வகை  |  odb

நாளைய தினத்தை இன்று பார்ப்பது

மேகங்களற்ற நீல நிற வானத்தை கூர்ந்து பார்ப்பது எனக்குப் பிடிக்கும். நம்முடைய சிருஷ்டிகரின் மகிமையான படைப்புகளில் ஓர் அழகிய பகுதி இந்த வானம். இது நம்முடைய சந்தோஷத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வானத்தைக் கண்டு விமான ஓட்டிகள் எவ்வளவாய் மகிழ்ந்திருப்பார்கள்! அவர்கள் பறப்பதற்கு ஏற்ற சிறந்த வான்வெளியை பல அடைமொழிகளைக் கொண்டு விவரிப்பார்கள். அதில் எனக்கு மிகவும் பிடித்தது, “நாளைய தினத்தை நீ இன்றே பார்ப்பது.”

“நாளைய தினத்தை இன்றே பார்ப்பது” என்பது நமது பார்வைக்கு அப்பாற்பட்டது. சொல்லப் போனால் இன்று நம்மை நோக்கி வரும் காரியங்களைக்கூட சில சமயங்களில் நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. “நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப் போலிருக்கிறதே” என்று வேதாகமம் கூறுகிறது (யாக். 4:14).

ஆனால் வரையறைக்குட்பட்ட நம்முடைய பார்வை விரக்தியை உண்டாக்கத் தேவையில்லை. மாறாக நாம் மகிழ்ந்திருக்கலாம். ஏனெனில் நம்முடைய எதிர்காலத்தை முற்றும் காண்கிற தேவன் மேல் நாம் விசுவாசம் வைத்துள்ளோம். அதின் ஒவ்வொரு நாளிலும் நாம் எதிர்கொள்ள போகும் சவால்களையும் அதன் தேவைகளையும் அவர் அறிந்திருக்கிறபடியால், நாம் கலங்கத் தேவையில்லை. இதை அப்போஸ்தலனாகிய பவுல் நன்கு அறிந்துள்ளார். ஆகவேதான், “நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்”
(2 கொரி. 5:6) என்று நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளினால் அவர் நம்மை உற்சாகப்படுத்துகிறார்.

இன்றைய தினத்தையும், நாம் காணாத எதிர்காலத்தையும் நம்பிக்கையோடு தேவனுடைய கரத்தில் ஒப்புக்கொடுக்கும்பொழுது, நம் வாழ்வை எதிர்நோக்கி வரும் எக்காரியங்களைக் குறித்தும் நாம் கவலைப்படத் தேவையில்லை. நாம் தேவனோடு நடக்கிறோம். நமக்கு முன் இருப்பவைகளை அவர் அறிந்திருக்கிறார். அவற்றைக் கையாள அவர் பெலமுள்ளவராய், ஞானம் உள்ளவராய் இருக்கிறார்.

குப்பைமேட்டு மேதை

1965ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) பட்டணத்தில் வாட்ஸ் என்னும் பகுதியில் நடந்த கலவரத்திலிருந்து சுமார் மூன்று டன் உடைந்த பொருட்களை சேகரித்த நோவா புரிஃபாய் (Noah Purifoy), அதை வைத்து கலைப்பொருட்களை உருவாக்கினார். உடைந்த சைக்கிள் சக்கரங்கள், பந்துகள், பழைய டயர்கள், சேதமடைந்த தொலைக்காட்சி பெட்டிகள் என இனி பயன்படாத பொருட்களை வைத்து தன் சக ஊழியருடன் சேர்ந்து பல சிற்பங்களை செய்தார். இன்றைய நவநாகரிக சமுதாயத்தில் மனிதர்கள் உதவாப்பொருட்கள் போல நடத்தப் படுகிறார்கள் என்னும் வலிமையான கருத்தை தன்னுடைய சிற்பங்கள் மூலம் வெளிப்படுத்தினார். திரு. புரிஃபாய். அவர்களை ஒரு பத்திரிக்கையாளர் “குப்பைமேட்டு மேதை” என குறிப்பிட்டார்.

இயேசு வாழ்ந்த காலக்கட்டத்தில், வியாதியஸ்தர்களையும், சரீரப்பிரச்சனைகள் உள்ளவர்களையும்,பலரும் பாவிகள் எனக் கருதினர். அவர்களுடைய பாவங்களுக்காக தேவன் அவர்களை தண்டிப்பதாகக் கருதினர். அவர்களை அச்சமுதாயம் புறக்கணித்து உதாசீனப்படுத்தியது. ஆனால் இயேசுவும், அவருடைய சீஷர்களும் ஒரு குருடனை எதிர்கொண்ட பொழுது, இயேசு அவனுடைய நிலை பாவத்தின் விளைவினால் அல்லவென்றும் மாறாக தேவனுடைய மகிமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்திற்காகவே என்று கூறினார். “நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்,” என்றார் (யோவா. 9:5). இயேசு கூறியபடி அந்த குருடன் செய்த பொழுது பார்வை பெற்றான்.

இதைக்குறித்து மதத் தலைவர்கள் அவனை விசாரித்த பொழுது, அவன் மிகச் சாதாரணமாக, “நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்” (வச. 25) என்றான்.

இன்றும் நம் உலகின் மகிப்பெரிய “குப்பைமேட்டு மேதை” இயேசுதான். நாம் எல்லோரும் பாவத்தினால் சேதமடைந்திருக்கிறோம். ஆனால் அவர் நம்முடைய உடைந்துபோன வாழ்க்கையை எடுத்து வனைந்து, புது சிருஷ்டிகளாக நம்மை மாற்றிவிடுகிறார்.

சின்னப் பொய்களும் பூனைக்குட்டிகளும்

புதிதாய் பிறந்த பூனைக்குட்டிகளிடமிருந்து விரைந்தோடிய நான்கு வயது எலியாசை (Elias) அம்மா கவனித்தார். பூனைக்குட்டிகளைத் தொடக்கூடாது என்று ஏற்கனவே அவனுக்கு சொல்லி இருந்தார். ஆனால் எலியாஸ் ஓடியதைப் பார்த்து, “நீ அந்த பூனைக்குட்டிகளைத் தொட்டாயா?” என்று கேட்டார்.

“இல்லை!” என நல்லபிள்ளை போல் கூறினான். ஆகவே வேறு விதமாக ஒரு கேள்வி கேட்டார்கள். “அவை மென்மையாக இருந்தனவா?” அதற்கு அவன் “ஆமாம்” என கூறியது மட்டுமின்றி “அந்த கருப்பு பூனைக்குட்டி ‘மியாவ்’ என கத்தியது,” என்றும் கூறினான்.

குழந்தைகள் ஏமாற்றும் பொழுது நாம் சிரிக்கிறோம். ஆனால் எலியாசின் கீழ்ப்படியாமை மனித குலத்தின் நிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நான்கு வயது சிறுவனுக்கு ஒருவரும் பொய் சொல்ல கற்றுத்தர வேண்டியதில்லை. “நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்,” என தாவீது தன்னுடைய புகழ்பெற்ற பாவ அறிக்கையில் எழுதியுள்ளான் (சங். 51:5).

அப்போஸ்தலனாகிய பவுல், “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணமும் எல்லாருக்கும் வந்தது” எனக் கூறியுள்ளார் (ரோம. 5:12). வருத்தமளிக்கும் இச்செய்தி இராஜாக்களுக்கும், நான்கு வயது சிறுவர்களுக்கும், உங்களுக்கும், எனக்கும் சமமாய் பொருந்தும். ஆனால் சோர்ந்து போக வேண்டாம். மிகுந்த நம்பிக்கையளிக்கும் செய்தியும் உண்டு. மனுஷனுடைய பாவ சுபாவம் வெளிப்படும்படியாய் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது. “மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று,” என பவுல் எழுதியுள்ளார் (ரோம. 5:20).

நாம் தவறு செய்தவுடன் நம் மீது பாய்ந்து வந்து நம்மைத் தண்டிக்க தேவன் காத்திருக்கவில்லை. நமக்கு கிருபை பாராட்டி, நம்மை மன்னித்து, சீர்ப்படுத்துவதே அவருடைய நோக்கம். நாம் செய்ய வேண்டியதென்னவெனில் பாவத்தை அசட்டைபண்ணாமலும், அதை விரும்பாமலும் விசுவாசத்தோடு அவரிடத்தில் மனந்திரும்பக்கடவோம்.

அன்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது

அன்டாரியோ (Ontario)வில் உள்ள வெல்லான்ட் (Welland) நகரில் திடீரென பிங்க் நிறத்தில் “நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்ற வார்த்தைகளை கொண்ட விளம்பரப் பலகைகள் மர்மமாக தோன்றின. ஆகவே உள்ளூர் நிருபரான மரியானா ஃபிர்த் (Maryanne Firth) அதைப்பற்றி விசாரிக்கத் தீர்மானித்தாள். ஆனால் அவளுடைய விசாரணையில் ஒன்றும் அகப்படவில்லை. சில வாரங்கள் கழித்து ஒரு உள்ளூர் பூங்காவின் பெயரும், தேதியும், நேரமும் குறிப்பிடப்பட்ட பல விளம்பரப்பலகைகள் மறுபடியும் மர்மமாகத் தோன்றின.

ஆவலான சில உள்ளூர்வாசிகளோடு, மரியானா குறிப்பிட்ட நேரத்திற்கு அப்பூங்காவிற்கு சென்றாள். அங்கு நல்ல உடை அணிந்து, சாமர்த்தியமாக தன் முகத்தை மறைத்திருந்த ஒருவனைக் கண்டாள். அவன் நெருங்கி வந்து அவளுக்கு ஒரு பூங்கொத்து கொடுத்து தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு கேட்ட பொழுது அவளுக்கு எவ்வளவு வியப்பாக இருந்திருக்கும் என நினைத்துப் பாருங்கள். அந்த மர்ம மனிதன், அவளுடைய காதலன் ரயன் செயன்ட் டெனிஸ் (Ryan St. Denis). ஆகவே அந்த திருமணக் கோரிக்கையை அவள் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டாள்.

டெனிஸ் தன்னுடைய வருங்கால மனைவியிடம் தன் காதலை வெளிப்படுத்திய விதம் கொஞ்சம் பகட்டாகத் தோன்றலாம். ஆனால் தேவன் நம் மீது வைத்துள்ள அன்பை அவர் வெளிக்காட்டிய விதம் நிகரற்ற ஆடம்பரமானது. “தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது” (1 யோவா. 4:9). அன்பிற்கு அடையாளமாக ஒருவர் இன்னொருவருக்கு கொடுக்கும் ஒரு ரோஜாப்பூவைப் போல் இயேசு ஒரு அடையாளச் சின்னம் அல்ல.

இரட்சிப்பு அடையும்படி தன்னை விசுவாசிக்கிற அனைவரும் தேவனோடு கூட நித்திய உடன்படிக்கையினாலுண்டான உறவில் ஐக்கியம் கொள்ள தேவமனுஷனாகிய அவர் தாமாகவே தம் ஜீவனைத் தந்தருளினார். கிறிஸ்தவனை “கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு” எதுவும் பிரிக்க முடியாது (ரோம. 8:39).

சந்தேகத்தின் இறப்பு

“சந்தேகத் தோமா” என்று நம்மால் அழைக்கப்படும் தோமாவுக்கு (யோவா. 20:24-29) இந்த அடைமொழி உண்மையில் நியாயமானதல்ல. சொல்லப்போனால் கொல்லப்பட்ட நம்முடைய தலைவர் உயிர்த்தெழுந்து விட்டார் என்ற செய்தியை நம்மில் எத்தனை பேர் நம்பியிருப்போம்? உண்மையில் அவரை “தைரிய தோமா” என்றுதான் கூற வேண்டும் ஏனென்றால், இயேசு அனைத்தையும் அறிந்தவராய் தாமாகவே மரணத்தை நோக்கிச் சென்றபொழுது நடந்த சம்பவங்களில் தோமா மிகச்சிறந்த தைரியத்தை வெளிப்படுத்தினார்.

லாசரு மரித்த பொழுது, “நாம் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள்” (யோவா. 11:7) என்று இயேசு கூறியதற்கு சீஷர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது. “ரபீ, இப்பொழுதுதான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா?” என்றார்கள் (வச. 8). ஆனால் தோமாவோ, “அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்,” என்றான் (வச. 16).

தோமாவுடைய செய்கைகளைக் காட்டிலும் அவனது நோக்கங்கள் உன்னதமானதாய் இருந்தன. ஏனென்றால், இயேசுவைக் கைது செய்த பொழுது, மற்ற சீஷர்களோடு தோமாவும் இயேசுவை விட்டு விலகி ஓடிப்போனான் (மத். 26:56). பேதுருவும், யோவானும் மாத்திரம் இயேசுவை அழைத்துச்சென்ற பிரதான ஆசாரியரின் மண்டபம் வரை சென்றனர். ஆனால் யோவான் மாத்திரமே இயேசுவை சிலுவை வரை பின்பற்றிச் சென்றான்.

லாசருவின் உயிர்தெழுதலைக் கண்டும் கூட (யோவா. 11:38-44) தோமாவால் சிலுவையில் அறையப்பட்ட ஆண்டவர் மரணத்தை வென்று உயிர்தெழுந்துவிட்டார் என்று விசுவாசிக்க முடியவில்லை. ஆனால் சந்தேகப்பட்ட அற்ப மனுஷனாகிய தோமா உயிர்த்தெழுந்த ஆண்டவரைக் கண்டவுடன், “என் ஆண்டவரே! என் தேவனே!” என வியப்புடன் உரத்த சத்தமிட்டான் (யோவா. 20:28). அதற்கு இயேசு அளித்த பதில் சந்தேகித்தவனுக்கு நம்பிக்கையையும், நமக்கு அளவற்ற ஆறுதலையும் அளிக்கிறது. “தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்,” என்றார் (வச. 29).

இயேசு என்ன செய்துள்ளாரெனப் பாருங்கள்!

எட்டு வயதான சிறுவன், தன் பெற்றோரின் நண்பரான வால்லியைப் (Wally) பார்த்து “நான் இயேசுவை நேசிக்கிறேன், ஒரு நாள் அவருக்காக பிற நாடுகளில் ஊழியம் செய்ய விரும்புகிறேன்,” என்றான். அடுத்த பத்து ஆண்டுகள் வால்லி அவன் வளர்வதை பார்த்துக்கொண்டே அவனுக்காக ஜெபித்து வந்தான். பின்பு மாலி (Mali) தேசத்திற்கு அவன் போக விரும்பி ஒரு மிஷனரி ஸ்தாபனத்திற்கு விண்ணப்பித்த பொழுது, வால்லி அவனைப் பார்த்து, “நான் இந்த செய்திக்காகத் தான் காத்துக்கொண்டிருந்தேன். சிறுவனாக உன் விருப்பத்தை நீ கூறிய பொழுது, நான் உனக்காக கொஞ்சம் பணத்தை முதலீடு செய்து சேமித்து வைத்தேன். இப்பொழுது அதற்கு நேரம் வந்து விட்டது!” எனக் கூறினான். வால்லியின் இருதயம் தேவனுடைய நற்செய்தியை மக்களுக்கு எடுத்துச்செல்ல ஆர்வமாயிருந்தது.

இயேசுவும், அவருடைய சீஷரும் அவருடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தை கிராமம் கிராமமாய் சுற்றித் திரிந்து அறிவிக்கும் பொழுது, அவர்களுக்குப் பொருளாதார உதவி தேவைப்பட்டது (லூக். 8:1-3). அசுத்த ஆவிகளினின்றும், நோய்களிலிருந்தும் விடுதலையாக்கப்பட்ட சில பெண்கள் “தங்கள் ஆஸ்திகளால்” (வச. 3) அவர்களுக்கு உதவி செய்தனர். அதில் ஒருவர் ஏழு பிசாசுகளின் பிடியிலிருந்து விடுதலையாக்கப்பட்ட மகதலேனாள் மரியாள். மற்றொருவர் ஏரோதின் அரசில் அதிகாரியாக இருந்த ஒருவனுடைய மனைவியாகிய யோவன்னாள். சூசன்னா மற்றும் ‘அநேக ஸ்திரீகளை’ குறித்து வேறு விபரம் ஏதும் குறிப்பிடப்படவில்லை (வச. 3). ஆனால் இயேசு அவர்களுடைய ஆவிக்குரிய தேவைகளைப் பூர்த்தி செய்ததினால் அவர்களுடைய ஆஸ்தியைக் கொண்டு இயேசுவுக்கும், அவருடைய சீஷர்களுக்கும் அவர்கள் உதவி செய்து கொண்டிருந்தார்கள்.

நமக்காக இயேசு செய்து முடித்ததை நாம் எண்ணிப் பார்க்கும் பொழுது, பிறருக்காக துடிக்கும் அவரது இதயம் நமதாகிவிடும். தேவன் நம்மை எப்படிப் பயன்படுத்த விரும்புகிறார் என்று நாம் அவரிடம் கேட்போமாக.

நான் அனைத்தையும் அறிவேன்

எங்களுடைய மகன் மற்றும் மருமகளுக்கு திடீரென ஒரு நெருக்கடியான நிலை ஏற்பட்டது. எங்கள் பேரன் கேமரன் (Cameron) நிமோனியா மற்றும் மூச்சுக் குழாய் வியாதியினால் அவதிப் பட்டுக்கொண்டிருந்ததால், அவனை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டியிருந்தது. ஆகவே, அவர்களது மற்றொரு மகனாகிய ஐந்து வயது நாதனை (Nathan) பள்ளியிலிருந்து அழைத்து வரும்படி  கேட்டனர். மார்லீனுக்கும், எனக்கும் அவனை அழைத்து வருவதில் மிக்க மகிழ்ச்சி.

எங்களுடைய காரில் நாதன் ஏறியவுடன், மார்லீன் அவனைப் பார்த்து, “இன்று நாங்கள் உன்னை அழைத்துச் செல்ல வந்தது உனக்கு ஆச்சரியமளிக்கிறதா?” என்று கேட்டதற்கு, “இல்லை!” என பதில் கூறினான். ஏன் அவனுக்கு ஆச்சரியமளிக்கவில்லை எனக் கேட்டதற்கு, “ஏனென்றால் எனக்கு எல்லாம் தெரியும்!” எனக் கூறினான்.

ஒரு ஐந்து வயது சிறுவன் தனக்கு எல்லாம் தெரியும் எனக் கூறலாம். ஆனால் சற்று வயதான நமக்கு அப்படிக் கூறுவது முடியாத காரியம் எனத் தெரியும். சொல்லப்போனால் அநேக சமயங்களில் பதில்களைக் காட்டிலும் கேள்விகளே நமக்குள் அதிகம் எழும்புகிறது. எல்லாவற்றையும் குறித்து நாம் அறியாததால் எதற்கு, எப்படி, எப்பொழுது என்று வாழ்க்கையைக் குறித்து எண்ணிக்கொண்டிருக்கும் நாம் அநேகந்தரம் எல்லாம் அறிந்த தேவனை மறந்து விடுகிறோம்.

எல்லாவற்றையும் அறிந்த தேவன் நம்மை முற்றிலும் அறிந்தவராய் நம்முடைய உள்ளந்திரியங்களையும் அறிந்தவராய் இருக்கிறார் என்று சங்கீதம் 139:1, 3 கூறுகிறது. “கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்,” என தாவீது கூறுகிறான். தேவன் நம்மை பரிபூரணமாய் நேசிக்கிறார். இன்று நாம் எதிர்கொள்ளும் அனைத்தையும் அவர் அறிந்திருக்கிறார். ஆகவே நம்முடைய சூழ்நிலைகளில் நமக்கு ஏற்ற உதவியை செய்திடுவார் என்கிற அறிவு நமக்கு எவ்வளவு ஆறுதலாயிருக்கிறது.

நம்முடைய அறிவு எப்பொழுதும் ஒரு எல்லைக்குட்பட்டது. ஆனால் கர்த்தரை அறிவதே பிரதானமானது. அவரின் மீது நம்முடைய விசுவாசத்தை வைக்கலாம்.

இயேசுவின் மீது சாய்ந்து

இரவு நேரங்களில் சில சமயம் தலையணையில் தலை சாய்த்து ஜெபிக்கும் பொழுது, நான் இயேசுவின் மீது சாய்ந்து கொள்வது போல கற்பனை செய்து கொள்வேன். அப்படி எண்ணும் பொழுதெல்லாம் அப்போஸ்தலனாகிய யோவானைக் குறித்து வேதாகமம் குறிப்பிடுவது என் நினைவிற்கு வரும். கடைசி இராப்போஜனத்தில் இயேசுவோடு கூட தான் அமர்ந்திருந்த விதத்தைக் குறித்து யோவான் தாமே இவ்வாறு கூறுகிறார்: “அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான் (யோவா. 13:23).

தன் பெயரைக் கூறாமல், “இயேசுவுக்கு அன்பாயிருந்த ஒருவன்” என்று தன்னைக் குறித்து விவரித்தான். அதுமட்டுமன்று முதல் நூற்றாண்டு காலத்தில் இஸ்ரவேலில் அனுசரிக்கப்பட்ட பந்தி முறையையும் விவரிக்கிறான். அக்காலக்கட்டத்தில் நம் முழங்கால் உயரத்தில் தான் மேஜைகள் இருக்கும். ஆகவே மேஜையைச் சுற்றி பாய்களிலோ அல்லது மெத்தைகளிலோ சாய்ந்த வண்ணம் அமர்ந்திருப்பார்கள். யோவான் இயேசுவுக்கு மிக அருகில் உட்கார்ந்திருந்தபடியால், அவரை நோக்கி ஒரு கேள்வி எழுப்பும் பொழுது தன் தலையை “இயேசுவினுடைய மார்பிலே சாய்த்து கொண்டிருந்தான்” (யோவா. 13:25).

அன்று இயேசுவுடனான யோவானுடைய நெருக்கமான அத்தருணம், இன்று நம்முடைய வாழ்க்கைக்கு தேவையானதொன்றை காட்சிப்படுத்தி காட்டுகின்றது. இன்று இயேசுவை சரீரப் பிரகாரமாக நாம் தொட இயலாமல் போகலாம். ஆனால் நம்முடைய பாரமான சூழ்நிலைகளை அவரிடம் ஒப்படைத்து விடலாம். “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்,” என இயேசு கூறுகிறார் (மத். 11:28). நம் வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் நம்முடைய நம்பிக்கைக்கு பாத்திரரான இரட்சகர் நமக்கு உண்டு என்பது எவ்வளவு பெரிய கிருபை! இன்று நீங்கள் அவர் மீது “சாய்ந்து” கொண்டிருக்கிறீர்களா?

வழக்கறிஞர்

1962ஆம் ஆண்டு ஜூன் மாதம், புளோரிடா மாநில சிறைச்சாலையில் இருந்த கிளாரன்ஸ் ஏர்ல் கிடியன் (Calarence Earl Gideon) என்பவர் தான் செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவிப்பதாகவும் தனக்காக வாதாட வழக்கறிஞர் வைத்துக்கொள்ளும் அளவிற்கு தன்னிடம் வசதி இல்லை என்றும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்று எழுதியனுப்பினார்.

ஓர் ஆண்டு கழித்து, வரலாற்று புகழ்பெற்ற இந்த கிடியன் மற்றும் வெயின்ரைட் (Gidoeon Vs. Wainright) வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதாவது தனக்கென வழக்கறிஞர் வைத்துகொள்ளும் அளவிற்கு வசதி இல்லாதவர்களுக்கு, அவர்களுக்காக வாதாட அரசாங்கமே பொது வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த தீர்ப்பின் மூலம் நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞரின் உதவியோடு, கிளாரன்ஸ் கிடியோன் மீண்டும் விசாரிக்கப் பட்டு விடுதலையானார்.

ஆனால், நாம் குற்றவாளிகளாய் இருப்பின், நம் நிலை என்ன? அப்போஸ்தலனாகிய பவுலைப் பொறுத்தவரையில் நாம் அனைவருமே குற்றவாளிகள்தான். ஆனால் பரலோக நீதிமன்றம் தேவனுடைய செலவில் நம்முடைய ஆத்துமாவைப் பாதுகாத்து காக்கும்படியாய், நமக்காக பரிந்து பேசும்படியாய் ஒரு வழக்கறிஞரை நியமித்துள்ளது (1 யோவா. 2:2). சிறைச்சாலைகளுக்கு வெளியேயும் கூட தாங்கள் அனுபவித்திராத சுதந்திரத்தை பிதாவின் சார்பில் இயேசு கிறிஸ்து நமக்காக வழங்குகிறார். அது நம்முடைய இருதயத்திலும், மனதிலும் நாம் அடையும் சுதந்திரமே.

நாம் செய்த குற்றங்களுக்காகவோ அல்லது பிறர் நமக்கெதிராய் செய்த குற்றங்களினாலோ நாம் பாடுகள் பல அனுபவித்தாலும், நமக்காக பரிந்து பேச இயேசு உண்டு. தனக்கு கொடுக்கப்பட்ட மேலான அதிகாரத்தினாலே அவர் நம்முடைய ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும், இரக்கத்தையும், மன்னிப்பையும், ஆறுதலையும் அளிக்கிறார்.

நமக்காகப் பரிந்து பேசுகிற நம்முடைய வழக்கறிஞராகிய இயேசு நாம் நம்பிக்கையின்மை என்னும் சிறையில் இருந்தாலும், பயம் என்னும் சிறையில் இருந்தாலும் அல்லது வருத்தங்கள் என்னும் சிறையில் இருந்தாலும் அச்சிறைகளை தம்முடைய பிரசன்னத்தினால் நிறைத்து ஆசீர்வாதமாக மாற்றிடுவார்.