எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஷெரிடன் வாய்ஸிகட்டுரைகள்

கோ-கார்ட் வாகனத்தை சரிசெய்தல்

எனது சிறுவயதில் நான் தங்கியிருந்த வீட்டின் கேரேஜ் பல நினைவுகளை எனக்கு வைத்திருக்கிறது. சனிக்கிழமைகளில் காலை நேரத்தில், என்னுடைய தந்தை காரில் எங்களை கேரேஜிக்கு அழைத்துச் செல்வார். அங்கே உடைந்துபோன கோ-கார்ட் எனப்படும் ஒரு சிறிய ரக பந்தய கார் தென்பட்டது. அதை பழுதுபார்த்து புதுப்பிக்க எண்ணினோம். அதற்கு புதிய சக்கரங்கள், பிளாஸ்டிக் கண்ணாடி என்று அதை புதுப்பித்து, நான் அதை பந்தய சாலையில் ஓட்ட முயற்சிக்கும்போது எனது தகப்பனார் வேறு ஏதாகிலும் வாகனம் அப்பக்கம் வருகிறதா என்று பார்த்துக்கொள்வார். இந்த சிறிய ரக வாகனத்தை ஓட்டுவதைக்காட்டிலும் பெரிய காரியங்களை அந்த கேரேஜில் நான் அனுபவித்தேன். ஆம்! ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளைக்கு தேவனை ருசித்துப் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.  
தேவனுடைய மெய்யான சுபாவத்துடன் மனிதன் வடிவமைக்கப்பட்டிருக்கிறான் (ஆதியாகமம் 1:27-28). அவர் “பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய” தகப்பனாய் வீற்றிருக்கிறார் (எபேசியர் 3:14-15). பிள்ளைகளுக்கு ஜீவனைக் கொடுத்து இந்த உலகத்திற்கு கொண்டு வருவதன் மூலம் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தும் பெற்றோர்கள், அவர்களை வளர்க்கும்போது அவர்களுக்குள் இருக்கும் சுபாவத்தினால் அல்லாமல், பிதாவாகிய தேவனுடைய தன்மையை வெளிப்படுத்துகிறார்கள். அனைத்து பெற்றோர்களும் பின்பற்றுவதற்கு உகந்த மாதிரியாய் தேவன் திகழ்கிறார்.  
என்னுடைய தகப்பன் எல்லாவிதத்திலும் நேர்த்தியானவர் இல்லை. ஒவ்வொரு தகப்பன் தாயைப் போல அவரும் சிலவேளைகளில் பரலோகத்தை பிரதிபலிக்க தவறலாம். ஆனால் அந்த கேரேஜில் இருந்த அந்த கோ-கார்ட் பந்தய காரை சரிசெய்வதில் அவருடைய பராமரிப்பையும் பாதுகாப்பையும் பார்த்தபோது, தேவனுடைய குணாதிசயங்களை என்னால் நினைவுகூர முடிந்தது.

காலங்கள்

நான் சமீபத்தில் ஒரு பயனுள்ள வார்த்தையைக் கண்டறிந்தேன்: “குளிர்காலம்.” இயற்கை உலகின் பெரும்பகுதியை இந்த குளிர்காலம் அமைதிப்படுத்துவது போல, வாழ்க்கையின் “குளிர்” பருவங்களில் ஓய்வெடுக்கவும், குணமடையவும் வேண்டியதன் அவசியத்தை விவரிக்க, எழுத்தாளர் கேத்தரின் மே இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட என் தந்தையை நான் இழந்த பிறகு இந்த ஒப்புமை எனக்கு உதவியாயிருந்தது. இது எனது ஆற்றலை பல மாதங்கள் புதுப்பித்தது. இந்த குளிரானது வலுக்கட்டாயமாய் என் வேகத்தைக் குறைத்ததால் கோபமடைந்த நான், எனது குளிர்காலத்தை எதிர்த்துப் போராடினேன். கோடைக்கால வாழ்க்கை திரும்ப வேண்டும் என்று ஜெபித்தேன். ஆனால் நான் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருந்தது. 
பிரசங்கி, “வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு” என்று சொல்லுகிறார் (3:1-4). நடவும் நட்டதை பிடுங்கவும், அழவும் நகைக்கவும், புலம்பவும் நடனம் பண்ணவும் ஒவ்வொரு காலமுண்டு. இந்த வேதவாக்கியத்தை நான் பலமுறை வாசித்திருக்கிறேன். ஆனால் குளிர்காலத்தில் தான் அதின் அர்த்தம் எனக்கு விளங்கியது. அவர்கள் மீது நமக்குக் கட்டுப்பாடு இல்லை என்றாலும், ஒவ்வொரு பருவமும் வரையறுக்கப்பட்டதாக இருக்கும், அதன் வேலை முடிந்ததும் கடந்து போகும். அது என்னவென்று நம்மால் எப்பொழுதும் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், தேவன் அவைகள் மூலமாக நம்மில் கிரியை செய்கிறார் (வச. 11). என் துக்கநாட்கள் இன்னும் முடியவில்லை. அது முடியும்போது நான் நடனம்பண்ணும் காலம் வரும். தாவரங்களும் விலங்குகளும் குளிர்காலத்தை எதிர்த்துப் போராடாதது போல, நானும் அதை எதிர்த்துபோராட வேண்டியதில்லை. அது அதனுடைய வேலையை செய்வதற்கு அதை முழுமையாய் அனுமதிக்கவேண்டும்.  
ஒரு சிநேகிதன், “கர்த்தாவே, உம்முடைய நற்கிரியைகளை இந்த காலத்தில் ஷெரிடனுக்குள் செய்வீர்களா?” என்று சொல்லி எனக்காக ஜெபித்தான். அது என்னுடைய ஜெபத்தைக் காட்டிலும் சிறந்த ஜெபம். தேவனுடைய கரத்தில் காலங்கள் ஒரு நோக்கத்தோடு அனுமதிக்கப்படுகிறது. அவை ஒவ்வொன்றிலும் அவருடைய புதுப்பிக்கும் கிரியைகளை காண நம்மை அர்ப்பணிப்போம்.  

சத்தியம் தேடுவோர்

ஒரு பெண் ஒருமுறை என்னிடம் ஒரு கருத்து வேறுபாடு தன் தேவாலயத்தை இரண்டாய் கிழித்தது என்று சொன்னாள். “எதில் கருத்து வேறுபாடு?” என்று நான் கேட்டேன். “பூமி தட்டையாக இருக்கிறதா?” என்னும் விவாதத்தினால் என்று பதிலளித்தாள். சில மாதங்களுக்குப் பிறகு, ஒரு உணவகத்தின் பின் அறையில் குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக கூறி ஒரு மனிதன் தன் கையில் ஆயுதம் எந்தி உள்ளே வந்தார் என்னும் செய்தியைப் படித்தேன். ஆனால் அந்த உணவகத்திற்கு பின்பு எந்த அறையும் இல்லை. ஆகையால் அந்த மனிதனை கைது செய்தனர். இந்த இரண்டு சம்பவத்திலும், மக்கள் இணையதளத்தில் இடம்பெறக்கூடிய சர்ச்சைக்குரிய காரியங்களைப் பார்த்துவிட்டு இப்படிப்பட்ட தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.  
கிறிஸ்தவர்கள் மெய்யான குடிமக்கள்களாய் வாழ்வதற்காய் அழைக்கப்படுகின்றனர் (ரோமர் 13:1-7). நல்ல குடிமகன்கள் தவறான செய்திகளைப் பரப்புவதில்லை. லூக்காவின் நாட்களில் இயேசுவைக் குறித்து பல கதைகள் உலாவந்தன. அவற்றுள் சிலவைகள் உண்மையற்றவைகள் (லூக்கா 1:1). தான் கேட்ட அனைத்து செய்திகளையும் அப்படியே தொடர்புகொள்ளாமல், லூக்கா அவற்றை தீர்க்கமாய் ஆராய்ச்சி செய்து, சாட்சியங்களோடு பேசி (வச. 2), “ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்து” (வச. 3), அவருடைய சுவிசேஷத்தில் அவற்றை பெயர்கள், மேற்கோள்கள், சரித்திரதன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பதிவுசெய்துள்ளார்.  
 
நாமும் அப்படியே செய்யமுடியும். தவறான செய்திகள் திருச்சபைகளை பிளவுபடுத்தி ஆத்துமாக்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்பதினால் உண்மைகளைச் சரிபார்ப்பது அவர்களை நேசிப்பதற்கான ஒரு அடையாளமாகும் (10:27). ஒரு பரபரப்பான சம்வத்தை நாம் கேள்விப்படும்போது, அது உண்மையா என்று அறிந்து சரிபார்த்து, நிபுணர்களின் உதவியை நாடுவது நல்லது. அவ்வாறு செய்து நல்ல தரமான செய்திகளை நாம் பரப்புவது என்பது சுவிசேஷத்திற்கான நம்பகத்தன்மையை பிரதிபலிக்கிறது. அவ்வாறு செய்வதின் மூலம் “சத்தியத்தினால் நிரைந்தவரை” (யோவான் 1:14) நான் சேவிக்கமுடியும்.  

வாடகைக்கு நண்பர்

உலகத்தில் வாழும் பலருக்கு, வாழ்க்கை என்பது தனிமையான ஒன்றாய் மாறிவிடுகிறது. 1990லிருந்து நண்பர்கள் இல்லாத அமெரிக்கர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட ஐரோப்பிய நாடுகளில் 20 சதவீதம் பேர் தனிமையில் வாழுகிறார்கள். ஆனால் ஜப்பான் தேசத்தில், சில வயதானவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு செல்லுகின்றனர். அங்கு அவர்களுக்கு சிநேகிதர்கள் உருவாகின்றனர்.  
இந்த தனிமை தொற்றுநோய்க்கு தொழில்முனைவோர் ஒரு “தீர்வை” கொண்டுவந்துள்ளனர். அது தான் வாடகைக்கு நண்பர். சில மணி நேரங்களுக்கு அவர்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டால் அவர்கள் உங்களை ஒரு ஓட்டலிலோ அல்லது விருந்துக்கோ சந்தித்து பேசி பழகுவார்கள். அப்படிப்பட்ட ஒரு சிநேகிதியிடம், உங்களின் வாடிக்கையாளர் யார் என்று கேட்டபோது, “நண்பர்களை உருவாக்கக்கூட நேரமில்லாமல், நீண்டநேரம் வேலை செய்யும் 30லிருந்து 40 வயதுக்குட்பட்ட நடுத்தர வயதுடையவர்கள்” என்று பதிலளித்தாள்.  
பிரசங்கி 4ஆம் அதிகாரம், பிள்ளையும் சகோதரனுமில்லாமல் ஒண்டியாயிருக்கும் ஒரு நபரைக் குறித்து விவரிக்கிறது. அவனுடைய பிரயாசத்திற்கு முடிவில்லை, ஆனாலும் அவனுடைய ஐசுவரியத்தில் அவன் திருப்தியடைகிறதில்லை (வச. 8). “யாருக்காகப் பிரயாசப்படுகிறேன்?” என்று சரியான கேள்வி எழுப்பப்படுகிறது. நல்ல சிநேகிதர்களை அவன் தனக்கென தெரிந்துகொண்டால், அவனுடைய பணிசுமை இலகுவாகவும், இக்கட்டில் அவனுக்கு துணையாகவும் இருக்கும் (வச. 9-12). இறுதியாக, சிநேகிதரில்லாத வெற்றியும் மாயையே (வச. 8) என்று முடிக்கிறார். 
முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது (வச. 12) என்று பிரசங்கி சொல்லுகிறான். ஆனால் அதை அவ்வளவு சீக்கிரத்தில் நெய்யவும் முடியாது. உண்மையான நண்பர்களை வாடகைக்கு எடுக்க முடியாது என்பதால், அவர்களை உருவாக்குவதற்கு தேவையான நேரத்தை முதலீடு செய்வோம். தேவனை நமது மூன்றாவது இழையாகக் கொண்டு, நம்மை இறுக்கமாக பிணைப்போம்

திருப்தியை பற்றிக்கொள்ளுதல்

ஒரு மனநல மருத்துவரின் ஆலோசனை கட்டுரையில், பிரெண்டா என்ற வாசகருக்கு அவர் பதிலளிக்கையில், அவள் தனது இலட்சியத்தை அடைய மேற்கொண்ட முயற்சிகள் அவளை அதிருப்தி அடையச் செய்ததாக புலம்பினாள். அதற்கான மருத்துவரின் பதில் அறிவுமழுங்கியதாக இருந்தது. மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்கப் படைக்கப்படவில்லை, "உயிரோடிருந்து இனப்பெருக்கம் செய்வதற்கும் மட்டுமே" என்று அவர் கூறினார். திருப்தி எனும் கைக்கெட்டாத பட்டாம்பூச்சியைத் துரத்துவது நமது சாபம் என்றார். அதை எப்போதும் பிடிக்க முடியாது என்று அவர் மேலும் கூறினார்.

மனநல மருத்துவரின் வார்த்தைகளைப் படித்து பிரெண்டா எப்படி உணர்ந்திருப்பாள்? அதற்குப் பதிலாகச் சங்கீதம் 131ஐப் படித்தால் அவள் எவ்வளவு வித்தியாசமாக உணருவாள்? என்று யோசித்தேன். அதன் வார்த்தைகளில், திருப்தியை எவ்வாறு கண்டறிவது என்பதை நமக்கு தாவீது காட்டுகிறார். அவர் மனத்தாழ்மையோடு ஆரம்பிக்கிறார், தனது ராஜரீகமான நோக்கங்களை ஒதுக்கி வைக்கிறார். மேலும் எது முக்கியமெனும் வாழ்க்கையின் ஆழமான கேள்விகளோடு போராடிக்கொண்டிருந்த அவர், அவற்றையும் ஒதுக்கி வைக்கிறார் (வச. 1). பின்னர் அவர் தேவனுக்கு முன்பாக தனது இதயத்தை அமரப்பண்ணினார் (வச. 2), எதிர்காலத்தை அவரது கைகளில் ஒப்படைக்கிறார் (வச. 3). அதின் விளைவு அற்புதமானது: "ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல இருக்கிறது" என்று அவர் கூறுகிறார். அதாவது "நான் திருப்தியாக இருக்கிறேன்" (வச. 2).

இதுபோன்ற நமது நொறுங்கிய உலகில், திருப்தி என்பது சில நேரங்களில் எட்டாக் கனியாக இருக்கும். பிலிப்பியர் 4:11-13 இல், அப்போஸ்தலன் பவுல் மனநிறைவைக் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று என்று கூறினார். ஆனால் நாம் "உயிர்வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும்" மட்டுமே படைக்கப்பட்டுள்ளோம் என்று நம்பினால், மனநிறைவு நிச்சயமாகப் பிடிக்க எட்டாக் கனியாகவே இருக்கும். தாவீது நமக்கு மற்றொரு வழியைக் காட்டுகிறார்: தேவனின் சமுகத்தில் அமைதியாக இளைப்பாறுதலின் மூலம் மனநிறைவைப் பெறுவதே அவ்வழி.

தேவன் நமது திட அஸ்திபாரம்

உடைந்துவிழக்கூடிய சமையல்கட்டு மற்றும் சோபித்துப்போன சுவர்களுடன் இருந்த எங்கள் வீட்டைப் புதுப்பிப்பது அவசியம் ஆனது. அதின் பெரும்பாலான பகுதிகள் இடிக்கப்பட்டபின், கட்டுமான பணியாளர்கள் புதிய அஸ்திபாரத்திற்குத் தோண்டத் தொடங்கினர். சுவாரசியம் ஆரம்பித்தது.

அவர்கள் தோண்டுகையில்; உடைந்த தட்டுகள், 1850 களின் சோடா பாட்டில்கள், கரண்டிகள், முட்கரண்டிகள் போன்றவை அகப்பட்டன.

நாங்கள் ஒரு குப்பை மேட்டின்மேல் எங்கள் வீட்டைக் கட்டியிருந்தோமா? யாரறிவார். ஆனால் முடிவில் எங்கள் பொறியியலாளர் எங்கள் வீட்டு அஸ்திபாரங்கள் இன்னும் ஆழமாக்கப்பட வேண்டும் இல்லையேல் சுவரில் வெடிப்புகள் தோன்றும் என்றார்.

உறுதியான வீடுகளுக்குத் தரமான அஸ்திபாரங்கள் வேண்டும். இது நமது  வாழ்க்கைக்கும் பொருந்தும். இஸ்ரவேலர்கள் தங்களின் சத்துருக்களால் அசைக்கப்படுகையில், ஏசாயா அவர்களுக்காக ஜெபித்தார் (ஏசாயா 33:2-4). ஆனால் அவர்களின் பெலன் வீரத்தாலோ ஆயுதங்களாலோ உண்டாகாமல், தங்கள் வாழ்வைத் தேவன் மீது கட்டுவதால் மட்டுமே உண்டாகும். தீர்க்கதரிசி, “பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம்” (வ.6) என்றார். இயேசுவும் இதே கருத்தைச் சொல்லியிருந்தார், அவருடைய ஞானத்தின் மீது தங்கள் வாழ்க்கையைக் கட்டுபவர்கள் வாழ்க்கையின் புயல்களினூடே நிலைத்திருக்கலாம் என்று உபதேசித்திருந்தார் (மத்தேயு 7:24-25).

நமது வாழ்வில் மூர்க்கம், அடிமைத்தனம் அல்லது திருமண பிரச்சனைகள் போன்ற விரிசல்கள் தோன்றுவது; நமது அஸ்திபாரங்கள் பராமரிக்கப்பட வேண்டும் என்பதின் அடையாளங்கள். நாம் தவறான இடத்தில் பாதுகாப்பை நாடினால் அல்லது இவ்வுலகத்தின் ஞானத்தை மட்டுமே பின்பற்றினால், நாம் உறுதியற்ற அஸ்திபாரத்தின்மேல் இருப்போம். ஆனால் தங்கள் வாழ்க்கையைத் தேவன்மீது கட்டுபவர்களோ அவருடைய பெலனையும், அனைத்து பொக்கிஷங்களையும் அடையலாம் (ஏசாயா 33:6).

கிருபையின் செயல்பாடுகள்

அபௌட் கிரேஸ் என்ற நாவலில், டேவிட் விங்க்லர் தன்னை பிரிந்த மகளைக் கண்டுபிடிக்க ஏங்குகிறார், அவருக்கு உதவக்கூடிய ஒரே நபர் ஹெர்மன் ஷீலர் மட்டுமே. ஆனால் ஒரு தடை உள்ளது. ஹெர்மனின் மனைவியுடனான தவறான தொடர்பில்தான் டேவிட்டின் மகள் பிறந்தாள், மேலும் அவர்களை மீண்டும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று ஹெர்மன் எச்சரித்திருந்தார்.

பல ஆண்டுகள் கழித்து டேவிட், ஹெர்மனிடம் மன்னிப்பு கோரி கடிதம் எழுதினார். மேலும் அவர், "என் வாழ்க்கையில் ஒரு வெறுமை உண்டு, காரணம் என் மகளைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது" என்று அவளைப் பற்றிய தகவல்களைக் கேட்கிறார். ஹெர்மன் தனக்கு உதவுவாரா என்று காத்திருக்கிறார்.

நமக்கு அநீதி இழைத்தவர்களை எப்படி நடத்த வேண்டும்? தனது எதிரிகள் அற்புதமாக அவரது கைகளில் ஒப்படைக்கப்பட்ட பிறகு, இஸ்ரவேலின் ராஜா இந்த கேள்வியை எதிர்கொண்டார் (2 இராஜாக்கள் 6:8-20). "நான் அவர்களை வெட்டிப் போடலாமா" என்று எலிசா தீர்க்கதரிசியிடம் கேட்கிறார். இல்லை, எலிசா கூறுகிறார். "இவர்கள் புசித்துக் குடித்து, தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போகும்படிக்கு, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்கெதிரில் வையும் என்றான்" (வ. 21-22). இந்த கிருபையின் செயல்  மூலம், இஸ்ரவேல் தனது எதிரிகளுடன் சமாதானம் காண்கிறது (வ. 23).

டேவிட்டின் கடிதத்திற்கு ஹெர்மன் பதிலளித்து, அவரை தனது வீட்டிற்கு அழைத்து உணவும் வழங்குகிறார். “ஆண்டவராகிய இயேசு, இத்தனை வருடங்களாக என்னையும் டேவிட்டையும் பராமரித்ததற்காக உமக்கு நன்றி” என்று அவர்கள் சாப்பிடுவதற்கு முன் ஜெபிக்கிறார். டேவிட் தனது மகளைக் கண்டுபிடிக்க உதவுகிறார், பின்னர் டேவிட் ஹெர்மனின் உயிரைக் காப்பாற்றுகிறார். தேவனின் கரங்களில், நமக்கு அநீதி இழைத்தவர்களிடம் நாம் காட்டும் கிருபையின் செயல்கள் பெரும்பாலும் நமக்கு ஆசீர்வாதமாக விளைகின்றன.

தோழமையான இலட்சியம்

நாசியன்சஸின் கிரிகோரி மற்றும் சிசேரியாவின் பேசில் ஆகியோர் நான்காம் நூற்றாண்டில் பெரிதும் மதிக்கப்பட்ட திருச்சபை தலைவர்களாகவும், நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர். தத்துவ பாட மாணவர்களாகத்தான் முதலில் இவர்கள் சந்தித்தனர், பின்னர் கிரிகோரி, அவர்கள் "ஈருடல் ஓருயிர்" போல ஆனதாகக் கூறினார்.

அவர்களின் வாழ்க்கைப் பாதைகள் மிகவும் ஒத்ததாக இருந்ததால், கிரிகோரிக்கும்  பேசிலுக்கும் இடையே போட்டி ஏற்பட்டிருக்கலாம். ஆனால், விசுவாசம், நம்பிக்கை மற்றும் நற்கிரியைகளாலான வாழ்க்கையைத் தங்களின் "ஒரே லட்சியமாக" கொண்டு, மேலும் இந்த லட்சியத்தில் தன்னை காட்டிலும் மற்றவர் சிறக்க வேண்டுமென்று "ஒருவரையொருவர் ஊக்குவித்த" காரணத்தால் இந்தச் சோதனையை மேற்கொண்டதாக கிரிகோரி விளக்கினார். இதன் விளைவாக, இருவரும் நம்பிக்கையில் வளர்ந்தனர் மற்றும் போட்டியின்றி உயர் மட்ட திருச்சபை தலைமைக்கு உயர்ந்தனர்.

எபிரேயர் புத்தகம், நாம் விசுவாசத்தில் வலுவாக இருக்க உதவும் வகையில் எழுதப்பட்டுள்ளது (எபிரேயர் 2:1), நாம் "நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில்" அசைவில்லாமல் உறுதியாயிருக்கவும், "அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர்" (10:23-24) ஊக்குவிக்கவும் ஏவுகிறது. இந்த கட்டளை ஒரு சபைக்கென்று கொடுக்கப்பட்டிருந்தாலும் (வ. 25), அதை தங்கள் நட்புக்குப் பயன்படுத்தியதின் மூலம், கிரிகோரியும் பேசிலும் எவ்வாறு நண்பர்கள் ஒருவரையொருவர் வளர ஊக்குவிக்கலாம் என்றும், அவர்களுக்கு இடையே வளரக்கூடிய போட்டி மனப்பான்மை போன்ற "கசப்பான வேரை" (12:15) தவிர்க்கலாம் என்பதையும் காட்டினார்கள்.

விசுவாசம், நம்பிக்கை மற்றும் நற்கிரியைகளை நமது சொந்த நட்பின் லட்சியமாகக் கொண்டு, இந்த இலட்சியத்தில் நம்மைக் காட்டிலும் நமது நண்பர்கள் சிறக்கும்படி அவர்களை ஊக்குவித்தால் என்ன? இரண்டையும் செய்யப் பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவத் தயாராக இருக்கிறார்.

தேவனுடன் பங்காளி ஆகுதல்

என் தோழியும் அவளது கணவரும் கருத்தரிக்கச் சிரமப்பட்டபோது, ​​மருத்துவச் சிகிச்சை செய்யுமாறு மருத்துவர்கள் அவளுக்குப் பரிந்துரைத்தனர். ஆனால் என் தோழி தயங்கினாள். "நம்முடைய பிரச்சனையைத் தீர்க்க ஜெபம் போதுமல்லவா? எனக்கு உண்மையிலே மருத்துவச் சிகிச்சை அவசியமா?" எனக் கேட்டாள். தேவன் செயல்படுவதைப் பார்க்க, மனித பங்களிப்பை உணர முடியாமல் என் தோழி போராடினாள்.

இயேசு, திரளான ஜனங்களுக்கு உணவளித்த சம்பவம் இதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும் (மாற்கு 6:35-44). அந்த கதை எப்படி நிறைவடைந்தது என்பதை நாம் அறிந்திருக்கலாம்; ஆயிரக்கணக்கான மக்கள் சில அப்பம் மற்றும் மீன்களால் அற்புதமாகப் போஷிக்கப்படுகிறார்கள் (வ. 42). ஆனால் கூட்டத்திற்கு உணவளிப்பது யார் என்பதைக் கவனியுங்கள்? சீஷர்கள் (வ. 37). மேலும், யார் உணவு வழங்குகிறார்கள்? சீஷர்கள் (வ. 38). உணவை விநியோகித்து, பிறகு சுத்தம் செய்வது யார்? சீஷர்கள் (வ. 39-43). "நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள்" என்று இயேசு கூறினார் (வ. 37). இயேசு அற்புதம் செய்தார், ஆனால் சீஷர்கள் செயல்பட்டபோதுதான் அது நிகழ்ந்தது.

நல்ல பயிர் என்பது தேவனின் ஈவு (சங்கீதம் 65:9-10), ஆனால் ஒரு விவசாயி நிலத்தில் உழைத்தாக வேண்டும். இயேசு, பேதுருவிடம் "மீன் அகப்படும்" என  வாக்களித்தார், ஆனால் மீனவரும் வலைகளை வீச வேண்டியிருந்தது (லூக்கா 5:4-6). தேவனால் நம்மையன்றி பூமியைப் பராமரிக்கவும், அற்புதங்களைச் செய்யவும் முடியும். ஆனால், பெரும்பாலும்மனிதனோடு இனைந்து செயல்படவே தேவன் விரும்புகிறார்.

என் தோழியும் சிகிச்சை பெற்று, பின்னர் வெற்றிகரமாகக் கருத்தரித்தார். இது அற்புதம் நடப்பதற்கான விதிமுறை இல்லை என்றாலும், என் தோழிக்கும் எனக்கும் இது ஒரு பாடமாக இருந்தது. தேவன் நம் கரங்களில் வழங்கியுள்ள  முறைகளைக்கொண்டே, தமது அதிசயமான கிரியைகளை அடிக்கடி செய்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

உதவிக்கான அழுகை

டேவிட் வில்லிஸ், வாட்டர்ஸ்டோன்ஸ் புத்தகக் கடையின் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து பார்த்த பொழுது, விளக்குகள் அணைக்கப்பட்டு கதவுகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார். கடைக்குள் சிக்கிக் கொண்டார்! வேறு என்ன செய்வது என்று தெரியாமல், அவர் கீச்சகத்தில் இவ்வாறு பதிவிட்டார். "ஹாய்@வாட்டர்ஸ்டோன்ஸ். உங்கள் ட்ரஃபல்கர் ஸ்கொயர் புத்தகக் கடையில் நான் இப்போது 2 மணி நேரமாக பூட்டப்பட்டிருக்கிறேன். தயவுசெய்து என்னை வெளியே விடுங்கள்”. அவர் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே அவர் மீட்கப்பட்டார். 
  
நாம் சிக்கலில் இருக்கும்போது உதவி பெற ஒரு வழி இருப்பது நல்லது. நாமே உருவாக்கிக் கொள்ளும் பிரச்சனையில் நாம் சிக்கிக் கொள்ளும்போது, நம் அழுகைக்குப் பதிலளிக்க ஒருவர் இருக்கிறார். என்று ஏசாயா கூறுகிறார். ஏசாயா தீர்க்கதரிசி எழுதும் போது, தம் மக்கள் தேவபக்தியைப் பொறுப்பற்ற நிலையில் கடைபிடிக்கிறார்கள் என தேவன் குற்றம் சாட்டியதாக எழுதுகிறார். மதம் சார்ந்த செயல்களில் ஈடுபட்டு, ஏழைகள் மீதான தங்கள் அடக்குமுறையை மறைத்து வெறுமையான சுய சேவையில் ஈடுபடுகின்றனர் (ஏசாயா 58:1-7). இச்செயல்களை தேவன் அங்கீகரிக்கவில்லை. "என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்" (1:15) என்றார். தேவன் அவர்களை மனந்திரும்பவும், மற்றவர்களுக்காக கரிசனை கொள்ளும் வெளிப்புறச் செயல்களைக் காட்டவும் கூறினார் (58:6-7). அவர்கள் அப்படிச் செய்தால், அவர் அவர்களிடம், "அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி" (வ.9) என்றார். 
  
"நான் இங்கே இருக்கிறேன்" என்று சொல்லி, ஏழைகளிடம் நெருங்கிப் பழகுவோம். ஏனென்றால், உதவிக்காக நாம் இடும் கூக்குரல்களைக் கேட்டு, "நான் இங்கே இருக்கிறேன்" என்று தேவன் கூறுவதால். 
  

  

ஆவியில் விடுதலை

ஆர்வில்லுக்கோ, வில்பர்ரைட்டுக்கோ விமான ஓட்டிக்கான உரிமம் இல்லை. இருவரும் கல்லூரிக்கும் செல்லவில்லை. அவர்கள் பறக்க வேண்டுமென்ற லட்சியமும்,தைரியமும் கொண்ட மிதிவண்டி பழுதுபார்ப்பவர்கள். டிசம்பர் 17, 1903ல், அவர்கள் "ரைட் ஃப்ளையர்" என்ற பறக்கும் இயந்திரத்தை நான்கு முறை மாறி மாறி பறக்க செய்தனர். அவற்றில் நீண்ட பயணம் ஒரு நிமிடமே நீடித்தது, ஆனால் அது நமது உலகையே மாற்றிவிட்டது. 
  
பேதுருவுக்கும், யோவானுக்கும் பிரசிங்கிக்கும் உரிமம் இல்லை. இருவரும் வேதாகமக் கல்லூரிக்கு சென்றதும் இல்லை. அவர்கள் மீனவர்கள், இயேசுவின் ஆவியால் நிரப்பப்பட்டு, தைரியமாக நற்செய்தியை அறிவித்தனர். "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்." (அப்போஸ்தலர் 4:12). 
  
ரைட் சகோதரர்களின் சுற்றத்தார் உடனடியாக அவர்களின் சாதனையைப் பாராட்டவில்லை, அவர்களின் சொந்த ஊர் செய்தித்தாள் அவர்களின் கதையை நம்பவில்லை; உண்மையாக இருந்தாலும், அவர்கள் பறந்தது குறுகிய தூரமாக தான் இருக்க முடியும் எனக் கூறியது. பலமுறை அவ்வாறு பறந்து சாதனை புரிந்த பின்னரே அவர்கள் உண்மையிலேயே என்ன செய்தார்கள் என பொதுமக்கள் அடையாளம் கண்டு கொண்டனர். மதத் தலைவர்களுக்கு பேதுருவையும், யோவானையும் பிடிக்கவில்லை, மேலும் இயேசுவைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதை நிறுத்தும்படி கட்டளையிட்டார்கள். பேதுரு, "முடியவே முடியாது" என்றான். "நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்" (வ.20). 
  
நீங்களும் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை நீங்கள் மற்றவர்களால் தூற்றப்பட்டிருக்கலாம். பரவாயில்லை. இயேசுவின் ஆவி உங்களிடம் இருந்தால், அவருக்காக தைரியமாக வாழ விடுதலையுடன் நீங்கள் இருக்கிறீர்கள்! 
  

  

சாக்லேட் பனி துகள்கள்

சுவிட்சர்லாந்தின் ஓல்டன் நகரில் வசிப்பவர்கள், நகரம் முழுவதும் சாக்லேட் சீவல் மழை பெய்ததால் ஆச்சரியமடைந்தனர். அருகிலுள்ள சாக்லேட் தொழிற்சாலையில் காற்றோட்ட அமைப்பு பழுதடைந்ததால், கோகோவைக் காற்றில் பரப்பியது. சாக்லேட் நன்மையால் அப்பகுதி நிறைந்தது. சாக்லேட் விரும்பிகளின் கனவு நனவாகியது. 
  
சாக்லேட் ஒருவரின் ஊட்டச்சத்துக்கு தேவையான சக்தியைத் தராது, ஆனால் தேவனோ இஸ்ரவேலருக்கு தேவையான ஊட்டச்சத்தான பரலோக மழையை அளித்தார். அவர்கள் பாலைவனத்தின் வழியாகப் பயணிக்கும்போது, எகிப்தில் விட்டுச் சென்ற பலவகையான உணவைப் பற்றி முணுமுணுக்கத் தொடங்கினர். அதனால் தேவன் அவர்களை நிலைநிறுத்த, "நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்” (யாத்திராகமம் 16:4) என்றார். ஒவ்வொரு நாளும் 
காலைப் பனி வற்றியபோது, ஒரு மெல்லிய துளி உணவு எஞ்சியிருந்தது. ஏறக்குறைய இரண்டு மில்லியன் இஸ்ரவேலர்கள் அன்றைய தினம் தங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சேகரித்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டனர். நாற்பது வருஷங்கள் பாலைவனத்தில் அலைந்து திரிந்த அவர்கள், தேவனின் இயற்கைக்கு அப்பாற்பட்ட உதவியாகிய மன்னாவால் போஷிக்கப்பட்டனர். 
  
மன்னாவைப் பற்றி அதிகக் குறிப்புகள் கொடுக்கப்படவில்லை. ஆனாலும், "அது கொத்துமல்லி அளவாயும் வெண்மைநிறமாயும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது” (வ.31). மன்னா என்பது சாக்லேட்டை போல சீரான ருசிகரமான உணவாக இல்லாமல் இருந்தாலும் தனது ஜனங்கள் மீதான தேவனின் முன்னேற்பாடு அப்பட்டமாக தெரிந்தது. மன்னா என்பது தன்னை "ஜீவ அப்பம்" (யோவான் 6:48) என வெளிப்படுத்திய இயேசுவை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது, "நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்” (வ. 51).