ஒரு குளிர்ந்த நாளில், உறையும் பனியில், ஓர் ஏரிக்கரையில் பனியினால் மூடப்பட்ட கலங்கரை விளக்கின் அழகினை கிறிஸ்டா பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் தன்னுடைய அலைபேசியை எடுத்து இந்தக் காட்சியைப் படம் பிடிக்க முயற்சித்தபோது, அவளுடைய கண்ணாடி பனிப் படலத்தால் மூடப்பட்டது. அவளால் அதன் வழியே ஒன்றும் பார்க்க முடியவில்லை. எனவே அவள் தன்னுடைய கேமராவை அந்தக் கலங்கரை விளக்கிற்கு நேராகத் திருப்பி மூன்று படங்களை, வெவ்வேறு கோணங்களில் எடுத்தாள். பின்பு அவள் அந்தப் படங்களைப் பார்த்த போது தான் அவளுடைய கேமரா ”செல்பி” நிலையிலிருந்திருக்கின்றதை உணர்ந்தாள். அவள் சிரித்துக் கொண்டே, ”என்னுடைய கவனம் என்மீது, என்மீதேயிருந்திருக்கின்றது. நான் பார்க்க முடிந்ததெல்லாம் என்னையே” என்று கூறினாள். கிறிஸ்டாவின் படங்கள் என்னை அத்தகைய ஒரு தவறினைக் குறித்துச் சிந்திக்கத் தூண்டின. நாம் நம்மீதே கவனம் செலுத்தும் போது, தேவனுடைய திட்டத்தினைக் குறித்த பெரிய காட்சியைக் காணத் தவறிவிடுகின்றோம்.

இயேசுவின் உறவினனான யோவான் தன் மீது கவனம் செலுத்தும்படி தான் வரவில்லையென்பதை தெளிவாகத் தெரிந்து கொண்டான். ஆரம்பத்திலிருந்தே அவன் தன்னுடைய அழைப்பு, பிறரை தேவக்குமாரனான இயேசுவிடம் திருப்புவதேயென்பதை நன்கு கண்டறிந்து கொண்டார். இயேசுவும் அவருடைய சீடர்களும் தன்னிடம் வரக்கண்ட யோவான், ”இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவா. 1:29) எனத் தெரிவிக்கின்றார். அத்தோடு, “இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக நான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்க வந்தேன்” என்றார் (வச. 31). யோவானுடைய சீடர்கள் அவரிடம் வந்து, அநேகர் இயேசுவைப் பின்பற்றிச் செல்கின்றனர் எனத் தகவல் கொடுத்த போது, யோவான் அவர்களிடம், ‘நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்… அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்” (3:28-30) என்று கூறினார்.

நம்முடைய வாழ்வின் முழுகவனமும் இயேசுவின் மீதும் அவரை முழுமனதோடும் அன்பு செய்வதிலேயுமே இருக்கட்டும்.