நான் பதினெட்டு வயதாயிருந்த போது, சட்டப்படி கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டேன். அங்கிருந்தவர்களெல்லாரும் சிங்கப்பூரைச் சேர்ந்த இளம் வயதினராக இருந்ததால், நான் எனக்கொரு இலகுவான வேலைகிடைக்கும்படி தீவிரமாக ஜெபித்தேன். ஓர் எழுத்தர், அல்லது ஓட்டுனர் என ஓர் எளிய வேலையை எதிர்பார்த்தேன். நான் பலசாலியல்ல, எனவே அங்குள்ள கடினமான போர்க்கால பயிற்சிகளில் எனக்கு விலக்கு கிடைக்குமென நம்பினேன். ஒருநாள் மாலை வேளையில் நான் வேதாகமத்தை வாசித்துக் கொண்டிருந்த போது, அந்தப் பக்கத்திலிருந்த ஒரு வசனம் என்னை ஈர்த்தது. “என் கிருபை உனக்குப் போதும்” (2 கொரி. 12:9).

என் இருதயம் சோர்ந்தது. ஆனால், அப்படி இருந்திருக்கக் கூடாது. தேவன் என் ஜெபத்தைக் கேட்டார். ஒருவேளை எனக்கு கஷ்டமான வேலை கொடுக்கப்பட்டாலும் தேவன் எனக்குத் தேவையான பெலத்தைத் தருவார்.

நான் இராணுவக் கவசமணிந்து தரைப்படையில் சேர்ந்தேன். எனக்கு விருப்பமில்லாத வேலையைச் செய்தேன். இப்போது தான் என் முந்திய காலத்தை நினைத்துப் பார்க்கின்றேன். தேவன் நான் விரும்பியதை எனக்குத்தரவில்லை. ஆகையால் தேவனுக்கு நன்றி கூறுகின்றேன். அங்கு கொடுக்கப்பட்ட பயிற்சியும், அநுபவமும் என்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெலப்படுத்தியது. திடமான மனிதனாக ஜீவிக்க எனக்கு நம்பிக்கையைத் தந்தது.

ஏசாயா 25:1-5 வசனங்களில் இஸ்ரவேல் ஜனங்களுக்குரிய தண்டனையையும் அதன்பின், அவர்களின் விடுதலையையும் உரைத்தபின், தேவனுடைய திட்டங்களுக்காக அவரைப் போற்றுகின்றார். ஏசாயா குறிப்பிட்டுள்ள அத்தனை அதிசயமான காரியங்களும்” வெகுகாலத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டன (வச. 1) ஆயினும், அவை நிறைவேற சில கடினமான காலங்களைக் கடக்க வேண்டியிருந்தது.

நாம் தேவனிடம் ஏதோவொரு நல்ல காரியத்திற்காக கேட்டுக் கொண்டிருக்கும் போது, எடுத்துக்காட்டாக ஒருவரின் இக்கட்டிலிருந்து அவரை விடுவிக்குமாறு கேட்கும்போது, இல்லையென பதிலளிக்கப்படுமாயின், அதனைப் புரிந்து கொள்வது கடினமாகத்தானிருக்கும். அப்பொழுதுதான் நாம் தேவனுடைய நல்லதிட்டத்தின் உண்மையை உறுதியாகப் பற்றிக் கொள்ளவேண்டும் ஏனென்று நமக்குப் புரியாது. ஆனால், நாம் தேவனுடைய அன்பு, நன்மை, மற்றும் உண்மையின் மீது நம்பிக்கையோடிருப்போம்.