Archives: நவம்பர் 2021

பெரிய ஒளி

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டு சிறுவர்களும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும், 2018ஆம் ஆண்டு, ஒரு மதிய சாகசத்தை விரும்பி, ஒரு குறுகிய குகைக்குள் இறங்கினர். தீடீரென்று உயர்ந்த நீர்மட்டம் அவர்களை இன்னும் குகைக்குள் ஆழ்த்தியது. மீட்புப்பணியாளர்கள், இரண்டரை வாரங்கள் கழித்தே அவர்களை மீட்டனர். மீட்புப்பணியாளர் குழுவினர் தண்ணீருக்குள் மூழ்கி, அவர்களை தேட முயற்சித்தபோது, அவர்கள் அனைவரும் ஒரு பாறையின் மீது அமர்ந்து, ஆறு ஒளிரும் விளக்குகளை கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்தனர். அவர்கள் மணிக்கணக்காக இருளில் இருந்துகொண்டு, அந்த இருளைக் கிழித்துக்கொண்டு ஒரு ஒளி வரும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். 

ஏசாயா தீர்க்கதரிசி, இருளும் அந்தகாரமும் சூழ்ந்த உலகத்தை விவரிக்கிறார். அதில் ஒன்று வன்முறையிலும் பேராசையிலும் முறியடிக்கப்பட, மற்றொன்று கிளர்ச்சியினாலும் வேதனையினாலும் சிதைந்தது (ஏசாயா 8:22). அழிவைத் தவிர வேறொன்றுமில்லை. நம்பிக்கையின் விளக்கு முழுவதுமாய் அணைவதற்கு முன் மங்கி ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் அந்த மங்கிய மனச்சோர்வு முடிவல்ல என்று ஏசாயா வலியுறுத்துகிறார். தேவனுடைய இரக்கத்தினால், “முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை” (9:1). தேவன் தன்னுடைய ஜனத்தை இருளில் அழிவதற்கு அனுமதிப்பதில்லை. தீர்க்கதரிசி ஜனங்களுக்கு நம்பிக்கையை அறிவிக்கிறார். பின்பு, பாவம் தோற்றுவித்த இருளின் ஆதிக்கத்தை முழுவதுமாய் விரட்டுவதற்கு, இயேசுவின் வருகையை முன்னறிவிக்கிறார். 

இயேசு வந்தார். நாம் இப்போது ஏசாயாவின் வார்த்தைகளை புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் வாசிக்கிறோம்: “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது” (வச. 2) என்று ஏசாயா சொல்லுகிறார். 

இருள் எந்த அளவிற்கு அந்தகாரமாயிருக்கிறது என்பது முக்கியமில்லை; நம்முடைய சூழ்நிலை எவ்வளவு சோர்வை ஏற்படுத்துகிறது என்பதும் முக்கியமில்லை; நாம் இருளில் ஒருபோதும் கைவிடப்படுவதில்லை. இங்கு இயேசு இருக்கிறார். ஒரு பெரிய ஒளி நம்மை நோக்கி பிரகாசிக்கிறது.

எதிர்ப்பின் மத்தியில் தேவனை நம்புதல்

பிலிப்பைன்ஸில் கிறிஸ்துவைக் குறித்த நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளாத கோத்திரத்தில் பிறந்தவள், எஸ்தர். அவளுடைய வியாதியின் மரண போராட்டத்திலிருந்து அவளின் அத்தையின் ஜெபத்தின் மூலம் விடுதலைப்பெற்றதினால் இரட்சிக்கப்பட்டாள். இன்று எதிர்ப்புகள் மற்றும் மரண பயத்தின் மத்தியிலும் அவளுடைய மக்கள் கூட்டத்திற்கு வேதபாட வகுப்பு எடுக்கிறாள். “நான் என்னுடைய வாழ்க்கையில் தேவனுடைய வல்லமை, அன்பு, நன்மை, உண்மைத்துவம் என்று அனுபவித்த இயேசுவை மற்றவர்களுக்கு அறிவிக்காமல் இருக்கமுடியாது” என்று அவரை மகிழ்ச்சியோடு பிரஸ்தாபப்படுத்துகிறாள். 

பாபிலோனிய அடிமைத்தனத்தில் வாழ்ந்த சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபெத்நேகோ என்னும் வைராக்கியமான இஸ்ரவேலர்களைப்போன்று பாடுகளின் மத்தியில் தேவனை ஆராதிக்கிறவர்கள் அதிகம். தானியேல் புத்தகத்தில், நேபுகாத்நேச்சாரின் பொற்சிலையை வணங்கவில்லையென்றால் மரணம் என்றபோதிலும் இவர்கள் அதை வணங்க மறுத்தனர். தங்களுடைய தேவன் இந்த இக்கட்டிலிருந்து தங்களை காக்க வல்லவர், அவர் அவர்களை “விடுவிக்காமற்போனாலும்” அவரை ஆராதிப்பதையே தெரிந்துகொண்டனர் (தானியேல் 3:18). அவர்கள் அக்கினியில் போடப்பட்டபோது, அவர்களின் உபத்திரவத்தில் தேவன் அவர்களோடு சேர்ந்துகொண்டார் (வச. 25). அவர்களின் தலை மயிர் கூட கருகாமல் அவர்கள் பாதுகாக்கப்பட்டதை எண்ணி அங்கிருந்த அனைவரும் வியந்தனர் (வச. 27).

நம்முடைய விசுவாசத்திற்காக நாம் பாடு அனுபவிக்கும்போது, நாம் நம்பினது நடக்காமற்போனாலும், நம்மை பாதுகாக்கவும் பெலப்படுத்தவும் நம்மோடு இருக்கும் தேவனுடைய ஆவிக்கு கிழ்ப்படியும்படிக்கு, பழைய மற்றும் புதிய உதாரணங்கள் நம்மை ஊக்குவிக்கிறது. 

அவமதிப்பிலிருந்து காயம்

வானொலி அதிகமான பயன்பாட்டிலிருந்த காலகட்டத்தில், ஃப்ரெட் ஆலனின் (1894-1956) எதிர்மறையான நகைச்சுவைகள், பொருளாதார வீழ்ச்சியிலும் யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்டிருந்த எண்ணற்ற மக்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது. அவருடைய நகைச்சுவை உணர்வானது, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் வலியில் தோன்றியது. மூன்று வயதாவதற்கு முன்பே தன் தாயை இழந்த இவர், போதைக்கு அடிமையாயிருந்த தகப்பனிடத்திலிருந்து விலகி வாழ்ந்தார். இவர் ஒருமுறை நியூயார்க் நகரத்தின் சாலைநெருக்கடியில் சிக்கிய இளைஞனை மீட்டு, “என்ன ஆச்சு உனக்கு, சிறுவனே? நீ வளர்ந்து பிரச்சனையை சந்திக்க விரும்பவில்லையா?” என்று கூறியுள்ளார். 

இது யோபுவின் வாழ்க்கைக்குக் கச்சிதமாய் பொருந்தும். அவனுடைய ஆரம்ப கால விசுவாசம் மனச்சோர்வுக்கு ஆளாக்கப்பட்டபோது, அவனுடைய நண்பர்கள் அவனுடைய காயத்தில் அவமானத்தைக் கூட்டினர். உபதேசத்தின் அடிப்படையில் விவாதித்து, அவனுடைய தவறை ஒத்துக்கொள்ளும்படிக்கும் (4:7-8), தேவனுடைய சிட்சையிலிருந்து கற்றுக்கொள்ளும்படிக்கும், பிரச்சனைகளின் மத்தியில் நகைக்கும்படியான பெலத்தை பெற்றுக்கொள்ளவும் வலியுறுத்தினர் (5:22). 

யோபுவின் தேற்றரவாளர்கள் தவறாயிருந்தபோதிலும், அவர்களின் வார்த்தைகள் அர்த்தமுள்ளவைகள் (1:6-12). இதுபோன்ற நண்பர்கள் இருந்தால், யாருக்கு எதிரிகள் தேவைப்படுவர்? என்று அவர்கள் பின்நாட்களில் உதாரணமாக்கப்படுவர் என்பதை அவர்கள் அறியவில்லை. யோபு அவர்களின் மீட்பிற்காய் ஜெபிப்பான் என்றோ அல்லது தங்களுக்கு ஜெபம் தேவைப்படும் என்பதையோ கூட அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் (42:7-9). தவறான புரிதலுக்கு உட்பட்டு துன்பங்களை அனுபவித்து, பெரிய மகிழ்ச்சியின் ஆதாரமாக்கப்படப்போகிறவனை குற்றப்படுத்துகிறோம் என்றும் அவர்கள் கற்பனை செய்திருக்கமாட்டார்கள்.

துணிச்சலான விசுவாசம்

இரண்டாம் உலகப்போரில் பிரேம் பிரதாமின் (1924-1998) விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபோது, அவர் காயங்களோடு பாராசூட்டின் உதவியுடன் தப்பித்தார். ஆனால் அவர் தன் வாழ்நாள் முழுவதும் நொண்டியே நடக்கவேண்டியதாயிருந்தது. அவர் சொல்லும்போது, “எனக்கு ஒரு கால் நொண்டி. இமயமலைக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கு என்னை அழைத்தது வியப்பல்லவா?” அவர் நேபாளத்திலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். அதினிமித்தம் கைதிகளை தண்டிக்கும் கொடிய “மரண நிலைவறைகளில்” அடைக்கப்பட்டு, கொடுந்துன்பத்தை அனுபவித்துள்ளார். பத்து ஆண்டுகளில் ஏறத்தாழ பதினான்கு வித்தியாசமான சிறைச்சாலைகளில் பிரேம் அடைக்கப்பட்டார். அவருடைய துணிச்சலான சாட்சி, சிறைச்சாலை பாதுகாவலர்கள் மற்றும் அதிகாரிகள் என்று பலருடைய வாழ்க்கையைத் தொட்டு, அவர்கள் இயேசுவின் சுவிசேஷத்தைக் கொண்டுசெல்லும் அளவிற்கு கனியுள்ளதாய் இருந்தது. 

இயேசுவின் மீதான தன்னுடைய விசுவாசத்தினிமித்தமும், முடவனை சொஸ்தமாக்கியதற்காகவும் (அப். 4:9), அப்போஸ்தலனாகிய பவுல் பெரிய எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தது. ஆனால் அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தி கிறிஸ்துவை துணிச்சலாய் பிரசங்கித்தார் (வச. 8-13).

பேதுருவைப்போல இன்று நாமும் உபத்திரவத்தை சந்திக்கலாம் ஆனால் நம்முடைய பாவங்களுக்காக மரித்து, மன்னிக்கிற அதிகாரத்திற்கு ஆதாரமாக உயிர்த்தெழுந்து (வச. 4:10), இரட்சிப்பின் காரணராய் (வச. 12) இருக்கிறவர், நம்முடைய குடும்பத்தினருக்கும், உடன் வேளையாட்களுக்கும், சக மாணவர்களுக்கும்  மிகவும் அத்தியாவசியமான தேவை. இயேசு கொடுக்கும் இந்த இரட்சிப்பை மற்றவர்கள் கேட்கும்பொருட்டு, ஜெபத்தோடும் துணிச்சலோடும் நற்செய்தியை நாம் பிரசங்கிப்போம். 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தகுதி உரிமையல்ல

ஞாயிறு பள்ளிக்குப் பிறகு, வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்தில் ஏறினேன். தென்னிந்தியாவின் ஒரு முக்கிய கல்லூரியின் புதிய இயக்குநராக நான் அறிந்திருந்த ஒருவர் பின்னால் அமர்ந்திருந்தார். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் வழக்கமாகச் செல்லும் பொதுப் பேருந்தில் அவரைப் பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரது பதவியில் உள்ள பெரும்பாலானோர் தங்களுக்கென நியமிக்கப்பட்ட வாகனம் மற்றும் ஓட்டுநரைக் கொண்டிருப்பார்கள். எனவே, நான் அவரிடம், "நீங்கள் எப்படி காரில்லாமல் பேருந்தில் செல்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர், "நான் எப்போதும் பேருந்தில் செல்வதால்தான்" என்று பதிலளித்தார், அவரது புதிய பதவி அவரது வழக்கமான நடைமுறையை மாற்றவில்லை. அவர் தனது பட்டத்துக்குரிய உரிமையை அனுபவிக்க உடன்படவில்லை.

பிலிப்பியில் உள்ள சபைக்கு எழுதிய நிருபத்தில், விசுவாசிகள் தாழ்மையுடன் இருக்கும்படி பவுல் கேட்டுக்கொள்கிறார் (வ.3). அவர்கள் "வாதினாலாவது" அல்லது "வீண்பெருமையினாலாவது" (வ.3) எதையும் செய்யக்கூடாது என்று அவர் கூறுகிறார். மாறாக, அவர்கள் ஒருவருக்கொருவர் உறவாடுவதில், "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே" (வ.5) கொண்டிருக்க வேண்டும். உன்னதமான அந்தஸ்தை இயேசு பெற்றிருக்கிறார். "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்" (வ.6) இருந்தார். அவர் தனக்குரியதை ஒதுக்கி வைத்துவிட்டு, நம்முடைய நலன்களில் அக்கறை கொண்டார். அவர் "அடிமையின் ரூபமெடுத்து" , மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் (வ.7-8).

நமது வேலை, கல்வி, வயது அல்லது சமூக அந்தஸ்து போன்றவற்றின் காரணமாக நாம் விசேஷமான முறையில் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்கள் என்று நாம் உணரும்போது, நமது தகுதிகளையும் நமது உரிமை உணர்வையும் எவ்வாறு ஒதுக்கி வைப்பது என்பதை இயேசு நமக்குக் காட்டினார் என்பதனை நினைவில் கொள்வோம். கடினமாக இருந்தாலும், நமக்குச் சொந்தமானதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்து சக மனிதர்களிடம் பணிவாக இருக்கும் மனநிலையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

தேவனின் திறந்த வாசல்கள்

ஒரு பெருநகர் அருகிலுள்ள எனது புதிய பள்ளியில், வழிகாட்டி ஆலோசகர் என்னை ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்தபின், மிகக் குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்கள் உள்ள ஆங்கில வகுப்பை எனக்கு கொடுத்தார். நான் எனது முந்தைய பள்ளியிலிருந்து சிறந்த தேர்ச்சி, சிறந்த மதிப்பெண்கள் மற்றும் எனது எழுத்துக்கான முதல்வரின் விருதுடன் வந்திருந்தேன். ஆனால் இந்தப் புதிய பள்ளியில் “சிறந்த” வகுப்பிற்கான கதவு எனக்குத் திறக்கப்படவில்லை. வழிகாட்டி ஆலோசகர் நான் பொருத்தமற்றவனோ அல்லது தயாராகவோ இல்லை என்று முடிவு செய்திருந்தார்.

இப்படிப்பட்ட சகஜமான பின்னடைவுகளை ஆதிதிருச்சபையான பிலதெல்பியா தன் அனுபவத்தில் பெற்றிருந்தது. சிறிய மற்றும் எளிமையான அந்த திருச்சபை இருந்த நகரம் சமீபத்திய ஆண்டுகளில் பூகம்பங்களால் பாதிக்கப்பட்டு பெரும் சேதத்தைச் சந்தித்திருந்தது. மேலும் சாத்தானின் எதிர்ப்பை சந்தித்தனர் (வெளிப்படுத்துதல் 3:9). புறக்கணிக்கப்பட்ட இந்த திருச்சபைக்கு உயிர்த்தெழுந்த இயேசு, “உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்ட படியினாலே” (வ.8) எனக் குறிப்பிட்டார். ஆகையால், “ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர்” (வ.7) அவர்களுக்கு “எவராலும் மூட முடியாத இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் “(வ.8) என்றார்.

நமது ஊழியத்திற்கும் இது பொருந்தும். சில கதவுகள் திறக்கப்படுவதே இல்லை. இருப்பினும், ஒரு வழிகாட்டி ஆலோசகர் கதவை அடைத்தாலும், தேவன் எனக்கு நிச்சயமாகவே கதவுகளைத் திறந்துள்ளார், அவருக்காக நான் எழுதுவதன் மூலம், உலகளாவிய உள்ளங்களைத் தொடும் வாய்ப்பை தந்தார். உங்களையும் மூடிய கதவுகள் தடுக்காது. இயேசு “நானே வாசல்” என்றார் (யோவான் 10:9). அவர் திறக்கும் கதவுகளுக்குள் நுழைந்து அவரைப் பின்பற்றுவோம். 

தேவனின் ஞானமான நோக்கங்கள்

இந்தியா வரலாறுகளால் நிரம்பியுள்ளது. நீங்கள் செல்லும் இடமெல்லாம், வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்களின் நினைவுச்சின்னங்கள் அல்லது முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் இடங்களைக் காணலாம். ஆனால் இங்கிலாந்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு வேடிக்கையான செய்தி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன் வாயிலருகே உள்ள ஒரு பலகையில், “இந்த இடத்தில், செப்டம்பர் 5, 1782 அன்று, எதுவும் நடக்கவில்லை” என்று எழுதப்பட்டுள்ளது.

அநேக வேளையில் நம்முடைய ஜெபத்திற்குப் பதில் கிடைக்காதது போலவே தோன்றுகிறது. அவர் இப்போதே பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்புடன், நாம் மீண்டும் மீண்டும் ஜெபிக்கிறோம், நமது விண்ணப்பங்களை நமது தந்தையிடம் கொண்டு வருகிறோம். சங்கீதக்காரனாகிய தாவீதும் ஜெபிக்கையில் இப்படிப்பட்ட விரக்தியை வெளிப்படுத்தினான்: “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?” (சங்கீதம் 13:1). அதே வண்ணம் நாமும் எளிதாக “ஆண்டவரே, நீர் பதிலளிக்க இன்னும் எவ்வளவு காலம்?” எனலாம்.

எனினும், நம் தேவன் ஞானத்தில் மட்டுமல்ல, அவருடைய நேரத்திலும் பூரணர். எனேவ தாவீது சொன்னான், “நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்”(வ. 5). பிரசங்கி 3:11, “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” என்று நமக்கு நினைவூட்டுகிறது. ‘நேர்த்தியாக” என்ற சொல்லுக்கு “பொருத்தமானது” அல்லது “மகிழ்ச்சியின் காரணம்” என்று பொருள். தேவன் நாம் விரும்பியபடி நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர் எப்போதும் தனது ஞானமுள்ள நோக்கங்களைச் செயல்படுத்துகிறார். அவர் பதில் கொடுக்கும்போது, அது சரியாகவும், நல்லதாகவும், அழகாகவும் இருக்கும் என்று நாம் மனதார நம்பலாம்.