திருப்தியை பற்றிக்கொள்ளுதல்
ஒரு மனநல மருத்துவரின் ஆலோசனை கட்டுரையில், பிரெண்டா என்ற வாசகருக்கு அவர் பதிலளிக்கையில், அவள் தனது இலட்சியத்தை அடைய மேற்கொண்ட முயற்சிகள் அவளை அதிருப்தி அடையச் செய்ததாக புலம்பினாள். அதற்கான மருத்துவரின் பதில் அறிவுமழுங்கியதாக இருந்தது. மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்கப் படைக்கப்படவில்லை, "உயிரோடிருந்து இனப்பெருக்கம் செய்வதற்கும் மட்டுமே" என்று அவர் கூறினார். திருப்தி எனும் கைக்கெட்டாத பட்டாம்பூச்சியைத் துரத்துவது நமது சாபம் என்றார். அதை எப்போதும் பிடிக்க முடியாது என்று அவர் மேலும் கூறினார்.
மனநல மருத்துவரின் வார்த்தைகளைப் படித்து பிரெண்டா எப்படி உணர்ந்திருப்பாள்? அதற்குப் பதிலாகச் சங்கீதம் 131ஐப் படித்தால் அவள் எவ்வளவு வித்தியாசமாக உணருவாள்? என்று யோசித்தேன். அதன் வார்த்தைகளில், திருப்தியை எவ்வாறு கண்டறிவது என்பதை நமக்கு தாவீது காட்டுகிறார். அவர் மனத்தாழ்மையோடு ஆரம்பிக்கிறார், தனது ராஜரீகமான நோக்கங்களை ஒதுக்கி வைக்கிறார். மேலும் எது முக்கியமெனும் வாழ்க்கையின் ஆழமான கேள்விகளோடு போராடிக்கொண்டிருந்த அவர், அவற்றையும் ஒதுக்கி வைக்கிறார் (வச. 1). பின்னர் அவர் தேவனுக்கு முன்பாக தனது இதயத்தை அமரப்பண்ணினார் (வச. 2), எதிர்காலத்தை அவரது கைகளில் ஒப்படைக்கிறார் (வச. 3). அதின் விளைவு அற்புதமானது: "ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல இருக்கிறது" என்று அவர் கூறுகிறார். அதாவது "நான் திருப்தியாக இருக்கிறேன்" (வச. 2).
இதுபோன்ற நமது நொறுங்கிய உலகில், திருப்தி என்பது சில நேரங்களில் எட்டாக் கனியாக இருக்கும். பிலிப்பியர் 4:11-13 இல், அப்போஸ்தலன் பவுல் மனநிறைவைக் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று என்று கூறினார். ஆனால் நாம் "உயிர்வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும்" மட்டுமே படைக்கப்பட்டுள்ளோம் என்று நம்பினால், மனநிறைவு நிச்சயமாகப் பிடிக்க எட்டாக் கனியாகவே இருக்கும். தாவீது நமக்கு மற்றொரு வழியைக் காட்டுகிறார்: தேவனின் சமுகத்தில் அமைதியாக இளைப்பாறுதலின் மூலம் மனநிறைவைப் பெறுவதே அவ்வழி.
தாழ்மை தினம்
மேலைநாடுகளின் விசித்திரமான விடுமுறை தினங்கள் சற்று வேடிக்கையாக இருக்கும். பிப்ரவரியில் மட்டும் ஸ்டிக்கி ரொட்டி தினம், வாள் விழுங்குவோர் தினம், நாய் பிஸ்கட் பாராட்டு தினம் கூட! இன்றைக்கு, தாழ்மையாய் இருத்தல் தினம் என்று பெயரிடப்பட்டுள்ளது. உலகளவில் நல்லொழுக்கமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பணிவு, நிச்சயமாகக் கொண்டாடத் தகுந்தது. ஆனால் சுவாரஸ்யமாக, அவ்வாறு எப்போதும் இருந்ததில்லை.
பண்டைய உலகில் தாழ்மை ஒரு பலவீனமாகக் கருதப்பட்டது, அது நற்பண்பு அல்ல, அதற்கு மாறாகக் கௌரவமே மதிப்பிற்குரியதாய் இருந்தது. ஒருவரின் சாதனைகளைப் பற்றி பெருமை பேசுவது வழக்கமாய் இருக்க, நீங்கள் உங்கள் நிலையை உயர்த்த வேண்டுமேயன்றி அதை ஒருபோதும் குறைக்கக் கூடாது. தாழ்மை என்பது எசமானுக்கு வேலைக்காரன் போன்ற பணிவு என்று பொருள். ஆனால், இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது இவை அனைத்தும் மாறிவிட்டதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அங்கு, "தேவனுடைய ரூபமாயிருந்தவர்" , "அடிமையின் ரூபமெடுத்து" தனது தெய்வீக அந்தஸ்தை விட்டுக்கொடுத்து, மற்றவர்களுக்காக இறப்பதற்குத் தன்னைத் தாழ்த்தினார் (பிலிப்பியர் 2:6-8). அத்தகைய விந்தையான செயல், தாழ்மை என்பதற்கு புதியதோர் அர்த்தம் கொடுத்தது . முதல் நூற்றாண்டின் இறுதியில், கிறிஸ்து செய்தவற்றின் விளைவாக உலகப்பிரகாரமான எழுத்தாளர்கள் கூட மனத்தாழ்மையை ஒரு நற்பண்பு என்று அழைத்தனர்.
ஒவ்வொரு முறையும், ஒருவர் இன்று தாழ்மையுடன் இருப்பதற்காகப் பாராட்டப்படும்போது, நற்செய்தி மறைமுகமாகப் பிரசங்கிக்கப்படுகிறது. இயேசு இல்லாமல், தாழ்மை நன்மையான ஒன்றாக இருந்திருக்காது. அல்லது "தாழ்மையுடன் இருத்தல்" என்ற நாளும் இருந்திருக்காது. கிறிஸ்து நமக்காகத் தம்முடைய அந்தஸ்தைத் துறந்து, வரலாற்றின் மூலம் தேவனின் தாழ்மையான தன்மையை வெளிப்படுத்தினார்.
எழுப்புதல் வருகிறது
அருகுன் என்பது மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு சிறிய பட்டணம். அதன் பழங்குடி மக்கள் ஏழு வகையான குலங்களைச் சேர்ந்தவர்கள். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அருகுனுக்குச் சுவிசேஷம் அறிவிக்கப்படுகையில், அங்குப் பழிக்குப் பழிவாங்கும் நடைமுறை இருந்தது. 2015 ஆம் ஆண்டில் இனச்சண்டைகள் அதிகரித்தன, மேலும் ஒரு கொலை நடந்தபோது, குற்றவாளியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைப் பதிலுக்குக் கொலை செய்யப்பட வேண்டியிருந்தது.
ஆனால் 2016 இன் ஆரம்பத்தில் வியத்தகு காரியம் ஒன்று நடந்தது. அருகுன் மக்கள் ஜெபத்தில் தேவனைத் தேடத் தொடங்கினர். மனந்திரும்புதல், பின்னர் வெகுஜன ஞானஸ்நானம், பின்னர் எழுப்புதல் நகரம் முழுவதும் பரவத் தொடங்கியது. மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் தெருக்களில் நடனமாடினர். பழிவாங்குவதற்குப் பதிலாகக் கொலையான நபரின் குடும்பம், கொலைசெய்த குலத்தை மன்னித்தது. விரைவில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 1,000 பேர் தேவாலயத்திலிருந்தனர். அது வெறும் 1,300 பேர் மட்டுமே உள்ள ஒரு பட்டணம்!
எசேக்கியாவின் நாட்களில் ஜனங்கள் மகிழ்ச்சியுடன் தேவனிடம் திரும்பியதைப் போல (2 நாளாகமம் 30), ஆயிரக்கணக்கானவர்கள் மனந்திரும்பிய பெந்தெகொஸ்தே நாளைப்போல (அப்போஸ்தலர் 2:38-47) பல எழுப்புதல்களை வேதத்தில் காண்கிறோம். எழுப்புதல் என்பது தேவனின் செயலாக இருந்தாலும், அவர் திட்டமிட்ட காலத்தில் நிறைவேற்றப்பட்டாலும், அதற்கு முந்தியதாக ஜெபம் இருந்ததை வரலாறு காட்டுகிறது. “என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்” (2 நாளாகமம் 7:14) என்று தேவன் சாலொமோனிடம் கூறினார்.
அருகுன் மக்கள் கண்டுகொண்டது போல், எழுப்புதல் ஒரு நகரத்திற்கு மகிழ்ச்சியையும் நல்லிணக்கத்தையும் தருகிறது. நமது சொந்த நகரங்களுக்கு இத்தகைய மாற்றம் எவ்வளவு தேவை! தகப்பனே, எங்களுக்கும் எழுப்புதல் அருள்வீராக.
விசித்திரமாய் உண்டாக்கப்பட்டுள்ளோம்
நான் சமீபத்தில் ஆச்சரியமான ஒன்றை கண்டுபிடித்தேன். என்னுடைய வீட்டின் அருகாமையில் மரங்களுக்கு இடையே அமைந்திருந்த அழுக்கான ஒரு பாதையின் வழியாய் சென்றபோது, அங்கே ஒரு விளையாட்டு மைதானம் ஒளிந்திருப்பதைக் கண்டுபிடித்தேன். குச்சிகளால் ஆன ஏணி, மரக்கிளைகளில் தொங்கவிடப்பட்டிருந்த ஊஞ்சல்கள், மேலும் கொம்புகளுக்கிடையே தொங்குபாலம் போன்றவைகள் இடம்பெற்றிருந்தது. யாரோ ஒருவர், இந்த பழைய கயிறுகளையும் கொம்புகளையும் விசித்திரமான ஒரு படைப்பாய் மாற்றியிருந்தார்.
சுவிஸ் மருத்துவரான பால் டூர்னியர், நாம் தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டவர்களாதலால் (ஆதியாகமம் 1:26-27) விசித்திரங்களை கண்டுபிடிக்கிறவர்களாய் படைக்கப்பட்டிருக்கிறோம் என்கிறார். தேவன் உலகத்தை விசித்திரமாய் உண்டாக்கியபடியால் (வச. 1-25), மனிதர்களை நன்மை தீமை அறியத்தக்கவர்களாய் உண்டாக்கியபடியால் (3:5-6), “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்(புங்கள்)” (ஆதியாகமம் 1:28) என்று நமக்கு கட்டளையிட்டபடியாலும், நாம் இந்த உலகத்தை கனிகளோடு ஆண்டுகொள்ளும்போது ஆச்சரியங்களை கண்டுபிடிக்கிறவர்களாயும், புதிய காரியங்களை தோற்றுவிக்கிறவர்களாயும் இருக்கிறோம். அந்த கண்டுபிடிப்புகள் சிறியதோ அல்லது பெரியதோ, அது மற்றவர்களுக்கு பிரயோஜனப்படும் விதத்தில் இருக்கவேண்டும். அந்த விளையாட்டு மைதானத்தை உண்டாக்கியவர்கள், அதை பயன்படுத்தும் மக்களுடைய மகிழ்ச்சியினால் திருப்தியடைவார்கள் என்று நான் நம்புகிறேன்.
ஒரு புதிய இசையை தோற்றுவிப்பதாகட்டும், சுவிசேஷ ஊழியத்திற்கான புதிய யுக்தியாயிருக்கட்டும், உடைந்துபோன திருமண வாழ்வை மீண்டும் புதிதாய் துவக்குவதாய் இருக்கட்டும், இதுபோன்ற அனைத்துவிதமான விசித்திரங்களும் நம்மை ஊக்கப்படுத்தக்கூடியவைகள். எந்த புதிய காரியத்தை செய்வதற்கு நீங்கள் தற்போது தூண்டப்படுகிறீர்கள்? தேவன் தற்போது உங்களை புதிய விசித்திரத்திற்கு நேராய் வழிநடத்திக்கொண்டிருக்கலாம்.
நீங்கள் யார்?
பத்தாண்டுகளாகப் பிள்ளை இல்லாத நானும் எனது மனைவியும், 2011 ஆம் ஆண்டு புது நாட்டில் புதிய வாழ்வைத் துவங்கினோம். இந்த குடியேற்றம் உற்சாகமளித்தாலும், நான் அதிகம் நேசித்த ஒளிபரப்புப் பணியை விடவேண்டியிருந்தது. குழப்பமடைந்த நான், என் நண்பனிடம் யோசனை கேட்டேன்."என் அழைப்பு என்னவென்றே எனக்குத் தெரியவில்லை" என்று அவனிடம் மனச்சோர்வோடு பேசினேன்.
"நீ இங்கே ஒளிபரப்பு செய்யமாட்டாயா?" என்று கேட்ட அவனிடம். இல்லையென்றேன். "உன் திருமண வாழ்க்கை எப்படியுள்ளது" என்று அவன் கேட்க, எங்கள் பேச்சு சற்று திசைமாறினாலும்; நானும் என் மனைவியும் நன்றாக இருப்பதாகவே அவனிடம் கூறினேன். நாங்கள் இருவருமே மனமுடைந்து இருந்தோம், ஆனால் இந்த சோதனை எங்களை இன்னும் நெருக்கமாக்கியிருந்தது.
"சுவிசேஷத்தின் அஸ்திபாரமே அர்ப்பணிப்புதான்" என்று, அவன் புன்னகைத்தான். "உன்னுடைய இந்த அர்ப்பணிப்பான திருமண வாழ்க்கை இந்த உலகிற்கு எவ்வளவாய் தேவை! நீ செய்வதைக் காட்டிலும், நீ வாழும் விதமே இந்த உலகத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நீ இன்னும் புரிந்துகொள்ளவில்லை." என்றான்.
கடினமான பணிச்சூழல் தீமோத்தேயுவை மனஞ்சோர செய்கையில், அப்போஸ்தலன் பவுல் அவனுக்கு எந்த இலக்கையும் தரவில்லை. மாறாக தீமோத்தேயுவை பக்தியுள்ள ஒரு வாழ்வு வாழவும், அவனுடைய பேச்சு, நடக்கை, அன்பு, விசுவாசம் மற்றும் கற்பின் மூலம் ஒரு முன்மாதிரியைக் காட்டவும் உற்சாகப்படுத்துகிறார் (4:12–13,15). அவருடைய விசுவாச வாழ்வினால் பிறர்வாழ்விலும் தாக்கம் ஏற்படுத்தலாம்.
நம்முடைய பணிகளின் வெற்றியைக் கொண்டு நமது வாழ்வை மதிப்பீடு செய்வது சுலபம், ஆனால், நமது குணாதிசயமே முக்கியம். நான் அதைத்தான் மறந்துபோனேன். உண்மையான வார்த்தை, கருணையான செயல், அர்ப்பணிப்பான திருமண வாழ்க்கையும்கூட பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும். ஏனெனில் இவைகள் மூலம் தேவனுக்கே உரித்தான நன்மைகள் இவ்வுலகை அசைக்கின்றன.
என்னோடு நட!
சில ஆண்டுகளுக்கு முன்பு, “இயேசு என்னுடன் நடக்கிறார்" என்ற பாடலை நற்செய்தி பாடகர் ஒருவர், பாடகர் குழுவுடன் பாடி, பிரபலமாக்கினார். அந்த பாடலின் வரிகளுக்குப் பின்னால் ஒரு அழகான கதை உள்ளது.
ஜாஸ் இசைக்கலைஞர் கர்டிஸ் லுண்டி, அவர் போதை மருந்து மறுவாழ்வு சிகிச்சையில் இணையும்போது, ஒரு பாடகர் குழுவைத் துவங்கினார். தன்னோடு சிகிச்சை பெற்ற சக நோயாளிகளை ஒன்றாக இணைத்து, அவர்களுக்கு ஒரு பழைய பாடலின் மீது இருக்கும் தாகத்தை அடிப்படையாய் வைத்து இந்த புதிய பாடலை அவர்களுக்காக இயற்றினார். “நாங்கள் எங்கள் வாழ்க்கைக்காய் பாடினோம்; இந்த போதைப் பழக்கத்திலிருந்து எங்களை முற்றிலும் விடுவிக்கும்படியாய் கிறிஸ்துவிடம் பாடினோம்” என்று அக்குழுவினர் ஒரு உறுப்பினர் ஒருவர் சொன்னார். மற்றொருவர் அந்த பாடலைப் பாடியபோது, அவளுடைய தீராத வலி தணிந்ததை சாட்சியிட்டார். அந்த பாடகர் குழு, தாளில் எழுதப்பட்டிருந்த வெறும் வார்த்தைகளை உச்சரிக்கவில்லை; மாறாக, மீட்கப்பட்ட வாழ்க்கைக்கான ஜெபத்தை ஏறெடுத்தனர்.
இன்றைய வேத வாசிப்பு அவர்களின் அனுபவத்தை நன்றாக விவரிக்கிறது. கிறிஸ்துவின் மூலம், எல்லா ஜனத்திற்கும் இரட்சிப்பை கொடுப்பதற்காக தேவன் வெளிப்பட்டார் (தீத்து 2:11). நித்திய வாழக்;கை என்பது இந்த பரிசின் ஒரு வெளிப்பாடாய் இருக்கையில் (வச. 13), நம்முடைய சுயக்கட்டுப்பாட்டை திரும்பப் பெற்றுக்கொள்வதற்கும், உலக ஆசைகளை புறக்கணிப்பதற்கும், அவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கைக்கு நம்மை மீட்டெடுக்கவும் தேவன் நம்மில் கிரியை செய்கிறார் (வச. 12, 14). அந்த பாடல் குழுவினர் கண்டறிந்தபடி, இயேசு நம் பாவங்களை மட்டும் மன்னிக்கவில்லை, நம்மை அழிவுக்கேதுவான வாழ்க்கை முறைகளிலிருந்தும் விடுவிக்கிறார்.
இயேசு என்னோடு நடக்கிறார். அவர் உங்களுடனும் நடக்கிறார். அவரை தேடுகிற யாவரோடும் அவர் நடக்கிறார். இப்போது இரட்சிப்பை அருளுவதற்கும், எதிர்காலத்தின் நம்பிக்கையை அருளுவதற்கும் அவர் நம்மோடு இருக்கிறார்.
சகோதரனாகிய சகோதரி
அலுவலக தலைமைப்பொறுப்பில் இருப்பவர் அவளைத் தனியே சந்தித்துப் பேச வேண்டும் என்று கேட்டதால், சிவந்த கண்களுடனும் கண்களில் நீர் சொறிய, கொண்டாட்ட மையத்தின் ஆலோசனை அறையில் கேரனை சந்தித்தேன். 42 வயது நிரம்பிய கேரன், திருமணம் செய்துகொள்ள விரும்பினாள். அவளுடைய அலுவலகத்தின் தலைவரும் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினான். ஆனால் அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவி இருக்கிறாள்.
அவளை மனரீதியாய் காயப்படுத்திய அவளுடைய சகோதரன், அன்பு காட்டத் தவறிய தகப்பன் என்ற ஆண்களின் மீதான ஒரு வெறுப்புணர்வோடே கேரன் வளர்ந்தாள். புதுப்பிக்கப்பட்ட அவளுடைய விசுவாசமானது, வாழ்க்கையின் புதிய எல்லைகளை அவளுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனாலும் அவளுடைய ஏக்கம் தொடர்ந்தது. இந்த வகையான அன்பை அவளுடைய வாழ்க்கையில் ருசிக்காதது அவளுக்கு வேதனையாகவே தோன்றியது.
நாங்கள் பேசி முடிந்த பின்பு, நானும் கேரனும் தலைகளைத் தாழ்த்தி, ஜெபித்தோம். வல்லமையான ஜெபத்தின் மூலம், கேரன் தன்னுடைய சோதனைகளையும், அந்த நபரின் வற்புறுத்தல்களையும் தேவனுடைய சமூகத்தில் வைத்துவிட்டு, பாரம் குறைந்தவளாய் அந்த அறையைவிட்டுக் கடந்துசென்றாள்.
அந்த நாளில் தாமே, எல்லோரையும் சகோதரர்களாகவும் சகோதரிகளாகவும் பாவிக்கத்தூண்டும் பவுலின் போதனைகளை உணர்ந்தேன் (1 தீமோத்தேயு 5:1-2). நம்முடைய பார்வையையும் பேச்சையும் வைத்து அனைத்தையும் இச்சையாய் மாற்றக்கூடிய வலிமை படைத்த இந்த உலகத்தில், எதிர் பாலினத்தவரை நம் குடும்ப நபராய் கருதுவதே ஆரோக்கியமானது. ஒரு ஆரோக்கியமான சகோதர-சகோதரி சிநேகத்திற்குள் தவறு நேரிட வாய்ப்பில்லை.
அவளை தவறாய் நடத்திய, எண்ணிய, புறக்கணித்த நபர்களையே பார்த்து வளர்ந்த கேரனுக்கு, சகோதர-சகோதரி சிநேகத்திற்கு உட்பட்ட ஒருவரின் பேச்சு தேவை. நம்முடைய சுவிசேஷத்தின் மேன்மை அதுவே. நமக்கு புதிய சொந்தங்களைக் கொடுத்து வாழ்க்கையின் பிரச்சனைகளை மேற்கொள்ள உதவுகிறது.
கதை முடிவடையவில்லை
லைன் ஆப் டூட்டி என்ற ஆங்கில நாடகம் நிறைவுபெறுகையில், ஒரு பெருங்கூட்டம், அந்த நாடகத்தில், குற்றங்களுக்கு எதிரான போராட்டம் எப்படி முடிவுபெறுமென்று காண ஆவலாய் கூடியிருந்தனர். இறுதியில் தீமையே வெல்லுமென்ற முடிவில் நிறைவடைந்த நாடகத்தால், அநேகர் ஏமாற்றமடைந்தனர். "குற்றவாளிகள் நியாயத்திற்குமுன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். எங்களுக்கு நன்மை வெல்லுகிற முடிவு வேண்டும்" என்று ஒரு ரசிகர் கூறினார்.
"நாம் நீதிக்கும் நியாயத்திற்கும் ஏங்குகிறோம், ஒருநாள் தீமையானது முற்றிலும் மேற்கொள்ளப்பட்டு, தீயவர்கள் தங்கள் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட வேண்டும். தீயவர்கள் ஜெயிப்பார்கள் என்பது உலகவழக்கத்திற்கு எதிரானது" என்று சமூகவியலாளர் பீட்டர் பெர்கர் ஒருமுறை குறிப்பிட்டார். இந்த நாடகத்தால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள், இந்த உலகம் மீண்டும் சீர்பெற வேண்டுமென்ற மானுட ஏக்கத்தை தங்களையறியாமலேயே வெளிக்காட்டினர்.
பரமண்டல ஜெபத்தில், இயேசுவும் தீமையைக் குறித்து எதார்த்தமுள்ளவராய் சொல்கிறார். தீமைக்கு மன்னிப்பு மட்டும் போதுமானதல்ல (மத்தேயு 6:12) மாறாகத் தீமையிலிருந்து ஒரு பெரிய விடுதலையும் தேவை (வ.13). இந்த எதார்த்தத்திற்கு ஒரு நம்பிக்கையும் உண்டு. தீமையேயில்லாத இடமொன்று உண்டு, அதுதான் பரலோகம். அந்த பரலோக ராஜ்யம் இந்த பூமிக்கு வரப்போகிறது (வ.10). ஒரு நாள் தேவனின் நியாயம் முழுமையாய் வெளிப்படும், "நன்மை ஜெயிக்கும்" என்ற முடிவு வரும், நன்மைக்கேதுவாக தீமை முற்றிலும் வேரறுக்கப்படும் (வெளிப்படுத்தல் 21:4).
ஆகவே நம் வாழ்விலும் தீயவர்கள் மேற்கொள்ளும்போது, ஏமாற்றமே நமக்கு மிஞ்சுகையில், " தேவனின் சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படட்டும்" என்பதை நினைவில் கொள்வோம். நமக்கு நம்பிக்கை உண்டு,ஏனென்றால் கதை இன்னும் முடிவடையவில்லை.
அடைக்கலம் புகுதல்
ஒருமுறை நானும் என் மனைவியும் பெரிய ஜன்னல்களும், தடிமனான கற்சுவர்களுமுடைய அழகான கடற்கரை விடுதியொன்றில் தங்கியிருந்தோம். ஒரு நாள் மத்தியான வேளையில், அப்பகுதியில் புயல் சூழவே, கடல் கொந்தளித்து, எங்கள் அறையின் ஜன்னல்களைச் சீற்றமான அலைகளால் மோதியது. ஆனால் நாங்கள் அமைதியாயிருந்தோம். ஏனெனில் விடுதியின் மதில்கள் வலிமையாகவும், அஸ்திபாரங்கள் உறுதியாகவும் இருந்தன. வெளியே அலைகள் கொந்தளிக்க, எங்கள் அறையே எங்களுக்குப் புகலிடமானது.
அடைக்கலம் என்பது வேதத்தின் முக்கிய கருப்பொருளாகும், ஏனெனில் அது தேவனிடமிருந்தே துவங்குகிறது. "நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்." (ஏசாயா 25:4) என்று ஏசாயா கூறுகிறார். பண்டைய இஸ்ரவேலில், அடைக்கல பட்டணங்களைக் கட்டுவதாகட்டும் (எண்ணாகமம் 35:6), அல்லது தேவையிலுள்ள அந்நியர்களை உபசரிப்பதாகட்டும் (உபாகமம் 10:19), அடைக்கலம் என்பது தேவ ஜனங்கள் கொடுக்கக் கூடியதும் கொடுக்க வேண்டியதுமான ஒன்றாகக் கருதப்பட்டது. இன்று நாம் வாழும் மனிதாபிமானமற்ற உலகில், இத்தகைய கொள்கைகள் நமக்கு வழிகாட்டும். இதுபோன்ற சூழல்களில், அடைக்கலத்தின் தேவனானவர், நம்மைப் பயன்படுத்திப் பாதிக்கப்பட்டவர்களுக்குப் புகலிடமாக்குவாராக.
எங்கள் விடுதியைத் தாக்கிய புயல் மறுநாளே ஓய்ந்துவிட்டது. அமைதியான கடல், வெப்பமான சூரியன், பளபளக்கும் கடற்பாசி என எல்லாம் மாறியிருந்தது. இயற்கை சீற்றங்களுக்கு அல்லது கொடுங்கோலாட்சிக்குத் தப்பியோடுபவர்களுக்கு (ஏசாயா 25:4), இன்றைக்கான அடைக்கலத்தையும், நாளைக்கான நம்பிக்கையையும் தருவதற்கு தேவன் நம்மை பெலப்படுத்துவராக என்ற காட்சியே அப்பொழுது எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது.