தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டு சிறுவர்களும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும், 2018ஆம் ஆண்டு, ஒரு மதிய சாகசத்தை விரும்பி, ஒரு குறுகிய குகைக்குள் இறங்கினர். தீடீரென்று உயர்ந்த நீர்மட்டம் அவர்களை இன்னும் குகைக்குள் ஆழ்த்தியது. மீட்புப்பணியாளர்கள், இரண்டரை வாரங்கள் கழித்தே அவர்களை மீட்டனர். மீட்புப்பணியாளர் குழுவினர் தண்ணீருக்குள் மூழ்கி, அவர்களை தேட முயற்சித்தபோது, அவர்கள் அனைவரும் ஒரு பாறையின் மீது அமர்ந்து, ஆறு ஒளிரும் விளக்குகளை கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்தனர். அவர்கள் மணிக்கணக்காக இருளில் இருந்துகொண்டு, அந்த இருளைக் கிழித்துக்கொண்டு ஒரு ஒளி வரும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். 

ஏசாயா தீர்க்கதரிசி, இருளும் அந்தகாரமும் சூழ்ந்த உலகத்தை விவரிக்கிறார். அதில் ஒன்று வன்முறையிலும் பேராசையிலும் முறியடிக்கப்பட, மற்றொன்று கிளர்ச்சியினாலும் வேதனையினாலும் சிதைந்தது (ஏசாயா 8:22). அழிவைத் தவிர வேறொன்றுமில்லை. நம்பிக்கையின் விளக்கு முழுவதுமாய் அணைவதற்கு முன் மங்கி ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் அந்த மங்கிய மனச்சோர்வு முடிவல்ல என்று ஏசாயா வலியுறுத்துகிறார். தேவனுடைய இரக்கத்தினால், “முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை” (9:1). தேவன் தன்னுடைய ஜனத்தை இருளில் அழிவதற்கு அனுமதிப்பதில்லை. தீர்க்கதரிசி ஜனங்களுக்கு நம்பிக்கையை அறிவிக்கிறார். பின்பு, பாவம் தோற்றுவித்த இருளின் ஆதிக்கத்தை முழுவதுமாய் விரட்டுவதற்கு, இயேசுவின் வருகையை முன்னறிவிக்கிறார். 

இயேசு வந்தார். நாம் இப்போது ஏசாயாவின் வார்த்தைகளை புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் வாசிக்கிறோம்: “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது” (வச. 2) என்று ஏசாயா சொல்லுகிறார். 

இருள் எந்த அளவிற்கு அந்தகாரமாயிருக்கிறது என்பது முக்கியமில்லை; நம்முடைய சூழ்நிலை எவ்வளவு சோர்வை ஏற்படுத்துகிறது என்பதும் முக்கியமில்லை; நாம் இருளில் ஒருபோதும் கைவிடப்படுவதில்லை. இங்கு இயேசு இருக்கிறார். ஒரு பெரிய ஒளி நம்மை நோக்கி பிரகாசிக்கிறது.