எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மார்ட் டிஹான்கட்டுரைகள்

நம்முடைய மீதமுள்ள கதை

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்க வானொலியில் செய்தி பத்திரிக்கையாளர் பால் ஹார்வியின் குரல் மக்களுக்கு மிகவும் பரீட்சையமானது. வாரத்தில் ஆறு நாட்களும் அவர் சுவாரஸ்யத்துடன், “செய்தி என்னவென்று உங்களுக்குத் தெரியும், ஒரு நிமிடத்தில் நீங்கள் மீதமுள்ள கதையைக் கேட்கப் போகிறீர்கள்" என்று கூறுவது வழக்கம். ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்கு பிறகு, அவர் நன்கு அறியப்பட்ட நபரின் அதிகம் அறியப்படாத கதையைச் சொல்வார். ஆனால் அந்த குறிப்பிட்ட நபரின் பெயரையோ அல்லது அவரைக் குறித்த சுவாரஸ்யமான தகவலை மறைத்து வைத்து, “இப்போது உங்களுக்குத் தெரியும் . . . மீதமுள்ள கதை" என்று கூறி வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டி மகிழ்விப்பார். 

அப்போஸ்தலர் யோவானின் கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தைக் குறித்த தரிசனத்தில் அதேபோன்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. அவருடைய கதை சோகமாய் துவங்குகிறது. வரலாறு எதை நோக்கி பயணிக்கிறது என்பதை வானத்திலும் பூமியிலும் சிருஷ்டிக்கப்பட்ட எந்த ஜீவனாலும் உரைக்க முடியவில்லை என்பதினால் அவருடைய கண்ணீரை அவரால் நிறுத்தமுடியவில்லை (வெளி. 4:1; 5:1-4). பின்பு நம்பிக்கையை அளிக்கும் யூதா கோத்திர ராஜசிங்கத்தின் சத்தத்தைக் கேட்கிறார் (வச. 5). ஆனால் யோவான் பார்க்கும்போது, ஒரு வெற்றிபெற்ற சிங்கத்தை பார்ப்பதற்கு பதிலாக, அடிக்கப்படுகிற ஆட்டுக்குட்டியைப் பார்க்கிறார் (வச. 5-6). கர்த்தருடைய சிங்காசனத்தைச் சுற்றிலும் கொண்டாட்ட அலைகள் வெடித்தது. இருபத்தி நான்கு மூப்பர்களும், வானத்திலும் பூமியிலுமுள்ள எண்ணற்ற தேவதூதர் சேனைகளும் இணைந்து தேவனை மகிமைப்படுத்தின (வச. 8-14). 

சிலுவையிலறையப்பட்ட இந்த இரட்சகரே அனைத்து சிருஷ்டிகளின் நம்பிக்கையும், தேவனுக்கு மகிமையும், நம்முடைய மீதமிருக்கும் வாழ்க்கைக் கதையாகவும் இருப்பார் என்று யார் தான் கற்பனை செய்திருப்பார்கள்!

பின்னோக்கி வாசித்தல்

ஒரு நல்ல நாவல் புத்தகத்தின் கடைசி அத்தியாத்தை முதலில் வாசிப்பது என்பது, அக்கதையின் சுவாரஸ்யத்தை உடைக்கும் தவறான ஒரு முயற்சி. ஆனால் அக்கதை எப்படி முடியும் என்பதை சிலர் தெரிந்துகொண்ட பிறகும், அதை சுவாரஸ்யம் குறையாமல் வாசிக்கும் சிலர் இருக்கின்றனர். 

வேதாகமத்தை பின்னோக்கி வாசிப்பது எந்த அளவிற்கு முக்கியமானது என்பதை எழுத்தாளர் ரிச்சர்ட் ஹேஸ் குறிப்பிடுகிறார். வேதாகம வார்த்தைகளும் சம்பவங்களும் எவ்விதம் எதிர்காலத்தை சார்ந்திருக்கின்றன என்பதை வெளிப்படுத்தி, வேதாகமத்தை முன்னும் பின்னும் வாசிப்பதற்கான காரணத்தை பேராசிரியர் ஹேஸ் தருகிறார்.

உடைக்கப்பட்ட ஆலயத்தை மூன்று நாட்களுக்குள் எடுப்பித்து கட்டுவேன் என்று இயேசு சொன்ன காரியங்களை, அவருடைய உயிர்த்தெழுதலுக்கு பின்னரே சீஷர்கள் விளங்கிக்கொண்டனர் என்று ஹேஸ் குறிப்பிடுகிறார். அப்போஸ்தலனாகிய யோவான், “அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார்” (யோவான் 2:21) என்று சொல்லுகிறார். அதுவரை பஸ்கா பண்டிகை அநுசரிப்பதின் காரணத்தை அறியாதவர்கள், அப்போதுதான் அறிந்துகொண்டனர் (மத்தேயு 26:17-29). ஒரு பண்டைய ராஜாவின் ஆழமான உணர்வுகளுக்கு இயேசு எவ்வாறு முழு அர்த்தத்தை அளித்தார் என்பதை பின்னோக்கிப் பார்த்தால் மட்டுமே அவர்களால் புரிந்துகொள்ள முடியும் (சங்கீதம் 69:9; யோவான் 2:16-17). தேவனுடைய மெய்யான ஆலயத்தினை (இயேசு) குறித்து பின்னாலிருந்து வாசித்தால் மட்டுமே, இஸ்ரவேல் மார்க்கத்தின் சடங்காச்சாரங்கள் மற்றும் மேசியா குறித்ததான நம்பிக்கையில் சீஷர்கள் தெளிவு காண முடியும். 

இப்போது, இதே வேதாகமத்தை முன்னும் பின்னுமாக வாசிப்பதன் மூலம் மட்டுமே, இயேசுவில் நம்முடைய தேவைகளை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.

வார்த்தைகளுக்கு அப்பால்

தாமஸ் அக்வேனாஸ் (1225-1274), திருச்சபையின் அதிகம் போற்றப்படுகிற விசுவாசத்தின் பாதுகாவலர். ஆயினும், அவரது மரணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன், அவரது மிகப்பெரிய படைப்பான “சுமா தியாலோஜிகா” (ளுரஅஅய வுhநழடழபiஉய) என்னும் எழுத்துப்பணியை முடிக்கவிடாமல் ஏதோ தடை ஏற்பட்டது. உடைக்கப்பட்ட சரீரத்துடன் இரத்தஞ்சிந்தும் இரட்சகரைத் தரிசனத்தில் பார்த்ததாக அக்வேனாஸ் சொல்லுகிறார். அவர், “இனிமேல் என்னால் எதுவும் எழுதமுடியாது. என்னுடைய எழுத்துக்களை பதராய் பார்க்குமளவிற்கு சில காரியங்களை நான் பார்த்தேன்” என்று சொல்லுகிறார்.
அக்வேனாஸ் பார்த்ததைப் போன்று பவுலும் தரிசனம் பார்த்திருக்கிறார். 2 கொரிந்தியரில் அவர் தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்: “அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக் கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன். அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்” (12:3-4).
பவுலும் அக்வேனாஸும் வார்த்தையினாலும் ஆதாரங்களினாலும் விவரிக்கமுடியாத சமுத்திரம் போன்ற தெய்வீக நன்மைகளை நமது சிந்தனைக்கு விட்டுச் சென்றனர். அக்வேனாஸ் கண்டவைகளின் தாக்கங்கள் தன்னுடைய பணியை செய்யக்கூடாதபடி அவரை பாதித்தது, தேவன் தம்முடைய குமாரனை நமக்காக சிலுவையிலறையப்பட அனுப்பிய செயலுக்கு உவகையாக உள்ளது. ஆனால் அதற்கு முரணாக, பவுல் அப்போஸ்தலர் தொடர்ந்து எழுதினார். ஆனால் தன்னுடைய சுயபெலத்தால் சிலவற்றை விவரிக்க முடியாது என்பதை அறிந்தே எழுதினார்.
அவருடைய போராட்டங்களுக்கு மத்தியில், பலவீனமான நேரங்களில் அவருடைய வார்த்தைகளால் விவரிக்கமுடியாத தேவனுடைய கிருபையையும் நன்மையையும் திரும்பிப் பார்த்து கர்த்தருடைய ஊழியத்தை நேர்த்தியாய் செய்தார் (2 கொரிந்தியர் 11:16-33; 12:8-9).

முழு உலகமும் பாடும்போது

1970களின் பிரபலமான விளம்பரம் ஒன்று ஒரு தலைமுறையையே ஊக்குவித்தது. கோகோ கோலாவின் “தி ரியல் திங்” விளம்பரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் இசைக் குழுவினரால் உருவாக்கப்பட்டு, இறுதியில் ஒரு முழு நீளப் பாடலாக உருவெடுத்தது. அது உலகெங்கிலும் இருந்த இசை அட்டவணையில் முதலிடத்தைப் பிடித்தது. ஆனால் ரோம் நகருக்கு வெளியே, ஒரு மலை உச்சியில் இளைஞர்கள் பாடிய அந்த பாடலின் தொலைக்காட்சி ஒளிபரப்பினை பலர் மறந்திருக்கமாட்டார்கள். தேனீக்களின் தரிசனம், பழங்களை ஈனும் மரங்கள், பாடலாசிரியரின் விருப்பத்தை உலகெங்கிலும் பறைசாற்றுவதற்கு அன்போடும், ஒற்றுமையுடனும் அப்பாடலை நாம் எதிரொலித்தோம். 

அப்போஸ்தலனாகிய யோவான், அந்த இலட்சியக் கனவைப் போன்ற ஒன்றை விவரிக்கிறார். அது மிகப் பெரியது. “அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்” (வெளி. 5:13) பாடிய ஒரு பாடலை அவர் கற்பனை செய்தார். இந்த பாடலில் விசித்திரமாக எதுவும் இல்லை. ஆனால் நமக்கான பெரிய விலைக்கிரயத்தைக் கொடுத்தவருக்காய் பாடப்பட்டது. யுத்தம், மரணம் மற்றும் பாதிப்புகள் என்று நம் கண் முன்னே நிழலாடும் காரியங்களிலிருந்து அவருடைய அன்பின் தியாகம் நம்மை மேற்கொள்கிறது. 

ஆயினும் ஆட்டுக்குட்டியானவர்  நம் பாவத்தைச் சுமந்து, மரணத்தை ஜெயித்து, மரண பயத்தைப் போக்கவும், வானத்தையும் பூமியையும் முழு இணக்கத்துடன் பாட கற்றுக்கொடுக்கவும் எதிர்பார்த்தார்.

 

தேவ சிநேகிதர்களின் சிநேகிதன்

இரண்டு நண்பர்களுக்கு பொதுவான இன்னொரு நண்பர் இருப்பதைக் கண்டறியும் போது, முதல் அறிமுகங்களில் சுவாரஸ்யமான அனுபவம் ஏற்படுவது இயல்பு. அதே போன்று, “உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. விஜயின் அல்லது ஹீனாவின் நண்பர்கள், எனக்கும் நண்பர்தான்" என்று நாம் சிநேகிதர்களின் சிநேகிதர்களை பெரிய மனதுடன் நம்முடைய வீட்டின் விருந்திற்கு வரவேற்கிறோம்.

இயேசுவும் இதே போன்று சொல்லியிருக்கிறார். அவர் பலரை வியாதியிலிருந்து குணமாக்கி, மக்களை கவர்ந்திருக்கிறார். ஆனால் அதே வேளையில், தங்களின் செல்வாக்கை தவறாய் பயன்படுத்தி, ஆலயத்தை வணிகமயமாக்கும் மதத் தலைவர்களின் செயல்களுக்கு ஒத்துப்போகாததால், அவர்களின் வெறுப்பையும் சம்பாதித்தார். இந்த எதிர்ப்புகளின் மத்தியிலும், அவருடைய பிரசன்னத்தின் மகிழ்ச்சி, செலவு மற்றும் ஆச்சரியத்தை பெருக்க தீர்மானித்தார். அவர் தம்முடைய சீஷர்களுக்கு வியாதியை குணமாக்கும் அதிகாரத்தைக் கொடுத்து, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிருக்கிறது என்று பிரசங்கிக்க அவர்களை அனுப்புகிறார். “உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்” (10:40) என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறார்.

வாழ்க்கையை மாற்றும் ஒரு அழகான நட்பிற்கு இதை விட ஒரு நல்ல எடுத்துக்காட்டை கற்பனை செய்வது கடினம். சீஷர்களுக்கு தங்கள் வீட்டைத் திறந்துகொடுக்கும் எவருக்கும், அல்லது அவர்களில் ஒருவருக்கு ஒரு கலசம் தண்ணீரைக் கொடுக்கும் எவருக்கும், இயேசு தேவனின் இருதயத்தில் ஒரு இடத்தை வாக்கு செய்கிறார். அந்த சம்பவம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தேறினாலும், சிறியதோ அல்லது பெரியதோ, ஒரு தயவுள்ள விருந்தோம்பல் செய்கையானது இன்றும் தேவனுடைய சிநேகிதர்களின் சிநேகிதனாய் நம்மை மாற்றுகிறது.

நீதியும் கிறிஸ்துவும்

ரோம் தேசத்தின் முதல் பேரரசர் அகுஸ்து ராயன் (கி.மு.63- கி.பி. 14). இவர் சட்ட ஒழுங்கின் ஆட்சியாளராய் தன்னை ஸ்தாபித்துக்கொள்ள எண்ணியவர். அடிமைத்தனம், இராணுவ அடக்குமறை, இலஞ்சம் போன்றவற்றின் மீது தன் ஆட்சியை ஸ்தாபித்தாலும், ஓரளவுக்கு நீதி வழங்கும் முறையை சீரமைத்து, தன் குடிமக்களுக்கு லஸ்டீசியா என்னும் நீதிதெய்வத்தை அறிமுகப்படுத்தினான். தற்போது நீதிமன்றங்களில் நீதிதேவதை என்று குறிப்பிடப்படுவது இதுதான். மேலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட, பூமியின் எல்லைகள் பரியந்தம் மகிமைப்படப் போகிற உலக இரட்சகரின் பிறப்பு சம்பவம் (மீகா 5:2-4) நிகழுவதற்கு மரியாளும், யோசேப்பும் பெத்லகேமுக்கு வர காரணமாயிருந்த ஜனத்தொகை கணக்கெடுப்பை கட்டளையிட்டவர் இவரே.

ஆனால் இந்த ராஜா, மெய்யான நீதியை நிலை நாட்டுவதற்காய் வாழ்ந்து தன்னுடைய ஜீவனையும் கொடுப்பார் என்பதை அகுஸ்துராயனும், உலகமும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நூற்றாண்டுகளுக்கு முன்பதாய் மீகா தீர்க்கதரிசியின் நாட்களில், தேவனுடைய ஜனம் பொய், கலகம், மற்றும் “துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பொக்கிஷங்கள்” (6:10-12) ஆகியவைகளினால் வழி விலகியிருந்தனர். தேவனுக்கு பிரியமான தேசம் அவரைப் பொருட்படுத்தவில்லை. அவர்களின் கிரியைகளின் தன்மையை அவர்களுக்கு உணர்த்தி, அவருடன் தாழ்மையாய் நடக்கவேண்டும் என்று தேவன் ஏங்கினார் (வச.8). 

காயப்பட்ட, மறக்கப்பட்ட, மற்றும் ஆதரவற்ற மக்கள் எதிர்பார்த்திருந்த நியாயத்தை அவர்களுக்கு இந்த பணிவிடையாளனான ராஜா காண்பித்தார். தேவனுக்கும் மனிதனுக்குமிடையிலும், மனிதனுக்கும் சக மனிதனுக்குமிடையிலும், உள்ள சரியான உறவை பார்ப்பதற்கு மீகாவின் தீர்க்கதரிசனம், இயேசு கிறிஸ்துவில் நிறைவேற வேண்டியிருந்தது. அது அகுஸ்து ராயனுடைய சட்ட ஓழுங்கு ஆதிக்கத்தினால் சாத்தியமல்ல, மாறாக, இரக்கம், தயவு, மற்றும் பணிவிடையாளனான ராஜாவாம் இயேசுவின் ஆவியினால் உண்டாகும் விடுதலையில் மட்டுமே அது சாத்தியமாகிறது. 

கதாநாயகர்கள், கொடுங்கோலர்கள் மற்றும் இயேசு

பிரபலமான இசைக்கலைஞர் பீத்தோவன் கோபத்திலிருந்தார். அவருடைய மூன்றாம் இசைப் படைப்பிற்கு “த போனபார்ட்டே” என்ற நெப்போலியனின் பெயரை வைக்கலாம் என்று அவர் எண்ணியிருந்தார். மதம் மற்றும் அரசியல் ஓங்கியிருந்த அந்த காலக்கட்டத்தில், மக்களின் விடுதலைக்கு காரணமான நெப்போலியனை அவர் ஒரு கதாநாயகனாய் பார்த்தார். ஆனால் அந்த பிரெஞ்சு ஜெனரல் தன்னை பேரரசர் என்று அறிவித்தபோது, அவர் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டார். தன்னுடைய முன்னாள் கதாநாயகன் ஒரு கொடுங்கோலன் என்பதை அறிந்த அவர், அவனுடைய பெயரை அழிக்கும் முயற்சியில் அந்த தாளில் துளை ஏற்படும் அளவிற்கு அதை தன் கைகளால் அழித்தார். 

ஆதிக் கிறிஸ்தவர்களின் அரசியல் மறுமலர்ச்சியைக் குறித்த நம்பிக்கை தகர்க்கப்பட்டபோது அவர்கள் ஏமாற்றமடைந்திருக்கவேண்டும். ராயனுடைய அதிகப்படியான வரிவிதிப்பும், இராணுவ ஆதிக்கமும், வாழ்க்கையின் மீது அவர்களுக்கிருந்த நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியது. ஆனாலும் பல ஆண்டுகளாக ரோமர்களே உலகத்தை ஆட்சிசெய்தனர். இயேசுவின் தூதுவர்கள் பயத்தோடும் பலவீனத்தோடும் இருந்தனர். அவருடைய சீஷர்கள் முதிர்ச்சியற்றும் சண்டையிட்டுக்கொண்டும் இருந்தனர் (1 கொரி. 1:11-12; 3:1-3). 

ஆனால் ஒரு மாற்றம் தோன்றியது. மாறாத அந்த நிலைமைக்கு அப்பாற்பட்டு பவுல் அதை பார்த்தார். அவருடைய நிருபங்கள், துவக்கத்திலும் இறுதியிலும் இயேசுவின் நாமத்தினால் நிரம்பி வழிந்தது. இயேசு உயிர்த்தெழுந்தார். அவர் வல்லமையோடு திரும்பி வருவதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். எல்லாரையும் எல்லாவற்றையும் அவர் நியாயந்தீர்க்கிறார். எனவே பவுல் முதலில் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் அர்த்தத்தையும் அதின் விளைவுகளையும் விசுவாசிகள் புரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்பினார் (2:2; 13:1-3).

இயேசுவின் சிலுவை மரணத்தில் வெளிப்பட்ட அன்பானது, அவரை வித்தியாசமான ஒரு தலைவராக மாற்றியது. கர்த்தரும் உலக இரட்சகருமான இயேசுவின் சிலுவை அனைத்தையும் மாற்றியது. இயேசுவின் நாமம் என்றென்றும் இருக்கிற, எல்லா நாமங்களுக்கும் மேலாக உயர்ந்த நாமம். 

அவமதிப்பிலிருந்து காயம்

வானொலி அதிகமான பயன்பாட்டிலிருந்த காலகட்டத்தில், ஃப்ரெட் ஆலனின் (1894-1956) எதிர்மறையான நகைச்சுவைகள், பொருளாதார வீழ்ச்சியிலும் யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்டிருந்த எண்ணற்ற மக்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது. அவருடைய நகைச்சுவை உணர்வானது, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் வலியில் தோன்றியது. மூன்று வயதாவதற்கு முன்பே தன் தாயை இழந்த இவர், போதைக்கு அடிமையாயிருந்த தகப்பனிடத்திலிருந்து விலகி வாழ்ந்தார். இவர் ஒருமுறை நியூயார்க் நகரத்தின் சாலைநெருக்கடியில் சிக்கிய இளைஞனை மீட்டு, “என்ன ஆச்சு உனக்கு, சிறுவனே? நீ வளர்ந்து பிரச்சனையை சந்திக்க விரும்பவில்லையா?” என்று கூறியுள்ளார். 

இது யோபுவின் வாழ்க்கைக்குக் கச்சிதமாய் பொருந்தும். அவனுடைய ஆரம்ப கால விசுவாசம் மனச்சோர்வுக்கு ஆளாக்கப்பட்டபோது, அவனுடைய நண்பர்கள் அவனுடைய காயத்தில் அவமானத்தைக் கூட்டினர். உபதேசத்தின் அடிப்படையில் விவாதித்து, அவனுடைய தவறை ஒத்துக்கொள்ளும்படிக்கும் (4:7-8), தேவனுடைய சிட்சையிலிருந்து கற்றுக்கொள்ளும்படிக்கும், பிரச்சனைகளின் மத்தியில் நகைக்கும்படியான பெலத்தை பெற்றுக்கொள்ளவும் வலியுறுத்தினர் (5:22). 

யோபுவின் தேற்றரவாளர்கள் தவறாயிருந்தபோதிலும், அவர்களின் வார்த்தைகள் அர்த்தமுள்ளவைகள் (1:6-12). இதுபோன்ற நண்பர்கள் இருந்தால், யாருக்கு எதிரிகள் தேவைப்படுவர்? என்று அவர்கள் பின்நாட்களில் உதாரணமாக்கப்படுவர் என்பதை அவர்கள் அறியவில்லை. யோபு அவர்களின் மீட்பிற்காய் ஜெபிப்பான் என்றோ அல்லது தங்களுக்கு ஜெபம் தேவைப்படும் என்பதையோ கூட அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் (42:7-9). தவறான புரிதலுக்கு உட்பட்டு துன்பங்களை அனுபவித்து, பெரிய மகிழ்ச்சியின் ஆதாரமாக்கப்படப்போகிறவனை குற்றப்படுத்துகிறோம் என்றும் அவர்கள் கற்பனை செய்திருக்கமாட்டார்கள்.

சுவிசேஷத்தின் வல்லமை

பண்டைய ரோமாபுரிக்குக்கென்று ஒரு “சுவிசேஷம்” இருந்தது. வெர்ஜில் ஸியூஸ் என்னும் கவிஞர், தேவர்களுக்கெல்லாம் தேவன், முடிவில்லாத ஒரு ராஜ்யத்தை ரோமர்களுக்கு கொடுத்துள்ளார் என்று கூறுகிறார். தேவர்கள் அகஸ்து ராயனை தேவ குமாரனாகவும், உலக இரட்சகராகவும், அமைதியும் செழிப்பும் நிறைந்த பொற்காலத்தை உலகத்திற்கு கொடுக்கப்போகிறவராகவும் தீர்மானித்திருக்கிறார்கள் என்பதே அந்த சுவிசேஷம். 

ஆனால் இந்த சுவிசேஷம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ரோம இராணுவத்தின் அடக்குமுறையும் உயிர்சேதங்களும் இந்த சுவிசேஷத்தை வரவேற்புடையதாய் மாற்றவில்லை. அகஸ்துராயனின் சாம்ராஜ்யம் சட்டவிரோதமாக மக்களை அடிமைப்படுத்தி, ஆளும் வர்க்கம் மட்டுமே திருப்தியடைந்திருக்கும்படி செய்தது. 

இந்த சூழ்நிலையிலிருந்தே பவுல் தன்னை கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்று அறிமுகப்படுத்திக்கொள்ளுகிறான் (ரோமர் 1:1). இந்த சூழ்நிலையில் நின்றே இயேசு என்ற பெயரை பவுல் ஒரு காலத்தில் வெறுத்தான். தன்னை யூதருக்கு ராஜா என்றும் உலக இரட்சகர் என்றும் இயேசு அறிவித்ததற்காய் பாடுகள் அனுபவித்ததும் இதே சூழ்நிலையில் தான். 

இந்த நற்செய்தியையே பவுல் ரோமருக்கு எழுதின நிருபத்தில் பகிர்ந்து கொள்ளுகிறார். இந்த சுவிசேஷத்தை “விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது” (ரோமர் 1:16). ஆம்! ராயனின் ஆளுகையில் உபத்திரவப்படும் மக்களுக்கு இது எவ்வளவு அவசியம்! சிலுவையிலறையப்பட்டு, பின் உயிர்தெழுந்து, தன் அன்பை பிரதிபலித்து சத்துருக்களை வென்ற இரட்சகரின் சுவிசேஷ செய்தி இங்கு பிரசங்கிக்கப்பட்டது. 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கவலைகளை களையெடுக்கவும்

எனது வீட்டு முற்றத்தில் உள்ள ஒரு நடவு இயந்திரத்தின் மூலம் சில விதைகளை விதைத்துவிட்டு, அதன் விளைச்சலைப் பார்க்க காத்திருந்தேன். பத்து முதல் பதினான்கு நாட்களுக்குள் விதைகள் முளைக்கும் என்று அறிந்து, நான் அதற்கு நீர் பாய்ச்சி பராமரித்தேன். விரைவில் சில பச்சை இலைகள் மண்ணிலிருந்து வெளியேறுவதைக் கண்டேன். ஆனால் அவை களைகள் என்று எனது கணவர் என்னிடம் சொன்னபோது நான் பதற்றமடைந்தேன். நான் வளர்க்க முயற்சிக்கும் செடிகளை அவை நெரித்துவிடாதபடி விரைவாக அவைகளை வெளியே இழுக்கும்படி எனது கணவர் என்னை ஊக்குவித்தார்.

நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய ஊடுருவல்காரர்களைக் கையாள்வதன் முக்கியத்துவத்தையும் இயேசு அறிவிக்கிறார். அவர் தனது உவமையின் ஓர் பகுதியை இவ்வாறு விளக்கினார்: விதைப்பவன் ஒருவன் தன்னுடைய விதைகளை விதைத்தபோது, அவற்றுள் “சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது” (மத்தேயு 13:7). முட்களும் களைகளும் தாவரங்களின் வளர்ச்சியை வெகுவாய் பாதிக்கக்கூடியவைகள் (வச. 22). அதுபோல கவலைகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வேதத்தை வாசிப்பதும் ஜெபிப்பதும் நமது விசுவாசத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள். ஆனால் கவலையின் முட்களைக் களையெடுப்பதில் நான் கவனம்செலுத்தவேண்டும் என்பதை உணர்ந்தேன். அவைகள் என்னுள் விதைக்கப்பட்ட நல்ல வசனத்தை நெருக்கி, தவறாய் என்னை திசைதிருப்பக்கூடும். 

வேதத்தில் காணப்படும் ஆவியின் கனிகளானது, அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்றவற்றை உள்ளடக்கியது (கலாத்தியர் 5:22). ஆனால் நாம் அந்த பலனைக் கொடுப்பதற்கு, தேவனுடைய வல்லமையோடு நம்மைத் திசைதிருப்பக்கூடிய அல்லது நம்முடைய கவனத்தை மாற்றக்கூடிய சந்தேகம் போன்ற கவலையின் களைகளை புறம்பாக்கிட வேண்டும். 

 

இணைந்து இயேசுவுக்கு ஊழியம் செய்தல்

மைக்ரோனேசியாவில் உள்ள ஓர் தீவில் சிக்கித்தவிக்கும் இரண்டு ஆண்களுக்கு உதவ மீட்புப் பணியாளர்கள் பிரயாசப்பட்டனர். அவர்களுக்கு சுகாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு அவர்களை விரைந்து காப்பாற்றுவதற்கு குழுவாய் செயல்படவேண்டியது அவசியமாய் தோன்றியது. அவர்களை முதலில் கண்டுபிடித்த விமானி, அவர்களின் அருகாமையிலிருந்த ஆஸ்திரேலிய கப்பலுக்கு செய்தியனுப்பினார். கப்பல், இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியது, அவை உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கின. பின்னர், அமெரிக்க கடலோர காவல்படை அங்கு வந்து ஆட்களை சரிபார்த்து தகவல் அளித்தனர். இறுதியாக, ஓர் மைக்ரோனேசிய ரோந்துப் படகு அவர்களை பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்துவிட்டது.

நாம் இணைந்து செயல்பட்டால் நிறைய சாதிக்க முடியும். பிலிப்பிய விசுவாசிகள் அப்போஸ்தலர் பவுலை ஆதரிக்க தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்தனர். லீதியாளும் அவரது குடும்பத்தினரும் அவரை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றனர் (அப்போஸ்தலர் 16:13-15). கிலேமெந்து, எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் (இவர்கள் ஒத்துப்போகவில்லை) அனைவரும் நற்செய்தியைப் பரப்புவதற்கு அப்போஸ்தலருடன் நேரடியாக வேலை செய்தனர் (பிலிப்பியர் 4:2-3). பின்னர், பவுல் ரோமில் சிறையில் அடைக்கப்பட்டபோது, தேவாலயம் (விசுவாசிகள்) அவரது பராமரிப்புக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தை சேகரித்து, எப்பாபிராத்து மூலம் (வச. 14-18) விநியோகித்தது. பவுல் அப்போஸ்தலரின் ஊழியத்திற்காக பிலிப்பிய திருச்சபை தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருந்திருக்கக் கூடும் (1:19).

இந்த பண்டைய திருச்சபை விசுவாசிகள் ஒன்றாக இணைந்து ஊழியம் செய்ததற்கான எடுத்துக்காட்டுகள் இன்று நம்மை ஊக்குவிக்கும். தேவன் நம்மை வழிநடத்தி, நமக்கு அதிகாரம் கொடுத்ததால், ஜெபிக்கவும் மற்றவர்களுக்கு ஊழியம்செய்யவும், சக விசுவாசிகளுடன் ஒத்துழைக்கவும், நம்மால் இயன்றதைவிட அதிகமாக செய்யமுடிகிறது. “தனித்து வேலை செய்தால் நாம் ஒரு துளி, ஆனால் இணைந்து வேலை செய்தால் நாம் சமுத்திரம்.”

 

தேவனே என் துணையாளர்

என் நண்பர் ராலே தனது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை நோக்கி விரைகிறார்! அவரை நான் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எனக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஆதாராமாக அவர் இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஓர் புத்தகம் எழுதும் பணியை நிறைவுசெய்துவிட்டு, வேறொரு வேலையை செய்வதாக என்னிடம் கூறினார். அவற்றைக் கேட்க எனக்கு ஆர்வமாயிருந்தது ஆனால் ஆச்சரியப்படவில்லை. 

தனது எண்பத்தைந்து வயதில், வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள காலேப் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை. தேவன் இஸ்ரவேலுக்கு வாக்களித்த கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்காக பல சகாப்தங்களாக வனாந்தர வாழ்க்கை மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், தேவபக்தியும் விசுவாசமும் அவரை தாங்கியது. அவர், “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:11) என்று உரைக்கிறார். அவர் எந்த வழிகளில் ஜெயங்கொள்வார்? “கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன்” (வச. 12) என்று காலேப் பதிலளிக்கிறார். 

வயது, வாழ்க்கையின் நிலை அல்லது சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனை முழுமனதோடு பற்றிகொள்ளும் யாவருக்கும் தேவன் உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். நமக்கு உதவும் நம் இரட்சகராகிய இயேசுவில், தேவன் வெளிப்பட்டார். சுவிசேஷங்கள், கிறிஸ்துவிடத்திலிருந்து தேவன்மீது விசுவாசம் வைப்பதை நமக்கு போதிக்கிறது. உதவிக்காக தேவனை அண்டிய யாவருக்கும் தேவன் தன் அக்கறையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எபிரெய நிருப ஆசிரியர் “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபிரெயர் 13:6) என்று அறிக்கையிடுகிறார். இளைஞரோ அல்லது வயதானவரோ, பலவீனமானவரோ அல்லது பலவானோ, கட்டுண்டவரோ அல்லது சுதந்திரவாளியோ, வேகமாக ஓடுகிறவரோ அல்லது முடவனோ, யாராக இருந்தாலும் இன்று அவருடைய உதவியைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுப்பது எது?