Archives: நவம்பர் 2018

நன்றியால் தேவனை கனப்படுத்துதல்

என்னுடைய கணவருக்கு புற்றுநோய் என்று வந்திருந்த மருத்துவ அறிக்கையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாலும், அந்த பெண் மருத்துவரின் முகத்தில் கவலைக்கான அறிகுறி இல்லை. புன்முறுவலோடு அவர் ஒரு யோசனை சொன்னார்: ஒவ்வொரு நாளையும் நன்றி சொல்லியபடி தொடங்குங்கள். “குறைந்தபட்சம் மூன்று விஷயங்களுக்காக,” என்றார். ஸ்தோத்திரம் சொல்வது தேவனின் நற்பண்புகளில் ஊக்கம் கிடைக்க உதவும் என்று தெரிந்ததால் டான் ஒத்துக்கொண்டார். இதனால் டான் ஒவ்வொரு நாளையும் துதிகளோடு தொடங்குகிறார். இரவு நல்ல தூக்கத்தைத் தந்ததற்காக நன்றி ஆண்டவரே. சுத்தமான படுக்கைக்காக. சூரிய வெளிச்சத்திற்காக. காலை உணவிற்காக. என் உதடுகளின் புன்முறுவலுக்காக நன்றி.

ஒவ்வொரு வார்த்தையும் மனப்பூர்வமானது. ஆனால் அது அற்பமாக தோன்றுமா? வாழ்வின் சின்னச் சின்ன விஷயங்களுக்காக நன்றி சொல்வது மகத்துவமான கர்த்தருக்கு முக்கியமா? தாவீதின் முதன்மை சங்கீதக்காரர் ஆசாப் சங்கீதம் 50ல் தெளிவான பதிலைத் தருகிறார். “உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும்” ஆண்டவர் கேட்கவில்லை (வச. 9). முன்பு இஸ்ரவேலரின் ஸ்தோத்திர பலிகளாக இருந்த இவற்றை விரும்பாமல், நம் இருதயத்தையும், நம் வாழ்க்கையையும் நன்றியோடு கொடுக்க விரும்புகிறார் (வச. 14, 23).

என் கணவர் அனுபவித்ததுபோல, மனப்பூர்வமான நன்றி, நாம் ஆவியில் உற்சாகமாக இருக்க உதவும். அப்போது “ஆபத்துக் காலத்தில்” நாம் கூப்பிடும்போது, அவர் நம்மை “விடுவிப்பார்” (வச. 15). அப்படியென்றால் ஆவியில், சரீரத்தில் டான் இரண்டு வருட சிகிச்சையில் சுகமாகி விடுவார் என்று அர்த்தமா? அல்லது அவர் வாழ்நாள் முழுவதும் சுகம் கிடைக்காதா? நமக்குத் தெரியாது. ஆனால் இப்போதைக்கு, தேவனின் அன்புக்காக, அவர் மீட்பராக, சுகம் அளிப்பவராக, நண்பராக இருப்பதற்காக தேவனுக்கு நன்றி சொல்வதில் டான் சந்தோஷமடைகிறார். “உங்களுக்கு நன்றி” என்ற அழகிய வார்த்தைகளைக் கேட்பதில் நண்பர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இத்தருணத்தின் ஆண்டவர்

சில மாதங்களுக்கு முன், மூன்று மணி நேர பயண தூரத்தில் இருக்கும் என் மகன் வீட்டில் ஒரு கட்டட வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். நினைத்ததை விட அந்த வேலை முடிய அதிக நாட்கள் ஆயிற்று. ஒவ்வொரு நாள் காலையிலும், அன்று மாலை முடித்துவிட வேண்டும் என்று ஜெபித்தேன். ஆனால், ஒவ்வொரு நாள் மாலையிலும், முடிவடையாத வேலைகள் இருந்தன.

ஏன் என்று யோசித்தேன். தாமதம் ஆவதற்கு ஏதேனும் காரணம் இருக்குமா என்று யோசித்தேன். அதற்கான விடை அடுத்த நாள் காலையில் கிடைத்தது. காலையில் வேலைக்கான உபகரணத்தை எடுக்கும்போது, என் தொலைபேசி ஒலித்தது. தெரியாத நபர் “உங்கள் மகள் ஒரு விபத்தில் அடிபட்டிருக்கிறாள். நீங்கள் உடனே வரவேண்டும்” என்றார்.

அவள் வீடு என் மகன் வீட்டுக்கு அருகிலேயே இருந்தது. அதனால் பதினான்கு நிமிடங்களில் அவள் அருகில் இருந்தேன். நான் என் வீட்டில் இருந்திருந்தால், வந்து சேர மூன்று மணி நேரம் ஆகியிருக்கும். நான் மருத்துவ ஊர்தியின் பின்னாலேயே சென்று, அறுவை சிகிச்சைக்கு முன் அவளுக்கு ஆறுதல் கூறினேன். ஆறுதலாக அவள் கையைப் பிடித்து அமர்ந்திருந்த வேளையில், அந்த கட்டட வேலை தாமதம் ஆகாதிருந்தால், என்னால் அவளோடு இருந்திருக்க முடியாது என்று உணர்ந்தேன்.

நம் தருணங்கள் தேவனுக்குச் சொந்தமானவை. எலிசாவின்மூலம் ஆண்டவர் உயிர்ப்பித்த சிறுவனின் தாயின் அனுபவமும் இதைப்போன்றதே (2 ராஜாக்கள் 4:18-37). பஞ்சத்தின் காரணமாக நாட்டை விட்டுச் சென்ற அவள், ராஜாவிடம் தன் நிலத்தைக் கேட்க, பல வருடங்களுக்குப் பிறகு திரும்பி வந்தாள். அதே நேரத்தில், தீர்க்கதரிசியின் பணியாள் கேயாசியோடு ராஜா பேசிக்கொண்டிருந்தார். “செத்துப் போனவனை (எலிசா) உயிர்ப்பித்தார் என்பதை அவன் ராஜாவுக்கு அறிவிக்கிறபோது,” எலிசா உயிர்ப்பித்த பிள்ளையின் தாய் உள்ளே வந்தாள் (8:5). அவள் வேண்டுதல் கேட்கப்பட்டது.

அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் எந்த சூழ்நிலையையும் நன்மைக்காக பயன்படுத்த கர்த்தர் வல்லவராக இருக்கிறார். கர்த்தர் இன்று நமக்கு முன்குறித்திருக்கும் வேலைகளுக்கு, அவரோடு நடக்க கிருபை செய்வாராக.

உறுதியான அடித்தளம்

சென்ற வருடம் கோடையின்போது நானும் என் கணவரும், பென்ஸில்வேனியாவின் கிராமப்புறத்தில் உள்ள, ஃப்ராங்க் லாய்ட் ரைய்ட் என்ற கட்டடக்கலை நிபுணர் கட்டிய, கொட்டும் அருவி என்று பொருள்படக்கூடிய ‘ஃபாலிங் வாட்டர்’ (Falling water) வீட்டைச் சுற்றிப்பார்த்தோம். அதுபோன்ற ஒரு வீட்டை நான் அதுவரை பார்த்ததில்லை. தரையில் இருந்து முளைத்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு வீட்டை ரைட் கட்ட நினைத்து, அதில் வெற்றியும் பெற்றார். ஏற்கனவே இருந்த ஒரு நீர்வீழ்ச்சியைச் சுற்றி அந்த வீட்டைக் கட்டினார். கட்டட வடிவமைப்பு அருகில் இருந்த பாறை வடிவங்களை ஒத்திருந்தது. எங்களுக்கு வீட்டை சுற்றிக் காட்டிய பெண், அந்த வீடு எப்படி பாதுகாப்பாக இருக்கிறது என்று விளக்கினார். “வீட்டின் நடுப்பகுதி முழுவதும் கீழே உள்ள கற்பாறைகளை அஸ்திபாரமாகக் கொண்டுள்ளது” என்றாள்.

அவளது வார்த்தைகள், இயேசு தன் சீஷர்களுக்குச் சொன்ன வார்த்தைகளை எனக்கு நினைவுபடுத்தியது. அவர் கற்றுக் கொடுப்பதே அவர்கள் வாழ்க்கைக்கான அடித்தளமாக இருக்கும் என்று இயேசு மலைப் பிரசங்கத்தில் அவர்களுக்குக் கூறினார். அவரது வார்த்தைகளைக் கேட்டு, அதன்படி நடந்தால், எந்த சூறாவளியையும் அவர்களால் தாங்கமுடியும் என்று கூறினார். கேட்டும் கீழ்ப்படியாமல் இருப்பவர்கள் மணலின்மேல் கட்டப்பட்ட வீட்டைப்போல் இருப்பார்கள் (மத். 7: 24-27). பின்னர் பவுலும் இதே சிந்தனைகளை வெளிப்படுத்தினார். கிறிஸ்துவே அடித்தளம் என்றும், நிலைத்து நிற்கக்கூடிய கிரியைகளால் நாம் அதன்மேல் கட்டவேண்டும் என்று எழுதினார் (1 கொரி. 3:11).

இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, கீழ்ப்படியும்போது, நம் வாழ்க்கையை உறுதியான கற்பாறையை அடித்தளமாகக் கொண்டு அமைக்கிறோம். நம் வாழ்க்கையும் ஃபாலிங்வாட்டரைப் போல கற்பாறையின்மேல் கட்டப்பட்டதால் நீடித்தும், அழகாகவும் அமையும்.

வைக்கோலை அடுக்குவது

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு கோடை விடுமுறையில் கொலராடோவில் உள்ள ஒரு கால்நடைப் பண்ணையில் வேலை செய்தேன்.  நவம்பர் முழுவதும் வைக்கோலை வெட்டி முடித்துவிட்டு, மாலையில் களைப்போடும், பசியோடும் ட்ராக்டர் வண்டியை அதை நிறுத்தும் இடத்திற்கு ஓட்டிவந்தேன். ஒரு வீரப்பிரதாப செயலாக நினைத்து, ட்ராக்டரை ஒடித்துத் திருப்பி, நிறுத்தியதில், ட்ராக்டர் சுழன்றது.

இதனால் அருகில் இருந்த 2000 லிட்டர் பெட்ரோல் இருந்த கலன் பெரிய சத்தத்துடன் கீழே விழுந்து, பெட்ரோல் முழுவதும் கீழே கொட்டியது.

பண்ணைக்கு சொந்தக்காரர் அருகில் நின்று அந்த இடத்தை முழுவதும் பார்த்தார்.

நான் ட்ராக்டரில் இருந்து இறங்கி, மன்னிப்புக் கேட்டேன். வேறு எதுவும் மனதில் தோன்றாததால் கோடை முழுவதும் ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறேன் என்று கூறினேன்.

உடைந்த கலனையும், கொட்டிய பெட்ரோலையும் பார்த்த அவர், திரும்பி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். “வா, நாம் போய் சாப்பிடலாம்” என்றார்.

தவறு செய்த இளைஞனைப் பற்றி இயேசு சொன்ன கதை எனக்கு நினைவுக்கு வந்தது. “தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்” என்று கதறினான். “உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும்” என்று சொல்ல நினைத்திருந்தான். ஆனால் அதை அவன் சொல்லும் முன்பே அவன் தந்தை அவனை இடைமறித்தார். “வா, நாம் போய் சாப்பிடலாம்” என்பதே அவர் சொன்னதின் சாராம்சம் (லூக். 15:17-24).

தேவனின் பெருந்தன்மை இதேபோன்று வியக்க வைப்பதாகும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் உன்னை மறப்பதில்லை

நான் சிறுவயதில் தபால் தலைகளை சேகரித்தேன். எனது பொழுதுபோக்கைப் பற்றி கேள்விப்பட்ட என் தாத்தா, தினமும் தனது அலுவலகத் தபாலில் இருந்து தபால் தலைகளைச் சேமிக்கத் தொடங்கினார். நான் என் தாத்தா பாட்டியை சந்திக்கும் போதெல்லாம், பலவிதமான அழகான முத்திரைகள் நிரப்பப்பட்ட ஒரு உறையை என்னிடம் கொடுப்பார். “நான் என்னுடைய அலுவலில் மும்முரமாக இருந்தாலும் உன்னை நான் மறக்கமாட்டேன” என்று ஒருமுறை என்னிடம் கூறினார். 
பாசத்தை வெளிப்படையாய் காண்பிக்கும் திறன் தாத்தாக்களுக்கு கொடுக்கப்படவில்லை. ஆனால் நான் அவருடைய அன்பை ஆழமாக உணர்ந்தேன். எல்லையற்ற ஆழமான வழியில், “நான் உன்னை மறப்பதில்லை” (ஏசாயா 49:15) என்று சொன்னதினிமித்தம் தேவன் இஸ்ரவேலின் மீது தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார். விக்கிரகாராதனைக்காகவும் கீழ்ப்படியாமைக்காகவும் பாபிலோனில் துன்பப்பட்ட தேவனுடைய ஜனங்கள், “ஆண்டவர் என்னை மறந்தார்” (வச. 14) என்று புலம்பினர். ஆனால் தம்முடைய ஜனங்கள் மீதான கர்த்தருடைய அன்பு மாறவில்லை. அவர் அவர்களுக்கு மன்னிப்பையும் மறுசீரமைப்பையும் உறுதியளித்தார் (வச. 8-13). 
“என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்” (வச. 16) இஸ்ரவேலரிடம் தேவன் சொன்னார். இன்று நமக்கும் அப்படியே சொல்கிறார். அவருடைய உறுதியளிக்கும் வார்த்தைகளை நான் சிந்திக்கையில், அது நம்மீதான அன்பையும் நம்முடைய இரட்சிப்பிற்காகவும் விரிந்திருக்கும் இயேசுவின் ஆணியடிக்கப்பட்ட தழும்புகள் நிறைந்த கைகளை மிகவும் ஆழமாக நினைவூட்டுகிறது (யோவான் 20:24-27). என் தாத்தாவின் தபால் தலைகள் மற்றும் அவரது மென்மையான வார்த்தைகள் போல, தேவன் மன்னிக்கும் தனது கரத்தை அவரது அன்பின் நித்திய அடையாளமாக நீட்டினார். அவருடைய என்றும் மாறாத அன்பிற்காக அவருக்கு நன்றி சொல்வோம். அவர் நம்மை என்றும் மறக்கமாட்டார். 

திருச்சபையாயிரு!

கோவிட்-19 தொற்றுநோயின்போது, டேவ் மற்றும் கார்லா ஒரு தேவாலய வீட்டைத் தேடி பல மாதங்கள் செலவிட்டனர். தொற்று பரவிய காலங்கிளல் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது, பல்வேறு தனிப்பட்ட அனுபவங்களை மட்டுப்படுத்தி, அவற்றை மேலும் கடினமாக்கியது. அவர்கள் கிறிஸ்தவ திருச்சபையோடு ஐக்கியம்கொள்வதற்கு ஏங்கினர். “ஒரு திருச்சபையைக் கண்டுபிடிப்பது கடினமானது” என்று கார்லா எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார். என் திருச்சபை குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்கான எனது சொந்த ஏக்கத்திலிருந்து எனக்குள் ஒரு உணர்தல் எழுந்தது. “திருச்சபையாக இருப்பது கடினமானது" என்று நான் பதிலளித்தேன். அந்த காலங்களில், எங்கள் திருச்சபை சுற்றியுள்ள மக்களுக்கு உணவு வழங்குதல், ஆன்லைன் சேவைகளை உருவாக்குதல் மற்றும் ஆதரவுடனும் ஜெபத்துடனும் ஒவ்வொரு விசுவாசிகளுக்கும் போன் செய்து நலம் விசாரித்தது. அந்த சேவையில் நானும் எனது கணவரும் கலந்துகொண்டாலும், மாறக்கூடிய இந்த உலகத்தில் நாம் திருச்சபையாய் செயல்படுவது எப்படி என்று ஆச்சரியப்பட்டோம்.  
எபிரெயர் 10:25இல் ஆசிரியர் “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல்” இருக்கும்படிக்கு ஊக்குவிக்கிறார். ஒருவேளை உபத்திரவத்தின் நிமித்தமோ (வச. 32-34), சோர்வின் நிமித்தமாகவோ (12:3) ஐக்கியத்தை விடும் அபாயம் அவர்களுக்கு நேரிட்டிருக்கலாம். அவர்களுக்கு இந்த தூண்டுதல் அவசியப்பட்டது.  
இன்று, எனக்கும் ஒரு தூண்டுதல் தேவைப்படுகிறது. உங்களுக்கும் தேவைப்படுகிறதா? நடைமுறை சூழ்நிலைகள் நாம் கூடிவரும் திருச்சபையை பாதிக்கும் தருவாயில் நாம் திருச்சபையாய் நிலைநிற்போமா? ஆக்கப்பூர்வமாக ஒருவரையொருவர் ஊக்குவிப்போம். தேவன் நம்மை வழிநடத்துவது போல ஒருவரையொருவர் கட்டியெழுப்புவோம். நம்முடைய வளங்களைப் பகிர்ந்து கொள்வோம். ஆதரவான செய்திகளை பகிர்வோம். நம்மால் முடிந்தவரை சேகரிப்போம். ஒருவருக்கொருவர் ஜெபியுங்கள். நாமே திருச்சபையாக நிற்போம். 

பாரபட்சமும் தேவசிநேகமும்

“நான் எதிர்பார்த்தது நீ இல்லை. நான் உன்னை வெறுக்கிறேன் என்று நினைத்தேன், ஆனால் அப்படியில்லை.” அந்த இளைஞனின் வார்த்தைகள் கடுமையாகத் தெரிந்தது. ஆனால் அவை உண்மையில் கருணை காட்டுவதற்கான முயற்சியாக இருந்தது. நான் அவர் வசிக்கும் நாட்டில் படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய அந்த தேசம் பல தசாப்தங்களுக்கு முன்னர் என்னுடைய தேசத்தோடு யுத்தம் செய்தது. நாங்கள் ஒன்றாக வகுப்பில் ஒரு குழு விவாதத்தில் கலந்துகொண்டோம். அவர் தொலைவில் இருப்பதை நான் கவனித்தேன். நான் அவரை ஏதாகிலும் புண்படுத்திவிட்டேனா என்று நான் கேட்டபோது, அவர், “இல்லை . . . . அதுதான் விஷயம். என் தாத்தா அந்தப் போரில் கொல்லப்பட்டார், அதற்காக நான் உங்கள் மக்களையும் உங்கள் நாட்டையும் வெறுத்தேன். ஆனால் இப்போது நமக்குள் எந்த அளவிற்கு ஒத்துப்போகிறது என்பதைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். நாம் ஏன் நண்பர்களாக இருக்க முடியாது!” என்று பதிலளித்தார். 
பாரபட்சம் என்னும் உணர்வு மனித இனத்தைப் போலவே மிகவும் பழமையானது. இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பு, இயேசு நாசரேத்தில் வாழ்ந்ததைப் பற்றி நாத்தான்வேல் முதன்முதலில் கேள்விப்பட்டபோது, அவனுடைய பாரபட்சம் தெளிவாகத் தெரிந்தது: “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா?” (யோவான் 1:46) என்று சொல்கிறார். நாத்தான்வேல் இயேசுவைப் போலவே கலிலேயா பகுதியில் வாழ்ந்தவர். தேவனுடைய மேசியா வேறொரு இடத்திலிருந்து வருவார் என்று அவர் ஒருவேளை நினைத்திருக்கக்கூடும். மற்ற கலிலேயர்களும் நாசரேத்தை இழிவாகப் பார்த்தனர். ஏனென்றால் அது ஒரு சிறிய அடையாளமில்லாத ஊராக இருந்தது.  
இது மிகவும் தெளிவாக உள்ளது. நாத்தான்வேலின் பதில், இயேசு அவனை நேசிப்பதற்கு தடையாக இருக்கவில்லை. மேலும் அவன் மறுரூபமாக்கப்பட்டு இயேசுவின் சீஷனாக மாறுகிறான். நாத்தான்வேல் பின்பாக, “நீர் தேவனுடைய குமாரன்” (வச. 49) என்று இயேசுவின் மகத்துவத்தை சாட்சியிடுகிறான். தேவனுடைய மறுரூபமாக்கும் அன்பிற்கு எதிராக நிற்கக்கூடிய எந்த பாரபட்சமும் இல்லை.