Archives: டிசம்பர் 2018

செய்தியாளர்

“நான் உனக்கு ஒர செய்தி வைத்திருக்கின்றேன்” என்று கூறி, நான் பங்கு பெறும் கருத்தரங்கில் பணிபுரியும் ஒரு பெண்மணி என்னிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்தாள். நான் சற்று அதிர்ச்சியடைந்ததோடு, உணர்ச்சிவசப்பட்டேன். ஆனால், நான் அதில் உன் சகோதரிக்கு குழந்தை பிறந்துள்ளது” என்ற செய்தியை வாசித்து மகிழ்ந்தேன்.

செய்திகள் நல்லதாகவோ, கெட்டதாகவோ அல்லது சாவால்களைத் தரும் வார்த்தைகளாகவோ இருக்கலாம். பழைய ஏற்பாட்டில், தேவன் தமது தீர்க்கதரிசகளை நம்பிக்கைத் தரும் செய்திகளைக் கொடுக்கவும் நியாயத்தீர்ப்பினை வழங்கவும் பயன்படுத்தினார். ஆனால், நாம் அச்செய்திகளை சற்று ஆழ்ந்துபார்த்தால், அவருடைய நியாயத்தீர்ப்பின் வார்த்தைகள் கூட மனந்திரும்பலுக்கும், சுகமளிக்கவும், மீட்கப்படவும் வழிநடத்துவதாகயிருக்கும்.

இரண்டு வகையான செய்திகளை மல்கியா 3ல் காணலாம். தேவன் ஒரு செய்தியாளரை அனுப்பி, அவன் தனக்கு வழியை ஆயத்தம் பண்ணுவான் என வாக்களிக்கின்றார். யோவான் ஸ்நானகன் மெய்யான செய்தியாளரின் வருகையை முன்னறிவிக்கின்றார் (மத். 3:11). “அந்த உடன்படிக்கையின் செய்தியாளர்” இயேசுகிறிஸ்து (மல். 3:1) அவர் தேவனுடைய வாக்குத்தத்ததை நிறைவேற்றுவார். “அவர் புடமிடுகிறவனுடைய அக்னியைப் போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப் போலவும்” இருப்பார் (வச. 2). அவர் தமது வார்த்தையை நம்புகிறவர்களைச் சுத்திகரிப்பார். தேவன் தமது வார்த்தையை அனுப்பி தம் ஜனங்களைச் சுத்திகரிப்பார். ஏனெனில், அவர் தம் ஜனங்களின் நல்வாழ்வின் மீது அக்கரை கொண்டுள்ளார்.

தேவனுடைய செய்தி, அன்பு, நம்பிக்கை மற்றும் விடுதலையைக் கொடுக்கும் செய்தி. அவர் தம் குமாரனையே செய்தியாளராக அனுப்புகின்றார். அவர் நம் மொழியில் பேசுகின்றார். சில வேளைகளில் நம்மைத் திருத்தும் செய்தியைத் தருகின்றார். ஆனால், எப்பொழுதும் நம்பிக்கையைத் தரும் செய்தியையே தருகின்றார். நாம் அவருடைய செய்தியை முற்றிலும் நம்பலாம்.

எல்லாம் புதிதாயின

பயனற்ற பொருட்களைக் குவிக்குமிடங்களைப் பார்வையிடுவது எனக்கு மிகவும் ஆர்வமான ஒன்று. கார்களில் வேலைசெய்வதை தான் விரும்புவேன். எனவே, எங்கள் வீட்டினருகிலுள்ள அத்தகைய ஓரிடத்திற்கு அடிக்கடி செல்வதுண்டு, அது ஒரு தனிமையான இடம். அங்குள்ள கைவிடப்பட்ட கப்பல்களினூடே காற்று ஊளையிடும். ஆவை ஒரு காலத்தில், போர் காலங்களில்யாரோ ஒருவரிடமிருந்து, கடலில் பிடிக்கப்பட்டவை. சில உடைந்து போயிருந்தன, சில பழையதாயிருந்தன, சில நன்கு பயன்பட்டு, காலம் தாண்டிக் கிடந்தன. அவற்றின் வரிசையினூடே நான் நடந்து செல்லும்போது, சில வேளைகளில் ஒரு கார் என் கண்னணக் கவரும். நான் அவற்றைக் குறித்து ஆச்சரியப்பட்டு, அவை நன்கு ஓடிக்கொண்டிருந்த நாட்களில், அவை நிறைவேற்றியிருக்கும் சாதனைகளை எண்ணிப்பார்ப்பேன். பழங்காலத்தைக் காணத்திறக்கும் கதவுபோல நின்று ஒவ்வொன்றும் ஒரு கதையைத் கூறும். புதிய ரகங்களின் மீது மோகங்கொண்ட மனிதர்களைப் பற்றியும் தெரிய வருவதால், அது ஒரு நேரப் போக்கிற்கான இடம் என்றே கூறலாம்.

ஆனால், நான், சிறப்பாக ஒரு பழைய வாகனத்தின் பகுதிக்கு புதுவாழ்வு கொடுப்பதில் இன்பம் காண்பவன். புறக்கணிக்கப்பட்ட ஏதோவொன்றை எடுத்து, அதை ஒரு மீட்கப்பட்ட வாகனத்தில் பொருத்தி, அதற்கு ஒரு புதிய வடிவம் கொடுத்து காலத்தின் மேலும் அழிவின் மேலும் ஒரு வெற்றியைக் கண்டதாக உணர்வேன்.

வேதாகமத்தின் கடைசிபகுதியில் இயேசு கூறிய வார்த்தைகளை நான்; சில வேளைகளில் நினைத்துக் கொள்வேன். “இதோ நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” (வெளி. 21:5). இந்த வார்த்தைகள், தேவன் தம் படைப்புகளை புதிப்பிக்கின்றதைக் குறிக்கும். அது விசுவாசிகளையும் குறிக்கும். ஏற்கனவே இயேசுவை ஏற்றுக் கொண்ட அனைவருமே அவருக்குள் “புது சிருஷ்டிகள்” (2 கொரி. 5:17).

ஒரு நாள் நாம் நமக்கு வாக்களிக்கப்ட்டுள்ள முடிவில்லா நாட்களுக்குள் என்றும் அவரோடு வாழும்படி செல்வோம் (யோவா. 14:3) அங்கு மூப்பு, வியாதியும் யாரையும் சாவுக்குள்ளாக்க முடியாது. நாம் அங்கு நித்திய வாழ்வாகிய சாதனையைத் தொடரலாம். நாம் சொல்ல வேண்டிய கதை என்னவுள்ளது? அதுதான் நமது இரட்சகரின் விடுவிக்கும் அன்பைப் பற்றிய கதையும், என்றும் நிலைத்திருக்கும் அவருடைய உண்மையைப்பற்றிய கதையுமேயாகும்.

தேவன் “இல்லை” எனச் சொல்லும்போது

நான் பதினெட்டு வயதாயிருந்த போது, சட்டப்படி கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டேன். அங்கிருந்தவர்களெல்லாரும் சிங்கப்பூரைச் சேர்ந்த இளம் வயதினராக இருந்ததால், நான் எனக்கொரு இலகுவான வேலைகிடைக்கும்படி தீவிரமாக ஜெபித்தேன். ஓர் எழுத்தர், அல்லது ஓட்டுனர் என ஓர் எளிய வேலையை எதிர்பார்த்தேன். நான் பலசாலியல்ல, எனவே அங்குள்ள கடினமான போர்க்கால பயிற்சிகளில் எனக்கு விலக்கு கிடைக்குமென நம்பினேன். ஒருநாள் மாலை வேளையில் நான் வேதாகமத்தை வாசித்துக் கொண்டிருந்த போது, அந்தப் பக்கத்திலிருந்த ஒரு வசனம் என்னை ஈர்த்தது. “என் கிருபை உனக்குப் போதும்” (2 கொரி. 12:9).

என் இருதயம் சோர்ந்தது. ஆனால், அப்படி இருந்திருக்கக் கூடாது. தேவன் என் ஜெபத்தைக் கேட்டார். ஒருவேளை எனக்கு கஷ்டமான வேலை கொடுக்கப்பட்டாலும் தேவன் எனக்குத் தேவையான பெலத்தைத் தருவார்.

நான் இராணுவக் கவசமணிந்து தரைப்படையில் சேர்ந்தேன். எனக்கு விருப்பமில்லாத வேலையைச் செய்தேன். இப்போது தான் என் முந்திய காலத்தை நினைத்துப் பார்க்கின்றேன். தேவன் நான் விரும்பியதை எனக்குத்தரவில்லை. ஆகையால் தேவனுக்கு நன்றி கூறுகின்றேன். அங்கு கொடுக்கப்பட்ட பயிற்சியும், அநுபவமும் என்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெலப்படுத்தியது. திடமான மனிதனாக ஜீவிக்க எனக்கு நம்பிக்கையைத் தந்தது.

ஏசாயா 25:1-5 வசனங்களில் இஸ்ரவேல் ஜனங்களுக்குரிய தண்டனையையும் அதன்பின், அவர்களின் விடுதலையையும் உரைத்தபின், தேவனுடைய திட்டங்களுக்காக அவரைப் போற்றுகின்றார். ஏசாயா குறிப்பிட்டுள்ள அத்தனை அதிசயமான காரியங்களும்” வெகுகாலத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டன (வச. 1) ஆயினும், அவை நிறைவேற சில கடினமான காலங்களைக் கடக்க வேண்டியிருந்தது.

நாம் தேவனிடம் ஏதோவொரு நல்ல காரியத்திற்காக கேட்டுக் கொண்டிருக்கும் போது, எடுத்துக்காட்டாக ஒருவரின் இக்கட்டிலிருந்து அவரை விடுவிக்குமாறு கேட்கும்போது, இல்லையென பதிலளிக்கப்படுமாயின், அதனைப் புரிந்து கொள்வது கடினமாகத்தானிருக்கும். அப்பொழுதுதான் நாம் தேவனுடைய நல்லதிட்டத்தின் உண்மையை உறுதியாகப் பற்றிக் கொள்ளவேண்டும் ஏனென்று நமக்குப் புரியாது. ஆனால், நாம் தேவனுடைய அன்பு, நன்மை, மற்றும் உண்மையின் மீது நம்பிக்கையோடிருப்போம்.

மனக்கறை நீக்கும் தினம்

2006 ஆம் ஆண்டிலிருந்து ஒரு கூட்ட மக்கள் புதிய வருடத்தையொட்டி ஒரு நாளில் ஒரு வித்தியாசமான நிகழ்வைக் கொண்டாடுகின்றனர். அது தான் மனதின் கறைகளை நீக்கும் தினம். லத்தீன்-அமெரிக்க கலாச்சாரத்தைத் தழுவி, கடந்த ஆண்டில் மக்கள் தங்கள் மனதில் படிந்துள்ள மனவருத்தங்கள், விரும்பத்தகாத நினைவுகள், கெட்ட நிகழ்வுகள் ஆகியவற்றை காகிதத்தில் எழுதி துண்டுகளாக்கி குப்பையில் சேர்த்து விடுவர், அல்லது ஒரு கனமான சுத்தியலால் அடித்துச் சிதைத்து விடுவர்.

சங்கீதம் 103ல் சங்கீதக்காரன், மக்கள் தங்கள் மனதிலுள்ள விரும்பத்தகாத எண்ணங்களைத் தூக்கி எறிந்துவிடும்படி வலியுறுத்துகின்றார். தேவன் நம்முடைய பாவங்களைத் தூக்கி எறிந்து விடுகின்றார் என நினைவுபடுத்துகின்றார். தேவன் தம் ஜனங்களின் மேல் வைத்திருக்கும் அளவற்ற அன்பினை விளக்க, சில காட்சிகளை வார்த்தைகளில் கொண்டு வருகின்றார். அவர் தேவனுடைய பரந்த அன்பினை விளக்க, பூமிக்கும் வானத்திற்குமுள்ளத் தூரத்தை ஒப்பிடுகின்றார் (வச. 11). சங்கீதக்காரன் தேவனுடைய மன்னிக்கும் சிந்தையை வளிமண்டல பொருட்களோடு ஒப்பிட்டு விளக்குகின்றார். சூரியன் உதிக்கும் இடத்திற்கும், சூரியன் மறையும் இடத்திற்குமுள்ள தொலைவில் முழு பாவங்களையும் அகற்றிவிட்டார் (வச. 12) என்கின்றார். தேவன் தம் ஜனங்களின் மீது கொண்டுள்ள அன்பும், அவருடைய மன்னிக்கும் சிந்தையும் முழுமையானது, முடிவில்லாதது என்கின்றார். தேவன் தம் ஜனங்களை அவர்களின் மீறுதல்களின் வல்லமையிலிருந்து முற்றிலும் மீட்டு அவர்களை முழுமையாக மன்னிக்கின்றார்.

என்ன ஒரு நல்ல செய்தி! நாம் நம் பாவக்கறைகளை அகற்றிட புதிய வருடம் வரும்வரை காத்திருக்கத் தேவையில்லை. இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தோடு, நாம் நம் பாவங்களை அறிக்கையிட்டு பாவத்திலிருந்து மனம் திரும்புவோமாகில் அவர் நம் பாவங்களை அகற்றி, அவற்றைக் கடலின் ஆழங்களில் போட்டுவிடுகி;றார். இன்றே நமது கறைநீக்கும் தினம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தகுதி உரிமையல்ல

ஞாயிறு பள்ளிக்குப் பிறகு, வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்தில் ஏறினேன். தென்னிந்தியாவின் ஒரு முக்கிய கல்லூரியின் புதிய இயக்குநராக நான் அறிந்திருந்த ஒருவர் பின்னால் அமர்ந்திருந்தார். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் வழக்கமாகச் செல்லும் பொதுப் பேருந்தில் அவரைப் பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரது பதவியில் உள்ள பெரும்பாலானோர் தங்களுக்கென நியமிக்கப்பட்ட வாகனம் மற்றும் ஓட்டுநரைக் கொண்டிருப்பார்கள். எனவே, நான் அவரிடம், "நீங்கள் எப்படி காரில்லாமல் பேருந்தில் செல்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர், "நான் எப்போதும் பேருந்தில் செல்வதால்தான்" என்று பதிலளித்தார், அவரது புதிய பதவி அவரது வழக்கமான நடைமுறையை மாற்றவில்லை. அவர் தனது பட்டத்துக்குரிய உரிமையை அனுபவிக்க உடன்படவில்லை.

பிலிப்பியில் உள்ள சபைக்கு எழுதிய நிருபத்தில், விசுவாசிகள் தாழ்மையுடன் இருக்கும்படி பவுல் கேட்டுக்கொள்கிறார் (வ.3). அவர்கள் "வாதினாலாவது" அல்லது "வீண்பெருமையினாலாவது" (வ.3) எதையும் செய்யக்கூடாது என்று அவர் கூறுகிறார். மாறாக, அவர்கள் ஒருவருக்கொருவர் உறவாடுவதில், "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே" (வ.5) கொண்டிருக்க வேண்டும். உன்னதமான அந்தஸ்தை இயேசு பெற்றிருக்கிறார். "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்" (வ.6) இருந்தார். அவர் தனக்குரியதை ஒதுக்கி வைத்துவிட்டு, நம்முடைய நலன்களில் அக்கறை கொண்டார். அவர் "அடிமையின் ரூபமெடுத்து" , மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் (வ.7-8).

நமது வேலை, கல்வி, வயது அல்லது சமூக அந்தஸ்து போன்றவற்றின் காரணமாக நாம் விசேஷமான முறையில் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்கள் என்று நாம் உணரும்போது, நமது தகுதிகளையும் நமது உரிமை உணர்வையும் எவ்வாறு ஒதுக்கி வைப்பது என்பதை இயேசு நமக்குக் காட்டினார் என்பதனை நினைவில் கொள்வோம். கடினமாக இருந்தாலும், நமக்குச் சொந்தமானதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்து சக மனிதர்களிடம் பணிவாக இருக்கும் மனநிலையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

தேவனின் திறந்த வாசல்கள்

ஒரு பெருநகர் அருகிலுள்ள எனது புதிய பள்ளியில், வழிகாட்டி ஆலோசகர் என்னை ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்தபின், மிகக் குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்கள் உள்ள ஆங்கில வகுப்பை எனக்கு கொடுத்தார். நான் எனது முந்தைய பள்ளியிலிருந்து சிறந்த தேர்ச்சி, சிறந்த மதிப்பெண்கள் மற்றும் எனது எழுத்துக்கான முதல்வரின் விருதுடன் வந்திருந்தேன். ஆனால் இந்தப் புதிய பள்ளியில் “சிறந்த” வகுப்பிற்கான கதவு எனக்குத் திறக்கப்படவில்லை. வழிகாட்டி ஆலோசகர் நான் பொருத்தமற்றவனோ அல்லது தயாராகவோ இல்லை என்று முடிவு செய்திருந்தார்.

இப்படிப்பட்ட சகஜமான பின்னடைவுகளை ஆதிதிருச்சபையான பிலதெல்பியா தன் அனுபவத்தில் பெற்றிருந்தது. சிறிய மற்றும் எளிமையான அந்த திருச்சபை இருந்த நகரம் சமீபத்திய ஆண்டுகளில் பூகம்பங்களால் பாதிக்கப்பட்டு பெரும் சேதத்தைச் சந்தித்திருந்தது. மேலும் சாத்தானின் எதிர்ப்பை சந்தித்தனர் (வெளிப்படுத்துதல் 3:9). புறக்கணிக்கப்பட்ட இந்த திருச்சபைக்கு உயிர்த்தெழுந்த இயேசு, “உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்ட படியினாலே” (வ.8) எனக் குறிப்பிட்டார். ஆகையால், “ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர்” (வ.7) அவர்களுக்கு “எவராலும் மூட முடியாத இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் “(வ.8) என்றார்.

நமது ஊழியத்திற்கும் இது பொருந்தும். சில கதவுகள் திறக்கப்படுவதே இல்லை. இருப்பினும், ஒரு வழிகாட்டி ஆலோசகர் கதவை அடைத்தாலும், தேவன் எனக்கு நிச்சயமாகவே கதவுகளைத் திறந்துள்ளார், அவருக்காக நான் எழுதுவதன் மூலம், உலகளாவிய உள்ளங்களைத் தொடும் வாய்ப்பை தந்தார். உங்களையும் மூடிய கதவுகள் தடுக்காது. இயேசு “நானே வாசல்” என்றார் (யோவான் 10:9). அவர் திறக்கும் கதவுகளுக்குள் நுழைந்து அவரைப் பின்பற்றுவோம். 

தேவனின் ஞானமான நோக்கங்கள்

இந்தியா வரலாறுகளால் நிரம்பியுள்ளது. நீங்கள் செல்லும் இடமெல்லாம், வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்களின் நினைவுச்சின்னங்கள் அல்லது முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் இடங்களைக் காணலாம். ஆனால் இங்கிலாந்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு வேடிக்கையான செய்தி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன் வாயிலருகே உள்ள ஒரு பலகையில், “இந்த இடத்தில், செப்டம்பர் 5, 1782 அன்று, எதுவும் நடக்கவில்லை” என்று எழுதப்பட்டுள்ளது.

அநேக வேளையில் நம்முடைய ஜெபத்திற்குப் பதில் கிடைக்காதது போலவே தோன்றுகிறது. அவர் இப்போதே பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்புடன், நாம் மீண்டும் மீண்டும் ஜெபிக்கிறோம், நமது விண்ணப்பங்களை நமது தந்தையிடம் கொண்டு வருகிறோம். சங்கீதக்காரனாகிய தாவீதும் ஜெபிக்கையில் இப்படிப்பட்ட விரக்தியை வெளிப்படுத்தினான்: “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?” (சங்கீதம் 13:1). அதே வண்ணம் நாமும் எளிதாக “ஆண்டவரே, நீர் பதிலளிக்க இன்னும் எவ்வளவு காலம்?” எனலாம்.

எனினும், நம் தேவன் ஞானத்தில் மட்டுமல்ல, அவருடைய நேரத்திலும் பூரணர். எனேவ தாவீது சொன்னான், “நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்”(வ. 5). பிரசங்கி 3:11, “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” என்று நமக்கு நினைவூட்டுகிறது. ‘நேர்த்தியாக” என்ற சொல்லுக்கு “பொருத்தமானது” அல்லது “மகிழ்ச்சியின் காரணம்” என்று பொருள். தேவன் நாம் விரும்பியபடி நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர் எப்போதும் தனது ஞானமுள்ள நோக்கங்களைச் செயல்படுத்துகிறார். அவர் பதில் கொடுக்கும்போது, அது சரியாகவும், நல்லதாகவும், அழகாகவும் இருக்கும் என்று நாம் மனதார நம்பலாம்.