1965ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) பட்டணத்தில் வாட்ஸ் என்னும் பகுதியில் நடந்த கலவரத்திலிருந்து சுமார் மூன்று டன் உடைந்த பொருட்களை சேகரித்த நோவா புரிஃபாய் (Noah Purifoy), அதை வைத்து கலைப்பொருட்களை உருவாக்கினார். உடைந்த சைக்கிள் சக்கரங்கள், பந்துகள், பழைய டயர்கள், சேதமடைந்த தொலைக்காட்சி பெட்டிகள் என இனி பயன்படாத பொருட்களை வைத்து தன் சக ஊழியருடன் சேர்ந்து பல சிற்பங்களை செய்தார். இன்றைய நவநாகரிக சமுதாயத்தில் மனிதர்கள் உதவாப்பொருட்கள் போல நடத்தப் படுகிறார்கள் என்னும் வலிமையான கருத்தை தன்னுடைய சிற்பங்கள் மூலம் வெளிப்படுத்தினார். திரு. புரிஃபாய். அவர்களை ஒரு பத்திரிக்கையாளர் “குப்பைமேட்டு மேதை” என குறிப்பிட்டார்.

இயேசு வாழ்ந்த காலக்கட்டத்தில், வியாதியஸ்தர்களையும், சரீரப்பிரச்சனைகள் உள்ளவர்களையும்,பலரும் பாவிகள் எனக் கருதினர். அவர்களுடைய பாவங்களுக்காக தேவன் அவர்களை தண்டிப்பதாகக் கருதினர். அவர்களை அச்சமுதாயம் புறக்கணித்து உதாசீனப்படுத்தியது. ஆனால் இயேசுவும், அவருடைய சீஷர்களும் ஒரு குருடனை எதிர்கொண்ட பொழுது, இயேசு அவனுடைய நிலை பாவத்தின் விளைவினால் அல்லவென்றும் மாறாக தேவனுடைய மகிமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்திற்காகவே என்று கூறினார். “நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்,” என்றார் (யோவா. 9:5). இயேசு கூறியபடி அந்த குருடன் செய்த பொழுது பார்வை பெற்றான்.

இதைக்குறித்து மதத் தலைவர்கள் அவனை விசாரித்த பொழுது, அவன் மிகச் சாதாரணமாக, “நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்” (வச. 25) என்றான்.

இன்றும் நம் உலகின் மிகப்பெரிய “குப்பைமேட்டு மேதை” இயேசுதான். நாம் எல்லோரும் பாவத்தினால் சேதமடைந்திருக்கிறோம். ஆனால் அவர் நம்முடைய உடைந்துபோன வாழ்க்கையை எடுத்து வனைந்து, புது சிருஷ்டிகளாக நம்மை மாற்றிவிடுகிறார்.