எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

பீட்டர் சின்கட்டுரைகள்

ஆவியானவரோடு நடத்தல்

பத்தாயிரம் மணி நேரம். எந்த ஒரு கைத்தொழிலிலும் கைதேர்ந்தவராக வேண்டுமெனின், இவ்வளவு நேரத்தை, அதற்குச் செலவிட வேண்டுமென, எழுத்தாளரான மால்காம் கிளாட் வெல் பரிந்துரைக்கிறார். மிகச் சிறந்த கலைஞர்களும், இசைஞர்களும் நிபுணத்துவத்தை அடைவதற்கு, அவர்களின் சுபாவத் திறமைமட்டும் போதுமானதாக இல்லை. அவர்கள், ஒவ்வொரு நாளும், தங்களின் கலையில் மூழ்கி, பயிற்சி எடுத்தப் பின்னரே இத்தகைய நிலையை அடைய முடிந்தது.

பரிசுத்த ஆவியின் வல்லமைக்குள் வாழக் கற்றுக் கொள்வதற்கும், இத்தகைய ஒரு மனநிலையே நமக்குத் தேவை என்பது, சற்று வினோதமாகத் தோன்றலாம். கலாத்தியரில்,  உங்களை தேவனுக்கென்று பிரித்துக்கொள்ளுங்கள் என்று கூறி, பவுல் சபையின் மக்களை ஊக்கப்படுத்துகின்றார். வெறுமனே சட்ட திட்டங்களை கைக்கொள்வதன் மூலம் இதனை அடைய முடியாது, நாம் பரிசுத்த ஆவியானவரோடு நடக்க வேண்டும் என்று பவுல் கூறுகிறார். “நடத்தல்” என்பதற்கு, கலாத்தியர் 5:16 ல் பவுல் பயன் படுத்திய கிரேக்க வார்த்தை (peripateo), ஒன்றினைச் சுற்றி சுற்றி நடத்தல் அல்லது பயணித்தல் என்பதாகப் பொருள்படும். எனவே, ஆவியானவரோடு நடத்தல் என்பதன் மூலம் பவுல் கூற விரும்புவதென்னவெனின், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை ஒரு முறை மட்டும் அநுபவிப்பதல்ல, அனுதினமும் அவரோடு பயணம் செய்வதேயாகும்.

பரிசுத்த ஆவியானவர் நம்மோடிருந்து, அவர் நமக்குச் சொல்லும் வேலையை நாம் செய்யும் படி, நமக்கு ஆலோசனை தந்து, வழிநடத்தி, தேற்றும்படி, அவர் நம்மை முழுவதும் நிரப்புமாறு நாம் ஜெபிப்போம். இவ்வாறு நாம் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்படும் போது (வ.18), அவருடைய வார்த்தையை கேட்பதிலும், அவருடைய வழிகாட்டலின்படி நடப்பதிலும் நாளுக்கு நாள் முன்னேற்றம் காண்போம். பரிசுத்த ஆவியானவரே, இன்றைக்கும், இனிவரும் நாட்களிலும் நான் உம்மோடு நடக்க, எனக்கு உதவியருளும்.

இயேசுவும், பெரிய கதையும்

நல்லெண்ணம் கொண்ட ஒரு சிநேகிதி, எங்களுடைய குழந்தைகளை ஒரு நாள் கவனித்துக்கொள்வதாகவும், அந்நாளில் நாங்கள் இருவரும் விரும்பும் இடத்திற்குச் சென்று வரும்படியும், எங்களுக்கு உதவி செய்தாள். “நீங்கள் ஏதாவது உயர் தர இடத்திற்குச் செல்ல வேண்டும்’’ என்றாள். நாங்கள் கடைக்குச் சென்று, வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்தோம். கடைச் சாமான்களோடு வந்து இறங்கிய  எங்களைப் பார்த்த என்னுடைய சிநேகிதி, நாங்கள் ஏன் வித்தியாசமாக எங்கும் செல்லவில்லை என்று கேட்டாள். ஒரு நாளைச் சிறப்பிப்பது என்பது, அந்நாளில் என்ன செய்தோம் என்பதைச் சார்ந்ததல்ல, அந்நாளில் யாரோடு இருந்தோம் என்பதையே சாரும் என்று கூறினேன்.

வேதாகமத்தில் சில புத்தகங்கள், தேவன் நேரடியாகப் பேசினதை, அல்லது செய்ததை விளக்காமல், சில சரித்திரங்களைக் கூறும். அப்படிப் பட்டவைகளில் ஒன்று ரூத் புத்தகம். சிலரை, அது உணர்ச்சிகரமான கதையாக, ஒரு உறவில் இருவர் இணைக்கப்படுவதையே அது விளக்குகின்றது.

ஆனால், உண்மையில் அசாதாரணமான ஒன்று அங்கு கூறப்பட்டுள்ளது. ரூத்தின் கடைசி அதிகாரத்தில், ரூத்தும் போவாஸும்  இணைந்து ஓபேத் என்ற குமாரனைப் பெறுகின்றனர், அவன்தான் தாவீதின் தாத்தா (4:17). மத்தேயு 1:1ல் தாவீதின் குடும்பத்தில் இயேசு பிறக்கின்றார் என்று காண்கின்றோம். ரூத், போவாஸ் என்பவர்களின் சாதாரண வாழ்க்கையில், தேவன், வியத்தகு திட்டத்தையும், நோக்கத்தையும் செயல் படுத்துவதை வெளிப்படுத்துகின்றார்.

நம்முடைய வாழ்க்கை சாதாரணமாகவும், எந்த ஒரு சிறப்பான திட்டமும் இல்லாதது போலவும் காணப்படலாம். ஆனால் கிறிஸ்துவுக்குள் நம் வாழ்வைப் பார்த்தோமானால், நம்முடைய சாதாரண சூழல்களிலும், உறவுகளிலும் ஓர் அழியாத  முக்கியத்துவத்தைக் காணமுடியும்.

நம்முடைய ஆசிர்வாதங்களும், அவருடைய அன்பும்

2015 ஆம் ஆண்டு ஒரு பெண், காலம் சென்ற தன் கணவனுடைய கம்ப்யூட்டரை மறு சுழற்சி மையத்திற்கு கொடுத்தாள். அந்த கம்ப்யூட்டர் 1976ல் உருவாக்கப்பட்டது. ஆனால், அது எப்பொழுது செய்யப்பட்டது என்பதைவிட, அது யாரால் உருவாக்கப்பட்டது என்பதே முக்கியம். அது ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகரான ஸ்டீவ் ஜாப்ஸ் என்பவர் தன்னுடைய கையால் உருவாக்கிய 200 கம்ப்யூட்டர்களில் ஒன்று. அதன் மதிப்பு 0.25 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டது ! சில பொருட்களின் உண்மையான மதிப்பு அதை உருவாக்கியவராலேயே கிடைக்கின்றது.

தேவன் நம்மை அவருடைய சாயலால் உருவாக்கியதால் நாம் அவருக்கு அதிக விலையேறப் பெற்றவர்கள் (ஆதி. 1:27). சங்கீதம் 136ல் ஆதி இஸ்ரவேலர்களின் சில முக்கிய நிகழ்வுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து அவர்கள் விடுபட்ட விதம், (வச. 11-12), வனாந்தரப் பயணம் (வச. 16), கானான் தேசத்தைச் சுதந்தரித்தல் (வச. 21-22) என்பன குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேல் சரித்திரத்தின் நிகழ்வுகள், ஒவ்வொரு முறை குறிப்பிடப்படும் போதும், அதனோடு “அவர் கிருபை என்றுமுள்ளது” என்ற பல்லவி திரும்பத் திரும்ப வருகின்றது. இந்தப் பல்லவி, இஸ்ரவேலரின் சரித்திர நிகழ்வுகள் தற்செயலாய் நடந்தவையல்ல என்பதை அவர்களுக்கு நினைவு படுத்துகின்றது. ஒவ்வொரு நிகழ்வும், தேவன் திட்டமிட்டு செயல் படுத்துவதையும், தான் படைத்த ஜனங்களின் மேல் அவர் வைத்துள்ள மாறாத அன்பினையும் காட்டுகிறது.

என்னுடைய வாழ்வில் தேவன் கிரியை செய்கிறதையும், அவருடைய அன்பின் வழிநடத்துதலையும், நன்மையான எந்த ஈவும், பூரணமான எந்த வரமும், பரத்திலிருந்து உண்டாகி, என்னை உருவாக்கி, என்னை நேசிக்கின்ற சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது. (யாக். 1:17) என்பதையும் நான் நினைவுகூற அடிக்கடி தவறி விடுகிறேன். நம் வாழ்வில் வரும் ஒவ்வொரு ஆசிர்வாதமும், நம் மீது மாறாத அன்பு கொண்டுள்ள தேவனாலேயே வருகின்றது என்பதை புரிந்துகொள்ள நீயும், நானும் கற்றுக்கொள்ள வேண்டும்.

இரண்டாம் தரமல்ல

முதலாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வந்த போது, அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்சன், உலகத்திலேயே மிகவும் வலிமை வாய்ந்த மனிதனாகப் பார்க்கப்பட்டார். 1919 ஆம் ஆண்டு பேரதிர்ச்சி தரும் பக்கவாதம் அவரைத் தாக்கிய போது, அவருடைய மனைவி அனைத்து அலுவல்களையும் கவனித்தார். அவருடைய கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியவை எவை என்பதைத் தீர்மானித்தார். ஒரு சிறிய காலத்திற்கு அமெரிக்க அதிபராக அவருடைய மனைவி ஈடித் வில்சன் செயல் பட்டாரென வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். 

ஆதி திருச்சபையின் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிடும்படிச் சொன்னால், நாம் கொடுக்கும் வரிசையில் பேதுரு, பவுல், தீமோத்தேயு போன்றோர் இடம் பெறுவர். ஏனெனில் இவர்களின் திறமைகளைக் குறித்து சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், ரோமர் 16ஆம் அதிகாரத்தில் பவுல் வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்த, கிட்டத்தட்ட நாற்பது பேரைக் குறிப்பிடுகின்றார். அதில் பெண்கள், ஆண்கள், அடிமைகள், யூதர்கள் மற்றும் புறஜாதியினர் அடங்குவர். இவர்களனைவரும் சபை வளர்ச்சியில் வெவ்வேறு வகைகளில் பங்களித்துள்ளனர்.

இவர்களை இரண்டாம் நிலை நபர்களாக பவுல் கருதவேயில்லை. அவர் இவர்களுக்கு உயர்ந்த மரியாதையைக் கொடுக்கின்றார் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அப்போஸ்தலருக்குள் பெயர் பெற்றவர்கள் என இவர்களைப் பற்றி குறிப்பிடுகின்றார் (வச. 7) இவர்கள் இயேசுவுக்காக செய்த பணியினிமித்தம் போற்றப்பட வேண்டியவர்கள்.

நம்மில் அநேகர் தங்களை சபையின் தலைவர்களாக இருக்க தகுதியற்றவர்களாகக் கருதுவதுண்டு. ஆனால், உண்மையில் ,ஒவ்வொருவரிடமும் பிறருக்கு உதவி செய்யக்கூடிய திறமைகளுள்ளன.தேவனுடைய பெலத்தால், நம்முடைய திறமைகளை அவருடைய நாம மகிமைக்காக நாம் பயன்படுத்துவோம்.

 

தண்ணீரைக் காட்டிலும் மேலானது.

என்னுடைய குழந்தைப் பருவத்தில், என்னுடைய ஆலயத்தைக் குறித்து என் நினைவில் தங்கியிருக்கும் ஒரு காட்சி -  எங்கள் போதகர் ஆலயத்தின் நடுப் பகுதி வழியே நடந்து வந்து “ஞானஸ்நானத்தின் தண்ணீரை நினைத்துக் கொள்ளுங்கள்” என்பார். ஞானஸ்நானத்தின் தண்ணீரை நினைவு படுத்துவதா? நான் எனக்குள்ளாகவே கேட்டுக் கொள்வேன்.  தண்ணீரை எப்படி நினைவில் வைப்பது? அத்தோடு அவர் ஒவ்வொருவர் மீதும் தண்ணீரைத் தெளிப்பார். குழந்தையாக இருந்த எனக்கு அது மகிழ்ச்சியையும் குழப்பத்தையும் கொடுத்தது.

நாம் ஏன் ஞானஸ்நானத்தை நினைவு கூர வேண்டும்? ஒரு மனிதன் ஞானஸ்நானம் பெறும் போது தண்ணீரை விட மேலான அநேகக் காரியங்கள் அதில் அடங்கியுள்ளன. ஞானஸ்நானம் என்பது இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தால் நாம் அவரையே தரித்துக் கொள்கின்றோம் (கலா. 3:27) என்பதன் அடையாளம். இன்னும் சொல்வோமாகில், நாம் தேவனுக்குச் சொந்தமானவர்களென்பதையும், அவர் நம்மில், நம்மோடு வாசமாயிருக்கிறார் என்பதையும் நாம் ஞானஸ்நானத்தின் மூலம் கொண்டாடுகின்றோம்.

நாம் சொல்லிக் கொள்ளக் கூடிய அளவு எந்த முக்கியத்துவமும் வாய்ந்தவர்களல்ல, ஆனால்  நாம் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டவர்களானால் நம்முடைய அடையாளம் அவர் மூலமாய் வெளிப்படுகின்றது.. நாம் தேவனுடைய பிள்ளைகளாகின்றோம் (வச. 26) என இப்பகுதி தெரிவிக்கின்றது. நாம் நியாயப் பிரமாணத்தைக் கைக்கொண்டதாலல்ல, தேவன் மீதுள்ள விசுவாசத்தினாலேயே நீதிமான்களாக்கப் பட்டோம் (வச. 23-25). எனவே, நமக்குள் ஆண், பெண் என்றோ, கலாச்சாரத்தினாலோ அல்லது தகுதியினடிப்படையிலோ எந்தப் பிரிவும் இல்லை. நாம் விடுதலையாக்கப்பட்டு கிறிஸ்துவுக்குள் நாமனைவரும் ஒன்றாயிருக்கின்றோம். இப்பொழுது, நாம் அவருக்குச் சொந்தமானவர்கள் (வ 28)

எனவே, நாம் ஞானஸ்நானத்தை  நினைவு கூரவும், அதன் முக்கியத்துவத்தை உணரவும் காரணங்களுள்ளன. நாம் வெறுமனே ஞானஸ்நானத்தை சடங்காச்சாரமாகப் பார்க்காமல்,  நாம் தேவனுக்குச் சொந்தமாகிறோம், அவருடைய பிள்ளையாகிறோம், என்பதை நினைவில் கொள்ளுவோம்.  நம்முடைய அடையாளமும், எதிர் காலமும், ஆவியின் விடுதலையும் அவருக்குள் உண்டாயிருக்கின்றது.

நாம் யார்?

என் வருங்கால மனைவியை என் குடும்பத்தினரிடம் அறிமுகம் செய்வதற்காக அழைத்துச் சென்றேன். என்னோடு பிறந்த, எனக்கு மூத்தவர்களான இருவர், கண்களில் மிளிர்ச்சியுடன், “இவனிடம் உனக்கு எது பிடித்திருந்தது?” என்று கேட்டார்கள். தனக்குப் பிடித்தளவுக்கு ஒரு நல்ல மனிதனாக தேவனுடைய கிருபையால் நான் வளர்ந்திருப்பதாக சிரித்தவாறே பதிலளித்தாள்.

அது ஒரு புத்திசாலித்தனமான பதில். நம்முடைய கடந்தகாலத்தைக் கடந்து, தேவன் எவ்வாறு நம்மைப் பார்க்கிறார் என்பதை அந்தப் பதில் மிகசரியாகப் பிரதிபலிக்கிறது. தேவனுடைய சபையை உபத்திரவப்படுத்தி வந்த சவுல் கிறிஸ்துவின் பிரசன்னத்தால் குருடாகிறார், அவரைக் குணப்படுத்தும்படி அனனியாவிடம் கிறிஸ்து சொல்கிறார் (அப். 9). அனனியாவுக்கு நம்பமுடியவில்லை, இயேசுவை விசுவாசித்தவர்களை உபத்திரவப்படுத்தி, மரணத்தண்டனைக்கு ஒப்புக்கொடுத்த சவுலையா தான் குணமாக்கவேண்டுமெனக் கேட்கிறார். சவுல் எப்படியிருந்தான் என்று பார்க்காமல், அவன் எப்படி மாறியிருக்கிறான் என்று பார்க்குமாறு அனனியாவிடம் தேவன் சொல்லுகிறார். புறஜாதியார் (யூதர் அல்லாதவர்கள்), ராஜாக்கள் உட்பட (வச. 15) அப்போது அறியப்பட்டிருந்த தேசங்கள் முழுவதிற்கும் நற்செய்தியைக் கொண்டுசெல்கிற சுவிசேஷகனாக மாறியிருந்தார். சவுலை அனனியா ஒரு பரிசேயனாகவும் உபத்திரவக்காரனாகவும் பார்த்தார், ஆனால் தேவன் அவரை அப்போஸ்தலனாகவும் சுவிசேஷகனாகவும் பார்த்தார்.

நான் இருக்கிற நிலை இதுதானே என்று சிலசமயங்களில் நம்மைபற்றி நாம் நினைக்கலாம். நம் தோல்விகளும் குறைகளுமே நம் கண்களுக்குத் தெரியலாம். ஆனால் நம்மைப் புதுச்சிருஷ்டிகளாக தேவன் பார்க்கிறார். நாம் எப்படி இருந்தோம் என்பதை அல்ல, இயேசுவுக்குள் நாம் எப்படி இருக்கிறோம், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் நாம் எப்படிப்பட்டவர்களாக மாறி வருகிறோம் என்று பார்க்கிறார். தேவனே, இப்படியே நாங்கள் எங்களையும் மற்றவர்களையும் பார்ப்பதற்கு எங்களுக்கு உதவிசெய்யும்!

காலந்தாழ்த்துவதே இல்லை

என்னுடைய மாமியாருக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் அனைவருமே மிகுந்த பதட்டத்திற்குள்ளானோம். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கமுடிந்தது. பிறகு மருத்துவரிடம் பேசியபோது, மாரடைப்பு வந்ததும் 15 நிமிடங்களுக்குள் சிகிச்சை எடுத்தால் அபாயக்கட்டம் நீங்கி 33 சதவீதம்பேர் பிழைப்பதாகச் சொன்னார். 15 நிமிடங்களுக்கு பிறகு சிகிச்சை எடுப்பவர்களில் வெறும் 5 சதவீதத்தினர் மட்டுமே பிழைக்கிறார்களாம்.

யவீருவின் மகள் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தாள் (உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது), அவளைக் குணமாக்குவதற்காகச் சென்றுகொண்டிருந்த இயேசு, யாருமே யோசித்திராத வகையில் இடையில் நின்றுவிட்டார் (மாற். 5:30). தம்மைத் தொட்டது யார் என்பதை அறியும்படி நின்றார், தம்மைத் தொட்ட பெண்ணிடம் அன்புடன் பேசினார். யவீரு என்ன யோசித்திருப்பார்? ‘என் மகள் மரிக்கப்போகிறாள், இந்த நேரத்தில் இப்படி காலதாமதமாகிறதே?’ இயேசு அங்கு வெகுநேரம் நின்றுவிட்டார் போலும், யவீரு பயந்ததுபோலவே நடந்தது; அவனுடைய மகள் மரித்துப்போனாள். வசனம் 35.

ஆனால் இயேசு யவீருவிடம் திரும்பி, அவனுக்கு ஆறுதலான ஒரு வார்த்தையைக் கூறுகிறார்: “பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு” (வச. 36). பிறகு யவீருவின் வீட்டிற்குச் சென்றதும் தன்னைப் பரிகாசமாகப் பார்த்த யாரையுமே பொருட்படுத்தாமல், யவீருவின் மகளைப் பார்த்து, அவளை எழுந்திருக்கச் சொல்லி, மீண்டும் உயிரோடு கொண்டுவந்தார்! ஒருபோதும் தாம் காலதாமதம் பண்ணுவதில்லை என்பதை அங்கு வெளிப்படுத்தினார். கிறிஸ்துவின் வல்லமைக்கும், அவர் செய்யத் தீர்மானித்திருப்பதற்கும் காலம் தடைபோடவே முடியாது.

நான் நம்பியிருந்தபடி செய்யாமல் தேவன் காலந்தாழ்த்திவிட்டாரே என்று எத்தனை நேரம் யவீருவைப் போல நாமும் நினைத்திருப்போம். ஆனால் அவ்வாறு ஒருபோதும் செய்யமாட்டார். நம்முடைய வாழ்க்கையில் தம்முடைய நன்மையான, இரக்கமான கிரியைகளை நிறைவேற்ற அவர் காலந்தாழ்த்தவே மாட்டார்.

ஒப்பிட முடியாத வாழ்வு

ஒரு டெலிவிஷன் நிகழ்ச்சியில், நடுத்தர வயதினர் உயர்நிலைப்பள்ளி மாணவர்களைப் போல நடித்தனர். இளைஞர்களின் வாழ்வை நன்கு புரிந்துகொள்வதற்காக அப்படிச் செய்தனர். இளைஞர்கள் தங்களுடைய சுயமதிப்பை அளப்பதில் சமுதாயத் தொடர்பு சாதனங்கள் முக்கிய பங்குவகிக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஒரு நபர், 'மாணவர்களின் சுயமதிப்பு, தொடர்பு சாதனங்களோடு இணைந்துள்ளது. தங்களுடைய ஒரு புகைப்படத்திற்கு எத்தனை 'விருப்பங்கள்" கொடுக்கப்பட்டுள்ளன என்பதையே அது சார்ந்துள்ளது" என்றார். மற்றவர்கள் தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதன் தேவை, இளைஞர்களை அதிக நேரம் வலைதளங்களில் தொடர்புகொள்ளத் தூண்டுகின்றது.

நாம் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற ஏக்கம் எப்பொழுதும் இளைஞர்களுக்குள் இருக்கின்றது. ஆதியாகமம் 29ல் லேயாள், தன்னுடைய கணவன் யாக்கோபின் அன்பினைப் பெற ஏங்குவதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. இதன் வெளிப்பாட்டை தன்னுடைய முதல் மூன்று குமாரரின் பெயர்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். அத்தனையும் அவளுடைய தனிமையை வெளிக்காட்டுகின்றன (வச. 31-34). ஆனால், வருத்தத்திற்குரியது என்னவெனில், யாக்கோபு தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவள் எதிர்பார்த்த எண்ணம் நிறைவேறியதாகத் தெரியவில்லை.

லேயாளுக்கு நான்காவது மகன் பிறந்தபோது அவள் தன் கணவனிடமல்ல, தேவனிடம் திரும்பி, தன் மகனுக்கு யூதா என்று பெயரிடுகின்றாள். அதற்கு 'கர்த்தரைத் துதிப்பேன்" என அர்த்தம் (வச. 35). லேயாள் தனக்குரிய முக்கியத்துவம் தேவனிடம் இருக்கிறது என்பதைக் கண்டு கொண்டாள். அவள் தேவனுடைய இரட்சிப்பின் வரலாற்றில் இடம் பெறுகின்றாள். தாவீது அரசனின் முன்னோர்களின் பட்டியலில் யூதா இடம்பெறுகின்றார். பின்;னர் இயேசு கிறிஸ்துவும் தாவீதின் வம்சத்தில் தோன்றுகின்றார்.

நாமும் நம்முடைய முக்கியத்துவத்தைப் பெற பலவகைகளில், பல வழிகளில் முயற்சிக்கலாம். ஆனால் இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே, நாம் தேவனுடைய பிள்ளைகள், இயேசு கிறிஸ்துவின் சந்ததியின், பரலோகத் தந்தையோடு நித்தியமாக வாழப் போகின்றவர்கள் என்ற அடையாளத்தைப் பெற முடியும். பவுல் எழுதுவது போல, 'என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்" என்று நாமும் சொல்வோமாக (பிலி. 3:8).

பொருளைவிட பகிர்தல் மேலானது

“ஆனால், நான் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை" எனக் கதறினான் என்னுடைய இளைய மகன். அவன் தன்னுடைய வீகோ துண்டுகளில் ஒன்றையாகிலும் கொடுக்கனேரிடும் என எண்ணி, உள்ளம் உடைந்தான். நான் அவனுடைய முதிர்ச்சியின்மையை வியந்து பார்த்தேன். ஆனால், உண்மையில் இந்த குணம் குழந்தைகளிடம் மட்டும் தானுள்ளதா? எந்த எதிர்பார்ப்புமில்லாமல் கொடுப்பதற்கு விடாப்பிடியான மறுப்பைத் தெரிவிக்கும் குணம் மனிதருக்கு உள்ளது என்பதை என்னுடைய வாழ்வின் அனுபவத்தில் கண்டுள்ளேன்.

இயேசுவின் விசுவாசிகளான நாம் நம்முடைய வாழ்வை பிறரோடு பகிர்ந்துகொள்ள அழைக்கப்படுகிறோம். இதனையே ரூத் தன்னுடைய மாமியோடு செய்தாள். கைவிடப்பட்ட விதவையான நகோமியிடம் ரூத்துக்குக் கொடுப்பதற்கு ஒன்றுமேயில்லை. இருந்தாலும் ரூத் தன் வாழ்வை தன் மாமியாரோடு இணைத்துக் கொண்டாள். நாம் இருவரும் சேர்ந்தே அனுபவிப்போம், மரணம் வரை சேர்ந்தே வாழ்வோம் என்கின்றாள். அவள் நகோமியிடம், “உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்" (ருத். 1:16) என்கின்றாள். அவள் தனக்குள்ளதையெல்லாம் தாராளமாக அந்த முதிய பெண்மணிக்குக் கொடுத்தாள், தன்னுடைய அன்பையும், கரிசனையையும் காட்டினாள்.

நம்முடைய வாழ்வை இத்தகைய முறையில் பகிர்ந்துகொள்வதென்பது சற்று கடினமானதுதான். ஆனால், அந்த தாராள குணத்தின் விளைவு என்ன என்பதை நாம் நினைவு கூரவேண்டும். ரூத் தன் வாழ்வை நகோமியோடு பகிர்ந்து கொண்டாள். பின்னர், அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். அவன்தான் தாவீது அரசனின் தாத்தா. இயேசு தம்முடைய சொந்த வாழ்வை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அப்பொழுது அவர் நிராகரிக்கப்பட்ட போதும் பிதாவினால் அவர் மகிமைப்படுத்தப்பட்டார். இப்பொழுது அவர் பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்து அரசாட்சி செய்கின்றார். நாமும் நம் வாழ்வை பிறரோடு தாராளமாகப் பகிர்ந்து கொள்ளும்போது நிச்சயமாக ஓர் நாள் ஒரு பெரிய வாழ்வை அனுபவிப்போம் என்பதில் எந்த ஐயமுமில்லை.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்

என் தோழி, மன அழுத்தம் நிறைந்த மருத்துவமனை வேலையிலிருந்து விரைந்தாள்.அவளுடைய கணவரும் அதேபோன்ற வேலையிலிருந்து தான் வீடு திரும்புவான். அப்போது இரவு உணவிற்கு என்ன சமைப்பதென்று யோசித்தாள். அவள் ஞாயிற்றுக்கிழமை இறைச்சி சமைத்து, திங்கட்கிழமை மிச்சத்தைப் பரிமாறினாள். செவ்வாய்க்கிழமையன்று அவள் கண்டதெல்லாம் குளிர்சாதனப்பெட்டியிலிருந்த காய்கறிகள்தான், ஆனால் சைவ உணவு தன் கணவனுக்குப் பிடிக்காதென்றறிவாள். குறுகிய நேரத்தில் வேறு எதையும் சமைக்க இயலாததால், காய்கறிகளைச் சமைக்க முடிவு செய்தாள்.

அவள் உணவை மேசையில் வைத்தபோது, வீட்டிற்கு வந்திருந்த தன் கணவனிடம் சற்றே மன்னிப்புக் கேட்கும் தொனியில், “இது உங்களுக்குப் பிடிக்காதென்று அறிவேன்” என்றாள். அவள் கணவன் நிமிர்ந்து பார்த்து, “அன்பே, மேஜையில் நமக்கு உணவு இருப்பதற்கே நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

அவருடைய மனப்பான்மை, தேவனிடம் நாம் பெரும் அனுதின பராமரிப்பிற்காக நன்றியுடனும் உவகையுடன் இருப்பதன் முக்கியத்துவத்தை எனக்கு நினைவூட்டுகிறது; அவை எதுவாக இருந்தாலும் சரி. நமது அனுதின உணவோ, சிற்றுண்டியோ அதற்காக நன்றி செலுத்துவதே இயேசுவின் முன்மாதிரி. உயிர்த்தெழுந்த கிறிஸ்து தனது இரண்டு சீடர்களுடன், “அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்” (லூக்கா 24:30). அவர் முன்பு ஐயாயிரம் பேருக்கு “ஐந்து அப்பங்கள் மற்றும் இரண்டு சிறிய மீன்களை” (யோவான் 6:9) கொண்டு போஷித்தபோது, பிதாவிற்கு நன்றி செலுத்தியதுபோலவே செய்தார். நமது அனுதின உணவுக்காகவும் மற்ற பராமரிப்பிற்காகவும் நன்றி செலுத்துகையில், நம்முடைய நன்றியறிதல் இயேசுவின் வழிமுறைகளைப் பிரதிபலிக்கும், பரலோகத் தகப்பனைக் கனப்படுத்தும். இன்று தேவனுக்கு நன்றி செலுத்துவோம். 

 

தேவனால் விரும்பப்படுதலும், நேசிக்கப்படுதலும்

முகநூலில் “பிடித்திருக்கிறது” என்பதற்கு அடையாளமான அந்த விருப்ப குறி பொத்தான் முகநூலின் ஆரம்பத்திலிருந்தே இருப்பது போலத் தோன்றும். ஆனால் அது 2009 இல் தான் நடைமுறைக்கு வந்தது.

இந்த ‘விருப்ப’ பொத்தானை வடிவமைத்த ஜஸ்டின் ரோசன்ஸ்டைன் கூறுகையில், ‘ஒருவரையொருவர் கிழித்து கீழ்த்தள்ளும் உலகத்திற்கு மாறாக, ஊக்கப்படுத்தி உயர்த்தும்’ ஒரு உலகை உருவாக்கத் தான் விரும்பியதாகத் தெரிவித்தார். ஆனால் தனது கண்டுபிடிப்பு, பயனாளர்களை இந்த சமூக ஊடகத்தின் அடிமையாக்கிய விளைவைக் கண்டு ரோசன்ஸ்டைன் வருந்தினார்.

ரோசன்ஸ்டைனின் இந்த படைப்பு, நமது இணைப்பு மற்றும் அங்கீகாரத்திற்கான அடிப்படைத் தேவையை வெளிப்படுத்துவதாக நான் எண்ணுகிறேன். பிறர் நம்மை அறியவும், கவனிக்கவும், விரும்பவும் வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ‘விருப்ப’ பொத்தான்தான் புதியது, ஆனால் அறிவதற்கும், அறியப்படுவதற்குமான நமது விருப்பம், தேவன் மனிதனை உண்டாக்கிய நாள் தொட்டே உள்ளது.

இன்றும், ‘விருப்ப’ பொத்தான் நமது விருப்பத்தைத் தனிக்கவில்லை. சரிதானே? அதிர்ஷ்டவசமாக மின்னியல் அங்கீகாரத்தை விட, மிக ஆழமாக நேசிக்கும் தேவனை நாம் ஆராதிக்கிறோம். எரேமியா 1:5 ல் தனக்கென்று தீர்க்கதரிசியை அழைக்கையில், அதில் உள்ள ஆழ்ந்த நோக்கத்தையும், பிணைப்பையும் காண்கிறோம். “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி...என்றாா்.கருவுறுதலுக்கு முன்பே தீர்க்கதரிசியைத் தேவன் அறிந்திருந்தார். மேலும் அர்த்தமுள்ள, நோக்கம் நிறைந்த வாழ்க்கைக்காக அவரை வடிவமைத்தார் (வ. 8-10). நம்மை மிகவும் நெருக்கமாக அறிந்த, நேசிக்கும், விரும்பும் இந்த தகப்பனை நாம் அறிகையில், அவர் நம்மையும் ஒரு நோக்கமுள்ள வாழ்க்கைக்கு அழைக்கிறார். 

 

தாகமும், நன்றியுள்ளமும்

நானும் என் இரண்டு நண்பர்களும் ஒரு மலைப்பாதையில் சாகச பயணம் செய்ய விரும்பினோம். அதற்கு முன், எங்கள் நடைப்பயணத்தைத் தொடங்கும் போது போதுமான தண்ணீர் இருக்கிறதா என்று நாங்கள் சந்தேகப்பட்டதுபோலவே, அது வேகமாகத் தீர்ந்தது. விளிம்பை அடைய இன்னும் சில தூரமிருந்த நிலையில் நாங்கள் முற்றிலும் தண்ணீர் இல்லாமல் இருந்தோம். மூச்சுத் திணறி ஜெபத்துடன் சுவாசித்தோம். பிறகு நாங்கள் ஒரு மூலையைச் சுற்றி வருகையில், ஒரு அதிசயம் நடந்தது. மூன்று தண்ணீர் பாட்டில்கள் பாறையில் ஒரு பிளவில் மாட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம், “உங்களுக்கு இது தேவை என்று தெரியும். மகிழுங்கள்!” என்று ஒரு குறிப்புமிருந்தது. நாங்கள் ஒருவரையொருவர் நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டு, தேவனுக்கு நன்றி சொல்லி, மிகவும் தேவையான நீரைப் பருகி, கடைசிக் கட்டத்திற்குப் பயணித்தோம். நான் என் வாழ்நாளில் இவ்வளவு தாகமாகவும், நன்றியுடனும் இருந்ததில்லை.

சங்கீதக்காரனுக்கு மலையேறிய அனுபவம் இல்லை. ஆனால் ஒரு மானுக்குத் தாகமெடுக்கையில் எவ்வாறு செயல்படும் என்பதை அவர் அறிந்திருந்தார். (சங்கீதம் 42:1) தாகத்தாலும், பசியாலும், மானானது உயிர் பிழைப்பதற்காக நீரோடையை வாஞ்சித்துக் கதறுகிறது போல , “என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” (வ.1) என தேவனுக்கான அவனது விருப்பத்தை அவன் வெளிப்படுத்துகிறான்.

மிகவும் தேவையான நீரைப் போலவே, தேவன் நமக்கு எப்போதும் இருக்கும் உதவியாளர். நாம் அவருக்காக ஏங்குகிறோம், ஏனெனில் அவர் நமது சோர்ந்துபோன வாழ்க்கைக்குப் புதுப்பிக்கப்பட்ட பெலனையும், புத்துணர்ச்சியையும் தருகிறார், அனுதின பயணத்தில் எதுவாயிருந்தாலும் நம்மை ஆயத்தப்படுத்துகிறார்.