எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டேவிட் மெக்காஸ்லாண்ட்கட்டுரைகள்

விரிந்த படப்பிடிப்பு

அமெரிக்கா தேசத்தில், முதல் ஆப்பிரிக்கா அமெரிக்கா ஜனாதிபதியின் துவக்க விழாவின் போது, டெலிவிஷன் படப்பிடிப்பு கேமராக்கள், அந்த சரித்திர நிகழ்வினைக் காண குழுமியிருந்த இரண்டு மில்லியன் மக்களின் அழகிய காட்சியைக் காட்டியது. சி.பி.எஸ் செய்தி தொடர்பாளர் பாப் ஷீப்பர் இதனைக் குறித்து, “இந்த நிகழ்சியின் உச்சக்கட்டம் அந்த பரந்த படப்பிடிப்பிலுள்ளது? என்றார். வேறெதுவும், லிங்கன் நினைவிடத்திலிருந்து கேப்பிடல் வரை பரம்பியிருந்த இத்தனை பெரிய கூட்டத்தை இவ்வளவு துல்லியமாக எடுத்திருக்க முடியாது எனக் குறிப்பிட்டார்.

இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் இணைக்கப்பட்ட, இதனையும் விட பெரிதான ஒரு கூட்டத்தினைக் குறித்த ஒரு காட்சியை வேதாகமம் தருகின்றது. “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும் பரிசுத்த ஜாதியாயும் அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்" (1 பேது. 2:9).

இது பாக்கியம் பெற்ற ஒரு சிலரின் காட்சி மட்டுமல்ல. சகல கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜனங்களிலும், ஜாதிகளிலுமிருந்து கிரயம் செலுத்தப்பட்டு, மீட்டுக்கொள்ளப்பட்ட அநேகரின் காட்சி (வெளி. 5:9). இன்று நாம் இவ்வுலகம் முழுவதிலும் பரந்து காணப்படுகின்றோம். இங்கு நாம் தனித்தவரும், இயேசுவோடுள்ள தொடர்புக்காய் பாடநுபவிப்பவர்களுமாயிருக்கிறோம். தேவனுடைய வார்த்தையாகிய லென்ஸ் வழியே பார்க்கும் போது, விசுவாசத்தில் நம்முடைய சகோதர, சகோதரிகளும் இணைந்த ஒரு பெரிய கூட்டமாகப் பரந்து நின்று, நம்மை மீட்டுக் கொண்டு தம்முடைய சொந்த ஜனமாக்கிக் கொண்டவரை மகிமைப்படுத்தும்படியாகக் காணப்படுகின்றோம்.

நம்மை இருளிலிருந்து மீட்டு வெளியே ஒளியினண்டை கொண்டு வந்தவரை நாம் அனைவரும் இணைந்து போற்றுவோமாக.

சிந்தனை செய்

லண்டனிலுள்ள ஒரு வேதாகமம் பயிற்சி கல்லூரியில் ஆஸ்வால்ட் சேம்பர்ஸ் இருந்த நாட்களில் (1911-15) தன்னுடைய விரிவுரைகளின் போது அவர் விளக்குகின்ற பொருட்களைக் காண்பித்து மாணவர்களை வியப்பில் ஆழ்த்துவார். மதிய உணவு நேரத்திற்குப் பின்னரே விவாதத்திற்குரிய நேரம் ஒதுக்கப்பட்டிருந்ததால், அந்நேரத்தில் சேம்பர்ஸ் மாணவர்களின் கேள்விகளாலும், எதிர்ப்புகளாலும் அடிக்கடி துளைத்தெடுக்கப்படுவார் என ஒரு பெண்மணி விளக்கினார். மேலும் அவள், ஆஸ்வால்ட் எப்பொழுதும் புன்முறுவலோடு “இதனை இப்பொழுது விட்டு விடு. அது உனக்குப் பின்னர் தெரியவரும்” எனச் செல்வார் அவர் மாணவர்களை அதனைக் குறித்து மீண்டும் சிந்தனை செய்ய ஊக்குவிப்பார். ஏனெனில் தேவனே தன்னுடைய உண்மையை அவர்களுக்கு விளங்கச் செய்வார்.

ஓன்றினைக் குறித்து மீண்டும் சிந்திப்பது என்பது, அக்காரியத்தின் மீது கவனம் செலுத்தி, அதனைக் குறித்து ஆழ்ந்து யோசிப்பதாகும். இயேசு பெத்லகேமில் பிறப்பதற்கு முன் நடந்த நிகழ்வுகளையும், தேவதூதனின் காட்சியையும், மேசியாவைக் காண மேய்ப்பர்கள் வந்ததையும், “ மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து சிந்தனை பண்ணினாள்” (லூக். 2:19). புதிய ஏற்பாட்டினைக் கற்றுத் தேர்ந்த று.நு. வைன் என்பவர் “சிந்தனை செய்தல்” என்பது “எல்லாவற்ளையும் ஒன்றிணைத்து, சூழ்நிலைகளோடு ஒவ்வொன்றையும் சேர்த்து ஆராய்வதேயாம்” எனக் கூறுகின்றார்.

நம் வாழ்வில் நடைபெறும் காரியங்களைக் குறித்துக் புரிந்துகொள்ள போராடும் போது தேவனையும், அவருடைய ஞானத்தையும் தேடுவதற்கு மரியாள் ஒரு நல்ல முன்மாதிரியாகவுள்ளார்.

மரியாளைப் போன்று நாமும் நம்முடைய வாழ்வில் தேவனுடைய வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டு, அவருடைய அன்பின் வழிகாட்டலின் மூலம் நாம் பெற்றுக் கொண்ட அநேகப் புதிய காரியங்களை நம் இருதயத்தில் பொக்கிஷமாகச் சேர்த்துவைத்து அதனைக் குறித்து சிந்தனை செய்வோம்.

பாதையைத் தேர்ந்தெடுத்தல்

இலையுதிர் காலத்தில், கொலராடோ மலையில், குதிரைமேல் அமர்ந்து, தனக்கு முன் இருக்கும் பாதைகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற சிந்தனையில் இருக்கும் ஒரு இளைஞனின் அழகிய புகைப்படம் என்னிடத்தில் இருக்கிறது. ராபர்ட் ஃப்ராஸ்ட் எழுதிய “தேர்வு செய்யப்படாத பாதை” (The Road Not Taken) என்ற கவிதையை இந்த புகைப்படம் எனக்கு நினைவுபடுத்துகிறது. தனக்கு முன் இருக்கும் இரண்டு பாதைகளைப் பற்றி ஃப்ராஸ்ட் குறிப்பிடுகிறார். இரண்டுமே அதில் செல்லத்தூண்டும்படி அழகாக இருக்கின்றன. மீண்டும் அதே இடத்துக்கு வருவாரா என்பது ஃப்ராஸ்டுக்குத் தெரியாது. ஆனால் அதில் ஒரு பாதையை அவர் தெரிவு செய்தாகவேண்டும். “காட்டில் பிரிந்த இரண்டு பாதைகளில், யாரும் அதிகம் பயணம் செய்யாத பாதையை நான் தேர்ந்தெடுத்தேன். அதுவே ஒரு பெரிய மாற்றத்திற்குக் காரணமாக இருந்தது” என்று ஃப்ராஸ்ட் எழுதுகிறார்.

இயேசுவின் மலைப் பிரசங்கத்தில் (மத்தேயு 5-7), அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம், “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள். கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” (மத்தேயு 7:13-14)  என்று கூறினார்.

நம் வாழ்க்கைப் பயணத்தில், எந்தப் பாதையை தேர்ந்தெடுப்பது என்று பல சமயங்களில் குழப்பம் வரலாம். பல பாதைகள் நம்பிக்கை அளிப்பதாகவும், கவர்ச்சியாகவும் இருக்கின்றன. ஆனால் வாழ்க்கைக்கான பாதை ஒன்றே ஒன்றுதான். சீஷத்துவமும், கடவுளின் வார்த்தைக்கு கீழ்ப்படிதலும் கொண்ட பாதையில் பயணம் செய்யும்படி இயேசு நம்மிடம் கூறுகிறார். கூட்டத்தைப் பின்பற்றாமல், அவரைப் பின்பற்றுமாறு அழைக்கிறார்.

நமக்கு முன்பாக உள்ள பாதையைப் பற்றி நாம் சிந்திக்கையில், வாழ்க்கைப் பாதையைத் தெரிந்துகொள்ள, அவர் வழியைப் பின்பற்ற கடவுள் நமக்கு ஞானத்தையும், தைரியத்தையும் தந்தருள்வாராக!

நம் பெயர் அவருக்குத் தெரியும்

நியூயார்க் நகரில் உள்ள செப்டம்பர் 11 நினைவுச் சின்னத்திற்கு ஒருமுறை சென்றிருந்தபோது, அங்கே இருக்கும் இரட்டை பிரதிபலிப்புக் குளங்களில் ஒன்றை ஒளிப்படம் எடுத்தேன். உலக வர்த்தக மையத் தாக்குதலில் உயிரிழந்த சுமார் 3,000 மக்களின் பெயர்கள், இந்த குளங்களைச் சுற்றி உள்ள வெண்கலத் தகடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. பின்பு அந்தப் படங்களை கவனமாகப் பார்த்தபோது, ஒரு பெயரின்மேல் ஒரு பெண்ணின் கை இருப்பதைப் பார்த்தேன். தங்களுக்கு அருமையானவர்கள் பெயரின்மேல் கை வைத்து, நினைவுகூருவதற்காக அநேகர் அந்த இடத்திற்கு வருகிறார்கள்.
 
கர்த்தரை விட்டு அவரின் ஜனம் பின்வாங்கியபோதும், இயேசு கிறுஸ்துவின்மாறாத அன்பையும், அவர்கள்மீது அவர் வைத்திருக்கும் கரிசனையையும் ஏசாயா அவர்களுக்கு நினைவுபடுத்தினார். பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப்பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன் (ஏசாயா 43:1) என்று கர்த்தர் சொல்லுகிறார்.
 
சங்கீதம் 23ல், “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்....என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” (வச. 4,6) என்று தாவீது கூறுகிறார்.
 
கர்த்தர் நம்மை ஒருபோதும் மறப்பதில்லை. நாம் எங்கிருந்தாலும், எந்த சூழ்நிலையில் இருந்தாலும், அவருக்கு நம் பெயர் தெரியும்; அவரது மாறாத அன்பினால், நம்மை அவரது கரத்தின் பிடியில் வைத்துள்ளார். 

எல்லையில்லா அன்பு

ஒரு புத்திசாலியான நண்பன் என்னிடம் “நீ எப்பொழுதும்” அல்லது “நீ ஒரு போதும்” என்ற வார்த்தைகளை என்னுடைய சம்பாஷணைகளில் தவிர்த்துவிடுமாறும், முக்கியமாக என்னுடைய குடும்பத்தினரோடு பேசும் போதும் தவிர்க்கும்படியும் கூறினான். நாம் நேசிப்பவர்களிடம் கூட அன்பற்ற வார்த்தைகளைக் கூறி அவர்களை எளிதாக விமர்சனம் செய்துவிடுகின்றோம். ஆனால், நம்முடைய தேவன் நம்மீது வைத்திருக்கும் எல்லையில்லா அன்பில் ஒருபோதும் மாற்றமேயில்லை.

சங்கீதம் 145ல் “யாவரும்”, “எல்லாம்” “எல்லாரும்” என்ற வார்த்தைகள் அதிகம் உள்ளன. “கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின் மேலுமுள்ளது” (வச. 9) “கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்” (வச. 14) “கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்” (வச. 17). “கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்” (வச. 20).

இந்த சங்கீதம், தேவனுடைய அன்பு எல்லையில்லாதது, அவர் பாரபட்சமில்லாமல் எல்லார் மேலும் அன்பு கூருகின்றார் என அநேகமுறை கூறுகின்றது. புதிய ஏற்பாட்டில் இந்த அன்பின் வெளிப்பாட்டை இயேசு கிறிஸ்துவில் காண்கின்றோம். “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவா. 3:16).

சங்கீதம் 145ல், “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் கர்த்தர் சமீபமாயிருக்கிறார். அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்” (வச. 18-19) எனக் காண்கின்றோம்.

தேவன் நம்மீது வைத்திருக்கின்ற அன்பு என்றும் நிலையானது, அது ஒருபோதும் ஒழியாது.

பிறர் கேட்கும்படி வாழ்தல்

நான் டெக்ஸாஸ் மாநிலத்தில் ஆஸ்டினிலுள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது, என்னுடைய அறையிலிருந்த மேசையின் மீது ஓர் அட்டையைக் கண்டேன். அதில், உங்களை வரவேற்கிறோம், உங்களுக்காக நாங்கள் செய்யும் ஜெபம்.

“இங்கு நீங்கள் தங்கியிருக்கும் போது நல்ல ஓய்வுகிடைக்கட்டும், உங்களுடைய பயணங்கள் பயனுள்ளவையாயிருக்கட்டும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் உங்களைப் பாதுகாத்து, தன்னுடைய முகப்பிரகாசத்தை உங்கள் மீத வீசச் செய்வாராக” என்றிருந்தது.

இந்த விடுதியை நடத்தும் நிறுவனம் இந்த அட்டையை வைத்திருந்தது. எனவே நான் அவர்களைக் குறித்து மேலும் அறிய ஆவல்கொண்டு, அவர்களுடைய வலைதளத்திற்குச் சென்று அவர்களுடைய கலாச்சாரம், வலிமை, மற்றும் அவர்களின் பண்புகளைக் குறித்துக் தெரிந்து கொண்டேன். மக்களை ஈர்க்கும் வகையில் அவர்கள் நேர்த்தியை எட்டிவிட முயற்சித்திருக்கின்றனர். அவர்களுடைய நம்பிக்கையை தங்களின் வேலைத்தளங்களிலும் வெளிக்காட்டியுள்ளனர்.

இவர்களுடைய இந்த அணுகுமுறை, ஆசியா முழுமையிலும் சிதறடிக்கப்பட்ட இயேசுவின் சீடர்களுக்கு பேதுரு எழுதிய வார்த்தைகளை எனக்கு நினைவுபடுத்தியது. அவர்களைப் பேதுரு ஊக்கப்படுத்துகின்றார். கர்த்தராகிய தேவன் மீதுள்ள நம்பிக்கையை அவர்கள் வாழுகின்ற சமுதாயத்தினரிடையே விளக்கிக் காட்டும்படி கூறுகின்றார். அவர்கள் அச்சுறுத்தலையும், பாடுகளையும் அனுபவிக்க நேர்ந்தாலும் பயப்படாமல், “கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும், வணக்கத்தோடும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்” (1 பேது. 3:15) என்று கூறுகின்றார்.

என்னுடைய நண்பர் ஒருவர் இதனையே “உங்கள் வாழ்க்கை முறைக்கான விளக்கத்தைத் தாருங்கள் என்று கேட்குமளவிற்கு வாழ்ந்துகாட்டுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார். நாம் எங்கு வேலை செய்தாலும், வாழ்ந்தாலும் அங்கு தேவ பெலத்தோடு தேவன் மீதுள்ள நம்பிக்கையை வாழ்ந்து காட்டுவோம். நம்முடைய நம்பிக்கையைக் குறித்து நம்மிடம் கேட்பவர்களுக்கு மரியாதையோடும், நிதானத்தோடும் பதிலளிக்க எப்பொழுதும் தயாராக இருப்போமாக.

சாப்பிடும் முன் தேவனுக்கு நன்றி சொலல்

பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர் ஜி.கே. செஸ்டர்டனின் எழுத்துக்களை அநேக ஆண்டுகளாக நான் வாசித்து மகிழ்ந்ததுண்டு. அவருடைய நகைச்சுவையும், நுண்ணறிவும் என்னைச் சிரிப்புக்குள்ளாக்குவதோடு சிந்திக்கவும் வைத்தது. எடுத்துக்காட்டாக, “சாப்பாட்டிற்கு முன் கிருபை என்று சொல்லுகிறீர்கள். நல்லது. நான் சொல்லுகிறேன், விளையாட்டிற்கும், கேளிக்கைகளுக்கும், இசை நிகழ்ச்சிகளுக்கும், நாடகங்களுக்கும், புத்தகத்தைத் திறப்பதற்கும், எழுதுவதற்கும், படம் வரைவதற்கும், நீந்துவதற்கும், வாள் சண்டைக்கும், குத்துச் சண்டைக்கும், நடப்பதற்கும், நடனத்திற்கும், பேனாவை மையில் நனைப்பதற்கு முன்பும் கிருபை வேண்டும்.”

ஒவ்வொரு வேளை உணவிற்கு முன்பும் நாம் தேவனுக்கு நன்றி சொல்வது நல்லது. ஆனால், அது அத்தோடு நின்றுவிடக் கூடாது. அப்போஸ்தலனாகிய பவுல் ஒவ்வொரு செயலையும் ஒவ்வொரு முயற்சியையும் தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டியவையாகப் பார்க்கின்றார். அவற்றை தேவ நாம மகிமைக்காக செய்ய வேண்டுமெனவும் சொல்கின்றார். “வார்த்தையினாலாவது கிரியையினாலாவது நீங்கள் எதைச் செய்தாலும் அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்” (கொலோ. 3:17) என்று கூறுகின்றார். பொழுதுபோக்கு, தொழில் மற்றும் கல்வி ஆகியவை நாம் தேவனைக் கனப்படுத்தவும், நம்முடைய நன்றியை தேவனுக்குச் செலுத்தும் படியாகவும் நமக்கு கொடுக்கப்பட்ட வழிகளேயாம்.

கொலோசெ சபையின் விசுவாசிகளுக்கு பவுல் “தேவ சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, அதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்” (வச. 15) என்று கூறுகின்றார்.

நாம் தேவனுக்கு நன்றிசொல்ல நினைக்கும் எவ்விடமும், அவரை கனப்படுத்த நினைக்கும் எந்நேரமும் நாம் “கிருபை” என்று சொல்லக் கூடிய மிகச் சிறந்த இடமாகும்.

மன்னிக்கும்படி ஒரு ஜெபம்

1960 ஆம் ஆண்டு, ஆறு வயதாயிருந்த ரூபி பிரிட்ஜஸ் என்ற ஆப்பிரிக்க-அமெரிக்க குழந்தை, தென் அமெரிக்காவிலுள்ள வெள்ளையரின் அனைத்து ஆரம்பநிலைப் பள்ளியை கலப்பினப் பள்ளியாக ஒருங்கிணைத்த முதல் குழந்தையாகும். கோபமான பெற்றோர் கூட்டத்தின் சாபக் குரல்களையும், பயமுறுத்தலையும், அவமானங்களையும் தாண்டி, ஒவ்வொரு நாளும் ரூபி பள்ளிக்குச் செல்ல உள்துறை உயர் அதிகாரிகள் பாதுகாப்பு வழங்கினர். பள்ளியினுள் பாதுகாப்பாக, ஒரு வகுப்பறையில் தனிமையில் அமர்ந்திருந்த ரூபிக்கு, பார்பரா ஹென்றி என்ற ஆசிரியை மட்டும் கற்றுக் கொடுக்க முன் வந்தார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ரூபியோடு அமர்ந்திருக்க அனுமதிக்கவில்லை.

மிகவும் பிரசித்தி பெற்ற மனநல மருத்துவர் ராபர்ட் கோலஸ் ரூபியை பல மாதங்கள் சந்தித்து, அவள் தன் பயத்தையும் மன அழுத்தத்தையும் மேற்கொள்ள உதவினார். ரூபி ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் செல்லும் போதும், திரும்பும் போதும் ஏறெடுத்த ஜெபத்தைக் கேட்டு, அவர் வியப்படைந்தார். ‘‘தேவனே, தயவு கூர்ந்து இவர்களை மன்னியும். ஏனெனில் அவர்கள் தாங்கள் செய்வது என்னவென்று அறியாதிருக்கிறார்கள்” என ஜெபித்தாள் (லூக். 23:34).

இயேசு சிலுவையில் மொழிந்த வார்த்தைகள், அவர் மீது எறியப்பட்ட வெறுப்பையும், அவமானங்களையும் விடப் பெரியது. அவருடைய வாழ்வில் மிகவும் வேதனையடைந்த நேரத்தில் நம்முடைய தேவன், தான் சீடர்களுக்குப் போதித்த காரியங்களைச் செயலில் காட்டினார்.  ‘‘உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், ... உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறது போல நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்” என இயேசு தன் சீடர்களுக்கு கற்றுக் கொடுத்தார் (லூக். 6:27-28, 36).

இயேசு நமக்குக் கொடுத்த அன்பை நாம் பிறரிடம் காட்டும் போது மட்டுமே இந்த குறிப்பிடத்தக்க அணுகுமுறையைச் செயல்படுத்த முடியும். ஆழமான வெறுப்பினைவிட இயேசுவின் அன்பு வலிமையானது.

ரூபி பிரிட்ஜஸ் நமக்கு வழி காட்டினாள்.

தொலைதூரத்திலுள்ள தேசம்

எமி கார்மைக்கேல் அம்மையார் (1867-1951) இந்தியாவில் அனாதைப் பெண் குழந்தைகளைக் காப்பாற்றி அவர்களுக்கு புதிய வாழ்வையளித்தது யாவருக்கும் தெரிந்திருக்கும். இந்த கடின வேலையின் மத்தியில் ‘‘தரிசன நேரம்” என்று அவர் அழைக்கும் காரியத்திற்கும் நேரம் ஒதுக்கியிருந்தார். அவர் எழுதிய ‘‘கோல்ட் பை மூன்லைட்” என்ற புத்தகத்தில் ‘‘ஒரு நெரிசல் மிக்க நாளில் அந்த தொலை தூர தேசத்தை ஒரு துளியளவு தான் பார்க்க முடிந்தது. நாங்கள் இன்னமும் சாலையிலேயே அடைபட்டு நின்று கொண்டிருக்கிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

தேவனுக்கு விரோதமாக கலகம் செய்த அவருடைய ஜனங்கள் மீண்டும் தேவனிடம் திரும்புவதைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி சொல்கின்றார், ‘‘உன் கண்கள் ராஜாவை மகிமை பொருந்தினவராகக் காணும், தூரத்திலுள்ள தேசத்தையும் பார்க்கும்” (ஏசா. 33:17). தற்கால சூழ்நிலையிலிருந்து நம் கண்களை உயர்த்தி இந்த தூர தேசத்தைக் கண்டு, நித்திய வாழ்வைப் பற்றிய நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வோம். கடினமான வேளைகளில் நம்முடைய வாழ்வை அவருடைய கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்படியாக நம்மை பெலப்படுத்தி நமக்கு நம்பிக்கையைத் தருகின்றார். ‘‘கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்” (வச. 22)

ஒவ்வொரு நாளையும் நாம் ஊக்கமிழந்தவர்களாகப் பார்க்கப் போகின்றோமா? அல்லது நம்முடைய கண்களை உயர்த்தி இந்த ‘‘தூர தேசத்தையும்” நம்முடைய மகிமை பொருந்திய கர்த்தரையும்” (வச. 21) நோக்கிப் பார்க்கப் போகின்றோமா?

எமி கார்மைக்கேல் அம்மையார் ஐம்பது வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் செலவிட்டு, மிகவும் தேவையுள்ள இளம்பெண்களுக்கு உதவினார். இதனை எப்படி செய்ய முடிந்தது? ஒவ்வொரு நாளும் தன் கண்களை இயேசுவின் மீது வைத்து, தன்னுடைய வாழ்வை இயேசுவின் பாதுகாப்பில் வைத்தார். நாமும் அவ்வாறு செய்ய முடியும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

பொய்களும் உண்மையும்

 

அடால்ஃப் ஹிட்லர், சிறிய பொய்களைவிட பெரிய பொய்கள் சக்திவாய்ந்தவை என்று நம்பினார். மேலும் அவர் தனது கோட்பாட்டை வெற்றிகரமாக பரிசோதித்தார். அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்தில், அவர் மற்றவர்களின் கருத்துக்களை ஆதரிப்பதில் திருப்தி அடைவதாகக் கூறினார். அவர் ஆட்சிக்கு வந்ததும், யாரையும் துன்புறுத்தவேண்டும் என்ற எண்ணம் தனது கட்சிக்கு இல்லை என்றார். பின்னர், ஊடகங்களை பயன்படுத்தி தன்னை தகப்பனாகவும் ஒழுக்க நெறியாளராகவும் சித்தரித்தார்.

சாத்தான் நம் வாழ்வில் வல்லமை பெற பொய்களைப் பயன்படுத்துகிறான். அனைத்து தருணங்களிலும், அவன் பயம், கோபம் மற்றும் விரக்தியைத் தூண்டுகிறான். ஏனெனில் அவன் “பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாய்” இருக்கிறான் (யோவான் 8:44). சாத்தானால் உண்மையைச் சொல்லமுடியாது, ஏனென்றால் இயேசு சொன்னதுபோல், அவனுக்குள் எந்த உண்மையும் இல்லை.

சாத்தானின் பொய்களில் சிலவைகள் இங்கே. முதலில், நமது பிரார்த்தனைகள் முக்கியமில்லை என்பதே. “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும்பெலனுள்ளதாயிருக்கிறது” (யாக்கோபு 5:16) என்று வேதம் சொல்லுகிறது. இரண்டாவது பொய், “நாம் சிக்கலில் இருக்கும்போது, அதிலிருந்து வெளியேற வழியே இல்லை” என்பதே. இதுவும் தவறானது. “தேவனாலே எல்லாம் கூடும்” (மாற்கு 10:27) என்றும் “சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1 கொரிந்தியர் 10:13) என்றும் வேதம் வாக்களிக்கிறது. மூன்றாவதாக, “தேவன் நம்மை நேசிப்பதில்லை” என்னும் பொய். அது உண்மையல்ல. நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள “தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது” (ரோமர் 8:38-39).

தேவனுடைய சத்தியம் பொய்யைவிட சக்தி வாய்ந்தது. இயேசுவின் போதனைக்கு நாம் அவருடைய வல்லமையில் கீழ்ப்படிந்தால், நாம் “சத்தியத்தை அறிவோம்”, பொய்யானதை நிராகரிப்போம். “சத்தியம் நம்மை விடுதலையாக்கும்” (யோவான் 8:31-32). 

 

மகிழ்ச்சியும் ஞானமும்

ஜப்பானில் ஒவ்வொரு வசந்த காலத்திலும் இனிமையான நறுமணப் பூக்கள் நேர்த்தியான வெளிர் மற்றும் துடிப்பான இளஞ்சிவப்புகளால் நிரப்பப்படுகின்றன. இது குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் உணர்வுகளை மகிழ்விக்கிறது. குறுகிய காலம் மட்டுமே இருக்கக்கூடிய அந்த மலர்கள் ஜப்பானியர்களிடம், குறுகிய வாழ்க்கை அனுபவத்தின் மேன்மையை தன் அழகினாலும் வாசனையினாலும் ஏற்படுத்திச் செல்கிறது. திடீரென்று ஏற்படும் மகிழ்ச்சி மாற்றத்தை அவர்கள் “வாழ்வின் நிலையற்ற தன்மை” என்று அழைக்கிறார்கள்.

மனிதர்களாகிய நாம் மகிழ்ச்சியின் உணர்வுகளைத் தேடவும் அதில் நீடிக்கவும் விரும்புகிறோம் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஆயினும்கூட, வாழ்க்கை கஷ்டங்களால் நிரம்பியுள்ளது என்பதன் அர்த்தம், அன்பான தேவன் மீதான நம்பிக்கை என்னும் பூதக்கண்ணாடியின் மூலம் வலி மற்றும் இன்பம் இரண்டையும் பார்க்கும் திறனை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் அவிசுவாசத்துடனோ இருக்கவோ அல்லது வாழ்க்கையைப் பற்றிய யதார்த்தமற்ற பார்வையை நாமே உருவாக்கிக்கொள்ளவோ அவசியமில்லை.

பிரசங்கி புத்தகம் நமக்கு ஒரு பயனுள்ள மாதிரியை வழங்குகிறது. இந்த புத்தகம் சில நேரங்களில் எதிர்மறையான அறிக்கைகளின் பட்டியலாக கருதப்பட்டாலும், “எல்லாம் மாயை” (1:2) என்று எழுதிய அதே சாலெமோன் ராஜா, “வேறொரு நன்மையும் இல்லை” என்று கூறி, வாழ்க்கையில் எளிமையான விஷயங்களில் மகிழ்ச்சியைக் காண வாசகர்களை ஊக்குவிக்கிறார். “புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை” (8:15).

அழகான பருவங்களிலும் கடினமான காலங்களிலும் (3:11-14; 7:13-14), பரலோகப்பார்வையில் எதுவுமே நிரந்தரமானது இல்லை என்பதை அறிந்து, ஞானத்தை அடையவும் தேவனுடைய கிரியைகளை பார்க்கும்படியும் உதவிசெய்யும்படி (வச. 16-17) தேவனிடம் நாம் கேட்கும்போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. 

 

சரியாய் எதிர்வினையாற்றுங்கள்

கௌரவால் தன் கண்களை நம்ப முடியவில்லை. "அவர்கள் ஏன் இந்த வெள்ளை உடையில் இருக்கும் நல்ல மாமாவை அடிக்கிறார்கள்" என்று எண்ணினான். அவன் இயேசுவைப் போல உடையணிந்த ஒரு நபர் தெருக்களில் ஊர்வலமாகச் செல்வதையும் , போலி இரத்தம் சொட்டச் சொட்டவும், வீரர்களைப் போல உடையணிந்தவர்களால் சாட்டையால் அடிக்கப்படுவதையும் கண்டான். அது ஒரு சபையின் புனித வெள்ளி பவனி. ஆனால் அந்த காட்சி கௌரவுக்கு மிகவும் நிஜமாக இருந்தது. கௌரவ் ஒரு மனநலிவு நோயாளி, மேலும் அவனது நிலை அவனை மிகவும் ஆர்வத்துடனும் இரக்கத்துடனும் இருக்கும்படி செய்தது. அம்மாவின் புடவையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு, “அம்மா, தயவு செய்து அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள்!” என்று புலம்பியபடியே அவன் இதயம் இரக்கத்தால் நிறைந்தது.

கௌரவரைப் போல இரக்கமுள்ளவர்களாக இருக்க நாம் அழைக்கப்படுகிறோம். சிலருக்கு எளிதில் இரக்கம் உண்டாகலாம் என்றாலும், மற்ற நமக்கோ அதைப் பயிற்சி செய்ய வேண்டும். கொலோசெ சபையினர்க்கு தங்கள் பழைய வாழ்க்கை முறையை "அகற்ற" வலுவாக வலியுறுத்தப்பட்டது. அழுக்காகவும் கந்தையாகவும் இருந்த ஆடையைத் தூக்கி எறிவது போல, கோபம், மூர்க்கம் , பொறாமை, வாயில் பிறக்கலாகாத தூஷணம், வம்பு வார்த்தைகள் (வ.8) ஆகியவற்றைக் கொண்டிருந்த தங்கள் உலகத்துக்குரிய சுபாவத்தைக் களைந்துவிடும்படி அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். மாறாக, இரக்கம், தயவு, மனத்தாழ்மை மற்றும்நீடிய பொறுமை (V.12)ஆகிய நற்பண்புகளை அணிந்துகொள்ள அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர், அவை " இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும்" (சங்கீதம் 145:8). கொண்ட தங்கள் சிருஷ்டிகரைப் பிரதிபலிக்கின்றன.

இரக்கம், கருணை, தாழ்மை மற்றும் தயவு ஆகியவை இன்றைய உலகில் பெரும்பாலும் பலவீனங்களாகக் கருதப்படுகின்றன. ஆனாலும் இதைத்தான் மற்றவர்கள் நம்மில் பார்க்க வேண்டும், அனுபவிக்க வேண்டும் (வ.12). சக பணியாளர்கள், அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான நமது அனுதின உறவுகளில் இந்த குணாதிசயங்களுடன் செயல்படுவது எப்போதும் எளிதானது அல்ல. ஆனால் சூழ்நிலைகள் எப்படிப்பட்டதாயினும் நாம் சரியாக எதிர்வினையாற்ற உறுதிகொள்ள வேண்டும், ஏனெனில் இந்த வழிமுறையில்தான் நாம் கிறிஸ்துவின் சீடர்கள் என்பதை உலகம் அறியும் ரெபேக்கா விஜயன்