் பறக்கும் எந்திரம் இன்னும் பறவையை விட தாழ்வானது. பறவைகளுக்கு “பல தசைகள் உள்ளன, அவை நம்பமுடியாத வேகத்தில் பறக்கவும், இறக்கைகளை மடக்கவும், திருப்பவும், இறகு துளைகளைத் திறக்கவும் மற்றும் ஆற்றலைச் சேமிக்கவும் உதவுகின்றன” என்று ஒரு ஆராய்ச்சியாளர் கூறுகிறார். அவரது ஆய்வின் முடிவில், “பறக்கும் உயிரின விமானத்தின் 10 சதவிகிதத்தை” மட்டுமே எங்களால் கண்டறிய முடிந்தது என்று அவர் ஒப்புக்கொள்கிறார். 

இந்த உலகத்தில் வாழும் உயிரினங்களுக்கு தேவன் அனைத்து சிறப்பியல்புகளையும் அருளியிருக்கிறார். அவற்றை தன்மைகளை ஆய்வுசெய்து அறிந்துகொள்வது நம்முடைய ஞானத்திற்கு பலம் சேர்க்கும். வாழ்க்கைக்கு தேவையான வாழ்வாதாரங்களை சேகரிக்கும் எறும்பு, தங்கள் வீட்டை கன்மலையில் தோண்டிவைக்கும் குழிமுசல்கள், கூட்டமாய் அணிவகுத்து வரும் வெட்டுக்கிளிகள் (நீதிமொழிகள் 30:25-27) ஆகியவைகள் நமக்கு விலைமதிப்பற்ற பாடங்களை கற்பிக்கிறது. 

தேவன் தன்னுடைய ஞானத்தினாலே பூமியை சிருஷ்டித்தார் என்று வேதம் சொல்லுகிறது (எரேமியா 10:12), அவருடைய அன்றாட சிருஷ்டிப்பின் இறுதியில் அவர் தன்னுடைய படைப்பை நல்லது” என்று கண்டார் (ஆதியாகமம் 1:4,10,12,18,21,25,31). “வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும்” (வச. 20) சிருஷ்டித்த அதே தேவன், அவற்றை புரிந்துகொள்வதற்கான ஞானத்தையும் நமக்கு அருளியிருக்கிறார். இன்று, அவருடைய இந்த அழகான இயற்கை படைப்பிலிருந்து நாம் கற்றுக்கொள்ள பிரயாசப்படுவோம்.