“ஆனால், நான் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை” எனக் கதறினான் என்னுடைய இளைய மகன். அவன் தன்னுடைய வீகோ துண்டுகளில் ஒன்றையாகிலும் கொடுக்கனேரிடும் என எண்ணி, உள்ளம் உடைந்தான். நான் அவனுடைய முதிர்ச்சியின்மையை வியந்து பார்த்தேன். ஆனால், உண்மையில் இந்த குணம் குழந்தைகளிடம் மட்டும் தானுள்ளதா? எந்த எதிர்பார்ப்புமில்லாமல் கொடுப்பதற்கு விடாப்பிடியான மறுப்பைத் தெரிவிக்கும் குணம் மனிதருக்கு உள்ளது என்பதை என்னுடைய வாழ்வின் அனுபவத்தில் கண்டுள்ளேன்.

இயேசுவின் விசுவாசிகளான நாம் நம்முடைய வாழ்வை பிறரோடு பகிர்ந்துகொள்ள அழைக்கப்படுகிறோம். இதனையே ரூத் தன்னுடைய மாமியோடு செய்தாள். கைவிடப்பட்ட விதவையான நகோமியிடம் ரூத்துக்குக் கொடுப்பதற்கு ஒன்றுமேயில்லை. இருந்தாலும் ரூத் தன் வாழ்வை தன் மாமியாரோடு இணைத்துக் கொண்டாள். நாம் இருவரும் சேர்ந்தே அனுபவிப்போம், மரணம் வரை சேர்ந்தே வாழ்வோம் என்கின்றாள். அவள் நகோமியிடம், “உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்” (ருத். 1:16) என்கின்றாள். அவள் தனக்குள்ளதையெல்லாம் தாராளமாக அந்த முதிய பெண்மணிக்குக் கொடுத்தாள், தன்னுடைய அன்பையும், கரிசனையையும் காட்டினாள்.

நம்முடைய வாழ்வை இத்தகைய முறையில் பகிர்ந்துகொள்வதென்பது சற்று கடினமானதுதான். ஆனால், அந்த தாராள குணத்தின் விளைவு என்ன என்பதை நாம் நினைவு கூரவேண்டும். ரூத் தன் வாழ்வை நகோமியோடு பகிர்ந்து கொண்டாள். பின்னர், அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். அவன்தான் தாவீது அரசனின் தாத்தா. இயேசு தம்முடைய சொந்த வாழ்வை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அப்பொழுது அவர் நிராகரிக்கப்பட்ட போதும் பிதாவினால் அவர் மகிமைப்படுத்தப்பட்டார். இப்பொழுது அவர் பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்து அரசாட்சி செய்கின்றார். நாமும் நம் வாழ்வை பிறரோடு தாராளமாகப் பகிர்ந்து கொள்ளும்போது நிச்சயமாக ஓர் நாள் ஒரு பெரிய வாழ்வை அனுபவிப்போம் என்பதில் எந்த ஐயமுமில்லை.