எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

பில் கிரவுடர்கட்டுரைகள்

கதை சொல்

அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மகன் ராபர்ட் டோட் லிங்கன், மூன்று முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றார்: அவரது சொந்த தந்தையின் மரணம் மற்றும் ஜனாதிபதிகள் ஜேம்ஸ் கார்பீல்ட் மற்றும் வில்லியம் மெக்கின்லியின் படுகொலைகள். 
ஆனால் வரலாற்றின் மிக முக்கியமான நான்கு நிகழ்வுகளில் அப்போஸ்தலனாகிய யோவான் பங்கேற்றிருக்கிறார்: இயேசுவின் கடைசி இராப்போஜனம், கெத்சமெனேயில் கிறிஸ்துவின் பாடுகள், சிலுவையில் அறையப்படுதல் மற்றும் அவரது உயிர்த்தெழுதல். இந்த சம்பவங்களை அவர் நேரில் சாட்சியிட்டதற்கான காரணத்தை யோவான் நன்கு அறிந்திருந்தார். யோவான் 21:24ல் “அந்தச் சீஷனே இவைகளைக்குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்” என்று யோவான் எழுதுகிறார்.  
தன்னுடைய 1 யோவான் நிருபத்தில் யோவான் இதை மறுவுறுதி செய்துள்ளார். அவர் “ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப் பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்” (1:1) என்று எழுதுகிறார். யோவான் தான் நேரில் கண்ட சாட்சியங்களை எழுதும்படிக்கு ஏவப்படுகிறார். ஏன்? “நீங்கள் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்” (வச. 3) என்று பதிலளிக்கிறார்.  
நம் வாழ்வின் நிகழ்வுகள் ஆச்சரியமானதாகவோ அல்லது சாதாரணமானதாகவோ இருக்கலாம், ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும் தேவன் அவற்றை ஒழுங்குபடுத்தி நம்மை சாட்சியாய் நிறுத்துகிறார். கிறிஸ்துவின் அருளிலும் ஞானத்திலும் நாம் இளைப்பாறும்போது, வாழ்க்கையின் ஆச்சரியமான தருணங்களிலும் அவருக்காகப் பேசுவோம். 

நீலக்கல் திருச்சபை மணிகள்

 நீலக்கல் பாறை என்பது ஆச்சரியமான ஒரு பாறை. அதை அடைக்கும்போது, அதில் சிதறும் சில நீலக்கற்கள் இசையொலி ஏற்படுத்தும். “மணியோசை” என்று பொருள்படும் மேன்க்ளோசோக் என்ற ஒரு வெல்ஷ் கிராமத்தில், பதினெட்டாம் நூற்றாண்டு வரை இந்த நீலக்கற்களை தேவாலய மணிகளாகப் பயன்படுத்தினர். இங்கிலாந்தின் பிரபலமான ஸ்டோன்ஹென்ச் என்ற நீலக்கற்பாறை மிச்சங்கள், இசையை ஏற்படுத்தும் விதமான அமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க தோன்றுகிறது. சில ஆராய்ச்சியாளர்கள், ஸ்டோன்ஹென்சில் இடம்பெற்றுள்ள இந்த நீலக்கற்கள் அதிலிருந்து இருநூறு மைல் தொலைவில் அமைந்திருந்த இந்த மேன்க்ளோசோக் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கணிக்கிறார்கள்.  
இசையை ஏற்படுத்தும் இந்த நீலக்கற்கள் என்பது தேவனுடைய படைப்பில் ஒரு ஆச்சரியமாய் திகழ்கிறது. இயேசு குருத்தோலை ஞாயிற்றில் எருசலேமுக்குள் பிரவேசிக்கும்போது சொன்ன காரியத்தை நினைவுபடுத்துகிறது. ஜனங்கள் இயேசுவைச் சுற்றிலும் கூச்சலிட, அவர்களை அதட்டும்படிக்கு மார்க்கத் தலைவர்கள் இயேசுவை கேட்கிறார்கள். இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக, “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 19:40) என்கிறார்.  
நீலக்கற்களினால் இசையெழுப்பக்கூடும் என்றால், கல்லுகளே சிருஷ்டிகரை கூப்பிடும் என்று இயேசு சொல்லுவதை கருத்தில்கொண்டால், நம்மை உண்டாக்கி மீட்டுக்கொண்ட நம்முடைய நேசருக்கு எவ்வளவாய் நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்! அவர் நம் அனைத்து துதிகளுக்கும் பாத்திரர். அவருக்கு துதி செலுத்த பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருள்செய்வாராக. அனைத்து சிருஷ்டியும் அவரை பணிகின்றன.  

நண்பர்கள் மற்றும் எதிரிகள்

அறிஞர் கென்னத்.இ.பெய்லி, சர்வதேச கூடுகையில் ஒரு வித்தியாசமான போக்கைப் பின்பற்றிய ஒரு ஆப்பிரிக்க நாட்டின் தலைவரைப் பற்றிக் கூறினார். அவர் இஸ்ரேலுடனும் அதைச் சுற்றியுள்ள நாடுகளுடனும் நல்ல உறவை ஏற்படுத்தினார். இந்த ஆபத்தான சமநிலையை அவரது நாடு எவ்வாறு கையாள்கிறது என்று யாரோ அவரிடம் கேட்டபோது, ​​அவர் "எங்கள் நண்பர்களை நாங்கள் தேர்வு செய்கிறோம். எங்கள் எதிரிகளை [எங்களுக்காக] தேர்ந்தெடுக்க எங்கள் நண்பர்களை நாங்கள் அனுமதிப்பதில்லை” என்று பதிலளித்தார்.

அது புத்திசாலித்தனமானது மற்றும் யதார்த்தமான நடைமுறை. அந்த ஆப்பிரிக்க நாடு சர்வதேச அளவில் முன்மாதிரியாக இருந்ததை போல, பவுல் தன் வாசகர்களும் தனிப்பட்ட விதத்தில் செய்ய ஊக்குவித்தார். கிறிஸ்துவால் மாற்றப்பட்ட வாழ்க்கையின் குணாதிசயங்களைப் பற்றிய நீண்ட விளக்கத்தின் மத்தியில், “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். ரோமர் 12:18” என்றார். நாம் பிறரிடம் கொண்டிருக்கும் உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்படி, நம் எதிரிகளை நாம் நடத்தும் விதம் கூட (வவ. 20-21) தேவன் மீதான நமது நம்பிக்கை மற்றும் சார்ந்திருப்பை வெளிப்படுத்துகிறதென வலியுறுத்துகிறார்.

எல்லோருடனும் சமாதானமாக வாழ்வது எப்போதும் சாத்தியமாகாது (ஆகையால்தான், பவுல் "கூடுமானால்" என்கிறார்). ஆனால் தேவனுடைய ஞானம் நம் வாழ்க்கையை வழிநடத்த அனுமதிப்பதே இயேசுவின் விசுவாசிகளாகிய நமது பொறுப்பு (யாக்கோபு 3:17-18), அதனால் நம்மைச் சுற்றியுள்ளவர்களோடு சமாதானம் செய்பவர்களாக நாம் உறவாடுகிறோம் (மத்தேயு 5:9). சமாதான பிரபுவைக் கௌரவிக்க இதைவிட வேறு என்ன வழி இருக்க முடியும்?

பரிபூரணமான இரட்சகர்

வீட்டு மேம்பாடு நிகழ்ச்சி ஒன்றில், உட்புற வடிவமைப்பாளர் வீட்டின் புதிய குளியலறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கைவினை பீங்கான் ஓடுகளைக் குறித்து பெரிதாய் பேசிக்கொண்டிருந்தார். அனைத்தும் ஒரே மாதிரியானவையாக வணிக ரீதியில் தயாரிக்கப்பட்ட ஓடுகளிலிருந்து வேறுபட்ட இந்த கைவினைப் பொருட்கள் "குறைகளோடு" இருந்தன. குறைபாடுகள் ஒவ்வொரு ஓடுக்கும் தனித்துவமான அழகைக் கொடுத்தன. பயன்பாட்டையும் கடந்து, இடத்திற்கு அழகையும் மெருகையும் சேர்த்தது.

எனக்கு மெருகு ​​அல்லது வசீகரம் குறித்து அவ்வளவாக தெரியாது, அதிலும் அதற்கு ஓடுகள் எப்படி நேர்மறையாக அல்லது எதிர்மறையாகப் பங்களிக்கக்கூடும் என்பதெல்லாம் எனக்குப் புரியாது. இன்னும் அந்த ஓடுகள் அபூரணமாக இருக்க, ​​இயேசுவானவர் மனித அவதாரத்தில் (அவர் ஒரு மனிதனாகப் பூமிக்கு வந்ததில்) முற்றிலும் பரிபூரணமாக இருந்தார். எபிரேயரின் எழுத்தாளர், “நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்” (எபிரெயர் 4: 15) என்று உறுதியளித்தார். இயேசு தம்முடைய பூமிக்குரிய பயணத்தின் போது எந்த நேரத்திலும் ஒரு பாவமான வார்த்தையைப் பேசவில்லை அல்லது ஒரு பாவச் செயலைச் செய்யவில்லை. அவர் முற்றிலும் பரிபூரணர்.

எபிரேயர் சொல்வது போல், இயேசுவில் "நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்" (வ.14) என்பதே நமக்கான ஊக்கம். ஏனென்றால் நாம் சகிக்கும் போராட்டங்களை அவர் புரிந்துகொண்டு அனுதாபப்படுகிறார். அவரும் அந்த நிலையிலிருந்து அதை அனுபவித்துள்ளார்; ஆனால் பூரணமாகவே இருந்தார். நம்முடைய பரிபூரணமான இரட்சகர் எல்லாவற்றிலும் நமக்கு உதவ முடியும்.

நியமனம்

நவம்பர் 22, 1963 இல், அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி, தத்துவஞானி மற்றும் எழுத்தாளர் ஆல்டஸ் ஹக்ஸ்லி மற்றும் கிறித்துவ விளக்க உரையாளர் சி.எஸ். லூயிஸ் ஆகியோர் மரித்தனர். முற்றிலும் மாறுபட்ட உலகக் கண்ணோட்டங்களைக் கொண்ட, நன்கு அறியப்பட்ட மூன்று மனிதர்கள். ஹக்ஸ்லி, ஒரு அஞ்ஞான கொள்கைவாதி, கிழக்குப் பகுதிகளின் மாய வித்தைகளில் ஈடுபாடுள்ளவர். கென்னடி, ரோம கத்தோலிக்கராக இருந்தாலும், மனிதநேயத் தத்துவத்தைக் கடைப்பிடித்தார். லூயிஸ் ஒரு முன்னாள் நாத்திகர் ஆவார், அவர் ஒரு ஆங்கிலிகன் என்ற முறையில் இயேசுவை வெளிப்படையாகப் பகிரும் விசுவாசி. மரணம் என்பது நபர்களை மதிப்பதில்லை, ஆகையால் நன்கு அறியப்பட்ட இந்த மூன்று மனிதர்களும் மரணத்துடனான தங்கள் நியமனத்தை ஒரே நாளில் எதிர்கொண்டனர்.

ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் (ஆதியாகமம் 3) கீழ்ப்படியாதபோது, மனித வாழ்க்கை அனுபவத்தில் மரணம் நுழைந்ததாக வேதாகமம் கூறுகிறது. இது மனித வரலாற்றில் உண்டான சோகமான உண்மை. மரணம் என்பது ஒரு பெரிய சமத்துவவாதி. அல்லது, யாரோ ஒருவர் சொன்னது போல், எவராலும் தவிர்க்க முடியாத நியமனம் இது. எபிரேயர் 9:27-ன் சத்தியமும் இதுதான், “அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே” என்று நாம் வாசிக்கிறோம்.

மரணத்துடனான நமது சொந்த நியமனம் பற்றிய நம்பிக்கையை நாம் எங்கே பெறலாம்? மரணத்திற்குப் பின்பாக என்னவாகும்? கிறிஸ்துவில் மட்டுமே. ரோமர் 6:23, இந்த சத்தியத்தை மிகச்சரியாகப் படம்பிடிக்கிறது: "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்." தேவனுடைய இந்த ஈவு  எப்படிக் கிடைத்தது? தேவகுமாரனாகிய இயேசு, மரணத்தை அழிப்பதற்காக மரித்தார், நமக்கு ஜீவனையும் அழியாமையையும் (2 தீமோத்தேயு 1:10) அளிக்கக் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார்.

கிறிஸ்துவைப்போல ஒரு மறுஉத்தரவு

ஜார்ஜ், கரோலினாவின் கோடை வெயில் உஷ்ணத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ​​அருகில் வசித்த ஒருவர் அவர் வேலை செய்து கொண்டிருந்த முற்றத்திற்குச் சென்றார். தெளிவாகக் கோபமாக, அண்டை வீட்டுக்காரர் கட்டிடத் திட்டத்தைக் குறித்தும், அது செய்யப்படுகிற விதம் குறித்தும் அனைத்தையும் குறைவாக பேசி, சபிக்கவும் விமர்சிக்கவும் தொடங்கினார். கோபமான பக்கத்து வீட்டுக்காரர் கத்துவதை நிறுத்தும் வரை ஜார்ஜ் பதில் சொல்லாமல் வாய்மொழியின் அடிகளைப் பெற்றுக்கொண்டாா். பின்னர் அவர் மெதுவாக, "உங்களுக்கு இன்று மிகவும் மோசமான நாள், இல்லையா?" என்று பதிலளித்தார். திடீரென்று, கோபமடைந்த அண்டை வீட்டாரின் முகம் மென்மையாகி, அவரது தலை குனிந்து, "நான் உங்களிடம் பேசிய விதத்திற்காக வருந்துகிறேன்" என்றார். ஜார்ஜின் அன்புச்செயல் அண்டை வீட்டாரின் கோபத்தைத் தணித்தது.

நாம் திருப்பித் தாக்க விரும்பும் நேரங்கள் உண்டு. வையப்படுகையில் வையவும், அவமானத்திற்கு அவமானப்படுத்தவும் விரும்புகின்றோம். அதற்கு மாறாக  நம்முடைய பாவங்களின் விளைவுகளை இயேசு தாங்கியதைப் போல  மிகச் சரியாகக் காணப்பட்ட கருணையையே ஜார்ஜ் முன்மாதிரியாகக் காட்டினார், “அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்” (1 பேதுரு 2:23).

நாம் அனைவரும் தவறாகப் புரிந்து கொள்ளப்படும், தவறாகச் சித்தரிக்கப்படும் அல்லது தவறாகத் தாக்கப்படும் தருணங்களைச் சந்திப்போம். நாம் அன்பாகப் பதிலளிக்க விரும்பாமல் இருக்கலாம், ஆனால் இயேசு நம்மை அன்பாக இருக்கவும், சமாதானத்தைத் தொடரவும், புரிதலைக் காட்டவும் அழைக்கிறாா். இன்று அவர் நமக்கு உதவுவதால், மோசமான நாளைத் கடக்கும் ஒருவரை ஆசீர்வதிக்கத் தேவன் நம்மைப் பயன்படுத்தக்கூடும்.

கிறிஸ்துவில் கட்டப்பட்டது

ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், டெல்லியில் உள்ள செங்கோட்டை, மைசூரில் உள்ள அரச அரண்மனை, மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயில்கள் அனைத்தும் புகழ்பெற்ற பெயர்களைக் கொண்டுள்ளன. சிலவைகள் பளிங்குக் கற்களால் ஆனவை; சிலவைகள் சிவப்புக் கல்லால் ஆனவை; சிலவைகள் பாறைகளால் வெட்டப்பட்டவை; மற்றவை தங்கத்தால் பதிக்கப்பட்டவைகள். ஆனால் அவை அனைத்திற்கும் பொதுவான ஒன்று உள்ளது. அவை அனைத்தும் கட்டிடங்கள்.

கட்டடம் என்பது விசுவாசிகளைக் குறிக்க வேதம் பயன்படுத்தும் முக்கியமான உருவகங்களில் ஒன்று. “நீங்கள்... தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள்” (1 கொரிந்தியர் 3:9) என்று பவுல் அப்போஸ்தலர் எழுதுகிறார். விசுவாசிகளுக்கு வேறு பெயர்களும் உள்ளன: “மந்தை” (அப்போஸ்தலர் 20:28), “கிறிஸ்துவின் சரீரம்” (1 கொரிந்தியர் 12:27), “சகோதர சகோதரிகள்” (1 தெசலோனிக்கேயர் 2:14) மற்றும் பல.

கட்டிட உருவகம் 1 பேதுரு 2:5 இல் மீண்டும் மீண்டும் வருகிறது. பேதுரு திருச்சபையைப் பார்த்து, “ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும்... கட்டப்பட்டுவருகிறீர்கள்” என்று குறிப்பிடுகிறார். மேலும் 6ஆம் வசனத்தில் ஏசாயா 28:16 மேற்கோள் காண்பிக்கிறார், “இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லை சீயோனில் வைக்கிறேன்.” இயேசுவே அவருடைய கட்டிடத்தின் அஸ்திபாரம்.

திருச்சபையைக் கட்டுவது நமது வேலை என்ற உணர்வு நமக்கு இருக்கலாம். ஆனால் “நான் என் சபையைக் கட்டுவேன்” என்று இயேசு சொல்லுகிறார் (மத்தேயு 16:18). நாம் நம்மை “அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு” (1 பேதுரு 2:9) தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். அந்தத் துதிகளை நாம் அறிவிக்கும்போது, அவருடைய நற்செயல்களைச் செய்யும்போது நாம் அவருடைய கரங்களில் கருவிகளாக மாறுகிறோம்.

விண்வெளி பந்தயம்

ஜூன் 29, 1955 இல், அமெரிக்கா செயற்கைக்கோள்களை விண்வெளியில் அமைக்கும் திட்டத்தை அறிவித்தது. விரைவில், சோவியத் யூனியனும் அதைச் செய்வதற்கான திட்டங்களை அறிவித்தது. விண்வெளிக்கான பந்தயம் தொடங்கியது. சோவியத், முதல் செயற்கைக்கோளை (ஸ்புட்னிக்) ஏவியது மற்றும் யூரி காகரின் நமது கிரகத்தை ஒரு முறை சுற்றி வந்தபோது, முதல் மனிதனையும் விண்வெளியில் செலுத்தியது. ஜூலை 20, 1969 அன்று, நிலவின் மேற்பரப்பில் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் "கால்தடம்"  போட்டியை அதிகாரப்பூர்வமற்ற முறையில் முடிக்கும் வரை இந்த பந்தயம் நீடித்தது. இனைந்து பணியாற்றும் காலம் விரைவில் உதயமானது, இது சர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்க வழிவகுத்தது.

சில நேரங்களில் போட்டி ஆரோக்கியமானதாக இருக்கலாம், அது நாம் முயற்சி செய்யாத விஷயங்களைச் சாதிக்க நம்மைத் தூண்டுகிறது. இருப்பினும், மற்ற நேரங்களில், போட்டி அழிவுகரமானது. கொரிந்துவில் உள்ள சபையில் இது ஒரு பிரச்சனையாக இருந்தது, ஏனெனில் வெவ்வேறு குழுக்கள் பல்வேறு சபை தலைவர்களை தங்கள் நம்பிக்கையின் கலங்கரை விளக்கங்களாகப் பற்றிக்கொண்டன. இதனைச் சமாளிக்க பவுல், "நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்" (1 கொரிந்தியர் 3:7) என்று எழுதியபோது, ​​"நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்" (வ.9) என்று நிறைவு செய்தார்.

உடன்வேலையாட்கள்; போட்டியாளர்கள் அல்ல. மேலும் ஒருவருக்கொருவர்  மட்டுமல்ல, தேவனோடும்! அவருடைய அதிகாரம் மற்றும் அவரது வழிகாட்டுதலின் மூலம், இயேசுவின் செய்தியை முன்னெடுத்துச் செல்ல உடன்வேலையாட்களாக நாம் ஒன்றுசேர்ந்து பணியாற்றலாம், நம்முடையதை காட்டிலும் அவருடைய மகிமைக்காக.

நன்மைக்கான கருவி

ஒரு குற்றவாளி கைதுசெய்யப்பட்டான். துப்பறியும் அதிகாரி அவனிடத்தில், ஏன் இத்தனை பேர் முன்னிலையில் அவனை தாக்கினாய்? என்று கேட்டதற்கு அவனுடைய பதில் திடுக்கிடும் வகையில் இருந்தது. அவன், “அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும்;, மக்கள் ஒருபோதும் ஒன்றும் செய்யமாட்டார்கள்" என்று பதிலளித்தானாம். அந்தக் கருத்து “குற்றம் புரியும் அறிவு” என்று அழைக்கப்படுகிறது. அதாவது, ஒரு குற்றம் செய்யப்படுவது உங்களுக்குத் தெரிந்தாலும் அதை புறக்கணிப்பதைத் தேர்ந்தெடுப்பது.

அப்போஸ்தலனாகிய யாக்கோபு இதேபோன்ற குற்றமுள்ள அறிவைக் குறிப்பிடுகிறார், ‘ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்” (யாக்கோபு 4:17) என்கிறார். 

நம்மை இரட்சித்ததன் மூலம், தேவன் நம்மை உலகில் நன்மையின் முகவர்களாக வடிவமைத்துள்ளார். எபேசியர் 2:10 இல், “ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்” என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த நற்செயல்கள் நம் இரட்சிப்புக்குக் காரணம் அல்ல; மாறாக, தேவனுடைய பரிசுத்த ஆவி நம் இருதயத்தில் கிரியை செய்வதால் ஏற்படுகிற விளைவாகும். தேவன் நமக்குள் மீண்டும் உருவாக்கியுள்ள கிரியைகளைச் செய்வதற்கு நம்மை ஆயத்தப்படுத்த ஆவியானவர் நமக்கு ஆவிக்குரிய வரங்களைத் தருகிறார் (காண்க: 1 கொரிந்தியர் 12:1-11).

தேவனின் செயல்திறனாக, நாம் அவருடைய நோக்கங்களுக்கும் அவருடைய ஆவியின் ஆற்றலுக்கும் கீழ்ப்படிவோம். அதின் மூலம் இவ்வுலகத்தில் அவருடைய நன்மையான கிரியைகளை செயல்படுத்தும் கருவிகளாக நாம் செயல்படக்கூடும். 

 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

குறுச்செய்திகள், பிரச்சனைகள் மற்றும் ஜெயம்

ஜிம்மி, சமூக பிரச்சனைகள், அபாயங்கள், மற்றும் பிரச்சனைகள் நிறைந்திருக்கும் உலகத்தின் ஏழ்மையான நாட்டில் ஊழியம் செய்துகொண்டிருக்கும் தம்பதியினரை உற்சாகப் படுத்துவதற்காக அங்கு கடந்து சென்றார். அவர் அனுப்பிய குறுச்செய்திகளிலிருந்து அவர் கடந்துபோன கடினமான பாதைகளை நாங்கள் அறிந்துகொண்டோம்: “சரி நண்பர்களே, ஜெபத்தை ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது. கடந்த இரண்டு மணி நேரத்தில் நாம் பத்து மைல் தூரத்தைக் கடந்திருக்கிறோம்... அதற்கிடையில் நம்முடைய கார் பன்னிரண்டு தரம் சூடாகிவிட்டது.” வாகன பிரச்சனைகளில் சிக்கி, ஐந்து மணி நேரமாய் அவருடைய செய்திக்காய் காத்திருந்தவர்களை சந்திக்க நள்ளிரவில் வந்து சேர்ந்தார். அதற்கு பின்பதாய் வித்தியாசமான குறுச்செய்திகளை காண நேர்ந்தது. “ஆச்சரியம், அழகான ஒரு ஐக்கியம்... ஜெபம் செய்துகொள்வதற்காக பன்னிரெண்டு பேர் ஒப்புக்கொடுத்து முன்னுக்கு வந்தார்கள். அது ஒரு வல்லமையான இரவாய் அமைந்தது.”  
தேவனுக்கு உண்மையாய் ஊழியம் செய்வது ஒரு சவால். எபிரெயர் 11ஆம் அதிகாரத்தில் இடம்பெற்றிருக்கும் விசுவாச வீரர்கள் இதை அங்கீகரித்துக்கொள்வார்கள். தங்கள் விசுவாசத்தினிமித்தம், சாதாரண மனிதர்கள் சங்கடமான பல சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கின்றனர். “வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்” (வச. 36). அந்த சவால்களை மேற்கொள்ளும்படிக்கு அவர்களுடைய விசுவாசம் அவர்களை நெருக்கி ஏவியது. நமக்கும் அப்படித்தான். நம் நம்பிக்கையை நம்பி வாழ்வது நம்மை ஆபத்தான இடங்களுக்கோ அல்லது வெகுதூரத்திற்கு அழைத்துச் செல்லாமல் போகலாம், ஆனால் அது நம்முடைய தெருக்களுக்கு, வளாகங்களுக்கு, உணவு அறைக்கு அல்லது அலுவலக அறைகளுக்குள் அழைத்துச் செல்லலாம். அது ஒருவேளை அபாயகரமானதாய் இருக்கலாம். ஆனால் நாம் துணிகரமாய் எடுக்கும் அந்த அபாயகரமான முயற்சிகளுக்கு தகுதியான வெகுமதியை நிச்சயமாய் பெற்றுக்கொள்வோம் என்பது அதிக நிச்சயம்.

இப்போது இது வெறுமையாயிருக்கிறது

எனது சகோதரர்களும் எனது குடும்பத்தினரும், நாங்கள் சிறுவயது முதல் வாழ்ந்து வந்த எங்கள் வீட்டிலிருந்த பெற்றோரின் பொருட்களை இடமாற்றம் செய்யும் வேலையில் ஈடுபட்டோம். அன்றைய நாளின் மத்தியானத்தில், கடைசியாய் பொருட்களை அவ்வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வருமுன்பு, இனி அந்த வீட்டிற்கு நாங்கள் போகப்போவதில்லை என்பதை அறிந்து, அவ்வீட்டின் பின்புற வராந்தாவில் நின்று நாங்கள் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். என் அம்மா என் பக்கம் திரும்பி, “இப்போது இது வெறுமையாயிருக்கிறது” என்று என்னிடம் சொன்னபோது, எனக்கு கண்ணீர் வந்தது. 54 வருடங்கள் நாங்கள் வாழ்ந்த அந்த வீடு தற்போது வெறுமையாயிருக்கிறது. அதைக் குறித்து என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.  
எரேமியாவின் புலம்பல்களின் முதல் வசனத்தோடு என் இதயத்தின் வலி எதிரொலிக்கிறது: “ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே!” (1:1). “அவளுடைய திரளான பாதகங்களினிமித்தம்” (வச. 5) எருசலேம் வெறுமையாய் அமர்ந்திருக்கிறது. அதனுடைய ஜனங்கள் மனந்திரும்ப மறுத்து தேவனுக்கு விரோதமாய் கலகம்பண்ண நினைத்ததால், தேவன் அதின் குடிகளை சிறையிருப்பிற்கு அனுப்பினார் (வச. 18). அனால் என்னுடைய பெற்றோர், பாவத்தினிமித்தம் வீட்டை காலிசெய்யவில்லை. ஆனால் ஆதாமின் பாவத்தினிமித்தம் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையில் பெலவீனத்திற்கு நேராய் கடந்துசெல்லுகிறான். நமக்கும் வயதாகும்போது, நம்மால் பராமரிக்க முடியாத வீட்டிற்குள் நாம் தனிமையாய் வாழமுடியாது.  
ஆனால் எங்களுடைய அந்த அழகான வீட்டில் நாங்கள் வாழ்ந்த அந்த நினைவுகளுக்காய் நான் நன்றிசெலுத்துகிறேன். வேதனை என்பது அன்பின் விலை. எங்கள் பெற்றோரின் வீட்டை மட்டுமல்ல; எங்கள் பெற்றோரையும் சீக்கிரத்தில் நான் இழக்க நேரிடும். அப்போதும் நான் அழுவேன். இந்த வேதனையான பிரிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைத்தையும் சீரமைக்கும்படிக்கு இயேசுவின் வருகையை எதிர்நோக்குகிறேன். அவர் மீது என் நம்பிக்கை இருக்கிறது.  

விரும்பி கீழ்ப்படிதல்

அந்த இளம்பெண்ணின் முகம் கோபத்தையும் அவமானத்தையும் பிரதிபலித்தது. 2022 குளிர்கால ஒலிம்பிக்கின் பனிச்சறுக்கு விளையாட்டில் அவள் பெற்ற வெற்றி இணையற்றது. பல தங்கப் பதக்கத்தை அவள் வென்றிருக்கிறாள். ஆனால் தடைசெய்யப்பட்ட ஒரு போதை வஸ்தை அவள் எடுத்திருக்கிறாள் என்று மருத்துவ பரிசோதனை நிரூபித்தது. அதிக எதிர்பார்ப்பும் மக்களுடைய கண்டனங்களின் அழுத்தமும் தாங்க முடியாத அவள், தொடர்ந்த அவளுடைய விளையாட்டு பயணத்தில் பலமுறை தடுமாற்றம் கண்டு விழுந்திருக்கிறாள். அந்த மறைவான குற்றத்திற்கு முன்பு அவள் தன்னுடைய விளையாட்டில் சுதந்தரமாகவும் உத்வேகத்துடனும் விளையாடினாள். ஆனால் அவளுடைய இந்த விதி மீறல், அவளுடைய கனவுகளை நொறுக்கியது.  
மனுஷீகத்தின் ஆரம்ப நாட்களில், மனிதனுடைய சுயசித்தத்தை செயல்படுத்துகிற வேளையில் கீழ்ப்படிதலின் முக்கியத்துவத்தை தேவன் வெளிப்படுத்தினார். உடைக்கப்படுகிற அனுபவமும் மரணமும் பாவத்தின் விளைவு என்பதினால், ஆதாம் ஏவாளின் கீழ்ப்படியாமை பாவத்தின் பாதிப்புகளை முழு மனுஷீகத்திற்கும் கொண்டுவந்தது (ஆதியாகமம் 3:16-19). ஆனால் அச்சம்பவம் அப்படி முடிந்திருக்கவேண்டியதில்லை. தேவன் அவர்களிடம், “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்” (2:16-17) என்று கட்டளையிடுகிறார். அவர்கள் கண்கள் திறக்கப்பட்டு, அவர்கள் தேவர்கள் போலாகலாம் என்று எண்ணி, தடைசெய்யப்பட்ட நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை அவர்கள் புசிக்கின்றனர் (3:5; 2:17). அதினிமித்தம் மனுஷீகம் பாவம், அவமானம் மற்றும் மரணம் ஆகியவைகளுக்கு உட்படவேண்டியதாயிற்று.  
தேவன் நமக்கு சுயசித்தத்தையும், அநேக காரியங்களை அனுபவிக்கும் அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார் (யோவான் 10:10). நாம் நன்மையை அனுபவிக்கவேண்டும் என்று நம் மீதான அவருடைய அன்பினிமித்தம் அவருக்கு கீழ்படிய நமக்கு அழைப்புக் கொடுக்கிறார். நாம் கீழ்ப்படிதலை தெரிந்துகொள்ளவும், இலச்சை இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையை சுதந்தரித்துக்கொள்ளவும் அவர் நமக்கு உதவிசெய்வாராக.