Archives: ஜனவரி 2017

பேசும் மரம்

ஆங்கில இலக்கியத்தின் ஆதி கால கிறிஸ்தவ கவிதைகளில் “த டிரீம் ஆப் த ரூட்” (சிலுவையின் கனவு) என்னும் கவிதையுண்டு. ரூட் (Rood) என்னும் வார்த்தை பழைய ஆங்கில வார்த்தையாகிய ‘ராட்’ (Rod) அல்லது ‘போல்’ (Pole) என்னும் வார்த்தையில் இருந்து வந்தது. அது கிறிஸ்து அறையப்பட்ட சிலுவையை குறிக்கிறது. இந்த பழைய கவிதை இயேசுவின் சிலுவை மரணத்தை சிலுவையின் கண்ணோட்டத்தில் இருந்து கூறுகிறது. சிலுவை செய்ய பயன்படுத்தப்படும் மரம், தான் தேவகுமாரன் கொல்லப்படுவதற்கு பயன்படப்போவதை அறிந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனாலும் கிறிஸ்து தன்னை விசுவாசிக்கிற அனைவருக்கும் மீட்பளிக்கும்படி அம்மரத்தின் உதவியை நாடி அப்பணியில் அதனை சேர்த்துக் கொள்கிறார்.

ஏதேன் தோட்டத்திலே, நம்முடைய ஆவிக்குரிய பெற்றோர் தடை செய்யப்பட்ட பழத்தை உண்டு மனுக்குலம் பாவத்திற்குள் விழ ஒரு மரம்தான் ஆதாரமாக விளங்கியது. மேலும் தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து மனுக்குலத்தின் பாவம் போக்க தன்னுடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தினபொழுது, அவர் நம் சார்பில் சிலுவை மரத்திலே அறையப்பட்டார். கிறிஸ்து, “தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்”
(1 பேதுரு 2:24).

இரட்சிக்கப்படும்படி கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைக்கும் அனைவருக்கும், சிலுவை தான் திருப்புமுனை. மேலும் கிறிஸ்துவின் மரணத்திற்குப்பின், இது நம்மை பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் விடுதலையாக்கிய தேவகுமாரனுடைய தியாகபலியை குறிப்பிடும் பிரசித்திபெற்ற சின்னமாக விளங்குகிறது. நம் மேல் தேவன் வைத்துள்ள சொல்லி முடியாத அதிசயமான அன்பின் சான்றாக சிலுவை விளங்குகிறது.

மறுபடியும் கட்டி எழுப்புதல்

எட்வர்ட் க்ளீ (Edward Klee) பல ஆண்டுகள் கழித்து பெர்லின் (Berlin) பட்டணத்திற்கு திரும்பி வந்த பொழுது, தான் நேசித்து நினைவுகூர்ந்த எதுவும் அங்கில்லை என கண்டான். அவனைப்போலவே அப்பட்டணமும் வியத்தகுவிதம் கணிசமாக மாறியிருந்தது. ஹெமிஸ்பியர்ஸ் (Hemispheres) பத்திரிக்கையில் அதைக்குறித்து க்ளீ “நீங்கள் மிகவும் நேசித்த பட்டணத்திற்கு திரும்பி செல்வது எதிர்பாராத விளைவை உண்டாக்கலாம், நீங்கள் ஏமாற்றமுமடையலாம்” என எழுதியிருந்தான். முந்தையகாலத்தில் நாம் வாழ்ந்த இடங்களுக்கு செல்லும் பொழுது, அவை நமக்குள் துக்கத்தையும் ஏதோவொன்றை இழந்தது போன்ற உணர்வையும் உண்டாக்கலாம். ஆனால் உண்மையென்னவெனில் நம்முடைய வாழ்வில் முக்கியமான பங்கு வகித்த அவ்விடம் மாறியிருப்பது போலவே நாமும் மாறிவிட்டோம்.

இஸ்ரவேலிலிருந்து நாடு கடத்தப்பட்ட நெகேமியா, அநேக ஆண்டுகள் கழித்து, எருசலேம் பட்டணத்தின் பேரழிவையும், அங்குள்ள மக்களின் மோசமான நிலையையும் கேள்விப்பட்டான். ஆகவே, தான் எருசலேமிற்கு திரும்பிச்சென்று மதில்களை மறுபடியும் கட்டியெழுப்ப பெரிசிய ராஜாவாகிய அர்தசஷ்டாவிடம் அனுமதி கேட்டான். ஒரு இரவு முழுவதும் அப்பட்டணத்தின் நிலைமையை பார்வையிட்டு திரும்பிய நெகேமியா (2:13-15) பின்பு அங்கு வசிப்பவர்களை நோக்கி, “எருசலேம் பாழாயிருக்கிறதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக்கிடக்கிறதையும், நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே; நாம் இனி நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு, எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள்,” என்று கூறினான் (வச. 17).

நெகேமியா கடந்த காலத்தை நினைத்து துக்கித்து இருக்கவில்லை, மாறாக மறுபடியும் கட்டி எழுப்பவே திரும்ப வந்தான். நம்முடைய வாழ்விலும் பழுதுபட்டிருக்கும் பாகங்களை சீர்படுத்தும்பொழுது இந்த வல்லமையான பாடத்தை நாம் நினைவிற் கொள்வோமாக. கிறிஸ்துவுக்குள் உள்ள நம்முடைய விசுவாசமும், அவருடைய வல்லமையும், நாம் பின்னோக்கி பாராமல், முன்னோக்கிச் செல்லவும், மறுபடியும் கட்டி எழுப்பவும் நமக்கு உதவிடும்.

காலத்திற்கு அப்பாற்பட்ட இரட்சகர்

2015ஆம் ஆண்டு, ஜூன் மாதம், தன்னுடைய 116வது வயதில் மரித்த ஜரலியன் டால்லி (Jaralean Talley) அன்றைய தினத்தில் உலகத்திலேயே வயதான நபராக கருதப்பட்டார். 1995ஆம் ஆண்டு எருசலேம் நகரம் தன்னுடைய மூன்றாயிரமாவது பிறந்த நாளை கொண்டாடியது. ஒரு மனுஷனை பொறுத்தமட்டில் 116 என்பது மிக அதிகமான வயது, அதேபோல ஒரு பட்டணத்திற்கு 3000 என்பதும் மிக அதிகமான ஆண்டுகள். ஆனால் இதையும் விட அதிக ஆண்டுகள் வாழக்கூடிய மரங்கள் உள்ளன. கலிபோர்னியாவில் உள்ள மலைகளில் இருக்கும் தேவதாரு மரங்கள் 4,800 ஆண்டுகளுக்கும் மேலாக பழைமை வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. அது நம்முடைய கோத்திரத் தலைவனாகிய ஆபிரகாமைக் காட்டிலும் 800 ஆண்டுகள் பழைமையானது.

தன்னைக் குறித்து யூத மதத்தலைவர்கள் விசாரித்த பொழுது, தான் ஆபிரகாமுக்கும் முன்னதாகவே இருப்பவராக இயேசு தெரிவித்தார். “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன்” என்றார் (யோவா. 8:58). அவருடைய உறுதியான அறிக்கை அவரை எதிர்கொண்டவர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது. அவர்கள் அவரை கல்லெறிந்து கொல்ல வழி தேடினார்கள். ஏனென்றால், இயேசு தன்னுடைய வயதை குறித்து பேசவில்லை என்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள். மாறாக தன்னை நித்தியவாசியாக அறிவித்ததின் மூலம் “இருக்கிறவராக இருக்கிறேன்” (பார்க்கவும் யாத. 3:14) என்கிற தேவனுடைய ஆதிப் பெயரோடு தன்னை இணைத்ததால் அவர்கள் கோபமடைந்தார்கள். ஆனால், திரித்துவத்தின் நபராக இயேசு முறையாகவே அந்நாமத்தை உரிமைபாராட்ட முடியும்.

யோவான் 17:3ல், “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” என இயேசு ஜெபித்தார். நாம் என்றென்றும் அவரோடு ஜீவிப்பதற்காக, காலத்திற்க்கு அப்பாற்பட்டவர் காலத்திற்குள் கடந்து வந்தார். அவர் நம்முடைய இடத்திலே மரித்து உயிர்ந்தெழுந்ததின் மூலம் நித்திய வாழ்வை நமக்களித்துள்ளார். அவர் தம்மையே ஜீவபலியாக ஒப்புக்கொடுத்ததினாலே, காலத்தினால் வரையறுக்கப்படாத நித்திய வாழ்வை நாம் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அங்கு காலத்திற்கு அப்பாற்ப்பட்டவரோடு நித்தியத்தை கழிப்போம்.

எப்பொழுதும் நேசிக்கப்பட்டு, எப்பொழுதும் மதிக்கப்பட்டிருக்கிறோம்

நாம் செய்யும் வேலையைக் காட்டிலும் நம்மையே அதிகமாய் நேசிக்கும் தேவனையே நாம் சேவிக்கிறோம்.

நாம் வேலை செய்து நம்முடைய குடும்பங்களை போஷிக்கவும், தான் சிருஷ்டித்த இவ்வுலகை பொறுப்போடு பராமரிக்கவும் தேவன் விரும்புவது உண்மையே. சொல்லப் போனால் நம்மை சுற்றியுள்ள பெலனற்றவர்கள், பசியுள்ளவர்கள், வஸ்திரமில்லாதவர்கள், தாகமாயிருப்பவர்கள் மற்றும் மனமுடைந்த அனைவருக்கும் ஊழியஞ்செய்து, அதே சமயத்தில் பரிசுத்த ஆவியானவருடைய அழைப்பை இன்னும் தங்கள் வாழ்வில் ஏற்றுக் கொள்ளாதவர்களை குறித்து விழிப்புடன் இருக்குமாறும் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

ஆனாலும், நாம் செய்யும் வேலையைக் காட்டிலும் நம்மையே அதிகமாய் நேசிக்கும் தேவனையே நாம் சேவிக்கிறோம்.

இதை நாம் ஒருநாளும் மறக்கக்கூடாது. ஏனென்றால் “தேவனுக்காக செய்ய” உதவும் நம்முடைய பெலன் சுகவீனத்தினாலோ, தோல்வியினாலோ, எதிர்பாராத பேரழிவினாலோ நம்மிடமிருந்து கிழித்தெறியப்படும் காலமும் வரலாம். அப்பொழுது நாம் தேவனுக்காக செய்யும் வேலைக்காக அவர் நம்மை நேசியாமல், நாம் அவருடைய பிள்ளைகளாய் இருப்பதினால் நம்மை நேசிக்கிறார் என்பதை நினைவில் கொள்ளும்படி தேவன் விரும்புகிறார்! இரட்சிப்படையும்படி கிறிஸ்துவின் நாமத்தை அழைத்தது முதல், “உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, பட்டயமோ, கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்க முடியாது” (ரோம. 8:36,39).

நம்மால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் பறித்துக்கொண்டாலும் அல்லது நம்மிடமுள்ள அனைத்தையும் நாம் இழந்து போனாலும், தேவன் நம்மிடம் எதிர்பார்பது ஒன்றைத் தான். அது அவருக்குள் உள்ள நம்முடைய அடையாளத்தில் இளைப்பாறுவதையே.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இடமாற்றம்

2020-ல் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது, எனது நண்பர் ஜோன் மாரடைப்பால் இறந்துவிட்டார். முதலில் அவரது குடும்பத்தார், தங்களது திருச்சபையில் அவரது நினைவுச் சடங்கு நடைபெறும் என்று அறிவித்தனர். ஆனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக சிறிய இடமானாலும் வீட்டில் நடத்துவது நல்லது என்று பின்னர் தீர்மானிக்கப்பட்டது. அதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக “ஜோன் வார்னர்ஸ் - இடமாற்றம்!” என்று ஆன்லைனில் புதிய அறிவிப்பு போடப்பட்டது.

ஆம், அவருடைய குடியிருப்பு இடம் மாறிவிட்டது! அவர் பூமியிலிருந்து பரலோகத்திற்கு சென்றுவிட்டார். தேவன் அவருடைய வாழ்க்கையை பல ஆண்டுகளுக்கு முன்பே மறுரூபமாக்கியிருந்தார். அவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக தேவனுக்கு அன்புடன் ஊழியம் செய்தார். மருத்துவமனையில் இறக்கும் தருவாயில் கிடந்தபோதும், போராடிக்கொண்டிருக்கும் தனக்குப் பிடித்த மற்றவர்களைப் பற்றிக் கேட்டார். இப்போது அவர் தேவனோடு இருக்கிறார். அவருடைய குடியிருப்பு மாற்றப்பட்டுவிட்டது.

அப்போஸ்தலனாகிய பவுலுக்கு, கிறிஸ்துவுடன் வேறொரு இடத்தில் இருக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது (2 கொரிந்தியர் 5:8). ஆனால் மக்களுக்கு ஊழியம் செய்வதற்காக, அவர் பூமியில் தங்கியிருக்கவேண்டியது அவசியம் என்று கருதினார். அவர் பிலிப்பியர்களுக்கு எழுதியபோது, “அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்” (பிலிப்பியர் 1:24) என்று எழுதுகிறார். ஜோன் போன்ற ஒருவருக்காக நாம் துக்கப்படுகையில், அவர்கள் இப்பூமியில் பலருக்கு அவசியப்படலாம் என்று நீங்கள் தேவனிடத்தில் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களுடைய குடியிருப்பை மாற்றுவதற்கென்று தேவன் உகந்த நேரத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்.

ஆவியின் பெலத்தில், தேவனை முகமுகமாய் தரிசிக்கும் நாள் வரும்வரை, இப்போது “அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்” (2 கொரிந்தியர் 5:9). அதுவே நமக்கு மேன்மையாயிருக்கும்.

 

கர்த்தருடைய கரத்தின் கிரியை

ஜூலை 12, 2022 அன்று, புதிய ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் இருந்து ஆழமான விண்வெளியின் முதல் படங்களை விஞ்ஞானிகள் எதிர்பார்த்தனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தொலைநோக்கிகளைவிட இதன் மூலம் பிரபஞ்சத்தை வெகு தொலைவில் பார்க்க முடியும். திடீரென்று ஒரு மூச்சடைக்கக்கூடிய படம் வெளிப்படுகிறது: அழகிய நட்சத்திரத்தின் ஓர் வண்ண இடைவெளி, இதுபோல் இதுவரை பார்த்ததில்லை. அப்போது நாசா விஞ்ஞானி ஒருவர், “எங்கேயோ, நம்பமுடியாத ஒன்று நமக்குக் காத்திருக்கிறது” என்று ஓர் பிரபலமான நாத்திகர் கார்ல் சாகனின் வாக்கியத்தை மேற்கோள் காட்டினார்.

சில சமயங்களில் மக்கள் தேவனைக் கண்ணால் கண்டும் உணராதிருக்கிறார்கள். ஆனால் சங்கீதக்காரன் தாவீது வானத்தைப் பார்த்து, “உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்” (சங்கீதம் 8:1) என்று அவன் பார்த்ததை சரியாய் அடையாளம் கண்டுகொண்டான். “நம்பமுடியாத ஒன்று காத்திருக்கிறது” என்று நாத்திகன் சொன்னது சரிதான். ஆனால் தாவீது பார்த்ததை அவர் பார்க்க தவறிவிட்டார். “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்” (வச. 3-4).

ஆழமான விண்வெளியின் படங்களைப் பார்க்கும்போது, நாம் வியப்படைகிறோம். தொழில்நுட்பத்தின் காரணமாக அல்ல, மாறாக, தேவனுடைய கரத்தின் கிரியையை நாம் சாட்சியிடுவதினால். ஏனென்றால் அவருடைய கரத்தில் கிரியைகளின்மீது தேவன் நமக்கு ஆளுகைக் கொடுத்திருக்கிறார் (வச. 6). உண்மையில் “நம்பமுடியாத ஒன்று நமக்குக் காத்திருக்கிறது.” கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அனைவரையும் அவரிடமாய் ஏற்றுக்கொள்ள தேவன் ஆயத்தமாயிருக்கிறார். இதுவே ஆச்சரியமான வெளிப்பாடாகும். 

 

பொய்களும் உண்மையும்

 

அடால்ஃப் ஹிட்லர், சிறிய பொய்களைவிட பெரிய பொய்கள் சக்திவாய்ந்தவை என்று நம்பினார். மேலும் அவர் தனது கோட்பாட்டை வெற்றிகரமாக பரிசோதித்தார். அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்தில், அவர் மற்றவர்களின் கருத்துக்களை ஆதரிப்பதில் திருப்தி அடைவதாகக் கூறினார். அவர் ஆட்சிக்கு வந்ததும், யாரையும் துன்புறுத்தவேண்டும் என்ற எண்ணம் தனது கட்சிக்கு இல்லை என்றார். பின்னர், ஊடகங்களை பயன்படுத்தி தன்னை தகப்பனாகவும் ஒழுக்க நெறியாளராகவும் சித்தரித்தார்.

சாத்தான் நம் வாழ்வில் வல்லமை பெற பொய்களைப் பயன்படுத்துகிறான். அனைத்து தருணங்களிலும், அவன் பயம், கோபம் மற்றும் விரக்தியைத் தூண்டுகிறான். ஏனெனில் அவன் “பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாய்” இருக்கிறான் (யோவான் 8:44). சாத்தானால் உண்மையைச் சொல்லமுடியாது, ஏனென்றால் இயேசு சொன்னதுபோல், அவனுக்குள் எந்த உண்மையும் இல்லை.

சாத்தானின் பொய்களில் சிலவைகள் இங்கே. முதலில், நமது பிரார்த்தனைகள் முக்கியமில்லை என்பதே. “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும்பெலனுள்ளதாயிருக்கிறது” (யாக்கோபு 5:16) என்று வேதம் சொல்லுகிறது. இரண்டாவது பொய், “நாம் சிக்கலில் இருக்கும்போது, அதிலிருந்து வெளியேற வழியே இல்லை” என்பதே. இதுவும் தவறானது. “தேவனாலே எல்லாம் கூடும்” (மாற்கு 10:27) என்றும் “சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1 கொரிந்தியர் 10:13) என்றும் வேதம் வாக்களிக்கிறது. மூன்றாவதாக, “தேவன் நம்மை நேசிப்பதில்லை” என்னும் பொய். அது உண்மையல்ல. நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள “தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது” (ரோமர் 8:38-39).

தேவனுடைய சத்தியம் பொய்யைவிட சக்தி வாய்ந்தது. இயேசுவின் போதனைக்கு நாம் அவருடைய வல்லமையில் கீழ்ப்படிந்தால், நாம் “சத்தியத்தை அறிவோம்”, பொய்யானதை நிராகரிப்போம். “சத்தியம் நம்மை விடுதலையாக்கும்” (யோவான் 8:31-32).