எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஷெரிடன் வாய்ஸிகட்டுரைகள்

முத்தத்தோடு திருத்துதல்

ஜார்ஜ் மெக்டொனால்ட் “ஞானமுள்ள ஸ்திரீ” என்ற தனது உவமையில் இரண்டு சிறுமிகளின் கதையைக் கூறுகிறார். அவர்களின் சுயநலம் அவர்கள் உட்பட அனைவருக்கும் துன்பத்தைத் தருகிறது. ஓர் ஞானமுள்ள பெண் அவர்களை மாற்றுவதற்கு தொடர்ச்சியான சோதனைகளை கொடுத்து அவர்களை மீண்டுவரச் செய்கிறாள். அந்த இரண்டு பெண்களும் தங்களுக்கு நேரிட்ட ஒவ்வொரு சோதனையிலும் தோல்வியடைந்து அவமானம் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு ஆளான பிறகு, அவர்களில் ஒருவரான ரோசாமண்ட், தன்னை மாற்றிக்கொள்ள முடியாது என்பதை இறுதியாக உணர்ந்தாள். “உன்னால் எனக்கு உதவ முடியவில்லையா?” என்று அறிவுள்ள பெண்ணிடம் கேட்கிறாள். “இப்போது நீ என்னிடம் கேட்டால் ஒருவேளை என்னால் முடியலாம்” என்று அந்தப் பெண் பதிலளிக்கிறாள். புத்திசாலித்தனமான பெண்ணால் கிடைக்கப்பட்ட தெய்வீக உதவியால், ரோசாமண்ட் மாறத் தொடங்குகிறார். அப்போது அந்தப் பெண் தான் செய்த எல்லாப் பிரச்சனைகளையும் மன்னிப்பாளா என்று கேட்கிறாள். “நான் உன்னை மன்னிக்கவில்லை என்றால், உன்னை தண்டிக்க நான் ஒருபோதும் சிரமப்பட்டிருக்க மாட்டேன்” என்று அந்த பெண் கூறுகிறாள்.

தேவன் நம்மை சிட்சிக்கும் தருணங்கள் உள்ளன. ஏன் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். அவரது சிட்சையானது பழிவாங்குதல் மூலம் இயக்கப்படவில்லை, மாறாக நம் நலனில் தகப்பனின் அக்கறையால் இயக்கப்படுகிறது (எபிரெயர் 12:6). அவருடைய “பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டும்”, “நீதியாகிய சமாதான பலனை” (வச. 10-11) அடையும்பொருட்டும் அவர் விரும்புகிறார். சுயநலம் துன்பத்தைத் தருகிறது, ஆனால் பரிசுத்தம் நம்மை முழுமையாகவும், மகிழ்ச்சியாகவும், அவரைப்போல் “அழகாகவும்” மாற்றுகிறது. தன்னைப் போன்ற சுயநலமிக்க பெண்ணை எப்படி நேசிக்க முடியும் என்று அந்த புத்திசாலியான பெண்ணிடம் ரோசாமண்ட் கேட்கிறாள். அவளை முத்தமிட குனிந்து, “நீ என்னவாக இருக்கப் போகிறாய் என்பதை நான் பார்த்தேன்” என்று இவள் பதிலளித்தாள். தேவனுடைய சிட்சையானது அன்போடும், எதிர்காலத்தில் நாம் யாராக இருக்கப்போகிறோம் என்ற புரிதலோடும் வருகிறது.

ஆனந்த கண்ணீர்

ஓர் நாள் காலையில் வீட்டை விட்டு வெளியேறிய சஞ்சய், தன்னுடைய சில நண்பர்கள் பலூன்களுடன் காத்திருந்ததைக் கண்டார். அவனுடைய நண்பன் அட்வித் முன்பாக வந்து, அவனிடத்தில் ஒரு கவரை கொடுப்பதற்கு முன்பாக, “உன்னுடைய கவிதைகளை ஓர் போட்டிக்கு அனுப்பி வைத்தோம்” என்றான். அந்த கவரின் உள்ளே “முதல் பரிசு” என்று எழுதப்பட்ட ஓர் அட்டை இருந்தது. விரைவில் அனைவரும் சேர்ந்த ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். சஞ்சயின் நண்பர்கள் ஓர் அழகான காரியத்தைச் செய்து, அவருடைய எழுத்துத் திறமையை உறுதிப்படுத்தினர்.

மகிழ்ச்சிக்காக அழுவது ஓர் முரண்பாடான அனுபவம். கண்ணீர் பொதுவாக வலிக்கான பதில், மகிழ்ச்சி அல்ல. மகிழ்ச்சி பொதுவாக சிரிப்புடன் வெளிப்படுத்தப்படுகிறது, கண்ணீரினால் அல்ல. இத்தாலிய உளவியலாளர்கள், நாம் ஆழமாக நேசிக்கப்படுவதை உணரும்போது அல்லது ஓர் முக்கிய இலக்கை அடையும்போது, ஆழ்ந்த தனிப்பட்ட அர்த்தத்தின்போது மகிழ்ச்சியின் கண்ணீர் வரும் என்று குறிப்பிட்டுள்ளனர். மகிழ்ச்சியின் கண்ணீர் நம் வாழ்வின் அர்த்தத்தை சுட்டிக்காட்டுகிறது என்ற முடிவுக்கு இது வழிவகுத்தது.

இயேசு சென்ற இடமெல்லாம் ஆனந்தக் கண்ணீர் பெருகுவதை நான் கற்பனை செய்கிறேன். குருடனாகப் பிறந்தவனின் பெற்றோர் இயேசு அவனைக் குணமாக்கியபோது (யோவான் 9:1-9), அல்லது மரியாள் மற்றும் மார்த்தாள், தங்கள் சகோதரனை மரணத்திலிருந்து எழும்பிய பிறகு (11:38-44) மகிழ்ச்சியில் அழாமல் எப்படி இருந்திருக்கக்கூடும்? தேவனுடைய ஜனம் ஓர் மறுசீரமைக்கப்பட்ட வாழ்க்கைக்கு கொண்டுவரப்படும்போது, “அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழி நடத்துவேன்” (எரேமியா 31:9) என்று தேவன் சொல்லுகிறார்.

மகிழ்ச்சியின் கண்ணீர் நம் வாழ்க்கையின் அர்த்தத்தை நமக்குக் காட்டினால், வரவிருக்கும் அந்த மகிமையான நாளை கற்பனை செய்துபாருங்கள். நம் முகங்களில் கண்ணீர் வழியும்போது, அவருடன் நெருக்கமாக வாழ்வதே வாழ்க்கையின் அர்த்தம் என்பதை சந்தேகமின்றி அன்று நாம் அறிவோம்.

 

ஐந்து நற்காரியங்கள்

தங்களிடம் இருப்பவைகளுக்காக நன்றிசொல்லும் குணம்கொண்டவர்கள் நல்ல தூக்கம், குறைவான நோயின் அறிகுறிகள், மற்றும் அதிக மகிழ்ச்சியை சுதந்தரிக்கின்றனர் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. இந்த நன்மைகள் எல்லாம் ஈர்க்கக்கூடியவைகள். உளவியலாளர்கள் நமது நல்வாழ்வை மேம்படுத்த ஒவ்வொரு வாரமும் நாம் நன்றி செலுத்தவேண்டிய ஐந்து காரியங்களை ஒரு “நன்றி செலுத்தும் குறிப்பில்” எழுதும்படிக்கு பரிந்துரைக்கின்றனர்.

வேதம் நீண்ட காலமாக நன்றியுணர்வு நடைமுறையை ஊக்குவித்துள்ளது. உணவு மற்றும் திருமணம் முதல் (1 தீமோத்தேயு 4:3-5) படைப்பின் அழகுகள் (சங்கீதம் 104) வரை, இதுபோன்ற விஷயங்களை வரமாகப் பார்க்கவும், அவற்றை நமக்கு அருளும் தேவனுக்கு நன்றி செலுத்தவும் வேதம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. சங்கீதம் 107, நன்றியுள்ளவர்களாக இருக்கக்கூடிய ஐந்து விஷயங்களைப் பட்டியலிடுகிறது: வனாந்திரத்திலிருந்து அவர்களை மீட்டதற்காய் (வச. 4-9), சிறையிருப்பிலிருந்து விடுவித்ததற்காய் (வச. 10-16), நோயிலிருந்து குணப்படுத்தியதற்காய் (வச. 18-22), செங்கடலிலிருந்து பாதுகாத்ததற்காய் (வச. 23-32), மற்றும் வறண்ட நிலத்தில் அவர்களை செழிப்பாய் வாழச்செய்ததற்காய் (வச. 33-42). “கர்த்தரைத் துதியுங்கள்” என்று சங்கீதம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. ஏனெனில் இவை அனைத்தும் தேவனுடைய “மாறாத அன்பின்” அடையாளங்கள் (வச. 8, 15, 21, 31).

உங்கள் கைகளில் சிறிய நோட்டு கைவசம் இருக்கிறதா? இப்போது நீங்கள் நன்றி செலுத்த விரும்பும் ஐந்து நல்ல விஷயங்களை ஏன் எழுதக்கூடாது? அவை நீங்கள் இப்போது சாப்பிட்ட உணவாக இருக்கலாம், உங்கள் திருமணமாக இருக்கலாம் அல்லது இஸ்ரேலைப்போல் இன்றுவரை உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய மீட்பு கிரியைகளாய் இருக்கலாம். வெளியே பாடும் பறவைகளுக்கும், உங்கள் சமையலறையிலிருந்து வரும் வாசனைக்கும், உங்கள் நாற்காலியின் வசதிக்கும், அன்புக்குரியவர்களின் முணுமுணுப்புகளுக்கும் நன்றி சொல்லுங்கள். அவைகள் ஒவ்வொன்றும் நமக்கருளப்பட்ட வரங்கள்; தேவனுடைய மாறாத அன்பின் அடையாளங்கள். 

 

சங்கீதம் 72 தலைவர்கள்

 

ஜூலை 2022 இல், பிரிட்டனின் பிரதம மந்திரி நேர்மை தவறிவிட்டதாக பலர் கருதியதால் அவர் பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது (புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் சில மாதங்களுக்குப் பிறகு பதவி விலகினார்!). நாட்டின் சுகாதார அமைச்சர் வருடாந்திர பாராளுமன்ற காலை உணவு பிரார்த்தனையில் கலந்துகொண்டு, பொது வாழ்க்கையில் நேர்மையின் அவசியத்தை உணர்ந்து தன் பதவியை ராஜினாமா செய்த செயலே இந்த நிகழ்வுக்கு காரணமாய் அமைந்தது. அவரைத் தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தபோது, பிரதமரும் தான் வெளியேற வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தார். இது ஓர் அமைதியான பிரார்த்தனை கூட்டத்தில் இருந்து உருவான ஓர் குறிப்பிடத்தக்கத் தருணம்.

கிறிஸ்தவர்கள் தங்கள் அரசியல் தலைவர்களுக்காக ஜெபிக்க உந்தப்படுகிறார்கள் (1 தீமோத்தேயு 2:1-2). அதிகாரிகளின் கடமையையும் அதனை நிறைவேற்றவும் அவர்களுக்கு ஜெபம் தேவை என்பதை சங்கீதம் 72 உணர்த்துகிறது. அவை நீதியும் நேர்மையும் கொண்ட (வச. 1-2), பாதிக்கப்படக்கூடியவர்களைக் காப்பாற்றக்கூடிய (வச. 4), தேவையிலுள்ளவர்களுக்கு உதவிசெய்கிற (வச. 12-13), அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கிற (வச. 14) ஓர் இலட்சிய தலைவனைக் குறித்து விவரிக்கிறது. அவர் அலுவலக நேரத்தில் “வெளியின்மேல் பெய்யும் மழையைப்போல” (வச. 6) நிலத்திற்கு செழிப்பைக் கொண்டுவருகிறார்கள் (வச. 3, 7, 16). மேசியாவால் மட்டுமே அத்தகைய பாத்திரத்தை முழுமையாக நிறைவேற்றமுடியும் (வச. 11). வேறு யாரால் அந்த தரத்தைக் கொடுக்க முடியும்?

ஓர் நாட்டின் ஆரோக்கியம் அதன் அதிகாரிகளின் நேர்மையால் நிர்வகிக்கப்படுகிறது. நம் தேசங்களுக்காக சங்கீதம் 72 குறிப்பிடும் தலைவர்களை தேடுவோம். மேலும் அவர்களுக்காக ஜெபிப்பதன் மூலம் இந்த சங்கீதத்தில் காணப்படும் குணங்களை உருவாக்க அவர்களுக்கு உதவுவோம். 

 

சிருஷ்டிகரை நினை

தனக்கு இறுதிநிலை புற்றுநோய் இருப்பதை ஒப்புக்கொள்ள மறுக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய ஒரு நாவலை சமீபத்தில் படித்தேன். நிக்கோலாவின் கோபமடைந்த நண்பர்கள் அவளை யதார்த்தத்தை எதிர்கொள்ளும்படி வற்புறுத்தும்போது, அவளுடைய மறுப்புக்கான காரணம் வெளிப்படுகிறது. “நான் என் வாழ்க்கையை வீணடித்துவிட்டேன்,” என அவர்களிடம் சொல்கிறாள். திறமையோடும் செல்வத்தோடும் பிறந்தாலும், “நான் என் வாழ்க்கையில் எதையும் செய்யவில்லை. நான் மெத்தனமாக இருந்தேன். நான் எதிலும் ஈடுபாடுகாட்டவில்லை” என்றவள், இப்போது உலகை விட்டு வெளியேறும் நிலை, அவள் அற்பமாக சாதித்துவிட்டதாக உணர்கிறாள், சிந்தித்து பார்க்கவே நிக்கோலாவுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

நான் அதே நேரத்தில் பிரசங்கியை படித்துக் கொண்டிருந்தேன், அதில் இதற்கு மாறுபாடு அப்பட்டமாக இருந்தது. “நீ போகிற பாதாளத்திலே” (9:10) என்ற கல்லறையின் யதார்த்தத்தைத் புறக்கணிக்கும்படி அதன் ஆசிரியர் நம்மை அறிவுறுத்தவில்லை. இதை எதிர்கொள்வது கடினமாக இருந்தாலும் (வ.2), நாம் இப்போது இருக்கும் ஒவ்வொரு கணத்திற்கும் மதிப்பளிக்க இது நம்மை வழிநடத்தும் (வ.4), இஷ்டப்பட்டு நம் உணவிலும், குடும்பத்திலும் மகிழ்விது (வ.7–9), விருப்பத்தோடு வேலை செய்வது (வ.10), சாகசங்கள் மற்றும் ஆபத்துகளை எதிர்கொள்வது (11:1,6), மற்றும் அனைத்தையும் செய்தாலும் தேவனுக்கு முன்பாக நாம் ஒருநாள் பதிலளிப்போம் (வ.9;12:13-14).

நிக்கோலாவின் நண்பர்கள், அவளது உண்மைத்தன்மையும், தாராள மனப்பான்மையும் அவளுடைய வாழ்க்கை வீணாகவில்லை என்பதை நிரூபிப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், “உன் சிருஷ்டிகரை நினை” (12:1)அவர் வழிகளில் நட, இன்று அவரளித்திடும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்து நேசித்து வாழுங்கள் என்ற பிரசங்கியின் அறிவுரையே நம் வாழ்நாளின் முடிவில் இத்தகைய நெருக்கடியிலிருந்து நம் அனைவரையும் காப்பாற்றும். 

சுவா்கள் மீது தேவதூதர்கள்

வாலஸ் மற்றும் மேரி பிரவுன் இருவரும் இங்கிலாந்தின் ஏழ்மையான பகுதிக்கு குடிபெயர்ந்து, மரித்த நிலையில் இருக்கும் ஒரு திருச்சபையின் போதகராக பணியாற்றிட சென்றனர். ஒரு கூட்டத்தினர் தங்கள் திருச்சபைக்குச் சொந்தமான மைதானத்தையும் வீட்டையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது இந்த போதகா் குடும்பத்திற்குத் தெரியாது. இக்கூட்டம் ஜன்னல் வழியாகச் செங்கற்களை வீசி, வேலிகளுக்கு தீ வைத்து, குழந்தைகளை மிரட்டினர். இந்த தாக்குதல் பல மாதங்கள் தொடர்ந்தது; காவல்துறையால் கூட அவர்களைத் தடுக்க முடியவில்லை.

நெகேமியாவின் புத்தகம் இடிபட்ட எருசலேமின் அலங்கத்தை மீண்டும் இஸ்ரவேலர்கள் எவ்வாறு கட்டினர் என்பதை விவரிக்கிறது. அதன் உள்ளூர் வாசிகள் “பிரச்சினையைத் தூண்டி”, யுத்தத்தினால் எதிர்க்கையில் (நெகேமியா 4:8), இஸ்ரவேலர்கள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, ஜாமங்காக்கிறவர்களை வைத்தனா் (வ. 9). இந்த வேதபகுதியின் மூலம் தேவன் வழிநடத்துவதை உணர்ந்த பிரவுன் குடும்பத்தினர் மற்றும் சிலர், அவர்கள் ஆலயத்தை சுற்றி நடந்து, தேவன் தங்களது சுற்று சுவர்களில் தங்களைக் காக்கும்படி தூதர்களை நிறுத்தும்படி ஜெபித்தனர். இதைக் கண்ட அந்த கும்பல் கேலி செய்தது, ஆனால் அடுத்த நாள், அவர்களில் பாதி பேர் மட்டுமே வந்தனர். அதற்கு அடுத்த நாள், ஐந்து பேர் மட்டுமே இருந்தனர்; மறுநாள், யாரும் வரவில்லை. பின்னர் அந்த கும்பல் மக்களை அச்சுறுத்துவதைக் கைவிட்டதாக ஊழியர்கள் கேள்விப்பட்டனர்.

ஜெபத்திற்கான இந்த அற்புதமான பதில், நமது சொந்த பாதுகாப்பிற்கான சூத்திரம் அல்ல. மாறாக ஊழியத்திற்கு எதிர்ப்புகள் வரும், அதை ஜெபமென்னும் ஆயுதத்தால் போரிட வேண்டும் என்பதையே நினைவூட்டுகிறது. நெகேமியா இஸ்ரவேலர்களுக்கு சொன்னது “மகத்துவமும் பயங்கரமுமுள்ள கர்த்தரை நினைவுகூருங்கள்” (வ. 14). கொடுமை நிறைந்த இருதயங்களை கூட தேவன் விடுவிப்பார்.

சுவா்கள் மீது தேவதூதர்கள்

வாலஸ் மற்றும் மேரி பிரவுன் இருவரும் இங்கிலாந்தின் ஏழ்மையான பகுதிக்கு குடிபெயர்ந்து, மரித்த நிலையில் இருக்கும் ஒரு திருச்சபையின் போதகராக பணியாற்றிட சென்றனர். ஒரு கூட்டத்தினர் தங்கள் திருச்சபைக்குச் சொந்தமான மைதானத்தையும் வீட்டையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது இந்த போதகா் குடும்பத்திற்குத் தெரியாது. இக்கூட்டம் ஜன்னல் வழியாகச் செங்கற்களை வீசி, வேலிகளுக்கு தீ வைத்து, குழந்தைகளை மிரட்டினர். இந்த தாக்குதல் பல மாதங்கள் தொடர்ந்தது; காவல்துறையால் கூட அவர்களைத் தடுக்க முடியவில்லை.

நெகேமியாவின் புத்தகம் இடிபட்ட எருசலேமின் அலங்கத்தை மீண்டும் இஸ்ரவேலர்கள் எவ்வாறு கட்டினர் என்பதை விவரிக்கிறது. அதன் உள்ளூர் வாசிகள் “பிரச்சினையைத் தூண்டி”, யுத்தத்தினால் எதிர்க்கையில் (நெகேமியா 4:8), இஸ்ரவேலர்கள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, ஜாமங்காக்கிறவர்களை வைத்தனா் (வ. 9). இந்த வேதபகுதியின் மூலம் தேவன் வழிநடத்துவதை உணர்ந்த பிரவுன் குடும்பத்தினர் மற்றும் சிலர், அவர்கள் ஆலயத்தை சுற்றி நடந்து, தேவன் தங்களது சுற்று சுவர்களில் தங்களைக் காக்கும்படி தூதர்களை நிறுத்தும்படி ஜெபித்தனர். இதைக் கண்ட அந்த கும்பல் கேலி செய்தது, ஆனால் அடுத்த நாள், அவர்களில் பாதி பேர் மட்டுமே வந்தனர். அதற்கு அடுத்த நாள், ஐந்து பேர் மட்டுமே இருந்தனர்; மறுநாள், யாரும் வரவில்லை. பின்னர் அந்த கும்பல் மக்களை அச்சுறுத்துவதைக் கைவிட்டதாக ஊழியர்கள் கேள்விப்பட்டனர்.

ஜெபத்திற்கான இந்த அற்புதமான பதில், நமது சொந்த பாதுகாப்பிற்கான சூத்திரம் அல்ல. மாறாக ஊழியத்திற்கு எதிர்ப்புகள் வரும், அதை ஜெபமென்னும் ஆயுதத்தால் போரிட வேண்டும் என்பதையே நினைவூட்டுகிறது. நெகேமியா இஸ்ரவேலர்களுக்கு சொன்னது “மகத்துவமும் பயங்கரமுமுள்ள கர்த்தரை நினைவுகூருங்கள்” (வ. 14). கொடுமை நிறைந்த இருதயங்களை கூட தேவன் விடுவிப்பார்.

 கிறிஸ்துவுடன் ஆழமான நட்பு

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள க்ரைஸ்ட் கல்லூரியின் சிற்றாலயத்தில் உள்ள நினைவுச்சின்னம், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த “இணைபிரியா நண்பர்களாகிய" ஜான் ஃபின்ச் மற்றும் தாமஸ் பெயின்ஸ் என்ற மருத்துவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இருவரும் மருத்துவ ஆராய்ச்சியில் ஒன்றாக பணியாற்றியவர்கள் மற்றும் அரசாங்க பயணங்களில் ஒன்றாக பயணித்தவர்கள். 1680 இல் பெயின்ஸ் இறந்தபோது, ஃபின்ச் 36 காலமாக “ஈருடல் ஓருயிராக” இருந்த அவர்களின் நட்புக்காக வருந்தினார். அவர்களுடைய நட்பில் அன்பு, உண்மை, அர்ப்பணிப்பு இருந்தது. 

இப்படிப்பட்ட நெருக்கமான நட்பு தாவீது ராஜாவுக்கும் யோனத்தானுக்கும் இருந்தது. அவர்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஒருவரையொருவர் நேசித்தனர் (1 சாமுவேல் 20:41), மேலும் ஒருவருக்கொருவர் உடன்படிக்கையும் செய்தனர் (வ.8–17, 42). அவர்களின் நட்பில் உண்மையாக இருந்தனர் (1 சாமுவேல் 19:1–2; 20:13). தாவீது ராஜாவாவதற்காக, யோனத்தான் தனது உரிமையைத் தியாகம் செய்தார் (20:30-31; பார்க்க 23:15-18). யோனத்தான் மரித்தபோது, அவன் தன்மேல் வைத்திருந்த அன்பு " ஸ்தீரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது" என்று தாவீது புலம்பினார் (2 சாமுவேல் 1:26). 

நட்பைத் திருமணத்துடன் ஒப்பிடுவது இன்று நமக்குக் கடினமாயிருக்கலாம், ஆனால் ஃபின்ச் மற்றும் பெயின்ஸ், தாவீது மற்றும் யோனத்தான் போன்ற நட்புகள், நம் சொந்த வாழ்வில் நட்பை அதிக ஆழப்படுத்த ஊக்குவிக்கிறது. இயேசுவும் தம்முடைய மார்பில் சாய தமது நண்பர்களை ஏற்றுக்கொண்டார் (யோவான் 13:23-25). அவர் காட்டும் உண்மை, நம்பகத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பு நாம் ஒன்றாக உருவாக்கும் ஆழமான நட்பின் அடித்தளமாக இருக்கட்டும். 

கிறிஸ்மஸ_க்கு அடுத்த நாள்

கிறிஸ்துமஸ் தினத்தின் மகிழ்ச்சிக்குப் பிறகு, அடுத்த நாள் கொஞ்சம் மந்தமாவதாக உணர்ந்தேன். நாங்கள் இரவு முழுவதும் நண்பர்களுடன் தங்கியிருந்தோம். ஆகையால் சரியாக தூங்கவில்லை. பின்னர் நாங்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்லும் போது எங்கள் கார் பழுதடைந்தது. பின்னர் பனி பெய்யத் தொடங்கியது. நாங்கள் காரை அங்கேயே விட்டுவிட்டு, பனிமூட்டமான உணர்வில் டாக்ஸியில் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். 
கிறிஸ்துமஸ் தினத்திற்குப் பிறகு மந்தமான உணர்வை பெற்றுக்கொண்டவர்கள் நாங்கள் மட்டுமல்ல. அளவுக்கு அதிகமாக உண்பதாலோ, வானொலியில் இருந்து பாடல்கள் திடீரென காணாமல் போனதாலோ, போன வாரம் வாங்கிய பரிசுப் பொருட்கள் பாதி விலையில் விற்பனையாகிவிட்டதாலோ, கிறிஸ்துமஸ் தினத்தின் மாயாஜால மகிழ்ச்சியானது விரைவில் கலைந்துவிடும்! 
இயேசு பிறந்த நாளின் அடுத்த தினத்தைப் பற்றி வேதாகமம் ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால் பெத்லகேமுக்கு நடைபயணமாய் வந்து, தங்குமிடமில்லாமல் அலைந்து, பிள்ளைபேறு பெற்றெடுத்த பிரசவ வலியோடு மரியாள் இருக்க, கூடியிருந்த மேய்ப்பர்கள் சொல்லாமல் கலைந்து சென்றது (லூக்கா 2:4-18) போன்ற தொடர் சம்பவங்களினால் மரியாளும் யோசேப்பும் சோர்ந்துபோயிருந்திருக்கக்கூடும் என்று நாம் கற்பனை செய்து பார்க்கலாம். ஆயினும், மரியாள் தனது பிறந்த குழந்தையைத் தொட்டிலில் வைத்து, தேவ தூதன் அவளை சந்தித்த சம்பவம் (1:30-33), எலிசபத்தின் ஆசீர்வாதம் (வச. 42-45), மற்றும் அவளுடைய குழந்தையின் மகிமையான எதிர்காலம் என்று அவைகளைக் குறித்தே யோசித்துக்கொண்டிருக்கக்கூடும் என்று நான் கற்பனை செய்கிறேன். மரியாள் தன் இருதயத்தில் இதுபோன்ற விஷயங்களை “சிந்தனைபண்ணினாள்” (2:19) என்று வேதம் சொல்கிறது. அது அவளுடைய அன்றைய மனச்சோர்வையும் உடல் வலியையும் குறைத்திருக்க வேண்டும். 
ஒருவேளை நம்முடைய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் அடுத்த நாள், வெறுமனே கழிகிற நாளாய் இருக்கக்கூடும். ஆனால் அந்த நாட்களில் நாமும் மரியாளைப் போலவே, நம் உலகத்திற்கு வந்தவரைப் பற்றி சிந்திப்பதன் மூலம், அவருடைய பிரசன்னத்தால் நிறைவோம்.  

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் தலைசிறந்த படைப்பு

மூளை இயங்கும் முறையைப் புரிந்துகொள்வதில் நரம்பணுவியல் பெரும் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அதைப் புரிந்துகொள்வதற்கான ஆரம்பக் கட்டத்தில்தான் இன்னும் இருப்பதாக விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள். மூளையின் கட்டமைப்பு, அதன் செயல்பாட்டின் சில அம்சங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பதிலளிக்கும் பகுதிகள், நமது உணர்வுகளைச் செயல்படுத்துதல், இயக்கங்களை உருவாக்குதல் மற்றும் உணர்ச்சிகளைக் கொண்டிருக்கும் பகுதிகள் ஆகியவற்றை அவர்கள் புரிந்துள்ளார்கள். ஆனால் நடத்தை, கருத்து மற்றும் நினைவாற்றலுக்கான தொடர்புகள் அனைத்தும் , அவர்களால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. வியப்பூட்டும் வண்ணமாக , தேவனால் உருவாக்கப்பட்ட தலைசிறந்த படைப்பான மனிதனைப் பற்றி புரிந்து கொள்வதே கடினமாக இருக்கிறது.

மனித உடலின் அதிசயங்களை, உருவக நடையில், தாவீது கொண்டாடினார், “என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்” (சங்கீதம் 139:13) என்பது இயற்கைமுறை மீதிருக்கும் தேவனின் சர்வ ஆளுகைக்குச் சான்றாகும். அவர் , “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள்” (வச. 14) என்று எழுதினார். முன்னோர்கள் தாயின் வயிற்றில் ஒரு குழந்தையின் வளர்ச்சியைப் பெரிய மர்மமாகக் கருதினர் (பிரசங்கி 11:5 ஐப் பார்க்கவும்). மனித உடலின் வியக்கத்தக்கப் புதிர்களைப் பற்றிய குறைந்த அறிவே இருந்தாலும், தாவீது தேவனின் அற்புதமான கிரியை மற்றும் பிரசன்னத்தை பிரமிப்புடனும் ஆச்சரியத்துடனும் வியந்தார் (சங்கீதம் 139:17-18).

மனித உடலின் வியப்பான, அற்புதமான புதிர்கள், நமது மகாதேவனின் வல்லமை மற்றும் சர்வ ஆளுகையைப் பிரதிபலிக்கிறது. துதிப்பது , வியப்பது மற்றும் பிரமிப்பது மட்டுமே நம்மால் செய்யக்கூடியது.

 

மீட்டெடுக்கும் பயிற்சி

நீங்கள் எப்போதாவது ஒரு கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, அதை இடையில் நிறுத்திவிட்டு, அது எப்போது நிகழ்ந்தது அல்லது யார் என்று குழம்பி யோசித்திருக்கிறீர்களா? வயதாவதினால் நினைவாற்றல் மங்கிவிடும் என்று நாம் அடிக்கடி நம்புகிறோம். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் அந்த கருத்தை ஆதரிக்கவில்லை. உண்மையில், அவை நமது நினைவாற்றல் பிரச்சனையல்ல என்பதைக் குறிப்பிடுகின்றன. அந்த நினைவுகளை மீட்டெடுப்பது நமது திறமை என்று கருதுகின்றன. நினைவுகளை சில வழக்கமான ஒத்திகை இல்லாமல் அணுகுவது கடினமாகிவிடும்.

அந்த மீட்டெடுப்பு திறனை மேம்படுத்துவதற்கான வழிகளில் ஒன்று, வழக்கமான திட்டமிடப்பட்ட செயல்கள் அல்லது குறிப்பிட்ட நினைவகத்தை நினைவுபடுத்தும் அனுபவங்கள். நமது சிருஷ்டிக்கர்த்தர் இதை அறிந்திருந்தார். எனவே அவர் இஸ்ரவேல் புத்திரருக்கு வாரத்தில் ஒரு நாளை தேவனை ஆராதிக்கும் ஓய்வுநாளாக ஏற்படுத்தியிருந்தார். அத்தகைய ஓய்வினிமித்தம் நாம் மனப் பயிற்சிக்கான வாய்ப்பைப் பெறுகிறோம். “கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி(னார்)” (யாத்திராகமம் 20:11). இது நம்மால் உண்டானது அல்ல; தேவனுடைய திட்டம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.

நம் வாழ்க்கையின் அவசரத்தில், தேவன் நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் என்ன செய்திருக்கிறார் என்ற நினைவுகளில் சில நேரங்களில் நம் பிடியை நாம் இழக்க நேரிடுகிறது. நம் வாழ்க்கையை யார் உன்னிப்பாகக் கண்காணிக்கிறார்கள் என்பதையும், நாம் அதிகமாகவும் தனிமையாகவும் உணரும்போது அவர் நம்மோடு இருப்பதாக வாக்களித்ததை நாம் மறந்துவிடுகிறோம். நம்முடைய வழக்கமான வாழ்க்கைப் பயணத்திலிருந்து ஒரு நாளை ஓய்வுநாளாய் ஆசரிப்பதின் மூலம் நாம் தேவனையும் “அவர் செய்த சகல உபகாரங்களையும்” (சங்கீதம் 103:2) நினைவுகூர வலியுறுத்தப்படுகிறோம். 

 

செப்னாவின் கல்லறை

தமிழ் அரசியல்வாதியான கருணாநிதி, சென்னை மெரினா கடற்கரையில் தனது ஆசான் சி.என்.அண்ணாதுரையின் அருகில் அடக்கம் செய்யப்பட விரும்பினார். அவரது பகுத்தறிவு நம்பிக்கை காரணமாக, எந்த மதச் சடங்குகளும் செய்யப்படுவதை அவர் விரும்பவில்லை.

ஒரு பெரிய நினைவுச்சின்னம் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் உண்டு என்றாலும் அவரது நம்பிக்கையானது அவரை மரணம் என்ற யதார்த்தத்திலிருந்து விலக்கி விடவில்லை என்பதுதான் உண்மை. நாம் இறந்தாலும் வாழ்க்கை கடந்து செல்கிறது என்பதே கசப்பான உண்மை.

யூதாவின் வரலாற்றில் ஒரு இக்கட்டான நேரத்தில், “அரமனை விசாரிப்புக்காரனான” செப்னா, மரணத்திற்குப் பிறகு தனக்கான மரபை நிலைநாட்ட, தனக்கென ஒரு கல்லறையை ஏற்படுத்தினான். ஆனால் தேவன், அவனுடைய தீர்க்கதரிசி ஏசாயா மூலம், “உயர்ந்த ஸ்தலத்திலே தன் கல்லறையை வெட்டி, கன்மலையிலே தனக்கு வாசஸ்தலத்தைத் தோண்டுகிறவனைப்போல, நீ உனக்கு இங்கே கல்லறையை வெட்டும்படிக்கு உனக்கு இங்கே என்ன இருக்கிறது? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்?” (ஏசாயா 22:16) என்றார். மேலும் தீர்க்கதரிசி, “அவர் உன்னை உருண்டையைப்போல அகலமும் விசாலமுமான தேசத்திலே சுழற்றி எறிந்துவிடுவார்; அங்கே நீ சாவாய்” (வ.18) என்றார்.

செப்னா தவறாகப் புரிந்துகொண்டான். நாம் எங்கே புதைக்கப்பட்டோம் என்பதல்ல, நாம் யாரைச் சேவிக்கிறோம் என்பதே முக்கியம். இயேசுவைச் சேவிப்பவர்களுக்கு இந்த அளவிட முடியாத ஆறுதல் உண்டு: “கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள்.. பாக்கியவான்கள்” (வெளிப்படுத்தின விசேஷம் 14:13). நமது “மரணத்தை” ஒருபோதும் அலட்சியப்படுத்தாத தேவனை நாம் சேவிக்கிறோம். அவர் நமது வருகையை எதிர்பார்த்து நம்மை தமது வீட்டிற்கு வரவேற்கிறார்!