எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டிம் கஸ்டாப்சன்கட்டுரைகள்

பயன்பாட்டிற்கு உதவாத சிறு கயிறுகள்

மார்கரெட் அத்தையின் சிக்கன சுபாவம் மிகவும் புகழ்பெற்றது. அவருடைய மரணத்திற்கு பின்னர், அவருடைய மருமகள் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை சீரமைக்கும் சலிப்பான வேலையை தொடங்கினாள். மேசையில் ஒரு டிராயரில் இருந்த பிளாஸ்டிக் பை ஒன்றில் வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிறு கயிறுகள் தென்பட்டது. அந்த பிளாஸ்டிக் பையின் மீது ஒட்டியிருந்த லேபிளில், “பயன்படுத்த முடியாத அளவிற்கு சிறிய கயிறுகள்” என்று எழுதப்பட்டிருந்தது.  
பயன்படுத்த முடியாத ஒன்றை சேகரித்து வைக்கும்படிக்கு ஒருவரை எது ஊக்கப்படுத்தியது? ஒருவேளை, இந்த நபர் தன்னுடைய வாழ்க்கையில் பற்றாக்குறையை அதிகமாய் அனுபவித்த நபராய் இருந்திருக்கலாம்.  
இஸ்ரவேலர்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியேறியபோது, அவர்கள் பாடுகள் நிறைந்த வாழ்க்கையை விட்டு புறப்பட்டனர். ஆனால் அவர்கள் விரைவிலேயே தங்கள் பாதையில் கிரியை செய்த தேவனுடைய அற்புதக் கரத்தை மறந்து, ஆகாரத்திற்காய் முறுமுறுக்கத் துவங்கினர்.  
தேவன் அவர்கள் தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று விரும்பினார். அவர்களுடைய வனாந்திர வாழ்க்கையில் அவர்களுக்கு வானத்து மன்னாவை புசிக்கக்கொடுத்து, அதை “ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்” (யாத்திராகமம் 16:4) என்று மோசே மூலம் கட்டளையிடுகிறார். ஆனால் ஓய்வு நாளில் மன்னா கொடுக்கப்படாது என்பதினால், ஓய்வுநாளுக்கு முந்தின நாளான ஆறாம் நாளில் மக்கள் இரட்டிப்பாய் சேகரித்துக்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டனர் (வச. 5,25). சில இஸ்ரவேலர்கள் அதற்கு கீழ்ப்படிந்தனர். சிலர் கீழ்ப்படியாமல் விளைவை சந்தித்தனர் (வச. 27-28).  
தாராளமாய் கிடைக்கும் தருணங்களில், பற்றாக்குறையை மனதில் வைத்து பொருட்களை எடுத்து பதுக்கி வைக்க நாம் தூண்டப்படுவது இயல்பு. அனைத்தையும் நம் கைகளில் எடுப்பது அவசியமில்லை. “பயன்படாத சிறிய கயிறு துண்டுகளையோ” மற்ற பொருட்களையோ நாம் பதுக்கி வைக்கவேண்டிய அவசியமில்லை. “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரெயர் 13:5) என்று நமக்கு வாக்குபண்ணியிருக்கிற தேவன் மீது நம்முடைய விசுவாசத்தை வைப்போம்.  

இயேசுவில் மறுமலர்ச்சி

திறன், பல படிப்புகள் மற்றும் கலைகளில் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது. இருப்பினும், லியோனார்டோ பிரசித்தி பெட்ரா தனது வரிகளில் "நம்முடைய இந்த மோசமான நாட்கள்" என்றும், "மனிதர்களின் மனதில் நம்மைப் பற்றிய எந்த நினைவையும் விட்டுச் செல்லாமல்" நாம் இறந்துவிடுகிறோம் என்று புலம்பினார்.

"நான் வாழ கற்றுக்கொள்ளும்போதே, சாகவும் கற்றுக்கொள்கிறேன்" என்கிறார் லியோனார்டோ. அவர் புரிந்துகொண்டதை காட்டிலும் உண்மைக்கு அருகே இருந்தார். எப்படி மாிக்க வேண்டுமென்று கற்றுக்கொள்வதே வாழ்வுக்கான வழி. எருசலேமில் இயேசுவின் வெற்றி பவனிக்கு பின் (இப்போது நம் குருத்தோலை ஞாயிறென்று கொண்டாடுகிறோம்; பார்க்கவும் யோவான் 12:12–19), அவர், " கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்" (வ. 24) என்றார். அவர் தனது சொந்த மரணத்தைப் பற்றி இப்படி பேசினார், ஆனால் நம் அனைவரையும் உள்ளடக்கியதாக அதை விரிவுபடுத்தினார்: "தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்" (வ. 25).

அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்துவுடன் "அடக்கம்" பண்ணப்படுவதை பற்றி, "மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்" (ரோமர் 6:4–5) என்று எழுதினார்.

அவரது மரணத்தின் மூலம், இயேசு நமக்கு மறுபிறப்பை வழங்குகிறார், அதுவே மறுமலர்ச்சியின் அர்த்தம். அவர் தனது பிதாவுடன் நித்திய வாழ்வுக்கான வழியை உருவாக்கினார்.

நித்திய மரபு

அமெரிக்காவின் பெரும் பொருளியல் வீழ்ச்சியின்போது, ஸ்ட் பெளவுல் எனப்பட்ட மணல் புயல்கள் அங்கு பேரழிவை ஏற்படுத்துகையில், கன்சாஸின் ஹியாவதாவில் வசிக்கும் ஜான்மில்பர்ன் டேவிஸ் தனக்கென ஒரு பெயரை சம்பாதிக்க முடிவு செய்தார். குழந்தைகள் இல்லாத அவர் தானே சம்பாதித்து கோடீஸ்வரர் ஆனார். டேவிஸ், சேவை அல்லது பொருளாதார வளர்ச்சியில் முதலீடு செய்திருக்கலாம். அதற்கு பதிலாக, பெரும் செலவில், அவர் தனக்கு ஒரு சிலையும் மற்றும் தனது இறந்த மனைவியின் பதினொரு பெரிய சிலைகளை உள்ளூர் கல்லறையில் நிறுவ ஏற்பாடு செய்தார்.

"கன்சாஸில் என்னை வெறுக்கிறார்கள்" என்று டேவிஸ் பத்திரிகையாளர் எர்னி பைலிடம் கூறினார். மருத்துவமனை, நீச்சல் குளம் அல்லது பூங்கா போன்ற பொது வசதிகளை கட்டுவதற்கு அவர் நிதியளிக்க வேண்டும் என்று உள்ளூர்வாசிகள் விரும்பினர். ஆனால் அவர் சொன்னது என்னவென்றால், "இது என் பணம், நான் விரும்பியபடி செலவிடுகிறேன்."

சாலொமோன் ராஜா, அவருடைய காலத்தின் பெருஞ்செல்வந்தராக இவ்வாறு எழுதினார், "பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை" என்றும் "பொருள் பெருகினால் அதைத் தின்கிறவர்களும் பெருகுகிறார்கள்" (பிரசங்கி 5:10–11). செல்வத்தின் கெடுக்கும் போக்குகளை சாலொமோன் நன்கு அறிந்திருந்தார். அப்போஸ்தலன் பவுலும் செல்வத்தின் சோதனையைப் புரிந்துகொண்டு, இயேசுவுக்குக் கீழ்ப்படிய தன் வாழ்க்கையை முதலீடு செய்யத் தேர்ந்தெடுத்தார். ரோமானிய சிறைச்சாலையில் மரணதண்டனைக்காகக் காத்திருந்த அவர், ஜெயம்பெற்றவராக, "நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்…. ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” (2 தீமோத்தேயு 4:6-7) என்று எழுதினார்.

நமக்காக நாம் சிலை வைப்பதும் அல்லது சேர்த்து வைப்பதும் நீடிக்காது. ஒருவருக்கொருவர் மற்றும் கிறிஸ்துவுக்காக கொடுப்பதே நீடிக்கும். எப்படி நேசிக்க வேண்டும் என்பதைக் காட்டுபவர் அவரே.

லேவியராகமம் கூட

அன்றைய வேத ஆராய்ச்சியின் தலைப்பு 'லேவியராகமம்'. நான் என் குழுவினரிடம், "லேவியராகமத்தின் பல பகுதிகளை வாசிக்கத் தவிர்த்துள்ளேன், நான் தோல் நோய்களைப் பற்றி மீண்டும் படிக்க விரும்பவில்லை" என்று காரணத்தையும் ஒப்புக்கொண்டு கூறினேன்.  என் நண்பர் டேவ், "அந்தப் பத்தியின் காரணமாக இயேசுவை விசுவாசித்த ஒருவரை எனக்குத் தெரியும்" என்றார். மேலும், "அவா் ஒரு நாத்திகர் ஆனால் மருத்துவரும்கூட, வேதாகமத்தை முற்றிலுமாக நிராகரிப்பதற்கு முன், தானே அதைப் படிப்பது நல்லது என்று அவர் முடிவு செய்தார். லேவியராகமத்தில் தோல் நோய்கள் பற்றிய பகுதி அவரை மிகவும் கவர்ந்தது" என்றார்.

அதில், தோல் தொற்று நோய் மற்றும் தொற்றாத தோல் புண்களைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டிருந்தது (13:1–46). மற்றும் அவற்றிற்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை பற்றிய ஆச்சரியமான விவரங்களைக் கொண்டிருந்தது  (14:8–9). அன்றைய நாட்களின் மருத்துவ அறிவை மிஞ்சும் அளவுக்கு இது உள்ளதை அறிந்துகொண்டார். ஆனால் அது லேவியராகமத்தில்தான் இருந்தது. மோசேக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்தார். மோசே உண்மையிலேயே தேவனிடமிருந்து தான் இந்த விபரங்களைப் பெற்றார் என்று கருதினார். இறுதியில் அவர் இயேசுவின் விசுவாசியானார்.

வேதாகமத்தின் சில பகுதிகள் உங்களைச் சங்கடப்படுத்தியிருக்கலாம். நானும் அதை அனுபவித்துள்ளேன். ஆனால் அப்படிக் கொல்லப்பட்டதற்கு ஒரு காரணம் உண்டு. இஸ்ரவேலர்கள் தேவனுக்காகவும், தேவனோடும் எப்படி வாழ வேண்டும் என்பதை அறிந்துகொள்ளும்படி லேவியராகமம் எழுதப்பட்டது. தேவனாகிய கர்த்தருக்கும் அவருடைய மக்களுக்கும் இடையிலான இந்த உறவைப் பற்றி அறியும்போது,  நாம் இன்னும் அதிகமாகத் தேவனைப் பற்றி அறிகிறோம்.

"வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக" (2 தீமோத்தேயு 3:16) என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார் . ஆகவே வேதாகமத்தை, குறிப்பாக லேவியராகமத்தைக் கூட நாம் தொடர்ந்து படிக்கலாம்.

கண்ணியத்தை விரிவுபடுத்துதல்

மேகியின் இளம் நண்பர் தேவாலயத்திற்கு அணிந்து வந்த உடை அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால் யாரும் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டியதில்லை காரணம் அவள் ஒரு பாலியல் தொழிலாளி, அங்கே அசௌகரியத்துடன் தனது இருக்கையை மாற்றினாள். மாறி மாறி அவளது மிகக் குட்டையான கீழாடையை இழுத்து, தன் கைகளினால் சங்கடத்துடன் தன்னைச் சுற்றிக் கொண்டாள்.

அவள் உடுத்தியிருக்கிற உடை மீதில் உள்ள கவனத்தைத் திசை திருப்ப "ஓ, குளிர்கிறதா?" என்று மேகி கேட்டபின். "இதோ! என் சால்வையை எடுத்துக்கொள் என்றாள்."  மேகி பலரைத் தேவாலயத்திற்கு வருமாறு அழைப்பதன் மூலமும், அவர்கள் சங்கோச்சப்படாமல் ஆலயத்தில் ஆராதிக்க உதவுவதின் மூலமும் அநேகரை கிறிஸ்துவுக்குள் நடத்தியிருக்கிறார். நற்செய்தியானது அவளது அற்புதமான முறைகள் மூலம் மேலும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அனைவரையும் கண்ணியமாக நடத்தினாள்.

விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும், பரிசேயரும் இயேசுவிடம் கொண்டுவந்து, அவா் முன் அவளை நடுவே நிறுத்தி குற்றச்சாட்டினாா்கள். ஆனால் கிறிஸ்து குற்றம் சாட்டுபவர்களை அங்கிருந்து அனுப்பும் வரை தன் கவனத்தை அவள் மீது வைக்கவில்லை. அவர்கள் போனதும் அவளைத் திட்டியிருக்கலாம். மாறாக, " இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்." (யோவான் 8:10). பிந்தைய கேள்விக்கான பதில், நிச்சயமாக இல்லை. எனவே இயேசு அவளுக்கு ஒரு சுருக்கமாகச் சுவிசேஷமாகக் கூறியது: "....நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே." (வ. 11) என்ற அழைப்பாகும்.

மக்கள் மீதான உண்மையான அன்பின் வல்லமையை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். உண்மையான அன்பு, தீர்ப்பிடாமல் கண்ணியத்தையும் மன்னிப்பையும் வழங்குகிறது.

வெள்ளைப்போலத்தின் அர்த்தம்

இன்று சாஸ்திரிகள் இயேசுவை தரிசித்த நாள். “நாங்கள் மூவரும் கிழக்கத்திய ராஜாக்கள்” என்று மூன்று சாஸ்திரிகளும் இயேசுவின் பிறப்பை கொண்டாடும் கிறிஸ்மஸ் கேரள் பாடல் ஒன்று விவரிக்கிறது. ஆனால் அவர்கள் மூவரும் ராஜாக்கள் இல்லை. அவர்கள் கிழக்கிலிருந்து வந்தவர்களும் இல்லை. அவர்கள் மூன்றுபேராகவும் இருக்க வாய்ப்பில்லை. 

இருப்பினும், மூன்று பரிசுகள் இருந்தன. அந்த கேரள் பாடல், அவை ஒவ்வொன்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. சாஸ்திரிகள் பெத்லெகேமுக்கு வந்தபோது, “அவர்கள்... தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்த்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்” (மத்தேயு 2:11). இந்த பரிசுகள் இயேசுவின் ஊழியத்தை விவரிக்கிறது. பொன், ராஜாவாக அவரது பாத்திரத்தை பிரதிபலிக்கிறது. பலிபீடத்தில் எரிக்கப்படும் தூபத்துடன் கலந்த தூபவர்க்கம் அவரது தெய்வத்துவத்தைக் குறிக்கிறது. இறந்த உடல்களை அடக்கம் செய்ய பயன்படுத்தப்படும் வெள்ளைப்போலம், நமக்கு இடைநிறுத்தம் தருகிறது.

கேரள் பாடலின் நான்காவது வரி, “வெள்ளைப்போலம் என்னுடையது; அது கசப்பான வாசனை திரவியம். இருளில் சூழ்ந்த ஒரு வாழ்க்கையை அது சுவாசிக்கிறது. துக்கம், பெருமூச்சு, இரத்தஞ்சிந்துதல், மரணம் என்ற கல்லறையில் வைத்து மூட்டப்பட்டது” என்று இடம்பெறுகிறது. நாம் கதையில் அத்தகைய காட்சியை எழுத மாட்டோம், ஆனால் தேவன் அதைச் செய்தார். இயேசுவின் மரணம் நமது இரட்சிப்பின் மையமானது. ஏரோது, இயேசு குழந்தையாக இருக்கும்போதே அவரைக் கொல்ல முயன்றான் (வச. 13).

கேரள் பாடலின் கடைசி சரணம் மூன்று கருப்பொருள்களை ஒன்றாக இணைக்கிறது: “இதோ மகிமையயின் ராஜா எழுந்தருளியிருக்கிறார். ராஜா, தேவன் மற்றும் தியாகம்.” இது கிறிஸ்மஸின் கதையை நிறைவு செய்கிறது. நமது பதிலை எதிர்பார்க்கச்செய்கிறது” “அல்லேலூயா, அல்லேலூயா என்று வானம் பூமியெங்கும் ஒலிக்கிறது.”

குமாரனும் உயிர்த்தெழுந்தார்

எர்னஸ்ட் ஹெமிங்வேயின் முதல் நாவல், சமீபத்தில் முதலாம் உலகப் போரைச் சந்தித்த கடும் குடிபழக்கத்திற்கு ஆளான நண்பர்களைப் பற்றியது. அவர்கள் சமீபத்தில் நடந்த போரின் வடுக்களை எதோ ஒரு விதத்தில் மறக்க எண்ணி, விருந்துகள், சாகச நிகழ்வுகள் மற்றும் தூக்கத்தின் மூலம் ஆகியவற்றில் நேரம் செலவழிப்பவர்கள். வலியை மறப்பதற்கு மதுபானம் எப்போதும் இருக்கிறது. ஆனால் யாரும் மகிழ்ச்சியாயில்லை. 

ஹெமிங்வேயின் “தி சன் ஆல்சோ ரைசஸ்” என்ற புத்தகத்திற்கான தலைப்பு பிரசங்கி புத்தகத்தின் பக்கங்களில் இருந்து வந்தது (1:5). பிரசங்கியில், சாலெமோன் ராஜா தன்னை “பிரசங்கி" என்று குறிப்பிடுகிறார் (வச. 1). “எல்லாம் மாயை” (வச. 2) என்று அவர் கவனித்து, “மனுஷன் படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன?” (வச. 3) என்று கேட்கிறார். மேலும் சாலெமோன், சூரியன் எவ்வாறு உதயமாகிறது மற்றும் மறைகிறது, காற்று அங்குமிங்குமாக வீசுகிறது, ஆறுகள் முடிவில்லாமல் ஒருபோதும் திருப்தியடையாத கடலில் பாய்கின்றன (வவ. 5-7) என்ற பார்க்கிறார். ஆனால் எல்லாம் மறந்துபோய்விடுகிறது (வச. 11).

ஹெமிங்வே மற்றும் பிரசங்கி, இருவரும் இந்த வாழ்க்கைக்காக மட்டுமே வாழ்வதன் அப்பட்டமான பயனற்ற தன்மையுடன் நம்மை எதிர்கொள்கிறார்கள். இருப்பினும், சாலெமோன் தனது புத்தகத்தில் தெய்வீகத்தின் பிரகாசமான குறிப்புகளை விதைக்கிறார். மெய்யான நம்பிக்கை என்று ஒன்று இருக்கிறது. பிரசங்கி நாம் இருக்கும் நிலையை மாத்திரமல்லாமல், தேவன் யார் என்பதையும் நமக்கு அறிவிக்கிறார். “தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும்” (3:14) என்று நம்முடைய நம்பிக்கையின் அஸ்திபாராமாய் சாலேமோன் தேவனை அடையாளப்படுத்துகிறார். ஏனென்றால், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை நமக்குப் ஈவாகக் கொடுத்திருக்கிறார்.

நாம் தேவனில்லாமல், முடிவேயில்லாத, திருப்பதியடையாத ஒரு கடலில் நீந்திக்கொண்டேயிருக்கிறோம். அவருடைய உயிர்த்தெழுந்த குமாரனாகிய இயேசுவின் மூலம் நாம் நம்முடைய வாழ்வில் அர்த்தத்தையும் நோக்கத்தையும் கண்டறிகிறோம்.

இயேசுவுக்கு ஒப்புவித்தல்

1951 ஆம் ஆண்டில், ஜோசப் ஸ்டாலினின் மருத்துவர், அவரது உடல்நிலையைப் பாதுகாப்பதற்காக அவரது பணிச்சுமையைக் குறைக்குமாறு அறிவுறுத்தினார். சோவியத் ஒன்றியத்தின் ஆட்சியாளர், அந்த மருத்துவர் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி அவரை கைது செய்தார். பொய்களால் பலரை ஒடுக்கிய கொடுங்கோலன் உண்மையைக் கடைப்பிடிக்க முடியவில்லை. மேலும் அவர் வழக்கம்போல, உண்மையைச் சொல்கிறவர்களை பணியை விட்டு அகற்றினார். ஆனால் உண்மை கடைசியில் வென்றது. ஸ்டாலின் 1953இல் இறந்தார்.

எரேமியா தீர்க்கதரிசி, தனது துணிகரமான தீர்க்கதரிசனங்களுக்காக கைது செய்யப்பட்டு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டார் (எரேமியா 38:1-6; 40:1). அவர் எருசலேமுக்கு என்ன சம்பவிக்கும் என்பதை யூதாவின் ராஜாவிடம் கூறினார். “நான் உம்மிடத்தில் சொல்லுகிற கர்த்தருடைய வார்த்தைக்குச் செவிகொடும். அப்பொழுது... உம்முடைய ஆத்துமா பிழைக்கும்” (எரேமியா 38:20) என்று அவர் சிதேக்கியா ராஜாவிடம் கூறினார் (38:20). நகரைச் சூழ்ந்திருக்கும் இராணுவத்திடம் சரணடையத் தவறினால், அது நிலைமையை மோசமாக்கும். “உம்முடைய எல்லா ஸ்திரீகளையும், உம்முடைய பிள்ளைகளையும் வெளியே கல்தேயரிடத்தில் கொண்டுபோவார்கள். நீரும் அவர்கள் கைக்கு தப்பிப்போகாமல்...” (வச. 23) என்று எரேமியா எச்சரிக்கிறார்.

அந்த உண்மையைச் செயல்படுத்த சிதேக்கியா தவறிவிட்டார். இறுதியில் பாபிலோனியர்கள் யூதேயாவின் ராஜாவைப் பிடித்து, அவனது குமாரர்கள் அனைவரையும் கொன்று, நகரத்தை தீக்கிரையாக்கினர் (அதி. 39).

ஒரு வகையில், ஒவ்வொரு மனிதனும் சிதேக்கியாவின் இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறான். பாவம் மற்றும் தவறான தீர்மானங்கள் என்ற நமது சொந்த வாழ்வின் சுவர்களுக்குள் நாம் சிக்கிக் கொள்கிறோம். பெரும்பாலும், நம்மைப் பற்றிய உண்மையைச் சொல்பவர்களைத் தவிர்ப்பதன் மூலம் விஷயங்களை மோசமாக்குகிறோம். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6) என்று சொன்னவரின் சித்தத்திற்கு நாம் சரணடைவது மட்டுமே நம்முடைய அடிப்படை தேவை.

அதிர்ஷ்ட காலணிகள்

மிகவும் தாமதமாக, டாம் தனது போர் காலணியின் அடியில் குளிர்ந்த உணர்வை அடைந்தார். பாய்ந்தோடிய அட்ரினலின் என்னும் எரிபொருளின் தாக்கத்திலிருந்து விலகிச்சென்றார். பூமிக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொடிய வெடிகுண்டு வெடிக்கவில்லை. பின்னர், வெடிகுண்டு அகற்றும் குழுவினர் சம்பவ இடத்தில் இருந்து 36 கிலோ எடையுள்ள வெடிபொருட்களை கண்டெடுத்தனர். டாம் அவருடைய அந்த காலணி கிழியும் வரை அணிந்திருந்தார். அவர் அதை தன்னுடைய அதிருஷ்ட காலணி என்று சொல்லிக்கொள்கிறார். 

அவருடைய உயிரைக் காப்பதற்கு அந்த காலணி பயன்பட்டதினால் உணர்ச்சிவசப்பட்டு டாம் அந்த காலணிகளை அணிந்திருக்கலாம். ஆனால் பொருட்களை “அதிர்ஷ்டம்” என்று கருதுவதற்கு அல்லது “ஆசீர்வதிக்கப்பட்டவைகள்” என்ற ஆன்மீக முத்திரையைக் கொடுக்க மக்கள் அடிக்கடி ஆசைப்படுகின்றனர். நாம் ஒரு பொருளையோ அல்லது அடையாளத்தையோ தேவனுடைய ஆசீர்வாதத்தின் ஆதாரமாக வைக்கும்போது அங்கே அபாயம் நிகழுகிறது. 

இஸ்ரவேலர்கள் இந்த பாடத்தை தங்களுடைய வாழக்கையின் கடினமான தருணத்தில் கற்றுக்கொண்டனர். பெலிஸ்தியப் படை அவர்களை யுத்தத்தில் வீழ்த்தியது. ஏன் தோல்வியடைந்தோம் என்று யோசிக்கும்வேளையில், நாம் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துச்செல்லலாம் என்று யாரோ ஒருவர் ஆலோசனை சொல்கின்றனர் (1 சாமுவேல் 4:3). அது நல்ல யோசனையாகத் தோன்றியது (வச. 6–9). எல்லாவற்றிற்கும் மேலாக, உடன்படிக்கைப் பெட்டி பரிசுத்தமான ஒன்றாகக் கருதப்பட்டது.

ஆனால் இஸ்ரவேலர்களின் புரிதல் தவறானது. உடன்படிக்கைப் பெட்டியைக்கொண்டு அவர்களால் எதையும் திருப்பிக்கொண்டுவரமுடியவில்லை. தங்களுடைய விசுவாசத்தை தேவன் மீது வைப்பதற்கு பதிலாக ஒரு பொருளின் மீது வைத்ததினால் யுத்தத்தில் இஸ்ரவேலர்கள் மோசமான தோல்வியை சந்திக்க நேரிட்டது. பெலிஸ்தர்கள் பேழையையும் கைப்பற்றி கொண்டுபோய்விட்டனர் (வச. 10-11).

தேவன் நம்முடைய வாழ்க்கையின் செய்த நன்மைகளை நினைப்பூட்டும் நினைவுச்சின்னங்கள் நமக்கு அவசியப்படலாம். ஆனால் அவைகள் ஒருபோதும் ஆசீர்வாதத்தின் ஆதாரமாக இருப்பதில்லை. தேவன் மாத்திரமே ஆசீர்வாதத்தின் ஆதாரம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

உங்கள் வியாகுலங்கள் கேட்கப்பட்டது

“இயற்பியல்” என்ற புத்தகத்தில், ஆசிரியர்கள் சார்லஸ் ரிபோர்க் மான் மற்றும் ஜார்ஜ் ரான்சம் ட்விஸ் ஆகியோர், “யாருமில்லாத தனிமையான காட்டில் மரம் விழுந்தால், அந்த சத்தத்தைக் கேட்க அருகில் எந்த மிருகமும் இல்லையென்றால், அது ஒலி எழுப்புமா?” என்ற கேள்வியை கேட்கிறார்கள். பல ஆண்டுகளாக, இந்த கேள்வி, ஒலி, உணர்தல் மற்றும் இருப்பு பற்றிய தத்துவ மற்றும் அறிவியல் விவாதங்களைத் தூண்டியது. இருப்பினும், ஒரு உறுதியான பதில் இன்னும் கண்டறியப்படவில்லை.  
ஒரு நாள் இரவில் நான் சோர்ந்துபோய் கவலையாயிருந்த தருணத்தில், நான் யாரிடத்திலும் சொல்லாமல், இந்த கேள்வியைக் குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தேன்: “உதவிக்கான என்னுடைய அழுகுரலுக்கு யாருமே செவிகொடுக்காத வேளையில், தேவன் அதைக் கேட்கிறாரா?” 
116-ம் சங்கீதத்தை எழுதியவர், மரண அச்சுறுத்தலை எதிர்கொண்டு, பாடுகள் அனுபவித்ததால், கைவிடப்பட்டவராக உணர்ந்திருக்கலாம். எனவே அவர் தேவனை அழைத்தார். அழைத்தால் அவர் கேட்கிறார், கேட்டு அவருக்கு உதவிசெய்வார் என்பதை அறிந்திருந்தார். “கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால்… அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால்..” அவரை தொழுதுகொள்வதாக சங்கீதக்காரன் அறிவிக்கிறான் (வச. 1-2). நம்முடைய வேதனையை யாரும் அறியாத நேரத்தில் தேவன் அறிகிறார். நம்முடைய அழுகுரலை யாரும் கேட்காதவேளையில் தேவன் கேட்கிறார்.  
கடினமான தருணங்களில் தேவன் தன்னுடைய அன்பையும் பாதுகாப்பையும் அருளுவார் என்று அறிந்து, இளைப்பாறலாம் (வச. 7). “இளைப்பாறுதல்” (மனோக்) என்பதற்கு பயன்படுத்தப்படும் எபிரெய வார்த்தையானது யாருமில்லாத பாதுகாப்பான ஓர் இடத்தைக் குறிக்கிறது. தேவன் நம்மோடு இருக்கிறார் என்ற உறுதியுடன் நாம் இளைப்பாறுதலையும் உதவியையும் பெற்றுக்கொள்ளலாம்.  
அந்த இரண்டு இயற்பியல் ஆசிரியர்கள் கேட்ட கேள்வியானது பல்வேறு பதில்களை கொண்டுவந்தது. ஆனால் தேவன் நம்முடைய வியாகுலத்தைக் கேட்கிறாரா? என்னும் கேள்விக்கு ஆம்! என்ற ஒற்றை பதில் மட்டுமே உள்ளது.  

பாட்டியின் ஆராய்ச்சி

எமோரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் பாட்டிமார்களின் மூளையை ஆய்வு செய்தனர். அவர்களுக்கு முன்பாக அவர்களுடைய மகனுடைய போட்டோவையும், பேரக் குழந்தையின் போட்டோவையும், அவர்களுக்கு அறிமுகமில்லாத இன்னொரு குழந்தையின் போட்டோவையும் காண்பித்து அவர்களின் உணர்ச்சி அனுதாபங்கள் பரிசோதிக்கப்பட்டது. அதில் தங்களுடைய சொந்த பிள்ளைகளை விட தங்கள் பேரப்பிள்ளைகளின் மீதான அனுதாபங்கள் அவர்களுக்கு அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுடைய சொந்த பிள்ளையைக் காட்டிலும் பேரப்பிள்ளைகள் அதிக அபிமானமாக தெரிவதால், இதனை “அழகான காரணி” என்று அழைக்கின்றனர்.  
“இதிலென்ன ஆச்சரியம்” என்று நீங்கள் சொல்லுவதற்கு முன்னால் அந்த ஆராய்ச்சியை செயல்படுத்திய ஜேம்ஸ் ரில்லிங் என்பவரின் கூற்றைக் கேட்போம். அவர், “அவர்களின் பேரக்குழந்தை சிரிக்கும்போது, பாட்டியும் சிரிக்கிறாள்; அவர்களின் பேரக்குழந்தை அழும்போது, பாட்டி, அதின் வலியையும் வேதனையையும் உணருகிறாள்” என்று சொல்லுகிறார்.  
தேவன் தன்னுடைய ஜனத்தைப் பார்க்கும்போது அவருடைய “எம்.ஆர்.ஐ ஸ்கேனை” ஒரு தீர்க்கதரிசி வரைகிறார்: “அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்” (செப்பனியா 3:17). அதனை சிலர் வேறுவிதமாகவும் மொழிபெயர்க்கின்றனர்: நீ அவருடைய இருதயத்தை திருப்தியடையச் செய்வாய், அவர் கெம்பீரமாய் பாடுவார்.” ஒரு அன்பான பாட்டியாய் தேவன் நம்முடைய வேதனையை அறிகிறார். “அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்” (ஏசாயா 63:9). “கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறார்” (சங்கீதம் 149:4).  
நாம் சோர்வுறும்போது, நம்மைக் குறித்த தேவனுடைய உணர்வுகள் மெய்யானவைகள் என்பதை நினைவுகூருவது நல்லது. அவர் நம்மை பொருட்படுத்தாமல் எங்கேயோ தூரத்தில் வாழும் தேவனல்ல. அவர் நம்மில் மகிழ்ந்திருக்கிற தேவன். இது அவரை நாம் கிட்டிச்சேருகிற நேரம். அவருடைய புன்னகையை உணருவோம்; அவர் பாடலைக் கேட்டு ரசிப்போம்.  

தேவன் பெயர்களை அறிந்திருக்கிறார்

 நான் திருச்சபையின் வாலிபர் குழு தலைவியாய் பொறுப்பேற்று, பல வாலிபர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்த வேளையில், ஒரு ஞாயிற்றுக்கிழமையின்போது தன் தாயின் அருகாமையில் அமர்ந்திருந்த ஒரு இளம் வாலிப பெண்ணிடம் பேசினேன். அதிக வெட்கப்படும் அந்த பெண்ணைப் பார்த்து, ஒரு புன்னகையோடு அவளுடைய பெயரை நான் சொல்லி அழைத்து எப்படி இருக்கிறாய் என்று கேட்டேன். அவள் தன்னுடைய தலையை உயர்த்தி, அழகான கண்கள் விரிய என்னைப் பார்த்து, “உங்களுக்கு என்னுடைய பெயர் ஞாபகம் இருக்கிறதா?” என்று ஆச்சரியமாய் கேட்டாள். வயதில் மூத்தவர்களாய் நிறைந்திருந்த அந்த திருச்சபையில் அந்த பெண்ணின் பெயரை குறிப்பிட்டு அழைத்ததால், அவளுடன் நம்பிக்கையான ஒரு உறவை ஏற்படுத்த என்னால் முடிந்தது. அவளை ஒரு பொருட்டாக எண்ணுகிறார்கள் என்ற நம்பிக்கை அவளுடைய சுயமதிப்பை கூடச் செய்தது.  
ஏசாயா 43ஆம் அதிகாரத்தில் அதேபோன்ற ஒரு செய்தியை இஸ்ரவேலர்களுக்கு சொல்லும்படிக்கு தேவன் ஏசாயா தீர்க்கதரிசியை பயன்படுத்துகிறார். தேவன் இஸ்ரவேலர்களை காண்கிறார் மற்றும் அவர்களை மதிப்பிடுகிறார் என்பதே அச்செய்தி. சிறையிருப்பிலும் வனாந்திரத்திலும் தேவன் அவர்களைக் கண்டு அவர்களை பேர்ச்சொல்லி அழைக்கிறார் (வச. 1). அவர்கள் வேறுயாரோ அல்ல; அவர்கள் தேவனுக்கு சொந்தமானவர்கள். அவர்கள் கைவிடப்பட்டவர்களாய் தெரிந்தாலும், அவர்கள் தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றவர்கள், அவர்களைக் குறித்த அவருடைய அன்பு மாறாதது (வச. 4). தேவன் அவர்களை பேர்ச் சொல்லி அழைக்கிறார் என்பதை அவர்களுக்கு நினைப்பூட்டுவதின் மூலம் அவர்களுடைய அந்த இக்கட்டான தருணத்தில் தேவன் அவர்களுக்கு செய்யப்போகிற நன்மைகளை அறிவிக்கிறார். அவர்கள் பாடுகளின் பாதையில் பயணிக்கும்போது தேவன் அவர்களோடே இருப்பார் (வச. 2). தேவன் அவர்களின் பெயர்களை அறிந்திருப்பதால் அவர்கள் பயப்படவோ அல்லது கவலைப்படவோ தேவையில்லை.  
நாம் நம்முடைய வாழ்க்கையின் ஆழமான ஆழிகளைக் கடக்கும்போது தேவன் அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரின் பெயர்களையும் அறிந்திருக்கிறார் என்பதே நமக்கான நற்செய்தி.