எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஜெனிபர் பென்சன் ஷுல்ட்கட்டுரைகள்

அழகான வடிவமைப்பு

ஒரு சர்வதேச ஆராய்ச்சிக் குழு, உழவாரன் என்னும் ஒரு குறிப்பிட்ட பறவையின் அசைவுகளைப் பிரதிபலிக்கும் ஃபிளாப்பிங்-விங் ட்ரோனை உருவாக்கியுள்ளது. இந்த உழவாரன் குருவிகள் மணிக்கு தொண்ணூறு மைல்கள் வரை பறக்கவும், வட்டமடிக்கவும், மூழ்கவும், விரைவாக திரும்பவும், திடீரென்று நிறுத்தவும் முடியும். இருப்பினும், ஆர்னிதோப்டர் ட்ரோன் என்னும் பறக்கும் எந்திரம் இன்னும் பறவையை விட தாழ்வானது. பறவைகளுக்கு “பல தசைகள் உள்ளன, அவை நம்பமுடியாத வேகத்தில் பறக்கவும், இறக்கைகளை மடக்கவும், திருப்பவும், இறகு துளைகளைத் திறக்கவும் மற்றும் ஆற்றலைச் சேமிக்கவும் உதவுகின்றன” என்று ஒரு ஆராய்ச்சியாளர் கூறுகிறார். அவரது ஆய்வின் முடிவில், “பறக்கும் உயிரின விமானத்தின் 10 சதவிகிதத்தை” மட்டுமே எங்களால் கண்டறிய முடிந்தது என்று அவர் ஒப்புக்கொள்கிறார்.

இந்த உலகத்தில் வாழும் உயிரினங்களுக்கு தேவன் அனைத்து சிறப்பியல்புகளையும் அருளியிருக்கிறார். அவற்றை தன்மைகளை ஆய்வுசெய்து அறிந்துகொள்வது நம்முடைய ஞானத்திற்கு பலம் சேர்க்கும். வாழ்க்கைக்கு தேவையான வாழ்வாதாரங்களை சேகரிக்கும் எறும்பு, தங்கள் வீட்டை கன்மலையில் தோண்டிவைக்கும் குழிமுசல்கள், கூட்டமாய் அணிவகுத்து வரும் வெட்டுக்கிளிகள் (நீதிமொழிகள் 30:25-27) ஆகியவைகள் நமக்கு விலைமதிப்பற்ற பாடங்களை கற்பிக்கிறது.

தேவன் தன்னுடைய ஞானத்தினாலே பூமியை சிருஷ்டித்தார் என்று வேதம் சொல்லுகிறது (எரேமியா 10:12), அவருடைய அன்றாட சிருஷ்டிப்பின் இறுதியில் அவர் தன்னுடைய படைப்பை நல்லது” என்று கண்டார் (ஆதியாகமம் 1:4,10,12,18,21,25,31). “வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும்” (வச. 20) சிருஷ்டித்த அதே தேவன், அவற்றை புரிந்துகொள்வதற்கான ஞானத்தையும் நமக்கு அருளியிருக்கிறார். இன்று, அவருடைய இந்த அழகான இயற்கை படைப்பிலிருந்து நாம் கற்றுக்கொள்ள பிரயாசப்படுவோம்.  

வழிநடத்துதலை ஏற்றல்

என்னுடைய சிநேகிதி மிச்செல் என் மகளுக்கு குதிரை ஏற்றம் கற்றுக்கொடுத்தபோது, அந்த குதிரை லாயத்தில் இருந்த தோல் மற்றும் வைக்கோல் வாசனை காற்றில் வந்தது. மிச்செலின் வெள்ளைக் குதிரையின் வாயில் எப்படி கயிற்றின் வளையத்தைப் பொறுத்தவேண்டும் என்று கற்றுக்கொடுத்தபோது, அந்த குதிரை வாயை திறந்து காண்பித்தது. அதன் காதுகளுக்கு மேல் கடிவாளத்தை இழுத்தபோது, குதிரையை மெதுவாக நகர்த்துவதற்கும் இடது அல்லது வலது பக்கம் அதை இயக்குவதற்கும் அனுமதித்ததால், அந்த கடிவாளத்தில் இருக்கும் அந்த வளையம் மிகவும் முக்கியமானது என்று மிச்செல் விளக்கினார்.

குதிரையின் வாயோராமாய் இருக்கும் அந்த வளையம் மனிதனின் நாக்கைப் போன்று முக்கியமானது. இரண்டும் பெரிய ஒன்றை கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. அந்த சிறு கடிவாள வளையம் குதிரையையும், சிறிய நாக்கு மனிதனின் வார்த்தைகளையும் கட்டுப்படுத்துகிறது (யாக்கோபு 3:3,5).

நம்முடைய வார்த்தைகள் அனைத்து திசைகளுக்கும் தீவிரமாய் பரம்பும். “அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்” (வச. 9). ஆனால், வார்த்தைகள் இருதயத்திலிருந்து புறப்படுவதால், நாவை கட்டுப்படுத்துவது கடினம் என்று வேதம் நமக்கு எச்சரிக்கை விடுக்கிறது (லூக்கா 6:45). ஆனால் நமக்கும் வாசமாயிருக்கும் கர்த்தருடைய ஆவியானவர், பொறுமை, நற்குணம், இச்சையடக்கம் ஆகிய ஆவியின் சுபாவங்களில் வளருவதற்கு நமக்கு உதவிசெய்கிறார் (கலாத்தியர் 5:22-23). ஆவியானவரோடு நாம் ஒத்துழைத்தால், நம்முடைய இருதயத்தில் மாற்றம் ஏற்படுகிறது. அது நம்முடைய வார்த்தைகளை கட்டுப்படுத்துகிறது. வீணான வார்த்தைகள் துதியின் சத்தமாய் மாறுகிறது. பொய்யானது சத்தியமாய் மாறுகிறது. விமர்சன உதடுகள் ஊக்கப்படுத்தும் வார்த்தைகளை பேச எத்தனிக்கிறது.

நாவை அடக்குவது என்பது சரியான வார்த்தைகளை பேசுவதற்கான பயிற்சி மட்டுமன்று. அது ஆவியானவருடைய வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டு, உலகத்திற்கு தேவையான தயவும் ஊக்கப்படுத்தும் வார்த்தைகளையும் நம்மிலிருந்து பிறப்பிக்கச் செய்யும் ஆவியானவருடைய கிரியை.

நம் எல்லா நாட்களின் தேவன்

ஒரு வெற்றியடையாத அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஜோனின் மருத்துவர் ஐந்து வாரங்களில் மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார். நேரம் செல்ல செல்ல, பதட்டம் உருவானது. ஜோனும் அவரது கணவரும் வயதுசென்றவர்கள். அவர்களது குடும்பம் வெகு தொலைவில் வசித்து வந்தது. அவர்கள் இனி புதிய இடத்திற்கு செல்லவேண்டும். சிக்கலான மருத்துவமனை அமைப்பிற்கு செல்ல வேண்டும். மற்றொரு புதிய மருத்துவரை அவர்கள் சந்திக்கவேண்டும்.

இந்த சூழ்நிலைகள் அவர்களை மேற்கொண்டாலும், தேவன் அவர்களை பாதுகாத்தார். அவர்கள் காரில் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு வந்துகொண்டிருந்தபோது, அவர்களுக்கு வழிகாட்டும் ஜீ.பி.எஸ் சிஸ்டம் தோல்வியடைந்தது. ஆனால் அவர்களிடம் வழிகாட்டும் மேப் பேப்பரில் கைவசம் இருந்தால், குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து சேரமுடிந்தது. தேவன் அந்த ஞானத்தை அவர்களுக்கு அருளினார். அந்த மருத்துவமனையில் ஒரு கிறிஸ்தவ போதகர் அவர்களுக்காக ஜெபம் செய்து, மீண்டும் அன்றைக்கு மாலையில் அவர்களுக்கு உதவிசெய்தார். தேவன் அவர்களுக்கு உதவி அருளினார். அந்த அறுவைச் சிகிச்சைக்கு பிறகு, அது நல்ல முறையில் நடத்தேறியது என்னும் நற்செய்தியையும் ஜோன் கேள்விப்பட்டார்.

நாம் எல்லா நேரத்திலும் சுகத்தையும் மீட்டையும் பெற்றுகொள்ளாவிட்டாலும், இளைஞரோ முதியவரோ, தேவன் பெலவீனமான அனைவரோடும் எப்போதும் இருக்கிறார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, பாபிலோனின் சிறையிருப்பு இஸ்ரவேலர்களைப் பலவீனப்படுத்தியபோது, தேவன் அவர்களைப் பிறப்பிலிருந்தே ஆதரித்தார் என்றும் அவர்களைத் தொடர்ந்து பாதுகாப்பார் என்றும் ஏசாயா அவர்களுக்கு நினைப்பூட்டினார். “உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்” (ஏசாயா 46:4) என்று தீர்க்கதரிசியின் மூலம் தேவன் அவர்களுக்கு தெரியப்படுத்தினார்.

தேவனுடைய தேவை நமக்கு அவசியப்படும்போது, அவர் நம்மை கைவிடுவதில்லை. அவர் நம் தேவைகளை சந்தித்து, நம்முடைய ஜீவியத்தின் அனைத்து பகுதிகளிலும் நம்மோடிருக்கிறார் என்பதை நமக்கு நினைப்பூட்டிக்கொண்டே இருக்கிறார். அவர் எல்லா நாட்களிலும் நம்முடைய தேவன்.

ஜெபத்தினால் கிரியைசெய்தல்

என் மகனுக்கு எலும்பியல் அறுவை சிகிச்சை அவசியப்பட்டபோது, அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு நான் நன்றியுள்ளவனாக இருந்தேன். பணி ஓய்வுபெறும் தருவாயில் இருந்த அந்த மருத்துவர், இதே பிரச்சனையில் இருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவுவதாக எங்களுக்கு உறுதியளித்தார். ஆகிலும் அவர் அறுவை சிகிச்சையை துவங்கும் முன்பு ஜெபம் செய்து, அந்த அறுவை சிகிச்சை நலமாய் முடியவேண்டுமென்று தேவனிடம் வேண்டிக்கொண்டார். அவருடைய அந்த ஜெபத்திற்கு நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.  
மிகவும் அனுபவசாலியான யோசபாத் ராஜா, அதுபோன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஜெபம் செய்கிறான். அவனுக்கு எதிராகவும் அவனுடைய ஜனத்துக்கு எதிராகவும் மூன்று தேசங்கள் படையெடுத்து வந்தது. அவனுக்கு ஏற்கனவே இருபது ஆண்டுகள் அனுபவம் இருந்தபோதிலும், என்ன செய்ய வேண்டும் என்று அவன் தேவனிடம் கேட்கிறான். அவன் ஜெபிக்கும்போது, “எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர்” (2 நாளாகமம் 20:9) என்று ஜெபிக்கிறான். மேலும், “நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது” (வச. 12) என்று சொல்லி ஜெபிக்கிறான்.  
தனக்கு முன்வைக்கப்பட்ட சவாலை தாழ்மையாய் அணுகிய விதம், உற்சாகத்தையும் அந்த சவாலுக்கு தேவனுடைய இடைபாட்டையும் வரவழைத்தது (வச. 15-17, 22). சிலவேளைகளில் நமக்கு எவ்வளவு தான் அனுபவம் இருந்தாலும், நமது தேவையின்போது தேவனிடத்தில் ஜெபிப்பது என்பது நம்முடைய விசுவாசத்தை பெருகச்செய்கிறது. அவர் நம்மை விட அதிகமாக அறிந்திருக்கிறார் என்பதையும், அனைத்தும் அவருடைய கட்டுப்பாட்டிற்குள் இயங்குகிறது என்பதையும் நமக்கு நினைவுபடுத்துகிறது. விளைவு எப்படியிருந்தாலும் அவர் நம்முடைய விண்ணப்பத்திற்கு பதிலளிக்கக்கூடிய தாழ்மையான இடத்தில் இது நம்மை கொண்டுபோய் வைக்கிறது.  

பெலவீனத்தில் பெலன்

என்னுடைய மகனுக்கு மூன்று வயதிருக்கும்போது, எனக்கு ஒரு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதற்கு ஒருமாத காலம் ஓய்வெடுக்கவேண்டியிருந்தது. அந்த அறுவை சிகிச்சைக்கு முன்பதாக, எங்கள் வீட்டில் இன்னும் கழுவாமல் போடப்பட்டிருந்த பாத்திரங்களை நான் யோசித்துப்பார்த்தேன். சுறுசுறுப்பாய் சுற்றித்திரியும் என் சிறுபிள்ளையை நான் எப்படி பாதுகாக்கப்போகிறேன் என்றும் அடுப்பறையில் நின்று எவ்வாறு சமையல் செய்யப்போகிறேன் என்பதையும் குறித்து என்னால் சற்றும் கற்பனை செய்யமுடியவில்லை. என்னுடைய இந்த பலவீனம் எங்கள் சுமூகமான வாழ்க்கையை பாதித்ததைக் குறித்து நான் சோர்வுற்றேன்.  
கிதியோனுடைய சேனைகள் மீதியானியரிடத்தில் யுத்தம்செய்வதற்கு முன்னர் தேவன் அவர்களை பெலவீனமடையச் செய்தார். முதலாவது, பயப்படுகிறவர்கள் திரும்பிப் போகும்படிக்கு சொல்லப்பட்டது. அதில் இருபத்தி இரண்டாயிரம் பேர் திரும்பப் போய்விட்டனர் (நியாயாதிபதிகள் 7:3). மீதமிருந்த பத்தாயிரம் பேர்களில், தண்ணீரை கையில் அள்ளிப் பருகியவர் மட்டும் இருக்கும்படிக்கு கட்டளையிடப்பட்டது. வெறும் மூந்நூரு பேர் மாத்திரம் மீதமிருந்தனர். ஆனால் இந்த குறைவான எண்ணிக்கை அவர்கள் சுயத்தின் மீது நம்பிக்கை வைக்க விடாமல் பாதுகாத்தது (வச. 5-6). அவர்கள் “என் கை என்னை ரட்சித்தது” (வச. 2) என்று இப்போது சொல்லமுடியாது.  
நம்மில் பலர் இதுபோன்ற சோர்வுற்று பெலவீனமான தருணங்களை அனுபவிப்பதுண்டு. இந்த அனுபவம் எனக்கு நேரிடும்போது, தேவன் எனக்கு எவ்வளவு அவசியம் என்பதை அறிந்துகொண்டேன். தேவன் தன்னுடைய ஆவியைக்கொண்டு உள்ளுக்குள்ளும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மூலம் வெளியரங்கமாகவும் என்னை உற்சாகப்படுத்தினார். நான் என்னுடைய சுதந்திரம் பறிபோவதாக எண்ணினேன். ஆனால் தேவனை முற்றிலும் சார்ந்துகொள்ள பழகிக்கொண்டேன். நம்முடைய தேவைகளை நாம் பூர்த்திசெய்ய முடியாத பட்சத்தில், “பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” (2 கொரிந்தியர் 12:9) என்ற வார்த்தைகள் நம்மை தேற்றும்.  

நமது திட்டங்களும் தேவ திட்டங்களும்

பல ஆண்டுகளுக்கு முன்பு, என் கணவர் தனது சபையைச் சேர்ந்த ஒரு குழுவினருடன் ஆப்பிரிக்காவுக்குச் செல்ல தீர்மானித்தார். கடைசி நிமிடத்தில், குழுவினர் பயணிக்க முடியாமல் தடைப்பட்டனர். அனைவரும் ஏமாற்றமடைந்தனர், ஆனால் விமான கட்டணம், தங்குமிடம் மற்றும் உணவுக்காக அவர்கள் சேகரித்த பணத்தை அவர்கள் பார்க்க முயற்சித்த மக்களுக்கு நன்கொடையாக வழங்கினர். வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலமாக ஒரு கட்டிடத்தைக் கட்டுவதற்கு மக்கள் அதைப் பயன்படுத்தினர்.

சமீபத்தில், ஒரு ஜெபக்கூட்டத்தில், ​​​​என் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு பயணம் செய்திருந்த கிராமத்தில் வாழ்ந்த ஒருவரைச் சந்தித்தார். இந்த நபர் ஒரு ஆசிரியர், அவர் தினமும் அதே கட்டிடத்தின் வழியாக நடந்து செல்வதாகக் கூறினார். அப்பகுதியில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உபயோகமாகத் தேவன் அதைப் பயன்படுத்தினார் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

நம்முடைய திட்டங்களும், விருப்பங்களும் தேவனின் மனதில் கொண்டிருப்பவற்றோடு எப்போதும் ஒத்துப்போவதில்லை. ஏனென்றால்,  "என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்" (ஏசாயா 55:8). தேவனுடைய வழிகள் நம்மிடமிருந்து வேறுபட்டவை மாத்திரம் அல்ல; அவருடைய வழிகள் "உயர்ந்தவை" மற்றும் சிறந்தவை, ஏனெனில் அவர் செய்வதெல்லாம் அவர் யார் என்பதோடு ஒத்துப்போகிறது (வ.9). அவருக்கு ஊழியஞ்செய்வதற்கான நமது முயற்சிகள் நாம் திட்டமிட்டபடி நடக்காதபோது இந்த சத்தியம் நமக்கு நம்பிக்கையூட்டுகிறது.

சில சூழ்நிலைகளில் தேவன் இடைப்பட்டதை நாம் அறிந்துகொள்வதற்கு, பல ஆண்டுகள் கழித்துத் திரும்பிப் பார்க்க நேரிடலாம். இருப்பினும், தற்போதைக்கு, அவருடைய நாமத்தால் உலகத்தை நாம் தொடர்ந்து எதிர்கொள்ளுகையில், ​​தேவன் எப்போதும் வல்லமையுடன் செயல்படுகிறார் என்பதை நாம் நினைவில் கொள்ளலாம் (வ.11).

 

சுமைகளை அகற்றுதல்

கல்லூரியில், நான் ஒரு பருவ தேர்விற்கு வில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்பைப் படித்தேன். வகுப்பிற்கு ஷேக்ஸ்பியர் எழுதிய அனைத்தையும் கொண்ட மாபெரும் பாடப்புத்தகம் தேவைப்பட்டது. புத்தகம் பல கிலோ எடையுள்ளதாக இருந்தது, நான் அதை ஒரே நேரத்தில் எடுத்துச் செல்ல  சில மணிநேரங்கள் தேவைப்பட்டது. அந்த சுமையைக் கட்டி சுமப்பது  என் முதுகில் காயத்தை ஏற்படுத்தியது, அது இறுதியில் என் புத்தகப்பையில் ஒரு உலோக இணைப்பையும் உடைத்தது!

சில விஷயங்கள் நம்மால் சுமக்க முடியாத அளவுக்கு கனமானவை. உதாரணமாக, கடந்த காலத்தில் உண்டான காயம் கொண்டுவருகிற உணர்வுபூர்மான சுமைகள், கசப்பாலும் வெறுப்பாலும் நம்மை மூழ்கடிக்கலாம். ஆனால், பிறரை மன்னிப்பதாலும், முடிந்தால் அவர்களுடன் ஒப்புரவாவதின் மூலமாகவும் நாம் விடுதலை பெற்றிடத் தேவன் விரும்புகிறார் (கொலோசெயர் 3:13). ஆழமான காயம் ஆற, அதிகமான நேரம் ஆகலாம். பரவாயில்லை. தனது சேஷ்டபுத்திரபாகத்தையும் ,ஆசீர்வாதத்தையும் திருடியதற்காக யாக்கோபை மன்னிக்க ஏசாவுக்கு பல ஆண்டுகள் ஆனது (ஆதியாகமம் 27:36).

இருவரும் இறுதியாக மீண்டும் இணைந்தபோது, ​​​​ஏசா கருணையுடன் தனது சகோதரனை மன்னித்து, "அவனைத் தழுவினார்" (33:4). அவர்கள் இருவரும் கண்ணீர் வடிக்கும்வரை ஒரு வார்த்தை கூட பரிமாறிக்கொள்ளவில்லை. காலப்போக்கில், கொலை செய்யக்கூட தூண்டும் கோபத்தை ஏசா விட்டுவிட்டார் (27:41). அந்த ஆண்டுகளில், யாக்கோபு தனது சகோதரனுக்கு இழைத்த பொல்லாங்கு எப்பேர்பட்டது என்பதை உணர அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் மீண்டும் இணைகையில், முழுவதும் பணிவாகவும் மரியாதையுடனும் நடந்துகொண்டார் (33:8-11).

இறுதியில், இரு சகோதரர்களும் மற்றவரிடமிருந்து எதுவும் தேவைப்படாத நிலைக்கு வந்தனர் (வ. 9, 15). மன்னிக்கவும் மன்னிக்கப்படவும் மற்றும் கடந்த காலத்தின் கனமான சுமையிலிருந்து விடுபட்டு நடப்பது மட்டுமே போதுமானதாயிருந்தது.

கிறிஸ்துவில் நிலைத்திருத்தல்

ஒரு தீ பல்சோரா பாப்டிஸ்ட் தேவாலயத்தை தரைமட்டமாக்கியது. தீ தணிந்த பிறகு தீயணைப்பு மற்றும் சமூக உறுப்பினர்கள் கூடிவந்தபோது, காற்றில் புகை மற்றும் சாம்பலுக்கு இடையே ஒரு கருகிய சிலுவை நிமிர்ந்து நிற்பதைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர். ஒரு தீயணைப்பு வீரர் கருத்து தெரிவிக்கையில், தீ “கட்டிடத்தை எரித்தது, ஆனால் சிலுவையை எரிக்கவில்லை. அந்த கட்டிடம் ஒரு கட்டிடம் தான்; ஆலயம் என்பது அங்கிருக்கும் மக்கள் கூட்டமே என்பதை நினைவுபடுத்துகிறது.” 

தேவாலயம் ஒரு கட்டிடம் அல்ல, ஆனால் மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மீண்டும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் சிலுவையால் ஒன்றுபட்ட ஒரு சமூகம். இயேசு பூமியில் வாழ்ந்தபோது, அவர் பேதுருவிடம் தனது உலகளாவிய தேவாலயத்தைக் கட்டுவதாகக் கூறினார், எதுவும் அதை அழிக்காது (மத்தேயு 16:18). இயேசு உலகெங்கிலும் உள்ள விசுவாசிகளை ஒரு குழுவாகச் சேர்ப்பார், அது காலம் முழுவதும் தொடரும். இந்த சமூகம் கடுமையான சிரமத்தை எதிர்கொள்ளும், ஆனால் அவர்கள் இறுதியில் ஜெயங்கொள்ளுவார்கள். தேவன் அவர்களுக்குள்ளே தங்கி அவர்களை ஆதரிப்பார் (எபேசியர் 2:22).

ஸ்தல தேவாலயங்களை நிறுவுவதற்கு நாம் போராடும்போது, அவை தேங்கி நிற்கும் போது, கட்டிடங்கள் அழிக்கப்படும்போது, அல்லது உலகின் பிற பகுதிகளில் விசுவாசிகள் போராடுவதைப் பற்றி நாம் கவலைப்படும்போது, இயேசு உயிருடன் இருக்கிறார் என்பதை நாம் நினைவில் கொள்ளலாம். தேவ ஜனம் விடாமுயற்சியுடன் செயல்பட அவர் நமக்கு உதவுகிறார். இன்று அவர் கட்டும் தேவாலயத்தின் ஒரு பகுதியாக நாம் இருக்கிறோம். அவர் நம்முடனும் நமக்காகவும் இருக்கிறார். அவருடைய சிலுவை மட்டும் அப்படியே நிலைத்திருக்கிறது. 

 

மகிழ்ச்சியும் ஞானமும்

அடால்ஃப் ஹிட்லர், சிறிய பொய்களைவிட பெரிய பொய்கள் சக்திவாய்ந்தவை என்று நம்பினார். மேலும் அவர் தனது கோட்பாட்டை வெற்றிகரமாக பரிசோதித்தார். அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்தில், அவர் மற்றவர்களின் கருத்துக்களை ஆதரிப்பதில் திருப்தி அடைவதாகக் கூறினார். அவர் ஆட்சிக்கு வந்ததும், யாரையும் துன்புறுத்தவேண்டும் என்ற எண்ணம் தனது கட்சிக்கு இல்லை என்றார். பின்னர், ஊடகங்களை பயன்படுத்தி தன்னை தகப்பனாகவும் ஒழுக்க நெறியாளராகவும் சித்தரித்தார்.

சாத்தான் நம் வாழ்வில் வல்லமை பெற பொய்களைப் பயன்படுத்துகிறான். அனைத்து தருணங்களிலும், அவன் பயம், கோபம் மற்றும் விரக்தியைத் தூண்டுகிறான். ஏனெனில் அவன் “பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாய்” இருக்கிறான் (யோவான் 8:44). சாத்தானால் உண்மையைச் சொல்லமுடியாது, ஏனென்றால் இயேசு சொன்னதுபோல், அவனுக்குள் எந்த உண்மையும் இல்லை.

சாத்தானின் பொய்களில் சிலவைகள் இங்கே. முதலில், நமது பிரார்த்தனைகள் முக்கியமில்லை என்பதே. “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும்பெலனுள்ளதாயிருக்கிறது” (யாக்கோபு 5:16) என்று வேதம் சொல்லுகிறது. இரண்டாவது பொய், “நாம் சிக்கலில் இருக்கும்போது, அதிலிருந்து வெளியேற வழியே இல்லை” என்பதே. இதுவும் தவறானது. “தேவனாலே எல்லாம் கூடும்” (மாற்கு 10:27) என்றும் “சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1 கொரிந்தியர் 10:13) என்றும் வேதம் வாக்களிக்கிறது. மூன்றாவதாக, “தேவன் நம்மை நேசிப்பதில்லை” என்னும் பொய். அது உண்மையல்ல. நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள “தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது” (ரோமர் 8:38-39).

தேவனுடைய சத்தியம் பொய்யைவிட சக்தி வாய்ந்தது. இயேசுவின் போதனைக்கு நாம் அவருடைய வல்லமையில் கீழ்ப்படிந்தால், நாம் "சத்தியத்தை அறிவோம்", பொய்யானதை நிராகரிப்போம். “சத்தியம் நம்மை விடுதலையாக்கும்” (யோவான் 8:31-32).

 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இயேசுவின் சிறந்த வெற்றி

இரண்டாம் உலகப் போரின்போது ஐரோப்பா முழுவதிலும் உள்ள சில இராணுவ முகாம்களில், வீடற்ற சிப்பாய்களுக்காக ஒரு அசாதாரண வகை உபகரணம் கொடுக்கப்பட்டது. அது தான், வித்தியாசமான பியானோ இசைக்கருவி. அவை சாதாரண உலோகத்தின் பத்து சதவிகிதம் மட்டுமே கொண்டிருக்கும் வகையில் சிறப்பாக தயாரிக்கப்பட்டன. மேலும் அவை சிறப்பு நீர்-எதிர்ப்பு பசை மற்றும் பூச்சி எதிர்ப்பு தன்மை கொண்டவாறு வடிமைக்கப்பட்டிருந்தன. அந்த பியானோக்கள் எளிமையானதாய் தெரிந்தாலும், இராணுவ முகாம்களில் இருந்த சிப்பாய்கள் தங்களுக்கு பிரியமான பாடல்களைப் பாடி மணிக்கணக்காய் பொழுதுபோக்கும் வாயப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.  
கிறிஸ்தவர்கள் பொதுவாக துதி பாடல்களை பாடுவது என்பது, வாழ்க்கைப் போராட்டத்தில் அமைதியை காண்பதற்கான ஒரு சிறந்த வழி. யோசபாத் ராஜா, எதிரிகளின் படையெடுப்புப் படைகளை எதிர்கொண்டபோது இதை உண்மையாக அனுபவித்தார் (2 நாளாகமம் 20). பயந்துபோன ராஜா, பிரார்த்தனைக்கும் உபவாசத்துக்கும் எல்லா மக்களையும் அழைத்தான் (வச. 3-4). அதற்குப் பதிலளித்த தேவன், அந்த எதிரிகளை எதிர்கொள்ளுவதற்கு போர்வீரர்களை அழைத்து செல்லும்படிக்கு அறிவுறுத்துகிறார். ஆனால் “இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல” (வச. 17) என்று உறுதியளிக்கிறார். யோசபாத் தேவனை நம்பினான். விசுவாசத்தில் செயல்பட்டான். வீரர்களுக்கு முன்னால் சென்று, தேவன் கொடுக்கப்போகும் வெற்றிக்காக அவரை புகழ்ந்து துதி பாடுவதற்கென்று பாடகர்களை நியமித்தான் (வச. 21). அவர்களின் இசை தொடங்கியதும், அவன் ஆச்சரியவிதமாய் எதிரிகளை தோற்கடித்து தேவ ஜனத்திற்கு மீட்பைக் கொண்டுவருகிறான் (வச. 22). 
நாம் விரும்பும் வேளைகளிலோ அல்லது விதங்களிலோ வெற்றி நம்மை வந்தடைவதில்லை. ஆனால் நமக்கு ஏற்கனவே கிடைத்த பாவம் மற்றும் மரணத்தின் மீது இயேசுவின் இறுதி வெற்றியை நாம் எப்போதும் அறிவிக்க முடியும். ஒரு போராட்டத்தில் இடையில்கூட, தேவனை ஆராதிக்கும் மனநிலையை ஏற்படுத்தி நாம் இளைப்பாறக்கூடும்.  

மேய்ப்பனின் சத்தத்தை அறிதல்

நான் அமெரிக்காவில் ஒரு பண்ணையில் வசிக்கும் சிறுவனாக இருந்தபோது, என்னுடைய நெருங்கிய நண்பருடன் பல மதிய வேளைகளில் சுற்றித் திரிந்து மகிழ்ந்தோம். நாங்கள் காடுகளுக்குள் நடந்துசெல்வோம். குதிரைகளில் சவாரி செய்வோம், பந்தய அரங்கிற்குச் செல்வோம், மாடுகளையும் குதிரைகளையும் பார்ப்பதற்காக தொழுவத்திற்குச் செல்வோம். ஆனால் என் அப்பாவின் விசில் சத்தம் கேட்ட மாத்திரத்தில் நான் என்ன வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும், அப்படியே வீட்டிற்கு ஓடிவிடுவேன். அந்த சிக்னல் சத்தம் கேட்டால், என் தந்தை என்னை அழைக்கிறார் என்பதை நான் சரியாய் புரிந்துவைத்திருந்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த விசில் சத்தம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.  
இயேசு தம் சீஷர்களிடம் தாம் மேய்ப்பன் என்றும், அவரைப் பின்பற்றுபவர்கள் ஆடுகள் என்றும் கூறினார். “ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது” (யோவான் 10:3). பரிசேயர்களும், வேதபாரகர்களும் கிறிஸ்துவின் சீஷர்களின் அதிகாரத்தை கேள்வியெழுப்பி அவர்களை குழப்பத்திற்குள்ளாக்கியபோது, தன்னுடைய அன்பின் சத்தம் மற்றெல்லாருடைய சத்தத்தைக் காட்டிலும் தெளிவாய் கேட்கும் என்று அறிவிக்கிறார். ஆடுகள் அவருடைய (மேய்ப்பனுடைய) சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவருக்குப் பின்செல்லுகிறது (வச. 4).  
நாம் இயேசுவின் குரலைக் கேட்கும்போது கவனமாக இருப்போம். அதை நிராகரிக்கும் மதியீனத்தைத் தவிர்ப்போம். ஏனென்றால் அடிப்படை உண்மை என்னவெனில், மேய்ப்பன் தெளிவாகப் பேசுகிறார், அவனுடைய ஆடுகள் அவருடைய குரலைக் கேட்கின்றன. ஒருவேளை வேதாகமத்தின் ஒரு வசனத்தின் மூலமாகவோ, விசுவாசியான நண்பரின் வார்த்தைகள் மூலமாகவோ அல்லது ஆவியின் தூண்டுதலின் மூலமாகவோ இயேசு நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார், நாம் கேட்கிறோம். 

தடைகள் உடைந்தது

“குஞ்சு பறவைகள் நாளை பறக்கும்!” எங்கள் முன் வராந்தாவில் தொங்கும் கூடையில் சிட்டுக்குருவிகள் குடும்பம் செய்து வரும் முன்னேற்றம் குறித்து என் மனைவி காரி மகிழ்ச்சியடைந்தாள். அவள் தினமும் அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மா குருவி கூட்டிற்கு உணவைக் கொண்டு வருவதைப் புகைப்படம் எடுத்தாள். 
காரி மறுநாள் அதிகாலையில் எழுந்து அவைகளைப் பார்க்க முயற்சித்தாள். அதற்கு அவள் கூட்டை மூடியிருந்த சில பசுமையை ஒதுக்கி நகர்த்தினாள். ஆனால் குஞ்சு பறவைகளைப் பார்ப்பதற்குப் பதிலாக, ஒரு பாம்பின் குறுகிய கண்கள் அவளை சந்தித்தன. ஒரு பாம்பு செங்குத்தான சுவற்றின் மீது ஏறி, கூட்டிற்குள் நுழைந்து, குஞ்சுகள் அனைத்தையும் விழுங்கியது. 
காரி மனம் உடைந்து, கோபமடைந்தார். நான் அப்போது வெளியூருக்கு சென்றிருந்தபடியால், பாம்பை அகற்ற அவளுடைய தோழியின் உதவியை நாடினாள். ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.  
தன் பாதையில் அழிவை விட்டுச் சென்ற மற்றொரு பாம்பைப் பற்றி வேதம் கூறுகிறது. ஏதேன் தோட்டத்தில் இருந்த பாம்பு ஏவாளை ஏமாற்றியது: “அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது” (ஆதியாகமம் 3:4-5).  
ஏவாள் மற்றும் ஆதாமின் கீழ்ப்படியாமையின் விளைவாக “பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய” வலுசர்ப்பத்தினால் (வெளிப்படுத்தல் 20:2) பாவமும் மரணமும் உலகில் நுழைந்தன. ஆனால் “பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்” (1 யோவான் 3:8). அவர் மூலமாகவே தேவனுடனான நம்முடைய உறவு புதுப்பிக்கப்படுகிறது. அவர் ஒரு நாளில் சகலத்தையும் புதிதாக்குவார் (வெளிப்படுத்தல் 21:5).