எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

எமி பவுச்சர் பைகட்டுரைகள்

தேவனின் விசாலமான இடம்

இறையியலாளர் டோட் பில்லிங்ஸ் குணப்படுத்த முடியாத இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்தபோது, ​​தனது உடனடி மரணத்தைத் தொலைதூர அறைகளில் உள்ள விளக்குகள் அணைவது அல்லது அணையும்படி மினுமினுப்பது போலவும் இருப்பதாக விவரித்தார். "ஒன்று மற்றும் மூன்று வயதுக் குழந்தையின் தந்தையாக, நான் அடுத்த சில தசாப்தங்களை  ஒரு பரந்த வெளியாக நினைக்க முனைந்தேன். நேட்டியும் நத்தானியேலும் வளர்ந்து முதிர்ச்சியடைவதை நான் பார்ப்பேன் என்று கருதினேன். ஆனால் நோய் கண்டறியப்பட்டதில். ஒரு குறுகல் நடைபெறுகிறது"

இந்த வரம்புகளைப் பற்றிச் சிந்திக்கையில், பில்லிங்ஸ் சங்கீதம் 31 இல், தேவன் தாவீதை எப்படி "விசாலத்திலே" (வ.8) வைத்தார் என்பதையும் அவதானிக்கிறார். தாவீது தனது சத்துருக்களால் ஒடுக்கப்படுவதைப் பற்றிப் பேசினாலும், தேவனே தனது பலத்த துருகமும் அடைக்கலமான அரணுமானவர் என்று அவர் அறிந்திருந்தார் (வ.2). இந்த பாடலின் மூலம், சங்கீதக்காரன் தேவன் மீதான தனது நம்பிக்கைக்குக் குரல் கொடுத்தார்: "என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது" (வ.15).

தேவன் மீது நம்பிக்கை வைப்பதில், பில்லிங்ஸ் தாவீதை பின்பற்றுகிறார். இந்த இறையியலாளர், கணவன், தந்தை தனது வாழ்க்கையில் குறுகலை எதிர்கொண்டாலும், அவரும் ஒரு விசாலமான இடத்தில் வாழ்கிறார் என்பதை ஒப்புக்கொள்கிறார். ஏன்? ஏனென்றால், கிறிஸ்துவின் பலியின் மூலம் மரணத்தின் மீது தேவன் பெற்ற வெற்றி என்பது, “கற்பனைக்கு எட்டாத விசாலமான இடமான” கிறிஸ்துவில் நாம் வாழ்வதைக் குறிக்கிறது. அவர் விளக்குவது போல், "பரிசுத்த ஆவியானவரால் அவருடைய வாழ்க்கையில் பங்கெடுப்பதை விடப் பரந்த மற்றும் விசாலமானது எது?"

நாமும் புலம்பி அழலாம், ஆனால் நம்மை வழிநடத்தவும் வழிகாட்டவும்  தேவனிடம் அடைக்கலம் புகலாம் (வ.1,3). நாம் ஒரு விசாலமான இடத்தில் வாழ்கிறோம் என்பதை தாவீதுடன் உறுதிப்படுத்த முடியும்.

பெருமதிப்புமிக்க பயம்

“எனக்கு மரண பயத்தைப்பற்றி கொஞ்சம் தெரியும். ஏழு ஆண்டுகளுக்குமுன் எனக்குக் குணமாகாத புற்றுநோய் இருப்பதை நான் அறிந்தபோது.. கடுமையான, அலைக்கழிக்கிற, நிலைகுலையச்செய்து மூழ்கடிக்கும் பயத்தை உணர்ந்தேன்" என்று ஜெரமி எழுதுகிறார். ஆனால் தேவனுடைய பிரசன்னத்தைச் சார்ந்துகொள்ளவும், தனது மரணபயத்திலிருந்து தேவனுக்கேற்ற பயபக்திக்குக் கடந்துபோகவும் அவர் கற்றுக்கொண்ட பிறகு, தனது பயத்தைக் கையாள அறிந்துகொண்டார். ஜெரமியை பொறுத்தமட்டில் அதின் பொருள், “மரணத்தை ஜெயமாக விழுங்கு(ம்)வார்” (ஏசாயா 25:8) இந்த அண்ட சராசரத்தின் சிருஷ்டிகரைப் பற்றின வியப்போடு இருப்பதும், அதேநேரம் தேவன் தன்னை அறிந்து நேசிக்கிறார் என்பதை ஆழமாகப் புரிந்துகொள்வதுமே.

கர்த்தருக்குப் பயப்படுகிற பயம்; அதாவது நமது பரிசுத்த தேவனைக் குறித்த ஆழமான மரியாதையும், வியப்புமே. வேதாகமம் முழுவதும் இழைந்தோடும் கருப்பொருள் இதுவே. நீதிமொழிகள் எனும் தொடர்ச்சியான ஞான வார்த்தைகளால் தனது மகனைக் கர்த்தருக்குப் பயப்படும்படி சாலொமோன் ராஜா அறிவுறுத்தினார். தனது மகன், அவனுடைய “செவியை ஞானத்திற்குச் சாய்த்து” அதை “புதையல்களைத் தேடுகிறதுபோல்” தேடும்போது, அவன் “கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று.. உணர்ந்து,  தேவனை அறியும் அறிவை” (நீதிமொழிகள் 2:2,4-5) கண்டடைவான். ஞானம் மற்றும் அறிவோடும், நல்யோசனையையும் புத்தியையும் பெறுவான் (வ.10-11).

நாம் பலவகையான சவால்களைச் சந்தித்து, நடுக்கத்தையும் பயத்தையும் அனுபவிக்கும்போதுதான் நாம் பெலவீனர்களென்று நினைவூட்டப்படுகிறோம். ஆனால் நாம் தேவனிடம் திரும்பி, அவரிடம் உதவி கேட்டு, அவருக்கு முன் நம்மைத் தாழ்த்தி, அவரை பயபக்தியோடு பணிந்துகொள்ளுகையில்; நாம் நமது பயத்தைக் கடந்து அவரைப்பற்றிய ஆரோக்கியமான பயத்திற்கு நேராக நடக்க அவர் நமக்கு உதவுவதைக் காண்போம்.

 

தேவனின் கரம்

1939 ஆம் ஆண்டில், பிரிட்டன் சமீபத்திய போரில் ஈடுபடுகையில், அரசர் ஆறாம் ஜார்ஜ் தனது கிறிஸ்துமஸ் தின வானொலி ஒலிபரப்புரையில் ஐக்கிய இராச்சியம் மற்றும் காமன்வெல்த் நாடுகளின் குடிகள் தேவன் மீது நம்பிக்கை வைக்குமாறு ஊக்குவிக்க முயன்றார். அவரது தாயார் விலைமதிப்பற்றதாகக் கண்ட ஒரு கவிதையை மேற்கோள் காட்டி, அவர் கூறினார்: “இருளை எதிர்கொண்டு, தேவனின் கரத்தில் உன் கரத்தை ஒப்புவி. அதுவே உனக்கு வெளிச்சத்தைக் காட்டிலும் சிறந்ததும், நீ அறிந்த பாதையைக் காட்டிலும் பாதுகாப்பாகவும் இருக்கும்". புத்தாண்டில் என்ன நடக்கும் என்பதை அவர் அறியார், ஆனால் வரப்போகும் துக்கமான நாட்களில் அவர்களை "வழிகாட்டி, நிலைநிறுத்த" அவர் தேவனையே நம்பினார்.

ஏசாயா புத்தகம் உட்பட வேதாகமத்தில் பல இடங்களில் தேவனின் கரம் காணப்படுகிறது. இந்த தீர்க்கதரிசி மூலம், தேவன் தம்முடைய ஜனங்களை அவர்களுடைய சிருஷ்டிகராக, “முந்தினவரும்.. பிந்தினவருமா(க)மே” (ஏசாயா 48:12) இருப்பவர் அவர்களுடன் தொடர்ந்து இடைப்படுவார் என்று நம்பும்படிக்கு அழைத்தார். அவர் சொல்வது போல், "என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது" (வ.13). அவர்கள் அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், திராணியற்றவர்களை நோக்கக் கூடாது. அனைத்திற்கும் மேலாக, அவர் "இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர்" (வ.17).

புத்தாண்டை எதிர்நோக்கி இருக்கும் நாம் எதை எதிர்கொண்டாலும், அரசர் ஜார்ஜ் மற்றும் ஏசாயா தீர்க்கதரிசி அளித்த ஊக்கத்தைப் பின்பற்றி, தேவன் மீது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வைக்கலாம். அப்போது, ​​நமக்கும், நமது சமாதானம் நதியைப் போலும், நமது சுகவாழ்வு சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும் (வ.18).

உணரக்கூடிய அன்பு

மருத்துவமனையில் படுக்கையிலிருந்த என் தோழி மார்கரெட் அருகில் அமர்ந்திருந்தபோது, ​​மற்ற நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் சலசலப்பு மற்றும் செயல்பாடுகளை நான் கவனித்தேன். நோய்வாய்ப்பட்ட தன் தாயின் அருகில் அமர்ந்திருந்த ஒரு இளம் பெண், "உங்களைத் தொடர்ச்சியாக வந்து விசாரிக்கும் இவர்கள் யார்?" என்று மார்கரெட்டைக் கேட்டாள். அவள், "இவர்கள் என் சபை குடும்பத்தின் உறுப்பினர்கள்!" என்று பதிலளித்தாள். அந்த இளம் பெண், தான் இதைப் போன்ற எதையும் முன்னர் கண்டதில்லை என்று குறிப்பிட்டார்; இந்த வருகையாளர்கள் "அன்பிற்கு உருவம் கொடுத்தது போல" இருப்பதாக அவள் உணர்ந்தாள். மார்கரெட் சிரித்துக்கொண்டே பதிலளித்தார், “அது எல்லாம் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலம் தேவன்மேல் நாம் வைத்திருக்கும் அன்பினால் வருகிறது!”

மார்கரெட் தனது பதிலில், சீஷன் யோவானை எதிரொலித்தார். யோவான் தனது இறுதி நாட்களில் அன்பால் நிறைந்த மூன்று நிருபங்களை எழுதினார். அவர் தனது முதல் நிருபத்தில், “தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்” (1 யோவான் 4:16) என்றார். அதாவது, "இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று" ஏற்றுக்கொள்பவர்கள் (வ.15) "அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை" (வ.13) அறிந்திருக்கிறார்கள். நாம் எப்படி பிறரை அன்புடன் கவனித்துக் கொள்ள முடியும்? "அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்" (வ.19).

தேவனின் அன்பெனும் ஈவின் காரணமாக, மார்கரெட்டைப் விசாரிப்பது எனக்கும் எங்கள் சபையில் உள்ள பிறர்க்கும் ஒரு கஷ்டமாகத் தோன்றவில்லை. மார்கரெட்டிடமிருந்து மட்டுமல்ல, அவளுடைய இரட்சகரான இயேசுவைப் பற்றிய அவளுடைய மென்மையான சாட்சியைக் கவனிப்பதன் மூலம் நான் கொடுத்ததை விட அதிகமாகப் பெற்றேன். இன்று உங்கள் மூலமாகத் தேவன்  எவ்வாறு பிறரை நேசிக்க இயலும்?

இயேசுவில் புதிய வாழ்க்கை

 

மத்திய ஆசியாவில் ஒன்றாக வளர்ந்த பஹீரும், மெடெட்டும் சிறந்த நண்பர்களாக இருந்தனர். ஆனால் பஹீர் இயேசுவின் விசுவாசியாக மாறியதும், எல்லாம் மாறியது. மெடெட் அவரைப்பற்றி அரசாங்க அதிகாரிகளிடம் புகாரளித்த பிறகு, பஹீர் கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்தார். "இந்த வாய் இனி ஒருபோதும் இயேசுவின் பெயரை உச்சரிக்காது"- காவலர் உறுமினார். மோசமாக இரத்தக் காயங்கள் பட்டிருந்தாலும், கிறிஸ்துவைப் பற்றிப் பேசுவதை அவர்கள் தடுக்க முற்படலாம், ஆனால் அவர்கள் ஒருபோதும் "அவர் என் உள்ளத்தில் செய்ததை மாற்ற முடியாது" என்றார் பஹீர்.

அந்த வார்த்தைகள் மெடெட்டையும் தொட்டது. சில மாதங்களுக்குப் பிறகு, நோய் மற்றும் இழப்பால் மெடெட் அவதிப்பட்டு; சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பகீரைக் கண்டுபிடிக்கப் பயணம் செய்தார். அவர் பெருமையைக் கைவிட்டு, தனக்கும் இயேசுவை அறிமுகப்படுத்துமாறு தனது நண்பரிடம் கேட்டார்.

பெந்தெகொஸ்தே பண்டிகையின்போது, பேதுருவைச் சுற்றித் திரண்டிருந்தவர்கள் ஊற்றப்பட்ட தேவகிருபையை கண்டும், கிறிஸ்துவைப் பற்றிய பேதுருவின் சாட்சியைக் கேட்டபோதும், ​​​​அவர்கள் " இருதயத்திலே குத்தப்பட்ட(து)வர்களாகி" (அப்போஸ்தலர் 2:37) போலவே, மெடெட் பரிசுத்த ஆவியானவர் அருளிய பாவ உணர்த்துதலில் செயல்பட்டார். பேதுரு, மக்களை மனந்திரும்பி இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற அழைத்தார். சுமார் மூவாயிரம் பேர் அவ்வாறு செய்தார்கள். அவர்கள் தங்கள் பழைய வாழ்க்கை முறைகளை விட்டுச் சென்றது போலவே, மெடெட்டும் மனந்திரும்பி இரட்சகரைப் பின்பற்றினார்.

இயேசுவுக்குள்ளான புதிய வாழ்வு என்ற பரிசு அவரை நம்பும் அனைவருக்கும் உண்டு. நாம் என்ன செய்திருந்தாலும், நாம் அவரை விசுவாசிக்கையில், ​​நமது  பாவங்கள் மன்னிக்கப்பட்ட சந்தோஷத்தை அனுபவிக்க முடியும்.

துருவிய வெண்ணெய்

ஜே. ஆர். ஆர். டோல்கியேன் இன் "தி  ஃபெல்லோஷிப் ஆஃப் தி ரிங்ஸ்" புத்தகத்தில், பில்போ பக்கின்ஸ் எனும் கதாபாத்திரம் ஆறு தசாப்தங்களாக, இருளான தீயசத்தியைக் கொண்ட ஒரு மந்திர மோதிரத்தைச் சுமந்து செல்வதன் விளைவுகளைக் காட்டுகிறது. அதன் மெதுவாக அழிக்கும் தன்மையால் சோர்ந்து, அது மந்திரவாதி கந்தால்ஃபிடம், "உனக்கு புரியும்படி சொல்லவேண்டுமானால், நான் ரொட்டியின் மீது அதிகமாகத் தடவப்பட்ட வெண்ணெய்யைப் போல, தேவையில்லாமல் இழுக்கப்பட்டும், வலுவிழந்தும் ஏன் உணர்கிறேன்?" என்று கேட்கிறது. எங்கேயாவது  "அமைதியையும், நிம்மதியையும், அறிமுகமானவர்களின் இரைச்சல் இல்லாத" இளைப்பாறுதல் தேடி தனது வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறான் பில்போ.

டோல்கினின் கதையின் இந்த அம்சம் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசி ஒருவரின் அனுபவத்தை எனக்கு நினைவூட்டுகிறது. யேசபேலிடமிருந்து தப்பி, கள்ள தீர்க்கதரிசிகளுடன் மோதிய பின்னர், எலியாவுக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. சோர்வுற்ற அவர், "போதும் கர்த்தாவே" (1 இராஜாக்கள் 19:4) என்று கூறி, தன்னை சாக அனுமதிக்குமாறு தேவனிடம் கேட்டார். அவர் தூங்கிய பிறகு, தேவதூதன் அவரை எழுப்பினார், அதனால் அவர் சாப்பிடவும் குடிக்கவும் செய்தார். அவர் மீண்டும் தூங்கினார், பின்னர் தேவதூதன் வழங்கிய உணவை மேலும் சாப்பிட்டார். புத்துயிர் பெற்ற அவர், தேவபர்வதத்திற்கு செல்ல நாற்பது நாட்களின் நடைப்பயணத்திற்கு போதுமான ஆற்றலைப் பெற்றார்.

நாம் உருத்தெரியாமல் உடைக்கப்பட்டிருக்கையில், ​​உண்மையான புத்துணர்ச்சிக்காக நாமும் தேவனை நோக்கலாம். அவருடைய நம்பிக்கை, சமாதானம் மற்றும் இளைப்பாறுதலால் நம்மை நிரப்பும்படி அவரிடம் கேட்கும் அதே வேளையில், நாம் நம் உடலைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கலாம். தேவதூதன் எலியாவை உபசரித்தது போல , தேவன் தம்முடைய புத்துணர்ச்சியூட்டும் பிரசன்னத்தை நம்மீதும் பொழிவார் என்று நாம் நம்பலாம் (பார்க்க மத்தேயு 11:28).

இயேசுவின் குணாதிசயத்தை பிரதிபலித்தல்

ஆப்கானிஸ்தானில் ஒரு கடுமையான சுற்றுப்பயணத்தின் பின், பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி ஸ்காட் மனமுடைந்து போனார். "நான் ஒரு இருண்ட இடத்திலிருந்தேன்" என அவர் நினைவு கூர்ந்தார். ஆனால் அவர் "இயேசுவைக் கண்டடைந்து,  அவரைப் பின்தொடர ஆரம்பிக்கையில்" அவரது வாழ்க்கை தீவிரமாக மாறியது. இப்போது அவர் கிறிஸ்துவின் அன்பைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள முற்படுகிறார், குறிப்பாக அவர் ஆயுதப்படைகளில் ஊனமடைந்த மற்றும் காயமடைந்த வீரர்களுக்கான சர்வதேச விளையாட்டு நிகழ்வான இன்விக்டஸ் கேம்ஸில்  தன்னுடன் போட்டியிடும் வீரர்களுடன் அதைச் செய்கிறார்.

ஸ்காட்டைப் பொறுத்தவரை, வேதவாசிப்பு, ஜெபம் மற்றும் ஆராதனை பாடல்களைக் கேட்பது ஆகியவை விளையாட்டுகளுக்குச் செல்வதற்கு முன் அவரை நிலைப்படுத்துகிறது. பின்னர், அங்குப் போட்டியிடும் சக வீரர்களுக்கு “இயேசுவின் குணத்தைப் பிரதிபலிக்கவும், இரக்கம், மென்மை மற்றும் கருணை காட்டவும்” தேவன் அவருக்கு உதவுகிறார்.

கலாத்தியாவின் விசுவாசிகளுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய ஆவியின் கனிகளில் சிலவற்றை ஸ்காட் இங்கே குறிப்பிடுகிறார். அவர்கள் கள்ள போதகர்களின் தாக்கத்தின் கீழ் போராடினர், எனவே பவுல் அவர்களை "ஆவியினால் வழிநடத்தப்பட்டு" (கலாத்தியர் 5:18) தேவனுக்கும் அவருடைய கிருபைக்கும் உண்மையாக இருக்கும்படி ஊக்குவிக்க முயன்றார். அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் ஆவியின் கனியாகிய  "அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்" (வ. 22-23) ஆகியவற்றை வெளிப்படுத்துவார்கள்.

தேவனின் ஆவியானவர் நம்முள் வசிப்பதால், நாமும் ஆவியின் நற்குணத்தினாலும் அன்பினாலும் நிறைந்திடுவோம். நாமும் நம்மைச் சூழ்ந்திருப்பவர்களிடம் கனிவும் கருணையும் காட்டுவோம்.

தேடி மீட்டெடு

சில நண்பர்கள் புயல் வானிலை முன்னறிவிப்பு மாறும் என்ற நம்பிக்கையில் ஆங்கிலக் கால்வாயில் படகு சவாரி செய்தனர். ஆனால் காற்று உயர்ந்தது, அலைகள் கொந்தளித்து, அவர்களின் கப்பலின் பாதுகாப்பை அச்சுறுத்தியது. எனவே அவர்கள் மீட்புக்குழுவின் (ராயல் நேஷனல் லைஃப்போட் இன்ஸ்டிடியூஷன்) உதவிக்கு வானொலி செய்தனர். சில பதட்டமான தருணங்களுக்குப் பிறகு, அவர்கள் தங்கள் மீட்பவர்களை தூரத்தில் பார்த்தார்கள். அவர்கள் விரைவில் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதை நிம்மதியுடன் உணர்ந்தனர். அதற்குப் பிறகு எனது நண்பர், “மக்கள் கடல் விதிகளை புறக்கணித்தாலும் இல்லாவிட்டாலும், மீட்புக்குழு அவர்களை காப்பாற்ற எப்போதும் ஆயத்தமாயிருக்கிறது” என்று பெருமையுடன் சொன்னார். 

அவர் அந்த கதையை விவரிக்கையில், தேவனுடைய தேடுதல் மற்றும் மீட்பு பணியை இயேசு எவ்வாறு வழிநடத்துகிறார் என்று நான் நினைத்தேன். நம்மில் ஒருவராக வாழ, மனிதனாக பூமிக்கு வந்தார். அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம், நம்முடைய பாவமும் கீழ்ப்படியாமையும் தேவனிடமிருந்து நம்மைப் பிரித்தபோது அவர் நமக்கு ஒரு மீட்புத் திட்டத்தை வழங்கினார். கலாத்தியாவில் உள்ள தேவாலயத்திற்கு எழுதும் போது, பவுல் இந்த உண்மையை வலியுறுத்துகிறார்: “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும்... அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி... நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்” (கலாத்தியர் 1:3-4). கலாத்தியர்களுக்கு இயேசுவின் மரணத்தின் மூலம் கிடைத்த புதிய வாழ்க்கையின் பரிசை பவுல் நினைவுபடுத்தினார். இதனால் அவர்கள் நாளுக்கு நாள் தேவனை கனப்படுத்துவார்கள்.

நம்மைக் காப்பாற்றிய இயேசு, நம்மைத் தொலைந்து போகாமல் காப்பாற்ற மனமுவந்து மரித்தார். அவர் அவ்வாறு செய்ததால், தேவனுடைய ராஜ்யத்தில் நமக்கு நித்திய வாழ்வு இருக்கிறது. மேலும் நன்றியுடன் நம் சமூகத்தில் உள்ளவர்களுடன் வாழ்வளிக்கும் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்.

தேவனை பற்றிக்கொள்ளுதல்

ரேகாவை பற்றி சுமதி கூறும்போது, ​​அவள் தன் தோழியின் "தேவன் மீதான ஆழமான, காலத்தால் சோதிக்கப்பட்ட விசுவாசம்" மற்றும் நாட்பட்ட பலவீனமான நிலையில் வாழும் போதும் அவள் வளர்த்துக் கொண்ட சகிப்புத்தன்மையைப் பெரிதாகப் பேசுவாள். பதினைந்து வருடங்களுக்கும் மேலாக, ரேகா தனது அறையின் சிறிய ஜன்னலிலிருந்து நிலவைக்  கூட பார்க்க முடியாமல் படுத்த படுக்கையாய் கிடந்தாள். ஆனால் அவள் நம்பிக்கையை இழக்கவில்லை; அவள் தேவனை நம்புகிறாள்; வேதாகமத்தைப் படிக்கிறாள், கற்கிறாள். இதை, “மனச்சோர்வுக்கு எதிரான கடுமையான யுத்தத்தின் போது எவ்வாறு உறுதியாக நிற்பது என்று அவள் அரிவாள்” எனச் சுமதி விவரிக்கிறாள்.

ரேகாவின் உறுதியையும் விடாமுயற்சியையும், பெலிஸ்தியரிடமிருந்து தப்பியோட மறுத்த தாவீது ராஜாவின் காலத்திலிருந்த எலெயாசார் எனும் வீரனோடு சுமதி ஒப்பிடுகிறாள். முறிந்தோடிய படைகளோடு சேருவதற்குப் பதிலாக, அவன் “எழும்பித் தன் கைசலித்து, தன் கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளுமட்டும் பெலிஸ்தரை வெட்டினான்” (2 சாமுவேல் 23:10). தேவனுடைய வல்லமையின் மூலம், "அன்றையதினம் கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார்" (வச. 10). சுமதி அவதானிப்பதுபோல், எலெயாசார் உறுதியுடன் வாளை பற்றிக்கொண்டதுபோல, ரேகாவும் "தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தை" (எபேசியர் 6:௧௭) பற்றிக்கொள்கிறாள். அதிலே, தேவனிலே, அவள் தன் பெலனைக் காண்கிறாள்.

நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தாலும் சரி அல்லது நாள்பட்ட நோயால் மனச்சோர்வடைந்தாலும் சரி, நம் நம்பிக்கையின் களஞ்சியத்தை ஆழப்படுத்தவும், சகிக்கும்படி நமக்கு உதவவும் நாமும் தேவனை நோக்கிப் பார்க்கலாம். கிறிஸ்துவில் நாம் நமது பலத்தைக் காண்கிறோம்.

 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனால் ஒருபோதும் புறக்கணிக்கப்படவில்லை

“சில நேரங்களில் நான் ஏதோ கண்ணுக்கே தெரியாதவள் போல உணர்கிறேன்" விமலா தன் தோழியிடம் பேசும்போது இந்த வார்த்தைகள் காற்றில் ஊசலாடின. விமலாவை அவள் சிறு குழந்தைகளுடன் கைவிட்டு, அவளது கணவன் வேறொறுவளோடு போய்விட்டான். அவள், "நான் அவருக்கு என் வாழ்விலேயே சிறந்த ஆண்டுகளைக் கொடுத்தேன். இப்போது யாரேனும் என்னைப் பார்த்துக்கொள்வார்கள் என்றோ என்னை அறிவதற்கு நேரம் ஒதுக்குவார்களோ என்று எனக்குத் தெரியவில்லை" என்றாள்.

அவளுடைய தோழி பதிலளித்தாள்: "நான் மிகவும் வருந்துகிறேன். எனக்கு ஆறு வயதாக இருந்தபோது என் அப்பாவும் போய்விட்டார். அது எங்களுக்கு, குறிப்பாக அம்மாவுக்குக் கடினமாக இருந்தது. ஆனால் ஒரு இரவில் அவள் என்னைத் தூங்கவைத்த போது, நான் மறக்கவே இல்லாத ஒன்றைச் சொன்னால்: 'தேவன் தன் கண்களை மூடுவதேயில்லை'. நான் வளர்ந்த பிறகு, ​​தேவன் என்னை நேசிப்பதையும், எனக்கு எப்போதும் தூங்கும்போதும் கூட காவலாய் இருப்பதையும் அவள் எனக்குக் கற்பிக்க முயன்றதை விலக்கினாள்".

சீனாய் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த ஒரு சவாலான நேரத்தில் தமது ஜனங்களுடன் பகிர்ந்துகொள்ள மோசேக்குத் தேவன் அருளிய வார்த்தைகளை வேதாகமம் முன்வைக்கிறது: “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே” (எண்ணாகமம் 6:24-26). இந்த ஆசீர்வாதமானது ஜனங்கள் மீது ஆசாரியர்களால் மொழியப்பட வேண்டும்..

யாராவது நம்மைப் பார்க்கிறார்களா அல்லது உண்மையிலேயே புரிந்துகொள்கிறார்களா என்று நாம் ஏங்குகிற நிலைமையான வாழ்க்கையின் வனாந்தரங்களில் கூட தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். தேவனின் தயவான அவரது பிரகாசிக்கும் முகமும் மாறிடாத அன்பும் அவரை நேசிப்பவர்களை நோக்கித் திரும்புகிறது, நம்முடைய வலியினிமித்தம், அவரை நம்மால் உணர முடியாவிட்டாலும் கூட, தேவனுக்கு மறைவானவர்கள் என்று யாரும் இல்லை.

நமது திட்டங்களும் தேவ திட்டங்களும்

பல ஆண்டுகளுக்கு முன்பு, என் கணவர் தனது சபையைச் சேர்ந்த ஒரு குழுவினருடன் ஆப்பிரிக்காவுக்குச் செல்ல தீர்மானித்தார். கடைசி நிமிடத்தில், குழுவினர் பயணிக்க முடியாமல் தடைப்பட்டனர். அனைவரும் ஏமாற்றமடைந்தனர், ஆனால் விமான கட்டணம், தங்குமிடம் மற்றும் உணவுக்காக அவர்கள் சேகரித்த பணத்தை அவர்கள் பார்க்க முயற்சித்த மக்களுக்கு நன்கொடையாக வழங்கினர். வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலமாக ஒரு கட்டிடத்தைக் கட்டுவதற்கு மக்கள் அதைப் பயன்படுத்தினர்.

சமீபத்தில், ஒரு ஜெபக்கூட்டத்தில், ​​​​என் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு பயணம் செய்திருந்த கிராமத்தில் வாழ்ந்த ஒருவரைச் சந்தித்தார். இந்த நபர் ஒரு ஆசிரியர், அவர் தினமும் அதே கட்டிடத்தின் வழியாக நடந்து செல்வதாகக் கூறினார். அப்பகுதியில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உபயோகமாகத் தேவன் அதைப் பயன்படுத்தினார் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

நம்முடைய திட்டங்களும், விருப்பங்களும் தேவனின் மனதில் கொண்டிருப்பவற்றோடு எப்போதும் ஒத்துப்போவதில்லை. ஏனென்றால்,  "என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்" (ஏசாயா 55:8). தேவனுடைய வழிகள் நம்மிடமிருந்து வேறுபட்டவை மாத்திரம் அல்ல; அவருடைய வழிகள் "உயர்ந்தவை" மற்றும் சிறந்தவை, ஏனெனில் அவர் செய்வதெல்லாம் அவர் யார் என்பதோடு ஒத்துப்போகிறது (வ.9). அவருக்கு ஊழியஞ்செய்வதற்கான நமது முயற்சிகள் நாம் திட்டமிட்டபடி நடக்காதபோது இந்த சத்தியம் நமக்கு நம்பிக்கையூட்டுகிறது.

சில சூழ்நிலைகளில் தேவன் இடைப்பட்டதை நாம் அறிந்துகொள்வதற்கு, பல ஆண்டுகள் கழித்துத் திரும்பிப் பார்க்க நேரிடலாம். இருப்பினும், தற்போதைக்கு, அவருடைய நாமத்தால் உலகத்தை நாம் தொடர்ந்து எதிர்கொள்ளுகையில், ​​தேவன் எப்போதும் வல்லமையுடன் செயல்படுகிறார் என்பதை நாம் நினைவில் கொள்ளலாம் (வ.11).

 

தேவன் நம் பின்னே ஓடி வருகிறார்

பல ஆண்டுகளாக, சஞ்சய் ஒரு அடிமைத்தனத்துடன் போராடினார், அது அவரை தேவனிடம் நெருங்கவிடாமல் தடுத்தது. அவருடைய அன்புக்கு நான் எவ்வாறு தகுதியுடையவனாக இருக்க முடியும்? என்று அவர் குழம்பினார். எனவே, அவர் தொடர்ந்து சபைக்குச் சென்றபோதும், ​​தேவனிடம் தன்னை இணைக்கக் கூடாதபடிக்கு ஒரு பெரும் பள்ளம் இருப்பதாக உணர்ந்தார்.

ஆனாலும், சஞ்சய் எப்பொழுது ஊக்கமாய் ஜெபித்தாலும், தேவன் அவருக்குப் பதிலளிப்பதாகத் தோன்றியது. கடினமான காலங்களில் அவரை உற்சாகப்படுத்தவும் ஆறுதலளிக்கவும் தக்கவர்களைத் தேவன் அனுப்பினார். சில வருடங்களுக்குப் பிறகு, தேவன் தன்னைத் தொடர்ந்து விரட்டி வருவதையும், அவர் எப்போதும் தன்னை நேசிப்பதையும் அக்கறை காட்டுவதையும் சஞ்சய் உணர்ந்தார். அப்போதுதான் தேவனின் மன்னிப்பிலும் அன்பிலும் அவர் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார். "இப்போது, ​​நான் மன்னிக்கப்பட்டேன் என்பதை அறிவேன். மேலும் நான் இன்னும் என் அடிமைத்தனத்துடன் போராடிக் கொண்டிருந்தாலும், அவரிடம் நெருங்கும்படிக்கு என்னைத் தேவனுக்கு விட்டுக்கொடுக்க முடியும்" என்று அவர் கூறினார்.

எசேக்கியேல் 34:11-16 தம் மக்களைப் பின்தொடர்ந்த ஒரு தேவனைப் பற்றி நமக்குச் சொல்கிறது. "நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்" என்று அவர் கூறினார், அவற்றை மீட்பதாகவும், அவற்றுக்கு அபிரிதமானவற்றை வழங்குவதாகவும் வாக்களித்தார் (வ.11). அவர்களுடைய மனுஷீகமான தலைவர்கள் அவர்களைக் கைவிட்ட பிறகும், அவர்களும் தங்கள் மெய்யான மேய்ப்பருக்குக் கீழ்ப்படியாமல் போனபோதும் (வ.1-6) இது நிகழ்ந்தது. நாம் உதவியற்ற சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சரி அல்லது நம்முடைய சொந்த பாவத்தின் விளைவுகளுடன் போராடிக் கொண்டிருந்தாலும் சரி, தேவன் நம்மை அன்பினால் பின்தொடர்கிறார். அவருடைய இரக்கத்தாலும், கிருபையாலும், அவர் நம்மை மீண்டும் அவரிடமாய் இழுக்கிறார். நீங்கள் தேவனை மறந்திருந்தால், அவரிடம் திரும்புங்கள். பின்னர், அவர் வழிநடத்துவதற்கேற்ப, ​​ஒவ்வொரு நாளும் அவருடன் தொடர்ந்து நடங்கள்.