Archives: மார்ச் 2017

மகத்தான அழைப்பு

ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்.
ஏசாயா 55:1

சமீபத்தில், மின்னஞ்சலில் பல அழைப்பிதழ்களைப் பெற்றேன். ரியல் எஸ்டேட், ஆயுள் காப்பீடு, பணி ஓய்வு சம்பந்தப்பட்ட “இலவச” கருத்தரங்குகளில் பங்குபெறுமாறு சில அழைப்பிதழ்கள் இருந்தன. ஆனால் ஒரு அழைப்பிதழ் என் நீண்டகால நண்பர் சம்பந்தப்பட்டது. அவரை கவுரவிக்கும் விழாவிற்கான அழைப்பிதழ் அது. ஆகவே “கண்டிப்பாக நான் வருகிறேன்” என்று உடனடியாக அதற்கு பதில் அனுப்பினேன். அழைப்பு + ஆசை = சம்மதம்

வேதாகமத்தில் இருக்கும் மிகச்சிறந்த அழைப்புகளில் ஒன்றைத் தான் ஏசாயா 55:1ல் காண்கிறோம். மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்த மக்களிடம் தேவன் இவ்வாறு பேசுகின்றார். “ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்.” இது தேவனின் ஓர் ஒப்பற்ற அழைப்பு. உள்ளான மனிதனுக்கு தேவையான சத்துவத்தையும், நிறைவான ஆவிக்குரிய திருப்தியையும், நித்திய ஜீவனையும் இந்த அழைப்பின் மூலமாக நாம் பெற்றுக்கொள்கிறோம் (வச. 2-3). வேதாகமத்தின் கடைசி அதிகாரத்தில் இயேசுவினுடைய அழைப்பு மீண்டும் இடம் பெற்றிருப்பதை காணலாம்: “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்” (வெளி. 22:17).

நாம் இறந்த பின்புதான் நித்திய ஜீவன் ஆரம்பிக்கும் என்று நம்மில் பலர் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிஜத்தில், நாம் இயேசு கிறிஸ்துவை நமது இரட்சகரும், ஆண்டவருமாக ஏற்றுக்கொண்ட அந்த நொடியிலேயே அது தொடங்கிவிடுகிறது.

அவருக்குள் நித்திய ஜீவனை கண்டடையும்படியாக நம்மை அழைக்கும் தேவனது அழைப்புதான், மகத்தான அழைப்பு! அழைப்பு + ஆசை = சம்மதம்

ஜீவனும் மரணமும்

மரணப்படுக்கையில் இருந்த என்னுடைய நண்பனின் சகோதரர் மரித்த காட்சியை என்னால் மறக்கமுடியாது. அவரது படுக்கையின் பக்கத்தில் அமர்ந்து கொண்டிருந்த சாதாரணமானவர்களை, அசாதாரணமான ஒருவர் சந்தித்தார். நாங்கள் மூவரும் அமைதியாக பேசிக்கொண்டிருந்தோம். திடீரென ரிச்சர்டின் (Richard) சுவாசிக்கும் நிலை கடினமானது. நாங்கள் அவர் அருகே சென்று அவரைப் பார்த்தபடி ஜெபித்துக் காத்துக்கொண்டிருந்தோம். அவரது கடைசி மூச்சை அவர் உள் வாங்கிய பொழுது, அது ஓர் பரிசுத்த தருணமாகவே காணப்பட்டது. நாற்பது வயதில் மரித்துக் கொண்டிருந்த ஓர் அற்புதமான மனிதனின் நிலையை எண்ணி கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த எங்களை தேவனுடைய பிரசன்னம் சூழ்ந்து கொண்டது.

தேவன் உண்மையுள்ளவர் என்பதனை, அநேக பரிசுத்தவான்கள் மரிக்கும் தருவாயிலும் உணர்ந்தனர். உதாரணத்திற்கு, யாக்கோபு மரிப்பதற்கு முன்னர் “நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப்படப்போகிறேன்” (ஆதி. 49:29-33) என்று அவரது பிள்ளைகளிடம் கூறினார். யாக்கோபின் குமாரனாகிய யோசேப்பும் அவரது மரணத்தை குறித்து தன் சகோதரரிடம, “நான் மரணமடையப் போகிறேன்” என அறிவித்து, அவர்களது விசுவாசத்தில் நிலைத்து நிற்கும்படியாக அறிவுறுத்தினார். மரிக்கும் தருவாயிலும் அவர் சமாதானத்தோடிருந்தார். அவரது சகோதரர் தேவனையே சார்ந்து ஜீவிக்கவேண்டும் என்ற ஆவலுடன் இருந்தார் (50:24).

நாம் எப்போது நம்முடைய கடைசி மூச்சை இழப்போம் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் தேவன் நம்மோடு இருப்பார் என்ற உறுதியுடன் இருக்க நமக்கு உதவி செய்யுமாறு அவரிடம் கேட்கலாம். தமது பிதாவின் வீட்டில் நமக்கு ஓர் ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணுவேன் என்று வாக்களித்த இயேசுவின் வார்த்தையை நாம் நம்பி உறுதியுடன் ஜீவிக்கலாம்.

அக்கினி சோதனை

கடந்த குளிர்காலத்தில் கொலராடோவில் (Colorado) இருந்த ஒரு இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கு சென்றிருந்த பொழுது, ஆஸ்பென் மரத்தை (காட்டரசுமரம்) பற்றி சில குறிப்பிடத்தக்க உண்மைகளை நான் கற்றுக்கொண்டேன். ஒரே ஒரு விதைக்கு, மெல்லிய தண்டுடைய ஆஸ்பென் மரத்தோப்பை உருவாக்கக்கூடிய ஆற்றல் இருக்கின்றது. அனைத்து வேர்களும் அந்த ஒருவிதையிலிருந்து கிளம்பும். இந்த வேர் அமைப்புகள் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக நிலத்தடியில் மந்தமான நிலையில், எந்த ஒரு மரத்தையும் உற்பத்தி செய்யாமல் தூங்கிக் கொண்டிருக்க முடியும். வெள்ளம், நெருப்பு அல்லது பனிச்சரிவின் வரவினால் காட்டில் ஏற்படும் வெற்றிடத்திற்காக அவை காத்துக்கொண்டிருக்கும். ஓர் இயற்கைப் பேரழிவினால் நிலம் அகற்றப் பட்டவுடன், மரத்தின் வேர்கள் சூரியனின் வெப்பத்தை உணர ஆரம்பிக்கும். பிறகு அவ்வேர்கள் கன்றுகளை அனுப்பத் தொடங்கும், அவை மரங்களாக வளர ஆரம்பிக்கும்.

பேரழிவின் மூலம் ஆஸ்பென் மரங்களின் வாழ்வில் ஓர் புதிய வளர்ச்சி சாத்தியமானதை நாம் காணலாம். கஷ்டங்கள் மத்தியில் நமது விசுவாசமும் இப்படித்தான் வளர்கின்றது என்று யாக்கோபு கூறுகின்றார். “என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது” (யாக். 1:2-4).

சோதனையைச் சந்திக்கும்போதும், அக்கினியில் நடக்கும்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பது கடினம் தான். ஆனால் இப்படிப்பட்டதான கஷ்டமான சூழ்நிலைகளை தேவன் பயன்படுத்தி, நம்மை முதிர்ந்த மற்றும் முழுமையான நிலைக்கு கொண்டு வருவார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். ஆஸ்பென் மரங்களைப்போல், சோதனைகளை சந்திக்கும் காலம், விசுவாசத்தில் நாம் வளரும் தருணமாக மாறலாம். பிரச்சனைகள் நம் இருதயத்தில் ஓர் வெற்றிடத்தை உண்டு பண்ணும்போது தேவனின் வெளிச்சம் நமக்குள் பிரவேசித்து நம்மை தொடும் தருணங்களாக மாறும்.

நல்ல கனியை கொடுப்பது

விமானத்தின் ஜன்னல் வழியாக நான் பார்த்த காட்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது. வறண்டு கிடந்த இரண்டு மலைகளுக்கு நடுவே ஓர் குறுகிய நாடா போன்று வளர்ந்திருந்த கோதுமை வயல்களையும், பழத்தோட்டங்களையும் கண்டேன். பள்ளதாக்கின் நடுவே ஓர் நதி ஓடியது. ஜீவனைத் தரும் நதியில்லாமல் எந்த கனியும் அங்கு உண்டாகியிருக்க முடியாது.

நிறைவான அறுவடைக்கு எப்படி சுத்தமான தண்ணீர் ஆதாரமாக இருக்கிறதோ, அதைப் போலவே என்னுடைய வாழ்வில் வெளிப்படும் என் வார்த்தை, செயல், மற்றும் அணுகுமுறை என்னும் “கனி”யின் தரமானது என்னுடைய ஆவிக்குரிய போஷாக்கினால்தான் உண்டாகுகிறது. சங்கீதக்காரன் சங்கீதம் 1ல் “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருக்கிற மனிதன்... நீர்க் கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தருபவனாக இருப்பான்” என்று கூறுகிறான். “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” என்று ஆவியானவருடன் சேர்ந்து நடப்பவரை பற்றி பவுல் கலாத்தியர் 5ல் குறிப்பிட்டுள்ளார் (வச. 22-23).

சில நேரங்களில் நான் சூழ்நிலைகளைப் பார்க்கும் விதம் சரியில்லாமலிருக்கிறது அல்லது என் சொற்களிலும், செயல்களிலும் தொடர்ந்து அன்பற்ற தன்மையே வெளிப்படுகிறது. தேவனுடைய பிரசன்னத்திலும், அவருடைய வார்த்தையிலும் நேரத்தை செலவிட தவறியதால்தான், நான் நல்ல கனியைக் கொடுக்கவில்லை என்பதை அறிந்து கொண்டேன். ஆனால் எப்பொழுதெல்லாம் நான் தேவனைச் சார்ந்து, அவருக்குள் வேர் கொண்டு நிலைத்து நின்றேனோ, அப்பொழுதெல்லாம் நல்ல கனியை கொடுத்தேன். அப்பொழுது மற்றவர்களுடன் நான் பழகியபோது, பொறுமையும், இரக்கமும் என் குணாதிசயமாக வெளிப்பட்டது. மேலும் குறைகூறுவதை தவிர்த்து, நன்றியுள்ள நிலைப்பாட்டை தேர்ந்தெடுப்பது எளிதாக இருந்தது.

தம்மையே நம்மிடத்தில் வெளிப்படுத்தியிருக்கும் தேவனே நமது வலிமை, ஞானம், மகிழ்ச்சி, புரிதல் மற்றும் அமைதியின் ஊற்றாக இருக்கின்றார் (சங். 119:28, 98, 111, 144, 165). அவருக்கு நேராக நம்மை நடத்தும் வார்த்தைக்குள் நமது ஆத்துமாவைப் புதைத்துக்கொண்டால், ஆவியானவர் நம் வாழ்வில் செய்யும் வேலை தெளிவாக வெளிப்படும்.

பிம்பத்தைக் கையாளுதல்

வின்ஸ்டன் சர்ச்சிலின் (Winston Churchill) 80வது பிறந்தநாளைக் கொண்டாட, பிரிட்டிஷ் நாடாளுமன்றம் கிரஹாம் சதர்லேண்ட் (Graham Sutherland) என்ற பிரபலமான ஓவியரை அவரது உருவ படத்தை வரைவதற்கு நியமித்தது. “நீங்கள் எப்படி என்னை வரையப்போகிறீர்கள்? அழகிய தேவதூதன் போலவா அல்லது பயங்கரமான நாய் (Bulldog) போலவா?” என்று சர்ச்சில் அவரிடம் கேட்டதாக கூறப்படுகின்றது. அவரை குறித்த இந்த இரண்டு பிரபலமான கருத்துகளும் அவருக்கு பிடித்திருந்தது. எனினும், சதர்லேண்ட், தான் பார்த்தபடி வரையப்போவதாக கூறினார்.

சர்ச்சிலுக்கு தன் உருவப்படம் திருப்தியளிக்கவில்லை. சதர்லாந்தின் உருவப் படத்தில் நாற்காலியில் சரிந்த நிலையில் அமர்ந்திருந்து, தனக்கே உரித்தான முத்திரை கோபத்துடன் காணப்பட்டார் - அதுதான் நிஜமும்கூட, ஆனால் அது நன்றாயிருக்காதல்லவா? ஆதிகாரப்பூர்வமாக அப்படம் திறக்கப்பட்ட பின்பு, சர்ச்சில், அந்த ஓவியத்தை மறைத்து வைத்தார். பின்னர் அது இரகசியமாக அழிக்கப்பட்டது.

சர்ச்சில் போல், நம்மில் பலர் நமக்குள் நம்மை பற்றிய ஓர் பிம்பத்தை வரைந்துள்ளோம். அதைத்தான் பிறரும் காணவேண்டும் என்றும் விரும்புகிறோம். அது வெற்றி, தெய்வபக்தி, அழகு அல்லது வலிமை போன்ற காரியங்களை குறித்ததாக இருக்கலாம். நாம் நமது ‘அசிங்கமாக’ பக்கங்களை மறைக்க மிகவும் சிரத்தை எடுத்துக்கொள்வோம். ஒருவேளை நம்முடைய நிஜமான முகத்தை பிறர் கண்டால் நம்மை நேசிக்காமல் போய் விடுவார் என்ற பயத்தினால்தான் இவ்வாறு செய்கிறோம்.

பாபிலோன் இஸ்ரவேலரை சிறைபிடித்து சென்ற போது, அவர்கள் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றிருப்பதை நாம் காண்கிறோம். அவர்களுடைய பாவத்தின் நிமித்தமாகத் தான் தேவன் அவர்களுடைய எதிரிகள் அவர்களை கைப்பற்ற அனுமதித்தார். ஆயினும் அவர்களை பயப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். ஒவ்வொருவரின் பெயர்களையுமறிந்த தேவன், அவர்களது அவமானகரமான சோதனைகளிலும் கூடவே இருந்தார் (ஏசா. 43:1-2). அவருடைய கரத்தில் அவர்கள் ‘விலைமதிப்பற்ற பொக்கிஷமாகவும்’ (வச. 4), பாதுகாக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர் (வச. 13). அவர்கள் பாவங்களினால் கறைப்பட்டிருந்தபோதிலும், தேவன் அவர்களை நேசித்தார்.

இந்த உண்மை நமக்குள் ஆழமாக வேரூன்றிவிட்டால், பிறர் ஒப்புதலுக்காகவும், அங்கீகாரத்திற்காகவும் நாம் ஏங்கித் தவிக்க மாட்டோம். நாம் யார் என்கிற உண்மையை தேவன் முற்றிலுமாக அறிந்தபொழுதும், நம்மை அளவற்ற அன்பினால் நேசிக்கிறார் (எபே. 3:18).

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கவலைகளை களையெடுக்கவும்

எனது வீட்டு முற்றத்தில் உள்ள ஒரு நடவு இயந்திரத்தின் மூலம் சில விதைகளை விதைத்துவிட்டு, அதன் விளைச்சலைப் பார்க்க காத்திருந்தேன். பத்து முதல் பதினான்கு நாட்களுக்குள் விதைகள் முளைக்கும் என்று அறிந்து, நான் அதற்கு நீர் பாய்ச்சி பராமரித்தேன். விரைவில் சில பச்சை இலைகள் மண்ணிலிருந்து வெளியேறுவதைக் கண்டேன். ஆனால் அவை களைகள் என்று எனது கணவர் என்னிடம் சொன்னபோது நான் பதற்றமடைந்தேன். நான் வளர்க்க முயற்சிக்கும் செடிகளை அவை நெரித்துவிடாதபடி விரைவாக அவைகளை வெளியே இழுக்கும்படி எனது கணவர் என்னை ஊக்குவித்தார்.

நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய ஊடுருவல்காரர்களைக் கையாள்வதன் முக்கியத்துவத்தையும் இயேசு அறிவிக்கிறார். அவர் தனது உவமையின் ஓர் பகுதியை இவ்வாறு விளக்கினார்: விதைப்பவன் ஒருவன் தன்னுடைய விதைகளை விதைத்தபோது, அவற்றுள் “சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது” (மத்தேயு 13:7). முட்களும் களைகளும் தாவரங்களின் வளர்ச்சியை வெகுவாய் பாதிக்கக்கூடியவைகள் (வச. 22). அதுபோல கவலைகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வேதத்தை வாசிப்பதும் ஜெபிப்பதும் நமது விசுவாசத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள். ஆனால் கவலையின் முட்களைக் களையெடுப்பதில் நான் கவனம்செலுத்தவேண்டும் என்பதை உணர்ந்தேன். அவைகள் என்னுள் விதைக்கப்பட்ட நல்ல வசனத்தை நெருக்கி, தவறாய் என்னை திசைதிருப்பக்கூடும். 

வேதத்தில் காணப்படும் ஆவியின் கனிகளானது, அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்றவற்றை உள்ளடக்கியது (கலாத்தியர் 5:22). ஆனால் நாம் அந்த பலனைக் கொடுப்பதற்கு, தேவனுடைய வல்லமையோடு நம்மைத் திசைதிருப்பக்கூடிய அல்லது நம்முடைய கவனத்தை மாற்றக்கூடிய சந்தேகம் போன்ற கவலையின் களைகளை புறம்பாக்கிட வேண்டும். 

 

இணைந்து இயேசுவுக்கு ஊழியம் செய்தல்

மைக்ரோனேசியாவில் உள்ள ஓர் தீவில் சிக்கித்தவிக்கும் இரண்டு ஆண்களுக்கு உதவ மீட்புப் பணியாளர்கள் பிரயாசப்பட்டனர். அவர்களுக்கு சுகாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு அவர்களை விரைந்து காப்பாற்றுவதற்கு குழுவாய் செயல்படவேண்டியது அவசியமாய் தோன்றியது. அவர்களை முதலில் கண்டுபிடித்த விமானி, அவர்களின் அருகாமையிலிருந்த ஆஸ்திரேலிய கப்பலுக்கு செய்தியனுப்பினார். கப்பல், இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியது, அவை உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கின. பின்னர், அமெரிக்க கடலோர காவல்படை அங்கு வந்து ஆட்களை சரிபார்த்து தகவல் அளித்தனர். இறுதியாக, ஓர் மைக்ரோனேசிய ரோந்துப் படகு அவர்களை பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்துவிட்டது.

நாம் இணைந்து செயல்பட்டால் நிறைய சாதிக்க முடியும். பிலிப்பிய விசுவாசிகள் அப்போஸ்தலர் பவுலை ஆதரிக்க தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்தனர். லீதியாளும் அவரது குடும்பத்தினரும் அவரை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றனர் (அப்போஸ்தலர் 16:13-15). கிலேமெந்து, எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் (இவர்கள் ஒத்துப்போகவில்லை) அனைவரும் நற்செய்தியைப் பரப்புவதற்கு அப்போஸ்தலருடன் நேரடியாக வேலை செய்தனர் (பிலிப்பியர் 4:2-3). பின்னர், பவுல் ரோமில் சிறையில் அடைக்கப்பட்டபோது, தேவாலயம் (விசுவாசிகள்) அவரது பராமரிப்புக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தை சேகரித்து, எப்பாபிராத்து மூலம் (வச. 14-18) விநியோகித்தது. பவுல் அப்போஸ்தலரின் ஊழியத்திற்காக பிலிப்பிய திருச்சபை தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருந்திருக்கக் கூடும் (1:19).

இந்த பண்டைய திருச்சபை விசுவாசிகள் ஒன்றாக இணைந்து ஊழியம் செய்ததற்கான எடுத்துக்காட்டுகள் இன்று நம்மை ஊக்குவிக்கும். தேவன் நம்மை வழிநடத்தி, நமக்கு அதிகாரம் கொடுத்ததால், ஜெபிக்கவும் மற்றவர்களுக்கு ஊழியம்செய்யவும், சக விசுவாசிகளுடன் ஒத்துழைக்கவும், நம்மால் இயன்றதைவிட அதிகமாக செய்யமுடிகிறது. “தனித்து வேலை செய்தால் நாம் ஒரு துளி, ஆனால் இணைந்து வேலை செய்தால் நாம் சமுத்திரம்.”

 

தேவனே என் துணையாளர்

என் நண்பர் ராலே தனது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை நோக்கி விரைகிறார்! அவரை நான் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எனக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஆதாராமாக அவர் இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஓர் புத்தகம் எழுதும் பணியை நிறைவுசெய்துவிட்டு, வேறொரு வேலையை செய்வதாக என்னிடம் கூறினார். அவற்றைக் கேட்க எனக்கு ஆர்வமாயிருந்தது ஆனால் ஆச்சரியப்படவில்லை. 

தனது எண்பத்தைந்து வயதில், வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள காலேப் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை. தேவன் இஸ்ரவேலுக்கு வாக்களித்த கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்காக பல சகாப்தங்களாக வனாந்தர வாழ்க்கை மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், தேவபக்தியும் விசுவாசமும் அவரை தாங்கியது. அவர், “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:11) என்று உரைக்கிறார். அவர் எந்த வழிகளில் ஜெயங்கொள்வார்? “கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன்” (வச. 12) என்று காலேப் பதிலளிக்கிறார். 

வயது, வாழ்க்கையின் நிலை அல்லது சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனை முழுமனதோடு பற்றிகொள்ளும் யாவருக்கும் தேவன் உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். நமக்கு உதவும் நம் இரட்சகராகிய இயேசுவில், தேவன் வெளிப்பட்டார். சுவிசேஷங்கள், கிறிஸ்துவிடத்திலிருந்து தேவன்மீது விசுவாசம் வைப்பதை நமக்கு போதிக்கிறது. உதவிக்காக தேவனை அண்டிய யாவருக்கும் தேவன் தன் அக்கறையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எபிரெய நிருப ஆசிரியர் “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபிரெயர் 13:6) என்று அறிக்கையிடுகிறார். இளைஞரோ அல்லது வயதானவரோ, பலவீனமானவரோ அல்லது பலவானோ, கட்டுண்டவரோ அல்லது சுதந்திரவாளியோ, வேகமாக ஓடுகிறவரோ அல்லது முடவனோ, யாராக இருந்தாலும் இன்று அவருடைய உதவியைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுப்பது எது?