எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கட்டாரா பேட்டன்கட்டுரைகள்

கவலைகளை களையெடுக்கவும்

எனது வீட்டு முற்றத்தில் உள்ள ஒரு நடவு இயந்திரத்தின் மூலம் சில விதைகளை விதைத்துவிட்டு, அதன் விளைச்சலைப் பார்க்க காத்திருந்தேன். பத்து முதல் பதினான்கு நாட்களுக்குள் விதைகள் முளைக்கும் என்று அறிந்து, நான் அதற்கு நீர் பாய்ச்சி பராமரித்தேன். விரைவில் சில பச்சை இலைகள் மண்ணிலிருந்து வெளியேறுவதைக் கண்டேன். ஆனால் அவை களைகள் என்று எனது கணவர் என்னிடம் சொன்னபோது நான் பதற்றமடைந்தேன். நான் வளர்க்க முயற்சிக்கும் செடிகளை அவை நெரித்துவிடாதபடி விரைவாக அவைகளை வெளியே இழுக்கும்படி எனது கணவர் என்னை ஊக்குவித்தார்.

நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய ஊடுருவல்காரர்களைக் கையாள்வதன் முக்கியத்துவத்தையும் இயேசு அறிவிக்கிறார். அவர் தனது உவமையின் ஓர் பகுதியை இவ்வாறு விளக்கினார்: விதைப்பவன் ஒருவன் தன்னுடைய விதைகளை விதைத்தபோது, அவற்றுள் “சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது” (மத்தேயு 13:7). முட்களும் களைகளும் தாவரங்களின் வளர்ச்சியை வெகுவாய் பாதிக்கக்கூடியவைகள் (வச. 22). அதுபோல கவலைகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வேதத்தை வாசிப்பதும் ஜெபிப்பதும் நமது விசுவாசத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள். ஆனால் கவலையின் முட்களைக் களையெடுப்பதில் நான் கவனம்செலுத்தவேண்டும் என்பதை உணர்ந்தேன். அவைகள் என்னுள் விதைக்கப்பட்ட நல்ல வசனத்தை நெருக்கி, தவறாய் என்னை திசைதிருப்பக்கூடும்.

வேதத்தில் காணப்படும் ஆவியின் கனிகளானது, அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்றவற்றை உள்ளடக்கியது (கலாத்தியர் 5:22). ஆனால் நாம் அந்த பலனைக் கொடுப்பதற்கு, தேவனுடைய வல்லமையோடு நம்மைத் திசைதிருப்பக்கூடிய அல்லது நம்முடைய கவனத்தை மாற்றக்கூடிய சந்தேகம் போன்ற கவலையின் களைகளை புறம்பாக்கிட வேண்டும். 

 

ஜெபிக்க தூண்டப்படல்

ஒரு சக பணியாளரின் ஜெபவாழ்க்கை எங்களது மேலாளரால் வளர்ச்சியடைந்ததாக ஒருமுறை என்னிடம் கூறினார். சற்று கடினமான எங்கள் மேலாளர், அவளுடன் சில ஆவிக்குரிய விஷயங்களை பகிர்ந்து அவள் அதிகமாக ஜெபிக்கத் தூண்டினார் என்று எண்ணி அதனால் நானும் ஊக்கமடைந்தேன். ஆனால் என் யூகம் தவறாயிற்று. எனது சக பணியாளரான தோழி இவ்விதமாக விளக்கினார்: “ஒவ்வொரு முறையும் மேளானா் வருவதைப் பார்த்ததும், நான் ஜெபிக்க ஆரம்பித்து விடுவேன்.” அவருடன் பேசும் முன்பு ஒவ்வொரு முறையும் அவள் ஜெபித்ததால், அவளுடைய ஜெப நேரம் அதிகரித்தது. ஏனெனில், தனது மேலாளருடன் பணியாற்றுவது சவாலானது, சரியான பணி உறவிற்குத் தேவனின் உதவி அவளுக்குத் தேவை என அறிந்திருந்தாள், அதனால் அவள் தேவனை அதிகம் கூப்பிட்டாள்.

கடினமான நேரங்களிலும், உரையாடல்கள் மத்தியிலும் ஜெபிக்கும் எனது சக பணியாளரின் பழக்கத்தை நானும் பின்பற்ற ஆரம்பித்தேன். இது வேதாகம பழக்கம்தான், 1 தெசலோனிக்கேயரில் கிறிஸ்துவின் விசுவாசிகளுக்கு பவுல், “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்” (5:17-18) என நினைவூட்டினார். நாம் எதை எதிர்கொண்டாலும், ஜெபிப்பதே சிறந்தது. இது நம்மைத் தேவனோடு இணைக்கவும், பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலுக்காக அவரை அழைக்கவும் உதவுகிறது (கலாத்தியர் 5:16). இதனால் நாம் மனித சித்தத்திற்கு இசைவதை தவிர்ப்போம். நாம் எதிர்க்கப்படும்போதும் “ஒருவருக்கொருவர் சமாதானமாக வாழ” (1 தெசலோனிக்கேயர் 5:13) நமக்கு உதவுகிறது.

தேவனுடைய ஒத்தாசையோடு, அவரில் மகிழ்ந்து, எல்லாவற்றுக்காகவும் ஜெபித்து, அடிக்கடி நன்றி கூறலாம். இயேசுவுக்குள் நம் சகோதர சகோதரிகளுடன் இன்னும் இசைவுடன் வாழ இவை நமக்கு உதவி செய்யும்.

கேட்பதற்கு தீவிரமாய்

ஒரு அன்பான நண்பர் என் மீது சுமத்திய குற்றச்சாட்டை மறுப்பதற்காக நான் வாயைத் திறந்தபோது என் இதயத்துடிப்பு அதிகரித்ததை உணர்ந்தேன். நான் ஆன்லைனில் பதிவிட்டதற்கும், அவள் சொன்னது போல அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் நான் பதிலளிக்கும் முன், நான் ஒரு ஜெபம் செய்தேன். நான் மௌனமாயிருந்தேன், அவள் சொல்வதையும் அவள் வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள காயத்தையும் கேட்டேன். என்னுடைய பதிவு வரம்பை மீறியது என்பதை உணர்ந்துகொண்டேன். என் தோழி வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய வலியை நிவர்த்தி செய்ய நான் அவளுக்கு உதவ தீர்மானித்ததால், என்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை நான் தொலைக்க நேரிட்டது.

இந்த உரையாடலின் போது, யாக்கோபு தன்னுடைய நிருபத்தில் எதைக் குறிப்பிடுகிறார் என்பதை நான் கற்றுக்கொண்டேன், “யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்” (1:19). கேட்பது என்பது அவர்களின் வார்த்தைகளுக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதை கவனிக்க நமக்கு உதவக்கூடும். மேலும், “மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே” (வச. 20) என்பதை புரிந்துகொள்ள வழிவகுக்கும். பேசுபவரின் இருதயத்தை புரிந்துகொள்ள உதவுகிறது. அவ்வேளையில் மறுத்து பேசுவதற்கு பதிலாக, நான் மனதிற்குள் ஜெபித்தது எனக்கு பெரிதும் உதவியது என்று நினைக்கிறேன். நான் என்னுடைய குற்றத்தைக் குறித்து வருந்துவதைக் காட்டிலும் அவளுடைய வேதனையை மிகவும் பொருட்படுத்த நேரிட்டது. ஒருவேளை நான் ஜெபிப்பதை நிறுத்தாமல் இருந்திருந்தால், என்னுடைய செய்கை மாறியிருக்கக்கூடும், என்னுடைய தரப்பில் நான் எவ்வளவு புண்படுத்தப்பட்டேன் என்பதை பதிலளிக்கு நானும் சொல்லியிருக்கக்கூடும்.

யாக்கோபு கோடிட்டுக் காட்டும் அறிவுரையை நான் எப்போதும் சரியாக கடைபிடித்ததில்லை என்றாலும், அந்த நாளில் அதை நான் செய்தேன் என்று நினைக்கிறேன். கோபப்படுவதற்கு முன்னர் நான் நின்று ஜெபிக்க முடிவுசெய்தது, கேட்பதற்கு தீவிரமாயும் பேசுகிறதற்கு பொறுமையாயும் செயல்பட என்னை அனுமதித்து. இதை அடிக்கடி செய்ய தேவன் எனக்கு ஞானத்தைத் தருவார் (நீதிமொழிகள் 19:11) என்று ஜெபிக்கிறேன். 

- கடாரா பேட்டன்

தெய்வீக ஞானம் உயிர்களை இரட்சிக்கிறது

ஒரு தபால்காரர், தனது வாடிக்கையாளர் ஒருவருக்கு கொடுத்த தபால்கள் அந்த பெட்டியிலிருந்து எடுக்கப்படாமல் அதிலேயே நாளுக்கு நாள் தேங்கியிருப்பதைக் கண்டு சந்தேகப்பட்டார். அந்த வீட்டில் ஒரு வயதான பெண்மணி தனியாக வசித்து வருவது அவருக்கு தெரியும். அவரும் அனுதிமும் தபாலை சேகரித்துக்கொள்வார் என்பதை அறிந்திருந்த அந்த தபால்காரர், அந்தப் பெண்மணியின் அண்டை வீட்டாரில் ஒருவரிடம் அதைக் குறித்து விசாரித்தார். சந்தேகப்பட்ட அவர்கள் இருவரும், ஒரு உதிரி சாவியின் மூலம் அந்த பெண்மணியின் வீட்டைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அவள் நான்கு நாட்களுக்கு முன்பு தரையில் மயங்கி விழுந்துகிடப்பதை கண்டறிந்தனர். அவளால் எழுந்திருக்கவோ உதவிக்கு அழைக்கவோ முடியவில்லை. தபால் ஊழியரின் ஞானமும், அக்கறையும், செயலூக்கமான செய்கையும் அவளுடைய உயிரைக் காப்பாற்றியது. 
“ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்” (11:30) என்று நீதிமொழிகள் கூறுகின்றன. சரியானதைச் செய்வதன் மூலமும், கடவுளுடைய ஞானத்தின்படி வாழ்வதன் மூலமும் வரும் பகுத்தறிவு நம்மை மட்டுமல்ல, நாம் சந்திப்பவர்களையும் ஆசீர்வதிக்கும். அவரையும் அவருடைய வழிகளையும் கனப்படுத்துகிற கனிகொடுக்கிற வாழ்க்கையானது, நல்ல மற்றும் புத்துணர்ச்சியூட்டும் வாழ்க்கையாக அமையும். நம்முடைய கனிகள் மற்றவர்களை பராமரித்துக்கொள்ளவும், அவர்களின் வாழ்க்கையை பொருட்படுத்தவும் நம்மைத் தூண்டுகிறது. 
நீதிமொழிகளின் எழுத்தாளர் புத்தகம் முழுவதும் வலியுறுத்துவது போல, கர்த்தரை சார்ந்திருப்பதிலேயே நம்முடைய ஞானம் வெளிப்படுகிறது. “முத்துக்களைப் பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல” (நீதிமொழிகள் 8:11). தேவன் தரும் ஞானம் நம் வாழ்நாள் முழுவதும் நம்மை வழிநடத்த போதுமானது. இது நித்தியத்திற்கு நேராய் ஆத்துமாக்களை வழிநடத்தக்கூடியது. 

விசுவாசத்தில் பார்த்தல்

எனது காலை நடைப்பயணத்தின் போது, ஏரியின் நீரோடை மீது தன் கதிர்களை பாய்ச்சிய சூரியன் ஒரு அழகான காட்சியை ஏற்படுத்தியிருந்தது. நான் புகைப்படம் எடுப்பதற்காக என் கேமராவை நிலைநிறுத்தியபோது என் நண்பரை சற்று எனக்காக காத்திருக்கச் சொன்னேன். சூரியன் ஒளி மின்னியதால் நான் ஷாட்டை எடுப்பதற்கு முன்பு எனது தொலைபேசியின் திரையில் படத்தைப் பார்க்க முடியவில்லை. ஆனால் இதை முன்பே செய்ததால், இது ஒரு சிறந்த படமாக அது இருக்கும் என்று உணர்ந்தேன். நான் என் நண்பரிடம், “இப்போது இதை நம்மால் பார்க்க முடியாது, ஆனால் இதுபோன்ற படங்கள் எப்போதும் நன்றாக வரும்” என்று சொன்னேன்.  
நம்முடைய இந்த வாழ்க்கையில் விசுவாசத்தில் நடப்பது பெரும்பாலும் அந்த படத்தை எடுப்பது போன்றதாகும். நீங்கள் எப்போதும் திரையில் விவரங்களைப் பார்க்க முடியாது, ஆனால் அதற்காக அது நல்ல காட்சி இல்லை என்று அர்த்தமில்லை. தேவன் கிரியைசெய்வதை நீங்கள் எப்போதும் பார்க்க முடியாது, ஆனால் அவர் இருக்கிறார் என்று நீங்கள் நம்பலாம். எபிரேயர் நிருபத்தின் ஆசிரியர் எழுதியது போல், “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” (எபிரெயர் 11:1). தேவன் நம்முடைய வாழ்க்கையில் என்ன கிரியை செய்துகொண்டிருக்கிறார் என்பதை அறியமுடியாதபட்சத்தில், நாம் விசுவாசத்தினால் தேவன் மீது நம்பிக்கை வைக்கிறோம்.  
நாம் காணமுடியாத காட்சிகள் நம்மை படம் எடுப்பதிலிருந்து தடுப்பதில்லை. அது நம்மை அதிகமாக ஜெபிக்கவும் தேவனின் வழிநடத்துதலையும் நாடவும் செய்யலாம். கடந்த காலத்தில் விசுவாசத்தில் நடந்த உதாரணங்களையும் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் உதாரணங்களையும் அடிப்படையாய் வைத்து நம் விசுவாச பயணத்தை தொடர்ந்து நடத்தமுடியும் (வச. 4-12). கடந்த காலத்தில் கிரியை செய்த அதே ஆண்டவர், இப்போதும் வல்லமையுள்ளவராயிருக்கிறார்.  

தேர்ந்தெடுப்பு

எனது ஆருயிர் நண்பன் மரித்து சில வாரங்கள் கழித்து அவனுடைய தாயாரிடத்தில் நான் பேசினேன். அவர்கள் துக்கமாயிருக்கும் அந்த தருவாயிலும் எப்படியிருக்கிறீர்கள் என்னும் கேள்வி பொருந்தாத கேள்வி என்று தெரிந்தும் அவர்களிடத்தில் நான் அதைக் கேட்டேன். ஆனால் “நான் மகிழ்ச்சியாய் இருப்பதை தெரிந்துகொண்டேன்” என்ற அவர்களுடைய பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது.

என் சொந்த வாழ்க்கையில் சில விரும்பத்தகாத சூழ்நிலைகளைத் தாண்டிச் செல்ல நான் போராடியபோது அவர்களுடைய வார்த்தைகள் எனக்கு உதவியது. உபாகமத்தின் முடிவில் இஸ்ரவேலர்களுக்கு மோசேயின் கட்டளையையும் அவளுடைய வார்த்தைகள் எனக்கு நினைவூட்டின. மோசேயின் மரணத்துக்கும், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேலர்கள் நுழைவதற்கும் சற்று முன்பு, அவர்களுக்கு ஒரு தேர்வு இருக்கிறது என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தேவன் விரும்பினார். மோசே, “நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன்... நீங்கள் ஜீவனைத் தெரிந்துகொள்ளுங்கள்” (உபாகமம் 30:19) என்று கட்டளையிடுகிறார். அவ்வாறு ஜீவனை தெரிந்துகொண்டால், அவர்கள் தேவனுடைய கட்டளைகளை பின்பற்றி நலமாக வாழமுடியும். இல்லையென்றால், தேவனை விட்டு விலகி, “மரணத்தையும் தீமையையும்” (வச. 15) தெரிந்துகொள்ளவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது.

நாம் எப்படி வாழவேண்டும் என்பதையும் தேர்ந்தெடுக்கவேண்டியிருக்கிறது. தேவனுடைய வாக்குத்தத்தங்களை நம்புவதின் மூலம் நாம் மகிழ்ச்சியை தேர்வுசெய்யலாம். அல்லது நம்முடைய வாழ்க்கைப் பாதையின் எதிர்மறையான காரியங்களை தேர்வுசெய்து நம்முடைய மகிழ்ச்சி பறிபோகும்படிக்கும் அனுமதிக்கலாம். அது பரிசுத்த ஆவியானவரை சார்ந்துகொண்டு செய்யப்படவேண்டியது. “தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக” (ரோமர் 8:28) நடத்துகிற தேவனாலே நாம் மகிழ்ச்சியை தேர்ந்தெடுக்கலாம்.  

தேவன் நம் பாவத்தை மூடுகிறார்

1950களில் ஒரு ஒற்றைத் தாய் தனது குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள வேலை தேட வேண்டியிருந்தபோது, அவருக்கு தட்டச்சு வேலை கிடைத்தது. ஒரே பிரச்சினை என்னவென்றால், அவள் நேர்த்தியாய் தட்டச்சு செய்பவள் அல்ல; தொடர்ந்து தவறுகளைச் செய்தாள். அவள் தனது பிழைகளை மறைப்பதற்கான வழிகளைத் தேடினாள். இறுதியில் தட்டச்சுப் பிழைகளை மறைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வெள்ளைத் திருத்த திரவமான, திரவக் காகிதம் என்று அழைக்கப்படும் ஒன்றை கண்டுபிடித்தாள். அது காய்ந்ததும், பிழைகள் இல்லாதது போல் வெண்மையான பின்பு, மீண்டும் அதின் மீது புதிதாய் தட்டச்சு செய்யமுடியும்.

நம்முடைய பாவத்தை சமாளிக்க நேர்த்தியான சக்திவாய்ந்த வழியை இயேசு நமக்கு கொடுக்கிறார். மூடிமறைத்தல் இல்லை, அது முழுமையான மன்னிப்பு. இதற்கு ஒரு நல்ல உதாரணம் யோவான் 8 ஆம் அதிகாரத்தின் தொடக்கத்தில் விபச்சார பாவத்தில் சிக்கிய ஒரு ஸ்திரீயின் சம்பவத்திலிருந்து காட்டப்படுகிறது (வச. 3-4). அந்த ஸ்திரீக்கும் அவள் செய்த பாவங்களுக்கும் இயேசு ஏதாவது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அங்கிருந்த நியாயதிபதிகள் விரும்பினர். அவள் கல்லெறியப்பட வேண்டும் என்று நியாயப்பிரமாணம் கூறுகிறது. ஆனால் இயேசு நியாயப்பிரமாணம் என்ன சொல்லுகிறது என்பதைக் குறித்து சற்றும் யோசிக்கவில்லை. மாறாக, எல்லாரும் பாவம் செய்தவர்கள் தான் என்று (ரோமர் 3:23ஐப் பார்க்கவும்), உங்களில் பாவமில்லாதவன் அந்த ஸ்திரீயின் மீது கல்லெறியக்கடவன் (யோவான் 8:7) என்று சொல்லுகிறார். ஒரு கல்லும் எறியப்படவில்லை.

இயேசு அவளுக்கு ஒரு புதிய துவக்கத்தை ஏற்படுத்தினார். அவளை அவர் குற்றவாளியாய் தீர்க்கவில்லை என்று சொல்லி, “இனிப் பாவஞ்செய்யாதே” (வச. 11) என்று சொல்லுகிறார். அவளுடைய பாவ வாழ்க்கைக்கான் தீர்வையும், இனி அவள் பாவம் செய்யாமல் வாழும் வாழ்க்கைக்கான புதிய துவக்கத்தையும் இயேசு அருளுகிறார். அவருடைய கிருபையினாலே அந்த வாய்ப்பை தேவன் நமக்கும் அருளுகிறார்.

ஆசீர்வாதமான முகமூடி

தொற்றுநோயின் நாட்களில் முகமூடி அணியும் சட்டம் சற்று தளர்த்தப்பட்டதால், என்னுடைய மகளுடைய பள்ளி போன்ற முக்கியமான இடங்களில் கூட அவற்றை எடுத்துச் செல்ல மறந்து நான் சிரமப்பட்டேன். ஒரு நாள் எனக்கு முகமூடி தேவைப்பட்டபோது, எனது காரில் ஒரு முகமூடி இருந்ததை கண்டேன். அதில் “ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்று வாசகம் எழுதப்பட்டிருந்ததால், அதை அணிவதற்கு தயங்கி, காரிலேயே வைத்திருந்தேன்.

எந்த வாசகமும் இல்லாத முகமூடியை அணிவதற்கு நான் விரும்புவேன். ஆனால் அந்த முகமூடியில் வாசகம் மிகவும் பெரிதாய் எழுதப்பட்டிருந்தது. ஆனால் எனக்கு வேறுவழியில்லை என்பதினால் அதை அணிந்துகொண்டேன். பள்ளியில் வரவேற்பாளரிடம் என் கோபத்தை வெளிப்படுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது, என் முகமூடியில் இருந்த வாசகத்தின் காரணமாக நான் சற்று தயங்கி, சுதாரித்துக்கொண்டேன். என் முகமூடியில் ஆசீர்வதிக்கும் வார்த்தைகளை மிளிரச்செய்து, பார்ப்பவர்களிடம் வெறுப்பைக் காண்பிக்கும் பாசாங்கு செய்வதற்கு நான் விரும்பவில்லை.

என் முகமூடியில் தென்பட்ட அந்த வார்த்தைகள் கிறிஸ்துவின் சாட்சியாய் நாம் இருக்கவேண்டியதின் அவசியத்தை நமக்கு வலியுறுத்தினாலும், மற்றவர்களோடு நாம் பொறுமையாய் இருக்கவேண்டியதின் முக்கியத்துவத்தை வேதத்தின் வார்த்தைகள் என் இருதயத்தில் உணர்த்தின. கொரிந்தியருக்கு பவுல் எழுதும்போது, “நீங்கள்... கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல… இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது” ( 2 கொரிந்தியர் 3:3) என்று சொல்லுகிறார். நமக்கு ஜீவனை அருளும் ஆவியானவர், “அன்பு, சந்தோஷம், சமாதானம்” மற்றும் “நீடிய பொறுமை” (கலாத்தியர் 5:22) ஆகியவற்றை பெற்றுக்கொள்ள நமக்கு துணைசெய்வாராக. நமக்குள் கிரியை செய்யும் அவருடைய பிரசன்னத்தினால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்.

பிள்ளையின் விசுவாசம்

நாங்கள் தத்தெடுத்துக்கொண்ட எங்களது பாட்டி பக்கவாதநோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருடைய மூளை எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மருத்துவர்களால் கணிக்கமுடியவில்லை. அதை தெரிந்துகொள்வதற்கு அவர்கள் சரீரப்பிரகாரமாக இன்னும் தேர்ச்சியடையவேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். படுக்கையிலிருந்த அவர் ஒரு சில வார்த்தைகளையே பேசினார். அவற்றிலும் சிலவற்றையே புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் பன்னிரெண்டு வருடங்களாக என் மகளை பராமரித்து பாதுகாத்த எண்பத்தாறு வயது மூதாட்டி என்னைப் பார்த்ததும், தன்னுடைய வாயைத் திறந்து “கெய்லா எப்படி இருக்கிறாள்?” என்று என் மகளைக் குறித்து விசாரித்தார். அவர் மிகவும் ஆழமாகவும் முழுமையாகவும் நேசித்த என்னுடைய மகளைக் குறித்த கேள்வியே அந்த கடினமான சூழ்நிலையில் அவர் என்னைப் பார்த்து கேட்ட முதல் கேள்வி.

இயேசு குழந்தைகளை அதிகமாய் நேசித்தார். அவருடைய சீஷர்கள் தடைசெய்தபோதும் இயேசு குழந்தைகளை தன்னிடமாய் வரவழைத்துக்கொண்டார். அங்கிருந்த சில பெற்றோர்கள் இயேசுவிடத்திற்கு தங்களுடைய பிள்ளைகளை கொண்டுவர விரும்பினர். இயேசு தன்னுடைய கரங்களை அந்த பிள்ளைகளின் மீது வைத்து அவர்களை ஆசீர்வதித்தார் (லூக்கா 18:15). ஆனால் அவர் சிறுபிள்ளைகளை ஆசீர்வதிக்கிறதை அங்கிருந்த அனைவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. சீஷர்கள் இயேசுவை தொந்தரவுசெய்யவேண்டாம் என்று பெற்றோர்களை அதட்டுகின்றனர். ஆனால் இயேசு குறுக்கிட்டு, “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்” (வச. 16) என்றார். அவர் சிறுபிள்ளைகளை முன்னிலைப்படுத்துவதின் மூலம் தேவனுடைய இராஜ்யத்தை எந்த அளவிற்கு எளிமையுடனும், நம்பிக்கையுடனும், நேர்மையுடனும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்கு மாதிரிப்படுத்திக் காண்பித்தார்.

சிறுபிள்ளைகளுக்கு ஒளிவுமறைவு கிடையாது. எதைப் பார்க்கிறார்களோ அதைப் பெற்றுக்கொள்ள விரும்புவர். இந்த குழந்தைகளின் விசுவாசத்தை நாம் பெற்றுக்கொள்ள நம்முடைய பரமபிதா உதவுகிற தருவாயில், ஒரு சிறுபிள்ளையைப் போல நம்பிக்கையோடு அவரை சார்ந்திருக்க நாம் பிரயாசப்படுவோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

பொய்களும் உண்மையும்

 

அடால்ஃப் ஹிட்லர், சிறிய பொய்களைவிட பெரிய பொய்கள் சக்திவாய்ந்தவை என்று நம்பினார். மேலும் அவர் தனது கோட்பாட்டை வெற்றிகரமாக பரிசோதித்தார். அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்தில், அவர் மற்றவர்களின் கருத்துக்களை ஆதரிப்பதில் திருப்தி அடைவதாகக் கூறினார். அவர் ஆட்சிக்கு வந்ததும், யாரையும் துன்புறுத்தவேண்டும் என்ற எண்ணம் தனது கட்சிக்கு இல்லை என்றார். பின்னர், ஊடகங்களை பயன்படுத்தி தன்னை தகப்பனாகவும் ஒழுக்க நெறியாளராகவும் சித்தரித்தார்.

சாத்தான் நம் வாழ்வில் வல்லமை பெற பொய்களைப் பயன்படுத்துகிறான். அனைத்து தருணங்களிலும், அவன் பயம், கோபம் மற்றும் விரக்தியைத் தூண்டுகிறான். ஏனெனில் அவன் “பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாய்” இருக்கிறான் (யோவான் 8:44). சாத்தானால் உண்மையைச் சொல்லமுடியாது, ஏனென்றால் இயேசு சொன்னதுபோல், அவனுக்குள் எந்த உண்மையும் இல்லை.

சாத்தானின் பொய்களில் சிலவைகள் இங்கே. முதலில், நமது பிரார்த்தனைகள் முக்கியமில்லை என்பதே. “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும்பெலனுள்ளதாயிருக்கிறது” (யாக்கோபு 5:16) என்று வேதம் சொல்லுகிறது. இரண்டாவது பொய், “நாம் சிக்கலில் இருக்கும்போது, அதிலிருந்து வெளியேற வழியே இல்லை” என்பதே. இதுவும் தவறானது. “தேவனாலே எல்லாம் கூடும்” (மாற்கு 10:27) என்றும் “சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1 கொரிந்தியர் 10:13) என்றும் வேதம் வாக்களிக்கிறது. மூன்றாவதாக, “தேவன் நம்மை நேசிப்பதில்லை” என்னும் பொய். அது உண்மையல்ல. நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள “தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது” (ரோமர் 8:38-39).

தேவனுடைய சத்தியம் பொய்யைவிட சக்தி வாய்ந்தது. இயேசுவின் போதனைக்கு நாம் அவருடைய வல்லமையில் கீழ்ப்படிந்தால், நாம் “சத்தியத்தை அறிவோம்”, பொய்யானதை நிராகரிப்போம். “சத்தியம் நம்மை விடுதலையாக்கும்” (யோவான் 8:31-32). 

 

மகிழ்ச்சியும் ஞானமும்

ஜப்பானில் ஒவ்வொரு வசந்த காலத்திலும் இனிமையான நறுமணப் பூக்கள் நேர்த்தியான வெளிர் மற்றும் துடிப்பான இளஞ்சிவப்புகளால் நிரப்பப்படுகின்றன. இது குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் உணர்வுகளை மகிழ்விக்கிறது. குறுகிய காலம் மட்டுமே இருக்கக்கூடிய அந்த மலர்கள் ஜப்பானியர்களிடம், குறுகிய வாழ்க்கை அனுபவத்தின் மேன்மையை தன் அழகினாலும் வாசனையினாலும் ஏற்படுத்திச் செல்கிறது. திடீரென்று ஏற்படும் மகிழ்ச்சி மாற்றத்தை அவர்கள் “வாழ்வின் நிலையற்ற தன்மை” என்று அழைக்கிறார்கள்.

மனிதர்களாகிய நாம் மகிழ்ச்சியின் உணர்வுகளைத் தேடவும் அதில் நீடிக்கவும் விரும்புகிறோம் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஆயினும்கூட, வாழ்க்கை கஷ்டங்களால் நிரம்பியுள்ளது என்பதன் அர்த்தம், அன்பான தேவன் மீதான நம்பிக்கை என்னும் பூதக்கண்ணாடியின் மூலம் வலி மற்றும் இன்பம் இரண்டையும் பார்க்கும் திறனை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் அவிசுவாசத்துடனோ இருக்கவோ அல்லது வாழ்க்கையைப் பற்றிய யதார்த்தமற்ற பார்வையை நாமே உருவாக்கிக்கொள்ளவோ அவசியமில்லை.

பிரசங்கி புத்தகம் நமக்கு ஒரு பயனுள்ள மாதிரியை வழங்குகிறது. இந்த புத்தகம் சில நேரங்களில் எதிர்மறையான அறிக்கைகளின் பட்டியலாக கருதப்பட்டாலும், “எல்லாம் மாயை” (1:2) என்று எழுதிய அதே சாலெமோன் ராஜா, “வேறொரு நன்மையும் இல்லை” என்று கூறி, வாழ்க்கையில் எளிமையான விஷயங்களில் மகிழ்ச்சியைக் காண வாசகர்களை ஊக்குவிக்கிறார். “புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை” (8:15).

அழகான பருவங்களிலும் கடினமான காலங்களிலும் (3:11-14; 7:13-14), பரலோகப்பார்வையில் எதுவுமே நிரந்தரமானது இல்லை என்பதை அறிந்து, ஞானத்தை அடையவும் தேவனுடைய கிரியைகளை பார்க்கும்படியும் உதவிசெய்யும்படி (வச. 16-17) தேவனிடம் நாம் கேட்கும்போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. 

 

சரியாய் எதிர்வினையாற்றுங்கள்

கௌரவால் தன் கண்களை நம்ப முடியவில்லை. "அவர்கள் ஏன் இந்த வெள்ளை உடையில் இருக்கும் நல்ல மாமாவை அடிக்கிறார்கள்" என்று எண்ணினான். அவன் இயேசுவைப் போல உடையணிந்த ஒரு நபர் தெருக்களில் ஊர்வலமாகச் செல்வதையும் , போலி இரத்தம் சொட்டச் சொட்டவும், வீரர்களைப் போல உடையணிந்தவர்களால் சாட்டையால் அடிக்கப்படுவதையும் கண்டான். அது ஒரு சபையின் புனித வெள்ளி பவனி. ஆனால் அந்த காட்சி கௌரவுக்கு மிகவும் நிஜமாக இருந்தது. கௌரவ் ஒரு மனநலிவு நோயாளி, மேலும் அவனது நிலை அவனை மிகவும் ஆர்வத்துடனும் இரக்கத்துடனும் இருக்கும்படி செய்தது. அம்மாவின் புடவையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு, “அம்மா, தயவு செய்து அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள்!” என்று புலம்பியபடியே அவன் இதயம் இரக்கத்தால் நிறைந்தது.

கௌரவரைப் போல இரக்கமுள்ளவர்களாக இருக்க நாம் அழைக்கப்படுகிறோம். சிலருக்கு எளிதில் இரக்கம் உண்டாகலாம் என்றாலும், மற்ற நமக்கோ அதைப் பயிற்சி செய்ய வேண்டும். கொலோசெ சபையினர்க்கு தங்கள் பழைய வாழ்க்கை முறையை "அகற்ற" வலுவாக வலியுறுத்தப்பட்டது. அழுக்காகவும் கந்தையாகவும் இருந்த ஆடையைத் தூக்கி எறிவது போல, கோபம், மூர்க்கம் , பொறாமை, வாயில் பிறக்கலாகாத தூஷணம், வம்பு வார்த்தைகள் (வ.8) ஆகியவற்றைக் கொண்டிருந்த தங்கள் உலகத்துக்குரிய சுபாவத்தைக் களைந்துவிடும்படி அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். மாறாக, இரக்கம், தயவு, மனத்தாழ்மை மற்றும்நீடிய பொறுமை (V.12)ஆகிய நற்பண்புகளை அணிந்துகொள்ள அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர், அவை " இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும்" (சங்கீதம் 145:8). கொண்ட தங்கள் சிருஷ்டிகரைப் பிரதிபலிக்கின்றன.

இரக்கம், கருணை, தாழ்மை மற்றும் தயவு ஆகியவை இன்றைய உலகில் பெரும்பாலும் பலவீனங்களாகக் கருதப்படுகின்றன. ஆனாலும் இதைத்தான் மற்றவர்கள் நம்மில் பார்க்க வேண்டும், அனுபவிக்க வேண்டும் (வ.12). சக பணியாளர்கள், அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான நமது அனுதின உறவுகளில் இந்த குணாதிசயங்களுடன் செயல்படுவது எப்போதும் எளிதானது அல்ல. ஆனால் சூழ்நிலைகள் எப்படிப்பட்டதாயினும் நாம் சரியாக எதிர்வினையாற்ற உறுதிகொள்ள வேண்டும், ஏனெனில் இந்த வழிமுறையில்தான் நாம் கிறிஸ்துவின் சீடர்கள் என்பதை உலகம் அறியும் ரெபேக்கா விஜயன்