பிரபலமான இசைக்கலைஞர் பீத்தோவன் கோபத்திலிருந்தார். அவருடைய மூன்றாம் இசைப் படைப்பிற்கு “த போனபார்ட்டே” என்ற நெப்போலியனின் பெயரை வைக்கலாம் என்று அவர் எண்ணியிருந்தார். மதம் மற்றும் அரசியல் ஓங்கியிருந்த அந்த காலக்கட்டத்தில், மக்களின் விடுதலைக்கு காரணமான நெப்போலியனை அவர் ஒரு கதாநாயகனாய் பார்த்தார். ஆனால் அந்த பிரெஞ்சு ஜெனரல் தன்னை பேரரசர் என்று அறிவித்தபோது, அவர் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டார். தன்னுடைய முன்னாள் கதாநாயகன் ஒரு கொடுங்கோலன் என்பதை அறிந்த அவர், அவனுடைய பெயரை அழிக்கும் முயற்சியில் அந்த தாளில் துளை ஏற்படும் அளவிற்கு அதை தன் கைகளால் அழித்தார்.
ஆதிக் கிறிஸ்தவர்களின் அரசியல் மறுமலர்ச்சியைக் குறித்த நம்பிக்கை தகர்க்கப்பட்டபோது அவர்கள் ஏமாற்றமடைந்திருக்கவேண்டும். ராயனுடைய அதிகப்படியான வரிவிதிப்பும், இராணுவ ஆதிக்கமும், வாழ்க்கையின் மீது அவர்களுக்கிருந்த நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கியது. ஆனாலும் பல ஆண்டுகளாக ரோமர்களே உலகத்தை ஆட்சிசெய்தனர். இயேசுவின் தூதுவர்கள் பயத்தோடும் பலவீனத்தோடும் இருந்தனர். அவருடைய சீஷர்கள் முதிர்ச்சியற்றும் சண்டையிட்டுக்கொண்டும் இருந்தனர் (1 கொரி. 1:11-12; 3:1-3).
ஆனால் ஒரு மாற்றம் தோன்றியது. மாறாத அந்த நிலைமைக்கு அப்பாற்பட்டு பவுல் அதை பார்த்தார். அவருடைய நிருபங்கள், துவக்கத்திலும் இறுதியிலும் இயேசுவின் நாமத்தினால் நிரம்பி வழிந்தது. இயேசு உயிர்த்தெழுந்தார். அவர் வல்லமையோடு திரும்பி வருவதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். எல்லாரையும் எல்லாவற்றையும் அவர் நியாயந்தீர்க்கிறார். எனவே பவுல் முதலில் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் அர்த்தத்தையும் அதின் விளைவுகளையும் விசுவாசிகள் புரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்பினார் (2:2; 13:1-3).
இயேசுவின் சிலுவை மரணத்தில் வெளிப்பட்ட அன்பானது, அவரை வித்தியாசமான ஒரு தலைவராக மாற்றியது. கர்த்தரும் உலக இரட்சகருமான இயேசுவின் சிலுவை அனைத்தையும் மாற்றியது. இயேசுவின் நாமம் என்றென்றும் இருக்கிற, எல்லா நாமங்களுக்கும் மேலாக உயர்ந்த நாமம்.
இயேசு எப்படி மற்ற தலைவர்களைக் காட்டிலும் வித்தியாசமானவர்? பவுல் தன்னுடைய பலவீனத்தையும் பயத்தையும் நினைவுகூர்ந்ததை கண்டறிய முடியுமா? இந்த விஷயத்தில் இயேசு உங்களுக்கு எப்படி உதவுகிறார்?
தகப்பனே, உம்முடைய குமாரனுடைய தியாகத்தில் உம்முடைய இருதயத்தை பார்க்க எனக்கு உதவிசெய்யும்.