Archives: டிசம்பர் 2018

செய்தியாளர்

“நான் உனக்கு ஒர செய்தி வைத்திருக்கின்றேன்” என்று கூறி, நான் பங்கு பெறும் கருத்தரங்கில் பணிபுரியும் ஒரு பெண்மணி என்னிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்தாள். நான் சற்று அதிர்ச்சியடைந்ததோடு, உணர்ச்சிவசப்பட்டேன். ஆனால், நான் அதில் உன் சகோதரிக்கு குழந்தை பிறந்துள்ளது” என்ற செய்தியை வாசித்து மகிழ்ந்தேன்.

செய்திகள் நல்லதாகவோ, கெட்டதாகவோ அல்லது சாவால்களைத் தரும் வார்த்தைகளாகவோ இருக்கலாம். பழைய ஏற்பாட்டில், தேவன் தமது தீர்க்கதரிசகளை நம்பிக்கைத் தரும் செய்திகளைக் கொடுக்கவும் நியாயத்தீர்ப்பினை வழங்கவும் பயன்படுத்தினார். ஆனால், நாம் அச்செய்திகளை சற்று ஆழ்ந்துபார்த்தால், அவருடைய நியாயத்தீர்ப்பின் வார்த்தைகள் கூட மனந்திரும்பலுக்கும், சுகமளிக்கவும், மீட்கப்படவும் வழிநடத்துவதாகயிருக்கும்.

இரண்டு வகையான செய்திகளை மல்கியா 3ல் காணலாம். தேவன் ஒரு செய்தியாளரை அனுப்பி, அவன் தனக்கு வழியை ஆயத்தம் பண்ணுவான் என வாக்களிக்கின்றார். யோவான் ஸ்நானகன் மெய்யான செய்தியாளரின் வருகையை முன்னறிவிக்கின்றார் (மத். 3:11). “அந்த உடன்படிக்கையின் செய்தியாளர்” இயேசுகிறிஸ்து (மல். 3:1) அவர் தேவனுடைய வாக்குத்தத்ததை நிறைவேற்றுவார். “அவர் புடமிடுகிறவனுடைய அக்னியைப் போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப் போலவும்” இருப்பார் (வச. 2). அவர் தமது வார்த்தையை நம்புகிறவர்களைச் சுத்திகரிப்பார். தேவன் தமது வார்த்தையை அனுப்பி தம் ஜனங்களைச் சுத்திகரிப்பார். ஏனெனில், அவர் தம் ஜனங்களின் நல்வாழ்வின் மீது அக்கரை கொண்டுள்ளார்.

தேவனுடைய செய்தி, அன்பு, நம்பிக்கை மற்றும் விடுதலையைக் கொடுக்கும் செய்தி. அவர் தம் குமாரனையே செய்தியாளராக அனுப்புகின்றார். அவர் நம் மொழியில் பேசுகின்றார். சில வேளைகளில் நம்மைத் திருத்தும் செய்தியைத் தருகின்றார். ஆனால், எப்பொழுதும் நம்பிக்கையைத் தரும் செய்தியையே தருகின்றார். நாம் அவருடைய செய்தியை முற்றிலும் நம்பலாம்.

எல்லாம் புதிதாயின

பயனற்ற பொருட்களைக் குவிக்குமிடங்களைப் பார்வையிடுவது எனக்கு மிகவும் ஆர்வமான ஒன்று. கார்களில் வேலைசெய்வதை தான் விரும்புவேன். எனவே, எங்கள் வீட்டினருகிலுள்ள அத்தகைய ஓரிடத்திற்கு அடிக்கடி செல்வதுண்டு, அது ஒரு தனிமையான இடம். அங்குள்ள கைவிடப்பட்ட கப்பல்களினூடே காற்று ஊளையிடும். ஆவை ஒரு காலத்தில், போர் காலங்களில்யாரோ ஒருவரிடமிருந்து, கடலில் பிடிக்கப்பட்டவை. சில உடைந்து போயிருந்தன, சில பழையதாயிருந்தன, சில நன்கு பயன்பட்டு, காலம் தாண்டிக் கிடந்தன. அவற்றின் வரிசையினூடே நான் நடந்து செல்லும்போது, சில வேளைகளில் ஒரு கார் என் கண்னணக் கவரும். நான் அவற்றைக் குறித்து ஆச்சரியப்பட்டு, அவை நன்கு ஓடிக்கொண்டிருந்த நாட்களில், அவை நிறைவேற்றியிருக்கும் சாதனைகளை எண்ணிப்பார்ப்பேன். பழங்காலத்தைக் காணத்திறக்கும் கதவுபோல நின்று ஒவ்வொன்றும் ஒரு கதையைத் கூறும். புதிய ரகங்களின் மீது மோகங்கொண்ட மனிதர்களைப் பற்றியும் தெரிய வருவதால், அது ஒரு நேரப் போக்கிற்கான இடம் என்றே கூறலாம்.

ஆனால், நான், சிறப்பாக ஒரு பழைய வாகனத்தின் பகுதிக்கு புதுவாழ்வு கொடுப்பதில் இன்பம் காண்பவன். புறக்கணிக்கப்பட்ட ஏதோவொன்றை எடுத்து, அதை ஒரு மீட்கப்பட்ட வாகனத்தில் பொருத்தி, அதற்கு ஒரு புதிய வடிவம் கொடுத்து காலத்தின் மேலும் அழிவின் மேலும் ஒரு வெற்றியைக் கண்டதாக உணர்வேன்.

வேதாகமத்தின் கடைசிபகுதியில் இயேசு கூறிய வார்த்தைகளை நான்; சில வேளைகளில் நினைத்துக் கொள்வேன். “இதோ நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” (வெளி. 21:5). இந்த வார்த்தைகள், தேவன் தம் படைப்புகளை புதிப்பிக்கின்றதைக் குறிக்கும். அது விசுவாசிகளையும் குறிக்கும். ஏற்கனவே இயேசுவை ஏற்றுக் கொண்ட அனைவருமே அவருக்குள் “புது சிருஷ்டிகள்” (2 கொரி. 5:17).

ஒரு நாள் நாம் நமக்கு வாக்களிக்கப்ட்டுள்ள முடிவில்லா நாட்களுக்குள் என்றும் அவரோடு வாழும்படி செல்வோம் (யோவா. 14:3) அங்கு மூப்பு, வியாதியும் யாரையும் சாவுக்குள்ளாக்க முடியாது. நாம் அங்கு நித்திய வாழ்வாகிய சாதனையைத் தொடரலாம். நாம் சொல்ல வேண்டிய கதை என்னவுள்ளது? அதுதான் நமது இரட்சகரின் விடுவிக்கும் அன்பைப் பற்றிய கதையும், என்றும் நிலைத்திருக்கும் அவருடைய உண்மையைப்பற்றிய கதையுமேயாகும்.

தேவன் “இல்லை” எனச் சொல்லும்போது

நான் பதினெட்டு வயதாயிருந்த போது, சட்டப்படி கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டேன். அங்கிருந்தவர்களெல்லாரும் சிங்கப்பூரைச் சேர்ந்த இளம் வயதினராக இருந்ததால், நான் எனக்கொரு இலகுவான வேலைகிடைக்கும்படி தீவிரமாக ஜெபித்தேன். ஓர் எழுத்தர், அல்லது ஓட்டுனர் என ஓர் எளிய வேலையை எதிர்பார்த்தேன். நான் பலசாலியல்ல, எனவே அங்குள்ள கடினமான போர்க்கால பயிற்சிகளில் எனக்கு விலக்கு கிடைக்குமென நம்பினேன். ஒருநாள் மாலை வேளையில் நான் வேதாகமத்தை வாசித்துக் கொண்டிருந்த போது, அந்தப் பக்கத்திலிருந்த ஒரு வசனம் என்னை ஈர்த்தது. “என் கிருபை உனக்குப் போதும்” (2 கொரி. 12:9).

என் இருதயம் சோர்ந்தது. ஆனால், அப்படி இருந்திருக்கக் கூடாது. தேவன் என் ஜெபத்தைக் கேட்டார். ஒருவேளை எனக்கு கஷ்டமான வேலை கொடுக்கப்பட்டாலும் தேவன் எனக்குத் தேவையான பெலத்தைத் தருவார்.

நான் இராணுவக் கவசமணிந்து தரைப்படையில் சேர்ந்தேன். எனக்கு விருப்பமில்லாத வேலையைச் செய்தேன். இப்போது தான் என் முந்திய காலத்தை நினைத்துப் பார்க்கின்றேன். தேவன் நான் விரும்பியதை எனக்குத்தரவில்லை. ஆகையால் தேவனுக்கு நன்றி கூறுகின்றேன். அங்கு கொடுக்கப்பட்ட பயிற்சியும், அநுபவமும் என்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெலப்படுத்தியது. திடமான மனிதனாக ஜீவிக்க எனக்கு நம்பிக்கையைத் தந்தது.

ஏசாயா 25:1-5 வசனங்களில் இஸ்ரவேல் ஜனங்களுக்குரிய தண்டனையையும் அதன்பின், அவர்களின் விடுதலையையும் உரைத்தபின், தேவனுடைய திட்டங்களுக்காக அவரைப் போற்றுகின்றார். ஏசாயா குறிப்பிட்டுள்ள அத்தனை அதிசயமான காரியங்களும்” வெகுகாலத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டன (வச. 1) ஆயினும், அவை நிறைவேற சில கடினமான காலங்களைக் கடக்க வேண்டியிருந்தது.

நாம் தேவனிடம் ஏதோவொரு நல்ல காரியத்திற்காக கேட்டுக் கொண்டிருக்கும் போது, எடுத்துக்காட்டாக ஒருவரின் இக்கட்டிலிருந்து அவரை விடுவிக்குமாறு கேட்கும்போது, இல்லையென பதிலளிக்கப்படுமாயின், அதனைப் புரிந்து கொள்வது கடினமாகத்தானிருக்கும். அப்பொழுதுதான் நாம் தேவனுடைய நல்லதிட்டத்தின் உண்மையை உறுதியாகப் பற்றிக் கொள்ளவேண்டும் ஏனென்று நமக்குப் புரியாது. ஆனால், நாம் தேவனுடைய அன்பு, நன்மை, மற்றும் உண்மையின் மீது நம்பிக்கையோடிருப்போம்.

மனக்கறை நீக்கும் தினம்

2006 ஆம் ஆண்டிலிருந்து ஒரு கூட்ட மக்கள் புதிய வருடத்தையொட்டி ஒரு நாளில் ஒரு வித்தியாசமான நிகழ்வைக் கொண்டாடுகின்றனர். அது தான் மனதின் கறைகளை நீக்கும் தினம். லத்தீன்-அமெரிக்க கலாச்சாரத்தைத் தழுவி, கடந்த ஆண்டில் மக்கள் தங்கள் மனதில் படிந்துள்ள மனவருத்தங்கள், விரும்பத்தகாத நினைவுகள், கெட்ட நிகழ்வுகள் ஆகியவற்றை காகிதத்தில் எழுதி துண்டுகளாக்கி குப்பையில் சேர்த்து விடுவர், அல்லது ஒரு கனமான சுத்தியலால் அடித்துச் சிதைத்து விடுவர்.

சங்கீதம் 103ல் சங்கீதக்காரன், மக்கள் தங்கள் மனதிலுள்ள விரும்பத்தகாத எண்ணங்களைத் தூக்கி எறிந்துவிடும்படி வலியுறுத்துகின்றார். தேவன் நம்முடைய பாவங்களைத் தூக்கி எறிந்து விடுகின்றார் என நினைவுபடுத்துகின்றார். தேவன் தம் ஜனங்களின் மேல் வைத்திருக்கும் அளவற்ற அன்பினை விளக்க, சில காட்சிகளை வார்த்தைகளில் கொண்டு வருகின்றார். அவர் தேவனுடைய பரந்த அன்பினை விளக்க, பூமிக்கும் வானத்திற்குமுள்ளத் தூரத்தை ஒப்பிடுகின்றார் (வச. 11). சங்கீதக்காரன் தேவனுடைய மன்னிக்கும் சிந்தையை வளிமண்டல பொருட்களோடு ஒப்பிட்டு விளக்குகின்றார். சூரியன் உதிக்கும் இடத்திற்கும், சூரியன் மறையும் இடத்திற்குமுள்ள தொலைவில் முழு பாவங்களையும் அகற்றிவிட்டார் (வச. 12) என்கின்றார். தேவன் தம் ஜனங்களின் மீது கொண்டுள்ள அன்பும், அவருடைய மன்னிக்கும் சிந்தையும் முழுமையானது, முடிவில்லாதது என்கின்றார். தேவன் தம் ஜனங்களை அவர்களின் மீறுதல்களின் வல்லமையிலிருந்து முற்றிலும் மீட்டு அவர்களை முழுமையாக மன்னிக்கின்றார்.

என்ன ஒரு நல்ல செய்தி! நாம் நம் பாவக்கறைகளை அகற்றிட புதிய வருடம் வரும்வரை காத்திருக்கத் தேவையில்லை. இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தோடு, நாம் நம் பாவங்களை அறிக்கையிட்டு பாவத்திலிருந்து மனம் திரும்புவோமாகில் அவர் நம் பாவங்களை அகற்றி, அவற்றைக் கடலின் ஆழங்களில் போட்டுவிடுகி;றார். இன்றே நமது கறைநீக்கும் தினம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

பாரபட்சமும் தேவசிநேகமும்

“நான் எதிர்பார்த்தது நீ இல்லை. நான் உன்னை வெறுக்கிறேன் என்று நினைத்தேன், ஆனால் அப்படியில்லை.” அந்த இளைஞனின் வார்த்தைகள் கடுமையாகத் தெரிந்தது. ஆனால் அவை உண்மையில் கருணை காட்டுவதற்கான முயற்சியாக இருந்தது. நான் அவர் வசிக்கும் நாட்டில் படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய அந்த தேசம் பல தசாப்தங்களுக்கு முன்னர் என்னுடைய தேசத்தோடு யுத்தம் செய்தது. நாங்கள் ஒன்றாக வகுப்பில் ஒரு குழு விவாதத்தில் கலந்துகொண்டோம். அவர் தொலைவில் இருப்பதை நான் கவனித்தேன். நான் அவரை ஏதாகிலும் புண்படுத்திவிட்டேனா என்று நான் கேட்டபோது, அவர், “இல்லை . . . . அதுதான் விஷயம். என் தாத்தா அந்தப் போரில் கொல்லப்பட்டார், அதற்காக நான் உங்கள் மக்களையும் உங்கள் நாட்டையும் வெறுத்தேன். ஆனால் இப்போது நமக்குள் எந்த அளவிற்கு ஒத்துப்போகிறது என்பதைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். நாம் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது!” என்று பதிலளித்தார். 
பாரபட்சம் என்னும் உணர்வு மனித இனத்தைப் போலவே மிகவும் பழமையானது. இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பு, இயேசு நாசரேத்தில் வாழ்ந்ததைப் பற்றி நாத்தான்வேல் முதன்முதலில் கேள்விப்பட்டபோது, அவனுடைய பாரபட்சம் தெளிவாகத் தெரிந்தது: “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?” (யோவான் 1:46) என்று சொல்கிறார். நாத்தான்வேல் இயேசுவைப் போலவே கலிலேயா பகுதியில் வாழ்ந்தவர். தேவனுடைய மேசியா வேறொரு இடத்திலிருந்து வருவார் என்று அவர் ஒருவேளை நினைத்திருக்கக்கூடும். மற்ற கலிலேயர்களும் நாசரேத்தை இழிவாகப் பார்த்தனர். ஏனென்றால் அது ஒரு சிறிய அடையாளமில்லாத ஊராக இருந்தது.  
இது மிகவும் தெளிவாக உள்ளது. நாத்தான்வேலின் பதில், இயேசு அவனை நேசிப்பதற்கு தடையாக இருக்கவில்லை. மேலும் அவன் மறுரூபமாக்கப்பட்டு இயேசுவின் சீஷனாக மாறுகிறான். நாத்தான்வேல் பின்பாக, “நீர் தேவனுடைய குமாரன்” (வச. 49) என்று இயேசுவின் மகத்துவத்தை சாட்சியிடுகிறான். தேவனுடைய மறுரூபமாக்கும் அன்பிற்கு எதிராக நிற்கக்கூடிய எந்த பாரபட்சமும் இல்லை. 

கிறிஸ்துவைப் போல் கொடுத்தல்

அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி தனது பிரியமான 1905 கிறிஸ்மஸ் கதையான “தி கிஃப்ட் ஆஃப் தி மேகி” என்னும் கதையை எழுதியபோது, அவர் தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள போராடிக் கொண்டிருந்தார். இருப்பினும், அவர் ஒரு அழகான, கிறிஸ்துவின் பிரம்மாண்ட குணாதிசயமான தியாகத்தை முக்கியத்துவப்படுத்தும் ஒரு எழுச்சியூட்டும் கதையை எழுதினார். கதையில், ஒரு ஏழை மனைவி கிறிஸ்துமஸ் முன்தினத்தன்று தனது கணவனுக்கு பரிசுக்கொடுக்க அவரிடத்திலிருக்கும் பாக்கெட் கடிகாரத்திற்கு ஒரு அழகான தங்க சங்கிலியை வாங்குவதற்காக தனது அழகான நீண்ட தலைமுடியை விற்றாள். ஆனால் அவளுடைய கணவன், அவளுடைய அழகான கூந்தலுக்கு பரிசுகொடுக்க எண்ணி, ஒரு ஜோடி சீப்புகளை அவளுக்கு பரிசாக வாங்கி வந்திருந்தார்.  
அவர்கள் மற்றவருக்கு கொடுக்க எண்ணிய மிகப்பெரிய பரிசு, தியாகம். அவர்கள் இருவருடைய செயல்களும், அவர்களுக்கு மற்றவர் மீது இருக்கும் அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது.  
அதே போன்று, இயேசு என்னும் குழந்தை பிறந்த மாத்திரத்தில், அவரைக் காண வந்திருந்த சாஸ்திரிகள், அவருக்கு அன்பான பரிசுகளைக் கொண்டு வந்திருந்ததை இந்த கதை பிரதிபலிக்கிறது (மத்தேயு 2:1,11ஐப் பார்க்கவும்). அந்த பரிசுகளை விட, அந்த குழந்தை இயேசு வளர்ந்து ஒரு நாள் முழு உலகத்திற்காகவும் தனது ஜீவனையே பரிசாகக் கொடுக்கப்போகிறார்.  
நமது அன்றாட வாழ்வில், நம்முடைய நேரத்தையும், பொக்கிஷங்களையும், அன்பைப் பற்றிப் பேசும் குணத்தையும் மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் கிறிஸ்துவின் மாபெரும் பரிசை கிறிஸ்தவர்களாகிய நாம் முன்னிலைப்படுத்த முடியும். அப்போஸ்தலனாகிய பவுல், “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோமர் 12:1) என்று எழுதுகிறார். இயேசுவின் அன்பின் மூலம் மற்றவர்களுக்காக தியாகம் செய்வதை விட சிறந்த பரிசு எதுவும் இல்லை. 

புனிதர் நிக்

செயிண்ட் நிக்கோலஸ் (செயிண்ட் நிக்) என்று நாம் அறியும் நபர், கி.பி 270இல் ஒரு பணக்கார கிரேக்க குடும்பத்தில் பிறந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் சிறுவனாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். அவர் தனது மாமாவுடன் வாழ நேரிட்டது. அவர் அவரை நேசித்து, தேவனைப் பின்பற்றவும் கற்றுக்கொடுத்தார். நிக்கோலஸ் இளைஞனாக இருந்தபோது,திருமணத்திற்கு வரதட்சணை இல்லாத மூன்று சகோதரிகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டதாக புராணக்கதை கூறுகிறது. தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பது பற்றிய இயேசுவின் போதனைகளைப் பின்பற்ற விரும்பிய அவர், அவருடைய சொத்தை எடுத்து ஒவ்வொரு சகோதரிக்கும் ஒரு பொற்காசுகளைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக, நிக்கோலஸ் தனது மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும் மற்றவர்களைப் பராமரிப்பதற்கும் கொடுத்தார். அடுத்த நூற்றாண்டுகளில், நிக்கோலஸ் அவரது ஆடம்பரமான தாராள மனப்பான்மைக்காக கௌரவிக்கப்பட்டார். மேலும் அவர் சாண்டா கிளாஸ் என்று நாம் அறிந்த கதாபாத்திரத்தை ஊக்கப்படுத்தினார். 
இந்த பண்டிகை நாட்களின் பளிச்சிடும் விளம்பரங்களும் நமது கொண்டாட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், பரிசு வழங்கும் பாரம்பரியம் நிக்கோலஸ{டன் இணைகிறது. மேலும் அவருடைய தாராள மனப்பான்மை இயேசுவிடம் அவர் கொண்டிருந்த பக்தியின் அடிப்படையில் அமைந்தது. கிறிஸ்து கற்பனைக்கு எட்டாத தாராள மனப்பான்மை உடையவர் என்பதை நிக்கோலஸ் அறிந்திருந்தார். அவர் கொண்டுவந்த மிக ஆழமான பரிசு: தேவன். இயேசு என்றால் “தேவன்  நம்முடன் இருக்கிறார்" (மத்தேயு 1:23) என்று அர்த்தம். மேலும் அவர் நமக்கு வாழ்வின் பரிசைக் கொண்டு வந்தார். மரண உலகில், அவர் “தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (வச. 21). 
நாம் இயேசுவை நம்பும்போது, தியாகம் செய்யும் பெருந்தன்மை வெளிப்படுகிறது. நாம் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். தேவன் நமக்குக் கொடுப்பதுபோல நாமும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறோம். இது செயிண்ட் நிக்கின் கதை. எல்லாவற்றிற்கும் மேலாக இது தேவனுடைய கதை.