Archives: நவம்பர் 2021

பெரிய ஒளி

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டு சிறுவர்களும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும், 2018ஆம் ஆண்டு, ஒரு மதிய சாகசத்தை விரும்பி, ஒரு குறுகிய குகைக்குள் இறங்கினர். தீடீரென்று உயர்ந்த நீர்மட்டம் அவர்களை இன்னும் குகைக்குள் ஆழ்த்தியது. மீட்புப்பணியாளர்கள், இரண்டரை வாரங்கள் கழித்தே அவர்களை மீட்டனர். மீட்புப்பணியாளர் குழுவினர் தண்ணீருக்குள் மூழ்கி, அவர்களை தேட முயற்சித்தபோது, அவர்கள் அனைவரும் ஒரு பாறையின் மீது அமர்ந்து, ஆறு ஒளிரும் விளக்குகளை கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்தனர். அவர்கள் மணிக்கணக்காக இருளில் இருந்துகொண்டு, அந்த இருளைக் கிழித்துக்கொண்டு ஒரு ஒளி வரும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். 

ஏசாயா தீர்க்கதரிசி, இருளும் அந்தகாரமும் சூழ்ந்த உலகத்தை விவரிக்கிறார். அதில் ஒன்று வன்முறையிலும் பேராசையிலும் முறியடிக்கப்பட, மற்றொன்று கிளர்ச்சியினாலும் வேதனையினாலும் சிதைந்தது (ஏசாயா 8:22). அழிவைத் தவிர வேறொன்றுமில்லை. நம்பிக்கையின் விளக்கு முழுவதுமாய் அணைவதற்கு முன் மங்கி ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் அந்த மங்கிய மனச்சோர்வு முடிவல்ல என்று ஏசாயா வலியுறுத்துகிறார். தேவனுடைய இரக்கத்தினால், “முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை” (9:1). தேவன் தன்னுடைய ஜனத்தை இருளில் அழிவதற்கு அனுமதிப்பதில்லை. தீர்க்கதரிசி ஜனங்களுக்கு நம்பிக்கையை அறிவிக்கிறார். பின்பு, பாவம் தோற்றுவித்த இருளின் ஆதிக்கத்தை முழுவதுமாய் விரட்டுவதற்கு, இயேசுவின் வருகையை முன்னறிவிக்கிறார். 

இயேசு வந்தார். நாம் இப்போது ஏசாயாவின் வார்த்தைகளை புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் வாசிக்கிறோம்: “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது” (வச. 2) என்று ஏசாயா சொல்லுகிறார். 

இருள் எந்த அளவிற்கு அந்தகாரமாயிருக்கிறது என்பது முக்கியமில்லை; நம்முடைய சூழ்நிலை எவ்வளவு சோர்வை ஏற்படுத்துகிறது என்பதும் முக்கியமில்லை; நாம் இருளில் ஒருபோதும் கைவிடப்படுவதில்லை. இங்கு இயேசு இருக்கிறார். ஒரு பெரிய ஒளி நம்மை நோக்கி பிரகாசிக்கிறது.

எதிர்ப்பின் மத்தியில் தேவனை நம்புதல்

பிலிப்பைன்ஸில் கிறிஸ்துவைக் குறித்த நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளாத கோத்திரத்தில் பிறந்தவள், எஸ்தர். அவளுடைய வியாதியின் மரண போராட்டத்திலிருந்து அவளின் அத்தையின் ஜெபத்தின் மூலம் விடுதலைப்பெற்றதினால் இரட்சிக்கப்பட்டாள். இன்று எதிர்ப்புகள் மற்றும் மரண பயத்தின் மத்தியிலும் அவளுடைய மக்கள் கூட்டத்திற்கு வேதபாட வகுப்பு எடுக்கிறாள். “நான் என்னுடைய வாழ்க்கையில் தேவனுடைய வல்லமை, அன்பு, நன்மை, உண்மைத்துவம் என்று அனுபவித்த இயேசுவை மற்றவர்களுக்கு அறிவிக்காமல் இருக்கமுடியாது” என்று அவரை மகிழ்ச்சியோடு பிரஸ்தாபப்படுத்துகிறாள். 

பாபிலோனிய அடிமைத்தனத்தில் வாழ்ந்த சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபெத்நேகோ என்னும் வைராக்கியமான இஸ்ரவேலர்களைப்போன்று பாடுகளின் மத்தியில் தேவனை ஆராதிக்கிறவர்கள் அதிகம். தானியேல் புத்தகத்தில், நேபுகாத்நேச்சாரின் பொற்சிலையை வணங்கவில்லையென்றால் மரணம் என்றபோதிலும் இவர்கள் அதை வணங்க மறுத்தனர். தங்களுடைய தேவன் இந்த இக்கட்டிலிருந்து தங்களை காக்க வல்லவர், அவர் அவர்களை “விடுவிக்காமற்போனாலும்” அவரை ஆராதிப்பதையே தெரிந்துகொண்டனர் (தானியேல் 3:18). அவர்கள் அக்கினியில் போடப்பட்டபோது, அவர்களின் உபத்திரவத்தில் தேவன் அவர்களோடு சேர்ந்துகொண்டார் (வச. 25). அவர்களின் தலை மயிர் கூட கருகாமல் அவர்கள் பாதுகாக்கப்பட்டதை எண்ணி அங்கிருந்த அனைவரும் வியந்தனர் (வச. 27).

நம்முடைய விசுவாசத்திற்காக நாம் பாடு அனுபவிக்கும்போது, நாம் நம்பினது நடக்காமற்போனாலும், நம்மை பாதுகாக்கவும் பெலப்படுத்தவும் நம்மோடு இருக்கும் தேவனுடைய ஆவிக்கு கிழ்ப்படியும்படிக்கு, பழைய மற்றும் புதிய உதாரணங்கள் நம்மை ஊக்குவிக்கிறது. 

அவமதிப்பிலிருந்து காயம்

வானொலி அதிகமான பயன்பாட்டிலிருந்த காலகட்டத்தில், ஃப்ரெட் ஆலனின் (1894-1956) எதிர்மறையான நகைச்சுவைகள், பொருளாதார வீழ்ச்சியிலும் யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்டிருந்த எண்ணற்ற மக்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது. அவருடைய நகைச்சுவை உணர்வானது, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் வலியில் தோன்றியது. மூன்று வயதாவதற்கு முன்பே தன் தாயை இழந்த இவர், போதைக்கு அடிமையாயிருந்த தகப்பனிடத்திலிருந்து விலகி வாழ்ந்தார். இவர் ஒருமுறை நியூயார்க் நகரத்தின் சாலைநெருக்கடியில் சிக்கிய இளைஞனை மீட்டு, “என்ன ஆச்சு உனக்கு, சிறுவனே? நீ வளர்ந்து பிரச்சனையை சந்திக்க விரும்பவில்லையா?” என்று கூறியுள்ளார். 

இது யோபுவின் வாழ்க்கைக்குக் கச்சிதமாய் பொருந்தும். அவனுடைய ஆரம்ப கால விசுவாசம் மனச்சோர்வுக்கு ஆளாக்கப்பட்டபோது, அவனுடைய நண்பர்கள் அவனுடைய காயத்தில் அவமானத்தைக் கூட்டினர். உபதேசத்தின் அடிப்படையில் விவாதித்து, அவனுடைய தவறை ஒத்துக்கொள்ளும்படிக்கும் (4:7-8), தேவனுடைய சிட்சையிலிருந்து கற்றுக்கொள்ளும்படிக்கும், பிரச்சனைகளின் மத்தியில் நகைக்கும்படியான பெலத்தை பெற்றுக்கொள்ளவும் வலியுறுத்தினர் (5:22). 

யோபுவின் தேற்றரவாளர்கள் தவறாயிருந்தபோதிலும், அவர்களின் வார்த்தைகள் அர்த்தமுள்ளவைகள் (1:6-12). இதுபோன்ற நண்பர்கள் இருந்தால், யாருக்கு எதிரிகள் தேவைப்படுவர்? என்று அவர்கள் பின்நாட்களில் உதாரணமாக்கப்படுவர் என்பதை அவர்கள் அறியவில்லை. யோபு அவர்களின் மீட்பிற்காய் ஜெபிப்பான் என்றோ அல்லது தங்களுக்கு ஜெபம் தேவைப்படும் என்பதையோ கூட அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் (42:7-9). தவறான புரிதலுக்கு உட்பட்டு துன்பங்களை அனுபவித்து, பெரிய மகிழ்ச்சியின் ஆதாரமாக்கப்படப்போகிறவனை குற்றப்படுத்துகிறோம் என்றும் அவர்கள் கற்பனை செய்திருக்கமாட்டார்கள்.

துணிச்சலான விசுவாசம்

இரண்டாம் உலகப்போரில் பிரேம் பிரதாமின் (1924-1998) விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபோது, அவர் காயங்களோடு பாராசூட்டின் உதவியுடன் தப்பித்தார். ஆனால் அவர் தன் வாழ்நாள் முழுவதும் நொண்டியே நடக்கவேண்டியதாயிருந்தது. அவர் சொல்லும்போது, “எனக்கு ஒரு கால் நொண்டி. இமயமலைக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கு என்னை அழைத்தது வியப்பல்லவா?” அவர் நேபாளத்திலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். அதினிமித்தம் கைதிகளை தண்டிக்கும் கொடிய “மரண நிலைவறைகளில்” அடைக்கப்பட்டு, கொடுந்துன்பத்தை அனுபவித்துள்ளார். பத்து ஆண்டுகளில் ஏறத்தாழ பதினான்கு வித்தியாசமான சிறைச்சாலைகளில் பிரேம் அடைக்கப்பட்டார். அவருடைய துணிச்சலான சாட்சி, சிறைச்சாலை பாதுகாவலர்கள் மற்றும் அதிகாரிகள் என்று பலருடைய வாழ்க்கையைத் தொட்டு, அவர்கள் இயேசுவின் சுவிசேஷத்தைக் கொண்டுசெல்லும் அளவிற்கு கனியுள்ளதாய் இருந்தது. 

இயேசுவின் மீதான தன்னுடைய விசுவாசத்தினிமித்தமும், முடவனை சொஸ்தமாக்கியதற்காகவும் (அப். 4:9), அப்போஸ்தலனாகிய பவுல் பெரிய எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தது. ஆனால் அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தி கிறிஸ்துவை துணிச்சலாய் பிரசங்கித்தார் (வச. 8-13).

பேதுருவைப்போல இன்று நாமும் உபத்திரவத்தை சந்திக்கலாம் ஆனால் நம்முடைய பாவங்களுக்காக மரித்து, மன்னிக்கிற அதிகாரத்திற்கு ஆதாரமாக உயிர்த்தெழுந்து (வச. 4:10), இரட்சிப்பின் காரணராய் (வச. 12) இருக்கிறவர், நம்முடைய குடும்பத்தினருக்கும், உடன் வேளையாட்களுக்கும், சக மாணவர்களுக்கும்  மிகவும் அத்தியாவசியமான தேவை. இயேசு கொடுக்கும் இந்த இரட்சிப்பை மற்றவர்கள் கேட்கும்பொருட்டு, ஜெபத்தோடும் துணிச்சலோடும் நற்செய்தியை நாம் பிரசங்கிப்போம். 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இணைந்து இயேசுவுக்கு ஊழியம் செய்தல்

மைக்ரோனேசியாவில் உள்ள ஓர் தீவில் சிக்கித்தவிக்கும் இரண்டு ஆண்களுக்கு உதவ மீட்புப் பணியாளர்கள் பிரயாசப்பட்டனர். அவர்களுக்கு சுகாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு அவர்களை விரைந்து காப்பாற்றுவதற்கு குழுவாய் செயல்படவேண்டியது அவசியமாய் தோன்றியது. அவர்களை முதலில் கண்டுபிடித்த விமானி, அவர்களின் அருகாமையிலிருந்த ஆஸ்திரேலிய கப்பலுக்கு செய்தியனுப்பினார். கப்பல், இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியது, அவை உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கின. பின்னர், அமெரிக்க கடலோர காவல்படை அங்கு வந்து ஆட்களை சரிபார்த்து தகவல் அளித்தனர். இறுதியாக, ஓர் மைக்ரோனேசிய ரோந்துப் படகு அவர்களை பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்துவிட்டது.

நாம் இணைந்து செயல்பட்டால் நிறைய சாதிக்க முடியும். பிலிப்பிய விசுவாசிகள் அப்போஸ்தலர் பவுலை ஆதரிக்க தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்தனர். லீதியாளும் அவரது குடும்பத்தினரும் அவரை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றனர் (அப்போஸ்தலர் 16:13-15). கிலேமெந்து, எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் (இவர்கள் ஒத்துப்போகவில்லை) அனைவரும் நற்செய்தியைப் பரப்புவதற்கு அப்போஸ்தலருடன் நேரடியாக வேலை செய்தனர் (பிலிப்பியர் 4:2-3). பின்னர், பவுல் ரோமில் சிறையில் அடைக்கப்பட்டபோது, தேவாலயம் (விசுவாசிகள்) அவரது பராமரிப்புக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தை சேகரித்து, எப்பாபிராத்து மூலம் (வச. 14-18) விநியோகித்தது. பவுல் அப்போஸ்தலரின் ஊழியத்திற்காக பிலிப்பிய திருச்சபை தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருந்திருக்கக் கூடும் (1:19).

இந்த பண்டைய திருச்சபை விசுவாசிகள் ஒன்றாக இணைந்து ஊழியம் செய்ததற்கான எடுத்துக்காட்டுகள் இன்று நம்மை ஊக்குவிக்கும். தேவன் நம்மை வழிநடத்தி, நமக்கு அதிகாரம் கொடுத்ததால், ஜெபிக்கவும் மற்றவர்களுக்கு ஊழியம்செய்யவும், சக விசுவாசிகளுடன் ஒத்துழைக்கவும், நம்மால் இயன்றதைவிட அதிகமாக செய்யமுடிகிறது. “தனித்து வேலை செய்தால் நாம் ஒரு துளி, ஆனால் இணைந்து வேலை செய்தால் நாம் சமுத்திரம்.”

 

தேவனே என் துணையாளர்

என் நண்பர் ராலே தனது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை நோக்கி விரைகிறார்! அவரை நான் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எனக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஆதாராமாக அவர் இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஓர் புத்தகம் எழுதும் பணியை நிறைவுசெய்துவிட்டு, வேறொரு வேலையை செய்வதாக என்னிடம் கூறினார். அவற்றைக் கேட்க எனக்கு ஆர்வமாயிருந்தது ஆனால் ஆச்சரியப்படவில்லை. 

தனது எண்பத்தைந்து வயதில், வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள காலேப் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை. தேவன் இஸ்ரவேலுக்கு வாக்களித்த கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்காக பல சகாப்தங்களாக வனாந்தர வாழ்க்கை மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், தேவபக்தியும் விசுவாசமும் அவரை தாங்கியது. அவர், “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:11) என்று உரைக்கிறார். அவர் எந்த வழிகளில் ஜெயங்கொள்வார்? “கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன்” (வச. 12) என்று காலேப் பதிலளிக்கிறார். 

வயது, வாழ்க்கையின் நிலை அல்லது சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனை முழுமனதோடு பற்றிகொள்ளும் யாவருக்கும் தேவன் உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். நமக்கு உதவும் நம் இரட்சகராகிய இயேசுவில், தேவன் வெளிப்பட்டார். சுவிசேஷங்கள், கிறிஸ்துவிடத்திலிருந்து தேவன்மீது விசுவாசம் வைப்பதை நமக்கு போதிக்கிறது. உதவிக்காக தேவனை அண்டிய யாவருக்கும் தேவன் தன் அக்கறையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எபிரெய நிருப ஆசிரியர் “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபிரெயர் 13:6) என்று அறிக்கையிடுகிறார். இளைஞரோ அல்லது வயதானவரோ, பலவீனமானவரோ அல்லது பலவானோ, கட்டுண்டவரோ அல்லது சுதந்திரவாளியோ, வேகமாக ஓடுகிறவரோ அல்லது முடவனோ, யாராக இருந்தாலும் இன்று அவருடைய உதவியைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுப்பது எது?

 

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார். 

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம். 

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26).