Archives: நவம்பர் 2021

பெரிய ஒளி

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டு சிறுவர்களும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும், 2018ஆம் ஆண்டு, ஒரு மதிய சாகசத்தை விரும்பி, ஒரு குறுகிய குகைக்குள் இறங்கினர். தீடீரென்று உயர்ந்த நீர்மட்டம் அவர்களை இன்னும் குகைக்குள் ஆழ்த்தியது. மீட்புப்பணியாளர்கள், இரண்டரை வாரங்கள் கழித்தே அவர்களை மீட்டனர். மீட்புப்பணியாளர் குழுவினர் தண்ணீருக்குள் மூழ்கி, அவர்களை தேட முயற்சித்தபோது, அவர்கள் அனைவரும் ஒரு பாறையின் மீது அமர்ந்து, ஆறு ஒளிரும் விளக்குகளை கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்தனர். அவர்கள் மணிக்கணக்காக இருளில் இருந்துகொண்டு, அந்த இருளைக் கிழித்துக்கொண்டு ஒரு ஒளி வரும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். 

ஏசாயா தீர்க்கதரிசி, இருளும் அந்தகாரமும் சூழ்ந்த உலகத்தை விவரிக்கிறார். அதில் ஒன்று வன்முறையிலும் பேராசையிலும் முறியடிக்கப்பட, மற்றொன்று கிளர்ச்சியினாலும் வேதனையினாலும் சிதைந்தது (ஏசாயா 8:22). அழிவைத் தவிர வேறொன்றுமில்லை. நம்பிக்கையின் விளக்கு முழுவதுமாய் அணைவதற்கு முன் மங்கி ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் அந்த மங்கிய மனச்சோர்வு முடிவல்ல என்று ஏசாயா வலியுறுத்துகிறார். தேவனுடைய இரக்கத்தினால், “முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை” (9:1). தேவன் தன்னுடைய ஜனத்தை இருளில் அழிவதற்கு அனுமதிப்பதில்லை. தீர்க்கதரிசி ஜனங்களுக்கு நம்பிக்கையை அறிவிக்கிறார். பின்பு, பாவம் தோற்றுவித்த இருளின் ஆதிக்கத்தை முழுவதுமாய் விரட்டுவதற்கு, இயேசுவின் வருகையை முன்னறிவிக்கிறார். 

இயேசு வந்தார். நாம் இப்போது ஏசாயாவின் வார்த்தைகளை புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் வாசிக்கிறோம்: “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது” (வச. 2) என்று ஏசாயா சொல்லுகிறார். 

இருள் எந்த அளவிற்கு அந்தகாரமாயிருக்கிறது என்பது முக்கியமில்லை; நம்முடைய சூழ்நிலை எவ்வளவு சோர்வை ஏற்படுத்துகிறது என்பதும் முக்கியமில்லை; நாம் இருளில் ஒருபோதும் கைவிடப்படுவதில்லை. இங்கு இயேசு இருக்கிறார். ஒரு பெரிய ஒளி நம்மை நோக்கி பிரகாசிக்கிறது.

எதிர்ப்பின் மத்தியில் தேவனை நம்புதல்

பிலிப்பைன்ஸில் கிறிஸ்துவைக் குறித்த நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளாத கோத்திரத்தில் பிறந்தவள், எஸ்தர். அவளுடைய வியாதியின் மரண போராட்டத்திலிருந்து அவளின் அத்தையின் ஜெபத்தின் மூலம் விடுதலைப்பெற்றதினால் இரட்சிக்கப்பட்டாள். இன்று எதிர்ப்புகள் மற்றும் மரண பயத்தின் மத்தியிலும் அவளுடைய மக்கள் கூட்டத்திற்கு வேதபாட வகுப்பு எடுக்கிறாள். “நான் என்னுடைய வாழ்க்கையில் தேவனுடைய வல்லமை, அன்பு, நன்மை, உண்மைத்துவம் என்று அனுபவித்த இயேசுவை மற்றவர்களுக்கு அறிவிக்காமல் இருக்கமுடியாது” என்று அவரை மகிழ்ச்சியோடு பிரஸ்தாபப்படுத்துகிறாள். 

பாபிலோனிய அடிமைத்தனத்தில் வாழ்ந்த சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபெத்நேகோ என்னும் வைராக்கியமான இஸ்ரவேலர்களைப்போன்று பாடுகளின் மத்தியில் தேவனை ஆராதிக்கிறவர்கள் அதிகம். தானியேல் புத்தகத்தில், நேபுகாத்நேச்சாரின் பொற்சிலையை வணங்கவில்லையென்றால் மரணம் என்றபோதிலும் இவர்கள் அதை வணங்க மறுத்தனர். தங்களுடைய தேவன் இந்த இக்கட்டிலிருந்து தங்களை காக்க வல்லவர், அவர் அவர்களை “விடுவிக்காமற்போனாலும்” அவரை ஆராதிப்பதையே தெரிந்துகொண்டனர் (தானியேல் 3:18). அவர்கள் அக்கினியில் போடப்பட்டபோது, அவர்களின் உபத்திரவத்தில் தேவன் அவர்களோடு சேர்ந்துகொண்டார் (வச. 25). அவர்களின் தலை மயிர் கூட கருகாமல் அவர்கள் பாதுகாக்கப்பட்டதை எண்ணி அங்கிருந்த அனைவரும் வியந்தனர் (வச. 27).

நம்முடைய விசுவாசத்திற்காக நாம் பாடு அனுபவிக்கும்போது, நாம் நம்பினது நடக்காமற்போனாலும், நம்மை பாதுகாக்கவும் பெலப்படுத்தவும் நம்மோடு இருக்கும் தேவனுடைய ஆவிக்கு கிழ்ப்படியும்படிக்கு, பழைய மற்றும் புதிய உதாரணங்கள் நம்மை ஊக்குவிக்கிறது. 

அவமதிப்பிலிருந்து காயம்

வானொலி அதிகமான பயன்பாட்டிலிருந்த காலகட்டத்தில், ஃப்ரெட் ஆலனின் (1894-1956) எதிர்மறையான நகைச்சுவைகள், பொருளாதார வீழ்ச்சியிலும் யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்டிருந்த எண்ணற்ற மக்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது. அவருடைய நகைச்சுவை உணர்வானது, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் வலியில் தோன்றியது. மூன்று வயதாவதற்கு முன்பே தன் தாயை இழந்த இவர், போதைக்கு அடிமையாயிருந்த தகப்பனிடத்திலிருந்து விலகி வாழ்ந்தார். இவர் ஒருமுறை நியூயார்க் நகரத்தின் சாலைநெருக்கடியில் சிக்கிய இளைஞனை மீட்டு, “என்ன ஆச்சு உனக்கு, சிறுவனே? நீ வளர்ந்து பிரச்சனையை சந்திக்க விரும்பவில்லையா?” என்று கூறியுள்ளார். 

இது யோபுவின் வாழ்க்கைக்குக் கச்சிதமாய் பொருந்தும். அவனுடைய ஆரம்ப கால விசுவாசம் மனச்சோர்வுக்கு ஆளாக்கப்பட்டபோது, அவனுடைய நண்பர்கள் அவனுடைய காயத்தில் அவமானத்தைக் கூட்டினர். உபதேசத்தின் அடிப்படையில் விவாதித்து, அவனுடைய தவறை ஒத்துக்கொள்ளும்படிக்கும் (4:7-8), தேவனுடைய சிட்சையிலிருந்து கற்றுக்கொள்ளும்படிக்கும், பிரச்சனைகளின் மத்தியில் நகைக்கும்படியான பெலத்தை பெற்றுக்கொள்ளவும் வலியுறுத்தினர் (5:22). 

யோபுவின் தேற்றரவாளர்கள் தவறாயிருந்தபோதிலும், அவர்களின் வார்த்தைகள் அர்த்தமுள்ளவைகள் (1:6-12). இதுபோன்ற நண்பர்கள் இருந்தால், யாருக்கு எதிரிகள் தேவைப்படுவர்? என்று அவர்கள் பின்நாட்களில் உதாரணமாக்கப்படுவர் என்பதை அவர்கள் அறியவில்லை. யோபு அவர்களின் மீட்பிற்காய் ஜெபிப்பான் என்றோ அல்லது தங்களுக்கு ஜெபம் தேவைப்படும் என்பதையோ கூட அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் (42:7-9). தவறான புரிதலுக்கு உட்பட்டு துன்பங்களை அனுபவித்து, பெரிய மகிழ்ச்சியின் ஆதாரமாக்கப்படப்போகிறவனை குற்றப்படுத்துகிறோம் என்றும் அவர்கள் கற்பனை செய்திருக்கமாட்டார்கள்.

துணிச்சலான விசுவாசம்

இரண்டாம் உலகப்போரில் பிரேம் பிரதாமின் (1924-1998) விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபோது, அவர் காயங்களோடு பாராசூட்டின் உதவியுடன் தப்பித்தார். ஆனால் அவர் தன் வாழ்நாள் முழுவதும் நொண்டியே நடக்கவேண்டியதாயிருந்தது. அவர் சொல்லும்போது, “எனக்கு ஒரு கால் நொண்டி. இமயமலைக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கு என்னை அழைத்தது வியப்பல்லவா?” அவர் நேபாளத்திலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். அதினிமித்தம் கைதிகளை தண்டிக்கும் கொடிய “மரண நிலைவறைகளில்” அடைக்கப்பட்டு, கொடுந்துன்பத்தை அனுபவித்துள்ளார். பத்து ஆண்டுகளில் ஏறத்தாழ பதினான்கு வித்தியாசமான சிறைச்சாலைகளில் பிரேம் அடைக்கப்பட்டார். அவருடைய துணிச்சலான சாட்சி, சிறைச்சாலை பாதுகாவலர்கள் மற்றும் அதிகாரிகள் என்று பலருடைய வாழ்க்கையைத் தொட்டு, அவர்கள் இயேசுவின் சுவிசேஷத்தைக் கொண்டுசெல்லும் அளவிற்கு கனியுள்ளதாய் இருந்தது. 

இயேசுவின் மீதான தன்னுடைய விசுவாசத்தினிமித்தமும், முடவனை சொஸ்தமாக்கியதற்காகவும் (அப். 4:9), அப்போஸ்தலனாகிய பவுல் பெரிய எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தது. ஆனால் அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தி கிறிஸ்துவை துணிச்சலாய் பிரசங்கித்தார் (வச. 8-13).

பேதுருவைப்போல இன்று நாமும் உபத்திரவத்தை சந்திக்கலாம் ஆனால் நம்முடைய பாவங்களுக்காக மரித்து, மன்னிக்கிற அதிகாரத்திற்கு ஆதாரமாக உயிர்த்தெழுந்து (வச. 4:10), இரட்சிப்பின் காரணராய் (வச. 12) இருக்கிறவர், நம்முடைய குடும்பத்தினருக்கும், உடன் வேளையாட்களுக்கும், சக மாணவர்களுக்கும்  மிகவும் அத்தியாவசியமான தேவை. இயேசு கொடுக்கும் இந்த இரட்சிப்பை மற்றவர்கள் கேட்கும்பொருட்டு, ஜெபத்தோடும் துணிச்சலோடும் நற்செய்தியை நாம் பிரசங்கிப்போம். 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இது மதிப்புக்குரியது

ஜார்ஜ் ஸ்மித், வில்லியம் கேரி: ஷூமேக்கர் அண்ட் மிஷனெரி என்ற தனது புத்தகத்தில், கேரியால் ஞானஸ்நானம் பெற்ற முதல் விசுவாசியான கிருஷ்ணா பால் ஞானஸ்நானம் பெற்ற முக்கியமான தருணத்தைப் பற்றி எழுதுகிறார். கிருஷ்ணா பால் கங்கையின் சேற்று நீரிலிருந்து எழுந்த சமயம், இந்திய திருப்பணிகளில் ஒரு மைல்கல்லாக இருந்திருக்க வேண்டிய விஷயம், கேரியின் சூழ்நிலைகளால் சிதைக்கப்பட்டது. கேரியின் மனைவி மற்றும் அவரது ஊழியத்தின் கூட்டாளி ஜான் தாமஸ் இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டனர். ஆயினும் அவர்களது அலறல்களுக்கும், அலைக்கழிப்புகளுக்கும் மத்தியில், கேரி மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் இனைந்து ஒரு வங்காளப் பாடலைப் பாடினார் - காணாமல்போன ஆத்துமா வீடு வந்ததே.

ரோம சாம்ராஜ்ஜியத்தால் கிறிஸ்தவர்கள் பெரும் துன்புறுத்தலை எதிர்கொண்ட நேரத்தில், பவுல் ரோமாபுரியின் சபையினருக்கு எழுதினார். பவுல் முன்வைத்த சுவிசேஷத்தை நடைமுறைப்படுத்துவது எளிதல்ல. அதற்கு பெரும் தியாகம் தேவைப்பட்டது. ஏறக்குறைய தனது மூன்றாவது மிஷனரி பயணத்தின் முடிவில், மற்றும் நினைத்துப்பார்க்கக்கூடிய ஒவ்வொரு கஷ்டத்தையும் தாங்கிய பிறகு, பவுல் "இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே" (வ.37) என்று கூறினார். அவர் , துன்பம், பசி, நிர்வாணம், நாசமோசம் (வ.35) என்றனைத்தையும் மகிழ்ச்சியுடன் தாங்கினார், ஏனெனில் அவரை நம்பி ஒப்படைக்கப்பட்ட பிரதான பணியே காரணம். மிஷனெரி பணிகளில் முன்னோடியாக, ரோமாபுரியின் விசுவாசிகளை அவர்களின் உபத்திரவங்களைச் சகித்திட அவர் ஊக்குவிக்கிறார், ஏனெனில் கிறிஸ்துவின் விவரிக்கமுடியாத அன்பு அதற்கு "பாத்திரமானது" (வ.38-39).

வில்லியம் கேரி மற்றும் அப்போஸ்தலன் பவுல் ஆகியோரின் தியாகங்களை "மதிப்பானவையாய்" செய்த இந்த அன்பு, நமக்கும் வழங்கப்படும் அதே அன்புதான். குறிப்பாக நம்முடைய விசுவாசத்தின் நிமித்தம் பாடுகள் வரும்போது, நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை நினைவில் கொள்வோம் (மத்தேயு 5:10). பின்வாங்கி, சமரசம் செய்து கொள்ளாமல், கிறிஸ்துவின் அன்பு எப்போதும் "தகுதியானது" என்பதை அறிந்து நமது பாடுகளை எதிர்கொள்வோம். 

 கிறிஸ்துவுடன் ஆழமான நட்பு

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள க்ரைஸ்ட் கல்லூரியின் சிற்றாலயத்தில் உள்ள நினைவுச்சின்னம், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த “இணைபிரியா நண்பர்களாகிய" ஜான் ஃபின்ச் மற்றும் தாமஸ் பெயின்ஸ் என்ற மருத்துவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இருவரும் மருத்துவ ஆராய்ச்சியில் ஒன்றாக பணியாற்றியவர்கள் மற்றும் அரசாங்க பயணங்களில் ஒன்றாக பயணித்தவர்கள். 1680 இல் பெயின்ஸ் இறந்தபோது, ஃபின்ச் 36 காலமாக “ஈருடல் ஓருயிராக” இருந்த அவர்களின் நட்புக்காக வருந்தினார். அவர்களுடைய நட்பில் அன்பு, உண்மை, அர்ப்பணிப்பு இருந்தது. 

இப்படிப்பட்ட நெருக்கமான நட்பு தாவீது ராஜாவுக்கும் யோனத்தானுக்கும் இருந்தது. அவர்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஒருவரையொருவர் நேசித்தனர் (1 சாமுவேல் 20:41), மேலும் ஒருவருக்கொருவர் உடன்படிக்கையும் செய்தனர் (வ.8–17, 42). அவர்களின் நட்பில் உண்மையாக இருந்தனர் (1 சாமுவேல் 19:1–2; 20:13). தாவீது ராஜாவாவதற்காக, யோனத்தான் தனது உரிமையைத் தியாகம் செய்தார் (20:30-31; பார்க்க 23:15-18). யோனத்தான் மரித்தபோது, அவன் தன்மேல் வைத்திருந்த அன்பு " ஸ்தீரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது" என்று தாவீது புலம்பினார் (2 சாமுவேல் 1:26). 

நட்பைத் திருமணத்துடன் ஒப்பிடுவது இன்று நமக்குக் கடினமாயிருக்கலாம், ஆனால் ஃபின்ச் மற்றும் பெயின்ஸ், தாவீது மற்றும் யோனத்தான் போன்ற நட்புகள், நம் சொந்த வாழ்வில் நட்பை அதிக ஆழப்படுத்த ஊக்குவிக்கிறது. இயேசுவும் தம்முடைய மார்பில் சாய தமது நண்பர்களை ஏற்றுக்கொண்டார் (யோவான் 13:23-25). அவர் காட்டும் உண்மை, நம்பகத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பு நாம் ஒன்றாக உருவாக்கும் ஆழமான நட்பின் அடித்தளமாக இருக்கட்டும். 

கிறிஸ்துவுக்கு பூரணமாய் சரணடைதல்

1920 ஆம் ஆண்டில், ஒரு சீன போதகரின் ஆறாவது மகனான ஜான் சுங், அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க உதவித்தொகை பெற்றார். அவர் உயர்ந்த மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றார். முதுகலை படிப்பை முடித்து, முனைவர் பட்டமும் பெற்றார். ஆனால் அவர் தனது படிப்பைத் தொடரும்போது, தேவனை விட்டு விலகிச் சென்றார். பின்னர், 1927இல் ஒரு இரவு, அவர் தனது வாழ்க்கையை கிறிஸ்துவிடம் ஒப்படைத்தார் மற்றும் ஒரு போதகராகும் அழைப்பைப் பெற்றார்.

பல அதிக ஊதியம் பெறும் வாய்ப்புகள் அவருக்கு சீனாவில் மீண்டும் காத்திருந்தன. ஆனால் அவருடைய இலட்சியங்களை ஒதுக்கி வைக்கும்படிக்கு பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டார். அவரது அர்ப்பணிப்பின் அடையாளமாக, அவர் தனது பெற்றோருக்கு கனம்செலுத்தும் நோக்கத்தோடு தனது பிஎச்டி சான்றிதழை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற அனைத்து விருதுகளையும் கடலில் வீசினார்.

தம்முடைய சீடராக மாறுவது பற்றி இயேசு சொன்னதை ஜான் சங் புரிந்துகொண்டார்: “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” (மாற்கு 8:36). நாம் நம்மையே வெறுத்து, கிறிஸ்துவையும் அவருடைய வழிநடத்துதலையும் பின்பற்றுவதற்காக நமது பழைய வாழ்க்கையை விட்டு மனம்திரும்பும்போது (வச. 34-35), அவரைப் பின்பற்றுவதிலிருந்து நம்மைத் திசைதிருப்பும் தனிப்பட்ட ஆசைகளையும் பொருள் ஆதாயத்தையும் தியாகம் செய்ய அவசியமாகலாம்.

அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளாக, ஜான் தனது தேவன் கொடுத்த பணியை முழு மனதுடன் நிறைவேற்றினார். சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு நற்செய்தியை அறிவித்தார். நாம் எப்படி? நாம் பிரசங்கிகளாகவோ அல்லது மிஷனரிகளாகவோ இருக்க அழைக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் தேவன் நம்மை எங்கு ஊழியம் செய்ய அழைக்கிறாரோ, அவருடைய ஆவி நம்மில் கிரியை செய்வதால், நாம் அவருக்கு முழுமையாக சரணடைவோமாக. 

- ஜாஸ்மின் கோ