வாலஸ் மற்றும் மேரி பிரவுன் இருவரும் இங்கிலாந்தின் ஏழ்மையான பகுதிக்கு குடிபெயர்ந்து, மரித்த நிலையில் இருக்கும் ஒரு திருச்சபையின் போதகராக பணியாற்றிட சென்றனர். ஒரு கூட்டத்தினர் தங்கள் திருச்சபைக்குச் சொந்தமான மைதானத்தையும் வீட்டையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது அவர்களுக்குத் தெரியாது. இக்கூட்டம்  ஜன்னல் வழியாகச் செங்கற்களை வீசி, வேலிகளுக்கு தீ வைத்து, குழந்தைகளை மிரட்டினர். இந்த தாக்குதல் பல மாதங்கள் தொடர்ந்தது; காவல்துறையால் கூட அவர்களைத் தடுக்க முடியவில்லை.

நெகேமியாவின் புத்தகம் இடிபட்ட எருசலேமின் அலங்கத்தை மீண்டும்  இஸ்ரவேலர்கள் எவ்வாறு கட்டினர் என்பதை விவரிக்கிறது. அதன் உள்ளூர் வாசிகள் “பிரச்சினையைத் தூண்டி”, யுத்தத்தினால் எதிர்க்கையில் (நெகேமியா 4:8), இஸ்ரவேலர்கள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி. . .ஜாமங்காக்கிறவர்களை வைத்தனா் (வ. 9). இந்த வேதபகுதியின் மூலம் தேவன் வழிநடத்துவதை உணர்ந்த பிரவுன் குடும்பத்தினர் மற்றும் சிலர், அவர்கள் ஆலயத்தை சுற்றி நடந்து, தேவன் தங்களது சுற்று சுவர்களில் தங்களைக் காக்கும்படி தூதர்களை நிறுத்தும்படி ஜெபித்தனர். இதைக் கண்ட அந்த கும்பல் கேலி செய்தது, ஆனால் அடுத்த நாள், அவர்களில் பாதி பேர் மட்டுமே வந்தனர். அதற்கு அடுத்த நாள், ஐந்து பேர் மட்டுமே இருந்தனர்; மறுநாள், யாரும் வரவில்லை. பின்னர் அந்த கும்பல் மக்களை அச்சுறுத்துவதைக் கைவிட்டதாக ஊழியர்கள் கேள்விப்பட்டனர்.

ஜெபத்திற்கான இந்த அற்புதமான பதில், நமது சொந்த பாதுகாப்பிற்கான சூத்திரம் அல்ல. மாறாக ஊழியத்திற்கு எதிர்ப்புகள் வரும், அதை ஜெபமென்னும் ஆயுதத்தால் போரிட வேண்டும் என்பதையே நினைவூட்டுகிறது. நெகேமியா இஸ்ரவேலர்களுக்கு சொன்னது “மகத்துவமும் பயங்கரமுமுள்ள கர்த்தரை நினைவுகூருங்கள்” (வ. 14). கொடுமை நிறைந்த இருதயங்களை கூட தேவன் விடுவிப்பார்.