மேகங்களற்ற நீல நிற வானத்தை கூர்ந்து பார்ப்பது எனக்குப் பிடிக்கும். நம்முடைய சிருஷ்டிகரின் மகிமையான படைப்புகளில் ஓர் அழகிய பகுதி இந்த வானம். இது நம்முடைய சந்தோஷத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வானத்தைக் கண்டு விமான ஓட்டிகள் எவ்வளவாய் மகிழ்ந்திருப்பார்கள்! அவர்கள் பறப்பதற்கு ஏற்ற சிறந்த வான்வெளியை பல அடைமொழிகளைக் கொண்டு விவரிப்பார்கள். அதில் எனக்கு மிகவும் பிடித்தது, “நாளைய தினத்தை நீ இன்றே பார்ப்பது.”

“நாளைய தினத்தை இன்றே பார்ப்பது” என்பது நமது பார்வைக்கு அப்பாற்பட்டது. சொல்லப் போனால் இன்று நம்மை நோக்கி வரும் காரியங்களைக்கூட சில சமயங்களில் நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. “நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப் போலிருக்கிறதே” என்று வேதாகமம் கூறுகிறது (யாக். 4:14).

ஆனால் வரையறைக்குட்பட்ட நம்முடைய பார்வை விரக்தியை உண்டாக்கத் தேவையில்லை. மாறாக நாம் மகிழ்ந்திருக்கலாம். ஏனெனில் நம்முடைய எதிர்காலத்தை முற்றும் காண்கிற தேவன் மேல் நாம் விசுவாசம் வைத்துள்ளோம். அதின் ஒவ்வொரு நாளிலும் நாம் எதிர்கொள்ள போகும் சவால்களையும் அதன் தேவைகளையும் அவர் அறிந்திருக்கிறபடியால், நாம் கலங்கத் தேவையில்லை. இதை அப்போஸ்தலனாகிய பவுல் நன்கு அறிந்துள்ளார். ஆகவேதான், “நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்”
(2 கொரி. 5:6) என்று நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளினால் அவர் நம்மை உற்சாகப்படுத்துகிறார்.

இன்றைய தினத்தையும், நாம் காணாத எதிர்காலத்தையும் நம்பிக்கையோடு தேவனுடைய கரத்தில் ஒப்புக்கொடுக்கும்பொழுது, நம் வாழ்வை எதிர்நோக்கி வரும் எக்காரியங்களைக் குறித்தும் நாம் கவலைப்படத் தேவையில்லை. நாம் தேவனோடு நடக்கிறோம். நமக்கு முன் இருப்பவைகளை அவர் அறிந்திருக்கிறார். அவற்றைக் கையாள அவர் பெலமுள்ளவராய், ஞானம் உள்ளவராய் இருக்கிறார்.