எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜெனிபர் பென்சன் ஷுல்ட்கட்டுரைகள்

கிறிஸ்துவுக்காக உற்சாகத்தை பகிர்தல்

எங்கள் அயலகத்தரான மணியை நாங்கள் முதன்முதலில் சந்தித்தபோது, ​​அவர் கையில் வைத்திருந்த பையிலிருந்து நன்கு தேய்ந்த வேதாகமத்தை வெளியே எடுத்தார். கண்கள் பிரகாசிக்க, அவர் வேதத்தைப் பற்றி விவாதிக்க விரும்புகிறீர்களா என்று கேட்டார். நாங்களும் தலையசைக்க, அவர் குறிப்பெடுத்த சில பத்திகளை புரட்டினார். அவர் தனது குறிப்புகள் நிறைந்த ஒரு பதிவேட்டை எங்களிடம் காட்டினார், மேலும் கணினியை பயன்படுத்தி விளக்க இது தொடர்பான பிற தகவல்களை தான் தயாரித்திருப்பதாக கூறினார்.

அவர் ஒரு கடினமான குடும்ப சூழ்நிலையிலிருந்து எவ்வாறு வந்தார் என்பதை எங்களிடம் கூறினார். மேலும், தனியாக மோசமான நிலையில், இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் தனது நம்பிக்கையின் அடித்தளமாக ஏற்றுக்கொண்டார் (அப்போஸ்தலர் 4:12). வேதத்தின் கோட்பாடுகளைப் பின்பற்ற ஆவியானவர் உதவியதால் அவருடைய வாழ்க்கை மாறிவிட்டது. மணி தனது வாழ்க்கையை பல ஆண்டுகளுக்கு முன்பே தேவனிடம் அர்ப்பணித்திருந்தாலும், அவரது உற்சாகம் புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் இருந்தது.

இவரது வைராக்கியம்; இயேசுவுடன் பல வருடங்கள் நடந்துகொண்டிருந்த ஒருவராக எனது ஆவிக்குரிய ஈடுபாட்டை கருத்தில் கொள்ள என்னை தூண்டியது. "அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்" (ரோமர் 12:11) என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். இயேசு எனக்காகச் செய்த அனைத்திற்கும் தொடர்ந்து நன்றி செலுத்துவதைப் பிரதிபலிக்கும் மனப்பான்மையை என்னில் வளர்க்க வேதத்தை நான் அனுமதிக்காத வரை, அது ஒரு கடினமான கட்டளையாக தோன்றுகிறது.

வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் உணர்வுபூர்வமான ஏற்றத் தாழ்வுகளைப் போலல்லாமல், கிறிஸ்துவுக்கான வைராக்கியம் அவருடன் எப்போதும் பெருகிக்கொண்டேயிருக்கும் உறவிலிருந்தே வருகிறது. அவரைப் பற்றி நாம் எவ்வளவு அதிகமாகக் கற்றுக்கொள்கிறோமோ, அவ்வளவு விலைமதிப்பற்றவராக அவர் மாறுகிறார், மேலும் அவருடைய நற்குணம் நம் ஆத்துமாவை நிரப்பி இவ்வுலகில் வழிந்தோடுகிறது.

நட்சத்திர வீரரின் தாழ்மை

ஒரு போட்டிக்குப் பின், ஒரு கல்லூரி கூடைப்பந்து நட்சத்திர வீரர், காகிதம் மற்றும் உணவுக் குப்பைகளை அகற்றிய துப்புரவாளர்களுக்கு உதவினார். இதை ரசிகர் ஒருவர் படமெடுத்து வெளியிட்டதை, எண்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்தனர். ஒருவர் கூறுகையில், [அந்த வீரன்] "உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் மிகுந்த தாழ்மையான மனிதர்களில் ஒருவர்" என்றார். எந்த ஒரு கூடைப்பந்து வீரரும் தன் அணியின் வெற்றியை சகவீரர்களுடன் இணைந்து கொண்டாடுவது சகஜம். அதற்கு மாறாக, அவர் இப்படிப்பட்ட கைமாறு கிடைக்காத சேவைக்கு முன்வந்தார்.

தாழ்மையின் விசேஷித்த குணம் இயேசுவில் காணப்பட்டது, அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். (பிலிப்பியர் 2:7). இயேசு அதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை, ஆனால் அவர் மனமுவந்து இதைச் செய்தார். பூமியில் அவருடைய ஊழியத்தில் போதிப்பது, குணப்படுத்துவது, அனைவரையும் நேசித்து அவர்களை இரட்சிக்க மரித்து உயிரோடு எழுவது ஆகியவை அடங்கும்.

நம்மை மிகவும் அற்பமான வேலையை செய்யும்படி உந்தலாம், இருப்பினும் இந்த தாழ்மை பிறருக்கான நமது அணுகுமுறையில் கலந்து வெளிப்படுமானால், அது இன்னும் ஆற்றல் வாய்ந்ததாய் இருக்கும். மெய்யான தாழ்மை என்பது நம் உள்ளார்ந்த சுபாவமாகும். இது நமது செயல்களை மட்டுமல்லாமல், நமது முக்கியத்துவங்களையும் மாற்றும் "ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ண” (வ.3) தூண்டுகிறது.

எழுத்தாளரும், பிரசங்கியாருமான ஆண்ட்ரூ முரே, "தாழ்மை என்பது பரிசுத்தத்தின் மலர்ச்சியும் அழகும்" என்று கூறினார் அவருடைய ஆவியின் வல்லமையால், கிறிஸ்துவின் சிந்தையைப் பிரதிபலித்திட, நம் வாழ்வும் இவ்வழகைப் பிரதிபலிக்கட்டும். (வ.2:5).

ஒரு மெல்லிய சத்தம்

நியூயார்க் நகரின் கிராண்ட் சென்ட்ரல் ஸ்டேஷனில் உள்ள கிசுகிசுக்கும் சுவர், அப்பகுதியின் ஆரவாரத்திலிருந்து ஒரு மென்மையான உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த தனித்துவமான இடம் முப்பது அடி தூரத்தில் இருந்து மக்கள் அமைதியான செய்திகளை தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது. கிரானைட் வளைவின் அடிவாரத்தில் ஒருவர் நின்று சுவரில் மென்மையாகப் பேசும்போது, ஒலி அலைகள் வளைந்த கல்லின் மேல் ஏறி, மறுபுறம் கேட்பவருக்குப் பயணிக்கின்றன.

யோபு கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்த சோகத்தால் நிரம்பியபோது, தன்னை சுற்றியிருக்கும் ஆரவாரத்தின் மத்தியில் ஒரு மெல்லிய சத்தத்தைக் கேட்க நேரிட்டது (யோபு 1:13-19; 2:7). அவரது நண்பர்கள் தங்கள் கருத்துக்களைப் பேசினர். அவரது சொந்த எண்ணங்கள் முடிவில்லாமல் பொங்கின. மேலும் அவரது இருப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் பிரச்சனை ஆக்கிரமித்தது. ஆனாலும், இயற்கையின் மகத்துவம் தேவனுடைய தெய்வீக சக்தியைப் பற்றி அவரிடம் மென்மையாகப் பேசியது.

வானத்தின் மகிமை, விண்வெளியில் நிறுத்தப்பட்ட பூமியின் மர்மம் மற்றும் அடிவானத்தின் உறுதிப்பாடு ஆகியவை, உலகம் தேவனுடைய உள்ளங்கையில் இருப்பதை யோபுக்கு நினைவூட்டியது (26:7-11). கொந்தளிக்கும் கடலும், சலசலக்கும் சூழ்நிலையும் கூட, “இதோ, இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்” (வச. 14) என்று சொல்லத் தூண்டியது. 

உலகின் அதிசயங்கள் தேவனுடைய மகத்துவத்தின் ஒரு பகுதியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்றால், அவருடைய சக்தி அதைப் புரிந்துகொள்ளும் திறனை மீறுகிறது என்பது தெளிவாகிறது. உடைந்த காலங்களில், இது நமக்கு நம்பிக்கையைத் தருகிறது. துன்பத்தின் நேரத்தில் யோபுவுக்கு தேவன் செய்த நன்மைகள் உட்பட அவரால் எதையும் செய்ய முடியும். 

அழகான வடிவமைப்பு

ஒரு சர்வதேச ஆராய்ச்சிக் குழு, உழவாரன் என்னும் ஒரு குறிப்பிட்ட பறவையின் அசைவுகளைப் பிரதிபலிக்கும் ஃபிளாப்பிங்-விங் ட்ரோனை உருவாக்கியுள்ளது. இந்த உழவாரன் குருவிகள் மணிக்கு தொண்ணூறு மைல்கள் வரை பறக்கவும், வட்டமடிக்கவும், மூழ்கவும், விரைவாக திரும்பவும், திடீரென்று நிறுத்தவும் முடியும். இருப்பினும், ஆர்னிதோப்டர் ட்ரோன் என்னும் பறக்கும் எந்திரம் இன்னும் பறவையை விட தாழ்வானது. பறவைகளுக்கு “பல தசைகள் உள்ளன, அவை நம்பமுடியாத வேகத்தில் பறக்கவும், இறக்கைகளை மடக்கவும், திருப்பவும், இறகு துளைகளைத் திறக்கவும் மற்றும் ஆற்றலைச் சேமிக்கவும் உதவுகின்றன” என்று ஒரு ஆராய்ச்சியாளர் கூறுகிறார். அவரது ஆய்வின் முடிவில், “பறக்கும் உயிரின விமானத்தின் 10 சதவிகிதத்தை” மட்டுமே எங்களால் கண்டறிய முடிந்தது என்று அவர் ஒப்புக்கொள்கிறார். 

இந்த உலகத்தில் வாழும் உயிரினங்களுக்கு தேவன் அனைத்து சிறப்பியல்புகளையும் அருளியிருக்கிறார். அவற்றை தன்மைகளை ஆய்வுசெய்து அறிந்துகொள்வது நம்முடைய ஞானத்திற்கு பலம் சேர்க்கும். வாழ்க்கைக்கு தேவையான வாழ்வாதாரங்களை சேகரிக்கும் எறும்பு, தங்கள் வீட்டை கன்மலையில் தோண்டிவைக்கும் குழிமுசல்கள், கூட்டமாய் அணிவகுத்து வரும் வெட்டுக்கிளிகள் (நீதிமொழிகள் 30:25-27) ஆகியவைகள் நமக்கு விலைமதிப்பற்ற பாடங்களை கற்பிக்கிறது. 

தேவன் தன்னுடைய ஞானத்தினாலே பூமியை சிருஷ்டித்தார் என்று வேதம் சொல்லுகிறது (எரேமியா 10:12), அவருடைய அன்றாட சிருஷ்டிப்பின் இறுதியில் அவர் தன்னுடைய படைப்பை நல்லது” என்று கண்டார் (ஆதியாகமம் 1:4,10,12,18,21,25,31). “வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும்” (வச. 20) சிருஷ்டித்த அதே தேவன், அவற்றை புரிந்துகொள்வதற்கான ஞானத்தையும் நமக்கு அருளியிருக்கிறார். இன்று, அவருடைய இந்த அழகான இயற்கை படைப்பிலிருந்து நாம் கற்றுக்கொள்ள பிரயாசப்படுவோம்.

வழிநடத்துதலை ஏற்றல்

அந்த கன்வென்ஷன் ஹால் முழுவதும் இருளாக்கப்பட்டது. அதில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் அர்ப்பணிப்பு ஜெபத்திற்காய் தங்கள் தலைகளை தாழ்த்தினர். வெளிநாட்டில் ஊழியம் செய்ய அழைக்கப்பட்டவர்களை அவர் வரவேற்றபோது, என் தோழி லினெட் தனது இருக்கையை விட்டு எழுந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. அவள் பிலிப்பைன்ஸில் வாழ்ந்து ஊழியம் செய்வதாக உறுதியளித்தார். ஆனாலும் எனக்கு நிற்க ஆசை வரவில்லை. எனது சொந்த நாட்டில் உள்ள தேவைகளைப் பார்த்து, என் நாட்டு மக்களுக்கே தேவனுடைய அன்பைப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். ஆனால் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, நான் வேறொரு நாட்டில் என் வீட்டை உருவாக்கி, தேவன் எனக்குக் காண்பிக்கும் மக்களுக்கு அவருடைய அன்பைக் குறித்து சொல்லுவேன். நான் எதிர்பார்த்ததை விட வித்தியாசமான ஊழியத்திற்கு தேவன் என்னை அழைத்தார் என்பதை உணர்ந்தவுடன், என்னுடைய வாழ்க்கையை நான் எப்படி வாழப்போகிறேன் என்னும் என்னுடைய எண்ணம் மாறியது. 

மீன்பிடித்துக்கொண்டிருந்த தன்னுடைய சீஷர்கள் உட்பட இயேசு தாம் சந்தித்த யாவரையும் ஆச்சரியப்படுத்தினார். மீன்களைப் பிடிக்கும் ஒரு புதிய யுக்தியை இயேசு கற்றுக்கொடுத்தபோது, பேதுருவும் அந்திரேயாவும் தங்களுடைய வலைகளை விட்டுவிட்டு, அவரைப் பின்பற்றினார்கள் (மத்தேயு 4:20). யாக்கோபும் யோவானும் தங்களுடைய படகை விட்டுவிட்டு அவருக்கு பின்சென்றனர் (வச. 22). இயேசு அவர்களுக்கு கொடுத்த ஆச்சரியத்தை பின்பற்றி, எங்கு போகிறோம் என்பதை அறியாமல் அவர்கள் புறப்பட்டு சென்றார்கள். 

தேவன் பெரும்பாலானவர்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கே ஊழியம் செய்யும்படிக்கு அழைப்பு விடுக்கிறார். நாம் தரித்திருந்து ஊழியம் செய்கிறோமோ அல்லது வேறிடத்திற்கு புறப்பட்டுபோய் ஊழியம்செய்கிறோமோ, நாம் சற்றும் கற்பனை செய்யாத வழியில் அவர் நம்மை ஆச்சரியத்தினால் நிரப்பி வழிநடத்துவார்.

ஜெபத்தினால் கிரியைசெய்தல்

என் மகனுக்கு எலும்பியல் அறுவை சிகிச்சை அவசியப்பட்டபோது, அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு நான் நன்றியுள்ளவனாக இருந்தேன். பணி ஓய்வுபெறும் தருவாயில் இருந்த அந்த மருத்துவர், இதே பிரச்சனையில் இருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவுவதாக எங்களுக்கு உறுதியளித்தார். ஆகிலும் அவர் அறுவை சிகிச்சையை துவங்கும் முன்பு ஜெபம் செய்து, அந்த அறுவை சிகிச்சை நலமாய் முடியவேண்டுமென்று தேவனிடம் வேண்டிக்கொண்டார். அவருடைய அந்த ஜெபத்திற்கு நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். 

மிகவும் அனுபவசாலியான யோசபாத் ராஜா, அதுபோன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஜெபம் செய்கிறான். அவனுக்கு எதிராகவும் அவனுடைய ஜனத்துக்கு எதிராகவும் மூன்று தேசங்கள் படையெடுத்து வந்தது. அவனுக்கு ஏற்கனவே இருபது ஆண்டுகள் அனுபவம் இருந்தபோதிலும், என்ன செய்ய வேண்டும் என்று அவன் தேவனிடம் கேட்கிறான். அவன் ஜெபிக்கும்போது, “எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர்” (2 நாளாகமம் 20:9) என்று ஜெபிக்கிறான். மேலும், “நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது” (வச. 12) என்று சொல்லி ஜெபிக்கிறான். 

தனக்கு முன்வைக்கப்பட்ட சவாலை தாழ்மையாய் அணுகிய விதம், உற்சாகத்தையும் அந்த சவாலுக்கு தேவனுடைய இடைபாட்டையும் வரவழைத்தது (வச. 15-17, 22). சிலவேளைகளில் நமக்கு எவ்வளவு தான் அனுபவம் இருந்தாலும், நமது தேவையின்போது தேவனிடத்தில் ஜெபிப்பது என்பது நம்முடைய விசுவாசத்தை பெருகச்செய்கிறது. அவர் நம்மை விட அதிகமாக அறிந்திருக்கிறார் என்பதையும், அனைத்தும் அவருடைய கட்டுப்பாட்டிற்குள் இயங்குகிறது என்பதையும் நமக்கு நினைவுபடுத்துகிறது. விளைவு எப்படியிருந்தாலும் அவர் நம்முடைய விண்ணப்பத்திற்கு பதிலளிக்கக்கூடிய தாழ்மையான இடத்தில் இது நம்மை கொண்டுபோய் வைக்கிறது. 

பெலவீனத்தில் பெலன்

என்னுடைய மகனுக்கு மூன்று வயதிருக்கும்போது, எனக்கு ஒரு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதற்கு ஒருமாத காலம் ஓய்வெடுக்கவேண்டியிருந்தது. அந்த அறுவை சிகிச்சைக்கு முன்பதாக, எங்கள் வீட்டில் இன்னும் கழுவாமல் போடப்பட்டிருந்த பாத்திரங்களை நான் யோசித்துப்பார்த்தேன். சுறுசுறுப்பாய் சுற்றித்திரியும் என் சிறுபிள்ளையை நான் எப்படி பாதுகாக்கப்போகிறேன் என்றும் அடுப்பறையில் நின்று எவ்வாறு சமையல் செய்யப்போகிறேன் என்பதையும் குறித்து என்னால் சற்றும் கற்பனை செய்யமுடியவில்லை. என்னுடைய இந்த பலவீனம் எங்கள் சுமூகமான வாழ்க்கையை பாதித்ததைக் குறித்து நான் சோர்வுற்றேன். 

கிதியோனுடைய சேனைகள் மீதியானியரிடத்தில் யுத்தம்செய்வதற்கு முன்னர் தேவன் அவர்களை பெலவீனமடையச் செய்தார். முதலாவது, பயப்படுகிறவர்கள் திரும்பிப் போகும்படிக்கு சொல்லப்பட்டது. அதில் இருபத்தி இரண்டாயிரம் பேர் திரும்பப் போய்விட்டனர் (நியாயாதிபதிகள் 7:3). மீதமிருந்த பத்தாயிரம் பேர்களில், தண்ணீரை கையில் அள்ளிப் பருகியவர் மட்டும் இருக்கும்படிக்கு கட்டளையிடப்பட்டது. வெறும் மூந்நூரு பேர் மாத்திரம் மீதமிருந்தனர். ஆனால் இந்த குறைவான எண்ணிக்கை அவர்கள் சுயத்தின் மீது நம்பிக்கை வைக்க விடாமல் பாதுகாத்தது (வச. 5-6). அவர்கள் “என் கை என்னை ரட்சித்தது” (வச. 2) என்று இப்போது சொல்லமுடியாது. 

நம்மில் பலர் இதுபோன்ற சோர்வுற்று பெலவீனமான தருணங்களை அனுபவிப்பதுண்டு. இந்த அனுபவம் எனக்கு நேரிடும்போது, தேவன் எனக்கு எவ்வளவு அவசியம் என்பதை அறிந்துகொண்டேன். தேவன் தன்னுடைய ஆவியைக்கொண்டு உள்ளுக்குள்ளும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மூலம் வெளியரங்கமாகவும் என்னை உற்சாகப்படுத்தினார். நான் என்னுடைய சுதந்திரம் பறிபோவதாக எண்ணினேன். ஆனால் தேவனை முற்றிலும் சார்ந்துகொள்ள பழகிக்கொண்டேன். நம்முடைய தேவைகளை நாம் பூர்த்திசெய்ய முடியாத பட்சத்தில், “பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” (2 கொரிந்தியர் 12:9) என்ற வார்த்தைகள் நம்மை தேற்றும். 

தேவனின் கரங்கள் விரிந்துள்ளன

என் கைப்பேசியை முகத்தைச் சுருக்கி பெருமூச்சோடு பார்த்தேன். கவலை என் புருவத்தைச் சுருக்கியது. தோழிக்கும் எனக்கும் எங்கள் குழந்தைகள்  குறித்து கடுமையான கருத்து வேறுபாடு இருந்தது, மேலும் நான் அவளை அழைத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். நான் அதைச் செய்ய விரும்பவில்லை, ஏனென்றால் எங்கள் கருத்துக்கள் இன்னும் முரண்படுகின்றன, ஆனால் நாங்கள் கடைசியாக இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்தபோது நான் தயவாக அல்லது பணிவாக இருக்கவில்லை என்பதை நான் அறிவேன்.

தொலைப்பேசியில் அழைக்கும் முன் நான் யோசித்தேன், அவள் என்னை மன்னிக்கவில்லை என்றால்? அவள் நட்பைத் தொடர விரும்பவில்லை என்றால் என்ன செய்வது? அப்போதுதான், ஒரு பாடலின் வரிகள் நினைவுக்கு வந்து, நான் தேவனிடம் என் பாவத்தை ஒப்புக்கொண்ட தருணத்திற்கு என்னை அழைத்துச் சென்றது. தேவன் என்னை மன்னித்து, குற்ற உணர்ச்சியிலிருந்து என்னை விடுவித்ததை அறிந்ததால் நான் நிம்மதியடைந்தேன்.

உறவு ரீதியான பிரச்சினைகளை நாம் தீர்க்க முயலும்போது பிறர் நமக்கு எவ்வாறு ஒத்துழைப்பார்கள் என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லை. நாம் நமது பங்கிற்குச் செய்யக்கூடியவையெல்லாம், தாழ்மையுடன் மன்னிப்புக் கேட்டு, தேவையான மாற்றங்களைச் செய்வதே. முடிவைத் தேவன் கையாளட்டும். மனிதர்களால் ஏற்படும் தீராத பிரச்சினைகளின் வலியை நாம் தாங்க வேண்டியிருந்தாலும், தேவனோடு நமக்குச் சமாதானம் எப்போதும் உண்டு. தேவனின் கரங்கள் திறந்திருக்கின்றன, நமக்குத் தேவையான கிருபையையும் கருணையையும் காட்ட அவர் காத்திருக்கிறார். "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" (1 யோவான் 1:9).

சரியான இயேசு

குழுவினர் விவாதிக்கவேண்டிய நாவலைக் குறித்து புத்தக கழகத் தலைவர் சொன்ன மாத்திரத்தில், அறையின் அமைதி மறைந்து சலசலப்பு ஏற்படத் துவங்கியது. என் சிநேகிதி ஜோன் உன்னிப்பாக படித்தாள். ஆனால் அந்த நாவலின் முக்கிய திருப்பத்தை அடையாளம் காண அவளால் இயலாமல்போனது. கடைசியில் பார்த்தால், அவள் அதே தலைப்பு கொண்ட வேறொரு புத்தகத்தை வாசித்திருக்கிறாள் என்பது தெரியவந்தது. அவள் தவறான புத்தகத்தை ஆர்வத்தோடு படித்து மகிழ்ந்தாலும், சரியான புத்தகத்தை படித்த மற்ற குழுவினரோடு விவாதத்தில் இணைய அவளால் இயலாமல் போனது. 

கொரிந்திய திருச்சபை விசுவாசிகள் “வேறொரு” இயேசுவை விசுவாசிப்பதை அப்போஸ்தலனாகிய பவுல் விரும்பவில்லை. கள்ளப் போதகர்கள் திருச்சபையில் ஊடுருவி தவறான இயேசுவை அவர்களுக்கு போதித்திருந்தால், அந்த பொய்யை நீங்கள் நம்பியிருப்பீர்கள் என்று அவர்களை பவுல் எச்சரிக்கிறார் (2 கொரிந்தியர் 11:3-4). 

இந்த கள்ளப் போதகர்களின் போதனைகளை பவுல் கண்டித்தார். அவர் கொரிந்திய திருச்சபைக்கு எழுதிய முதல் நிருபத்தில், வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கிறிஸ்துவைக் குறித்து அவர் விளக்கினார். இந்த இயேசுவே “நமது பாவக்களுக்காக மரித்து... மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து... பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்,” இறுதியில் பவுலுக்கும் தரிசமானார் (1 கொரிந்தியர் 15:3-8). இந்த இயேசு தன்னுடைய தெய்வீகத்தை நிரூபிக்கும்பொருட்டு கன்னி மரியாளின் மூலம் இப்பூமியில் அவதரித்து, இம்மானுவேல் (தேவன் நம்மோடு) என்று பெயரிடப்பட்டார் (மத்தேயு 1:20-23).

இது நீங்கள் அறிந்த இயேசுவைப்போல் இருக்கிறதல்லவா? அவரைக் குறித்து வேதத்தில் சொல்லப்பட்ட சத்தியங்கள் அனைத்தையும் புரிந்து ஏற்றுக்கொள்வது என்பது பரலோகத்திற்கு செல்லும் பாதையில் நாம் சரியாய் நடக்கிறோம் என்பதற்கான ஆதாரம். 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார். 

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம். 

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26).

 

இயேசு – மெய்யான சமாதானக் காரணர்

1862, டிசம்பர் 30ஆம் தேதி, அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் மூண்டது. எதிர் துருப்புக்கள் ஓர் ஆற்றின் எதிர்பக்கங்களில் எழுநூறு மீட்டர் இடைவெளியில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் தீ மூட்டி குளிர்காய்ந்துகொண்டிருந்தபோது, மற்றொரு பகுதியில் சிப்பாய்கள் தங்கள் வயலின்களையும் ஹார்மோனியங்களையும் எடுத்துக்கொண்டு “யாங்கி டூடுல்” என்ற இசையை வாசிக்கத் துவங்கினர். பதிலுக்கு, மறுபக்கத்தில் இருந்த வீரர்கள் “டிக்ஸி” என்று ஓர் பாடல் இசையை  வாசித்தனர். அப்படி மாறி மாறி வாசிக்கையில், இறுதியில் இருதரப்பினரும் இணைந்து “ஹோம், ஸ்வீட் ஹோம்” என்ற இசையை வாசித்தனர். ஒன்றுக்கொன்று எதிரிகளாய் இருந்த இரண்டு தேசத்து இராணுவ வீரர்களும் இரவில் இசையைப் பகிர்ந்து, கற்பனைசெய்ய முடியாத அளவு சமாதானத்தை பிரதிபலித்தனர். இருப்பினும் அந்த மெல்லிசைப் போர்நிறுத்தம் குறுகிய காலமே நீடித்தது. மறுநாள் காலை, அவர்கள் தங்கள் இசைக்கருவிகளை கீழே வைத்துவிட்டு, தங்கள் துப்பாக்கிகளை கையில் எடுத்தனர். அந்த போரில் 24,645 வீரர்கள் உயிரிழந்தனர்.

அமைதியை உருவாக்குவதற்கான நமது மனித முயற்சிகள் தவிர்க்க முடியாமல் பெலனற்றுபோகிறது. பகைமைகள் ஓர் இடத்தில் அணைந்து, வேறொரு இடத்தில் நெருப்பை பற்றவைக்கிறது. ஓர் குடும்பப் பிரச்சனை திடீரென்று முடிவுக்கு வரும், சிறிது நாட்கள் கழித்து மறுபடியும் சூடுபிடிக்கும். நமக்கு நம்பிக்கையான சமாதானக் காரணர் தேவன் மட்டுமே என்று வேதம் சொல்லுகிறது. “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டு” (16:33) என்று இயேசு தெளிவுபடுத்துகிறார். இயேசுவில் நாம் இளைப்பாறக்கூடும். அவருடைய சமாதானப் பணியில் நாமும் இணைந்துகொள்ளும்போது, மெய்யான சமாதானத்தை அவர் நமக்கு அருளுவார். 

இவ்வுலகத்தின் உபத்திரவ பாதையிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியாது என்று இயேசு கூறுகிறார். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (வச. 33) என்று இயேசு சொல்லுகிறார். நம்முடைய முயற்சிகள் பல சமயங்களில் பயனற்றவையாக இருந்தாலும், நம் அன்பான தேவன் (வச. 27) இந்த உடைந்த உலகில் நமக்கு சமாதானத்தை அருளுகிறார். 

 

கிறிஸ்துவின் சமூகம்

“வீட்டையும், என் மனைவி, மகன் மற்றும் மகளையும் மறந்துவிடுவதே வெற்றிக்கான ஒரே வழி என்று எனக்குத் தெரியும்; ஆனால் என்னால் அதை செய்ய முடியாது என்று கண்டுபிடித்தேன்; அவை என் இதயம் மற்றும் ஆன்மாவில் பிணைக்கப்பட்டுள்ளன” என்று ஜோர்டன் கூறினார். அவர் ஓர் தொலைதூரப் பகுதியில் தனியாக, ஓர் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுக்கொண்டிருந்தார். அங்கு போட்டியாளர்கள் முடிந்தவரை குறைந்தபட்ச பொருட்களுடன் சமவெளியில் உயிர்வாழுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அங்கிருக்கக்கூடிய பயங்கரமான கரடிகள், உறைபனி, காயங்கள் மற்றும் பசி ஆகியவைகளை அவரால் சமாளிக்க முடிந்திருந்தும், தன் குடும்பத்தைவிட்டு பிரிந்திருக்கும் தனிமையை அவரால் மேற்கொள்ள முடியவில்லை. அந்த ஆட்டத்தை கைவிட அவைகள் அவரை கட்டாயப்படுத்தியது. 

வனாந்தரத்தில் உயிர்வாழ தேவையான அனைத்து காரியங்களும் நம்மிடம் இருந்தாலும், நம்முடைய சமூகத்தினின்று நாம் பிரிந்திருப்பது நம்மை தோல்விக்கு நேராய் நடத்தக்கூடும். பிரசங்கி புத்தகத்தில் ஞானி, “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்... ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்” (4:9-10) என்று குறிப்பிடுகிறார். கிறிஸ்துவை கனப்படுத்தும் சமூகம், குழப்பம் ஏற்படுத்தினாலும்கூட, அவைகள் நமது வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இந்த உலகத்தின் சோதனைகளை நாம் சொந்தமாகச் சமாளிக்க முயற்சித்தால் அவைகளை நாம் மேற்கொள்ள முடியாது. “ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்” (வச. 8) அவனுடைய பிரயாசம் விருதாவாயிருக்கிறது. சமூகத்தில் இல்லாமல் தனித்திருந்தால் நாம் அபாயத்தை சந்திக்கக்கூடும் (வச. 11-12). “முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது” (வச. 12). அன்பான, கிறிஸ்துவை மையமாகக் கொண்ட சமூகத்தின் பரிசு, ஊக்கத்தை அளிப்பது மட்டுமல்லாமல், சவாலான சூழ்நிலைகளிலும் செழிக்க நமக்கு பலத்தையும் அளிக்கிறது. நமக்கு மற்றவர்களின் ஆதரவும் அவசியப்படுகிறது.