ஜனவரி, 2017 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: ஜனவரி 2017

பேசும் மரம்

ஆங்கில இலக்கியத்தின் ஆதி கால கிறிஸ்தவ கவிதைகளில் “த டிரீம் ஆப் த ரூட்” (சிலுவையின் கனவு) என்னும் கவிதையுண்டு. ரூட் (Rood) என்னும் வார்த்தை பழைய ஆங்கில வார்த்தையாகிய ‘ராட்’ (Rod) அல்லது ‘போல்’ (Pole) என்னும் வார்த்தையில் இருந்து வந்தது. அது கிறிஸ்து அறையப்பட்ட சிலுவையை குறிக்கிறது. இந்த பழைய கவிதை இயேசுவின் சிலுவை மரணத்தை சிலுவையின் கண்ணோட்டத்தில் இருந்து கூறுகிறது. சிலுவை செய்ய பயன்படுத்தப்படும் மரம், தான் தேவகுமாரன் கொல்லப்படுவதற்கு பயன்படப்போவதை அறிந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனாலும் கிறிஸ்து தன்னை விசுவாசிக்கிற அனைவருக்கும் மீட்பளிக்கும்படி அம்மரத்தின் உதவியை நாடி அப்பணியில் அதனை சேர்த்துக் கொள்கிறார்.

ஏதேன் தோட்டத்திலே, நம்முடைய ஆவிக்குரிய பெற்றோர் தடை செய்யப்பட்ட பழத்தை உண்டு மனுக்குலம் பாவத்திற்குள் விழ ஒரு மரம்தான் ஆதாரமாக விளங்கியது. மேலும் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து மனுக்குலத்தின் பாவம் போக்க தன்னுடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தினபொழுது, அவர் நம் சார்பில் சிலுவை மரத்திலே அறையப்பட்டார். கிறிஸ்து, “தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்”
(1 பேதுரு 2:24).

இரட்சிக்கப்படும்படி கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைக்கும் அனைவருக்கும், சிலுவை தான் திருப்புமுனை. மேலும் கிறிஸ்துவின் மரணத்திற்குப்பின், இது நம்மை பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் விடுதலையாக்கிய தேவகுமாரனுடைய தியாகபலியை குறிப்பிடும் பிரசித்திபெற்ற சின்னமாக விளங்குகிறது. நம் மேல் தேவன் வைத்துள்ள சொல்லி முடியாத அதிசயமான அன்பின் சான்றாக சிலுவை விளங்குகிறது.

மறுபடியும் கட்டி எழுப்புதல்

எட்வர்ட் க்ளீ (Edward Klee) பல ஆண்டுகள் கழித்து பெர்லின் (Berlin) பட்டணத்திற்கு திரும்பி வந்த பொழுது, தான் நேசித்து நினைவுகூர்ந்த எதுவும் அங்கில்லை என கண்டான். அவனைப்போலவே அப்பட்டணமும் வியத்தகுவிதம் கணிசமாக மாறியிருந்தது. ஹெமிஸ்பியர்ஸ் (Hemispheres) பத்திரிக்கையில் அதைக்குறித்து க்ளீ “நீங்கள் மிகவும் நேசித்த பட்டணத்திற்கு திரும்பி செல்வது எதிர்பாராத விளைவை உண்டாக்கலாம், நீங்கள் ஏமாற்றமுமடையலாம்” என எழுதியிருந்தான். முந்தையகாலத்தில் நாம் வாழ்ந்த இடங்களுக்கு செல்லும் பொழுது, அவை நமக்குள் துக்கத்தையும் ஏதோவொன்றை இழந்தது போன்ற உணர்வையும் உண்டாக்கலாம். ஆனால் உண்மையென்னவெனில் நம்முடைய வாழ்வில் முக்கியமான பங்கு வகித்த அவ்விடம் மாறியிருப்பது போலவே நாமும் மாறிவிட்டோம்.

இஸ்ரவேலிலிருந்து நாடு கடத்தப்பட்ட நெகேமியா, அநேக ஆண்டுகள் கழித்து, எருசலேம் பட்டணத்தின் பேரழிவையும், அங்குள்ள மக்களின் மோசமான நிலையையும் கேள்விப்பட்டான். ஆகவே, தான் எருசலேமிற்கு திரும்பிச்சென்று மதில்களை மறுபடியும் கட்டியெழுப்ப பெரிசிய ராஜாவாகிய அர்தசஷ்டாவிடம் அனுமதி கேட்டான். ஒரு இரவு முழுவதும் அப்பட்டணத்தின் நிலைமையை பார்வையிட்டு திரும்பிய நெகேமியா (2:13-15) பின்பு அங்கு வசிப்பவர்களை நோக்கி, “எருசலேம் பாழாயிருக்கிறதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக்கிடக்கிறதையும், நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே; நாம் இனி நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு, எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள்,” என்று கூறினான் (வச. 17).

நெகேமியா கடந்த காலத்தை நினைத்து துக்கித்து இருக்கவில்லை, மாறாக மறுபடியும் கட்டி எழுப்பவே திரும்ப வந்தான். நம்முடைய வாழ்விலும் பழுதுபட்டிருக்கும் பாகங்களை சீர்படுத்தும்பொழுது இந்த வல்லமையான பாடத்தை நாம் நினைவிற் கொள்வோமாக. கிறிஸ்துவுக்குள் உள்ள நம்முடைய விசுவாசமும், அவருடைய வல்லமையும், நாம் பின்னோக்கி பாராமல், முன்னோக்கிச் செல்லவும், மறுபடியும் கட்டி எழுப்பவும் நமக்கு உதவிடும்.

காலத்திற்கு அப்பாற்பட்ட இரட்சகர்

2015ஆம் ஆண்டு, ஜூன் மாதம், தன்னுடைய 116வது வயதில் மரித்த ஜரலியன் டால்லி (Jaralean Talley) அன்றைய தினத்தில் உலகத்திலேயே வயதான நபராக கருதப்பட்டார். 1995ஆம் ஆண்டு எருசலேம் நகரம் தன்னுடைய மூன்றாயிரமாவது பிறந்த நாளை கொண்டாடியது. ஒரு மனுஷனை பொறுத்தமட்டில் 116 என்பது மிக அதிகமான வயது, அதேபோல ஒரு பட்டணத்திற்கு 3000 என்பதும் மிக அதிகமான ஆண்டுகள். ஆனால் இதையும் விட அதிக ஆண்டுகள் வாழக்கூடிய மரங்கள் உள்ளன. கலிபோர்னியாவில் உள்ள மலைகளில் இருக்கும் தேவதாரு மரங்கள் 4,800 ஆண்டுகளுக்கும் மேலாக பழைமை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. அது நம்முடைய கோத்திரத் தலைவனாகிய ஆபிரகாமைக் காட்டிலும் 800 ஆண்டுகள் பழைமையானது.

தன்னைக் குறித்து யூத மதத்தலைவர்கள் விசாரித்த பொழுது, தான் ஆபிரகாமுக்கும் முன்னதாகவே இருப்பவராக இயேசு தெரிவித்தார். “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன்” என்றார் (யோவா. 8:58). அவருடைய உறுதியான அறிக்கை அவரை எதிர்கொண்டவர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது. அவர்கள் அவரை கல்லெறிந்து கொல்ல வழி தேடினார்கள். ஏனென்றால், இயேசு தன்னுடைய வயதை குறித்து பேசவில்லை என்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள். மாறாக தன்னை நித்தியவாசியாக அறிவித்ததின் மூலம் “இருக்கிறவராக இருக்கிறேன்” (பார்க்கவும் யாத. 3:14) என்கிற தேவனுடைய ஆதிப் பெயரோடு தன்னை இணைத்ததால் அவர்கள் கோபமடைந்தார்கள். ஆனால், திரித்துவத்தின் நபராக இயேசு முறையாகவே அந்நாமத்தை உரிமைபாராட்ட முடியும்.

யோவான் 17:3ல், “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” என இயேசு ஜெபித்தார். நாம் என்றென்றும் அவரோடு ஜீவிப்பதற்காக, காலத்திற்க்கு அப்பாற்பட்டவர் காலத்திற்குள் கடந்து வந்தார். அவர் நம்முடைய இடத்திலே மரித்து உயிர்ந்தெழுந்ததின் மூலம் நித்திய வாழ்வை நமக்களித்துள்ளார். அவர் தம்மையே ஜீவபலியாக ஒப்புக்கொடுத்ததினாலே, காலத்தினால் வரையறுக்கப்படாத நித்திய வாழ்வை நாம் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அங்கு காலத்திற்கு அப்பாற்ப்பட்டவரோடு நித்தியத்தை கழிப்போம்.

எப்பொழுதும் நேசிக்கப்பட்டு, எப்பொழுதும் மதிக்கப்பட்டிருக்கிறோம்

நாம் செய்யும் வேலையைக் காட்டிலும் நம்மையே அதிகமாய் நேசிக்கும் தேவனையே நாம் சேவிக்கிறோம்.

நாம் வேலை செய்து நம்முடைய குடும்பங்களை போஷிக்கவும், தான் சிருஷ்டித்த இவ்வுலகை பொறுப்போடு பராமரிக்கவும் தேவன் விரும்புவது உண்மையே. சொல்லப் போனால் நம்மை சுற்றியுள்ள பெலனற்றவர்கள், பசியுள்ளவர்கள், வஸ்திரமில்லாதவர்கள், தாகமாயிருப்பவர்கள் மற்றும் மனமுடைந்த அனைவருக்கும் ஊழியஞ்செய்து, அதே சமயத்தில் பரிசுத்த ஆவியானவருடைய அழைப்பை இன்னும் தங்கள் வாழ்வில் ஏற்றுக் கொள்ளாதவர்களை குறித்து விழிப்புடன் இருக்குமாறும் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

ஆனாலும், நாம் செய்யும் வேலையைக் காட்டிலும் நம்மையே அதிகமாய் நேசிக்கும் தேவனையே நாம் சேவிக்கிறோம்.

இதை நாம் ஒருநாளும் மறக்கக்கூடாது. ஏனென்றால் “தேவனுக்காக செய்ய” உதவும் நம்முடைய பெலன் சுகவீனத்தினாலோ, தோல்வியினாலோ, எதிர்பாராத பேரழிவினாலோ நம்மிடமிருந்து கிழித்தெறியப்படும் காலமும் வரலாம். அப்பொழுது நாம் தேவனுக்காக செய்யும் வேலைக்காக அவர் நம்மை நேசியாமல், நாம் அவருடைய பிள்ளைகளாய் இருப்பதினால் நம்மை நேசிக்கிறார் என்பதை நினைவில் கொள்ளும்படி தேவன் விரும்புகிறார்! இரட்சிப்படையும்படி கிறிஸ்துவின் நாமத்தை அழைத்தது முதல், “உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, பட்டயமோ, கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்க முடியாது” (ரோம. 8:36,39).

நம்மால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் பறித்துக்கொண்டாலும் அல்லது நம்மிடமுள்ள அனைத்தையும் நாம் இழந்து போனாலும், தேவன் நம்மிடம் எதிர்பார்பது ஒன்றைத் தான். அது அவருக்குள் உள்ள நம்முடைய அடையாளத்தில் இளைப்பாறுவதையே.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

மன்னிப்பின் வல்லமை

ஒரு நாசக்கார கும்பலால் கடத்தப்பட்ட பதினேழு மிஷனரிகளைப் பற்றி 2021ஆம் செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. அவர்களுடைய மீட்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அந்தக் குழுவை (குழந்தைகள் உட்பட) கொலை செய்துவிடுவதாக அந்த கும்பல் மிரட்டியது. ஆனால் ஆச்சரியமான வகையில், பிணையக் கைதிகளாய் சிக்கியிருந்த அனைத்து மிஷனரிகளும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடத்தை வந்து சேர்ந்த மாத்திரத்தில், அவர்களை சிறைபிடித்தவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பினர்: “அன்பின் மன்னிக்கும் சக்தியானது, வன்முறையின் வெறுப்பின் சக்தியைக் காட்டிலும் வலிமைவாய்ந்தது என்பதை இயேசு வார்த்தையின் மூலமாகவும் அவருடைய வாழ்க்கையின் மூலமாகவும் எங்களுக்குக் கற்பித்திருக்கிறார். எனவே, நாங்கள் உங்களை மனப்பூர்வமாய் மன்னிக்கிறோம்” என்பதே அந்த செய்தி.  
மன்னிப்பு சக்தி வாய்ந்தது என்பதை இயேசு தெளிவுபடுத்தியுள்ளார். அவர் “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்” (மத்தேயு 6:14) என்று கூறுகிறார். பின்பாக, எத்தனை முறை மன்னிக்கவேண்டும் என்னும் பேதுருவின் கேள்விக்கு இயேசு பதிலளிக்கும்போது, “ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்” (18:22) என்று இயேசு சொல்லுகிறார். மேலும் சிலுவையில், “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34) என்று தெய்வீக மன்னிப்பை இயேசு வெளிப்படுத்திக் காண்பித்தார்.  
இருதரப்பினரும் மனப்பூர்வமாய் காயமாற்றப்பட்டு, ஒப்புரவாகும்போதே மன்னிப்பானது முழுமையடைகிறது. நம்மை பாதிப்படையச் செய்த செயல்களை நினைவிலிருந்து அகற்றி, மற்றவர்களை காயப்படுத்தாமல் உறவுகளை எவ்விதம் பேணவேண்டும் என்பதைக் குறித்த பகுத்தறிவை பெறுவது என்பது தேவனுடைய அன்பையும் வல்லமையையும் பிரதிபலிக்கும் ஆதாரங்களாய் வாழக்;கையை மாற்றும். தேவநாம மகிமைக்காய், மற்றவர்களை மன்னிக்கும் வழிகளை ஆராய்வோம்.

படைப்பைக் கண்டறிதல்

யூரேசிய நாடான ஜார்ஜியாவில் உள்ள க்ருபேரா-வோரோன்ஜா என்ற குகையானது பூமியில் இதுவரை ஆராயப்பட்ட ஆழமான குகைகளில் ஒன்றாகும். ஆய்வாளர்கள் குழுவானது அதின் செங்குத்து குகைகளின் பயமுறுத்தும் ஆழத்தை 2,197 மீட்டர் வரை ஆய்வு செய்துள்ளது. அதாவது, பூமிக்குள் 7,208 அடி வரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ இதே போன்று நானூறு குகைகள் நாட்டின் பிற பகுதிகளிலும், உலகம் முழுமையிலும் இருக்கின்றன. அவைகள் எல்லாவற்றிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு, புதிய கண்டெடுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  
படைப்பின் ஆச்சரியங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் கண்டெடுக்கப்பட, நாம் வாழும் பூமியைக் குறித்த நம்முடைய புரிதலை வலுவாக்குவதோடு, தேவனுடைய கரத்தின் அற்புதமான கிரியைகளைக் கண்டு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது (ஆதியாகமம் 1:26-28). சங்கீதக்காரன் நம் அனைவரையும் தேவனின் மகத்துவத்தை “கெம்பீரமாய்ப் பாடி” சங்கீர்த்தனம் பண்ணுவதற்கு அழைப்பு விடுக்கிறார் (வச. 1). நாளை புவி தினத்தை கொண்டாடும் வேளையில், தேவனின் ஆச்சரியமான படைப்பைக் குறித்து தியானிப்போம். படைப்பின் ஆச்சரியங்கள் அனைத்தையும் நாம் கண்டுபிடித்துவிட்டோமோ இல்லையோ, அவைகள் அனைத்தையும் ஆதாரமாய் வைத்து அவருக்கு முன்பாக தலைவணங்கி ஆராதிப்போம் (வச. 6).  
அவர் தனது படைப்பின் பரந்த, பூகோள இடங்களை மட்டும் அறியவில்லை. நம் இருதயத்தின் ஆழத்தையும் அவர் அறிந்திருக்கிறார். ஜார்ஜியாவின் குகைகளைப் போலல்லாமல், வாழ்க்கையின் இருள் சூழ்ந்த ஆழமான பள்ளத்தாக்குகளை கடந்து செல்வோம். அதுபோன்ற தருணங்களில் தேவன் நம்முடைய பயணத்தை மென்மையாகவும் உறுதியாகவும் பராமரிக்கிறார் என்பதை அறிவோம். சங்கீதக்காரனுடைய வார்த்தைகளின் படி, “நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே” (வச. 7) என்பதை மறந்துவிடவேண்டாம்.  

ஆழமான சுகம்

2020ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று, பிரேசிலின் புகழ்பெற்ற “மீட்பராகிய கிறிஸ்து” என்னும் கிறிஸ்துவின் சிலையில் கிறிஸ்துவுக்கு மருத்துவர் ஆடை உடுத்தப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் பல முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவ்வாறு சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த சித்தரிப்பானது, இயேசுவே நம்முடைய பரம வைத்தியர் என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது (மாற்கு 2:17).  
இயேசு இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் பல பிணியாளிகளுக்கு சுகம் கொடுத்திருக்கிறார். பர்திமேயு குருடன் (10:46-52); குஷ்டரோகி (லூக்கா 5:12-16); திமிர்வாதக்காரன் (மத்தேயு 9:1-8) என்று சில உதாரணங்களைக் கூறமுடியும். அவரைப் பின்பற்றி வருகிற மக்கள் மீதான அவருடைய கரிசனையை, அவர் அப்பங்களை பெருகச் செய்து அனைவரையும் போஷித்த சம்பவத்தின் மூலம் அறிந்துகொள்ளமுடியும் (யோவான் 6:1-13). அந்த அற்புதங்கள் அனைத்தும் இயேசுவின் பராக்கிரமத்தையும் ஜனங்கள் மீதான அவருடைய தெய்வீக அன்பையும் வெளிப்படுத்துகிறது.  
அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமாய் அவருக்கு கிடைத்த சுகமாக்குகிற வல்லமையைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்திருக்கிறார். அது, நாம் பாவத்தினால் தேவனிடத்திலிருந்து முற்றிலுமாய் பிரிக்கப்பட்ட சூழ்நிலையின் மத்தியிலும் “அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” என்பதே (ஏசாயா 53:5). இயேசு நம்முடைய அனைத்து சரீர சுகவீனங்களையும் சுகமாக்கவில்லையெனினும், தேவனோடு உறவுகொள்ளும் நம்முடைய தேவையை அவர் பூர்த்திசெய்கிறவராயிருக்கிறார்.